Home / FinancialPlanning

FinancialPlanning


 
ஃபைனான்ஷியல் பிளானிங்: இந்த வாரம் பேச்சுலர்களுக்கு...



மனித வாழ்க்கையை நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள் ஃபைனான்ஷியல் பிளானர்கள். வேலை கிடைத்து திருமணமாகிற வரையிலான பேச்சுலர் வாழ்க்கை முதல் பாகம், திருமணமாகி குழந்தைகள் வளர்ப்பது வரை இரண்டாம் பாகம், அவர்களுக்கான சொத்து பத்து சேர்த்து வைப்பது மூன்றாம் பாகம், ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவது நான்காம் பாகம்...

தில் மிகவும் முக்கிய மானது 23 - 27 வயது வரை உள்ள இளைஞர் பருவம். இந்த வயதில் சரியாக நிதித் திட்டமிடல் செய்பவர்கள் கடைசி காலத்தில் காலாட்டிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிப்பார்கள். 'லைஃப்-ஐ அனுபவிக்கணும்டா’ என்று டயலாக் விடுபவர்கள், திருமணமான பிறகு இ.எம்.ஐ.

சிக்கலில் மாட்டி பரிதவிப் பார்கள்! இந்த சிக்கலைத் தவிர்க்க 23 -27 வயதுள்ள இளைஞர்கள் தங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் நிதி ஆலோசகரான ஹரிணி.

பேச்சுலர்ஸ்!

23 - 27 வயதுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் இதுவரை அப்பா தந்த பாக்கெட் மணியையும், அம்மாவிடம் நைஸாகப் பேசி வாங்கிய பணத்தையும் வைத்து செலவு செய்து வந்திருப்பார்கள். ஆனால், கையில் முதல் மாதச் சம்பளம் கிடைத்தவுடன் கண்ணில் பட்ட அனைத்தையும் வாங்க நினைப்பார்கள். முதல் சம்பளத்தில் அப்பா, அம்மா, அக்கா, தம்பிகளுக்குப் பிடித்ததை வாங்கித் தருவதோடு, நண்பர்களுக்கு ட்ரீட்டையும் தந்துவிட்டு, நிதித் திட்டமிடலை தொடங்கி விடலாம்.

இன்ஷூரன்ஸ்!

படித்து முடித்து வேலைக்குப் போனதும் ஆணோ, பெண்ணோ முதலில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். 'இன்ஷூரன்ஸா, அதுவும் ஓடுற பாம்பை கையில பிடிக்கிற இந்த வயசிலேயேவா?’ என்று கேட்கத் தோன்றும் வயது இது. ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசியை எவ்வளவு குறைவான வயதில் எடுக்க முடிகிறதோ, அவ்வளவு குறைவான வயதில் எடுத்தால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் பெறலாம். தவிர, இளவயதில் பெரிய நோய் ஏதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அது தொடர்பான ரைடர் பாலிசிகளையும் தவிர்த்து விடலாம்.

இந்த வயதுடையவர்கள் தங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்குக்கு பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இன்ஷூரன்ஸ் என்ற வுடனே எல்லோரும் எண்டோவ்மென்ட் பாலிசிகளையே எடுக்கிறார்கள். இந்த வயதுக்காரர்களுக்கு எண்டோவ்மென்ட் பாலிசிகளைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளே பொருத்தமானதாக இருக்கும். திருமணமான பிறகு தேவைப்பட்டால் மட்டும் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுக்கலாம்.

இந்த வயதில் உள்ளவர்களுக்கு பெரிய நோய் எதுவும் வராது என்றாலும், மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். தன்னோடு தன் பெற்றோர்களுக்கும் சேர்த்து எடுக்கலாம். வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் கூடுதல் கவரேஜில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் நம்மை நம்பி இருப்பவர்களை நட்டாற்றில் விடத் தேவையில்லை என்பதோடு, வரிச் சலுகையும் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.

ரியல் எஸ்டேட்!

இப்போதைய இளைஞர்கள் அனைவரும் சம்பளம் வாங்க ஆரம்பித்தவுடனே வீடு, நிலம் வாங்க புறப்பட்டு விடுகிறார்கள். 23, 24 வயதில் வேலைக்குச் சேர்ந்து டிரெய்னிங் பீரியட்,  புரஃபேஷன் பீரியட் என பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். இந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்னையால் வேலை இழக்க வாய்ப்புண்டு. எனவே, வேலை உறுதியாகும் வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எந்தவிதமான தனிநபர் கடனோ, வீட்டுக் கடனோ வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

இதற்காக ரியல் எஸ்டேட் பற்றி யோசிக்கவே வேண்டா மென்று சொல்லவில்லை. எவ்வளவு தொகைக்கு வீடு அல்லது மனை வாங்கப் போகிறீர்கள் என்று தீர்மானித்துவிட்டு அதற்குத் தேவையான தொகையில் கால் சதவிகிதத்தைச் சேமிப்பது நல்லது. உதாரணத்திற்கு, இருபது லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்க ஆசைப்பட்டால் ஐந்து லட்சம் ரூபாய் வரை சேமித்துவிட்டு, மூன்று வருடங்கள் கழித்து யாரிடமும் கைநீட்டாமல், அதுவரை சேமித்து வந்த சொந்தப் பணம் மற்றும் வங்கிக் கடன் மூலம் வீடு வாங்கலாம்.

இந்த வயதில் உள்ளவர்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது எவ்வளவு ரூபாய்க்கு கடன் வாங்குகிறார்களோ, அந்த தொகைக்கு இணையான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அவசியம். ஏனெனில், கடன் வாங்கிய பிறகு ஏதாவது அசம்பாவிதம் நடந்து கடன் கட்ட முடியாமல் போனால், பெற்றோர்கள் கஷ்டப்பட்டு அந்த கடன் பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், இந்த பாலிசி எடுத்தால், பெற்றோர்கள் பணம் எதையும் கட்டாமலே அந்த வீட்டின் உரிமையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.  

தங்கம்!

இளம்பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவன் இருக்குமிடத்திற்குப் போயாக வேண்டும் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பாக வீடு வாங்கியிருந்தால் அதனால் சில சிரமங்கள் ஏற்படலாம். ஒருவேளை திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல முடியாதபட்சத்தில் அந்த வீட்டுக்கான கடன் சுமை கணவனின் தலையில்தான் விழும். எனவே, இளம்பெண்கள் வேலைக்குச் சேர்ந்ததும் ஹவுஸிங் லோனில் ஃபிளாட் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்தால், திருமணத்தின்போதும், திருமணத்திற்குப் பிறகும் நிச்சயம் உதவும். ஆபரணமாகத்தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. கோல்டு இ.டி.எஃப்., கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் திட்டங்கள் மூலமும் சேமிக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்!

ஆண், பெண் என இரு தரப்பினருக்குமே மிகவும் ஏற்றது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. எஸ்.ஐ.பி. முறையில் நல்ல வருமானம் தரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மன்த்லி இன்கம் குரோத் பிளானில்கூட முதலீடு செய்து வரலாம். சில நிறுவனங்களில் மன்த்லி இன்கம் பிளானில் தங்கத்தில் சில சதவிகிதங்கள் முதலீடு செய்யும் திட்டங்களும் இருக்கின்றன. அதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கு வரி கட்ட வேண்டியதில்லை.

வங்கி டெபாசிட்!

வங்கி டெபாசிட்டில் முதலீடு செய்தால், போட்ட பணத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், பணவீக்கத்தைவிட குறைந்த வருமானமே கிடைக்கும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்தாலும் பிரச்னை இல்லை என்கிற இந்த வயதில் வங்கி டெபாசிட் என்பது வீண்தான்!

பங்குகள்!

ரிஸ்க் எடுக்கும் வாய்ப்புகள் கொண்ட இளைஞர்கள், பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்யலாம். 50,000 சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 5,000 ரூபாய் வரை பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல லார்ஜ்கேப் பங்குகள், புளூசிப் கம்பெனி பங்குகளாகப் பார்த்து நீண்ட காலத்திற்கு வாங்கிப் போடலாம். சந்தை கீழே இறங்கும்போது கூடுதலாக பங்குகள் வாங்கிச் சேமித்தால் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன் கிடைக்கும்.  

மற்ற முதலீடுகள்!

வங்கி டெபாசிட்கள் 8.5 -10% வட்டி தருகிறது என்றால், கம்பெனி டெபாசிட்கள் 10.5 - 12.5% வரை வட்டி தருகின்றன. நல்ல நிவாகம், அதிக ரேட்டிங், மிகவும் வலுவான நிதிநிலை கொண்டுள்ள கம்பெனி டெபாசிட்டுகளாகப் பார்த்து போடலாம்.  அத்துடன் பங்குகளாக மாற்ற முடியாத டிபஞ்சர்களில்கூட முதலீடு செய்யலாம். பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டில் வருடத்திற்கு 70,000 ரூபாய் வரையில் சேமிக்கலாம். பங்குகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்பாத பெண்கள், தேசிய சேமிப்புப் பத்திரம் போன்ற ரிஸ்க் அல்லாத முதலீடுகளில் நீண்ட காலத்திற்குச் சேமிக்கலாம்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற மாதிரி வயதிருக்கும் போதே நிறைய சேமித்து, சரியாக முதலீடு செய்வது அவசியம் என்பதை இளைஞர்களும், இளம்பெண்களும் புரிந்து கொண்டால் சரி.

- பானுமதி அருணாசலம்.



புதுமணத் தம்பதிகளுக்கான 'பொக்கிஷ' வழிகாட்டி!

திருமணமாகாத பேச்சுலர்கள் எப்படி நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பதைக் கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில், திருமணம் ஆன இளைஞர்கள் எப்படி நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடலை வழங்குகிறார் நிதி ஆலோசகர் ஹரிணி.

பெரும்பாலும், 27 வயதிலிருந்து அதிகபட்சமாக 32 வயதிற்குள் திருமணம் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது. தங்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து திருமணத்தை முடிப்பதுபோல், வருங்காலத்திற்கும் சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்து சேமித்தால் உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியாகும்.

பட்ஜெட் போடுங்கள்!

இதுவரை தனக்கும், தனது பெற்றோருக்குமான தேவையைப் பூர்த்தி செய்து வந்த வாழ்க்கை, இனி புதிய திசையை நோக்கி நகரும் காலகட்டமிது. சரியான திட்டமிடல் இருந்தால்தான் இந்த காலகட்டத்தில் வாழ்க்கை சுமூகமாகச் செல்லும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறவர்களாக இருந்தால், இருவரும் உட்கார்ந்து மாத வருமானம் எவ்வளவு? எவ்வளவு செலவாகும்? எதிர்காலத் தேவை என்ன? என்பதை எல்லாம் பேசி, குடும்பத்திற்கான திட்டத்தை தீட்ட வேண்டும்.

முதலில், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். புதுசாக கல்யாணம் ஆன சோக்கில் தாம்தூமென்று செலவு செய்யாமல், பட்ஜெட் போட்டு செலவு செய்தால்தான் வரவு என்ன, செலவு என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். இருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்கு இருந்தாலும், குடும்பச் செலவை சமாளிக்க ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் எடுத்துக் கொள்வது நல்லது. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை சரியான முறையில் கையாள வேண்டும். வெளிநாடு செல்ல கடன், புது மனைவிக்கு புது கார் வாங்க கடன் என இப்போதே இறங்கிவிட வேண்டாம்.

அவசரத் தேவைக்கு..!

இப்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிவது அதிகரித்து வருகிறது.  கூடவே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு தாவுவதும் வழக்கமாகி விட்டது. அதனால், திடீரென வேலையை விடும்படி வந்துவிட்டால் அடுத்த வேலை கிடைக்கும் வரையில் குடும்பத்தை நடத்த பணம் தேவைப்படும். தவிர, திடீர் செலவுகளையும் சமாளிக்க வேண்டியதிருக்கும். அதற்காக மாதத்தில் 15% வரை சேமிக்க வேண்டும். இதனை லிக்விட் ஃபண்டுகளில் போட்டு வந்தால், இதுபோன்ற அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ்!

தகுந்த ஆலோசனை இல்லாமல் யூலிப் போன்ற திட்டங்களில் பணத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில் முதலீடும், காப்பீடும் தனித்தனி யாக இருக்க வேண்டுமே தவிர, இரண்டும் ஒரே திட்டத்தில் இருப்பது சரியாகாது. எனவே, யூலிப் போன்ற திட்டங்களில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை நம்பி பணத்தைப் போட வேண்டாம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும், எடுத்திருக்கா விட்டாலும் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். தவிர, உங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்கிற்கு கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு டேர்ம் பாலிசி எடுப்பது  அவசியம். இது உங்களுக்குப் பிறகு குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும்.

பங்கு முதலீடு!

பங்கில் முதலீடு செய்ய சரியான தருணம் இது. மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் எனில் 5,000 ரூபாய்க்கு பங்கில் முதலீடு செய்யலாம். நீங்கள் செய்யும் முதலீடு நீண்ட காலத்திற்கானது என்பதால் இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ. போன்ற நல்ல பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம். இதேபோல் எஸ்.ஐ.பி. முறையில் மியூச்சுவல் ஃபண்டிலும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் கட்டி வரலாம்.  


ரியல் எஸ்டேட்!

சென்ற வாரம் சொன்னது போல, வீடு வாங்குவதில் அவசரம் காட்டத் தேவை யில்லை. திருமணம் முடிந்து இரண்டு, மூன்று வருடங்கள் டெப்ட் ஃபண்டில் சேமித்த பிறகு வீடு வாங்க அல்லது இடம் வாங்கி வீடு கட்டும் வேலையில் இறங்கலாம். கையில் ஓரளவுக்குப் பணமிருந்தால் வங்கிக் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புண்டு.  இதற்காக முழுப் பணத்தையும் சேர்த்த பிறகே வீடு வாங்குவேன் என்று காத்திருக்கத் தேவையில்லை.

இந்த சமயத்தில் கொஞ்சம் முதலீட்டை தங்கத்தில் போட்டு வைப்பது நல்லது. நகையாகவோ காயினாகவோ வாங்காமல் கோல்டு இ.டி.எஃப். மற்றும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

குழந்தைகளுக்கான சேமிப்பு!

ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ முடிந்த வரை சீக்கிரமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக் காகவும் இப்போதிருந்தே சேமிக்க ஆரம்பியுங்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு தேசிய சேமிப்பு பத்திரம், பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். கணவன் - மனைவி என இருவரும் முடிந்த தொகையை வருடத்திற்கு பி.பி.எஃப்.-பில் முதலீடு செய்யலாம்.


ஒய்வுகாலத் திட்டம்!

இளமைக் காலத்தில் சம்பாதித்த பணம் முதுமையிலும் கை கொடுக்க இப்போதிருந்தே திட்டமிடுவது அவசியம். 30 முதல் 58 வயது வரை சேமிக்கும் சேமிப்பு அதன்பிறகு வாழும் முதுமைக் காலம் முழுமைக்கும் உதவியாக இருக்கும். ஓய்வுகால சேமிப்பிற்குப் பங்கு முதலீடு மற்றும் டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 50,000 ரூபாய் வரை இந்த இரண்டிலும் முதலீடு செய்தால் முதுமைக் காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும்.

உங்கள் முதலீட்டை தபால் நிலைய ஆர்.டி., வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், தங்கம் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யும்போது எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

- பானுமதி அருணாசலம்


செல்லமே! என் செல்வமே!
திட்டமிடல்

திருமணம் ஆன தம்பதிகள் எப்படி நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தோம். இந்த இதழில், குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களின் திருமணம், படிப்பு போன்ற விஷயங்களுக்காக எப்படி திட்டமிட வேண்டும் என்பதைப் பார்க்கலாம்... 

ல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் எனப்படும் இந்த இரண்டு தருணங்களையும் விட மிக முக்கியமான தருணம் வாழ்க்கையின் இந்த மூன்றாவது நிலை. குழந்தைகள் வளர்ந்து பெண் பிள்ளை எனில் அவளின் படிப்பு, திருமணத்திற்காகவும், ஆண் பிள்ளை எனில் அவனின் படிப்பிற்காகவும் திட்டமிட இதுதான் சரியான நேரம். கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும் கவனமாக கையாள வேண்டிய காலகட்டம் இது என்பதால், இந்த நேரத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிடுகிறார் நிதி ஆலோசகர் ஹரிணி..

இலக்கை அடைய..!

''சிறிய இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைய தெளிவான பாதையை வகுத்துக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம். வாழ்க்கைக்கான இலக்குகள் அதிகமாகிக் கொண்டே போனால் அதை நடைமுறைப்படுத்துவதிலும் அதிகளவிலான சிக்கல்கள் இருக்கும். இந்த சிக்கல்களை அழகாக சரி செய்து இலக்கை அடைவதே சிறந்த வழி.

ஒவ்வொரு இலக்கிற்கும் வித்தியாசமான முதலீட்டு முறையை செய்ய வேண்டும். உங்களின் இன்றைய முதலீடு தான் நாளை உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே உங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும் என முடிவு செய்து அதற்கு தகுந்த சேமிப்பை இப்போதிலிருந்தே மேற்கொள்வது நல்லது.

குழந்தை பிறந்ததும்..!

இந்தியாவில் வடநாட்டில் ஒரு கிராமத்தில் குழந்தை பிறந்ததும் மரக்கன்றை நட்டு வைப்பார்களாம். அதுபோல உங்களுக்கு குழந்தை பிறந்ததும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நல்லது. ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ இருவருக்கும் படிப்பு, திருமணம் என இப்போது இருப்பதைவிட அவர்கள் வளரும்போது படிப்புச் செலவு இன்னும் பல மடங்கு ஆகும்.

அதனால், குழந்தை பிறந்ததும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து விட்டால் அவர்கள் வளர வளர அந்த நிலத்தின் மதிப்பும் அதிகரிக்கும். இப்போது ஐந்து லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள் எனில், உங்கள் மகனின் படிப்பு அல்லது மகளின் திருமணத்தின்போது அது ஒரு கோடி ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ஏற்கெனவே அப்பார்ட்மென்ட் இருக்கும் பட்சத்தில் முதலீட்டு முறையில் இன்னொரு அப்பார்ட் மென்ட் வாங்குவது சிறந்த முதலீடு கிடையாது. காரணம், அந்த அப்பார்ட்மென்ட் மூலம் கிடைக்கும் வாடகை

தொகை இ.எம்.ஐ. கட்டுவதற்கு கூட போதுமானதாக இருக்காது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வில்லங்கம் இல்லாத, அனைத்து அனுமதிகளையும் முறையாக பெற்ற இடம்தானா என்பதை பார்த்துவிட்டு வாங்கினால், எதிர்காலத்தில் விளையப் போகும் நன்மைகளை நம்மால் பெற முடியும்.  


இன்ஷூரன்ஸ்!

குழந்தை பிறந்ததும் ஃப்ளோட்டர் முறையில் குழந்தையின் பெயருக்கும் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. யூலிப் பாலிசிகளில் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டாம். சிலர், 'வருமானம் அதிகம் கொடுக்கும்; உங்க பொண்ணு கல்யாணத்தின்போது அதிகமா தொகை கிடைக்கும்’ எனச் சொல்லி கண்ட பாலிசிகளையும் தலையில் கட்டுவார்கள். ஆனால் உங்களின் தேவை, குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றைப் பொறுத்து பாலிசிகளை தேர்வு செய்து கொள்ளவும்.

உங்கள் குழந்தை பதினெட்டு வயதில் கல்லூரி படிப்பிற்குச் செல்கிறார் எனில், டிரெடிஷனல் பிளான்களை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் மகளின் திருமணம், மகனின் உயர்படிப்பு போன்ற வருங்காலத் தேவைக்கு மணி பேக் பாலிசியும் நல்ல சாய்ஸ்.

மியூச்சுவல் ஃபண்ட்!

இப்போ உங்க குழந்தை எல்.கே.ஜி. படிக்கிறான்னா மாதம் மாதம் எஸ்.ஐ.பி. முறையில குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது முதலீடு செய்துகிட்டு வாருங்கள். இப்படி நீங்கள் இப்போ செய்யுற முதலீடு உங்க குழந்தை வளர்ந்து நிற்கும் போது மிகப் பெரிய தொகையா அப்போதைய தேவைக்கு கைகொடுக்கும். இந்த தொகையையும் உங்கள் குழந்தையின் வருங்கால கனவைப் பொறுத்து, உங்களின் வருமானத்தைப் பொறுத்து நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.  


ஈக்விட்டி!

நல்ல நிறுவனப் பங்குகளில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வரலாம். நீண்டகால தேவையின் அடிப்படையில் பார்க்கும்போது நல்ல வருமானம் கொடுக்கும்.

தங்கம்!

உங்களின் குழந்தை பையன் என்றால் தங்கத்தில் குறைவாகவும், அதுவே குழந்தை பெண் எனில் அதிகமாகவும் முதலீடு செய்யலாம். கடந்த இதழ்களில் சொன்னது போல், மாதம் குறிப்பிட்ட தொகையில் இ.டி.எஃப். மூலம் தங்கம் வாங்குவது நல்லது.

ஈக்விட்டியில் போடும் பணம் கல்லூரி படிப்பிற்கு, மணிபேக் பாலிசி பணம் உயர் கல்விக்கு, ஃபண்டில் போடும் பணம் திருமணத்திற்கு என நீங்களாக முடிவு செய்து சேமித்து வந்தால் வருங் காலத்தில் அதை திரும்ப எடுக்கும்போது சரியாக இருக்கும்.

முதலீட்டைத் திரும்ப எடு!

மணிபேக் பாலிசியில் பணம் போட்டு வந்தால், அதன் முதிர்வு காலத்தில் தானாக பணம் வந்து சேர்ந்து விடும். எவ்வளவு வருமானம் கிடைக்கும் எனவும் தெரிந்து விடும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகளில் நீண்ட காலத் தேவைக்காக முதலீடு செய்திருந்தால் அதனை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். உங்கள் மகனின் படிப்பிற்காக நீங்கள் செய்து வரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு முடிவடைய இன்னும் ஐந்து வருடம் இருக்கிறது எனில், நீங்கள் சந்தை இறங்கிவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை.

ஆனால், இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது எனில், உங்கள் போர்ட்ஃபோலியோவை கண்கொத்தி பாம்பாகக் கவனிப்பது அவசியம். பங்கு, ஃபண்டுகள் ஆகியவற்றில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டை சந்தை உச்சத்தில் இருக்கும்போது எடுத்துவிடுவது நல்லது. அதனை எடுத்து, பிறகு லிக்விட் ஃபண்டில் போட்டு வைத்தால், அந்த பணம் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.

மற்ற திட்டங்களான பி.பி.எஃப்., இன்ஷூரன்ஸ், ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவைகள் அதன் முதிர்வு காலத்தில் சரியாக வந்துவிடும். இதை எல்லாம் தினம் தினம் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் சிறப்பு. சேமிப்பு எவ்வளவு முக்கியமோ அதனை தக்க நேரத்தில் திரும்ப பெறுவதும் மிக முக்கியம். அதனை சரியான நேரத்தில் செய்து கொண்டால், நீங்கள் இவ்வளவு நாள் சேமித்ததற்கு பலன் கிடைக்கும்.

35 - 45 வயதில் இதனை எல்லாம் நீங்கள் செய்து முடித்திருக்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கு ஒரு வளமான  எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்த நிம்மதியோடு எதிர்காலத்தைக் கழிக்கலாம்.

-பானுமதி அருணாசலம்
படம் : சொ. பாலசுப்ரமணியன்






     RSS of this page