Home / JeyaMohanInterview

JeyaMohanInterview


 
ழுத்தாளர் ஜெயமோகன்... கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாதாரண கிராமத்திலிருந்து உருவாகி.. இன்று உலகம் போற்றும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக  அறியப்படுபவர். வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தவர். அவர் எதிர்நீச்சல் போட்டதைச் சொல்கிறார்.
 
உங்க சின்னவயசு இனிமையா இருந்ததா?

‘‘இனிமையாக இருந்ததுன்னு சொல்லிடமுடியாது. ஏன்னா வீட்டிலே அம்மா  - அப்பா ரெண்டுபேருக்கும் எப்பவுமே சண்டை. நிம்மதியில்லாத குடும்பங்களிலே முதல்ல  பாதிக்கப்படுறது குழந்தைங்கதான். அதோட எனக்கு படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு...பெரும்பாலும் எந்த வாத்தியாருக்கும் என்னை பிடிக்கலை... எனக்கு அவங்களயும்.


ஆனா இப்ப உள்ள பிள்ளைங்களைப்போல வீட்டு அறைகளிலேயும்    பள்ளிக்கூட அறைகளிலேயும் நான் அடைஞ்சு கிடக்கல்லை. சின்னவயசிலே மாடுமேய்க்கிறவங்க  கூட காடு மேடெல்லாம் அலைஞ்சேன். எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே ரிசர்வ் ஃபாரஸ்ட் ஆரம்பிச்சிடும். காட்டுக்குள்ள ஏராளமா சுத்தியிருக்கேன். அதோட கிராம  லைப்ரரிகளிலே நிறைய வாசிச்சிருக்கேன். எல்லாமா சேர்ந்து என்னை சந்தோஷமாத்தான் வச்சிருந்திச்சு...’’


 உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத காலகட்டம்... எதுவென்று  சொல்ல முடியுமா?

‘‘வாழ்க்கையிலே மறக்கமுடியாத காலகட்டம்னா எல்லா காலகட்டமும்தான். மறக்க விரும்பற காலகட்டம் ஒண்ணு இருக்கு. 1980லே இது ஆரம்பிக்குது. என் நண்பன்  ராதாகிருஷ்ணன் தற்கொலை செஞ்சுகிட்டான்.  அது என்னை ரொம்ப பாதிச்சது. ஊரைவிட்டு கிளம்பி அலைய ஆரம்பிச்சேன். 1984 லே எங்க அம்மா - அப்பா ரெண் டுபேருமே ஐம்பதுநாள் இடைவெளியிலே தற்கொலை செஞ்சுகிட்டாங்க.. 1
987  வரை எனக்குள்ள பெரிய கொந்தளிப்பு இருந்துகிட்டே இருந்தது. மனநோயின் விளிம்பிலே  வாழ்ந்த நாட்கள் அதெல்லாம்...

ஆனா நான் எழுத வர்றதுக்கு அதுதான் காரணம். அந்த அனுபவங்கள் எல்லாமே என்னோட பெரிய சொத்துக்கள்னு இப்ப நினைக்கிறேன். அந்த அலைச்சல்களிலே க த்துக்கிட்ட விஷயங்களைத்தான் இத்தனை நாளா எழுதிட்டிருக்கேன்னு சொல்லலாம்.’’


 சாதாரண கிராமத்திலே பிறந்து வளர்ந்த நீங்க இப்ப எட்டியிருக்கிற உயரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க..? இது எப்படி சாத்தியமாச்சுன்னு நினைக்கிறீங்க?

‘‘நான் பிறந்தது திருவரம்புங்கிற கிராமம். இப்பவும் ரொம்பச் சின்ன கிராமம்தான். ஆனா கன்னியாகுமரி மாவட்டத்திலே உள்ள கிராமங்களுக்கு பல விசேஷங்கள் உண்டு.  சின்னகிராமங்களிலேகூட ரொம்ப நல்ல லைப்ரரிகள் இருக்கும். நான் நிறைய புத்தகங்களை வாசிச்சது அருமனை கிராம நூலகத்திலே...


கிராமங்களிலே இருக்கிறவங்களுக்கு பல விஷயங்கள் சாதகமில்லாம இருக்குங்கிறது உண்மைதான். என்ன படிக்கிறது என்ன செய்றதுன்னு சொல்ல வழிகாட்டிகள்னு  யாரும் இருக்கமாட்டாங்க. அவங்களேதான் எல்லாத்தையும் பாத்துக்கிடணும். அதோட கிராமத்தான்ங்கிற தாழ்வுணர்ச்சி இருக்கிறதனால மனுஷங்க கிட்ட பேசிப்பழக ஒரு  கூச்சம் இருந்திட்டே இருக்கும்.


கிராமத்து இளைஞனுக்கு இருக்கிற சாதகமான விஷயம் என்னன்னா, அவனுக்கு உண்மையான வாழ்க்கை தெரியும்கிறதுதான். நகரத்து இளைஞனுக்கு வெறும் புத் தகம்தான் தெரியும். கிராமத்திலே வளர்ந்தால் இயற்கையையும் பண்பாட்டையும் மக்கள் வாழ்க்கையையும் எல்லாம் தெரிஞ்சிகிடலாம். பல துறைகளிலே இது பெரிய சொத்து.’’


 உங்க வாழ்க்கையிலே தன்னம்பிக்கையை உண்டு பண்ணின புத்தகம்னு ஏதாவது இருக்கா?

‘‘உலக இலக்கியத்திலே மிகமிகச்சிறந்த தன்னம்பிக்கை புத்தகம் ஒண்ணு இருக்குன்னா அது பகவத்கீதைதான்.


நான் எங்க அம்மா - அப்பா செத்துப்போய் நிலையில்லாம அலைஞ்ச நாட்களிலே 1987லே ஒரு முறை தற்கொலைக்கு போனேன். அதிகாலையிலே எழுந்து தண்டவாள த்திலே தலைவைக்கப் போனேன். ஆனா என் ஆழ்மனசு தற்கொலையை தவிர்க்கிறதை பத்தியே நினைச்சிட்டிருந்ததுன்னு இப்ப நினைக்கிறேன். அப்ப காலை ஒளியிலே  இலைமேலே  உடம்பே கண்ணாடிமுத்து மாதிரி மின்னிக்கிட்டு உக்காந்திட்டிருக்கிற ஒரு சின்ன புழுவைப் பாத்தேன்.  என்ன நடந்ததுன்னு தெரியல்லை. என் மனசு  அப்படியே மலர்ந்து ஜொலிக்க ஆரம்பிச்சிட்டது. நான் பலசமயம் துண்டுதுண்டா படிச்ச கீதை அப்பதான் எனக்கு புரிஞ்சுது.

கீதையை எல்லாருமே வாசிக்கலாம். ஆனா கீதை உள்ள போறதுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கு. அதை கீதா முகூர்த்தம்னு சொல்வாங்க. எனக்கு அந்த நாள்தான் கீதா  முகூர்த்தம். கீதை சொல்றதை அந்த நாளிலே அந்த கணத்திலே புரிஞ்சுகிட்டேன்

இந்த வாழ்க்கையும் இதன் ஒவ்வொரு கணமும் முக்கியம்னு புரிஞ்சுகிட்டேன். புல்லுக்கும் புழுவுக்கும் எல்லாம் இந்த வாழ்க்கை மகத்தானது. மரணமும் அழிவும் எல்லாம்  பக்கத்திலே இருக்கு. ஆனா ஒவ்வொரு உயிருக்கும் அது மட்டுமே செய்யவேண்டிய ஒரு செயல் இருக்கு. அதுதான் தன்னறம். சுவதர்மம்னு கீதை அதைச் சொல்லுது.  அதைச்
செய்ற நிறைவுதான் பேரின்பம். அதன் விளைவுகளை பத்தி கவலையே படக்கூடாது. அது நம்ம கையிலே இல்லை.

அப்ப அந்த நொடியிலே இருந்து என் வாழ்க்கை வேற ஒண்ணா ஆயிடுச்சி. இனி என் வாழ்க்கையிலே எதுக்கும் துக்கப்படமாட்டேன், எந்த ஒரு கணத்திலயும் சோர்வா  இருக்க மாட்டேன்னு முடிவு எடுத்தேன். இருபத்தஞ்சு வருசம் தாண்டியிருக்கு... என்னோட நண்பர்களோ என்கூட வாழுற என் மனைவியோ என்னை சோர்வான, தள ர்ச்சியான நிலையிலே பாத்திருக்கவே மாட்டாங்க. வீணான ஒரு நிமிஷம்கூட என் வாழ்க்கையிலே இல்லை. நான் எப்பவுமே என்னோட பெஸ்ட் மூடிலேதான் இருந்துட் டிருப்பேன்.


இத்தனை வருஷங்களிலே நான் இவ்வளவு எழுதியிருக்கேன் இவ்வளவு வாசிச்சிருக்கேன்னா அதுக்கு இந்த ஊக்கம்தான் காரணம்.


கீதை நமக்கு ஆன்மீகமான ஒரு தன்னம்பிக்கையை குடுக்குது. மத்த தன்னம்பிக்கை நூல்கள்லாம் உன்னால முடியும்,  நீ பெரிய ஆள்னு சொல்லுறப்ப கீதை நீ ரொம்ப  சின்ன ஆள், சின்ன துளி, ஆனா நீ பிரமாண்டமான ஒரு அமைப்போட உறுப்புன்னு சொல்லுது... அது இன்னொரு வகையான தன்னம்பிக்கையை குடுக்குது. நான்  பெரிய ஆள்னு நினைச்சுக்கிடுறப்ப சிலசமயம் தோல்விகளிலே நம்ம தன்னம்பிக்கை அழிஞ்சிரும். கீதை குடுக்கிற தன்னம்பிக்கை அழியவே அழியாது.’’


 இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

‘‘என் மகனுக்கு என்ன சொல்வேனோ அதைத்தான். எது உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தை குடுக்குதோ, எதைச்செஞ்சா நீங்க நிறைவா செய்ய முடியுமோ  அதைச் செய்ங்க... அதான் கீதையும் சொல்றது.  எதைச்செஞ்சா நீங்க நிறைவா உணர முடியுமோ, எதை நீங்க முழுமையா ஈடுபட்டு செய்யமுடியுமோ அதை செய்ங்க.  அதான் உங்க தன்னறம்.’’.


சந்திப்பு : திருவட்டாறுசிந்துகுமார்

தமது அபாரமான சிறுகதைகளுக்காகவும் பிரமிக்கச் செய்யும் நாவல்களுக்காகவும் தடாலடி விமரிசனங்களுக்காகவும் எப்போதும் நினைக்கப்படுபவர், ஜெயமோகன். தமிழ் பேப்பர் தீபாவளி சிறப்பிதழுக்காக அவர் அளித்த பேட்டி இது:

இன்று அதிகம் பாராட்டப்படும், அதிகம் விமரிசிக்கப்படும், அதிகம் தூற்றப்படும் எழுத்தாளராகத் தமிழில் நீங்கள் இருக்கிறீர்கள். சுமார் கால் நூற்றாண்டு காலமாக எழுதிவரும் உங்களுக்கு இந்தக் கட்டம் எம்மாதிரியான உணர்வைத் தருகிறது? எழுத்தில் உங்களுடைய வளர்ச்சியையும் வாசிப்பில் வாசகர்களின் வளர்ச்சியையும் ஒப்பிட முடியுமா?

நான் தமிழில் 1986ல் எழுத ஆரம்பித்தேன். கல்லூரி நாட்களின் எழுத்தை நான் கணக்கில் சேர்க்கவில்லை.  ’அதிகம் விமரிசிக்கப்படும், அதிகம் தூற்றப்படும்’ என்ற சொல்லாட்சியை மிகப்பெரிய அங்கீகாரமாகவே கொள்கிறேன். பாரதி, புதுமைப்பித்தன் முதலிய அத்தனை முதன்மையான படைப்பாளிகளும் தங்கள் வாழ்க்கைக் காலக்கட்டத்தில்  அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

என்னுடைய ஆக்கங்கள், எனக்காகத் தங்கள் கவனத்தை அளிக்கத் தயாராக உள்ள வாசகர்களின் ஆழங்களுடன் உரையாடுகின்றன. அவர்களின் கற்பனைகளில் நான் எனக்கான உலகை உருவாக்குகிறேன். அவ்வாறு உருவாக்குவதற்காக அவர்களின் சொந்த அந்தரங்க உலகை நான் கலைக்கிறேன். உங்களை நிலைகுலையச் செய்யாத நல்ல ஆக்கமே இருக்க முடியாது.

இவ்வாறு வாசகனை ஆசிரியன் சீண்டி நிலைகுலையச் செய்யும்போது அவன் சாதகமாகவும் எதிர்மறையாகவும் வினை புரிகிறான். சிலசமயம் அவன் பெரும் பரவசம் கொள்கிறான். சிலசமயம் தன் சுயத்தை எண்ணி அஞ்சுகிறான். அதைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறான். அதை இழக்கிறோம் என்ற உணர்வேற்படுகையில் எரிச்சலுற்று, அந்த ஆசிரியனுடன் விவாதிக்கவும் அவனை நிராகரிக்கவும் முயல்கிறான். உண்மையில் இரண்டுமே எழுத்தாளனுடனான உரையாடல்கள்தாம். என் நல்ல வாசகர்கள் பலர் என்னை வெறுத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தவர்கள்.

இது தவிர ஒரு தரப்பு உண்டு. அவர்கள் என் வாசகர்கள் அல்ல. நான் உருவாக்கும் விவாதங்களைக் கண்டு காழ்ப்பு கொண்டவர்கள். என் நூல்களை வாசிக்காமல் அபிப்பிராயங்களை மட்டும் பொதுச் சூழலில் இருந்து பெற்று, அதையே சொல்லிக்கொண்டிருப்பவர்கள். நான் அவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. நான் உரையாடுவது திரளிடம் அல்ல. என்னுடைய வாசகர்கள் என்ற சிறு வட்டத்துடன் மட்டும். பிறர் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். நான் சொல்வது அவர்களுக்குக் கேட்கவில்லை. ஆகவே அவர்கள் சொல்வது எனக்கும் முக்கியமல்ல.

நான் எழுதவந்தபோது, எழுத்து சிறிய சிற்றிதழ்களுக்குள் இருந்தது. 200 பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்கள். நான் அந்த உலகுக்குள் மட்டுமே நிற்கும் மனப்பயிற்சியுடன் எழுத வந்தேன். நான் என் மனைவுக்கு எழுதிய காதல் கடிதத்தில், நான் என் சிறிய வேலை, சிற்றிதழ் எழுத்து என்ற இரு வட்டங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அவள் கோரக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தேன்.

எண்பதுகளின் இறுதியில் ஐராவதம் மகாதேவன் தினமணி நாளிதழில் தமிழ்மணி என்ற பகுதியை வெளியிட ஆரம்பித்ததும் நிலைமை மாற ஆரம்பித்தது. அதன் பின் இந்தியா டுடே, சுபமங்களா முதலிய நடு இதழ்கள். புத்தகக் கண்காட்சிகள். கடைசியாக இணையம். இன்று எனக்கும் என்னைப்போன்ற பிற எழுத்தாளர்களுக்கும் இருக்கும் புகழ், புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது.

ஆனால் தமிழகத்தின் மக்கள்தொகையை வைத்துப் பார்த்தால் மிகமிகக் குறைவான ஒரு பங்கினரே எதையாவது வாசிக்கிறார்கள். ஒரு சதவீதம் பேர்கூட இல்லை. ஆகவே இங்கே ஒரு அறிவியக்கமே இல்லை. பரப்பியக்கங்கள் மட்டுமே உள்ளன. கேளிக்கைக் கலைகளும் கேளிக்கை இதழியலும் மட்டுமே பரவலாக உள்ளன. எழுத்தாளன் அவை உருவாக்கும் எதிர்மறைச் சூழலுடன் போரிடும் நிலை இன்றும் நீடிக்கிறது.

சிலகாலம் தொழிற்சங்கவாதிகளுடன் பழகிய அனுபவம் குறித்து எழுதியிருக்கிறீர்கள். சில காலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்களில் கலந்துகொண்டவர் என்றும் கேள்விப்படுகிறோம். இந்த இருவேறுபட்ட அனுபவங்கள் உங்கள் ஆளுமை உருவாக்கத்தில் நிகழ்த்தியிருக்கக்கூடிய தாக்கத்தை விவரிக்க முடியுமா?

நான் தொலைபேசித்துறை இடதுசாரித் தொழிற்சங்கத்தில் பல பொறுப்புகளில் சமீபகாலம் வரை பணியாற்றியிருக்கிறேன்.  தொழிற்சங்க அரசியலை வைத்துத்தான் பின்தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதியிருக்கிறேன். பள்ளி நாட்களில் ஆர் எஸ் எஸ் இயக்கத்துடன் தொடர்பிருந்தது. அதைப் பற்றியும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்.

குமரி மாவட்டத்தில் அன்று கிறித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் இந்துக்கள் மேல் கடுமையான அடக்குமுறையும் கட்டுப்பாடும் இருந்தது. சிறுவனாக இருந்தபோது விபூதி போட்டுக்கொண்டு காப்புக்காடு என்ற ஊரில் நடந்து சென்றமைக்காக நான் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறேன். ஆலயங்களில் மணி அடிப்பது, சங்கூதுவது தடைசெய்யப்பட்டிருந்தது. பெண்கள் கிறித்தவ தெரு தாண்டியபின்னர் பொட்டு வைத்துக்கொள்வார்கள். இது இன்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் சீர்திருத்த கிறித்தவர்களின் மனநிலை இன்றும் இதுவே. இந்த அடக்குமுறைக்கு எதிரான சக்தியாக வந்தது ஆர் எஸ் எஸ். அது என்னைக் கவர்ந்தது.

பின்னர் நான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தைவிட்டு விலகினேன். அது முழுக்க முழுக்க கொள்கை சார்ந்தது. தனிப்பட்ட முறையில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் என்னுடைய மதிப்புக்கும் பிரியத்துக்கும் உரியவர்களாக இருந்தார்கள்.  ஆனால் என்னுடைய ஆன்மிகமும் அரசியலும் அவர்களின் இந்துத்துவ குறுக்கல்வாதத்துக்குள் அடங்குவன அல்ல. நான் மதம் கடந்த ஆன்மிகத்துக்கான தேடலில் இருந்தேன்.

இடதுசாரி தொழிற்சங்க அரசியலுக்குள் அதன் பின்னரே சென்றேன். காசர்கோட்டில் ஐந்து வருடங்கள் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொழிற்சங்க கம்யூனில் வாழ்ந்தேன். கட்சியிலும் குறைந்த காலம் இருந்தேன். பின்னர் கட்சி ஈடுபாட்டை விட்டு, தொழிற்சங்க அரசியலுடன் நிறுத்திக்கொண்டேன். வலது கம்யூனிஸ்டு கட்சி சார்புள்ள தொழிற்சங்க ஊழியனாக இருதேன். சினிமாவில் ஈடுபடும்வரை.

தர்மபுரி மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சிக் கிளையில் எனக்கு பாவேல் என்று புனைபெயர் அளிக்கப்பட்டது. நான்  அப்போது எழுதிய ஜகன்மித்யை கதையில் ஒரு பிற்போக்கான நம்பூதிரி ஹிட்லரை ஆதரித்துப் பேசுகிறார். அந்த வரிகளை நான் எழுதினேன் என்று என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள், அவை என் வரிகள் அல்ல என்று நான் விளக்கம் அளித்ததை ஏற்காமல் எச்சரிக்கை விடுத்தார்கள். நான் அந்தப் புள்ளியில்தான் ஒன்றை உணர்ந்தேன். எழுத்தாளனுக்கு அரசியல் இருக்கக்கூடாது. இருந்தால் அது அவனது தனிப்பட்ட அரசியலாகவே இருக்கவேண்டும். அவன் திரளில் ஒரு துளியாக இருக்கவே கூடாது.

எந்த அரசியல் அமைப்பிலும் எழுத்தாளன் இருக்கக்கூடாது என நினைக்கிறேன். தன் உறுப்பினர்களின் சிந்தனைக்கு ஓர் எல்லை வகுக்காமல் ஓர் அமைப்பு செயல்பட முடியாது. எல்லையிடப்பட்ட சிந்தனை கொண்டவன் எழுத்தாளனாக இருக்கமுடியாது. தன் எழுத்துக்களுக்காக எழுத்தாளன் எவரிடமும் சமாதானம் சொல்லவேண்டிய நிலையில் இருக்கக் கூடாது. சிலசமயம் அவன் அபத்தமாகக் கூடப் பேசக்கூடும். ஏனென்றால் எழுத்தாளன் உணர்ச்சிகரமானவன், உள்ளுணர்ச்சி சார்ந்து செயல்படக்கூடியவன். அது அவனை அதீதமாகக் கொண்டுசெல்லலாம். குழப்பலாம். அவன் தத்துவ ஞானியோ தலைவனோ அல்ல. மாபெரும் கலைஞர்கள்கூட நடைமுறை அரசியலில் முட்டாள்த்தனமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஹிட்லரை ஆதரித்த எஸ்ரா பவுண்டைப் போல. ஆனால் அந்த சுதந்தரம் எழுத்தாளனுக்குத் தேவை.

என் ஆளுமை உருவாக்கத்தில் இந்த இரு இயக்கங்களுமே எந்த பாதிப்பையும் செலுத்தவில்லை என்றே நினைக்கிறேன். நான் இவற்றில் இருந்த காலம் மிகக் குறைவு. நான் உள்ளே நுழையாமல் தயங்கிக்கொண்டே இருந்தேன். என்னால் இரண்டிலுமே இணையவும் கலக்கவும் முடியவில்லை.

சித்திரிப்புகளில் உங்களுடைய நுணுக்கம் எப்போதும் வாசகர்களை அசரடிக்கக்கூடியது. உங்கள் முன்னோடிகளாக நீங்கள் குறிப்பிடுவோரைக் காட்டிலும் பல தளங்கள் நகர்ந்து போயிருக்கிறீர்கள். (குறிப்பாகக் காடு, விஷ்ணுபுரம், பல சிறுகதைகள்) எழுதும்போது ஜாக்கிரதை உணர்ச்சி என்பதை எந்தளவு நீங்கள் கைக்கொள்கிறீர்கள்? அல்லது தொழில்நுட்பத் தேர்ச்சியின் தாக்கத்தை எவ்வளவு ஒரு கலைப்படைப்பில் அனுமதிப்பீர்கள்?

சுந்தர ராமசாமி

கலைப் படைப்பு வேறு, தொழில்நுட்பம் வேறு என்ற பிரிவினையை ஏதோ ஒரு பலவீனமான தருணத்தில் சுந்தர ராமசாமி உருவாக்கினார். சுஜாதா போன்ற திறன் மிக்க புனைகதையாளரை இலக்கியவாதியிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட அவர் உருவாக்கிய பிரிவினை இது. பலரது மனத்தில் இந்த இருமை அப்படியே பதிந்துவிட்டது. கலையில் தொழில்நுட்பம் இருக்காது, கலை தொழில்நுட்பத்துக்கு எதிரானது என்று எண்ணிக்கொண்டுவிட்டார்கள். எழுதத் தெரியாதவர்களுக்கான சாக்கு போக்காகவும் ஆகிவிட்டிருக்கிறது இது. கலையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத நிலையில் உருவாக்கப்பட்ட ஒரு ஊகம் மட்டும்தான் இது.

நல்ல கலை என்பது உச்சக்கட்ட தொழில்நுட்பத் தேர்ச்சியில் இருந்தே மேலே செல்லக்கூடியதாக இருக்கும். ஒரு சாதாரண  உருவப்பட ஓவியனைப் பார்த்து அவனுடையது தொழில்நுட்பம் மட்டுமே என்கிறோம். ஆனால் ரெம்பிராண்ட் என்ற மாபெரும் கலைஞன், அவனைவிடப் பல மடங்கு தொழில்நுட்பத் தேர்ச்சி கொண்டவன் என்பதை நாம் உணர்வதில்லை. அவனது கலை அந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே அடையப்பெற்றது.

மொழியிலும் வடிவிலும் உள்ள தொழில்நுட்பம் இல்லாமல் பெரும் கலை சாத்தியமாவதில்லை. நல்ல கலைஞனைப் பொறுத்தவரை அவனது பயிற்சிக் காலத்திலேயே அவன் அந்த பிரச்னைகளை தாண்டிச் சென்றிருப்பான். லால்குடி ஜெயராமன் வயலின் வாசிக்கும்போது வயலின் தொழில் நுட்பமாக அவரது இசை தெரியக்கூடாது என முயல்வாரா என்ன? பத்து வயதுக்குள் அவரது கைகளில் இருந்து வயலின் பற்றிய பிரக்ஞையே இல்லாமலாகிவிட்டிருக்கும். அதன்பின் அவர கற்பனை செய்கிறார், வயலின் அதை வாசிக்கிறது. அவ்வளவுதான்.

நான் என் மொழியை அதேபோலத் தீட்டியிருக்கிறேன். அதற்கு என் நாற்பதாண்டுக் கால வாழ்க்கையைச் செலவிட்டிருக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் எழுதி வாசித்து வாழ்ந்திருக்கிறேன். இந்த உழைப்பை எங்கு செலவிட்டிருந்தாலும் அது பெரும் செல்வமாக, வெற்றியாகவே ஆகியிருக்கும். இன்று மொழியின், புனைவின் தொழில்நுட்பம் எனக்கு ஒரு பிரச்னையே அல்ல. அதை நான் அறிவதே இல்லை. என் சவால் என்னுடைய ஆன்மிகமான அடுத்தபடி, என்னுடைய கற்பனையின் புதிய சாத்தியம் இரண்டில் மட்டுமே உள்ளது.

தீவிரமாகப் புனைகதைகள் மட்டுமே பலகாலம் எழுதி வந்தீர்கள். திடீரென்று  கதையல்லாத எழுத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள். இது வாசகர்களின் தேவையறிந்த செயல்பாடா? இயல்பாகவே கட்டுரைகள் எழுதுவதில்தான் இப்போது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? உங்கள் நாவல்களைக் காட்டிலும் கட்டுரைகளின் மூலமே அதிக அளவு வாசகர்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றால் ஒப்புக்கொள்வீர்களா?

இந்த பிம்பமே பிழையானது. நான் ஆரம்பம் முதலே கட்டுரைகள் எழுதி வந்தவன். சொல்லப்போனால் நான் கட்டுரைகளை எழுதிக்கொண்டே உள்ளே வந்தேன்.  மாறிமாறி புனைகதைகளையும் கட்டுரைகளையும் கால் நூற்றாண்டாகத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். ரப்பர் என்ற முதல் நாவல் வெளிவந்ததும் உடனே வந்தது, நாவல் என்ற கோட்பாட்டு நூல்தான்.

பிரமிள் ஓரிடத்தில் சொன்னார். நல்ல நாவலாசிரியனுக்குரிய தகுதி ஒன்றுதான், நீண்ட விரிவான கட்டுரைகள் எழுதும் திறன் அவனுக்கிருக்கவேண்டும். [வியாசங்கள் என்கிறார் பிரமிள்] உலகம் முழுக்க நாவலாசிரியர்கள் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்களே. தஸ்தயேவ்ஸ்கி அல்லது தாமஸ் மன் அல்லது கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ்… எந்த உதாரணத்தை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

என்னுடையது ஓர் அடிப்படைத் தேடல். நான் அனைத்தையும் வரலாற்றிலும் தத்துவத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் வைத்துப் பார்க்கும் முழுமை நோக்கை விரும்புகிறேன். இதையே ஆன்மிகம் என்கிறேன். இந்தத் தேடலை கட்டுரை கதை நாவல் என மூன்று தளத்திலும் நிகழ்த்துகிறேன்.

என் கட்டுரைகள் என் நாவல்களுக்கான வழிகளாக உள்ளன. என் பெரிய நாவல்கள் கட்டுரைகளைப்போல எளிதாக வாசிக்க முடியாது. அதற்கான உழைப்பு தேவை. நாவல்கள் நிரந்தரமான கருப்பொருள்கள் கொண்டவை. ஆனால் கட்டுரைகள் அன்றாட விஷயங்களில் இருந்து எழுபவை. ஆகவே கட்டுரைகளுக்கான வாசகர்கள் அதிகம் இருப்பது நியாயமே. ஆனாலும் அடிப்படையில் நான் நாவலாசிரியன். என் கட்டுரைகள் நாவலாசிரியனின் கட்டுரைகளே.

மலையாள, வங்காள மொழி இலக்கியங்களுக்கு உள்ள வாசக எண்ணிக்கையைக் காட்டிலும் தமிழில் குறைவாகவே உள்ளதற்கு அரசியல் காரணங்கள் இருக்க முடியுமா?

பொதுவாக வாசிப்புப் பழக்கம் என்பது மாபெரும் சமூக இயக்கங்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. வங்கத்திலும் கேரளத்திலும் மார்க்ஸிய இயக்கங்கள் வாசிப்பைப் பெரும் சமூகச் செயல்பாடாக மாற்றின. கர்நாடகத்தில் – சொல்லப்போனால் தெற்கு கர்நாடகத்தில் மட்டும் – சோஷலிச இயக்கம் வாசிப்பை சமூகச் செயல்பாடாக வளர்த்தது. அவ்வியக்கங்களின் தொடர்புமுறையே வாசிப்பாக இருந்தது. அவை பெரும் எழுத்தாளர்களை உருவாக்கின.

தமிழகத்தின் சமூக இயக்கமாக இருந்தது காங்கிரஸ். அக்காலக்கட்டத்தில் இங்கே வாசிப்பலை உருவானது. கலைமகளும் மணிக்கொடியும் ஆனந்தவிகடனும் கல்கியும் அவ்வியக்கத்தின் விளைவுகளே. ந. பிச்சமூர்த்தியும் கல்கியும் அவ்வியக்கத்தின் உருவாக்கங்களே. ஆனால் அதன் பின் உருவாகி ஐம்பதாண்டுக் காலமாகத் தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட இயக்கம் வாசிப்பை மையமாக்கிய இயக்கம் அல்ல. அது மேடையை மையமாக்கிய இயக்கம். அது ஏராளமான பேச்சாளர்களை உருவாக்கியது. எழுத்தாளர்களை உருவாக்கவில்லை.

ஆகவே இங்கே இன்றும் மேடையே முக்கியமான ஊடகம். இன்று தமிழ்நாட்டில் ஒரு சாதாரணப் பேச்சாளர் பெறும் பணமும் புகழும் இலக்கிய மேதைகளுக்குக் கூடக் கிடைப்பதில்லை. நம்முடைய இணைய அரட்டைகளைப் பார்த்தால் நம் இளைய தலைமுறை முழுக்க முழுக்க பேச்சுக்களை கேட்டே சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டிருப்பது தெரியவருகிறது.

இலக்கியத்துக்கு என்றுள்ள குறைவான வாசகர்கள் எண்ணிக்கை, மனச்சோர்வு கொள்ளத்தக்க விஷயமாக  உங்களுக்குத் தோன்றுமா? நீங்கள் வெகுஜன இதழ்களில் எழுத ஆரம்பித்ததும் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்களுக்கு எழுத ஆரம்பித்ததும் இதனால்தானா?

குறைவான வாசகர்கள் என்பது தனிப்பட்ட முறையில் ஒரு சோர்வூட்டும் அம்சமாக  இல்லை. நுட்பமான வாசகர்களே என் இலக்கு. நான் எப்போதுமே எல்லாருக்குமான எழுத்தாளனாக இருக்க முடியாது என அறிவேன். ஆகவே அறிவார்ந்த உழைப்புக்கும் கற்பனைக்கும் தயாராக இல்லாத வாசகர்கள் என்னை வாசிக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

அதேசமயம் தமிழில் வாசிப்பே இல்லாமலிருப்பது, இங்கே ஓர் அறிவியக்கமே நிகழாத நிலையை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஆகவே இங்கே வாசிப்பு பெருகவேண்டும் என விரும்புகிறேன். பல தளங்களில் காத்திரமான நூல்கள் வந்து விவாதங்கள் நிகழவேண்டுமென ஆசைப்படுகிறேன்.

நான் வணிக இதழ்களில் எழுதியது என் எழுத்தை நோக்கி நல்ல வாசகர்களை ஈர்ப்பதற்காக ஓர் அடையாளத்தை அங்கே விட்டுவைப்பதற்காகவே. அங்கே நல்ல இலக்கியம் படைக்க இன்னும் இடமில்லாமல்தான் இருக்கிறது. ஆனால் இன்று, இணையத்தின் காலக்கட்டத்தில் அது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சினிமாவில் நுழைந்தமைக்கு காரணம் ஒரு சுதந்திரமான தொழில் தேவை என்பதனால் மட்டுமே. இது எனக்கு நல்ல வருமானத்தை, நிறைய ஓய்வு நேரத்தை அளிக்கிறது. வாசிக்க, எழுத, பயணம்செய்ய முடிகிறது. ஒரு தொழிலாக, தரமான படங்களில் என் கதைத் தொழில்நுட்பத்தை அளிக்கிறேன். வாய்ப்பு வந்தால் நல்ல படங்கள் செய்யக்கூடும்.

திரைப்பட எழுத்தின் காரணமாக இனி காடு, விஷ்ணுபுரம் போன்ற நாவல்கள் உங்களிடமிருந்து வர வாய்ப்பில்லாது போகுமா? நீண்ட காலமாக எழுதிவரும் அசோகவனம் வருமா? திரைப்படம் உங்களை விழுங்கிவிட்டதா?

நேர்மாறாக, சென்ற சில வருடங்களில்தான் பெரிய அளவில் படைப்புகள் வந்திருக்கின்றன. சென்ற வருடத்திலேயே பாருங்கள், இன்றைய காந்தி போன்ற பெரிய கட்டுரை நூல். பலவருட உழைப்பு இல்லாமல் பிறிதொருவரால் இம்மாதிரி எழுதமுடியாது. அதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பும் நேரமும் சாதாரணமல்ல. வேலையில் இருந்திருந்தால் அதை முடிக்க எனக்கு இரு வருடங்கள் ஆகியிருக்கும். நான்கு சிறு நாவல்கள் வந்திருக்கின்றன. அதைத் தவிர இலக்கிய விமர்சனம், பண்பாட்டு விமர்சனம் மற்றும் இந்திய ஞானமரபு சார்ந்து இருபது நூல்கள். இந்த அளவுக்கு எழுதும் வேறெந்த எழுத்தாளர்கள் எந்த மொழியில் இருக்கிறார்கள்? நான் தினமும் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன் என நீங்கள் அறிவீர்கள்.

அசோகவனம் 2500 பக்கம் அச்சில் வரும் நாவல். அதை முடித்துவிட்டேன். அடுத்த வருடம் தமிழினி வெளியீடாக வரும். அசோகவனம் நான்கு வருடங்களாக எழுதப்படுகிறது. விஷ்ணுபுரம் பத்து வருடங்களாக எழுதப்பட்டது என்பதை மறக்கவேண்டாம். அது பெரும் உழைப்பைக் கோரும் மிகப்பெரிய வரலாற்று நாவல்.

பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி வரிசையில் உங்களை வைத்து ஆராதிக்கக் கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் திரைப்படங்களுக்கு எழுதுவதன்மூலம் சாத்தியமாகும் பொருளாதார வசதிகள் குறித்து எழுதுகிறீர்கள். எழுத்தாளருக்கும் பொருளாதார வசதிகள் அவசியமே என்றாலும், இத்தனை காலமாக நீங்கள் உயர்த்திப் பிடித்து வந்த நம்பிக்கைகளையும், விமரிசித்து வந்த அவலங்களையும், கடைப்பிடித்துவந்த மதிப்பீடுகளையும் நீங்களே நிராகரிப்பதாக நினைக்கமாட்டார்களா?

நான் உயர்த்திப்பிடித்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றை எந்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றே சொல்வேன். அதை என் இணையத்தளத்திலேயே நீங்கள் காணலாம். நான் சுந்தர ராமசாமியின் பள்ளியில் உருவானவன். அவருக்கு ஆரம்பத்தில் சிற்றிதழ் உலகை புறப்பாதிப்புகள் இல்லாமல் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வணிக எழுத்தை அவர் முழுமையாக நிராகரித்தார். வணிக எழுத்தின் பொற்காலத்தில் சிற்றிதழ் என்ற மரபு நசித்துவிடாமல் பாதுகாத்த முன்னோடிகளின் பார்வை அது.

ஆரம்பத்தில் அவரது எண்ணங்களே எனக்கும் இருந்தன. ஆனால் பின்னர் ஒடுங்கிக்கொள்வதும் அடங்கியிருப்பதும் தேவையில்லை என்ற எண்ணத்தை அடைந்தேன். சிற்றிதழ்களின் எல்லையை விட்டு இலக்கியம் வெளியே வந்தாகவேண்டும் என தொண்ணூறுகளிலேயே எழுத ஆரம்பித்தேன். அது அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு மேலே எழவேண்டும் என்று வாதாடினேன். சுந்தர ராமசாமியும் காலப்போக்கில் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார். பொத்திப் பாதுகாப்பது குழந்தைப் பருவத்தில் சரி. இப்போது இலக்கியம் துடிப்பான இளமையை அடைந்து விட்டது.

நான் வணிக இலக்கியத்தை நிராகரிப்பவனல்ல என என் எழுத்துக்களைப் படித்தால் அறியலாம். வணிகக் கலைகளையும் நிராகரிப்பவனல்ல. அவற்றை வணிக எழுத்தாகவும் வணிகக் கலையாகவும் கண்டு அவற்றுக்கான இடத்தை அளித்து ஆராய்வதே என் வழிமுறை. கேளிக்கைக் கலைகள் இல்லாமல் எந்தச் சமூகமும் இல்லை. நான் கேளிக்கை எழுத்தை எழுதுவேனா என்றால் அது என் இலக்கல்ல என்றே சொல்வேன்.

நான் சினிமாவில் ஈடுபடுவது ஒரு சமரசமா என்றால் ஒருவகையில் ஆம் என்றே சொல்வேன். என்னுடைய எழுத்து எதுவோ அதற்கு அங்கே  இன்று இடமில்லை. ஆனால் நான் அதை அங்கே உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் அங்கே மெல்லிதாகவேனும் தென்படுகின்றன. அந்த நம்பிக்கையே அங்கே செயல்படசெய்கிறது. கிட்டத்தட்ட எழுபதுகளில் மலையாளத்தில் இருந்த நிலை – பத்மராஜன் போன்றவர்கள் உள்ளே நுழைந்த சூழல் – இன்று நிலவுகிறது. தமிழ் சினிமாவில் புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும் எல்லாம் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்.   இன்றுள்ள வாய்ப்புகள் அவர்களுக்கு என்றும் இருந்ததில்லை.

உண்மையில் சினிமா உலகம் இலக்கியத்தின்மீது பெருமதிப்புடன் இருக்கிறதென நீங்கள் அறிவீர்கள். இலக்கியவாதி என்பதே ஒரு பெரிய மணிமுடியாக உள்ளது. ஆனால் இலக்கியத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. இலக்கியவாதியின் பங்களிப்பு வணிகரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அது நிகழலாம்.

ஆனால் ஒன்று. என்னுடைய ஆளுமையையும், ஒழுக்க மதிப்பீடுகளையும் எங்கும் நான் சமரசம் செய்துகொள்ளவில்லை. எங்கும் எழுத்தாளனுக்குரிய தலைநிமிர்வை இழப்பதில்லை.  அதற்கான எந்தக் கட்டாயமும் எனக்கு சினிமாவில் வரவும் இல்லை. இது எனக்குப்பின் சினிமாவுக்கு வரப்போகும் அடுத்த தலைமுறையினருக்காக நான் கொள்ளும் உறுதி.

ஒரு திரைப்படத்தில் நீங்கள் பங்குபெற்றால் அது குறித்த உங்கள் இணையப் பதிவுகள் எல்லாமே விளம்பரங்கள் போல அமைந்துவிடுவது ஏன்? போற்றிப் பாடாமல் திரையுலகத்தில் நீடிக்கமுடியாது என்பது உண்மைதானா?

நான் இதுவரை பங்குபெற்ற சினிமாக்களில் இரு படங்களைப் பற்றி மட்டுமே செய்தி வெளியிட்டிருக்கிறேன். நான் கடவுள் மற்றும் அங்காடித் தெரு. அப்படங்கள் தமிழில் நல்ல சினிமாவின் வளர்ச்சியின் முக்கியமான படிகள் என்றே நினைக்கிறேன். ஆகவே அவற்றைக் கவனப்படுத்துகிறேன். இவை விளம்பரங்கள் அல்ல. இந்த விளம்பரம் மூலம் அந்த படங்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை.

இவை என்னுடைய ஆக்கங்களும் கூட என்பதனால் எதிர்வினைகளும் விவாதங்களும் நிகழ என் இணையத்தளத்தில் இடமளிக்கிறேன். எப்படி என் இணையத்தளம்  விஷ்ணுபுரம் பற்றிய விவாதத்திற்கு இடமளிக்கிறதோ அப்படி நான் கடவுளுக்கும் இடமளிக்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் மிருகம் பட இயக்குநர் சாமி குறித்து நீங்கள் எழுதியதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சிந்து சமவெளி, மாமனாரின் இன்பவெறியின் நாகரிகமான மறுபதிப்பு என்று ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களும் தீர்ப்பளித்துவிட்டார்கள். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு திரைப்படம் கூட்டு முயற்சி. அதன் வெற்றி தோல்வியில் அனைவருக்குமே பங்குண்டு. தோல்விக்குப் பின்னர் கருத்துச் சொல்வது அறமில்லாத ஒன்றாகவே கருதப்படும்.  ஆகவே நான் கருத்து சொல்லத் தயங்குகிறேன்.

சிந்துசமவெளி ஒரு தரமான திரை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது. இவான் துர்கனேவின் முதற்காதல் என்ற குறுநாவலை ஒட்டி ஒரு தமிழ் நாவல் வடிவதை எழுதித் தரும்படி சாமி கேட்டார். நான் அதை எழுதி அளித்தேன். அதுவே அதில் என் பங்களிப்பு.

அந்தக் கதையைக் கிட்டத்தட்ட முழுமையாகவே நிராகரித்துத்தான் சிந்து சமவெளி எடுக்கப்பட்டது. ஆகவே அதை நான் என் ஆக்கம் என சொல்லிக்கொள்ளவில்லை. படம் வெளிவரும் முன்னரே இதைத் தெளிவாக்கியிருக்கிறேன். படத்திலும் கதை திரைக்கதை வசனம் என சாமி பெயரே உள்ளது. அது அவரது ஆக்கம். முழுமையாக.

சாமி உத்தேசித்தது எழுபதுகளில் பத்மராஜன், பரதன் எடுத்தவற்றைப் போன்ற ஒரு நியூவேவ் படம். ஆனால் அது கைகூடவில்லை. சினிமாவில் இது சாதாரணம். பல்வேறு திசைகளில் பல்வேறு சக்திகள் இழுக்க படம் உருவாகிறது.  ஒரு கட்டத்தில் அது அனைவர் கையையும் மீறி அதுவே வடிவம் கொள்கிறது. படம் எடுக்கையில் பெருந்திரளின் மனநிலையைப் பற்றிய, வெற்றியைக் குறித்த ஓர் அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அச்சத்தை மீறி படம் உருவாவது ஒரு தற்செயல்போலத்தான்.

கடைசியாக ஒன்று. மாமனாரின் இன்ப வெறி என்ற மலையாளப்படம் ஒரு ’பிட்டு’படம் அல்ல. அது கேரளத்தின் புது யதார்த்தவாதப் படங்களில் ஒன்று. மழு என்பது மூலப்பெயர். மலையாளத்தில் சிறிய யதார்த்தப் படங்கள் எழுபதுகளில் வெளிவந்தன. அவை  பெரிய வணிகப்படங்களைத் தோற்கடித்தன.  அந்த வெற்றியே மலையாளத்தில் நல்ல படங்கள் உருவாக வழியமைத்தது.

இவ்வாறு வந்த புது யதார்த்தப் படங்கள் ஏறத்தாழ அனைத்துமே காமத்தைக் கருப்பொருளாகக் கொண்டவைதான். தகரா, மதனோஸ்தவம்,  ஈற்றா, அவளுடே ராவுகள், ரதி நிர்வேதம், வேனல் போன்ற பல படங்கள். அவை இன்று பெரும் செவ்வியல் படங்களாக கேரள விமர்சகர்களால் கருதப்படுகின்றன. அவை தமிழகத்தில் பிட்டுப் படங்களாக ஓடியவை. இன்றும் அப்படியே பேசப்படுகின்றன அவற்றில் பல படங்களின் கரு, பொருந்தா உறவே. அவற்றை எழுதியவர்கள் பத்மராஜன், ஜான்பால் போன்றவர்கள். இயக்கியவர்கள் பரதன் ,மோகன், ஐவி சசி போன்ற பெரும் இயக்குநர்கள். பல படங்களில் கமல் நடித்திருக்கிறார். அடுத்தக் கட்டத்தில், யதார்த்தம் வேரூன்றிய பின் மேலும் சிக்கலான படங்கள் வந்தன.

சாமியின் முன்னுதாரணம், அவரது யத்தனம் அதுவே என்று என்னிடம் சொன்னார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை அவ்வளவுதான். அவர் சர்வ சாதாரணமான ஒரு  வணிகப்படம் எடுக்க முனையவில்லை. ஒரு முயற்சி செய்தார். அவரது நோக்கம் மதிக்கத்தக்கது என்றே நினைக்கிறேன்.

உங்களைத் தொடர்ந்து பல நல்ல எழுத்தாளர்கள் திரைப்படங்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தக்கூடிய காரணியாக அமையுமா? அல்லது நல்ல எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் தமிழ் சினிமா தன் மதத்துக்கு மாற்றப்போகிற விஷயமா?

கண்டிப்பாக. தமிழில் நல்ல படங்களுக்கான ஒரு தேடல் இருந்துகொண்டிருக்கிறது. நீங்களே பார்க்கலாம். இன்று எந்த உதவி இயக்குநரை எடுத்துக் கொண்டாலும் ஒரு நல்ல படம் எடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறார். நல்ல யதார்த்தக் கதைதான் வைத்திருக்கிறார்.  ஒரு பெரிய வணிக இயக்குநராக ஆகவேண்டும் என்ற கனவுள்ள உதவி இயக்குநர்களைக் கண்டுபிடிப்பதே அரிதாக இருக்கிறது. பலர் பெரும் இலக்கிய வாசகர்கள். தமிழ் சினிமாவின் இத்தனைக்கால வரலாற்றில் இதுபோன்று நிகழ்ந்ததில்லை. இது சினிமாவின் முகத்தை மாற்றக்கூடும்.

உலகமெங்கும் எழுத்தாளர்கள் சினிமாவுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். மலையாளத்தில் ஐம்பதாண்டுக் காலமாக அப்படித்தான். சினிமாவுக்கு எழுதாத இலக்கியவாதியே அங்கே இல்லை. தகழி,  பஷீர் உட்பட. சினிமா அவர்களைத் தங்கள் மதத்துக்கு மாற்றியதா என்ன?

எது குறித்தும் மிகத் தீவிரமான கருத்துகளையே தொடர்ந்து தெரிவித்து வருபவர் நீங்கள். இனி சினிமா குறித்து அவ்வாறு உங்களால் பேச முடியுமா?

உண்மையைச் சொல்லப்போனால் சினிமாவின் வணிகத்தை பாதிக்கும் எந்தக் கருத்தயும் நான் சொல்ல முடியாது. அதைப்பற்றி அதிகம் தெரியவும் தெரியாது. அது இந்த தொழிலுக்குரிய நெறிகளில் ஒன்று. வேறு வழியில்லை. இருபதாண்டுக்காலமாக நான் தொலைபேசித்துறை பற்றி  எதுவும் எழுதியதில்லை. அரசூழியர்களான எழுத்தாளர்கள் அரசைப் பற்றி எழுதுவதில்லை, அதைப்போலத்தான். இன்றியமையாத சமரசம்.

அறுபது, எழுபது, எண்பதுகளில் வந்ததுபோல் தொண்ணூறுகளுக்குப் பிறகு  ஒரு நல்ல எழுத்துத் தலைமுறை தமிழில் உருவாகாதிருப்பதன் காரணம்என்னவாயிருக்கலாம்? ஒருவேளை அப்படியொரு தலைமுறை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

தொண்ணூறுகளுக்குப் பின்னரும் பல நல்ல படைப்பாளிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நானே நிறைய எழுதியிருக்கிறேன். சு வெங்கடேசன், ஜோ டி குரூஸ், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், அழகியபெரியவன், சோ.தருமன், இமையம் எனப் பலர் தங்கள் இருப்பை நிறுவியிருக்கிறார்களே.

இன்று புதியதாக வந்திருப்பவர்களில் எதிர்காலச் சாதனையாளர்கள் பலர் உண்டு. பா. திருச்செந்தாழை, எஸ்.செந்தில்குமார், என்.ஸ்ரீராம், கீரனூர் ஜாகிர் ராஜா, உமா மகேஸ்வரி, என்று பலரைச் சொல்லலாம். இவர்களை அறிமுகம் செய்து விரிவாக எழுதலாமெனத் தோன்றுகிறது. தமிழின் இலக்கியம் ஒரு அறுபடாத மரபு.

கவிதைக்கான முகாமெல்லாம் நடத்துகிறீர்கள். கவிதைகள் குறித்து நிறையப் பேசுகிறீர்கள். நீங்கள் கவிதை எழுதுவதுண்டா? ரகசியமாகவாவது முயற்சி செய்திருக்கிறீர்களா?

ஆரம்பத்தில் எழுதியிருக்கிறேன். என் நாவல்களில் உள்ள கவிதைகள் நான் எழுதியவை. கவிதை என் ஊடகமல்ல. நான் சொற்களை நம்பி இயங்குபவனல்ல. அகப் படிமங்களை நம்பி இயங்குபவன். நான் உயர்ந்த கவித்துவங்களை என் ஆக்கங்களில் தொட்டிருக்கிறேன். நேரடியான கவிதையை நான் முயல்வதில்லை.

நிறைய எழுதுகிறீர்கள். உங்கள் சுறுசுறுப்பு எப்போதும் மற்ற எழுத்தாளர்களைப் பொறாமை கொள்ள வைப்பது. எப்போது நினைத்தாலும் எழுதக்கூடிய அளவுக்கு உற்சாகமான மனநிலையைத் தொடர்ந்து தக்கவைக்க நீங்கள் கடைப்பிடிக்கும் உத்தி எது?

கீதை. அதன் வழியாக நான் மறுபடி பிறந்து வந்தேன். நான் என் இறுதிக் கணத்தில்கூட புன்னகையுடன் கண்மூடுவேன்.

சுந்தர ராமசாமி, சுஜாதா போன்றவர்களைக் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் உயர்த்திக் கொண்டாடிய உங்கள் எழுத்து, சடாரென்று திட்டமிட்டுத் தாக்குவது போன்ற தோற்றத்தைக் கொடுப்பதும் எதனால்? உங்களது விமரிசனப் பார்வையை உங்கள் வாசகர்கள் சரியாகப் புரிந்துகொள்கிறார்களா? உங்களது இலக்கிய விமரிசனங்கள் உங்கள் சுய முரண்பாட்டின் வெளிப்பாடுகளாகப் பல சமயம் புரிந்துகொள்ளப்படுவதை நீங்கள் அறிவீர்களா?

என்னுடைய விமர்சனங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு வாசிக்காமல் அபிப்பிராயங்களாக மட்டுமே எடுத்துக்கொள்வதன் விளைவே இந்தப் புரிதல். இப்படிச் சொல்பவர்கள் கட்டுரைகளை வாசித்து ஆதாரம் காட்டிப் பேசவேண்டும். அதுவே பயனுள்ள வழிமுறை.

1994 ல் சுந்தர ராமசாமிக்கு அறுபது வயதானபோது நான் வெளியிட்ட மலரில் அவரைப்பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பாருங்கள். அதில் உள்ள அதே விமர்சன அணுகுமுறையையே நான் கடைசிவரை பலபடிகளில் மேம்படுத்தி முன்னெடுத்திருக்கிறேன். 2004ல் வெளிவந்த நவீனத்துவத்தின் முகங்கள் நூலிலுள்ள சுந்தர ராமசாமி பற்றிய விமர்சனக்  கட்டுரையை அதனுடன் ஒப்பிட்டால் அது தெளிவாகும்.

1992ல் வெளிவந்த என்னுடைய திசைகளின் நடுவில் நூலில் உள்ள சுஜாதா பற்றிய கோணத்தையே இன்றுவரை பல்வேறு அடிப்படையில் வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.

என்னுடையது தீர்ப்பு அல்ல.  விமர்சன அணுகுமுறை. அதில் வளர்ச்சிப் போக்கு இருக்கும். அதற்கான காரண காரியங்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்த காரண காரியங்களை எவரும் பரிசீலிக்கலாம். விவாதிக்கலாம். அந்த விவாதம் மூலம் அவர்களின் பார்வை அகலமாகும். இலக்கிய விமர்சனத்தின் பயன் அதுவே. தலைகீழான பல்டிகள் இருக்காது.

உங்களுடைய சக / சமகாலத் திரைப்பட வசனகர்த்தா கலைஞரின் வசனங்கள் பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்ன?

வசனம் சினிமாவின் இன்றியமையாத பகுதியாக இருந்த காலக்கட்டத்தைச் சேர்ந்தவர் அவர். இயக்குநருக்கு இணையான இடத்தில் வசனகர்த்தா இருந்த பொற்காலத்தைச் சேர்ந்தவர். அக்காலக்கட்டத்தின் தேவைக்கேற்ப நாடகத்தன்மையும், விளக்கும் தன்மையும் கொண்ட வசனங்களை வெற்றிகரமாக எழுதியிருக்கிறார். இன்றைய சினிமாவில் வசனத்துக்குப் பெரிய இடம் இல்லை.

பேட்டி: தமிழ் பேப்பர் குழு



Click Here Enlargeதமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான், அகிலன் நினைவு விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருகிறார். தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இலக்கிய இதழாக விளங்கிய ‘சொல் புதிது' சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இவருடைய ‘ரப்பர்', ‘விஷ்ணுபுரம்', ‘காடு', ‘பின் தொடரும் நிழலின் குரல்', ‘ஏழாம் உலகம்', ‘கொற்றவை', ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்', ‘கன்னியாகுமரி' போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோயிலில் வசித்து வரும் ஜெயமோகன், தொலைபேசித் துறையில் பணியாற்றி வருகிறார். ‘கஸ்தூரிமான்', 'நான் கடவுள்', ‘அங்காடித் தெரு' எனத் திரைப்படத் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரது வலைதளம் (www.jeymohan.in) வாசகர்களால் மிக அதிகம் வாசிக்கப்படும் பல்துறை வலைமனைகளுள் ஒன்று. ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு வரவிருக்கிறார் என்ற நிலையில் ஜெயமோகனைச் சந்தித்து உரையாடினோம். அவருக்கே உரிய துணிச்சலுடன் ஆணித்தரமாகப் பல கருத்துகளைக் கூறினார். உரையாடலின் முதல் பகுதி இதோ....

கே: உங்களை எழுதத் தூண்டியது எது?

ப: என்னுடைய எழுத்துக்கு முதல் தூண்டுதல் என் அம்மா விசாலாட்சிதான். பெரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது இரண்டாவது அண்ணா கேரளத்தின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவர். பெயர் கேசவ பிள்ளை. குமரி மாவட்டத்தில் கம்யூனிஸத்தைக் கொண்டு வந்து பரப்பிய ஆரம்பகட்டத் தலைவர்களுள் ஒருவர். அவருக்கு ஆங்கிலம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளும் தெரியும். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட நூலகம் வைத்திருந்தார். தன் அண்ணனின் நிழலில் வாழ்ந்த என் அம்மாவும் நிறையப் புத்தகங்கள் படிப்பார். எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது அம்மாவின் கனவு. அவர் கலைமகளில் ஒரு கதையும் மலையாளத்தில் ‘மங்களோதயம்' இதழில் இரண்டு கதைகளும் எழுதியிருக்கிறார்.

கே: புனைவிலக்கியம் படைப்பவர்கள் தாம் எழுத்தாளர்கள் என்றிருந்த நிலை மாறி இன்று கட்டுரையாளர்கள் எழுத்தாளர்களாக அதிகம் அறியப்படுகிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து...?

ப: மனிதன் வாழ்க்கையை அல்லது பிரபஞ்சத்தை அறிவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று உள்ளுணர்வு அல்லது தியானம். இன்னொன்று தர்க்கம். மூன்றாவது கற்பனை. அறிவியல், தத்துவம் எல்லாமே தர்க்கத்திற்குள் வருகிறது. உள்ளுணர்வு சார்ந்த முறை எல்லோருக்கும் உரியதல்ல. அடுத்த முக்கியமான, பிரபலமான அறிதல் முறை என்றால் அது கற்பனைதான். ஓர் உண்மையை அறிவதற்கு அந்த உண்மையை நிகழ்வது போலக் கற்பனையால் அறியும் முறை இது. அந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கக் கூடியவைதாம் கலைகள். எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை கற்பனை. கற்பனை மிக அதிகமாகச் செயல்படக் கூடிய மொழித்தளம் புனைகதை. ஆக, புனைகதை, கவிதைதான் இலக்கியத்தினுடைய மிக முக்கியமான பகுதியாக என்றும் இருக்க முடியும்.

புனைகதையாளர்கள் கட்டுரை எழுதுவதென்பது ஆரம்பம் முதலே இருக்கும் ஒன்றுதான். செஸ்டர்டன், ஸ்டீவன் லீ-காக் போன்றவர்களின் குறுங்கட்டுரைகள் மிகவும் புனைவுத்தன்மை கொண்டு இருக்கும். இப்போது குறுங்கட்டுரைகள் அதிகம் வெளிவரத் தேவை இருக்கிறது. ஆனால் கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்களாகக் கருதப்படுவதில்லை. நாஞ்சில்நாடனுடைய கட்டுரைகளை நீங்கள் வாசிக்கின்றீர்கள் என்றால், அடிப்படையில் அவர் ஒரு முக்கியமான புனைகதை எழுத்தாளர் என்பதால்தான். கட்டுரைகளை மட்டுமே அவர் எழுதியிருந்தால் அவரை ஓர் எழுத்தாளராக அறிவிக்க மாட்டீர்கள். ஆக, புனைவெழுத்து என்பதுதான் ஓர் எழுத்தாளனுடைய அடிப்படையான மெய்காணும் முறையாக இருக்க வேண்டும்.

கே: உங்களுடைய முதல் படைப்பு வெளிவந்த போது உங்கள் மனநிலை என்ன? எப்போது உங்களைப் பற்றி பரவலாக இலக்கிய உலகில் தெரிய ஆரம்பித்தது?

நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு மேலே ஒருத்தன் இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான் நாம் இருக்கிறோம். இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மேலே வருவதற்கு அதற்கான கல்வி தேவை. அடிப்படைப் பொருளாதார வளர்ச்சி தேவை.
ப: எனது முதல் படைப்பு நான் எட்டாவது படிக்கும் போது ‘ரத்னபாலா' இதழில் பத்திரிகை ஆசிரியரின் சிறு குறிப்புடன் பிரசுரமாகி இருந்தது. எனக்கு ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அது, நான் ஒரு பெரிய எழுத்தாளராகி விட்ட கர்வத்தையும், பெருமிதத்தையும் எனக்குத் தந்தது. அந்தக் கதையை எடுத்துக் கொண்டு நான் என் கிராமம் முழுதும் சுற்றி, தெரிந்தவர்களிடமெல்லாம் கொடுத்து படிக்கச் சொல்லி பரவசமடைந்திருக்கிறேன். ஏழு ரூபாய் என்பது அப்போது பெரிய தொகை. அந்தப் பணத்தில் பின்னலில் வைத்துக் கட்டும் குஞ்சலம் ஒன்றை வாங்கி எனது தங்கைக்குக் கொடுத்தேன்.

பரவலாக அறியப்பட்ட என்னுடைய முதல் படைப்பு, பல வருடங்கள் ஏட்டிலக்கியத்தை நிறுத்தி, அங்கும் இங்கும் அலைந்து, மீண்டும் எழுத ஆரம்பித்துப் பின் வெளியான ‘படுகை' என்ற கதைதான். பேச்சிப்பாறை அணை கட்டுவதைப் பற்றிய கதை அது. அது வெளியான காலத்தில் புதுமையாக இருந்ததுடன் பரபரப்பாகவும் பேசப்பட்டது. காரணம், ஃபேன்டஸியைப் பயன்படுத்தி எழுதியிருந்தது தான். கோவை ஞாநியின் ‘நிகழ்' பத்திரிகையில் அந்தக் கதை வெளியானது. சமகால எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டது. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா போன்ற பலர் அக்கதையைப் பற்றி அப்போதே குறிப்பிட்டுப் பேசினார்கள். ஓர் எழுத்தாளனாக என்னுடைய நுழைவு அதன் மூலம் வலுவாக நிகழ்ந்துவிட்டது.

கே: தற்போது சிறுவர்களிடம் படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டதாகக் கருத்து நிலவுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: தமிழ்நாட்டில் புத்தகக் கண்காட்சிகளில் 50 சதவீதத்துக்கு மேல் விற்கும் புத்தகங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தான். ஆனால், அவை ஆங்கிலப் புத்தகங்கள்! புத்தகங்களை நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தினர் தாம் வாங்குகிறார்கள். அவர்கள் குடும்பத்துக் குழந்தைகள் எல்லாம் ஆங்கிலவழிக் கல்வியில் படிப்பதால் தமிழார்வம் கிடையாது. தம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பேசி, படித்து வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. அதனால் வணிக ரீதியாகத் தமிழ்ப் புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முடிவதில்லை. மேலும், எப்படியாவது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காகப் பெற்றோர், குழந்தைகள் ஒரு செய்தித் தாளைப் படிப்பதைக் கூட விரும்புவதில்லை.

Click Here Enlargeகே: ஆதிச்சநல்லூர் போன்றவற்றைத் ‘தொன்மைக் கலாசாரம்' என்றும் தஞ்சைப் பெரியகோயில், கம்பராமாயணம் போன்றவற்றைச் ‘செவ்வியல் கலாசாரம்' என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போதைய ‘நவீன கலாசார'த்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்றும் கூறுகிறீர்கள். எப்படி என்பதை விளக்கிக் கூற முடியுமா?

ப: ‘குடிமைப் பண்பாடு' (civic sense) என்பதே நமக்குக் கிடையாது. சில நாட்களுக்கு முன்னால் நான் பாங்காக் செல்வதற்காக சென்னை விமானநிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் செக்-இன் அறிவிப்பு செய்தவுடனே, அனைவரும் தாம் கொண்டு வந்திருந்த பெட்டிகளுடன் முட்டி மோதிக்கொண்டு வழியை அடைத்துக் கொண்டு நின்றனர். ஒரு விமானம் ரிசர்வ் செய்த ஆட்களை விட்டுவிட்டுப் போய்விடப் போவதில்லை. ஆனால் இங்கோ இடம் பிடிப்பதற்குக் கூடுவது போல் கூட்டம். பைகள் கீழே விழுகின்றன. ஒருவரையொருவர் கடுமையாகத் திட்டிக் கொள்கிறார்கள். அத்தனையும் படித்தவர்கள். கணிசமான நபர்கள் வெளிநாடுகளில் வேலைக்குப் போனவர்கள். ஏழெட்டு வெள்ளையர்கள், இரண்டு சீனர்கள், நான்கைந்து இந்தியர்கள் மட்டும்தான் இந்த கும்பல் போகட்டும் என்று பொறுமையாக உட்கார்ந்து இருந்தார்கள். இதுதான் இந்தியா.

சென்னையில் வந்து நீங்கள் இறங்கி விட்டால் போதும், எந்த ஒரு சந்திலும் இதுபோன்ற அராஜகங்களைப் பார்க்கலாம். ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது நாகரிகம் என்றால் என்ன, பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய அறம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இதை யாரும் நமக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்கவுமில்லை. குப்பையைத் தெருவில் போடுகிறோம். தெருவில் அசிங்கம் செய்கிறோம். போட்டி போட்டுக் கொண்டு ஒழுங்கீனமாக நடக்கிறோம். பொது ஒழுங்கைப் பேண முடியாமல் இருக்கிறோம். இந்தக் குறை ஏன் வந்தது?

சிந்துச் சமவெளி நாகரிகமாகட்டும், அதற்கு முந்தையதாகச் சொல்லப்படும் ஆதிச்சநல்லூர் நாகரிகமாகட்டும் நமக்கென்று ஒரு மிகப் பெரிய பண்பாடு இருக்கிறது. இந்தப் பண்பாட்டை நாம் நம்முடைய நாட்டார் பண்பாடு என்று சொல்கிறோம். இந்தப் பண்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒரு கிராமத்திற்குச் சென்று வயதான பாட்டியிடம் பேசினால் கூட அவர்களது அன்பு, நாகரிகம், உபசரிப்பு இவற்றின் மூலம் அவர்களது தொன்மையான பண்பாட்டைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளையரை விட அந்தப் பாட்டியிடம் பண்பாட்டின் உச்சம் அதிகம் இருப்பதை நாம் காண முடியும். அப்படிப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய படைப்புகளில், அப்படிப் படிக்காத ஆனால் பண்பில் உயர்ந்த நான் சந்தித்த பலரைப் பாத்திரமாக்கியிருக்கிறேன். இந்தப் பண்பு ஆயிரக்கணக்கான வருடங்களாக கூர்தீட்டப்பட்டு இவர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இதைப் பழங்குடிப் பண்பாடு என்று சொல்லலாம்.

உலகத்திலேயே மிகச் சிறந்த சிற்பங்கள், மிக முக்கியமான கட்டடங்கள், மிகச் சிறந்த இசை, ஈடிணையற்ற இலக்கியச் செல்வம் எல்லாம் இருக்குமிடம் தமிழ்நாடுதான். நமது தத்துவங்களின் கூர்மையும், அகலமும் உலகத்திலேயே மிகக் குறைவான தத்துவ மதங்களிடம் தான் இருக்கிறது. அவ்வளவு செவ்வியல் வெற்றியை அடைந்தும் நமக்குக் குடிமைப் பண்பு மட்டும் ஏன் சரியாக அமையவில்லை?

கே: இதற்குக் காரணம் என்ன?

என்னுடைய யூகம் என்னவென்றால், நம்முடைய காலகட்டம் செவ்வியல் கலாசாரம் சிதைவடையும் காலமாக ஆகி விட்டது. இந்தியாவில் உள்ள பெரிய அரசுகள் எல்லாமே போரினால் அழிந்து விட்டன. இந்தியா முழுக்கச் சிறுசிறு கொள்ளைக்காரர்களால் ஆட்சிசெய்யப்படும் நாடாக மாறியது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. ஒரு சின்ன க்யூவில் எல்லோரும் முண்டி அடிக்கின்றனர், நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம்! 50 பேர் இருந்தால் 5 பேருக்குத் தான் கிடைக்கும். 45 பேருக்குக் கிடைக்காது என்பது நம் மனதில் ஊறிப்போய் விட்டது. அந்த அளவுக்குப் பாதுகாப்பற்ற சமூகமாக நம் சமூகம் மாறி விட்டது.

இரண்டாவதாக, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பல்வேறு சுரண்டல்களுக்கிடையே இரண்டு மாபெரும் பஞ்சங்கள் வந்து நாம் அலைக்கழிக்கப்பட்டோம். ‘தாது வருஷப் பஞ்சம்' என்று அதைச் சொல்வார்கள். லட்சக்கணக்கான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டார்கள். இதன் விளைவு பாதுகாப்பற்ற உணர்வு. ஒருவரையொருவர் பார்த்ததும் முதல் கேள்வி ‘சாப்டாச்சா?' என்று கேட்கும் ஒரே இனம் இந்திய இனம்தான். இரண்டு வெள்ளையர் சந்தித்துக் கொண்டால் ‘தட்பவெப்பம் நன்றாக இருக்கிறது' என்றுதான் சொல்வார்கள்.

குடிமைப் பண்பாடு என்பது மேலை நாட்டிலும் தொழிற்புரட்சி வந்த பிறகுதான் உருவாயிற்று. ஆனால் இவை நம்மிடம் பரவி ஐம்பது ஆண்டுகள்தான் ஆகின்றன. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அதற்கு குடிமைப் பண்பை மையமாகக் கொண்ட கல்விமுறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

புத்தாண்டு அன்று தெருக்களில் சத்தம் போட்டுக் கொண்டு செல்லும் பையன்கள் எல்லோருமே படித்தவர்கள்தாம். குற்றாலத்திலோ, ஊட்டியிலோ படித்த பயணிகள்தான் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். ஓவென்று சத்தம் போடுவார்கள். ஒயின் பாட்டில்களைத் தூக்கிப் பாறைமீது எறிவார்கள். பெண்களைக் கிண்டல் செய்வார்கள். ஜட்டியோடு அலைவார்கள். சினிமா தியேட்டர் க்யூவில் பாருங்கள். ஒரு கான்ஸ்டபிள் இருந்தால் போதும். 5000 பேர் இருந்தாலும் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அந்தக் கான்ஸ்டபிள் மட்டும் லத்தியோடு அங்கே இல்லை என்றால் அத்தனை பேரும் முண்டியடிப்பார்கள். நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு மேலே ஒருத்தன் இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான் நாம் இருக்கிறோம். இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மேலே வருவதற்கு அதற்கான கல்வி தேவை. அடிப்படைப் பொருளாதார வளர்ச்சி தேவை.

இன்னுமொரு முக்கியமான விஷயம், இங்கே பெற்றோர்களின் வாழ்க்கை இலட்சியமே பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டு வருவதுதான். இது உலகத்தில் எங்கேயுமே கிடையாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு வெளிநாட்டவரிடம் போய்க் கேட்டால் அவருக்கென்று வாழ்க்கை நோக்கம் இருக்கும், அவர் செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே பிள்ளைகளுக்குச் செய்வார். நாம் நல்ல பொருளாதார வளர்ச்சியை அடையும்போது, நம் பிள்ளைகளை நாம் தான் கரையேற்ற வேண்டும் என்ற நிலை இல்லாதாகும் போது இந்தப் பாதுகாப்பற்ற உணர்வு குறையும். அப்போது வலுவான குடிமையுணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு வரும் என்று நான் நினைக்கிறேன்.

கே: ஸ்டீவன் லீகாக் குறித்துச் சொன்னீர்கள். தமிழிலும் கல்கி, நாடோடி என்று நல்ல நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது நகைச்சுவை அருகிப் போய் விட்டது. நகைச்சுவை எழுத அச்சம் இருக்கிறதா அல்லது தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து போய்விட்டதா?

ப: பொதுவாகவே தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகமிகமிகக் குறைவு. இரண்டு மலையாளிகள் சந்தித்தால் ஒருத்தரையொருத்தர் கடவுளைப் பற்றி, ஜாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி, சாப்பாட்டைப் பற்றி எதைப்பற்றி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். அது வெறும் கிண்டல் என்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.

சமூக முரண்பாடுகளைத் தாண்டிச் செல்வதற்கான அறிவார்ந்த முயற்சிகளை எடுக்கும் போது, தன்னைப் பார்த்தே சிரிக்கும் போது, தன்னைக் கிண்டல் செய்து கொள்ளும் போது நகைச்சுவை உருவாகிறது. இந்த மனநிலை தமிழனிடம் மிகமிகக் குறைவு. தமிழ்நாட்டில் நிறைய விஷயங்களைப் பற்றி சிறிய அளவிலேகூட நகைச்சுவையாகப் பேச முடியாது. இந்த மனநிலையில் இருக்கும் போது நட்பார்ந்த கிண்டலைக் கூட விமர்சனமாகத்தான் புரிந்து கொள்வார்கள். நான் தமாஷாக ஒரு கட்டுரை எழுதியிருந்தால், ‘நீங்கள் அதை விமர்சனம் செய்திருக்கிறீர்களே' என்று கடிதம் வரும். திட்டு வேறு; கிண்டல் வேறு என்பதே பலருக்கு இங்கு புரியவில்லை.

ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது நாகரிகம் என்றால் என்ன, பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய அறம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இதை யாரும் நமக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்கவுமில்லை.
கே: தமிழில் இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கிறது?

ப: பொதுவாக, தமிழில் முழுமூச்சான இலக்கிய விமர்சகர்கள் என்பது வெகு குறைவு. வெங்கட் சாமிநாதன் ஒருவர்தான் இலக்கிய விமர்சகர். மற்றவர்கள் எல்லாம் கலைஞர்கள், இலக்கிய விமர்சனமும் செய்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய விமர்சனத்தில் பல துறைகள், முறைகள் உள்ளன. ஒன்று கல்வித்துறை சார்ந்த இலக்கிய விமர்சனம். ஒரு படைப்பை அடையாளப்படுத்தி, வகைப்படுத்தி, ஓர் அட்டவணைக்குள் கொண்டு வருவது. மற்றொன்று, அழகியல் முறை. இது ஏற்கனவே வந்த முக்கியமான படைப்புகளையும், அதன் அனுபவத்தையும், வடிவத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிற படைப்புகளை மதிப்பிடுவது. சுந்தர ராமசாமி, க.நா. சுப்ரமண்யன், வெங்கட்சாமிநாதன் போன்றோரை அழகியல் விமர்சகர்கள் என்று சொல்லலாம். மூன்றாவது, கோட்பாட்டு விமர்சன முறை. உதாரணமாக, மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் எப்படி இலக்கியத்தை விமர்சிப்பது என்பதை நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் செய்திருக்கிறார்கள். மொழியியலை அடிப்படையாக வைத்து நாகார்ஜுனன், தமிழவன் போன்றோர் செய்திருக்கிறார்கள்.

கே: படைப்பை விடுத்து படைப்பாளியை விமர்சிக்கலாமா?

ப: உண்மையில் விமர்சனம் என்பது படைப்பின்மேல் பல கோணங்களினாலான கூர்ந்த வாசிப்புதான். பல்வேறு அறிவுத்துறைகளோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த அறிவுத்துறையிலுள்ள பல்வேறு விதமான உபகரணங்களையும் பயன்படுத்தித்தான் படைப்பின் உண்மையான மதிப்பை அளவிட முடியும். படிக்கும் போது கண்டு கொள்ளாத பல தளங்களை அந்த விமர்சனம் உங்களுக்குத் தருமானால் அது நல்ல விமர்சனம். சொல்லித் தரவில்லை என்றால் அது மோசமான விமர்சனம்.

அதேசமயம் படைப்பாளியை விமர்சனம் செய்யக் கூடாது என்றில்லை. படைப்பையும், படைப்பாளியையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அயன் ராண்ட் என்ற எழுத்தாளர் ஓர் அறிவுமைய வாதத்தை முன்வைத்தார். அறிவாளிகள்தான் இந்த உலகத்தைத் தாங்குகிறார்கள், மற்றவர்கள் முக்கியம் இல்லை என்ற கோட்பாட்டை முன்வைத்தார். கடைசியில் அவர் மனநிலை பிறழ்ந்து, அயல்நாட்டில் இறந்து போனார் என்ற உண்மை இருக்கிறது. இதில், அவர் அயல்நாட்டில் இறந்தார் என்பதை மட்டும் நாம் பார்க்க இயலாது. அவர் என்னவாக ஆனார், எப்படி இறந்தார் என்பதும் முக்கியம். அந்த உண்மையை விட்டுவிட்டு எழுத முடியாது.

எழுத்தாளன் என்பவன் விமர்சனத்துக்கு உட்பட்ட ஒரு தனிமனிதன். அவன் சமுதாயத்தின் முன் எதை வைக்கிறான், எப்படி முன்வைக்கிறான் என்பதைப் பார்க்கவும், விமர்சிக்கவும் சமுதாயத்திற்கு உரிமை இருக்கிறது.

கே: சாதாரணமாக எழுத்தாளர்கள் தாங்கள் வந்த தடத்தை உள்ளது உள்ளபடிச் சொல்வதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் இணைய தளத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். எப்படிச் சாத்தியமானது?

ப: வணிக ரீதியான எழுத்தாளர், அரசியல் எழுத்தாளர் தம்முடைய வாழ்க்கையை முன்வைக்க அவசியமில்லை. ஆனால் என்னுடைய எழுத்து எனது தேடல்களையும், தவிப்புகளையும், நான் பெற்ற வெற்றிகளையும், தோல்விகளையும் சொல்லக்கூடியது. அதில் என்னுடைய பயங்கள், அச்சங்கள், தேடல்கள், வலிகள் என எல்லாவற்றையும் நான் சொல்கிறேன். என்னுடைய எழுத்துக்களைப் புரிந்து கொள்வதற்கு என்னுடைய வாழ்க்கை முக்கியமானதாகிறது. மற்ற எழுத்தாளர்கள் சொல்லாத ஒரு வரியை நான் சொல்கிறேன் - 'என்னுடைய வாழ்க்கையைப் பார்' என்கிறேன். இங்கு ஏதாவது சமரசங்கள் செய்து கொண்டிருக்கின்றேனா என்று பார்க்கலாம். இந்த வெளிப்படைத் தன்மை எழுத்தாளனுக்கு அபாரமான ஆன்ம வல்லமையைக் கொடுக்கும். அதுதான் அவன் எழுத்தில் உண்மையை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கே: அப்படியானால் நீங்கள் ‘பொலிடிகலி கரெக்ட்' ஆக இருக்க முயற்சிப்பதில்லை, என்று சொல்லலாமா?

ப: ‘Political correctness' என்கிற ஒரு விஷயம் 1970க்கு முன்பாகக் கிடையாது, வார்த்தையும் சரி, அந்தக் கருத்துருவும் சரி. அது எப்படி உருவானதென்றால், வியட்நாம் போர் விஷயம் அமெரிக்காவில் வெடித்தபோது அந்தப் போருக்கு எதிராகப் பேசுவது Political correctness ஆக இருந்தது. கொஞ்சம் ‘முற்போக்கு' என்றால் அவர் கண்டிப்பாக வியட்நாம் போருக்கு எதிராக ஏதாவது பேசுவார், பேச வேண்டும் என்ற உணர்வு அமெரிக்காவில் முகிழ்த்திருந்தது. ஆரம்பத்தில் இது பெர்ட்ரண்ட் ரஸல் போன்றோர் ஒன்றிணைந்து நடத்திய முற்போக்கான விஷயமாக இருந்தது. ஒரு ஐந்து வருடம் கடந்து, அந்த விஷயம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, தன்னை முற்போக்கு என்று காட்டிக்கொள்ள ஆசைப்பட்ட அனைவருமே ஒரே குரலில் வியட்நாம் போரை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அதிலிருக்கும் போலித்தனம் சிலருடைய கண்களுக்குப் பட்டது. எல்லோருமே ஒட்டுமொத்தமாக ‘இதுதான் முற்போக்கு, இதுதான் சரி, இப்படித்தான் இருக்க வேண்டும். வேறு மாதிரி சிந்தனை இருக்கவே கூடாது, வேறு மாதிரி யார் சிந்தித்தாலும் அதெல்லாம் பிற்போக்கு' என்ற கண்மூடித்தனமான எண்ணம் வலுப்பட்டபோது, அதற்கு எதிராக எழுந்த குரல்தான் ‘பொலிடிகலி கரெக்ட்' என்ற கருத்தும் சிந்தனையும்.

அரசாங்கம் அல்லது ஆதிக்கம் ஒரு கருத்தை உருவாக்குகிறது. நீண்டகால மரபியலில் வந்த அந்த ஆதிக்கக் கருத்தியல் இதுதான் சரி என்று சொல்லும்போது, அதற்கு எதிராக முன்னணி அறிவுஜீவிகள் சில கருத்துக்களை உருவாக்கினார்கள். அது மற்றதுக்கு எதிரானது. இதுவும் வந்து ஒருவகையான அதிகார மார்க்கம். அதை ஒப்புக் கொண்டால்தான் நீ முற்போக்கு. இரண்டில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இரண்டும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இதுதான் சரி, இதுதான் முற்போக்கு என்று ஒரு தரப்பு எடுக்கப்பட்டு, அது மிக வலுவாகப் பிரசாரம் செய்யப்பட்டு, எல்லா மீடியாவிலும் அதைத் தவிர வேறு ஏதும் சொல்லப்படாத நிலையில், ஒரு வகையில் சமூகம் அந்தச் சிந்தனையில் மிகப்பெரிய அளவில் மயங்கிப் போய் விடுகிறது.

இந்த முற்போக்கு என்பதற்குள்ளே இருக்கும் சிக்கல்களையோ, ஓட்டைகளையோ எவருமே சொல்ல முடியாமல் போய்விடுகிறது. ஒரு தேர்ந்த சிந்தனையாளன் ஆதிக்கக் கருத்துகளுக்கு எந்த அளவிற்கு எதிராக இருப்பானோ, அதே அளவுக்கு அதற்கு எதிரான political correctness கொண்ட விஷயங்களுக்கும் கொஞ்சம் எதிராகத்தான் இருப்பான்.

இந்த நவீனத்துவம், சார்த்ர், காம்யூ யுகத்தில் political correctness ஒரு பெரிய ஹைப் (hype) ஆனது. இவர்கள் எல்லோருமே politically correct தரப்பை எடுத்தவர்கள் தாம். உலகின் எந்த இடத்தில் புரட்சி நடந்தாலும் அதற்கு உடனடியாக சார்த்ர் தன் ஆதரவைத் தெரிவித்தார். அந்தப் புரட்சி சரியா, தவறா என்றெல்லாம் யோசிக்க மாட்டார். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்தான் அவர், பல புரட்சிகள் உண்மையில் புரட்சியே கிடையாது, அவை ஏற்கனவே இருந்த அமைப்புகளைவிட மிகப் பிற்போக்கான புரட்சிகள் என்று அறிந்து கொண்டார். குறிப்பாக சோவியத் ரஷ்யாவில் பிரஷ்னேவ், குருஷ்சேவ் ஆகியோரின் வருகைக்குப் பிறகுதான் பல விஷயங்கள் அவர் மண்டைக்கு உறைத்தன. அதன் பிறகுதான் உண்மையில் politically correct என்று சொல்லப்படும் பல விஷயங்கள் கண்மூடித்தனமானவை என்ற முடிவுக்கு வந்தார். உலகம் முழுக்க ‘நீ முற்போக்குச் சிந்தனையாளன் என்றால் இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டும்' என்ற எண்ணம் 1950, 60களில் இருந்தது. 70களில் இந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து பின்நவீனத்துவம் வந்தது.

(இன்னும் வரும்...)

சந்திப்பு, படங்கள்: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்

பெட்டிச் செய்திகள்:

"வைக்கம் முகமது பஷீர் ஆகணும்”

நான் இரண்டாவது படிக்கும் பொழுது நடந்த விஷயம் இது. வகுப்பில் ஒவ்வொரு மாணவரையும் எதிர்காலத்தில் என்ன ஆக விருப்பம் என்று ஆசிரியர் கேட்டபோது, மற்றவர்கள் டாக்டர், எஞ்சினியர், கலெக்டர் ஆகணும் என்று சொல்லும் பொழுது, நான் எழுந்து "நான் வைக்கம் முகமது பஷீர் ஆகணும்” என்று சொன்னேன். ஆசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டு, "இதை யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்டபோது, "என் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க” என்று சொன்னேன்.

- ஜெயமோகன்

தலித் இலக்கியத்தில் மட்டும்தான் நகைச்சுவை இருக்கிறது

இன்று நகைச்சுவையைப் பார்க்கும் வாய்ப்பு தலித் இலக்கியத்தில் மட்டும்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத் தங்களையே கிண்டல் செய்து கொள்வதில் தயக்கம் இல்லை. ராஜ் கௌதமன் நாவலில் ஒருவித மெல்லிய நகைச்சுவை எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதுபோன்று சோ. தருமனின் படைப்புகளிலும் இருக்கும். கல்கி, தேவன், கடுகு போன்றவர்கள் எழுதிய மாதிரியான நகைச்சுவையைச் சிறுபத்திரிகைகளில் எழுத முடியாது. சிற்றிதழ்களில் வெளிவரும் நகைச்சுவை எழுத்து ஏதோ ஒருமாதிரி நரம்புகளைத் தொடுவதாகத்தான் இருக்கும். அந்தப் ‘பஞ்ச்'சுக்கான எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஆகவே அந்த நகைச்சுவைக்குள் யாரும் போக விரும்புவது கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.

- ஜெயமோகன்

ஏழைச் சிறுவர்களின் படிப்பார்வம்

நான் ஒருமுறை தேவகோட்டை அருகே உள்ள ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள பார்பர் ஷாப்பில் சில சிறுவர்கள் காத்திருந்து, நாளிதழின் இணைப்பான சிறுவர் இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். மிகழும் ஏழமையான சூழலில் உள்ளவர்கள். ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, கொஞ்சம் கூடத் தரமில்லாத, பொறுப்பில்லாத குழந்தை இலக்கியத்தை, அந்தப் பத்திரிகைகளில் பணியாற்றும் இதழாளர்களே எழுதிவிடுகிறார்கள்.






Click Here Enlargeகே: இந்தப் 'பொலிடிகல் கரெக்ட்னெஸ்' தமிழகத்தில், இந்தியாவில் எப்படி இருக்கிறது?

ப: 'பொலிடிகல் கரெக்ட்'னெஸை முழுமையாக எதிர்ப்பதுதான் பின்-நவீனத்துவம். அது தத்துவத்தின் தர்க்கத்திற்கு, அறவியலின் கெடுபிடிகளுக்கு எதிரானது. ஆனால், தமிழில் பின்-நவீனத்துவம் பேசக் கூடியவர்கள் எல்லாம் கலகக்காரர்கள் என்ற தோரணையை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வைத்திருக்கும் எல்லாக் கருத்துமே இங்கு ஏற்கனவே இருக்கும் politically correct விஷயங்களுடன் நூறு சதவிகிதம் ஒத்துப் போகிறவைதாம். சாரு நிவேதிதா, அ. மார்க்ஸ் போன்றவர்களின் அரசியல், சராசரி மார்க்சிஸ்ட் கட்சி அல்லது திராவிட இயக்க வேட்பாளருடைய, தொண்டனுடைய அரசியல் நிலைப்பாடு எதுவோ அதுதான். எதைச் சொன்னால் அவர்களை 'முற்போக்கு' என்று அங்கீகரிப்பார்களோ அதைத்தான் சொல்வார்கள். எதிராகச் சொல்ல அவர்களுக்கு தைரியம் கிடையாது.

இன்றைய இந்திய ஜனநாயகத்தில் ஆதிக்கக் கருத்துகளுக்கு எதிராகப் பேசுவதற்கு எந்த தைரியமும் தேவையில்லை. ஏனென்றால் அது ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்ட ஒன்று. ஆதிக்கக் கருத்தைக் கடைப்பிடிப்பவன் கூட ரகசியமாகத்தான் செய்வான். இன்றைக்கு ஜாதிக்கு எதிராகப் பேச தைரியம் வேண்டியதில்லை. ஜாதியை, மதவெறியை வீட்டுக்குள்தான் வைத்துக் கொள்வான். ஆனால் political correctnessக்கு எதிராகப் பேச அசாதாரணத் துணிவு வேண்டும். பேசினால் நீங்கள் மிகவும் பிற்போக்கு என்று முத்திரை குத்தப்படுவீர்கள். அவமானப்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய கருத்துக்கள் சிறுமைப்படுத்தப்படும். உங்களுக்கு முற்போக்கு முகாம்களின் எந்த ஓரத்திலும் இடம் கிடைக்காது. விருதுகள் கிடைக்காது. அங்கீகாரம் கிடைக்காது. அப்படி இருந்தும் தான் உண்மை என்று நம்புவதைச் சொல்லக் கூடியவன்தான் -- political correctnessக்கு எதிராகப் பேசுபவன்தான் -- உண்மையான கலகக்காரனாக இருக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட கலகக்காரர்கள் தமிழில் கிடையாது. தமிழில் இருக்கும் கலகக்காரர்கள் அனைவருமே பொலிடிகல் கரெக்ட்னெஸுக்கு உள்ளே வாழும் அற்பப் பிராணிகள்.

ஒரு எழுத்தாளனுடைய விசுவாசம் பழமையோடும், புதுமையோடும் அல்ல; உண்மையோடு. எழுத வேண்டியது முற்போக்கையோ, பிற்போக்கையோ அல்ல. உண்மையை. அந்த உண்மை சில சமயம் முற்போக்குக்கு எதிராக இருக்கலாம், பிற்போக்குக்கு எதிராகவும் இருக்கலாம். தன் நெஞ்சு அறிவதைத் தன் எழுத்துக்களில் சொல்கிறானா, இல்லையா என்பதுதான் அளவுகோல்.

அதிகாரத்தைக் கொண்டு மக்களை அடிபணிய வைத்து பேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த பேதங்களுக்கப்பால் இந்தியா ஒரு தேசம், ஒரு பண்பாட்டுவெளி என்பதுதான் இந்தியா திருப்பித் திருப்பிச் சொல்லும் செய்தி.
கே: அப்படியானால் உங்களைச் சுற்றி நிலவும் சர்ச்சைகளுக்கு நீங்கள் உண்மையை வெளிப்படையாகச் சொல்வதுதான் காரணமா?

ப: நிச்சயமாக. உண்மையை உண்மையாகச் சொல்வதுதான் காரணம். இந்த லேயர், முத்திரை குத்துதல் எல்லாம் எங்கிருந்து வந்தது? நான் 'பின் தொடரும் நிழலின் குரல்' என்று ஒரு நாவல் எழுதினேன். சோவியத் ரஷ்யா என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 35-40 வருடங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்ட ஒரு கனவு. 'அது ஒரு பொன்னுலகம்' என்று அகிலனே அங்கு போய்விட்டு வந்து எழுதியிருக்கிறார். அதற்கு முன்னால் ஈ.வெ.ரா., ஜெயகாந்தன் போய்விட்டு வந்திருக்கிறார்கள். அதுபற்றிப் பெசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். 35 வருடம் அந்தக் கனவு மிகப் பிரமாண்டமாக இருந்தது. திடீரென்று ஒருநாள் அந்தக் கனவு உடைந்து போனது. அந்தக் கனவு அப்பட்டமான பொய் என்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் எத்தனை பேர் 'ஆமாங்க, நான் நம்பினேன். அது பொய்யாகப் போய்விட்டது' என்று சொல்லியிருக்கிறார்கள்? அவ்வளவு பெரிய நிகழ்வைப் பற்றித் தமிழ்நாட்டில் எழுதப்பட்ட பக்கங்கள் எத்தனை? அந்த நிகழ்வைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்? அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று அமுக்கமாக இருந்து விட்டார்கள். ஏனென்றால் அதை எழுதும்போது அது political correctness இல்லாமல் ஆகிறது. இங்குள்ள முற்போக்கு முகாமுக்கு அதைப் பிடிக்காது.

அப்போதுதான் நான் 'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலை எழுதினேன். அந்த நாவல் பதிவான வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொணடது. அதை 91க்கு முன்னால் நான் எழுதியிருந்தால் எல்லாருமே 'முதலாளித்துவம்,' 'பொய்' என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். சோவியத் ரஷ்யா உடைந்து, கோர்பச்சேவின் சகாப்தம் முடிந்த பிறகு 98ல் நான் அந்த நாவலை எழுதியபோது, உண்மைகளை மறுக்க இயலவில்லை. உடனே, அதை எழுதிய எழுத்தாளனை அவதூறு செய்கிறார்கள். 91ல் நான் இதை எழுதியிருந்தால், இவன் அமெரிக்கக் கைக்கூலி, சி.ஐ.ஏவிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதினான் என்று சொல்லியிருப்பார்கள். வெங்கட்சாமிநாதன், க.நா.சுப்ரமணியன், சுந்தர ராமசாமி எல்லோரையுமே சி.ஐ.ஏ.விடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதியதாகத் தமிழ்நாட்டில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

கைலாசபதி என்ற மார்க்சிய விமர்சகர், இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், ஒரு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர், “க.நா.சு.வுக்கு சி.ஐ.ஏ.விடம் இருந்து பணம் வருகிறது. அதற்கான ஆதாரம், ’இந்தக் கட்டுரையையே, தட்டச்சு முறையில் தான் நான் தட்டச்சு செய்கிறேன்’ என்று க.நா.சு., தன்னுடைய ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். ஆகவே அந்தப் பணம் வந்துதான் தட்டச்சு இயந்திரம் வாங்கி அதில் எழுதியிருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார். க.நா.சு. ஒரு பழைய டைப்ரைட்டர் வைத்திருந்தார். ஒன்றிரண்டல்ல, நாற்பது வருஷமாக. அதைப்பற்றி சுந்தரராமசாமி சொல்கிறார், “அதில் ஒவ்வொரு எழுத்தை அடித்த பிறகும், மீண்டும் ஒருமுறை சுண்டு விரலால் தட்டிவிட வேண்டும். அப்போதுதான் அது திரும்பப் போய் உட்காரும்” என்று. இவரை சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்று கிட்டத்தட்ட 20 வருஷங்கள் கைலாசபதி சொல்லியிருக்கிறார். அதுபோல வெங்கட்சாமிநாதனுக்கு சி.ஐ.ஏ. பணம் வந்து குவிகிறது என்று எழுதியிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் அது மாதிரி எழுத மாட்டார்கள். அது பழைய ஸ்டைல். அதனால் 'இந்துத்துவா' என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு பிளாக்மெயில். என்னுடைய நாவலுக்கு பதில் சொல்ல முடியாத அரசியல் நபும்சகத் தன்மைதான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள்.

நான் எழுதத் தொடங்கிய காலத்தில், ஒரு கட்டுரையில் பகவத் கீதையிலிருந்து, உபநிஷதத்திலிருந்து ஒரு வரி மேற்கோள் இருந்தால் உடனே 'இந்துத்துவா' என்று சொல்லி விடுவார்கள். அந்த அளவுக்கு Political correctnessஐ இவர்கள் திணித்து வைத்திருக்கிறார்கள். ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான்தான் அதை ஒருவகையில் உடைத்தேன். ஒரு இலக்கியக் கட்டுரையில் ஒரு வேதத்தையும், ஒரு உபநிஷத்தையும் மேற்கோள் காட்ட முடியும் என்று நான்தான் காட்டினேன். மகாபாரதத்தை வைத்து நான் ஒரு கதையை எழுதியதால் என்னை இந்துத்துவா என்று அ. மார்க்ஸ் எழுதியிருக்கிறார். ஆனால் இன்றைக்குச் சொல்ல மாட்டார். ஏனென்றால் மார்க்சிஸ்ட் கட்சியின் பிதாமகராகக் கருதப்படும் அருணனே அவ்வாறு எழுதும்போது யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஆக, அந்த மாற்றத்தை 20 வருஷத்தில் நாங்கள் கொண்டுவந்தோம்.

Political correctness என்பது இவர்கள் உருவாக்கக் கூடிய ஒரு கெடுபிடி. ஒருவகையில் அரசியல் ஆதிக்கத்திற்கான அறிகுறி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ அமைப்புக்குள்ளேயோ, திராவிட அமைப்பிற்குள்ளேயோ, அதுபோன்ற பிற இயக்கத்திற்குள்ளேயோ எங்கேயும் உண்மையானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு சஞ்சலங்களுடனும், தத்தளிப்புகளுடனும் இருப்பார்கள். அவர்களுக்கு ஜெயமோகன் படிப்பதற்கானவன். அவர்கள் படிக்காமல் ஜெயமோகன் புத்தகம் இவ்வளவு விற்காது. இவ்வளவு முக்கியத்துவமும் வராது. அவர்களுக்கு மட்டும்தான் நான் உண்மையானவன். ஏனென்றால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.

எனக்குச் சின்ன வயதில் இதுபோன்ற எதிர்ப்புகள் மீது ஒரு சிறிய கசப்பு, பயம் இருந்தது. ஆனால் எனக்கு வரும் வாசகர் கடிதங்கள் அதை உடைத்தன. 'விஷ்ணுபுரம்' ஒரு இந்துத்துவா எழுத்து என்று நீங்கள் ஆயிரம் கட்டுரை எழுதினாலும், என்னுடைய இஸ்லாமிய வாசகர்களிடம் கூட வாலாட்ட முடியாது. 500 பக்கம் இருந்தாலும் கூட அதைப் படிக்கும் இஸ்லாமிய வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் என்னைப்பற்றி.

கே: சாதாரணமாக, தன்னை மதித்துக் கொள்ளும் யாருமே திரைத்துறைக்குள் தொடர்வது கடினம், ஆரம்பத்தில். நீங்கள் எழுத்துலகில் சாதித்து விட்டுத்தான் அதில் நுழைந்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் எப்படி?

ப: முதலில் திரைப்படத்துறைக்குள் நுழைய வேண்டும் என்ற கனவு எனக்குக் கிடையாது. இரண்டாவதாக, எனக்கு திரைத்துறையைப் பற்றி எதுவுமே தெரியாது. மூன்றாவதாக சினிமா பற்றியும் பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியாது. நான் மிகக் குறைவாகத்தான் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஒரளவு மலையாளப் படம் பார்த்திருக்கிறேன். சர்வதேச அளவில் கிளாசிக்ஸ் எனப்படும் சில படங்களை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பார்த்திருக்கிறேன். ஆக, திரைத்துறை என்பது எனது துறையே அல்ல.

என்னுடைய நண்பர், வாசகர், இயக்குநர் வசந்த். அவர் தொடர்ந்து என்னை திரைத்துறைக்கு அழைத்துக்கொண்டே இருந்தார்.அதுபோலக் கேரளப் படவுலகின் லோகிததாஸ் என் நண்பர், வாசகர். அவர் தன்னுடைய படம் ஒன்றிற்கு உதவி செய்யும்படிக் கேட்டார். அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செய்தேன். அதைத் தொடர்ந்து என்னுடைய நெருக்கமான நண்பரும், என்னுடைய நல்ல வாசகருமான சுகா (சுரேஷ் கண்ணன்) இயக்குநர் பாலாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். பாலாவும் என்னுடைய வாசகர், நண்பர். இதுவரையில் சினிமாவில் நான் என்னுடைய வாசகர், நண்பர்களாக அல்லாதவர் யாரிடமும் வேலை செய்ததில்லை. இவர்களுடன் பேசும்போது கூட அதிகமாக நான் இலக்கியத்தைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன். சமீபத்தில் மணிரத்னத்தைப் பார்த்தேன். அவரிடம் 10 நிமிஷம் சினிமா பற்றிப் பேசினேன் என்றால், மீதி தொண்ணூறு நிமிஷம் இலக்கியம் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தேன். நான் சினிமாவில் நுழைவதற்கான ஒரே காரணம் என்னவென்பதைச் சொல்வதில் எனக்கு எந்தவிதமான கஷ்டமோ வருத்தமோ எதுவும் இல்லை.

ஒரு எழுத்தாளனாக எனக்கு 50 புத்தகங்கள் அச்சாகியுள்ளன. வருடக் கணக்காக விற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு ராயல்டியாக வருஷத்துக்கு ஒரு இலட்ச ரூபாய் கிடைத்தாலே அதிகம். இதையே நான் மலையாளத்திலோ வங்கமொழியிலோ எழுதியிருந்தால் அதுவே எனக்குப் போதும். ஒரு அரசாங்க வேலையில் எட்டு, பத்துமணி நேரம் வேலை செய்துகொண்டு, மீதி நேரத்தில் எழுத்துப் பணியைச் செய்வதானால் நான் எழுத்தாளனாக இருக்கவே முடியாது. இன்றைக்கு எனக்குச் சினிமா கொடுக்கும் நேரத்தை இலக்கியம் எனக்குக் கொடுக்குமென்றால் நான் சினிமாவுக்கு வரவேண்டிய அவசியம் கிடையாது. எனக்கு எழுத்து மிகவும் முக்கியம். எழுத்துக்கான நேரம் மிகவும் முக்கியம். ஒரு வருடம் தினமும் அலுவலகத்தில் நான் எட்டு மணி நேரம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, சினிமாவில் 15 நாட்களில் சம்பாதிக்க முடிகிறது.

இரண்டாவதாக, தமிழ்நாட்டில் ஒரு சாதாரண எழுத்தாளனுக்குச் சிறு பயணம் கூடச் செய்யமுடியாது, ஒரு புத்தகத்தை வாங்க முடியாது. ஆனால் திரைப்படத்துறை எழுத்தாளனாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு புத்தகம் வேண்டுமானாலும் வாங்கலாம், பயணம் செய்யலாம். இதற்காகத் திரைத்துறைக்குப் பெரிய அளவில் கடமைப்பட்டிருக்கிறேன்.குறிப்பிட்ட வயதில் ஓர் எழுத்தாளன் என்ற முறையில் நான் மங்கிப் போய்விடாமல், என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, இவ்வளவு எழுத வைப்பது சினிமாதான்.

கே: ஒரு காலத்தில் அச்சிதழ்கள் மூலமாகத்தான் எழுத்தாளர்கள் அறியப்பட்டார்கள். ஆனால் தற்போது இணையம் வந்து பெருமளவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. தனி வலைதளங்கள், வலைப்பக்கங்கள் என வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இதனால் இலக்கியத்திற்கு, எழுத்தாளர்களுக்கு நன்மை விளைந்திருக்கிறதா?

ப: எழுத்தாளர்களுக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். எப்படியென்றால் நான் ஒரு பிளாக் நடத்துகிறேன். ஒருநாளைக்குச் சுமார் 8000 முதல் 10,000 பேர் வரை வந்து பார்த்துச் செல்கின்றனர். ஒரு சிறு பத்திரிகையின் ரீச்சே இரண்டாயிரம் பிரதிகள்தாம். ஆக, எந்தக் குறுக்கீடும் இல்லாமால் தினமும் 10000 நபர்களிடம் சென்றடைய முடியும் என்பது ஒரு அசாதாரணமான விஷயம். இதன்மூலம் எனது புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. மட்டுமல்ல; இது உலகம் முழுக்கப் போகும். ஒரு தமிழ்ப் புத்தகம் சென்றடையாத இடத்திற்கெல்லாம் போகும். எனக்கு பின்லாந்திலிருந்து, ஐஸ்லாந்திலிருந்தெல்லாம் மின்னஞ்சல் வருகிறது.

இரண்டாவதாக, தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் விற்கும் நிலை வந்ததற்கு இணையம்தான் காரணம். முன்பெல்லாம் புத்தகங்கள் வெளியாகும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க எந்த ஊடகமும் தமிழில் கிடையாது. தமிழின் பிரபல பத்திரிகைகள் பெரும்பாலும் புத்தக மதிப்புரை போடுவது கிடையாது. இன்றைக்கு, எழுத்தாளர்களுக்கு அவர்களுடைய எழுத்தை நேரடியாக வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும், அவர்களுடைய புத்தகம் பற்றிய தகவலைப் பரவலாக்கவும் இணையம் பெரிய அளவில் உதவியிருக்கிறது.

ஆனால், மறுகட்டத்தில் இணையத்தில் 'பிளாக்' உருவாக்கி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில், படிப்படியாக வளர்ச்சியைப் பார்க்கக் கூடிய எழுத்தாளர்கள் என்று பார்க்கப்போனால் கிட்டத்தட்ட யாருமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. நானும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிளாக் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பார்க்கிறேன். அவர்கள் எழுத்தில் அன்று முதல் இன்றுவரை அதே மாதிரி வளவளாதான். எழுத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான அம்சம் பக்க அளவு. ஒரு பத்திரிகைக்கு எழுதினால், “சார் ரெண்டு பக்கம் இருக்கு. ஒரு பக்கமாச் சுருக்கிக் கொடுங்க” என்பார். இணையத்தில் நீங்கள் 300 பக்கம் எழுதிக் கொண்டே போகலாம். யாரும் கேட்க மாட்டார்கள். படிக்கிறார்களா, இல்லையா என்ற கவலையும் இல்லை. எழுத்தின் தரத்தை முக்கியமாகத் தீர்மானிப்பது அந்தச் சரிவிகிதம்தான்.

இரண்டாவது, பத்திரிகை என்பது ஒரு பொதுமேடை. அதற்குரிய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் எழுத முடியும். அதை ஒரு தேர்ந்த எடிட்டர் செய்வார். எடிட்டர்கள் வழியாக உங்கள் எழுத்துக்கள் செல்லும்போது இரண்டு விஷயம் நடக்கிறது. ஒன்று அவர் நிராகரிக்கிறார். இந்த நிராகரிப்பு ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியமான விஷயம். அதுதான் அடுத்து என்னை ஒரு நல்ல எழுத்தாளனாக உருவாக்கும். நான் உயிர்மைக்குக் கதை எழுதித் திரும்பி வந்தால், அதைவிடச் சிறப்பாக எழுத வேண்டும். அதுபோன்று எழுதி, அந்த எழுத்து வெளியாகும்போது, அது எடிட் செய்யப்பட்ட வடிவத்தில் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்துதான் ஒரு நல்ல எழுத்தாளனை மேம்படுத்தும்.

இன்றைக்கு இளம் எழுத்தாளர் வாமு.கோமு எழுதுகிறார். ஒரு பாரா படித்தாலே வாமு.கோமு என்று தெரிகிறது. அவர் இளம் எழுத்தாளர்தான். அதுபோல இணையத்தில் எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். இன்னார் எழுதிய கட்டுரை என்று ஒரு பாராவைப் படித்துவிட்டு, அவர்தான் எழுதினார் என்று அடையாளம் காண முடியுமா? முடியாது. இணையத்தின் மிகப்பெரிய பலவீனம் இதுதான்.

இரண்டாவதாக, இணைய சுதந்திரத்தின் மூலம் அவர்கள் ஜெயமோகனைத் திட்டலாம். சுந்தர ராமசாமியைக் குறை சொல்லலாம். அது அவர்களுடைய சுதந்திரம். ஆனால் அதே கருத்தை அவர்கள் உயிர்மைக்கு அனுப்பினால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். “இவர்களைக் குறை சொல்ல நீ யார்? உனக்கு என்ன தெரியும், நீ எந்த அளவுக்குப் படித்திருக்கிறாய்? இந்தக் கருத்தைச் சொல்வதற்கான தகுதி உனக்கு என்ன இருக்கிறது?” என்று கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்வி இவர்களைக் காயப்படுத்தும். அதற்கு நீங்கள் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இணையத்தில் இதெல்லாம் எதுவும் இல்லாமல் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம்.

அடுத்து இணையத்தில் முக்கியமான விஷயம், ஹிட்ஸ் வர வேண்டுமென்றால் யாரையாவது கடுமையாகத் திட்டினால், கடுமையாக விமர்சனம் செய்தால்தான் ஹிட்ஸ் வரும். ஆகவே வசை என்பது ஒரு பெரிய, சுவாரஸ்யமான விஷயமாக வளர்ந்திருக்கிறது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையும் ஒரு சமூகத்தின் பலவீனம்தான் முதலில் பயன்படுத்திக் கொள்ளும். பாலியல் மனத்தாழ்வு ஒருவருக்கு இருந்தால் டி.வி. மானாட மயிலாட பார்க்கத்தான் பயன்படும். ஒவ்வொருவரும் நம்முடைய பலவீனத்தை வெல்ல வேண்டும். அதுபோல இணையத்திலும் கோழைத்தனம் - ஒளிந்து கொண்டு திட்டுவது, பொறுப்பில்லாமல் எதையாவது சொல்வது - இதற்குத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ்ச் சங்கம், வருடா வருடம் நடிகர், நடிகைகளை வரவழைத்து 'தமிழ் விழா' நடத்துகிறார்கள் என்று கேள்விப்படும்போது கேவலமாக இருக்கிறது.
கே: இந்தியா முழுக்க நீங்கள் சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் இந்தியா எப்படி இருக்கிறது?

ப: இந்தியா முழுவதும் என்பது மிகவும் மிகையான வார்த்தை. தாமிரபரணிக் கரையில் இருக்கும் கோயில்களை முழுமையாகப் பார்த்து முடிக்கவே எப்படியும் ஒரு மாதம் ஆகும். தினமும் பார்க்கலாம். அவ்வளவு முக்கியமான கோயில்கள் இருக்கிறது. தமிழகத்திலுள்ள மிக முக்கியமான ஆலயங்களைப் பார்க்க எப்படிப் பார்த்தாலும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். அப்படியிருக்கும் போது இந்தியா முழுமையும் அவ்வளவு சீக்கிரம் பார்த்து விட முடியாது.

இந்தியாவைப் பற்றி சமீபத்தில் க. ராஜாராம் என்று நினைக்கிறேன், அவர் தன் குறிப்பில் அண்ணாதுரையைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் தன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் ஒருமுறை டெல்லிக்குக் காரில் போனார். இந்த அனுபவம்தான் இந்தியாவைப் பற்றிய ஒரு பார்வையை அவருக்குக் கொடுத்தது. பிரிவினைவாதத்திலிருந்து அவர் விலகிப் போவதற்குக் காரணமாக அமைந்தது அந்தப் பயணம்தான் என்று ராஜாராம் எழுதியிருக்கிறார். மொழிகள், கலாசாரக் கூறுகள் வேறாக இருக்கலாம். ஆனால் இந்தியா முழுமையான ஒரு தேசம் என்பது திறந்த மனதோடு பயணம் மேற்கொள்ளும் யாவரும் அறிந்து கொள்ளலாம். இது செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் கட்டமைப்பு அல்ல. பக்தி இயக்கத்தில் ஆரம்பித்து எல்லாமே தமிழ்நாட்டுக்குள்ளேயோ, கேரளத்திற்குள்ளேயோ முடிந்து விடுவதில்லை. நம்மாழ்வாரில் ஆரம்பித்து கபீர், குருநானக் வரை இந்தியா முழுக்க அதன் அலைகளைப் பார்க்கலாம். இவை நாடுதழுவிய இயக்கங்கள், இன்றைக்கு இருக்கும் தலித் இயக்கங்கள் வரை.

இந்தியா முழுக்க உள்ளது ராமாயணம், மகாபாரதம். இதில் பழங்குடிப் பண்பாடும் கலந்துறவாடியிருக்கிறது. இன்றைக்குச் சொல்கிறார்கள் ஆதிச்சநல்லூரில் என்ன கிடைக்கிறதோ அதுதான் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் இருக்கிறது என்று. இதன் மூலம், சில அசடுகள் நீண்ட காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் வடக்கு, தெற்கு என்ற பிரிவினையே அபத்தமாகி விடுகிறது. இந்தியா முழுக்க ஒரே பண்பாடுதான். எப்போது ஆதிச்சநல்லூர் 10,000 வருஷம் முந்தியது என்று வருகிறதோ அப்போதே இதெல்லாம் ஒன்றாகி விட்டது. ஆங்கிலேயர்கள் இந்த மண்ணுக்கு அந்நியர்கள் என்பதால் இந்தத் தொன்மையை அவர்களால் மனத்துள் வாங்க முடியவில்லை.

அதிகாரத்தைக் கொண்டு மக்களை அடிபணிய வைத்து பேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த பேதங்களுக்கப்பால் இந்தியா ஒரு தேசம், ஒரு பண்பாட்டுவெளி என்பதுதான் இந்தியா திருப்பித் திருப்பிச் சொல்லும் செய்தி. இந்தியப் பண்பாடு என்பது இங்கே இருக்கும் நிலம்தான். மண்தான். இங்குள்ள நதிகள், மலைகள், கோவில்கள்தான். இந்தியாவின் ஆன்மீகம் என்பது இந்த தேசம்தான். இந்த மண்ணைப் பார்க்கிறது, நடக்கிறது மாதிரியான ஒரு பெரிய 'ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பீரியன்ஸ்' வேறு கிடையாது.

நித்யாவிடம் (குரு நித்யசைதன்ய யதி) ஒரு சிஷ்யர் வந்தால், அவரை ஒரு கட்டம்வரை வைத்துக்கொண்டு, ஆசிர்வாதம் செய்து அவரை அனுப்பி விடுகிறார். அப்படி எல்லோருமே பயணம் செய்யக் கிளம்பிப் போகிறார்கள். 5, 6 வருடம் கழித்துத் திரும்ப வருகிறார்கள். ஒரு இந்தியப் பயணத்தின் போதுதான், அவன் இந்தியாவின் ஆன்மீகத்தை கண்கூடாகப் பார்க்கிறான். இந்த மண் தன்னியல்பாகவே spiritual ஆகத்தான் இருக்கிறது அது அதன் வடிவம். ஏனென்றால் நீண்டகாலமாக இந்த மண்ணில் ஒரு தேடல் நடந்திருக்கிறது.

உங்களுக்குத் திறந்த மனம் இருக்குமானால், கொஞ்சம் நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்றால், ஓர் இந்தியப் பயணத்தில், எப்போதுமே உங்கள் விழியைத் திறக்கக் கூடிய ஒருவரையாவது சந்திக்காமல் இருக்க மாட்டீர்கள். திருப்பித் திருப்பி யாராவது ஒருவர் வந்து கொண்டே இருப்பார். எங்கிருந்து கிளம்பி வருகிறார்களோ என்று எண்ணும்படி, ஒரு அபூர்வமான ஆள் வந்து ஒரு பெரிய அனுபவத்தைக் கொடுப்பார்.

கே: அப்படி ஒரு சம்பவம் சொல்லுங்களேன்!

ப: நாங்கள் ஆதிச்சநல்லூர் சென்றபோது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு ஆள் எங்கள் அருகே வந்தார். “இதுதான் ஆதிச்சநல்லூர்” என்று தொடங்கிப் பல விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் பெயர் ஆதிச்சநல்லூர் சிதம்பரம். 'ஆக்ஸ்போர்டு ஹிஸ்டரி ஆஃப் டமில் இண்டியன் ஹிஸ்டரி'யில் ஆரம்பித்து, இன்றைக்கு வரைக்குமான ஆதிச்சநல்லூரின் வரலாற்றைப் படபடவென விரிவாக, சங்க இலக்கிய மேற்கோள்களோடு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பேசினார்.

அவர் பேசத் தொடங்கியபோது, அருகில் இருந்த நண்பர் வக்கீல் கிருஷ்ணன், “இவர் ஏதோ கிராமத்து ஆளு, தனக்குத் தெரிந்ததை வைத்து உளறுகிறார்” என்று நினைத்தார். “இதுதான் இந்தியாவிலேயே பழமையான அகழ்வாராய்ச்சி இடம்” என்று அந்த மனிதர் சொன்னார். அதற்கு கிருஷ்ணன், “இந்தியா என்ன, உலகத்திலேயே முதன்முதலில் இங்குதான் தோண்டி எடுத்திருக்கிறார்கள்” என்று கிண்டலாகச் சொன்னார். ஆனால் அவர் அதைக் கவனிக்கவில்லை. நான் கிருஷ்ணனிடம் “சும்மா இருங்க, இவர் மாதிரி ஆட்கள் எல்லாம் அவ்வளவு ஈஸியாகச் சொல்லிவிட மாட்டார்கள்” என்று சொன்னேன். அப்புறம் பேசப்பேச அந்தப் பெரியவர் எங்கேயோ போய் விட்டார்! அவர் ஒரு கோவணம் கட்டியிருந்தார், கையில் ஒரு தொரட்டி. மாடுதான் மேய்த்துக் கொண்டிருந்தார். வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் போன பிறகு கிருஷ்ணன் சொன்னார், “தலையில் கடப்பாரையில் அடித்த மாதிரி இருக்கு சார், இது தேவைதான்” என்று. இது ஒரு சித்தர் பூமி.

நித்யாவோட குருவான நடராஜ குரு ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை மைசூரில் திவான் பேஷ்காராக இருந்தார். நடராஜ குரு முதலில் டூன் ஸ்கூலில் படித்தார். பின்னர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்று படித்தார். அங்கிருந்து பின் ஸ்விட்சர்லாந்து சென்று விலங்கியலில் டாக்டரேட் வாங்கினார். அப்புறம் சார்பான் சென்று கல்வித்துறையில் ஆராய்ச்சி செய்து மீண்டும் ஒரு டாக்டரெட் வாங்கினார். திரும்ப வந்தார். தன் குருவைப் பார்த்தார். “சரி இங்கேயே இரு” என்று குரு சொல்லி விட்டார். “ஒரு சோப் எக்ஸ்ட்ராவாக வாங்கு” என்று குரு சொன்னதாக வேடிக்கையாகச் சொல்வார்கள். பின் இரண்டு வருடம் குருகுலத்தில் சமையல் செய்தார். அதன் பிறகுதான் குரு அவரை சிஷ்யராக ஏற்றுக் கொண்டு, கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு நடராஜ குரு கிளம்பிப் போய் ஆறு வருடம் இந்தியா முழுக்கப் பிச்சை எடுத்து அலைந்திருக்கிறார். இன்றைக்கு 90 வயதான ஒரு ஆள் இருந்தால் அவர் நடராஜ குருவுக்குப் பிச்சை போட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் அவர் ஆறு வருடங்களுக்கும் மேல் அலைந்து திரிந்திருக்கிறார். நித்யா 4 வருடங்கள் இது போன்று பிச்சை எடுத்து அலைந்திருக்கிறார். நித்யா, நடாரஜ குரு போன்றவர்கள் எல்லாம் படிப்பில், செல்வத்தில் பெரிய மனிதர்கள். ஆனால் அவர்கள் பிச்சை எடுத்து அலைந்திருக்கிறார்கள். அதுபோல இன்றைக்கு நீங்கள் பார்க்கக் கூடிய சாமியார்களில் யார் அப்படி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

கே: கர்நாடக சங்கீதம் தமிழ்ப்பாடல்களை ஒதுக்குகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. ஒரு இசை ஆர்வலர் என்ற முறையில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள?

ப: விஜயநகர மன்னர்கள் தெலுங்கர்கள். அவர்கள் தென்னிந்தியா முழுவதையும் ஆண்ட காலத்தில், அரச சபைகளில் தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இசைக்கப்படும் கர்நாடக சங்கீதப் பாடல்களில் தெலுங்குப் பாடல்கள் இடம்பெறுவது இயல்பானதுதான். ஆனால் ஆரம்பம் முதலே தமிழிசை இருந்திருக்கிறது. தமிழிசை மூவரான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோர் ஏறக்குறைய தியாகராஜருடைய சமகாலத்தவர்கள்.

19ம் நூற்றாண்டில் இருந்து 20ம் நூற்றாண்டிற்குள் இவ்விசை நுழையும் போது அக்காலத்தில் இருந்த பாடகர்கள் அனைவருமே குருகுல முறையில் பயின்றவர்கள். அவர்கள் குரு என்ன கீர்த்தனை சொல்லிக்கொடுத்தாரோ அதைத்தான் பாடினார்கள். புதிதாக ஒரு பாடலை ஸ்வரப்படுத்திப் பாடும் வழக்கமே கிடையாது. அதனால் சபையில் பாடப்படும் எல்லாப் பாடல்களுமே குரு சொல்லிக் கொடுத்த தெலுங்குப் பாடல்களாகவே இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலப் பாடகர்கள் 50 பாடல்களுக்குள் தான் பாடினார்கள். 51வது பாடலைக் கேட்பது மிக அபூர்வம். இதைப்பற்றி பாரதியார் கிண்டல் செய்திருக்கிறார். எங்கே போனாலும் 'ஸ்ரீசக்ர ராஜ' பாடலைத்தான் பாடிக் கொண்டிருப்பார்கள் என்று. ஒரு விஷயம் சொல்வார்கள்: சுசீந்திரம் கோயிலில், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான் முதன்முதலில் புதுப் பாடலை வாசித்திருக்கிறார். இது ஒரு தேக்க நிலையைத்தான் காட்டுகிறது.

உண்மையில், விஜயநகர காலத்துக்கும் முற்பட்ட, இடைக்காலத் தேக்க நிலைக்கெல்லாம் முற்பட்ட, உண்மையான நமது இசை எது என்று பார்த்தால் அது பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்ட இசைதான். அது இன்றும் ஓதுவார்கள் பாடும் பண்ணிசை என்ற பெயரில் விளங்குகிறது. இந்தப் பண்களின் வேர் எது என்று என்று பார்த்தால், தமிழின் மிகத் தொன்மையான நூல்களில் அதற்கான விளக்கங்கள் உள்ளன. அந்த இசைதான் இன்று கர்நாடக இசையாகப் பாடப்படுகிறது என்பது தமிழிசை இயக்கத்தினரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்துப் பேசப்பேச, இவர்களில் ஒரு சாரார் அதை வேண்டுமென்றே மூர்க்கமாக நிராகரிக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு நிராகரிப்பதால், தமிழிசை இயக்கம் சார்ந்தவர்களுக்கு ஒரு கசப்பு, கோபம் போன்றவை இருப்பது மிக இயல்பான விஷயம்.

ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு இது போன்ற பிடிவாதங்களோ, கசப்புணர்வோ இல்லை. உதாரணமாக சஞ்சய் சுப்ரமண்யம், சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ என எல்லோரும் நிறையத் தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் குருநாதர்கள் சொல்லிக்கொடுத்ததை மட்டுமல்லாமல், தாங்களாகவே ஆராய்ச்சி செய்து பல பாடல்களைப் பாடுகின்றனர். ஆனால், இந்த மாற்றம் வந்திருக்கும் விஷயம் பற்றித் தற்போது தமிழிசை பற்றிப் பேசும் கும்பல் ஏதும் அறியவில்லை. ஏனென்றால் அவர்கள் சங்கீதமே கேட்க மாட்டார்கள். அவர்களில் ஒரு சிலர் தமிழிசை படித்தவர்களாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இசைபற்றி எதுவுமே தெரியாது. இந்த மாற்றங்களையெல்லாம் அறியாமலே இவர்கள் வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோலத்தான், நானும் என்னுடைய நண்பரும் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று, ஆறுமுகசாமி நின்று பாடிய அதே இடத்தில் தேவாரம், திருவாசகம் பாடியிருக்கிறோம். எங்களை யாரும் அடிக்கவில்லை. எல்லா நாளும் அங்கு தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு வருகிறது. இதையே ஒரு சடங்காக நீங்கள் பாடப்போனால் அவர்கள் சம்மதிப்பதில்லை. காரணம் நீங்கள் அப்படிப் பாட ஆரம்பித்தால், நாளைக்கு அதிகாரம் தங்கள் கையை விட்டுப் போய்விடும் என்ற தீட்சிதர்களின் பயம்தான். ஆக, அவர்களுடைய பலம் என்பதே, சிதம்பரம் ஆலயம் கட்டப்பட்ட காலம் முதலே 2000 வருடங்களாக நாங்கள் இருக்கிறோம், எல்லாவற்றையும் நாங்கள்தான் பார்த்துக் கொள்வோம், வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்பதுதான். ஏனென்றால் அது ஒன்றுதான் அவர்களுக்குப் பிழைப்பு. அவர்களுடைய வாழ்க்கை. அதனால்தான் மாற்றங்களுக்கு அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

நானும், என் இலங்கை நண்பரும் சிதம்பரம் சென்றிருந்த போது, ஆறுமுகசாமி பாடிய அதே மேடையில், நண்பர் போற்றித் திருஅகவலைப் பாடினார். தீட்சிதர்கள் விபூதிப் பிரசாதம் கொடுத்தார்கள். இந்தப் பிரச்சனையைப் பேசிப் பேசி, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே தமிழில் பாடக்கூடாது என்று சட்டம் இருப்பதாக ஜனங்கள் நம்புகிறார்கள். இணையத்தில் எழுதும் ஆசாமிகளில் 90% பேர் இப்படித்தான் நம்புகிறார்கள்.

தமிழ்நாட்டில், இந்த மோசமான அரசியல் சூழலில், எந்த விஷயமும் இரண்டு கை தாண்டும் போது அப்பட்டமான கீழ்த்தரமான பொய்யாக மாறி விடுகிறது. இது பொய்யாக மாறிவிடுவதனால் பொய்யைப்பற்றி மட்டுமே பேசிப்பேசி அதன் உண்மையை மறந்து விடுகிறோம். நானே கோயிலில் போய் தமிழில் பாடியிருக்கிறேன், யாரும் ஒண்ணும் சொன்னதில்லை. அப்புறம் எப்படி இப்படிச் சொல்வார்கள் என்று ஒருவன் யோசித்துப் பார்த்தால் இந்த தீட்சிதர் பிரச்சனைகளோ, கோயில் யாருக்குச் சொந்தம் என்ற விவாதங்களோ வந்திருக்கவே வந்திருக்காது.

கே: புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு, தமிழ் வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: இரண்டு விஷயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான விஷயங்கள் நடைபெறாததற்கு முக்கியக் காரணம் நிதிவசதிக் குறைவு. குஜராத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். பூகம்பத்தால் அழிந்து போன அகமதாபாத்தை இரண்டே வருடத்தில் திருப்பிக் கட்டியிருக்கிறார்கள். குஜராத்திப் பண்பாடு எல்லாமே இன்றைக்குப் புலம்பெயர்ந்த குஜராத்திகளை நம்பி இருக்கிறது. ஈழப்பண்பாடு என்பது, ஏதோ ஒரு வகையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைச் சார்ந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கேயும் சென்று தங்கள் ஜாதி வேறுபாடுகளைத்தான் பெரிது செய்கிறார்களே தவிர, தமிழ்நாட்டுக்கு என்று ஏதாவது முக்கியமாகச் செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. அமெரிக்காவில் செட்டில் ஆவதற்குத் தான் அவர்கள் யோசிக்கிறார்கள்.

கேரளத்தை எடுத்துக் கொண்டால், புலம்பெயர்ந்த மலையாளிகள் அளிக்கக் கூடிய விருதுகள்தான் அதிகம். புலம்பெயர்ந்த மலையாளிகள் ஆதிநூல்கள் பலவற்றை, எட்டாயிரம், பத்தாயிரம் பக்கங்கள் வரும் 'கவன கௌமுதி' போன்ற நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்கள். லாபம் வராவிட்டாலும் புத்தகமாவது வெளிவருகிறதே என்று பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இவைதான் அவர்கள் தங்கள் நாட்டுக்கு, பண்பாட்டுக்கு செய்யக்கூடிய வேலை. அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ்ச் சங்கம், வருடா வருடம் நடிகர், நடிகைகளை வரவழைத்து 'தமிழ் விழா' நடத்துகிறார்கள் என்று கேள்விப்படும்போது கேவலமாக இருக்கிறது. நடிகர், நடிகைகளைக் கூப்பிடக் கூடாது என்று நான் சொல்லவில்லை. கூப்பிடுங்கள். ஆனால் அதற்கு ஒரு அளவு இருக்கிறது. பண்பாட்டின் காவலர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எத்தனையோ கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் இருக்கும்போது, தமிழ்நாட்டின் பட்டிமன்றப் பேச்சாளர்களையும், 'நகைச்சுவைத் தென்றல்'களையும் வரவழைத்து கௌரவிக்கக் கூடிய ஒரு கேவலம் இருக்கிறதே, ஒரு சராசரி மலையாளி அதைச் செய்வானா? இதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்போது நான் ஒரு தமிழனாக, எழுத்தாளனாக, புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து கௌரவம் அடைந்திருக்கிறேன் என்றால் அது இலங்கை புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து தானே தவிர, தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து அல்ல. தமிழகத்தில் இன்றைக்கு முக்கியமாகச் செய்யப்பட்ட பல விஷயங்கள் இலங்கைப் புலம்பெயர்ந்தவர்களால் செய்யப்பட்டதே ஒழிய, தமிழ்ப் புலம்பெயர்ந்தவர்களால் அல்ல. அவர்கள் செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதுபற்றி அக்கறை கொள்வதில்லை. இரண்டவதாக இவர்கள் அமெரிக்காவையோ, லண்டனையோ தங்கள் நாடாக ஏற்று வாழத்தான் நினைக்கிறார்கள். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.

மற்றொரு விஷயம், இவர்களில் அடுத்த தலைமுறையினர் முழுக்க முழுக்க வேறு பண்பாட்டையே தங்கள் பண்பாடாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குழந்தைகளுக்கு எதையும் நீங்கள் சொல்லிக் கொடுக்க முடியாது. முதலில் உங்களுக்கு ஆர்வம் வந்தால் குழந்தைகளுக்கு ஆர்வம் வரும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசினீர்கள் என்றால், தமிழ்ப் புத்தகங்களைப் படித்தீர்கள் என்றால், தமிழ்ப் பாட்டைக் கேட்டீர்கள் என்றால் குழந்தைகளுக்கும் ஆர்வம் வரும்.

இன்றைக்கும் மேலைநாடுகளில் கொஞ்சம் கவனித்தீர்கள் என்றால், யூத சமுதாயம்தான் மிக மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறது. ஏனென்றால் அவர்கள் தங்கள் யூதப் பண்பாட்டு அடையாளங்களை இன்றளவும் விடாமல் இருப்பதுதான். பண்பாட்டின் தவறான விஷயங்களை விடலாம். பண்பாட்டின் சாரமான விஷயத்தை விட்டுவிட்டால் அதைத் திருப்பி அடைவது மிகவும் கஷ்டம். ஒரு தலைமுறை இடைவெளி வந்தாலே திருப்பி அடைவது கடினம். அப்படி நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உண்டு.

ஜெயமோகன் கருத்துகள், சிந்தனைகள் எல்லாமே மாறுபட்டவை. 'எவர் வரினும் அஞ்சேன்' என்ற துணிச்சலோடு பேசுகிறவர் அவர். “நிறையப் பேசிவிட்டோமே, இவ்வளவையும் போடமுடியுமா?” என்று அவரே இறுதியில் கேட்குமளவுக்கு நிறையப் பேசினோம். இங்கே வெளியாகியிருப்பது ஓரளவுதான் என்றாலும் அது அவரது சிந்தனையோட்டத்தை, தமிழகத்தின் சிந்தனையோட்டத்தில் அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தைக் காண்பிப்பதாக உள்ளது. தங்குதடையில்லாமல் பேசிய அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.



தீராநதி 2006

எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை ”உயிர்மை” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை ”தமிழினி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல்.

தீராநதி:- புதிதாக நீங்கள் எழுதி வெளிவரவிருக்கும் ”கொற்றவை” காப்பியம் குறித்துச் சொல்ல முடியுமா? அது செய்யுள் நடையில் எழுதப்பட்டுள்ளதா என்ன?

ஜெயமோகன்:- ”கொற்றவை” காப்பியம் அல்ல. புதுக்காப்பியம் அது நான் சூட்டிய அடையாளம் அல்ல. அப்படி அடையாளமிடுவது எனக்கு உவப்பானதுமல்ல. அது என் பதிப்பாளர் ”தமிழினி” வசந்தகுமார் சூட்டிய அடையாளம் .அதை நாவல் எனக்கருதி வாசிக்க ஆரம்பிக்கும் வாசகன். அதன் மொழியை எதிர்கொள்வதில் குழப்பத்தை அடையக்கூடும் என்பதனால், அப்படி ஒரு தனி அடையாளம் தேவைப்படுவதாக அவர் எண்ணுகிறார்.

அது புதுக்காப்பியம் ஆதலினால், கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையேயான இடைவெளியும் உறவும்தான் அதற்கும் காப்பியத்திற்கும் இடையே உள்ளது. ”கொற்றவை” செய்யுள் வடிவில் அமைந்த நூல் அல்ல. செய்யுள் வடிவம், அச்சு ஊடகம் வந்ததுமே காலாவதியாகிவிட்டது என்றே நான் எண்ணுகிறேன். செய்யுள் வடிவங்கள், இலக்கியம் அதிகமும் ”கேட்கப்பட்ட” ஒரு காலகட்டத்திற்கு உரியவை. உலகமெங்கும் அப்படித்தான். முன்னரே வகுக்கப்பட்ட தாளத்தில் அமைந்த வரிகள். பாடுவதற்கும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்கும் உகந்தவை என்பதனால், அவ்வடிவம் உருவாகி நிலைபெற்றது. இது நம் மரபில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. இன்றைய வாசிப்பு செவிநுகர்வு அல்ல. அக வாசிப்பு. கண்ணே இன்றைய வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அச்சுத்தொழில் நுட்பம் வடிவங்களை உருவாக்குகிறது. புதுக்கவிதையின் இன்றைய வடிவம் அச்சுமுறையால் வடிவமைக்கப்பட்டது என்பதைக் காணலாம். பத்தி விடுதல், வரிகளை இடைவெளி விடுதல், சரிந்த எழுத்துக்கள், தடித்த எழுத்துக்கள் என பற்பல வடிவக்கூறுகள் இப்போது உருவாகியுள்ளன. நாளை மின் ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுமானால் அதற்கேற்ற வடிவங்கள் உருவாகலாம். இப்போதே சுட்டி கொடுத்தல். படங்களை இணைத்தல் போன்றவை மூலம் செறிபிரதி (Hyper Text) வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

”சிலப்பதிகாரம்” காப்பியம் செய்யுளில் அமைந்தது. செவிக்கு இன்பம் அளித்து கருத்தைக் கவர்வது அது. ஆனால் புதுக்கவிதையைப் போலவே ”கொற்றவை”யும் அச்சு ஊடகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடிவம். இது செவிநுகர் கனி அல்ல. கண்ணில் புகுந்து கருத்தைத் தீண்டுவது.

தீராநதி:- அப்படியானால் ஏன் அதை நாவல் என்று சொல்லக்கூடாது? ஏன் காப்பியம் எனவேண்டும்?

ஜெயமோகன்:- நாவல் என்ற பொது வடிவத்தில் இதை தாராளமாகப் பொருத்தலாம். நாவல்கள் இன்று எத்தனையோ வடிவங்களில் வருகின்றன. வாழ்க்கை வரலாறு வடிவ நாவல்கள். ஆய்வுக்கட்டுரை வடிவ நாவல்கள். அகராதி வடிவ நாவல்கள்…. ”கொற்றவை”க்கும் அவற்றுக்கும் இடையேயான தூரம்தான். அவை புனைவின் மொழியில் உள்ளன. ”கொற்றவை” புதுக்கவிதையால் உருவாக்கப்பட்ட மொழியில் உள்ளது. அதாவது கவிதைக்குரிய தனிமொழியில் (meta language) உள்ளது.

இவ்வேறுபாட்டை நாம் ஓரளவு வகுத்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பின் புனைவு மொழியானது, ஒன்றை சொல்லும்போது ஒட்டு மொத்தமாக ஒரு மனப்பதிவை உருவாக்குகிறது. இதை நாம் பிரதி (text) என்கிறோம். அம்மனப்பதிவின் வழியாக நாம் அதற்கு அடுத்த கட்டங்களை ஊகிக்கிறோம். இவ்வாறு ஊகிக்கும் அர்த்த தளங்களையே நாம் ஆழ்பிரதி (Sub text) என்கிறோம். நாவலின் ஆழ்பிரதி அதன் கூற்றுகளுக்கு அடியில் உள்ளது. ஆனால் கவிதையின் ஆழ்பிரதி அதன் சொற்களுக்கு இடையே மறைந்துள்ளது. சொற்களையெல்லாம் குறியீடுகளாக ஆக்கிவிடுகிறது கவிதை. உருவகங்கள், படிமங்கள் மற்றும் பிற குறிப்புறுத்தல்கள் மூலம் இதைச் செய்கிறது. ஆகவேதான் புனைவின் மொழியைவிடக் கவிதை மொழி செறிவானதாக உள்ளது. இதைக் கவிதையின் தனிமொழி (meta language) என்கிறோம். அதாவது, புனைவுமொழியை அது எதைச்சொல்கிறது என்பதற்கு முதன்மைக்கவனம் கொடுத்து வாசிக்கிறோம். கவிதைமொழியை அது எப்படிச்சொல்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிக்கிறோம்.

”கொற்றவை” கவிதையின் தனிமொழியில் எழுதப்பட்டது. அதை புனைவாக எண்ணி வாசிக்கும்போது அதன் உண்மையான ஆழ்பிரதிகளைத் தவறவிட்டுவிடுவோம். ஆகவேதான் அதைப் புதுக்காப்பியம் என்று சொல்லவேண்டிய தேவை உருவாகிறது. கவிதை என எண்ணி இதை வாசியுங்கள் என்ற விண்ணப்பம்தான் அந்த அடையாளப்படுத்தல்.

தீராநதி:- இன்றைய நவீன இலக்கியச்சூழலில் ஒரு புதுக்காப்பியம் எழுதும் எண்ணம் ஏற்படக் காரணம் என்ன? இது பின்னால் திரும்பிச் செல்லும் முயற்சியா?

ஜெயமோகன்:- இல்லை. இது முன்னால் செல்லும் முயற்சி. நவீனத்துவம் நமக்கு சில இலக்கிய வடிவங்களை உருவாக்கி அளித்துள்ளது. சிந்தனையாலும் உள்ளுணர்வாலும் உணர்ச்சிகளாலும் செறிவூட்டப்பட்ட, அழுத்தமான வரிகளால் ஆன, கச்சிதமான வடிவமே நவீனத்துவம் முன்வைக்கும் இலட்சிய இலக்கியப் படைப்பாகும் அசோகமித்திரனின் ”விடுதலை.” ”இன்னும் சில நாட்கள்” போன்ற குறு நாவல்கள். ஜி நாகராஜனின் நாவலான ”நாளை மற்றும் ஒரு நாளே. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சிலகுறிப்புகள் போன்றவை தமிழில் இதற்குச்சிறந்த உதாரணங்கள்.

நவீனத்துவத்திற்குப் பின்பு அவ்வடிவம் உருவாக்கிய வட்டத்துக்கு வெளியே உள்ள விஷயங்கள் என்னென்ன என்ற தேடல் ஏற்பட்டது. இருவகையில் மீறல்கள் முயற்சி செய்யப்பட்டன. ஒன்று செறிவே இல்லாமல் முடிந்தவரை தட்டையான மொழியில் கதைகளை உருவாக்குவது. வெற்று மொழிபு [Zero point narration] என இது அழைக்கப்படுகிறது. இதழியல் அறிக்கை போலவோ. நாட்குறிப்பு போலவோ எழுதும் முயற்சிகள் உருவாயின. இதில் பலவகை எழுத்துக்களைக் கலந்து பார்ப்பது முயற்சி செய்யப்பட்டது தமிழில் பிரேம் – ரமேஷ் இவ்வகைப் புனைவை முயன்றிருக்கிறார்கள். இன்னொன்று நவீனத்துவத்தில் இருந்த கட்டுப்பாட்டை உதறி கற்பனையில் கட்டற்று சஞ்சரிப்பது. கற்பனை மூலம் வரலாற்றையும் மரபிலக்கியங்களையும் தொன்மங்களையும் புராணங்களையும் எல்லாம் மீண்டும் புனைந்து பார்ப்பது இவ்வகையில் பலவிதமான முயற்சிகள் தமிழில் நடந்துள்ளன. கோணங்கி நாட்டார் கதைகளை மறுபுனைவு செய்திருக்கிறார். நான் விஷ்ணுபுரத்தில் புராணமரபை மறுபுனைவு செய்திருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவத்தில் அதைச் செய்திருக்கிறார். கொற்றவையும் இப்படிப்பட்ட ஒரு முயற்சியே.

தீராநதி:- அதற்குக் காப்பிய வடிவத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்?

ஜெயமோகன்:- நான் புதிய வடிவங்களுக்காக முனைந்து தேடுவதும் சோதனை செய்து பார்ப்பதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.என் மனம் இயல்பாகவே மனித வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளைச் சார்ந்து இயங்குவது.அன்றாட வாழ்க்கையைப் பற்றிப்பேசும்போதும் எப்போதைக்கும் உரிய வினாக்களாக அதை மாற்றியபடியே நான் எழுதுகிறேன். ஆகவே முழுமை, அறம், உறவு, மரணம் என சில மையங்களைத் தொட்டு நகர்பவை என் ஆக்கங்கள். அவற்றை நாம் இன்றை மட்டும் கணக்கில் கொண்டு பேசிவிடமுடியாது. அவை நம் இறந்த காலத்தில் இருந்து நமக்கு அளிக்கப்பட்டவை. நம்மால் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுபவை. இவ்வாறு அடிப்படைக் கேள்விகளை முக்காலத்துக்கும் விரித்துக் கொள்ளும்போது தத்தவமும் வரலாறும் உள்ளே வந்துவிடுகிறது. தத்துவமும் வரலாறும் ஊடாடாத பெரும்படைப்பு இருக்க இயலாதென்றே நான் எண்ணுகிறேன்.

நம் மரபில் தத்துவம் வரலாறு உள்மன எழுச்சி ஆகியவை ஒருங்கிணையும் புள்ளி என்பது காப்பியமேயாகும். சங்கக் கவிமரபில் இவை தனித்தனித் துளிகளாக வெளிப்பட்டன. பௌத்தம், சமணம் மூலம் பெரும் தத்துவங்கள் இங்கு வந்தபோது ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கும் முறை உருவாயிற்று. காப்பியங்கள் அவற்றின் விளைவுகள், அவற்றில் தத்துவம், அரசியல், அறிவியல், வரலாறு ஆகியவை வாழ்க்கையுடன் சேர்த்து தொகுத்து ஆராயப்படுகின்றன.

இன்று மீண்டும் அடிப்படை வினாக்களை ஒட்டுமொத்த மானுடவாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஆராயும்போது காப்பியம் போன்ற வடிவங்கள் தேவையாகின்றன. ஆனால் ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு மையத்தை ஆழமாக வலியுறுத்துபவை காப்பியங்கள். சிலம்பு,அறம் கற்பு என்ற மையங்களை நிலைநாட்டும் காவியம்.இன்றைய இலக்கியம் எதையும் வலியுறுத்துவதில்லை. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டவற்றைப் பிரித்து ஆராய்கிறது அதற்குரிய வடிவம்தான் புதுக்காப்பியம் என்று சொல்லலாம் அது காப்பியத்தையே பிரித்து ஆராய்ந்து புதுவகையில் அடுக்கிப்பார்க்கும் முயற்சி.

தீராநதி:- இக்காப்பியத்தின் தொடக்கம் எப்படி உருவானது?

ஜெயமோகன்:- நான் என்றுமே பெருங்காவியங்களின் வாசகன். ஏற்கனவே மகாபாரதம் குறித்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் படிக்கையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது. கண்ணகியை ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்ததிலள்” என்கிறார். மண்ணில் கால்படாது வாழ்ந்தவள். ஆனால் அவள் மதுரையில் பாண்டியன் அவைக்குச் செல்லும்போது அவளை வாயிற்காவலன் ”கொற்றவை” என்கிறான். இந்த மாற்றம் புகார் மதுரை பயணத்தில் நடந்தது. அது சிலப்பதிகாரத்திலும் ஓரளவு சொல்லப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் கண்ணகி ஒரு பேதைப் பெண். முடிக்கும் கண்ணகி அமைதியும் ஆழமும் கொண்டவள். இந்தப் பயணத்தை அவள் ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறாள் என உருவகித்துக் கொண்டு. ஓர் அகவயப் பயணமாக சித்தரித்து நாவலாக எழுதவேண்டுமென எண்ணினேன்.

ஆனால் பல பக்கங்கள் எழுதியபின் தெரிந்தது கண்ணகியை யதார்த்த சித்தரிப்புக்குள் கொண்டுவர இயலாது என. அவள் கருவறைத் தெய்வம் போன்றவள். கடைத்தெருவில் நடமாட முடியாது. ஆகவே ஒரு வகைப் படிம மொழியில் அவள் கதையைச் சொல்ல வேண்டியதாயிற்று. அவ்வடிவிலேயே பலமுறை எழுதியபின் தெரிந்தது. கண்ணகியின் கதையைக் கண்ணகியில் தொடங்க முடியாது என, அவளில் சன்னதம் கொண்ட மூலவல்லமைகளைக் கண்டடைய வேண்டும் என, ஆகவே என் புதுக்காப்பியம் குமரிக்கண்டம் நோக்கிச் சென்றது. நம் மனம் தொட முடியாத ஆழத்திலிருந்து தொடங்கினேன்.

தீராநதி:- மொத்தத் தொகுப்பாக வந்துள்ள உங்கள் சிறுகதைகளை இப்போது சேர்த்து வாசிக்கும் போது, பெரும்பாலானவற்றில், தொடக்கத்தில் ஒரு தர்க்கம் நிறுவப்பட்டு, இறுதியில் அது தகர்க்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் நாவல்களிலும் இதனைப் பார்க்க முடிகிறது. ஒரு படைப்பு சூத்திரமாக உங்களது அனேக படைப்புகளில் இது இருக்கிறது என்ற விமரிசனத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

ஜெயமோகன்:- இல்லை. இது மேலோட்டமான ஒரு மனப்பதிவு என்று எண்ணுகிறேன். என் ஆக்கங்கள் பொதுவாக உள்ளுணர்வின் நுண்மையான ஒரு தளம் நோக்கி எழ முனைகின்றன.

தீராநதி:- தர்க்கத்தை எவ்வளவு தூரம் முக்கியமானதாக நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன்:- கதைகளின் பலமும் பலவீனமுமாக நான் எண்ணுவது அவற்றின் உணர்ச்சிவேகத்தைத்தான். சிலசமயம் அவை கட்டற்றுப் பெருகிவிடுகின்றன. அதற்கு ஒருவகையான கரைகட்டும் முயற்சியாக தர்க்கத்தை நான் கையாள்கிறேன். அதைப்போலவே நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆக,  தர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே.

நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது.

உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்.

மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்.

இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.தர்க்கபூர்வமான மாபெரும் கட்டமைப்பு கொண்டவையே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ்மன், நிகாஸ் கசன் சகிஸ் போன்ற பேரிலக்கியவாதிகளின் ஆக்கங்கள். பலசமயம் இவர்களின் நாவல்கள் பலநூறு பக்கங்களுக்குத் தூய தர்க்கங்களாகவே இருப்பதைக் காணலாம். குறிப்பாக ”கரமசோவ் சகோதரர்கள்”. அது முற்றிலும் நேரடியான தர்க்கங்களால் ஆனது. கதாபாத்திரங்களே பக்கம் பக்கமாக விவாதிக்கின்றன. கதாபாத்திரங்கள் கருத்துத் தரப்புகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தர்க்கம் மீது ஏறி வேறு ஒன்றை புனைவு  தொடுகிறது.

ஆனால் அடிப்படை வினாக்களைக் கையாளாமல் வெறுமே யதார்த்தச் சித்தரிப்பை அளிக்கும் ஆக்கங்களுக்குத் தர்க்கம் தேவையில்லை. காரணம் அவை நுண்ணிய மையம் நோக்கி செல்வதேயில்லை. தமிழில் நாம் எழுதும் படைப்புகளில் மிகப்பெரும்பாலானவை இப்படிப்பட்டவை. இவற்றை வாசித்து நாம் எளியவாசிப்புக்குப் பழகிவிட்டிருக்கிறோம். ஆகவேதான் படைப்பின் தர்க்கம் நம்மில் பலருக்கு சிக்கலாக உள்ளது. உயர்தர்க்கம் செயல்படாத முக்கிய நாவல் ஏதும் இல்லை.

தீராநதி:- உங்கள் படைப்புகளில் தொல்குடி தாய் தெய்வமான நீலியின் படிமமும் தொடர்ந்து வருகிறது. ஏன் அது வருகிறது என்பது குறித்து விளக்க முடியுமா?

ஜெயமோகன்:- உலகம் முழுக்க முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்களில் அப்படி சில படிமங்கள் அல்லது சில தொன்மங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. அவை அப்படைப்பாளியின் அகத்துக்குள் செல்லும் வழிக்கான சாவிகள். தஸ்தயேவ்ஸ்கியின் ஆக்கங்களில் பாவத்திலிருந்தும் இழிவிலிருந்தும் மீட்டுச்செல்லும் தூய இளம்பெண் ஒரு முக்கிய கதாபாத்திரம். அதே பெண்ணை அப்படியே நாம் தல்ஸ்தோய் நாவல்களில் காண்கிறோம். அவளை அதற்குமுன் தாந்தேயின் ”டிவைன் காமெடி” காவியத்தில் ஃபீட்ரிஸ் தேவதையாகக் காண்கிறோம். இவை தெளிவாக வரையறை செய்யக்கூடிய விஷயங்கள் அல்ல. ஆழ்மனம் சார்ந்தவை. கலாச்சாரத்தின் ஆழத்திலிருந்து எழுபவை.

நீலி, என் குலதெய்வம்.நீலகேசி அம்மனின் ஒரு வடிவம்.நாங்கள் தாய்தெய்வ வழிபாடு கொண்டவர்கள். பெண்வழிச் சொத்துரிமை கொண்டவர்களாக ஒரு தலைமுறைக்கு முன்புவரை இருந்தோம். என்னுள் உறையும் பழங்குடிமரபுவரை செல்லும் தொன்மம் இது. அதை எழுதும்போது எனக்கு ஓர் அபூர்வ மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நான் வெகுதூரம் செல்ல முடிகிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

தீராநதி:- தொடக்கத்தில் நீங்கள் கவிதைகள் எழுதியுள்ளீர்கள். அதன்பிறகு விட்டுவிட்டீர்கள். ஏன்?

ஜெயமோகன்:- எல்லாரையும்போல நானும் மொழியைத் தீட்டிக் கொள்ளவே கவிதை எழுத ஆரம்பித்தேன். என் வடிவம் நாவல் என என் போக்கில் கண்டுபிடித்தேன். வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளிழுத்தபடி. உள்ளுணர்வின் ஆழங்களுக்குள் செல்ல விழைவது என் படைப்பியக்கம். அதற்குரிய வடிவம் நாவலே. அது மட்டுமே இன்று வாழ்க்கையின் முழுமையை அள்ள முனையும் வடிவம். அதற்குள் எல்லா வகையான இலக்கிய வடிவங்களுக்கும் இடமிருக்கிறது. என் நாவல்களில் நான் தூய கவிதையைத் தொட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆகவே தனியாகக் கவிதை எழுதும் எண்ணம் எழவில்லை.

தீராநதி:- உங்கள் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியைத் தொடங்கி, பிறகு அதனை வேண்டாம் என்று நிறுத்தியதாக அறிகிறோம். ஏன் கவிதைகள் தொகுப்பாக வருவதைத் தவிர்க்கிறீர்கள்?

ஜெயமோகன்:- அவை என் ஆரம்பகால முயற்சிகள். இன்று அவற்றுக்கு என் இலக்கிய உலகில் இடமில்லை.

தீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்?

ஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை.

நான் கவிதையை நேற்று இன்று எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. என் நோக்கில் இன்றைய கவிதை கபிலனுக்கும் பரணருக்கும் தொடர்ச்சிதான். நம் மாபெரும் மரபுடன் இணையும் தகுதிகொண்ட கவிதையை நாம் அப்படி எளிதாக எழுதிவிட இயலாது. அது நம் வழியாக நிகழ வேண்டும். நாம் நம்மை அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நம் புதுக்கவிதையில் பெருமை கொள்ளத்தக்க சாதனையாளர்கள் உள்ளனர். பிரமிள், தேவதேவன் ஆகியோர் அவர்களில் முதன்மையானவர்கள் என்பது என் விமர்சன முடிவு. அதை விரிவாக விவாதித்தும் உள்ளேன். அபி, கலாப்ரியா, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், சுகுமாரன், ராஜ சுந்தரராஜன் போன்று பலர் முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள், பொதுவாக சுடர்விட்டுத் தங்கள் எரிபொருள் தீர்ந்ததும் அணைவது வழக்கம். அது எங்குமே அப்படித்தான். இன்றைய கவிஞர்களில் பிரேம், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். யூமா வாசுகி போன்றோர் தொடங்கி எரிந்து அணைந்துவிட்டனர். அமலன் ஸ்டேன்லி, பிரான்ஸிஸ் கிருபா, மோகனரங்கன் போன்றோர் அவ்வப்போது ஒளிர்கின்றனர்.

நம் கவிதைக்கு ஓர் அழியாத் தொடர்ச்சி உள்ளது. ஆனால் அது சில காலங்களில் மட்டுமே கொழுந்துவிட்டெரிந்துள்ளது. மற்றகாலங்களில் கைக்குள் அகல்சுடர் போலத்தான் இருக்கிறது. ஒரு சூழலில் நல்ல கவிதை உருவாவது என்பது உண்மையில் கவிஞர் கைகளில் இல்லை. அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான ஆன்மீக எழுச்சியின் ஒரு திவலையே கவிதையாக வெளிப்படுகிறது. கவிதை பெரும்பாலும் தன்னெழுச்சியான நிகழ்வு என்பதனால்தான் இப்படி.

இன்று கவிதையில் அலை என ஏதுமில்லை. ஆனால் உயிருள்ள நீட்சி இருந்துகொண்டிருக்கிறது என்றும் படுகிறது.

தீராநதி:- உங்கள் விமர்சன அளவுகோலின் அடிப்படையாக தொடர்ந்து சுந்தர ராமசாமியை நீங்கள் சொல்லி வந்திருக்கிறீர்கள். அவருடையது ரசனையை அடிப்படையாகக் கொண்ட விமரிசனம் க.நா. சு.வின் தொடர்ச்சி. உங்கள் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை”யும் ரசனை விமரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லலாம். தற்காலத்தில், நவீன விமர்சன முறைகள் பல தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில், ரசனை அடிப்படையிலான விமர்சனம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன்:- என்னுடைய ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” நூலின் முதல்பகுதியிலேயே இதற்கு விரிவான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு படைப்பு ரசிப்பதற்காகவே எழுதப்படுகிறது. அதன் முதன்மை நோக்கம் அதுவே. ஆராய்ச்சி அடுத்த படிதான். ரசனைவிமர்சகன் படைப்பின் முன் ஒரு வாசகனாகத் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படைப்பை ரசிக்கிறான். தன் ரசனையை அளவாகக் கொண்டு அதை மதிப்பிடுகிறான். இதுவே இயல்பான முதல்படியாகும்.

ரசனை விமரிசகனின் கருவிகள் இரண்டு. ஒன்று, அவனது நுண்ணுணர்வு (Sensibility). இரண்டு அவனது பொதுப்புத்தி (Commonsense) நுண்ணுணர்வானது பேரிலக்கியங்களை வாசிப்பதன் மூலம் உருவாகக் கூடியது. நான் கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், ராபர்ட் ஃப்ராஸ்டையும் வாசித்ததால் இன்றைய கவிதையை அறிந்து மதிப்பிடுவதற்கான நுண்ணுணர்வை அடைகிறேன். வாழ்க்கையை கவனிப்பதன் வழியாகவும் பொது அறிவைக் கற்பதன் மூலமாகவும் எனக்கு பொதுப்புத்தி வலிமை பெறுகிறது. ஒரு நல்ல வாசகனிடமிருந்து ஓர் இலக்கியப்படைப்பு எதிர்பார்ப்பது இவை இரண்டையும் மட்டுமே.

கோட்பாடுகள், படைப்பை ஆராய்வதற்குரியவை. அங்கே ரசனை இல்லை. பலசமயம் கோட்பாடுகள் நல்ல ரசனைக்குத் தடையாகவே அமைகின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனம் சொல்லாத இடத்துக்குத் தன் கோட்பாட்டுக் கருவிகள் மூலம் செல்பவனே நல்ல ஆய்வாளன். அதாவது ரசனை விமரிசனமே அடிப்படை.உலகமெங்கும் அப்படித்தான் உள்ளது. பல்லாயிரம் படைப்புகள் வருகின்றன. சிலவற்றை முக்கியப்படுத்துவதே ரசனை விமரிசனம்தான். காரணம் அது வாசகனுக்கு மிக அருகே நின்றபடி வாசகன் குரலில் பேசுகிறது.

இப்படி ரசனை விமரிசனத்தின் மூலம் முக்கியமாகும் படைப்புகளையே கோட்பாட்டு ஆய்வுகள் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனத்தின் இடைவெளிகளை நிரப்புவதே பிற விமரிசனங்களின் பணி. உதாரணமாக நான் கம்பராமாயணத்தை என் அனுபவம் மூலம் உள்வாங்கி மதிப்பிடுகிறேன். ஒரு வரலாற்றுக் கோட்பாட்டாளன். குலோத்துங்கன் காலத்து அரசியல் எப்படி கம்பராமாணத்தில் வெளிப்படுகிறது என, தன் வரலாற்று ஆய்வுமுறை மூலம் கண்டறிந்து சொல்லும்போது, என் அறிதலில் உள்ள ஓர் இடைவெளி நிரப்பப்படுகிறது. இப்படி பல ஆய்வுகள் வரலாம். தமிழைப்பொறுத்தவரை ரசனை விமரிசனத்துக்கு அப்பால் செல்லும் கோட்பாட்டு விமரிசனம் அனேகமாக இல்லை. ஒரு வாசகனாகப் பாருங்கள். என் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” அளவுக்கு நம் இலக்கியப் படைப்பாளிகள் மீதான புதிய அவதானிப்புகளை முன்வைத்த கோட்பாட்டு விமரிசன நூல் எது?

தீராநதி:- இலக்கிய முன்னோடிகள் வரிசை புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் எப்படி உருவானது?

ஜெயமோகன்:- ரசனை விமரிசனத்துக்கு நம் சூழலில் ஒரு வலிமையான தொடர்ச்சி இருக்கிறது. ஆகவேதான் நம் சூழலில் வாசகர் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் நல்ல படைப்புகளுக்கு எப்படியோ ஓர் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. தொடர்ந்து தீவிர இலக்கிய மரபு அறுபடாமல் இருக்கிறது. கோட்பாடுகள் அரசியல் ஆகிய புறச்சக்திகளால் தூக்கிக் காட்டப்படும் படைப்புகள் உடனேயே சரிக்கப்பட்டு உண்மையான ஆழம் உள்ள படைப்புகள் நீடிக்கின்றன. மார்க்ஸியத் திறனாய்வாளரான கைலாசபதி,செ. கணேசலிங்கனின் ”செவ்வானம்” நாவலைத் தமிழின் முக்கியமான நாவலாகத் தூக்கிப் பிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அ. மார்க்ஸ் போன்றோர் ஒரு கட்டத்தில் கே. டானியலின் நாவல்களை முதல்தரப் படைப்புகளாக முன்வைத்தனர். உடனுக்குடன் ரசனைமரபு அத்தகைய குரல்களை வென்று முன்னகர்ந்தபடியே உள்ளதனால்தான் இப்போது இதை உங்களுக்கு ஒரு வரலாற்றுத் தகவலாகச் சொல்ல வேண்டியுள்ளது.

நீங்கள் குறிப்பிட்டதுபோல முதல் தலைமுறையில் க.நா. சுப்ரமணியமும் இரண்டாவது தலைமுறையில் வெங்கட் சாமிநாதனும், சுந்தர ராமசாமியும் ரசனை மரபின் மையங்களாக இருந்தனர். நான் எழுதவந்தபோது ரசனைமரபின் அடுத்த காலகட்டம் வந்துவிட்டிருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி உருவாக்கிய முடிவுகளே பெரும்பாலும் நீடித்திருந்தன. நான் சுந்தர ராமசாமியிடம் தொடர்ந்து விவாதித்து வந்தேன். அவ்விவாதங்களை நூலாக ஆக்கவேண்டிய அவசியம் இருப்பதாக தமிழினி வசந்தகுமார் சொன்னார். ஆகவே அவை எழுதப்பட்டன.

தீராநதி:- உங்கள் விமர்சனங்களை மொத்தமாகப் பார்க்கும் போது, நீங்கள் சில படைப்பாளிகளைக் கறாராகவும் சிலரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உதாரணமாக மௌனியைக் கறாராகவும் ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள். இந்த முரணுக்கு என்ன காரணம்?

ஜெயமோகன்:- இப்படி ஓர் ஐயம் எழ வாய்ப்பிருப்பது உண்மையே. ஆனால் அதற்குரிய காரணங்கள் வேறு. நான் ஏற்கனவே சொன்னேன். நான் சுந்தர ராமசாமிக்குப் பின் விவாதத் தொடர்ச்சியாக அவற்றை எழுதினேன் என. சுந்தர ராமசாமியின் ரசனையும் மதிப்பீடும் நவீனத்துவம் சார்ந்தது. நவீனத்துவத்தின் அளவுகோலின்படி இலக்கிய ஆக்கம் கச்சிதமாக, உள்ளடங்கிய குரல் கொண்டதாக, மனிதமனத்தின் இருண்ட ஆழங்களை முன்வைப்பதாக, மன எழுச்சிகளை ஐயப்படுவதாக இருக்க வேண்டும். இந்நோக்கு இங்கே நிறுவப்பட்டு அதுவே இயல்பானதாகக் கருதப்பட்டது. அதுதான் கு.ப.ராஜகோபாலன், மௌனி, ஜி. நாகராஜன் போன்றோரை முன்னுக்குத் தள்ளியது. ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, ப.சிங்காரம் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளியது.

நான் எழுதவரும்போது நவீனத்துவமும் முடிந்துவிட்டது என்றே உணர்ந்தேன். எனக்குக் கற்பனாவாத எழுத்தும் சரி, இலட்சியவாத எழுத்தும் சரி, நவீனத்துவ எழுத்தும் சரி, ஒரேபோல வரலாற்றுப் பதிவுகள் மட்டுமே.அனைவருக்கும் ஒரே அளவுகோல்தான். ஆகவே என் நோக்கில் நவீனத்துவம் சிலருக்கு அளித்து வந்த சலுகைகள் ரத்தாயின. அப்போது என்ன ஆகிறதென்றால் மௌனிக்கு நவீனத்துவம் அளித்துவந்த முதன்மை இடம் ரத்தாகி, அவர் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். அழகிரிசாமிக்கு நவீனத்துவம் அளித்துவந்த புறக்கணிப்பு இல்லாமலாகி அவர் சற்று முன்னகர்கிறார். இதுதான் உண்மையில் நடக்கிறது. இது பொதுப்பார்வையில் மௌனி கடுமையாகவும் அழகிரிசாமி மென்மையாகவும் நோக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.

பாருங்கள். அழகிரிசாமியின் எல்லாக் குறைகளும் என்னால் சுட்டப்படுகின்றன. அவருக்கு வடிவ உணர்வு இல்லை. அவரது மொழிக்கு செறிவு இல்லை. அவை ஏற்கனவே சொல்லப்பட்டவை. அத்துடன் அவரது விவேகம் மிகுந்த கவித்துவமான அக உலகமும் சுட்டப்படுகிறது. அது நவீனத்துவம் காண மறுத்த ஒன்று. அதேபோல மௌனியின் எல்லா சாதனைகளும் குறிப்பிடப்படுகின்றன. அவரே கவித்துவத்தைப் புனைவுக்குள் கொண்டுவந்த முதல் எழுத்தாளர். மனம் நிகழ்வதை மொழியில் காட்டியவர். அவை நவீனத்துவத்தால் சொல்லப்பட்டவை. அதேசமயம் மௌனியின் குறைகள் விவாதிக்கப்படுகின்றன. அவர் மேலைக் கற்பனாவாதக் கவிமரபைப் பயிற்சியற்ற உரைநடையில் சொல்ல முயன்றவர் என்கிறேன். இவை நவீனத்துவத்தால் சொல்லப்படாதவை. ஆக, நவீனத்துவமரபின் மதிப்பீடுகளையே கண்டுவளர்ந்த இளம் வாசகனுக்கு அழகிரிசாமியின் நிறைகளும் மௌனியின் குறைகளும் சொல்லப்படுகின்றன என்று தோன்றலாம். அது ஒரு தோற்றம் மட்டுமே.

தீராநதி:- ”தமிழில் நாவல்களே இல்லை” என்பதில் தொடங்கி, ”கருணாநிதி இலக்கியவாதி இல்லை” என்பது வரை உங்கள் கருத்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வந்துள்ளன. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ஜெயமோகன்:- உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதிய திறனாய்வாளர்களில் விவாதங்களை உருவாக்காத ஒருவருடைய பெயரை நீங்கள் சொல்ல முடியுமா? இலக்கியச்சூழலில் ஒருவகைக் கருத்துக்கட்டமைப்பு நிலவுகிறது. அதைநோக்கியே விமரிசகன் பேசுகிறான். அதை மாற்ற முயல்கிறான். அப்போது அது எதிர்வினையாற்றுகிறது. ஒரு விவாதம் உருவாகிறது. மெல்ல மெல்ல அவனுடைய கருத்தின் முக்கியப்பகுதி அக்கருத்துக் கட்டமைப்பால் ஏற்கப்படுகிறது. அப்போது அந்த விவாதம் சரித்திரத்தின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. அடுத்த விவாதம் நிகழ்கிறது. இப்படித்தான் கருத்தியக்கம் முன்னகர்கிறது.

சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், க.நா.சுப்ரமணியம் ஆகியோர் என்னைவிடப் பெரிய விவாதங்களைத் தமிழ்ச்சூழலில் உருவாக்கியுள்ளனர். அவ்விவாதங்கள் மூலமே நாம் இன்று நம்பும் பல கருத்துக்கள் உருவாகி வந்தன.

தீராநதி:- ”சொல்புதிது” என்ற சிற்றிதழைத் தொடங்கி சிறிதுகாலம் நடத்தினீர்கள். பத்திரிகை நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், ஒரு படைப்பாளி பத்திரிகை ஆசிரியராக இருப்பது குறித்த உங்கள் எண்ணம் என்ன?

ஜெயமோகன்:- உலகம் முழுக்க எழுத்தாளர்கள் சிறந்த இதழ்களை நடத்தியுள்ளனர். சில சிக்கல்கள் உண்டுதான். முதலில் அந்தப் படைப்பாளியின் நேரம் சிதறி அழிகிறது. இரண்டு, சில சமயம் அப்படைப்பாளியின் படைப்புக் கோணமே அப்பத்திரிக்கையின் கொள்கையாக ஆகி இதழின் விரிவைத் தடுத்துவிடுகிறது. வேறுவகை ஆக்கங்கள் அதில் வரமுடியாமலாகின்றது. ஆனால் பல சாதகக் கூறுகளும் உள்ளன. படைப்பாளி பிறரைவிட நல்ல படைப்பை நுட்பமாக அடையாளம் காணமுடியும். இலக்கியத்தில் ஒரு புதிய முளை தளிர் விடும்போது அதைக் கண்டறிந்து மேலெடுக்க முடியும். இந்த நிறை குறை இரண்டுக்குமே டி.எஸ்.எலியட்டின் ”கிரைடீரியன்”. சி.சு.செல்லப்பாவின் ”எழுத்து” இரண்டும் உதாரணங்களாகும்.

தீராநதி:- உங்கள் திரைக்கதையில், ”கஸ்தூரிமான்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. திரைக்கதை எழுதுவது பற்றிக் கடுமையான விமரிசனத்தை நீங்கள் முன் வைத்திருக்கிறீர்கள். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு என்ன காரணம்?

ஜெயமோகன்:- முதல்விஷயம், ”கஸ்தூரிமான்” – சினிமாவின் திரைக்கதை என்னுடையதல்ல. அது லோகிததாஸ் ஏற்கனவே மலையாளத்தில் எழுதியது. இரண்டாவது விஷயம். திரைக்கதை எழுதுவது பற்றி நான் எங்கும் கடுமையாக விமரித்தது இல்லை. மாறாக மலையாளத்தில் உறூப், பஷீர், தகழி, எம்.டி.வாசுதேவன்நாயர். பி.பத்மராஜன் போல இங்கும் முக்கிய படைப்பாளிகள் சினிமாவில் எழுதவேண்டும் என்றே எழுதிவந்துள்ளேன். அதற்கான சூழல் தமிழில் இல்லை என அறிவேன். அப்போதுகூட ஓர் எழுத்தாளன் வெறும் ஒரு தொழிலாக சினிமாவில் ஈடுபடுவதில் தவறில்லை என்றே எழுதியுள்ளேன். இங்கே எழுத்தைத் தொழிலாகக் கொள்ள இயலாது. வேறு ஒரு துறையில் வாழ்க்கையைப் பணயம் வைத்து எழுதமுடியாமல் அடிமையாவதை விட சினிமா மேல். லோகிததாஸ் என் நண்பர். கஸ்தூரிமானுக்கு எழுதும்படி சொன்னார். எழுதினேன்.

தீராநதி:- உங்கள் அனுபவத்தில், திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு எழுத்தாளருக்கு எந்த அளவுக்கு அதில் இடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன்:- சினிமாவில் மூன்று கலைகள் கலந்துள்ளன. இலக்கியம், நடிப்பு, புகைப்படம்.இசையும் ஓரளவுக்கு உண்டு. இதில் முதல் கலையை இலக்கியவாதி திறம்பட அளிக்க இயலும். இன்றைய தமிழ் சினிமாவில் தமிழக வாழ்க்கை இல்லை. இலக்கியவாதிகள் சினிமாவில் நுழைந்தால் ஓரளவு அதை உருவாக்க இயலும். சினிமாவுக்கு இயக்குனரே மையம். மூன்று கலைகளையும் தொகுத்து ஒன்றாக்குபவர் அவர். நமக்கு நல்ல இயக்குனர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்குத் தமிழிலக்கியம் மீது அறிமுகமும் மதிப்பும் இல்லை. ஆகவே தமிழ் இலக்கியத்தை உள்ளே கொண்டுவருவதில் நம்பிக்கையும் இல்லை. இங்குள்ள சினிமாவில் இலக்கிய அம்சம் மேலை சினிமாவில் இருந்து எடுக்கப்படுகிறது. பிறகு விவாதித்து வளர்க்கப்படுகிறது. அபூர்வமாக சில இயக்குனர்கள் இலக்கியக்கூறைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

சினிமாவில் எழுத்தாளனின் இடம் இயக்குனரின் விருப்பப்படி இலக்கிய அம்சத்தை அளிப்பதுமட்டுமே. அவன் சினிமாவின் ஆசிரியன் அல்ல. பங்களிப்பாளன்தான். ஒளிப்பதிவாளரின் அதே இடம்தான் அவனுக்கும். இயக்குனர் அவனை சுதந்திரமாக இயங்கவிட்டு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல படங்கள் வரும்.

தீராநதி:- வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதுவதில்லை. எழுதக்கூடாது என்று சமீபகாலம் வரை சிறுபத்திரிகை சார்ந்த எழுத்தாளர்களிடையே ஒரு அணுகுமுறை இருந்தது. இப்போது அனேகமாக எல்லா எழுத்தாளர்களுமே எழுத முன்வந்துள்ளார்கள். இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜெயமோகன்:- வெகுஜனப்பத்திரிகையில் சமீபகாலத்தில் வந்த நல்ல படைப்பு என்ன சொல்லுங்கள்? சென்ற வருடம் வந்த முக்கியமான ஆக்கங்கள்-ஏதோ ஒருவகையில் கவனம் பெற்றவை-”ஆழிசூழ் உலகு” (ஜே.டி.க்ருஸ்), ”மணல்கடிகை” (எம். கோபாலகிருஷ்ணன்.). ”இரண்டாம் சாமங்களின் கதை” (சல்மா) ”ம்” (ஷோபா சக்தி) ”பகடையாட்டம்” (எம்.யுவன்)”கூகை” (சொ.தருமன்) எவற்றுக்கும் பெரிய இதழ்களுடன் தொடர்பில்லை. சென்ற வருடம் எந்த நல்ல கதையும் பெரிய இதழ்களில் வரவில்லை. இன்றும் இங்கே பெரிய இதழ்களில் இலக்கியத்துக்கு இடமில்லை.

என்ன நடக்கிறது? எழுத்தாளர்களில் ஒருசாரார் பெரிய இதழ்களின் சில பக்கங்களைப் பெற்று இலக்கியத்தை அறிமுகம் செய்கிறார்கள். அவ்வளவுதான் நடந்துள்ளது. மேலே சொன்ன நாவல்களைப் போன்றவை எண்பதுகளில் வெளிவரவே இயலாது. வந்தாலும் விற்றுத் தீர ஐந்து வருடம் ஆகும். இன்று பேரிதழ்கள் வழியாக அவை பரவலாக அறிமுகமாகி ஒரே வருடத்தில் விற்றுத் தீர்கின்றன. இன்று, இலக்கியத்துக்கு, சிற்றிதழ்களுக்கு வெளியே ஒருவாசகத்தளம் உருவாகியுள்ளது. அவர்கள் தான் இப்போது நிறைய நூல்களைப் படிக்கிறார்கள். அவர்களால் பதிப்புத்துறையில் மெல்லிய வளர்ச்சி உள்ளது. அவ்வாசகர்களிடம் சென்றுசேர பிரபல இதழ்கள் உதவுகின்றன. அவ்வளவுதான்.

சிற்றிதழ் இயக்கம் பொதுக்கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு இயக்கமாக எண்பதுகள் வரை நடந்தது. அன்றைய எதிர்ப்பு அந்த நோக்கில்தான். பெரும்போக்குகளில் கரையாமல் தங்கள் தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம் அது. அன்று அந்த வீம்பு ஓர் ஆயுதமாக இருந்தது. தொண்ணூறுகளில் சிற்றிதழ்களின் போராட்டம் பலன் தந்தது. சிற்றிதழ் எழுத்தாளர்கள் மேலும் விரிந்த வாசகர் வட்டத்தை அடைந்தனர். அவ்வாசகர்களுடன் உரையாடலைத் தொடர்வதே இன்றைய பணி. அதற்குத்தான் இடைநிலை இதழ்கள் முக்கியமாகத் தேவையாகின்றன. ”சுபமங்களா”வில் தொடங்கிய இப்போக்கு இன்று ”உயிர்மை”. ”காலச்சுவடு”. ”புதியபார்வை, ”தீராநதி” என வளர்ச்சி கண்டுள்ளது. அவற்றை நோக்கி மேலும் வாசகர்களை ஈர்க்க பேரிதழ்களின் சில பக்கங்களை பயன்படுத்துகிறோம். பொதுக்கலாச்சாரம் தீவிர இலக்கியத்துக்கு அளித்துவந்த புறக்கணிப்பு இன்று இயலாமல் ஆகிவிட்டது. இன்று தீவிர இலக்கியமும் ஒரு தரப்பாக ஆகியுள்ளது. இதை முக்கியத்தரப்பாக ஆக்குவதே இனியுள்ள சவாலாகும். அதற்கு இணையத்தையும் பயன்படுத்துகிறோம்.

தீராநதி:- வெகுஜனப் பத்திரிகைகளில் தீவிர எழுத்தாளர்கள் எழுத முடிவதற்குக் காரணம், தீவிர எழுத்தாளர்களின் தரம் குறைந்துள்ளதுதான் என்றும் ஒரு விமரிசனம் வைக்கப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஜெயமோகன்:- இப்படிச் சொல்பவர்களின் தரம் பற்றித்தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இவர்களுக்குத் தமிழிலக்கிய வரலாறு தெரியுமா? தமிழின் முக்கியப்படைப்பாளிகளில் எழுபது எண்பதுகளில் எழுதிய சிலர் மட்டுமே, சிற்றிதழ்களில் மட்டும் எழுதியவர்கள். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் காலத்தில் சிற்றிதழ் என்ற கருத்தே இல்லை. அவர்கள் எழுதிய இதழ்கள் ”மணிக்கொடி”. ”கலைமகள்” போன்ற பெரிய இடைநிலை இதழ்களே. லா.ச.ராமாமிர்தம், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன். கு.அழகிரிசாமி. அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகளின் சில கதைகள் மட்டுமே சிற்றிதழ்களில் வந்தவை. தமிழின் முதல் சிற்றிதழ் ”எழுத்து”தான். எழுபதுகளில்தான் சிற்றிதழ் ஓர் இயக்கமாக ஆகியது. பெரிய இதழ்களைப் புறக்கணிக்கும் நோக்கு வலுப்பெற்றது. அதன் முக்கிய கோட்பாட்டாளர் சுந்தர ராமசாமிதான். அவரும் எழுபதுகளில்தான் சிற்றிதழ்களுக்கு வந்தார். அதற்கு முன் ”சரஸ்வதி”, ”கல்கி” போன்ற இதழ்களிலேயே எழுதினார். தொண்ணூறுகளில் சுந்தர ராமசாமியும் பேரிதழ்களுக்குச் சென்றுவிட்டார்.

சிற்றிதழ் இயக்கம் தமிழில் நவீனத்துவத்தை உருவாக்கிய ஒரு கலாச்சார நிகழ்வு. தன் இலக்கை எய்தியதும் அது நின்றுவிட்டது. இன்றும் ஒரு புதிய கோட்பாட்டை படைப்பியக்கத்தைக் கொண்டுவர சிற்றிதழ்களையே தொடங்கவேண்டும். ”சொல்புதிது” அப்படிப்பட்ட இதழ்தான். எப்போதும் அறிவியக்கத்தின் ஒருபகுதியாக சிற்றிதழ் இயக்கம் இருக்கும். ஏற்கெனவே சொன்னதுபோல, இன்றும் எந்தத் தீவிர எழுத்தாளரும் பெரிய இதழ்களில் அவற்றின் தேவைக்கு ஏற்பத் தங்கள் படைப்புகளை எழுதவில்லை. அவர்களின் ஆக்கங்கள் இடைநிலை இதழ்களிலோ, நூல்களாகவோதான் வருகின்றன.

தீராநதி:- உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்:- இல்லை. மதம் வாழ்க்கை சார்ந்த கவலைகளும், ஆன்மீகமான குழப்பங்களும் கொண்டவர்களுக்கு, திட்டவட்டமான விடைகள் மூலம் ஆறுதலும் வாழ்க்கைநெறிகளும் அளிக்கும் ஓர் அமைப்பு. நம்பிக்கை, சடங்குகள், முழுமுற்றான சில கோட்பாடுகள் ஆகியவை கலந்தது மதம். அது சிந்திப்பவர்களுக்கு நிறைவு தராது. உண்மையான ஆன்மீகத்தேடல் கொண்டவன், அத்தேடல் தொடங்கிய கணமே, மதத்தைவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவான். என் பதினைந்து வயது முதலே நான் மதம், கடவுள், சடங்குகள் அனைத்திலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டேன். எனக்கிருப்பது ஆன்மீகத்தேடல், ஆன்மீக நம்பிக்கை அல்ல. நான் யாரையும் எதையும் வழிபடவில்லை. நித்ய சைதன்ய யதியைக் கூட ! நான் உரையாடுகிறேன் உள்வாங்க முயல்கிறேன்.

ஆனாலும் மதத்துடன், சிந்திப்பவனுக்கு ஓர் உறவு இருந்தபடியேதான் இருக்கும். ஏனெனில் மதம், ஆன்மீகமான தேடல் கொண்டவர்களை நெருக்கமாகப் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் அடையும் தரிசனங்களை அது தத்துவ விடைகளாக மாற்றித் தன்னுடைய அமைப்புக்குள் இழுத்தபடியே இருக்கும். சில நாட்களுக்கு முன் யோகி ராம் சுரத் குமார் ஆசிரமம் சென்றிருந்தேன். அவர் இருக்கையில் அவரைச் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறேன். அவர் தன் போக்கில் தேடி தான் தேர்ந்த பாதையில் தனித்துச்சென்றவர். பிச்சைக்காரன் என தன்னைச் சொல்லிக் கொண்டவர். சுருக்கமான உரையாடலே அவரது வழி; உபதேசம் அல்ல. வாழ்நாள் முழுக்க மதத்துக்கு வெளியேதான் வாழ்ந்தார். கோயில் அருகே வாழ்ந்தும் கோயிலுக்குள் சென்றவரல்ல. இன்று அவரை இந்துச் சிலையாக ஆக்கிவிட்டார்கள். கோயில்கட்டி, சிவலிங்கம் நிறுவி, பூசை செய்து பிரசாதம் தருகிறார்கள். இப்படித்தான் எண்ணற்ற ஞானிகள் மதத்துக்குள் இருக்கிறார்கள். மதம், மெய்ஞானத்தை உறையவைத்து சிலையாக்கி வைத்திருக்கிறது. உண்மையான தேடல்கொண்டவன் அதை மதத்துக்குள் சென்று மீட்டு, தன் அகத்தில் உயிர் கொடுத்து உள்வாங்கிக் கொள்ளவேண்டியுள்ளது. ரமணரை, நாராயணகுருவை, ராமகிருஷ்ண பரமஹம்சரை, சங்கரரை, ராமானுஜரை, சித்தர்களை, நாகார்ஜுனரை, தர்ம கீர்த்தியை, வாத்ஸ்யாயனரை, கபிலரை….. அப்படித்தான் அவன் தனக்கு முன்னால் சென்றவர்களை அறிய முடிகிறது.

இரண்டாவதாக மதத்துக்குள்தான் நம் மரபின் ஞானமும் கலைகளும் சேமிக்கப்பட்டுள்ளன. அவை படிமங்களாக, இலக்கியங்களாக உள்ளன. அவற்றை சிந்திக்கும் பழக்கமுள்ள ஒருவன் புறக்கணித்துவிட இயலாது. ஆண்டாளின் மகத்தான கவிதை அவனுக்குப் பெரும் புதையல். ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அவனுக்கு முக்கியமான இடம். அங்கே சென்று பெண்ணுக்குக் கல்யாணமாகவில்லை என்று வேண்டிக்கொள்பவர்களுக்கும் அவனுக்கும் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டைத் தமிழ்நாட்டில் எளிய மனிதர்களுக்கு சொல்லிப் புரியவைத்துவிடமுடியும். அவர்கள் அதை ஏற்கெனவே அறிவார்கள். பொத்தாம் பொதுவாக யோசிக்கும் அறிவுஜீவிகள் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுகிறார்கள். பாமரர், மத நம்பிக்கையை ஆன்மீகம் என்கிறார்கள். நம் அறிவுஜீவிகள் ஆன்மீகத்தை மதநம்பிக்கை என்கிறார்கள். இவர்கள் வேறுவகைப் பாமரர்கள்.

தீராநதி:- நீங்கள் ஏற்றுக் கொள்ளும் தரப்பு என்ன?

ஜெயமோகன்:- ஏதுமில்லை. ஏற்றுக் கொண்டால் அங்கே நின்றுவிடுகிறேனே. எனக்கு வழிகாட்டிப் பலகைகளும் ஆய்வுக்கருவிகளுமே உள்ளன. நித்யா வழியாக எனக்கு அத்வைதம் அறிமுகமாயிற்று.நாராயணகுருவின் அத்வைதம். அது சங்கர அத்வைதத்தில் இருந்து பலவழிகளில் வேறுபட்டது. ஒரு வளர்ச்சி நிலை. அது புறவுலகை முற்றாக நிராகரிப்பது அல்ல. அத்வைதம் தத்துவ அடிப்படையில் பிற்கால பௌத்தத்தின் நீட்சி. அவ்வாறு பௌத்த ஞானமரபில் ஆர்வம் ஏற்பட்டது. இப்போது நமக்கு கிடைக்கும் பிரபஞ்ச ஞானத்தின் ஆகச்சிறந்த தளங்கள் இங்குதான் உள்ளன என்றுதான் எண்ணுகிறேன்.

தீராநதி:- உங்கள் எழுத்தில் அவற்றை வலியுறுத்துகிறீர்களா?

ஜெயமோகன்:- வலியுறுத்த வேண்டுமென்றால் நான் அவற்றில் தெளிவுடன் இருக்க வேண்டும். தெளிவை அடைந்தால் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன். என் தேடலையும் தத்தளிப்புகளையுமே முன்வைக்கிறேன். அவற்றையே உலகப் பேரிலக்கியங்கள்கூட சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியத்தின் பணி அதுதான். தெளிவு, அந்தக் கொந்தளிப்புள் சாரமாகத் திரண்டு வருவது. ஆனால் அது அந்த ஆசிரியனால் உருவாக்கப்படுவது அல்ல. சமானமான மனம் கொண்ட வாசகன் ஒருவன், தன் கற்பனையை மத்தாக்கிக் கடைந்து அதை அடைகிறான். நமக்கு தஸ்தயேவ்ஸ்கி நாவல்களில் ஞானத்தின் ஒளி கிடைக்கிறது. அவர் வாழ்நாள் முழுக்க இருளின் கொந்தளிப்புடன் அலைந்தார். தல்ஸ்தோய் எப்போது ஞானத்தைத் தொட்டாரோ அதன் பின் எழுதவில்லை. குட்டிக்கதைகள்தான் எழுதினார்; எழுதியவற்றை நிராகரித்தார். தேடலே இலக்கியமாகிறது. கண்டடைதல் மௌனத்தையே உருவாக்கும்.

நன்றி: தீராநதி 2006

[தீராநதி இதழில் தளவாய்சுந்தரம் எடுத்த பேட்டி. 2006ல் வெளிவந்தது. இப்போது தொகுப்புகள் என்ற தளத்தில் மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. இலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தளிக்கும் இணையப்பக்கம் இது]


ஜெயமோகன் நேர்காணல்

தென்பாண்டியன்

நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத எழுத்தாளார் ஜெயமோகன். பிறரது படைப்புகளை விமர்சிப்பதிலும் விமர்சனங்களை எதிர்கொள்வதிலும் துணிவானவர். தமிழில் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் இவர், ‘நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’ படங்களைத் தொடர்ந்து ‘சிந்து சமவெளி’ படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார். கடந்த மே மாதம் ’விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு கோவை வந்திருந்த அவர் தினமலர் நாளிதழுக்காக அளித்த நேர்கணாலின் விரிவான வடிவம்…

தென்பாண்டியன்: நவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி….

ஜெயமோகன்: நான் சினிமாவுக்குள் போய் என்னைச் சினிமா ஆர்டிஸ்டா எக்ஸ்பிரஸ் பண்ணிக்க நான் விரும்வில்லை. சினிமா வழியாக தமிழ்ச் சமூகத்திற்கு சொல்லகூடிய எதுவும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சினிமா என்னுடைய மீடியா கிடையாது. எழுத்துதான் என் மீடியா. அப்புறம் எதுக்கு நீங்க சினிமாக்கு போனீங்கன்னு கேக்கலாம். நான் ஏற்கனேவேச் சொல்லிய பதில்தான் இது. எனக்கு வருஷத்துக்கு 5 அல்லது 6 லட்சம் ராயல்டி வந்திருச்சி என்றால் நான் சினிமாவுக்கு போக வேண்டிய அவசியமே இருக்காது.

எழுத்தாளான் என்பவன் எழுத்தை நம்பித்தான் வாழனும். ஆனால் தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளனும் எழுத்தை நம்பி வாழமுடியாது என்பதுதான் உண்மை. எழுத்தாளன் 8 மணி நேரம் கல் உடைக்கும் வேலையைச் செய்து விட்டோ அல்லது ஆபிஸில் பைல் பார்க்கும் வேலையைச் செய்துவிட்டோ எழுதுவது என்பது சிரமமானது. எல்லா எழுத்தாளனும் மொனோடொனஸ் ஆன லெஸ்கிரியேடிவ்வான வாழ்க்கையில இருந்து தப்பிக்கத்தான் முயற்சி செய்துட்டு இருக்கான். நான் கண்டுபிடிச்ச வழி சினிமா.

நான் ஒரு அரசாங்க ஊழியன். என் வாழ்க்கையில் பெரும்பான்மையான நேரத்தைச் சொற்பமான சம்பளத்திற்காகச் செலவிட்டு இருக்கிறேன். ஆனால் ஒரு நாளைக்கு அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை நான் சினிமாவில்ச் செலவிட்டால் இதை விட பத்து மடங்கு வருமானத்தை என்னால் ஈட்டமுடிகிறது. நேரத்தை மிச்சம் செய்து கொடுக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கிறது. பயணத்திற்கான சுதந்திரத்தைக் கொடுக்கிறது. நான் இலக்கியத்தை கைவிட்டு சினிமாக்கு போகவில்லை. அரசாங்க வேலைக்கு பதிலாக சினிமாக்கு போயிருக்கேன்.

தென்பாண்டியன்: எழுத்தாளர்களுக்கு வருமானம் முக்கியம் என்று சொல்கிறீர்களா?

ஜெயமோகன்: கண்டிப்பாக வருமானம் முக்கியம்தான். உலகத்தில் எந்த ஒரு முன்னேறிய நாட்டிலும் எழுத்தாளன் வேறு வேலை செய்து கொண்டு எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு எழுத்தாளன் காலையில் எழுந்து அவன் எழுத்தைப்பற்றி மட்டுமே சிந்தித்து வாழ கூடிய வாழ்க்கையின் உயரத்தை வேறு வேலை செய்து கொண்டு எழுதுகிற எழுத்தாளன் அடைய முடியாது. ஒரு மேலை நாட்டு எழுத்தாளனுக்கும் இந்திய நாட்டு எழுதாளனுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். ஒரு வங்காள, மலையாள மொழி எழுத்தாளனுக்கும் தமிழ் எழுத்தாளனுக்கும் உள்ள வித்யாசம் இதுதான்.

ஒரு எழுத்தாளன் எழுதுவதை மட்டுமே செய்யவேண்டும். இதுவே 200 வருடங்களுக்கு முன் என்றால் ஏதாவது ஒரு வள்ளல் அரசவையில் உட்கார்ந்து கொண்டு எழுதியிருப்பார்கள். அப்படித்தான் கம்பன் எழுத முடிந்தது. இந்த நவீன யுகத்தில் கம்பன் இருந்திருந்தால் காளி கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்திருப்பான். மீதி நேரத்தில் என்ன ராமாயணத்தை எழுதியிருக்க முடியும். அதனால்தான் சொல்கிறேன். தற்போது சடையப்ப வள்ளலின் இடத்தை திரைப்படம் வகிக்கிறது.

தென்பாண்டியன்: வருமானம்தான் முக்கியம் என்றால் அதிகம் விற்பனையாகக்கூடிய வெகுமக்கள் ரசனைக்குரியவைகளை எழுதலாமே? பெஸ்ட் செல்லர் ரைட்டிங் என்று சொல்கிறார்களே அதைப்போல…

ஜெயமோகன்: இன்றைக்கு பெஸ்ட் செல்லர் எழுதினால் கூடத் தமிழ்நாட்டில் பெரிதாகச் சம்பாதிக்க முடியாது. இரண்டாவது சினிமாவுக்காக எழுதும் போது அதிகபட்சம் ஒருவாரம் வேலை பார்த்தால் போதும். நான் ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்வது இல்லை. அதில் கிடைக்க கூடிய ஊதியம் என்பது 2 வருட அலுவலகப்பணியில் கிடைக்க கூடிய ஊதியம் ஆகும். இதையே நான் கமர்சியல் பிக்சன் எழுதினாலும் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கைதான் வாழ முடியும். இலக்கியத்தை கைவிட்டுவிட்டு முழுநேரமாக அதை எழுதிக்கொண்டிருக்கவேண்டும் அது பைத்தியகாரத்தனமாக் அல்லவா இருக்கிறது.

தென்பாண்டியன்: எழுத்தாளனுக்கு ஹைகிளாஸ் வாழ்க்கை அவசியம் என்று கூறுகிறீர்களா?

ஜெயமோகன்: ஒரு எழுத்தாளன் ஹைகிளாஸ் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆனால் வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் அவனை அரிக்கக்கூடாது. வறுமையில்லாமல் வாழவேண்டும் என்று சொல்கிறேன். அவன் சுதந்திரமாகப் பயணம் போக வேண்டும் நண்பர்களைப் பார்க்க வேண்டும். புத்தகங்கள் வாங்க வேண்டும். அவன் தனது ஸ்பிர்ச்சுவலான மனநிலையைத் தக்கவைக்க வேண்டும். அதோட முக்கியமா தேவைப்படும் போது அவன் சும்மா இருக்க வேண்டும். எப்பவுமே பிசியான ரைட்டர் என்று ஒருத்தரும் இருக்க முடியாது.

அதை வந்து, கண்டம்பிளேஷன் என்று சொல்லலாம். இதை எத்தனை பேர் புரிஞ்சுக்குவாங்கன்னு தெரியலை. ஐடிலா உட்கார்ந்து இருப்பது என்று கூடச் சொல்லலாம். அதற்கான சுதந்திரத்தை வாழ்க்கை கொடுக்கனும். இந்த சுதந்திரம் யாருக்கு மறுக்கப்படுகிறதோ அவன் காலப்போக்கில் எழுத்தாளனாக இல்லாமல் போய்விடுவான்.

தமிழில் பார்த்தீர்கள் என்றால் எல்லா எழுத்தாளார்களும் தீவிரமாக அறிமுகமாவார்கள். அறிமுகமான இடத்திலேயே நின்று விடுவார்கள். அதற்கு மேல் போகிறதே இல்லை. எத்தனை பேர் படிப்படியாகத் தன்னுடைய மொத்த திறமையை வெளிப்படுத்துமாறு எழுதியிருக்கிறார்கள் என்றால் மிகமிகக் குறைவான ஆட்கள்தான். 5 வருடம் கிரியேடிவாக எழுதியவர்கள் தமிழில் குறைவு. தமிழில் தன்னுடைய முழு பொடன்சியலோடு எழுதிய எழுத்தாளன் என்று சொன்னால் அது ஜெயகாந்தன்தான். அதற்குக் காரணம் அவருக்கு அரசியலும் சினிமாவும் வாழ்க்கைக்கு பின்புலமாக அமைந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக ஜெயகாந்தனுக்கு சினிமா அளித்ததை இலக்கியம் அளிக்கவில்லை. சினிமாதான் அவருக்கான வாழ்க்கை வசதிகளை சுதந்திரத்தை உருவாக்கிக் கொடுத்தது. அந்த அளவில்தான் நானும் சினிமாவைப் பார்க்கிறேன்.

தென்பாண்டியன்: இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்கு வசனம் மட்டும்தான் எழுதினீர்களா கதை உங்களுடையது இல்லையா? உங்களோட சிக்கலான கதைகளாஇ சினிமாவா ஆக்க முடியுமா?

ஜெயமோகன்: என்னுடைய படைப்புகள் எல்லாமும் சிக்கலானவை கிடையாது. விஷ்ணுபுரம் மாதிரி ஆன்மீகத் தேடல் உள்ள ஒரு கதைக்கருவை தேர்வு செய்யும் போது அது அதற்குரிய சிக்கலோடுதான் வெளிப்படும். அதை எளிமைப்டுத்த முடியாது. அதே போல் சாதாரண ஒரு ஒழுக்கப்பிரச்சனை சார்ந்து எழுதப்பட்டிருக்கும் கன்னியகுமரி மாதிரியான நாவல் எளிமையாக இருக்கும்.

எந்த ஒரு படைப்பையும் படிக்கும் முன் மானசீகமான ஒரு தயார் நிலை வேண்டும். அந்த ஆரம்பகட்ட பயிற்சியடைந்தவர்கள்தான் படிக்க முடியும். அது எந்த ஒரு கலைக்கும் பொருந்தும். நவீன ஓவியமாக இருக்கலாம். நவீன இசையாக இருக்கலாம். எந்த அளவிற்கு அதில் நமக்கு பயிற்சியிருக்கிறது என்பதைப் பொருத்துதான் அது புரியும். நான் எந்த பயிற்சியும் எடுக்கமாட்டேன், என் வீட்டு சோபாவில் உட்கார்ந்து என் வேலையைத்தான் பார்ப்பேன் என்றால் நீங்கள் டி.வி. சீரியல் மட்டும்தான் பார்க்க முடியும்.

பாமர வாசகர்கள், சாதரண வாசகர்கள் என்னுடைய எழுத்துப் புரியவில்லை என்றால் என் படைப்புகளைப் படிக்க வேண்டாம். நான் அவர்களுக்காக எழுதவில்லை. ஒரு தரமான படைப்புதான் வாழ்க்கைகுத் தேவை, அதற்காக என் நேரத்தையும் பொருளையும் கொடுக்கத்தயார், உழைக்கத் தயார் னு சொல்ற வாசகர்கள்தான் எனக்குத்தேவை. என்னுடைய படைப்பை வாசிக்கும் போது கற்பனையையும் ரசனையையும் அதற்கேற்ப விரித்துக் கொள்ளும் வாசகர்களுக்காகத்தான் என் படைப்பு எழுதப்படுகிறது.

ஏழாவது உலகம் ஒரு நேரடியான நாவல். அது விளிம்பு நிலை மக்களைப்பற்றியும் அதற்கு கீழ் உள்ளவர்களைப் பற்றியும் வலுவான சித்தரிப்பு. ஆனால் அது ஒரு இலக்கிய படைப்பு. நல்ல இலக்கியப்படைப்பு என்பது பல திரைப்படங்களுக்குச் சமம். ஏழாவது உலகம் நாவலில் பல மனிதர்களின் கதை இருக்கு. பல கோணங்கள் இருக்கு. பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கையும் இருக்கு. பிச்சை எடுப்பவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கையும் இருக்கு. பிச்சை எடுத்தாலும் அதற்கப்பால் ஸ்ப்ரிச்சுவல் ஹைட்டில் ஒரு வாழ்கை இருக்கு – மாங்காண்டிச்சாமி.

இது எல்லாவற்றையும் சினிமாவில் கொண்டு வருவது என்பது சர்வதேச அளவில் எடுக்கக் கூடிய கிளாசிக்கான ஒரு சினிமாவுக்குதான் சாத்தியம். ஹாலிவுட்டில் இருந்தோ, ஐரோப்பாவில் இருந்தோ ஒரு மேஜர் பிலிம் மேக்கர் வந்து ஸ்கிரிப்ட் எழுதி இந்தப்படத்தை எடுக்க முடியும். தமிழ் சினிமாவின் வணிக வட்டத்திற்குள் அதைப் படமாக எடுக்க முடியும் என்றுத் தோன்றவில்லை. என்ன இருந்தாலும் தமிழ் சினிமான்னா அது ஓடியாகவேண்டும் கோடிக்கணக்கான மக்களுக்கு அது புரிந்தாகவேண்டும். நான் இலக்கியத்தில் சொல்வது மாதிரி தயாராக உள்ளவர்கள் மட்டும் வாங்க மற்றவர்கள் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆகவே ஏழாவது உலகம் நாவலை சினிமாவாக ஆக்க முடியுமா என்றால் முடியாது. ஏழாம் உலகம் சினிமாக்குத் தேர்வு செய்யப்படவும் இல்லை. நான் கடவுள் படம் பாலாவோட கதைதான். பாலாவின் கதைக்கு நான் டிரீட்மெண்ட் எழுதிக்கொடுத்தேன். நான் வசனம் எழுதும் போது கதைக்கு ஏற்றபடி சில கதாபாத்திரங்களை என்னுடைய நாவலில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டேன். ஆகவே நான் கடவுள் ஏழாவது உலகம் நாவலின் கதையல்ல. அது பாலாவின் கதை.

தென்பாண்டியன்: சினிமா என்பது கேளிக்கையை அடிப்படையாக கொண்டு இயங்கும் துறை அதற்கென்று ஒரு பார்மாலிட்டி, செண்டிமெண்ட் எல்லாம் உண்டு. ஒரு நவீன எழுத்தாளன் இதற்குள் இயங்குவது சிரமமாக இல்லையா?

ஜெயமோகன்: நான் என்றைக்குமே கேளிக்கையான படைப்புக்கு எதிரானவன் கிடையாது. நான் தமிழ் இலக்கியத்திற்குள் எழுத வரும் போதுக் கேளிக்கை சார்ந்த இலக்கியம் இழிவானது என்று எல்லாவற்றையும் டிஸ்மிஸ் செய்யக்கூடிய மனநிலை இங்க பெரும்பாலவர்களுக்கு இருந்தது. நான் ஆசானாக நினைக்க கூடிய சுந்தரராமசாமியும் அந்த மனநிலைதான் கொண்டிருந்தார். ஆனால் அவர் இருந்த போதே 1991ல் நான் எழுதிய நாவல் என்ற புத்தகத்தில் கேளிக்கைச் சார்ந்த கலையும் ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதது என்றுதான் எழுதியிருக்கிறேன்.

அதே நேரத்தில் தீவிர இலக்கியத்தையும் இதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நல்ல கேளிக்கை எழுத்துங்கிறது உங்களை உயர்வான மனநிலைக்கு கொண்டுச் செல்லும். ஒரு இளைபாறலையும் மகிழ்ச்சியையும் சமூகம் சார்ந்த பார்வையையும் குடுக்கும். ஆனால் இலக்கியம் என்பதோ தீவிரக் கலை என்பதோ ஒரு ஆன்மீகமான நகர்வைக் குடுக்கும். . ஒட்டுமொத்தமான வாழ்க்கையைப் பற்றிய பார்வையைக் கொடுக்கும். தத்துவம் சார்ந்த மன எழுச்சியைக் கொடுக்கும். இப்படி பிரித்து உணரும் தன்மை இருக்க வேண்டுமே தவிர; கேளிக்கைச் சார்ந்த கலைகளை நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே திரைப்படத்தையோ அது சார்ந்த ஊடகங்களையோ நான் நிராகரிப்பவன் அல்ல.

இப்ப நான் திரைப்படத்துறைக்குள் நுழையும் போதுத் தமிழ் சினிமாவில் சூழல் மாறியிருந்ததால்தான் எனக்கு ஒரு இடம் கிடைத்தது. ஏனெனில் இயக்குநர் பாலா என்னுடைய வாசகராக அறிமுகமாகி அதன் பிறகுதான் அவருடன் பணியாற்றினேன். வசந்தபாலன் என்னுடைய வாசகர், மிகச்சிறந்த நண்பர், ஏற்கனவே எனக்குத் தெரிந்தவர். அதன் பிறகுதான் அவர் அழைப்பின் பேரில் அங்காடித்தெரு படத்தில் பணியாற்றினேன். இன்னும் பல இயக்குநர்கள் என் வாசகர்களாகவும் நண்பர்களாவும் இருக்கிறார்கள். இந்த சூழல் 20 வருடங்களுக்கு முன்பு இல்லை. அப்போது என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு சினிமாவில் இடம் இல்லை.

ஆனால். தெலுங்கு, மலையாள சினிமாவில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் இடம் தமிழில் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். இன்றைக்கும் கதை, திரைக்கதை எழுதக்கூடிய இடத்தில் எழுத்தாளர்கள் வைக்கப்படவில்லை. திரைப்படத்தை எடுக்கக்கூடிய இயக்குநர்கள் அந்தக் கதையை செப்பனிடுதல் பிண்ணனி அமைப்பது. சில உணர்ச்சிகரமான சந்தர்பங்களை உருவாக்குவது போன்றவற்றில் ஒரு எழுத்தாளனின் பங்களிப்பு தேவை என்ற அளவில்தான் தமிழ் சினிமாவில் எழுத்தாளனின் பங்களிப்ப்பு இருக்கிறது.

தென்பாண்டியன்: வணிக சினிமா, நடுவாந்திர சினிமா, மாற்றுச்சினிமா இதில் தமிழில் எந்த வகை வெற்றியடைந்திருக்கிறது?

ஜெயமோகன்: இந்த வார்த்தைகளை ரொம்பக் கவனமாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மலையாளத்தை எடுத்துக் கொண்டால் இந்த மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. ஜோஷி, ஐ.வி.சசி போன்ற இயக்குநர்கள் எடுப்பது வணிக சினிமா. அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்கள் எடுப்பது மாற்றுச் சினிமா, பரதன், பத்மராஜன், சிபி மலயல் போன்றவர்கள் எடுப்பது நடுவாந்திர சினிமா.

தமிழில் மாற்றுச் சினிமா என்பதைப் பொருத்தவரையில் சில முயற்சிகள் நடைபெற்று இருக்கிறது. கே.எஸ். சேதுமாதவன் உச்சிவெயில் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். பாலுமகேந்திரா வீடு, சந்தியா ராகம் போன்ற படங்களை எடுத்திருக்கிறார். பாரதிராஜா அந்திமந்தாரைகள் மூலம் முயற்சி செய்தார். தமிழில் முதல் மாற்றுச் சினிமா என நான் நினைக்கக்கூடிய படம் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன். ஆனால் இது ஒரு வலுவான இயக்கமாகவோ வெற்றிகரமான இயக்கமாகவோ தமிழில் இல்லை. மலையாளத்தில் கன்னடத்தில், ஹிந்தியில், வங்காளத்தில் இருப்பது போல் ஒரு ஈவண்டாக இங்கு இல்லை. அதற்கான பைனான்சியல் சப்போர்ட் தமிழில் இல்லை. இருந்தாலும் விடாப்பிடியாக சின்ன முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வணிக சினிமா தமிழில் மிகவும் பிரபலமாக இருப்பது தெர்ந்த விஷயம். இதற்கும் மாற்று சினிமாவுக்கு இடையில் நடுவாந்திர சினிமா என்ற முயற்சி என்றைக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. 70 களிலிருந்து பார்த்தால் முள்ளும் மலரும், உதிர்ப்பூக்கள், புதிய வார்ப்புகள் எனப் பல படங்களைச் சொல்லலாம். இன்றைக்கு சொல்லவேண்டும் என்றால் பாலாஜி சக்திவேலின் காதல், கல்லூரி, வசந்தபாலனின் வெயில், அங்காடித்தெரு போன்றவைகள் உள்ளன.

நடுவாந்திரப்படங்களுக்கு தமிழில் இப்போது வரவேற்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கமர்சியல் படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆனால் நடுவாந்திரப்படங்கள் தோல்வி பெற்றதில்லை. இது நடுவாந்திரப்படங்களின் பொற்காலம். எனவே இம்மாதிரி படங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். முழுமையான கமர்சியல் படத்தில் என்னால் பணியாற்ற முடியாது. நல்ல நடுவாந்திரப்படம் எடுக்க கூடிய ஒரு இயக்குநர் ஒரு எழுத்தாளரைக் கூப்பிடுகிறார். அப்படித்தான் நான் கடவுள், அங்காடித் தெரு போன்ற படங்களில் நான் பணியாற்றினேன்.

தென்பாண்டியன்: 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் திரைப்படங்களுக்கு கலைஞர்.கருணாநிதி கதைவசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு வசனகர்தா என்ற முறையில் அவரது சினிமா பங்களிப்புகள் பற்றி சொல்லுங்கள்….

ஜெயமோகன்: அவருடைய காலகட்டத்தில் அவர் சிறப்பாக வசனங்களை எழுதியிருக்கிறார். சினிமாவின் முகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு காலகட்டத்தில் ஸ்டூடியோக்களில் படங்கள் எடுக்கபட்ட போது எல்லா விஷ்யங்களையும் உணர்சிகரமாக வசனங்கள் வழியாக சொல்ல வேண்டிய நிலை இருந்தது. அப்போது கருணாநிதி அவர்களின் வசனங்கள் மிக முக்கியமானதாக இருந்தது. அது தமிழின் நாடகப்பாரம்பரியத்திலிருந்து வந்த வசனம். இன்றைக்குச் சினிமாவில் வசனம் முக்கியப்பங்காக இல்லை. எங்களை வசனகர்தா என்று சொன்னால் கூட வசனங்கள் எழுதுபவர்கள் இல்லை. திரைபடத்திற்கு டிரீட்மெண்ட்தான் எழுதுகிறோம். வசனம் வழியாக இப்போது எதையும் சொல்லவேண்டிய தேவையும் இல்லை. அதனால் இன்றைக்கு யார் வேண்டுமானலும் வசனம் எழுதலாம். வசனம் எழுதுபவரின் பணி என்பது இயக்குநர் எழுதிய கதைக்கு உதவியாக கதையை செப்பம் செய்வது மட்டும்தான். அதனால் என்னை ஒரு வலுவான வசனகர்த்தாவாக சொல்லிக்கொள்வதில்லை. வலுவான வசனங்களை எழுதக்கூடியவனாகவும் என்னை நான் நினைக்கவில்லை. ஆனால் அன்றைக்கு அவரைப்போன்றவர்கள் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார்கள்.

தென்பாண்டியன்: சில எழுத்தாளர்கள் தமிழில் இன்னும் நல்ல நாவல்கள் எழுதப்படவில்லை என்றும் உலகத்தரமான படைப்புகள் வரவில்லை என்றும் கூறுகிறார்களே. இப்படியெல்லாம் பேசுவது பற்றி…

ஜெயமோகன்: இப்படிச் சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சலில்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழில் உலக இலக்கியங்களை படித்தவர்கள் மிகக் குறைவு. அப்படிப்படித்தவர்கள் யாரும் இப்படி சொல்லமாட்டார்கள். போகிற போக்கில் இந்த மாதிரி கருத்து சொல்பவர்களுக்கு படிக்கிற பழக்கமே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

கடந்த 25 ஆண்டுகளாக உலக இலக்கியங்களின் எல்லா போக்குகளையும் கூர்ந்து வாசித்து வருபவன் நான். மேலும் என்னை போல் தொடர்ந்து வாசிக்கக்கூடியவ்ர்களோடு தொடர்ச்சியான உரையாடல்களில் இருக்க கூடியவன். அந்தத் தகுதியில் உறுதியாக ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும். தமிழ் இலக்கியத்தின் அளவு சிறியது. ஆனால் தரம் சர்வதேச அளவில் பேசக்கூடிய எந்த ஒரு இலக்கிய மரபுக்கும் நிகரானது. போகிற போக்கில் எது வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அது உண்மையில்லை.

நாம் பொதுவாக ஜெர்மன் லிட்ரேச்சர், பிரெஞ் லிட்ரேச்சர், லத்தீன் அமெரிக்க லிட்ரேச்சர் போன்றவைகளில் எது பெஸ்ட் என்று படுகிறதோ அதைத்தான் படிக்கின்றோம். அங்கு ஒரு வருடத்தில் ஆயிரம் புத்தகங்கள் வெளி வருகிறது என்றால் அதில் 3 புத்தகம்தான் நம் கவனத்திற்கு வரும். அந்த மூன்றை வைத்துக் கொண்டு இங்கு உள்ளதைக் கணக்கு போடக்கூடாது. இங்குள்ள பெஸ்ட் புத்தகங்கள் அங்குள்ள புத்தகங்களை விட மேலாத்தான் இருக்கு.

ஆனால் என்ன வித்யாசம் என்றால் ஸ்பானிஸ் மொழியை எடுத்துக்கொண்டால் படிக்கக்கூடிய தகுதி கொண்ட புத்தகம் 300 அல்லது 400 வரும். நம் மொழியில் 5 அல்லது 10 தான் தேரும். காரணம் நம் வாசிப்பின் அளவு சிறியது. ஒரு புத்தகம் 1000 பிரதிதான் விற்கும். முன்னர் சொன்னது மாதிரி ஒரு எழுத்தாளான் எழுத்தை நம்பி வாழ முடியாது. ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் வேலை செய்துவிட்டு இரண்டு மணிநேரம் எழுதக்கூடிய ஒரு எழுத்தாளன் 5 அல்லது 6 வருடங்களாகிறது ஒரு புத்தகம் எழுத. அவ்வளாவுதான் எழுத முடியும் ஆனால் மேலை நாட்டுப் படைப்பாளிகள் நிறைய எழுதுவார்கள் நிறைய புத்தகங்கள் வரும். அவர்களுக்கு உதவியாக எடிட்டர்கள் இருப்பார்கள். ஆராய்ச்சி செய்து கொடுக்க ஆட்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் எழுதக்கூடிய வேகமும் திவீரமும் இங்குள்ளவர்களுக்கு வராது.

பிரான்சு மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் எறத்தாழ ஒன்றுதான். ஆனால் அங்குள்ள வாசிப்பின் அகலம் வரும் புத்தகங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். நம்மிடம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பிரதிகள் அச்சிடக்கூடிய படைப்புகள் கூட கிடையாது. எவ்வளவு பெரிய மாஸ்டர் பீஸாக இருந்தாலும் 1000 பிரதிகள்தான். அதுவும் விற்பனையாவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதிகபட்சம் இலக்கியம் வாசிக்க கூடியவர்கள் 5000 பேருக்கு மேல் கிடையாது. இந்தச் சின்ன உலகத்திற்குள் என்ன நடக்கிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர பிரான்ஸ், ஸ்பானிஷ் மாதிரி பிரம்மாண்டமான உலகத்தோடு ஒப்பிடும் அளவு நாம் வளரவில்லை. வளரவில்லை என்றால் நம்முடைய வாசிப்பு வளரவில்லை அது வளர்ந்திருந்தால் புத்தகங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் அதற்கேற்றார்போல் படைப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும்.

ஆனால் படைப்பின் ஆழம் என்பது வாசகனை சார்ந்தது அல்ல படைப்பாளியைச் சார்ந்தது அந்த வகையில் தமிழ்ப்படைப்புகள் யாருக்கும் குறைந்தது இல்லை. தமிழில் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, மெளனி, சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், ஜெயகாந்தன், லா.ச.ரா போன்ற நம் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகள் உலகத்தின் எந்த மொழிக்கதைகளுக்கும் குறைந்தவை அல்ல. நாவலகளில் நாம் பெரிதாக அட்டண்ட் பண்ணவில்லை காரணம் இங்கு பிரசுரச்சூழல் இல்லை. பதிப்பகத்தார் வந்து 100 பக்கங்களில் எழுதிக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். என்னிடமே கவிதா பதிப்பகம் விஷ்ணுபுரத்தை 200 பக்கமாக சுருக்கிக் கொடுங்கள் போடலாம் என்று சொன்னார்கள். தமிழ் நாவலுக்கான பதிப்புச் சூழல் இப்படித்தான் இருக்கு. 1997ல் விஷ்ணுபுரம் ஒரு சரியான திறப்பு எனச் சொல்லலாம். அது வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு தமிழில் பெரிய நாவல்களை துணிந்து அச்சிடும் பழக்கம் நம்மிடையே வந்தது.

இப்போது தமிழில் என் பெயர் சிவப்பு என்ற ஓரான் பாமுக்கின் நாவல் ஒன்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 1997 வந்த உலகப்புகழ் பெற்ற புத்தகம் அது. பாமுக் நோபல் பரிசு பெற்றவர் இலக்கியத்தில் அடிப்படை ரசனையோ தேர்ச்சியோ உள்ளவர்கள் விஷ்ணுபுரம், மை நேம் இஸ் ரெட் இரண்டு நாவல்களையும் ஒப்பிட்டு பார்த்தால் விஷ்ணுபுரம் மேலாகத்தான் இருக்கும். ஒரான் பாமுக் நாவல் உலக அளவில் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்ட நாவல். தமிழில் விஷ்ணுபுரத்தை 5000 பேர் படித்திருந்தால் அதிகம். நம்முடைய தரம் என்பதை அளவை வைத்துத் தீர்மானிக்கூடாது. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் நாவல்களும் எழுத்தாளர்களும் வர வேண்டுமெ என்றால் அந்த அளவிற்கு நாம் வாசிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடி பேராவது வாசிக்கும் பழக்கம் வேண்டும். ஒரு புத்தகம் வந்தால் 50000 பிரதிகள் அச்சிட வேண்டும் அந்த நிலை வந்தால் நாம் வளர்ந்திருப்பதாக சொல்லலாம்.

தென்பாண்டியன்: தமிழிக் கவிஞர்களில் குறிப்பிட்ட சில கவிஞர்களை மட்டுமே உதரணமாக தேவதேவன், கலாப்ரியா போன்றவர்களை மேஜர் பொயட்டாக முன்வைக்கிறீர்கள் இதற்கு என்ன காரணம்?

ஜெயமோகன்: தமிழில் நான் விமர்சகன் என்ற அளவில் கூர்ந்து கவனித்து எனக்கு முந்தைய தலைமுறைக் கவிஞர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பிரமிள், சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்றவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இலங்கைக் கவிஞர்கள் சு.வில்வரத்தினம், சேரன் போன்றவர்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன். உள்ளுணர்வின் தடத்தில் என்ற புத்தகமாக இவைகள் வந்துள்ளன.

இதில் பிரமிளை மெட்டா பிசிக்கல் பொயட் என்று சொல்லலாம். அதே மாதிரி எதார்த்தமாக அன்றாடப்பிரச்சனைகளைப் பற்றிக் கவிதை எழுதக்கூடியவர் கலாப்ரியா. இரு வேறு எல்லைகளிலே நிக்கிறாங்க. 1930 முதல் 60 வரை வடிவத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கியவர்களை புதுக்கவிஞர்கள் என்றார்கள். கலாப்ரியா என்ன மாற்றம் கொண்டு வந்தார் எனில் அதுவரைக்கும் ஒரு காட்சியை சொல்ல வேண்டும் என்றால் ஒரு குறியீட்டு அர்த்தம் இருந்தால்தான் சொல்ல முடியும். கலாப்ரியா நாம் அன்றாடம் சாதரணமாக பார்க்க கூடிய காட்சிகளை எந்தக் குறியீடும் இல்லாமல் சொன்னார். உதரணமாக

கொல் வைக்கும் வீடுகளில்
ஒரு குத்துச் சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்பதற்காக
தங்கை குழந்தைகளை
தூக்க முடியாமல்
தூக்கிச் செல்லும்
அக்கா குழந்தைகள்

புகைகூண்டு வழியே
வீட்டுக்குள் வந்துவிட்ட
பச்சோந்திக்கு
என்ன நிறம்
மாற்றிக்கொள்வதென்று
தெரியவில்லை

இந்தக் கவிதைகளில் எந்த குறியீட்டு அர்த்தமும் கிடையாது ஆனால் அதில் ஒரு வாழ்க்கையிருக்கிறது. ஒரு சின்ன காட்சி ஒரு வாழ்க்கையைச் சொல்றது.

பிரமிள் கவிதைகள் ஒரு அறிவார்ந்த தளாத்தில் இருந்தது. உணர்ச்சி நிலையில் பித்து நிலையில் இருக்கக்கூடிய கவிதைகளை அவர் எழுதினார். இப்படியாக தேவதேவன் தலை முறை வரைக்கும் பார்த்தோமானால் ஒவ்வொரு கவியும் வடிவத்தை தனக்கேற்றார்போல் மாற்றி இருக்கிறார்கள். அதன் பிறகும் முக்கியமானக் கவிஞர்கள் எனில் ரமேஷ் பிரேதன், யூ.மா.வாசுகி, மனுஷ்யபுத்திரன் இப்படி இன்னும் சிலரைக் குறிப்பிடலாம்.

அதன் பிறகு அடுத்த தலைமுறைக் கவிகள் வருகிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றுவடிவத்தில் பிரஷ்ஷா எழுதிகிறவர் என்றால் முகுந்த் நாகராஜனைச் சொல்லலாம். முழுக்க முழுக்கக் குழந்தைகளின் உலகத்திலிருந்து ஆழமாக உணர்ச்சிகளை உருவாக்க முடியும் என்று அவர் காட்டுகிறார். மற்றபடி நல்ல கவிதைகள் எழுதக் கூடிய கவிஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இரண்டு மூன்று நல்ல கவிதைகளைச் சொல்ல முடியும். ஸ்ரீநேசன், இளங்கோ கிருஷ்ணன் இசை இப்டி பல கவிஞர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களுமே கூட தங்களுக்கு எனத் தனியான மொழி ஒன்றைக் கொண்டிருக்கவில்லை என்றுதான் சொல்லுவேன். ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் கவிதைகளுக்குள் ஒரு சிறிய மாற்றத்தை வேரியேஷனைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு கவிதை வாசகன் என்ற முறையில் எனக்கிது போதவில்லை.

தென்பாண்டியன்: நவீன படைப்பிலக்கியவாதிகளில் செவ்வியல் சார்ந்த பதிவுகளை தங்கள் படைப்புகளில் அதிகம் வெளிப்படுத்துபவராகவும் மரபார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வமுடையவராகவும் நீங்கள் இருக்கறீர்கள். இதற்கான காரணம் என்ன?

ஜெயமோகன்: முக்கியமான விஷயம் என்பது நான் தமிழில் எழுத வந்த போது ஓங்கி நின்றது நவீனத்துவம். மாடர்னிசம் என்பது மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வது. தன்னுடைய விதிகளை தானே உருவாக்கிக் கொள்வது.என்னுடைய காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் சுந்தரராமசாமி இதைப் பற்றிச் சொல்லும் போது இதை மரபின் சுமை என்று குறிப்பிடுகிறார். புதுமை என்பது மரபின் சுமை இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். அந்தக் காலத்தில் எல்லோருடைய மனதிலும் இருந்தது இதுதான். அசோகமித்திரன் உட்பட பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருந்தார்கள்.

நான் வரும் போது நவீனத்துவத்தை முழுவதுமாக நிராகரிக்கிர மனநிலையோடுதான் வந்தேன். ஏனென்றால் ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையோ ஒரு சின்ன இனக்குழுவினுடைய வாழ்க்கையயோ ஒரு நகரத்தின் வாழ்கையையோ சொல்லக்ககூடியவனாக என்னை நான் நினைக்கவில்லை. ஒரு வரலாற்றைச் சொல்லக்கூடியவனாக, ஒரு ஆயிரம் வருட வரலாறைச் சொல்ல கூடியவனாக என்னை நினைத்தேன். ஏனெனில் என் பிரச்சனை எல்லாமே தத்துவார்த்தாமானப் பிரச்சனை. தத்துவார்த்தமானப் பிரச்சனைக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது எனத் தெரியாது. என்னுடைய வாழ்வு இன்று எப்படி இருக்கிறது என்பது எனக்கு முக்கியமில்லை. நேற்று, முந்தைய நாள் எப்படி இருந்தது என்பதுதான் முக்கியம். அப்போதுதான் தத்துவமாக யோசிக்க முடியும். அப்படி யோசிக்கும் போதுதான் வரலாறு உள்ளே வருகிறது. அதன் தொடர்ச்சியாக காலம் உள்ளே வருகிறது. இவைகள் வரும் போது வேறு வழியே இல்லாமல் செவ்வியலும் உள்ளே வருகிறது.

மேலும் ஒரு இலக்கியத்திற்கு தேவையான படிமங்கள் முழுக்க முழுக்க தங்களது சொந்த வாழ்க்கையில் இருந்து பயன்படுத்துவதுதான் நவீனத்துவர்களின் பழக்கம். சுந்தரராமசாமி, அசோகமித்ரன் எல்லோரும் அப்படித்தான் பயன் படுத்துவார்கள். அவர்களின் வாழ்வைச் சார்ந்து அந்தப் படிமங்கள் இருக்கும். ஆனால் எனக்கு நான் பேசக்கூடிய தத்துவார்த்தமான விஷயங்களுக்கு அது போதாது. எனக்கு இன்னும் காலத்தை மீறி நிற்கக்கூடிய படிமங்கள் தேவைப்படுகிறது. நெடுங்காலம் நிற்கக்கூடிய படிமங்கள் தேவைப்படுகிறது. ’என் கை தவறி எங்கே வைத்தேன் என் மூக்கு கண்ணாடியை’ என்றப் படிமம் எனக்குத் தேவையில்லை. ஆனால் சிவலிங்கம் என்ற படிமம் எனக்குத் தேவைப்படுகிறது. பத்தாயிரம் வருடங்களாக ஒரு உருவத்தைக் கடவுள் என நினைக்கிறான் எனில் அது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பது எனக்குத் தேவைப்படுகிறது. ஆகவே மரபிலிருந்து படிமங்கள் தேவைப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக நான் கிளாசிக்குகளுக்குள் போக வேண்டியிருக்கிறது.

எனவே என்னைப் போஸ்ட் மாடர்னிஸ்ட் எனச் சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் மாடர்னிசத்துக்கு பின்னால் வந்தவன் எனலாம். என்னுடைய எழுத்தை நவீனத்திற்கு பிந்தையது, ஆப்டர் போஸ்ட்மாடர்னிசம் எனலாம். மாடர்னிசம் முழுதையும் தாண்டி வந்தது எனச் சொல்லலாம். மாடர்னிசம் பாரம்பரியம் இல்லாதது. செவ்வியல் இல்லாதது. எனக்கு பாரம்பரியமும், செவ்வியலும் முக்கியம். ஆகவே என்னுடைய ஒரு கால் மதத்தில்தான் இருக்கிறது. மதத்தை எப்படி நுண்ணுணர்வோடு அணுகுவது, மதத்தின் படிமங்களை எப்படி அணுகுவது என்பதைத்தான் என் எழுத்தில் பயன்படுத்துகிறேன்.

இன்னொரு பக்கம் தமிழ்ச் செவ்வியல் மரபையும் வடமொழி செவ்வியல் மரபையும் ஒரே பார்வையில் பார்க்க கூடிய பார்வை எனக்கு இருக்கு. தமிழ் இலக்கியத்தில் ஆரம்பத்தில் என்னுடைய படைப்புகளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறேன். பிறகு விமர்சனம் எழுதும் போது அந்த அளவுகோளை எடுத்தாளுகிறேன். இன்று தேவதேவனையோ கலாப்பிரியாவையோ பார்க்கும் போது தொல்காப்பியர் முதலான மரபுகளில் வந்தவர்களாக அவர்களைப் பார்க்கிறேன். கபிலன் முதல் இன்று வரக்கூடிய கவிஞர்கள் வரை வைத்துப் பார்க்கிறேன். என் பழக்கம் அதுதான். இது இன்னும் தெளிவான அளவுகோளைக் கொடுக்கும் என நினைக்கிறேன். அதனால் மரபிலக்கியத்தை பெரும்பாலும் பயன் படுத்துகிறேன். என்னுடைய தலைமுறை எழுத்தாளர்களில் என்னளவு மரபு இலக்கியத்தைப் பொருட்படுத்தி பேசுபவகள் கிடையாது. இது என்னுடைய பார்வையை முழுமையாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.

தென்பாண்டியன்: கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி உங்கள் கருத்தென்ன?

ஜெயமோகன்: யார் அங்கீரித்தாலும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் தமிழ் செம்மொழிதான். தமிழைச் செம்மொழியாக நினைப்பது என்பது தமிழர்கள் மனநிலையில்தான் இருக்கிறது. இரண்டாவதாக நூல்கள் வழியாக உலக அறிஞர்கள் மத்தியில் தமிழ் வாழும் செம்மொழி என நிறுவும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இந்த இரண்டையுமே நாம் செய்யவில்லை. நமக்கு மொழி சார்ந்த உள்ளீடற்ற பீடு இருக்கிறதேத் தவிர செம்மொழி என்ற உண்மையான உணர்வு கிடையாது. அப்படி இருந்தால் இந்தளவிற்குத் தமிழைக் கைவிட்டுத் தமிழுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கும் மக்களாக இருந்திருக்க மாட்டோம்.

தமிழ்ச் செம்மொழி,ஆனால் தமிழைப்படிக்க மாட்டோம், தமிழ் இலக்கியங்களைப் படிக்க மாட்டோம், தமிழ் நவீன இலக்கியங்களைப் படிக்க மாட்டோம். எங்கும் தமிழில் பேச மாட்டோம் – இதுதான் நம் பழக்கமாக இருக்கிறது. தமிழ் செம்மொழியா இல்லையா என்பதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் தமிழ் மக்களாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும் .

இரண்டாவதாக தமிழை செம்மொழியை அங்கீகரிக்க வேண்டியவர்கள் உலக அளவில் இருக்கும் அறிஞர்கள். உலக அளவில் தமிழ் பயிற்றுவிக்க கூடிய பல பல்கலைக்கழகங்கள், பீடங்கள் இன்று மூடக்கூடிய நிலையில் உள்ளன. நான் பெர்க்லி பல்கலைக்கழகத்திற்குப் போன போது அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட்டை சந்தித்தேன் அங்கும் தமிழ்த்துறை மூடக்கூடிய நிலையில்தான் இருக்கிறது என்றார். மாணவர்கள் வருவதில்லை. நிதியுதவியில்லை. போதுமான ஆதரவு இல்லை. அங்குள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவியால்தான் அந்த துறை இயங்கிக்கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்திலும் மூடப்படும் என்ற நிலையில்தான் உள்ளது. அநேகமாக அவர்தான் கடைசிப்பேராசிரியாராக இருப்பார் போல் தோன்றுகிறது. ஆக இந்நிலையில்தான் தமிழ் உலக முழுதும் இருக்கிறது.

தமிழ் உலகின் செம்மொழிகளில் ஒன்றுதான், இம்மொழியை ஆராய வேண்டியது அவசியம், தமிழர்களின் உலகத்தைத் தெரிந்துகொளவதற்கும். உலகத்தின் பண்பாடுகளை மரபுகளை தெரிந்து கொள்வதற்கும் தமிழை ஆராய வேண்டியது அவசியம் என்ற எண்ணத்தை உலக அறிஞர்கள் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க தமிழில் பேரரறிஞர்கள் தோன்ற வேண்டும். இந்தப் பேரரறிஞர்கள் நூலகள் தொடர்ச்சியாக உலக அறிஞர்கள் மத்தியில் போக வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் அப்படி உலக அளவில் போன தமிழறிஞர் நூல்கள் எத்தனை. அப்படி போவதற்கு தகுதியான தமிழ் அறிஞர்கள் எத்தனை பேர் இங்கிருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு எப்படி இருக்கிறது என்றால் ரொம்ப வருத்தப்படக்கூடிய நிலையில்தான் உள்ள்து. கடந்த 30 அல்லது 40 வருடங்களாகத் தமிழாய்வுத் துறையில் என்ன நடக்கிறது என்றால் ஏற்கனவே வந்த ஆய்வுகளை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கும் நிலைதான் உள்ளது. தமிழாய்வுகளின் பொற்காலம் என்று சொன்னால், தொ.போ.மீ., மு.அருணாச்சலம் போன்றோரோடு முடிந்தது. அந்த நூல்களில் இருப்பதைக் கூட படிக்காமல், அதிலிருந்து அங்கும் இங்கும் பிரதியெடுத்து பி.ஹெச்.டி வாங்கும் நிலைதான் இன்று உள்ளது. நான் தொடர்ந்து பல்கலைக் கழக ஆய்வுகளைக் கவனித்து வரக்கூடியவன் என்ற முறையில் சொல்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழாய்வு என்பது அற்றுப் போய்விட்டது. தேடினல் உருப்படியாக ஒன்று இரண்டு கூட இல்லை.

ஏன், நமக்கு ஒரு தனி தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது. இத்தனை வருடத்தில் ஒரு தமிழ்க்கலைக் களஞ்சியத்தைக் கூட பதிப்பித்து முடிக்கவில்லை. வாழ்வியல் களஞ்சியம் என்று ஒரு தொகுப்பு போட்டார்கள் அதை இன்னும் முடிக்கவில்லை. ஒரு நல்ல கலைக் களஞ்சியம் தமிழில் இதுவரை இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்று போட்டார்கள் அது மறுபதிப்பு கூட வரவில்லை. அதை ரீ-பிரிண்ட்தான் போட்டிருக்கிறார்கள். ஆகவே தமிழறிஞர்கள் என்ற ஒரு வம்சமே அற்றுப் போய்விட்டது. இங்கு தமிழறிஞர்களே கிடையாது. அரசியல் காற்றுக்கு ஏற்றபடி பாய்விரித்த்து மேலே போகக்கூடிய புரபஸனலிஸ்டுகள், தொழில் லாபத்தை மட்டுமே விரும்பக்கூடிய பேராசிரியகள் நிரம்பியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழ் மொழி மேல் தமிழர்களுக்கு அக்கறையில்லை. உலகம் முழுதும் 10 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் 1 கோடி பேர்கள் கூடத் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பதில்லை. 5000 வாசகர்கள் கூட தமிழில் இல்லை எனும் போது தமிழ் செம்மொழியானால் என்ன ஆகாவிட்டால் என்ன? இவர்கள்தானே தமிழைச் செம்மொழியாக்க வேண்டும்.

தமிழறிஞர்கள் பெருகி தமிழின் வளத்தையும் பெருமையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டிய நேரத்தில் அதற்கான தகுதிகொண்ட இரண்டு மூன்று தமிழறிஞர்கள் கூட இல்லை என்று சொன்னால் பிறகு எப்படி அவர்கள் தமிழறிஞர்கள் ஆவார்கள். ஆக இப்போது எஞ்சியிருப்பது மத்திய அரசு இதற்காக தரக்கூடிய நிதியாதரங்களை பெறுவதற்கான முயற்சிமட்டுமே. மத்திய அரசு தமிழைச் செம்மொழிப் பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் தமிழுக்கு கூடுதலாக சில கோடி ரூபாய்கள் கிடைக்கும். இதில் இது ஒன்றுதான் லாபம்.

சரி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்த நிதிகளைக் கொண்டு தமிழ்வளர்ச்சிக்கு என்ன நடந்திருக்கிறது என படைப்பாளர்கள் கேட்டுக் கொண்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை என தெரிய வரும். இப்போது தமிழுக்கு உயர் தமிழ் ஆய்வு மையம் என்ற ஒன்று இருக்கிறது. ஒன்று மைசூரில் இன்னொன்று சென்னையிலிருக்கிறது. இத்தனை வருடங்களாக என்ன செய்தார்கள். இன்றைக்கும் புத்தக சந்தையில் போய் சங்க இலக்கியம் பிழை திருத்தப்பட்ட ஒரு பதிப்பை வாங்க வேண்டும் என்றால் அது தனியார் பதிப்பகம் வெளிடப்பட்ட நூலாகத்தான் இருக்கும் அதிகாரப்பூர்வமான ஒரு தொகுதி கிடையாது. அப்படி இருந்தால் கூட முழுக்க முழுக்க அது தவறாகத்தான் இருக்கும்.

கடந்த 50 வருடங்களில் மாஸ்டர் பீஸ் எனச் சொல்லக்கூடிய நூல்கள் வந்திருக்கிஇன்றன . அந்த நூல்களுக்கு ஒரு ஒழுங்கான மறுபதிப்பு போடக்கூட செம்மொழி அந்தஸ்தால் கிடைத்த கோடிக் கணக்கான ரூபாய்களால் முடியவில்லை. ஒரு உதாரணம் சொல்லலாம். விபுலாணந்த அடிகளின் யாழ்நூல் தமிழிசை பற்றிய ஒரு மாபெரும் நூலாகும். அந்த நூலை கனடாவைச் சேர்ந்த சிவதாஸ் என்ற வணிகர் தனது சொந்த செலவில் மறுபதிப்பு போட்டிருக்கிறார். 50 வருடங்களுக்கு பிறகு, கருணாமிர்தசாகரம் எனும் தஞ்சை ஆபிரகாம பண்டிதருடைய நூல் இன்றைக்கு வரை மறுபதிப்பு போடவில்லை. தமிழாய்வின் ஒரு பொற்காலம் அப்படியே அஸ்தமித்து போய்விட்டது. பல நூல்கள் சந்தையில் கிடைப்பதில்லை. வையாப்புரிப்பிள்ளையின் பேரகராதி விற்காமல் கிடக்கிறது. ஒரு அகராதி என்பது வருடம் தோறும் வர வேண்டும் அப்போதுதான் அதை வாழும் அகராதி என்று சொல்வார்கள். 5 வருடம் வரவில்லை என்றால் அது செத்த அகராதி என்பார்கள். ஆனால் 50 வருடமாக பதிப்பிக்கபடாத அகராதியை பேரகராதி என்று சொல்கிறோம்.

ஆகவே செம்மொழிக்காக கிடைக்கும் நிதியை தமிழ் வளர்ச்சிக்காக பயன்படுத்த போவதில்லை. அதனால் செம்மொழி என்பது ஒரு அரசியல் வார்த்தையே தவிர அதனால் மூன்று தளங்களிலும் பயன் கிடையாது. அதனால் தமிழர்கள் தமிழை வாசிக்கவோ எழுதவோ எந்த மறுமலர்ச்சியும் வந்துவிடாது. உலக அளவில் தமிழை எடுத்துப்போகும் முயற்சியும் வெற்றியடையாது. செம்மொழிக்கு அளிக்கபட்ட நிதி மதிப்பிற்குரிய வகையில் பயன்படுத்தபட போவதில்லை. எனவே செம்மொழி என்பது முழுக்க முழுக்க அரசியல் சம்பத்தபட்ட வார்த்தைதானே தவிர வேறொன்றும் இல்லை. என் போன்ற சிந்தனையாளர்களுக்கோ படைப்பாளர்களுக்கோ எந்தப் பங்களிப்பும் இல்லை அதனால் எனக்கு இதில் ஆர்வமும் இல்லை.

தென்பாண்டியன்: சரி, இந்த நிதியை பயனுள்ள வகையில் எப்படி செல்விடலாம் என நீங்களே சொல்லுங்களேன்.

ஜெயமோகன்: நான் மட்டுமல்ல, இதைச் சொல்லக்கூடிய செய்யக்கூடிய எண்ணற்ற அறிஞர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இன்றையச் சூழலில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்னிடம் கேட்டால் ஆய்வு சார்ந்து தமிழில் வெளிவந்த அத்தனை முக்கியமான செவ்விலக்கிய நூல்களையும் மறுபதிப்பு செய்ய வேண்டும். அவை அத்தனையும் இண்டர் நெட்டில் ஏற்ற வேண்டும். எந்த நூலையும் யாரும் எப்போதும் தேடி எடுக்கும் அளவிற்கு யூனிக்கோட்டில் பதிவேற்ற முடியும். ஒரு அலுவலகத்தைத் திறந்து 10 கோடி ரூபாய் செலவிட்டால் 5 வருடத்தில் இவை அத்தனையையும் நெட்டில் பதிவேற்றி விடலாம். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் யாரும் படிக்கலாமே. மாநாடுகளுக்கு இவ்வளவு செலவு செய்யக்கூடியவர்கள் இதற்கு செலவிடக்கூடாதா?

இந்தியாவில் அதிகம் கல்வெட்டுகள் கிடைத்த இடம் தமிழ்நாடுதான் ஏனெனில் இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து கோயில்கள் இடிக்கப்பட்டது. தமிழகத்தில் அப்படி இல்லை. கோயில்கள் பாதுகாக்கப்பட்டதால் நிறைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கல்வெட்டு ஆதரங்களில் 20 சதவீதம் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளது. கேட்டால் நிதியாதரம் இல்லை என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் ஏன் நெட்டில் பதிவேற்றக் கூடாது. இது போன்று ஆக்கபூர்வமான வகையில் எவ்வளவோ செய்யமுடியும்.

நன்றி: தினமலர்


புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்


பத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த `ரப்பர்' நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த `கன்னியாகுமரி' நாவல் வரை தமிழ் இலக்கிய உலகில் அதிகச் சர்ச்சைகளைjayamohan1ச் சந்தித்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன். 1991ல் `கதா' விருதும், 1993ல் சமஸ்கிருதசம்மான் என்கிற தேசீய விருதும் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.

  கதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற ஜெயமோகனது தாய்மொழி மலையாளம். நாகர்கோவிலுக்கு அருகில் தக்கலை என்னும் ஊரில்   தொலைபேசித் துறையில் வேலை செய்துவருகிறார்.

  நாகர்கோவிலின் நகர்ப்புறச் சந்தடியிலிருந்து ஒதுங்கி சற்று அமைதியாக இருக்கிற தெரு. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிற வீடு. மாடியில் ஓலைக் கீற்றுகளுடன் ஒரு கொட்டகை பக்கத்தில் அவரது மனைவி; ஓடியாடும் அவரது குட்டிமகள்.

  இப்படியான ஒரு சூழ்நிலையில் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பிரத்யேக மொழியுடன் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீண்டது அவருடனான பேட்டி:

கேள்வி: வாழ்க்கையின் எந்தவிதமான நெருக்கடி உங்களைப் படைப்புலகத்தை நோக்கி திருப்பியது. அல்லது உங்களது எழுத்துக்குப் பின்புலமாக இருந்திருக்கிறது?

ஜெயமோகன்: எனக்கு ஆரம்பத்திலிருந்து திருப்தியாகச் செய்யக்கூடிய காரியமாக எழுத்து தான் இருந்திருக்கிறது. சிறுவயதில் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த நாட்களிலேயே நான் நிறைய எழுதியிருக்கிறேன். பல புனை பெயர்களில் ஏகப்பட்ட கதைகள். சுமார் எண்பது வரை. பல பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். கதைக்கு ஐம்பது, அறுபது ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தில் போய் சினிமா பார்த்துவிட்டு புரோட்டா சாப்பிட்டு வருவேன். புரோட்டா மீது அப்போதே ஒரு காதல் உண்டு.

  நிறையப் படிப்பேன்; ஒரு கட்டத்தில் சாண்டில்யன் மீது ஒரு மோகம் இருந்தது; பிறகு கல்லூரி நாட்களில் எனது ஹீரோ ஜெயகாந்தன். இப்போது மனதில் அடுக்குகள் மாறினாலும் ஜெயகாந்தன் அதே நிலையில் இருக்கிறார்.

   இந்தக் காலகட்டத்தில் ஒரு நெருக்கடியான விஷயம் உருவாயிற்று. எனக்கு நெருக்கமான நண்பராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். ரப்பருக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை `ஆஸிட்'டை அவர் குடித்திருந்தார். அது கொடூரமான மரணம். அவருடைய மரணம் எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நானும் அவனும் முந்தின தினம் இரவு வரைக்கும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு அவன் கிளம்பிப் போனான். போய் ஒரு மணிநேரத்தில் இறந்து போய்விட்டான்.

   மரணத்தின் குரூரம்; மரணத்தின் மூலம் ஒருவன் முழுக்க இல்லாமல் போய்விடுகிற வெறுமை; எவ்வளவு தான் இரண்டு ஆத்மாக்கள் நெருக்கமாக இருந்தாலும் மரண அவஸ்தையைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு இருந்த இடைவெளி; இதெல்லாம் எனக்குப் பெரிய உறுத்தலை ஏற்படுத்தியது. மானசீகமாக நிலைகுலைந்து போயிருந்தேன். கல்லூரிக்குப் போகமுடியாமல், தூங்க முடியாமல் இருந்தேன். பிறகு படிப்படியாக மனசு தேறிவந்தேன்.

   இந்த நேரத்தில் ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இன்றைக்கு வரை என்னை எழுத வைத்திருக்கிற கேள்விகள் இந்தக் கால கட்டத்தில் தான் உருவானதென்று நினைக் கிறேன். கல்லூரியில் கடைசி வருஷம் துறவு மனப்பான்மையில் எனது வீட்டை விட்டுப் புறப்பட்டேன். மதுரை திருவேடகம், திருச்சி என்று பல இடங்களில் அலைந்து கொண்டிருந்தேன்.

கே : ஏன் துறவு கொள்கிற அளவுக்கு மனநிலை சென்றது.

ஜெயமோகன் : என்னுடைய கன்னியாகுமரி நாவல் தவிர மற்ற என்னுடைய எல்லாப் படைப்புகளிலும் அடிப்படையில் மரணம், அதற்கு முன் உறவுகளுக்கு, இருத்தலுக்கு இருக்கிற அர்த்தங்கள்; அது குறித்த விசாரணைகள் புலப்பட்டிருக்கின்றன.

   பதினெட்டு வயதில் நமக்கு, மனசுக்குள் ``நான் நிரந்தரமாகப் பூமியில் இருந்து கொண்டிருக்கிற ஆள்; என்கிற உணர்வு இருக்கும். நான் மலையாளத்தில் எழுதின மாதிரி. எனக்குப் பின்னால் ஒரு ஒளித்தச்சன் என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் கல்லில் நிரந்தரமாகச் செதுக்கிக் கொண்டிருக்கிறான் என்கிற பிரமை இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரு குமிழி மாதிரி லேசில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போவோம். அவ்வளவுதான்'' என்று மனசில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. எனக்கு இருபத்தெட்டு வயசில் உருவான மனச் சித்திரம் மற்றவர்களுக்கு நாற்பத்தைந்து, ஐம்பது வயசுக்குப் பிறகு முதல் `ஹார்ட் அட்டாக்'கோ, முதல் `ஸ்ட்ரோக்'கோ வரும்போது வந்திருக்கலாம். இந்த உணர்வு வந்த பிறகு நமது வாழ்க்கை முறையே மாறிப் போவதைப் பார்க்க முடியும். இந்த உணர்விலிருந்து கிளம்புகிற கேள்விகள்தான் எனக்கு முக்கியம்.

   துறவு மனநிலையில் சுவாமி சித்பாவனந்தருடன் சில நாட்கள் இருந்தேன். வயது முதிர்ந்த நிலையில் அவர் பேசும் போது அவரது கைகள் நடுங்கும், என்னிடம் ``கால்மணி நேரம் தனியாகப் பேசவேண்டும்'' என்று சொன்னார், உள்ளே போய்ப் பேசினார்.

   ``நீ எடுத்துப் படிக்கிற புஸ்தகங்களையெல்லாம் பார்த்தேன். கதைப் புஸ்தகங்களைத்தான் பார்க்கிறே.. ஆன்மீகம், தியானம் எல்லாமே கணக்கு மாதிரி `லாஜிக்'கலான விஷயங்கள். நீ முழுக்க முழுக்கக் கற்பனையில் இருக்கே.. உண்மையை அடைவதற்கு ஒரு பயணம் உண்டேன்றால் அது உனக்கு இலக்கியம் வழியாகத்தான் சாத்தியம். இன்னொருவன் சங்கீதம் வழியாகச் செய்வான். துறவெல்லாம் உனக்கு ஒத்துவராது. வீட்டுக்குப் போய் விவசாயம், ஏதாவது பண்ணு'' என்றார்.

   எனக்கு அப்போது அவர் மீது கோபம் வந்தது. எனக்குச் சாப்பாடு போடத் தயங்கித்தான் அப்படிச் சொல்கிறார் என்று வியாக்கியானம் செய்து கொண்டு திருப்பராய்த்துறையில் போய்ச் சில நாட்கள் இருந்தேன். அங்கும் என்னை அதைரியப்படுத்திவிட்டார்கள். திரும்பி ஊருக்கு வந்த பிறகு ஒரு காலகட்டத்தில் ``அவர் சொன்னது உண்மை'' என்று தெரிய வந்தது. அந்த காலகட்டத்தில் நான் எழுத ஆரம்பித்தேன்.

கே : உங்களது குடும்பச் சூழ்நிலை அப்போது எப்படியிருந்தது

ஜெயமோகன் : என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிற திருவரம்பு, குலசேகரத்திற்கும் திற்பரப்புக்கும் நடுவில் இருக்கிறது. எங்கம்மாவின் அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் பின்னணியில் வந்தவர் எங்க அம்மா.

   எங்கம்மாவுக்கு தோப்பில் பாசியைத் தெரியும். ஈ.எம்.எஸ். ஸைத் தெரியும். எழுத்து கூட்டித் தானாகவே தமிழும், ஆங்கிலமும் கற்றுக் கொள்கிற அளவுக்கு அவங்களுக்கு தீவிரம் இருந்தது. அப்பா, அம்மா இருவருமே மாறுபட்ட குணாதிசயங்கள். அவர்களுக்குள் எவ்வளவுதான் தீவிரப் பிரியம் இருந்தாலும், அந்த பிரியம் முழுவதும் பாதி விஷமாக மாறிவிடும்.

  jayamohan3 எங்கம்மா பெரிய படிப்பாளி. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலுமே படிப்பார்கள். சில கதைகள் அம்மா எழுதி மலையாளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. எங்கப்பா அப்போதே ஐம்பது ரூபாய் வரை செலவழித்து அம்மாவுக்காக ஹெமிங்வேயின் நாவல்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனாலும் என்ன காரணத்தாலோ அவர்களுக்கிடையில் கடுமையான உரசல் இருந்து கொண்டே இருந்தது. எங்கப்பாவுக்கு எங்கம்மா அவங்களோட அண்ணன் மீது வைத்திருந்த பக்தி மாதிரியான உணர்வைத் தாங்கமுடியவில்லை. எங்கள் வீட்டில் நல்ல புஸ்தகச் சேகரிப்பு இருந்தது. இரண்டாயிரம் புத்தகங்கள் வரை இருந்தன. எங்கம்மாவுக்கு தி. ஜானகிராமனை, ஜெயகாந்தனையெல்லாம் புத்தகங்கள் வழியாகத் தெரியும்.

   எங்க அம்மா தோட்டத்தில் புல் பறித்துக் கொண்டிருப்பார்கள். கூடவே நானும் புல் பறிப்பேன். பேசிக் கொண்டே பறிப்போம். ஆங்கில நாவல் பற்றி அம்மா பேசிக் கொண்டு புல் பறிப்பது நடக்கும். அபூர்வமாக ஒரு பஸ் வந்து போகிற அந்தக் குக் கிராமத்தில் புல் பறித்தபடி இப்படியொரு இலக்கிய சம்பாஷணை நடக்கும் என்று மற்றவர்கள் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. தாக்கரே, டிக்கன்ஸ் என்று அவர்களுடைய ரசனை இருந்தது. தளம் எனக்கிருந்தது. டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி நாவல்களை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது மலையாளம் வழியாகப் படித்திருக்கிறேன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போதுது அம்மா வழியாக மலையாளம் எழுதப் படிக்கக் கத்துக் கிட்டேன். அதுவரை பள்ளியில் பாடமொழி தமிழ்தான்.

   வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டாலும், தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழில் பேசிக் கொள்வோம். எங்க அம்மாவும் நானும் தனி உலகத்தில் இருந்தோம். மற்றவர்களுக்கு இப்படியொரு உலகம் இருப்பதே தெரியாது.

   இப்படி இருந்த என்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டது எனக்குப் பெரிய அடியாக இருந்தது. அம்மா அம்மாதிரியான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்பதற்கான சிறுபொறி கூட எனக்குத் தெரியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக்பெரிய துக்கங்கள், ஏமாற்றங்கள் இருந்தன என்பதெல்லாம் பிறகு தான் எனக்குத் தெரிந்தது. அவர் இறந்த பிறகு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களையெல்லாம் பார்த்த எனக்கு அம்மாவின் மரணம் பலத்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருஷம் வரைக்கும் இந்தச் சம்பவம் என்னைத் தூங்கவிடாமல் பண்ணியது.

   எங்கப்பா மீது எனக்கு விருப்பும் வெறுப்பும் கலந்த மரியாதை உண்டு. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அப்பா கறாரானவர். கல்லூரி நாட்களில் என்னை எந்த விதத்திலும் அவர் எதற்கும் வற்புறுத்தினதே கிடையாது. ஆனால் எங்கப்பா கடைப்பிடித்த ஒழுக்கங்களுக்கு நானும் வந்து சேர்ந்திருந்தேன். அவரும் எங்கம்மா மாதிரியே தற்கொலை செய்து கொண்டார். கடும் மன அவஸ்தை, நெருக்கடி. இருந்தும் எந்தப் பழக்கங்களுக்கும் ஆட்படாமல் நான் தனியான ஆளாக இருந்தேன். சோகமான மனநிலை தான் எப்போதும்.

   ஒரு முறை ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது அருகே இருந்த பயணியின் கையில் ``ஜே.ஜே. சில குறிப்புகள்'' நாவலைக் வைத்திருந்தார். அவரிடம் நாவலை வாங்கிச் சீக்கிரமே படித்து முடித்துவிட்டேன். எனக்கு மனதில் பெரிய அதிர்வைக் கொடுத்தது அந்த நாவல். படித்ததும் எழுந்த கேள்விகளுடன் சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். எதிர்மறையான கடிதம்தான். அந்த நாவலில் இருந்த தேடலும், தவிப்பும் எனக்கு முக்கியமானதாகப் பட்டது.

கே : அப்போதிருந்த உங்களது மனநிலைக்கு நாவல் ஒத்திருந்ததா.

ஜெயமோகன் : ஆமாம். உதாரணமாக, `குடிக்கிறேன்-அதுவும் தற்காலிகத் தற்கொலைதான்' என்று அந்த நாவலில் வரும் வாக்கியம் என்னை உலுக்கியெடுத்துவிட்டது. நான் உணர்கிற உலகத்திற்கு நெருக்கமானதாக அந்த நாவல் இருந்தது. சுந்தர ராமசாமியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். ரொம்பவும் சகிப்புத் தன்மையுடன் இருந்தார் அவர். நான்தான் அதிகம் பேசுவேன். ``உங்களிடம் ஒரு கலை இருக்கிறது. நீங்கள் எழுதவேண்டும். `ஆர்டிவெய்ங்' என்கிற சைக்கியாட்ரிஸ்ட் ``வேலை செய்வதுதான் மனநெருக்கடிக்குப் பெரிய சிகிச்சை'ன்னு சொல்றார். அதனால் எழுதுங்கள்'' என்று சொன்னார். உடனே அவருக்குக் கத்தை கத்தையாகக் கடிதங்கள், சிறு கதைகள், குறுநாவல்கள் எழுதி அனுப்பினேன். இதில் ஒரு கவிதை அப்போது வெளிவந்து கொண்டிருந்த `கொல்லிப்பாவை' என்கிற சிறு பத்திரிகையில் வெளியானது. மறுபடியும் எழுத்துலக பிரவேசம் ஆரம்பித்துவிட்டது.''

கே : படைப்பு ரீதியாக இயங்க உந்து சக்தியாக வேறு யார் அப்போது இருந்தார்கள்.

ஜெயமோகன் : நான் எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ரொம்பவும் கூச்சம் உள்ள ஆள். சந்தித்த முதல் எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். அவருக்கு மேற்கத்திய மனம் உண்டு. அவர் அதைச் சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் குரு சிஷ்ய உறவு என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் கிடையாது. புத்தகங்கள் நூலகங்களில் இருக்கலாம்; கருத்துக்கள் இருக்கலாம்; ஆனால் சிந்திப்பதற்கான வழிமுறையை ஒரு தனி நபர்தான் உருவாக்கிக் கொடுக்க முடியும். அவர் வாழ்ந்து காண்பித்தால்தான் அவரது லட்சியம் இன்னொருவரை வந்து சேர முடியும். அவர் அந்த மாதிரி அவரைக் குருவாக கண்டெடுத்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்தான்.

கே : மலையாளச் சாயல் படிந்த மொழி நடை உங்களுடையது, இந்த மொழியைக் கூர்மைப் படுத்தியதில் யாருக்குப் பங்கிருக்கிறது.

ஜெயமோகன் : என்னுடைய சமகால எழுத்தாளர்களை விடக் குறைவான சமஸ்கிருத வார்த்தைகள் கலந்த நடையைத்தான் நான் உபயோகப் படுத்துகிறேன். கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், பிரேம் போன்றவர்களின் படைப்புகளைவிட என்னுடைய படைப்புகளில் சமஸ்கிருதப் பிரயோகம் குறைவுதான்.

கே : ஆனால் உங்கள் நாவல்களில் விஷ்ணுபுரத்தில் அதன் பிரயோகம் அதிகமாக இருக்கிறதே.

ஜெயமோகன் : விஷ்ணுபுரத்தைப் பொறுத்த வரை அது சமஸ்கிருதத்தைப் பற்றின நாவல். அந்தச் சூழலையும், சிந்தனைகளையும் முன்வைக்கிற நாவல். அதற்கேற்றபடி உணர்வு பூர்வமாக சமஸ்கிருதம் அதில் கையாளப்பட்டிருக்கிறது. என்னுடைய படைப்பிலக்கியத்திலும், சிந்தனையிலும் நான் சார்ந்திருக்கிற மொழி சுந்தர ராமசாமியின் மொழி. இப்போது அதன் தாக்கம் சற்றுக் குறைந்திருந்தாலும், இன்றும் அவரது தாக்கம் என் படைப்பு மொழியில் உண்Êடு. எப்படி சுந்தர ராமசாமியிடம் புதுமைப் பித்தன் இருக்கிறாரோ, அது போல ஜெயமோகனிடம் சுந்தர ராமசாமி இருக்கிறார். அடுத்து என் மொழியைப் பாதித்தவர்கள் அசோகமித்திரனும், சுஜாதாவும்.

   மொழியைக் கனகச்சிதமாகப் பயன் படுத்தியிருப்பவர் சுஜாதா. அவரைப் பற்றித் தமிழில் உருவாகியிருக்கிற சித்திரம் வேறுமாதிரியானது. வெறும் கணேஷ்-வசந்த் எழுத்தாளராக ஒரு கும்பல் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் அவர் தீனி போடுகிறார். சர்வதேசத் தரம் வாய்ந்த இருபது கதைகளுக்கு மேல் அவருடைய கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொடுக்க முடியும். அந்த அளவுக்கு நல்ல சிறுகதைகளை எழுதின கதாசிரியர்கள் தமிழில் அதிகபட்சம் பத்து, பதினைந்து பேர் தான் இருக்கிறார்கள். இதை சிறுகதையின் வரலாறு தெரிந்த யாரும் மறுக்க முடியாது. சுஜாதாவால் பெரிய அளவில் ஆழ்ந்த கேள்விகளையும், தேடலையும் உருவாக்க முடியாது. அந்த மாதிரியான விசாரணை அவரிடத்தில் இல்லை. ஆனால் வாழ்க்கையின் சூட்சமங்களை உணர்ந்து உள்ளே போகிற நல்ல எழுத்தாளர் அவர். `கமர்ஷியல்' எழுத்தாளர் என்று அவரைப் புறக்கணித்துவிடமுடியாது.

   சுஜாதாவின் மொழி தமிழின் மிக முக்கியமான மொழி, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் குணாம்சங்களைக் கொண்ட மொழி அது. அதில் குறிப்பிட்ட ஒழுங்கு உண்டு. நுட்பம் உண்டு. நளினம் உண்டு. நான் கூர்ந்து படிக்கிற எழுத்தாளர் அவர்.

   அவருடைய தொடர்கதை ஒன்று, கணேஷ்-வசந்த் கதைதான். போக்குவரத்து நெருக்கடி. இவர்கள் காரில் உட்கார்ந்திருக்கிறார்கள். ``அப்போது சோகையாய் ஒரு ஊர்வலம் கடந்து போயிற்று'' என்று எழுதியிருப்பார். அது மனதில் ஏற்படுத்தக்கூடிய சித்திரம் எப்படிப்பட்டது ஆக்ரோஷமில்லாமல் ஒப்புக்கு ஒரு ஊர்வலம் போவதை `சோகை' என்கிற ஒரு நுட்பமான வார்த்தை உணர்த்தி விடுகிறது. இதுதான் அவருடைய பாணி.

   சமகாலத்தில் சட்டத்தில், விளம்பரத்தில், சினிமாவில், சினிமாப் பாட்டில் ஒரு விதத் தமிழில், இன்றைய `போஸ்ட் மாடர்னிச' சூல்நிலையில் இந்த விதமான எல்லா மொழிநடையையும் படைப்புக்குள் கொண்டு வருவது என்பது ஒரு சவால். இதை சுஜாதாவால் எழுதமுடியும். அதற்கடுத்து என்னாலும் எழுத முடியும்.

கே : மொழி சம்பந்தமான கவனம் எப்போதும் உங்களிடம் இருந்து கொண்டிருக்கிறதா. மொழி நடையை முன்பே தீர்மானித்து விடுகிறீர்களா.

ஜெயமோகன் : அப்படி இல்லை. எழுதும்போது தான் அதற்கான திறமைகள் நம்மிடம் இருப்பது தெரியவருகிறது. நாய் துரத்தும் போதுதான் நம்மால் இவ்வளவு தூரம் தாண்டமுடியும் என்பது தெரிகிற மாதிரி. ஆனால் எப்போதும் ஒருவிதக் கவனம் இருந்து கொண்டிருக்கிறது. நான் சாலையில் போகும்போதுகூட எல்லா போஸ்டர்களையும், கண்ணீர் அஞ்சலி, காதனிவிழா போஸ்டர்கள், அதில் தெரிகிற வித்தியாசம் என்று எவ்வளவோ விஷயங்கள் உன்னிப்பான கவனத்துடன் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன.

   இந்த அவதானிப்பையும், மொழியின் பிரயோகத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். என்னுடைய `பின் தொடரும் நிழல்' நாவலைப் பார்த்தால் அதில் பனிரெண்டு வகையான மொழிநடை இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துண்டுப் பிரசுர மொழி நடை இருக்கிறது.

கே : பொதுவாக இப்போது சிறு பத்திரிகைகளில் எழுதுபவர்களிடம் இறுக்கமான மொழிநடை இருக்கிறது. இந்த மொழிநடைச் சிக்கலை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்.

ஜெயமோகன் : எனக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் எனக்குப் புதுவகையான படைப்பை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் கிடையாது. அப்படி நான் எழுதவும் மாட்டேன். மரபிலிருந்து புதிது புதிதாக எழுகிற கேள்விகள்தான் என்னை எழுத வைக்கின்றன. அதற்கேற்ற வடிவம்தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை படைப்பு ஒரு விசாரணைதான்.''

    ஒரு புதுவகை நாவலை எழுதிவிடலாம் என்கிற எண்ணம் அல்ல `பின் தொடரும் நிழலில்' நாவலை நான் எழுதக் காரணம். ஒரு தத்துவத்துக்கும் வன்முறைக்கும் உள்ள தொடர்பு, லட்சக்கனக்கானவர்கள் சாகிற அவலம், வரலாறு என்பதுதான் என்ன என்கிற கேள்விகள் தான் அந்த நாவலை எழுதக் காரணம்.

கே : துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் Êதெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்த தூண்டுதலும், வேகமும் படைப்பு நீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா?''

ஜெயமோகன் : விஷ்ணுபுரம், எழுதுகிற நேரத்தில் ரொம்ப காலம் என்னை அலைக்கழித்த அடிப்படையான கேள்விகளையெல்லாம் அந்த நாவல் வழியாகப் பதிவு பண்ணிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதன் கதா பாத்திரங்கள் எல்லாம் என்னுடைய கிளைகள் தான். நான் அலைந்து திரிந்த காலமெல்லாம் அதில் இன்னொரு விதத்தில் பதிவாகியிருக்கிறது. என்னுடைய படைப்புகள் எல்லாமே என்னுடைய விசாரணையும், என்னுடைய துக்கங்களும்தான். ஏதோ இலக்கியம் படைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் அல்ல. திரும்பத்திரும்ப நான் சொல்வது இதைத்தான். புத்தருக்குத் தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து.

கே : ஒரு படைப்பை எழுதி முடித்த பின்பான மனநிலை எப்படி இருக்கும்?

ஜெயமோகன் : பெரும்பாலும் செய்து முடித்த ஒரு வேலை இன்னொரு வேலையைத் துவங்கத் தூண்டதலாக இருக்கிறது அல்லது கட்டாயத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம். விஷ்ணுபுரத்தில், விஷ்ணு என்கிற படிமம் பிரமாண்டமான கொந்தளிப்புடன் எனக்குக் கிடைத்த படிமம். அந்த அநுபவத்தை என்னால் மறக்க முடியாது. நான் உணர்ந்த அந்தப் பிரம்மாண்டம் அந்த நாவலில் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது ஒரு வகையான பிரபஞ்சத் தரிசனம். ஆனால் நாவல் முடியும்போது நீலியின் பாதங்களுக்குக் கீழே சின்னக் குமிழி மாதிரி கோபுரம் உடைந்து போய்விட்டது. அவ்வளவுதான் விஷ்ணு. நாவல் முழுக்கவும் ராஜகோபுரத்தைப் பார்ப்பவர்கள் அதலபாதாளத்தில் உடைந்து போகிற கோபுரத்தைப் பார்ப்பதில்லை.

   இந்த நீலி யார் என்று பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலநூறு வருஷங்களாக இருக்கிற பழங்குடி தெய்வம். என்னுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் நான் பத்மநாப சுவாமி கிட்டே போய் வேண்டிக்கொள்ளமாட்டேன். இந்த மாதிரி மேலாங்கோட்டை அம்மன் கிட்டேதான் வேண்டிக் கொள்ளமுடியும். என்மனது அங்கே தான் இருக்கிறது. அந்த அம்மனைத்தான் என்னால் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும். என்னுடைய தெய்வம் நாக்கில் ரத்தம், கையில் சூலாயுதம், கோவில் பலி என்று தான் இருக்கிறது. என் முன்னோர்கள் போன அந்த வழியை விட்டு நான் வேறு வழியில் போக முடியவில்லை. ஆக விஷ்ணு எனக்கு வெளியிலிருந்து வந்த ஒரு விஷயம் தான். இந்தப் பின்னணியில் விஷ்ணுபுரம் முடிவதைப் பார்க்கும் போது எனக்கு அது ஒரு கண்டுபிடிப்பாகவும் இருக்கிறது.

கே : சிறுதெய்வ வழிபாடுகள் பற்றி சொன்னாலும் கூட, விஷ்ணு என்கிற விஷயம் இந்துமதக் கோட்பாடு சார்ந்து அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்துமதத்தை நீங்கள் தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு வருகிறது

ஜெயமோகன் : முதலில் இந்த மாதிரியான விமர்சனம் விஷ்ணுபுரத்தைச் சரியாகப் படிக்காதவர்களிடமிருந்து வருகிற விமர்சனம். நாவலில் `விஷ்ணு' என்ற ஒன்றே கிடையாது. விஷ்ணுவின் பல்வேறு முகங்களைப் பிரித்துக் காட்டி முடிவில் ஒன்றுமில்லாமல் நீலி மட்டும் மீந்திருக்கிற நிலையில் முடிகிறது நாவல். விஷ்ணுவை ஆதார மூர்த்தியாக்கி மையப்படுத்துவதை இந்த நாவல் செய்யவில்லை. அவரை மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்தி இல்லாமல் பண்ணுகிறது. இது இந்த நாவலைப் படிக்கிற எந்தக் குழந்தைக்கும் கூடத் தெரியும் .

கே: ``பின் தொடரும் நிழலின் குரல்'' நாவல் குறித்து மார்க்சீயத்திற்கு எதிரான விரோதி என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே

ஜெயமோகன் : மலையாள எழுத்தாளர் எம். கோவிந்தனின் பிரசித்தி பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. ``அறிவுக்கு எல்லையுண்டு, எதிர்ப்புமுண்டு, அறிவு இல்லாமைக்கு இரண்டுமே கிடையாது.'' இது நமக்குப் பொருந்தும். எந்தவிதமான அறிவுக்கும் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அது நம்மைப் பாதிக்கும். தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு, அல்லது கோபம் அல்லது குறைந்த பட்ச உறுத்தலை ஏற்படுத்தினால் உடனே அதற்கு ஒரு பிம்பம், ஒரு முத்திரை வந்துவிடுகிறது. எந்தத் தீவிரமான படைப்பாளி வாழும் காலத்தில் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருந்திருக்கிறான்

   `பின் தொடரும் நிழலின் குரல்' நாவலைப் பற்றி உருவாகிற சித்திரமும் நாவலைப் படிக்காதவர்கள் உருவாக்குகிற சித்திரம் தான். நாவலைப் படிக்காமலே அறிவுஜீவித் தனமாகப் பேசும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது. ``முதலில் இது மார்க்சீயத்தைப் பற்றின நாவலே அல்ல. சோவியத் ரஷ்யா பற்றின நாவலும் கிடையாது. லட்சியவாதம் என்பது எப்படித் தவிர்க்க முடியாமல் வன்முறைக்குப் போகிறது கோடிக் கணக்கான அழிவை உண்டாக்குகிறது. சிறிது காலம் கழித்து அந்த லட்சியவாதம் தப்பு என்றால் இந்தக் கோடிக் கணக்கான அழிவுக்கு என்ன பதில் இந்தக் கேள்விகளைத்தான் பக்கம் பக்கமாகப் அந்த நாவல் பேசுகிறது.

   இவர்கள் எழுப்புகிற சந்தேகம் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால் அந்த நாவலிலேயே எஸ். எம். ராமசாமி என்கிற கதாபாத்திரம் நேரடியாக இதை விரிவாகச் சொல்லி விடுகிறது. பிறகும் இந்த நாவல் சோவியத் ரஷ்யாவைப் பற்றிப் பேசுகிறது என்று சொன்னால் உண்மையில் இந்த நாவலை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது சோவியத் ரஷ்யாவே கிடையாது. நாவலின் முழுக் கருவே இலங்கை தான். இந்தக் கேள்விகள் அனைத்தும் இலங்கையிலிருந்தே எழுகின்றன. அதை முன் வைத்துதான் இந்த நாவலை எழுதினேன்.''

கே : தமிழ் இலக்கிய உலகில் வாசகர்கள் என்பது சக எழுத்தாளர்கள்தான். இதை மீறி எழுத்தாளர்கள் அல்லாத ஒரு வாசகர் கூட்டம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா.

ஜெயமோகன் : சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு விதத்தில் என் நாவல்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை நான் சந்திக்கிறேன், யாரோ எங்கோ இந்தப் படைப்புகளை இயல்பாக, எந்த முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் படிக்கிறார்கள், கடிதம் எழுதுகிறார்கள். சிறு பத்திரிகை வட்டாரத்திற்கு வெளியேதான் உண்மையில் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் நிஜமாகவே படைப்புகளைப் படிக்கிறார்கள்.

   `விஷ்ணுபுரம்' வந்த பிறகுதான் சிறு பத்திரிகை வட்டாரத்தைத் தாண்டி நான் வெளியே போனேன். அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள், சொந்த அநுபவத்துடன் எழுதுகிறார்கள். அது ஆரோக்யமாக இருக்கிறது.

கே : உங்களது படைப்புகளில் வெளித் தெரிகிற ஆன்மீகச் சாயல்; அதன் பின்னணி எங்கிருந்து உருவானது

ஜெயமோகன் : எனக்கு ஆன்மீக ரீதியான விசாரணையும், தர்க்கமும் தான் இருக்கிறதே ஒழிய, ஆன்மீக நிலைப்பாடு கிடையாது. ஆன்மீகத்தை எனது படைப்புகளில் ஒரு விடையாகச் சொல்லவில்லை, முடிவும் சொல்லவில்லை. அதற்கான தகுதியும் எனக்குக் கிடையாது.

    எனக்கு ஆன்மீக ரீதியாக ஒரு தேடல் சாத்தியப்பட்டிருக்கிறது, போகிற வழியில் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல வாசல்கள் திறக்கின்றன. ஃபூக்கோ பற்றி, நாராயண குரு பற்றி, கதக்களி பற்றி, விவேகானந்தர் பற்றி, தாந்திரீக மரபு பற்றித் தெரிந்த முழுமையான நபரைப் பற்றின தேடல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது...''

கே: இருந்தாலும் எந்த விதமான ஆன்மீக நோக்குடன் உங்களால் ஒத்துப் போக முடிகிறது.

ஜெயமோகன் :ஸ்ரீநாராயணகுருவிடம் போகிற மாணவர்களைப் பார்த்தாலே தெரியும், கேரள நாஸ்திக மரபில் வந்த அய்யப்பன். அவருடைய முக்கியமான சீடர். ``ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்'' என்று நாராயண குரு சொல்லும்போது,`` மதம் வேண்டாம்; சாதி வேண்டாம்; தெய்வம் வேண்டாம்' என்று அதே மேடையில் சொல்கிறார் சீடர். நாராயண குரு இறப்பதற்கு முன்பு தமது நிறுவனங்களுடைய வாரிசாக நியமிக்க விரும்பியதும் இதே அய்யப்பனைத் தான்; எப்படி முழுக்கத் தன்னை நிராகரிக்கிற ஒருவரைச் சீடராக நாராயண குரு ஏற்றுக் கொள்கிறார். இந்தச் சுதந்திரம் தான் ஆன்மீக விசாரணையின் உலகம்.

   இதே மாதிரி நித்யசைதன்ய யதியின் புத்தகத்தில் ஒரு வரி, ``அழகு அனுபவம் என்பது ஒருவகையில் அறிவதின் அனுபவம் தான்...'' நான் மறுத்தால் அவர் `உண்டு' என்று சொல்வார். இப்படியே தர்க்கம் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் சுலபமான பதிலுக்கு உட்காரவிடாதபடி பண்ணி விடுவார், எப்போதும் தொடர்ந்து இயக்கம் இருந்து கொண்டிருக்க வேண்டும், ஒரிடத்தில் சோர்ந்து உட்கார்ந்து விடக் கூடாது என்பார். தொடர்ச்சியாக துருவித்துருவி விசாரித்து அறிகிற இந்த மரபு இந்து மரபு அல்ல, பௌத்த மரபு. எனக்கு இந்த மரபுடன் மிகவும் நெருங்க முடிகிறது. ஆன்மீகம் என்பது மதத்துடனும், கடவுளுடனும் தொடர்புடையது அல்ல. அடிப்படையான கேள்விகளின் விடையாகவே `கடவுள்' பிறந்தார் அல்லது வெளிப்பட்டார் அடிப்படையான கேள்விகளுக்கான சில விடைகளை நம்பிக்கைகளாகவும், சடங்குகளாகவும் மாற்றும் போதே மதம் பிறந்தது. ஆகவே, ஆன்மீகமும், மதமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆன்மீகத் தேடல் உள்ளவன் கடவுளையும். மதத்தையும் கூர்ந்து கவனிப்பான், இருந்தாலும் அவை வேறு வேறு என்றும் அறிந்திருப்பான். எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.

கே: பல விஷயங்களில் தன்னை மற்றவர்களிடமிருந்து விலக்கிச் சுருக்கிக் கொள்வது தான் பலருக்கு ஆன்மீகமாக இருக்கையில், உங்கள் செயல் பாட்டைத் தீவிரப் படுத்துவதற்கான உந்துதலை அதிலிருந்து உங்களால் பெறமுடிந்திருக்கிறதா.

ஜெயமோகன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் இருக்கிற ஒன்றைப் பற்றின தேடல் என்று ஆன்மீகத்தை வியாக்கியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு புறம் இருக்கிறார்கள். வாழ்க்கையின் உள்ளச் சத்தை, அதன் சாராம்சத்தைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதிக்கு அப்போது எழுபத்தைந்து வயது. ஒரு `ஸ்ட்ரோக்' ஏற்பட்ட பிறகும் அந்த வயதில் வீணை கற்றுக் கொள்கிறார். ஒரு கை இயங்க முடியாத நிலையிலும் தணியாத வேகத்துடன் இன்னொரு கையால் வீணை வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படியும் ஆறு மாதத்தில் அவர் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் சொல்லியும் இரண்டு கீர்த்தனையாவது அதற்குள் கற்று வாசித்துவிட முடியாதா என்று மனசுக்குள் வேகம். இந்த அளவுக்கு வாழ்க்கையின் மீது இருக்கிற பிரியம் தான் என்னோட ஆன்மீகம், ஒரு வாழ் நாளில் நூறு வாழ் நாட்கள் வாழ்வதற்குச் சமமான இந்தப் பிரியமும், வேட்கையும் தான் முக்கியம்.

   `ஜாக்ரதா' `கிரத்தா' என்ற இரு சொற்கள் முறையே உபநிடத மரபாலும், பௌத்த மரபாலும் ஆழ்ந்த அகவிழிப்பு நிலைக்குரிய கலைச் சொற்களாக முன் வைக்கப் படுகின்றன. ஆனால் தகவல் ரீதியான அறிதலுக்கு அப்பால் உள்ள அனைத்து அறிதல்களும் அந்த அகவிழிப்பு நிலையிலேயே சாத்தியமாகின்றன. அவற்றை அறிவது ஒரு அறிவுலகப் பயணம்.

   என் அநுபவத்தை இதற்குச் சான்றாகக் கூறமுடியும். எப்போதும் படைப்பு இன்னதென்று தெரியாத பதற்றமாகவோ, அமைதியில்லாத தன்மையிலோ தான் தொடங்குகிறது. என்ன என்று திரும்பித் திரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். தொலை தூரத்தில் கேட்கிற பழைய பாடல், பலவிதமான ஏக்கம், துயரம், நெகிழ்ச்சி, உவகை எல்லாம் கலந்த உணர்வுகளின் கலவையாக மனதை அலைக்கழிப்பது போல ஒரு உணர்வு. இது சில சமயம் ஒரிரு நாட்களுக்கு மேலும் நீடிக்கலாம். பிறகு ஒரு தொடக்கம் கிடைக்கிறது. அந்தத் தொடக்கத்தை மனதில் போட்டு மீட்டி ஒரு கட்டத்தில் மளமளவென்று எழுத ஆரம்பிப்பேன். எழுத எழுத கதை வளர்ந்து முழுமை பெறும், அது ஒரு போதை மாதிரி. ஒரு கனவு நம்மில் பிறப்பது மாதிரி.

   ஒரு கதையும் அமைப்பும், முடிவும் முன்னமே நமக்குத் தெரிந்திருந்தால் அது நல்ல கதையே அல்ல. அது நிகழவேண்டும், எழுதி முடித்த பிறகு `நானா எழுதினேன்' என்றிருக்க வேண்டும். கனவு நம்மிலிருந்து தான் வருகிறது. அது வரும் வரை அதை நாம் அறிவதில்லை. வந்த பிறகு வியப்பும், சில சமயம் அதிர்ச்சியும், பரவசமும் அடைகிறோம். படைப்பு மொழியும். ஒரு வகைக் கனவு தான். படைப்பு ஓர் அகவிழிப்பின் மூலம் பிறக்கும் அக உண்மை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

கே: தமிழின் மற்ற எழுத்தாளர்களை விட, எழுதத்துவங்கிய குறுகிய காலத்திற்குள் கதை, நாவல்கள், கட்டுரைகள் என்று அதிகமாக எழுதிவிட்டீர்கள் இந்த வேகத்திற்குக் என்ன காரணம்?

ஜெயமோகன் : நீங்கள் கடலில் விழுந்துவிட்டால் கரை சேரும் வரை சோர்வடைய முடியாதில்லையா? கடலுக்கு நடுவில் தீவில் ஓய்வாக நின்று கொண்டிருக்கிறவர்கள் நின்று கொண்டிருக்கலாம். இது தான் மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் நிறைய எழுதவில்லை என்றால் அவர்களது வாழ்க்கையில் எழுத்துக்குக் கொடுத்திருக்கிற இடம் குறைவு. எவ்வளவோ விஷயங்களுக்கிடையில் அவர்களுக்கு சின்ன ஓய்வு மாதிரி, எப்போதாவது `தண்ணி' அடிக்கிற மாதிரி கதை, கவிதைகள் எழுதுவார்கள். அவர் அவர்கள் போக முடிகிற தூரம் அவ்வளவுதான்.

   என்னுடைய எழுத்து அப்படியல்ல. நான் தூங்குகிற நேரத்தில் கூட எழுத்தைப் பற்றி, எழுதுவதைப் பற்றித்தான் கனவு காண்கிறேன். அதைப் பற்றிதான் யோசிக்கிறேன். எழுதுகிறேன். நண்பர்களுக்கு நாற்பது, ஐம்பது பக்கங்களில் சாதாரணமாகக் கடிதம் எழுதுகிறேன். எந்த நல்ல படைப்பைப் படித்தாலும் உடனடியாக அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு எழுதுகிறேன். இதில் எந்த விதமான அலுப்புமில்லை. உற்சாகம் கூடுகிறது. என்னுடைய காரியம் என்பதால் இதில் என்ன சோர்வு

   இப்போது என்னிடம் முழுமை பெறாத நிலையில் நான்கு நாவல்கள் இருக்கின்றன; பின் தொடரும் நிழலின் குரல் வெளிவந்த நான்கு மாதங் களுக்குள் `கன்னியாகுமரி' நாவல் எழுதிவிட்டேன்.

   குறைந்தது மூன்று முறை எழுதாமல் எந்தப் படைப்பையும் பிரசுரித்ததில்லை. விஷ்ணுபுரம் எழுதப்பட்டது நான்கு முறை; பின் தொடரும் நிழலின் குரல் மூன்றாவது முறை எழுதின நாவல். ரப்பர், கன்னியாகுமரி எல்லாமே நான்கு முறை எழுதினவை மலையாளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஐந்தாறு முறை திருப்பி திருப்பி எழுதப்பட்டவை. அதில் வருகிற சின்ன சின்ன மாறுதல்கள் கூட முக்கியம். அதில் சலிக்கவே மாட்டேன். எழுத்தில் அலட்சியம் என்பதே இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை உருவாகியிருக்கிறது.

கே : ஆரம்பத்தில் தமிழ் எழுத்தாளராகத்தான் நீங்கள் அறியப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது தொடர்ந்து மலையாளத்திலும் எழுதி வருகிறீர்கள்.

ஜெயமோகன் : `பாஷா போஷினி' என்கிற மலையாளப் பத்திரிக்கையில் தொடர் எழுதுகிறேன். `நோட்டங்கள்' என்கிற அந்தத் தொடர் பிரமாதமாக அங்கு வாசிக்கப்பட்டது. என் மனசில் படைப்புக்கரு தமிழாகத்தான் இருக்கிறது. அதை மலையாளத்தில் மொழி பெயர்க்கிறேன். அவ்வளவுதான். மலையாளத்தில் நான் எழுதும்போது கூட தவிர்க்கமுடியாமல் தமிழ்வார்த்தைகள் வந்துவிடும்.

கே: உலக இலக்கியச் சூழலுடன் ஒப்பிடும்போது தமிழ் இலக்கியத்திற்கான இடம் குறித்து என்ன அபிப்ராயப்படுகிறீர்கள்.

ஜெயமோகன்: க.நா.சு. விலிருந்து சுந்தர ராமசாமி வரை, பலர் தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமில்லை, மேலை இலக்கியங்களில் எதைத் தொட்டாலும், `கிளாசிக்' குகள் என்கிற அபிப்ராயத்தை இங்கு உருவாக்கிவிட்டார்கள். இதை தங்களுக்கேற்ப பார்த்து பயன்படுத்தும் போலிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். குறைந்த பட்ச ஆர்வத்துடன் தமிழ் இலக்கியம் படிக்க வருகிறவர்களைக் கூட மிரள வைத்துவிடுவார்கள். இந்தத் தமிழ் இலக்கியக் குற்ற உணர்வு வேண்டியதில்லை. உலக இலக்கியத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ் இலக்கியத்தைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்வதில் எந்த விதமான நியாமும் கிடையாது. அமெரிக்காவில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளை விட முக்கியமான சிறுகதைகள் தமிழில் இருக்கின்றன; ஆனால் இங்கு அளவு ரொம்ப குறைவு; எழுத்தாளர்கள் குறைவு; வாசிப்புக் குறைவு.

கே: தனி மனித ஒழுக்கத்திலிருந்து உறவுகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் மதிப்பு வரை எல்லாவற்றையும் உடைத்துக் கலகக்குரல் எழுப்புவதுதான் நவீனத் தமிழ் இலக்கியவாதியின் இயல்பு என்கிற தோற்றம் இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜெயமோகன் : எந்தத் தீவிர மனநிலையிலும் உண்மையான தருணங்களும் உண்டு, பாவனைகளும் உண்டு, தமிழ்சூழலில் `கலகக்காரன்' என்கிற பாவனை இன்று மிகவும் கவனிக்கப்படுகிற ஓரளவு செல்லுபடியாகக் கூடிய ஒன்று. இன்று அது ஒரு மோஸ்தராக இருக்கிறது.

   உண்மையில் ஆன்மீகவாதியும், கலைஞனும், தத்துவ சிந்தனையாளனும் நிரந்தரமான கலகக்காரர்களாகவே இருக்க முடியும், ஏனென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எதையும் அவர்களால் முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே எல்லா தரப்பினராலும் எதிர்க்கப் படுகிறவர்களாலும், புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும் தான் அவர்கள் இருப்பார்கள். பலமுத்திரைகள் அவர்கள் மீது குத்தப்படலாம். கலகம் படைப்பு மூலம்தான் வெளிப்படுத்தப்பட வேண்டும். சமரசமில்லாமல், சுய நம்பிக்கையிலும் அது வெளிப்படவேண்டும்.

  நமது கலகங்களில் பெரும் பகுதி நடிப்பு என்பதற்கு அவர்களின் படைப்புகளில் ஆழமற்ற கூச்சல்கள் நிரம்பியிருப்பதே சான்று. உண்மையான கலகம் அதிகாரத்துக்கு எதிரானது. நமது கலகக்காரர்கள் அரசுடன் அந்தரங்கமாகச் சமரசம் செய்து கொண்டவர்கள்.

   இந்தக் காலகட்டத்தில் முற்போக்கு என்று கருதப்படும் ஒரு கருத்தின் மீது ஆழமான சந்தேகம் ஏற்பட்டால் அதை வெளியிட்டு விவாதிக்கும் துணிவு எத்தனை கலகக்காரர்களிடம் உள்ளது. வெளியிட்டால் சக முற்போக்காளர்களிடமிருந்து அவன் தனிமைப் பட நேரும். இதற்கு அஞ்சுகிறவர்கள்தான் இங்கு கலக பாவனை செய்கின்றார்கள்.

   “ உண்மையான கலகக்காரன் தனித்தும், பசித்தும் , விழித்தும் இருப்பான்.''

Click Here Enlargeகே: ஆதிச்சநல்லூர் போன்றவற்றைத் ‘தொன்மைக் கலாசாரம்' என்றும் தஞ்சைப் பெரியகோயில், கம்பராமாயணம் போன்றவற்றைச் ‘செவ்வியல் கலாசாரம்' என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போதைய ‘நவீன கலாசார'த்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்றும் கூறுகிறீர்கள். எப்படி என்பதை விளக்கிக் கூற முடியுமா?

ப: ‘குடிமைப் பண்பாடு' (civic sense) என்பதே நமக்குக் கிடையாது. சில நாட்களுக்கு முன்னால் நான் பாங்காக் செல்வதற்காக சென்னை விமானநிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் செக்-இன் அறிவிப்பு செய்தவுடனே, அனைவரும் தாம் கொண்டு வந்திருந்த பெட்டிகளுடன் முட்டி மோதிக்கொண்டு வழியை அடைத்துக் கொண்டு நின்றனர். ஒரு விமானம் ரிசர்வ் செய்த ஆட்களை விட்டுவிட்டுப் போய்விடப் போவதில்லை. ஆனால் இங்கோ இடம் பிடிப்பதற்குக் கூடுவது போல் கூட்டம். பைகள் கீழே விழுகின்றன. ஒருவரையொருவர் கடுமையாகத் திட்டிக் கொள்கிறார்கள். அத்தனையும் படித்தவர்கள். கணிசமான நபர்கள் வெளிநாடுகளில் வேலைக்குப் போனவர்கள். ஏழெட்டு வெள்ளையர்கள், இரண்டு சீனர்கள், நான்கைந்து இந்தியர்கள் மட்டும்தான் இந்த கும்பல் போகட்டும் என்று பொறுமையாக உட்கார்ந்து இருந்தார்கள். இதுதான் இந்தியா.

சென்னையில் வந்து நீங்கள் இறங்கி விட்டால் போதும், எந்த ஒரு சந்திலும் இதுபோன்ற அராஜகங்களைப் பார்க்கலாம். ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது நாகரிகம் என்றால் என்ன, பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய அறம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இதை யாரும் நமக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்கவுமில்லை. குப்பையைத் தெருவில் போடுகிறோம். தெருவில் அசிங்கம் செய்கிறோம். போட்டி போட்டுக் கொண்டு ஒழுங்கீனமாக நடக்கிறோம். பொது ஒழுங்கைப் பேண முடியாமல் இருக்கிறோம். இந்தக் குறை ஏன் வந்தது?

சிந்துச் சமவெளி நாகரிகமாகட்டும், அதற்கு முந்தையதாகச் சொல்லப்படும் ஆதிச்சநல்லூர் நாகரிகமாகட்டும் நமக்கென்று ஒரு மிகப் பெரிய பண்பாடு இருக்கிறது. இந்தப் பண்பாட்டை நாம் நம்முடைய நாட்டார் பண்பாடு என்று சொல்கிறோம். இந்தப் பண்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒரு கிராமத்திற்குச் சென்று வயதான பாட்டியிடம் பேசினால் கூட அவர்களது அன்பு, நாகரிகம், உபசரிப்பு இவற்றின் மூலம் அவர்களது தொன்மையான பண்பாட்டைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளையரை விட அந்தப் பாட்டியிடம் பண்பாட்டின் உச்சம் அதிகம் இருப்பதை நாம் காண முடியும். அப்படிப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். என்னுடைய படைப்புகளில், அப்படிப் படிக்காத ஆனால் பண்பில் உயர்ந்த நான் சந்தித்த பலரைப் பாத்திரமாக்கியிருக்கிறேன். இந்தப் பண்பு ஆயிரக்கணக்கான வருடங்களாக கூர்தீட்டப்பட்டு இவர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இதைப் பழங்குடிப் பண்பாடு என்று சொல்லலாம்.

உலகத்திலேயே மிகச் சிறந்த சிற்பங்கள், மிக முக்கியமான கட்டடங்கள், மிகச் சிறந்த இசை, ஈடிணையற்ற இலக்கியச் செல்வம் எல்லாம் இருக்குமிடம் தமிழ்நாடுதான். நமது தத்துவங்களின் கூர்மையும், அகலமும் உலகத்திலேயே மிகக் குறைவான தத்துவ மதங்களிடம் தான் இருக்கிறது. அவ்வளவு செவ்வியல் வெற்றியை அடைந்தும் நமக்குக் குடிமைப் பண்பு மட்டும் ஏன் சரியாக அமையவில்லை?

கே: இதற்குக் காரணம் என்ன?

என்னுடைய யூகம் என்னவென்றால், நம்முடைய காலகட்டம் செவ்வியல் கலாசாரம் சிதைவடையும் காலமாக ஆகி விட்டது. இந்தியாவில் உள்ள பெரிய அரசுகள் எல்லாமே போரினால் அழிந்து விட்டன. இந்தியா முழுக்கச் சிறுசிறு கொள்ளைக்காரர்களால் ஆட்சிசெய்யப்படும் நாடாக மாறியது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. ஒரு சின்ன க்யூவில் எல்லோரும் முண்டி அடிக்கின்றனர், நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம்! 50 பேர் இருந்தால் 5 பேருக்குத் தான் கிடைக்கும். 45 பேருக்குக் கிடைக்காது என்பது நம் மனதில் ஊறிப்போய் விட்டது. அந்த அளவுக்குப் பாதுகாப்பற்ற சமூகமாக நம் சமூகம் மாறி விட்டது.

இரண்டாவதாக, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பல்வேறு சுரண்டல்களுக்கிடையே இரண்டு மாபெரும் பஞ்சங்கள் வந்து நாம் அலைக்கழிக்கப்பட்டோம். ‘தாது வருஷப் பஞ்சம்' என்று அதைச் சொல்வார்கள். லட்சக்கணக்கான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டார்கள். இதன் விளைவு பாதுகாப்பற்ற உணர்வு. ஒருவரையொருவர் பார்த்ததும் முதல் கேள்வி ‘சாப்டாச்சா?' என்று கேட்கும் ஒரே இனம் இந்திய இனம்தான். இரண்டு வெள்ளையர் சந்தித்துக் கொண்டால் ‘தட்பவெப்பம் நன்றாக இருக்கிறது' என்றுதான் சொல்வார்கள்.

குடிமைப் பண்பாடு என்பது மேலை நாட்டிலும் தொழிற்புரட்சி வந்த பிறகுதான் உருவாயிற்று. ஆனால் இவை நம்மிடம் பரவி ஐம்பது ஆண்டுகள்தான் ஆகின்றன. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அதற்கு குடிமைப் பண்பை மையமாகக் கொண்ட கல்விமுறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

புத்தாண்டு அன்று தெருக்களில் சத்தம் போட்டுக் கொண்டு செல்லும் பையன்கள் எல்லோருமே படித்தவர்கள்தாம். குற்றாலத்திலோ, ஊட்டியிலோ படித்த பயணிகள்தான் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். ஓவென்று சத்தம் போடுவார்கள். ஒயின் பாட்டில்களைத் தூக்கிப் பாறைமீது எறிவார்கள். பெண்களைக் கிண்டல் செய்வார்கள். ஜட்டியோடு அலைவார்கள். சினிமா தியேட்டர் க்யூவில் பாருங்கள். ஒரு கான்ஸ்டபிள் இருந்தால் போதும். 5000 பேர் இருந்தாலும் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அந்தக் கான்ஸ்டபிள் மட்டும் லத்தியோடு அங்கே இல்லை என்றால் அத்தனை பேரும் முண்டியடிப்பார்கள். நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு மேலே ஒருத்தன் இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான் நாம் இருக்கிறோம். இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மேலே வருவதற்கு அதற்கான கல்வி தேவை. அடிப்படைப் பொருளாதார வளர்ச்சி தேவை.

இன்னுமொரு முக்கியமான விஷயம், இங்கே பெற்றோர்களின் வாழ்க்கை இலட்சியமே பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டு வருவதுதான். இது உலகத்தில் எங்கேயுமே கிடையாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு வெளிநாட்டவரிடம் போய்க் கேட்டால் அவருக்கென்று வாழ்க்கை நோக்கம் இருக்கும், அவர் செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே பிள்ளைகளுக்குச் செய்வார். நாம் நல்ல பொருளாதார வளர்ச்சியை அடையும்போது, நம் பிள்ளைகளை நாம் தான் கரையேற்ற வேண்டும் என்ற நிலை இல்லாதாகும் போது இந்தப் பாதுகாப்பற்ற உணர்வு குறையும். அப்போது வலுவான குடிமையுணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு வரும் என்று நான் நினைக்கிறேன்.

கே: ஸ்டீவன் லீகாக் குறித்துச் சொன்னீர்கள். தமிழிலும் கல்கி, நாடோடி என்று நல்ல நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது நகைச்சுவை அருகிப் போய் விட்டது. நகைச்சுவை எழுத அச்சம் இருக்கிறதா அல்லது தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து போய்விட்டதா?

ப: பொதுவாகவே தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகமிகமிகக் குறைவு. இரண்டு மலையாளிகள் சந்தித்தால் ஒருத்தரையொருத்தர் கடவுளைப் பற்றி, ஜாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி, சாப்பாட்டைப் பற்றி எதைப்பற்றி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். அது வெறும் கிண்டல் என்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.

சமூக முரண்பாடுகளைத் தாண்டிச் செல்வதற்கான அறிவார்ந்த முயற்சிகளை எடுக்கும் போது, தன்னைப் பார்த்தே சிரிக்கும் போது, தன்னைக் கிண்டல் செய்து கொள்ளும் போது நகைச்சுவை உருவாகிறது. இந்த மனநிலை தமிழனிடம் மிகமிகக் குறைவு. தமிழ்நாட்டில் நிறைய விஷயங்களைப் பற்றி சிறிய அளவிலேகூட நகைச்சுவையாகப் பேச முடியாது. இந்த மனநிலையில் இருக்கும் போது நட்பார்ந்த கிண்டலைக் கூட விமர்சனமாகத்தான் புரிந்து கொள்வார்கள். நான் தமாஷாக ஒரு கட்டுரை எழுதியிருந்தால், ‘நீங்கள் அதை விமர்சனம் செய்திருக்கிறீர்களே' என்று கடிதம் வரும். திட்டு வேறு; கிண்டல் வேறு என்பதே பலருக்கு இங்கு புரியவில்லை.

ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது நாகரிகம் என்றால் என்ன, பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய அறம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இதை யாரும் நமக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்கவுமில்லை.
கே: தமிழில் இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கிறது?

ப: பொதுவாக, தமிழில் முழுமூச்சான இலக்கிய விமர்சகர்கள் என்பது வெகு குறைவு. வெங்கட் சாமிநாதன் ஒருவர்தான் இலக்கிய விமர்சகர். மற்றவர்கள் எல்லாம் கலைஞர்கள், இலக்கிய விமர்சனமும் செய்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய விமர்சனத்தில் பல துறைகள், முறைகள் உள்ளன. ஒன்று கல்வித்துறை சார்ந்த இலக்கிய விமர்சனம். ஒரு படைப்பை அடையாளப்படுத்தி, வகைப்படுத்தி, ஓர் அட்டவணைக்குள் கொண்டு வருவது. மற்றொன்று, அழகியல் முறை. இது ஏற்கனவே வந்த முக்கியமான படைப்புகளையும், அதன் அனுபவத்தையும், வடிவத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிற படைப்புகளை மதிப்பிடுவது. சுந்தர ராமசாமி, க.நா. சுப்ரமண்யன், வெங்கட்சாமிநாதன் போன்றோரை அழகியல் விமர்சகர்கள் என்று சொல்லலாம். மூன்றாவது, கோட்பாட்டு விமர்சன முறை. உதாரணமாக, மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் எப்படி இலக்கியத்தை விமர்சிப்பது என்பதை நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் செய்திருக்கிறார்கள். மொழியியலை அடிப்படையாக வைத்து நாகார்ஜுனன், தமிழவன் போன்றோர் செய்திருக்கிறார்கள்.

கே: படைப்பை விடுத்து படைப்பாளியை விமர்சிக்கலாமா?

ப: உண்மையில் விமர்சனம் என்பது படைப்பின்மேல் பல கோணங்களினாலான கூர்ந்த வாசிப்புதான். பல்வேறு அறிவுத்துறைகளோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த அறிவுத்துறையிலுள்ள பல்வேறு விதமான உபகரணங்களையும் பயன்படுத்தித்தான் படைப்பின் உண்மையான மதிப்பை அளவிட முடியும். படிக்கும் போது கண்டு கொள்ளாத பல தளங்களை அந்த விமர்சனம் உங்களுக்குத் தருமானால் அது நல்ல விமர்சனம். சொல்லித் தரவில்லை என்றால் அது மோசமான விமர்சனம்.

அதேசமயம் படைப்பாளியை விமர்சனம் செய்யக் கூடாது என்றில்லை. படைப்பையும், படைப்பாளியையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அயன் ராண்ட் என்ற எழுத்தாளர் ஓர் அறிவுமைய வாதத்தை முன்வைத்தார். அறிவாளிகள்தான் இந்த உலகத்தைத் தாங்குகிறார்கள், மற்றவர்கள் முக்கியம் இல்லை என்ற கோட்பாட்டை முன்வைத்தார். கடைசியில் அவர் மனநிலை பிறழ்ந்து, அயல்நாட்டில் இறந்து போனார் என்ற உண்மை இருக்கிறது. இதில், அவர் அயல்நாட்டில் இறந்தார் என்பதை மட்டும் நாம் பார்க்க இயலாது. அவர் என்னவாக ஆனார், எப்படி இறந்தார் என்பதும் முக்கியம். அந்த உண்மையை விட்டுவிட்டு எழுத முடியாது.

எழுத்தாளன் என்பவன் விமர்சனத்துக்கு உட்பட்ட ஒரு தனிமனிதன். அவன் சமுதாயத்தின் முன் எதை வைக்கிறான், எப்படி முன்வைக்கிறான் என்பதைப் பார்க்கவும், விமர்சிக்கவும் சமுதாயத்திற்கு உரிமை இருக்கிறது.

கே: சாதாரணமாக எழுத்தாளர்கள் தாங்கள் வந்த தடத்தை உள்ளது உள்ளபடிச் சொல்வதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் இணைய தளத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். எப்படிச் சாத்தியமானது?

ப: வணிக ரீதியான எழுத்தாளர், அரசியல் எழுத்தாளர் தம்முடைய வாழ்க்கையை முன்வைக்க அவசியமில்லை. ஆனால் என்னுடைய எழுத்து எனது தேடல்களையும், தவிப்புகளையும், நான் பெற்ற வெற்றிகளையும், தோல்விகளையும் சொல்லக்கூடியது. அதில் என்னுடைய பயங்கள், அச்சங்கள், தேடல்கள், வலிகள் என எல்லாவற்றையும் நான் சொல்கிறேன். என்னுடைய எழுத்துக்களைப் புரிந்து கொள்வதற்கு என்னுடைய வாழ்க்கை முக்கியமானதாகிறது. மற்ற எழுத்தாளர்கள் சொல்லாத ஒரு வரியை நான் சொல்கிறேன் - 'என்னுடைய வாழ்க்கையைப் பார்' என்கிறேன். இங்கு ஏதாவது சமரசங்கள் செய்து கொண்டிருக்கின்றேனா என்று பார்க்கலாம். இந்த வெளிப்படைத் தன்மை எழுத்தாளனுக்கு அபாரமான ஆன்ம வல்லமையைக் கொடுக்கும். அதுதான் அவன் எழுத்தில் உண்மையை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கே: அப்படியானால் நீங்கள் ‘பொலிடிகலி கரெக்ட்' ஆக இருக்க முயற்சிப்பதில்லை, என்று சொல்லலாமா?

ப: ‘Political correctness' என்கிற ஒரு விஷயம் 1970க்கு முன்பாகக் கிடையாது, வார்த்தையும் சரி, அந்தக் கருத்துருவும் சரி. அது எப்படி உருவானதென்றால், வியட்நாம் போர் விஷயம் அமெரிக்காவில் வெடித்தபோது அந்தப் போருக்கு எதிராகப் பேசுவது Political correctness ஆக இருந்தது. கொஞ்சம் ‘முற்போக்கு' என்றால் அவர் கண்டிப்பாக வியட்நாம் போருக்கு எதிராக ஏதாவது பேசுவார், பேச வேண்டும் என்ற உணர்வு அமெரிக்காவில் முகிழ்த்திருந்தது. ஆரம்பத்தில் இது பெர்ட்ரண்ட் ரஸல் போன்றோர் ஒன்றிணைந்து நடத்திய முற்போக்கான விஷயமாக இருந்தது. ஒரு ஐந்து வருடம் கடந்து, அந்த விஷயம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, தன்னை முற்போக்கு என்று காட்டிக்கொள்ள ஆசைப்பட்ட அனைவருமே ஒரே குரலில் வியட்நாம் போரை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அதிலிருக்கும் போலித்தனம் சிலருடைய கண்களுக்குப் பட்டது. எல்லோருமே ஒட்டுமொத்தமாக ‘இதுதான் முற்போக்கு, இதுதான் சரி, இப்படித்தான் இருக்க வேண்டும். வேறு மாதிரி சிந்தனை இருக்கவே கூடாது, வேறு மாதிரி யார் சிந்தித்தாலும் அதெல்லாம் பிற்போக்கு' என்ற கண்மூடித்தனமான எண்ணம் வலுப்பட்டபோது, அதற்கு எதிராக எழுந்த குரல்தான் ‘பொலிடிகலி கரெக்ட்' என்ற கருத்தும் சிந்தனையும்.

அரசாங்கம் அல்லது ஆதிக்கம் ஒரு கருத்தை உருவாக்குகிறது. நீண்டகால மரபியலில் வந்த அந்த ஆதிக்கக் கருத்தியல் இதுதான் சரி என்று சொல்லும்போது, அதற்கு எதிராக முன்னணி அறிவுஜீவிகள் சில கருத்துக்களை உருவாக்கினார்கள். அது மற்றதுக்கு எதிரானது. இதுவும் வந்து ஒருவகையான அதிகார மார்க்கம். அதை ஒப்புக் கொண்டால்தான் நீ முற்போக்கு. இரண்டில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இரண்டும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இதுதான் சரி, இதுதான் முற்போக்கு என்று ஒரு தரப்பு எடுக்கப்பட்டு, அது மிக வலுவாகப் பிரசாரம் செய்யப்பட்டு, எல்லா மீடியாவிலும் அதைத் தவிர வேறு ஏதும் சொல்லப்படாத நிலையில், ஒரு வகையில் சமூகம் அந்தச் சிந்தனையில் மிகப்பெரிய அளவில் மயங்கிப் போய் விடுகிறது.

இந்த முற்போக்கு என்பதற்குள்ளே இருக்கும் சிக்கல்களையோ, ஓட்டைகளையோ எவருமே சொல்ல முடியாமல் போய்விடுகிறது. ஒரு தேர்ந்த சிந்தனையாளன் ஆதிக்கக் கருத்துகளுக்கு எந்த அளவிற்கு எதிராக இருப்பானோ, அதே அளவுக்கு அதற்கு எதிரான political correctness கொண்ட விஷயங்களுக்கும் கொஞ்சம் எதிராகத்தான் இருப்பான்.

இந்த நவீனத்துவம், சார்த்ர், காம்யூ யுகத்தில் political correctness ஒரு பெரிய ஹைப் (hype) ஆனது. இவர்கள் எல்லோருமே politically correct தரப்பை எடுத்தவர்கள் தாம். உலகின் எந்த இடத்தில் புரட்சி நடந்தாலும் அதற்கு உடனடியாக சார்த்ர் தன் ஆதரவைத் தெரிவித்தார். அந்தப் புரட்சி சரியா, தவறா என்றெல்லாம் யோசிக்க மாட்டார். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்தான் அவர், பல புரட்சிகள் உண்மையில் புரட்சியே கிடையாது, அவை ஏற்கனவே இருந்த அமைப்புகளைவிட மிகப் பிற்போக்கான புரட்சிகள் என்று அறிந்து கொண்டார். குறிப்பாக சோவியத் ரஷ்யாவில் பிரஷ்னேவ், குருஷ்சேவ் ஆகியோரின் வருகைக்குப் பிறகுதான் பல விஷயங்கள் அவர் மண்டைக்கு உறைத்தன. அதன் பிறகுதான் உண்மையில் politically correct என்று சொல்லப்படும் பல விஷயங்கள் கண்மூடித்தனமானவை என்ற முடிவுக்கு வந்தார். உலகம் முழுக்க ‘நீ முற்போக்குச் சிந்தனையாளன் என்றால் இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டும்' என்ற எண்ணம் 1950, 60களில் இருந்தது. 70களில் இந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து பின்நவீனத்துவம் வந்தது.

(இன்னும் வரும்...)

சந்திப்பு, படங்கள்: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்

பெட்டிச் செய்திகள்:

"வைக்கம் முகமது பஷீர் ஆகணும்”

நான் இரண்டாவது படிக்கும் பொழுது நடந்த விஷயம் இது. வகுப்பில் ஒவ்வொரு மாணவரையும் எதிர்காலத்தில் என்ன ஆக விருப்பம் என்று ஆசிரியர் கேட்டபோது, மற்றவர்கள் டாக்டர், எஞ்சினியர், கலெக்டர் ஆகணும் என்று சொல்லும் பொழுது, நான் எழுந்து "நான் வைக்கம் முகமது பஷீர் ஆகணும்” என்று சொன்னேன். ஆசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டு, "இதை யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்டபோது, "என் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க” என்று சொன்னேன்.

- ஜெயமோகன்

தலித் இலக்கியத்தில் மட்டும்தான் நகைச்சுவை இருக்கிறது

இன்று நகைச்சுவையைப் பார்க்கும் வாய்ப்பு தலித் இலக்கியத்தில் மட்டும்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத் தங்களையே கிண்டல் செய்து கொள்வதில் தயக்கம் இல்லை. ராஜ் கௌதமன் நாவலில் ஒருவித மெல்லிய நகைச்சுவை எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதுபோன்று சோ. தருமனின் படைப்புகளிலும் இருக்கும். கல்கி, தேவன், கடுகு போன்றவர்கள் எழுதிய மாதிரியான நகைச்சுவையைச் சிறுபத்திரிகைகளில் எழுத முடியாது. சிற்றிதழ்களில் வெளிவரும் நகைச்சுவை எழுத்து ஏதோ ஒருமாதிரி நரம்புகளைத் தொடுவதாகத்தான் இருக்கும். அந்தப் ‘பஞ்ச்'சுக்கான எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஆகவே அந்த நகைச்சுவைக்குள் யாரும் போக விரும்புவது கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.

- ஜெயமோகன்

ஏழைச் சிறுவர்களின் படிப்பார்வம்

நான் ஒருமுறை தேவகோட்டை அருகே உள்ள ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள பார்பர் ஷாப்பில் சில சிறுவர்கள் காத்திருந்து, நாளிதழின் இணைப்பான சிறுவர் இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். மிகழும் ஏழமையான சூழலில் உள்ளவர்கள். ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, கொஞ்சம் கூடத் தரமில்லாத, பொறுப்பில்லாத குழந்தை இலக்கியத்தை, அந்தப் பத்திரிகைகளில் பணியாற்றும் இதழாளர்களே எழுதிவிடுகிறார்கள்.




சூரியக்கதிரில் வெளியான பேட்டியின் முழு வடிவம்

அபாரமான நாவல்கள், அருமையான சிறுகதைகள், அதிரடியான விமர்சனங்கள் எனத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவர் ஜெயமோகன். காடு, விஷ்ணுபுரம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கும், நான் கடவுள், அங்காடித் தெரு போன்ற சினிமா விஷயங்களுக்கும் இந்தத் தலைமுறையில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். வெளிநாடுகளுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தவரை சூரியக்கதிர் பத்திரிகைக்காகச் சந்தித்தோம்.

1) “ இன்றைய தலைமுறையில் தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக விமரிசிக்கப்படும், அதிகமாகப் பாராட்டப்படும் எழுத்தாளராக நீங்கள் விளங்குகிறீர்கள். இந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ?”

தமிழகத்தில் எப்போதுமே, முதன்மை எழுத்தாளர்கள் எல்லாருக்குமே இப்படித்தான் நடத்து வருகின்றது. உதாரணத்துக்குப் புதுமைப்பித்தனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தாளரும் அவர்தான் அதே போல மிக அதிகமாகப் பாராட்டப்பட்ட எழுத்தாளரும் அவர்தான். அவரைப் பிடித்தவர்கள் எவ்வுளவு பேர் இருந்தாலும் அவரைப் பிடிக்காதவர்களும் அதே அளவில் இருந்தார்கள்.

அதற்குப்பிறகு சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இவர்கள் இரண்டு  பேருக்குமே இணையான அளவு ரசிகர்களும் உண்டு, இணையான அளவுக்கு விமர்சகர்களும் உண்டு. அதன் பிறகு என்னுடைய தலைமுறையைப் பார்த்தீர்கள் என்றால், எனக்கென்று தீவிர வாசகர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதே அளவுக்கு விமர்சகர்களும் இருக்கிறார்கள்.

நாளை இன்னும் ஒரு 10-15 வருஷத்தில் இன்னும் ஒரு எழுத்தாளர் வந்து-அதாவது 2030ஆம் ஆண்டுகளின் மையப் புள்ளியாக அவர் இருப்பாராக இருந்தால் அவருக்கும் அதே நிலைதான் இருக்கும்.
இது ஏன் இப்படி நடக்கிறது என்றால்,  மையப் புள்ளியாக இருக்கிற எழுத்தாளர் ஒருவர் வெறுமனே எழுதிக் கொண்டு பேசாமல் இருந்துவிடுவதில்லை. அத்தகைய ஓர் எழுத்தாளர் எழுதுவதுமட்டுமல்லாமல் தன்னுடைய சமகாலத்தைப் பற்றி முழுமையான பார்வையை முன் வைக்கிறார். அரசியல், பண்பாடு என்று எல்லாத் தளத்திலும் தன்னுடைய கருத்தை முன் வைக்கிறார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக சமூகத்தின் மீது ஒரு பாதிப்பை உருவாக்குகிறார்.

அப்படி உருவாக்கும்போது, ஏற்கனவே உள்ள விஷயங்களைப் பாராட்டக் கூடியதாகவும், வளர்க்கக்கூடியவராகவும் மட்டும் அவர் இருக்க மாட்டார். புதுமைப்பித்தன் அவருடைய காலகட்டத்தில் பலரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களும் பலரைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இது எழுத்தாளர்களின் இயல்பு.


எனக்கு உறுதியாக ஒரு விஷயம் தெரியும். இது என்னுடைய மிஷன் (Mission). இதைச் செய்யத்தான் இங்கு வந்திருக்கிறேன். இதில் வரக் கூடிய நன்மைகளையும் தீமைகளையும் நான் அடையக் கடமைப்பட்டவன். இதனால், இதில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். இரண்டாவதாக எல்லாரும் என்னைப் பாராட்டணும், புகழ்ந்து கொண்டாடணும் என்கிற எண்ணம் என்னிடம் கிடையாது. என்னுடைய கருத்துகள் கவனிக்கப்படணும்,அவை பேசப்பட்டு ஒரு பாதிப்பை உண்டாக்கணும் என்கிற நோக்கம் இருக்கிறது. அந்தப் பாதிப்பை உருவாக்குமா என்பதை மட்டும்தான் நான் கவனிப்பேன்.அந்தக் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டால் வருத்தம் இருக்குமே ஒழிய வசைபாடப்பட்டாலோ திட்டப்பட்டாலோ எனக்கு வருத்தம் இல்லை.  நான் குறிப்பிட்ட தரத்துக்குக் கீழ் உள்ள  விமர்சன எழுத்துக்களை நான் படிப்பதில்லை. எனக்கு எதிராக எழுதப்பட்ட எல்லா விஷயங்களையும் எனக்குப் படிக்கும் பழக்கமில்லை.  ‘உங்களை இவர் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்,இருப்பினும் இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது’ ‘ என்று எனக்கு நம்பகமான நண்பர்கள் சொன்னால் மட்டுமே நான் அதைப் படித்துப் பார்ப்பேன்.

 

2) தொப்பி, திலகம் என்பது போலக் கொஞ்ச காலத்துக்கு முன்பாக எழுதினீர்கள்.. இப்போது குங்குமம், திரிசூலம், மாங்கல்யம் என்பது போல ஏதாவது எழுதுவீர்களா ?

(சிரிக்கிறார்).. அது ஒரு நகைச்சுவைக்காக அப்போது செய்தேன். பின்நவீனத்துவ சூழலில் எல்லாவற்றையுமே வேடிக்கையாகப் பார்க்க வேண்டிய மரபு இருக்கிறது. அந்த அடிப்படையில் நான் மிகவும் மதிக்கக் கூடிய எல்லாரைப் பற்றியும் வேடிக்கையாக எழுதினேன். என்னுடைய குருவான நித்ய சைதன்யரைப் பற்றிக் கூட எழுதினேன். என்னுடைய ஆசிரியர்களாக நினைக்கக்கூடிய ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி போன்றவர்களையும் கிண்டல் செய்து எழுதினேன். அந்த வரிசையில் இந்தக் கிண்டல்கள் வந்தன. ஆனால் தொப்பி, திலகம் மட்டும் தனியாக எடுத்துப் பிரசுரித்தபோது அதன் அர்த்தம் மாறிப்போனது. எனவே இதுபோன்ற எழுத்துகளுக்குத் தமிழ்வாசகர்கள் பழக்கம் இல்லாமல் இருந்ததால், அதைத் தொடர்வதை விட்டு விட்டேன்.

 

3) அதிக கவனத்தை ஈர்த்து வரும் தமிழ் சினிமா இயக்குநரான பாலாவுடன் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்கள் ?

பாலா  வாழ்க்கையை வன்மையாகச் சித்தரிக்கக் கூடிய இயக்குநர்.. அதிலும் அழுத்தமான வண்ணங்களில் சித்தரிக்கக் கூடியவர். அவருக்கு சராசரிகளில் ஆர்வம் கிடையாது.. சராசரிக்கு மேல் இருக்கக் கூடிய அல்லது கீழே இருக்கக் கூடிய வித்தியாசமான நபர்கள் மீது கவனம் செலுத்துவார். சராசரியாக சொல்லப்படாத விஷயங்களைச் செல்வதுதான் அவருடைய மிகப் பெரிய பலம். இது போன்ற விஷயங்களுக்கு அவருக்கே சொந்தமான அனுபவத்தளம் அவரிடமே இருக்கிறது. அவர் வாழ்ந்த சூழலில் அவர் சந்தித்த மனிதர்கள் பற்றிய நிறைய சித்திரம் அவரிடமே இருக்கிறது. அவருக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் எல்லாமே வழக்கத்துக்கு மீறிய வாழ்க்கையைச் சொல்வதால் கிடைத்தவை.

4) நீங்கள் பணியாற்றிய மற்றொரு இயக்குநரான வசந்தபாலன்…

வசந்தபாலன், பாலாவுக்கு நேர்மாறானவர். தான் பார்க்கக் கூடிய சராசரி மக்கள் மீது அவருக்கு ஆர்வம் உள்ளது. அவர்கள் வாழ்கிற வாழ்க்கையில் மற்றவர்கள் சொல்லாத விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவார். உதாரணத்துக்கு, ஒரு இளம்பெண் காலையில் 8 மணிக்குக் கடையில் வேலை செய்து முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் போகிறாள்.  காலையில் 8 மணி முதல் 11 மணி வரை வேலை செய்யும் அவளுக்கு எந்தமாதிரியான வாழ்க்கை இருக்கிறது ? அவளுக்குக் கென்று காதல் இருக்கிறதா ? அவள் சினிமா பார்க்க முடியுமா ? அதாவது சராசரி வாழ்க்கையை, சராசரியான பகுதியை எடுத்து, சராசரியாகவே காட்டக் கூடிய இயக்குநர். எப்படி சர்வதேச அளவில் பாலா கவனிக்கப்படுகிறாரோ அதே அளவுக்கு வசந்தபாலனும் கவனிக்கப்படுகிறார் !

5) உங்களை விமர்சனம் செய்யும்போது இந்துத்வாவுடன் தொடர்புபடுத்தி விமர்சனம் செய்வது ஏன் ?

இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எந்த எழுத்தாளர்கள் மீது இது போன்ற விமர்சனங்கள் வரவில்லை என்பதுதான். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் என்று தமிழ்ப்பண்பாட்டுக்குப் பங்களித்த எல்லா எழுத்தாளர்கள் மீதும் இந்துத்வா, அடிப்படைவாதம், பார்ப்பனீயம் என்கிற அடிப்படையில்  விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.

இங்கு தமிழ்நாட்டில் இரண்டு வகையான அரசியல் கெடுபிடிகள் இருக்கின்றன. ஒன்று திராவிட இயக்கம் சார்ந்தது. மற்றொன்று மார்க்ஸிஸ்ட் சார்ந்தது. இதில் விவரமான மார்க்ஸிஸ்ட் உண்டு,  அதாவது மார்ஸியம் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருக்கும்  மார்க்ஸிட்டுகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைவு. பெரும்பாலானவர்கள் இந்தக் கொள்கைகளை மேலோட்டமாகத் தெரிந்து  கொண்டு மேலோட்டமாகப் பேசிக்கொள்கிறார்கள்.

 

ஆகவே  நமது பல்லாயிர வருடப் பாரம்பரியமோ தத்துவ சிந்தனையோ அதனுடைய கலையோ இந்து என்ற அடையாளத்துடன் தான் இருக்கிறது.  அதைப் பற்றி  ஒருவர் பேசினாலோ அவர் இந்துத்வா சார்ந்தவர் என்று கூறிவிடுகின்றனர். இப்படி எல்லாம் அதிகமும்  சொல்பவர்கள் எதையும் படிக்காதவர்கள்.

 

இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்துத் தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக்கொண்டவர்கள் பத்துப் பேர் தான் இருப்பார்கள். நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சொன்னது போல இந்துத்துவம் என்றெல்லாம்  கருத்துக்களைச் சொல்லக் கூடியவர்கள் உண்மையில் சொல்லப்போனால் எதையும் படித்திருக்க மாட்டார்கள். நேரில் அவர்களிடம் போய் நீ என்ன படித்திருக்கிறாய் ? எந்தப் புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய் ? என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. எல்லாரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள் என்பார்கள்.

 

அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.

6) காடு, விஷ்ணுபுரம் போன்ற படைப்புகளுக்கு உங்களை எவ்வாறு (Prepare) தயார் செய்து கொள்வீர்கள் ? அவற்றுக்கு எந்த வகையான இன்புட்ஸ் (inputs) தேவைப்படுகின்றன ?

(சற்று யோசித்தபடியே)… ஒரு கலைஞன் அது எழுத்தாக இருந்தாலும், ஓவியமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட படைப்புக்காகத் தனியாகத் தயார்படுத்திக் கொள்வது மிகக் குறைவாகத் தான் இருக்கும். சில நூல்களுக்கு ஆய்வு தேவைப்படுகின்றது. உதாரணத்துக்கு நான் எழுதிய அசோகவனம், விஷ்ணுபுரம் நாவல்களுக்குத் தனியாகக் கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. விஷ்ணுபுரத்துக்கு ஜோதிடம், கலைகள், சிற்பக் கலை மாதிரியான விஷயங்களுக்குத் தனியாக ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு ரஷ்யாவின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அந்த ஆய்வு என்பது வெறும் 10 சதவிகிதம் தான்.

ஒரு புத்தகம் எழுதும்போதுதான் அந்த ஆய்வை செய்ய வேண்டும்.  ஒரு புத்தகத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ஆய்வு செய்ய முடியாது. புத்தகத்தை எழுதத் தொடங்கிய பிறகு எந்தெந்த விஷயங்களுக்கு என்னென்ன தேவையோ கூடவே ஆய்வும் சேர்ந்து செய்ய வேண்டும்.  எழுதுவதற்கு முன்னர் என்ன தேவை என்பது தெரியாது.

இப்போது ஒரு நாவலை எழுதுகிறேன். எழுத ஆரம்பிக்கும்போதுதான்.. அது சென்னை நகரத்தைக் களமாகக் கொண்டிருக்கிறது,உதாரணத்துக்கு, அதாவது சென்னையில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷா பற்றி எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் அதிகமாக ஆட்டோ ரிக்‌ஷா எந்த ஏரியாவில் இருக்கு ? ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் எந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்  என்று அப்போதுதான்  ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எனவே, சென்னையைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து வைத்துக் கொண்ட பிறகுதான் எழுத வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

 

இதைத் தவிர வருகிற அனுபவங்களுக்கு, தொடர்ந்து எப்போதுமே கண்ணையும் காதையும் திறந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை மாதிரி சிறுவன் மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.உணர்ச்சிகரமாக இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், இவை  நமக்குள் எங்கோ ஒரு  இடத்தில் தேங்கிக் கொண்டே இருக்கும்.

 

உதாரணமாக, இந்த ஹோட்டலுக்கு (’அவர் தற்போது தங்கி இருக்கும் ஹோட்டல்’) முன்பாக ஒரு விக் (Wig) கடை இருக்கிறது. அதில் ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறார். முப்பது நாற்பது தலைகள் வைத்து அதன் மீது விக் (Wig) வைத்து வாடகைக்கு விட்டுக் கொண்டு இருக்கிறார். இதை ஒரு தொழிலாக ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். இதை எப்போதாவது நாம் கவனிக்கிறோம். இப்போது நான் அதை வைத்துக் கதை எழுதப்போவதில்லை. ஆனால், ஒருவன் காலையில் எழுந்து 10 தலைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது ஒரு விசித்திரத்தை ஏற்படுத்துகின்றது. ஏதோ ஒரு கதையில், ஏதோ ஒரு இடத்தில் தானாகவே என்னிடம் இருந்து வெளிவரும்.

7) சிறுகதைக்கு இது போன்ற ஆய்வு தேவைப்படுமா ?

சிறுகதைகளுக்கு ஒரு ஸ்பார்க் (Spark) மட்டுமே போதும். சிறுகதையை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரிந்தால் அதுதான் சிறுகதை. அந்த முடிவு தோன்றிய பிறகு அதன் தொடக்கத்துக்குக் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு எழுத ஆரம்பிக்கிறோம். இதற்குத் தனியாக ஆய்வு தேவைப்படுவதில்லை. ஒரு பார்வையில் (Observation) இருந்துதான் அது தொடங்குகின்றது.

8)ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையில் பொருளாதாரம் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது ?

எழுத்து என்பதை ஒரு தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டால் அது நல்லா இருக்காது… அது தரமான எழுத்தை உருவாக்க முடியாது.. ஆனால் உலகம் முழுவதும் முக்கிய எழுத்தாளர்கள் எல்லாருமே முழுநேர எழுத்தாளர்களாகவும் எழுத்தே வாழ்க்கையாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். காரணம்  இது எனர்ஜி (Energy)  சம்பந்தமான விஷயம்

பொதுவாக, காலை 10 மணிக்கு சென்று ஆபீஸில் கடுமையாக உழைத்து விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பும்போது, கதை எழுதுவதற்கும் சிந்திக்கிறதுக்கும் சக்தி (stamina) குறைந்து போகிறது. இதற்குப் பிறகு  அலுவலகப் பொறுப்புகள் இருக்கின்றன. அந்தப் பொறுப்புகளுடைய சுமைகள் வீட்டில் அழுத்தினால் மீண்டும் எதுவுமே சிந்தனைக்கு வராது.
சென்ற காலகட்டத்தில் அரசாங்க வேலை என்பது கொஞ்சம் சுதந்திரம் உள்ளதாக இருந்ததால், அதிலும் அப்போதைய குமாஸ்தா (Clerical) வேலையில் உள்ளவர்கள் நிறைய எழுதி இருக்கிறார்கள். ஏனென்றால் அதில்  பொறுப்பு கொஞ்சம் குறைவு. அதிகாரியாக இருந்தால் எழுத்து இல்லாமல் போகிறது.ஏனென்றால் அவரைப் பொறுப்புக்கள் அழுத்தி விடுகின்றன.

இப்போது 1990களுக்குப் பிறகு அமெரிக்க நிர்வாக முறை நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் வந்துவிட்டது. ஒரு நிறுவனத்தில் ஒருவன் வேலைக்கு வந்துவிட்டால் அவனுடைய கடைசி உழைப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஓய்வோ சுதந்திரமோ கொடுக்கக் கூடாது என்கிற எண்ணம் எல்லாத் துறைகளிலும் வந்துவிட்டது. இன்று வேலையைப் பார்த்துக் கொண்டு எழுதுவது என்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. இளம் தலைமுறையில் அதிகமாக எழுத்தாளர்கள் வராமல் போனதற்கு இது ஒரு முக்கியமான காரணம். கடுமையான உழைப்பிலேயே வாழ்க்கை போய் விடுகின்றது.


ஆகவே எழுத்து ஒரு வருமானத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்த வருமானம் தமிழ் மொழியில் இல்லை. இதுதான் முக்கியமான சிக்கலாக இருக்கிறது. எப்போது ஒருவன் தனது மனதுக்குப் பிடித்த எழுத்தை எழுதி அதிலேயே ஒரளவுக்குக் கஷ்டப்படாமல் வாழ்க்கை அமைத்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கிறதோ, அந்த சூழலில்தான் ஒரு எழுத்தாளன் நன்றாக வாழ முடியும். ஆனால், இன்று தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் கூட எழுத்தை நம்பி வாழ முடிவதில்லை.

- எம்.பி.சரவணன்



 



     RSS of this page