Home / Nirottagam

Nirottagam


படம்: வில்லுப்பாட்டுக்காரன் | பாடல்: தந்தேன் தந்தேன் | எழுதியவர்: வாலி | இசை: இளையராஜா | பாடியவர்: மலேசியா வாசுதேவன்
http://www.youtube.com/watch?v=0OFeSDoMf_8

ஏழைகள் காதுகளில், செந்தேன் அள்ளிச் சேர்க்கிற கலைஞனடி,
தென்னாட்டுல இருக்கிற இதயங்களைச் சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி!
நாட்டுல கேட்டுக்கடி இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்,
நாக்குல இருக்குதடி, எடுத்துத் தர ஆயிரம் கீர்த்தனைதான்!

இந்தப் பாடலைப்பற்றிச் சொல்வதற்கு ஓர் அபூர்வமான விஷயம் இருக்கிறது, இது ‘நிரோட்டகம்’ என்ற வகையைச் சேர்ந்த பாடல்.
நிரோட்டகம் என்பது சமஸ்கிருதச் சொல், நிர் + ஓட்டகம், அதாவது, உதடுகள் ஒட்டாமல் பாடப்படுகிற பாடல்.

தமிழில் எத்தனையோ பாவகைகள் இருப்பினும், இதை ஒரு விசேஷமான வகையாகக் குறிப்பிட்டு இலக்கணம் வரையறுத்திருப்பதாகத் தெரியவில்லை. சினிமாவிலும் இந்த ஒரு பாடலில் கங்கை அமரனைத் தவிர வேறு யாரும் இந்த வகையில் முயற்சி செய்திருக்கிறார்களா என்று அறியேன்.

ஆச்சர்யமான விஷயம், உதடு ஒட்டாமல் பாடுவது என்றாலும், இந்த வரிகளைப் படிக்கும்போது அந்த சிரமமே தெரியாது. மிகவும் லகுவாக எழுதியிருப்பார் கங்கை அமரன்.
காரணம், தமிழில் உச்சரிக்கும்போது உதடு குவிகிற அல்லது ஒட்டுகிற எழுத்துகள் குறைவுதான். உயிரெழுத்துகளில் உ, ஊ, ஒ, ஓ, மெய்யெழுத்துகளில் ப், ம் மற்றும் வ். இவற்றின் கூட்டணியில், 4 * 3 = 12 உயிர்மெய் எழுத்துகள், ஆக மொத்தம் 19 எழுத்துகளைத் தவிர்த்துவிட்டு, மீதமிருக்கும் 228 தமிழ் எழுத்துகளை வைத்து எழுதவேண்டியதுதான்!

சும்மா, ஒரு நாலு வரி முயற்சி செய்து பாருங்களேன்!
***
என். சொக்கன் ... | 17 07 2013 | 228/365

அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும் என்று ஒரு புதிர் உண்டு. அதற்கு விடை, 'உதடு' தான். அண்ணன் என்று உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டா. தம்பி என்கிற போது ஒட்டும். 

திருக்குறளில் சில பாடல்கள், உதடு ஒட்டாமல் வருபவை. 

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற் கரிய செயல் 

என்பது அவற்றுள் ஒன்று. 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இல

என்பதையும் உதடு ஒட்டாத பாடலுக்குக் காட்டாகக் கூறுவது உண்டு. ஆயினும் இதில் நோதல் என்ற சொல் வருகிறது. நோ என்று உச்சரிக்கையில் உதடு ஒட்டாவிட்டாலும் குவிகிறது. உதடு குவியாமலும் இருக்குமேயானால் அதுவே இந்த வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளோ, அதன் இன எழுத்துகளோ, கூட்டு எழுத்துகளோ இடம் பெறாமல் ஒரு பாடலை இயற்றினால் அது, இயல்பாகவே உதடு ஒட்டாத பாடலாக இருக்கும். மேலும், வ என்ற எழுத்தினை உச்சரிக்கையில் உதடு ஒட்டவில்லை. ஆனால், கீழுதடு, மேல்வரிசைப் பற்களில் படுகின்றது. இந்த வகையான ஒட்டுறவு கூட இல்லாமல் பாடவேண்டும் என்பது என் விருப்பம். 

உதடு ஒட்டாத பாடல், சித்திரக் கவிகளுள் ஒரு வகையாக இடம் பெற்றுள்ளது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு 44 அடிகளில் இத்தகைய பாடல் ஒன்றை எழுதினேன். இன்று அதை எடுத்துப் பார்த்தேன். அதில் சில திருத்தங்கள் செய்து, 12 அடிகள் கொண்ட பாடலாகச் சுருக்கினேன். உதடு ஒட்டாமலும் குவியாமலும் கலி வெண்பாவில் அமைந்துள்ள அந்தப் பாடல் இங்கே:

காதல் இசை

காதல் இசையே! கனாக்கணையே! என்திசையே!
நாதக் கடலே! நன்னதியே! என்நிதியே!
ஆசைக் கிளியே! அதியெழிலி ஆயிழையே!
நாசிநிறை காற்றே! நடையழகி நாயகியே!
கண்ணே! கனியே! கனகநிகர் கன்னிகையே!
தண்ணீர்த் தனலே! தயைநிறை தாயே!
அலையே! அலையில் கயலே! கயலின்
கலையே! கலையின் நிலையே! நிலையேன்நீ!
நீசென்றால் அங்கே நிழலாய் நிறைகின்றேன்
நீசிரித்து நின்றாலே நெஞ்சே சிரிக்கின்றேன்!
தித்திக்க ஐயன் திளையாய்த் திளைத்திட
இத்திக்கைக் காண்நீ இனி!
முக்கிய தகவல் ஒன்று: உதடு ஒட்டாத பாடல் வகைக்கு நீரோட்டகம் என்று பெயர். இந்தப் பாடலைப் பாடும்போது, சலசலவென நீர் ஓடுவது போல் இருப்பதால் முன்னோர்கள் இவ்வாறு பெயர் வைத்துள்ளார்கள்.
----
கிருபாஷங்கர்,

புதுக்கவிதையிலும் இப்படி முயன்று பார்க்கலாம். ஆனால், யாப்பில் இதை முயல்வதில் மூன்று சவால்கள் உண்டு.

1. உதடு ஒட்டாத எழுத்துகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. யாப்பின் அளவுக்குள் பொருந்தி வர வேண்டும்.

3. பொருட்செறிவும் இருக்கவேண்டும்.

அதுவும் வெண்பாவில் இதை முயலும்போது, காய் முன் நேர், விளம்முன் நிரை, மாமுன் நிரை என்ற முறைப்படி அமைய வேண்டும். இதற்குள் எதுகை மோனையும் அமைந்தால் இன்னும் சிறப்பு.

மொழித் திறனை வளர்க்க, இத்தகைய முயற்சிகள் பெரிதும் உதவும்.
------
அண்ணாகண்ணன்,

பாடல் நல்லா இருக்கு.

ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதர், நிரோஷ்டா என்றொரு ராகத்தை (சங்கராபரணத்தை தாய் ராகமாகக் கொண்டு) உருவாக்கினார். 'ச ரி க ம ப த நி' என்ற ஸ்வரங்களில் உதடு ஒட்டா ஸ்வரங்களான 'ச ரி க த நி' என்ற ஸ்வரங்களைக் கொண்ட ராகம் அது. அந்த ராகத்தில் அவர் இயற்றியுள்ள 'ராஜ ராஜ ராதிதே' என்ற பாடலும் தாங்கள் எழுதியுள்ளதைப் போலவே அமைந்துள்ளது. 
பாடலை இங்கு கேட்கலாம்: http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/artist.114/

அன்புடன்,
லலிதா ராம்.

                    பல பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் பாடியுள்ள கவிச்சிங்க நாவலரின் அரிய ஆற்றல்களின் உச்ச கட்டங்களாக இரண்டு நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
                    ஒரு முறை பொன்னுச்சாமித்தேவர் கவிச்சிங்க நாவலரிடம் இவ்வாறு கோரிக்கையிட்டார்:

                    "கால், கொம்பு, விசிறி, ஒற்று, ஙகரம், ஞகரம், பகரம், மகரம் ஆகியவை நீங்கிய அநாசிக நிரோட்டக வெண்பாவை இயற்றவேண்டும். அதையும் பத்தே பத்து நிமிடங்களில் இயற்றவேண்டும்". 

    கால் = ¡
    கொம்பு = ¦
    விசிறி = §
    ஒற்று = மெய்யெழுத்து
    ஙகரம் = ங வரிசை
    ஞகரம் = ஞ வரிசை
    பகரம் = ப வரிசை
    மகரம் = ம வரிசை. 
 
    அநாசிக எழுத்துக்கள்:
                        க, ச, ட, த, ப, ற, ய, ர, ல, வ, ள, ழ,  ஆகியவை.
                        இந்த இடத்தில் உடற்கூறு பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும்.

                        வாயின் உட்புறம், தொண்டைக்குழி, நாசியின் உட்புறம், ஊட்டி ஆகியவை சந்திக்கும் இடத்தில் Pharynx, Laryngo-pharynx, Oro-pharynx, Naso-pharynx என்னும் இடங்கள் இருக்கின்றன. வாயிலிருந்து உணவை அல்லது தண்ணீரை விழுங்கும்போது Glottis, Epiglottis என்னும் ஜவ்வு/தசைகள் தானாகவே இயங்கும். அப்போது Laryngo-pharynx, Naso-pharynx ஆகியவை மூடப்படும். உணவு Oro-Pharynx, Oesophagus வழியாகச் சென்று என்னும் உணவுக் குழலில் இறங்கி இரைப்பைக்குச்செல்லும். சம்பந்தப்பட்ட பாதைகள் சரியாக மூடப்படவில்லையென்றால் தண்ணீர் எட்ஸெட்டெரா மூச்சுக ்குழலுக்குள்ளோ அல்லது நாசியின் உட்புறத்துக்குள்ளோ சென்று புரையேறிவிடும். 

                    பேசும்போது சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாசியின் உட்புறம் திறந்திருக்கும். ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவை அப்படிப்பட்டவை. நாசியின் வழியாக மூச்சு வரும். இவற்றை Nasals என்று சொல்வார்கள். இவைதாம் நாசிக எழுத்துக்கள். 

                    கசடதபற, யரலவளழ ஆகியற்றை உச்சரிக்கும்போது நாசிப் பாதை மூடியிருக்கும். இவை அநாசிக எழுத்துக்கள். 

நிரோட்டகம் :- 
                அதாவது நிர் ஓட்டகம் என்றால் உதடு ஒட்டாமலோ குவியாமலோ சொல்லப்படுவது. 'ஓஷ்டக' என்பது உதடு. உதடு தொங்கி பெரியதாக இருப்பதால்தான் ஒட்டகத்துக்கு ஒட்டகம் என்று பெயர். 

                    நிரோட்டக எழுத்துக்கள் எல்லா உகரங்கள், ஊகாரங்கள், எல்லா ஒகரங்கள் ஓகாரங்கள், ஔகாரங்கள், மகர வரிசை, வகர வரிசை, பகர வரிசை ஆகிய அனைத்தும் நீக்கி மீதி இருப்பவை. 
                    பொன்னுச்சாமித் தேவர் கொடுத்த சமிசைப்படி தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 187 எழுத்துக்களைப் பயன்படுத்த முடியாது. 
                    தேவர் சொன்னபடியே பத்தே நிமிடங்களில் கவிச்சிங்க நாவலர் பாடிவிட்டார்:

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 

அலக = எல்லையுடையவாக
கசடது அடர் = குற்றங்களின் செறிவும்
அளம் = உவர்த்தலும் 
கட = கடந்த 
கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே 
சய = வெற்றியை உடையவனே 
சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே  
சலச = தாமரையில் எழுந்தருளியவனே
தரள = அசைவினை உடையவனே 
சர = சரபனே 
தத = விரிந்த 
ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே 
கரள = விடத்தினை
சரள = நேர்மையாக 
கள  = கண்டத்தில் அணிந்தவனே

Impossible! 
Yet Possible!

ஏகச்சந்த கிராஹி

                    சேதுபதியின் அவைக்களப் புலவராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு கவிச்சிங்க நாவலர் இருந்து வந்தபோது பல புலவர்கள் சேதுநாட்டுக்கு வந்து பிரபந்தங்கள், புராணங்கள் முதலியவற்றை அரங்கேற்றம் செய்து பரிசில் பெறுவதுண்டு.

                    அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் விசுவநாத பாரதி என்பவர்.

                    பொன்னுச்சாமித்தேவரின் பேரில் ஒரு பிரபந்தத்தை இயற்றிக்கொண்டு வந்தார்.
                    அப்போதெல்லாம் கூன்குருடு, வைதவ்யம் போன்ற அபாக்கிய நிலைகளையும்கூட இந்து சமயத்தினர் அமங்கலமாகக் கருதினர்.
                    முருகனின் பேரருள் பெற்ற வரகவியாகிய மாம்பழக்கவிச்சிங்க நாவலரும் அந்த மாதிரியான மோசமான Prejudice-ஸ¤க்கு ஆளாக்கப்பட்டார்.

                    பாரதி அரங்கேற்றத்துக்கு முன்பாக தேவரிடம், "சபை மங்கலகரமாக இருந்தால் நன்றாக இருக்கும்", என்றார்.
                    தேவர் இதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
                    "சபை மங்கலகரமாகத்தானே இருக்கிறது. அரங்கேற்றம் ஆகட்டும்" என்று உத்தரவு கொடுத்து விட்டார்.
                    ஆனால் கவிராஜசிங்கத்துக்குக் காதின் வழியாகச் சென்று மனதில் தைத்தது.
                    "இருக்கட்டும். பார்ப்போம் ஒரு கை!" என்ற முடிவுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

                    பாரதி, தம்முடைய நூலின் நூறு பாடல்களையும் பாடினார்.
                    இன்னும் உரை சொல்ல ஆரம்பிக்கவில்லை.

                    கவிச்சிங்க நாவலர் எழுந்தார்.
                    "சில ஆண்டுகளுக்கு முன்பாக நான்தான் இந்த நூலைப் பாடினேன். இன்னொருவர் மீது பாடியது. பாடி அதற்குப் பரிசிலும் பெற்றேன். விசுவநாத பாரதி எப்படியோ அந்த நூலை அழுத்திக் கொண்டு போயிருக்கிறார். அதில் தேவருடைய பெயரை ஆங்காங்கு செருகிக்கொண்டு வந்திருக்கிறார். இது ஒரு இழிவான கள்ளத்தனம்.இதனை மன்னரவர்கள் நன்கு விசாரித்து நீதி வழங்கவேண்டும்", என்றார்.

                    விசுவநாத பாரதி வெலவெலத்துப்போனார்.
                    ஆவேசத்துடன், "நீர்தான் இதைப் பாடியிருந்தால் இந்த நூலில் உள்ள செய்யுள்களைச் சொல்லும் இங்கே", என்று சவால் விட்டார்.

                    அதென்ன சில செய்யுள்கள்? நூறையுமே சொல்கிறேன்", என்று சொல்லிவிட்டு அந்த நூலின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு பாடலாகச் சொல்லிக்கொண்டே வந்தார். வந்ததுமட்டுமன்றி அவர்அரங்கேற்றம் செய்ததுபோல் தோன்றும்வகையில் இன்னும் சில பாடல்களையும் இயற்றிப்பாடினார். அந்த நூறு பாடல்களில் சில பாடல்களை எடுத்து அவற்றிற்குப் பொருளும் சொல்லி, உரையும் கொடுத்தார்.

                    விசுவநாதபாரதியோ மருண்டுபோய் ஏதும் செய்யத்தோன்றாது பிரமை பிடித்துப்போய் இருந்தார்.
                    பொன்னுச்சாமித்தேவர் ஏதோ நடந்திருக்கிறது. கவிராஜ சிங்ககத்தை எவ்வகையாலோ விசுவநாதபாரதி சீண்டிவிட்டிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டு, உண்மையை விளக்கும்படி
கவிச்சிங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

                    பெருந்தன்மையுடன் நாவலர் கூறினார்:
                    "இது விசுவநாத பாரதி பாடிய நூல்தான்", என்று தொடங்கி 'ஆரம்பத்தில் சபை மங்கலகரமாக இருந்தால் நல்லது' என்று தம்மைக் குறித்துசொல்லப்பட்ட அவச்சொல்லின் காரணத்தால் பாரதிக்குஎப்படியும் பாடம் புகட்டவேண்டும் என்பதற்காக அவ்வாறு அவர் பாடிக்கொண்டுவரும்போதே அத்தனையையும் மனப்பாடம் செய்துகொண்டு, பிறகு ஒப்பித்ததாகச் சொன்னார்.

                    "ஒரே முறை எதையும் கேட்கும்போதே மனனம் செய்துவிடும் ஆற்றல் எனக்கு முருகனின் திருவருளால் உண்டு. 'ஏகச்சந்தகிராஹி' என்பது இந்த மாதிரி ஆற்றல் படைத்தவர்களைக் குறிப்பிடும் பெயர்".

                    அதன் பிறகு விசுவநாத பாரதி ஒவ்வொரு பாடலாகச் சொல்ல,கவிச்சிங்கநாவலர் பாடல்களுக்குப் பொருள் உரைத்தார்.தேவர் நாவலருக்கும் பாரதிக்கும் சன்மானங்கள் கொடுத்துமகிழ்வித்தார்.
                    Incredible!
                    இல்லையா?

அன்புடன்
ஜெயபாரதி

மலேசியாவுக்கு அண்மையில் சென்றிருந்தபொழுது தமிழகத்திலிருந்து பல அன்பர்கள் என்னுடன் பயணம் செய்தனர். ஒருவருக்கொருவர் சென்னை வானூர்தி நிலையத்தில் அறிமுகம் ஆனோம். பாதுகாப்பு ஆய்வுகளை முடித்துக்கொண்டு வானூர்தியில் ஏறி அமர்ந்தோம். அப்பொழுது வானூர்தியில் ஓர் அகவை முதிர்ந்த பெரியவர் கையில் நாட்குறிப்பேட்டைப் பார்ப்பதும் மனப்பாடம் செய்வதுமாக வந்தார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற சாயல் அவரிடம் தெரிந்தது. படிப்பவர்கள், பணியில் இருப்பவர்களே புத்தகத்தைப் புரட்ட அலுத்துக்கொள்ளும் சூழலில் அந்த அகவை முதிர்ந்த பெரியவர் பொறுப்புணர்வுடன் மனப்பாடத்தில் மூழ்கியிருந்தார். தேர்வு எழுதும் மாணவரைப் போல் கண்ணை மூடியும் குறிப்பேட்டைப் பார்த்தும் நினைவைச் சரிசெய்துகொள்வதுமாக இருந்தார். தயங்கியபடியே அவரைப் பற்றி வினவி அறிந்துகொண்டேன். 

செங்கற்பட்டு ஊரைச் சார்ந்த திருக்குறள் கவனகர் சுந்தர. எல்லப்பனார் அவர் பெயர் என அறிந்தேன். அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர் (இதே பெயரில் வேறொரு எல்லப்பனார் இருப்பதாகவும் அவர் இவரைவிட மிகச்சிறந்த கவனக ஆற்றல் பெற்றிருப்பதாகவும் அவர் வழியாகவே அறிந்தேன்). திருவாளர் சுந்தர. எல்லப்பனாரின் நினைவாற்றலும் ஊக்கமும் அறிந்து அவர்மேல் எனக்கு அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. அவரிடம் திருக்குறள் சார்ந்த பல வினாக்களைக் கேட்டு அவரின் நினைவாற்றலை ஆய்ந்தேன். அப்பொழுது என் நினைவுக்குத் திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறள்வெண்பாவைக் குறித்த வினா எழுந்தது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறட்பாக்கள் எத்தனை என்று வினவினேன். முன்பு மூன்று இருப்பதாக நான் அறிந்திருந்திருந்தேன். ஐயாவிடம் கேட்டபொழுது 28 குறள்வெண்பாக்கள் இதழகல் குறள் வெண்பாக்கள் என்றார்கள். அவற்றைச் சொன்னார்கள். இவை பயன்படும் என்று குறித்துகொகண்டேன். அந்த குறட்பாக்களைப் பதிகின்றேன். ஆர்வலர்கள் படித்து மகிழலாம். விரைவில் இரண்டு எல்லப்பனாரையும் அறிமுகம் செய்வேன்.

இதழகல் வெண்பாவைக் குறித்தக் கட்டுரை இணையத்தில் இருக்குமா? என்று தேடினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்புகள் மட்டும் இருந்தனவே தவிர, முழுமையான கட்டுரை எதுவும் என் கண்ணிற்குக் கிடைக்கவில்லை. என் பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்களிடம் இதழகல் வெண்பா குறித்து விளக்கம் சொல்லும்படி கேட்டேன். அவர்களுடன் உரையாடும்பொழுது இந்தத் தலைப்பை ஒட்டி மிகுதியாகச் சிந்திக்க இடம் உள்ளதை அறிந்தேன். 

இதழகல் என்று நாம் இன்று குறிப்பதைப் பண்டு நிரோட்டகம் என்று புலவர்கள் வழங்கினர். நிரோட்டகம் என்பது நிர்+ ஒட்டகம் என்னும் இரு சமற்கிருதச்சொற்களில் இணைப்பாக உள்ளது. நிர் என்றால் இல்லாதது என்று நேர்பொருள் தரினும் இங்கு ஒட்டாதது என்று பொருள். ஓட்டகம் என்றால் உதடு என்று பொருள். நிரோட்டகம் என்றால் உதடு ஒட்டாதது என்று பொருள். பாடலை நாம் ஒலிக்கும்பொழுது நம் இதழ்கள் ஒன்றுடன் ஒன்று குவியாமல் அமைவது ஆகும். இதற்குத் தக இதழ் குவிதல் இல்லாத தன்மையில் பாடல் இருக்கும். அதாவது இதழ் குவிதலுக்குக் காரணமான எழுத்துக்கள் இல்லாமல் பாடல் புனையப்பட்டிருக்கும். 

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே 
செய்தற் கரிய செயல்

என்னும் குறட்பாவை என் பேராசிரியர் எடுத்துரைத்தார். 

உ, ஊ, ஒ, ஓ, ப, ம, வ ஆகிய எழுத்துகள் வராதலால் உதடுகள் குவியாமலும், ஒட்டாமலும் இதைப் படிக்க முடிகிறது. இதில் உ, ஊ, ஒ, ஓ, ஔ, என்ற உயிரெழுத்துகள் ஐந்தும் இதழ் குவியும் முயற்சியில் பிறக்கும். 

“உஊ ஒஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்” (தொல்.பிறப். 87)
உ ஊ ஒ ஓ ஔ இதழ்க் குவிவே (நன்னூல், நூற்பா 78)). 
பம என்ற இரண்டு உயிர்மெய் எழுத்துகளும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும்.

“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (தொல்.பிறப். 97)
“மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும்” (நன்னூல், நூற்பா 81). 
ஆனால் வ என்ற எழுத்தை ஒலிக்கும் பொழுது மேற்பல் கீழிதழைப் பொருந்தும் என்று தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன.

“பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்”(தொல்.பிறப். 98)

இந்த நூற்பா கூறும் நுட்பத்தைக் கவனிக்கவேண்டும். இங்குக் குவிதல் இல்லாமல் மேற்பல் கீழிதழைப் பொருந்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் பார்க்கும்பொழுது வ என்பது உருவாகும்பொழுது இதழ் குவிதல் இல்லை என்று கணக்கிட்டால் 28 குறட்பாக்கள் திருக்குறளில் இதழ் குவிதல் இல்லாமல் இடம்பெற்றுள்ளன எனக் கொள்ளலாம். 

ஆனால் மொழியியல் அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் வ என்ற ஒலி உருவாகும்பொழுது கீழ்இதழுடன் மேற்பல் பொருந்துவதால் வகரமும் அதன் இன எழுத்துகளும் இடம்பெறும் குறட்பவை இதழகல் குறட்பா எண்ணிக்கைக்கு உட்படுத்த வேண்டாம் என்று குறிப்பிடுகின்றார்.

வ என்பதை இதழ்க்குவிதலாக் கொண்டு கணக்கிட்டால் திருக்குறளின் இதழகல் குறட்பாக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும். அதுபோல் உ,ஒ என்பனவற்றை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றதே தவிர இதழ்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே உ,ஊ,ஒ,ஓ, எழுத்துள்ள குறட்பாவை இதழகல் குறட்பாவாகக் கொள்ளலாம். குறளும் மரபு இலக்கணமும் கற்றுவல்ல சான்றோர்கள்தான் இதுகுறித்த முடிவை அறிவிக்கவேண்டும்.

இதழகல் செய்யுளுக்கு 119 தமிழ் எழுத்துகளை பயன்படுத்த முடியாது என்று சிலர் கணக்கிட்டுள்ளனர்(பார்க்க: சந்தவசந்தம் குழு உரையாடல், தங்கமணி) 

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன், 
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8 
ப்,ம்,வ் x 12 உயிர்கள் உறழ்ந்து 36 
உ,ஊ,ஒ,ஓ,ஔ x 15மெய்யுடன் 
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75 
ஆக 119.

இதில் வரும் உ,ஊ என்ன்னும் எழுத்துகளை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றனவே தவிர இதழ் ஒட்டவில்லை என்பதை ஆய்ந்துணர்க.
ஒட்டகம் என்பது அலங்காரம் என்று மாறனலங்காரம் குறிப்பிடுகின்றது. 

கவனக அறிஞர்கள் குறிப்பிடும் இதழகல் குறட்பாக்கள்:

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286

அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃஃதறி கல்லா தவர். 427

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387

உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177

உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080

ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472

கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446

தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு.1296

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208

தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679

நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213

நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341

வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179

வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678

முற்றிலும் இதழகல் வெண்பா

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341
saidevo சொன்னது...
நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால்.

ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02

இதழுறும் வேறு குறட்பாக்கள் யாவையெனத் தேடிப் பதியுங்கள்.
அன்புடன்
ரமணி
2/10/12 18:33
ஹரியண்ணா
நிரோட்டகம், நிரோட்டம், நிரோட்டியம் மூன்றுவிதமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. நிரோஷ்ட்யகம் (அடுத்ததா இதுல இருந்து அது வந்துதா.. இல்ல அதுலேந்து இது வந்ததா அப்படின்னு கோட்டிகானம் கௌம்பறதாங்காட்டியும் அம்பேஏல்....வுடு ஜூஉட்......)  நீரோட்டம்? இப்படி ஓர் ஆட்சியும் உண்டா?
ம, ப, உஊ ஒஓ வர்க்கங்களை நீக்கிப் பாடுவது நிரோட்டம்.  உதடுகள் ஒட்டாமலும் குவியாமலும் இருக்க வேண்டும் என்பர் சிலர்.  ம, ப வர்க்கங்களை ஒதுக்கினாலே போதுமானது என்பாரும் உண்டு. 

அன்புடன்,
ஹரிகி. 

நிரொடகயமக அந்ததி

நிரோட்டக யமக அந்தாதி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நிரோட்டகம்  என்றால் உதடு ஒட்டக்கூடாது

யமகம் என்றால் ஒவ்வோரடியிலும்  அதிகபட்சம் முதல் பத்து எழுத்துகள் வரை ஒரே சொற்றொடர் வெவ்வேறு பொருளில் வரவேண்டும்(முதல் எழுத்தை விட்டுவிட்டு மற்ற  எழுத்துகள் ஒன்றாக அமைப்பது திரிபு)
ஒரு பாடலின் ஈற்றுச் சொல்லோ, எழுத்தோ எழுத்திணையோ அடுத்த பாடலின் முதலாக அமைவது அந்தாதி.

இவ்வளவு கட்டுப்பாட்டுகளுக்கிடையே ஒருவர் கவிதை எழுதும் போது அதில் கவிதையை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.
அது புலவரின் சாமர்த்தியத்தைத்தான் காட்டும்.

என்றாலும் அப்படியும் எழுதியிருக்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் சில சாதுர்யமான பாடல்களை அவ்வப்போது இங்கே இடுகிறோம். நம்மிடம் இருக்கும் செல்வங்கள்  என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவ்வளவுதான்.

திருநெல்வேலியிலுள்ள வேம்பத்தூர் மடாதிபதி பிரம்மஸ்ரீ வாமதேவ சுப்பிரமணிய சிவாச்சாரியரவர்கள் வேண்டுகோளின்படி திருப்பரங்கிரி குமரன்மேல் இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த வேம்பத்தூர்ச் சங்க வித்துவான்களிலொருவராகிய சாமாவையரென்ற ஆண்டி ஐயரவர்கள் குமாரரும், திருவாவடுதுறை ஆதினத்தில் வாசித்துத்  தேர்ந்தவருமாகிய சௌந்தர பாரதியவர்களால் இயற்றப்பட்டு 1932ம் ஆண்டு மதுரை மீனலோசனி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்ற குன்றுதோறாடும் சண்முகப்பெருமான் பேரிற் பாடிய நிரோட்டக யமக அந்தாதியிலிருந்து அதன் கடைசிப் பாடலை இங்குத் தருகிறோம்.  
சிக்கலாகத்தான் இருக்கும். அவிழ்த்துத்தான் பார்க்கலாமே! இதைப்போல நாம் எழுதவேண்டுமென்பதற்காக இதை இடவில்லை. எழுத வேண்டிய அவசியமுமில்லை.ஆனால் முயலத்தடையில்லை அந்தக்காலம் அப்படி.  பரிசில் பெறுவதற்காக அவர்கள் இப்படியெல்லாம் பாட வேண்டியிருந்தது. இத்தகைய ஜாலங்கள் மதிக்கப்பட்டன.

ஏறத் தனத்தரி யார்க்கடல் காரிற் றிடச்செயரி
ஏறத் தனத்தந்தி யின்கைகை யார்கிரிக் கீசனியல்
ஏறத் தனத்தடி யாரிடிடஞ் சார்ந்தியற் றந்தையெயில்
ஏறத் தனத்தக் கிரிகளின் சேய்க்கீ திசைத்தனனே!

பொருள்-
ஏறத்தனத்தரியார்க் கடங்காரிற்றிடச் செயரியேறு-  இடபத்தையுடைய பரமசிவனுக்கும் சங்கபாணிக்கும் அடங்காதவராகிய அசுரர்கள் கெடும்படி செய்கின்ற ஆண்சிங்கமும் அத்தனத்தந்தியின் கை, கையார்கிரிக்கீசன் - இந்திரன் மகளாகிய தனங்களை உடைய  தெய்வானையை மணஞ்செய்த இடமாகிய திருப்பரங்கிரிக்குத் தலைவனும்  இயல் ஏறத்தனத்தடியாரிடஞ்சார்ந்தி தியற்றெந்தை-  தன்னை  விரும்புகின்ற அடியாரின் இதயத் தெழுந்தருளிநின்று இலக்கணம் முதலியவை மிகுதியாக வளரும்படி அனுக்கிரகஞ்  செய்கின்ற என்தகப்பனும் அயில் ஏறு அத்தன் - வேற்படையைத் தரித்த கையை உடையவனும்,  அத்தக்கிரிகளின் சேய்க்கு- பொன்மயமாகிய மலைகளிலில் வீற்றிருந்து காப்பாற்றுகின்றவனுமாகிய ஷண்முகப் பெருமான்பேரில் ஈதிசைத்தனனே-- இந்த நிரோட்டக யமக அந்தாதியை அக்கடவுளின் கிருபையால் இயம்பினேன் என்பதாம்
(எழுதிய புலவரே உரையும் தந்திருக்கிறார்)

இதில்  காப்பு நூற்பயன் நீக்கி மொத்தம் 30 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள். முதல் பாடல் இசைத்தந்தி எனத் தொடங்குகிறது. கடைசிப்பாடல் இசைத்தனனே என நிறைவுறுகிறது.
இலந்தை



     RSS of this page