Home / EnnaVendumEngalukku

EnnaVendumEngalukku


All parties waiting for 3rd (or 1st!) Umpire
வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 15 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து (வேளாண்மை, மின்சாரம், உயர்கல்வி, உணவுநிர்வாகம், மீன்வளம், பள்ளிக்கல்வி, சிறுதொழில், போக்குவரத்து, உப்பு, சுகாதாரம், ஆதிதிராவிடர்நலம், நீர்வளம், கரும்புவிவசாயிகள் & ஊரகவளர்ச்சி) மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.
என்ன வேண்டும் எங்களுக்கு? வேளாண் துறை...கே.எம்.சந்திரசேகரன்

First Published : 29 Apr 2011 12:57:29 AM IST
என்னதான் தொழில் வளம் பெருகினாலும், எல்லா மக்களுக்கும் உணவிட உழைக்கும் விவசாயிகளின் வருமானத்துக்கு உத்தரவாதம் கிடைக்க தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், சமூக நல அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் விவசாயத்தை சேர்த்தால், விவசாயத்துக்கு ஆள்கள் கிடைப்பதுடன், ஆண்டுக்கு 100 நாள் என்பதை 150 நாள் என்று அதிக நாள்கள் வேலை தரலாம் என்கின்றனர்.

உணவு உற்பத்தி பெருகி வருகிறது என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும் உணவு தானியங்களின் விலை உயர்ந்து வருவதை யாரும் மறுக்க முடியவில்லை. முதல்வர் கருணாநிதியும்கூட, விலைவாசி உயர்வின் தாக்கம் ஏழைகளைப் பாதிக்காதிருக்கும் வகையில் மலிவு விலையில் மளிகைப் பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறோம் என்றுதான் கூற முடிகிறதே தவிர, விலைவாசி உயரவில்லை எனக் கூற முடியவில்லை.

இவ்வளவு விலை உயர்விலும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்று திமுக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் பெருமிதம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்த உணவுப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மட்டும் உயராமலே உள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால் மாதச் சம்பளம் என்ற வருமான உத்தரவாதம் இருக்கிறது. வணிகத்தில் ஈடுபடுவோருக்கு வணிகத்தைப் பொருத்து லாபம் அமைகிறது. ஆனால் விவசாயத்தில் மட்டும்தான் தனது வருமானத்தை விவசாயி யாரும் நிர்ணயிக்க முடியாத நிலை இருக்கிறது.

எனவே விளைபொருள்களுக்குத் தாங்களே விலை நிர்ணயம் செய்யக் கூடிய ஒரு நடைமுறையை புதிய அரசு உருவாக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். குறிப்பிட்ட தானியத்தை விளைவித்தால் குறைந்தபட்ச விலையாக குறிப்பிட்ட ஒரு தொகை நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நகரங்களில் அரிசியின் அளவுக்கு ராகி, கம்பு போன்ற தானியங்களும் சுத்தம் செய்து பாக்கெட்டில் விற்கப்படுகின்றன.

இதை இன்னும் மேம்படுத்தி ரேஷன் கடைகளிலும் மற்ற பொருள்களுடன் இந்த தானியங்களை வழங்கினால் மக்களின் ஆரோக்கியம் மேம்படும், அத்துடன் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.

இவ்வாறு செய்தால், புன்செய் தானிய விளைச்சலில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்கின்றனர் விவசாய நல அமைப்பினர்.

தண்ணீர் வளம் உள்ள நிலங்களில் உணவுப் பயிர் சாகுபடி செய்வது படிப்படியாக குறைகிறது. பணப் பயிரில்தான் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே உணவுப் பயிர் விளைச்சலை ஊக்குவிக்க, வெளிநாடுகளில் உள்ளதுபோல மாதாந்திர மானியம் தருவது பற்றியும் பரிசீலிக்கலாம்.

மானாவாரி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அரசின் பெரும்பாலான மானியத் திட்டங்களால் பலன் கிடைப்பதில்லை. எனவே அவர்களை மனதில் கொண்டு சில திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

விவசாய நிலத்தின் வளம் படிப்படியாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கவும், இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கூடுதல் மானியத் திட்டங்கள் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

விவசாய நிலத்தில் சாத்தியமாகும் இடங்களில் குட்டைகள் அமைத்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க ஊக்குவிப்புத் திட்டங்கள் உருவாக்கலாம் என நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வழிவகை காணப்பட வேண்டும். கேரளம், கர்நாடகத்தில் என்டோசல்பான் மருந்துக்கு தடை வந்துவிட்டாலும், தமிழகம் இன்னும் யோசிக்கிறது. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இதுபோன்ற விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகளின் மிச்சங்கள் உணவுப் பொருள்களில் கலந்துவிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆந்திரத்தில் இயற்கை முறை விவசாயத்துக்கு மத்திய அரசு உதவியுடன் விவசாய குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தில் 25 சதவீத விளைநிலங்களை இயற்கை முறை விவசாய நிலங்களாக மாற்ற அந்த அரசு இலக்கு நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்த விவசாய முறைக்கு மாறிய விவசாயிகள், கடன்களில் இருந்து மீண்டு கைவசம் சேமிப்பும் வைத்திருக்கும் அளவுக்கு அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்துவிட்டது. இதை நேரில் ஆய்வு செய்து உரிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

கிராமங்களில் குறிப்பிட்ட நேரத்தில், உரிய அழுத்தத்தில் மின்சப்ளை இல்லாமல் போவதால் மோட்டாரின் வயர்கள் எரியும் நிலை உள்ளது. ஒருமுறை வயர்கள் எரிந்தால் ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகும். எனவே எந்த நேரத்தில் மின் சப்ளை கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்த நேரத்தில் உரிய மின் அழுத்தம் இருக்க வேண்டும்.

அடுத்ததாக, விவசாய நிலங்களில் புங்கன் விதை, காட்டாமணக்கு விதை போன்றவை மூலம் தயாரித்த எண்ணெயைக் கொண்டு மோட்டார்களை சில விவசாயிகள் இயக்கி வருகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் இதை தங்கள் நிலத்திலேயே செய்ய முடியுமா, அதற்கான சாத்தியக்கூறு என்ன என ஆய்வு செய்து, தேவைப்படும் உதவிகளை அரசே மானியமாக அளித்து, மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால், விவசாயி தேவைப்படும் நேரத்தில் மோட்டாரை இயக்கிக் கொள்ளலாம், மின்சார தடை என்ற பிரச்சினையே அவர்களுக்கு இருக்காது என்கின்றனர். மரபுசாரா எரிசக்தித் துறை மூலம் இதற்காக பெரியதொரு திட்டத்தை தீட்டலாம் என்கிறார்கள்.

தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்த பயிர்களுக்கான ஆராய்ச்சியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மறைமுகமாக நடக்கும் ஆராய்ச்சிகளையும் நிறுத்த வேண்டும். தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக நிபுணர்களின் மொத்த கவனமும், சிக்கன முறையிலான விவசாயத்தின் மூலம் அதிகபட்ச வருவாய் ஈட்டுவதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதாகத்தான் இருக்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.

கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. எனவே ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் விவசாய வேலைகளைச் சேர்த்து, பாதி கூலியை விவசாயியும், மீதி கூலியை அரசும் தரலாம். இதனால் விவசாயத்துக்கும் ஆள் கிடைக்கும்; அரசு நிதி ஒதுக்கீட்டில் பணம் மிச்சமாவதால் கூடுதலாக 50 நாள்களுக்கு வேலை தரலாம் என்கிறார்கள் விவசாயிகள்.

65 வயதைத் தாண்டிய விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தரும் திட்டம் ஒன்று அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு தேர்தல் வந்ததால் அதில் முன்னேற்றம் எதுவும் இல்லை.

விவசாய நிலத்தைப் பாதுகாப்பது, விவசாயத்தைப் பாதுகாப்பது, விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்க உத்தரவாதம், நில வளம், நீர் வளம் பாதுகாப்பு, மோட்டார்களை இயக்க மாற்று ஏற்பாடுகள்,விவசாயத் தொழிலுக்கு ஆள் கிடைக்க ஏற்பாடு, தொழிலாளர்களுக்கு வருவாய் மற்றும் ஓய்வூதிய ஏற்பாடு ஆகியவற்றைச் செய்தால் அடுத்து வரும் அரசு விவசாயத் துறையில் பெரிய முன்னேற்றத்துக்கு வழி ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை
கே.பாலசுப்பிரமணியன்
First Published : 01 May 2011 01:22:41 AM IST

வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

- ஆசிரியர்.

ட்டப் பேரவை முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் வரை அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னைதான் முக்கிய விவாதப் பொருள். இதனால் பொதுமக்கள் அனுபவித்த, அனுபவித்து வரும் தொல்லைகள் ஏராளம். தொழில் துறையும், அதனால் பயனடைந்து வரும் லட்சக்கணக்கானோரின் வேலைகளும் பறிபோகும் அவலம். ஆம்..அந்தப் பிரச்னை மின்வெட்டு தான்.

2007-ம் ஆண்டுக்கு முன்பு வரை மின்சார பற்றாக்குறை என்பது பெரிய அளவில் இல்லை. 2007-க்குப் பிறகு பெரிய அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் இயங்கத் தொடங்கின. தமிழகத்தின் இப்போதைய மின்சாரத் தேவையின் அளவு 11 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோடையில் சிறிது மின்தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக மின்தட்டுப்பாடும், அதனால் மின்வெட்டும் ஏற்படுவது பழகிப்போன ஒன்றாகி விட்டது. பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 7 ஆயிரத்து 500 மெகா வாட்டாக உள்ளது. அதாவது, தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி 3 ஆயிரம் மெகா வாட். இதுவே மின்பற்றாக்குறையின் அளவாகும்.

இந்த மின்வெட்டைச் சமாளிக்க சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினசரி இரண்டு மணி நேர மின்வெட்டும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு 30 சதவீத மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தின் மூலம் இயந்திரங்களை இயக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. மாவட்டங்களில் வழக்கமாக செய்யப்படும் மூன்று மணி நேர மின்வெட்டுடன் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு நாளொன்றுக்கு 11 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது.

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களைத் தவிர்த்து, பஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளால் 50 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெற்று வந்தன. இப்போது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இப்போது கோடைக்காலம் என்பதால், மின்வெட்டின் அளவு மேலும் தீவிரமாகி உள்ளது. சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின்வெட்டு அமலில் உள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான மின் பயனீட்டாளர்கள் என்ற அளவில் தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் வரவு அதிகரித்து இருக்க, மற்றொருபுறம் வீட்டு உபயோகத்துக்கான மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

என்ன செய்யலாம்: 1997-ம் ஆண்டில் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை ஜெனேரேட்டர்கள் மூலம் தயாரித்துக் கொண்டன. அப்போது, ஒரு லிட்டர் டீசலின் விலை 20 ரூபாய்க்குள் இருந்தது. இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 35 ரூபாயைத் தாண்டி விற்கிறது. இந்தச் சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களால் ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய முடியாது. ஆனால், ஜெனேரேட்டர் மூலம் தயாராகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.7 என்ற அளவில் அரசு தர வேண்டும் என தொழில் நிறுவனங்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய ஆகும் செலவு, தமிழ்நாடு மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். எனவே, தொழில் நிறுவனங்கள் ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய முன்வரவில்லை.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின்வெட்டில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது என்பதே தொழில் நிறுவனங்கள் மத்தியில் உள்ள கோரிக்கையாகும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தது, மானிய விலையில் மின்சாரம் வழங்குவது போன்றவற்றுக்காக மட்டுமே கடந்த மூன்றாண்டுகளில் தமிழக மின்வாரியம் செலவிட்ட தொகை ரூ.18 ஆயிரம் கோடியைத் தாண்டும்.

குஜராத் போன்ற மாநிலங்களில் ஒரு ஆண்டுக்குத் தேவையான மின்சாரத்தை மொத்தமாக வெளி மாநிலங்களில் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் தேவையும், தட்டுப்பாடும் ஏற்படும்போது மட்டுமே வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற முயற்சி நடக்கிறது. அப்போதை சூழலில், வெளி மாநிலங்களில் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.14 வரை விற்கப்படுகிறது.

மாநிலத்தில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. அந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்து அவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்.

உடனடி தேவை: 2001-2006 வரையில் அதிமுக ஆட்சியில் எந்த மின் உற்பத்தித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக எந்த மின் திட்டங்களையும் தொடங்கவில்லை. 2007-ம் ஆண்டுக்குப் பிறகே மின் உற்பத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களைத் தொடங்கி இருந்தால் இப்போது மின்வெட்டு என்ற பேச்சுக்கு இடம் இருந்து இருக்காது.

எனவே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுமார் 10 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அரசு வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மின் தட்டுப்பாட்டின் அளவு 2,500 மெகாவாட் என மின்வாரியம் கூறினாலும் ஆண்டுக்கு 1000 முதல் 1,500 மெகாவாட் அளவுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளின் தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் நிச்சயம் இருக்கும் என மின்வாரிய அதிகாரிகளே சுட்டிக் காட்டுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், குறுகியகால மற்றும் நீண்ட கால திட்டங்களை மனதில் வைத்து அரசு செயல்படுவது அவசியம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

காற்றாலைகள் மூலம் தமிழகத்துக்கு 4,500 முதல் 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கிறது. கோடையில் இதன் அளவு குறைந்து விடுகிறது. சர்க்கரை ஆலை போன்ற இணை மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 300 முதல் 400 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. அவற்றின் மின் உற்பத்தித் திறனையும், அதில் புதிய திட்டங்களையும் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவில் மகாராஷ்டிரம் உட்பட ஒன்பது மாநிலங்களில் கடுமையான மின்தட்டுப்பாடு இருந்தும் எந்த மாநிலத்திலும் தொழில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் தொழில் உற்பத்தியும், அதனால் மக்களுக்கு கடுமையான பாதிப்பும் ஏற்பட்டுள்ளன. இது சீர்செய்யப்பட வேண்டும்.

மின்உற்பத்திக்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை. மனிதத் திறமைக்கும், தடையில்லாத மின்சாரத்தையும் நம்பியே மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் வந்தன. ஆனால், இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. மின் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி சீராகி இருக்கும். ஆனால், தொழில் துறையும், தொழில் வளமும், மக்களும் காணாமல் போய் இருப்பார்கள்.


என்ன வேண்டும் எங்களுக்கு? உயர் கல்வித் துறை
எம். மார்க் நெல்சன்
First Published : 02 May 2011 12:53:20 AM IST
உயர் கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

உயர் கல்வி மன்றம், தொழில்நுட்பக் கல்வி மன்றம், அறிவியல் தொழில்நுட்ப மன்றம் என பல்வேறு மன்றங்களை உருவாக்கி உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அதே நேரம், கல்லூரியைத் தொடங்குவதுதான் நல்ல வருமானம் தரும் தொழில் என்பதை பண பலம் படைத்தவர்களும், அரசியல்வாதிகளும் நிரூபிக்கத் தவறுவதில்லை.

எப்படியாவது தன்னுடைய மகனை பொறியியல் படிப்புகளில் சேர்த்துவிட வேண்டும் என்ற முனைப்போடு, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே பொறியியல் கல்லூரிகளில் முன்பதிவு செய்ய பெற்றோர் முண்டியடிக்கின்றனர்.

இதைப் பயன்படுத்தி சுயநிதிக் கல்லூரிகள், பி.இ. இசிஇ-க்கு ரூ. 6 லட்சம், பி.இ. கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவுக்கு ரூ. 5 லட்சம் என கல்விக்கு விலை நிர்ணயம் செய்து விடுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, சில தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மாணவர்களை ஈர்ப்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தவறான தகவல்களை இணைய தளத்தில் வெளியிடுகின்றன. இந்தத் தகவல்களை நம்பி, அக்கல்லூரியைத் தேர்வு செய்யும் மாணவர்கள், பின்னர் ஏமாற்றமடைகின்றனர்.

ஒற்றைச் சாளர முறை மூலம் ஒரு கல்லூரியில் சேர்க்கைக்கான உத்தரவு பெற்றுவிட்டால், வேறு கல்லூரிக்கு மாற முடியாது என்பதால், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அதே கல்லூரியில் படிப்பைத் தொடர வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

கூடுதல் கட்டண வசூல்: அரசு ஒதுக்கீட்டின் கீழ் இதுபோன்ற சுயநிதிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம், ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 32,500 மட்டும் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தது.

ஆனால், கல்விக் கட்டணத்துடன், கட்டாய பஸ் கட்டணம், மெஸ் கட்டணம், ஆய்வுக் கூட கட்டணம் என அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கூடுதலாக ரூ. 1 லட்சத்துக்கும் மேல் சில கல்லூரிகள் வசூலித்துள்ளன. இதுகுறித்துப் புகார் தெரிவித்தால், அக மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்களோ என்ற பயத்தில், புகார் தெரிவிப்பதையும் தவிர்த்துவிட்டோம் என்கின்றனர் மாணவர்கள்.

கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத ஒரு சில ஏழை மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மன்றம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றிடம் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மீது உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த மூன்று பேர் குழு சோதனை மேற்கொண்டு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மீதான நடவடிக்கை குறித்து கேட்டபோது, அறிக்கை ஏ.ஐ.சி.டி.இ.-க்கு அனுப்பி வைக்கப்படும், அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் குழு கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வு கண்துடைப்பு நாடகம்தான் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.

6 அரசுக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 15 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என தமிழகத்திலுள்ள 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடித்து வெளிவரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 20 சதவீதத்தினர் மட்டுமே தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

காரணம் என்ன? அரசிடமிருந்து வரும் நெருக்கடிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான கல்லூரிகள் என்பதாலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்கின்றனர் அதிகாரிகள்.

அதையும் மீறி சோதனைக்காக தில்லியிலிருந்து வரும் அதிகாரிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு நன்கு கவனித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். என்ன செய்ய வேண்டும்? கல்வி வியாபாரமாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு பொறியியல் கல்லூரியை அரசே உருவாக்க வேண்டும். அதே நேரம், அங்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்.

சுயநிதிக் கல்லூரிகளில் தகுதியுடைய மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழான இடங்களை சுயநிதிக் கல்லூரி கூட்டமைப்பு மூலம் நிரப்புவதே முறையானது.

கடுமையான சட்டம் தேவை: தனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் நிர்ணயிக்கப்படாத கட்டணம் வசூல் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும், இணையதளத்தில் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தவறான தகவலைத் தரும் கல்லூரியை அரசுடமை ஆக்கும் வகையிலும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்.

மாநில அரசிடம் உறுதியான கொள்கை இருந்தால், இதைக் கட்டுப்படுத்துவது எளிது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள "முறைகேடுகள் தடுப்பு சட்ட மசோதா', விரைந்து நிறைவேற்றப்பட்டு சட்டமாக உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம்தான் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்.

பாடத்திட்டத்தில் மாற்றம்: முன்னர் ஒரு துறையில் படித்தவர்களுக்கு, அந்தத் துறையிலேயே வேலை கிடைக்கும். ஆனால், இப்போது இந்த நிலை மாறிவிட்டது. பல்துறை திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி பாடத் திட்டத்தில் இயற்பியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. இவை உரிய அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் வழங்கும் முறைதான் இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. இதை மாற்றி எழுத்துத் திறன், பேச்சுத் திறன், ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

கலை, அறிவியல் கல்லூரிகளில்: கலை அறிவியல் கல்லூரிகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு மேற்கொண்ட தன்னாட்சி அந்தஸ்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்லூரிகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்.) அதிகரித்துள்ளது. அதாவது 15 சதவீதம் கூடியுள்ளது.

ஆனால், தன்னாட்சி அந்தஸ்து காரணமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து, கல்வித் தரம் குறைந்துவிட்டது. சென்னையில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கு முன்பு 20 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அடுத்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுபோல் தன்னாட்சி அதிகாரம்பெற்ற மற்ற அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. கல்வித் தரம் குறைவதற்கு இதுவே வெளிப்படையான சாட்சி.

இரட்டை மதிப்பீடு முறை: தேர்வுத்தாள் திருத்தும்போது இனாம் மதிப்பெண் (மாடரேஷன் மதிப்பெண்) வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. அதாவது குறிப்பிட்ட கல்லூரியின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்திருக்கும்போது, அதை உயர்த்திக் காட்டுவதற்காக இந்த முறை கையாளப்படுகிறது. மாடரேஷன் மதிப்பெண் என்ற பெயரில் முன்னர் 4 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 8 மதிப்பெண் வரை வழங்க அனுமதிக்கப்படுகிறது. இது கல்வித் தரத்துக்கு ஆரோக்கியமான போக்கு அல்ல.

எனவே, இதுபோன்ற இனாம் மதிப்பெண் முறையை ரத்து செய்து, முதுநிலை படிப்புகளுக்கு உள்ளது போல் இளநிலை பட்ட தேர்வுத்தாளுக்கும் இரட்டை மதிப்பீடு முறையைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மாணவரின் கல்வித் தரம் உண்மையில் உயரும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

என்ன வேண்டும் எங்களுக்கு? உணவு நிர்வாகத் துறை எம்.சங்கர்
First Published : 03 May 2011 02:03:54 AM IST Last Updated : 06 May 2011 04:51:41 PM IST

அரசின் "உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம்- 2006' விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சந்தேகங்களுக்குப் புதிய அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நடைமுறையில் உள்ள உணவு கலப்படத் தடைச் சட்டம்- 1954, தாவர எண்ணெய் உற்பத்திச் சட்டம், உணவு எண்ணெய்கள் பதப்படுத்தல் சட்டம், பால் மற்றும் பால்பொருள்கள் உற்பத்திச் சட்டம் உள்பட பல்வேறு உணவு கலப்படத் தடுப்புச் சட்டங்களை ரத்து செய்து, இந்திய மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒற்றைச் சட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது "உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம்- 2006'.

ஏற்கெனவே, நடைமுறையிலிருந்த உணவு கலப்படத் தடைச் சட்டம் மத்திய அரசின் மருத்துவத் துறை மூலம், தமிழகத்தில் பொது சுகாதாரத் துறையின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. மருத்துவத் துறையின் பல பணிகளில், உணவுக் கலப்படத் தடுப்புப் பணியும் ஓர் துணை பணியாகப் ஏற்கப்பட்டதே தவிர, பிரதான பணியாகக் கொள்ளப்படவில்லை. அதனால் தானோ என்னவோ உணவுக் கலப்படம் உறுதியாகத் தடுக்கப்படவில்லை.

உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம், இந்தியாவில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், நுகர்வோரான பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.

மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம்- 2006 விரைவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் இந்தச் சட்டத்தை மருந்து மற்றும் உணவு நிர்வாகத் துறை வழியே நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சட்டம், தமிழகம் உள்பட சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் கள அலுவலர்களாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும், மாவட்ட அளவிலான கண்காணிப்புப் பொறுப்பில் (ஈங்ள்ஞ்ண்ய்ஹற்ங்க் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள்) டி.ஓ-க்களும் செயல்படுவர். மாநில அளவிலான கண்காணிப்புப் பொறுப்பு உணவு ஆணையர் நிலையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஊராட்சி, நகராட்சிகள் தொழில் உரிமம் வழங்க இயலாது. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மூலமே மாவட்ட, மாநில அளவில் (விற்பனை அளவையொட்டி) தொழில் உரிமம் பெற வேண்டியிருக்கும்.

பொது சுகாதாரத் துறையில் உணவு அலுவலர் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள (பட்டதாரி நிலை) சுகாதார ஆய்வாளர்களும், துப்புரவு ஆய்வாளர்களுமே வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக செயல்படவுள்ளனர். இதன் மூலம், கூடுதல் பொறுப்பாக ஏற்றிருக்கும் உணவு ஆய்வாளர் பணியை, முழு நேரப் பணியாக ஏற்கவுள்ளனர் தற்போதைய சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள்.

இதையொட்டி, தகுதியான சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் முழு நேர உணவுப் பாதுகாப்பு அலுவலராகப் பணியாற்ற விருப்பக் கடிதம் பெறப்பட்டு, விருப்பக் கடிதம் அளித்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தச் சட்டம் அமலாக உள்ள நிலையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் என்ன? வருங்கால உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் பணி நிலை எப்படி அமையும் என்ற சந்தேகங்கள் மேலெழும்புகின்றன.

உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள, மருந்து மற்றும் உணவுப் பொருள் நிர்வாகத் துறைக்கு போதுமான கிளை அலுவலகங்களுக்கு உள் கட்டமைப்புகள் இல்லை என்பதே இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படை. மருந்து நிர்வாகத் துறைக்கு சென்னையில் (தலைமை அலுவலகம் தவிர்த்து) 3 அலுவலகங்களும், தாம்பரம், திருவள்ளூர், வேலூர், சேலம், கோவை, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரையில் 2 அலுவலகங்கள் என 14 மண்டல அலுவலகங்கள் மட்டுமே உள்ளன.

மேற்கண்ட மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் மருந்து நிர்வாகத் துறைக்கு தனி அலுவலகங்கள் கிடையாது. புதிய அலுவலகங்கள் அமைக்கப்படாதபட்சத்தில், டி.ஓ-க்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எந்த அலுவலகத்திலிருந்து செயல்படுவது என்கிற பெரும் குழப்பம் நீடிக்கிறது.

இதேபோன்று, தமிழகத்தில் தற்போது உணவுப் பகுப்பாய்வுக் கூடங்கள் 7 மட்டுமே செயல்படுகின்றன. சோதனைக்காக எடுக்கப்பட்ட தோசை மாவில் கலப்படம் உள்ளதா, இல்லையா என்பதைக்கூட உடனடியாக பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்க இயலாத நிலையே உள்ளது.

இதேபோல, எளிதில் அழுகும் அல்லது வீணாகக் கூடிய பொருள்களின் மாதிரிகளை சோதனைக்கு எடுக்கும் பட்சத்தில், அந்த மாதிரியை உடனடியாக பகுப்பாய்வு செய்ய முடியாவிட்டால், புதிய சட்டம் அடிப்படையிலே பிரச்னைக்குள்ளாகும் என்பதில் ஐயமில்லை. எனவே, புதிய சட்ட நடைமுறையின் போது, மாவட்டத்துக்கு ஓர் பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், தங்கள் சோதனையின் போது எடுக்கப்படும் மாதிரிகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்ய முடியும்.

இந்தப் பிரச்னையுடன் வருங்கால உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தங்களின் பணி நிலை குறித்து சந்தேகம் நிலவுகிறது.

துறை மாற்றம் பெற்று உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாகப் பணி ஏற்போருக்கு, பொது சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பணியாற்றிய பணிக் காலத்தை கணக்கிட்டு, பதவி உயர்வு வழங்கப்படுமா? என்பது அந்த அலுவலர்களின் கேள்வி. மிகச் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவடன், உணவுப் பாதுகாப்புப் பணியை ஏற்கும் அலுவலர்களின் அச்சங்களைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்வதைப் பொறுத்தே நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் புதிய சட்டத்தின் வெற்றி அமையும்.

என்ன வேண்டும் எங்களுக்கு? - மீன்வளத் துறை முகவை க. சிவகுமார்
First Published : 04 May 2011 01:53:53 AM IST Last Updated : 06 May 2011 04:53:18 PM IST

மீன் பிடித் தொழிலில் பல்வேறு உயர் தொழில் நுட்பங்களைப் புகுத்தி இத்தொழிலை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துவதன் மூலம்தான் மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என மீனவர் அமைப்புகள் நீண்ட நாள்களாகவே கருத்து தெரிவித்து வருகின்றன.

பழவேற்காடு முதல் குளச்சல் வரை சுமார் 7.60 லட்சம் பேர் தமிழகத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பாரம்பரியத் தொழிலாக மீன்பிடித்தல் உள்ளது. பல நூற்றாண்டுகளாக மீன்பிடித் தொழில் இருந்து வந்தாலும் மீனவர்களின் வாழ்க்கைத் தரம் என்னவோ உயர்ந்தபாடில்லை.

இந்நிலையில் மீனவர்கள் வாழ்க்கை வளம்பெற, மீன்பிடித் தொழில் தரம் உயர தமிழகத்தில் அமைய உள்ள புதிய அரசு உடனடியாகச் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

நவீனமயமாக்க வேண்டும்: பழங்காலத் தமிழர்கள் நிலப்பகுதியை ஐந்து வகையாகப் பிரித்து கடலும் கடல் சார்ந்த பகுதிகளை நெய்தல் என அழைத்ததில் இருந்தே இத்தொழிலின் பழமை விளங்கும். கால வளர்ச்சியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் மற்ற தொழில்களில் ஒப்பிடும்போது மீன்பிடித்தொழில் பழமையிலிருந்து இன்னும் விடுபடவே இல்லை.

கட்டுமரங்கள், ஃபைபர் படகுகள், விசைப்படகுகள் என பல்வேறு முறைகளில் மீன் பிடித்தாலும் இவைகளில் புதிய கருவிகள், புதிய உத்திகளைப் புகுத்தாததால் மீன்பிடித் தொழிலில் போதிய முன்னேற்றம் இல்லை. குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜி.பி.எஸ்), எக்கோ சவுண்டர், சர்ச்-லைட் போன்றவற்றைப் பயன்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும். இவற்றால் படகு உள்ள இடத்தை அறிதல், கடலுக்கடியில் மீன்வளத்தை அறிதல் எளிதாகும்.

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: உலகிலேயே ஆபத்து நிறைந்த தொழில்களில் மீன்பிடித்தொழிலும் ஒன்று. ஆனால் இதில் ஈடுபடும் மீனவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை தொடர்கிறது. புயல் காலங்களில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கிடையாது. ஏ.ஐ.எஸ்., ரேடியோ டெலிபோன் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி ஆபத்தில் சிக்கியுள்ள மீனவர்களைக் கண்டறிய வேண்டும். நடுக்கடலில் ஆபத்து ஏதேனும் ஏற்பட்டால் கடலோரக் காவல், கப்பல் படைகளோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும்வகையில் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களில் பலர் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்குத் தமிழ் தவிர வேறு மொழிகளில் பரிச்சயம் கிடையாது. இந்த நிலையில், கடலோரக் காவல் படையில் ரோந்துக் கப்பல்களில் பணிபுரிவோர் வெளிமாநிலக்காரர்களாகவே இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் ஆபத்தில் சிக்கி இருக்கும் மீனவர்கள், இவர்களுடன் தொடர்பு கொள்ள சிரமப்படுகிறார்கள். அதனால், ரோந்துக் கப்பல்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

பயிற்சி தேவை: எந்தத் தொழிலிலும் பயிற்சி பெற்றவர்களே பணியாற்றுகின்றனர். ஆனால் ஆபத்து நிறைந்த மீன்பிடித் தொழிலில் பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. முன்பு விசைப்படகுகளை இயக்க 10 மாதப்பயிற்சி, மீன்பிடித் தொழில் பயிற்சி மையத்தால் (எஃப்.டி.சி.) அளிக்கப்பட்டன. இப்பயிற்சியை முடித்தவர்கள் மட்டுமே விசைப்படகுகளை இயக்க முடியும். இப்போது இப்பயிற்சி மையமே மூடப்பட்டு விட்டது. அனைத்து மீனவர்களுக்கும் குறைந்தபட்ச பயிற்சியையாவது அளிக்க வேண்டும்.

சுகாதாரச் சீர்கேட்டில் மீன்பிடித் துறைமுகங்கள்: தமிழகத்தில் பழவேற்காடு, காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு துறைமுகத்தில் கூட அடிப்படை வசதிகள் கிடையாது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் தரமான ஐஸ் பேக்டரிகள் கிடையாது. சுற்றுப்புறம் முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. வார்ப்புகள் பழுதடைந்து கிடக்கின்றன. விற்பனைக் கூடங்கள் கிடையாது. கடலோரத்திலேயே மீன் வியாபாரம் செய்வதால் கழிவுகள் அனைத்தும் மீண்டும் துறைமுகத்திற்குள்ளேயே வீசப்படுகின்றன. இதுபோன்ற நிலை அனைத்து மீன்பிடித் துறைமுகங்களிலும் நிலவுகிறது.

கொச்சி, மங்களூர் துறைமுகங்கள் கூட நவீன முறையில் பராமரிக்கப்படுகின்றன. பராமரிப்பே இல்லாமல் இருப்பதால் தமிழக மீன்பிடித் துறைமுகங்களில் விற்பனை செய்யப்படும் மீன்களை வாங்க வெளிநாட்டினர் தடை விதிக்கும் அவல நிலைதான் உள்ளது. இந்நிலையை மாற்றி அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி மீன்பிடித் துறைமுகங்களை சர்வதேச தரத்துக்கு மாற்ற புதிய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் தயாளன்.

மீன் விற்பனை அங்காடிகள்: விரைவில் அழுகும் பொருளான மீன்களை விற்பனை செய்ய போதிய வசதிகள் இங்கு இல்லை. இதனை மாற்றி வெளிநாடுகளில் உள்ளதைப் போல நவீன மீன் அங்காடிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். முகத்துவாரங்களில் மீன்வளத்தைப் பெருக்க உடனடியாக தூர்வார வேண்டும் என்கிறார் அகில இந்திய மீனவர் சங்க செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி.

மீனவர்களுக்கு நிவாரணம்: மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும் காலத்தில் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. 45 நாள்கள் மாற்றுத் தொழில் இல்லாத குடும்பங்களுக்கு இத்தொகை போதாது. இதனை உயர்த்த வேண்டும். ஆபத்தில் சிக்கி இறந்து போகும் மீனவர்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

கடற்கரை மேலாண்மைச் சட்டம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ஒழிக்கும் கடற்கரை மேலாண்மைச் சட்டத்தைத் திரும்பப்பெற முயற்சி எடுக்க வேண்டும். மீனவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே குடியிருப்புகளை கட்டித் தரவேண்டும். கடற்கரையில் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த அனுமதித்தால் கடற்கரை நாசப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.

தமிழகம் முழுதும் பல்வேறு வகை அபாயகரமான நச்சுக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. இதைத் தடுக்க போதிய முயற்சி எடுக்க வேண்டியது புதிய அரசின் கடமை என்கிறார் எண்ணூரைச் சேர்ந்த கண்ணன்.

மீன்வளத்துறையில் போதிய கவனம் செலுத்துவதன் மூலமும், ஆதாரக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமும் கடலோர மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


என்ன வேண்டும் எங்களுக்கு? பள்ளிக் கல்வித் துறை ஆ.ரகுராமன்
First Published : 30 Apr 2011 12:00:00 AM IST

வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 14 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

- ஆசிரியர்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழை, நடுத்தர வகுப்பினர் கூடத் தங்கள் பிள்ளைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கந்து வட்டிக்கு கடன் வாங்கிக் கூட தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பக் காரணம் என்ன?

தமிழக அரசிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வியைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் வைத்ததுமே அவர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் வைத்த கோரிக்கை அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான்.

கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல முளைத்துவிட்ட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் அதிகக் கட்டணத்தை வசூல் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு முக்கிய பிரசார ஆயுதமாகப் பயன்பட்டது அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் சிறப்பாக இல்லை என்பதுதான். தரம், தரம் என்ற பெயரில் சேவைத்துறை என்பதிலிருந்து வருமானம் ஈட்டும் துறையாக கல்வித் துறையை கீழே இழுத்துக் கொண்டுவந்துவிட்டனர் தனியார் பள்ளி நிர்வாகத்தின்ர்.

நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டாலும், அரசுப் பள்ளிகளின் நிலை மட்டும் மாறாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.

புதிதாக அரசுப் பள்ளிகளைத் தொடங்காமலும், இருக்கும் பள்ளிகளைத் தரம் உயர்த்தாமலும் 5 ஆண்டுகளைக் கடத்திவிட்டது இப்போதைய அரசு.

பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம், சமச்சீர் கல்வி முறை ஆகியவற்றை அமல்படுத்தியிருந்தாலும், கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய அவை போதுமான நடவடிக்கைகளாக இல்லை.

பள்ளிக் கல்வித் துறை புத்துயிர்ப்பைப் பெற என்னென்ன நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளலாம்?

பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம்: சென்ற கல்வியாண்டில், நீதிபதி குழு நிர்ணயித்தக் கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் எனக் கூறிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான தொல்லைகள் தரப்பட்டன. பள்ளியை விட்டே வெளியேற்றுவது, வகுப்புகளில் தனியாக அமரச் செய்வது, வகுப்புகளுக்குள்ளே அனுமதிக்க மறுப்பது என ஏராளமான செயல்களைப் பல பள்ளிகள் செய்தன.

ஆனால், இதுவரை ஒரேயொரு பள்ளி மீதுகூட உறுதியான நடவடிக்கை எதையும் அரசோ, அதிகாரிகளோ எடுக்காதது பெற்றோருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டத்தை மீறுபவர்களைத் தண்டித்தால்தானே அந்தச் சட்டத்துக்கு மதிப்பிருக்கும்.

எனவே, நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விதிகளை மீறும் பள்ளிகள் மீது யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவு இல்லை. நீதிபதி குழு பரிந்துரை செய்தால்தான் நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் இதுபோன்று வரும் புகார்களைப் பதிவு செய்யவும், விசாரணையும் செய்யவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அரசே அங்கீகரிக்கும் தனியார் பள்ளிகள்: நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான மேல்நிலைக் கல்வி வழங்க தமிழக அரசு 2007-ல் ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அதில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தரமான தனியார், மத்திய, மாநில அரசு பள்ளிகளில் படிப்பதற்கான செலவை அரசே ஏற்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒரு மாணவன் மாவட்ட அளவில் சிறப்பான இடம் பெற்றாலே அந்தப் பள்ளி தரமானதாக இருக்கும் என்றுதானே அர்த்தம். அந்த மாணவனை வேறு அரசுப் பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ எதற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்? இது அரசே தனியார் பள்ளிகளை அங்கீகரிப்பது போல் இருக்கிறதே என்று கல்வியாளர்கள் வாதிடுகின்றனர். சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளை தரம் தாழ்த்தும் நடவடிக்கைகளில் அரசே இறங்கக் கூடாது.

கட்டாயக் கல்விச் சட்டம்: அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் நாடு முழுவதும் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை இந்தச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கவில்லை.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தலைசிறந்த கல்வியாளர் தலைமையில் கல்வி ஆணையமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியை எதிர்க்குமாறு சில தனியார் பள்ளிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி அறிவித்ததை தன்னிச்சையான நடவடிக்கை என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தப் பள்ளிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டத்தில் பள்ளிகளில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து வரையறுத்து கூறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து இப்போது என்னென்ன வசதிகள் உள்ளன, முழுமையான வசதிகளை ஏற்படுத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் கோருகின்றனர்.

சமச்சீர் கல்வி: இந்தக் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. ஆனால், இதுவரை சமச்சீர் கல்வி புத்தகங்கள் வெளிவரவில்லை. அதன் காரணமாக, சமச்சீர் கல்வியை எதிர்த்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு பிரசாரம் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து சரியான புரிதலை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோருகின்றனர்.

பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்திக்கொண்டே இதை இன்னமும் செழுமைப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஒரே விதமான கல்வி என்பதை மையமாகக் கொண்டு புதிய அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவது, சமச்சீர் கல்விமுறையை செழுமைப்படுத்துவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாயக் கல்விச் சட்டத்திற்கான விதிமுறைகளை விரைந்து இயற்றுவது, நீதிபதி குழுவின் கட்டண நிர்ணயத்தை தீவிரமாக அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஒரே சீரான கல்வி என்ற இலக்கை நோக்கி புதிய அரசு எடுத்து வைக்கும் அடுத்த அடியாக இந்த நடவடிக்கைகள் இருக்கும்.

என்ன வேண்டும் எங்களுக்கு? - சிறுதொழில் துறை சிவ.மணிகண்டன்
First Published : 05 May 2011 12:00:00 AM IST

தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமைபடக் கூறிக் கொண்டாலும், அத்துறையின் அடிநாதமாக இருக்கக் கூடிய பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன.

உற்பத்திக்கான ஆர்டர்களைப் பெற ஏங்கிக் கொண்டிருந்த காலம்போய், இப்போது ஆர்டர்கள் அதிகளவுக்குக் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றைச் செய்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் சிறுதொழில் துறையினர்.

தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பைத் தரக்கூடியதாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இருக்கின்றன. அரசிடம் பதிவு செய்யப்பட்டு 6 லட்சத்து 31 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 43 லட்சத்து 92 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.26 ஆயிரத்து 136 கோடி.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இத்துறை புத்துயிர் பெற புதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் அந்த அரசின் வெற்றியே இருக்கும் என்று சொன்னால்கூடத் தவறில்லை.

தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க... சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருக்கிறது. பிகார், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இல்லையெனில் குறுந்தொழில் கூடங்களை நடத்தவே முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டதன் விளைவு, தொழில் மாவட்டங்களை வெகுவாகப் பாதித்துவிட்டது.

உடல் உழைப்பு குறைவு, வீட்டுக்கு அருகிலேயே வேலை என்ற மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டனர். உடலை வருத்திக் கொள்ளாமல் எப்படிச் சம்பாதிப்பது என்ற தவறான மனநிலை படித்தவர்கள் மத்தியிலும் பாமரர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பதுதான் விபரீதங்களுக்கே அடிப்படை.

படிப்பைக் கைவிட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஓரளவுக்கு தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்ப்பதுடன், வேலைவாய்ப்பு திண்டாட்டத்தையும் போக்க முடியும்.

மூலப்பொருள்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த... ஒவ்வொரு நிதி ஆண்டின் கடைசி 3 மாதங்களிலும் சிறு, குறுந்தொழில் குறிப்பாக என்ஜினியரிங் சார்ந்த தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்களான தேனிரும்பு, இரும்புக் கம்பி, தாமிரம், அலுமினியம், பிளாஸ்டிக் போன்றவற்றின் விலை 30-லிருந்து 40 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

விலை மாறுபாடுகளுக்கு ஏற்ப வங்கிகள் நடப்பு மூலதனத்தை அதிகரித்து கடன் அளிக்க முன்வருவதில்லை. இதனால் நிதி நெருக்கடியும் தவிர்க்க முடியாததாகிறது.

மூலப்பொருள்கள் விலையைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது அவசியம்.

குறுந்தொழில் மானியம் தடையின்றி கிடைக்க... பெரு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு, ஜாப் ஒர்க் போன்றவற்றுக்கு குறுந்தொழில் கூடங்களை நம்பியே இருக்கின்றன. குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது.

ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத நிபந்தனைகளை விதித்ததால் குறுந்தொழில் நிறுவனங்களால் எளிதில் இந்த மானியத்தைப் பெற முடியவில்லை.

இயந்திரம் வாங்கிய ஒரு மாதத்துக்குள் மாவட்ட தொழில் மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், இயந்திரம் வாங்கியதில் இருந்து இரு மாதங்களில் உற்பத்தியை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும், வாடகை கட்டடத்தில் இயங்கும் தொழில்கூடமாக இருந்தால் 5 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் இணைக்க வேண்டும், தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் சாதாரண குறுந்தொழில் கூடங்களுக்கு ஒத்துவராத நிபந்தனைகளாக இருக்கின்றன. மானியம் பெறுவதற்காக அலைந்தே நஷ்டப்பட்டவர்கள் ஏராளம்.

இப்போதுள்ள சூழலில் குறுந்தொழில் கூடங்களுக்கு வங்கிகள் கடன்தர முன்வருவதில்லை. நிதிநிறுவனங்களில் கடன் பெற்றால் மானியம் பெற முடியாது. குறுந்தொழில்களைப் பாதுகாக்க நல்ல திட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும் அதன் பலனைப் பெற முடியாமல் இருக்கிறோம் என்கின்றனர் குறுந்தொழில் முனைவோர்கள்.

தனித்தொழில்பேட்டைகள் அமைக்க... சிறப்புப் பொருளாதார மண்டலம் போல குறுந்தொழில்களுக்கு தனித்தொழில்பேட்டை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், குடியிருப்பு பகுதியில் சிறு தொழிற்கூடம் உள்ளது என்று கூறி அது தொடர்பான பிரச்னைகள் எழுவதைத் தவிர்க்கலாம்.

அதேபோல தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு குடியிருப்புகள் வந்தால், தொழிற்சாலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும்.

மின்பற்றாக்குறையைப் போக்க... மேற்குறிப்பிட்ட பிரச்னைகளைக்காட்டிலும் சிறு, குறுந்தொழில்களை பாதிக்கும் பூதாகரமான பிரச்னையாக இருப்பது மின்வெட்டு.

கடந்த 2007 டிசம்பரில் தொடங்கிய மின்பற்றாக்குறை இப்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. உயர்அழுத்த மின்இணைப்பு பெற்றுள்ளவர்கள் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாது. இதுபோக தினசரி 3 மணிநேர மின்வெட்டு.

தினசரி 3 மணி நேர மின்வெட்டு என்பது பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே இருப்பதால், தொழில்கூடங்களை ஒரு ஷிப்ட் கூட இயக்க முடியவில்லை என்கின்றனர் சிறு, குறுந்தொழில் முனைவோர்.

தமிழகத்தில் உள்ள மத்திய மின்திட்டங்களில் உற்பத்தியில் 75 சதவீதத்தை தமிழகத்துக்கே கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற பிரச்னைகள் தீர்க்கப்படாவிட்டால் வரும் காலங்களில் சிறு, குறுந்தொழில் கூடங்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு சுருங்கிவிடும்.

சிறு, குறுந் தொழிற்கூடங்கள் நசிந்துவிட்டால், தமிழகத்தைத் தொழிற்மயமாக்குவது எப்படி? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், மோட்டார் பாகங்கள் உள்ளிட்ட பெரும் தொழிற்சாலைகளுக்கும் உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கப் போவது யார்?

பதவி ஏற்கும் அரசை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களில் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிதான் முன்னுரிமை பெற வேண்டும்.

என்ன வேண்டும் எங்களுக்கு - போக்குவரத்துத் துறை கே.எம்.சந்திரசேகரன்
First Published : 06 May 2011 01:24:11 AM IST

Last Updated : 06 May 2011 04:48:54 PM IST

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கையில் அவ்வப்போது நாம் எதிர்கொள்ளும் கானல்நீர் காட்சியை பஸ் கட்டண விஷயத்திலும் போக்குவரத்துக் கழகங்கள் அரங்கேற்றிக் காட்டுவதுதான் பெரும் வேடிக்கை. இந்தக் காட்சி, அதிமுக அரசு,திமுக அரசு என்றில்லை. இரண்டு அரசுகளிலுமே தொடரும் வாடிக்கையாகத்தான் இருக்கிறது.

2001-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 86 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பஸ் கட்டணமோ இதுவரை ஒரு முறைகூட இரு அரசுகளாலும் உயர்த்தப்படவில்லை.

"இது உண்மையா?' என்றால், இதுதான் "உண்மை'யான கானல் நீர் எனலாம். பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று சொல்லிக்கொண்டே விரைவு சேவை, டீலக்ஸ் சேவை, குளிர்சாதன பஸ் என்று வெவ்வேறு பெயர்களில் "மாற்றுப் பேருந்துகள்' இயக்குவதுபோல கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் புதிய ஏமாற்று நடைமுறையைக் கொண்டு வந்து மக்கள் மீது அரசுகள் திணித்திருக்கின்றன.

எல்லாத் தடங்களிலும் சாதாரண பஸ்களின் சேவையை மிகவும் குறைத்து, கூடுதல் கட்டண பஸ்களுமே எந்நேரமும் இயங்கும் வகையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பார்த்துக் கொண்டதைக் கண்டு கொதிக்காத பொதுமக்களே இல்லை.

அரசு இந்தப் பிரச்னையை மேலும்மேலும் மறைக்கப் பார்த்து, "மற்ற மாநிலங்களைவிட இங்குதான் கட்டணம் குறைவு. சாதாரண கட்டணப் பஸ்கள்தான் அதிகம் இயக்குகிறோம்' என்றெல்லாம் சொல்லாமல் நேர்மையான முறையில் பஸ் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

சுத்தம் என்ன விலை? சுத்தம் தொடர்பான விஷயத்தில் தனியார் பஸ்களோடு அரசு பஸ்களை ஒப்பிடவே முடியாத நிலையே இருக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம் இந்தப் பணிகளைக் கவனிக்கக் கூடிய ஊழியர்கள் மிகவும் குறைவாக இருப்பதுதான். தற்போது பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக ஊழியர்களாகவே இருப்பதுடன் அவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்து கூடுதல் கணக்கு எழுதிக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தாற்காலிக ஊழியர்களிடம் கண்டிப்புடன் வேலை வாங்க முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள்.

விளைவு! அரசுப் பஸ்களில் ஏறுவது என்றாலே பயணிகள் அருவருப்புடன் முகம் சுளிக்கும் நிலைமை.

லாபப் பாதைக்கான வழி... போக்குவரத்துக் கழகத்தோடு விடாப்பிடியாய் ஒட்டிக் கொண்ட சொல்லாக இருக்கிறது நஷ்டம். "இந்த நஷ்டத்தைப் போக்குவதற்கு கஷ்டப்படக்கூடத் தேவையில்லை; நஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று இஷ்டப்படும் மனசு மட்டுமே போதும்' என்கிறார்கள் சில அதிகாரிகள்.

நஷ்டத்தைக் குறைப்பதற்கு அவர்கள் சொல்லும் சில யோசனைகள்: மாணவர்களுக்கு இலவச பாஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கான செலவை அரசு முழுமையாக ஈடு செய்தால் பிரச்னை ஓரளவுக்குத் தீரும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு முன் வருவதே இல்லை.

பஸ்களுக்கு பாடி கட்டுதல், பழுதான பாகங்களைச் சரி செய்து பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு போக்குவரத்துக் கழகங்களில் பொறியியல் நிறுவனங்கள் முன்பு இருந்தன. இப்போது இவையெல்லாம் வெளி நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.

முன்பு ஒரு பஸ் பாடி கட்ட ரூ.8 லட்சம் செலவானது. இப்போது ரூ.22 லட்சம் ஆகிறது. இந்தக் கூடுதல் பணம், அவ்வப்போது போக்குவரத்துக் கழக நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் நிறுவனங்களுக்கே போகிறது. இதைத் தடுத்தாலே பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

மேலும் அரசு பஸ் பணிமனைகளில் உள்ள டீசல் நிலையங்களுக்கு அளிக்கப்படும் டீசலுக்கு விற்பனை வரி விலக்கு தர வேண்டும் என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர். இங்கு டீசலை வெளியில் விற்பதில்லை. அரசு பஸ்களுக்கு மட்டும்தான் டீசல் தரப்படுகிறது. எனவே வரி விலக்கு தர வேண்டும் என்றும் கோருகிறார்கள்.

அரசு ஏற்க வேண்டியதும், முடிவை மாற்ற வேண்டியதுமான இந்த எளிய தீர்வுகளை மேற்கொண்டாலே நஷ்டப் பாதையிலிருந்து போக்குவரத்துக் கழகத்தை லாப பாதைக்குத் திருப்பலாமாம்.

லாபப் பாதையில் பயணிக்க இன்னும் பல வழிகள் இருக்கின்றன.

காப்பீட்டுச் செலவு: விபத்துக் காப்பீடு தருவது போக்குவரத்துக் கழகங்களுக்கு சுமையாக இருக்கிறது. கர்நாடகத்தில் ரூ.20 மதிப்புக்கு மேல் உள்ள பயணச் சீட்டு கட்டணத்தில் ரூ.1 கூடுதலாக வசூலித்து தனி நிதியாக பராமரிக்கிறார்கள். அதில் இருந்து விபத்துக் காப்பீட்டு நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற ஓர் ஏற்பாட்டை தமிழக அரசும் பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

அதேபோல காப்பீட்டுப் பணம், வழக்கறிஞர்கள் போன்ற இடைப்பட்ட நபர்களின் கைகளுக்குப் போய்விடாமல், உண்மையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குப் போய் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் யோசனை கூறுகின்றனர்.

ஒரே நேரத்தில் 500, 1000 புதிய பஸ்களை மொத்தமாக விழா நடத்தி வழித் தடங்களில் இயக்குவது விளம்பரத்துக்கு வேண்டுமானால் உதவலாம். இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கும் பயணிகளுக்கும் என்ன லாபம்? ஒவ்வொரு பஸ் கூடு கட்டி முடித்தவுடன் வழித்தடத்தில் ஓடத் தொடங்கினால் வருவாய் கிடைக்கும். ஆனால் தொடக்க விழா நடத்த அவை காத்திருப்பதால் சில மாதங்கள் முதலீடு முடங்கி, வட்டி அதிகமாகிறது.

மேலும் ஒரே சமயத்தில் 1000 பஸ்கள் புதிதாக விட்டால், அடுத்த ஆண்டு அதே மாதத்தில் அவ்வளவு பஸ்களும் தருதிச் சான்று (எப்.சி.) பெறும் நிலைக்கு வரும். எனவே பெயிண்ட் மட்டும் அடித்து, போக்குவரத்து அதிகாரிகளை "கவனித்து' சான்றிதழ் வாங்குகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பழுதை நீக்காமல் இவ்வாறு சான்றிதழ் பெற்றுவிடுவதால், வழித்தடத்தில் ஓடும்போது இடையில் அவை நின்று போகின்றன. எனவே மாதம் 50 அல்லது 100 என புதிய பஸ் விட்டால் எப்.சி. வரும்போது அனைத்திலும் பழுதை சரி செய்ய முடியும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆம்னி "கொள்ளை': மக்களுக்கு அடுத்த பிரச்னையாக இருப்பது ஆம்னி பஸ் கட்டணம். "கொள்ளை' அடிக்கிறார்கள் என்று திட்டினாலும் வேறு வழி இன்றி அந்தப் பஸ்களில்தான் நீண்டதூர பயணங்களை பல சமயங்களில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் அறிவிக்கிறார்களே தவிர, இதுவரை எந்த உரிமமும் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதை முறைப்படுத்தினால் மக்களின் நல்லெண்ணத்தை புதிய அரசால் எளிதாகப் பெற முடியும்.

கிராமங்களின் பஸ் வசதிக்காக மினி பஸ் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மினி பஸ் உரிமையாளர்கள் வருமானத்துக்காக, நகரங்களில் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எனவே அரசே மினி பஸ் சேவைகளையும் இயக்க பரிசீலிக்க வேண்டும் என்று கிராமப்புற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொழிலாளர்கள் பிரச்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களைப் பொருத்தவரை உடனுக்குடன் பழுதுநீக்கிட ஏற்பாடு செய்யாதது, குறைந்த செலவிலான உதிரிப் பாகங்களை டிரைவர்களே மாற்றும்படி செய்துவிட்டு அதிகாரிகள் அதற்கு கணக்கு எழுதிக் கொள்வது, நெரிசல் காரணமாக பயணம் தாமதமானாலும் குறிப்பிட்ட நடை அளவுக்கு (சிங்கிள்) ஓட்டியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது போன்ற பிரச்னைகள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்கும் விஷயமும், போக்குவரத்து நெரிசலால் தேவையற்ற டீசல், பெட்ரோல் விரயமும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கின்றன. அரசு துறையில், நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வசதி குறைந்த செலவில் போதுமான அளவு கொடுக்கப்படுமேயானால், தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதுடன் மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.

இதனால் ஏற்படும் இழப்பு, எரிவாயு சிக்கனம், சுகாதாரம், அதிகரித்த பயண வசதியால் ஏற்படும் உற்பத்தி அதிகரிப்பு போன்றவற்றால் ஈடுகட்டப்படும்.

அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகும் நமது அதிகாரிகளுக்கும், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது நன்றாகத் தெரிந்திருந்தும், தங்கள் சுயநல ஆதாயத்திற்காகப் போக்குவரத்துத் துறையினைத் தரம் வாயந்ததாகவும், திறமையானதாகவும் மாற்றத் தயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

"போக்கும்' - "வரத்தும்' கொண்டதே போக்குவரத்து. போகும் பாதையில் மேடுமிருக்கும்; பள்ளமுமிருக்கும். இதைச் சரிசெய்ய வேண்டிய கடமை போக்குவரத்துக் கழகத்திற்கும் அரசுக்கும் இருக்கிறது. கறுத்து நீளும் சாலைகளில் இரவுகளில் ஒளியை உமிழ்ந்தவாறே நிற்கும் சோடியம் விளக்குகளைப்போன்று திடமான முடிவுகளுடன் கூடிய திட்டங்களே போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்றும் என்பதை அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசாவது புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

என்ன வேண்டும் எங்களுக்கு? - உப்புத் துறை
ரெ.ஜாய்சன்
First Published : 07 May 2011 12:07:15 AM IST

உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் கண்களும் உப்பளங்கள்போல்தான். இந்தத் தொழிலில் உள்ள பல்வேறு பிரச்னைகளாலும், நலிவுகளாலும் கண்ணீர் சிந்திச்சிந்தியே அவர்கள் கண்களும் உப்பளங்களைப் போல மாறிவிட்டதாகச் சொல்வார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாகப் பலருக்கு வாழ்வாதாரமாக இருப்பது உப்புத் தொழில். நாட்டின் மொத்த உற்பத்தி 1.60 கோடி டன்களாகும்.

நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. முதலிடம் வகிக்கும் குஜராத்தில் 1 கோடி டன் உப்பும், இரண்டாம் இடம் வகிக்கும் தமிழ்நாட்டில் 25 லட்சம் டன் உப்பும் உற்பத்தியாகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், சென்னையை அடுத்த எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களிலும் உப்பளத் தொழில் அதிகமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் மொத்தம் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில்தான் உப்பளங்கள் அதிகம். இம்மாவட்டத்தில் மட்டும் 27 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன.

இந்தத் தொழிலை நம்பி உள்ள நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 70 ஆயிரம். மறைமுகமாக இத் தொழிலை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம்.

இந்த 2.20 லட்சம் தொழிலாளர்கள்தான் இந்தியாவின் 15 சதவீத மக்களுக்கு உப்பிடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

ஆனால் அரசாங்கமோ தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிக்கும் இந்தத் துறையை "உப்புக்கும் பெறாத துறை'யாகவே பயன்படுத்தி தொழிலாளர்களை கண்ணீர் சிந்த விடுவதுடன், உப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

உப்பளப் பிரச்னை: குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உப்பு உற்பத்திச் செலவு மூன்று மடங்கு அதிகமாகிறது என்கிறார்கள் தொழிலாளர்கள். குஜராத் மாநிலத்தைப் பொருத்தவரை உயர் அலைக் காலங்களில் கடல் நீர் உப்பளங்களுக்குள் தானாக வந்துவிடுமாம். ஆனால், தமிழகத்தில் நிலைமை அவ்வாறு இல்லாமல் உப்பளங்களுக்குத் தேவையான உவர்நீர் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்துத்தான் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது என்கிறார்கள்.

இதைப்போல நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதால் தண்ணீரை அதிக ஆழத்தில் இருந்து உறிஞ்சி எடுக்க அதிக சக்தி கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்துவதால் மின்சாரச் செலவும் அதிகமாகிறது என்கிறார்கள். இதன் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்து குஜராத் உப்பு உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாத நிலை இருக்கிறது என்கிறார்கள்.

இதனைப் போக்க உப்புத் தொழிலையும், விவசாயமாகக் கருதி உப்பளங்களுக்கு மானியக் கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உப்பு உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக அமல்படுத்தப்படும் மின்வெட்டும் உப்புத் தொழிலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறதாம். அதுவும் பகல் வேளையில் அமல்படுத்தப்படும் மின்வெட்டால் உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

எனவே, உப்புத் தொழிலைப் பாதுகாக்க தடையில்லாத மின்சாரம் அவசியம் என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கை.

ஓடைகளைத் தூர்வார வேண்டும்: உப்பளப் பகுதிகளில் உள்ள உப்பாத்து ஓடைகள், கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலே உள்ளன. இதனால், இந்தக் கால்வாய்களில் கடல்நீர் ஓடிவர முடியவில்லை. இந்த உப்பாத்து கால்வாய்களைத் தமிழக அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மட்டுமே எடுத்தாலே ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கலாம். தூர் வாரினால் கடல்நீர் புகுந்து ஓடிவரும். ஓடி வரும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீர்மட்ட உயர்வால் மின்சாரச் செலவும் குறையும்.

உப்பளக் குத்தகை: கடற்கரை பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகம் உள்ளன. அந்த நிலங்களில் மணல் கொள்ளை, தனியார் ஆக்கிரமிப்பு போன்றவை காணப்படுகின்றன.

இந்த நிலங்களில் உப்பளங்கள் அமைக்க அரசு குத்தகைக்கு விடலாம். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைப்பதுடன், மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களையும் பாதுகாக்க முடியும்.

உப்பளங்களில் இந்த வகையான பிரச்னை என்றால் உப்பளங்களுக்கு வெளியிலும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. இதையும் அரசு கவனித்துச் சீரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

கலப்படத் தடைச் சட்டம்: உணவுக் கலப்படத் தடைச் சட்டத்தில் இருந்து உப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும். உப்பில் வேறு எந்தப் பொருளையும் கலப்படம் செய்ய முடியாது. காரணம் உப்பைவிட விலை குறைந்த பொருள் எதுவுமே இல்லை. உப்பைத் தெய்வமாகப் பார்க்கக்கூடியவர்கள் தமிழர்கள். எதைத் திருடினாலும் உப்பைத் திருடமாட்டார்கள். அதனால்தான் பெரும்பாலான கடைகளில் உப்பு மூட்டையை வெளியேயே வைத்துவிட்டுச் செல்வார்கள். எனவே, உணவுக் கலப்படத் தடைச் சட்டத்தில் இருந்து உப்புக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைப்போல உப்பு ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்க ஊக்கத்தொகை கொடுத்தால் உப்பு ஏற்றுமதி அதிகரிக்கும். அதன்மூலம் உப்புத் தொழிலும் ஏற்றம் பெறும். நாட்டுக்கு அன்னியச் செலாவணியும் கிடைக்கும்.

இந்தப் பிரச்னைகளையெல்லாம்விட மிக முக்கியமான பிரச்னை, விவசாயம் செய்வதற்கு தொழிலாளிகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருப்பதுபோல உப்பளத்தில் வேலை செய்வதற்கும் தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை இருக்கிறது. பாரம்பரியமாக இந்தத் தொழில் செய்து வந்தர்கள் உப்பளங்களை உதறிவிட்டு வேறு தொழில்களுக்கு செல்கிறார்கள். அப்படி அவர்கள் செல்வதிலும் நியாயமில்லாமல் இல்லை.

தினக்கூலியைத் தவிர வேறு எந்தச் சலுகையும் இந்தத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சாலை சட்டங்கள் எதுவும் இவர்களுக்காக அமல்படுத்தப்படுவதில்லை என்கிறபோது வேறு தொழிலுக்கு மாறாமல் என்ன செய்வார்கள்?

அத்யாவசியத் தேவைகள்: கொளுத்தும் வெயிலில் உப்புத் தண்ணீரில் நின்று வேலை செய்வதால் உப்பளத் தொழிலாளர்கள் ஷூ, கண் கண்ணாடி அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இவற்றை உப்பள உரிமையாளர்கள்தான் இப்போது வாங்கிக் கொடுக்கும் நிலை உள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் இவற்றுக்குப் பதிலாகப் பணத்தைப் பெற்று விடுகின்றனர். இதனால், ஷூ, கண் கண்ணாடி அணியாமலே வேலை செய்கின்றனர். இதன் பயனாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதைப் போக்க அரசே ஷூ, கண் கண்ணாடி போன்றவற்றை வழங்க வேண்டும். பி.எஃப்., இ.எஸ்.ஐ., போன்ற சலுகைகள் கிடைக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்த அரசு முன்வரவேண்டும்.

பருவமழை காலத்தில் மூன்று மாதங்கள் உப்புத் தொழில் நடைபெறாது. அந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது. எனவே, உப்புத் தொழிலாளர்களுக்கும் மீனவர்களுக்கு அளிப்பது போன்று மழைக்கால நிவாரண உதவி வழங்க வேண்டும். உப்புத் தொழிலுக்கென்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பதும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை.

உப்பு ஒரு நாள் கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும்? என்று நினைத்துப் பார்த்து அமையவிருக்கும் புதிய அரசாவது உப்புத் தொழிலைக் காப்பாற்ற முன்வரவேண்டும். உப்பிடுபவர்களுக்கு உப்பிடுவோம்!

என்ன வேண்டும் எங்களுக்கு? - சுகாதாரத் துறை ஜெனி ஃப்ரீடா
First Published : 08 May 2011 01:11:33 AM IST
Last Updated : 09 May 2011 05:53:17 PM IST
Last Updated : 09 May 2011 05:53:17 PM IST

முந்தைய காலகட்டங்களில் முதல்வர்கள், அமைச்சர்கள் என அனைத்து முக்கியப் பிரமுகர்களும் சிகிச்சைக்கு நாடியது அரசு மருத்துவமனைகளைத்தான். அரசு மருத்துவமனைகளின் தரமான சிகிச்சையும், மருத்துவர்களின் உண்மையான, நேர்மையான உழைப்புமே இதன் பின்புலமாக இருந்தது.

ஆனால் இப்போது முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் நாடுவது தனியார் மருத்துவமனைகளையே. அரசு மருத்துவமனைகளில் உள்ள துறைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மையானால், தனியார் மருத்துவமனைகளைப் பிரபலங்கள் நாடுவது ஏன்? அமைச்சர்களும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும், உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால்தானே அவை திறமையாகச் செயல்படவும், முறையாக நடைபெறவும் வழிகோலமுடியும்?

சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழகத்துக்குதான் முதலிடம். சிறப்பாகச் செயல்படும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்காக தேசிய விருது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் மாறி மாறி தில்லி சென்று விருதுகளைப் பெற்று வந்தனர்.

இதனை மேலோட்டமாகப் பார்த்தால் சுகாதாரத் துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சிறிது ஆராய்ந்து பார்த்தால் உண்மை நிலை அதுவல்ல என்பது புரியும்.

சுகாதாரம்: அரசு மருத்துவமனைகள் என்றாலே மக்கள் முகம் சுளிப்பதற்கும் வெறுப்பதற்கும் காரணம், மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதாரக் கேடுதான். துப்புரவுப் பணியாளர் பணி இடங்கள் காலியானால் அதை உரிய காலத்தில் நிரப்பாததும், சில பொறுப்புகளைத் தனியாரிடம் விட்டதும்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். சுத்தமின்மை அருவருப்பை ஏற்படுத்துகிறது என்றால், வாயிலில் நுழைந்து சீட்டு வாங்குவதிலிருந்து அறுவைச் சிகிச்சை வரை எதுவாக இருந்தாலும், "ஏதாவது' கொடுத்தாக வேண்டும் என்கிற கையூட்டு நோய்தான் அரசு மருத்துவமனைகளைப் பிடித்த மிகப் பெரிய சாபக்கேடு. சேவைக்குரிய பணியை சம்பாத்தியத்துக்குரிய பணியாக மாற்றிவிட்டிருப்பதுதான் மிகப் பெரிய கொடுமை.

ஊழியர் பற்றாக்குறை: சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது "மக்கள் சுகாதார ஆய்வாளர்கள்'. "ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள்' எனப்படும் இந்த சுகாதார ஆய்வாளர்களின் பணியிடங்கள் 60 சதவீதம் மேல் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பிறகு தொற்றுநோய்கள் பரவாமல் என்ன செய்யும்?

5,000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் இருக்க வேண்டுமென்பது விதி. ஆனால் பல இடங்களில் 30 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகைக்குத்தான் ஒரு சுகாதார நிலையம் இயங்குகிறது. அதிலும் போதிய ஊழியர்கள் இல்லாத நிலைமை. 7 படுக்கைக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும். அதுவும் பின்பற்றப்படுவதில்லை.

அதைவிடக் கொடுமையான விஷயம் போதுமான அளவு மயக்கவியல் நிபுணர்கள் அரசு மருத்துவமனைகளில் கிடையாது. இதனால் பல அறுவை சிகிச்சைகள் மாதக்கணக்கில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.

தாமதம்: மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் கருவிகளோ, திட்டங்களோ செயல்படுத்த அனுமதியளிக்கப்பட்டாலும் அதனைச் செயல்படுத்த குறைந்தது இரண்டு ஆண்டுகள் காலதாமதம் ஏற்படுகிறது. உதாரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவிகள் மாற்றம் செய்யப்படும் என 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுதான் ஒன்றிரண்டு மருத்துவமனைகளுக்கு கருவி பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும் பல கோடி ரூபாய்களுக்கு நவீனக் கருவிகள் வாங்க தாராளமாக நிதியுதவி கிடைக்கிறது. கருவிகள் வாங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்த போதிய பயிற்சி அளிக்கப்படாததால் இவை காட்சிப் பொருளாக இருக்கின்றன.

தனியார் மயம்: அரசு தரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தனியாரின் உதவியுடன்தான் செயல்படுத்தப்படுகின்றன. கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவற்றுக்குத் தனியாரின் உதவியைத்தான் அரசு நாடியுள்ளது.

நிரந்தர ஊழியர்களுக்கு ஊதியமும் கொடுத்து, அந்த ஊழியர்களின் மூலம் செய்யக்கூடிய பணிகளைக்கூட தனியாரிடம் ஒப்படைப்பதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், அதிகார மையங்களுக்கு அதன்மூலம்தான் ஆதாயம் கிடைக்கிறது என்று பதில் வருகிறது.

திட்டங்கள்: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்றுவிட்டால், மீண்டும் அதே குடும்பத்தில் அடுத்த நபர் அந்த காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆய்வுகள், மருந்துச் செலவு என்று நோயாளிகளிடம் இருந்து கறக்க முடிந்த அளவு பணத்தைக் கறந்துவிட்டு, தனியார் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை மட்டும் இலவசமாக செய்கின்றன. அதிலும்கூட அறுவைச் சிகிச்சையிலும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று லாபமடைகின்றன. இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கு அரசு செலவு செய்யும் பணத்தில் பல மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முடியும். வட்ட, மாவட்ட மருத்துவமனைகளை மாதிரி மருத்துவமனைகளாக மாற்றிவிட முடியும்.

108 ஆம்புலன்ஸ் வசதி கிராமப்புறங்களில் பிரபலமடைந்துள்ளது. ஆனால் விபத்து நடந்த இடத்தில் யாராவது இறந்துவிட்டால், சடலங்களைக் கொண்டு செல்ல மாட்டோம் என்று கூறுவதாகவும், பணம் பெற்றுக் கொண்டுதான் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வந்த ஆம்புலன்ஸ் சேவையானது ஓட்டுநர்கள், டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றால் முடங்கிக் கிடக்கின்றது என்பதும்கூட உண்மைதானே? இவற்றை சீர் செய்யாமல், தனியார் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு கிலோமீட்டருக்கு ரூ. 7 அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறதே, அது மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கும் செயல்தானே!

பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைத் திட்டத்துக்காக மாணவர்களிடம் ரூ. 1 வசூலிக்கப்படுகிறது. ஆனால் போதிய டாக்டர்கள், வாகன ஓட்டுநர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், பெரும்பாலான மாவட்டங்களில் இந்தத் திட்டமும் முடங்கிப் போய்விட்டது.

பழமையான கருவிகள்: மருத்துவமனைகளில் பழமையான சாதனங்கள், கருவிகளே புழக்கத்தில் உள்ளன. இதனால் பரிசோதனை முடிவுகளைத் துல்லியமாக அறிய முடிவதில்லை, அவையும் அவ்வப்போது பழுதடைந்துவிடுகின்றன. இதனால் நோயாளிகளிடம் ஆய்வுக்கூட ஊழியர்களே, வெளியில் சென்று பரிசோதித்து முடிவைத் தெரிந்துகொண்டு வருமாறு அறிவுறுத்துகின்றனர்.

தட்டுப்பாடு: மருந்துகள், செயற்கை சுவாச சாதனம், நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்ட சாதனங்களின் தட்டுப்பாடு மருத்துவமனைகளில் எப்போதும் இருக்கிறது. தட்டுப்பாடு இல்லையென்றால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குப் போக மாட்டார்கள் என்பதால் இப்படி தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதோ என்னவோ?

அரசு மருத்துவமனைகளில் ஊடுகதிரியியல் (எக்ஸ்-ரே), மயக்க மருந்தியல், மனநல நிபுணர்கள் உள்ளிட்ட துறைகளில் நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இளநிலை பட்டம் படித்து முடிக்கும் மாணவர்கள் மிகவும் பிரபலமடைந்த துறைகளிலேயே முதுநிலை பட்டப்படிப்பு படிக்க முன்வருகின்றனர். எனவே மருத்துவத்தில் நலிந்த துறைகள் எனக் கருதப்படும் துறைகளில் டாக்டர்களும், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது. இத்தகைய நலிவடைந்த துறைகளில் வேலைபார்க்கும் டாக்டர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் சிறப்புச் சலுகைகள் அல்லது பதவி உயர்வு போன்றவற்றை கொடுத்து அந்தத் துறைகளையும் பிரபலப்படுத்த அரசு முன்வர வேண்டும் என அந்தத் துறைகளைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன வேண்டும் எங்களுக்கு? - ஆதிதிராவிடர் நலத்துறை ப. இசக்கி
First Published : 09 May 2011 12:00:00 AM IST

Last Updated : 09 May 2011 05:51:18 PM IST

அடுத்தடுத்து நடந்த ஆட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கிய தொகை முழுமையாக அவர்களுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டிருந்தால், அந்த மக்களில் பாதி பேராவது முன்னேறி இருப்பார்கள். ஆனால் அந்த மக்களில் 80 சதவீதம் பேர் இன்னும் பழைய நிலையிலேயே இருக்கிறார்கள்.

கல்வி, வேலை வாய்ப்பில் 18 சதவீத இட ஒதுக்கீடு தந்தாலும், இப்போது இந்த மக்களின் அளவு 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துவிட்டதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் தர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளில் சில தொகுதிகள் இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. தனி தொகுதிகள் (ரிசர்வ்) எனப்படும் அவற்றில் வெல்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒன்றுபட்டு குரல் எழுப்புவதில்லை. தாங்கள் சார்ந்துள்ள கட்சி எடுக்கும் நிலைப்பாட்டைத்தான் ஆதரிக்கின்றனர்.

தமிழக அரசு சிறப்பு உட்கூறு திட்டத்தில் ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கும் பணத்தை முழுமையாக இவர்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. இதை முழுமையாகச் செய்தாலே இந்த மக்கள் பெரிய அளவில் முன்னேறி விடுவார்கள்.

மேலும் ஆதி திராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கும் நிதியில் சுமார் 70 சதவீதம் கல்வித் துறைக்கு, அதாவது ஆதி திராவிடர் பள்ளிகளுக்காக செலவிடப்படுகிறது. பொதுக் கல்வித் துறையிலேயே ஆதி திராவிடர் பள்ளிகளுக்கென தனி இயக்குநரை நியமித்து அதற்காக நிதி ஒதுக்கினால், இந்த நிதியை ஆதி திராவிட மக்கள் நலனுக்காக செலவிடலாம். இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

ஆதி திராவிடர்களுக்கு மனைப் பட்டா தருவதற்காக நிதி ஒதுக்கி, நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்வதால் பட்டா தருவது நிலுவையில் உள்ளது. இவ்வாறு சுமார் 5000 வழக்குகள் உள்ளன. இதற்கு ஒதுக்கிய நிதியும் செலவிடப்படாமல் உள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைத்து இந்த வழக்குகளை பைசல் செய்தால்தான் இந்த மக்களுக்கு விரைவாக பட்டா கிடைக்கும் என்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன்.

மாணவர் விடுதிகள்: ஆதிதிராவிட மாணவர்கள் கல்வியில் மேம்பாடு அடைவதற்காக அவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன் உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவருக்கு உணவுக்காக ஒதுக்கும் தொகை, சிறையில் கைதிகளுக்கு ஒதுக்குவதைவிடக் குறைவு என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவுக் கட்டணத்தை ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றி அமைக்க வேண்டும்.

விடுதிகளுக்கு அரிசியை அரசு கொடுத்து விடுகிறது. மளிகைப் பொருள்களை கூட்டுறவுப் பண்டக சாலைகளில் பெற்றுக் கொள்ளலாம். காய்கனிகளை மட்டும் விடுதிக் காப்பாளர்கள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கின்றனர். அதற்கான தொகையை அந்தந்த வட்டாட்சியரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தத் தொகையை வழங்க வட்டாட்சியர்கள் சதவீத அடிப்படையில் கமிஷன் கேட்பது பல முறைகேடுகளுக்கு வழி செய்கிறது என்பதும் காப்பாளர்களின் குற்றச்சாட்டு. இதனால் உணவின் அளவும், தரமும் குறைகிறது. இதைக் காரணம் காட்டி காப்பாளர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் கருத்து.

பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள்: "தாட்கோ' மூலம் வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டுக் கடன்களை ஆதிதிராவிட மக்களின் பெயரில் பிற சமுதாய மக்களோ, பொருளாதார வசதி படைத்த மற்றவர்களோ பெற்று பயனடைவதாக தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

நிலம் இல்லாத ஏழைகள் நிலம் வாங்கவும், நிலம் வைத்திருப்பவர்கள் அதை மேம்படுத்தவும் ரூ. 1 லட்சம்வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மானியம். 50 சதவீதம் வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனை, ஒரு தாழ்த்தப்பட்டவரின் பெயரில் அவர் கூலி வேலை செய்யும் நில உரிமையாளர் பெற்றுக் கொள்கிறார். கடனுக்கான மானியத்தை மட்டும் அவர் எடுத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவருக்கு செலவுக்கு சிறிய தொகையைக் கொடுத்துவிட்டு கடனை ஒருசில மாதங்களில் திரும்பச் செலுத்தி விடுகின்றனர். இதில் கடனானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் உண்மையாக பயன்பெறுபவர் வேறு ஒருவரே. கடன் முறையாக திருப்பிச் செலுத்தப்படுவதால் அதிகாரிகள் இந்த முறைகேட்டைத் தடுப்பதில்லை.

இதேபோல, ஆட்டோ, மினி லாரி வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது. "நபார்டு' போன்ற வங்கிகள் மூலம் டிராக்டர் வாங்கவும், கடன், சிறு பால்பண்ணை வைக்க கடன், சுய தொழில் தொடங்கவும் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களில் பெரும்பாலானவற்றை தாழ்த்தப்பட்டவர்களின் பெயரில் பிற சமுதாய மக்களே பெற்றுக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. தேவேந்திரன் தெரிவித்தார்.

இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமானால் கடன் கொடுக்கும் முன்பு முறையான விசாரணையும், கடன் கொடுத்த பின்னர் அந்தக் கடனைப் பெற்றவர் அதைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்கிறார் அவர்.

தாட்கோ நிதியுதவியைத் தருவதற்கென தனியாக ஒரு வங்கி இருந்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் கடன் பெற இன்னும் வசதியாக இருக்கும். வங்கிக்கும் ரிசர்வ் வங்கி விதிகள் மூலமாக அதிக சலுகைகள் கிடைக்கும் என்கிறார் செ.கு. தமிழரசன்.

கல்லூரியில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களுக்குள் உதவித் தொகை தந்தால்தான் புத்தகம் வாங்கும் செலவுக்கு உதவும். சில மாதங்கள் கழித்து தருவதால் பயன் இல்லை என்கிறார் அவர்.

""ஆதிதிராவிட மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்கள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீட்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்ட பஞ்சமி நில மீட்பு ஆணையம் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே, இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி, பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களிடமே மீண்டும் வழங்க வேண்டும்'' என்று சமூக சமத்துவப் படையின் நிறுவனத் தலைவர் ப. சிவகாமி கூறுகிறார்.

விரயமாகும் நிதி: ஆதிதிராவிட இனத்தவர்கள் சுய தொழில் தொடங்க அவர்களுக்கு கடனுதவி அளிப்பதுடன் சிறு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி மையங்கள் கட்டப்பட்டன. அவை இப்போது மூடிக்கிடக்கின்றன. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இம் மையங்களில் பயிற்சியளிக்க பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இப்போது தனியார் நிறுவனங்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தக் கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்து வருகின்றன என்கிறார் "மனித உரிமைக் களம்' அமைப்பின் இயக்குநர் பரதன். எனவே, பயிற்சிக் கருவிகளை அளித்து பயிற்சியாளர்களை நியமித்தால் ஆதிதிராவிட இளைஞர்கள் பயன்பெறுவதுடன் அரசு நிதி விரயமாவதும் தடுக்கப்படும் என்கிறார் அவர்.

வீணாகும் கட்டடங்கள்: ஆதிதிராவிட மக்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் வியாபாரம் செய்ய "தாட்கோ' மூலம் நகர்ப்புறங்களிலும், பேரூராட்சிப் பகுதிகளிலும் ஆங்காங்கே வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் கடைகளை வாடகைக்கு எடுத்து சொந்தமாக வியாபாரம் செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவரின் பெயரில் மற்றவர்கள் கடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் இடங்களில் கடைகள் காலியாகவே காட்சியளிக்கின்றன. நாளடைவில் அந்தக் கட்டடம் பாழடைந்து பயனற்றுப் போகும் நிலை உருவாகி வருகிறது. இதற்குப் போதுமான கண்காணிப்பு இல்லாமையும், தேவை அறிந்து கட்டடங்களைக் கட்டாததுமே காரணம் என்பது அச் சமுதாயப் பிரதிநிதிகளின் கருத்து. எதிர்காலத்தில் இதைத் தவிர்க்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நகரத்தில் முக்கியமான இடங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்த விரும்புவோர் சாதிச் சான்றுடன் அந்தத் துறை அலுவலர்களை அணுகி அனுமதி பெற வேண்டும். சாதிச் சான்று பெறுவதிலும், அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறுவதிலும் உள்ள சிரமங்களால் அந்த மண்டபங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக அச் சமுதாய மக்கள் கூறுகின்றனர். இதை மற்ற சமுதாய மக்களும் பயன்படுத்த முன்வராததால் அவை பயனற்று காட்சிப் பொருளாகி வருகின்றன.

எந்தக் கட்சியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் ஏதேனும் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் சேருவதற்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மூத்த அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.

இந்த சமுதாயம் பயன்பெற வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் பெயரில் மற்றவர்கள் பயன்பெறுவதைத் தடுக்கவும், திட்ட செயலாக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


First Published : 11 May 2011 12:37:21 AM IST

நகரங்களில் தண்ணீருக்கு விலை கொடுப்பதை ஒரு காலத்தில் கிராமங்களில் கேலி பேசுவார்கள். இப்போதோ தண்ணீர் விற்பனை பல ஊர்களில் குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு காரணம் என்றாலும், நீர் வள ஆதார அமைப்புகள் தொடர்ந்து சுரண்டப்படுவதும், அதைப் பற்றி அரசு கவலைப்படாமல் இருப்பதும்தான் பிரச்னைக்கே காரணம் என்கின்றனர் மாநிலத்தின் நலனை விரும்பும் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் 75 பெரிய அணைகள், 7 சிறிய அணைகள் உள்ளன. அவற்றின் கொள்ளளவு 233.2 டி.எம்.சி. ஆகும். மேலும், மாநிலத்திலுள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளில் 13 ஆயிரத்து 710 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

பயிரிடப்படும் நிலங்களின் மொத்தப் பரப்பு சுமார் 51.26 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதில், கால்வாய்கள் மூலம் 7.82 லட்சம் ஹெக்டேர், ஏரிகள் வழியாக 5.31 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

விவசாயிகளுக்கு மோட்டார்களை இயக்க மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், கால்வாய்கள், ஏரிகள் மூலம் நீரைப் பெறும் விவசாயிகள் அதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை என்று புகார் கூறப்படுகிறது. அவர்களுக்கு இத்தனை ஏக்கருக்கு இவ்வளவு தண்ணீர்தான் தரமுடியும் என்று அரசு தெளிவான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். விவசாயத்துக்கு தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இஷ்டம் போல் தண்ணீரை உறிஞ்சுவதைத் தடுக்க முதல் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஏரிகள்; குளங்கள்: ஏரிகளில் மணல் எடுப்பதற்கு அரசு அங்கீகாரம் அளித்திருந்தாலும் அதை எடுக்கக் கூடிய அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1 மீட்டர் அளவுக்கு மணல் எடுக்கலாம் என அனுமதி அளித்தால் 1.5 மீட்டருக்கும் அதிகமான மணலை எடுக்கின்றனர். ஏரிகளில் அதிக அளவு மணலை அள்ளும் போது அதன் தரைமட்ட அளவு இயல்பான நிலையை விட "மைனஸ்' என்ற நிலைக்குச் செல்கிறது.

தரை மட்ட அளவு கீழே செல்லச் செல்ல தண்ணீர் தேங்கும் அளவும் குறைகிறது. எதிர்காலத்திய தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டாவது மணல் அள்ளுவதை வரைமுறைப்படுத்துவது அரசின் கடமையாகும்.

மழை பெய்யும் போது சில ஏரிகளில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது சில ஏரிகள் நிரம்பும். ஏரிகள் தூர்வாரப்படாத காரணத்தால் இதுபோலத் தண்ணீர் சேகரிக்கப்படும் அளவு குறைந்து விடுகிறது. திண்டுக்கல், பழனி உள்ளிட்ட இடங்களில் 250-க்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. மழை பெய்யும் போது நிரம்பும் அந்த ஏரிகள் இதுவரை தூர்வாரப்படாத காரணத்தால் தண்ணீரை பெரிய அளவுக்கு சேகரிக்க முடியவில்லை.

இதே நிலைமைதான் மாநிலத்தில் பெருவாரியான மாவட்டங்களிலும் என்று தெரிகிறது. ஏரிகளில் நீர் தேங்கும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, மரங்கள் வளர்ப்பு ஆகிய காரணங்களால், நீர் தேங்கும் அளவு பாதிக்கு மேல் குறைந்துவிட்டது. பல ஏரிகள் 2 போகம் விளையக்கூடிய ஆயக்கட்டு நிலங்களைக் கொண்டதாக இருந்தாலும், ஒரு போகத்துக்கே தண்ணீர் போதாது என்ற நிலைதான் உள்ளது.

எனவே, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அரசு அகற்ற வேண்டும். அதிக நீரைத் தேக்கினால் உணவு உற்பத்தி பெருகும், விலைவாசி குறையும், நிலத்தடி நீர் சேமிப்பு அதிகமாகும்.

என்ன வேண்டும் எங்களுக்கு? கரும்பு விவசாயிகள் பீ.ஜெபலின் ஜான்

First Published : 10 May 2011 12:20:33 AM IST

தமிழகத்தில் ஜவுளித்தொழிலுக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தருவது சர்க்கரை உற்பத்தித்தொழில்தான். தொடக்க காலத்தில் லாபத்தில் இயங்கிவந்த கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள், கடந்த 15 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும்தான் ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் கூட்டுறவு, அரசுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 19 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சர்க்கரை ஆலையும், மதுரை மாவட்டம் பாண்டியராஜபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையும் இயங்கவில்லை. மதுராந்தகம் சர்க்கரை ஆலையை அடுத்த பருவத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவை தவிர, தமிழகம் முழுவதும் 25 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 5 லட்சத்து 32 ஆயிரத்து 210 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு, அரசுத்துறை நிறுவன சர்க்கரை ஆலைகளுக்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 450 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 5 லட்சம் விவசாயிகள் கரும்புச் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் ஆலைகளில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 55 ஆயிரத்து 550 மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது. கூட்டுறவு ஆலைகளில் 44 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த அரவைப் பருவம் தொடங்கும்.

கூட்டுறவு ஆலைகளில் பணப் பட்டுவாடா செய்ய இயலாத நிலை ஏற்படும்போது அரசு அளிக்கும் நிதி உதவி ""வழிவகைக் கடன்'' எனப்படுகிறது. இந்தக் கடன் ரூ.900 கோடியும் வட்டி ரூ.600 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.1500 கோடி நிலுவை உள்ளது. இதை அரசு ரத்து செய்தால் ஆலைகளின் சுமை நீங்கும்; விவசாயிகளுக்கு கரும்புக்கு டன்னுக்கு ரூ.100 கூடுதலாகக்கூட தர முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆலைகளுக்குக் கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்குப் பங்கீடு தரும் நடைமுறை இரு ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டுவிட்டது.

கரும்பு விலை நிர்ணயம்: கடந்த ஆண்டு 9.5 சதவீத கட்டுமானத் திறனுள்ள கரும்புக்கு டன்னுக்கு ரூ. 1,900 என்று நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்தது. 9.5 சதவீத கட்டுமானத்திறனுக்கு மேல் வரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ. 14.60 கூடுதலாக வழங்கப்படுகிறது.

தனியார் ஆலைகளுக்கென தனியாக கரும்பு சாகுபடி பரப்பு உருவாகுவதில்லை. கூட்டுறவு ஆலைகளுக்காக ஒதுக்கப்பட்ட கரும்பு சாகுபடி பரப்பில் இருந்துதான் பிரித்து வழங்கப்படுகிறது. இதனால், கூட்டுறவு ஆலைகளுக்கான கரும்புக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு நஷ்டத்தில் தள்ளப்படுகின்றன.

கரும்பு அதிக விளைச்சல் இருக்கும் நேரத்தில் தனியார் ஆலைகள் தங்கள் பகுதி விளைச்சலை முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. அப்போது கூட்டுறவு ஆலைகள் இதை எடுத்துக் கொள்ளுமாறு அரசு கூறும். விளைச்சல் குறைவாக உள்ளபோது, கூட்டுறவு ஆலைக்கான விளைச்சல் பகுதியில் இருக்கும் கரும்பையும் தனியார் ஆலைகள் (கள்ளத்தனமாக) கொள்முதல் செய்யும். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே கூட்டுறவு ஆலைகளின் நஷ்டம் அதிகமாகிறது; தனியார் ஆலைகளின் லாபம் உறுதி செய்யப்படுகிறது.

லாபம் ஈட்டும் வழிகள்: சர்க்கரை உற்பத்தியில் ஏற்படும் நஷ்டத்தை, கரும்பு சக்கையில் இருந்து மின்உற்பத்தி, எரிசாராய உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தனியார் ஆலைகள் ஈடுகட்டுவதுடன், அதிக லாபத்தையும் ஈட்டுகின்றன.

ஆனால், கூட்டுறவு ஆலைகளில் 3 ஆலைகளில் மட்டுமே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது கூடுதலாக 9 ஆலைகளில் மின்உற்பத்தி செய்ய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரும்பு அரவை செய்தால் 1 டன்னுக்கு 45 கிலோ மொலாசிஸ் கழிவு வெளியாகிறது. 1 டன் மொலாசிஸில் 250 லிட்டர் எரிசாராயம் தயாரிக்கலாம். இதன் மூலம் கூட்டுறவு ஆலைகளில் நாளொன்றுக்கு ரூ. 3 லட்சம் வருமானம் பெறலாம். அதேபோல கரும்புச்சக்கையில் இருந்து மின்உற்பத்தி செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 12.5 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இப்போது கூட்டுறவு ஆலைகளில் மின்உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முதலீடு செய்துள்ளது. இருப்பினும், எதிர்வரும் 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஆலைக்கு மின்உற்பத்தி மூலம் எவ்வித வருவாயும் கிடைக்காது.

ஒரு ஏக்கருக்கு 4 டன் கரும்பு சோகை கிடைக்கிறது. இப்போது வயலில் அதை எரிக்கிறார்கள். இதை ஆலைக்கு எடுத்துச் சென்று எரித்து மின் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆலைக்கும் சுமார் 50 ஆயிரம் டன் சோகை கிடைக்கும். வயலில் எரிக்கும்போது வெளியாகும் புகை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும். இதையே ஆலையில் எரித்தால் மின் உற்பத்திக்குப் பயன்படும். அத்துடன் சோகைக்கு டன்னுக்கு ரூ.200 கிடைத்தாலும் விவசாயிக்கு அது லாபமாக இருக்கும்.

தவறான விற்பனைக் கொள்கை: தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில்தான் சர்க்கரை விலை உச்சத்தில் இருக்கும். அப்போது சர்க்கரையை விற்பனை செய்தால்தான் சர்க்கரை ஆலைகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.

ஆனால், பண்டிகைக் காலங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை விற்பனை அளவை குறைத்தல், விலை குறைந்த காலங்களில் சர்க்கரை விற்பனை அளவை அதிகரித்தல் என்ற தவறான கொள்கையை வேண்டும் என்றே மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன என்பது ஆலைத் தொழிலாளர்களின் புகாராக உள்ளது.

இதனால், தனியார் ஆலைகள் பண்டிகைக் காலங்களில் சர்க்கரையை அதிக அளவு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடைகின்றன. கூட்டுறவு ஆலைகள் சாதாரண காலங்களில் அதிக அளவு சர்க்கரையை விற்பனை செய்து அதிக நஷ்டம் அடைகின்றன.

இதை ஆராய்ந்தாலே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உண்மையிலேயே நஷ்டத்தில் இயங்குகின்றனவா, அல்லது இயக்கவைக்கப்படுகின்றனவா என்பது புரிந்துவிடும்.

இரட்டை நிலை ஊதியம்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்தில் அரசு ஊழியர்களைவிட, ஆலையின் அனைத்து வகை தொழிலாளர்களும் அதிக ஊதியம் பெற்று வந்தனர். ஆனால், இப்போது 20 ஆண்டுகளாக 11 வகை ஊழியர்கள் தவிர மீதம் உள்ள ஊழியர்கள் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பாதியைத்தான் பெறுகின்றனர்.

சர்க்கரை ஆலையில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் இப்போது ரூ. 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரைதான் ஊதியமாகப் பெறுகின்றனர். ஆனால், அதே ஆலைகளில் பொதுதொகுப்பு என்ற பெயரில் பணியாற்றும் 11 வகை ஊழியர்கள் சுமார் 30 பேர் ரூ. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.

கட்டுப்படியாகாத விலை: வெட்டுக் கூலி பிரச்னையால் தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு வெட்டும் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. ஒரு டன்னுக்கு ரூ. 700 கூலி கொடுத்தால்கூட கரும்பு வெட்ட கூலியாட்கள் கிடைப்பதில்லை என அங்கலாய்க்கின்றனர் விவசாயிகள்.

நடவு, கால் மாற்றுதல், சோகை உரித்தல் என அனைத்துப் பணிகளுக்கும் விவசாயக் கூலித் தொகை ஆண்டுக்கு, ஆண்டு உயர்ந்து வருகிறது. உற்பத்திச் செலவும், கரும்புக்கு டன்னுக்கு வழங்கும் குறைந்தபட்ச விலையும் ஒரே நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் வெட்டுக் கூலி என்பது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை அளித்துள்ளது.

விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகள்: விவசாயக் கூலி உயர்வு, உரம் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை உயர்வு, வெட்டுக் கூலி உயர்வு, லாரி வாடகை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கரும்புக் கரணை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு என கரும்பு விவசாயிகளுக்கு தொடர் நெருக்கடிகள் உள்ளன.

ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் ஒரு ஏக்கரில் 80 டன் கரும்பு வரை சாகுபடி செய்த நிலை மாறி இப்போது, ஏக்கருக்கு 45 டன் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க தொடர் நெருக்கடிகளால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கரும்பு சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறைந்துவிட்டது.

தனியார் ஆலைகள் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களைக் கொள்முதல் செய்து ஆலைகளை இயக்குகின்றன. ஆனால், கூட்டுறவு ஆலைகளில் 40 ஆண்டுகள் பழமையான இயந்திரங்களைக் கொண்டுதான் இயக்கப்படுகின்றன. இவற்றையும் நவீனப்படுத்துவது அவசியம்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் நீர்வள நில வளத் திட்டம் போன்றவற்றால் பெரிய அளவுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்கின்றனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள். திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏரிகளின் கரையை உயர்த்துவது, பலப்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 55 முதல் 65 சதவீதம் அளவுக்கு மட்டுமே அதனுடைய நிதிகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன.

ஆனால், ஏரிகள் அதிகமில்லாத இடங்களில் அந்த நிதி வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்பட்டன. இந்தத் திட்டங்களால் 20 சதவீத அளவு வரை மட்டுமே பயன் கிடைத்ததாக பொதுப்பணி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணைகள் கட்டுவது சாத்தியமில்லை: அணைகள் கட்டுவது என்பது இனிமேல் சாத்தியமில்லை என்கின்றனர் பொதுப்பணித் துறையினர். பெரிய அளவுக்கு அணைகளைக் கட்டி நீரைத் தேக்குவது இயலாத காரியம்; அதற்குப் பதிலாக ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்கி பாசனத்துக்கும், மக்களின் பயன்பாட்டுக்கும் அளிப்பதுதான் புத்திசாலித்தனம்.

அணைகளில் தரைமட்ட அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். மேட்டூர் போன்ற அணைகளில் 20 முதல் 25 அடிவரை சகதியாக இருக்கும். அதில் 96 டி.எம்.சி. அளவு வரை மட்டுமே நீரைத் தேக்க முடியும் என்ற நிலை உள்ளது. தரைமட்ட அளவு சீராக இருக்குமானால் கூடுதல் அளவு நீரைத் தேக்க முடியும். அணைகளைப் பராமரித்து அவற்றை சீர்படுத்துவது அவசியம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் அணை புனரமைத்தல், மேம்பாட்டுத் திட்டங்களால் பெரிய அளவுக்கு பயன் எட்டப்படவில்லை. அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் கால்வாய்களில் நீர் கசிவதால், கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேருவதில்லை. எனவே கால்வாய்களை சீரமைத்து, சிமென்ட் பூச்சு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

அண்டை மாநிலங்களுடன் பிரச்னைகள்: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு அணையில் கேரளமும், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திரமும் தமிழகத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இந்தப் பிரச்னைகளை சமரசமாகவோ நீதிமன்றத் தீர்ப்பின் மூலமோ விரைந்து தீர்த்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கடந்த கால் நூற்றாண்டுக்கும்மேல் எந்த அரசும் முனைப்புக் காட்டவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று.

மாநிலத்தில் மின்பற்றாக்குறை என்பது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தீர்க்கப்படாத பிரச்னையாக நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

அணுமின் நிலையங்கள், காற்றாலைகள் போன்ற அதிகம் செலவு பிடிக்கும் திட்டங்களைக் காட்டிலும் நீர் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் செலவு மிகக் குறைவாகும். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 5 முதல் 10 பைசா மட்டுமே செலவாகும் என மதிப்பிடுகின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

ஆனால், அதனுடைய உற்பத்தியை அதிகப்படுத்த அரசால் பெரிய அளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

பாண்டியாறு-புன்னம்புழா நீர்மின் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 100 மெகாவாட் மின்சாரமும், அடுத்த கட்டமாக 150 மெகாவாட் மின்சாரத்தையும் தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டது. மத்திய அரசு ஒப்புதல் அளித்தாலும், அண்டை மாநிலமான கேரளம் இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. காரணம், பாண்டியாறு-புன்னம்புழா என்பது மேற்கு நோக்கி ஓடும் இரு மாநில நதியாகும்.

இதேபோன்று, பம்பா-அச்சன்கோயில் ஆறுகளின் மிகை நீரை தமிழகத்துக்கு திருப்பி விடுவதன் மூலம் தென் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்கலாம். மேலும் சுமார் 500 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். இந்தத் திட்டத்தையே கைவிடுவதாக கேரள அரசு கூறியுள்ளது. மத்திய அரசு மூலம் வற்புறுத்த தமிழகம் தொடர்ந்து முயன்று வருகிறது.

பொதுப்பணித் துறை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. கட்டடங்கள், நீர்வளத் துறை. முதல்வர் கருணாநிதி தனது வசம் வைத்திருந்த பொதுப்பணித் துறையில் கட்டடங்கள் பிரிவுக்கு அதிக கவனத்தை அளித்து தலைமைச் செயலக கட்டடத்துக்கு உயிர் கொடுத்தார்.

ஆனால், வேளாண் உற்பத்திக்கு உயிர் நாடியாக விளங்கும் நீர் வளத் துறை மீது கவனம் செலுத்தப்படவே இல்லை.

÷பொதுப் பணித் துறை என்பது அதிக பணிகளைக் கொண்டது. எனவே இதில் இப்போது உள்ள பாசனத் துறையை தனியாகப் பிரித்து, ஓர் அமைச்சகத்தை உருவாக்கி, நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என அனுபவம் மிக்க அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.

அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இவை தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாய, மின்சார, கிராமப்புற மேம்பாடு நலன் கருதி, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசு செய்ய வேண்டிய கடமைகளாகும்.

என்ன வேண்டும் எங்களுக்கு? கரும்பு விவசாயிகள் பீ.ஜெபலின் ஜான்
First Published : 10 May 2011 12:20:33 AM IST

தமிழகத்தில் ஜவுளித்தொழிலுக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தருவது சர்க்கரை உற்பத்தித்தொழில்தான். தொடக்க காலத்தில் லாபத்தில் இயங்கிவந்த கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள், கடந்த 15 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும்தான் ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் கூட்டுறவு, அரசுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 19 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சர்க்கரை ஆலையும், மதுரை மாவட்டம் பாண்டியராஜபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையும் இயங்கவில்லை. மதுராந்தகம் சர்க்கரை ஆலையை அடுத்த பருவத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவை தவிர, தமிழகம் முழுவதும் 25 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 5 லட்சத்து 32 ஆயிரத்து 210 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு, அரசுத்துறை நிறுவன சர்க்கரை ஆலைகளுக்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 450 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 5 லட்சம் விவசாயிகள் கரும்புச் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் ஆலைகளில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 55 ஆயிரத்து 550 மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது. கூட்டுறவு ஆலைகளில் 44 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த அரவைப் பருவம் தொடங்கும்.

கூட்டுறவு ஆலைகளில் பணப் பட்டுவாடா செய்ய இயலாத நிலை ஏற்படும்போது அரசு அளிக்கும் நிதி உதவி ""வழிவகைக் கடன்'' எனப்படுகிறது. இந்தக் கடன் ரூ.900 கோடியும் வட்டி ரூ.600 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.1500 கோடி நிலுவை உள்ளது. இதை அரசு ரத்து செய்தால் ஆலைகளின் சுமை நீங்கும்; விவசாயிகளுக்கு கரும்புக்கு டன்னுக்கு ரூ.100 கூடுதலாகக்கூட தர முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆலைகளுக்குக் கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்குப் பங்கீடு தரும் நடைமுறை இரு ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டுவிட்டது.

கரும்பு விலை நிர்ணயம்: கடந்த ஆண்டு 9.5 சதவீத கட்டுமானத் திறனுள்ள கரும்புக்கு டன்னுக்கு ரூ. 1,900 என்று நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்தது. 9.5 சதவீத கட்டுமானத்திறனுக்கு மேல் வரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ. 14.60 கூடுதலாக வழங்கப்படுகிறது.

தனியார் ஆலைகளுக்கென தனியாக கரும்பு சாகுபடி பரப்பு உருவாகுவதில்லை. கூட்டுறவு ஆலைகளுக்காக ஒதுக்கப்பட்ட கரும்பு சாகுபடி பரப்பில் இருந்துதான் பிரித்து வழங்கப்படுகிறது. இதனால், கூட்டுறவு ஆலைகளுக்கான கரும்புக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு நஷ்டத்தில் தள்ளப்படுகின்றன.

கரும்பு அதிக விளைச்சல் இருக்கும் நேரத்தில் தனியார் ஆலைகள் தங்கள் பகுதி விளைச்சலை முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. அப்போது கூட்டுறவு ஆலைகள் இதை எடுத்துக் கொள்ளுமாறு அரசு கூறும். விளைச்சல் குறைவாக உள்ளபோது, கூட்டுறவு ஆலைக்கான விளைச்சல் பகுதியில் இருக்கும் கரும்பையும் தனியார் ஆலைகள் (கள்ளத்தனமாக) கொள்முதல் செய்யும். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே கூட்டுறவு ஆலைகளின் நஷ்டம் அதிகமாகிறது; தனியார் ஆலைகளின் லாபம் உறுதி செய்யப்படுகிறது.

லாபம் ஈட்டும் வழிகள்: சர்க்கரை உற்பத்தியில் ஏற்படும் நஷ்டத்தை, கரும்பு சக்கையில் இருந்து மின்உற்பத்தி, எரிசாராய உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தனியார் ஆலைகள் ஈடுகட்டுவதுடன், அதிக லாபத்தையும் ஈட்டுகின்றன.

ஆனால், கூட்டுறவு ஆலைகளில் 3 ஆலைகளில் மட்டுமே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது கூடுதலாக 9 ஆலைகளில் மின்உற்பத்தி செய்ய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரும்பு அரவை செய்தால் 1 டன்னுக்கு 45 கிலோ மொலாசிஸ் கழிவு வெளியாகிறது. 1 டன் மொலாசிஸில் 250 லிட்டர் எரிசாராயம் தயாரிக்கலாம். இதன் மூலம் கூட்டுறவு ஆலைகளில் நாளொன்றுக்கு ரூ. 3 லட்சம் வருமானம் பெறலாம். அதேபோல கரும்புச்சக்கையில் இருந்து மின்உற்பத்தி செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 12.5 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இப்போது கூட்டுறவு ஆலைகளில் மின்உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முதலீடு செய்துள்ளது. இருப்பினும், எதிர்வரும் 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஆலைக்கு மின்உற்பத்தி மூலம் எவ்வித வருவாயும் கிடைக்காது.

ஒரு ஏக்கருக்கு 4 டன் கரும்பு சோகை கிடைக்கிறது. இப்போது வயலில் அதை எரிக்கிறார்கள். இதை ஆலைக்கு எடுத்துச் சென்று எரித்து மின் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆலைக்கும் சுமார் 50 ஆயிரம் டன் சோகை கிடைக்கும். வயலில் எரிக்கும்போது வெளியாகும் புகை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும். இதையே ஆலையில் எரித்தால் மின் உற்பத்திக்குப் பயன்படும். அத்துடன் சோகைக்கு டன்னுக்கு ரூ.200 கிடைத்தாலும் விவசாயிக்கு அது லாபமாக இருக்கும்.

தவறான விற்பனைக் கொள்கை: தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில்தான் சர்க்கரை விலை உச்சத்தில் இருக்கும். அப்போது சர்க்கரையை விற்பனை செய்தால்தான் சர்க்கரை ஆலைகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.

ஆனால், பண்டிகைக் காலங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை விற்பனை அளவை குறைத்தல், விலை குறைந்த காலங்களில் சர்க்கரை விற்பனை அளவை அதிகரித்தல் என்ற தவறான கொள்கையை வேண்டும் என்றே மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன என்பது ஆலைத் தொழிலாளர்களின் புகாராக உள்ளது.

இதனால், தனியார் ஆலைகள் பண்டிகைக் காலங்களில் சர்க்கரையை அதிக அளவு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடைகின்றன. கூட்டுறவு ஆலைகள் சாதாரண காலங்களில் அதிக அளவு சர்க்கரையை விற்பனை செய்து அதிக நஷ்டம் அடைகின்றன.

இதை ஆராய்ந்தாலே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உண்மையிலேயே நஷ்டத்தில் இயங்குகின்றனவா, அல்லது இயக்கவைக்கப்படுகின்றனவா என்பது புரிந்துவிடும்.

இரட்டை நிலை ஊதியம்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்தில் அரசு ஊழியர்களைவிட, ஆலையின் அனைத்து வகை தொழிலாளர்களும் அதிக ஊதியம் பெற்று வந்தனர். ஆனால், இப்போது 20 ஆண்டுகளாக 11 வகை ஊழியர்கள் தவிர மீதம் உள்ள ஊழியர்கள் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பாதியைத்தான் பெறுகின்றனர்.

சர்க்கரை ஆலையில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் இப்போது ரூ. 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரைதான் ஊதியமாகப் பெறுகின்றனர். ஆனால், அதே ஆலைகளில் பொதுதொகுப்பு என்ற பெயரில் பணியாற்றும் 11 வகை ஊழியர்கள் சுமார் 30 பேர் ரூ. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.

கட்டுப்படியாகாத விலை: வெட்டுக் கூலி பிரச்னையால் தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு வெட்டும் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. ஒரு டன்னுக்கு ரூ. 700 கூலி கொடுத்தால்கூட கரும்பு வெட்ட கூலியாட்கள் கிடைப்பதில்லை என அங்கலாய்க்கின்றனர் விவசாயிகள்.

நடவு, கால் மாற்றுதல், சோகை உரித்தல் என அனைத்துப் பணிகளுக்கும் விவசாயக் கூலித் தொகை ஆண்டுக்கு, ஆண்டு உயர்ந்து வருகிறது. உற்பத்திச் செலவும், கரும்புக்கு டன்னுக்கு வழங்கும் குறைந்தபட்ச விலையும் ஒரே நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் வெட்டுக் கூலி என்பது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை அளித்துள்ளது.

விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகள்: விவசாயக் கூலி உயர்வு, உரம் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை உயர்வு, வெட்டுக் கூலி உயர்வு, லாரி வாடகை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கரும்புக் கரணை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு என கரும்பு விவசாயிகளுக்கு தொடர் நெருக்கடிகள் உள்ளன.

ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் ஒரு ஏக்கரில் 80 டன் கரும்பு வரை சாகுபடி செய்த நிலை மாறி இப்போது, ஏக்கருக்கு 45 டன் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க தொடர் நெருக்கடிகளால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கரும்பு சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறைந்துவிட்டது.

தனியார் ஆலைகள் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களைக் கொள்முதல் செய்து ஆலைகளை இயக்குகின்றன. ஆனால், கூட்டுறவு ஆலைகளில் 40 ஆண்டுகள் பழமையான இயந்திரங்களைக் கொண்டுதான் இயக்கப்படுகின்றன. இவற்றையும் நவீனப்படுத்துவது அவசியம்.

என்ன வேண்டும் எங்களுக்கு? ஊரக வளர்ச்சித் துறை
First Published : 12 May 2011 12:24:25 AM IST
இந்தியாவின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் என்று அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லோருமே மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் ஊரக வளர்ச்சிக்குச் செலவிடும் தொகை உயர்வதற்கு ஏற்ப கிராமங்களின் வளர்ச்சி இல்லை என்பதை அதிகாரிகளே ஒப்புக் கொள்கிறார்கள்.

கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை ராஜீவ்காந்தி கொண்டு வந்தார். அதன்படி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு நடக்கிறது என்றாலும், அதிகாரம் முழுமையாக அவர்கள் கையில் இல்லை.

உள்ளாட்சி நிர்வாகிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், அவை பரவலாக்கப்படவில்லை என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை. தவறு நடந்தால், நெறிப்படுத்துவதுதான் அதிகாரிகளின் வேலை. அதற்கு மாறாக அதிகாரத்தையே தர மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று நிர்வாகிகள் கேட்கிறார்கள்.

மாவட்ட அளவில் கிராமங்களின் தேவைகளுக்குத் திட்டங்கள் தீட்டும் பொறுப்பு மாவட்ட ஊராட்சிக்குத் தரப்பட வேண்டும். மாவட்ட ஊராட்சித் தலைவரின் செயலாளர் என்ற அளவில்தான் மாவட்ட ஆட்சியர் செயல்பட்டு, திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். ஆந்திரத்தில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் சிவப்பு விளக்கு பொருத்திய காரை ஒதுக்குவதோடு மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான அங்கீகாரம் முடிந்து போகிறது. முழுமையாக மாவட்ட ஊராட்சியிடம் பொறுப்பை ஒப்படைத்து, மக்கள் பிரதிநிதிகளே திட்டமிட அனுமதித்து, ஆலோசனை கூறவும், தேவைப்பட்டால் வழிகாட்டவும் அதிகாரிகளைப் பயன்படுத்தினால், உண்மையான தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதைப் பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் தரும் பதில் அதிர்ச்சியளிக்கிறது. உண்மை என்னவென்றால் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த உள்ளாட்சித் தலைவர்களும், கவுன்சிலர்களும் வரைமுறையில்லாமல் செய்த தவறுகளாலும், எல்லா திட்டங்களிலும் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று மட்டுமே கருதி செயல்பட்டதாலும்தான் இப்போதைய ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதை முதல்வரே கூடக் குறிப்பிட்டு வேதனைப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

முந்தைய ஆட்சிகளில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது போலல்லாமல், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களின் பகுதிகளில் மட்டும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கி இருக்கும் தவறான முன்னுதாரணம் இப்போது அரங்கேறி இருப்பதாகவும் அவர்கள் வேதனைப்பட்டனர். கிராம அளவில் தேவைகளைப் பட்டியலிட்டு, எந்தப் பணியை முதலில் எடுப்பது என்று முடிவு செய்ய வேண்டியது கிராம சபைக் கூட்டம். அதில் அந்த ஊராட்சியின் எல்லா மக்களும் கலந்து, விவாதித்து முடிவு செய்ய வேண்டும். ஆனால், என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதைக்கூட அதிகாரிகளே முன்கூட்டியே கூறும் நிலைதான் இன்னும் உள்ளது என ஊராட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

இதையும் அதிகாரிகள் மறுக்கிறார்கள். தங்களுக்குத் தலையாட்டாத அதிகாரிகளைப் பந்தாடுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஊராட்சித் தலைவர்கள், எங்களை செயல்படவே விடவில்லை என்பதுதான் அதிகாரிகளின் குமுறல். கட்சித் தலைமையில் ஆதரவு ஊராட்சித் தலைவர்களுக்குத்தான் இருந்ததே தவிர, அதிகாரிகள் சொன்ன நியாய தர்மங்கள் எடுபடவில்லை என்கிறார்கள் அவர்கள்.

தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களுக்குப் பயனாளிகள் தேர்வும் கிராம சபைக் கூட்டத்தில் நடந்தால், பாரபட்சம் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்படும். ஆனால், ஊராட்சித் தலைவர்களைக் கவனிக்கும் நபர்களுக்கே இது கிடைக்கிறது என்பது, இந்த நடைமுறையைக் கேள்விக்கு உரியாதாக்குகிறது.

பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக உள்ள இடங்களில், அவரின் கணவரோ அல்லது குடும்பத்தில் வேறு ஒரு ஆணோதான் நிர்வாகத்தைக் கவனிக்கிறார் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம். அதனால்தான் பெண் ஊராட்சித் தலைவர்களுக்குப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இப்போது ஊராட்சிகளுக்குப் பெரிய நிதிச் சுமையாக இருப்பது தெருவிளக்கு மின்சாரக் கட்டணமும், ஊழியர் சம்பளமும்தான். இந்தச் செலவை மாநில அரசே ஏற்றுக் கொண்டால், தங்கள் வருமானத்தை உள்ளூர் வளர்ச்சிக்குச் செலவிட உதவியாக இருக்கும். சூரிய மின்சக்தியை தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தவும், அதற்கான மூலதனத்தை முழுவதும் மானியமாக மத்திய, மாநில அரசுகள் வழங்கவும் வழிவகை செய்தாலே, ஊராட்சிகளிடம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதியாதாரம் இருக்கும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள் பலர்.

கிராம வளர்ச்சித் திட்டம் என்பது சாலை போடுவது, குடிநீர்க் குழாய் அமைப்பது, கழிவுநீர் கால்வாய் கட்டுவது போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது மட்டும்தான் என்ற எண்ணம் மாற வேண்டும் என மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

திரும்பத் திரும்ப நிதி ஒதுக்கீடு வரும்போது, 2 ஆண்டுகளுக்குள் போட்ட சாலையையே மறுபடி போடுவதாகத் திட்டம் செயல்படுத்துவது வீண் செலவு. எனவே, கிராமத்தில் எல்லா சாலைகளையும் போட்டு முடித்துவிட்டால், இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சி மையம், மக்களுக்கு உதவக் கூடிய வேறு சேவை நிலையங்கள் அமைப்பது போன்றவை பற்றி சிந்திக்க வேண்டும். அந்த ஊர் மக்கள் கூடி அதற்கேற்ப விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். அத்தகைய திட்டங்களுக்கு செலவிட அரசு நிதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊராட்சிகளை வளர்ந்தவை, வளர்ந்து வருபவை, வளராதவை என பிரித்துக் கொண்டு, அதற்கேற்ப நிதி ஒதுக்கீடும், வளர்ச்சித் திட்ட அமலும் இருந்தால் அவற்றின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். இப்போது எல்லா ஊராட்சிகளுமே ஒரே மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்துவதால், வளர்ந்த ஊராட்சிகளில் பணம் விரயமாகிறது. வளர்ந்த ஊராட்சிகளுக்கு சற்று உயர்வான நோக்கில் திட்டங்களை உருவாக்கலாம் என்கிறார்கள்.

கிராமங்களில் விவசாயத்துக்கு டிராக்டர் போன்ற வாகனங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. ஆனால், அவற்றில் பழுது ஏற்பட்டால் நகரப் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே ஊராட்சி ஒன்றியத் தலைமையகத்தில் இவற்றைப் பழுதுபார்க்கும் நிலையங்களை உள்ளாட்சி அமைப்புகளே அமைக்கலாம். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த இத்தகைய வசதியை மறுபடி தொடங்குவது பயனாக இருக்கும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள் மூத்த கிராமவாசிகள்.

மேலும் இத்தகைய இயந்திரங்களைப் பழுதுபார்க்க பயிற்சி நிலையங்களையும் வளர்ந்த ஊராட்சிகள் மூலம் அளிக்கலாம்.

அந்தந்தப் பகுதியில் உள்ள பெரிய தொழிற்சாலைகளைச் சார்ந்த துணைத் தொழில்களை கிராமங்களில் உருவாக்குவதில் கவனம் செலுத்துவது நல்லது.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் வேளாண் சார்ந்த தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படும் என முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதைப் போன்றதொரு திட்டம் ஒன்றிய அளவில் செயல்படுத்தினால், விவசாயிகள் பயன்பெறுவர், மற்ற மக்களும் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதன் மூலம் கிராமங்களிலிருந்து வேலை தேடி நகர்ப்புறம் நோக்கி நகரும் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்படும்.

ஊராட்சிகளுக்கான தேர்தல், கட்சி அடையாளம் இல்லாமல் நடத்தப்படுகிறது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கட்சி அடையாளத்துடன் தேர்தல் நடக்கிறது. சட்டங்கள் உருவாக்குதல், கொள்கை முடிவு எடுத்தல் போன்றவை இவர்களின் பணி இல்லை. உள்ளூர் வளர்ச்சி மட்டுமே இவர்களின் நோக்கம் எனும்போது கட்சி அடிப்படையில் நடத்தாமல் பொதுவாகத் தேர்தலை நடத்துவது மன ரீதியில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கும் குறையாமல் பணிகள் நடக்கின்றன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆலோசனை கூற பல்துறை வல்லுநர்கள் இல்லை. உள்ளூர் நிலைமைக்கு ஏற்ப பணத்தைச் சிக்கனமாக, நல்ல முறையில் செலவிட மக்களுடன், திறந்த மனதுடன் விவாதங்கள் தேவை.

ஊரக வளர்ச்சித் துறையின் மிகப்பெரிய சாபக்கேடு, முறையான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகாத மாநில அரசும், முறையாக மக்கள் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாத தேரந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்தான், என்று கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். எல்லா மட்டத்திலும் அதிகாரக் குவிப்பு காணப்படுவதும், நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் இருப்பதும்தான் மிகப்பெரிய பிரச்னை.

ஞாநி

அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் பெயருக்கு முன்னாலிருக்கும் ‘முன்னாள்’ என்ற அடைமொழி தொடருமா, மாறுமா என்பது இன்னும் சில தினங்களில் தீர்மானமாகி விடும்.

நீங்கள் மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றால், அது நிச்சயம் உங்கள் மீதான நம்பிக்கையில் வந்த வாய்ப்பு அல்ல என்ற கசப்பான உண்மையை நினைவுபடுத்தக் கூடிய மிகச் சிலரில் நானும் ஒருவன்.

தேர்தல் சமயத்திலேயே மக்களுக்கு உங்கள் மீது பெரும் நம்பிக்கைகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. வைகோவை நேரில் சென்று நீங்கள் சந்தித்து சமாதானப் படுத்தியிருந்தால், உங்கள் போக்கில் மாற்றம் வந்திருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருக்கும் உங்கள் வாழ்க்கை பற்றிய ஒரு நூலை அது வெளிவரும் முன்பே இடைக்காலத் தடையை நீதிமன்றத்தில் வாங்கியிருக்கிறீர்கள். உலகெங்கும் பிரபலமானவர்களின் வாழ்க்கை பற்றிய நூல்களைப் பலரும் எழுதுவது இயல்பானது. ஒரு சில நூல்களே பிரபலத்தின் அங்கீகாரம் பெற்ற சரிதைகளாக இருக்கும். மீதி நூல்களுக்கு யாரும் தடை கோருவது இல்லை. சில ஆயிரம் பேர்களே படிக்கப் போகும் ஒரு புத்தகத்தைக் கூட சகிக்க முடியாமல் தடை வாங்கும் உங்கள் செயல், உங்கள் மனநிலை மாறவே இல்லை என்பதையே நிரூபிக்கிறது.

இப்படி எந்த விதத்திலும் யதேச்சாதிகார மனப்போக்கிலிருந்து மாறாமலே இருக்கும் நீங்கள் இந்த முறை ஆட்சியைப் பிடித்தால், அது உங்களுக்கான மக்கள் ஆதரவு அல்ல; கருணாநிதிக்கும் அவரது குடும்பம் சார்ந்த தி.மு.க ஆட்சிக்கும் எதிராக எழுந்த மக்கள் எழுச்சி மட்டுமே அது. அந்த எதிர்ப்புக்கு வடிவம் தர வேறொரு பெரும் கட்சியும் பெரும் தலைவரும் இல்லாததாலேயே, உங்களுக்கு அது வாய்ப்பாக மாறுகிறது.

அப்படியானால், கடந்த முறைகளில் நீங்கள் ஏன் வாய்ப்பை இழந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்ப்பது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.

கருணாநிதிக்கு குடும்பம் தான் பலம், பலவீனம்; உங்களுக்கென்று குடும்பம் இல்லாதிருப்பதுதான் உங்கள் பலம், பலவீனம் இரண்டுமே. குடும்பம் இல்லாததால், அதற்கென்று ஊழல் செய்யும் அவசியம் உங்களுக்கில்லை என்பது பலம். ஆனால் தனி வாழ்க்கையின் வெறுமையை அனுபவித்தாக வேண்டிய கட்டாயம் ஒரு வருத்தத்துக்குரிய நிலைமைதான்.

அன்றாட வாழ்க்கையில் இந்த வெறுமையைப் போக்கவும், உங்கள் தனி வாழ்க்கையைச் சீராகச் செலுத்தவும் உதவிட ஒரு நல்ல நண்பராக, உங்கள் வார்த்தைகளில் உடன் பிறவா சகோதரியாக ஒரு சசிகலா அமைந்தது உங்களுக்கு நல்ல விஷயம்தான். ஆனால் அதே சசிகலாவாலும், சசிகலாவுக்கும் அவரது ரத்த உறவுகளுக்கும் நீங்கள் காட்டி வந்த சலுகைகளாலும்தான் நீங்கள் கடந்த முறைகளிலெல்லாம் மக்களின் ஆதரவைப் பறிகொடுத்தீர்கள்.

எனவே இந்த முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், என் வேண்டுகோள் இதுதான். தயவுசெய்து சசிகலாவை துணை முதலமைச்சராக்குங்கள். உங்களுக்கு அரசியலில் துணைபுரியும் அவரது சொந்தங்களை அமைச்சர்களாக்குங்கள். ஏனென்றால் அப்போதுதான் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களே நேரடியாக மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது நீங்கள் அவர்களுடைய முகமூடியாக, கேடயமாக இருக்கும் சிக்கலில் சிக்கியிருக்கிறீர்கள்.

ஒரு ஸ்டாலினையோ, ஒரு அழகிரியையோ, ஒரு கனிமொழியையோ நாங்களும், ஏன் நீங்களும் விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் ஒரே அடிப்படை அவர்கள் பகிரங்கமாக அரசியலில் ஆட்சியில் இயங்கியதால்தான். சசிகலா குடும்பத்தினரும் அதேபோல இயங்குவதுதான் சரியானது.

சிறப்பாக இயங்கினால் பாராட்டவும் தவறுகள் செய்தால் தட்டிக் கேட்கவும் எங்களுக்கு - மக்களுக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் திரை மறைவு அதிகாரத்தை அவர்களுக்கு நீங்கள் தரலாகாது. அப்படித் தருவது உங்களுக்கும் ஆபத்தானது என்பதே கடந்த கால வரலாறு. பகிரங்கமாக வரச் சொல்லுங்கள். இல்லையேல் அரசியல் அதிகாரத்திலிருந்து விலக்கி வையுங்கள்.

எத்தனையோ கோளாறுகள் இருந்தபோதும் கருணாநிதியின் பலம் என்பது அவர் மீடியாவை சந்திக்கவும் பதிலளிக்கவும் (அது எத்தனை மழுப்பலானபோதும்) தவிர்த்ததே இல்லை. இதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் (மழுப்புவதை அல்ல.) வாரா வாரம் மீடியாவைச் சந்தியுங்கள். உங்களைச் சுற்றிப் போட்டுக் கொண்டிருக்கும் இரும்புத் திரையால் இழப்பு உங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்குத்தான்.

கருணாநிதிக்கு இல்லாத ஒரு பெரும் செல்வாக்கு கட்சிக்குள் எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் எப்போதும் இருந்து வருகிறது. நீங்கள் யாரையும் வேட்பாளராக்கலாம், அமைச்சராக்கலாம். இந்த விசித்திர செல்வாக்கைப் பயன்படுத்தி, தகுதியானவர்களை அந்தந்தப் பொறுப்புகளுக்கு நியமியுங்கள். பகிரங்கமான நிர்வாகம், பகிரங்கமான அரசியல், பகிரங்கமான வாழ்க்கை முறை இவைதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்.

முக்கியமாக ஒரு வேண்டுகோள். கருணாநிதி ஆட்சியில் செய்யப்பட்டவை என்பதற்காக நல்ல திட்டங்களையெல்லாம் முடக்காதீர்கள். அவற்றைத் தொடர்ந்து நடத்துங்கள். மேம்படுத்துங்கள். அதிகபட்சம் பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒருவேளை தி.மு.க.வே மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது முக்கியமானது. ரிப்வான் விங்கிள் போல அடுத்த ஐந்தாண்டுகள் தூங்கி எழுந்து தேர்தல் நேரத்தில் வந்தீர்களானால், கட்சியே காணாமல் போயிருக்கும். உண்மையில் 2011 தேர்தல் தி.மு.க.வுக்கு மட்டும் வாழ்வா சாவா தேர்தல் அல்ல. உங்கள் கட்சிக்கும்தான். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் எழுபதை எட்டிப் பிடிப்பீர்கள். இதர கட்சிகளிலெல்லாம் இளைய தலைமுறைத் தலைவர்கள் அதிகமாகியிருப்பார்கள். எம்.ஜி. ஆருக்குப் பிறகு அ.தி.மு.க என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தபோது நீங்கள் பதிலாகக் கிடைத்தீர்கள். உங்களுக்கு அடுத்து யார் என்றால் யாரும் இல்லை, சசிகலாதான் என்றால் அ.தி.மு.கவை வேகமாக அழிக்க அதைவிட சிறந்த வழி இல்லை.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.கவை உருவாக்கியபோது என்ன சூழல் இருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அண்ணா உருவாக்கிய லட்சியத்திலிருந்து தி.மு.க விலகிய சமயத்தில் காமராஜர் அதை அம்பலப்படுத்தினார். எம்.ஜி.ஆர் எச்சரிக்கை மணி அடித்தார். மீண்டும் தடமேறும் இயக்கம் என்ற நம்பிக்கையே அன்றைய இளைஞர்கள் பலரை எம்.ஜி ஆரை நோக்கி ஈர்த்தது. தொடர்ந்து அ.தி.மு.க அவர் தலைமையிலும் உங்கள் தலைமையிலும் தி.மு.கவைப் போலவே இன்னொரு தடம் புரண்ட இயக்கமாகவே இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் இதர அரசியல் தலைவர்கள் யாரும் விரும்பாமல் அரசியலுக்குள் நுழைந்தவர்கள் அல்ல.

நீங்கள் ஒருவர்தான் விருப்பமில்லாமல் இதற்குள் வர நேரிட்டவர். எனவே அரசியலில் எதிர்க் கட்சியாகவும் சரியாகப் பணியாற்ற விரும்பாவிட்டால் அந்த இடத்தை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்ய நீங்கள் போய்க் கொண்டே இருக்கலாம்.

ழ்க்கை சிலருக்கு அவர்கள் விரும்புவதையே செய்ய, தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து வருகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கருணாநிதி. வேறு சிலருக்கு அவர்கள் விரும்பாவிட்டாலும் ஒன்றில் ஈடுபட்டாகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்கிறது. அம்மாவின் கட்டாயத்தால் சினிமாவுக்கு வந்தீர்கள். எம்.ஜி.ஆரின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்தீர்கள்.

இந்த முறை ஜெயித்தாலும் தோற்றாலும் ஒன்றை நீங்கள் நினைவில் வையுங்கள். இதுதான் உங்களுக்கும் கடைசி வாய்ப்பு. அரசியல் பெரிதாக மாறிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் விரும்புவதை வாழ்க்கையில் செய்யக் கிடைத்த வாய்ப்பாக இந்த முறையைப் பயன்படுத்துங்கள்.

அன்புடன்

ஞாநி

 
மாற்றுத் தேர்தல் அறிக்கை
செல்லப்பா

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் தேர்தல் தாங்கள் யாரால் ஆளப்பட வேண்டுமென மக்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறது. தேர்தலின்போது மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் அவர்களது கணிசமான வாக்குகளை வாங்கி ஆட்சியமைக்கத் துடிக்கும் அரசியல் கட்சிகள் மக்கள் மனத்தில் இடம் பிடிக்கப் பயன்படுத்தும் வலுமிக்க முதல் கருவி தேர்தல் அறிக்கை. தொலைநோக்குப் பார்வையோடு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை ஒன்றிணைத்து மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் களையும் விதத்திலும் மக்களின் வாழ்வாதாரங்களை உறுதிசெய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் விதமாகவும் தேர்தல் அறிக்கைகள் அமைய வேண்டியது அத்தியாவசியம் என்றபோதும் அவை அப்படி அமைவதில்லை என்பது நமது அரசியல் சூழ்நிலையின் சாபக்கேடு. முக்கியக் கட்சிகள் எல்லாம் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை அறிவித்து அவற்றை ஊடகங்கள், பிரச்சாரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி வாக்குகளை அள்ளிவிட ஆலாய்ப் பறக்கும் நிலையில் இவைதாம் தேர்தல் அறிக்கை என மக்கள் தவறாகப் புரிந்துவைத்திருக்கும் நேரத்தில் உண்மையான தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்விதத்தில் வெளியிடப்பட்டுள்ளதுதான் மக்கள் தேர்தல் அறிக்கை 2011.

மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பாகத் தமிழகத்தின் 14 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இவ்வறிக்கை உருவாக்கப்பட்டு மதுரையில் மார்ச் 31 அன்று மக்கள் கண்காணிப்பகத் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் ஏப்ரல் 7, அன்று மக்கள் கண்காணிப்பகச் செயலாக்க இயக்குநரும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாநில ஆலோசகருமான ஹென்றி திபேன் இவ்வறிக்கையைப் பத்திரிகையாளர்களிடையே அறிமுகப்படுத்தி உரையாற்றினார். 216 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் நலன், உரிமைகளுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் மக்களும் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் ஆழமான பார்வையோடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் மாவட்ட அளவிலான பிரதிநிதிகளைக் கொண்டு சேகரிக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகளைத் தொகுதி வாரியாகப் பட்டியலிட்டுள்ளது இந்த அறிக்கை. 1957ஆம் ஆண்டு முதல் 2006வரையிலான தேர்தல்களில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்கள் இடம் பெற்றிருந்த கட்சி ஆகிய தகவல்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியினரும் தங்களது தொகுதியில் இதுவரையான தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்க வசதியானதொரு நினைவூட்டலை இது வழங்குகிறது. தங்களது தொகுதியின் பிரச்சினைகள் எவை, அவற்றைத் தீர்த்துவைக்க முயலும் வகையில் எந்த வேட்பாளர் பணியாற்றுவார் என்பதைக் கருத்தில்கொண்டு வாக்களிக்க வகை செய்கிறது இந்த அறிக்கை. உரையாற்றும்போது ஹென்றி திபேன் குறிப்பிட்டது போல் சமூக மாற்றங்கள் அரசியல் கட்சிகள் வாயிலாகத்தான் வரும் எனும்போது நமக்கான சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் கடமையும் உரிமையும் மக்களான நம் கையில் தான் தரப்பட்டிருக்கிறது. நமது வாக்குகளைக் கையூட்டுக் கொடுத்துப் பறிக்க முயலும் அரசியல் கட்சிகளின் தூண்டிலில் சிக்காமல் நமது வாக்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது அறிக்கை.

மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கமானது மக்கள் கண்காணிப்பகத்தின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்கம். தமிழகத்தில் மனித உரிமைக் கலாச்சாரத்தைப் பரவலாக்கவும் பாதிக்கப்பட்டோர் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும் பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தவும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டுச் செயற்படும் இயக்கம் இது.

தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைகளாலும் மிதமிஞ்சிய விலைவாசி உயர்வாலும் மனம்கொதித்துப் போயுள்ள தமிழக மக்களின் உள்ளத்து உணர்வுகளை, தேவைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையில் அடித்தள மக்களின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டுகின்ற முறையில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிடுவது அவசியமெனக் கருதியதால் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இதைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில் வியக்கத்தக்க திட்டங்களைத் தாங்கிய தேர்தல் அறிவிப்புகளைக் கண்டு குழம்பிப் போயிருக்கும் மக்களுக்கு எதார்த்தத்தை எடுத்துரைக்கிறது இந்த மாற்றுத் தேர்தல் அறிக்கை. அரசு, அரசியல் கட்சிகள் செயல்படத் தேவையான அழுத்தம் கொடுப்பது, மக்கள் பயணிக்க வேண்டிய சரியான திசையை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது ஆகியவை இதன் முக்கிய நோக்கம். மக்களின் வாழ்வு, சுதந்திர, சமத்துவ, மாண்பு ஆகிய உரிமைகளை மையப்படுத்தி இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கியமான சில கூறுகள்:

கல்வி உரிமை: முறையான கல்வித் தரக் கட்டுப்பாடு, கண்காணிக்கும் முறை, அதற்கான சட்டதிட்டங்கள் போன்றவை இல்லாததாலும் இருப்பதை அரசு முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதாலும்தான் கல்விக்கூடங்கள் பணம் சம்பாதிக்கும் வியாபார நிறுவனங்களாக மாறிப்போயுள்ளன. கல்விக்கூடங்களைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் கண்டுகொள்ளாத போக்கும் அலட்சியமும் பள்ளி நிர்வாகங்களோடு கொள்ளும் மறைமுகக் கூட்டும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும். சாதி, மத இன பேதங்களின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வியை அரசு உறுதிசெய்ய வேண்டும். மனித உரிமைக் கல்வியை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தி, மனித உரிமைக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள்: குழந்தைகளைப் பணியில் அமர்த்துவதை அரசு கண்காணித்து அந்தப் பணியிட முதலாளிகளுக்குக் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம்-1986இன்படி உரிய தண்டனை அளிக்கவும் அக்குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கேற்ற கல்வியை அளிக்கவும் அரசு உறுதியளிக்க வேண்டும்.

சுகாதார உரிமைகள்: அரசு மருத்துவமனைகள் தரமற்றுச் செயல்படுவதால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை உருவாகி அவை அதிகரிக்கின்றன. அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் தங்களது காப்பீடு, உதவித்தொகை ஆகியவற்றை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால்தான் வழங்க முடியும் என்று முறைப்படுத்த வேண்டும்

வேலைவாய்ப்பு: தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். அதை அரசு முறையாகக் கண்காணித்து மீறுகின்ற நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலைபோகும் விளைநிலங்கள்: நமது நிலங்களைப் பன்னாட்டுத் தரகு முதலாளிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவிக்கின்றனர். விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வேளாண்மைத் தொழில் அழிக்கப்பட்டுவருகிறது. விளைநிலங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சி என்னும் பெயரில் பறிக்கப்படும் சூழலைத் தடுக்க வேண்டும். உழவர்கள் வேளாண்மையைப் புறந்தள்ளி, கூலிகளாக நகரத்து வீதிகளில் அலைகின்றனர். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை விவசாய நிலங்களை விலைக்கு வாங்குவதைத் தடுக்க வேண்டும்.

விலைவாசி உயர்வு: பேருந்துக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, சமையல் எரிபொருட்கள் விலை உயர்வு போன்றவை சாதாரண மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன. பெருமுதலாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் மானியம் வழங்குவதை நிறுத்திவிட்டுச் சாதாரண மக்களுக்குக் கட்டண உயர்வின்றி அடிப்படைத் தேவைகள் நிறைவேற வழிவகை செய்ய வேண்டும்.

ஊழல்மயமான அரசுத் துறைகள்: லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். எந்தத் துறையில் ஊழல் நடந்தாலும் அது மனித உரிமை மீறல் என்பதை உணர வேண்டும்.

வாழ்வாதார உரிமைகள்: தமிழ்நாட்டில் உள்ள வைகை, காவிரி, பாலாறு, தாமிரபரணி, வைப்பாறு போன்ற ஆறுகளில் அரசியல்வாதிகளாலும் அரசு அதிகாரிகளாலும் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நமது நிலத்தடி நீரை உறிஞ்சி கோக்கோ கோலாவும் பெப்சியும் கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க வழிவகை செய்யும்விதத்தில் தண்ணீர் வியாபாரமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது ஐ.நா.சபையின் கட்டாய ஆக்கிரமிப்பு அகற்றுதலின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது அங்கு வசித்த மக்கள் வாழத் தேவையான மாற்று வசிப்பிடம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலங்களை அபகரிப்பது, கிராமப்புற / நகர்ப்புற ஏழைகள், தலித்துகள், பழங்குடியினரைப் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சமத்துவ உரிமைகள்: ஒடுக்கப்பட்ட மக்கள்மீது, தீண்டாமை வன்கொடுமை புரிவோர்மீது கறாராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்காளர் நேர்காணலின்போது சாதியைப் பற்றி விசாரித்து சாதி பலத்தை ஆராய்ந்து சாதியின் அடிப்படையில் வேட்பாளர்களை இறுதியாகத் தேர்ந்தெடுப்பது என்னும் நடைமுறையைத் தேர்தல் ஆணையம் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கும் சமத்துவத்தைத் தூக்கிப்பிடிப்பவர்களுக்கும் சாதி/மத மறுப்புத் திருமணம் புரிந்தவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும்.

பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கவும் நலிந்த கிராமியக் கலைஞர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் அவர்களைக் கௌரவப்படுத்துவதையும் அரசு கொள்கையாக மேற்கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீடு: தமிழகத்தில் உள்ள தலித் கிறிஸ்தவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலிருந்து நீக்கித் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான விவசாய, குடியிருப்பு நிலங்களை அரசு எந்த ஒரு திட்டத்திற்காகவும் கையகப்படுத்தக் கூடாது.

பழங்குடியினர்: பூர்வீக இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மலை வாழ் பழங்குடியின மக்களின் இருப்பிட, வாழ்வாதார உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பெண்கள்: குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 குறித்த விழிப்புணர்வை அரசுசாரா அமைப்புகள் அரசு நிதி உதவியோடு மக்கள் மத்தியில் ஏற்படுத்திப் பெண்கள்மீதான வன் முறைகளைத் தடுத்து நிறுத்தப் போதிய பாதுகாப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சித்திரவதைகளை விசாரிப்பதற்காக Committee Against Sexual Harrassment ஆண், பெண் இரு பாலரும் பணியாற்றக்கூடிய அனைத்து இடங்களிலும் கட்டாயம் உருவாக்க வேண்டும். இது சம்பந்தமான மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டுத் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் நிறுவனங்களிலும் பணியிடங்களிலும் அரசியலிலும் பெண்களுக்கு 33 சத விகிதத்துக்கும் மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

மீனவர்கள்: மீனவ மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை உள்ளடக்கி, தேர்தலில் போட்டியிடத் தனி சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். கடலோர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும். மீனவ மக்களுக்குக் கடற்கரைகளை முழுமையான உரிமையாக்க வேண்டும்.

நாடோடிப் பழங்குடியினர்: குற்றப் பரம்பரையினர் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒட்டர் சமூகத்தினர்மீது புனையப்பட்ட பொய் வழக்குகள் போடுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலையான மறுவாழ்வு அளித்து இதுவரை போடப்பட்ட வழக்குகளுக்குச் சட்டப் பணிகள் ஆணைக் குழு முழுப் பொறுப்பை எடுத்து வழக்கை நடத்த வேண்டும்.

மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் குறித்தான தனிக் கணக்கெடுப்பை நடத்தி அவரவர்களுக்குத் தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். திருநங்கைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அவர்களுக்குக் குடும்ப அடையாள அட்டை, பொது இடங்களில் குடியிருப்புகள் கட்டி வீடு வழங்க ஆவன செய்யப்பட வேண்டும்.

தமிழ்மொழியை இந்திய அரசு 8ஆம் அட்டவணையில் சேர்த்து இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.

மனித மாண்பிற்கு எதிராக மனித மலத்தை மனிதனே அள்ளுவதைத் தடைசெய்து, தூய்மைப் பணித் தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கி, மறுவாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும்.

நிலப் பண்ணை, செங்கல் சூளை, தீப்பெட்டித் தொழிற்சாலை, பட்டாசு தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, டெக்ஸ்டைல் ஆலைகள் போன்ற பணித் தளங்களில் கொத்தடிமை முறை உள்ளது. மேற்கண்ட ஆலைகள் பற்றிய பட்டியல் எடுத்து முதலாளிகள்மீது கொத்தடிமை மீட்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் தொழிலாளர்கள் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

காவல் துறை விசாரணை என்னும் பெயரில் மனித மாண்புக்கு எதிராக மனிதர்களை இழிவுபடுத்துவதும் சித்திரவதைக்குள்ளாவதும் தடுக்கப்பட வேண்டும். காவல்நிலையங்களில் புகார் கொடுக்கச் செல்லும் ஏழை நடுத்தர சாமானிய மக்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும்.

தமிழகக் காவல் துறையில் சீர்திருத்தம் குறித்த காவல் துறை மசோதாவை சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்டந்தோறும் விவாதம் நடத்தி உச்சநீதிமன்றக் கட்டளைப்படி உடனடியாகப் புதிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

மனித உரிமை நீதிமன்றங்கள் மாவட்டந்தோறும் மனித உரிமைச் சட்ட விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும். நீதிமன்றங்களில் சாட்சிகளும் பார்வையாளர்களும் முறையாக அமருவதற்கு இருக்கைகள் போடப்பட வேண்டும்.

தமிழகத்திலுள்ள மாநில மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம், இதர ஆணையங்கள் சுதந்திரமாக மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

ஐ. நாவின் மனித உரிமைக் காப்பாளர் பிரகடனம் 1998 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அணு உலைகள் பாதுகாப்பானது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதால் புதிய அணு உலைகள் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

மக்களை ஏமாற்றும் இலவசத் திட்டங்களைப் புறக்கணித்துக் கண்ணியமான தேர்தலுக்கு ஒத்துழைத்து நமது மதிப்புமிக்க வாக்கை லஞ்ச லாவண்யமற்ற மக்களின் உரிமைக்காகப் போராடும் மனிதநேயச் சிந்தனையுள்ள வேட்பாளருக்கே செலுத்துவோம் என உறுதியெடுப்போம்.

இறுதியாகப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார் ஹென்றி திபேன். தமிழகத் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் நேர்மையாகவும் கறாராகவும் உள்ளதாகத் தெரிவித்த அவர் தமிழகத்தில் மின்சாரம் தடைபடும் சமயத்தில் மட்டும் வாக்காளர்களுக்கு லஞ்சமாகப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். 108 திட்டம் ஹைதராபாத்தில் செயல்படுத்தப்பட்டபோது விபத்து நடந்த முதல் 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து மருத்துவமும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் தமிழகத்தில் அத்திட்டம் வெறும் ஆம்புலன்ஸ் சேவையாகச் சுருங்கிப் போய்விட்டதாகவும் நேர்மையான அதிகாரிகளுக்கு மிரட்டல் விடப்படுவதாகவும் அவர்கள் உயிரைப் பணயம்வைத்து சேவையாற்றுவதாகவும் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

 

திணறுகிறது சென்னைத் துறைமுகம்
முகவை. க. சிவகுமார்
First Published : 08 Jun 2011 03:34:39 PM IST

திருவொற்றியூர், ஜூன் 7: நிர்வாக சீர்கேடு, திட்டப்பணிகளில் தொடரும் தேக்க நிலையால் சென்னைத் துறைமுகம் திணறி வருகிறது; இச் சூழ்நிலையில் கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நீண்ட நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை துறைமுகத்திற்கு வருகை தர உள்ளார்.

துறைமுக இணைப்பு சாலை திட்டம், திருவொற்றியூர் வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில்களில் நிலவும் நெருக்கடி, கூடுதல் நுழைவு வாயில்கள் அமைப்பது, நிலக்கரி, இரும்புத் தாது உள்ளிட்டவைகளை வேறு துறைமுகங்களுக்கு மாற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பார் எனத் தெரிகிறது.

இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாகக் கருதப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் (கன்டெய்னர்கள்) கையாளப்படுகின்றன. நிலக்கரி, உணவு எண்ணெய், உரம் போன்றவை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் துறைமுகத்திற்கு சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இவற்றைக் கையாளத் தேவையான கட்டமைப்பு வசதிகள் துறைமுகத்தின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு திட்டங்களையும் கப்பல்துறை அறிவித்திருந்தது. குறிப்பாக இத்துறையின் அமைச்சராக வாசன் பொறுப்பேற்ற பிறகு திட்டப்பணிகளில் ஏற்பட்டிருந்த பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க முனைப்பு காட்டினார். இருப்பினும் இதற்குத் துறைமுக நிர்வாகம் போதிய முயற்சிகளை விரைவாக எடுக்காததால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன பிரச்னை இருந்ததோ அவை அப்படியே இப்போதும் தொடரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

முதல் நுழைவு வாயில்: துறைமுகத்துக்கு வரும் லாரிகள் அனைத்தும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள முதல் வாயில் வழியாகத்தான் உள்ளே செல்கின்றன. இங்கு சரக்குப்பெட்டகங்கள் குறித்த சர்வே, பாதுகாப்பு சோதனை, சுங்கத்துறை தணிக்கை ஆகிய பணிகளுக்காக சுமார் 5 முதல் 15 நிமிடங்கள் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் தொழில் பாதுகாப்புப் படையினர், சுங்கத்துறை அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணியாற்றினால் ஒரு லாரியை அனுப்ப இரண்டு நிமிடமே போதுமானது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் லாரிகள் காத்திருந்தாலும் விரைவாக உள்ளே அனுப்ப கூடுதல் அலுவலர்களை நியமிக்க துறைமுக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நெரிசல் ஏற்பட்டு தினமும் 15 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் வரிசையில் காத்திருக்கின்றன. இங்கு கூடுதல் வாயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அளித்த உறுதி மொழி என்னாயிற்று?

பணிகள் துவங்காத ரூ. 600 கோடி இணைப்பு சாலை திட்டம்: சென்னைத் துறைமுக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக விளங்கப்போகும் ரூ.600 கோடி துறைமுக இணைப்புச் சாலை திட்டம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. பல்வேறு பிரச்னைகளையும் கடந்து கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 267 கோடி மதிப்பீட்டிலான சாலைப்பணிகள் அடிக்கல் நாட்டுவிழா திருவொற்றியூரில் நடைபெற்றது. ஆனால் 4 மாதங்களைக் கடந்தும் இதுவரை குறிப்பிடும்படியாக எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை. இப்போது காசிமேடு பகுதியில் மீனவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற காரணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையே துவக்கப்பட்ட இத்திட்டம் 24 மாதங்களில் திட்டமிட்டபடி நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூடிக் கிடக்கும் நுழைவு வாயில்கள்: சென்னைத் துறைமுகத்தில் முன்பு 14 நுழைவு வாயில்கள் இருந்தன. பின்னர் 4 வாயில்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. தற்போது 10 வாயில்கள் உள்ளன. சுங்க அலுவலகம் ஏதிரில் உள்ள பிரதான நுழைவு வாயிலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. போர் நினைவுச் சின்னம் அருகே உள்ள வாயில் எண் 10-ல் உரம், நிலக்கரி, கிரானைட் கற்கள், கார்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கடந்த ஜூலை 2009-ல் முதல் காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை இவ்வாயிலில் செல்ல அனுமதி இல்லை. இதனால் இவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் ராயபுரம், காசிமேடு சாலைகளில் வரிசை கட்டி நிற்கின்றன.

ரூ. 6 கோடியை விரயமாக்கியும் செயல்படாத வாகன நிறுத்த முனையம்:

நெரிசல் காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் சுமார் 15 கி.மீ தூரத்திற்கு வரிசையில் வாகனங்கள் தொடர்ந்து காத்திருக்கின்றன. இதற்குத் தீர்வாக வரிசையில் நிற்கும் வாகனங்களை தனியாக ஓரிடத்தில் நிற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டு இதற்காக திருவொற்றியூர் நகராட்சி நிலம் 11 ஏக்கர் குத்தகை அடிப்படையில் துறைமுக நிர்வாகம் கையகப்படுத்தியது. கடந்த ஜூன் 2007-ல் இத்திட்டத்திற்கென ரூ.30 லட்சம் வைப்புத் தொகையையும் துறைமுக நிர்வாகம் செலுத்தியது. கடந்த 4 வருடங்களில் சுமார் ரூ.6 கோடியை துறைமுக நிர்வாகம் வாடகையாக திருவொற்றியூர் நகராட்சிக்குச் செலுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் மூன்று மாதங்களில் கான்கிரீட் தளம் அமைத்து வாகன நிறுத்த மையம் செயல்பாட்டிற்கு வந்திருக்கும். ஆனால் மாத வாடகை ரூ. 12 லட்சம் செலுத்துகிறோமே என்ற கவலை துறைமுக நிர்வாகத்திற்கு துளியும் இல்லாததால் இன்னும் பொட்டல் காடாகவே காட்சியளிக்கிறது 11 ஏக்கர் நகராட்சி நிலம்.

நிலக்கரி, இரும்புத் தாது: சென்னை மாநகரத்தின் கடற்கரைப் பகுதி மக்களுக்கு சுற்றுச் சூழல் சவாலாக இருந்து வந்த நிலக்கரி, இரும்புத் தாது மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி நிலக்கரி, இரும்புத்தாது கையாளுவதை விரைவில் வேறு துறைமுகங்களுக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தது. இதன் மூலம் பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றாலும் துறைமுகத்திற்கு இது ஒரு பலத்த அடியாகவே இருக்கும். இவ்வாறு மாற்றுவதன் மூலம் ஏற்படும் சுமார் ரூ.200 கோடி வருமான இழப்பீட்டை ஈடுசெய்யத் தயாராகும் வகையில் எவ்வித உடனடித் திட்டமும் துறைமுக நிர்வாகத் தரப்பில் இல்லை என்றே கூறப்படுகிறது.

சி.பி.ஐ. பிடியில் சென்னைத் துறைமுகம்: சென்னைத் துறைமுகத்தில் கடந்த பல வருடங்களாக நிலவிவந்த ஊழல்களைக் களையும் வகையில் மத்திய புலனாய்வுத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னாள் துறைமுகத் தலைவராக இருந்த கே.சுரேஷ் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் துறைத் தலைவர்களாக இருந்த சிலர் சி.பி.ஐ. வசம் இப்போது சிக்கியுள்ளனர். 125 ஆண்டு விழா கொண்டாட்டம், தங்க நாணையங்கள் வாங்கியது, ரூ.47 கோடியில் அமைக்கப்பட்ட கன்வேயர், கப்பல் தள ஒதுக்கீடுகளில் தொடரும் அத்துமீறல்கள் குறித்து கடந்த ஒரு மாதமாக சி.பி.ஐ. ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கிய அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என சி.பி.ஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜி.கே.வாசன் நடவடிக்கை எடுப்பாரா? நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சென்னைத் துறைமுகம் பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. துறையின் அமைச்சர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் தொடர்ந்து இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தனியார் கடல்சார் கல்லூரி விழா ஒன்றுக்காக புதன்கிழமை ஜி.கே.வாசன் கலந்து கொள்ள உள்ளார்.

அப்போது மேற்கண்ட பிரச்னைகள் குறித்து துறைமுகத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பாரா, மேலும் திட்டப் பணிகளில் தொடர்ந்து மெத்தனமாகச் செயல்படும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதே கேள்விகளாக உள்ளன. பணியாளர்கள் விஷயத்தில் போதிய அளவு நடவடிக்கைகளை எடுத்த ஜி.கே. வாசன் நிர்வாகரீதியாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இப்போது உருவாகியுள்ளது என்றார் துறைமுக அதிகாரி ஒருவர்.
 
   
முகவை.க.சிவகுமார்
 

First Published : 13 Jun 2011 03:16:18 AM IST
பயணிகள் வாகனமான ஆம்னி பஸ்ஸில் கணக்கு வழக்கின்றி ஏற்றப்படும் சரக்குகள். (இடம்: கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம்)
திருவொற்றியூர், ஜூன் 12: புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சுங்கக் கட்டணச் சாலைகளில் தொடரும் விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து விதிகள், விபத்துகளைத் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
நான்கு வழிச் சாலைகள் நன்றாக இருப்பதால், வாகனங்கள் வேகமாகச் செல்ல முடிகிறது. இதனால் பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளது.
ஆனால் இந்த வேகமே பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பொறியாளர் பி.டி.மோகன் கூறியது: மோசமான நிலையில் இருந்த சாலைகள் இப்போது சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கேற்ற வகையில் போக்குவரத்து விதிகள், வாகன ஓட்டுனர்களிடையே தேவையான விழிப்புணர்வு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து தேவையான நடவடிக்கைகளை நாம் கடைப்பிடிக்கவில்லை என்பதை அதிகரித்துவரும் விபத்துகள் உணர்த்துகின்றன.
சுங்கக் கட்டணச் சாலைகள் வாகனங்கள் 100 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் உறுதியாக உள்ளன. ஆனால் 80 கி.மீ வேகத்தில் சென்றால் மட்டுமே விபத்து ஏற்படும் சூழ்நிலையில் அதனைத் தவிர்க்க முடியும். ஆனால் நவீன ரக கார்களில் செல்பவர்கள் குறைந்தபட்சம் 100 முதல் 150 கி.மீ வேகத்தில்தான் செல்கிறார்கள்.
மேலும் நான்கு வழிச் சாலைகளில் இடதுபுறம் 2 மீட்டர் தூரத்துக்கு இடம் இருக்கும். இதில்தான் இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் செல்ல வேண்டும். அதற்கு அடுத்தபடியாக கனரக வாகனங்களும், செண்டர் மீடியனை ஒட்டி வேகமாகச் செல்லும் வாகனங்களும், முந்திச் செல்லும் வாகனங்களும் செல்ல வேண்டும்.
ஆனால் நடைமுறையில் இதற்கு நேர்மாறாகவே பெரும்பாலானோர் செல்கின்றனர். கனரக வாகனங்கள் வலதுபுறம் செல்கின்றன. திடீரென இடதுபுறம் திரும்புகின்றன. இவ்வாறு 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வாகனங்கள் திடீரென வலதுபுறமோ,இடதுபுறமோ திரும்பினால் சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகின்றன என்றார் மோகன்.
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: சுங்கக் கட்டணச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்த மையங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
அங்கு ஓய்வு எடுக்க, சாப்பிட, குளிக்க என அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். ஆனால் அவை அங்கு இல்லை. இதை யாரும் கண்காணிப்பதும் இல்லை. எனவே சாலையோர உணவகங்கள், டீக்கடைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
வேகமாக முந்திச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுடன் மோதுகின்றன. வழியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்குரிய ஒளிரும் ஒளிப்பான்கள், விளக்குகளை பின்புறம் வைக்க வேண்டும். இதனையும் யாரும் கடைபிடிப்பதில்லை. இது குறித்து வாகன ஓட்டிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.
சர்வீஸ் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்: சுங்கக் கட்டணச் சாலைகள் அமைக்கப்படும்போதே சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்படுகின்றன. உள்ளூர் வாகனங்கள் சென்றுவர இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் இப்போது இச்சாலைகள் அனைத்தும் பராமரிப்பின்றி வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்கும் அவல நிலை ஏற்படுகிறது. சாலைகளை ஒட்டி எங்கு பார்த்தாலும் சட்டவிரோதமாக உணவகங்கள், டீக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவும் விபத்துக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
ஜெட் வேகத்தில் ஆம்னி பேருந்துகள்: ஒரு காலத்தில் சுற்றுலா வாகனங்களாக இருந்த ஆம்னி பேருந்துகள் இப்போது ஜெட்வேக பேருந்துகளாக மாறி வருகின்றன.
மேலும் பயணிகள், அவர்களின் லக்கேஜ் என்பது போய் முதலில் சரக்குகள் பின்னர்தான் பயணிகளுக்கு முக்கியத்துவம் என்ற அளவுக்கு சரக்கு லாரிகளாகவே ஆம்னி பேருந்துகள் மாறிவிட்டன என்பதுதான் உண்மை நிலவரம். பேருந்தின் கூரை, பின்புறம், இடது, வலது புறம் என எங்கு பார்த்தாலும் டயர்கள், நூல்கள், கூரியர் பார்சல்கள், பெயிண்ட் டப்பாக்கள், எண்ணெய் வகைகள் என அனைத்துப் பொருள்களும் ஏற்றப்படுகின்றன.
தீப்பிடிக்கும் அபாயகரமான பொருள்கள் கூட எவ்வித அச்சமும் இன்றி பயணிகள் வாகனத்தில் ஏற்றுவதற்கு யார் அனுமதி கொடுத்தது? முறையான ரசிதுகள் இன்றி இவ்வாறு எடுத்துச் செல்வது எந்த விதியின் கீழ்? முறையான பெர்மிட், இன்சூரன்ஸ் உள்ளதா? இதற்கெல்லாம் விடை கிடைக்காது. புரையோடிப் போயிருக்கும் ஊழல் சமாச்சாரங்களில் இதுவும் ஒன்றாக கலந்துவிட்டது.

வெளிநாடுகளில் எப்படி?
மலேசியாவில் கடைப்பிடிக்கப்படும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அங்கு வசிக்கும் தஞ்சையைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எழில்மணி கூறியது:
மலேசியாவில் வாகன விதிகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகின்றன. இடது, வலது புறம் என்பது ஒவ்வொரு வாகனத்துக்கும் வேகத்துக்கு ஏற்ப அனுமதிக்கப்படுகிறது. இதனை ஒழுங்குடன் கடைப்பிடிக்கின்றனர். யார் பார்க்கப்போகிறார்கள் என்று நினைக்காமல் சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளுக்கு ஏற்ப வாகனம் ஓட்டுகின்றனர். மேலும் சாலை விதிகளை மீறுபவர்களை கேமராவில் பதிவு செய்வது, தண்டனை, அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வாகனத்தை சாலை ஓரத்தில் தேவையின்றி நிறுத்தினால் ரூ.4,500 அபராதம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலும் போக்குவரத்து விதிகள், விபத்துகள் ஏற்படும் அபாயம் குறித்து தொலைக்காட்சி, வானொலிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒலிபரப்பப்படுகின்றன.
இதேபோல் நம் ஊரிலும் போதிய விழிப்புணர்வு, விதிகளை மீறுவோர்களுக்கு அபராதம், தண்டனை, முறையான சாலை பராமரிப்பு என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் விபத்துகளை குறைக்க முடியும் என்றார் எழில்மணி.
தொடரும் விபத்துகள் குறித்து அவ்வப்போது பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பதை விட இதனை தடுப்பதற்கான அனைத்து விஷயங்கள் குறித்தும் பொறியாளர்கள், போக்குவரத்து போலீஸôர், வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், டிரைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து பரிந்துரைகள் பெறப்பட வேண்டும்.
அதனை அரசு தீவிரமாக பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

   
 

கடன் சுமையில் மூழ்கும் கைத்தறிச் சங்கங்கள்!
கே.கே.பாரதிமணி
First Published : 01 Jul 2011 01:12:59 AM IST
சென்னிமலை, ஜூன் 30: தனியார் நிறுவனங்களிடம் குறைந்த கூலிக்குப் பணியாற்றிவந்த லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டுப்படியான கூலியும், இடைவிடாத வேலைவாய்ப்பும் கிடைக்கவேண்டும் என்பதற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் துவங்கப்பட்டன.

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கென 1,175 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 2.32 லட்சம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டு ஜவுளி உற்பத்தி, விற்பனை சுமார் ரூ.900 கோடி.

நெசவாளர்களைத் தவிர நூல் சுற்றுதல், சாயம் தோய்த்தல், பாவு இணைத்தல், பண்டல் கட்டுதல் என நெசவு சார்ந்த தொழில்களில் பல ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

சுமை தூக்குவோர், ஒடி நாடா விற்பனை செய்வோர், கைவண்டித் தொழிலாளர்கள், சங்க அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் என லட்சக்கணக்கானவர்களின் வாழ்வியல் ஆதாரமாக விளங்குகின்றன இக்கூட்டுறவுச் சங்கங்கள்.

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் இப்போது கடன் சுமையில் சிக்கி மீள்வதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை அரசு வழங்காதது, தேவையற்ற நிர்வாகச் செலவுகள், நூல் விலையைக் கட்டுக்குள் வைக்காதது ஆகிய பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள் நெசவாளர்கள்.

இதில் மிகமுக்கியக் காரணம், அரசு கடந்த 3 ஆண்டுகளாக மானியத் தொகையை வழங்கவில்லை என்பதே.

நவீனத் தறிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களின் வரவால் கைத்தறி ஜவுளி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. கைத்தறி ஜவுளி விற்பனையை சரிவிலிருந்து மீட்கவும், பல லட்சம் கைத்தறி நெசவாளர்களை வேலை இழப்பிலிருந்து காப்பாற்றவும், கைத்தறித் துணிகளுக்கு அரசு 30 சதம் மானியம் வழங்கி வருகிறது. இந்த வகையில் நெசவாளர் சங்கங்களுக்கு அரசிடம் இருந்துவரவேண்டிய சுமார் ரூ.200 கோடி மானியம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. வரவேண்டிய பணம் வராத நிலையில் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே நொடிந்துபோய்விட்டன பல கூட்டுறவுச் சங்கங்கள்.

உதாரணமாக, 150 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சங்கம் ஆண்டுக்கு ரூ.1 கோடி ஜவுளி உற்பத்தி செய்கிறது என்றால் வங்கியில் 50 லட்சம் கடனாகப் பெற்றிருக்கும். ஜவுளி விற்பனை மூலம் ரூ.15 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இதில் வங்கி கடனுக்கு வட்டி மட்டுமே 5 லட்சத்திற்கும் மேல் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்ததாக சங்கங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துவது தனிஅலுவலர்களின் சம்பளம். சிறிய சங்கங்கள் கூட ஆண்டுக்கு ரூ.3 லட்சம் தனி அலுவலருக்கு சம்பளமாகக் கொடுத்துவருகிறது. சங்கத்தின் நிதியிலிருந்து இச்சம்பளம் கொடுக்கப்படுவதால் லாபத்தின் பெரும்பகுதியை சங்கம் இழக்க நேரிடுகிறது. தனிஅலுவலர் சம்பளத்தை அரசே வழங்க வேண்டும் அல்லது சங்கத்திற்கு ஒரு அலுவலர் என்பதை, ஒரு கைத்தறி சரகத்திற்கு இரண்டு அலுவலர்கள் என மாற்றி அமைக்க வேண்டும்.

பணியாளர்கள் சம்பளம், கட்டட வாடகை, போக்குவரத்துச் செலவினங்கள் என ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. ஆக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் லாபம் ஈட்டினாலும் சுமார் 2 லட்சம் வரை மட்டுமே சங்கத்திற்கு நிகர லாபம் கிடைக்கிறது. இத்தொகையை 150 உறுப்பினர்களுக்கு பங்கிட்டால் ஒரு நெசவாளிக்கு ஆண்டிற்கு கிடைக்க கூடிய லாபம் மிகவும் சொற்பமே.

மூன்றாவதாக கூறப்படும் பிரச்னை கோ-ஆப் டெக்ஸில் நூல் விலை அதிகம் என்பது. கூட்டுறவுச் சங்கங்கள் கோ-ஆப் டெக்ஸிலிருந்தும், தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகத்திடம் இருந்தும் நூல் கொள்முதல் செய்கின்றன. இவற்றில் நூல் விலை வெளிச் சந்தையை விட அதிகம். உதாரணமாக 2:17 ரகநூல் வெளிச்சந்தையில் ஒரு கட்டு ரூ.800. இதேநூல் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தில் ரூ.850-க்கும், கோ-ஆப் டெக்ஸில் ரூ.1040-க்கும் விற்கப்படுகிறது.

இப் பிரச்சனை குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி, துணிநூல்துறை உதவி இயக்குனர் எஸ்.குமாரவேல் கூறியது:

ஜூலை மாதம் முதல் வாரத்தில் ரூ.8.90 கோடி முதல் கட்டமாக கைத்தறிச் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளது. படிப்படியாக மானிய நிலுவைத் தொகையை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

பல்வேறு பிரச்னைகளை கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ந்து சந்தித்து வருவதால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே புதிய அரசு நெசவாளர்களின் நெருக்கடியான நிலைமையைப் புரிந்துகொண்டு தள்ளுபடி மானியத் தொகையை உடனடியாக வழங்கவும், தனி அலுவலர்களின் சம்பளத்தை அரசே ஏற்கவும், கோ-ஆப் டெக்ஸில் நூல் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.


விளைபொருள் ஏற்றுமதி பாதிப்பு

முகவை க. சிவகுமார்
First Published : 04 Jul 2011 03:36:17 AM IST
திருவொற்றியூர்:சென்னைத் துறைமுக சுங்கத்துறையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் கடந்த ஒரு மாதமாக ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது.

சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. இவற்றைக் கண்காணித்து, மேலாண்மை செய்து, சுங்க வரி வசூலிக்க சென்னைத் துறைமுகத்தை ஒட்டி முதன்மை ஆணையர், 3 ஆணையர்கள் உள்ளிட்டோர் தலைமையில் சுங்க இல்லம் செயல்பட்டு வருகிறது. சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 30 சரக்குப் பெட்டக மையங்கள் வழியாகத்தான் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன.

மீன், இறால் உள்ளிட்ட கடலுணவுகள், மக்காச்சோளம், தேங்காய்நார்க் கழிவுகள், வெங்காயம், மிளகாய், வேர்க்கடலை உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் சரக்குப் பெட்டக மையங்களில் இல்லாததால் ஏற்றுமதியாளர்கள் தாங்களே அனைத்து வசதிகளையும் கொண்ட கிடங்குகளை அமைத்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இத்தகைய தனியார் கிடங்குகளிலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் சுங்கத் துறையிடம் விண்ணப்பித்து மதிப்பீட்டு அதிகாரி, சோதனையிடும் அதிகாரி ஆகியோரை அழைத்துச் சென்று அவர்கள் முன்னிலையில் கன்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றவேண்டும். பின்னர் அந்த அதிகாரிகள் சீல் வைத்து துறைமுகத்திற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்குவார்கள். இதற்குரிய கட்டணத்தையும் ஏற்றுமதியாளர்கள் சுங்கத்துறையிடம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய நடைமுறை விதிகள்: உதாரணமாக பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் ஏற்றமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் நேரடியாக துறைமுகத்தை அடையும். ஆனால் புதிய விதிமுறைகளின்படி பூந்தமல்லியில் சரக்குகளை கன்டெய்னர்களில் ஏற்றிய பிறகு சுங்கத்துறை அதிகாரிகள் சீலிட்ட பிறகும் மீண்டும் மாதவரம் சரக்குப் பெட்டக மையத்திற்கு வந்து அங்கு மறுபடியும் சீல்களை சுங்கத்துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இது ஒரு மாதத்துக்கு முன்பு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நேரடியாகச் சென்றாலே வரிசையில் நின்று செல்ல இரண்டு நாளாகிறது. இந்நிலையில் மாதவரத்தில் ஒரு வரிசை, எண்ணூர் விரைவு சாலையில் ஒரு வரிசை என ஒரு கன்டெய்னரை ஏற்றி இறக்குவதற்கு ஐந்து நாள்கள் சராசரியாக ஆகின்றன.

அதிகாரிகள் பற்றாக்குறை: மேலும் ஒரு புதிய நடைமுறைவிதியையும் சுங்கத்துறை அறிவித்துள்ளது. இதன்படி ஏற்றுமதியை மேற்பார்வையிடச் செல்லும் அதிகாரிகளில் யார் மீதும் துறை ரீதியிலான விசாரணை ஏதும் நிலுவையில் இருக்கக் கூடாது (அவர்கள் பணியில் இருந்தாலும்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அதிகாரிகள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் பணியில் இருக்கின்ற அதிகாரிகளில் பெரும்பாலானோர் மீது விசாரணை நிலுவை இருக்கின்றன. தனியார் கிடங்குகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 கன்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கென சுமார் 50 விண்ணப்பங்கள் தினமும் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால் இதற்கென தற்போது 4 அல்லது 5 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இவர்களும் தங்களது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரம், விடுமுறை நாள்களில் மட்டும்தான் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.

தொழில்களுக்காக அதிகாரிகளா, அதிகாரிகளுக்காக தொழில்களா? இப்பிரச்னை குறித்து கே.வி. மரைன் ஃபுட்ஸ் இயக்குனர் மோகன் கூறியது, நாங்கள் இறால், மீன் உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்கிறோம். இவைகளை ஏற்றுமதி செய்ய எந்த சரக்குப் பெட்டக நிலையத்திலும் குளிரூட்டப்பட்ட கிடங்கு உள்ளிட்ட வசதிகள் கிடையாது. நாங்களே வங்கிகளில் கடன் பெற்று அனைத்து வசதிகளும் நிறைந்த கிடங்குகளை அமைத்துள்ளோம்.

கடலுணவு வகைகள் பதப்படுத்தப்பட்டு பின்னர் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். இதில் சரக்குகள் வரவேண்டும், கன்டெய்னர்கள் நேரத்திற்கு கிடைக்க வேண்டும், லாரிகள் கிடைக்க வேண்டும், கப்பல் தயாராக இருக்க வேண்டும். இது ஒரு சங்கிலித்தொடர் நடைமுறை.

இதில் சுங்கத் துறை சோதனை என்பது கண்காணிப்பு நடைமுறை மட்டுமே. ஆனால் அவர்கள் செய்யும் அலட்சியத்தால் ஒட்டுமொத்தத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்பு கன்டெய்னர்களை ஒரே நாளில் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று சேர்க்க முடியும். இப்போதைய தேவையற்ற நடைமுறைகளால் சென்னை புறநகரில் உள்ள எங்கள் கிடங்குகளில் இருந்து வெளியேறும் லாரிகள் துறைமுகத்தை அடைய குறைந்த பட்சம் 5 நாள்கள் ஆகின்றன.

இந்த ஐந்து நாளும் ஜெனரேட்டர் மூலம்தான் கன்டெய்னர்களை குளிரூட்ட முடியும். இதற்கு முன்பு ஜெனரேட்டரை இயக்க 10 லிட்டர் டீசல் தேவை என்றால் இப்போது 100 லிட்டர் டீசல் செலவாகிறது. இதில் எங்கேனும் தவறு ஏற்பட்டால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சரக்குகளும் பாழாகிவிடும்.

தொழில் வளர்ச்சிக்காகத்தான் சுங்கத்துறை, துறைமுகம் உள்ளிட்டவைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் தொழிலே நலிவடைய இவைகளே காரணமாக இருக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் இத்தொழிலை தொடர முடியாது என்பது மட்டும் உண்மை. நடைமுறைக்கு ஒத்துவராத, எவ்வித வலுவான காரணங்களும் இல்லாத புதிய நடைமுறைகளை ஏன் செயல்படுத்துகிறார்கள் என்பது சுங்கத்துறைக்கே வெளிச்சம் என்றார் மோகன்.

ஒரு லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: விவசாய விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் ராஜாத்தி குழுமத்தை சேர்ந்த பெரியசாமி கூறியது, வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம் போன்ற பொருள்களை மாதம் 1,500 கண்டெய்னர்கள்வரை ஏற்றுமதி செய்கிறோம். கட்டுப்பாடு என்ற பெயரில் அறிவித்துள்ள புதிய நடைமுறைகளால் மாதம் 300 கன்டெய்னர்களைக் கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை. விவசாயிகள், கூடை முடைவோர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனை நம்பியே உள்ளனர்.

ஏற்கனவே சென்னைத் துறைமுகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கத்துறையின் புதிய நடைமுறைகளால் அபாய கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து பலரது கவனத்திற்கு எடுத்துச் சென்றும் யாரும் இப்பிரச்னையில் தலையிடுவதாக இல்லை.

வலுவான எவ்வித காரணங்களும் இன்றி இந்த நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுங்கத்துறை ஆணையரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அமைச்சர் பழனிமாணிக்கம் தலையிட கோரிக்கை: விவசாய விளைபொருள்கள் ஏற்றுமதி மூலம்தான் நாடு தன்னிறைவு பெற முடியும் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடைமுறைக்கு ஒத்துவராத புதிய விதிகள் மூலம் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

புதிய விதிகளை அறிவிக்கும் முன்பு அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்தாதது ஏன்? சென்னையைச் சுற்றிலும் சுங்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 சரக்குப் பெட்டக மையங்களிலும் கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என்கிறபோது தனியார் நிறுவனங்கள் தாங்களே அமைத்துள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஊழலில் ஒட்டுமொத்த சுங்கத்துறையே புரையோடிப் போயிருப்பதாக புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்தப் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்ததில் பயன் அடைவோர் யார்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து நிதித்துறையில் சுங்கத்துதுறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய இணை அமைச்சரான எஸ்.எஸ். பழனிமாணிக்கம்தான் பதில் கூற வேண்டும் என தெரிவித்தார் சுங்கத்துறை முகவர் ஒருவர்.

லாரிகள் தட்டுப்பாடு: வாடகை இரு மடங்கானது
First Published : 25 Jul 2011 03:10:57 AM IST


திருவொற்றியூர், ஜூலை 24 பல்வேறு காரணங்களால், கண்டெய்னர் லாரி போக்குவரத்து நெரிசல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. ஒரு தடவை துறைமுகத்துக்குள் சென்று வரும் குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டெய்னர் லாரிகள் வாடகைக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாடகையும் இருமடங்காக உயர்ந்துள்ளது.

 இப்பிரச்னையைத் தீர்க்க பல்வேறு தரப்பினரும் தீர்வுகளைத் தெரிவித்துள்ள நிலையில், தீர்வு காணவேண்டிய சுங்கத்துறை, துறைமுக அதிகாரிகளின் மெத்தனத்தால் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 இரண்டு இடங்களில் தலா 2 நாள்கள் காத்திருப்பு: சென்னையில் உள்ள தனியார் கிடங்குகள் மற்றும் வெளியூர் நிறுவனங்களில் கண்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றிய லாரிகள் முன்பு துறைமுகத்திற்கு நேரடியாகச் சென்றன. துறைமுக நுழைவு வாயில் அருகே உள்ள "ஓ' யார்டில் கண்டெய்னர் சீல் சரிபார்க்கப்படுவது வழக்கம். ஆனால் சுங்கத்துறையின் புதிய நடைமுறையால் சீல் சரிபார்ப்பது மாதவரத்தில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கு வளாகத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இதற்கான கூடுதல் வசதிகள் ஏதும் செய்யாததால் சீல் சரிபார்ப்பதற்கே 2 நாள்கள் வரிசைகட்டி நிற்க வேண்டியதுள்ளது. சுங்கத்துறை பணி சுமார் 30 நிமிடங்களில் முடிந்துவிடும் என்றாலும் இதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு சீல் சரிபார்க்கப்பட்டு விடுவிக்கப்படும் லாரிகள் மறுபடியும் எண்ணூர் விரைவு சாலையில் சுமார் 15 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மொத்தத்தில் ஒரு கண்டெய்னர் லாரி துறைமுகத்திற்குள் சென்று கண்டெய்னரை இறக்கி வர குறைந்தபட்சம் 5 நாள்கள் ஆகின்றன என்கிறார் டிரைலர் உரிமையாளர் அமைப்பின் நிர்வாகி முத்துகிருஷ்ணன்.

 கடனுக்கான தவணை, வட்டிகூட செலுத்த முடியாது: இப்பிரச்னை குறித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர் பூபாலன் கூறியது:

 முன்பெல்லாம் ஒருநாளைக்கு இரண்டு தடவை லோடு ஏற்றிச் செல்ல முடியும். பிறகு ஒரு தடவை சென்று வர ஒரு நாள், இரண்டு நாளாகி இப்போது குறைந்த பட்சம் 5 நாள்கள் ஆகின்றன. முன்பு வெளியூர் லோடு ஏற்றினால் மாதத்துக்கு பத்து நடைகள் ஓட்ட முடியும். தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதால் இப்போது மாதத்துக்கு 4 அல்லது 5 நடைகள்தான் லாரிகளை இயக்க முடியும். 90 சதவீத கண்டெய்னர் லாரிகள் நிதி நிறுவனங்களின் கடன் மூலம்தான் வாங்கப்படுகின்றன. சுமார் ரூ.26 லட்சத்துக்கு லாரிகளை வாங்கி மாதத்திற்கு ஐந்து நடைகள் இயக்கினால் கடனுக்கான தவணை, வட்டி கூட கட்டமுடியாது.

 இதே நிலை நீடித்தால் விரைவில் இத்தொழில் படிப்படியாக அழியும். பின்னர் ஏற்றுமதி எப்படி நடைபெற முடியும்? பிரச்னையைத் தீர்க்க பூதக் கண்ணாடி ஏதும் தேவையில்லாத நிலையில் ஏன் இவ்வாறு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள் எனத் தெரியாததுதான் வியப்பாக உள்ளது. இப்பிரச்னையால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும் என்றார் பூபாலன்.

 லாரிகள் தட்டுப்பாடு: தொடரும் இப்பிரச்னை குறித்து தேங்காய் நார்க்கழிவு ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள குளோபல் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் சி.ஜான்சன் கூறியது:

 நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தேங்காய் நார்க்கழிவு பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். கழிவு பொருள்கள் என்பதால் இதில் குறைந்த லாபம் மட்டுமே கிடைக்கும். மேலும் ஏற்றுமதி விலையை ஓராண்டுக்கு முன்பே நிர்ணயித்துத்தான் ஏற்றுமதி செய்கிறோம். இப்போது லாரிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் லாரி வாடகை இருமடங்காகிவிட்டது. முன்பு காரனோடை சென்று துறைமுகம் வர ரூ.7 ஆயிரமாக இருந்த வாடகை தற்போது ரூ.14 ஆயிரம் ஆகிவிட்டது. எனினும் லாரிகள் கிடைக்க வில்லை. இந்த ஆண்டு சுமார் 500 கண்டெய்னர்களை ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதே நிலை நீடித்தால் இலக்கை அடைவது சாத்தியமில்லை. சுங்கத்துறை, துறைமுக நிர்வாகங்களின் மெத்தனப்போக்கால் விரைவில் ஏற்றுமதி வீழ்ச்சியடையும் என்பதே உண்மை நிலை. இது குறித்து தொழில் அமைப்புகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் ஜான்சன்.

 தீர்வுதான் என்ன? துறைமுகத்தின் முதல் நுழைவு வாயிலில் கூடுதல் வாயில்கள் அமைத்தல், வாயில் எண் 2 ஏ-வில் வெளியே செல்லும் லாரிகளை அனுப்புவது, திருவொற்றியூர் 11 ஏக்கரில் லாரிகள் நிறுத்துமிடம், நுழைவு வாயில் அருகில் ஐந்தரை ஏக்கரில் நிறுத்துமிடம் அமைக்கும் திட்டங்களை துறைமுகம் செயல்படுத்த வேண்டும். நுழைவு வாயில்களில் கூடுதலாக சுங்க அதிகாரிகள், தொழில்பாதுகாப்பு படை வீரர்களை நியமித்தல், சோதனையை விரைவுபடுத்ததுதல், நடைமுறைக்கு ஒத்துவராத, அதே நேரத்தில் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பாதிக்கும் சுங்கத்துறையின் புதிய நடைமுறைகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இப்பிரச்னை நிரந்தரமாகத் தீர்த்து வைக்க முடியும்.

 ஆனால் அமைச்சர்கள், முதல்வர், தலைமைச் செயலாளர் வரை இப்பிரச்னை தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. வடசென்னை மக்கள், ஏற்றுமதியாளர்கள், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், தொழிலாளர்கள் என பல லட்சம் பேரை பாதிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாததற்கு காரணம் என்ன? உண்மையில் பிரச்னையின் ஆழம் புரியவில்லையா அல்லது தீர்வு காண்பதில் விருப்பம் இல்லையா அல்லது அதிகாரிகள் அரசுக்கு தவறான புள்ளி விபரங்களை அளிக்கிறார்களா?

 இத்தனைக்கும் இப்பிரச்னையில் தொடர்புடைய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் சென்னையில்தான் இருக்கின்றனர். இருந்தும் தீர்வு ஏற்படாததற்கு காரணம் என்ன என்பதே வடசென்னை பொதுமக்கள், ஏற்றுமதியாளர்கள், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆகியோரின் கேள்வியாக உள்ளது.

 



     RSS of this page