Home / skpkaruna

skpkaruna


கெட்ட குமாரன் - சிறுகதை - ஆனந்த விகடன் - 2014-04-23

ங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன!

அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்குமான அந்தரங்க சிநேகிதம் அது.

தினமும் காலை மிகச் சரியாக 8.50-க்குப் பள்ளியின் பிரதான நுழைவாயில் இழுத்து மூடப்படும்போது, பள்ளிக்கு வெளியில் குறைந்தது  50 மாணவர்களாவது பிரேயர் வரிசையில் நிற்க முடியாமல் சிக்கிக்கொள்வது உண்டு. அந்த எண்ணிக்கை, சில சமயங்களில் குறையும் அல்லது கூடும். எப்படி இருந்தாலும், நானும் இளங்கோவும் நிச்சயம் அதில் இருப்போம்.

அந்த நீண்ட பிரேயர் மீட்டிங் முடிந்து, வரிசைப்படி எல்லா மாணவ, மாணவிகளும் அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற பிறகுதான் அந்தச் சொர்க்கவாசல் திறக்கப்படும். தாமதமாக வந்த மாணவர்கள் அனைவரும் தலையைக் குனிந்தபடி நடந்து செல்ல, பலி ஆடுகளைப் போல தலைமை ஆசிரியர் அறைக்கு முன் நிறுத்தப்படுவார்கள். தண்டனை அளிப்பதற்கு என்றே சிறப்புப் பயிற்சி பெற்ற சில ஆசிரியர்கள் அங்கே காத்திருப்பார்கள். பிரம்படி, வெயிலில் முட்டி போடுதல், கிரவுண்டைச் சுற்றி ஓடுதல்... என அவர்களின் மனநிலைக்கு ஏற்ப, எங்களுக்கான தண்டனைகள் முடிவு செய்யப்படும்.

ன்பதாம் வகுப்புக்கு வந்தவுடன், இதுபோன்ற தண்டனைகள் எல்லாம் எங்களின் தன்மானத்துக்குச் சவால்விடுவதாக மாறிவிட்டன. ஒருமுறை, உடற்பயிற்சி ஆசிரியரிடம், ''சார், அடிக்கிறதுனா தனியாக் கூட்டிட்டுப் போய் அடிங்க. பொண்ணுங்க முன்னாடி அடிக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க!'' என்று இளங்கோ பொங்கி எழுந்தவுடன், தண்டனையின் வீரியமும், தன்மானத்தின் அளவுகளும் வெகுவாக அதிகரித்துவிட்டன. அதிகாரவர்க்கத்தில் எங்களுக்கு எதிரான சூழலும், எப்போது எங்களைப் பார்த்தாலும் கெக்கேபிக்கே எனச் சிரித்துவைக்கும் சில பெண்களும் சேர்ந்து, இதற்கான ஒரு தீர்வைப் பற்றி எங்களை வெகுவாகச் சிந்திக்கவைத்தார்கள்.

ன்று மாலை, லட்சுமி டீக்கடையில் வடை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் இளங்கோ, ''நாமதான்டா இப்படித் தினமும் அடி வாங்கிட்டு இருக்கோம். பெரிய பசங்க எல்லாம் வேற, வேற வழியில உள்ள போயிடுறாங்க'' என்ற அந்த அதிர்ச்சித் தகவலைச் சொன்னான்.

''எப்படிடா முடியும்? எல்லா கேட்லயும் கனகராஜும் சாலமனும் நிப்பாங்களேடா?'' என்று கேட்டதற்கு,

''அதெல்லாம் நம்மைப் போல கேட் வழியாப் போறவங்களுக்குத்தான். மத்தவனுக்கு எல்லாம் ஸ்கூலைச் சுத்தி கேட்'' என்றான்.

100 ஆண்டுகளுக்கும் முன்பாக, எங்கள் சிறிய நகரம் பெருமளவு, கல்வியறிவு இல்லாது இருந்ததைக் கண்ட டென்மார்க் தேசத்தினர், இங்கு வந்து தொடங்கிய பள்ளி அது. சுற்றிலும் மதில் சுவற்றுடன், பெரிய பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பள்ளியைச் சுற்றித்தான், எங்கள் நகரம் தனது தெருக்களால் அணைத்தபடி வளர்ந்திருந்தது.

டுத்த ஞாயிற்றுக்கிழமை, நானும் இளங்கோவும், எங்கள் பள்ளியின் ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்கும் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். அதுவரை, பள்ளியின் உள்பக்கம் இருந்துதான் அந்தக் கோட்டை போன்ற உயரமான மதில் சுவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போது, அதன் மேலே இருந்து பார்க்கும்போதுதான் ஒன்றல்ல... இரண்டல்ல... பல திறப்புகள் பள்ளிக்குள் செல்வதற்கு இருந்தன என்பது தெரிய வந்தது. இதுக்குப் பேர்தான் பறவைப் பார்வையோ?!

தியாகி அண்ணாமலை நகர் பக்கம் இருந்து, ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிருந்து, மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் உள்ளிருந்து, லட்சுமி நகர் பக்கம் இருந்து, காந்தி நகர் பக்கம் இருந்து, கார்கானாத் தெருவில் இருந்து... என புதுப்புது வழிகள் தென்பட்டுக்கொண்டே இருந்தன.

இளங்கோவிடம், ''இத்தனை நாளாக, இது தெரியாமல் இருந்திருக்கோங்கிறதை நினைச்சா வெட்கமா இருக்குடா!'' என்றேன்.

''விடுறா... ஸ்கூல் காம்பவுண்டுலயே இருக்க நம்ம ஹெட்மாஸ்டருக்கே இதெல்லாம் தெரியாம இருக்கு. நாம வேற ஏரியாக்காரங்கதானே!'' என்று சமாதானம் சொன்னான்.

''மச்சான்... இனிமே பிரச்னை இல்லைடா. இதுல ஏதாவது ஒண்ணுல புகுந்து உள்ளே போயிட வேண்டியதுதான்'' என்றேன்.

''டேய்... இதெல்லாம் அந்தந்த ஏரியாப் பசங்க கண்டுபிடிச்சு வெச்சிருக்கிற வழி. இதுல அவங்களைத் தவிர வேறு யாரையும் விட மாட்டாங்க. நமக்குனு, நாமதான் தனியா ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும்'' என்ற புதிய விதியைச் சொன்னான். எங்களுக்கான வழியைத் தேடி, கார்கானாத் தெருவில் இருந்து மீண்டும் எங்களின் மதில் சுவர் சுற்றுப்பயணம் தொடங்கியது.

கார்கானாத் தெருவுக்குச் சரி பாதியில், மிகச் சிறிய தெரு ஒன்று இருப்பதையும், அதன் பெயர் ஆறுமுகனார் தெரு என்பதையும் நான் பள்ளியில் படிக்கத் தொடங்கி நான்கு வருடங்களுக்குப் பின்பு அன்றுதான் அறிந்துகொண்டேன். அந்தத் தெருவின் ஒரு வீட்டின் பின்பக்க மாடி பால்கனியில் இருந்து, ''என்னடா பண்றீங்க?'' என்று குரல் கேட்டுத் திரும்பினோம். அப்போது, நாங்கள் மிகச் சரியாக அந்த வீட்டுக்கும் எங்கள் பள்ளிக்குமான குறுகிய இடத்தில் நின்றுகொண்டிருந்தோம்.

எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கஸ்தூரி அக்கா திருமணமாகி, அந்த வீட்டின் மாடி போர்ஷனில் வாழ வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னைப் பார்த்ததில் அவருக்கு ரொம்பச் சந்தோஷம்.

''வீட்டுக்குள்ள வாடா...'' என்று அழைத்தார்.

பெரிதாகச் சிரமப்படாமல், ஒரு சின்னத் தாவலில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அதிரசம், முறுக்கு எல்லாம் சாப்பிட்டுக்கொண்டே எங்களுடைய திட்டத்தை விவரித்தோம்.

''டேய்... நீங்க எவ்வளவு லேட்டா வந்தாலும், நேரா இங்க வந்திருங்கடா. மாமா சைக்கிள் விடுற இடத்திலேயே, உங்க சைக்கிளை விட்டுட்டு, இப்படியே எங்க வீட்டு வழியாவே உங்க ஸ்கூலுக்கு உள்ளே போயிடுங்க'' என்றார்.

றுநாள் திங்கட்கிழமை, பள்ளிக்கு, பிரேயருக்கு முன்னாடியே வந்துவிட்டோம். இருந்தும், நேராக கஸ்தூரி அக்காவின் வீடு இருக்கும் தெருவுக்குச் சென்று, சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு அவரின் வீட்டுக்குள் சென்றோம். பின்கட்டுக்குச் சென்று அங்கே இருந்த துணி துவைக்கும் கல்லில் கால் வைத்து ஏறும்போதுதான், அந்த வீட்டின் மாடியைப் பார்த்தேன். அங்கு ஒரு பால்கனி இருந்தது. இளங்கோவுடன், மாடிக்குச் சென்று பால்கனியில் இருந்து பார்க்கும்போதுதான் எனக்குப் புரிந்தது, நான் நின்றுகொண்டிருந்தது எனது வகுப்பறைக்கு நேர் மேலே இருந்த ஒரு பெரிய அறையின் கம்பி இல்லாத ஜன்னல் அருகே என்று!

அக்கா வீட்டு பால்கனியில் இருந்து, சின்னத் தாவல் ஒன்றில் எங்கள் பள்ளிக் கட்டடத்தின் மாடி அறைக்கு வந்தோம். அந்த அறைக் கதவினைத் திறந்து, அங்கு இருக்கும் படிக்கட்டு வழியாகக் கீழ் இறங்கினோம். நம்பினால் நம்புங்கள், நாங்கள் நேராக வந்தடைந்தது, பிரேயருக்கு வரிசையில் நின்றிருக்கும் எங்கள் வகுப்பு வரிசையின் கடைசி வாலுக்கு. எனக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டன. வரிசையின் முதலில் நின்றிருந்த வகுப்புத் தலைவன், திரும்பி எங்களைப் பார்த்தான். இளங்கோ, தனது விரலைக் காட்டித் 'தொலைச்சுடுவேன். திரும்புடா அந்தப் பக்கம்’ என்ற முரட்டுச் சைகையில் அப்படியே திரும்பிக்கொண்டான்.

டுத்த சில மாதங்கள்... நாங்கள் ஏறக்குறைய சொர்க்கத்தில் இருந்தோம். வீட்டில் இருந்து புறப்பட்டு, சீக்கிரமாகவே பள்ளிக்கு வந்தால்கூட, நாங்கள் நேராகச் செல்வது கஸ்தூரி அக்கா வீட்டுக்குத்தான். அங்கே பத்திரமாக சைக்கிள் பார்க்கிங். பிறகு வயிறு நிறையப் பானைத் தண்ணீர் குடித்துவிட்டு, அந்த வீட்டு மாடியில் இருந்து எங்களின் தனிப்பட்ட வழியில் உள்ளே புகுந்து கீழ் இறங்கி பிரேயருக்குள் நுழைந்தால், அங்கே வில்சன் தன்ராஜ் சார், தனது உருக்கமான குரலில், 'இயேசு... என் ரட்சகனே! எங்கள் இதயத்தில் நிறைந்தவனை, துதி, நிதம்!’ எனப் பாடிக்கொண்டிருப்பார். உண்மையிலேயே இயேசு வருவதாக இருந்தால்கூட எங்களுடன் அந்த வழியில்தான் வருவார். அத்தனை சொகுசான வழி!

ஒருநாள், வழக்கம்போல பிரேயர் தொடங்கி கேட் மூடப்பட்டுவிட்டது. கஸ்தூரி அக்காவின் தெருவுக்குச் செல்லும் வழியில் எங்கள் பள்ளியைக் கடந்து சென்றோம். அப்போது அந்த வருடம் புதிதாக எங்கள் வகுப்பில் சேர்ந்திருந்த தனது தெரு நண்பன் ஒருவன், கேட்டுக்கு வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டான் இளங்கோ. 'யாம் இருக்கக் கவலையேன்?’ என்றபடி அவனையும் ''வாடா என்னோட'' என்று அழைத்து வந்துவிட்டான்.

அன்றைக்கு எங்களுக்கு இன்னுமொரு சோதனையும் காத்திருந்தது. அக்கா வீட்டு மாடியில் இருந்து தாவியபோதுதான் அதைக் கவனித்தோம். அந்த ஜன்னல், ஒரு பெரிய அட்டையால் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், கை வைத்தவுடன் உடைந்து கீழே விழக்கூடிய காட் போர்டு அட்டை அது. அதைக் கையால் தள்ளிவிட்டு உள்ளே சென்று பார்த்தால், அந்த அறையில் பாதி அளவுக்குப் பேப்பர் பண்டல்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த அறை வழக்கத்துக்கு மாறாக வெளிப்புறமும் பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்துவிட்டு, பிறகு வந்த வழியே வெளியில் வந்து, நேராக மீனாட்சி தியேட்டருக்குக் காலைக் காட்சி சினிமாவுக்குப் போய்விட்டோம். பிறகு, அந்த அறையின் பூட்டு திறக்கப்படும் வரை நேர் வழியில் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தோம்.

டுத்த வாரத்தில் பள்ளியில் எந்நேரமும் ஏதோ ஒரு சலசலப்பு. எனது வகுப்புக்கு நேர் எதிரில் இருந்த தலைமை ஆசிரியர் அறையில், எப்போதும் ஏதாவது விசாரணை நடந்துகொண்டே இருந்தது.

ஹெட்மாஸ்டரின் பியூன் கனகராஜிடம் கேட்டேன்.

''10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான கொஸ்டீன் பேப்பர்ஸ் திருடு போயிடுச்சி...'' என்றார்.

''எங்க வெச்சிருந்தாங்கண்ணா?'' என்றேன்.

என் தலைக்கு மேலே இருந்த எங்கள் ரகசிய அறையைச் சுட்டிக்காட்டினார்.

களவையும் கள்ளக் காதலையும் தனியாகச் செய்யணும்; கூட்டாளி வைத்துக் கொள்ளக் கூடாது என்ற பழமொழியை அந்த வயதில் நான் கேள்விப்பட்டிருக்க வில்லை.

நாங்கள் ஒரே ஒரு முறை கூட்டாளி வைத்ததற்கு, உடனே பலன் கிடைத்துவிட்டது. ''நிச்சயம் அந்தப் பையன்தான் எடுத்து இருக்கணும்'' என்று இளங்கோவிடம் சொன்னேன்.

''அவனைக் காட்டிக் கொடுத்தா நாமும் சேர்ந்து மாட்டுவோம். மேட்டர் ரொம்பப் பெருசு. அமைதியா வாயை மூடிட்டு இரு!'' என்று சொல்லிவிட்டான்.

ரகசியங்கள், கால் வைத்து நடப்பது இல்லை; காதுகளின் வழி புகுந்து வாய் மூலமாகத்தான் நடந்து செல்கின்றன. வினாத்தாளை எடுத்துச் சென்ற எங்கள் வகுப்புப் பையனிடம் இருந்து, அவனது அண்ணன் அதைப் பிடுங்கிச் சென்று, அதைத் தனது 10-ம் வகுப்புக் காதலி ஒருத்திக்குத் தந்திருக்கிறான். அவள் அந்த மகிழ்ச்சியை உடன் படிக்கும் தோழி ஒருத்திக்குப் பகிர, அவள் தனது காதலனுக்குச் சொல்லிவிட, அந்தக் காதலன் எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவனின் மகனாக இருந்துவிட்டான். பிரச்னை ஒரு சிக்கலான நூற்கண்டு வடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வந்தது. அவர், அதன் ஏதோ ஒரு முனையை மட்டும் கண்டுபிடித்து இழுக்கத் தொடங்க, அது நேராக எங்கள் வகுப்பறையை வந்து அடைந்தது.

''இந்த ஒன்பதாம் வகுப்பு 'ஏ’ பிரிவைச் சேர்ந்த யாரோ ஒரு மாணவன் மூலமாத்தான், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு அரசு அனுப்பியிருந்த சில வினாத்தாள்கள் திருடப்பட்டு, வெளியே போயிருக்கு. திருடியது யாருன்னு கண்டுபிடிச்சு, அத்தனை வினாத்தாள்களையும் மீட்காவிட்டால், மாவட்ட கல்வி அதிகாரி விஷயத்தை போலீஸுக்குக் கொண்டுபோயிடுவார். பிறகு, நமது பள்ளியின் பெயரும் கெட்டு, ஹெட்மாஸ்டரின் மீது நடவடிக்கையும் எடுப்பாங்க. எனவே, உங்களில் யார் அந்தக் காரியத்தைச் செய்ததுனு மரியாதையாச் சொல்லிடுங்க'' என்று ஏறக்குறைய பள்ளியின் அத்தனை ஆசிரியர்களும், எங்கள் வகுப்பறைக்கு வந்து எங்களை மிரட்டிப் பார்த்தார்கள்.

அது 1984-ம் ஆண்டு. இப்போது போல இத்தனை தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள் அற்ற காலம். எனவே, முக்கியமான விஷயமாக இருந்தாலும்கூட, அனாவசியப் பரபரப்புகள் இன்றி நிதானமாக விசாரிக்க முடிந்தது.

எங்கள் ஹெட்மாஸ்டர் அருள்தாஸ் சார்தான், அந்த வருடம் எங்களின் ஆங்கில ஆசிரியர். சற்று பருமனான உருவம், வெள்ளை பேன்ட், வெள்ளை ஷர்ட், கறுப்பு பெல்ட் அணிந்து பள்ளியில் மிடுக்காக நடந்துவரும்போது, மாணவர்கள் யாரும் அவரைக் கண்டு மிரள மாட்டோம். ஏனெனில், எங்கள் பள்ளியில் மாணவர்களின் தோள் மீது கை போட்டுப் பேசிக்கொண்டு செல்லும் அன்பான மனிதர் அவர். பலத்த விசாரணைகளுக்கு இடையே, அவ்வப்போது எங்களுக்கு வகுப்புகளும் நடந்துகொண்டு இருந்தன.

ருநாள், காவல் துறை ஜீப் ஒன்று வந்து ஹெச்.எம். அறையின் முன்பு நின்றதைப் பார்த்ததும், எனக்கு வியர்த்துக் கொட்டியது.

இளங்கோ, அவனது நண்பனிடம் சென்று, ''டேய்... நீ எடுத்திருந்தாச் சொல்லிடு. விஷயம் தலைக்கு மேல போயிடுச்சு!'' என்று கெஞ்சிப் பார்த்தான்.

அவன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். இப்போது, அவன் யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை. எடுத்தது அவன்தான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே, நான் அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

ன்று மதியம் பைபிள் வகுப்புக்கு வழக்கமாக வரும், எங்கள் வகுப்பு ஆசிரியருக்குப் பதிலாக எங்கள் ஹெட்மாஸ்டர் அருள்தாஸ் சார் வந்தார். அனைவரும் எழுந்து நின்றோம். எங்களை அமரச் சொல்லிக் கை அசைத்தார். பல நாட்களுக்குப் பிறகு அப்போதுதான் அவர் எங்கள் வகுப்புக்கு வருகிறார். அப்போது கனகராஜ், நீண்ட பிரம்பு ஒன்றை எடுத்துவந்து மேசை மீது வைக்க, தனது பார்வையினாலேயே அதைத் திரும்பக் கொண்டுபோகச் சொன்னார். எப்போதுமே மழுமழுமென ஷேவ் செய்து பளிச்சென இருக்கும் அவரின் முகத்தில் முடிகள் முளைத்திருந்தன. கண்கள் சிவந்திருக்க, சோர்வடைந்து, தோற்றுப்போன ஓர் அரசனின் முக பாவத்துடன் வந்து அமர்ந்தார். உண்மையில், எனக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த பைபிளை எடுத்தார். நடுவில் ஒரு பக்கத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு, அதை மீண்டும் மேசையின் மீதே வைத்து எங்களை நிமிர்ந்து பார்த்தார். மௌனத்தால் வகுப்பறையே உறைந்திருந்தது. ''பிள்ளைகளே... இந்த மதிய நேரத்தில் உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப் போகிறேன். தேவகுமாரன் இயேசுபிரான் சொன்ன கதை அது. வழிவழியாக அவரது வம்சத்தினர் அந்தக் கதையை தங்கள் குமாரர்களுக்குச் சொன்னதுபோல, எனது அப்பா எனக்குச் சொன்னார். அதை எனது பிள்ளைகளாம் உங்களுக்கும் இன்று நான் சொல்லப்போகிறேன்'' என்று அந்தக் கதையை ஆரம்பித்தார்.

''ஒரு செல்வந்தருக்கு, இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். இளையவன், தான் சுதந்திரமாக வாழ எண்ணி, தனது சொத்தைப் பிரித்துத் தரும்படி தகப்பனிடம் கேட்டான். தகப்பனும் அதன்படியே பிரித்துக்கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குச் சென்று ஆடம்பரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு, அனைத்து சொத்துகளையும் இழந்து நிர்கதியாக நின்றான்.

உணவுகூட இல்லாத நிலையில், பன்றித் தொழுவம் ஒன்றில் கூலி வேலைக்குச் சேர்ந்தான். அங்கே, பன்றிகளுக்குக்கான உணவாக வைக்கப்பட்டிருந்த தவிட்டைச் சாப்பிடும்போது, எஜமானால் வகையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதுதான் அவனுக்குத் தோன்றியது, தனது தந்தையிடம் பணிபுரியும் வேலைக்காரர்கள்கூட இதைவிட நல்ல உணவை உண்ணும்போது, நாம் வந்து இப்படிச் சீரழிந்துகிடக்கிறோமே என்று. உடனே, அங்கிருந்து புறப்பட்டு, தனது தந்தையிடமே சென்று சேர்கிறான்.

பிள்ளைகளே... இங்கே கவனியுங்கள்!

அவனது தந்தை கெட்டுப்போய்த் திரும்பி வந்த அவனை வெறுக்கவில்லை. வரவேற்று அழைத்துச் செல்கிறார். வேலையாள்களை அழைத்து அவனது கைகளுக்கு மோதிரமும், கால்களுக்குச் செருப்பும் அணிவிக்கச் சொல்கிறார். இருப்பதிலேயே, கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கச் சொல்கிறார். அவரது மூத்த மகன்கூட அவருடைய செயல்களைக் கண்டு வெறுத்து நிற்கும்போது அவனைச் சமாதானப்படுத்த அவனிடம், 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையவை எல்லாம் உன்னுடையவையே. ஆனால், உன் தம்பி இறந்துபோயிருந்தான். தற்போது அவன் மீண்டும் உயிர் பெற்றுள்ளான்’ என்று அவனைத் தேற்றினார்.

பிள்ளைகளே... அந்தத் தகப்பனைப் போலத்தான் நானும் இருக்கிறேன். ஆண்டவர் சொல்வதைப் போல, எப்போது எல்லாம் ஒருவன் நேர்வழியில் இருந்து விலகிச் செல்கிறானோ, அப்போது எல்லாம் அவன் மரித்துப்போகிறான். மீண்டும் திருந்தி, நல்ல பாதைக்கு வந்தால், ஆண்டவர் முதலில் அவனைத்தான் கட்டித் தழுவி வரவேற்பாராம்.

உங்களில் ஏதோ ஒரு மாணவன், சிறு தவறு ஒன்று செய்துவிட்டதனாலேயே, அவனை நான் ஒருபோதும் வெறுக்கப்போவது இல்லை. மாறாக, எனது எண்ணம் எப்போதும் அவனை நல்வழிப்படுத்துவதிலேயே இருக்கும். அவன் அறியாமல் செய்துவிட்ட தவறுக்காக, ஒருபோதும் நான் தண்டிக்க மாட்டேன். அவன் என்றேனும், மனம் திருந்தி நேர்வழிக்கு வந்தால் போதும்!'' - பைபிளின் கெட்டகுமாரன் கதையை எங்களிடம் சொல்லிவிட்டு, அவர் அமைதியாகத் தலைகுனிந்து எங்களுக்காக ஜெபிக்கத் தொடங்கினார்.

மொத்த வகுப்பும் உறைந்துபோய் இருந்தது. எனது உடல் நடுங்கியது. எங்கள் யாரையும் அவர் நிமிர்ந்து பார்க்காமல், தலை குனிந்தபடி வகுப்பைவிட்டு வெளியேறினார். அவர் சென்ற நீண்ட நேரத்துக்குப் பின்பும் எங்கள் அனைவரின் கண்களும், அவர் நின்றிருந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அவர் சொல்லிச் சென்ற வேதத்தின் சொற்கள் மந்திரம் போல, அந்த இடத்தை நிறைத்து நின்றிருந்தன. அந்த வகுப்பு முடிய மீதம் இருந்த கொஞ்ச நேரமும் எனக்கு ஒரு யுகமாக விரிந்து நின்றது.

இப்போது அவன் எழுந்து நின்றான். இளங்கோவிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு, வேகமாக வெளியே சென்றான். இளங்கோவும் அவன் பின்னரே தொடர்ந்து செல்ல, நானும் எழுந்து வெளியே வந்தேன். அவன் நேராக, தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைவதைப் பார்த்தோம்.

இளங்கோ என்னருகே வந்து, ''ஹெச்.எம்., பேசினதுல கலங்கிப்போயிட்டான். அவன்தான் எடுத்தான்னு ஒப்புக்குவான். கவலைப்படாதே. நம்மைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணிட்டுத்தான் போயிருக்கான்'' என்றான்.

அவன் எங்களையும் சேர்த்துக் காட்டிக்கொடுத்தால்கூடப் பரவாயில்லை என்று அப்போது எனக்குத் தோன்றியது.

ன்று மாலை, பள்ளி முடிந்து அனைவரும் சென்றிருந்தனர். டி.ஈ.ஓ., தலைமை ஆசிரியரின் அறையில் விசாரணையை நடத்திக்கொண்டு இருந்தார். நானும் இளங்கோவும் ஜன்னல் ஓரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். முக்கியமான ஆசிரியர்கள் பதற்றம் இன்றி அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தனர். நாங்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து, நடப்பதைத் தெளிவாகக் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது.

தலை குனிந்தபடி தனது விசாரணை அறிக்கையை எழுதிக்கொண்டிருந்த டி.ஈ.ஓ நிமிர்ந்து அவனைப் பார்த்து, ''தம்பி, நீ மொத்தம் எத்தனை கொஸ்டீன் பேப்பர் எடுத்துட்டுப் போனே?'' என்று கேட்டார்.

அவன் ஏதோ முணுமுணுத்தான்.

''பயப்படாமச் சொல்லுப்பா... எத்தனை?'' என்றார்.

இவன் ''மூணு சார்...'' என்றான்.

அந்த அறை முழுக்கப் பதற்றம். டி.ஈ.ஓ., தனது கோப்புகளைப் புரட்டிப் பார்த்தபடி அவனிடம், ''எத்தனை எடுத்தாலும் தண்டனை ஒண்ணுதான். பயப்படாம, உண்மையைச் சொன்னா, தண்டனையைக் குறைக்கச் சொல்லலாம்'' என்றார்.

இவன் மீண்டும், ''மூணுதான் சார் எடுத்துட்டுப் போனேன். அந்த மூணும் இதோ ஹெச்.எம். சார் டேபிளில் இருக்கு'' என்றான்.

யாரோ ஓர் ஆசிரியர் அவனை அடிக்கப் பாய்ந்தார். அந்தப் பையன், ஹெச்.எம் பின்னால் பதுங்க, கூச்சல் இன்னமும் அதிகரித்தது.

''கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க'' என்று சத்தமிட்ட டி.ஈ.ஓ., தனது உதவியாளரிடம், ''மொத்தம் எத்தனை கொஸ்டீன் பேப்பரைக் காணோம்?'' எனக் கேட்டார்.

அதற்கு அவர் ''13'' என்றார்.

நானும் இளங்கோவும் அப்படியே நடுங்கிப்போய் நின்றுவிட்டோம். இவன், சற்று சத்தமாக... ''சார்... எங்க அம்மா மேல சத்தியமா நான் மூணுதான் எடுத்துட்டுப் போனேன்'' என்றான்.

தலைமை ஆசிரியர், அவரது எதிர்புறத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் மரச்சிலையை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.

டி.ஈ.ஓ., தனது விசாரணையைத் தொடர்ந்தார். ''சரி... நீ அந்தக் கட்டை எப்படிப் பிரிச்ச? அதுக்குக் கத்தியோ, பிளேடோ தேவைப்படுமே?'' என்று கேட்டார்.

அவன், அமைதியாகச் சொன்னான், ''சார்... அந்தக் கட்டு ஏற்கெனவே பிரிச்சித்தான் இருந்துச்சு. வெளியில் நீட்டிக்கிட்டு இருந்த மூணு கொஸ்டீன் பேப்பரை மட்டும்தான் நான் எடுத்தேன்'' என்றான்.

அவனை யாரும் நம்பவில்லை. மேலும் கேள்விகள்... மேலும் மிரட்டல்கள்!

நான் இப்போது அவனை முழுமையாக நம்பினேன். எனக்கும் நன்றாக நினைவில் இருக்கிறது. நானும் பார்த்திருந்தேன். அந்தக் கட்டுகளில் ஒன்று நாங்கள் பார்க்கும்போதே, பிரிக்கப்பட்டுதான் இருந்தது. இளங்கோவிடம் கிசுகிசுத்தேன். அவனும் அதைப் பார்த்திருக்கிறான். எங்கள் இருவரில் ஒருவரேனும் அவனுக்காகச் சாட்சி சொல்ல செல்கிறோமோ என இயேசுபிரான் சுவற்றில் இருந்து எங்களைப் பார்த்தபடி இருந்தார். நாங்கள் இருவரும், அப்போதும் வாய் மூடி மௌனமாகவே இருந்தோம். குழப்பம் அதிகரித்த நிலையில், பேச்சுக்குரல்கள் உச்சகட்டத்தில் ஒலிக்கத் தொடங்கின. குறிப்பாக, ஓர் ஆசிரியர் மட்டும் மிகவும் பதற்றத்துடன் அவனைத் திரும்பத் திரும்ப அடித்துக்கொண்டிருந்தார்.

யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில், ''சைலன்ஸ்!'' என்றபடி, ஹெட்மாஸ்டர் தனது இருக்கையில் இருந்து எழுந்தார். ''நான் இந்தப் பையனை நம்புறேன். இவன் மூணுதான் எடுத்திருக்கான். டி.ஈ.ஓ., சார், நீங்க என் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கலாம். நடந்த தவறுக்கு நானே முழுப் பொறுப்பு'' என்றபடி, தனது மாணவனை அருகில் அழைத்து, அவனது தோளை இறுக அணைத்துக்கொண்டார்.

அங்கு இருந்த அனைவருக்கும், அவர்கள் முன் நடப்பதை நம்ப முடியவில்லை. மனம் திருந்தி வந்த மைந்தனை, அவனது தகப்பன் எதிர்கொண்டு சென்று கட்டித் தழுவிக்கொண்ட காட்சி அது. அதில் 2000 வருட கால சத்தியம் உறைந்திருந்தது.

நடந்ததைப் பார்த்த டி.ஈ.ஓ-வும் நெகிழ்ந்துவிட்டார். அவர் எழுந்து தனது கோப்புகளை எல்லாம் சேகரித்தபடி ஹெச்.எம்-மிடம், ''சார், நடந்தது நடந்துபோச்சு. இதை இப்படியே விட்டுடலாம். நான் புது பேட்ச் கொஸ்டீன் பேப்பர்ஸ் அனுப்பி வைக்கிறேன். இனிமேல் அதை உங்க ரூம்லேயே வெச்சுப் பத்திரமாப் பார்த்துக்கங்க'' என்றபடி, அந்தப் பெரிய குற்றத்தை இலகுவாக முடித்துவைத்தார். அனைவரும் ஏதேதோ, பேசியபடி கலைந்து வீட்டுக்குச் சென்றனர்.

அவன் வெளியில் வருவதற்காக நானும் இளங்கோவும் மட்டும் அறை வாசலிலேயே காத்திருந்தோம். இரவு நன்கு கவிழ்ந்திருந்தது. நீண்ட நேரம் கழித்து, ஹெச்.எம். தனது அறையைவிட்டு வெளியே வந்தார். அவரது உணவுப் பைகளை எடுத்துக்கொண்டு பியூன் கனகராஜும் உடன் வந்தார். பின்னாலேயே, கை கட்டியபடி அவனும் வந்தான். சற்று தூரம் நடந்துசென்ற ஹெச்.எம்., நின்று பின்னால் வந்த அவனை அருகே அழைத்தார். விசும்பியபடி, அவன் அவர் அருகில் சென்றான்.

அவனது தோளில் கை போட்டுக்கொண்டு, தனது பியூனை அருகில் அழைத்து, ''கனகராஜ்... நாளையில இருந்து கேட்டுக்கு வெளியில் நிக்கிற பசங்களை என் ரூமுக்குக் கொண்டுவர வேண்டாம். அவங்க நேரா கிளாஸுக்குப் போகட்டும். தகுந்த காரணங்கள் இருந்தா, மாணவர்கள் மாசத்துக்கு சில முறை மட்டும், பள்ளிக்குத் தாமதமா வரலாம். இதை அப்படியே, சம்பத்திடம் சொல்லி ஒரு சர்க்குலர் போட்டு அனுப்பச் சொல்லிடு'' என்றார்.

எங்கள் பள்ளியின் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை ஏறிய, சிவப்புக் கட்டடத்தின் முன் நின்று, ஓர் இரவுப்பொழுதில் எங்கள் ஹெச்.எம். இட்ட அந்த ஒரு வாய்மொழி உத்தரவு, அதுவரையிலும், எங்கள் பள்ளியைச் சுற்றிலும் இயங்கிவந்த அத்தனை அதிகாரபூர்வமற்ற வாயில்களையும் அந்த நிமிடம் முதல் நிரந்தரமாக மூடிவிட்டது.


து எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம் முடைய வீடுகள் 'வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே 'வசிப்பிடமாக’ மாறி விடுகின்றன?

கோடை விடுமுறைக்குச் சென்றிருக்கும் மகனைப் பார்த்து ஐந்து நாட்கள் இருக்கும். வீட்டின் எல்லா இடங்களையும் தனது பல்வேறு சாகசங்களால் நிரப்பித் திரிந்தவன் இப்போது இல்லாததால், வீடும் மனசும் வெறுமையாக இருந்தன. மனைவியும் மகனும் ஊரில் இல்லாத இந்த நாட்களில், தாறுமாறாக இருக் கும் என் நூலகத்தை ஒழுங்குசெய்ய  ஆரம்பித்தேன். புத்தக அலமாரிகளின் மேலிருந்து எல்லாப் புத்தகங் களையும் கீழே இறக்கியபோதுதான், பழைய அகராதி ஒன்றிலிருந்து அந்தக் கடிதம் தட்டுப்பட்டது.பழையகடிதங்களைப் படிப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் அடங்குவதே இல்லை. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அந்தக் கடிதத்தைப் படித்தேன்.

யார், யாருக்கு எழுதிய கடிதம் இது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கடிதம் இருந்த அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். 'டாக்டர்’ என்ற அடைமொழியுடன் கையால் கிறுக்கி இருந்த, புரியாத அந்தப் பெயரின்கீழே  'அரசு மருத்துவமனை, திருவண்ணாமலை’ என்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டு இருந்தது.

முப்பது வருடங்களாக பழைய புத்தகங்களுக்கு இடையில் ஒளிந்திருந்த அந்தக்கடிதம், இன்றைய காலைவேளையில், என் நினைவு அடுக்குகளைத் திறக்க முயற்சித்தது. பொங்கிவரும் ஞாபகங் களின் கனம் தாளாமல், எனது உள்ளம் நெகிழத் தொடங்கியது. அவை, அரை டிராயரில் இருந்த ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவனின் சாகச நினைவுகள். அந்த வயதில் நாங்கள் எந்த நேரமும் கிசுகிசுத்துக்கொண்டு இருந்த ரகசியங்கள், வெயிலும் வியர்வையும் அறியாப் பொழுதுகள், பொய்யான நம்பிக்கைகள், அர்த்தமற்ற பயங்கள் என எல்லாமும் ஒரு கலவையாகக் கலந்த பால்ய கால ஞாபகங்களின் நீரோட்டம் அது. க்ளிஷேவாகத்தான் இருக்கும். இருப்பினும் இப்படியே ஆரம்பிக்கிறேன்!

முப்பது வருடங்களுக்கு முன் ஒருநாள்...

நானும் சீனுவும் வெளிச்சம் குறைவான ஓர் அறையில், அந்த டாக்டரின் முன்பு கைக்கட்டி நின்றிருந்தோம். நாங்கள் படித்து வந்த பள்ளிக் கூடத்தில், காலை நேர பிரேயர் ஆரம்பிக்க இன் னும் பத்தே நிமிடங்கள் மிச்சம் இருந்தன.என்ன நினைப்பாரோ அவர்? எங்களைப் பார்த்து, ''சரி... இப்போ போய்ட்டு, நாளைக்குக் காலை யில வந்துடுங்க'' என்பார். அதன் பின் வியர்த்து விறுவிறுத்து வெளியில் வரும் நாங்கள், திருவூடல் தெருவிலிருக்கும் டாக்டரின் வீட்டிலிருந்து, எங் கள் டேனிஷ் மிஷன் பள்ளிக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் போய்ச் சேர வேண் டும்.

இப்படி நடப்பது இது ஏழாவது நாள்!

டாக்டரின் முன்னால் சீனு இப் படி கைக் கட்டிக்கொண்டு நிற்பது நியாயம். நான் எப்படி இதில் வந்து மாட்டிக்கொண்டேன்? ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே என் வீட்டில் எனக்கு சைக்கிள் வாங்கித் தந்துவிட்டார்கள். நான்சைக் கிள் வாங்கியதைப் பார்த்த சீனு, அவன் வீட் டில் கெஞ்சிக்கூத்தாடி அவனும் சைக்கிள்வாங்கி விட்டான். எப்போதும் நாங்கள் ஒருவரை ஒரு வர் முந்திக்கொண்டுதான் சைக்கிளில் பள்ளிக் குச் செல்வோம். அதுவும் திருவூடல் தெரு மேட் டில் இருந்து அந்தத் தெருவின் கீழே இருக்கும் கடலைக் கடை மூலை வரை, ஹேண்டில் பாரில் இருந்து, கைகளை எடுத்துவிட்டு ஓட்டுவது எங்களின் முக்கியப் பொழுதுப்போக்கு!

நான் சீனுவுடன் சைக்கிளில் செல்லாத ஒரு காலைவேளையில், திருவூடல் தெரு முனையில் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது. சைக்கிள்ஹேண் டில்பாரில் இருந்து கைகளை எடுத்துவிட்டுப் பறந்துகொண்டிருந்த சீனு, எதிரே வந்த ஒரு குதிரை  வண்டியின் மீதும் ஒரு லேம்ப்ரெட்டார் ஸ்கூட்டர் மீதும் மோதியிருக்கிறான். ஸ்கூட்டர், அரசு மருத்துவமனையின் ஒரு டாக்டருக்கு சொந்தமானது. சைக்கிள், குதிரை, புல் கட்டு, ஸ்கூட்டர், டாக்டர் எனக் கலவையாக ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டதால், யாரால் இந்தவிபத்து என்று யாராலும் உறுதியாகக் கணிக்க முடியவில்லை. ஆனால், அரை டிராயர் போட்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவன் விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததால், விபத்துக்கு அவனே காரணமானான். இவ்வளவு களேபரத்தில் சீனுவுக்கோ,  அவனுடைய சைக்கிளுக்கோ, குதிரைக்கோ சிறு சிராய்ப்புக்கூட இல்லை. டாக்டருக்குத்தான் ஏகப்பட்ட ரத்தக் காயங்கள். டாக்டர், முதல் விஷயமாக தன்னுடைய ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டுபோய் மெக்கானிக் ஷெட்டில்விட்டார் அடுத்தவேலையாக, ஒரு கையால் சீனுவையும் இன்னொரு கையால் அவனுடைய பள்ளிக்கூடப் பையையும் பிடித்துக்கொண்டு,  அதே தெருவில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார்.  சீனு அழுதுகொண்டே அவர் பின்னால் சென்றிருக்கிறான்.  

டாக்டர், அவனிடம் அவனுடைய அப்பா பெயர், வீட்டு விலாசம் வாங்கிக்கொண்டு, ஸ்கூட்டரை சரிசெய்வதற்கு ஆகும் பணத்தை அவனுடைய வீட்டிலிருந்து வாங்கிவந்து கொடுத்துவிட்டு, ஸ்கூல் பையையும் அவனுடைய சைக்கிளையும் மீட்டுச் செல்லுமாறு சொல்லி விட்டார். சீனுவின் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் உதை விழுவதோடு, பள்ளிக்கு சைக் கிளில் செல்லும் சலுகையும் பறிக்கப்பட்டுவிடும் என்கிற பயம் சீனுவைத் தொற்றிக்கொண்டது.

விடுமுறை முடிந்து ஊரிலிருந்து திரும்பியிருந்த என்னைப் பார்த்து, நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னான் சீனு.

''உன்னோட சைக்கிள் ரிப்பேர் ஆயிட்டு. அத னால என் சைக்கிளை உனக்குக் கொடுத்துருக் கேன்னு வீட்ல சொல்லிருக்கேன்டா. இப்ப என்ன பண்றதுனு தெரியலை!'' என்றான்.

''அந்த டாக்டர்கிட்ட நீயே கேட்டுப் பார்க்க வேண்டியதுதானேடா?''

''நாலு நாள் தொடர்ந்து போனேன்டா!''

''என்னதான் சொல்றார் அவர்?''

''எதுவும் பேச மாட்டார்டா. சும்மா நான் கையைக் கட்டிக்கிட்டு நிப்பேன். என்னையே பார்த்துட்டே இருப்பார். ரொம்ப நேரம் கழிச்சு, 'போயிட்டு நாளைக்கு வா’னு சொல்லிட்டு, அவரும் வீட்டைப் பூட்டிக்கிட்டுக் கிளம்பி ருவார்!''

என்னுள் இருக்கும் ஒரு சமாதானத் தூதுவனை முதலில் அடையாளம் கண்டுகொண்டவன் என்கிற முறையில், சீனுவுக்கு உதவி செய்வது எனக்குக் கட்டாயமாயிற்று.

மறுநாள் பிரேயர் 9 மணிக்கு. நாங்கள் 8 மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பினோம். திருவூடல் தெருவின் பாதியில் டாக்டர் வீடு இருந்தது. நல்ல அகலமான வீடு. வீட்டு தாழ் வாரத்தில் சீனுவின் சைக்கிள் ஒரு சங்கிலியால் கிரில் கேட்டோடு இணைத்துக் கட்டப்பட்டு இருந்தது. அதைப் பரிதாபமாக கண்கலங்கப் பார்த்துக்கொண்டே காலிங்பெல்லை அழுத்தினான் சீனு. யாரும் வரவில்லை.

எங்களை உள்ளே வரச் சொல்லி யாரும் கூப் பிடவும் இல்லை. சிறிது நேரம் கழித்து, இவனே கதவைத் திறந்துகொண்டு முன்னறையில் இருக் கும் டாக்டரின் சின்ன மேஜையின் முன்புபோய்,  கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான். 'தினமும் இப்படித்தான் போலும்’ என்று எண்ணிக்கொண்டேன்.

டாக்டர், குனிந்து எதையோ எழுதிக்கொண்டு இருந்தார். நீண்ட நேரம் கழித்து நிமிர்ந்து எங்க ளைப் பார்த்தவர், 'நீ யார்’ எனப் பார்வை யாலேயே என்னைக் கேட்டார். படக்கென நானும் கைகளைக் கட்டிக்கொண்டேன். வாயி லிருந்து வார்த்தைகள் ஏதும் வராததால், 'அவனு டைய நண்பன்’ என்று கட்டிக்கொண்டிருந்த கைகளினாலேயே சொன்னேன். அதற்குப் பின்பு, அவர் எதுவும் பேசவில்லை. பிரேயருக்கு சரியாக ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது எங் களைப் பார்த்து, 'இப்போ போய்ட்டு நாளைக்கு வந்துருங்க...’ என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டார் டாக்டர். நாங்கள் வெளியில் வந்த சிறிது நேரத்தில் அவரும் வெளியில் வந்தார். பின்னாலேயே வேலைக்காரப் பெண்ணும் வந்து, வாசல் கதவை இழுத்துப் பூட்டினார். டாக்டர், பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு, தன் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். பிறகு, மெக்கானிக் ஷெட்டிலிருந்து திரும்பியிருந்த ஸ்கூட்டரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். நான் சீனுவைப் பார்த்தேன்.

''தினமும் இப்படித்தாண்டா!'' என்றான் பரிதாபமாக.

தொடர்ந்து நானும் சீனுவுடன் சென்று டாக் டர் முன் கைக்கட்டி, கால் கடுக்க நிற்கத்தொடங் கினேன். ஆனால், ஒரு வாரத்துக்குப் பிறகு அப்படி நிற்க  எனக்குச் சலித்துவிட்டது. நான் ஏன் அவனுடன் தினமும் போய் அப்படி நிற்க வேண்டும்? என்று நான் யோசித்தது, சீனுவுக்குத் தெரிந்துவிட்டது. என்னிடம் அந்த திகில்செய்தி யைச் சொன்னான்... 'டாக்டர்கள் கூப்பிட்டுநாம் போகவில்லை என்றால், என்றாவது ஒருநாள் காய்ச்சல் என்று அவர்களிடம் செல்லும்போது, நமக்கு விஷ ஊசி போட்டுவிடுவார்களாம்!’

எனக்கு அதைக் கேட்டவுடன் வியர்த்து விறு விறுத்துவிட்டது. மறுநாள், சீனு வருவதற்குக்கூட காத்திருக்காமல், முதல் ஆளாகப் போய் டாக் டரின் முன்னால் நிற்க ஆரம்பித்தேன். கடமைக் காக இல்லாமல் ஆத்மார்த்தமாக டாக்டர் முன் கைக்கட்டி நிற்கத் தொடங்கினேன். அதன் பிறகுதான் அந்த வீட்டைப் பற்றிய நுணுக்கமான பல விஷயங்கள் எனக்குப் புரிபட்டது. அந்த வீட்டின் நேர்த்தியும் டாக்டரின் நேரம் தவறா மையும் இன்னமும் எனக்கு நினைவில் இருக் கிறது.

மிகச் சரியாக காலை 6 மணிக்கு அந்த வீட் டின் கதவு திறக்கப்படும். வேலைக்காரப் பெண் உள்ளே நுழைந்த பின் மூடப்படும் கதவை, சரி யாக 8 மணியளவில் நானோ அல்லது சீனுவோ தான் போய்த் திறப்போம். அப்போது, தன்னு டைய டேபிளில் அமர்ந்து எதையோ எழுதத் தொடங்கியிருப்பார் டாக்டர். வேலைக்காரப் பெண் சமைத்து முடித்த பின்பு, கையில் மதிய உணவை எடுத்துக்கொண்டு புறப்படுவார் டாக்டர். அப்போது சரியாக நேரம் காலை 8.55 மணியாக இருக்கும். அந்த வீட்டில், ஒரு பொருள் இடம் மாறியிருக்காது. ஓர் இடத்தில் கூட தூசியோ, அழுக்கோ தென்படாது. செருப்பு முதல் குளியலறை சொம்பு வரை வைத்த இடத் தில் வைத்தபடி இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டையே தலைகீழாக மாற்றிவிடும் வல்லமை கொண்ட என்னை, இந்த ஒழுங்கு மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.  

ஒருகட்டத்துக்குப் பிறகு, சீனு பொறுமை இழக்க ஆரம்பித்தான். ஒருநாள் வெளியே வரும் போது டாக்டரின் செருப்பைக் கூடவேகொண்டு வந்துவிட்டான். மறுநாள் காலையில், அதே இடத்தில் அதே போன்ற ஒரு ஜோடி புது செருப்பு இருந்தது. அடுத்த நாள், அவருடைய மேஜையில் இருக்கும் சின்னத் தலையாட்டி பொம்மையை சீனு எடுத்துவந்துவிட்டான். மறுநாள், அதே இடத்தில் வேறு ஒரு தலையாட்டி பொம்மை இருந்தது. சீப்பு, பேனா என்று அவன் எதைக் கொண்டுவந்தாலும், அவை மறுநாள் அதே இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இத்தனைக்கும் எங்கள் மீது சந்தேகப்பட்டு அவர் ஒரு கேள்வி கேட்டது கிடையாது.

திடீரென்று ஒருநாள், சீனுவின் சைக்கிளை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார் டாக்டர். அன்று முதல் அவன் டாக்டர் வீட்டுப் பக்கம் வருவது இல்லை. ஆனால், நான்தான் பயந்து கொண்டு அவர் வீட்டுக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் என்னைப் பார்த்து, 'இனிமே, நீயும் வர வேண்டாம்’ என் றார். ஆனால், ஏனோ எனக்கு அங்கு சென்று நிற்பது பிடித்திருந்தது.  தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இப்போதெல்லாம், அவர் வீட்டு மேஜையில் எனக்காக ஸ்வீட், மிக்ஸர், சேவு வகைகள் தயாராக இருந்தன. நிற்பதற்குப் பதில் ஒரு முக்காலியில் உட்கார்ந்துகொள்ளவும் ஆரம்பித்தேன். அவ்வப்போது எழுந்து வீட்டுக் குள் சென்று உலாத்தவும் தைரியம் பெற்றிருந் தேன். ஆனால், டாக்டரிடம் எந்த மாற்றமும் இல்லை. தினமும் சரியான நேரத்துக்கு என் னைப் போகச் சொல்வதைத் தவிர, வேறு எந்த வார்த்தையும் அவர் என்னிடம் பேசியதே இல்லை.

சீனு, அந்தச் சம்பவத்துக்குப் பின், திருவூடல் தெருப் பக்கமே எட்டிப்பார்ப்பது இல்லை. அந்தத் தெருவுக்குப் பதிலாக கோபுரத் தெருவில் சென்று, பெரியத் தெரு வழியாக பள்ளிக்குச் சென்றுவிடுவான்.

ஒரு சனிக்கிழமை மாலையில் நாங்கள் இருவ ரும் டியூஷன் செல்லும்போது, பெரியத் தெரு மேட்டுத் திருப்பத்தில் அந்தப் பெரிய கால் வாயின் ஓரத்தில் டாக்டரின் ஸ்கூட்டர் விழுந்து கிடப்பதைப் பார்த்தோம். இருட்டிக்கொண் டிருந்த வேளையானதால், வேறு யாரும் அதைக் கவனிக்கவில்லை. அப்போதெல்லாம், பெரியத் தெரு கால்வாயில் காரே விழுந்துகிடந்தாலும் வெளியே தெரியாது. அத்தனை பெரிய அகல மான கால்வாய் அது. ஓடிச் சென்று பார்த்தால் டாக்டர் கால்வாயினுள் விழுந்துகிடந்தார். சீனு பெரிதாகச் சத்தம் போட்ட பின்பு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கால்வாய்க்குள் குதித்து, டாக்டரை வெளியே தூக்கினார்கள். அவர் போட்டிருந்த வெள்ளை கலர் பேன்ட், சட்டை முழுக்க வாந்தி எடுத்திருந்தார். உடம்பில் ஆங் காங்கே ரத்தக் கீறல் வேறு. சுயநினைவு இல்லா மல் இருந்த அவரை, 'இன்னார்’ என்று நானும் சீனுவும்தான் அடையாளம் காட்டினோம். உடனே அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அவருடைய வீட்டுக்குக் கொண்டுசென்றார்கள்.

ஞாயிறு விடுமுறைக்குப் பின், திங்கள்கிழமை நான் டாக்டர் வீட்டுக்குச் சென்றபோது, வீடு வெளிப்புறம் பூட்டியிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் போய்ப் பார்த்தேன். அதன் பின்பு எப்போதுமே அந்த வீடு திறந்திருக்கவே இல்லை.

பின்னாட்களில் யாரோ ஒருவர் டாக்டரின் வீட்டை விலைக்கு வாங்கி, இடித்துத் தள்ளிவிட்டு புது வீடு கட்டியிருந்தார். எப்போது அந்தத் தெருவில் சென்றாலும், தன்னிச்சையாக அந்த வீடு இருந்த இடத்தைப் பார்க்க நான் தவறுவதே இல்லை. அதற்குப் பின்பு, வேறெங்கும் அந்த டாக்டரை நாங்கள் பார்க்கவே இல்லை. நானும் சீனுவும் மொட்டை மாடியில் கூடும்போதெல்லாம் அவரைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்போம். 'ஏழாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களை மிரட்டி, தினமும் தன் முன்னால் ஏன் அவர் நிற்கச் சொல்ல வேண்டும்?’

'ஒருநாள் கூட, சீனுவின் வீட்டுக்கு வந்து ஏன் நடந்ததைச் சொல்லவில்லை?’

'சீனுவிடமிருந்து பணம் எதுவும் வாங்காமல், சைக்கிளை ஏன் திருப்பித் தந்துவிட்டார்?’

'ஏன் ஒருமுறைகூட எங்களிடம் வேறு எதுவுமே பேசவில்லை?’

'அவர் மேஜை மீதிருந்த பொருட்களை சீனுவோ, நானோதான் திருடுகிறோம் என்று தெரிந்தும்கூட, ஏன் எங்களைக் கண்டிக்கவே இல்லை?’

- இப்படி விடை தெரியாத பல கேள்விகள் எங்களிடம் மிச்சம் இருந்தன. 'ஒருவேளை, நாங்கள் அங்கு போய் நிற்பதைத் தவிர்த்திருந்தால் உண்மையாகவே அவர் விஷ ஊசி போட்டு எங்களைச் சாகடித்திருப்பாரோ’ என்ற சந்தேகத்தை மட்டும் சீனுவும் நானும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளவே இல்லை.

சில நாட்கள் கழித்து சீனு, டாக்டர் வீட்டிலிருந்து தான் எடுத்துவந்த பொருள்களை எல்லாம் ஒரு பையில் போட்டு எடுத்துவந்தான். அந்த பொருட்களோடுதான் இந்த ஆங்கில அகராதியும் இருந்தது. அதிலிருந்த ஒரு  கடிதத்தை எடுத்து என்னிடம் கொடுத்தான். ஏற்கெனவே பிரித்துப் படிக்கப்பட்டிருந்த கடிதம் அது.

அந்தக் கடிதத்தை, நான் படிக்கத் தொடங்கினேன்.

'மதிப்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய

மருமகப் பிள்ளைக்கு,

உங்கள் மாமனார் அநேக ஆசீர்வாதங்களுடன் எழுதிக்கொள்வது என்னவென்றால், இங்கு மகள் ஜானகி, பேரப் பிள்ளை சிவகுமாரன் உள்பட எல்லோரும் சௌக்கியம். அதுபோல் தங்களின் சௌக்கியத்தையும் பெரிதும் வேண்டுகிறேன். இந்த நேரத்துக்கெல்லாம், புதிய இடத்தில் தங்களுக்கு வேலை நன்றாகப் பழகியிருக்கும் என்று நம்புகிறேன். தாங்கள் வைத்தியம் பார்க்கும் நோயாளிகளின் நலம் வேண்டுவதே எந்த நேரமும் என்னுடைய பிரார்த்தனையாக இருக்கிறது. பேரப் பிள்ளையைக்கூட இங்கேயே பக்கத்திலிருக்கும் ஸ்கூலில், ஏழாம் வகுப்பு சேர்த்துவிட்டோம். அந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர்

என்னுடைய சிநேகிதர் என்பதால், பழைய ஸ்கூல் சான் றிதழ்கூட இல்லாமல் சேர்த்துக்கொண்டார்.

நிற்க!

ஜானகி, இன்னமும் அப்படியேதான் இருக்கிறாள். சென்ற மாதம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதத்தைப் படிக்கக்கூட பிடிவாதமாக மறுத்துவிட்டாள். உங்கள் மாமி யார், அதாவது என் மனைவி, கோயிலுக்குப் போனபோது கடிதத்தின் சங்கதிகளை ஜானகிக் குச் சொல்லியிருக்கிறாள். அதையும்கூட அவள் அவ்வளவாகக் காது கொடுத்து கேட்கவில்லை யாம்! மன்னிக்கவும்.

அவளால், இன்னமும் கொதிக்கிற பால் தன் முகத்தில் பட்டுவிட்டதை மறக்க முடியவில்லை.ராத்திரி தூங்கும்போது தவறாமல் புலம்புகிறாள். 'பால் நேரத்துக்குக் கொதிக்காதது என் தப்பா? அதற்குப் போய் யாராவது இப்படிக் கோபப்படு வார்களா?’ என்று புலம்பித் தீர்க்கிறாள். சின்னப் பெண்தானே!

பேரன் சிவகுமாரன் ரொம்பவும் பிடிவாதக் காரனாக இருக்கிறான். விளையாட்டுப் பொம் மைகளை எடுத்து விளையாடிய பிறகு, எடுத்த இடத்திலேயே வைக்காதது பெரிய தப்புதான். கொஞ்ச நாள் போனால், ஒருவேளை அப் படியான நல்ல பழக்கங்களைப் பழகிடுவானோ என்னவோ? தாங்கள் அவனைத் திருத்த வேண்டி, அடித்ததை எல்லாம் இன்னமும் மறக் காமல் படுத்தியெடுக்கிறான். உங்களின் போட் டோவைப் பார்த்தாலே, ஜன்னி கண்டதைப் போல அவனுக்கு உடம்பெல்லாம் வியர்ப்ப தால், வீட்டுக் கூடத்தில் மாட்டியிருந்த உங்கள் கல்யாண போட்டோவைக் கழற்றி உள்ளே வைத்திருக்கிறோம். மன்னிக்கவும்.

நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் என்னைவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது. நல்ல ஒழுக்க குணங் களும், கண்டிப்பும், நேர்மையும்கொண்ட உங்களை என்னுடைய மருமகனாக்கிக்கொடுத் தது என் பிரார்த்தனைக்கு இறைவன் கொடுத்த கூலி என்று எண்ணி சந்தோஷம் அடைந்திருந் தேன். ஆனால், நான் பெற்ற பெண்ணோ, அப் படிப்பட்ட நற்குணங்களைப் போற்றத் தெரியாப் பெண்ணாக இருக்கிறாளே! நான் என்ன செய்யப்போகிறேன்?

எனக்குக் கல்யாணமாகி பல வரு டங்கள் கழித்துப் பிறந்த ஒரே பெண் என்பதால், மிகுந்த செல்லம் கொடுத்து அவளை வளர்த்துவிட் டேன். இப்போதுகூட அவளிடம், 'மாப்பிள்ளையிடம் போய் சேர்’ என்று கடுமையாகச் சொல்ல எனக்கு வாய் வரவில்லை. அம்பாளே பார்த்து அவளுக்கு நல்ல புத்தி கொடுக்கும் வரை தாங்களும் பொறுத்திருக்குமாறு உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

அநேக கோடி ஆசீர்வாதங்களுடன்,

                       எஸ்.வைத்தியநாதன்’

கடிதம் முடிந்துவிட்டிருந்தது. 'உனக்காவது ஏதாச்சும் புரிந்ததா’ நான் படித்து முடிக்கக் காத்திருந்தவன் போல, என்னைக் கேட்டான் சீனு. அப்போது அவன் கேட்டபோது எனக்கும் ஒன்றும் புரிந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது அந்த டாக்டரின் வயது எனக்கு. இன்று எனக்கு அந்தக் கடிதத்தில் புரிந்துகொள்ள சில செய்திகள் இருந்தன. கடி தம் எழுதப்பட்ட தேதியைப் பார்த்தேன். நாங் கள் டாக்டரை சென்று பார்த்துக்கொண்டிருந்த காலத்துக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம். தினமும் எங்களை அவரின் வீட்டுக்கு வரவழைத்துக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்ததின் காரணம், வெறும் ஐந்து நாட்களாக மகனைப் பார்க்காமல் இருப்பதற்கே, பதைப் பதைத்துப் போயிருக்கும் எனக்கு இப்போது புரிந்தது.

இப்போது அந்த டாக்டரும் இல்லை... சீனுவும் இல்லை. புத்திர சோகத்தின் மௌன சாட்சியாக அந்தக் கடிதமும், எனது பால்ய கால நினைவுகளும் மட்டுமே என்னிடம் இருக்கின்றன.

இப்போது கூடுதலாக, இந்தக் கதையும்! 




     RSS of this page