Home / Kerala

Kerala



19.12.08    இயற்கை சிரிக்கும் காசர்கோடு
கேரளாவில் இயற்கையின் அரவணைப்பில் உள்ள அழகிய மாவட்டங்களில் ஒன்று காசர்கோடு. கடற்கரைகள், ஆறுகள், மேகத்தை தொட்டு விடத்துடிக்கும் நெடிதுயர்ந்த தென்னை மரங்கள் என இயற்கை சிரிக்கும் பகுதிகள் இங்கு ஏராளம். மீன்பிடித்தல் இந்த மாவட்ட மக்களுக்கு பிரதான தொழில். சிறப்பு மிக்க காசர்கோடு மாவட்டம்தான் இந்த வார டூரிஸ்ட் ஸ்பாட்.
 
அனந்தபுரா லேக் கோவில்:

கேரளாவின் ஒரே ஏரிக்கரைக் கோவில் இந்த அனந்தபுரா லேக் கோவில்தான். காசர்கோட்டில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் ஷ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் குடிகொண்டுள்ள அனந்த பத்மநாபசுவாமியின் மூலஸ்தானம் இதுதான் என நம்பப்படுகிறது. கோவில் தெப்பக்குளத்தில் 150 வயதான முதலை ஒன்று இருப்பதாக ஒரு ஆச்சரியத் தகவலையும் இந்தப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள்.
 
ஆனந்தாஸ்ரமம்:

இந்த ஆஸ்ரமம் சர்வதேச அளவில் பிரபலமானது. இதை 1939ம் ஆண்டில் சுவாமி ராமதாஸ் நிறுவினார். தியானத்துக்கும், ஆன்மீக ஆய்வுகளுக்கும் ஆனந்தாஸ்ரமம் பெயர் பெற்றது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.
 
சந்திரகிரி:

காசர்கோட்டில் இருந்து சுமார் 5கி.மீ தொலைவில் உள்ள சந்திரகிரி ஆற்றின் கரையில் சதுரவடிவ கோட்டை ஒன்று அமைந்துள்து. இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதன் அருகே பழமையான ஒரு மசூதியும், கோவிலும் உள்ளது.
 
பேக்கல் கோட்டை:

காசர்கோட்டில் இருந்து சுமார் 15கி.மீ தொலைவில் உள்ள அழகான சுற்றுலாத்தலம் பேக்கல் கோட்டை. கடலுக்கு அரணாக எழுந்து நிற்பதைப் போல காட்சி அளிக்கிறது. 17ம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு. மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் வரும் உயிரே... பாடல் படமாக்கப்பட்டது இந்த பேக்கல் கோட்டை பின்னணியில்தான்.
 
மதர் டாலரஸ் சர்ச்:

ரோமன் கத்தோலிக்கர்களுக்கான இந்த சர்ச், கும்பளா-பதியத்கா சாலையில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மிகப் பழமையான சர்ச் என்ற பெருமைக்குரியது.
 
மாலிக் தினார் மசூதி:

இந்தியாவுக்கு வருகை தந்த மாலிக் தினார் கட்டிய 10 மசூதிகளில் இதுவும் ஒன்றாகும். மாலிக் தினாரின் சமாதியும் இங்கு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் உரூஸ் விழாவில் பங்கேற்க பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள்.

 இவை தவிர அஜனூர், கோடஞ்சேரி, புலியம்குளம், பள்ளிகேர் கடற்கரை, மதியன்குளம் துர்கை கோவில், மஞ்சேஸ்வரா என பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

 சுற்றுலாத் தலம் என்பதால் அனைத்து விதமான உணவுகளும் கிடைக்கின்றன. தங்கும் இடங்களைப் பொறுத்தவரை தனியார் விடுதிகளும், சுற்றுலாத்துறை அங்கீகாரம் பெற்ற விடுதிகளும் உள்ளன. நல்ல சாலை வசதி உள்ளது. கோழிக்கோடு-மங்களூர்-மும்பை ரயில்பாதையில் காசர்கோடு அமைந்துள்ளதால் பிற பகுதிகளில் இருந்து ரயில்களும் தாராளமாக உள்ளன. காசர்கோட்டில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் கர்நாடக மாநிலத்தில் மங்களூர் விமான நிலையம் உள்ளது. கொச்சி சர்வதேச விமான நிலையம் சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செப்டம்பர் முதல் மார்ச் வரை காசர்கோட்டில் சுற்றுலா காலமாகும்.

http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/top%20image-----1.jpg
வாஸ்கோடகாமாவை வசீகரித்த கோழிக்கோடு
ங்கு நோக்கினும் பச்சைப் பசேல் என இயற்கையழகு கூடுகட்டி நிற்கும் மாவட்டம், கோழிக்கோடு. கேரளத்தின் வடக்குப்பகுதியில் அரபிக் கடற்கரையோரம் அமைந்துள்ள அழகான மாவட்டம் கோழிக்கோடு என்று குறிப்பிடப்படும் கள்ளிக்கோட்டை ஆகும். சாலியார்ப் புழா, கல்லாய்ப்புழா, கடலுண்டிப்புழா, கோரப்புழா, குற்றியாடிப்புழா, மய்யழிப்புழா என பல ஆறுகள் தவழ்ந்து வருவதால் விவசாயம் செழித்து விளங்குகிறது. பலதரப்பு வழிபாட்டுத்தலங்களையும் தாங்கி நிற்பதாலேயோ என்னவோ...மத நல்லிணக்கத்திற்கும் இங்கு குறைவில்லை. சிறப்பு மிக்க கோழிக்கோடுதான் இந்த வார நமது டூரிஸ்ட் ஸ்பாட்.

காப்பாடு கடற்கரை:

கோழிக்கோடு என்றதும் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவுக்கு வருவது காப்பாடு கடற்கரைதான். இது வரலாற்றுப்புகழ் வாய்ந்தது. இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்த வாஸ்கோடகாமா கி.பி. 1498ல் மூன்று பெரிய கப்பல்களில் 170 மாலுமிகளுடன் வந்திறங்கி இந்தியக் கடற்கரையில் கால்பதித்த இடம்தான் இந்த காப்பாடு கடற்கரை. அதை உணர்த்தும் வகையில் இங்கு ஒரு நினைவுச்சின்னம் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. கடலுக்குள் அதன் மேற்பரப்பில் துருத்திக்கொண்டிருக்கும் ஒரு பாறையில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். பாறையுடன் கூடிய இந்தப்பகுதி கப்பக்கடவு என அழைக்கப்படுகிறது.

கதீட்ரல் அன்னை தேவாலயம்:

இத்தாலிய- இந்திய கட்டடக் கலைகளின் கலவைக்கு எடுத்துக்காட்டாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது இந்த தேவாலயம். மேலும் மலபாரில் உள்ள லத்தீன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருக்கூட்ட தலைமையகமாகவும் இது விளங்கி வருகிறது.

கோழிக்கோடு கடற்கரை:

சூரிய அஸ்தமனத்தைக் கண்டு ரசிப்பதற்காகவே இங்கு ஏராளமானோர் வருகிறார்கள். அது...சூரிய அஸ்தமனம் அல்ல! அழகின் உதயம் எனச் சொல்ல வைக்கும் அளவுக்கு பார்ப்போரை பரசவப்படுத்துகிறது. பழைய கலங்கரை விளக்கம் ஒன்றும், நூற்றாண்டுகளைக் கடந்த இரண்டு தூண்களும் இங்கு உள்ளன. சிங்க பூங்கா, கடன் மீன்காட்சி சாலை என குதூகலப்படுத்தும் அம்சங்களும் இங்கு இருக்கின்றன.

கோழிக்கோடு உப்பங்கழி:

காயல் என்றழைக்கப்படும் உப்பங்கழிகளில் படகுப் பயணம் என்றதுமே உள்ளம் உவகை கொள்ளும். கோழிக்கோடு உப்பங்கழிகளிலும் படகுப் பயணம் செய்து மகிழலாம். அந்த வகையில் பறவைகள் சரணாலயம் அமையப்பெற்றுள்ள கடலுண்டிப் புழா, படகுப்போட்டிக்கு பெயர் பெற்ற கோரப்புழா ஆறுகளில் படகுப்பயணம் செல்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

களரி, கதகளிப் பயிற்சி:

கேரள மாநிலத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் களரிப் பயற்று என்றழைக்கப்படும் களரிச்சண்டை பயிற்சி மையங்கள் கோழிக்கோட்டில் நிறைய உள்ளன. இதே போல பாரம்பரிய நடனமான கதகளி நடன பயிற்சி மையமும் இங்கு அமைந்துள்ளது.

ஜும்மா பள்ளி:

கோழிக்கோடு ஜும்மா பள்ளி என்றழைக்கப்படும் குற்றிச்சிறா மிஸ்கால் மசூதி, 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான மசூதியாகும். அந்தக்காலத்திலேயே நான்கு அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. பழங்காலத்து அழகிய மர வேலைப்பாடுகள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

முன்னூர் ஆலயம்:

கோழிக்கோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இந்தக்கோவில், திருவன்னூர் சிவன் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சிவராத்திரி திருவிழா பிரசித்தம்.
 இவை தவிர எலத்தூர், கடலுண்டி பறவைகள் சரணாலயம், கிருஷ்ண மேனன் அருங்காட்சியகம், குஞ்சாலி மரக்கார் இல்லம், செயின்ட் மேரி தேவாலயம், திக்கோடி கலங்கரை விளக்கம், பழசி ராஜா அருங்காட்சியகம், கோழிக்கோட்டில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள பெருவண்ணாமுழி அணைக்கட்டு, பழங்கால கேரளத் துறைமுகமான பேப்பூர் என பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

கேரள பாரம்பரிய உணவு வகைகள் உள்ளிட்ட பல வகை உணவு வகைகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. தங்குவதற்கு தனியார் மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை அங்கீகாரம் பெற்ற விடுதிகளும் இருக்கின்றன. நல்ல சாலை வசதி உள்ளது. பிற பகுதிகளை இணைக்கும் வகையில் கோழிக்கோட்டில் ரயில் நிலையம் உள்ளது. விமான நிலையமும் அமையப்பெற்றுள்ளது. செப்டம்பர் முதல் மே மாதம் வரை இங்கு சுற்றுலா காலமாகும்.
"உலகம் சுற்றிய வாஸ்கோடகாமாவை வசீகரித்த கோழிக்கூடு, உங்களையும் வசீகரித்து விடாதா என்ன..?"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/touristspot-top-image.jpg
கொல்லம் கண்டால் இல்லம் வேண்டாம்
கொல்லம் கண்டால் இல்லம் வேண்டாம் என கேரளத்தில் ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. அதாவது...கொல்லத்தை பார்த்தவர்கள் வீட்டையே மறந்து விடுவார்கள் என்பது இதன் பொருள். உண்மைதான்.அழகும், வனப்பும் மிக்க கேரள மாநிலத்தின் செழிப்பான நகரங்களில் கொல்லமும் ஒன்று. இங்குள்ள துறைமுகம் ஒரு காலத்தில் வர்த்தகத் துறைமுகமாக விளங்கி வந்தது. கொல்லத்தின் பரப்பளவில் 30சதவீதத்தை உப்பங்கழி என்றழைக்கப்படும் ஏரிதான் ஆக்கிரமித்துள்ளது. இதனால் இயற்கை அழகுக்கு இங்கு பஞ்சமேயில்லை.சிறப்புமிக்க கொல்லத்திலும் அதன் சுற்றுப்பகுதியிலும் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.

கோழி வளர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க தொழிற் துறையாகும்female oriended சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக கோழிவளர்ப்பு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

குட்டம் குளங்கரா கோவில்:

கொல்லத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. இங்கு பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் தாலப்பொலி மகோத்சவ விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் போது ஆண்பக்தர்கள் பெண்வேடம் அணிந்து மலர்களால் அர்ச்சனை நடத்துவது சிறப்பு.
 
 
குளத்துப்புழா:

கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள குளத்துப்புழா சாஸ்தா கோவில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விஷு திருவிழாவுக்கு பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இதே போல ஆரியங்காவு அய்யப்பன்கோவில், அச்சன் கோவில் ஆகியவையும் இங்கு கொல்லம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.
செந்தூரணி வனவிலங்கு சரணாலயம்:

யானை, புலி, கரடி, சிங்கவால் குரங்கு போன்ற மிருகங்கள் உலாவரும் சரணாலயமாக செந்தூரணி சரணாலயம் திகழ்ந்து வருகிறது. பலவகையான மலர்களும் பூத்துக்குலுங்குகின்றன. தேயிலை மற்றும் காபி எஸ்டேட்டுகளும் நிறைய உள்ளன. இயற்கை ரசிகர்களின் இன்பபுரி இது.

நீண்டகரா மீன்பிடி துறைமுகம்:

 கொல்லத்தில் இருந்து சுமார் 8கி.மீ தொலைவில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இது இந்தோ- நார்வேஜியன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகும். லட்சக்கணக்கான மீன்கள், இறால்கள், சிப்பிகள் நிறைந்த மணல் திட்டுகள் இந்த கடல் பகுதிக்குள் ஏராளமாக காணப்படுன்றன.
தங்கசேரி:

கடலோரத்தில் உள்ள தங்கசேரி பகுதி, வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. அதற்குச் சான்றாக, 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சர்ச்சுகள் பல உள்ளன. போர்ச்சுகீசியர்களின் கோட்டைச் சிதிலங்களும் காணப்படுகின்றன. மேலும் இங்குள்ள 144அடி உயர கலங்கரை விளக்கமும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
பாலருவி:

தமிழக எல்லைக்கு அருகில் புனலூர்- செங்கோட்டை பாதையில் சுமார் 300 அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கிறது பாலருவி. பால்போன்ற வெண்மை நிறத்தில் கொட்டிக்கொண்டிருப்பதால் இது பாலருவியாம். மீண்டும் மீண்டும் குளிக்கத் தூண்டும் உற்சாகத்தை தருகிறது பாலருவி.
ஜடாயு பாறை:

சடயமங்கலத்தில் உள்ள பெரிய பாறை ஒன்றுதான் ஜடாயு பாறை என்றழைக்கப்படுகிறது. ராமாயணத்தின் படி, சீதையை தூக்கிச் செல்லும் ராவணனை பறவைகளின் அரசன் ஜடாயு வழிமறித்துப் போரிடுகிறான். அப்போது ராவணனிடம் வெட்டுப்பட்டு ஜடாயு கீழே விழுகிறான். அப்படி ஜடாயு கீழே விழுந்த இடம்தான் ஜடாயு பாறை என அழைப்படுகிறதாக அப்பகுதியினர் சொல்கிறார்கள்.
மான்கள் மறுவாழ்வு மையம்:

துள்ளி வரும் புள்ளி மான்களைக்கண்டால் துள்ளாத மனமும் துள்ளும். அந்த உணர்வை இங்கு அனுபவிக்கலாம். காட்டுப்பகுதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டீர் ரீஹேபிலிடேஷன் சென்டரில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும் மான்களைப் பார்த்து பரவசப்படலாம். காலாற நடந்து சென்றும், மரங்களில் அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் இருந்து கொண்டு மான்கள் உலா வருவதைப் பார்த்து ரசிக்கலாம்.
மாதா அமிர்தானந்த மயி மடம்:

உலகம் முழுவதும் பக்தர்களைக் கொண்டுள்ள மாதா அமிர்தானந்த மயி, கொல்லத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள பறயக்கடவு என்ற இடத்தில் மீனவக்குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அமிர்தானந்தமயி பிறந்த அந்த இடம்தான் மாதா அமிர்தானந்த மயி ஆசிரமங்களின் தலைமையிடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை அமிர்தபுரி என பக்தர்கள் அழைக்கிறார்கள்.
 
இவை தவிர திருமுல்லவரம் கடற்கரை, தேவல்லி மாளிகை, ஒச்சிரா பரப்பிரம்மா கோவில், கொல்லம் பிக்னிக் வில்லேஜ், திருமுல்லாவரம் கடற்கரைக்கு அருகே உள்ள மகாவிஷ்ணு கோவில் என பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன. கொல்லம்- ஆழப்புழா இடையே அஷ்டமுடி ஏரியில் 8மணி நேர படகுப் பயணம் மறக்க முடியாத அனுபவம்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வகைகளைப் பொறுத்தவரை தரமான உணவு வகைகள் தாராளமாக கிடைக்கின்றன. நல்ல தங்கும் விடுதிகள் உள்ளன. நல்ல சாலை வசதி உள்ளது. பிற இடங்களை இணைக்கும் வகையில் கொல்லத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கொச்சின், திருவனந்தபுரம் விமான நிலையங்கள் கொல்லத்துக்கு அருகில் உள்ள விமான நிலையங்கள். அக்டோடர் முதல் மார்ச் வரை இங்கு சுற்றுலா காலம் ஆகும்.
"இப்போ சொல்லுங்க. கொல்லம் கண்டால் இல்லம் வேண்டாம்தானே"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/kottayam-boat-index.jpg
'கோட்டைவிடக்' கூடாத கோட்டயம்
கேரள மாநிலத்தில் தனித்துவத்துடன் விளங்கும் மாவட்டங்களில் கோட்டயம் முக்கியமானது. கல்வியறிவில் நூற்றுக்கு நூறு, கலாச்சாரத்தில் தனி வரலாறு என கோட்டயத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கிறிஸ்தவ இறையியல் அமைப்பைச் சேர்ந்த ஆங்கிலேயர், பெஞ்சமின் பெய்லி என்பவர் கி.பி.1820ம் ஆண்டில் மலையாள மொழி அச்சகத்தை கோட்டயத்தில் தொடங்கினாராம். அதனாலேயோ என்னவோ..! இன்றளவும், மலையாள பத்திரிகைகளின் பிறப்பிடமாக கோட்டயம் திகழ்ந்து வருகிறது.

 மனதை மகிழ வைக்கும் ஹவுஸ் போட் பயணம், உடலுக்கு புத்துணர்வு ஊட்டும் ஆயுர்வேத சிகிச்சை போன்றவையும் கோட்டயத்தின் தனி அடையாளங்களாக விளங்கி வருகின்றன, இப்படிச் சிறப்புகள் பல கொண்ட கோட்டயம் மற்றும் சுற்றுப்பகுதியில் ரசிக்கவும், தரிசிக்கவும் நிறைய இடங்கள் உள்ளன.
 
ஐயம்பாறா:

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2ஆயிரம் அடி உயரத்தில், 20ஏக்கர் பரப்பளவுக்கு ஆக்கிரமித்துள்ள பெரிய பாறைதான் ஐயம்பாறா என அழைக்கப்படுகிறது. மகாபாரத பஞ்ச பாண்டவர்கள், வனவாசத்தின் போது இந்த பகுதியில் இளைப்பாறிச்சென்றதாக கருதப்படுகிறது. சுமார் 15பேர் தங்கும் அளவுக்கு இங்கு ஒரு குகை உள்ளது. ஐயம்பாறாவில் இருந்து சூர்ய அஸ்தமனக்காட்சியை பார்ப்பது கொள்ளையழகு.

ஏற்றுமானூர் மகா சிவன் கோவில்:

கி.பி.16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில், பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறது. இந்து மத மரபிலான மாயக்கதைகளின் காட்சிகள் சிலவற்றை, கோவிலில் சிற்பங்களாகவும் சுவரோவியங்களாகவும் உருவாக்கி வைத்துள்ளனர். பிப்ரவரி- மார்ச் மாதங்களில் இங்கு நடைபெறும் 10நாள் திருவிழா மிகவும் பிரசித்தம்.
 
கய்யூர் பரணங்கானம்:

மகாபாரத பஞ்சபாண்டவர்களுக்காக இங்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலையைப் போலவே இங்கு விளக்கெரிக்க நெய் பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு இங்கு அனுமதியில்லை.
 
அதிரம்புழா செயின்ட் மேரி சர்ச்:

கி.பி. 1080ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச், கி.பி. 1874ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. புனித செபாஸ்டியனை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் வாணவேடிக்கை மற்றும் விளக்கு அலங்கார விழா நடத்தப்படுகிறது. விழாக்களின் போது தங்க வில், அம்புகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
 
எரிமேலி மசூதி:

ஐயப்ப பக்தர்களால் மறக்க முடியாத ஒரு இடம் எரிமேலி. இது கோட்டயத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஐயப்பனின் தோழரான இஸ்லாமியர் வாவர் என்பவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட மசூதி இங்குள்ளது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், முன்னதாக இங்கு வந்து வாவரை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு திருநீறு வழங்கப்படுகிறது. பக்தகர்கள் துள்ளலுடன் ஆட்டம் போட்டுச் செல்லும் பேட்டைத்துள்ளல் நிகழ்ச்சியும் இங்கு சிறப்பு வாய்ந்தது.
 
குமரகம்:

கடல் மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள இந்தப்பகுதி, நீர்ததும்பும் உப்பங்கழிகளால் சூழப்பட்டதாகும். இதனாலேயே பல தீவுக்கூட்டங்களாக அழகாக காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. இந்த உப்பங்கழிகளில் படகுச்சவாரி செய்வது ஒரு சுகமான அனுபவம். இதற்காகவே விதவிதமான படகுகள், குறிப்பாக ஹவுஸ் போட் என்றழைக்கப்படும் படகுவீடுகள் நிறைய உள்ளன. திரும்பிய இடமெல்லாம் நீர், பசுமை, பறவைகள் என இயற்கை வளம் கொட்டிக்கிடப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமாக இங்கு வருகிறார்கள். கோட்டயத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் குமரகம் உள்ளது. இங்கு நிறைய ஆயுர்வேத சிகிச்சை மையங்களும் உள்ளன.
பறவைகள் சரணாலயம்:

வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்துள்ள குமரகம் பறவைகள் சரணாலயம்  கோட்டயத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது. பறவை விரும்பிகளின் சொர்க்கமாக இது திகழ்ந்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம், இடம் பெயர்ந்து வரும் விதவிதமான பறவைகளை இங்கு காணலாம்.
 
 இவை தவிர அருவித்தர சர்ச், கண்ணாடிப் பாறா, தக்ஷிணா மூகாம்பிகை கோவில், தாழத்தங்ஙாடி ஜும்மா மசூதி, தாழத்தங்ஙாடி வலியபள்ளி சர்ச், வேம்பநாடு ஏரி, தலித் மற்றும் ஈழவ மக்கள் நுழைவுக்காக பெரியார் போராட்டம் நடத்திய வைக்கம் சிவன் கோவில் என பார்க்கத்தகுந்த நிறைய இடங்கள் கோட்டயம் மற்றும் அதைச்சுற்றியும் உள்ளன.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதியைப் பொறுத்தவரை தரமான அனைத்து வகை உணவுகளும் கோட்டயத்தில் கிடைக்கின்றன. தங்கும் விடுதிகளும் நிறைய உள்ளன. நல்ல சாலை வசதி உள்ளது. பிற பகுதிகளை இணைக்கும் வகையில் கோட்டயத்தில் ரயில்நிலையம் இருக்கிறது. எர்ணாகுளத்தில் விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து சாலை மார்க்கமாக கோட்டயம் வந்து விடலாம். சுற்றுலா காலம் செப்டம்பர்- மார்ச் வரை.
 
"ரசிப்பதிலும், தரிசிப்பதிலும் கோட்டைவிடக் கூடாத இடம் கோட்டயம்! அப்படித்தானே...!"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/cochin-ship-yard-index.jpg
அரபிக்கடலின் ராணி கொச்சின்
ந்த அரபிக் கடலோரம்...ஒரு அழகைக் கண்டேனே...என பாடத்தூண்டும் அளவுக்கு அரபிக் கடலோரம் அமைந்துள்ள அழகான நகரம் கொச்சின். கேரள மாநிலத்தின் வர்த்தக தலைநகரம். அரபிக் கடலின் ராணி என்றழைக்கப்படும் பெருமைக்குரிய துறைமுக நகரம். இப்படி பல சிறப்புக்களை கொண்ட கொச்சிதான் இந்த வார டூரிஸ்ட் ஸ்பாட்.
 
ஆலுவா சிவன் கோவில்:

கொச்சினில் இருந்து சுமார் 20 கி.மீ தொலையில் ஆலுவா சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பெரியாற்றின் கரையில் நடத்தப்படும் சிவராத்திரி விழா மிகவும் பிரபலம். பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
 
எர்ணாகுளத்தப்பன் கோவில்:

கொச்சினையொட்டி எர்ணாகுளத்தில் இந்தக்கோவில் உள்ளது. இங்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன், அனைத்து தீமைகளையும் அழிக்க வல்ல ஆதிசிவனாக பக்தர்களால் போற்றப்படுகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இது.
 
கொச்சின் கப்பல் கட்டும் தளம்:

இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமாக கருதப்படும் கொச்சின் கப்பல் கட்டும் தளம், வெல்லிங்டன் தீவுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஜப்பான் கூட்டுடன் இது செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் எண்ணெய் கப்பலான மோதிலால் நேரு இங்குதான் கட்டப்பட்டது.
 
கொச்சின் கோட்டை:

இந்தோ- ஐரோப்பிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது கொச்சின் கோட்டை. அந்தக்காலத்தில் சாதாரண ஒரு மீனவ கிராமமாக இருந்த கொச்சினை கட்டமைத்தவர்கள் ஐரோப்பியர்கள். அதற்குச் சான்றாக கொச்சின் கோட்டை எழுந்து நிற்கிறது.
 
சாந்தாகுரூஸ் பசிலிகா:

போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட இந்த சர்ச் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1984ம் ஆண்டில் போப்பாண்டவரால் பசிலிகாவாக அறிவிக்கப்பட்டது. கொச்சினுக்கு வரும் கிறிஸ்தவர்கள் இந்த சர்ச்சுக்கு வராமல் செல்வது இல்லை.
 
சினகோகு:

சினகோகு என்றழைக்கப்படும் இந்த யூதர் கோவில் கி.பி.1568ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். 18ம் நூற்றாண்டு கால ஓவியங்கள், பழங்கால வரிவடிவ எழுத்து பதித்த தாமிரத் தட்டுக்கள் என பல்வேறு கலைப்பொருட்களை இங்கு பார்க்கலாம்.
 
செராய் கடற்கரை:

நீச்சல் பிரியர்களின் உள்ளம் கவர்ந்த இடம் செராய் கடற்கரை. கேரளாவுக்கே உரித்தான உயரமான தென்னை மரங்களும்,  பச்சைப் பசேல் வயல்வெளிகளும் கடற்கரையை மேலும் அழகுபடுத்துகின்றன.

 இவை தவிர சித்திரக் கலைக்கூடம், சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில், மட்டாஞ்சேரி டச்சு மாளிகை,  மெரிடைம் மியூசியம்,  இந்தோ- போர்ச்சுகீஸ் மியூசியம்,  வாஸ்கோடகாமா வாழ்ந்ததாக கூறப்படும் வாஸ்கோ ஹவுஸ் என கொச்சினில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து

கேரள மாநிலத்தின் வர்த்தகத் தலைநகராக கொச்சின் விளங்குவதால் உணவு மற்றும் தங்குமிடங்களுக்கு பஞ்சமில்லை. நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. பிற பகுதிகளில் இருந்து கொச்சினுக்கு நல்ல சாலை வசதி உள்ளது. கொச்சினில் சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது.
 
"அரபிக் கடலோர...அழகை ரசிக்க நீங்க எப்போ வரப்போறீங்க?"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/thrissurpooram-kuda-index.jpg
   பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர்
கேரள மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எழில் சூழ்ந்த பகுதி திருச்சூர். கேரளத்தின் பண்பாட்டு தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாரம்பரியப் பெருமை கொண்டது. சக்தன் தம்புரான் என அழைக்கப்பட்ட ராஜா ராம வர்மாவால் செதுக்கப்பட்ட ஊரான திருச்சூரில் ரசிக்கவும் இடங்கள் உண்டு. தரிசிக்கவும் தலங்கள் பல உண்டு.
 
ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்:

திருச்சூர் என்றதும் பக்தர்களிடம் ஒரு பரவசம் ஏற்படும். "என்டே குருவாயூரப்பா..." என உதடுகள் உச்சரிக்கத் தொடங்கி விடும். காரணம், திருச்சூர் அருகே குருவாயூரில் அமையப் பெற்றுள்ள பிரசித்தி பெற்ற ஷ்ரீகிருஷ்ணர் கோவில்தான். திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமையப் பெற்றுள்ள குருவாயூர் ஷ்ரீகிருஷ்ணன் கோவிலை குருபகவானும், வாயு பகவானும் நிர்மாணித்ததாக ஐதீகம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் 33.5 மீட்டர் உயரத்துக்கு தங்கத்தகடுகள் வேயப்பட்ட கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. 13 அடுக்குகளுடன் கூடிய 7 மீட்டர் உயரம் கொண்ட தீபத்தூண் ஒன்றும் பக்தர்களை கவர்ந்து வருகிறது. கோவிலின் கருவறையில் குருவாயூரப்பன் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். குருவாயூரப்பனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
 
சாவக்காடு பீச்:

குருவாயூரில் தரிசிக்க குருவாயூரப்பன் கோவில் என்றால் ரசித்து மகிழ சாவக்காடு பீச் எனக்கூறலாம். விரிந்து பரந்து கிடக்கிறது சாவக்காடு கடற்கரை. இங்கு 100அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இதில் ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உள்ளன. சிரமம் பார்க்காமல் 145 படிகளில் ஏறிச்சென்று மேலிருந்து பார்த்தால்...இறங்கி வர மனமிருக்காது. சாம்பல் நிறத்தில் விரிந்து கிடக்கும் கடலையும், கூட்டம் கூட்டமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் தென்னைமரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே...யிருக்கலாம்.
 
பாலையூர் சர்ச்:

குருவாயூரில் பாலையூர் என்ற இடத்தில் அமையப்பெற்றுள்ள கத்தோலிக்க சிரியன் சர்ச் பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். இது புனித தாமஸால் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம். இங்கு ஆண்டு தோறும் ஜுலை மாதம் கொண்டாடப்படும் விருந்து விழாவில் பல மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.
 
கொடுங்ஙல்லூர்:

அரபிக்கடலில் பெரியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள பகுதியான கொடுங்ஙல்லூர் மிகவும் பழமைவாய்ந்த ஒரு இடம். யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலநாட்டு வியாபாரிகள் வர்த்தகம் செய்த இடமாக கருதப்படுகிறது.
 
சேரமான் ஜும்மா மசூதி:

கொடுங்ஙல்லூர் பகுதியில் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் சேரமான் ஜும்மா மசூதி அமைந்துள்ளது. இது கி.பி.629ம் நிர்மாணிக்கப்பட்ட பழமையாக மசூதி ஆகும்.
 
சாலக்குடி:

திருவிதாங்கூர் நெடுங்கோட்டையை திப்புசுல்தான் முற்றுகையிட்டு தளம் அமைத்ததாக கூறப்படும் இடம்தான் சாலக்குடி. திருச்சூரில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைகள்,  மரங்கள் சூழ்ந்த பச்சைப்பசேல் பகுதி. இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 
அதிரப்பள்ளி அருவி:

சாலக்குடியில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி அருவி. இது பெயருக்கு ஏற்றாற்போல ச்சும்மா...அதிர வைக்கும் அருவிதான். 80 அடி உயரத்தில் இருந்து பேரிரைச்சலுடன் விழும் அருவி,  அந்தப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அருவி விழுவதால் புகை மண்டலமாய் எழும் சாரல்,  நம் மேனியை தழுவி ஜில்லிட வைக்கிறது. இந்தியாவின் நயாகரா என வர்ணிக்கப்படும் அதிரப்பள்ளி அருவியை சுட்டுத்தள்ளாத சினிமா காமிராக்கள் மிகமிகக் குறைவு. புன்னகை மன்னன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அதிரப்பள்ளி அருவி அழகுத் தாண்டவம் ஆடியிருக்கிறது.

 இவை தவிர திருச்சூரில் உள்ள கேரள லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி, திருப்ரயார் கோவில், திருவம்பாடி மற்றும் பாறமெக்காவு கோவில்கள், பீச்சி அணைக்கட்டு மற்றும் சரணாலயம், கதகளி நடனம் கற்றுத்தரும் செருதுருத்தி கேரள கலா மண்டலம் என திருச்சூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.
 
திருச்சூர் பூரம் திருவிழா:

கேரளாவின் தனிச்சிறப்பு மிக்க கொண்டாட்டங்களில் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவும் ஒன்று. இங்குள்ள வடக்குநாதன் கோவிலின் முன்புறம் பூரம் திருவிழா நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கான செண்டை மேளங்கள் முழங்க,  எண்ணிலடங்காத வாணவெடிகள் வர்ணஜாலம் காட்ட,  அலங்காரம் செய்யப்பட்ட யானைகள் அணிவகுத்து வர...நடைபெறும் திருவிழா வேறெங்கிலும் காண முடியாத அரிய திருவிழா. மலையாள மாதமான மேடா மாதத்தில் (ஏப்ரல்- மே) சிறப்பு மிக்க பூரம் திருவிழா நடத்தப்படுகிறது.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதிகளைப் பொறுத்தவரை திருச்சூர் பகுதியில் நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. பிற இடங்களை இணைக்கும் வகையில் ரயில் நிலையமும் திருச்சூரில் இருக்கிறது. திருச்சூருக்கு அருகே சுமார் 40 கி.மீ தொலைவில் எர்ணாகுளத்தில் விமான நிலையம் உள்ளது.
 
"திருச்சூருக்கு வந்தா திருச்சுப்போக (திரும்பிப் போக) மனசு வராது..."
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/palakkad-index.jpg
பரவசப்படுத்தும் பாலக்காடு
காற்றின் தழுவலால் களிப்புற்று கதகளி ஆடிக் கொண்டிருக்கும் நெற்கதிர்கள்,  முகில்களை முத்தமிடப்போவது நீயா? நானா? என முட்டி மோதிக் கொண்டிருக்கும் நெடிதுயர்ந்த பாக்குமரங்கள் என இயற்கை அழகு பின்னிப் பிணைந்த  பச்சைப்பசேல் மாவட்டம்,  கேரளாவின் பாலக்காடு மாவட்டம். கோயம்புத்தூரையொட்டி தமிழக- கேரள எல்லையில் அமையப் பெற்றுள்ள பாலக்காடு,  கேரளாவின் தலைவாசல் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் இருப்பதால், பாலக்காட்டின் தட்பவெப்ப நிலை பெரும்பாலும் ஜிலுஜிலு தான். பாலக்காட்டில் பார்த்து பரவசப்பட நிறைய இடங்கள் உள்ளன.
 
அட்டப்பாடி:

அலற வைக்கும் அடர்ந்த காடுகள், சலசலத்து ஓடும் ஆறுகள், மலைக்க வைக்கும் மலைக்குன்றுகள் என இயற்கை விரும்பிகளை சொக்க வைக்கும் வனப்பகுதிதான் அட்டப்பாடி வனப்பகுதி. பாலக்காடு அருகே மன்னார்காட்டில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது. ஏராளமான ஆதிவாசி இனத்தவர்களும் அட்டப்பாடி வனப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மல்லேஸ்வரன் மலை உச்சியை பெரிய சிவலிங்கமாக கருதி இந்த மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இயற்கையுடன் இணைந்திருக்க விரும்புவோரும், ஆதிவாசி மக்களை அறிந்து வர விரும்புவோரும் அட்டப்பாடியை தேர்வு செய்யலாம்.
 
அமைதிப் பள்ளத்தாக்கு:

மன்னார்காட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இங்கு நடமாடும் வனவிலங்குகளுக்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதற்காக முக்காலி என்ற இடம் வரை மட்டுமே வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகு காட்டுக்குள் நடைபயணம்தான். முக்காலியில் இருந்து சுமார் 25 கி.மீ நடந்து சென்றால் அழகான குந்திப்புழா அருவி வரவேற்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கில் நடைபயணம் மேற்கொண்டு இயற்கை அழகை ரசித்து வருவது வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
 
ஏமூர் பகவதி கோவில்:

பாலக்காடு அருகே ஒலவக்கோடு சந்திப்புக்கு அடுத்து ஏமூர் பகவதி கோவில் உள்ளது. இந்த அம்மனைப் பற்றிய ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு துறவிக்கு காட்சி தர சம்மதித்த அம்மன்,  அப்போது வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறாள். ஆனால் காட்சி தருவதற்காக அம்மன் கண்விழித்த போது அங்கு ஏராளமானோர் இருக்கவே அம்மன் மறைந்து விட்டாளாம். அம்மனின் மேலெழுந்து வரும் கையை மட்டுமே அங்கு கூடியிருந்த பக்தர்கள் பார்க்க முடிந்ததாம். அதன்படி அம்மனின் கை மட்டுமே இங்கு வழிபாட்டுக்கு உரியதாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த அம்மனை காலையில் சரஸ்வதியாகவும், மதியம் லட்சுமியாகவும்,  மாலையில் துர்க்கையாகவும் நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
 
குமாரபுரம் கோவில்:

பாரதப்புழா ஆற்றங்கரையில் உள்ள குமாரபுரம் கோவிலில் வெங்கடாஜலபதி தனது மனைவியர் அலமேலு, மங்கம்மாள் ஆகியோருடன் எழுந்தருளி உள்ளார். இங்குள்ள வெங்கடாஜலபதி திருப்பதிக்கு இணையானவராக பக்தர்களால் போற்றப்படுகிறார். இதனால் திருப்பதி கோவிலில் நடத்தப்படுவதைப் போலவே இங்கும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
 
கோட்டாயி:

இந்த கோட்டாயி கிராமம்,  புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் வாழ்ந்த அழகிய கிராமம் ஆகும். பாலக்காடு- புதூர் பாதையில் உள்ளது.
 
சிறுவாணி அணை:

பாலக்காட்டில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் சிறுவாணி அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்துதான் கோவை மக்களுக்கு சிறுவாணி நீர் வழங்கப்படுகிறது. கேரள- தமிழக எல்லையில் அமைந்துள்ள சிறுவாணி அணைக்கட்டுப் பகுதி, பார்க்கவேண்டிய இடம். இங்கு பல்வேறு ஆதிவாசி மக்களும் வசித்து வருகின்றனர்.
 
மலம்புழா அணை:

பாலக்காட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மலம்புழா அணையும், அணையையொட்டி உள்ள தோட்டமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகள், மனதைக் கொள்ளை கொள்ளும் மலர்பூங்காக்கள், செயற்கை நீரூற்றுக்கள் என இயற்கை காட்டும் ஜாலங்கள், மலம்புழா தோட்டத்தில் நம்மை மலைக்க வைக்கின்றன.
 
 பலவகை ரோஜாக்கள் நிறைந்த ரோஜாப்பூங்கா ஒன்றும் இங்கு உள்ளது. மலம்புழா தோட்டத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் ஜொலிப்பது கொள்ளை அழகு. சனி,  ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மட்டுமே விளக்குகளின் வர்ண ஜாலத்தை கண்டு ரசிக்க முடியும். மற்ற நாட்களில் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்து குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும் பட்சத்தில் தோட்டத்தின் விளக்குகள் ஒளியூட்டப்படுகின்றன.

 இவை தவிர ஒற்றப்பாலம், கல்பாத்தி சிவன் கோவில்,  கொல்லங்கோடு,  திப்பு கோட்டை,  மீன்கரா அணைக்கட்டு என பாலக்காடு பகுதியில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதியைப் பொறுத்தவரை பாலக்காட்டில் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. பாலக்காட்டுக்கு நல்ல சாலை வசதி உள்ளது. ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை, தென்னக ரயில்வேயில் பாலக்காடு தனி டிவிஷனாக இருந்து வருவதால் பிற பகுதிகளில் இருந்து பாலக்காட்டுக்கு ரயில்வசதி தாராளமாகவே உள்ளது பாலக்காட்டுக்கு அருகில் சுமார் 100 கி.மீ தொலைவில் கேரளாவின் கொச்சின் விமான நிலையம் உள்ளது. அதைவிட தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமானநிலையம்  பாலக்காட்டில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவுதான். சுமார் ஒரு மணிநேர கார் பயணத்தின் மூலம் பாலக்காட்டை தொட்டு விடலாம்.

"பாலக்காடு..! பரவசப்படுத்தும் அழகான சுற்றுலாத் தலம்"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/chembra-index.jpg
இயற்கை ஆட்சி  செய்யும் வயநாடு
கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு,  தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும்  மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு.  இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான் இந்த வார நமது டூரிஸ்ட் ஸ்பாட்.

 
கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.  கல்பெற்றா, மானந்தவாடி,  சுல்தான் பத்தேரி,  வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.
 
பேகர் வனவிலங்கு சரணாலயம்:
 
மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பேகர் வனவிலங்கு சரணாலயம். இங்கு பலவகையான அரிய விலங்குகளைப் பார்க்கலாம். இதே போல மானந்தவாடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நாகர்ஹோல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும் பல வகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும். அரிய வகைத் தாவரங்களும் இங்கு உண்டு. இயற்கை விரும்பிகளுக்கு இவை மறக்க முடியாத இடங்களாகும்.
 
செம்ப்ரா உச்சி:

கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ரா மலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.
 
கரலாட் லேக்:

கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.
 
சிப்பாரா அருவி:

வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது. 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது.
 
மீன்முட்டி அருவி:

சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி,  ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு,  நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.
 
இருளம் சீதாதேவி கோவில்:

சுல்தான் பத்தேரியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இருளம் சீதாதேவி கோவில் உள்ளது. சீதைக்கும் அவரது மகன்கள் லவ-குசாவுக்காகவும் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
.
குருவா தீவு:

இயற்கை விரும்பிகளின் மிதக்கும் சொர்க்கபுரியாகத் திகழும் குருவா தீவு,  கபினி ஆற்றையொட்டி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான வனப்பகுதி. அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆபூர்வ மூலிகைகளும் உள்ளன.
 
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்:

சுல்தான் பத்தேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை,  கரடி,  காட்டெருமை,  மான் போன்றவை இங்கு உள்ளன. வனத்துறையினர் ஆற்றோரமாக யானைச் சவாரியையும் நடத்தி வருகின்றனர்.

 இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா,  வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி,  திருநெல்லி கோவில், பழசிராஜா டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.
 
கேம்ப் பயர்,  மரவீடுகள்: 

இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் கேம்ப் பயர் நடத்தப்படுகிறது. காட்டுக்குள் கொட்டும் பனிக்கு இதமாக,  நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தவாறு அந்தப் பகுதியின் கதை சொல்லி ஒருவர் சொல்லும் சுவாரஸ்யமான கதையைக் கேட்டுக் கொண்டே,  அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று தூங்கி,  காலையில் மேனியை இதமாகத் தொடும் காலை வெயிலுக்கு ஹாய் சொல்லி எழுவது வித்தியாசமான அனுபவம். காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா,  மானந்தவாடி,  சுல்தான் பத்தேரி,  வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும்,  விமான நிலையமும் உள்ளன.
 
"இயற்கை ஆட்சி செய்யும் நாடு,  வயநாடு. இங்கு சென்று வர யாருக்குத்தான் மனம் வராது?"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/snake-boat-race-kerala-index.jpg
கேரளாவில் நீர்வளம் நிறைந்த மாவட்டம் ஆழப்புழா. இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரும் நீர்வளம் நிறைந்ததுதான். வெனிஸ் நகரில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு செல்வதானால் கூட படகில்தான் செல்ல வேண்டும். அதுபோலத்தான் ஆழப்புழாவும். வீட்டை விட்டு ஸ்கூல், காலேஜ், ஷாப்பிங் செல்லவேண்டும் என்றால் பெரும்பாலும் படகில்தான் செல்ல வேண்டும். பால், பேப்பர் போன்ற தினசரி சமாச்சாரங்கள் வருவதும் படகுவழிதான். இதனாலேயே ஆசியாவின் வெனிஸ் என ஆழப்புழா அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மேற்கே...அலைகளை ஆடையாக தவழ விட்டபடி அழகாக புரண்டு கொண்டிருக்கும் அரபிக்கடல். ஊருக்குள் வெள்ளியை உருக்கி விட்டாற்போல ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏரிகள். நன்னீர் ஆறுகள். உப்பங்கழிகள். இதுதான் ஆழப்புழா. இங்கு நடைபெறும் பாம்புப்படகுப் போட்டி உலக அளவில் புகழ் பெற்றது. படகுச்சுற்றுலாவும் பிரபலம். அழகான ஆலப்புழா மாவட்டம்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் டூரிஸ்ட் ஸ்பாட்.

அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில்:

ஆலப்புழாவில் இருந்து சுமார் 15கி.மீ தொலைவில் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்தக்கோவிலின் உட்புறச்சுவர்களில் வரையப்பட்டுள்ள மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகள் காண்போரை ஆச்சரியப்படுத்தும். இங்கு பள்ளிபாணா என்ற பெயரில் ஒரு மாயமந்திரக்கலை நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த மாயமந்திரக்கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கதிகலங்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பிரசாதமாக பால்பாயசம் வழங்கப்படுகிறது. இதன் சுவை, பக்தர்களின் நாவைச் சுழற்றச் செய்யும்.

காயங்குளம் கிருஷ்ணாபுரம் அரண்மனை:

மார்த்தாண்ட வர்ம மன்னனால் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆழப்புழாவில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. கீழ்த்தளத்தில் காணப்படும் கஜேந்திர மோட்சம் சுவரோவியம் ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், வெண்கலச் சிற்பங்கள் அரண்மனையின் வரலாற்றை உணர்த்துகின்றன.

சக்குலத் பகவதி கோவில்:

அம்பலப்புழா நீராட்டுபுரத்தில் சக்குலத் பகவதி கோவில் அமைந்துள்ளது. பிரம்மா,  விஷ்ணு,  சிவன் ஆகிய முக்கடவுள்களையும் தோற்றுவித்த மகாசக்தியாக இந்த பகவதி போற்றப்படுகிறாள். இங்கு நடக்கும் பொங்கல் மகா உத்சவ விழா பிரசித்தம். இதில் நாடு முழுவதிலும் இருந்து பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபடுகிறார்கள்.

எடத்துவா சர்ச்:

ஆழப்புழாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த சர்ச் 1810ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். ஐரோப்பாவின் மத்திய கால கோதிக் கலைப்பாணியில் இந்த சர்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து மனம் ஒன்றிப் பிரார்த்தனை செய்தால் மனநோய், புத்தி பேதலிப்பு குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுவதிலும் இருந்து இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.

குட்டநாடு:

கேரளத்தின் அமுதசுரபியாக (நெற்களஞ்சியமாக) குட்டநாடு விளங்கி வருகிறது. இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேல் நெல் வயல்வெளிகள்தான். இதுதவிர வாழை, வள்ளிக்கிழங்கு, கொடிவள்ளிக்கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிடுகின்றனர். குட்டநாடு கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டருக்கு கீழே அமைந்துள்ளது. இருந்தபோதிலும் இங்கு விவசாயம் செழிப்பாக நடப்பது ஆச்சரியம் என்கிறார்கள்.

 இவை தவிர அர்த்துங்கல் புனித செபாஸ்டியான் சர்ச், ஆலப்புழா கடற்கரை, கருமாடிக்குட்டனில் உள்ள புத்தர் சிலை, குன்னத்துமலை மகாதேவன் கோவில், சவரா பவன், சம்பங்குளம் சர்ச், பதிரா மணல், வரலாற்றில் இடம் பெற்றுள்ள புன்னப்பரா கிராமம் உள்ளிட்ட பல இடங்கள் ஆலப்புழா மாவட்டத்தில் பார்க்கத்தகுந்தவை. மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகுச் சுற்றுலாவும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு படகுச்சுற்றுலா அலுவலகத்தில் முன்னரே பதிவு செய்தல் வேண்டும்.

பாம்புப் படகுப்போட்டி:

ஆலப்புழாவில் பலவிதமான படகுப்போட்டிகள் நடத்தப்படுகிறது என்றாலும் இவற்றில் புகழ் பெற்றது ஜுலை மாதத்தில் நடத்தப்படும் சுண்டன்வள்ளம் பாம்புப்படகு போட்டிதான். மிக நீளமான படகை ஏராளமானோர் ஒரே நேரத்தில் துடுப்புபோட்டு அசுர வேகத்தில் செலுத்துவார்கள். பரவசப்படுத்தும் இந்த சுண்டன்வள்ளம் படகுப்போட்டியை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

ஆலப்புழா மாவட்டத்தில் உணவு வகைகளைப் பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கிறது. தங்குவதற்கு சுற்றுலாத்துறை அங்கீகாரம் பெற்ற விடுதிகளும் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. அசைவப் பிரியர்கள் விதவிதமான மீன்களை ருசிக்கலாம். ஆழப்புழா மீன்களின் சுவை அத்தனை சீக்கிரம் நாவை விட்டு அகன்று விடாது. போக்குவரத்தைப் பொறுத்தவரை ஆழப்புழாவில் ரயில் நிலையம் உள்ளது. பிற பகுதிகளில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80கி.மீ தொலைவில் கொச்சினில் விமான நிலையம் அமைந்துள்ளது. கொச்சினில் இருந்து ஆழப்புழாவுக்கு நல்ல சாலை வசதியும் இருக்கிறது. சாலை மார்க்கமாக சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஆழப்புழாவை தொட்டு விடலாம்.

 "பரந்து கிடக்கும் தண்ணீர். பரவிக்கிடக்கும் அழகு. பார்க்கும் இடங்களிளெல்லாம் படகு. இதையெல்லாம் மிஸ் பண்ண யாருக்குத்தான் மனசு வரும்?"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/KovalamBeach-index.jpg
ரசிக்க, தரிசிக்க திருவனந்தபுரம்
டவுளின் சொந்த நாடு என வர்ணிக்கப்படும் கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம்தான் இந்த வார ஸ்பெஷல் டூரிஸ்ட் ஸ்பாட். காரணம் இது மகாபலிராஜா விசிட் செய்யும் ஓணம்  வாரமல்லோ!. ஓ.கே. இனி ஓவர் டூ திருவனந்தபுரம். பத்மநாபசுவாமி (விஷ்ணு) அனந்த சயனத்தில் இங்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பதால் இந்த ஊர் திருவ(அ)னந்தபுரம் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.. திருவனந்தபுரத்தில் தரிசிக்கவும், ரசித்து மகிழவும் நிறைய இடங்கள் உள்ளன.
பத்மநாபசுவாமி கோவில்:

அரபிக்கடலோரம்... அந்த அரபிக்கடலை மேற்குப் பகுதியாகவும்,  தமிழ்நாட்டை கிழக்குப் பகுதியாகவும் கொண்ட நிலப்பகுதிதான் திருவனந்தபுரம். ஏழு சிறிய குன்றுகளின் மீது எழுந்து நிற்கும் அழகான நகரம். 1750ம் ஆண்டு வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் நாட்டின் விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தலைநகரமாக தொடருவது சிறப்பாகும்.

 இங்குள்ள அருள்மிகு பத்மநாபசுவாமி கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோவிலை 1733ம் ஆண்டில் திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா சீரமைத்தார். கேரளாவின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இந்தக் கோவில் விளங்கி வருகிறது. இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள்  போன்றவை நம் முன்னோர்களின் திறமையை இன்றளவும் முரசடித்து வருகின்றன. தரிசிக்க மட்டுமின்றி பார்த்து பரசவப்படவும் வைக்கிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்.
 
ஆற்றுக்கால் பகவதி அம்மன்கோவில்:

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் அதிகளவில் வந்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஆண்டுதோறும் சுமார் 17 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து செல்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
 
பொன்முடி:

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளுகுளு மலைப்பகுதிதான் பொன்முடி. நம்ம ஊர் ஊட்டி போல இங்கு எப்போதும் ஜிலுஜிலு குளுகுளு காற்றுதான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 915 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள பொன்முடி மலைப்பகுதியில் அரியவகை மலர்களையும், படபடத்துச் செல்லும் விதவிதமான வண்ணத்துப் பூச்சி ரகங்களையும் கண்டு களிக்கலாம். பச்சைப் பசேல் தேயிலைத்தோட்டங்களை தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள் நம் உடலை மட்டுமல்ல கண்களையும் குளுமையாக்கும். இங்கு சுமார் 3 கி.மீ தொலைவில் மான்பூங்கா ஒன்றும் உள்ளது.

 பொன்முடியில் இருந்து சிறிது தொலைவில் அழகான அருவி ஒன்றும் விழுந்து கொண்டிருக்கிறது. இங்கு அகஸ்தியர் கோவில் ஒன்றும் உள்ளது. பவுர்ணமி நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
 
நெய்யாறு அணை:

அழகு சிந்தும் பிக்னிக் ஸ்பாட்டாக விளங்கும் நெய்யாறு அணை, திருவனந்தபுரத்தில் இருந்து சமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் கள்ளிக்காடு புலிகள் சரணாலயப் பகுதி மற்றும் தமிழகத்தின் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயப் பகுதியின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ளது. அணையில் படகு சவாரி உண்டு. முதலைப்பண்ணை ஒன்றும் இருக்கிறது.
 
கோவளம் பீச்:

இந்தியாவின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான கோவளம் பீச்,  திருவனந்தபுரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அசைந்தாடும் தென்னை மரக்கூட்டங்கள், அழகான அரபிக்கடல் ஆகியவற்றை ரசித்துக் கொண்டு கடற்கரையில்... வெண்மணலில் கால்பதித்து நடைபோடுவதே தனிசுகம்தான். இதனாலேயே கோவளத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் சுற்றுலா பயணிகள் ஏராளம்.
 
சங்குமுகம் பீச்:

இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சங்குமுகம் பீச்சும் பிரபலம். இதன் அருகிலேயே திருவனந்தபுரம் விமானநிலையமும் அமைந்துள்ளது சிறப்பு. சங்குமுகம் பீச்சுக்கு சூரியன் மறையும் காட்சியை ரசிப்பதற்காகவே ஏராளமானோர் வருகின்றனர்.
 
வர்க்கலா பீச்:

திருவனந்தபுரத்தில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது வர்க்கலா பீச். இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஜனார்த்தனசுவாமி கோவிலும் அமைந்துள்ளது.

 இவற்றைப்போல கேரளாவின் 2வது பெரிய சிகரமான அகஸ்தியர் கூடம்,  ஆங்கிலேயர் தங்களது வாணிபத்துக்காக மலபார் பகுதியில் முதல் முறையாக கட்டிய அஞ்சுன்தெங்கு கோட்டை என பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் நீளுகிறது.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து

உணவு வசதியைப் பொறுத்தவரை திருவனந்தபுரத்தில் அனைத்து வகை உணவு வகைகளும் கிடைக்கின்றன. தரமான நல்ல உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. போக்குவரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரத்துக்கு ரயில் வசதி உள்ளது. சர்வதேச விமான நிலையமும் இங்கு உள்ளது.
 
 "ஓ.கே  திருவனந்தபுரத்துக்கு நிங்கள் விசிட் எப்போ?"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/thekkady.jpg
மிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ்.

வனவிலங்கு சரணாலயம்:

எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், பைசன்கள், மான்கள், குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிவதை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் கண்களில் தென்படலாம். இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெரியாற்றில் இந்த காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசிப்பது த்ரில் கலந்த புதுமையான அனுபவமாக இருக்கும். பெரியாற்றில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது.

யானை சவாரி:

யானை மீதேறி சவாரி செய்வது பெரியவர்களைக் கூட குழந்தைகள் போல குஷிப்படுத்தி விடும். இதை தேக்கடியில் நேரில் காணலாம். ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து காட்டின் அழகை ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு அரை மணிநேரம் என்ற கணக்கில் இங்கு யானை சவாரி நடத்தப்படுகிறது.

குமுளி:

தேக்கடி காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் நகரம் குமுளி. இந்தப்பகுதியின் ஷாப்பிங் சென்டராக திகழ்ந்து வருகிறது. காட்டில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை இங்கே விற்பனை செய்கிறார்கள்.

மங்களாதேவி கோவில்:

மிகப்பழமையான மங்களா தேவி கோவில் தேக்கடியில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கேரளத்தின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1337மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் பகுதியில் இருந்து பார்த்தால் காட்டின் அழகை கண்குளிர ரசிக்கலாம்.

முல்லைப் பெரியாறு அணை:

தமிழக- கேரள அரசியலில் அவ்வப்போது புயலைக் கிளப்பி வரும் முல்லைப்பெரியாறு அணை இங்குதான் அமைந்துள்ளது. ஆங்கிலேயரால் 1895ம் ஆண்டில் பெரியாற்றின் இந்த அணை கட்டப்பட்டது. கேரளப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.

 இதே போல தேக்கடியில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பச்சை வெல்வெட் துணியை போர்த்தியதைப் போல புற்களால் போர்த்தப்பட்டிருக்கும் புல்லுமேடு, டிரைபல் ஹெரிடேஜ் மியூசியம் போன்ற இடங்களும் பார்க்கத் தகுந்தவையே. தேக்கடியில் வனத்துறையால் நடத்தப்படும் ட்ரெக்கிங்கும் பிரபலம்.

 இயற்கையுடன் சில நாட்கள் இணைந்திருக்க நினைப்பவர்கள் தேக்கடியை தேர்ந்தெடுக்கலாம்  
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/Pondicherry.jpg
அழகு, அமைதி தவழும் புதுச்சேரி
ந்தியாவின் தெற்கு கடற்கரையில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் புதுச்சேரி. அமைதியான கடற்கரை பகுதிகள், அழகான சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என புதுச்சேரியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்ததால் புதுச்சேரியில் பிரெஞ்சு சாயல் அதிகம். யூனியன் பிரதேசமாக இருந்து வரும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் காரைக்கால், ஆந்திர பகுதியில் உள்ள மாஹே மற்றும் கேரளப்பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பகுதியும் இருந்து வருகிறது. புதுச்சேரியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.

 ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம்:

நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

ஆரோவில்:

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

பொட்டானிக்கல் கார்டன்:

புதுச்சேரி புது பஸ்நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அரிக்கமேடு:

பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

 இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி.600ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம்,  பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம்,  பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத்தகுந்தவை.

 புதுச்சேரியின் அமைதியான கடற்கரை ரோட்டில் காலாற நடந்து சென்று கடல் அழகை ரசிப்பதும், அமைதியை அனுபவிப்பதும் புதிய அனுபவம்தான். வார இறுதி நாட்களில் புதுச்சேரி கடற்கரை ரோட்டில் மக்கள் தலைகளாகத்தான் தென்படும்.

 காரைக்காலிலும் பார்க்க பல இடங்கள் உள்ளன. காரைக்கால் அம்மையார் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் தர்கா, சர்ச் ஆப் அவர் லேடி ஏஞ்சல்ஸ் போன்றவை சென்று வரவேண்டிய இடங்கள்.

 இது தவிர புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆளுகைக்கு உட்பட்ட எழில் கொஞ்சும் மாஹே, ஏனாம் பகுதிகளிலும் பார்க்கத்தகுந்த இடங்கள் உள்ளன. புதுச்சேரியில் இருந்து மாஹே 647 கி.மீ தொலைவில் கேரளப் பகுதியிலும், ஏனாம் 870 கி.மீ தொலைவில் ஆந்திரப்பகுதியிலும் அமைந்து உள்ளன.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

 உணவு, தங்குமிடங்களைப் பொறுத்தவரை புதுச்சேரியில் ஒரு பிரச்னையே அல்ல. தரமான உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் புதுச்சேரி உள்ளது. அருமையான சாலை வசதி இருக்கிறது. விமான நிலையத்தை பொறுத்த வரை சென்னைதான் அருகில் உள்ள விமானநிலையம் ஆகும். திருச்சி 220 கி.மீ தொலைவிலும் பெங்களூர் 320 கி.மீ தொலைவிலும் உள்ளது.

"அழகை ரசிப்பவர்களுக்கு, அமைதியை விரும்புபவர்களுக்கு புதுச்சேரி நல்ல இடம். புதுச்சேரிக்கு சென்று வருவது ஒரு புதுமை அனுபவமாக இருக்கும்"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/andaman-islands1.jpg
அந்தமானைப் பாருங்கள் அழகு
ங்கக்கடல் தனது மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கும் வனப்புமிக்க தீவுக்கூட்டம்தான் அந்தமான், நிகோபர். இவை இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. வங்கக்கடலில் வடக்கில் இருந்து தெற்காக சுமார் 700 கி.மீ நீளத்துக்கு விரிந்து கிடக்கும் இந்த தீவுக்கூட்டங்களில் மொத்தம் 36தீவுகளில்தான் மனிதர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற தீவுகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. இவற்றில் அரிய வகை விலங்குகளும், பறவைகளும், தாவர வகைகளும் நிறையவே உண்டு. அழகு மிளிரும் அந்தமான் நிகோபர் தீவுகளில் கண்டு களிக்க நிறைய இடங்கள் உள்ளன.
 

அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ்:

நீர்விளையாட்டுக்களில் ஆச்சரியப்படுத்தும் வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் இங்கு உள்ளன. இவற்றில் சாதாரண நீர்சறுக்கு விளையாட்டு, சாகச நீர்சறுக்கு விளையாட்டுக்களும் உண்டு. இரண்டு வகைகளுக்கும் தனித்தனி நேரங்கள் வைத்து உள்ளனர்.
 
மீன் காட்சியகம்:

 அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ் அருகில் மீன் காட்சியகம் அமைந்து உள்ளது. இந்திய பசிபிக் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் காணப்படும் மீன்வகைகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கண்களுக்கு மட்டும் அல்ல அறிவுக்கும் விருந்தளிக்கிறது இந்த மீன்காட்சியகம்.
 
பறவைத்தீவு:

தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 25கி.மீ தொலைவில் பறவைத் தீவு உள்ளது. மாங்குரோவ் காடுகளும், மனதைக் கவரும் கடற்கரையும் இதன் சிறப்பம்சம். இங்கு ஒரு மலைக்குன்றின் மீது வனத்துறைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கிருந்து பறவைத்தீவின் மொத்த அழகையும் காண முடியும்.
 
சயின்ஸ் சென்டர்:

போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த அறிவியல் மையத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் எப்படி உருவாயின என்பதைப் பற்றியும் அவற்றின் அறிவியல் பூர்வமான உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம். புகைப்படங்கள், மாதிரிகள் என நிறைய விஷயங்கள் இங்கு உள்ளன.
 
நிகோபர்:

 1841 சதுர அடி பரப்பளவில் 28 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமே நிகோபர் என அழைக்கப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் இந்தத் தீவுகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. நீண்ட வால் கொண்ட குரங்குகள், அரிய வகை புறாக்களை இங்கு காணலாம். இதே போல 28 தீவுக்கூட்டங்களைக் கொண்ட கார்நிகோபர் தீவும் பல சிறப்புத்தன்மைகளைக் கொண்டது.
 
அந்தமான் சிறைச்சாலை:

இந்திய சுதந்திரபோராட்டத்துக்கும் அந்தமான் சிறைச்சாலைக்கும் நிறையவே தொடர்பு உண்டு. அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டு விலங்குகளைப்போல சித்ரவதை செய்யப்பட்டனர். சுதந்திர போராட்ட வீரர்கள் ஏராளமானோர் இங்கு 20ஆண்டுளுக்கு மேலாக தங்களது வாழ்நாளை தனிமைச் சிறையில் கழித்து இருக்கிறார்கள்: போர்ட் பிளேயரில் பிரம்மாண்டமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கும் இந்த சிறைச்சாலை, நாம் சுதந்திரமாக இருப்பதற்காக நம் முன்னோர்கள் இங்கு அனுபவித்த கொடுமையை நினைவு படுத்தி வருகிறது.
 
 இவை தவிர அந்தமான் மற்றும் நிகோபரில் பாரஸ்ட் மியூசியம், மகாத்மா காந்தி மெரைன் நேஷனல் பார்க், மவுண்ட் ஹாரியட்,  ரோஸ் ஐலண்ட், விப்பர் ஐலண்ட், கிரேட் நிகோபர் என பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அந்தமான் நிகோபர் நிர்வாகம் சார்பில் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்படும் தீவு சுற்றுலா விழா (ஐலண்ட் டூரிசம் பெஸ்டிவல்) இங்கு பிரபலம். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பங்கேற்க வருகிறார்கள்.

 சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. மேலும் சென்னை, கொல்கத்தாவில் இருந்து விமானங்களும் இயக்கப்படுகின்றன.

"அழகு மிளிரும் அந்தமானை ரசித்து வர இப்பவே  யோசிக்கத்தொடங்கிட்டீங்களா,,?"  
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/vellore1.jpg
சுதந்திர போருக்கு வித்திட்ட வேலூர்
வேலூர் என்றவுடன் இங்குள்ள பிரம்மாண்டமான கோட்டையே முதலில் நினைவுக்கு வரும். வேலூர் கோட்டைக்குள் 1806ம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் சுதந்திரபோருக்கான தொடக்கமாக கருதப்படுகிறது. அந்த வகையில் சுதந்திரப்போராட்டத்துக்கு வேலூர் வித்திட்டது என்று கூட கூறலாம். பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்புகள், பிஜப்பூர் சுல்தான்கள் என பலரது ஆளுகைக்கு வேலூர் உட்பட்டு இருந்தது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பழமையான நகரமான வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பார்க்க தரிசிக்க நிறைய இடங்கள் உள்ளன.

 வேலூர் கோட்டை:

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை 16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும். பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன. ஆங்கிலேயரை எதிர்த்தவர்களுக்கு இந்த கோட்டைதான் சிறைக்கூடமாக திகழ்ந்துள்ளது. திப்பு சுல்தானின் குடும்பத்தினர்,  இலங்கை கண்டியை ஆண்ட விக்ரம ராஜசிங்கே உள்பட பலர் இங்கு சிறைவைக்கப்பட்டதாக வரலாறு. இந்த சிறைக்குள் திப்பு மகால், ஹைதர் மகால், பேகம் மகால், பாதுஷா மகால், கண்டி மகால் என பல மகால்கள் உள்ளன. இங்குள்ள தொல்பொருள் அருங்காட்சியத்தில் உள்ள பொருட்கள் கடந்த கால வரலாற்றை இப்போதும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. மேலும் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக எழுந்து நிற்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில்,  1846ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான புனித ஜான் தேவாலயம், ஆற்காடு நவாப் கட்டிய சதுரவடிவ மசூதி என பார்க்கத்தகுந்த இடங்கள் வேலூர் கோட்டையில் உள்ளன. கோட்டையைச் சுற்றியுள்ள பெரிய அகழியில் சுற்றுலாத்துறை சார்பில் படகுப்போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது.

 ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோவில்:

வேலூர் அருகே தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோவிலின் மைய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டதாகும். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து கொல்லர்களை வரவழைத்து தங்கக் கோபுரத்தை அமைத்துள்ளனர். ஸ்ரீநாராயணி பீடத்தால் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இருக்கும் இந்த கோவில் நட்சத்திர வடிவில் அழகாக காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

 பெரிய மசூதி:

வேலூர்- பாக்கியாபாத் சாலையில் அமைந்திருக்கும் பெரிய மசூதி சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரே நேரத்தில் 2ஆயிரம் பேர் அமர்ந்து தொழுகை செய்யும் அளவுக்கு பெரிய மசூதி. இங்குள்ள அரபிக் கல்லூரி தென்னிந்தியாவின் முதல் அரபிக் கல்லூரி என்ற பெருமைக்குரியது.

 மத்திய ஆலயம்:

வேலூரில் உள்ள தென்னிந்திய திருச்சபை மத்திய ஆலயம் டாக்டர் ஜடாஸ்கர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1968ல் பிரதிஷ்டை செய்யப்பட்டாகும். தமிழ்நாட்டின் பெரிய தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டிலேயே இடையில் தூண்கள் இன்றி கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது.

அமிர்தி காடு:

 வேலூரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள பசுமையான பகுதி. இங்கு அழகான பூங்கா, வனவிலங்கு சரணாலயம் உள்ளன. ஜிலீரென ஓடிக்கொண்டிக்கும் சிற்றோடையும், அமைதியாக விழுந்து கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சியும் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

ஜவ்வாது மலை:

 சந்தன மரங்களும், ருசியான பழங்களைத்தரும் மரங்களும் நிறைந்துள்ள அழகான அடர்ந்த காட்டுப்பகுதி. மலையேற்றப் பிரியர்களின் மனம் கவர்ந்த இடம். வேலூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆற்காடு:

 வரலாற்றில் இடம் பிடித்த இடம். வேலூரில் இருந்து 24 கி.மீ தொலைவில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 18ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட நவாப்புகளின் தலைநகரமாக விளங்கிய இடம். இங்குள்ள கோட்டை பிரபலமானது. 1751ம் ஆண்டில் நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியைக் கைப்பற்றியதன் நினைவாக இங்கு அமைக்கப்பட்ட டெல்லி கேட் மற்றும் பச்சைக்கல் மசூதி, திப்பு அவுலியா மசூதி போன்றவை ஆற்காட்டில் பார்க்கத்தகுந்த இடங்கள்.

 ஏலகிரி மலை:

 ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி, வேலூரில் இருந்து 90 கி.மீ தொலைவில் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ளது. இயற்கை கொட்டிக்கிடக்கும் ஏலகிரியில் எங்கு திரும்பினாலும் பசுமை பசுமைதான். இங்குள்ள புங்கனூர் ஏரியில் படகு சவாரி செய்யலாம். வேலவன் கோவிலை தரிசிக்கலாம். மூலிகைப் பண்ணைக்கு சென்று ரசித்து வரலாம். ஆண்டுதோறும் மே மாதத்தில் ஏலகிரியில் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

 உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதியைப் பொறுத்த வரை வேலூர் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நல்ல ஓட்டல்களும் உள்ளன. சுற்றுலாத்துறை ஓட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் உள்ளன. சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் வேலூர் அமைந்துள்ளது. நல்ல ரோடு வசதி உள்ளது. ரயில் வசதியும் இருக்கிறது.

 "வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஊர் வேலூர். உங்கள் சுற்றுலா திட்டத்தில் இடம் பெறுவது எப்போது...?"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/kanchi-temple.jpg
பட்டால் பளபளக்கும் காஞ்சிபுரம்
ந்தியாவின் புனிதமான நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. சென்னையையொட்டி அமைந்துள்ள அழகான நகரம். பளபளக்கும் பட்டுச்சேலைகள் தயாரிப்பால் பளிச்சென தெரியும் ஊர். காஞ்சிபுரத்தில் திரும்பிய திசையெல்லாம் கோவில்கள் எனக்கூறுவார்கள். சுமார் 50க்கும் மேற்பட்ட கோவில்களால் நிறைந்து கோவில் நகரம் என்றும் காஞ்சிபுரம் அழைக்கப்படுகிறது. கி.பி 6-8ம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த காஞ்சிபுரம் அதன் பிறகு சோழர், விஜயநகர மன்னர்கள், முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழும் வந்தது. காஞ்சிபுரத்தில் பார்ப்பதற்கும் தரிசித்து வருவதற்கும் நிறைய இடங்கள் உள்ளன.
 
பட்டுச்சேலை தயாரிப்பு:

காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதை போல நீ நடந்து வரவேண்டும் என வர்ணிக்கும் அளவுக்கு புகழ் பெற்றது காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள். காஞ்சிபுரம் பட்டுச்சேலைக்கு இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் மவுசு உண்டு. பளபளப்பு, நேர்த்தியான வடிவமைப்பு போன்றவை காஞ்சிபுரம் பட்டுச்சேலைக்கு பிளஸ் பாயிண்ட். இங்குள்ள மக்கள் தொகையில் 75சதவீதத்தினர் பட்டுச்சேலை தயாரிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு உள்ளனர். 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுக்கூடங்கள் உள்ளன. அழகழகான பட்டுச்சேலைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
 
காமாட்சி அம்மன் கோவில்:

இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய சக்தி வழிபாட்டு தலங்களில் காமாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்குள்ள அம்மன் காஞ்சி காமாட்சி என அழைக்கப்படுகிறார். இந்த கோவில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில் ஆகும்.
 
ஏகாம்பரேஸ்வரர் கோவில்:

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கோபுரம் அமையப்பெற்ற கோவில்களுள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் ஒன்று. இங்குள்ள கோபுரம் 57 மீட்டர் உயரம் கொண்டது. கோவில் வளாகத்தில் 2500 ஆண்டு பழமையான மாமரம் ஒன்றும் அமைந்துள்ளது. ஆயிரம் கால் மண்டபம், 5சுற்றுப் பிரகாரங்கள் இங்கு உள்ளன. இங்குதான் சிவசாமி சித்தர் என்பவர் தங்கியிருந்து எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்த்தி ஜீவசமாதி அடைந்தார்.
 
வரதராஜ பெருமாள் கோவில்:

வரதராஜ பெருமாள் கோவிலின் நூறுகால்மண்டபத்தில் உள்ள தூண்கள் கலைவேலைப்பாடு மிக்கது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல்சங்கிலி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும்.
 
இவை தவிர கைலாசநாதர் கோவில், குமரக்கோட்டம் முருகன் கோவில், சித்திர குப்தர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஏராளமான கோவில்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன. 
 
அண்ணா நினைவிடம்:

அறிஞர் அண்ணா என்றழைக்கப்படும் சி.என்.அண்ணாத்துரை பிறந்த இடம் காஞ்சிபுரம். அவர் வாழ்ந்த இல்லம் தற்போது அண்ணா நினைவிடமாக உள்ளது. அண்ணா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் இங்கு காட்சி வைக்கப்பட்டு உள்ளன. இவை அண்ணாவின் வரலாற்றை உணர்த்திக்கொண்டிருக்கின்றன.
 
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு வசதியைப் பொறுத்தவரை காஞ்சிபுரத்தில் நல்ல ஓட்டல்கள் உள்ளன. தங்கும் விடுதிகளும் உண்டு. சென்னையில் இருந்து காஞ்சிபுரம் 70 கி.மீ தொலைவுக்குள் இருப்பதால் சென்னையில் இருந்து கொண்டும் காஞ்சிபுரம் சென்று வரலாம்.
 
"ஓ.கே. சென்னை டிரிப்புல இனி காஞ்சிபுரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என முடிவு பண்ணிட்டீங்களா?"
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/hogenakkal.jpg
காவிரித்தாய் துள்ளிக்குதிக்கும் ஒகேனக்கல்
ர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தவழ்ந்து வந்து அருவியாக...பேரருவியாக கொட்டும் இடம்தான் ஒகேனக்கல். கர்நாடக- தமிழக எல்லையில் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. கொஞ்சம் கவித்துவமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தை எட்டிப்பார்த்து விட்ட காவிரித்தாய், அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக்குதிக்கும் இடம் ஒகேனக்கல். ஹோ...என்ற பேரிரைச்சலுடன் கொட்டும் அருவியை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
 
பெயர்க்காரணம்:
 
கன்னடத்தில் ஹொகே என்றால் புகை என்பது பொருள். கல் என்றால் பாறை. காவிரி ஆறு சுமார் 20மீட்டர் உயரத்தில் இருந்து பாறையில் அருவியாக விழுந்து வெண்மையான புகைமண்டலத்தை ஏற்படுத்துவதால் ஹொகேனக்கல்  என அழைத்துள்ளனர். பின்னர் பெயர் மருவி ஒகேனக்கல் ஆகி விட்டதாக வரலாறு. கடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது.
 
 அருவியில் ஆண்கள் பெண்கள் குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. சூடு பறக்க எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் ஆனந்தமாக குளித்து வந்ததும் அங்கு சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கும் பொரித்த ஆற்றுமீன்களை ருசிப்பது வேறு எங்கும் கிடைக்காத (சுவையான) அனுபவம்.
 
 இதே போல பெரிய குன்றுகளுக்கு இடையில் அமைதியாக ஓடும் ஆற்று நீரில் பரிசலில் சவாரி செல்வது மனதை மகிழ்ச்சிப்படுத்தும். இது மட்டுமின்றி இங்குள்ள சிறுவர் பூங்கா, உயிரியல் பூங்கா போன்றவற்றில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். முதலைப்பண்ணைக்கு சென்று பிரம்மித்து திரும்பலாம்.
 
 விவசாயத்தின் ஆதாரமாக விளங்கும் காவிரிக்கு இங்குள்ள மக்கள் ஆடி 18ல் ஆடிப்பெருக்கு விழாவில் விழா எடுத்து நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுகிறார்கள் அன்றைய தினம் புதுமணத் தம்பதியர் காவிரி ஆற்றில் நீராடினால் எல்லா வளமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. பொங்கலுக்கு மறுநாள் காணும்பொங்கல் தினத்திலும் இங்கு மக்கள் திரண்டு வருகிறார்கள்.
 
 தீர்த்த மலை:
 
தர்மபுரி மாவட்டத்தில் ரசிக்க ஒகேனக்கல் என்றால் தரிசிக்க பிரசித்தி பெற்ற பழமையான தீர்த்தமலை கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரராக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார். இந்தக்கோவிலில் விஜயநகர மற்றும் சோழ மன்னர்களை பற்றிய குறிப்புகள் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் காணப்படுகின்றன. அருணகிரி நாதர் பாடல்களிலும் தீர்த்தகிரீஸ்வரர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் சிறப்புக்கு சான்றாகும். மார்ச் மாதம் இங்கு நடைபெறும் ஒன்பது நாள் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
 
 அதியமான் கோட்டை:
 
தர்மபுரியில் இருந்து சுமார் 7கி.மீ தொலைவில் உள்ளது அதியமான் கோட்டை. இது அந்தக்காலத்தில் அதியமான்களின் தலைநகராக விளங்கியது. இங்குள்ள சென்றாய பெருமாள் கோவில் கிருஷ்ண தேவராயர் மற்றும் ஹெசேல மன்னர்களால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
 
சுப்பிரமணிய சிவா நினைவிடம்:
 
நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட சுப்பிரமணிய சிவாவின் நினைவிடம் மற்றும் சமாதி தர்மபுரி மாவட்டம் பென்னகரம் பக்கம் உள்ள பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ளது. சுப்பிரமணிய சிவா தனது இறுதிக்காலத்தில் விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாக இருந்தபோது பாப்பாரப்பட்டியில் இருந்துதான் செயல்பட்டுள்ளார். அதன் நினைவாகவே அவருக்கு இங்கு நினைவகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சென்று வருவது சுதந்திரத்துக்காக பாடுபட்ட பெரும் போராளி ஒருவருக்கு மரியாதை செலுத்தி வந்த திருப்தியைத் தரும்.
 
 உணவு, தங்குமிடம், போக்குவரத்து:
 
உணவு விஷயங்களைப் பொறுத்தவரை ஒகேனக்கல் அருவிக்கு செல்லும்போது உணவை கையோடு கொண்டு சென்று விடுவது நல்லது. ஒகேனக்கல் அருகே உள்ள பென்னகரத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. தர்மபுரியில் தனியார் விடுதிகள் உள்ளன. ஒகேனக்கல்லுக்கு சாலை மார்க்கமாக பெங்களூரில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி வழியாகவும் வந்து விடலாம். பயணதூரம் 150 கி.மீ. ஆகும். சென்னையில் இருந்து தர்மபுரி சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ளது. தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் 46 கி.மீ. தர்மபுரி வரை சாலை வசதி சிறப்பாக இருக்கும். தர்மபுரியில் ரயில் நிலையமும் உள்ளது.
 
 "ஒகேனக்கல்லில் காவிரித்தாய் துள்ளிக்குதிக்கும் அழகை ரசிக்க யாருக்குத்தான் மனசு வராது?

இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?" 
http://www.kumudam.com/dotcom/tourism/imagefolder/selam.jpg
மாம்பழ நகரம் சேலம்
"மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம்..." என வர்ணிக்கக்கூடிய அளவுக்கு மாம்பழத்துக்கு பெயர் பெற்றது சேலம். சேலத்து மாம்பழம் என்று சொல்லும் போதே நாவில் நீர்சுரக்கும். காரணம் சேலம் மாம்பழத்துக்கு அத்தனை ருசி.

 சேலம் மிகப்பழமையான நகரம். மலைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, கஞ்சமலை, ஜருகுமலை, பச்சை மலை, அருநூத்து மலை, போதமலை என மலைகள் சூழ்ந்திருப்பதால் முதலில் சைலம் என்றழைக்கப்பட்டதாகவும் பின்னர் சைலம் மருவி சேலம் என அழைக்கப்பட்டதாகவும் சொல்வது உண்டு. மேலும் சேரநாட்டின் கிழக்கு எல்லையில் இருந்ததால் சேரலம் என்றும், சமண சமயத்தின் முக்கிய தளமாக விளங்கியதால் சைலம் என்றும் அழைக்கப்பட்டு பிறகு சேலம் என மாறியதாகவும் கூறப்படுகிறது. சேலம் பகுதியில் பார்த்து ரசிக்க இடங்கள் பல உண்டு. கூடவே அருகில் உள்ள மலைப்பிரதேசமான ஏற்காடும் சேலத்துக்கு சிறப்பு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அயோத்தியா பட்டணம்:

சேலத்தில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் உள்ள நகரம். அயோத்தியாவில் பிறந்த ராமர் இலங்கை போரை முடித்து விட்டு திரும்பும் போது இந்த ஊரில் தங்கிச் சென்றதால் அயோத்தியாப் பட்டணம் என பெயர் வந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. அயோத்தியாப்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணுகோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள வாரச்சந்தை மிகவும் பழமையானது. இது 1895ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூர் அணை:

உலகத்தில் உள்ள பெரிய அணைகளில் மேட்டூர் அணை குறிப்பிடத்தக்கது. இந்த அணையால் சேலம் மட்டுமின்றி ஈரோடு, திருச்சி போன்ற பக்கத்து மாவட்டங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையின் நீளம் 1700 மீட்டர் ஆகும். இங்கு நீர்மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. மேட்டூர் அணை மற்றும் இங்குள்ள அழகிய பூங்கா, நீர் மின்நிலையம் போன்றவை பார்க்கத்தகுந்த இடங்கள் ஆகும்.

சங்ககிரி கோட்டை:

சங்ககிரி கோட்டை சேலத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடமாகும். சங்ககிரி மலையில் இது கட்டப்பட்டு உள்ளது. கோட்டைக்கு 10 சுற்றுச்சுவர்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரால் குறிப்பிடப்படுகிறது. கோட்டைக்குள் 5கோவில்களும், 2மசூதிகளும் உள்ளன. திப்பு சுல்தான் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர் பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் ஆபரணங்களை இங்கு காணலாம். கோட்டைக்கு செல்லும் வழியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயமும் உள்ளது.

அருங்காட்சியகம்:

கோட்டை அருகே மாநகராட்சி எதிர்புறம் அருங்காட்சியகம் அமைந்து உள்ளது. தொல்லியல், உயிரியல், தாவரவியல் என பலதுறைகளை சேர்ந்த அரிய பொருட்கள் இங்கு உள்ளன. இவை வரலாற்று ஆர்வலர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தும்.

கோட்டை ஜாமியா மசூதி:

சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை ஜாமியா மசூதி மைசூரை ஆண்ட திப்புசுல்தான் கட்டியதாக வரலாறு. மேலும் திப்பு சுல்தான் இங்கு வழிபாடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.

கோவில்கள்:

சேலத்தில் பார்க்க மட்டுமல்ல, தரிசிக்க நிறைய கோவில்கள் உள்ளன. கஞ்சமலை சித்தர்கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், பேளூர் தான்தோன்றி ஈஸ்வரர் கோவில்,  கோட்டை அழகிரி நாதர் கோவில், சுகவனேஸ்வரர் கோவில்,  கோட்டை மாரியம்மன் கோவில், தேர்வீதி ராஜகணபதி கோவில், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவில், குகை காளியம்மன் மாரியம்மன் கோவில் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் சேலத்தில் உள்ளன.

ஏற்காடு:

சேலம் என்றதும் அருகில் உள்ள குளுகுளு மலைப்பகுதியான ஏற்காடு நினைவுக்கு வராமல் இருக்குமா?. சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சிறிய மலைவாசஸ்தலம் ஏற்காடு. பச்சைப் பட்டு போர்த்தியதைப் போல பரந்து விரிந்திருக்கும் வனப்பகுதிகளும் காபித் தோட்டங்களும் கண்களை கொள்ளை கொள்ளும். காற்றில் மிதந்து வரும் ஏலக்காய் வாசனை நாசியைத் துளைக்கும். ஏற்காட்டில் உள்ள ஏரியில் படகுச்சவாரி உண்டு. விதவிதமான படகுகளில் சவாரி செய்து மகிழலாம். ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை பண்ணை,  கிள்ளியூர் அருவி, பிரமிட் முனை (பகோடா முனை) போன்ற இடங்களுக்கு ஒரு ரவுண்டு சென்று வந்தால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து

சேலம் பகுதியை பொறுத்த வரை தரமான உணவு விடுதிகள் உள்ளன. நல்ல குடிநீரும் கிடைக்கிறது. சேலம் மாநகரத்திலும் அருகில் ஏற்காட்டிலும் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மற்றும் சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்தைப் பொறுத்த வரை சென்னையில் இருந்து சேலம் சுமார் 330 கி.மீ தொலைவில் உள்ளது. நல்ல சாலை வசதிகள் உண்டு. சேலத்திற்கு அருகில் திருச்சியில் விமான நிலையம் உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சேலத்துக்கு சிறப்பான ரயில்வசதியும் இருக்கிறது.
"அப்புறமென்ன? சேலத்துக்கு கிளம்பி வர நாள் குறிச்சிட்டாப் போச்சு"




     RSS of this page