Home / PaRaThodar

PaRaThodar


பா.ராகவன் கதைகள்
யாளிமுட்டை

ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரியை உதைக்கவேண்டும். அவன் முன்குடுமியைப் பிடித்து உலுக்கி, ‘படவா, என்னத்துக்காக இப்படியொரு முழுப்புரளியைக் கிளப்பிவிட்டு, மேலிடத்தை உணர்ச்சிமேலிடச் செய்து, எங்கள் பிராணனை வாங்குகிறாய்?’ என்று ஜிம்பு ஜிம்பென்று ஜிம்பவேண்டும். பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் வீசி, ஆத்திரம் தீர அவன் வம்சத்தையே சபிக்கவேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு பழைய காளி கோயிலாகப் பார்த்து இழுத்துக்கொண்டுபோய், தூணில் கட்டிவைத்து, சாட்டையால் அடித்தே பலி கொடுத்தாலும் பாதகமில்லை. ஆடு, மாடு பலி கொடுத்தால் தான் பாவம். ஆசாமியைக் கொடுத்தால் தப்பில்லை. அதுவும் சோதிடத்தை வைத்து ஏமாற்றுகிற ஆசாமி.

இப்படியெல்லாமும் விநோதமான பரிகாரங்கள் இருக்கமுடியுமா தெரியவில்லை. கற்பனை வளம் மிக்க சோதிடர்களும் சில்லறை சோழிச் சித்தர்களும் தெருவுக்கு நாலுபேரெனப் பெருகி விட்டார்கள். இந்தப் பயல்களெல்லாம் ஆரம்பத்தில் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சுளைகளுடன் சேர்த்துப் பிள்ளையார் பொம்மை எடுத்துக்கொண்டிருந்தபோதே பிடித்து நாலு சாத்து சாத்தியிருந்தால் இத்தனை தூரத்துக்கு இப்போது வளர்ந்திருக்கமாட்டார்கள்.

வெற்று மார்பில் ருத்திராட்சம் பளபளக்க, நெற்றியில் துலங்கிய ஹோமரக்ஷையிலிருந்து வியர்வை ஒழுக, நடுக்கூடத்தில் என்னமோ கட்டங்கள் வரைந்து , சோழிவைத்து எதிரே அமர்ந்து கண்மூடி ஆவேசம் வந்தவன்போல் ராஜீவன் நம்பூதிரி உச்சாடணம் பண்ணிக்கொண்டிருந்தபோதே அகழ்வாராய்ச்சித்துறைத் தலைவருக்குக் கவலை வந்துவிட்டது.

சென்றமுறை இப்படித்தான், எட்டுக்கோடியே தொண்ணுத்தேழு லட்சத்து நானூத்தி இருபத்திமூன்று பச்சை மிளகாய்களை அரைத்துச் சட்னி செய்து கங்காளம்பாளையம் அங்காளபரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனான் தடியன். ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட அம்மனுக்கு நாலு இட்லி வைக்காமல் வெறும் பச்சை மிளகாய்ச் சட்னியை கொட்டு கொட்டென்று கொட்டினால் பாவம் அவள் தான் என்ன ஆவாள்?

ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க அவகாசமில்லை. உடனே நாட்டிலுள்ள அனைத்து விவசாயத்துறை அதிகாரிகளூம் விஞ்ஞானிகளும் வரவழைக்கப்பட்டார்கள்.

தேசம் முழுக்க எங்கெங்கே உயர்தர பச்சை மிளகாய் பயிரிட்டிருக்கிறார்கள் என்று அனைத்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் விசாரிக்க உடனடியாக உத்தரவிடப்பட்டது. மூட்டை மூட்டையாகக் கொள்முதல் செய்து, தனியே பச்சைமிளகாய் கணக்கெடுப்புத்துறை என்று ஒன்றை உருவாக்கி, ஆயிரத்தெட்டுப் பேருக்குப் புதிதாக அரசாங்க உத்தியோகம் கொடுத்து உதிரி உதிரியாக எண்ணி, பெட்டி பெட்டியாக அடுக்கச் சொன்னார்கள். நாட்டுமக்கள் யாரும் அடுத்த ஏழு மாதங்களுக்குப் பச்சை மிளகாயையே கண்ணால் பார்க்கமுடியாதபடி ஆகிவிட்டது.

ஐநூறு ஆட்டுரல்களில், பெண்கள் அழுதவண்னம் சட்னி அரைக்க, அதை அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்தால் பிரச்னைகள் யாவும் தீரும்  என்று நம்பூதிரி சொன்னான்.

ஏன் அதை இவன் தலையில் கொட்டித் தேய்க்கக் கூடாது? என்று கேட்டார் பக்கத்திலிருந்த உதவி ஆணையர்.

“உஷ். பேசாம இருமய்யா.  பெரிய இடத்து விவகாரம்.”

இவ்வாறு, பெரிய இடத்து விவகாரம் முதல் முதலில் பச்சை மிளகாயில் தான் ஆரம்பித்தது. அப்புறம் இன்னொருத்தன் வந்து ஒரு கோடியே எட்டுத் தேங்காயை ஒரே கோயிலில் உடைக்கச் சொன்னான். வேறொருத்தன் பத்தாயிரம் கோயில் அம்மன்களுக்குப் பட்டுப்புடைவை வாங்கி சாத்தச் சொன்னான். இந்தப் பக்கம் அருள்வாக்கு சொல்லிவிட்டு அந்தப் பக்கம் ஒரு புடைவைக்கடையும் திறந்துவைத்தான். தேர்கள். குதிரைகள். யானைகள். எடைக்கு எடை தங்கம். வைரம். வைடூரியம். அன்னதானம், ரத்ததானம், ஆயிரத்தெட்டு அசுவமேத யாகங்கள்.

சே, எத்தனை பக்தி, எத்தனை பரோபகாரம் என்று தேசம் வியந்தது. பிரச்னைகள் தான் தீர்ந்தபாடில்லை. வாழ்க்கை கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கிறது. எதிரிகள் பெருகிவிட்டார்கள். எல்லாம் அந்த வைடூரிய சிம்மாசனத்துக்காக. ஆயிரத்தி நாநூறு வருஷங்கள் முன்னால் விக்கிரமாதித்த மன்னன் விட்டுப்போன சிம்மாசனம் அது. எங்கோ கிராமத்தில் அகழ்வாராய்ந்துகொண்டிருந்தபோது ணங்கென்று இடிபட்டு, அகப்பட்டது.

பயபக்தியுடன் எடுத்துவந்து, தூசுதட்டி சமர்ப்பித்தது தொல்பொருள் துறை.

ஒருதரம் சுற்றி நின்ற அத்தனைபேரையும் புன்னகையுடன் பார்த்துவிட்டு கம்பீரமாக ஏறி அமர்ந்தார் அவர். மக்கள் தம்மையறியாமல் கைதட்டிவிடவே சிம்மாசனம் அன்றிலிருந்து அவருடையதாகிப்போனது.

சிம்மாசனம் கிடைத்ததில் பெரிய சிக்கல் ஏதும் வரவில்லை. ஆனால் வைத்துக் காப்பாற்றுவதில் தான் தாவு தீர்ந்துபோகிறது. தொன்மத்தின் வாசனை பூசிய சிம்மாசனம் அது. கால்கள் லொடலொடத்துக்கொண்டிருக்கின்றன. மரகதப் பூண்போட்ட கைப்பிடி ஆடுகிறது. வெல்வெட் வேலைப்பாடுகள் மிக்க உட்காருமிடத்தில் நிறைய மூட்டைப்பூச்சிகள் குடிபுகுந்துவிட்டன. மேலும் ஆண்டாண்டு காலமாக முகலாய மன்னர் காலத்து மதுப்புதையல்களுடன் சேர்ந்து புதைந்து கிடந்ததில், மதுச்சாடிகள் உடைந்து அதன் வெல்வெட் பாகங்களில் ஊறிப்போய், உட்காரும்போதெல்லாம் ஒருவித போதை தலைக்கேறிப்போய்விடுகிறது. உட்காருமிடம் உறுத்தினாலும் எழுந்திருக்கத் தோன்றாத போதை அது. பெருமை அல்லவா? கம்பீரம் அல்லவா? யாருக்குக் கிடைக்கும்?

ஆனால் எதிரிகள் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். அந்த வைடூரிய சிம்மாசனத்தைக் கைப்பற்றியே தீருவோமென்று வானமண்டலத்து தேவர்கள் சாட்சியாக பதினொருபேர் கூடி நின்று நெருப்பு மூட்டி வீர சபதம் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது.

நல்ல கதையாக இருக்கிறதே? விலைமதிப்பே இல்லாத சிம்மாசனம் அது. உலக அதிசயங்கள் அத்தனையையும் விட மதிப்புமிக்கது. பார்க்கக் கிழடுதட்டிக் கிடந்தாலும் உட்கார்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். ஆ, அந்த போதை! அதைப்போய் எதிரிகள் கையில் கிடைக்கவிடுவதாவது?

மேலிடத்திலிருந்து உடனே உத்தரவுகள் வரத்தொடங்கின. சிம்மாசனக் காவலர்கள் என்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. கற்கால ஆயுதங்கள் தொடங்கி அத்தனை ஆயுதங்களையும் அவர்களுக்குத் தாராளமாக விநியோகித்தது சிம்மாசனப் பரிபாலனத்துறை. அந்தப் படையைச் சுற்றி இன்னொரு பெரும்படை. சோழர்காலத்து ஆபத்துதவிப் படையினரின் வம்சத்திலிருந்து தேடித் தேர்ந்தெடுத்த படை இது. அவர்களைச் சுற்றி மேலும் ஒரு படைவரிசை.  அவர்களைச் சுற்றி இன்னொன்று, இன்னொன்று என்று ஒன்பது அடுக்குகளாகப் பச்சைச் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டும், கிழக்கில் சூரியன் உதிக்கிற நேரத்தில் எங்கிருந்தோ வந்து இருமுறை சிம்மாசனத்தை எடுத்துப் போய்விட்டார்கள். மீட்டுக்கொண்டுவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

இம்முறை விடக்கூடாது. விடவே கூடாது என்று உறுதியுடன்தான் ஏறி உட்கார்ந்தார் அவர். குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது, நீதி விசாரிப்பது, மனுக்கள் பெறுவது, சொற்பொழிவாற்றுவது, தீர்ப்புகள் வழங்குவது, ஓய்வெடுப்பது, பொழுதுபோக்காகத் தாயம் உருட்டுவது, இயற்கைக்கடன் கழிப்பது என எல்லாக்காரியங்களையும் சிம்மாசனத்தில் அமர்ந்தபடியே செய்யத்தொடங்கினார். தீராத முதுகுவலி வந்தபோதும் எழுந்திருக்கவே முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

மருத்துவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். தொடர்ந்து மூட்டைப்பூச்சிகளிடம் கடிபட்டுக்கொண்டே இருந்தால் உடம்பில் ரத்தமே இருக்காதே என்று எடுத்துச் சொன்னார்கள். அதற்குப் பிரதியாக தினசரி மூட்டைப்பூச்சிகள் உறிஞ்சும் ரத்தத்தின் இருமடங்கை உடலில் ஊறச்செய்யும் பச்சிலை மூலிகைகளை எட்டு கடல் தாண்டி எங்கிருந்தோ எடுத்துவரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

செலவு கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. ராஜ்ஜிய நிர்வாகத்துக்கு ஆகிற செலவைப்போல் மும்மடங்கு அந்த வைடூரிய சிம்மாசனத்தைக் காப்பாற்றுவதற்கே ஆகிறது. இது சரியல்ல என்று ஆங்காங்கே பலர் முணுமுணுக்கத் தொடங்கியதும்தான் மந்திரவாதிகளிடம் யோசனை கேட்கிற திட்டம் உருவானது.

ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரி. அவந்தான் இப்போது ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறான். எப்படித்தான் பரிகாரங்களை அவன் தொடர்ந்து, சளைக்காமல் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறானோ?

“தலைநகருக்கு அறுநூறு மைல் வடமேற்கில் இருக்கிற கானகத்தில் எட்டாவது சூரிய வட்டத்தில் அகழ்ந்து ஆராய்ந்தால் அகப்படப்போகிற முதுமக்கள் தாழிக்குள் இருக்கிற ஒரு யாளியின் முட்டை உடைந்து, குஞ்சு பொறிந்திருக்கும். அதை எடுத்துக்கொண்டுபோய் தென் கிழக்கில் முன்னூறு மைல் தொலைவில் இருக்கிற மருதநிலத்துத் திருநிலக்குன்ற ஆலயத்தில் வைத்து பூஜித்து அப்படியே சுற்றித் தூண் எழுப்பிவிட்டால் போதும். எதிரி பலமிழந்து போவான். பகை அழியும். சத்ரு நாசம் நிச்சயம். வழக்கு வியாஜ்ஜியங்கள் இருந்த இடந்தெரியாமல் ஓடிப்போகும்.. இந்தமுறை தப்பு நடக்க வாய்ப்பே இல்லை…” தீர்மானமாகச் சொன்னான் நம்பூதிரி.

“யாளியா?” அதிர்ந்து கேட்டார் தொல்லியல் துறை உதவி ஆணையர்.

“ஓம். யாளிதான். சிங்க முகமும் யானையுடெயெ துதிக்கையுமா இருக்கும். சிற்பங்கள்ளெ பார்த்திருப்பீரே? பகவதியுடெயெ வாகனமாக்கும் அது.”

“நாசமத்துப் போவே நீ!”

“எண்டஜோலி இவிடெ முடியுதம்மே.” என்று சொல்லிவிட்டு மறக்காமல் தட்சணை பெற்றுக்கொண்டு பகவதீ என்று எழுந்து கிளம்பிப் போயே விட்டான்.

உம், கிளம்புங்கள். யாளி. யாளிவேண்டும் உடனே. அந்தக் காட்டில் போய்த் தோண்டித் தேடுங்கள் என்று உத்தரவிட்டார் பாதுகாப்புத்துறை மகாமந்திரி.

பெரும்படையொன்று திரட்டிக்கொண்டு குதிரைகளும் கூடாரங்களுமாகக் காட்டுப் பகுதிக்கு வந்து முகாமிட்டது தொல்லியல் துறை ஆய்வாளர் குழு.

யாளி. சிற்பங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கிற ஒரு விநோத முகம். மானுடக் கற்பனையின் எல்லையற்ற வீச்சின் விநோத விளைவு. மனித உடலும் யானை முகமும். சிங்கமுகமும் யானையின் துதிக்கையும். குதிரை உடலும் சிங்க முகமும். சிங்க முகமும் யானை உடலும். சிற்பிகளின் கவிதாபூர்வமான கற்பனைகள் பல நூற்றாண்டுகள் கழித்து இப்படியொரு விபரீதத்துக்கு வித்திடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமுடியாது. கடவுளே, மன்னர்களெல்லாரும் ஏன் சிற்பிகளை ஆதரித்தார்கள்? சிற்பிகளெல்லாரும் ஏன் இப்படி விபரீத உருவங்களைப் படைத்தார்கள்? அந்த உருவத்தையெல்லாம் இந்த இழவெடுத்த ராஜீவன் நம்பூதிரி எங்கிருந்து பார்த்து கவனித்துக் குறித்துக்கொண்டு வருகிறான்?

“ஒரு காலத்தில் யாளி இருந்திருக்கிறது. புராணங்களில் அதுபற்றிய குறிப்பு கிடைக்கிறது. மாகாளி பராசக்தி தன் வாகனமாக அதைப் பயன்படுத்தியிருக்கிறாள்…. இதோ பாருங்கள்… சிங்க முகமும் யானையின் துதிக்கையும் கொண்ட ஒரு மிருகம்…மேற்குதேசத்துப் புராணங்களில் வருகிற டிராகன் என்கிற மிருகத்துடன் பலவகையிலும் உருவ ஒற்றுமை கொண்டது….”

“என்னது அது?”

“யாளி – வரலாறும் தொன்மமும். நூற்று எழுபது வருஷத்துப் புஸ்தகம். நூலகத்திலிருந்து எடுத்தேன்.”

“அந்த நம்பூதிரியுடன் சேர்ந்து நீயும் நாசமாகப் போ. அவன் ஒரு முட்டாள். ஏமாற்றுக்காரன். மோசடிப் பேர்வழி. முதுமக்கள் தாழியில் யாளியின் முட்டை இருக்குமாம். இத்தனை வருஷம் கழித்து அது உடைந்து குஞ்சு பொறிக்குமாம். இவன் போய்ப் பார்த்தானா, யாளி முட்டைபோட்டுக் குஞ்சு பொறிக்கிற ஜாதி என்று?”

“ஏன், நீங்கள் சபையிலேயே கேட்டிருக்கலாமே இதை?”

தொல்லியல்துறைத் தலைவர் உடனே மௌனமாகிவிட்டார். அவரைப் போலவே தான் அத்தனை பேரும் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாரைக் கடிந்துகொண்டு என்ன பயன்? ஒரு யாளி கிடைத்துவிட்டால் போதும். அல்லது யாளியின் முட்டை.

“யாளி முட்டை கோழிமுட்டை மாதிரி இருக்குமா?”

“அபிஷ்டு. என்னத்தையாவது எடுத்துவந்து யாளிமுட்டை என்று ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதே. யாளிமுட்டை சதுர வடிவில் இருக்குமாம். சதுரமுட்டை! ஹும். என்னஒரு முரண்!”

அவர்களுக்கு இன்னொரு கவலையும் மிச்சம் இருந்தது. முதலில் யாளியின் முட்டை இருக்கிற முதுமக்கள் தாழியைத் தேடிப்பிடித்தாகவேண்டும். அப்புறம் அந்த முட்டையை எடுத்துக்கொண்டு எங்கேயோ போகவேண்டும் என்று சொன்னானே… அது எந்த இடம்… என்னவோ தென் கிழக்கில் முன்னூறு மைல் தொலைவில் இருக்கிற மருதநிலத்துத் திருநிலக்குன்ற ஆலயமாமே? அது எங்கே இருக்கிறது?

மருதநிலம்…திருநிலக்குன்றம்….இந்தப் பேரெல்லாம் செத்துப்போய் எத்தனையோ நூற்றாண்டுகளாகிவிட்டன. எங்கிருந்து அந்த தடித்தாண்டவராயன் தேடி எடுக்கிறான், ஒருத்தருக்கும் புரியாமல்?

“அது சாதாரணக்கோயில் இல்லே கேட்டியோ? பரமேஸ்வரன் லிங்கரூபத்திலே இருந்தாலும் முன்னந்தலையிலே சிகை இருக்கும் பார்த்துக்கோ…”

நம்பூதிரியின் குரல் மீண்டும் ஒலித்தது காதுகளில். சிகை வைத்த லிங்கம். எங்கே இருக்கிறது அது?

“என்னெக்கேட்டா? நீ தேடிப்பிடிச்சிக்கோ. அது உங்களது ஜோலியாக்கும். ஞான் கிளம்பட்டே? மனசிலிருக்கட்டும். தென்கிழக்கே முன்னூறு மைல். சிகை வெச்ச லிங்கரூபேஸ்வரன் ஆலயம். மருத நிலத்துத் திருநிலக்குன்றம் எண்டு பேரு. வரட்டே?”

“ஒழிடா கடங்காரா” என்றார் தொல்லியல் துறை ஆணையர்.

நம்பூதிரி குறிப்பிட்ட கானகத்தை அடைவதில் அவர்களுக்குச் சிரமம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் அவன் தோண்டச் சொன்ன இடத்தைக் கண்டுபிடித்ததுதான் பெரிய காரியமாக இருந்தது. அடர்ந்து மரங்கள் ஓங்கியிருக்கும். ஆனாலும் சூரியனின் கிரணங்கள் மிகத்தெளிவாகத் தரையில் வந்து விழும். முன்னொரு காலத்தில் கபிலர் அங்கே இருந்து தான் பூமியைக் குடைந்துகொண்டு போய் பாதாளத்தில் குகை அமைத்துத் தவம் செய்திருக்கிறார் என்று நம்பூதிரி சொன்னான்.

மேலிடத்துப் பெரியவர்களெல்லாம் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே அகழ்வாராய்ச்சித்துறைத் தலைவரால் எதிர்த்துக் கேள்வி ஏதும் கேட்க முடியாமல் போய்விட்டது. யார் கண்டது? கபிலர் பாதாளம் தோண்டியபோது இந்த நம்பூதிரிதான் பக்கத்திலிருந்து மண் அள்ளிப்போட்டானோ என்னவோ? அப்போதே அந்த யாளி முட்டையை எடுத்துவந்து பத்திரமாக வைத்திருக்கமாட்டானோ கழிச்சல்ல போறவன்?

அடர்ந்த காட்டுக்குள் மூங்கிலும் சந்தனமும் தேவதாருவும் இன்னபிற வானுயர்ந்த மரங்களும் வெட்டப்பட்டு, வெயில் சுள்ளென்று விழுந்த இடமாகப் பார்த்துத் தேடி இது தான் என்று ஏகதேசமாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

“சரி, தோண்டலாமா?”

“ஆகட்டும்”

காளியை வேண்டிக்கொண்டு கடப்பாறையால் முதல் குத்துப் போட்டார் அதிகாரி. அடுத்தடுத்த மூன்று குத்துகளில் அவருக்கு வியர்த்துவிட்டது. பக்கத்திலிருந்த கூலி ஆட்களிடம் கடப்பாறையைக் கொடுத்துவிட்டு கூடார வாசலில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு பார்வையிட ஆரம்பித்தார். மிகவும் கவலையாக இருந்தது அவருக்கு. ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. நல்லபடியாக வீடுபோக முடியுமானால் ஓய்வு ஈட்டுத்தொகை ஒழுங்காக வந்து சேருவதில் சிக்கல் இருக்காது. அபசுரமாக இந்த யாளி முட்டை விஷயத்தில் ஏதாவது நடந்துவிட்டால் பிறகு திருவோடு ஏந்தவேண்டியதுதான். மேலும் எதிரிகள் மீண்டும் படையெடுக்கத் தயாராகிவருவதாகச் செய்தி வந்திருக்கும் நேரம். ஒரு பரிகாரத்தில் சிம்மாசனம் பிழைக்க முடியும் என்று எத்தனை தீர்மானமாக நம்புகிறார்கள்.

யாளி முட்டை. சதுர முட்டை

மாலைக்குள் அந்தப் பிரதேசத்தை சுமார் நூறுபேர் தொடர்ந்து தோண்டியதில் கணிசமான அளவு பள்ளம் உருவாகி, நீரூற்று தென்படத் தொடங்கியது. பெரிய பெரிய மர வாளிகளில் கயிறுகட்டி நீரை முகர்ந்து முகர்ந்து இறைப்பதற்குத் தனியே நூறுபேர் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். தலைநகரிலிருந்து சிறப்புப் பார்வையாளராகப் பாதுகாப்புத்துறை மகாமந்திரி கிளம்பிவந்து எல்லையில் முகாமிட்டிருப்பதாகவும் நாளை பொழுது விடிந்ததும் அவர் காட்டுக்குள் பிரவேசிப்பார் என்றும் பணியாள் வந்து சொன்னான்.

அதிகாரிக்கு அழுகை வந்தது. நிலத்தைத் தோண்டும் பணியாளர்களை மேலும் வேகமாகத் தோண்ட உத்தரவிட்டுவிட்டு மேலே எழுந்து வந்து குவியும் கற்களையும் மண் கட்டிகளையும் புரட்டிப் புரட்டி ஆராய ஆரம்பித்தார். நாசமாப்போற ராஜீவன் நம்பூதிரி எத்தனையடி ஆழம் தோண்டியபின் யாளி முட்டை தென்படும் என்பது பற்றி ஏதும் தகவல் தந்திருக்கவில்லை. இதுவரை ஐம்பதடி ஆழத்துக்கு – முப்பது சதுர அடிகள் பரப்புக்குத் தோண்டியிருக்கிறது. அசப்பில் பிரதேசமே ஹரப்பா மாதிரிதான் காட்சியளிக்கிறது. கொஞ்சம் நம்பிக்கை கொள்ளுமாறு ஏதாவது செப்புக்காசு, இரும்புப் பட்டயம் என்றாவது அவ்வப்போது வரத் தொடங்கியிருக்கலாம். ஊற்றெனப் பெருகிய நீர் கூட வற்றி மீண்டும் பாறை பாறையாகவே வருகிறது. எப்போது கிடைக்கும் யாளி முட்டை?
கவலையிலும் அலுப்பிலும் அவர் உட்கார்ந்தபடிக்கே உறங்கிப்போனார்.

உறக்கத்தில் அவருக்கொரு கனவு வந்தது.

ஆயிரம் அடி ஆழப்பள்ளத்தில் ஒரு பெரிய மரவாளி கயிறு கட்டி இறங்குகிறது. வாளிக்குள் உட்கார்ந்திருப்பது யார்? அவரா? அட, அவரேதான். கையில் பூதக்கண்ணாடியும் சுரண்டிப்பார்க்கும் கொல்லூரும் இன்னபிற புதைபொருள் உபகரணங்களும் இருக்கின்றன. எதனைத்தேடி அத்தனை ஆழத்தில் அவரை இறக்குகிறார்கள்?

“பாத்து, பாத்துப்பா. பயமா இருக்கு. கயிறு போதுமான அளவுக்கு இருக்கா?” தொண்டை கிழித்துப் புறப்படுகிற அவரது குரல் பாதி உயரத்திலேயே கரைந்து போய்விடுகிறது. பூதம் மாதிரி கவிந்த நிசப்தத்தினூடாக மரவாளி மெல்ல மெல்ல இறங்கிக்கொண்டே இருக்கிறது. கையோடு எடுத்து வந்த மெழுகு வர்த்தியைக் கொளுத்தி சுற்றுப்புறத்தைப் பார்க்கிறார் அதிகாரி. தோண்டிய பக்கமெல்லாம் மண்ணாலான யாளியின் உருவங்கள் கூர்மையான பற்களை நீட்டிச் சிரிக்கின்றன. சில யாளிகள் அபூர்வமாக பேண்ட் அணிந்திருக்கின்றன. சில கூலிங் கிளாஸ் அணிந்திருக்கின்றன. அட கிரகச்சாரமே. இந்த யாளி என்ன அழிச்சாட்டியமாக சிகரெட் பிடிக்கிறது. குப்பென்று நாசியில் மோதிய புகையில் அவருக்குத் தும்மல் வந்துவிடுகிறது. சில வினாடிகளில் அந்த நெடி சிகரெட்டின் நெடியல்ல என்பது அவருக்குப் புரிகிறது. விஷ வாயு! ஐயோ என்று அலறிக்கொண்டு கண் விழித்தார் அதிகாரி.

“ஐயா!”
“ஒண்ணுமில்லை. தோண்டறாங்களா?” அநிச்சையாகக் கேட்டுக்கொண்டார் அவர்.
“ஆமாங்க. எழுபதடி போயிருக்குது…மந்திரி வந்துட்டாருங்க…”
அவர் அவசரமாக எழுந்துகொண்டார்.
“என்னய்யா அதிகாரி? என்ன நடக்குது இங்க? யாளி முட்டை கிடைச்சிதா இல்லியா?” எகத்தாளமாகக் கேட்டார் மந்திரி.
"ஐயா, தேடிக்கிட்டு இருக்கங்க.” என்றார் அதிகாரி.
“நல்லா, நல்லா தேடணும். முட்டை இல்லாம இங்கேருந்து கிளம்ப முடியாது, பாத்துக்க.”
“சரிங்க”
பிரும்மாண்டமாக உழுது அகன்றிருந்த நிலத்தின் விளிம்பில் போய் நின்று சுற்றிப்பார்த்தார் மந்திரி. ஆழத்தில் உழைப்பாளிகள் கற்களைப் பிளந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் முதுகுகளில் துளிர்த்த வியர்வை, அம்மைக் கொப்புளங்கள் போல் மேலிருந்து பார்க்கத் தெரிந்தது. அடுத்த வினாடி அகப்பட்டுவிடக்கூடிய முதுமக்கள் தாழிக்காக அவர்கள் உக்கிரமாகப் பாறைகளைப் பிளந்துகொண்டிருந்தார்கள். ஒரு தாழி. அது மூடியிருக்குமா, திறந்திருக்குமா என்று தெரியவில்லை. உள்ளே இருந்த எந்த முதுமகனைத் தூக்கிக் கடாசிவிட்டு யாளி தன் முட்டையை அங்கே போட்டுவைத்தது என்று தெரியவில்லை. தாழியிலிருந்து யாளியால் தூக்கி எறியப்பட்ட முதுமகன் பிறகு என்னவாகியிருப்பான்? மண்ணோடு மக்கிப் போயிருக்கக்கூடும். அல்லது அந்த யாளியே அவனைத் தின்றிருக்கும். யாளி பிணம் தின்னுமா? தேசத்தில் இப்போதெல்லாம் சாத்திரங்கள் மட்டும்தான் அதனைத் தின்னுகின்றன. அசைவ சாத்திரங்கள்.

மந்திரி கேட்டார் “உங்கள்ள யாரானா யாளி முட்டையை முன்னால பாத்திருக்கிங்களாய்யா? வருசக்கணக்கா இதே நோண்டிப்பண்டார வேலைதானே பாக்குறிங்க?”
“இல்லிங்க… பாத்ததில்லிங்க” என்றார் அதிகாரி.
“தத்திங்க….தத்திங்க…” மந்திரி காறித்துப்பினார். “கிணறு தோண்டப்போங்கய்யா. எதுக்கு தொல்பொருள் ஆய்வுன்னு பெரிசா பேரு வெச்சிருக்கிங்க?”
மிகவுமே சரி. எத்தனை புனிதமான பணி! கிணறு தோண்டலாம், குழாய் ரிப்பேர் செய்யலாம். செருப்புத் தைக்கலாம். காய்கறி விற்கலாம். மூட்டை தூக்கலாம். சாக்கடை சுத்தம் செய்யலாம். சாலை போடலாம். வீதி பெருக்கலாம். விளக்கு விற்கலாம்….

அடிவயிற்றிலிருந்து பெருகிய ஓலத்தை அடக்கமாட்டாமல் கதறியவண்ணம், பள்ளத்தின் விளிம்பில் நின்று கையாட்டிப் பேசிக்கொண்டிருந்த மந்திரியைப் பாய்ந்து அறைந்து, அவர் எதிர்பாராத விதமாக இழுத்துத் தள்ளினார்.
ஓவென்று அலறியபடி விழுந்த மந்திரியின் குரல் வினாடிகளில் அடங்கிப்போனது. காற்று நின்று வீசிய கணத்தில் அதிகாரி ஒரு தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.
“….கண்டெடுத்த முதுமக்கள் தாழியை மேலெடுத்துவந்து திறந்ததும், முட்டையை உடைத்துக்கொண்டு பூதம் மாதிரி சீறியெழுந்த யாளிக்குஞ்சு மந்திரியைத் தாக்கித் தள்ளிக்கொன்றது. சிம்மாசனத்தைக் காப்பாற்ற யாளிமுட்டை உதவுமென்று சொன்ன நம்பூதிரி ஒரு முட்டாள். திரேதாயுகத்து அன்னப்பறவையின் அலகைத் தேடியெடுத்து அதனைக்கொண்டு நெய்யால் ஹோமம் செய்து ஆகுதி வளர்த்தால் போதுமானதென்று சொல்லிவிட்டு விண்ணில் சீறிப்பறந்து மறைந்தது. ஆகவே தொல்பொருள் ஆய்வுக்குழு இப்போது அன்னப்பறவையைத் தேடி வடக்கே பயணம் மேற்கொண்டிருக்கிறது….” என்று எழுதி எல்லோரிடமும் கையெழுத்து வாங்க ஆரம்பித்தார்.
***
[பின்குறிப்பு: சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கதை. எழுதிய தேதி, வருடம், இதழ் அனைத்தும் மறந்துவிட்டது. இந்தக் கதையே தொலைந்துபோய்விட்டதாகக் கருதி எள்ளும் தண்ணியும் தெளித்துவிட்ட நிலையில் தற்செயலாக நேற்று என் நண்பர் இனாயத்துல்லா இதனை நினைவுகூர்ந்து பேச, என்னிடம் பிரதி இல்லாத விவரம் சொன்னேன். தன்னிடம் மென்பிரதி இருப்பதாகச் சொல்லி உடனே அனுப்பிவைத்தார். இது படித்துறையில் வெளியானது என்கிற தகவலையும் நினைவூட்டினார். எதிர்பாராதது. அவருக்கு என் நன்றி. எதையாவது எழுதினால் உடனே நண்பர்கள் சிலருக்கு அனுப்பிவைக்கிற வழக்கத்தை வைத்துக்கொண்டிருப்பதுதான் எத்தனை உதவிகரம்! இப்போதெல்லாம் எழுதுகிற அனைத்தையும் என் மின்னஞ்சலிலேயே ஒரு பிரதி தனியே சேமிக்கிறேன். அது  திரும்பவும் தொலையாமல் இருக்கவேண்டும்.]
அபூர்வ சகோதரிகள்
கலி முற்றிய காலத்தில், மனுஷத்தனம் மரித்துவிட்ட சென்னைப் பட்டணத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தில் என்னை உத்தியோகம் பார்க்க விதித்து அனுப்பி வைத்தான் எம்பெருமான்.

பத்தாங்கிளாஸ் படித்தவள் என்பது தெரிந்தால் பெருக்கித் துடைக்கச் சொல்ல அனேகமாக யார் மனமும் இடம் கொடுக்காது என்பது என் அனுபவ ஆசான் போதித்த பாடமாகையால், பணியாற்றப் போகுமிடங்களில் நான் என் கல்வித் தகுதி குறித்து ஒருபோதும் பிரஸ்தாபிப்பதில்லை. அப்படியே துருவித் துருவி கேட்கும் சில ஜீவராசிகளும் உண்டு இவ்வுலகில். அச்சமயங்களில் வழக்கமான வேலைக்காரச் சலிப்பை மேல்போர்வையாகப் போர்த்திக்கொண்டு, ‘ஆமா, படிச்சிக் கிழிச்சேன் போ’ என்றோ, இதற்கொத்த வேறு விதமான சுவாரசியமற்ற சொற்களைக் கொண்டோ பேசுபொருளை மாற்றிவிடுவேன்.

ரொம்ப சுலபம். குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட வயதில் இன்னும் இரண்டு, மூன்றைக் குறைத்துச் சொல்லி, அனுதாப ஓட்டு பெற்றுவிடலாம். ஐயோ, பாவம் சின்னப் பெண் தலையில் இப்படி எழுதிட்டானே.

இருக்கட்டும். உருப்படாத புருஷன் வாய்த்தால் உத்யோகம் பெண்கள் லட்சணம். புரைதீர்ந்த நன்மைக்காக வாய்மையிடத்தில் பொய்யை வைத்தே தீரச் சொல்கிறது வாழ்க்கை.

ஏழெட்டு வீடுகள் பார்த்துவிட்டு, ஒரு மாசம் முன்புதான் இந்த வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு அல்ல. ஆத்துக்கு. மாமி மிகவும் ஆசார சீலி. விடிந்தால் போதும், சாமிகளுடன் பிஸினஸ் நிகழ்த்த ஆரம்பித்துவிடுவாள்.

இருபுறமும் சங்கு, சக்கரம் ஏந்தியவனே, துளசி அணிந்தவனே, நெற்றி நிறைய திருமண் தரித்தவனே, அவனே, இவனே, நமஸ்காரம். கட்டத் தொடங்கியிருக்கும் வீட்டுக்கு மேஸ்திரி வஞ்சனை எண்ணாமல் நீ பார்த்துக் கொள்வாய். அழகிய தாமரையின் மேல் அமர்ந்து முறுவல் புரிபவளே, உனக்கும் ஒரு நோட்டீஸ். எண்ட்ரன்ஸ் எழுதியிருக்கும் கடைசிப் பையனுக்கு அண்ணா பல்கலையிலேயே அனுமதி கிடைக்கச் செய்வது உன் பொறுப்பு. ஹிரண்யவர்ணாம் ஹரிணீ, இரு மாட்டுப் பெண்களும் முறைத்துக்கொண்டு நிற்காமல் குடும்ப கவுரவம் காக்கச் செய்வது உன் கடமை.

எனக்கு அவரிடம் பிடித்த விஷயம் அந்த நேர்மை. ஆமாம். நான் கடவுளிடம் பேரம்தான் பேசுகிறேன் என்று மிகவும் வெளிப்படையாகச் சொல்வார்.

”வாரத்துக்கு எட்டுநாள் நான் விரதம் இருக்கேன். தினசரி பூஜை பண்றேன். அவனை நினைக்காத நாளே கிடையாது. எனக்கு வேண்டியதைக் கேட்டால் என்ன தப்பு? கேளுங்கள், கொடுக்கப்படும். தட்ஸ் ஆல்” என்பார் மிகத் தீர்மானமாக.

எட்டுபேர் கொண்ட குடும்பம், வாரக் கடைசி நாளின் காலை உணவுக்கு ஒன்றுசேரும். பத்து மணிக்கு நான் துணிகள் துவைத்து என் பிறப்புரிமையை நிலைநாட்டத் தொடங்கும்போது, குடும்பம் குழம்பு சாதத்திலும் கடந்த வாரத் தலைப்புச் செய்திகளிலும் இருக்கும். முக்கால் கிரவுண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அது பற்றிய பேச்சு வரும்போது மாமியின் முகம் ஒரு குழந்தையினுடையது போலாகிவிடும்.

அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேருக்குத் திருமணமாகி விட்டது. மூன்றாமவரின் படிப்பும் முளைத்திருக்கும் வீடும் நல்லபடியாக முடிந்தாக வேண்டும் அவருக்கு. “பாருங்கடா, ஒரே காம்பவுண்ட். ஒரே வீடு. மூணு போர்ஷன். இந்த பைத்தியமும் படிச்சு முடிச்சி, ஒரு கல்யாணம் பண்ணிண்டுடுத்துன்னா, உன் கடமை முடிஞ்சசுடும். அப்புறம் ஒவ்வொருத்தனோடவும் ஒரு வாரம் வந்து இருப்பேன். உட்கார்ந்த இடத்துக்கு சாதம் வந்து விழணும். அப்புறம், இஷ்டப்படி ராமா, கிருஷ்ணான்னு என் ஆத்துக்காரரைக் கூட்டிண்டு கிளம்பிடுவேன்.” என்று ஒரே வசனத்தை 1349வது முறையாக ஒலிபரப்புவார். (நான் வருவதற்கு முன் எத்தனை முறை ஒலிபரப்பப்பட்டிருக்கிறது என்பதை அறிய எனக்குமுன் இங்கிருந்த கனக லட்சுமியைக் கேட்க வேண்டும். ஆனால் கனகா இப்போது துபாய் போயிருக்கிறாள்.)

“இந்த தனித்தனி போர்ஷன் சமாசாரமும் தான் பிடிக்கலை. போர்ஷன் தனித்தனியா இருந்தாலும் சமையல் ஒண்ணாவே இருக்கட்டுமே” என்பார் மாமியின் ஹார்ட் அட்டாக் வந்த கணவர்.

நான் மிகவும் ரசித்து அனுபவிக்கும் தருணம் அது. கான்க்ரீட்டில் அவர் ஒரு கட்டடம் கட்டுகிறார். அதை ஒரு வீடாக்கும் பொறுப்பைத் தலையில் சுமந்திருக்கும் இரு மருமகள்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஆவலுடன் அவர்களின் முகங்களை கவனிக்கிற விநாடி, என் வாழ்வின் கவித்துவக் கணங்களுள் ஒன்று.

ஆனால் உலகம் தெரிந்த மாமி அந்தப் பேச்சை முளையிலேயே கிள்ளிவிடுவாள். மாமியும் அவரது பழமொழிகளும். தாயும் பிள்ளையும், வாயும் வயிறும். மேலும் உறவு என்பது ஒரு சமையலில் மட்டுமே ஒளிந்திருப்பது அல்ல. ஒத்த உணர்வு என்பது ஒரு லயம். நன்கு இழுத்துக் கட்டப்பபட்ட தம்பூராவின் தந்தியை மீட்டும்போது எழும் நாதத்துக்குச் சமமானது அது. (மாமிக்குக் கொஞ்சம் சங்கீதம் தெரியும். “மாருபல்க” எனும் ஒரு தெலுங்குப் பாட்டை அடிக்கடி சுமாரான சுருதியுடன் பாடுவார். சமயத்தில் குரல் சதி செய்து அவரை அவமானத்துக்கு உள்ளாக்கும்போது ‘வயசாயிடுத்து. இப்பல்லாம் முடியறதில்லை’ என்பார். எப்போதாவது முடிந்திருக்க வேண்டும்.)

என் அனுபவத்தில், நான் வேலை பார்க்கும் வீடுகளில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் போதும். நல்ல மாதிரியா, சிடுமூஞ்சியா, தாராள உள்ளம் படைத்தவர்களா, கஞ்சூஸா, வம்புப் பிரியரா, வதந்திப் பிரியரா, நல்லுறவாளர்களா, அன்புடன் பிரியப் போகிறவரா – என மனக் கண்ணில் விஸ்வரூப தரிசனம் விழுந்துவிடும். அதற்கேற்ற மாதிரி அவர்களுடன் என் பேச்சு வார்த்தை எல்லைகளை வகுத்துக் கொள்வேன்.

ஆனால் என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியாத பிரகிருதிகளாக இருந்தார்கள், மாமியின் மாட்டுப் பெண்கள். இரண்டு பேர். இரண்டு அழகிய புதிர்கள்.

என் குடிகாரப் புருஷனை நான் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று, எனக்கு அவர்களின் பெரிய உத்யோகத்துப் புருஷர்களைப் பார்த்ததும் தோன்றிவிட்டது. அட ஒருத்தராவது, ஒரு தினமாவது பார்க்கக் கிடைக்க வேண்டுமே! அவர்கள் எப்போது வீட்டுக்கு வருகிறார்கள், எப்போது கிளம்புகிறார்கள், நள்ளிரவு வீடு திரும்புபவர்கள் பெண்டாட்டி சாப்பிட்டாளா, எத்தனை வேளை சாப்பிட்டாள், என்ன சாப்பிட்டாள், வேறென்ன விசேஷம் என்று விசாரிப்பார்களா, அதற்கெல்லாம் அவகாசம் இருக்குமா? அட, அன்புடன் ஒரு முத்தம்? பாசமுடன் ஒரு பார்வை?

இவர்கள்தான் அன்றைய தினத்தில் நடந்ததைச் சொல்வார்களா, ஒரு முழம் பூ வாங்கி வராதது பற்றி இனிய சண்டை போடுவார்களா… எப்போது, நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கும், ஒரு மணிக்குமா… ரொம்ப ஆச்சர்யமாகத்தான் இருக்கும் எனக்கு. இவர்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தது அவரவர் கணவர்களையா, மாமியாரையா என்று சந்தேகம் வரும், சமயத்தில். ஆனால் ஒரு முகச்சுளிப்பும் சலிப்பும் அவர்கள் முகத்தில் பார்த்ததில்லை நான். அவரவர் உலகின் கதவு, ஜன்னல்களை இழுத்துச் சாத்தி, கொக்கி மாட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் நான் அதிகம் கண்டதில்லை. இருக்கியா, இருக்கேன். சாப்டியா, சாப்டேன். சவுக்கியமா, சவுக்யம். கடைக்குப் போறேன், நீ வரியா. இல்லை. நான் வரலை. நீ போயிட்டு வா. காஸ்காரன் வந்தா சொல்லு. சரி, சொல்றேன். நாளைக்கு நான் என் அம்மா ஆத்துக்குப் போகப் போறேன். அப்படியா, சரவணால எனக்கு ஒரு அஞ்சலி கட்டர் வாங்கிண்டு வரியா.

இவ்வாறாகத் தழுவல்களோ, உரசல்களோ அற்ற ஒருவித ஞானகர்ம சந்யாச உறவாயிருந்தது அவர்களுடையது. இதுதான் என் ஆர்வத்தை அதிகம் தூண்டியது. பெண்களால் அன்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் வம்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் சண்டை போடாமல் இருக்க முடியாது. பெண்களால் சமாதானம் கொள்ளாமல் வாழ முடியாது. ரொம்ப முக்யம், இரு பெண்கள் ஒரு நேர்க்கோட்டில் ஒருவர் பின் ஒருவராகச் செல்ல முடியாது. மோதிக் கவிழ்வதும், கவிழ்ப்பதும், எழுந்து தட்டிக் கொள்வதும், தட்டி விடுவதுமாக உலகம் பெண்களால் பிரசன்னமடைந்து வருகிறது.

ஆனால் மாமியின் மாட்டுப்பெண்கள் இருவரும் இயல்பாக ஒரு புதிய இலக்கணம் எழுதி வந்தார்கள். மானசீக லட்சுமணக் கோட்டின் இருபுறமும் அவரவர் தம் சமஸ்தானங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பத்து நாட்கள் முன்பு இரண்டாவது மாட்டுப்பெண் வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன் என்று தன் டி.வி.எஸ். 50யில் ஒரு நாள் திடீரென்று கிளம்பினாள். மாமிதான் ஏற்பாடு செய்து தந்தாராம். ‘மூத்தவளுக்கு சங்கீதத்துல ஆர்வம் இல்லை. இவ கத்துக்கறேன்னா. அதான் நானே கூட்டிண்டு போய் பம்மல் விஜயலட்சுமி கிட்ட சேர்த்துவிட்டேன். அவ தூர்தர்ஷன்ல கார்த்தால ப்ரோக்ராம்லாம் குடுத்திருக்கா.’ என்று பக்கத்து வீட்டு கல்யாணியிடம் சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டேன்.

இந்தக் காலத்தில் மாமி இன்னும் தூர்தர்ஷன் பார்த்து வயலின் வாத்தியார் தேர்ந்தெடுக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன். நினைத்ததோடு நிறுத்திக்கொண்டால் அப்புறம் எப்படி வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுவது? நானும் பெண் அல்லவா. ஆகவே இத்தலையாய செய்தியை மூத்தவளிடம் தெரிவித்து அவளது கருத்தை அறிந்துகொள்ள மிகவும் விரும்பினேன். மறுநாள் என் ஜனநாயகக் கடமைகளை முடித்துவிட்டு வீடுதிரும்பும்போது, அவளை வாசலில் பிடித்து, “தங்கச்சி வயலின் க்ளாஸ்க்குப் போகுது போல?” என்று ஸ ப ஸ பிடித்தேன்.

“தெரியலயே” என்றாள் அந்தக் குலவிளக்கு.

“அம்மாதான் சேர்த்து விட்டாங்களாம். இப்பத்தான் வண்டில போகுது” என்று என் சமூக சேவையை முடித்துக்கொண்டு என் வழியே போனேன்.

எனக்குக் கொஞ்சம் வியப்புத்தான். ஒரே வீட்டுக்குள் இருக்கிறார்கள். ஒரு சம்பவம் – பின்னாளில் அது சரித்திர முக்கியத்துவம் கொண்ட சம்பவமாகலாம் – நடக்கிறது. அது வீட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியாதோ? அதுவும் உப்பு உறைப்புகள் சரியாக உள்ள ஒரு ‘கூட்டு’க்குடும்பத்தில்?

மறுநாள் நான் என் தொழிலிடத்துக்குப் போனதும் முதல் வேலையாக அந்த மூத்த குல விளக்கிடம், ‘கேட்டியா? நெசந்தானே?’ என்று கேட்டேன். பதில்தான் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. இதுல நான் கேட்க என்ன இருக்கு? அவளுக்கு இஷ்டம். போறா. எனக்குப் பாட்டும் பிடிக்காது. ஒரு மண்ணாங்கட்டியும் பிடிக்காது.” என்றாள்.

“அதுக்கில்லம்மா. நீ மூத்தவ. ஒரு மரியாதைக்காகவாவது உங்கிட்ட சொல்லலாமில்ல?”

“அதெல்லாம் நான் எதிர்பார்க்கல. நீ உன் வேலயப் பார்” என்றாள் தன்னிகரற்ற நிதானமுடன். ஆகவே, நான் என் வேலையான பெருக்கல், கழுவல், துவைத்தலில் என் பிரத்யேக ஈடுபாட்டுடன் மூழ்கிப் போனேன்.

கிளம்பும்போது இம்முறை இளைய குலவிளக்கு சாலையில் எதிர்ப்பட்டது.

“வீணை க்ளாஸெல்லாம் நல்லாப் போகுதாம்மா?” என்றேன் உள்ளார்ந்த அக்கறையுடன்.

“ஐய, வீணை இல்ல கற்பகம், வயலின் க்ளாஸ்” என்றாள் சிநேகப் புன்முறுவலுடன். அப்பாவித்தனம் என்ற போர்வைக்குள் அணுகுண்டு தயாரித்தாலும் யார் கண்ணுக்கும் படாது போலிருக்கிறது. ஆகவே கேட்டேன் :

“அது என்னமோ க்ளாஸ். நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு ஆர்வத்துல உங்க அக்காகிட்ட கேட்டேன். தங்கச்சி என்னமோ கத்துக்குதே, நீ அதுக்கெல்லாம் போகறதில்லையான்னு.”

“என்ன சொன்னா?” என்று வலையைத் தேடி வந்து விழப் பார்த்தது இளைய குலவிளக்கு.

“கெட்டுது போ. அதுக்கு நீ போறதே தெரியாதாமில்ல? என்னாம்மா, ஒரே வீட்டுலதானே இருக்கீங்க, இப்படி சொல்றியேன்னா, உன் வேலையப் பார்’னுடுச்சி.”

“ச்சீ ஆமாப்பா. நானாவது சொல்லியிருக்கணும். தோணலை” என்று ஸேம் சைடு கோல் போட்டுவிட்டு போயே விட்டாள்.

பின்னொரு நாள் மூத்தவள் நல்லிக்குப் போய், தன் மாமியாரின் திருமண நாளை முன்னிட்டு, ரூபா 6850/-க்கு ஒரு பட்டுப்புடவை வாங்கி வந்திருந்தாள். வந்ததும் மாமியாரிடம் விலை விவரமுடன் எடுத்துக் காட்டியவள், உடனே புடைவையை பீரோவில் வைத்துப் பூட்டியதைக் கண்டேன்.

அன்று மாமி வத்தல் பிழிவது எனும் முழுநாள் யாகம் வைத்துக் கொண்டிருந்ததால் நானும் காலை முதல் மாலை வரை உடன் இருக்க வேண்டியதானது. வயலின் வகுப்பை முடித்துவிட்டு மாலை திரும்பிய தன் இளவலிடம் ஒரு ஆர்வத் துடிதுடிப்புடன் தான் வாங்கி வந்த (அதுவும் மாமியாருக்கு) புடைவையை எடுத்துக்காட்டி ஒரு அலட்டு, அலட்டிக்கொள்ள வேண்டாமோ? ம்ஹும்! யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் வம்சாவளிக் கொழுந்தாக “இன்னிக்கு K TVல ராத்திரி என்ன படம் போடறான்?” என்று பேச ஆரம்பித்தாள்.

ஒரு வேளை இரவு குடும்ப உறுப்பினர்கள் கூடும்போது சொல்வாளாயிருக்கும் என்று நினைத்தேன். மறுநாள் பொறுக்க மாட்டாமல் நானே நம்பர் 2விடம் புடைவை பார்த்தியா என்று கேட்டபோது, ‘என்ன புடைவை?’ என்று அவள் அன்று பிறந்த குழந்தை மாதிரி கேட்டாள்.

நல்ல குடும்பம் பல்கலைக் கழகம். எனக்கென்ன போயிற்று என்று நான் சும்மா இருந்திருக்கலாம். நானும் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்த பாவத்துக்கு எவ்வாறு அப்படி இருந்துவிட முடியும்? வாகான ஒரு தினம், மாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தபோது மேற்படி அபூர்வ சகோதரிகளின் குணவிசேஷம் குறித்து சாங்கோபாங்கமாகப் பேச்செடுத்தேன்.

“என்னத்த சொல்றது போ. என் கண்ணு முன்னாடி அடிச்சிக்கிறதில்லை. அவ்வளவுதான். இப்படி விட்டேத்தியா இருக்காதீங்கடி. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, உதவிகரமா இருங்கோ. ஒரு வீட்டுல இருக்கறதைவிட ஒத்துமையா இருக்கறமாங்கறதுதான் முக்கியம்னு நான் சொல்லாத நாள் கிடையாது. சரிம்மாங்கறாளே தவிர ரெண்டுபேரும் சேர்ந்து சிரிச்சு நான் பார்த்து அறியேன்..”

சுய சோகத்தில் மாமியின் மூக்கு சிவந்துவிட்டது.

“நீங்க ஏம்மா கவலைப்படறீங்க? ஊருல உலகத்துல இருக்கற பொண்ணுங்கள விட நம்ம குழந்தைங்க எவ்வளவோ தேவலை.” என்று எதற்கும் இருக்கட்டும் என்று சொல்லி வைத்தேன்.

மாமி சில கணங்கள் பேசாதிருந்தாள். ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. கூட்டுக் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளாயிருக்கலாம்.

“பாரு, மூணாவது மனுஷி. வந்து ஒரு மாசமாகலை. உன் வரைக்கும் அவா நடவடிக்கை எட்டியிருக்குன்னா என்ன அர்த்தம்? இதுங்களை வெச்சுண்டு நான் எப்படி குறை காலத்தை ஓட்டப் போறேன்னு கவலையா இருக்குடி.” என்றாள் மாமி.

“எல்லாம் சரியா போயிடும் மாமி. பச்சையம்மாளுக்கு ஒரு தேங்காய் நேர்ந்துக்கங்க” என்று நானறிந்த சாத்வீகத் தீர்வை முன்வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.

மறுநாள் மாமி வீட்டில் ஒரு சம்பவம் – இது நிச்சயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுதான் – நிகழ்ந்தது என்பதை அவர்களது பக்கத்து வீட்டு வேலைக்காரி – என் சக பயணி மூலம் அறிந்தேன். விதி என்னை அன்று விடுமுறை எடுக்கச் செய்திருந்தது.

அன்று காலை மாமி குளித்து முழுகி, பூஜையில் அமர்ந்ததும் வழக்கமான எக்ஸ்பிரஸ் வேக மந்திர உச்சாடணங்கள் புறப்படவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தில் இருப்பவள் போல் வெகுநேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள். மாமியின் இந்த மாறுபட்ட நடவடிக்கையால் கலவரமடைந்த மருமகள்கள் இருவரும் அக்கறையாக அருகே சென்று, என்ன என்று விசாரித்திருக்கிறார்கள்.

“கட்டிண்டிருக்கற வீடோ, என் புருஷனோ, பிள்ளைகளோ எனக்கு இப்ப முக்கியமில்லை. நீங்க ரெண்டு பேரும் சமத்தா, ஒத்துமையா, ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, சொந்த அக்கா தங்கை மாதிரி இருப்போம்னு சத்தியம் பண்ணுங்கோ. ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி நடக்கறது, நீ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு இருக்கறது, ஹாஸ்டல்ல ரூம்மேட்டா இருந்து தொலைக்க விதிச்சவாளாட்டும் நடந்துக்கறது, இந்த வழக்கங்கள் மாறணும்…’

“ஐயோ என்னம்மா என்னென்னமோ பேசறீங்க? இப்ப நாங்க என்ன பண்ணிட்டோம்?” என்று பதறினார்கள் சகோதரிகள்.

“ஒண்ணும் பண்ணலை. ஆனா அவாவா ரூம்ல மாட்டின கடிகாரம் மாதிரி, மணி அடிக்கறதோட கடமை முடிஞ்சி போயிடறதா? வேலைக்காரி கேக்கறா, ஏம்மா உன் மருமகப் பொண்ணுங்க ரெண்டும் இப்படி வடக்கு, தெற்கா இருக்குங்க’ன்னு. ஏண்டி இப்படி மூணாவது மனுஷி பேசற அளவு வெச்சுக்கறீங்க? இந்த வீட்டுல சண்டை போட ஒரு சந்தர்ப்பம் உண்டா? முறைச்சுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கறதா? நான் மாமியார் மாதிரியா நடந்துக்கறேன்? அம்மா இல்லியா?….”

மாமியின் கண்கள் கலங்கிவிட்டன. இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதானே? முறைத்துக் கொள்வதற்கும் முகமும் அகமும் திருப்பிப் போவதற்கும் என்ன இருக்கிறது? இருவரின் நிலையும் பொதுவானது. இருவரின் கஷ்டங்களும் பொதுவானவை. வீட்டில் இருவருக்கான உரிமைகளும் கூடப் பொதுவானவையே அல்லவா?

“சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்?” என்றார்கள் ஏககாலத்தில்.

“சத்தியம் பண்ணுங்கோ. நீ யாரோ, நான் யாரோன்னு இருக்க மாட்டோம்னு..” மாமி தீர்மானமாகச் சொன்னாள்.

சில வினாடிகள் அவர்கள் பேசாமல் இருந்தார்கள். நாடகத் தன்மை கூடிவிடும் சந்தர்ப்பம் குறித்த சிந்தனையாயிருக்கலாம். பிறகு மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுவிட்டு, “சரி, சத்தியம். இனிமே ஒத்துமையா இருப்போம். போதுமா?” என்றார்கள்.

“நிஜமா” என்று சந்தேகம் தீரமாட்டாத மாமி கேட்கவே, “ஆமா, ஆமா, ஆமா” என்று அழுத்திச் சொன்னவர்கள், “இனிமே வீட்டு விஷயங்களைக் கூட ரெண்டுபேரும் சேர்ந்தே முடிவுசெய்து, செயல்படுத்தறோம்” என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

மாமியின் மாட்டுப்பெண்கள் சொன்ன சொல் காப்பதில் அரிச்சந்திர புத்திரிகள் போலிருக்கிறது. மறு நாளிலிருந்தே அவர்களின் ஒற்றுமை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துவிட்டதில் மாமி மிகுந்த சந்தோஷத்துக்கு உள்ளானாள்.

எனக்குத்தான் சங்கடம். கூட்டணி ஆட்சியின் முதல் உத்தரவு, என் வேலை நீக்கம் சம்பந்தப்பட்டதாயிருந்தது.
[முன்பு எப்போதோ அமுதசுரபியில் வெளியானது.]
மகளிரும் சிறுவரும்

அவசரத்தில் கவனிக்கவில்லை. ஏறிய பேருந்தின் முன்புறமே போர்டு இருந்திருக்கும். மகளிரும் சிறுவரும். ஏறும்போதாவது யாரும் எச்சரித்திருக்கலாம். யோவ் பெரிசு, இந்த வயசுல இன்னா தில்லா லேடிஸ் ஸ்பெஷல்ல ஏறுறே என்று எந்த விடலையாவது உரத்த குரலில் கிண்டல் செய்திருக்கலாம். மாநகர இளைஞர்களெல்லாம் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. கண்டக்டர் பேருந்தின் முன்புறம் இருந்ததால் அவரும் பார்க்கவில்லை. அட, உள்ளே இருக்கிற மகளிரும் சிறுவருமாவது ஒரு சொல் சொல்லியிருக்கக்கூடாதா? சார், இது லேடிஸ் ஸ்பெஷல். யாருக்கும் தோன்றவில்லையா? அல்லது தன் வயதுக்கு அளிக்கப்படும் சலுகையா?

வயதானவர் பாவம். தவறி மட்டுமே ஏறியிருக்கமுடியும். அதனாலென்ன? அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கி வேறு பஸ் பிடித்துக்கொள்ளுங்கள்.

பேருந்து புறப்பட்டு வேகமெடுத்த பிறகு தான் கண்டக்டர் பார்த்தார். அதற்குள் முந்திக்கொண்டு அவரே மன்னிப்புக் கேட்கும் தொனியில் சொன்னார்: “கண்ணு தெரியலை…. நிறுத்தினிங்கன்னா இறங்கிடறேன்…”

சொல்லிவிட்டாரே தவிர அதுவும் சங்கடம் தான். ஆன வயசுக்கு உடம்பில் இல்லாத நோயில்லை. முட்டி வலிக்கிறது. முதுகு வலிக்கிறது. கொஞ்ச நேரம் நிற்கவேண்டி வந்தால் தலை சுற்றுகிறது. கண்ணாடி மாற்றவேண்டும். ஷுகர் டெஸ்ட் செய்து நாளாகிறது. இரவுகளில் உறக்கம் வருவதில்லை. விழித்திருப்பதால் பகலெல்லாம் அலுப்பாக இருக்கிறது. இறங்கி மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதில் சங்கடங்கள் பல உண்டு. முக்கியமாக, போக்குவரத்து பெருகிவிட்டது. எதிரே வரும் ஒவ்வொரு வாகனத்தையும் எமன் அனுப்பிவைத்தது போலத்தான் நோக்கமுடிகிறது.

உலகம் வேகமாகிவிட்டது. பைக்குகளும் சிறு கார்களும் பெருகிவிட்டன. எல்லாருக்கும் எல்லாமே அவசரமாகிவிட்டது. சாலையில் ஒரு வாகனமும் நிதானமான வேகத்தில் போவதேயில்லை. போதாத குறைக்குக் குறுக்கே தன்னிஷ்டத்துக்குப் பாய்கிற தண்ணீர் லாரிகளும் மீன்பாடி வண்டிகளும். ஒரு மாநகரமாக இருப்பதற்கே லாயக்கில்லாத நகரம். சந்து பொந்துகளாலான மாபெரும் குப்பைத்தொட்டி. கடவுளே, எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் ஜனங்கள்!

கல்லூரிக்குப் போகிற பெண் போலிருக்கிறது. சற்று நகர்ந்து அவரை அருகே உட்காரச் சொன்னாள்.

“பரவாயில்லேம்மா. அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிடுவேன்… தெரியாம ஏறிட்டேன். கண்ணு தெரியல்லே..”

மீண்டும் மன்னிப்புக் கேட்கிற தொனியில் அவர் சொன்னார்.

“இட்ஸ் ஆல்ரைட் சார். அதுவரைக்கும் ஏன் நிக்கணும். உக்காருங்க.”

அவருக்குத் தான் சங்கடமாக இருந்தது. முற்றிலும் பெண்கள் நிறைந்த பேருந்து. மகளிரும் சிறுவரும் என்று போர்டில் இருந்தாலும் சிறுவர்கள் யாரும் இல்லை. பதினெட்டு வயது தொடங்கி அறுபது வயது வரை விதவிதமான பெண்கள் மட்டுமே நிறைந்திருந்தார்கள். கல்லூரிக்குப் போகிறவர்கள். அலுவலகங்களுக்குப் போகிறவர்கள். கூடை நிறையப் பூக்களுடன் வியாபாரத்துக்குப் போகிறவர்கள். அலுவலக வேளைகளில் மற்றப் பேருந்துகளில் இருப்பது போன்ற நெரிசல் ஏதும் இதில் இல்லை. எல்லாருமே அமர்ந்திருந்தார்கள். அமர்ந்தது போக மிச்சம் சில இருக்கைகளும் இருந்தன. பெண்கள் சௌகரியமாகப் போய்வர இப்படியான ஏற்பாடு இருப்பது மிகவும் நல்லதுக்கே.

நடத்துநர் இப்போது அவர் அருகே வந்தார். உட்காரலாமா என்று மிகவும் யோசித்து, அந்தப்பெண் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவர், சட்டென்று மீண்டும் எழுந்து நின்றுகொண்டார்.

“கண்ணு தெரியலே…தெரியாம ஏறிட்டேன். அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிடுறேன்…” மீண்டும் அவர் கண்டக்டரிடம் அதையே சொன்னார். அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் வரை பயணம் செய்வதற்கு டிக்கெட் கேட்டு, சரியான சில்லறையையும் எடுத்து நீட்டினார்.

“டிக்கெட்டெல்லாம் வேணாம் பெரியவரே. இந்தா வந்துரும். நீ பாட்டுக்கு இறங்கிப்போயிரு..” என்றான் அந்த இளைஞன்.

“இல்லேப்பா. டிக்கெட் குடுத்துடு. உனக்கெதுக்குக் கஷ்டம்?”

“அட, பரவால்லங்க. இங்க செக்கிங் ஏதும் வராது. அதும் பீக் அவர் பாருங்க. எதுக்கு ரெண்டு டிக்கெட் நீ வாங்கணும்?”

அவருக்கு உண்மையிலேயே வியப்பாக இருந்தது. பொதுவாக மக்கள் சேவையில் இருக்கிற பணியாளர்கள் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. எரிந்துவிழுகிற கண்டெக்டர்கள். கெட்ட வார்த்தைகள் உதிர்க்கிற டிரைவர்கள். ஊழல் செய்கிற ரேஷன் ஊழியர்கள். லஞ்சம் கேட்கிற போக்குவரத்து கான்ஸ்டபிள்கள். தலை சொறிகிற தொலைபேசி இலாகா லைன் மேன்கள். தகராறு செய்யவே அவதரித்த தண்ணீர் லாரி டிரைவர்கள்.

ஒரு மாறுதலுக்கு அந்த கண்டக்டர் இளைஞன் அவரை மிகவும் வசீகரித்தான். ஆனாலும் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. ஆகவே, “இல்லேப்பா. நீ குடுத்துடு” என்று வலுக்கட்டாயமாகச் சில்லறையை அவன் கையில் திணித்தார்.

“சரி, உக்காருங்க”என்று அவன் சொன்னான்.

“இருக்கட்டும்பா.”

“சீட்டுதான் இருக்குங்களே, எதுக்கு நிக்கறிங்க. தெரியாமத்தானே ஏறிட்டிங்க. டிராஃபிக்கைப் பாருங்க. சிக்னல் தாண்டவே அஞ்சு நிமிஷம் ஆவும். அதுமுட்டும் எதுக்கு நிக்கணும். சிஸ்டர் நீங்க கொஞ்சம் நகந்துக்கங்க”

ஏற்கெனவே அவரை அமர அழைத்த பெண்ணை அவன் மீண்டும் நகர்ந்துகொள்ளச் சொன்னதும் அவருக்கு மிகவும் சங்கடமாகிப்போனது.

“அடடே, இருக்கட்டும்பா. அந்தப் பொண்ணு அப்பவே என்னை உக்காரத்தான் சொன்னது” என்றார்.

பிறகு அவர் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினார். சரியான போக்குவரத்து நெரிசலில் வண்டி சிக்கி நின்றிருந்தது. அவர் இருந்த பேருந்தின் இருபுறமும் கூட்டம் நிரம்பித் ததும்பும் பேருந்துகள் அணி வகுத்து நின்றிருந்தன. அவர் ஏறியிருக்கவேண்டிய பேருந்தும் அங்கே இருந்தது. ஐயோ, இதில் தான் எப்படி ஏறியிருக்க முடியும்? மூச்சடைத்துக் கண்டிப்பாக விழுந்திருப்போம் என்று அவருக்குத் தோன்றியது. தெய்வம்தான் தன்னை மகளிரும் சிறுவரும் மட்டும் ஏறும் பேருந்தில் ஏற்றி அனுப்பியிருக்கவேண்டும்.  அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கினாலும் அந்தக் கும்பல் பேருந்தில் நிச்சயம் ஏற முடியப்போவதில்லை. ஒரு ஆட்டோ பிடித்துத் தான் போயாக வேண்டும். ஆட்டோ என்றால் குறைந்தபட்சம் பதினைந்து ரூபாய். அதிகபட்சம் இருபத்தைந்து ஆகும். பென்ஷன் வாங்குகிறவர்களெல்லாம் ஆட்டோவை நினைத்துப் பார்ப்பதே பாவம் என்று அவருக்குத் தோன்றியது.

ஒரு பத்து, பதினோரு மணிக்குப் பிறகு கிளம்பியிருக்கலாம். கூட்டம் இத்தனை இருந்திருக்காது. என்ன பெரிய வெட்டி முறிக்கிற வேலை? மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டுக்கு வருவதை மத்தியானத்தில் நிதானமாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கலாம். இப்படி யோசிக்காமல் கிளம்பியிருக்கவேண்டாம்.

இப்போது ஜன்னலுக்கு வெளியே காத்திருந்த சக பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொத்திக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் தன்னை விநோதமாகப் பார்ப்பது போல அவருக்குத் தோன்றியது.

ஐயா, அவசரத்தில் ஏறிவிட்டேன். இது மகளிர் பேருந்து தான். எனக்குக் கண் சரியாகத் தெரியவில்லை. மனத்துக்குள் சொற்களைக் கூட்டிப் பார்த்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது. எப்படியும் சிவப்பு போர்டு தான் வைத்திருந்திருப்பார்கள். எப்படி கவனிக்காமல் ஏறிவிட்டோம்? சிவப்பு போர்டுக்கும் மஞ்சள் போர்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போகிற அளவுக்குக் கண்பார்வை மோசமில்லை. எப்படியோ பிசகிவிட்டது. என்னவோ ஞாபகம்.

நேற்றிரவு மாப்பிள்ளை மகளைக் கடிந்துகொண்டதைத்தான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார், பஸ் ஸ்டாண்டில். மகள் வேலை பார்க்கிற அலுவலகத்தில் யாரோ ஒரு பெண் புடைவைகள் எடுத்துவந்து கடை விரித்திருக்கிறாள். முன்னூறு ரூபாய்க்கு சாதாரணமாகக் கிடைக்காத உயர்தரப் புடைவைகள். கண்ணுக்குத் தெரியாத சிறு குறைகள் மட்டும் அவற்றில் இருந்ததால் எக்ஸ்போர்ட் குவாலிடி தகுதியிலிருந்து நீக்கப்பட்ட புடைவைகள். பல பெண்கள் ஆர்வமுடன் வாங்க முன்வந்த தைரியத்தில் அவரது மகளும் ஒரு புடைவையை வாங்கி வந்திருந்தாள்.

எதற்கு இப்போது ஒரு புதுப்புடைவை? புதுச்செலவு? அதைத்தான் அவரது மாப்பிள்ளை கேட்டார். நவராத்திரிக்கு ஒரு புடைவை வாங்கியாகிவிட்டது. தீபாவளிக்கென்று தனியே ஒரு புடைவையும் வாங்கியாகிவிட்டது. நடுவில் எதற்கு இன்னொரு தண்டச்செலவு?

சாதாரணமான குடும்பப் பிரச்னை தான். மகள் கொஞ்சம் தணிந்து போயிருக்கலாம். வாங்கினால் என்ன தவறு என்று கேள்விக்கு பதில் கேள்வி பிறந்ததும் சொற்களில் சூடு ஏறத்தொடங்கிவிட்டது. எல்லா நடுத்தர வர்க்கத்து வீடுகளிலும் புடைவைச்சண்டைகள் கட்டாயம் இருந்தே தீரும். பெண்களும் புடைவையும். யுகம் யுகமாகத் தொடரும் உறவு. யுகம் யுகமாகத் தொடரும் சிறு பிரச்னைகள்.

புடைவைகளால் நிரம்பிப் பிதுங்கும் அவளது பீரோவைத் திறந்து, கோபத்தில் அனைத்தையும் அள்ளி வெளியே வீசி, எண்ணிப்பார் என்று கத்தினார் மாப்பிள்ளை.

அவருக்குத் தான் மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. இருந்து இருந்து ஆறு மாதங்கள் கழித்து, ஒரு நாலு நாள் தங்குவதற்கென்று அவர் தம் மகள் வீட்டுக்கு வந்திருந்தபோது அந்தப் புடைவைச் சண்டை வந்திருக்கவேண்டாம்.

அதை நினைத்துக் கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான் தவறுதலாக மகளிரும் சிறுவரும் வண்டியில் ஏறிவிடும்படி ஆகிவிட்டது.

பேருந்தில் இருந்த மகளிரின் புடைவைகளை அவர் பார்த்தார். எல்லாமே அழகாக இருப்பது போலத்தான் தெரிந்தது அவருக்கு. புடைவைகள் விஷயத்தில் பெண்கள் சமரசமே செய்துகொள்வதில்லை என்று தோன்றியது. பஸ்ஸில் மொத்தம் நாற்பத்தைந்து பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரிடமும் குறைந்த பட்சம் இருபது புடைவைகளாவது இருக்கும். அப்படிப் பார்த்தால் இந்தப் பேருந்துக்குள் இருப்பவர்களிடம் மட்டுமே சுமார் தொள்ளாயிரம் புடைவைகள் இருப்பதாக ஆகும். நூறு பேருந்துகள். ஆயிரம் பெண்கள். இருபதாயிரம் புடைவைகள். மாநிலமெங்கும் உள்ள பெண்களிடம் மொத்தமாகக் கணக்கெடுத்தால் குறைந்தபட்சம் சில கோடிப் புடைவைகளாவது தேறும். எத்தனை புடைவைகளை சந்தோஷமாக வாங்கியிருப்பார்கள்? எத்தனை புடைவைகள் சண்டைபோட்டு வாங்கப்பட்டிருக்கும்?

சட்டென்று தலையைச் சிலுப்பிக்கொண்டார். இதென்ன, மகளிர் பேருந்தில் ஏறினால் சிந்தனை கூடவா புடைவையைக் குறித்துத் திரும்பிவிடும்?

பேருந்து புறப்படுகிற வழியாகத்தெரியவில்லை. அவருக்கு அந்த இருக்கையில் உட்கார்ந்திருக்கவே சங்கடமாக இருந்தது. அங்கிருந்த அத்தனை பெண்களின் பார்வையும் தன்மீதே இருப்பதாக நினைத்தார். டிரைவர் கூடத் தனக்கு முன் இருந்த கண்ணாடியில் தன்னையேதான் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். வயசு ஒரு லைசன்ஸ். கிழவன் ஜாலியாக லேடிஸ் ஸ்பெஷலில் ஏறி அனுபவித்துக்கொண்டே வருகிறான் என்று அவன் நினைத்துவிட்டால்?

கடவுளே, என்னத்துக்காக இன்று இப்படியொரு கஷ்டத்தை அளித்தாய்? ஆனால் இது கஷ்டமா என்றும் அவருக்குத் தோன்றியது. நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? இந்தப் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் இப்படி சுகமாக உட்கார்ந்து பயணம் செய்யக்கிடைக்கிற வாய்ப்பு!

சிந்தனையை மாற்றிக்கொள்ள விரும்பி, பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவர் பேச்சுக்கொடுத்தார். “என்னம்மா படிக்கிறே?”

“செகண்ட் இயர் பிகாம் சார்” என்று அந்தப் பெண் சொன்னது. சொல்லிவிட்டு ஜன்னலைப் பார்த்துத் திரும்பிக்கொண்டது. உடனே அவருக்கு மீண்டும் கஷ்டமாகிப்போய்விட்டது. ஒரு அனுதாபத்தில் உட்காரச் சொன்னாலும் மகளிர் பேருந்தில் – கிழவனே ஆனாலும் – ஒரு ஆண் ஏறி அமர்வது பெண்களுக்குச் சங்கடம் தான். தன்பொருட்டு அவர்கள் தினசரி நிகழ்த்தும் உரையாடல்களைத் தவிர்த்திருக்கலாம். கிண்டல்கள், கேலிகள் யாவற்றையும் தாற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்ளப் பெண்களுக்கும் விஷயம் உண்டு. ஆண்களைக் குறித்த கமெண்ட்கள், சங்கேதச் சொற்கள், சிரித்து மகிழச் சில்லறை ஜோக்குகள். பார்த்த படங்கள். கவர்ந்த ஹீரோக்கள். வீட்டில், கல்லூரியில் நடந்த சம்பவங்கள்.

அனுதாபத்தில் தன்னை ஏற்று அங்கீகரித்தாலும் பின்னால் மனத்துக்குள் அவசியம் திட்டித்தீர்ப்பார்கள் என்று அவருக்குத் தோன்றியது. சனியன் பிடித்த டிராஃபிக் ஜாம். வண்டி புறப்பட்டு சிக்னலைக் கடந்துவிட்டால் நூறடி தூரத்தில் அடுத்த ஸ்டாப்பிங் வந்துவிடும். ஓசைப்படாமல் இறங்கி நடந்தே கூட வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். அல்லது இரண்டு மணிநேரம் காத்திருந்து, பேருந்து கூட்டமில்லாமல் வரத்தொடங்கியதும் ஏறிப் போகலாம். உடனே போய் ஆகவேண்டிய காரியம் ஏதுமில்லை. மகன் அலுவலகத்துக்குப் போயிருப்பான். மருமகள் தொலைக்காட்சித் தொடர் எதையாவது பார்த்துக்கொண்டிருப்பாள். உள்ளே நுழைந்ததும் வாங்க என்று சொல்லிவிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். மதியம் டிபனுக்கு என்ன செய்யலாம் என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு அதே பதினாறாண்டுகால அரிசி உப்புமாவைக் கிண்டிக் கொண்டுவந்து வைப்பாள்.

வாழ்க்கையில் சிறு விஷயங்கள் முதல் மிகப்பெரிய விஷயங்கள் வரை எல்லாமே நிர்ணயிக்கப்பட்டுவிட்டவையாகவே இருக்கின்றன. அரிசி உப்புமா முதல் ஆல் இந்தியா ரேடியோவின் மாநிலச் செய்திகள் வரை. ஒரே விதமான அரிசி உப்புமா. ஒரே விதமான மாநிலச் செய்திகள். தலைவர்களின் அறிக்கைகள். முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள். போக்குவரத்து நெரிசல். புடைவைப் பிரச்னைகள்.

இருந்து இருந்து ஒரு மாறுதலை இறைவன் அளித்திருக்கிறான். மகளிர் பேருந்தில் சிறிது தூரப் பயணம். அந்த விநோத அனுபவத்தைக் கூடத் தன்னால் ரசித்து ஏற்க முடியவில்லை. மனக்குறுகுறுப்பும் விவரம் புரியாத குற்ற உணர்வும். நம்பத்தான் முடியவில்லை. வாழ்விலேயே முதல் முதலாக ஒரு மனிதாபிமானமுள்ள கண்டக்டரை அவர் சந்தித்திருக்கிறார். கிண்டல் செய்யாமல் அருகில் அமர இடமளித்த ஒரு கல்லூரி மாணவியைச் சந்தித்திருக்கிறார். பேருந்தில் இருந்த மற்ற அனைத்துப் பெண்களுமே கூட அவர் தவறுதலாக ஏறியதை ஒரு பொருட்டாகக் கருதாததாகவே பட்டது. சிக்னலுக்கு பஸ் நின்றபோது வெளியே சுற்றிலும் நின்ற பேருந்துகளில் தொத்திக்கொண்டு பயணம் செய்த எத்தனையோ வாலிபர்களுள் ஒருத்தருக்குக் கூடவா தன்னைப் பார்த்துக் கிண்டல் செய்யவும் கேலி பேசவும் தோன்றவில்லை?

ஆச்சர்யமாகத்தான் இருந்தது அவருக்கு. இதுநாள் வரை தான் எந்த மதிப்பீடுகளில் வாழ்ந்திருந்தோம்? இளைய தலைமுறை குறித்த குறிப்பிடும்படியான நல்ல எண்ணங்கள் ஏதும் அவருக்கு இல்லை. எல்லாரும் வயதை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எப்போதும் சொல்லுவது அவருக்கு வழக்கம். பேரன்கள், பேத்திகள், மருமகள், மகன், மகள், மாப்பிள்ளை. அத்தனைபேர் மீதும் அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. விமர்சனம் இல்லாமல் ஏற்கும்படியாக ஏன் யாருமே நடந்துகொள்வதில்லை?

இது தனிநபரின் கோளாறில்லை. தலைமுறையின் கோளாறு என்று அவருக்குத் தோன்றும். இளைய தலைமுறையின் கோளாறாகவும் இருக்கலாம். தன் தலைமுறையின் கோளாறாகவும் கூட அது இருக்கலாம். எப்படியோ இயல்பாகப் பொருந்தாமல், சமரசங்களின் அடிப்படையில் தான் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்று இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு?

மரணம் குறித்த பயம் ஏதும் அவருக்குக் கிடையாது. தயாராகத்தான் இருந்தார். என்ன பெரிய பயம்? உறங்குவது போலும் சாக்காடு. வள்ளுவர் சரியாகத் தான் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் இறந்துபார்த்துச் சொன்னதில்லை. அதுவும் கூட யூகம் தான். ஆனால் சரியாக இருக்கும்போலத்தான் இருந்தது. தீவிரமாக வாழ்வதும் இறந்துபோவதும் ஒரு பிரச்னை இல்லை. வாழ்ந்து முடித்து, இறப்புக்குக் காத்திருக்கும் தினங்கள் தான் பாரமாக இருக்கின்றன. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல. எப்போதும் கூட்டமாகவே வந்துதொலைக்கிற பஸ். பரவசமானதொரு மாநகரப்பேருந்துப் பயணம் இந்த ஜென்மத்தில் தனக்கு சாத்தியமில்லை என்று அவர் தீர்மானமே செய்திருந்தார். முப்பத்தெட்டு ஆண்டுகாலம் அவர் அலுவலகத்துக்குப் போய்வந்ததும் நெரிசல்களுக்கு இடையில் தான். ஓய்வு பெற்றபோது மற்ற எல்லாவற்றைக்காட்டிலும் அந்த ஒரு விடுதலை தான் அவருக்குப் பெரிதாகப் பட்டது. இனி நெரிசலில் நின்று பயணம் செய்யவேண்டாம்.

சிக்னல் கிடைத்து பேருந்து புறப்பட்டுவிட்டது. அவருக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னும் சில விநாடிகளில் பேருந்து நிறுத்தம் வந்துவிடும். உட்கார இடம் கொடுத்த கல்லூரிப்பெண்ணுக்கும் கண்டக்டருக்கும் நன்றி சொல்லிவிட்டு இறங்கிவிடலாம். இறங்கும்போது யாரும் கிண்டல் செய்யாமல் இருந்தால் மனம் மிகவும் சமாதானமாகும். எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் மக்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. எல்லா நிறுத்தங்களில் மட்டுமல்ல. எல்லாத் தருணங்களிலும் கூட. இன்றைக்கு என்னவோ தன் அதிர்ஷ்டம் எதிர்பாராத விதமாக எல்லாம் நடக்கிறது. இதே கல்லூரிப்பெண் இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்னை முறைக்கமாட்டாள் என்பது நிச்சயமில்லை. இதே கண்டக்டர் இன்னொரு சந்தர்ப்பத்தில் சாவுகிராக்கி என்று சொல்லமாட்டான் என்று நிச்சயமில்லை. இதே பேருந்து நிறுத்தத்தில் தான் மீண்டும் தவறுதலாக மகளிர் பேருந்தில் ஏறும்போது விடலைகள் நாராசமாகக் கிண்டல் செய்யமாட்டார்கள் என்பதும் நிச்சயமில்லை.

கடவுளுக்கு நன்றி. ரசித்து அனுபவிக்க முடியாவிட்டாலும் மாறுபட்ட ஒரு அனுபவம்.

நிறுத்தம் வந்ததும் கண்டக்டர் இளைஞன் இயல்பாக அவரைப் பார்த்தான். அவர் எழுந்துகொண்டு கை கூப்பினார்.

“ரொம்ப நன்றிப்பா. தப்பா நினைச்சுக்காதே. கண்ணு சரியா….”

“பரவால்ல சார். இறங்குங்க” என்றான் அவன்.

அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இறங்கும்போது சரியாக செக்கிங் ஆபீசர்கள் வண்டியருகே வந்து நின்றுகொண்டார்கள். யாரும் அவரிடம் ஏதும் கேட்கும் முன்னதாக அவரே சொல்லிவிட்டார்.

“சாரி சார். கண்ணு சரியாத் தெரியலை. போன ஸ்டாப்பிங்குலே தெரியாம ஏறிட்டேன்.. ஆனா டிக்கெட் வாங்கிட்டேன்.. இதோ பாருங்க….”

அவர் மகளிர் பேருந்தில் ஏறியது குறித்து டிக்கெட் பரிசோதகர் ஏதும் சொல்லவில்லை. மாறாக டிக்கெட்டை வாங்கிச் சரிபார்த்துவிட்டு, ‘பார்த்து ஓரமாப் போங்க பெரியவரே’ என்று கையைப் பிடித்து பிளாட்பாரத்தில் ஏற்றிவிட்டார்கள்.

அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. மகளிரும் சிறுவரும். தவறிப்போய் ஒரு வயோதிகன் ஏறுவதில் யாதொரு பிழையும் இல்லை என்று சொல்லிவைத்தமாதிரி எல்லாருமேவா நினைப்பார்கள்? தலைமுறை இடைவெளியெல்லாம் இந்தமாதிரி விஷயங்களூடன் சம்பந்தம் இல்லாதவை தானா? அல்லது உலகம் பெருந்தன்மை பழகத்தொடங்கிவிட்டதா? தாம்தான் இல்லாதவற்றையெல்லாம் நினைத்துக் குறுகுறுப்படைந்து கொண்டிருக்கிறோமா? இந்தக் காலத்து இளைஞர்களும் யுவதிகளும் நிஜமாகவே விடலைத்தனத்தை விட்டொழித்துவிட்டார்களா என்ன? மக்கள் சேவகர்கள் அனைவரும் கனிவு பழகிவிட்டார்களா? புடைவை விஷயம் தவிர மற்றவற்றில் பெண்களும் கூட மாறிவிட்டதுபோலத்தான் தெரிகிறது…

அந்தப் பயணம் மறக்கமுடியாத ஒரு அனுபவமாகத் தானிருக்கிறவரை தன்னோடு தங்கியிருக்கும் என்றெல்லாம் அவருக்குத் தோன்றியது. மனத்தளவில் மிக மென்மையாக, இலேசாக உணர்ந்தார். கொஞ்சம் பரவசமாகவும். எப்போதாவது பேரனைக் கூட்டி உட்காரவைத்து இதைச் சொல்லவேண்டும். ஐயய்யே, லேடிஸ் ஸ்பெஷல்லயா வந்தே? என்று அவன் கேலிச்சிரிப்பு சிரிப்பான். கல்மிஷமில்லாத அவனது சிரிப்பு மட்டும் தான் அவருக்கு நெருக்கமான ஒரே விஷயமாக இதுகாறும் இருந்துவந்திருக்கிறது. அந்த ஒரே ஆறுதல் தரும் தெம்பில்தான் அவர் ஆண்டாண்டுகாலமாக மருமகளின் அரிசி உப்புமாவைக்கூடச் சகித்துக்கொண்டிருக்கிறார்.

சாலை இப்போதும் பரபரப்பாகவே இருந்தது. இன்னும் அரை கிலோமீட்டர் நடந்தால் வீடு வந்துவிடும். பஸ்ஸுக்காகக் காத்திருப்பதைக்காட்டிலும் இப்படி எதையாவது நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்தே போய்விடலாம் என்று அவர் நினைத்தார். பத்திரமாக பிளாட்பாரத்தின்மீது ஏற்றிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு மனத்துக்குள் நன்றி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

முக்கால் மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடமுடிந்தது. வாங்க என்று மருமகள் சொன்னாள். தொலைக்காட்சித் தொடர் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவரை உட்காரச் சொல்லிவிட்டு ஒருதம்ளர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். சம்பிரதாயமாக நாலு வார்த்தைகள் அவரது மகளைக் குறித்தும் மருமகனைக்குறித்தும் விசாரித்துவிட்டு, ‘மத்தியானத்துக்கு என்ன செய்யட்டும்?’ என்று கேட்டாள்.

அவர் தமக்குள் சிரித்துக்கொண்டு, “என்னமோ தெரியலை. வாய் நமநமன்னு இருக்கு. எதாவது கரகரன்னு டிபன் பண்ணேன்” என்று சொன்னார். அரிசி உப்புமாவின் அடிப்பகுதியைக் காந்தவிட்டால் அதுகூட கரகரவென்று தான் இருக்கும்.. நடந்த களைப்பில் தூங்கிப்போனார்.

மத்தியானம் அவர் எழுந்தபோது மருமகள் டிபன் ரெடி என்று அவரை அழைத்தாள். அவரால் நம்ப முடியவில்லை. அரிசி உப்புமாவுக்கு பதில் சுடச்சுட வெங்காய பக்கோடா.
[2004] சாட்சிக்காரன் குறிப்புகள்

கனவே போலத்தான் இருந்தது. ஒருமுறை கண் இமைத்துத் திறக்கும் நேரத்தில் அவளை நான் கண்டுகொண்டேன். ஞாபகத்தில் பிசகேதும் இல்லை.  ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா – பிராக்கெட்டில் சுத்த சைவம் – முதலாளி தையூர் வரதராஜு முதலியாரின் இரண்டாவது பெண் பொற்கொடிதான் அவள். பதினெட்டு வயதில் பார்த்தது. பத்து வருஷத்துக்கு உண்டான தோற்றம் சார்ந்த மாற்றங்கள் இருப்பினும் அடிப்படை வார்ப்பு மாறிவிடுமா என்ன? தவிரவும் ப்ளஸ்டூவில் அவளுக்கு நான் ஆங்கிலப்பாடம் எடுத்திருக்கிறேன். பிஹோல்ட் ஹர் சிங்கிள் இன் தி ஃபீல்ட், யான் ஸாலிடரி ஐலண்ட் லாஸ் என்று தமிழில் எழுதிவைத்துப் படித்துக்கொண்டிருந்தவள் காதைப் பிடித்துத் திருகி, கண்ணில் நீர் வரவழைத்திருக்கிறேன். அப்போதே அவள் ஜீவராசன்பேட்டை இஸ்மாயில்கனியைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்திருந்தால் ஒருவேளை காதைத் திருகாமல் இருந்திருக்கலாம். அன்றைக்கு அதிகாலை நாலரை மணிக்கு, பதைக்கப் பதைக்க முருகைய நாடார் கடைக்கு எதிரே கோவளம் திருப்பத்தில் அவனுடனும் பெரியதொரு பெட்டியுடனும் அவள் பேருந்தில் ஏறுவதைப் பார்க்க நேர்ந்தபோது கைதூக்கி ஆசீர்வதித்திருக்கலாம். அல்லது கூப்பிட்டு விசாரித்து ஏதாவது நல்லதாக நாலு வார்த்தை பேசியிருக்கலாம்.

முந்தைய வருடம் வரை என்னிடம் படித்துக்கொண்டிருந்த மாணவி. இருளோடு இருளாக யாரோ ஒரு வாலிபனுடன் பேருந்து ஏறி எங்கோ போகிறாள். என்னைத் தவிர அந்தக் காட்சியை நேரில் பார்த்த சாட்சி என்று ஊரில் யாருமில்லை. திருடர்களும் காதலர்களும் பெரும்பாலும் அதிகாலை நேரங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆறு மணிக்கொரு முகூர்த்தம் என்று அவசரமாகச் செங்கல்பட்டுக்குப் புறப்படும் ஆங்கில ஆசிரியர்களும்.

இந்த நிலையில் நான் செய்யக் கூடியது என்ன?

இஸ்மாயில்கனியை எனக்குத் தெரியும். முந்தையவாரம் கூட இரண்டு மீட்டர் காடாத் துணிவாங்கி, அவன் கடையில்தான் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அருமையான டெய்லர். அவனைப்போல் நேர்த்தியாக அண்டர்வேர் தைத்துக் கொடுக்க பிராந்தியத்தில் வேறு யாரும் கிடையாது. சட்டை, ஜிப்பா, சோளி வகையறாக்கள் எதுவானாலும் நம்பி, கொடுக்கலாம். பேண்ட் தைத்தால் மட்டும் கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும். அந்த விஷயத்தில் மட்டும் எழுபதுகளில் வெளியான தமிழ்த்திரைப்படங்களின் ஆடை அலங்கார பாதிப்பிலிருந்து அவன் இன்னும் விடுபடாமலே இருந்தான். பிரச்னை இல்லை. சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆல்டர் செய்து தருவான். இளைஞன். அத்தனை சிறிய வயதில் சுயதொழில் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தவன்.

என்ன தவறு? அவனும் காதலிக்கலாம். பொற்கொடிக்கும்கூட காதல் வருகிற வயதுதானே? ஒரு பிழையும் இல்லை. ஆனால் இந்த விஷயத்தை நான் பார்ப்பதற்கும் ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகாவின் முதலாளி வரதராஜு முதலியார் பார்ப்பதற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் அவசியம் இருக்கும்.

முதலியார் எப்போதோ ஒருமுறை விநாயகர் சதுர்த்தி சமயம் பம்பாய்க்குப் போய்வந்திருக்கிறார். அந்தக் கோலாகலமும் விநாயகரிடம் மராத்தியர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்தியையும் பார்த்தவருக்கு உடனடியாக ஏதோ தோன்றியிருக்க வேண்டும். இரண்டு காரியங்கள் செய்தார். புதுப்பாக்கம் சாலையில் ராஜலட்சுமி திரையரங்கை ஒட்டி, அவருக்கு இருந்த இரண்டேகால் கிரவுண்டு நிலத்தில் ஒரு அழகான பிள்ளையார் கோயில் கட்டினார். ஸ்ரீ அருகம்புல் விநாயகர் ஆலயம். சோழிங்க நல்லூரில் ஆர்டர் கொடுத்து விநாயகர் விக்கிரகம் பளபளப்பாக வந்துவிட்டது. திருப்போரூர் கோயிலிலிருந்து அர்ச்சகர்களும் பிள்ளையார்பட்டியிலிருந்து தலைமை அர்ச்சகரும் வந்திருந்தார்கள். கோலாகலமான விக்கிரகப் பிரதிஷ்டை.

அன்றைய தினமே ஊரின் முதல் ஓட்டலுக்கும் அவர் அஸ்திவாரம் இட்டார். ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா – சுத்தசைவம்.

முதலியார், பெரிய உப்பள முதலாளி. இரண்டு லாரிகள் அவர் பெயரில் ஓடுகின்றன. கோவளம், கேளம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் அவரைக் கலந்துகொள்ளாமல் எந்தப் பெரிய காரியத்திலும் இறங்கமாட்டார்கள். மசான கொள்ளை, ஆடித் திருவிழா என்று வருஷத்துக்கு நாலைந்துமுறை 192 பக்க நோட்டில் சுபம் – லாபம் என்று எழுதி எடுத்துக்கொண்டு புறப்படும் நன்கொடைப் படைகள் முதலில் வரதராஜு முதலியார் வீட்டுக்குத் தான் போகும். எவ்ளய்யா போடணும் என்று கேட்டுக்கொண்டே ரூ. ஐந்நூத்தி ஒன்று என்று எழுதியபடிக்கு ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுப்பார்.

நாலுபேர் பாராட்டவென்று செய்தாரோ, நல்ல காரியம் என்று செய்தாரோ தெரியாது. ஊரில் அவர் முதல் கல் எடுத்து வைத்து நிறைய காரியங்கள் நடந்திருக்கின்றன. நான் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்துக்குக் கூட ஒரு மேல்நிலை நீர்த்தொட்டி கட்டித்தர முதல் தொகையாக ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தவர் முதலியார்தான். பிற்பாடு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டடம், சத்துணவுக்கூட ஓலைக் கொட்டகை மாற்றல், விளையாட்டு மைதானத்தில் குடிநீர்க்குழாய் அமைப்பது என்று எங்கள் தலைமை ஆசிரியர் தேடித்தேடி ஒவ்வொரு பணியாக எடுத்துக்கொண்டு அவரிடம் தான் முதலில் போவார்.

ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கக் கூப்பிட்டு ஒரு பொன்னாடை. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி. பிள்ளைகளுக்கு நீர் கொடுத்த வரதராஜு முதலியார் என்று ஓரிரண்டு புகழாரங்கள்.

பணக்காரர்களுக்குப் பணம் தவிரவும் சிலது வேண்டித்தான் இருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் முதலியார் எங்கள் பள்ளிக்கூடத்தைப் பெரிய அளவில் விஸ்தரிக்க உதவிகரமாக இருந்தார். அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து அதுநாள் வரை மேல்நிலைப் படிப்புக்காக திருப்போரூருக்கும் சோழிங்கநல்லூருக்கும் போய்க்கொண்டிருந்த பிள்ளைகள் மெல்லமெல்ல எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வரத் தொடங்கினார்கள். முதலியார் தமது மூன்று மகள்களையும் கூட அங்கேயேதான் விட்டிருந்தார். மூத்தவள் பதினோராம் வகுப்பில் ஃபெயில் ஆனாள். அதனாலென்ன? கருங்குழியில் ஒரு வெற்றிலைத் தோட்டமும் திருப்போரூரில் டூரிங் டாக்கீஸும் வைத்திருந்த கோதண்டராம முதலியாரின் மூத்த மகனைப் பிடித்துத் திருமணம் செய்துவைத்துவிட்டார். எங்கள் பள்ளிக்கூடம் சார்பில் நானும் தலைமை ஆசிரியரும் அந்தத் திருமணத்துக்குப் போய்வந்தோம். திருப்போரூரில்தான் நடந்தது. வெற்றிலை பாக்கு கவரில் வேட்டி, துண்டு வைத்துக்கொடுத்த முதல் நபர், அந்தப் பிராந்தியத்திலேயே அவர்தான்.

அந்தத் திருமணத்தில் பொற்கொடி பட்டுப் பாவாடை தாவணியில் துள்ளித் துள்ளி ஓடிக்கொண்டிருந்தாள். என்னையும் தலைமை ஆசிரியரையும் மிக மரியாதையாகக் குளிர்பானம் கொடுத்து உபசரித்தாள். ‘அடுத்து உனக்கு எப்பம்மா?’ என்று தலைமை ஆசிரியர் அசட்டு ஜோக் அடித்தபோது, ‘நான் படிக்கப் போறேன் சார்’ என்று பொற்கொடி சொன்னாள். முதலியாருக்கு அந்த பதிலில் ஏகப் பெருமை. தன் இரண்டாவது மகளின்மீது அவர் பெரிய நம்பிக்கைகள் வைத்திருந்தார். அவள் எம்.பி.ஏ. படிக்க வேண்டும். உப்பளத் தொழிலை நவீனமாக்க வேண்டும். உள்ளூரில் ஒரு அயோடைஸ்டு தூள் உப்பு ஃபாக்டரி கட்டவேண்டும். அதன் நிர்வாகப் பணிகள் அத்தனையையும் அவளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். நம்ம பள்ளிக்கூடத்தில் படித்து வரும் பையன்களுக்கு அங்கே வேலைவாய்ப்பு அவசியம் இருக்கும்.

“அடேயப்பா” என்றார் தலைமை ஆசிரியர்.

பொற்கொடிக்கு அப்போது பதினைந்து வயதுதான். பத்தாம் வகுப்பில்தான் இருந்தாள். ஜீவராசன்பேட்டை டெய்லர் இஸ்மாயில் கனியை அப்போது அவள் சந்தித்திருக்க முடியாது.

வரதராஜு முதலியார் போன்ற பணக்காரர் மற்றும் பக்தி சீலருக்கு மூன்று பெண்குழந்தைகள் பிறந்தது பற்றியெல்லாம் வருத்தம் இருக்க வாய்ப்பில்லை. அந்த வருடம் தான் அவர் தையூரில் ஒரு பெரிய மாந்தோப்பை விலைக்கு வாங்கி, ‘பொற்கொடி ஃப்ரூட்ஸ்’ என்று போர்டு மாட்டி, மாம்பழ ஏற்றுமதி சாத்தியங்கள் பற்றியும் யோசிக்கத் தொடங்கியிருந்தார்.

0

நான் எதிர்ப்பக்கம் செங்கல்பட்டு பேருந்துக்காகக் காத்திருந்தபோதுதான்  இந்தப்பக்கம் பொற்கொடியும் இஸ்மாயில்கனியும் சென்னை போகும் மாமல்லபுரத்து வண்டியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். ஒரு ஐந்துநிமிடங்கள் நான் முன்னதாகப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்திருந்தால் எதிரெதிரே அவசியம் சந்தித்திருப்போம். அவளாக ஏதும் பேசாவிட்டாலும் நானே ஓரிரண்டு வார்த்தைகள் பேசியிருப்பேன். என்ன ஏது என்று விசாரித்திருக்கலாம். அதற்கு அப்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர்கள் ஏறிய பேருந்து கிளம்பிவிட்டது. பின்புறக் கண்ணாடியை ஒட்டிய நீள இருக்கையில்தான் பொற்கொடி அமர்ந்திருந்தாள். பேருந்து, கோவிந்தராஜ் டாக்டர் க்ளினிக்கைத் தாண்டிய சமயம் அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்த்ததுபோலிருந்தது.

ஒருகணம் எனக்கு மிகவும் பரபரப்பாகியிருந்தது. இப்போது நான் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விதான். விடையே தோன்றாத கேள்வி. உடனே தையூருக்குப் போய் முதலியாரிடம் விஷயத்தைச் சொல்லலாம். தொலைபேசியில் அழைத்தும் சொல்லலாம். ஆனால் நினைவில் வைத்துக்கொள்கிற மாதிரி அடிக்கடி பேசுகிற நபர் இல்லை அவர். அவரது தொலைபேசி எண் வீட்டில் டைரியில் இருக்கிறது. விடிகிற நேரத்தில் அப்படியொரு செய்தி நிச்சயம் முதலியாருக்குக் கசப்பானதாகவே இருக்கும். ஒருவேளை பொற்கொடியின் காதல் விவகாரம் முன்னதாகவே அவருக்குத் தெரிந்திருக்குமானால், ஓரளவு சமாளிப்பார். செய்தியே புதிது என்றால் தாங்குவது சிரமமே. அதுவும் ஒரு டெய்லர் பையன். இஸ்மாயில் கனி.

நான் ஏறவேண்டிய காண்டீபன் பஸ் சர்வீஸ் பேருந்து வந்துவிட்டது. அனிச்சையாக ஏறி அமர்ந்துகொண்டாலும் மனத்துக்குள் ஒரு பதற்றம் இருந்தது. குறுகுறுவென்று உள்ளுக்குள் கொரித்துத் தின்னும் புழு போல. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை தைரியம் வந்துவிடுகிறது! வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்தான். கஷ்டம் தான். காதல் முக்கியம்தான். அதனாலென்ன? பதினெட்டு வருட உறவுகளை சட்டென்று இடதுகையால் ஒதுக்கி வைத்துவிட்டுக் கிளம்பிவிட முடியுமா? அல்லது, எப்படியும் கொஞ்சநாளில் சூடு தணிந்து எல்லாம், எல்லாமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகிவிடும் என்கிற நம்பிக்கை காரணமா?

எந்தப் பெற்றோரும் தம் பெண்ணை முற்றிலுமாக ஒதுக்கிவிடமாட்டார்கள். எந்தப் பெண்ணும் மனத்தின் அடியாழத்தில் பெற்றோருக்கென்று கட்டமிட்டு வைத்திருக்கும் இடத்தில் இன்னொரு உறவை உட்காரவைத்துவிட மாட்டாள். ஆனால், உறவுகளல்ல; உடனடித் தேவைகள் முக்கியத்துவம் பெரும் தருணம் அது.

உடனடித் தேவைகளா! சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். வெறும் சொற்கள். அலகிட்டுப் பார்க்கும்போது எத்தனை பரிமாணங்கள் எய்திவிடுகின்றன. பொற்கொடி எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கவேண்டும் என்று என் மானசீகத்தில் விநாயகரை வேண்டிக்கொண்டேன். ஸ்ரீ அருகம்புல் விநாயகர்.

அவள் தந்தையை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. முதலியார் அதை எப்படி எதிர்கொள்வார் என்று என்னால் யோசித்தோ அல்லது யூகித்தோ அறியமுடியவில்லை. பெரும் பணக்காரர். ஊருக்கு உபகாரி. முக்கியஸ்தர். நடந்துவரும் தோரணையில் தம் இயல்பையும் இருப்பையும் பதிவு செய்துவிடுகிறவர். ஊருக்குள் ஓடிய முதல் கார், அவர் வாங்கியது. வெள்ளை நிற அம்பாசிடர். பலநாட்கள் பள்ளியில் ஆங்கிலம் இரண்டாம் பாடத்துக்கான ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும். மாலை பிள்ளைகள் வீடு திரும்ப ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். அப்போதெல்லாம் பொற்கொடியை அழைத்துப் போக அந்த வெள்ளை அம்பாசிடர் கார் பள்ளி காம்பவுண்டு சுவருக்கு வெளியே காத்திருக்கும். கஷ்டப்பட்டுப் படித்துக்கொண்டிருக்கிற பொற்கொடி. எப்படியும் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி ஆகிவிடப்போகிற பொற்கொடி. அயோடைஸ்டு உப்பு ஃபாக்டரி ஆரம்பித்து, ஊரில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப்போகிற பொற்கொடி.
அவள்தான் ஜீவராசன்பேட்டை டெய்லர் இஸ்மாயில் கனியுடன் ஓடிப்போனாள்.

0

செங்கல்பட்டு கல்யாணத்துக்குப் போய்விட்டு நான் ஊர் திரும்பியபோது மணி காலை ஒன்பது முப்பது. நான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போதே விஷயத்தின் சூடு ஊரெங்கும் பரவியிருந்ததைக் கண்டுகொண்டேன். முருகைய நாடார் மளிகைக் கடைக்கு எதிரே கூட்டம் கூட்டமாக ஆட்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். முதலியாரின் உப்பு கொடோன் ஊழியர்கள் பலர் – எதற்கென்று தெரியாமல் – கையில் தடியுடன் சுற்றிச் சுற்றி வரக்கண்டேன்.

சரசரவென்று நான்கைந்து கார்கள் குறுக்கே போயின. ஊரில் கார் வைத்திருப்போர் மொத்தமே இரண்டு பேர்தான். அவர்களுள் ஒருவர் முதலியார். ஆனால் திடீரென்று எங்கிருந்து அத்தனை கார்கள் வந்தன என்று தெரியவில்லை. ஒவ்வொரு காரிலும் ஐந்தாறுபேர் அடைந்திருந்தார்கள். எல்லோரும் இஸ்மாயில் கனியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா? உள்ளூரில் சுற்றிச்சுற்றி வந்து என்ன பயன்?

எனக்கு உடனே பல திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வந்தன. காதலியுடன் தப்பியோடும் கதாநாயகன். பிடிபட்டு, எங்காவது குடோனில் அடைக்கப்பட்டு குண்டர்களால் தாக்கப்படும் காட்சிகள். உதட்டோரம் ரத்தம் ஒழுக அவன் சரிந்து விழுவது நிச்சயம். சம்பந்தமில்லாமல் இன்னொரு அறையில் அவன் காதலி உடனே பாட ஆரம்பிப்பாள். உள்ளத்தின் சோகத்தையெல்லாம் பிழிந்து, அவள் பாடி முடிப்பதற்குள் கதாநாயகன் எப்படியும் தன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டுவிடுவான்.

சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் மேலதிக வித்தியாசங்கள் இல்லை போலிருக்கிறது. இந்நேரம் எப்படியும் இஸ்மாயில் கனியும் பொற்கொடியும் சென்னையில் ஏதாவது ஒரு பதிவாளர் அலுவலகத்தில் வேலையை முடித்திருப்பார்கள் என்று தோன்றியது. முன்னேற்பாடுகளுடன் தான் அவர்கள் கிளம்பிப்போயிருக்க வேண்டுமென்று நினைத்தேன். எனக்கு உடனே முதலியாரைப் பார்த்துப் பேசவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதிகாலை அவர்கள் கிளம்பிப் போவதை நான் பார்த்ததாகச் சொல்லுவதற்கில்லை. விநாடி நேரத்தில், அவர்கள் ஏறிய பேருந்து கிளம்பிவிட்டது என்கிற உண்மையை அவரால் உணர இயலாமல் போகலாம். மேலும் இச்சம்பவத்தை ஓர் அவமானமாக அவர் கருதலாம். அந்தஸ்து, சாதி, இன்னபிற காரணங்கள். விசாரிப்பதோ, தகவல் சொல்லுவதோ வலியை அதிகரிப்பதாகவே முடியும். அவர்கள் போனதை நான் பார்த்த விஷயம் என்னுடனேயே இருந்துவிடுவது நல்லது என்று அப்போது தோன்றியது.

அந்த வாரத்தில் ஒருநாள் மாலை வழக்கம்போல் அருகம்புல் விநாயகர் கோயிலுக்குப் போய்விட்டு வந்த என் மனைவி, சந்நிதியின் எதிரே மண்டபத்தில், முதலியார் பிரமை கொண்டவர்போல் மௌனமாக வானம் பார்த்து அமர்ந்துகொண்டிருந்ததாகத் தெரிவித்தாள். பாவமாகத்தான் இருந்தது. ஒரு காதல் அல்லது கலப்புத் திருமணத்தைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய தந்தைதான் நான் என்பதாக – முன்னதாகத் தெரியப்படுத்திவிட வேண்டிய கடமை ஒரு தந்தைக்கு அவசியம் உண்டு போலிருக்கிறது. ஒருவேளை அப்படியொரு மனப்பக்குவம் இல்லாதிருக்குமானால், அதற்கான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். பலபேரைக் கதறியழச் செய்துவிட்டுத்தான் ஒரு காதல் வெற்றி பெற வேண்டும் என்கிற இயற்கையின் நியதி மீது கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால் ஆச்சர்யம், எனக்குப் பொற்கொடியின்மீது கோபம் வரவில்லை. நிச்சயமாக இல்லை. அது ஏனென்றுதான் தெரியவில்லை. இனி அவள் எம்.பி.ஏ. முடித்து அயோடைஸ்டு உப்பு ஃபாக்டரி தொடங்கமாட்டாளே என்கிற வருத்தம் மட்டும்தான்.

ஒரு வாரம், பத்து நாள்கள் வரை ஊரில் அந்தப் பேச்சு பிரதானமாக இருந்தது. இஸ்மாயில் கனி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் சென்னை போலீஸ் உதவியுடன் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள்.  ஒருநாள் காலை பொற்கொடி ஃப்ரூட்ஸ் வழியாக நான் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது தற்செயலாக வரதராஜு முதலியாரைச் சந்தித்தேன். குரலில் பழைய கம்பீரமோ, உற்சாகமோ இல்லாமல்தான் பேசினார்.

“இஷ்டப்பட்டவன கட்டிக்கிட்டு நல்லா இருக்கட்டும் சார். எனக்கு அதில்லை வருத்தம். அவன் யாரு, என்னான்னு கூடத் தெரியாது எனக்கு. சோளி தைக்கத் துணி எடுத்துட்டுப் போவ வீட்டாண்ட வருவானாம். நீங்களே சொல்லுங்க. ஊர்க்காரன் என்ன சொல்லுவான்? மொதலியாருக்குப் பொண்ண பெத்துக்கத் தெரிஞ்சிதே தவுர வளக்கத் தெரியலன்னு பேசமாட்டானுவ? ஊர்க்காரன் என்ன, எங்க சங்கத்துலயே முதுகுக்குப் பின்னால பேசறானுக சார். எம்மொதப் பொண்ணோட புருசன் போன் போட்டு விசாரிக்கிறான். அவனை நாலு பேரு கேக்கறானுகளாம். அவமானமா இருக்காம். என்னா பதில் சொல்லன்னு கேக்கறான். இதுக்குத் தங்கச்சின்னு ஒண்ணு இருக்குது. அதுக்காகத்தான் உசிரை வெச்சிக்கிட்டு இருக்க வேண்டியிருக்குது. இல்லாட்டி நானும் எம்பொண்டாட்டியும் என்னிக்கோ மருந்து குடிச்சிருப்போம்…”

“அடடே, எதுக்கு சார் வருத்தப்படறிங்க? விட்டு விலகற உறவா இதெல்லாம்? நேரம் அப்படி செய்ய வெச்சிருக்கு. எல்லாம் சரியாயிடும். இதெல்லாம் நடந்ததுங்கறதே மறந்துபோகற காலம் ஒண்ணும் கண்டிப்பா வரும். ஆனா ஒண்ணு. நீங்க உங்க மகளுக்கு, மனசு எரிய சாபம் எதுவும் குடுத்துடாதிங்க” என்று எனக்குத் தெரிந்த அளவில் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

எனக்கும் அப்போது ஒன்றும் பெரிய வயதில்லை. பதினெட்டு வயதுப் பெண்ணின் தந்தை ஒருவரின் மனம் இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் என்ன விதமாகத் துடிக்கும் என்று கற்பனைதான் செய்ய முடியுமே தவிர, வலியின் நிஜமுகம் தெரிய சாத்தியமில்லை.

ஓரிரண்டு மாதங்களில் அவர் அந்தப் பழத்தோட்டத்தைக் கூட யாரோ வெளியூர்க்காரர்களுக்கு விற்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பொற்கொடி ஃப்ரூட்ஸ் என்கிற தகர போர்டு மட்டும் மேலும் கொஞ்சநாளைக்கு அங்கே இருந்தது. பிறகு அதுவும் காணாமல் போய் வேறு பெயர் வைத்துவிட்டார்கள்.

முதலியாரை நினைத்தால் மிகவும் வருத்தமாக மட்டுமே இருந்தது.

அந்த வருட ஆடித்திருவிழாவுக்கு முதலியார் வழக்கம்போல் முதல் நன்கொடையாக ஐந்நூறு ரூபாய் அளித்தார். விநாயகர் சதுர்த்தி சமயம் ஒருவாரம் அருகம்புல் விநாயகர் ஆலயம் அமர்க்களப்படத்தான் செய்தது. பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் ஒரு பகுதியைப் பழுதுபார்க்க வேண்டி தலைமை ஆசிரியர் அணுகியபோது, தயங்காமல் மூவாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.

வேதனை இருந்தாலும் முதலியார் சமாளித்துக்கொண்டுவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் பலபேர் சொன்னதுபோல் பொற்கொடியும் இஸ்மாயில் கனியும் இருக்கிற இடம் தெரிந்துவிட்டதாகவெல்லாம் தெரியவில்லை. அவர்கள் சென்னையிலோ அல்லது வேறெங்காவதோ – சந்தோஷமாகவோ, கஷ்டப்பட்டுக்கொண்டோ வாழ்ந்துகொண்டிருப்பதற்குச் சாட்சியாக ஒரு சிறு தகவல் அல்லது வதந்தி கூட அந்த கிராமத்தை எட்டிப் பார்க்கவில்லை. முதலியார் முயற்சி செய்யாமல் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவர்கள் அப்படி எங்கே தான் போயிருப்பார்கள்?

0

பணி மாற்றம் வந்து நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் வேறு பல ஊர்களுக்குப் போகவேண்டியிருந்தது. தையூர் முதலியார், ஓடிப்போன அவரது இரண்டாவது பெண் எல்லோரும் என் நினைவிலிருந்து இயல்பாக உதிர்ந்துவிட்டிருந்தார்கள். வாழ்வில் எத்தனையோ விஷயங்களுக்கு எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு சமயத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். காலம் நகர்ந்து போகும்போது எல்லாமே சாதாரணமாகிவிடுகிறது. உண்மையில் அறிவையல்லாமல், உணர்ச்சியைத் தொட்டுப்பார்க்கும் எல்லாமே சாதாரணங்கள்தானா? காதல் உள்பட?

ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பொற்கொடியை நான் சென்னையில் வைத்துத்தான் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. சற்றும் எதிர்பாராவிதமாக அடையாறு மத்திய கைலாஷ் பிள்ளையார் சந்நிதி அருகே.

நான் அவளை அடையாளம் கண்டுகொண்டது போலவே அவளும் என்னைப் பார்த்தமாத்திரத்தில் தெரிந்துகொண்டுவிட்டாள். “வணக்கம் சார்” என்றாள் உடனே.

“நல்லா இருக்கியாம்மா?” என்றேன்.

கேட்டிருக்கவே வேண்டாம். அவளை நான் பிள்ளையார் கோயிலில் சந்தித்திருந்தேன். நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். திருமணமான முஸ்லிம் பெண்கள் அணியும் கருகமணித் தாலியும் அணிந்திருந்தாள். கையில் ஐந்து வயதில் ஒரு சிறுவனைப் பிடித்திருந்தாள். இடுப்பில் ஒரு பெண் குழந்தை இருந்தது. முகத்தில் நிம்மதியின் பரிபூரணமான சுவடுகள் இருந்தன. அவள் ஒரு குடும்பத்தலைவி. திருமதி இஸ்மாயில் கனி.

“பையன் பேர் அப்துல்லா. பொண்ணு பேர் லட்சுமி சார்” என்றாள்.

டெய்லராக இருந்தால் என்ன? இஸ்மாயில் கனி நல்லவன். தெரிந்துதான் பொற்கொடி அவனைக் காதலித்திருக்கிறாள். பிரச்னை, அவள் காதலித்ததில் இல்லை. சொல்லாமல் உடனோடி வந்துவிட்டதில்தான். ஆனால் பத்து வருட இடைவெளியில் பேசுவதற்கு மீண்டும் அந்தக் கதையைத் தானா தேர்ந்தெடுக்க வேண்டும்?

“இஸ்மாயில் என்ன பண்றாம்மா?” என்றேன்.

“அதே வேலைதான் சார். ஆனா கொஞ்சம் பெரிய அளவுல செய்யறார். இங்கதான் பக்கத்துல அடையாறு சிக்னல்கிட்ட கடை வெச்சிருக்கார். ஆறுபேர் வேலை பார்க்கறாங்க. ஒரு துணிக்கடை ஆரம்பிக்கிற வேலையிலேயும் மும்முரமா இருக்கார்” என்றாள்.

அடையாறு சிக்னல் அருகில் கடை. எனக்கு அந்தத் தகவல் போதுமானதாக இருந்தது. சந்தேகமில்லாமல் பொற்கொடி சௌக்கியமாகத்தான் இருக்கிறாள்.

என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தேன். அவள் புறப்பட்டுப் போனதை அந்த அதிகாலை வேளையில் நான் பார்த்தது பற்றி. அன்றைய தினம் கிராமமே அத்தகவலால் பற்றி எரிந்தது பற்றி. வரதராஜு முதலியார் அடைந்த பரிதவிப்புகள் பற்றி. பொற்கொடி ஃப்ரூட்ஸ் தோட்டத்தை அவர் விற்றுவிட்டது பற்றி. கிளம்பும்போதுதான் அதைக் கேட்டேன். “அப்புறம் உங்க அப்பாவை சமாதானப்படுத்தினிங்களாம்மா? தங்கைக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? அவ எங்க இருக்கா?”

“அவ ஸ்டேட்ஸ்ல இருக்கா சார். அவ வீட்டுக்காரர் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்”

நான் கவனமாக இருந்தேன். என் கேள்வியின் முதல் பகுதிக்கு அவள் பதில் சொல்லியிருக்கவில்லை. ஆகவே மீண்டும் அதையே கேட்டேன். “உங்க அப்பாவை சமாதானப்படுத்தினிங்களா?”

அவள் சிரித்தாள்.

“சமாதானப்படுத்த என்ன இருக்கு சார்? அவர்தானே ஊர்ல இருந்தா பிரச்னை வரும்னு எங்களை மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சார்? வாரம் ஒருநாள் அப்பாவும் அம்மாவும் வருவாங்க சார். காலைலேருந்து சாயங்காலம் வரைக்கும் பிள்ளைங்களோட விளையாடிக்கிட்டு இருப்பாங்க. கிளம்பிடுவாங்க. சந்தோஷமா இருக்கோம் சார்” என்றாள் பொற்கொடி.
உண்ணி

எதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது.

கல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள்.

பூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை கிருமிகள், உண்ணிகள் இருக்குமோ? ஐயோ, இந்தப்பெண் ஏன் இப்படி ஈஷுகிறாள்; உடம்புக்கு ஏதாவது வந்துதொலைக்கப் போகிறதே என்று எனக்குத் தான் எப்போதும் பதறும்.

எதிர்வீடு தான் என்றாலும் எங்காவது பார்த்தால் அடையாளம் கண்டு அரைப் புன்னகை செய்யுமளவு மட்டுமே எங்களுக்குள் நெருக்கம் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். போயும் போயும் முதல் சம்பாஷணையைப் பூனை உண்ணியிலிருந்தா தொடங்குவது?

ஒரு நாள் நட்ட நடு ராத்திரி ஒன்றுக்குப் போகவென எழுந்திருக்க வேண்டியதானது. உறக்கம் கலைந்ததால் கொஞ்சம் வெளியே வந்து இரவின் மரகத வெளிச்சத்தை அனுபவித்தபடி சற்று நின்றேன்.

தற்செயலாக எதிர்வீட்டு மொட்டைமாடியைப் பார்த்தால், அங்கே மாலதி! எப்போதும் போல் அப்போதும் அவள் மடியில் அந்தப் பூனை. என் யூகம் சரியானால், அவள் அப்போது அந்த ஜந்துவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

மிகத் தீவிரமாக.

என் வியப்பு அதுவல்ல; பூனையும் தன் மொழியில் கிசுகிசுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருந்தது தான்.

இது என் பிரமை, அல்லது தூக்கக் கலக்கத்தின் காரணமாயிருக்கும் என்று நினைத்தேன். ஒரு வேளை அவள் சித்தம் பிறழ்ந்தவளாக இருப்பாளோ? ஐயோ பாவம் வயசுப் பெண். நாளைக்கே கல்யாணமாகி புருஷன் என்றொருவன் வந்தால் , இதைக்கண்டு என்ன சொல்வான்? ஜீவ காருண்யம் உத்தமமானது தான். ஆனால் இது வேறுவிதமாகவல்லவா இருக்கிறது?

அவள் தன் பூனைக்கு வெங்காய சாம்பார் சாதமும் தக்காளி ஜூஸும் பாப்கார்னும் (ரகசியமாக) பான்பராகும் தருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போதே அவளிடம் இல்லாவிட்டாலும் அவளது பெற்றோரிடம் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். எதுவோ என்னை அப்போதெல்லாம் தடுத்தது.

ஆனால் இந்த அர்த்தராத்திரி கூத்தைப் பார்த்தபின் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

விடியட்டும் என்று காத்திருந்தேன். பல் கூடத் துலக்காமல் நேரே அவள் வீட்டுப் படியேறி, கதவைத் தட்டிவிட்டு நின்றேன்.

சில விநாடிகளில் கதவு திறந்தது. அவர் எதிர்ப்பட்டார். படபடவென்று விஷயத்தைக் கொட்டிவிட்டு, கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் வீட்டுக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.

அடுத்த சில நாட்களில் அவள் மீண்டும் என் பார்வையில் தென்பட்டபோதெல்லாம் பூனை இல்லாமல் தான் இருந்தாள். ஆனால் முகம் மட்டும் வாடியிருந்தது போலிருந்தது. நான் ஏதும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

விரைவில் அவள் சகஜநிலைமைக்குத் திரும்பியதையும் கவனித்தேன். பூனையை மறந்துவிட்டாள் போலிருக்கிறது .

எனக்கு அரிக்க ஆரம்பித்தது.
C/O கருவறை

வழியும் சத்தியமும் ஜீவனும் சந்தேகமில்லாமல் நானே தான். வந்து கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போ என்று எம்பெருமான் கூப்பிட்டான். கூப்பிட்ட மரியாதைக்குப் போய்ச் சேர்ந்தபோது பதினெட்டு மணிநேரம் கூண்டுக்குள் காத்திரு என்று திருப்பதி தேவஸ்தானத்தின் எலக்டிரானிக் போர்டு சொன்னது.

சுந்தரத் தெலுங்கும் மந்திரத் தமிழும் மற்றும் கொஞ்சம் இந்தி, ஆங்கிலம், மலையாளம் கலந்த ஒலிச் சித்திரங்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருக்க, மேலுக்கு ஆணி அடித்து மரக்கட்டை நட்டு ஆங்காங்கே டிவி மாட்டி, படம் காட்டிக்கொண்டிருந்தார்கள். மொட்டை அடித்தவர்கள், அடிக்காதவர்கள் என்று ஜாதி இரண்டொழிய வேறில்லை. கடலை மிட்டாய், கைமுறுக்கு, பஞ்சுமிட்டாய், பட்டாணி சுண்டல். பாக்கெட் உணவுகள், பலமான மசாலா நெடி. சாப்பிட்டுக் கைகழுவ வெளியே போவது சாத்தியமில்லை. உன்னுடைய கைக்குட்டையிலோ, அடுத்தவர் சட்டையிலோ துடைத்துக்கொள். எப்படியும் தரிசனத்துக்குள் விடிந்துவிடும். படுக்க இடமில்லை. உட்கார்ந்த வாக்கில்தான் தூங்க முயற்சி செய்யவேண்டும்.

தூங்கித்தான் ஆகவேண்டுமா என்பது இன்னொரு கேள்வி. ஆன வயது அப்படியொன்றும் அதிகமில்லை என்றாலும் ரத்த அழுத்தம் இப்போதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை. தூங்கி எழுந்தால் பல் தேய்ப்பது அவசியம். குளிப்பது? ஏடுகொண்டலவாடனைக் குளித்துவிட்டுத்தான் தரிசிக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. ஆகவே, பல் தேய்ப்பதும் கூட அப்படியொன்றும் நிர்ப்பந்தமில்லை. நாற்றத் துழாய்முடி நாராயணன் அவன். துர்நாற்றங்கள் மீதும் அவனுக்கு விரோதம் ஏதுமில்லை. தவிரவும் காத்திருக்கும் கூண்டுகளில் கடன் முடிக்க ஒதுக்கமாகக் கட்டிவைத்திருக்கும் இடங்கள் அப்படியொன்றும் சிலாக்கியமாக இல்லை. பாவத்தைத் தொலைத்துவிட்டு வியாதியை வாங்கிக்கொண்டு வர நான் தயாரில்லை.

ஜருகண்டி, ஜருகண்டி.

பேஷ். இங்கேயே ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டம் நகர்கிறது. தோளுக்குமேலே மொட்டையடித்த குட்டிக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, கச்சம் கட்டிய மொட்டையடித்த பெரியவர்கள் சந்துகளில் நகர்ந்துகொண்டிருந்தார்கள். இப்படி வா, இப்படி வா. அப்படிப் போகாதே. தள்ளாதிங்க சார். எவுரண்டி அக்கட? ஜருகு, ஜருகு..

ஐம்பது ரூபாய் டிக்கெட். நூறு ரூபாய் டிக்கெட். சுப்ரபாத சேவை. திருப்பாவை சேவை. கல்யாண உற்சவம். போனதெல்லாம் இப்படித்தான். இது புதுசு. ஜனதா தரிசனம். வேணாம்டா, உன்னால மணிக்கணக்கா உக்கார முடியாது, நிக்க முடியாது. அப்பறம் அங்க வலிக்கறது, இங்க வலிக்கறதுன்னு ரெண்டு நாள் பிராணன வாங்குவ. கிளம்பும்போது சுற்றமும் நட்பும் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

அதையும்தான் பார்த்துவிடுவோமே? நடந்தே மலையேறி, காத்திருந்து, இலவசமாக தரிசித்துவிட்டு, க்யூவில் நின்று தரும உணவு சாப்பிடுவது ஓர் அனுபவமாக இருக்காது என்பது என்ன நிச்சயம்? தரும தரிசனக்காரர்கள் தேவஸ்தானத்துக்கு ஒரு பொருட்டாக இல்லாது போனாலும் தெய்வத்துக்கு அப்படி இராது. லட்டு கிடைக்காவிட்டாலும் அல்வா கொடுக்காத கடவுள் என்று உத்தமமான பெயர் வாங்கியிருக்கிறார். சந்தேகமென்ன, கண்டிப்பாக ஏதாவது திருப்பம் நேர்ந்தே தீரும்.

டிஜிட்டல் கடிகாரம் இரவு இரண்டு மணி என்று காட்டியது. தூக்கம் வரவில்லை. கொசுத்தொல்லை இல்லாதுபோனாலும் கூட்டம் அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. திடீர் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் ஏடுகொண்டலவாடா என்று கத்தினார்கள். கூடச் சேர்ந்து கத்தலாம் என்றுதான் தோன்றியது. எது தடுத்தது என்று தெரியவில்லை. பக்தியை அத்தனை உரக்க வெளிப்படுத்தத்தான் வேண்டுமா என்றொரு பகுதிநேரப் பகுத்தறிவாளன் உள்ளே உட்கார்ந்துகொண்டு கேள்வி எழுப்பினான்.

என் பக்தியின் மீது எனக்கு சந்தேகம் கிடையாது. துளியும் கிடையாது. அது ஒரு திட்டவட்டமான பிசினஸ் பக்தி. எனக்கு இதைக் கொடு. உனக்கு நான் இதைச் செய்கிறேன் என்கிற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். இல்லாதுபோனால் ஒரு போன் அடித்து எங்கள் கம்பெனி ஏஜெண்டிடம் சொன்னால் ஏசி காட்டேஜ் ஒதுக்கி, கோயில் கோபுர வாசலிலிருந்து நேராக உள்ளே கூட்டிக்கொண்டு போய்விடமாட்டானா!

அதிகாரி. அடேயப்பா. ஒரு அதிகாரியாகப் போகும்போதெல்லாம் என்ன மரியாதை! பரிவட்டமென்ன, மாலை என்ன, பக்கத்தில் இருந்து தரிசனமென்ன? தட்டில் போடும் பணத்தின் கனத்தைப் பொறுத்து, வேறு சில கண நேர சந்தோஷங்களுக்கும் எம்பெருமான் அவசியம் அருள்பாலித்துவிடுவான். தெய்வம் மனுஷ்ய ரூபேண.

தூங்கும்போதும் அழகாகத் தெரியும் மனிதர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அகப்பட்டதில்லை, அப்படியொருவர் அல்லது ஒருத்தி. வாய்பிளந்த கோலம். ஆடை கலைந்த கோலம். கால்களை அகல விரித்த கோலம். தலை கலைந்த கோலம். இயல்பாக இருக்கும் எதுவும் சௌந்தர்யமாக இருக்காது போலிருக்கிறது. தவிரவும் அந்தக் குறட்டை. ஆ, எத்தனை எத்தனை சுருதிகளில் குறட்டைகள்! என் பக்கத்தில் உட்கார்ந்த வாக்கில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயதான மனிதர் சிங்கத்தின் குகை மாதிரி வாயைப் பிளந்துகொண்டிருந்தார். ஒரு காலைத் தொங்கப்போட்டு, இன்னொரு காலைக் குத்திட்டு, அதில் கையை ஊன்றி, கையால் முகவாய்க்கு முட்டுக்கொடுத்து – சட்டென்று முன்னெப்போதோ பார்த்த பிரெஞ்சு ஓவியம் ஒன்று நினைவுக்கு வந்தது. ஆனால் ஓவியத்தை ரசித்தமாதிரி ஒரிஜினலை ரசிக்க முடியவில்லை.

யார் கண்டது? இதற்குப் பெயர்தான் மேட்டிமை மனோபாவமோ என்னமோ. என்னைக்காட்டிலும் அவர் ஏடுகொண்டலுவாடனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கக் கூடும். சட்டென்று வேறுபுறம் திரும்பி உட்கார்ந்துகொண்டேன்.

மூன்று மணிக்கு எங்கோ மணியடித்தார்கள். உறக்கம் கலைந்த மனிதர்கள் சொல்லிவைத்த மாதிரி ஏடுகொண்டலவாடா வெங்கட் ரமணா என்று கூப்பிட்டபடி எழுந்தார்கள். எப்படியும் இன்றைய பொழுது முடிவதற்குள் தரிசனம் கிடைத்துவிடும். இப்போதைக்கு சூடாக ஒரு காப்பி கிடைத்தால் தேவலை. கூட்டம் நகரத் தொடங்கியது. முண்டியடித்தார்கள்.

இம்முறை என்னுடைய டீல் ஒன்றும் பிரமாதமில்லை. ஒரு தவறு செய்திருந்தேன். எனக்கு மட்டுமே தெரிந்து, நானே மறைத்து, தப்பித்துவிட்ட தவறு. மன்னித்துவிடு எம்பெருமானே என்று மனத்துக்குள் கூப்பிட்டுக் கேட்டேன். சரி, ஒழிந்துபோ, வந்து ஒரு நடை சேவித்துவிட்டுப் போய் வேலையைப் பார் என்று சொல்லியிருந்தான். சேவித்துவிட்டால் சரியாகிவிடும். சரணாகதி என்பது எத்தனை சௌகரியம். உமக்கே நாம் ஆட்செய்வோம். எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கத் தயாரான கடவுள். பாவத்துக்குச் சம்பளம் கொடுக்காத பரமாத்மா. அப்பேர்ப்பட்டவனை பதினெட்டு மணிநேரம் காத்திருந்து தரிசிப்பது ஒன்றும் தப்பில்லை. எத்தனை அதிகாரிகள், அமைச்சர்களுக்காக மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருந்திருக்கிறேன்.

சத்தம் அதிகமாக இருந்தது. என் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். என்னுடைய காணிக்கை அங்கே ஒரு சிறு பேப்பர் பொட்டலத்துக்குள் இருந்தது. இந்த காணிக்கை சூட்சுமம்தான் எனக்குப் புரியவேயில்லை. படியளப்பவனுக்கே பைசா கொடுப்பதா என்று மீண்டும் பகுத்தறிவாளன் கேட்கிறான். முடியைக் கொடுப்பதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது. மானுடப் பிறவிகளின் ஆணவச் சின்னமல்லவா அது? சீவி சிங்காரிப்பதெல்லாம் அதைத்தானே? மழித்துப் போடும்போது அகந்தையையே மழித்து ஒழிப்பதாக எப்போதும் தோன்றும் எனக்கு.

ஆனால் நான் அப்படியொரு வேண்டுதல் செய்ததில்லை இதுவரை. நெட் கேஷ். பிசினஸில் முடி காணிக்கையெல்லாம் சரிப்படாது. செக் டிரான்ஸாக்ஷனும் கிடையாது. நெட் கேஷ். கறுப்பு வெள்ளைக் கலவை பெரிய விஷயமில்லை. என்னிடம் இருந்தால் கறுப்பு. அவன் உண்டியலில் போய்ச் சேர்ந்தால் அதன் நிறம் வெண்மை. எம்பெருமான் ஒரு வினோதமான கரன்ஸி கன்வர்ட்டரும் கூட.

கூட்டம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. கூண்டு கூண்டாக நான் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். ஏடுகொண்டலுவாடா, வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா. திசை தெரியவில்லை. நான் நின்றுகொண்டிருந்த கூண்டிலிருந்து கோவில் எந்தப் பக்கம் என்பது கூடச் சட்டென்று மறந்துவிட்டது. எட்டுத்திசையிலும் அவன் இருந்தாலும் அந்தக் கருவறைதான் எல்லோருக்குமே இலக்கு. எதிரே போய் நிற்க ஒரு கணம். திருமுகத்தை ஏறிட்டுப் பார்க்க ஒரு கணம். அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு வரி பிரார்த்தனை. ஒரு சின்ன மனமுருகல். எதிரே நிற்கும் கணத்தில் ஒரு பூ அல்லது துளசி விழுமானால் நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டு அடுத்த ஆறு மாதத்தை ஓட்டிவிடலாம். எல்லாம் அவன் செயல். அதற்கெல்லாம் அவகாசமிருக்காது. ஜருகண்டி, ஜருகண்டி.

ஒரே ஒரு பயம்தான். நிவேதிதாவைக் கைவிட முடிவு செய்தபோது அந்த பயமில்லை. எங்கே ஊரைக் கூட்டி நாரடித்துவிடுவாளோ என்று தோன்றியபோதுதான் அது பற்றிக்கொண்டுவிட்டது.

அந்தஸ்து. கௌரவம். மரியாதை. மாபெரும் சபைகளில் நடக்கும்போதெல்லாம் விழும் மாலைகளின் எண்ணிக்கை. இதெல்லாம் ஏன் அவளுடன் பழக ஆரம்பித்தபோது தோன்றவில்லை என்று தெரியவில்லை. ஜாலியாகத்தான் இருந்தது. சந்தோஷமாகத்தான் இருந்தது. கொஞ்சம் கிளுகிளுப்பாகவும் இருந்தது. எக்காலத்திலும் லைசென்ஸ் கிடைக்காத உறவு என்பது உள்ளூரத் தெரிந்திருந்தபோதிலும் வேண்டியிருந்தது. பணத்திமிர் என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்படியா? தெரியவில்லை. ஒருவேளை இருக்கலாம். திமிரும் அழகுதானே? ரசிக்கலாம், தப்பில்லை என்று நினைத்ததுதான் தப்பாகிவிட்டது.

நோமோர் நிவேதிதா. போய்விடு. இதற்குமேல் தாங்காது. எனக்கும் சரிப்படாது, உனக்கும் சரிப்படாது. காரண காரியங்களுடன் விளக்கிச் சொன்னபோது முதலில் முறைத்தாள். அதிர்ச்சி அல்லது வெறுப்புடன் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தாள். கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டியிருந்தது. அவள் அதனை மறுத்துக்கொண்டிருந்தவரைக்கும் பயம்தான். எப்போது ஏற்றுக்கொண்டாளோ, அப்போதே தப்பித்துவிட்ட உணர்வு வந்துவிட்டது.

சீச்சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன்னோடு ஓடிவரத் தயாராக இருந்தேனே, இப்படிச் செய்துவிட்டாயே?

வசனங்கள், மற்றும் வசனங்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு என் மனைவி குறித்த பயம் இருந்தமாதிரி அவளுக்கும் அவளது கணவனைக் குறித்த அச்சம் இருக்காமலா இருக்கும்?

எப்படியோ, அந்தக் காண்டம் கடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. ஏடுகொண்டலுவாடனுக்கு நன்றி. இனி உன் முகத்தில் விழிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவனருளாலே அவன் தாள் வணங்கவேண்டியது ஒன்றுதான் பாக்கி.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. ஒருத்தருக்கும் தெரியாது. மூன்று வருடகாலம் நாங்கள் பழகியிருக்கிறோம். என்னுடைய அலுவலகத்தில் எனக்குக் கீழே பணிபுரிந்திருக்கிறாள். என்னுடன் சினிமாவுக்கு வந்திருக்கிறாள். கிழக்கு கடற்கரைச் சாலை ரிசார்ட்ஸுக்கு வந்திருக்கிறாள். ஒகேனக்கல் வந்திருக்கிறாள். ஒருத்தருக்கும் எங்கள் நடவடிக்கைகள் தெரியாது. மிகத் திறமையாக நாங்கள் வாழ்ந்திருக்கிறோம், அல்லது நடித்திருக்கிறோம்.

சந்தேகமில்லாமல், நூறு சதவீதத் தவறுதான். தெரிந்தேதான் செய்தோம். அதனாலென்ன? வருத்தப்படாமல் சுமந்த பாரம் என்றாலும் இளைப்பாறுதல் தர எம்பெருமான் தயாராகவே இருந்தான்.

ஜருகண்டி, ஜருகண்டி என்றார்கள். நினைவுகளைப் பொட்டலம் கட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கூட்டத்தோடு உள்ளே போனேன். கோபுரம் கடந்தது. கொடிமரம் வந்தது.  தரையெல்லாம் ஈரமாக இருந்தது. அங்கப்பிரதட்சணம் செய்தவர்கள் அரூபமாக மனத்தில் வந்து போனார்கள்.

கோவிந்தா, கோவிந்தா.

யாரோ தள்ளினார்கள். எங்கோ போய் முட்டிக்கொண்டேன். கோவிந்தா கோவிந்தா.

உள்ளே போனது தெரியவில்லை. இருளும் பச்சைக் கற்பூர நெடியும் திடீரென்று சூழ்ந்த பேரமைதியும் என்னவோ செய்தது. சர்வேஸ்வரா, என்னை மன்னித்துவிடு. தவறு செய்தேன். ஆனாலும் மன்னித்துவிடு. இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் தரத் துணிச்சலில்லை. ஆனால் செய்யும்போதெல்லாம் இதே மாதிரி காப்பாற்றிவிடு.

கண்ணை நான் மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஜருகண்டி சத்தம்தான் கேட்டது. மீண்டும் யாரோ பிடித்துத் தள்ளினார்கள். இம்முறை யூ-டேர்ன் மாதிரி இருக்கவே திரும்ப முயற்சி செய்தேன்.

நோ சான்ஸ். அடக்கடவுளே! சந்நிதிக்கு வந்துமல்லவா பார்க்கமுடியாமல் போய்விட்டது. நின்று பார்த்தாலே மனத்தில் பதியாத ரூபம். நடந்தவாக்கில் தலையைத் திருப்பிப் பார்ப்பதாவது!

ஜருகண்டி, ஜருகண்டி.

சட்டென்று எனக்குள் இருந்த இண்டலெக்சுவல் குரல் கொடுத்தான். முட்டாள், நீ பார்க்க வேண்டாம், அவன் உன்னைப் பார்த்தால் போதும்!

அதானே! கால் வலிக்க நடந்து ஏறி, காத்திருந்து வந்தாகிவிட்டது. இனி அவன் பாடு.

சந்தோஷமாகத் திரும்பிவிட்டேன். எம்பெருமான் அந்த எட்டுக்கு எட்டு அறைக்குள் மட்டுமா இருக்கிறான்? எங்கும் இருக்கிறான். எப்போதும் இருப்பான். எனக்கு ஒத்தாசை செய்வதற்காகவே உயிரோடு இருப்பவன்.

நிம்மதியுடன் APTC பஸ் பிடித்துக் கீழே இறங்கி, ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆம்னி பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன்.

யார் சொன்னார்களோ, சத்தியமான வார்த்தை. திருப்பதி போனால் திருப்பமில்லாமல் இருக்காது. வீட்டுக்கு வந்தபோது ஒரு கூரியர் தபால் வந்திருந்தது. நிவேதிதாதான் அனுப்பியிருந்தாள்.

கருவுற்றிருக்கிறாளாம்.
பக்தன்

எப்போதும்போல் ஒழுங்காக இணையத்தில் எழுத முடியாத சூழல். கொல்லும் பணிகள். எனவே அவ்வப்போது ஆவதுபோல் அவ்வப்போது மட்டுமே இப்பக்கம் வர முடிகிறது. இடையே, ஏன் எழுதவில்லை, என்ன ஆயிற்று என்று அக்கறையுடன் தனி அஞ்சலில் விசாரிக்கும் நண்பர்களுக்கு ஒரு சொல்: வேலை அதிகம், வேறொன்றுமில்லை. இதுவும் எப்போதும் போலவே.

இடையே வெகுநாள்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுதினேன். இன்று தினகரன் வசந்தத்தில் அது பிரசுரமாகி உள்ளது. இணைய வாசகர்களுக்காக அது இங்கே – தினகரன் வசந்தம் வார இதழுக்கு நன்றியுடன்.

***

ஒரு கிளிக்கூண்டு வேண்டும்.

ஆறு வீட்டுப் பிள்ளைகளும் ஏகமனதாக முடிவு செய்து அவரவர் பெற்றோரிடம் மனுத்தாக்கல் செய்தபோது, அப்பார்ட்மெண்ட் வாசலில் மூன்றடிக்கு நான்கடி பரப்பில் கோயில் கொண்டிருந்த பிள்ளையாருக்கு வயிற்றைக் கலக்கியது. நைவேத்தியப் பலகாரத்தில் பிரச்னையிருக்கும் என்றெல்லாம் சிந்திக்கவே முடியாது. அவர் சாப்பிட்டுப் பலகாலம் ஆகியிருந்தது. வாசலில் ஒரு ஜென்மம் வீற்றிருக்கிறது, அதற்குக் கொழுக்கட்டையும் சுண்டலும் இல்லாவிட்டாலும் ரெண்டு இட்லியும் கெட்டி சட்டினியுமாவது கொண்டு வைக்கலாம் என்று நினைக்க யாருமில்லை.

புதிய பிளாட் வாங்கிக் குடியேறும் ஆறு பேரும் கோர நாத்திகர்களாயிருக்கக்கூடும் என்று பிரமோட்டர் நினைத்திருக்க முடியாது. எப்போதும் போல ப்ளான் அப்ரூவலில் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்றுக்கு நாலடி இடம் காட்டி, கைகூப்பித் தொழுது, கட்டி முடித்துக் கொண்டு வைத்துவிட்டு, விற்ற பணத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு வேறு பேட்டைக்குப் போய்விட்டார். கோயில் கொண்ட நாளாக ஒரு கும்பிடு இல்லை. தோப்புக் கரணமில்லை. மணியோசை இல்லை, விளக்கேற்ற ஒரு நாதியில்லை.

பிள்ளையார், தாய்க்குலத்தை மிகவும் நம்பியிருந்தார். அவர்கள் நிச்சயம் நாத்திகர்களாக இருக்கமாட்டார்கள். பக்திப் பரவசம் மேலோங்காவிட்டாலும் பார்த்த மாத்திரத்தில் ஒரு கும்பிடுக்குக் குறையிருக்காது என்று நினைத்திருந்தார். ஆனால் இதென்ன கலித்தாண்டவம்! ஆறு வீட்டுப் பெண்களும் அவரவர் புருஷன்களுக்கு முன்னால் அள்ளி அடைத்துக்கொண்டு ஆபீசுக்கு ஓடி, இருட்டி இரண்டு நாழிகை கழித்து சுருண்டு வீடு வந்து விழுகிறார்கள்!

வாழ்க்கைத் துணைகளை முழுதாகப் பார்ப்பதே வாரம் ஒருமுறை என்னும் பட்சத்தில் வாசல் பிள்ளையாருக்கு வருடத்தில் ஒருநாள் ஒதுக்கினால் போதும் என்று நினைத்திருப்பார்களாயிருக்கும். பிள்ளையார் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார்.

ஆனால் விதி வலியது. பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை நாளில்கூட அப்பார்ட்மெண்டில் யாரும் அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஊரெல்லாம் மண் பிள்ளையார்கள் சிவப்புக் கண்ணும் சந்தனப் பொட்டும் கலர்க் குடைகளுமாக பவனி வந்துகொண்டிருக்க, அப்பார்ட்மெண்டில் அவர் எப்போதும்போல் அநாதையாகத் தனித்துக் கிடந்தார். ஆறு வீடுகளிலும் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தன. அபூர்வமான விடுமுறை தினம். துணி துவைக்கலாம். டிவி பார்க்கலாம். திருப்தியாகச் சாப்பிட்டுப் பகலிலும் ஒருமுறை படுத்துத் தூங்கலாம்.

பாவிகளா, நான் இல்லாமல் உங்களுக்கு இந்த வசதி வாய்ப்புகள் வந்துவிட்டதாகவா நினைக்கிறீர்கள்?

பிள்ளையாருக்குக் கோபத்தைக் காட்டிலும் துக்கமே மிகுந்தது. அடக்கிக்கொண்டார். பிள்ளைகள் தவறு செய்யத்தான் செய்யும். பிள்ளையார்தான் பொறுத்துப் போகவேண்டும். அவருக்கும் ஒரு காலம் வருமல்லவா? உறுமீன் வருமளவும் பிள்ளையார்க் கொக்கு காத்திருக்கும்.

ஆறிலொருவன் டிரான்ஸ்பர் ஆகிப் போனான். வாடகைக்கு வந்த சிவசுப்பிரமணியன், அதிர்ஷ்டவசமாக ஆத்திகனாக இருந்தான். மூட்டை முடிச்சுகளுடன் இறங்கும்போதே சந்நிதியின் முன்னால் ஒருகணம் நின்று கைகூப்பிவிட்டு அவன் நகர, பிள்ளையாருக்குச் சிலிர்த்துப் போனது. பக்தா, சிவசுப்பிரமணியா, நீ மட்டும் ஒழுங்காக என்னைத் தொழுதுகொண்டு வா; மற்ற வீட்டுக்காரர்கள் அத்தனை பேரும் பொறாமைப்படும் உயரத்துக்கு உன்னைத் தூக்கி வைக்கிறேனா இல்லையா பார் என்று மனத்துக்குள் உரத்துக் கூவினார்.

அவனுக்கும் பல பிரச்னைகள் இருந்தன. மனைவி ஊரில் இருந்தாள். பிரசவம் முடித்து அவள் குழந்தையுடன் திரும்பி வர எப்படியும் எட்டு மாதங்களாகும். அதுவரை அவனும் பிள்ளையாரைப் போல பிரம்மச்சாரி. ஆபீஸ் முடித்து, ஹோட்டலில் சாப்பிட்டு, தியேட்டரில் வாழ்ந்துவிட்டு உறங்குவதற்கு வீட்டுக்கு வருவான். பெரும்பாலும் பக்தி செய்ய நேரமிருக்காது.

ஆனபோதிலும் பிள்ளையாருக்கு அவனது சகாயம் வேண்டியிருந்தது. குறைந்தபட்சம் அவன் நாத்திகனில்லை. மனத்தில் நினைக்கும் பொழுதுகள் வெகு சொற்பமென்றாலும் கடந்து போகும்போதெல்லாம் கைகூப்பத் தவறுவதில்லை. அவன் தான் இப்போது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யப் போகிறான் சிவசுப்பிரமணியன்?

‘லெட் அஸ் கன்வர்ட் தட் டெம்ப்பிள்’

பிள்ளையார் எதிர்பார்த்தபடியே கோயிலுக்கு உலை வைத்துவிட்டார்கள். சந்நிதியைக் கிளிக்கூண்டாக மாற்றுவது பெரிய விஷயமில்லை. உள்ளே இருக்கும் பிள்ளையாரை காலி பண்ணிவிட்டு வாசலுக்கு ஒரு கம்பி வேலி போட்டுவிட்டால் தீர்ந்தது விஷயம். பிள்ளைகள் பரவசமாகிவிடுவார்கள். பச்சைக்கிளிகளும் காதல் கிளிகளும் வண்ணவண்ணக் கிளிகளும் மூன்றுக்கு நாலடிக் கூண்டில் கொஞ்சி விளையாடும். வேளைக்கு அவற்றுக்குக் கொட்டைகள் கிடைத்துவிடும். கொட்டாங்குச்சி கப்பில் பால் வைப்பார்கள். வாசலில் போகிற தள்ளுவண்டி பழக்காரனை நிறுத்தி மாதுளை வாங்கி உரித்து கம்பிக்குள் வீசுவார்கள். கிக்கிக்கிக்கிக்கீ என்று இரவும் பகலும் அவை ஓயாமல் சத்தமிட்டு விளையாடும். சந்நிதி சாந்நித்தியம் பெறும்.

பிள்ளையாருக்கு துக்கம் தாளவில்லை. தவறான இடத்தில் மாட்டிக்கொண்ட சரியான கடவுள். பக்தா, சிவசுப்பிரமணியா உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை. எப்படியாவது என்னைக் காப்பாற்று.

அன்றிரவு பிள்ளையாருக்கு ஒரு கனவு வந்தது. ஃப்ளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் மீட்டிங்கில் அவர் சார்பாக சிவசுப்பிரமணியன் காரசாரமாக வாதம் செய்துகொண்டிருந்தான். பிள்ளையார் கோயிலைக் கிளிக்கூண்டாக மாற்றுவது தவறு. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

‘மிஸ்டர் சிவசுப்பிரமணியன், நீங்கள் வெறும் டெனண்ட். உங்கள் ஹவுஸ் ஓனரிடம் நாங்கள் பேசிவிட்டோம்’ என்றார் மூன்றாம் நம்பர் வீட்டுக்காரர்.

‘ஆனாலும் நான் வாடகை கொடுக்கிறேன். இப்போது இங்கே வசிக்கிறவனும் நான் தான்.’

‘உங்களுக்கு வேண்டுமென்றால் பிள்ளையார் சிலையை எடுத்துப் போய் உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது.’

சட்டென்று பிள்ளையாரின் கனவு கலைந்துவிட்டது. ஆனால் கனவில் உருப்படியாக ஓர் ஐடியா கிடைத்துவிட்ட சந்தோஷம் அவருக்கு இருந்தது. எப்படியாவது சிவசுப்பிரமணியன் மனத்துக்குள் இந்த யோசனையை தோன்றிவிட வேண்டும். என்னை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்துவிடு என் அருமை பக்தனே.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை அத்தனை வீட்டுக்காரர்களும் முதல் முறையாகப் பிள்ளையார் கோயில் அருகே வந்து கூடி நின்றார்கள். சிவசுப்பிரமணியன் சற்றுத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தான். பிள்ளையாருக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுதான். இவ்வளவுதான். எடுத்துவிடுவார்கள். பக்தன் சிவசுப்பிரமணியன் என்ன முடிவு செய்திருக்கிறான்?

அவரது பதற்றம் யாருக்கும் புரியவில்லை. எடுத்துவிடலாமா என்று ஒருவர் கேட்டார். ‘ஓயெஸ்’ என்று இன்னொருவர் ஆமோதித்தார். பிள்ளைகள் கிளிக் கனவுகளில் ஹோவென்று கத்திக்கொண்டு அங்குமிங்கும் குதித்து ஓடினார்கள். ஜாக்கிரதையாக சன்னிதியைத் திறந்து, பீடத்தின் மீதிருந்து பிள்ளையாரை வெளியே எடுத்தார் இரண்டாம் நம்பர் வீட்டுக்காரர். வெற்றிக்கோப்பையை ஏந்திய விளையாட்டு வீரன் மாதிரி அனைவரையும் பார்த்துச் சிரித்தார்.

‘மிஸ்டர் சிவசுப்பிரமணியன், எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் நீங்கள் ஆத்திகர்.. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்…’

சிவசுப்பிரமணியன் புன்னகை செய்தான். இரண்டடி முன்னால் வந்து பிள்ளையாரை வாங்கிக்கொண்டான். தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டான். பிள்ளையாருக்கு ரத்த அழுத்தம் 140/100 ஆகியிருந்தது. பக்தா காப்பாற்று. பக்தா காப்பாற்று. பக்தா காப்பாற்று.

காரியம் முடிந்த திருப்தியில் ஐந்து வீட்டுக்காரர்களும் அவரவர் போர்ஷன்களுக்குப் போனார்கள்.

சிவசுப்பிரமணியன் அவரை ஏந்திக்கொண்டு நேரே கிணற்றடிக்கு நடக்க ஆரம்பித்தான்.
நாயகி
1
ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்குரிய எந்த இலட்சணமும் அந்த ஸ்டேஷனுக்கு இல்லை. மிக நீண்டதொரு தூக்குமேடை போல் காட்சியளித்தது. ஆளற்ற வெறுமையும் எரியும் வெயிலும் அலைபுரளும் கானல் கோட்டு வெளியும் கண்ணில் தென்படாமல் குலைத்து அடங்கும் நாய்க்குரலும் சற்று அச்சமூட்டுவதாயிருந்தது. மிஞ்சிப் போனால் நூறு குடும்பங்கள் கூட அங்கிருக்காது எனப்பட்டது. ஜமீன், தன் சொந்தச் செலவில் கட்டிக் கொண்ட ஸ்டேஷனுக்கு அரசு ரயில்கள் நின்று மரியாதை செலுத்திய நூறு வருடத்து சரித்திரத்தின் மேலும், ஸ்டேஷனிலிருந்த ஒரே மர பெஞ்சின் மேலும் புழுதி படிந்து மங்கச் செய்திருந்தது.

சாப்பிட்ட இலையும் தண்ணீர்க் குவளையுமாக ஸ்டேஷன் மாஸ்டர் வெளியே வந்தார். தண்டவாளம் தாண்டி அவர் விசிறியடித்த இலைக்கொரு காகம் மேற்கிருந்து விரைந்து வந்தது. சப்தமுடன் கொப்பளித்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தவர், ‘வந்துட்டீங்களா? ரயில் நின்னப்ப பார்த்தனே? இறங்கலையே? நீங்கதானே பெரிய வீட்டுக்கு வந்திருக்கறது?’ என்றார்.

ரயில் நின்றபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷன் வந்ததற்கான எந்தப் பரபரப்புமில்லாமல், சிக்னலில் நின்றதுபோல் நின்று, நகர்ந்துவிட்டது வண்டி. விதியே என்று வீரக்குடி ஜங்ஷனில் இறங்கி தண்டவாளத்துக் கட்டைகளை எண்ணிக்கொண்டே அரை மணி நடந்து, இங்கு வந்து சேர்ந்திருந்தேன்.

‘அடடா!’ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். ‘இப்பத்தான்  ஐயா வீட்டுலேருந்து போன் வந்தது. ஆளைக் காணுமே, வந்தாரா, இல்லையான்னு கேட்டு. வாங்க, ஒரு நிமிசம்’ என்றவர், அறைக் கதவை இழுத்துச் சாத்தி விட்டு, சைக்கிளைத் தட்டி ஏறி, ‘உட்காருங்க’ என்றார்.

‘வழி சொல்லிட்டீங்கன்னா போதும். நான் போயிடறேன்’ என்றேன். ஸ்டேஷனுக்கு குதிரை வண்டி ஏதாவது அனுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். ஒரு ஸ்டேஷன் மாஸ்டரை சாரதியாகக் கொண்டு சைக்கிள் பயணம் செய்வதன் மீதான இருப்பியல் சார்ந்த வினாக்கள் எழுந்து அலைக்கழித்தன.

‘அட, வாங்க சும்மா’ என்றார் எஸ்.எம். ஜமீன் தனியொரு ரயில்வே போர்டு வைத்து நடத்திக் கொண்டு, சைக்கிள் சேவைக்குத் தனியே அலவன்ஸ் தருகிறாரோ என்னவோ.

செம்மண் சாலையில் கரகரத்து ஊர்ந்து சென்றது சைக்கிள்.

வழிமுழுக்கப் பேசிக்கொண்டே வந்தார் ஸ்டேஷன் மாஸ்டர். ஓர் ஆராய்ச்சி என்றால் அதில் கண்டிப்பாக முயல் இருக்க வேண்டுமென்று அவர் நம்பியிருந்தார்.

குறுந்தாடி வைத்துக் கொள்ளாமல், முயலின் மீது தன் ஆய்வைப் பரிசோதித்துப் பார்க்காமல், குறைந்தபட்சம் கண்ணாடியணிந்த உதவியாளன் உடன் என்ன ஆராய்ச்சி? இதற்கெல்லாமும் பல்கலைக்கழக மானியம் கொடுக்கிறார்களா என்ன?

‘ஐயா, அறிவியல் என் துறையல்ல. பண்டைய ஜமீன் வம்சங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு முயலின் துணை அவசியமுமல்ல. தேர்ச்சி பெற்ற ஜமீன் பரிசாரகர்கள் முயல்கறி சமைத்துப் போட்டால் ருசித்துப் பார்க்க ஆட்சேபணை இல்லை.’

‘நல்லதுங்க. அந்தா பாருங்க. பெரிய வீடு வந்திருச்சி. இங்கனவே இறங்கிக்கறீங்களா? ரெண்டு பத்துக்கு ஒரு கூட்ஸ் வரும். ஐயா வீட்டுத் துணிகளை வெளுத்து எடுத்தாருவாங்க. போயி, வாங்கி எடுத்தார டைம் சரியா இருக்கும்.’

அவர் ஜமீனின் குதிரை லாயத்தில் சாணமள்ளிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பரம்வீர் சக்ராவுக்குப் பதிலாகக் குழாய் மாட்டி ஸ்டேஷனில் அமர்த்தியிருப்பார்கள், சேவையைப் பாராட்டி.

கம்பீரம் தோய்ந்த கிழட்டு ராட்சஸன் மாதிரி அமர்ந்திருந்த பங்களாவை நோக்கி நடந்தேன். மிக உயரே, பருந்தொன்று, மாளிகையை வட்டமிடக் கண்டேன்.
2
‘ஆத்தா, இவுகதான் உம்ம மயன் சொன்ன ப்ரொபசரு. மெட்ராசுலேருந்து வந்திருக்காவ’ என்றார் மானேஜர்.

நானொரு ப்ரொபசர் அல்ல என்பதை முதலில் அவருக்குத் தெளிவுபடுத்திவிட விரும்பினேன். ஆனால், ஆய்வு மாணவன் என்றால் கிழவி அசிரத்தையாகப் பேச விரும்பாமலாகக் கூடும் ‘கதை கேக்க வந்தியா? எளுந்து போடே மூதி!’ என்று விரட்டியடித்த ஜமீன் கிழவர்களின் பரிச்சயம் சமீப காலத்தில் சற்று அதிகமாகவே லபித்திருந்தது. கதை கேட்கும் வயது கடந்துவிட்ட பேரன் பேத்திகள் திசைக்கொருவராகப் பிரிந்துவிட்ட பின்னர் யானைத் தந்தங்களுக்கு நிகரானதொரு புராதனச் சின்னமாக மாளிகையில் பகல் இரவற்றுத் தனிமையில் அலைந்து அதிகாரம் புரியும் கிழவிகளுக்குக் கதை சொல்வதிலான விருப்பம் மழுங்கிப் புழுத்துப் போயிருக்கும். வேளைக்குச் சோறும் வாய் நமநமத்தால் வசவும் மீளாத இரவுகளில் கரகரத்த, நடுங்கும் குரலில் எழும் இருமலுமாகப் பாதி இறந்த கிழவிகள் ச்¢லரைக் கண்டிருக்கிறேன்.

ஆய்வு நோக்கங்கள் மறந்துபோய், கரை காண முடியாத அவர்களது மனவெளிப் பாலைகள் அலைந்து திரியும் பேரவா உந்த, முயன்று, தோற்றுத் திரும்பியிருக்கிறேன்.

ஆய்வின் சாரமாகத் திரண்டு வரும் தோல்வி, கரும்பூதமாகத் துரத்த, அலுப்புற்று விழுவதும் மறுபடி எழுந்து வருவதுமாக நீளும் நாள்களின் தாற்காலிக விளிம்பில் இதோ, இன்னுமொரு காது நீண்ட கிழவி.

குடிக்க என்ன கொடுத்தாய் என்று சைகை மூலம் மானேஜரிடம் கேட்டாள் கிழவி. உண்டு முடித்த அற்புதமான பகலுணவு பற்றி நான் உற்சாகமாகக் கூற ஆரம்பித்தேன். இதுவும் அனுபவ சாரந்தான். உன்னைக் குளிரச் செய்ய உன் வீட்டுச் சமையலை நான் புகழ்ந்தாக வேண்டும். அது புளித்து ஊறிய களியுருண்டையாயிருந்தாலும் சரி.

கிழவி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மறுபடியும் குடிக்க ஏதாவது கொடு என்று மானேஜரிடம் சொன்னாள்.

‘ஆத்தா இப்படித்தாங்க அவங்க எதிர்க்க ஒரு கிளாஸ் மோர் குடிக்காட்டி, திருப்திப்படமாட்டா’ என்று சொல்லிவிட்டு, ‘சங்கரபாண்டீ’ என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

கிழவியின் வயதை என்னால் அனுமானிக்க இயலவில்லை. நூறோ, எண்பதோ, நூற்றியிருபதோ இருக்கலாம். ஒரு கிராஃப் தாள் போல முகத்தின் குறுக்கே ஓடிய நூற்றுக்கணக்கான கோட்டுச் சுருக்கங்களினடியில் புதையுண்ட விழிகள், கோதுமை நிறத்தில் இலக்கற்று அலைபாய்ந்து கொண்டிருந்தன. உதிர்ந்ததுபோக ஒட்டிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு இமைகள் வெளுத்திருக்க, பற்களற்ற வாய் அசையும்போது தவளையின் வயிறு போலத் தென்பட்டது.

‘காது அவ்வளவா கேக்காதுங்கா. பேச்சும் குறைஞ்சிடிச்சி. மதியத்துக்கு மேல பார்வை சரியா இருக்காது. ஆறு மணி ஆச்சின்னா சுத்தம். பெருமா கோயில்ல சாமி ஏளப்பண்றாப்பிலே தூக்கியெடுத்துப் போயி வெச்சாத்தான் செரி. ஜயா மாசம் ஒருக்கா வாரப்ப எங்கிருந்துதான் இவுகளுக்கு வீரம் வருமோ தெரியாது. எளுந்து நடமாட ஆரமிச்சிருவாக. அதிசெயமா குரல் ரெண்டு ரூம்பு தாண்டிக் கேட்கும். அவுரு திரும்பிப் போறண்ணிக்கி அளுமோ, அளுமோ, அப்பிடி அளும். அடுத்த மூணுநா ஒரு பேச்சு வரணுமே? ம்ஹூம், பிறவு செரியாப்போவும்’

அத்தனை பெரிய அரண்மனையில் ஓர் ஓரத்தில் குவித்து வைத்த குப்பை போல் கலைந்து அமர்ந்திருந்தாள் கிழவி. சென்னையில் பெரிய தொழிலதிபராயிருக்கும் இவள் மகனை, விஷயத்தை விளக்கிச் சந்தித்தபோது ஒரு ஜமீந்தார் என்கிற உணர்வெல்லாம் சுத்தமாகத் தனக்கில்லை என்று தெரிவித்தார். விவசாய விஞ்ஞான சாதனங்கள் சதனங்கள் உற்பத்தி செய்யும் அவரது நிறுவனம் பங்குச் சந்தையில் உயர்மட்ட நிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதற்கான முயற்சியில் தனக்கு உறங்கக் கூடச் சராசரியாக் மூன்று மணி நேரங்களே கிடைப்பதாகச் சொன்னார். “நீங்கள் ஊருக்குப் போய் அம்மாவிடம் பேசிப் பாருங்கள். அவர்ள் உதவக்கூடும் உங்கள் ஆய்வுக்கு” என்றார் பெருந்தன்மையுடன்.

நான் கிழவியைப் பார்த்தேன். கருவேப்பிலை, இஞ்சி நேர்த்த நீர்மோர் குவளையைக் காலி செய்து நான் வைத்துவிட்டதை கவனித்துவிட்டு, திருப்தியாகச் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். சில விநாடிகளில் அப்படியே குறட்டைச் சத்தம் கேட்டது.

“அத்தா எப்பவும் இப்படித்தாங்க. நெனச்சப்ப டக்குனு தூங்கிடும். எளும்ப ரெண்டவராச்சும் ஆகும்” என்றார் மேனேஜர்.

அவளை அப்படியே சாயவைத்து தலைக்கொரு திண்டைக் கொடுத்து, மின்விசிறியை அவள் புறமாகத் திருப்பி வைத்தார்.

நான் இன்னொரு கிளாஸ் நீர்மோர் கேட்டு வாங்கி அருந்திவிட்டு, எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.
3
மனிதர்களைக் கொசுவாக உணரச் செய்யும் மிக உயரமான சுவர்கள் தாங்கிக் கொண்டிருந்த மேற்கூரை பிரமிட் வடிவில் இருந்தது. பாடம் செய்யப்பட்ட புலித்தலைகள் இல்லாத ஜமீன் பங்களாக்களை இதுகாறும் நான் பார்த்ததில்லை.

“வாங்க” என்றா மேனேஜர். மூன்றாம் கட்டும் கதவைத் திறந்ததும் கிரிக்கெட் பிட்ச் மாதிரி நீண்டிருந்த முற்றத்தில் மிளகாய் காய்ந்து கொண்டிருந்தது. செவ்வக வடிவில் சுற்றியிருந்த தாழ்வாரச் சுவர்களில் ஆங்காங்கே பச்சை நிறக் கதவுகள் தென்பட்டன. “இது பூசை ரூம்புங்க. இது பெரிய ஜமீன் இருந்தப்ப, வெத்தல பாக்கு போட உட்கார்ற இடங்க. இது பளைய சாமானுங்க வெக்கற இடம். அது பாருங்க, ஜமீன் வூட்டுக்காரங்களோட் அஜிம்மு” என்று காட்டிக் கொண்டே வந்தார் மேனேஜர். ஓரிடத்தில் கண்ணாடி போல் மழமழத்த பச்சை நிறத் தரைத்தளம் சதுரமாக ஒரு குளம் போலிருக்க, “அம்மணிங்க சோழி ஆடுவாங்க இங்க. நாங்க ஆம்லெட் தரைன்னுவோம். சிமிண்டு இல்லாம முட்டைக் கலவையால மட்டும் போட்ட தளங்க” என்றார்.

சத்தமெழுப்பிய மரப்படியில் ஏறி முதல் தளத்தை அடைந்தோம். கீழிருந்தது போலல்லாமல் மிகக் குறுகலான தாழ்வாரம் சுற்றி நீண்டிருக்க, வம்ச நாயக்கர்களின் ஓவிய முகங்கள் சட்டமிடப்பட்டு வரிசையாகக் காட்சியளித்தன.

“கவனிச்சீங்களா? இங்க ஃபேனுமில்லை, ஏசியுமில்லை. ஆனா சில்லுனு இருக்கு பாருங்க? அதான் டெக்னிக்கு. வெளிக்காத்து ஆக்ரோசமா தாக்கறப்ப மெல்லிசு ஓட்டைங்களை போட்டு வெச்சா என்னாவும்? சும்மா குளத்தங்கரை கணக்கா சில்லுனு ஆயிடாது?”

அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் பொட்டு வைத்தாற்போல வானத்துளிகளைக் கண்டேன்.

“இந்த ஜமீன் எத்தனை வருஷத்துதுங்க?” என்றேன் மேனேஜரிடம்.

“அது ஆச்சிங்க நூத்தம்பது வருசம். இவுக முப்பாட்டன் வெள்ளைக்காரனுக்கு ரொம்ப விசுவாசியாட்டு இருந்திருக்காரு. இங்க வரி கிரி வசூலிச்சுத் தாறது, சட்டாம்பிள்ளைக் காரியம் பாக்கது, துரைங்க ஓய்வெடுக்க வந்தா சாராயம் ஊத்தித் தாரதுன்னு இருந்திருக்காவ. அவனுக்கென்ன? நல்லா குடிச்ச வேளையில வள்ளல் மனசு வந்துட்டு. எடுத்துக்கடா இந்த கிராமத்தனிருக்கான். முன்ன நானூத்தம்பது ஏக்கரா சொத்து. இவுக தாத்தா சாரட்டுல போறத நாலு வயசுல பாத்த ஞாபகம் இருக்குங்க. பெரிய்ய குடும்பம். பங்காளிங்க மட்டும் பதினெட்டு பேருன்னா பாத்துக்கிடுங்க. இப்பம் யாரும் இல்லை. ஐயா மட்டும்தான்.”

“எல்லாருமா காலமாயிட்டாங்க?” என்றேன்.

“ஆமுங்க” என்றவர் சற்றுக் குரல் தாழ்த்தி, “யார் சாவும் நேரானதா இல்லீங்க. என்னமோ குலசாபம். வெட்டுப்பட்டே செத்துப் போனாங்க” என்றார்.
4
வானம் மறைத்த கருமையில் கரைந்து உப்படிகையில் நின்றிருந்தேன். உறக்கம் வரவில்லை. நெடுநெடுவென நீண்டிருந்த மேல் தளத்தில் அரண்மனை வேலையாள்களுக்குக் குடிசை அடித்துக் கொடுத்திருந்தார்கள். தரையெங்கும் உடல்கள் உறங்கிக் கிடக்க, எங்கோ தொலைவில் தவளைச் சத்தம் கேட்டது. மழைக்கு முந்தைய புழுக்கம் காற்றைக் கட்டிப் பிடித்திருக்க, பசிப்பது போலிருந்தது எனக்கு. இந்த நேரத்தில் யாரை எழுப்பி என்ன கேட்க முடியும்?

சத்தமின்றி கீழிறங்கினேன். இருளை மிகைப்படுத்திக் காட்டும் விதமான முட்டை விளக்குகள் முப்பதடிக்கு ஒன்றாக எரிந்து கொண்டிருக்க, கிழவியின் அறைக்குள்ளிருந்து வந்த சத்தம் என் கால்களை அசைவற்றுப் போகச் செய்தது. ஓசையின்றி அருகே செல்ல, அது பேச்சொலியல்ல; யாரோ பாடுகிறார்கள் என்பது விளங்க, வியப்பானது. கீழ்க்குரலில், மொழியற்ற ஒலி வடிவில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது குரல். தயக்கமிருந்தாலும் மெதுவாகக் கதவைத் தள்ளி, உள்ளே பார்த்தான்.

சட்டென்று ஒலி நின்று கிழவி நிமிர்ந்து பார்த்தாள். “ஆரு?” என்றபோதுதான் முதல் முதலில் அவள் குரலைக் கேட்டேன்.

“நாந்தான் ஆத்தாஸ மெட்ராசுலேர்ந்து வந்திருக்கனேஸ”

“தூங்கலையா தம்பி?” என்றாள் கிழவி.

“இல்லத்ஹ்டா. உங்க பாட்டுச் சத்தம் கேட்டிச்சா? நேரா எழுந்து வந்துட்டேன்/”

“பாட்டா! ஹெ!” என்றஹ்டு கிழவி. “அவுகளோட பேசிட்டில்ல இருந்தேன்?”

விளங்காமல், “நல்லாவே பாடறீங்க” என்றேன். அருகே அமர்ந்து.

“பாட்டில்லைன்னு சொல்லுதேனில்ல? இங்கிருந்து ஒரு குரலை அனுப்புவேன், மேலுக்கு. அவுக அதைப் பிடிச்சுகிட்டு இறங்கி வருவாங்க. ரெண்டு பேரும் பேசிகிட்டிருப்போம். விடிஞ்சதும் மறு குரல்ல ஏறிப் போயிருவாக” என்றாள் கிழவி.

முதுகு சிலிர்த்தது எனக்கு. யாரும் நுழைந்துவிட முடியாததொரு பேருலகையல்லவா கிழவி தனக்கென்று உருவாக்கி வைத்திருக்கிறாள். பகலெல்லாம் அவள் உறங்கி விடுவதன் காரணம் புரிந்தது.

“ஆத்தா, உங்கள் வீட்டுக்காரரை எனக்குக் காட்டுவீங்களா?” என்றேன் சிரித்துக் கொண்டே.

“எங்கே? எனக்கேதான் கண்ணவிச்சி வெச்சிருக்கானே? அவுக வருவாக. கையப் பிடிச்சிகிட்டு உக்காந்திருப்பாக. ஏதும் கேட்டா பதில் சொல்வாக. நேரமாச்சி, வாரேன்னு கிளம்பிருவாக. சமயத்துல அவர் போறப்ப குரல் கம்மி, அளுதுடுவேன். தொப்புன்னு விளுந்துடுவாக. ஐயோன்னு மறுபடியும் குரல் கொடுப்பேன். பிடிச்சிகிட்டு ஏறிப் போயிடுவாக.”

உறங்கும் எண்ணமே மறந்துவிட்டது எனக்கு. கிழவியின் மானசீக உலகின் கண்கூசச் செய்யும் வெளிச்சத்தில் ஒரு தும்பி போல் படபடத்துப் பறந்து கொண்டிருந்தேன்.

“அவரு பெரிய ராசாவா இருந்தாருன்னு சொன்னாரே மேனேஜர்?”

“சொன்னானா? சொல்லிருப்பான், சொல்லிருப்பான். பின்னே? மனுச வாழ்க்கையா வாழ்ந்தாக மகராசன்? ஊரு, சாமியாவுல்ல தொழும்! மம்முதங் கணக்கா என்ன நடெ! என்ன கெம்பீரம்?ஒடம்பொறந்த ஒருத்தனுக்குமில்லாத லெச்சணமில்லா? வேட்டைக்குப் போனாருன்னா, வனதேவதை மண்டு போட்டில்ல கேவும்? இத்தன மானு, இத்த மிளான்னு கப்பமாட்டு கொண்டு வந்து வெச்சி, மிச்சத்தப் பொறவு பார்த்துக்கிடவும்னு கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பிருமில்லே?”

“நீங்க போயிருக்கீங்களா ஆத்தா?”

“ஆருடெ வெவரந்தெரியாதவனாட்டு பேசுத. பொட்டச்சி எங்கன போவுறது? எல்லா அவரு சொல்லுறதுதேன்.”

கிழவியின் கண்களில் தென்பட்ட ஒளிக்கீற்று அறையை நிறைத்துத் ததும்புவதாகப்பட்டது. தன் மானசீகப் பற்றுக் கோல் துணையில் அவள் இருந்து கழித்த வருடங்களைத் தேடியெடுத்து மேய்ந்து பார்ப்பதில் அத்தனிஅ சிரமமிருக்காது என்று நினைத்தேன். பகலில் உறங்கி, இரவில் விழித்திருக்கச் சற்று பழக வேண்டும்.

தன் படுக்கையின் பின்புறம் எதையோ தேடி எடுத்தவள், பாட்டில் மூடியைத் திறந்து மடக் மடக்கென்று நான்கு வாய் குடித்துவிட்டு மூடிவைக்க, வியப்பில் “என்னது ஆத்தா?” என்றேன்.

“ஔசதம்!” என்றது, அசிரத்தையாக.

சற்றும் எதிர்பாராத அந்த நெடி என் மூளையைத் தாக்க, கிழவியின் ஸ்டாமினா பற்றிய சிந்தனையே அச்சமூட்டுவதாயிருந்தது.

“உறவுக்காரங்க வேற யாரும் இப்ப இல்லையா ஆத்தா?” என்றேன் மெதுவாக.

“எம்மயன் மட்டுந்தா” என்றாள் உடனே.

“இருந்தாலும் உங்களை விட்டுட்டு அவரு மட்டும் மெட்ராஸ் போயிட்டது சரியில்ல ஆத்தா. பாவம், வயசான காலத்துல.”

என்னைத் தொடரவிடவில்லை. “இருக்கட்டும்டே. நாந்தேன் அனுப்பி வெச்சேன். இங்க அவன் வாழமுடியாஹ்டு பார்த்துக்க.”

“ஏன் ஆத்தா?”

“வெப்பம் புடிச்ச மாளிகையிது. கெட்ட ஆவிங்க பொளுதும் சுத்திச் சுத்தி வருதுக. அந்தா, அந்தா பார் – சுதர்சனன் மேயுதான் தெரியுமா? இவம்பெரியப்பம்மவன். கட்டேல போறவன். செத்தொழிஞ்சும் விட்டொழிய மாட்டேங்குதான். நானொருத்தி வீட்டைச் சுத்தி மந்திரவேலி போட்டு வெக்காட்டி விளுங்கி ஏப்பம் விட்டிருப்பானுவ., பேதியில போறவனுவ. ஒரு படையேல்ல இங்க வாழுது? எப்பம் எம்மயன் வருவான். மேலே விளுந்து விழுங்கீறலாம்னுட்டுதானே காத்திருக்கானுவ? புளுத்தப் பய மக்கா, புளுத்தப் பய.”

ஆடிப் போயிருந்தேன். கண்ணவிந்த கிழவிக்கு ஆவிகள் உலவுவது தெரிகிறதா? என்ன சொல்கிறாள் இவள்?

“அவுக ஒடம்பொறந்தவக இருந்தானுவளே, காக்காசுப் பயனத்தவக. வடிச்சி வெப்பேன், பானை பானையா. விழுங்கி, ஏப்பம் விட்டு, உருளச் சொல்லு? நல்லா உருளுவானுவ பித்தளச் சொம்பு கணக்கா. நாசமாப்போற பயலுவ. சொத்தைப் பிரின்னவ. நெலத்தக் கூறு போடுன்னாவ. வீட்டை வித்துப் பங்கு பிரின்னாவ மக்கா! எம்புருசனா மசியற மனுசன்? போங்கடே பொசகெட்டவனுவளான்னு வீசினாரு பார் ஒருக்கா… இஞ்ச பிடிச்ச ஓட்டம் வீரக்குடி போயித்தான் நின்னாவ. எப்பம்பாரு சண்டை. எப்பம்பாரு சள்ளை…

சற்றே குரலைத் தழைத்தவள், “இந்த சமீனுக்குன்னு ஒரு குலசாமி உண்டு. வீருமாராத்தான்னு பேரு. அவ ஒருக்க வந்து சொல்லீட்டே போனா: பிரிச்சி கிரிச்சிப் பேசினீகளோ மக்கா, பொலிபோட்ருவேன்னு. இவுக பாட்டா ரெத்தத்தத் தண்ணியா சிந்தி உழைச்சி சம்மாரிச்ச பூமியல்லா? கூறு போட்டு ஆளுக்கொண்ணு திங்க இதென்ன பொரிளங்கா உண்டையா?”

“அதானே?” என்றேன் உசுப்பும் விதமாக. கிழவி இன்னொருமுறை பாட்டிலைத் திறந்து ஊற்றிக் கொண்டாள்.

“கேட்டியா? ஓரு அப்பிசி மாசம். மள வெளுத்து ஊத்துது. இவுக சிம்மம்பட்டு வரையும் போய் வாரேன்னு கிளம்பினாவ. எதுக்குங்கே? அவுக தம்பி மயனுக்குப் பொண்ணு பாக்க! குத்துவெளக்கு ஏத்தி வெச்சாப்புல இருக்கணும்டீன்னு ஏண்ட்ட சொல்லீட்டே இருப்பாக. எம்மயனுக்கு வாய்ச்சவதா சீக்காளியாப் போனா. அடுத்தவ அஷ்டலெச்சுமி அம்சமா வரோணும்னுட்டு அவுகளுக்குக் கெனா. தம்பி சொல்லுதான், ‘நீ பாத்தாச் செடிதான்’ எண்ணு. இது ஏதுடா பாசம் கம்மா ஒடச்சிக்கிட்டு ஊத்துதுன்னு அப்பமே நெனச்சேன். செரிதான் மனுச புத்தி ஊஞ்சப் பலகையாட்டம் தானேன்னு நினைச்சேன். மள கொட்டுது பாரு. அப்பிடியொரு கொட்டு! இவுக சாரட்டு புடிச்சி ஏறி கெளம்பிட்டாக. நண்ணி கெட்ட நாலு நாயிக பிளான் தெரியுமா? வழியில மடக்கி, வெட்டிப் போடுதுண்ணு…”

“ஐயோ!”

“கேளு! பாதையில்லாத பாதையில போனாரா? இவனுவ இந்தா வாரம் மதினின்னு பின்னொடவே கெளம்பிட்டாவ. அப்பவே சம்சயப்பட்டேன். செரி, நம்ம மவராசனுக்கு வனதேவதையே பணிஞ்சிப்போவா. இந்தப் பயித்தாரப் பயலுவ மளைலநெனஞ்சி சளி புடிச்சித்தான் வருவானுவ. வேறொண்ணும் களேட்டீறமாட்டானுவன்னு நெனச்சிப் போட்டேன்.

“ஆச்சா? ஒரு மணியாச்சு, நெண்டு மணியாச்சு. பொளுது சாஞ்சி இடி புரட்டுது. இவுக வாராக, ஒத்தை ஆளா. என்னான்னு சாரிச்சா, சொல்லுதாரு, வளியில தம்பிமாரு நாலு பேரும் தலை உருண்டு கெடுக்காமுண்ணு! பிடிச்சிது பாரு பீதி. ஒரே ஓட்டம், சாமியாண்ட ஓடினேன். பர்த்தா, மக்கா நம்பமாட்டே. அவ கையில புடிச்ச சூலத்துல ரெத்தஞ் சொட்டுது. கிளர்ந்து போசி பார்த்துக்க. சொத்தென்னடே சொத்த்! இவுக உசிர வெச்சிருந்தாக அவுக மேல. வெவரங்கெட்ட நாயிக, நாண்டுபோனாவ…”

கிழவியின் உடல் ஆடிக் கொண்டிருந்தது. பீதியில் எனக்கு வியர்த்திருந்தது. தொலைவில் ஒற்றை மாட்டின் குரல் ஒலிக்க, மணி மூன்றரை ஆகியிருந்தது. கிழவி, காலை நீட்டிப் படுத்துக் கொண்டாள். நான் எழுந்திருக்கலாமா என்று யோசித்தேன்.

“அந்தக் காத்தைக் கொஞ்சம் திருப்பி வையி” என்று உத்தரவிட்டாள் கிழவி.

நான் டேபிள்ஃபேனை அவள் பக்கமாகத் திருப்பினேன்.

“கேட்டியா? அவுக தம்பிமார் மயனுவ ஒவ்வொருத்தனுஞ் செத்ததும் இப்பிடித்தேன். மனசுல ஒரு கோணல் விளுந்திருச்சின்னு வையி. வீருமாராத்தா விளிச்சிகிடுவா. பதினெட்டு பொலி போட்டா. எத்தினி? பதினெட்டு! இப்பம் சுத்தி வாரானுவ ஆவிகளா. நல்லசாவு நேர்ந்தாத் தானே நல்ல கெதி வாய்க்கும்? கொள்ளியில போறவனுவ. பணப்பிச்சி பிடிச்சி அலைஞ்சானுவ. கொலைக்கு அஞ்சாதவனுவ பார்த்துக்க. ஆனுமுட்டும் என்னைப் போட்டுத் தள்ளப் பாத்தானுவ. ஏங்கிட்ட மந்திவேலி உண்டில்லா? நெருங்கினா எரிச்சிப் போடுமே?”

“அதென்ன ஆத்தா மந்திரவேலி?” என்றேன் ஆர்வம் தாங்கமாட்டாதவனாக.

“அவுக மொதமொத எங்கொரலைப் பிடிச்சிக்கிட்டு இறங்கி வாரப்ப குடுத்துப் போட்டுப் போனாரு. கண்ணுக்குத் தெரிஞ்சா அதெப்பிடி மந்திரமாவும்? சந்திரமதி தாலியொக்க அவுக மாட்டிவுட்டுப் போனத அவுக மட்டுந்தான் பாக்க முடியும். ஒரு காத்துக் கருப்பு அண்டனுமே? ம்ஹும்! ஷ்ட்ராங்! என்று ஆர்ம்ஸ் காட்ட்சி சிரித்தாள் கிழவி.

சன்னலைத் திறந்து பார்த்தேன். வானில் ஒரு விமானம் கடந்து மறைந்தது. தோட்டத்துச் செடிகள் மொக்கு விட்டிருக்க, கிழவி எழுந்து என் தோளைத் தட்டினாள்.

“பதினெட்டு தடியனுவள பொதச்ச பூமி இதா. பூத்திருக்கு பாரு, சீமெக்கரி லெச்சணமா.”

முதுகுத்தண்டு சிலிர்த்தது எனக்கு. அப்படியே சரிந்து படுத்தேன். மொட்டுகள் வெடித்து, வாசனை ம்தந்து வந்து நாசியில் நுழைய, நரம்புகள் செயலிழந்து உறங்கிப் போனேன்.
5
“ப்ரொபசர் இங்க எப்ப வந்து படுத்தீரு?” என்று மேனேஜர் எழுப்பியபோதுதான் கண் விழித்தேன். கொஞ்சம் முரண்டு பிடித்தபின் இரவு நிகழ்ந்தவை ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, “ஆத்தாவோட பேசிட்டிருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்” என்றேன் வெட்கமாக.

“ஆத்தாவா? அதுகு ராத்திரியே பேதியெடுக்க, ஆசுபத்திரிக்கில்ல கொண்ட்டு போனோம்?”

குழப்பமாயிருந்தது. “எப்ப போனீங்க?” என்றேன் சந்தேகமாக.

“நீங்க படுத்த நிமிஷம் தூங்கிட்டீகளா?” ஒம்பதரைக்கே அவுகளைத் தூக்கிட்டுப் போயிட்டம். அடிக்கடி வாரதுதான். ஆனா உசிரு கெட்டி. இந்தா, பத்து மணிக்கு வந்துருவாக பாரும்” என்றார் மேனேஜர்.

முற்றிலும் புரியாமல் நான் அந்த அறையைப் பார்த்தேன். பழைய உடைசல்களும் பிரப்புக் கூடைகளும் ஓர் உபயோகமற்றா சைக்கிளும் அங்கிருக்கக் கண்டேன். ஒட்டடை படிந்து, நான் கணக்கில் தரை கூட்டாமல் புழுதியும் குப்பையுமாயிருக்கக் கண்டு மேலும் குழம்பினேன்.

“பெரியவக இருந்த காலத்துல இது அவுக பெட்ரூம்பா இருந்தது. பிறவு ஆத்தா இந்தப் பக்கமே வாரதில்லை. என்னருந்தாலும்பளசு நெனப்பு வந்து கஷ்டமாவுமில்ல?” என்றார் மேனேஜர். நான் பதிலேதும் பேசவில்லை.

பல் துலக்கிவிட்டு, அவசரமாக அவருடன் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினேன். கிழவி ஒரு பழைய தாள் மாதிரி படுக்கையில் கிடந்தாள். டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

“ஆத்தா! ஆத்தா!” என்று மேனேஜர் அழைக்க, ஒரு குகையிலிருந்து மீள்வது போல அவள் கண்கள் மயங்கித் திறந்தன. பேசும் சக்தி முற்றிலுமாக இருக்காது என்பஹ்டு பார்த்ததுமே புரிந்தது.

நம்ப முடியாமல், காய்ப்பேறிக் கறுத்துக் கிடந்த கிழவியின் கையை மெல்லத் தொட்டுப் பார்த்தேன்.

அடுத்த விநாடி ஜமீன் வீட்டுக்குத் தலை தெரிக்க ஓடினேன். மூன்றாம் கட்டுத் தாழ்வாரங்களைக் கடந்து வலப்புறம் மாடிப்படி அருகில் இருண்டு கிடந்த அந்த அறையை உதைத்துத் திறந்து இலக்கற்றுத் தேடினேன்.

இரும்பு வாளிகள், உபயோகமற்ற கரண்டிகள், உடைந்த ராட்டினம், தகரத் தகடுகள் எனக் குவிந்திருந்தனவற்றை விலக்கியபோது அது அகப்பட்டது. துருப்பிடித்து ஒரு குறுவாள். பாய்ந்து எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். பிடியில் ரத்தக்கறை படிந்து இருகியிருந்தது.

பிரமை பிடித்தவன் போல் சன்னலருகே வந்து நின்றேன். செடியோ, பூக்களோ அற்ற மண் மேட்டில் சுள்ளிகள் அடுக்கியிருக்கக் கண்டேன். [1999]



கால் கிலோ காதல் அரை கிலோ கனவு தொடரின் சுட்டிகள். கடைசிச் சுட்டியிலிருந்து படிக்கவும்!
http://www.writerpara.com/paper/?p=819
http://www.writerpara.com/paper/?p=815

http://www.writerpara.com/paper/?p=812

http://www.writerpara.com/paper/?p=799

http://www.writerpara.com/paper/?p=795

http://www.writerpara.com/paper/?p=791

http://www.writerpara.com/paper/?p=788

http://www.writerpara.com/paper/?p=785

http://www.writerpara.com/paper/?p=782

http://www.writerpara.com/paper/?p=779

http://www.writerpara.com/paper/?p=771

http://www.writerpara.com/paper/?p=768

http://www.writerpara.com/paper/?p=765

http://www.writerpara.com/paper/?p=762

http://www.writerpara.com/paper/?p=756
 
சிங்கப்பூர் பயணம் 6
சிங்கப்பூர் பயணம் 5
சிங்கப்பூர் பயணம் 4
சிங்கப்பூர் பயணம் 3
சிங்கப்பூர் பயணம் 2
சிங்கப்பூர் பயணம் 1
என்ன ஊர்? சிங்கப்பூர்.


Author
கிழக்கு ப்ளஸ் – 1
கிழக்கு ப்ளஸ் – 2
கிழக்கு ப்ளஸ் – 3
கிழக்கு ப்ளஸ் – 4
கிழக்கு ப்ளஸ் – 5
கிழக்கு ப்ளஸ் – 6
கிழக்கு ப்ளஸ் – 7
கிழக்கு ப்ளஸ் – 8
கிழக்கு ப்ளஸ் – 9
கிழக்கு ப்ளஸ் – 10




     RSS of this page