Home / kadhalpuranam

kadhalpuranam


பருவம் 1: பேதை / அலகிலா விளையாட்டு
1
நீ வந்திடாத‌ நாட்களின்
அம்மா அப்பா ஆட்டத்தில்
அம்மாவாய் நடித்திருக்க‌ச்
சுகிப்பதில்லையெனக்கு.
2
கவட்டைக்கால் கணக்கு வாத்தியாரிடம்
நீ வாங்கும் பிரம்படியில் கண்ணீர் முட்டி
நனைந்தழுகிறதென் பாவாடைச்சீருடை.
3
கண்ணுக்குக் கருமையோ
விரலுக்கு மருதாணியோ
அம்மா வைத்தனுப்பினால்
உன் முன்னால் வந்து நிற்க‌
வெட்கமாயிருக்கிறதெனக்கு.
4
நீ தந்த ஒற்றை மயிலிறகு
பத்திரமாய் உறங்குகிறதென்
தமிழ்ப்பாட புத்தகத்தின்
வாசனைக் கதகதப்பில் –
என்றேனும் ஈனுமென்ற‌
நம்பிக்கைத் தீற்றலுடன்.
5
நீ வாங்கித்தரும் இலந்தை வடைக்கு
எப்போதுமிருக்கிறதொரு வசீகர ருசி –
ஆளை வீழ்த்துமுன் புன்னகை போல்.
6
நீ கட்டி விடுவதற்காய்
அடிக்கடி அவிழ்கிறதென்
பட்டுப்பாவாடை நாடா.
7
என் அப்பாவைப் போல்
முறுக்கு மீசையிருந்தால்
இன்னும் அழகாயிருப்பாய்.
8
தெருவோரம் நின்ற வாக்கில்
சுவற்றோவியம் வரைந்தபடி
வெளிர்மஞ்சள் நிற‌ச் சிறுநீர்
கழிக்குமுந்தன் சௌகரியம்
பொறாமை தருகிறதெனக்கு.
9
எப்படியோவுன் தோட்டத்து
மருதாணியெனில் மட்டும்
கருக்காமல் சிவக்கிறதென்
புதுநிறச்சிறுவிரல் நுனிகள்.
10
அதிகம் அழுதேனெனில்
அதிகம் கிள்ளுவாயென
அதிகம் அழுகின்றேன்.‌
ஆகாசத்தாமரை
பெதும்பை [வயது : 8-11]

11
நீயும் நானும்
சேர்ந்து நடக்கையில்
சில சமயம் விரலுரச‌,
பரஸ்பரம் புன்னகைப்போம் –
அதற்கு என்ன அர்த்தம்?
12
கால்டுவெல் விளக்கி விட‌
அத்தனை எளிதன்று
நம்மிருவர் பாஷைகளின்
ஒப்பீட்டிலக்கணம்.
13
குடையற்ற மழையில்
உன்னுடன் நனைந்ததில்
ஜலதோஷம் பிடித்தது –
மிக மிகப் பிடித்தது.
14
உனது சட்டை நிறத்தில்
யார் அணிந்து வந்தாலும்
சிலகணமேனும் தடுமாறிக்
கலைகிறதென் மனக்கவனம்.
15
அழகாய்த்தானடா இருக்கிறாய் நீ –
கொஞ்சமாய்த் தலை சாய்த்துக்
கோணலாய்ப் புன்னகைக்கையிலும்.
16
சளிப்பிடித்த தினங்களின்
சம்பாஷணைகளில்
மூக்கில் பேசுவாயே,
அது தனி அழகு.
17
உனக்குத் தெரியாது –
என்னிடம் உனக்குப்
பொய் சொல்லத்
தெரியாதென்று.
18
எனக்கான கனவுகள் பற்றி
என்னிடம் கேட்டவன் நீ –
பின் உனக்காகவே தான்
உருவாக்கிக்கொண்டேன்
எனக்கான கனவுகளை.
19
உன்னைக்கண்டாலே
இடம்வலமாகிற‌தென்
ம்ச‌ஞ்ப‌ர‌பி.
20
உன் வரவுக்காகக் காத்திருந்து
ஒவ்வோர் அழைப்பு மணிக்கும்
அவ‌சரமாயோடிக் கதவு திறந்து
ஏமாறுகையில் உறைந்துருகும் –
இருதயச்சுவரில் குருதித்திரவம்.
3. நெடுங்குருதி
மங்கை [வயது : 12-13]

21
நான் பூப்படைந்த கணத்தில்
என்ன செய்து கொண்டிருந்தாய்
நீ?
22
உன் தொடுகையில் மட்டுமே
நினைவினில் கசிந்தோடுகிறது
எங்கோ ஒரு மறைவாழத்தில்
ஊற்றாய் ஒளிந்திருக்குமென்
ஒட்டுமொத்தமான‌ பெண்மை.
23
நீ அழுந்தப்பார்த்தாலே
தள்ளிப் போகிறதென்
மாதவிலக்கு நாட்கள்.
24
இன்னமும் புரிந்த பாடில்லை –
உனக்காக தாவணியணிகையில்
கூடுதல் நாடா இறுக்கத்துடன்
பாவாடை கட்டியது ஏனென்று.
25
உன்னிடம் சொல்லியதில்லை இதுவரை –
உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த‌ போதே
வகுப்பிலொரு சமயத்தில் விலக்கானதை.
26
நீ ஈரக்கை துடைத்த துப்பட்டா
தூங்குகிறதென் அலமாரியில் –
இன்னமும் துவைக்கப்படாமல்.
27
உன் பார்வை அத்துமீறும்
ஒவ்வொரு முறையும்
பூப்படைகிறேன் நான்.
28
தனியாயிருந்தும்
தனிமையில்லை –
உன் நினைவுகளால்.
29
வருவது போலயிருந்து
வராமலே ஏமாற்றுகிறது
விலக்கு – உனைப்போல.
30
தீட்டுக்கழியும் நாட்களில்
தனியாய்யுன்னிடம் மாட்டி
அவஸ்தைப்படுவேன் – சுகம்.
4. புயலிலே ஒரு தோணி
மங்கை [வயது : 12-13]

31
ஒவ்வொரு முறை நீ
விரல் பிடிக்கையிலும்
எனதுடலோடுமத்தனை
நரம்பின் முனைகளிலும்
தீப்பிடித்துப் பூப்பூக்கிற‌து.
32
நீராடுகையில் நீ
நினைவுக்கு வந்தால்
வெட்கத்திலென்
நிர்வாணம் மூடுகிறேன்.
33
தனிமையில் உனை நினைக்கையில்
ச்சீ…!
சொல்லவே வெட்கமாயிருக்கிறதடா.
34
பாவிப்பயலே, நீ தான்
அறிமுகப்படுத்தினாய் –
தனிமையில் கண்ணாடி
பார்க்கும் பழக்கத்தை.
35
முதன் முதலாய் நீ
எனக்களித்த பரிசு –
வெட்கத்தின் ரேகை.
36
அதென்னவோ! நீ மட்டும்
எங்கு தொட்டாலும் கூசுகிற‌து –
விரல் நகம், தலை முடி உட்பட.
37
பாம்புக்கும் உனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் –
உன் விஷம் விழிகளில்.
38
சமயங்களில் கோபப்படுகிறேன்
நீ சமாதனம் செய்யும் அழகினைக்
கண்டு ரசிக்கும் காரணத்திற்காகவே.
39
மணிக்கணக்காய்ப்பேசிக்கொண்டிருந்தும்
பிரியும் அக்கணமென் நெஞ்சுக்குழிக்குள்
ரத்தக்குழாயொன்று திக்கென்றடைக்கும்.
40
நீயுன் கண்களால் ரசிக்க ரசிக்க
பெருகிக்கொண்டேயிருக்கிற‌தென்
அழகும் அழகு சார்ந்த பகுதிகளும்.
5. மோகமுள்
மங்கை [வயது : 12-13]

41
நீ தொடுவாயென எதிர்பார்த்திருக்க‌
தொடாமல் ஏமாற்றும் போது தான்
உன்னை அதிகம் பிடிக்கிறதெனக்கு.
42
என் உள்ளாடைகளின்
நிற‌மறியத்துடிக்குமுன்
வேட்கை பிடிக்குமெனக்கு.
43
முதன்முறையாய் அன்றைக்குன்
சுத்தமாய் மழித்த க‌ன்னந்தனைத்
தொடுகையிலே தானுணர்ந்தேன்
மென்மையானவற்றைக்காட்டிலும்
கடினமானவை எத்தனை சுகமென்று.
44
சுதந்திரமாய்ச்சுற்றிக்கொண்டிருந்த
பட்டுப்பூச்சியின் சிறகுடைத்ததற்கு
வெட்கப்படக்கற்றுக்கொடுத்தவன் நீ.
45
ஒவ்வொரு முறையும் நீயுன்
முகம் மழித்து மீசை திருத்தி
வரும் போதும் நினைவிற் கொள் –
செதுக்கப்படாது விடுபட்டுப்போன‌
சிற்சில ரோமத்துளிர்களை ரசிக்க‌
இங்கொருத்தி காத்திருக்கிறாள்.
46
அழகி எனப்புகழ்ந்தே
என்னைக் கொஞ்சம்
அழக்காக்கியவன் நீ.
47
என்னிடம் எதை ரசிப்பதென
விவஸ்தையே கிடையாது –
போடா, காதல் பொறுக்கி!
48
தேவதைகளோடு ஒப்பிடலாம்
நீயென்னை –  ஆனால் நீயோ
ஒப்பிலான்.
49
என்ன‌ழகுக்குத்
திமிர் வந்தது
நீயென்னைக்
காதலித்த பின்.
50
என் இதயத்தின் எடை
65¼ கிலோகிராம்க‌ள்
உன்னையும் சேர்த்து.
6. கானல் நதி
மடந்தை [வயது : 14-19]

51
எனக்குள் மகரந்தம் தேடி
நீயுடைத்த புஷ்பங்களில்
முதலாவதென் வெட்கம்.
52
உன் சில்மிஷங்களால்
வெட்கப்படுகிறதென்
சுடிதார் துப்பட்டா.
53
போதும், இந்தா –
நீ தந்த வெட்கத்தை
நீயே எடுத்துக்கொள்.
54
ஏதோவொரு புள்ளியில்
வெட்கம் விட்டதை
நினைத்து நினைத்து
வெட்கப்படுகிறேன்.
55
விரல் பட்டாலே வெட்கப்படுகிறாள்
இவளைச் சமாளிப்பதெப்படியெனக்
கவலைப்படுகிறாய் – பாவம் நீ,
என்னைப்பற்றித் தெரியாதுனக்கு!
56
உன்னால் கிடைத்தவை
உறக்கமற்ற இரவுகளும்
இரக்கமற்ற உறவுகளும்.
57
அசுரன் போல் உனதிஷ்டத்துக்கு
ஏதாவது செய்து விடுகிறாய் –
எனக்கு வெக்கமாப் போச்சு!
58
அறுவை சிகிச்சைக்காக‌
சிகை மழித்த கணத்தில்
நான் காண விரும்பியது
கண்ணாடியை அல்ல‌;
உனதிரண்டு கண்களை.
59
எவ்வளவு யோசித்தாலும்
நினைவுக்கு வர மறுக்கிறது –
முதன்முறை முத்தமிடுகையில்
உன் முகம் எப்படியிருந்ததென்று.
60
துல்லியமாய் இக்கணம் வரை நீ
தொலைபேசிக்கம்பிவழி தந்த‌
மொத்த முத்த எண்ணிக்கை –
லட்சத்து முப்பத்தாறாயிரத்து
தொள்ளாயிரத்து இருபத்தாறு
தொள்ளாயிரத்து இருபத்தேழு
தொள்ளாயிரத்து இருபத்தெட்டு…
7. நித்யகன்னி
மடந்தை [வயது : 14-19]

61
உன் முத்தத்திட்டுக்களில்
ருதுவாகிக் கனிந்த‌தென்
புதுப்பாவாடை தாவணி.
62
உன் மிகச்சமீப
முத்தச்சூட்டில்
எரிந்தடங்கும்
உதடுமுயிரும்.
63
கோடி முத்தங்கள் நினைவிலிருந்தும்
உயிரில் நிரந்தரமாய் ஊறியினிப்பது
முதன்முதலாய் பயத்தில் பதட்டத்தில்
நானுனக்குத்தந்த அந்த அரைமுத்தம்.
64
உன் தொலைபேசி முத்தங்களில்
சுவாசித்துக்கொண்டிருக்கிறதென்
அடங்காப்பெருங்காதலினுயிர்.
65
உன் முத்தமிடப்ப‌டும்
ஸ்தங்கலனைத்திலும்
சிறுதிட்டுத்திட்டாய்ப்
பற்றும் பாஸ்பரஸ்.
66
என் துப்பட்டாவின் மேல்
அப்படியென்ன பகையோ?
எப்போதெங்கு கண்டாலும்
அதையே முறைக்கிறாய்.
67
எந்தன் ஹார்மோன்களை
நிரந்தரக்கொத்தடிமையாய்
24X7 வேலைவாங்குமுன்
முதலாளித்துவ ஆண்மை.
68
உன்னுடனிருக்கையில் மட்டும்
கொஞ்சமதிகம் நெழ்ந்தென்னை
காட்டித்தரும் துரோகி துப்பட்டா.
69
உனைச்சந்தித்துத்திரும்பும்‌
எந்தத்தேதியின் இரவிலும்
உறங்கியதேயில்லை நான்.
70
கன்னிமையழிக்காமல்
கற்பழிக்கும் வித்தையை
எங்கேயடா கற்றாய்?
8. வெந்து தணிந்த காடுகள்
மடந்தை [வயது : 14-19]

71
முதன்முறை தாவணியணிந்து
உன் முன் நின்ற போழ்தினில் நீ
தொட்ட இடம் நினைக்கையில்
நரம்புகள் மெல்லச் சில்லிட்டு
நாள‌ங்கள் எல்லாம் விரிந்து
முதுகுத்தண்டு உஷ்ணமாகி
தாவணியணியக்கேட்கிறது
மனசு மீண்டுமொரு முறை.
72
திமிறும் கணங்கள் அனைத்திலும்
அடங்கிவிடவே ஆசைப்படுகிறேன்
என்பதையெப்படியறிகிறாய் நீ?
73
யாரோ தூரக்குரல‌ழைக்க
நமைத்தனியே விடுத்து
உனதன்னை விலகிய‌
சிறு இடைவெளியில்
எனைக்கதவடைத்துக்
கலைத்தவன் தானே நீ.
74
மெல்லப் படர்ந்து நீ தொடத்தொட
தொடரவிடாது தடுப்பதெல்லாம்
எல்லைமீறி விடுவாய் என்றன்று
எல்லைமீறி விடுவேன் என பயம்.
75
அங்கே இங்கே தொடுவதில்
ஆதார அவஸ்தையே
அங்கே இங்கேயுடன்
நிறுத்தி விடுவது தான்.
76
சில்மிஷங்கள் செய்
சில்லெனச் சூடாக்கு
உடலைப்பதற வை
உயிரைச்சிதற வை
எந்தன் திமிரடக்கு.
77
ப‌னிபெய்யும் மார்கழி ராக்களில்
போர்வை தாண்டியூடுருவிடும்
குளிருக்கிதமாய் இளஞ்சூட்டில்
நெஞ்சுக்குள் வருமுன் நினைவு –
விடியும் வரை விழித்திருப்பேன்.
78
திரையரங்க மெல்லிருட்டின்
தித்திக்கும் சில்மிஷங்களில்
திட்டித் தீர்க்கின்றேனுன்னை
அடுத்தடுத்த‌ கட்டங்களுக்கு
அழகாய் அனுமதித்தவாறே.
79
பேசிய வார்த்தைகளும்
வீசிய புன்னகையும்
ஊசிப் பார்வைகளும்
கூசிக் குறுகுறுத்தபடி
படுக்கையறை நுழைந்தென்
முத்தானை பிடித்திழுக்கிறது.
80
லட்சம் சொற்களிருந்தும்
நீ ரசித்துச் சொல்லுமந்த‌
ஒற்றை ஐ லவ் யூவிற்கு
இணையில்லையெதுவும்.
9. வானம் வசப்படும்
அரிவை [வயது : 20-25]

81
உன்னிடம் அடிக்கடி
சொல்ல நேரிடுகிறது –
ஏன்டா என்னை
இப்படிப் படுத்தறே?
82
நீ தான் தொலைபேசுகிறாய் என‌
கண்டுபிடித்து விடுகிறாள் அம்மா –
எனத‌சட்டுச்சிரிப்பினைக்கொண்டு.
83
இம்மாசம் ஆச்சு என உன்னிடம்
வெட்கத்துடன் சொல்கையில்
சானிடரி நாப்கின் களைப்புகள்
குறைவதாய்ப்படுகிறதெனக்கு.
84
உன் முத்தங்களும்
ஐ லவ் யூக்களும்
போட்டியிடுகின்றன‌ –
எண்ணிக்கையில்
முதலெதுவென்று.
85
பொய்களெனத்தெரிந்தும்
இனித்து இம்சிக்கின்றன‌
நீ சொல்லும் பொய்கள்.
86
“…”
“ம்…”
“அப்புறம்…”
“வேற என்ன…”
இவற்றால் நிரம்பி வழிகிறதெம்
தொலைபேசிக்கட்டண ரசீதுகள்.
87
கனவிலுமென் மென்மை
பாதித்துத்தடம் பதிக்குமுன்
நாற்பத்தெட்டு மணி முட்தாடி.
88
நீ நீயாக
இல்லையென்றால்
நான் நானாகவே
இருந்திருப்பேன்.
89
சொல்ல நினைத்து மறந்தவையவை
நினைவுக்கு வந்து இம்சை செய்யும்
நீயற்றவொரு தனிமைப்பொழுதினில்.
90
நிதமொரு முறையேனுமுன்
கோபத்தின் கொடுஞ்சூட்டில்
குளிர்காய வேண்டுமெனக்கு.
10. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
அரிவை [வயது : 20-25]

91
கடிதமெழுதுகையில்
வேண்டுமென்றே
பிழைகள் விடுகிறேன் –
இர‌ண்டாம் முறை
நீ படிப்பதற்காக.
92
உனக்காக எழுத உட்கார்ந்தால்
மசிதீர்ந்த பேனாவும் சுரக்கிறது
தாய்மையுணர்ந்திராதயென்‌
முலைச்சோடிகளைப் போல்.
93
காதலித்த பிறகு தான் புரிகிறது –
கன்னம் வழியே கண்ணீர் வழிய‌
அழுவது எத்தனை சுகமென்று.
94
யாரை வேண்டுமானாலும்
ஓரப்பார்வை பார்த்துக்கொள்ள
உனை அனுமதித்திருப்பது
உன் மீதான நம்பிக்கையன்று –
என் மீதான நம்பிக்கையது.
95
ந‌ம் காதலொரு மகாவிபத்து
என்பதற்காகவே இன்னமும்
நம்புகிறேனந்தக் கடவுளை.
96
அம்மா அப்பா தம்பி நான் என‌
நால்வர் வாழும் சிறுவீட்டின்
மழைக்கால மாலைப்பொழுதில்
ஐவருக்குத் தயாரித்த தேநீரில்
ஒளிந்திருப்பது நீயுமுன் மீதான‌
என் புனிதம் கெடாத பிரியமும்.
97
பேசிப்பிரிகையில் நிகழுமொரு
வல்லிய இறுதிக்கண மௌனம்
பேசி விடுகிறது – பேச நினைத்துப்
பேசாது விடுத்த அனைத்தையும்.
98
உந்தன் கடிநினைவுகளின்
ஏதோவொரு சூட்சமத்தில்
தெறித்ததென் ஆதிகவிதை.
99
உன் மென்பார்வைகளற்ற
இந்நாட்களின் வறட்சியை
நிரப்பிக்கொண்டிருக்கிறது
நீய‌ழுந்தத்தந்த முத்தத்தின்
கடைசித்துளி எச்சிலினீரம்.
11. சுந்தர காண்டம்
அரிவை [வயது : 20-25]

100
உன‌க்குக் காத்திருக்கையில்
தான் நாட்களை, மணிகளை,
நிமிஷங்களை, வினாடிகளை
அதற்குள்ளிருக்கும் பிரிவுகளை
எண்ணக்கற்றுக்கொண்டேன்.
101
கன்னிமை கழியாமலே
தாய்மையடைந்தேன் –
நீ மடி சாய்ந்தழுத கணம்.
102
நீ ஸாரி சொல்ல‌ நேரும்
ஒவ்வொரு தடவையும்
பெருங்குற்றவுணர்வில்
கிழிகிறதென் இருதயம்.
103
சொன்ன நேரத்துக்கு சற்று
முன்பே வந்து விடுகிறாய் –
என்ன, காத்திருக்கும் சுகத்தை
நீ மட்டுமே அனுபவிப்பாயா?
104
பொறாமையாய்த்தான் இருக்கிறது –
சிலசம‌யம் நீ உச்சிமுகர்ந்தணைத்து
குழந்தைகளைக் கொஞ்சுகையிலும்.
105
எனக்காக அசைவம் கைவிட்ட
உனக்காக அசைவம் சமைப்பது
தியாகமில்லை; காதலென்பேன்.
106
எனது நினைவுச்சலனங்களுடன்
தூரத்திலெங்கோ நீயிருக்கிக்கும்‌
ஒற்றைநம்பிக்கையின் வழிதான்
நிற்காமல் துடிக்கிறதென் இதயம்.
107
நிம்மதிச்சுகத்தோடு மறந்துறங்கிக்கிறங்கிட‌‌
இலவம் பஞ்சடைத்த தலையணையை விட‌
காதல் குருதி பாயும் உன் மார்புச்சூடு தோது.‌
108
நரையோடித் திரையோடிப்
புரையோடிய பருவத்தே
உயிரோடு உரையாடி
உடலோடு உறவாடி
கடலாடிக் கரையேற‌
காதலா நீ வேண்டும்.
109
பதினெட்டாம் முறையாக‌ நான்
வேண்டாமென முனகிய போது
என் தேகத்தில் மிச்சமிருந்தவை
ஒரு ஜோடிக்கொலுசுகள் மட்டும்.
110
உடைந்த என் வளையல் துகள்கள்
சொல்லுமுன் மயிரடர்ந்த மார்பு
கிழித்துச்சுவைத்த குருதிச்சிவப்பு.‌
12. தீ
தெரிவை [வயது : 26-31]
 
111
உன் பற்களின் கூர்மையை
நான் உணர நேர்கையிலென்
வெட்கம் மழுங்கியிருந்தது.
112
உன் காமம் பிடிக்கும்;
அதைவிடப்பிடிக்கும்
அத‌ற்கும் முந்தைய…
113
ஒளிர்விளக்கணத்தவுடன்
வெளிச்சத்தின் பின்னாலே
காணாமல் போகிறதென்
உடன்பிறவா வெட்கம்.
114
நட்சரத்திரங்களுதிரும் பின்னிரவில்
இன்னொருமுறை துல்லியமாயுன்
தூக்கங்கலைத்திட‌ அனுமதிப்பாயா?
115
என்னையெரித்து
உயிர்ப்பித்ததுன்
காமக்கொடுந்தீ.
116
உன் வேர்வைத்துளியில்
முறித்து விடுகிறாயென்
வெட்கத்தின் விஷ‌த்தை.
117
பல் படக் காதுமடல் கடிக்கையில்
உடலெங்கும் மெலிதாய்ப் பரவும்
சொற்பவோல்ட் மின்சாரத்தின்
ஒட்டுமொத்தச்சுகமறிவாயா நீ?
118
காதோரம்
கழுத்தோரம்
உதட்டோரம்
உயிரோரம்
பரவும் தீ – நீ.
119
நமது காதலின் ஆழம் சொல்லும்
ஒவ்வொரு உறவின் முடிவிலும்
நுண்மையாய்ச்சந்தித்திணையும்
பரஸ்பர உச்சமெய்தல் நிகழ்வுகள்.
120
நிதமுனைத்திட்டுகிறேன் மிகச்செல்லமாய்
நிர்வாணப்பொன்ன‌கைசூடி சுடுநீராடுகையில்
தேகமெங்குமெரியுமுன் நகக்கீறல்களுக்காக.
13. பின்தொடரும் நிழலின் குரல்
தெரிவை [வயது : 26-31]
 

121
கிறங்கிக்கிடக்கையில்
கண்சொருக விடாமல்
நீ செய்யும் யுக்திகள்
அவஸ்தையானவை.
 
122
உறக்கத்தில் கனவுக்கும்
இடையிடை தினவுக்கும்
நீ வேண்டும் நிரந்தரமாய்.
 
123
உச்சம் ஒரே கணம்
உனக்கு – எனக்கோ
ஒவ்வொரு கணமும்.
 
124
இனியுனக்கு
நிரந்தர வேசி
நான் மட்டும்.
 
125
என் தேகப்பரப்பினிலுன்
நகக்கீறல் குறியிடப்படா
இரவுகள் மாதம் மூன்று.
 
126
நீ பேசுகையில் மட்டும்
கெட்ட வார்த்தைகளும்
மிக‌ உவப்பானதெனக்கு.
 
127
எனை முழுதாய்
பார்த்தறிந்தது
நீரும், நீயும்.
 
128
எவளோடும் உனைப்
பங்கிடச்சம்மதியேன் –
உன் தாயும் மகளும்
கூட விதிவிலக்கன்று.
 
129
என்னை விடாமல்
தொடருமுன் நினைவு –
படுக்கையறையிலும்
சமையலறையிலும்
குளியலறையிலும்
கழிப்பறையிலும்.
 
130
DNA சரங்களில்
ACTG இல்லை;
LOVE மட்டும்.

14. புத்ர‌
தெரிவை [வயது : 26-31]
131
பயமாய் இருக்கிறது –
உன்னைக் குறித்து
இன்னும் பேசினால்
அழுகை வருமோ என.
 
132
பனிக்குடமுடைந்தோர் உயிரை
யான் ஈன்று புறந்தருகையில்
அருகிருந்து காண‌வேண்டும் நீ.
 
133
இன்னமும் இனித்துக்கிடக்கிறது –
உன்னை நினைத்துக்கொண்டே
அடுக்களையில் சமைக்கையில்
விரலறுத்துக் கசிந்த செங்குருதி.
 
134
உந்தன் கோபத்தின்
மௌனம் போலன்றி
எனைக்கிழித்தெறிவது
வேறொன்றுமில்லை.
 
135
அதிரப்புணர்ந்த பின்
திரும்பிப்படுக்காமல்
அணைத்துறங்குவாயே,
அதன் பெயர் சொர்க்கம்.
 
136
நீ தலைகோதி விடும்
சுகத்திற்காகவே
உனை ஆயுள் முழுக்க‌
காதலிக்ககலாம்.
 
137
எனது உச்சங்கள்
நீ புணர்கையிலல்ல‌
உனை உணர்கையில்.
 
138
புணர்ந்த களைப்பின் அணைப்பழுத்தத்தில்
உன் வேர்வை வாசனை ஞாபகப்படுத்தும்
நானிருந்த இருட்டுக்கருவறை வாசனை.‌
 
139
உன் ஒற்றை ஸ்பரிசத்திற்காய்த்
தவமிருந்த கணங்களனைத்தும்
பசும்புல்நுனிப்பனித்துளி போல்
பொய்யாய்ப்பழங்கதையானதுவே
நித்தம் நீயென்னைப் புணருமிந்த‌
நீண்ட இரவுகளின் நிசப்தத்தில்.
 
140
என் இருதயத்தினை
லேசாக்குபவையுன்
காதலின் கனமும்
15. மாதொருபாகன்
பேரிளம்பெண் [வயது : 31-40]
 

141
இன்னும் கண்ணீர் மிச்சமுண்டு
ஆதரவாய்ச் சாய்ந்தழ‌வென உன்
கடிதோளிருக்கும் தைரியத்தில்.
 
142
முதலாம் காதலனும்
கடைசிக் கணவனும்
எனக்கு நீ தான்.
 
143
உன் கண்களை நேருக்கு நேராய்ப்
பார்த்து விட‌ வேண்டுமெனக்கு –
சாவதற்குள் ஒரு முறையேனும்.
 
144
ரத்தமும் சதையுமாய் நீயிருக்க‌
விசித்திரமாய்த்தானிருக்கிறது –
கோயிலில் கடவுளைத்தேடுவது.
 
145
உன்னிடம் பொறாமை
கொள்ளும் ஒரே விஷயம் –
உன் மீதான என் காதலை
விட‌ அழகான ஆழமான
என் மீதான உன் காதல்.
 
146
ரத்தந்தளர்ந்த முதிர்பிராயத்தின்
பொன்னந்திப்பொழுதுகளிலுன்
தோள்சாய்ந்தபடி சுவாசிக்கும்
ஆக்ஸிஜனிலிருக்கிறது காதல்.
 
147
தொன்னூறு வயதிலும் நீ
தொட வெட்கப்படுவேன் –
அது என் பிறவிச்சாபம்.
 
148
உனக்கெந்தன் தாய்மையின்
கருவறைக்கதகதப்புத் தராத
துக்கமுண்டு என்றுமெனக்கு.
 
149
உனக்கு முன்னால் நானெனில்
எனக்கு நீ நீராட்ட வேண்டும்;
எனக்கு முன்னால் நீயெனில்
உனக்கு நான் தீமூட்ட வேண்டும்.
 
150
அனுபவித்தவள் சொல்லிது:
எஞ்சோட்டுச்சிறுபெண்டிரே,
கவிஞர்களைக் காதலிக்காதீர் –
ஊண் பிளந்து உயிர் அளந்து
சந்தோஷ‌த்தில் மூழ்கடித்தே
சாகடிப்பார்கள், ஜாக்கிரதை!
[முற்றும்]
பி.கு: காதலர் தினம் தொடங்கி, பதினைந்து நாள்களாக இக்காதல் புராணத்தை எழுதி வந்தவர் சி.எஸ்.கே என்கிற சி. சரவண கார்த்திகேயன்.
http://www.writercsk.com/ 



     RSS of this page