| | | |
Uploading ....
1 2 3 First Published : 28 Aug 2011 12:00:00 AM IST
பெரியாருடன் ராஜாஜி பெற்றோர்களைவிட மிகப் பிரியமாக சம்பத்தை தம் சொந்த மகனாகவே அன்பு காட்டி வளர்த்தவர் அன்னை நாகம்மையார். அவர் மறைவுற்றபோது சம்பத்துக்கு ஏழு வயது. நாகம்மையார் மீது சம்பத்துக்கும் தனி வாஞ்சை. பின்னாளில் தமது பெண் மகவுக்கு நாகம்மை என்று நாமகரணம் செய்தார் சம்பத்.1933 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதைச் சமதர்ம மாநாட்டிற்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு தலைமை தாங்கினார். பெரியாரும் மற்ற தலைவர்களும் பங்கேற்றனர். லெனின், நாகம்மையார் படங்களைத் திறந்து வைத்து திரு.வி.க. உரையாற்றினார். 1926 ஆம் ஆண்டு கோவையில் சந்தித்ததற்குப் பிறகு அந்த மாநாட்டில்தான் முப்பெருந் தலைவர்கள் இணைந்து முழக்கமிட்டனர்."திராவிடன்' பத்திரிகை சம்பந்தமாக பெரியார் கைது செய்யப்பட்டு ஆறு மாதச் சிறைத் தண்டனை பெற்றார். 1934 ஜனவரி 12 இல் "குடியரசு' இதழின் தலையங்கம் காரணமாக அதனை எழுதிய பெரியாரையும் குடியரசு இதழின் வெளியீட்டாளரும் பெரியாரின் தங்கையுமான எஸ்.ஆர். கண்ணம்மாவையும் காவல்துறையினர் கைது செய்து அரசு அவதூறு வழக்குத் தொடுத்தனர்.நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி பெரியார் தாமே வாதாடினார். இந்த வழக்கையொட்டித் தண்டனை வழங்கப்பட்டு பெரியார் கோவைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே சிறையில் வேறு ஒரு காங்கிரஸ் கிளர்ச்சியை ஒட்டி ராஜாஜியும் சிறைப்பட்டிருந்தார். அவர் இருந்தது "பி' வகுப்புச் சிறையில். அது பற்றிப் பின்னர் பெரியார் குறிப்பிட்டபோது அரசியல் காரணங்களுக்காக சிறைக்குப் போகிற பலர் தங்கள் தரத்திற்கு மேல் வாழ்வும் சுகமும் அனுபவித்தவர்களாகவே இருப்பார்கள். நான் சிறைக்குப் போன 19 தடவைகளிலும் "சி' வகுப்புக் கைதியாகவே கஞ்சிக் கலயத்தை ஏந்தித் தண்டனை அனுபவித்தேன். இன்று காங்கிரசில் அப்படிப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை எனக் குறிப்பிடடார்.இந்தச் சிறை வாசத்தில் ராஜாஜி பெரியாரைச் சந்தித்தார். இருவரும் இளமைக் காலந்தொட்டு நெருங்கிய நண்பர்கள். எந்த முக்கிய விஷயத்தையும் ஒருவருக்கொருவர் கலந்து பேசியே முடிவெடுப்பர். இப்போதைய சந்திப்பில் எப்படியாவது பெரியாரை மீண்டும் காங்கிரசுக்குள் வளைத்துப் போட்டு விடவேண்டுமென சாமர்த்தியமாகப் பேசினார் ராஜாஜி. பெரியார் சம்மதிக்கவில்லை.குடியரசு பத்திரிகை மீதும், பிரசுரங்களை வெளியிடுகிற சுயமரியாதை பிரசார நிறுவனங்கள் மீதும் அரசின் கெடுபிடிகள் அதிகமாகி பல நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1933இல் வழக்கும் தொடரப்பட்டு பெரியாருக்கு 9 மாத சிறைத் தண்டனை ரூ. 300 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோன்று அவரது தங்கை கண்ணம்மாளுக்கு 6 மாதச் சிறைத் தண்டனை, ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது.பகத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?'என்னும் ஆங்கில நூலை ப. ஜீவானந்தம் தமிழில் மொழி பெயர்த்தார். இதை எழுதியதற்காக ஜீவாவும் உண்மை விளக்கம் அச்சகத்தில் வெளியிட்டதற்காக ஈ.வே. கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்தியக் குற்றவியல் சட்டம் 124 பிரிவின்படி இருவர் மீதும் 204 பிரிவின் கீழ் அவதூறு குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்தார்கள். இதில் அரசு அவதூறு ஏதும் இல்லை என எடுத்துக் கூறி வாதாடிய பிறகு இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.அடிக்கடி அரசின் அடக்குமுறை பாய்ந்ததால் பெரியார் அவ்வப்போது பல பத்திரிகைகளை மாற்றி மாற்றி நடத்திவந்தார். 1933இல் "புரட்சி' வார இதழ் 1934 இல் "பகுத்தறிவு' வார இதழ் என்று இப்படிப் பலவற்றை நடத்தினார். 1935 இல் "பகுத்தறிவு' திங்கள் இதழாகவும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கவிதைகளும் தாங்கி வெளிவந்தது. முத்துசாமி, பாரதிதாசன், ஜலகண்டபுரம் கண்ணன் ஆகியோரது எழுத்தோவியங்கள் தொடர்ந்து இடம் பெற்றன.அந்த ஆண்டிலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்த முறை பற்றி எஸ். குருசாமியுடன் இணைந்து சிந்தித்து தமிழ் எழுத்துகளில் 13 எழுத்து வடிவங்களைப் பெரியார் மாற்றி அமைத்தார். 1935 ஜனவரி 13 முதல் அவரது இதழ்களிலும் நூல்களிலும் இந்த எழுத்துச் சீர்திருத்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கப் பிரசாரமும் சூடு பிடித்தது. இந்தக் காலக்கட்டத்தில் தான் வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து சமுதாயச் சீர்திருத்தவாதியாகவும் ஒப்பற்ற சட்ட வல்லுநராகவும் விளங்கிய அம்பேத்கர், தமது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் சாதி ஆதிக்கவாதிகளால் தொடர்ந்து நசுக்கப்படுவது கண்டு மனம் குமுறித் தாம் இஸ்லாமியத்தில் சேர்ந்து விடப்போவதாக அறிவித்தார். இதனைக் கண்ணுற்ற பெரியார், அம்பேத்கருக்கு எழுதிய 1935 அக்டோபர் 20 ஆம் நாளிட்ட கடிதத்தில் ""தயவு செய்து அவசரமாக முஸ்லிம் மதத்திற்கு மாறி விடாதீர்கள். உங்களவர்களில் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது முஸ்லிம் ஆக்கிவிட்ட பிறகே நீங்களும் இஸ்லாமியராகுங்கள்'' என்று தந்திரமான வார்த்தைகளில் செய்தி அனுப்பியிருந்தார்.1937 ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரப் பணிகள் சூடு பிடித்தன. 17 ஆண்டுக் கால நீதிக்கட்சி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட அருஞ்சாதனைகளையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டியும் காங்கிரசாரின் கொள்கை நாணயமற்ற பிற்போக்குத்தனங்களை விளக்கியும், சூடான சுயமரியாதை கருத்துகளை எடுத்தோதியும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் பெரியார். நீதிக் கட்சி மேடையில் அதன் தலைவர்களோடு தன்மான இயக்கத் தலைவர்களும் பிரசாரத்தில் இணைந்து நின்றனர். மறு பக்கம் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துக் காங்கிரசார் நிகழ்த்தும் போராட்டங்கள். காந்தியடிகளின் புகழ் ஒளியில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒருவித மகத்துவம் தென்பட்டது.இரட்டையாட்சி முறை ஏற்பட்ட 17 ஆண்டுகளில் நீதிக்கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்ததால் மனம் புழுங்கிக் கிடந்த காங்கிரஸ் தலைவர்களும் அவர்களாலே பதவி பெறத் துடித்த சீமான்களும் மலிவான வாக்குறுதிகளை வாரி வழங்கினர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விரைவில் பாலும் தேனும் ஆறாய் ஓடும் என்று மக்களை நம்ப வைத்தார்கள். 1937 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராத அளவில் பெருவெற்றி பெற்றது. நீதிக் கட்சி படுதோல்வி அடைந்தது.நீதிக் கட்சியை ஆயிரம் அடி குழி தோண்டிப் புதைத்துவிட்டதாக காங்கிரஸ் பேச்சாளர்கள் கொக்கரித்தனர். பெரியார் இனி காங்கிரசுக்குத்தான் திரும்ப வேண்டும் என்றெல்லாம் ஆர்ப்பரித்தனர். தோல்வியில் வெற்றி காணும் பெரியார் இது தமக்கு அனுகூலம்தான் என்றார். காங்கிரசாரின் பத்தாம் பசலி ஆட்சி தொடங்குவதால் பார்ப்பனரல்லாதார் தெளிவு பெற்று தம் பக்கம் வருவார்களென்றும் நம்பிக்கையோடு சொன்னார். துவண்டு போன தோழர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார்.வெற்றி பெற்ற காங்கிரசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தபோது அமைச்சர்களின் அன்றாட அலுவல்களில் ஆளுநர்கள் தலையிடக்கூடாது என்று உறுதி மொழி தரும்படி கேட்டனர். அரசு ஏற்கவில்லை. ஆளுநரே இடைக்கால மந்திரி சபை அமைத்தார். அதில் நீதிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடம் தருவதாக ஆளுநர் கூறினார். அதை ஏற்கக் கூடாது என்று பெரியார் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அதற்குப் பின் ராஜாஜி தலைமையில் (1938 ஜூலை 14 ஆம் நாள்) சென்னை மாகாணத்தில் முதன் முதலாக காங்கிரஸ் மந்திரி சபை அமைத்தது.சுயமரியாதை இயக்கத்திலிருந்த எஸ். ராமநாதன் இந்த அமைச்சரவையில் ஓர் அமைச்சராக ஒட்டிக் கொண்டார். ராஜாஜியை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி ராமநாதனே ஓட்டுவது போல் அப்போது ஒரு பத்திரிகை கேலிச்சித்திரம் வெளியிட்டது. அது முதல் அவருக்குக் கட்டை மாட்டு வண்டி ராமநாதன் என்னும் கேலிப் பெயர் ஏற்பட்டது. ராஜாஜி தம்முடைய அமைச்சரவையில் சத்தியமூர்த்திக்கு இடந்தராமல் டி.என்.எஸ். ராஜன் அய்யங்காருக்குப் பதவி தந்ததால் சத்தியமூர்த்தியும் ராஜாஜியும் பகைவர்களானார்கள்.1935 இல் நீதிக் கட்சியினரால் "விடுதலை' வாரம் இருமுறை ஏடாக சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் அது நாளேடாகியது. 1937 இல் நீதிக்கட்சியினர் "விடுதலை' நாளேட்டை பெரியாரிடம் ஒப்படைத்தனர். நிராயுதபாணியாக போர்க்களத்தில் நிற்கும் வீரனுக்குப் போர் வாள் கிடைத்தது போல் பெரியாருக்கு "விடுதலை' என்னும் கருத்துப் படைக்கலன் கிடைத்ததும் அதன் அலுவலகத்தை ஈரோட்டிற்கு மாற்றிக் கொண்டார் பெரியார்.காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்க முதலில் மறுத்து பிறகு சரணாகதி அடைந்த பின்னர், பதவி வாங்கியதை "விடுதலை' நாளேட்டில் சரணாகதி மந்திரிசபை இன்று 7ஆம் நாள், 8ஆம் நாள் என்று நாள்தோறும் வெளியிடப்பட்டு வந்தது. பெரியாரின் தொலைநோக்குக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 1939 ஆம் ஆண்டு அக்டோபரில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறியது. ஆளுநர் ஆட்சி பிரகடனமாகியது. நீதிக் கட்சியின் சார்பில் இயங்கிய விடுதலை ஏட்டின் துணையாசிரியராக அண்ணா 1939 இல் பொறுப்பேற்றார். அண்ணாவின் எழுத்தாற்றல் போலவே அவரது கணிப்பாற்றலும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.வார்டு ரெங்கின் என்பவர் சென்னை மாநில ஆளுநராகப் பதவி ஏற்றார். அவர் ஏற்கனவே லண்டனில் சில பதவிகள் வகித்து கெட்ட பெயர் வாங்கியவர் என்பதை அண்ணா அறிந்து வைத்திருந்தார். ஆகவே வார்டு ரெங்கின் ஆளுநர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று விடுதலை ஏட்டில் அண்ணா தலையங்கம் தீட்டியிருந்தார். இது வெள்ளையர்களுக்கு நெருக்கமான நீதிக் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகையிலிருந்து விடுதலையேட்டில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முறையீடு வந்தது. ஈரோட்டுக்கு விரைந்து வந்த ஏ.டி. பன்னீர்செல்வம் வருத்தம் தெரிவித்து எழுதுமாறு அண்ணாவிடம் வற்புறுத்தினார். அண்ணா மறுத்துவிட்டார். ""என்னால் அதற்கு வருத்தம் தெரிவித்து எழுத முடியாது நான் எழுதியது எழுதியதுதான்'' என்று சொல்லிவிட்டார்.திகைப்புற்ற பன்னீர்செல்வம் பெரியாரிடம் முறையிட்டார். பெரியாரோ, ""அண்ணாத்துரையின் கருத்து சரியானது. ஆளுநர் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். பன்னீர்செல்வத்தின் முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் நெடு நாட்கள் சென்று அதே ஆளுநர் திறமையற்றவர் என லண்டனுக்குத் திருப்பி அழைக்கப்பட்டபோது பன்னீர்செல்வம் அண்ணாவிடம் "நீங்கள் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான்' என்று மனமாரப் பாராட்டினார்.நீதிக்கட்சியின் சார்பில் விடுதலை ஏடு நடத்தப்பட்டதால் அதன் மூலம் போர்ப் பிரசாரம் புரிவதற்காக விடுதலை நிர்வாகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது என்று நீதிக் கட்சி முடிவு எடுத்தது. இதனை எதிர்த்து விடுதலை துணையாசிரியர் பொறுப்பிலிருந்து அண்ணா தம்மை விடுவித்துக் கொண்டார்.அண்ணாவின் பேச்சாற்றலை நன்கு அறிந்திருந்த வெள்ளையரசு அவரைப் போர்ப் பிரசாரத்திற்குப் பயன்படுத்த விரும்பியது. கணிசமான ஊதியம் அளிப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் அண்ணா மறுத்துவிட்டார். நீதிக்கட்சி சீமான்களிடம் வெறுப்பு ஏற்பட்டது போலவே வெள்ளையர் அரசின் மீதும் அண்ணாவுக்கு வெறுப்புத் தோன்றலாயிற்று. இவற்றையெல்லாம் மாணவராக இருந்த சம்பத்திற்கு அண்ணா நுணுக்கமாக எடுத்துரைத்தார்.(தொடரும்)
5 ஈ.வெ.கி. சம்பத்தும்... திராவிட இயக்கமும்...
First Published : 12 Sep 2011 11:29:01 AM IST
First Published : 18 Sep 2011 12:00:00 AM IST  அன்பு அண்ணன் - அருமைத் தம்பி பெரியாரின் அன்பு வேண்டுகோளை ஏற்று அண்ணா (1940ஆம் ஆண்டில்) ஈரோடு சென்று விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்ணாவின் எழுத்தோவியங்கள் "விடுதலை' நாளேட்டிலும் "குடியரசு' வார ஏட்டிலும் இடம் பெற்றன. என்.வி. நடராசன், எஸ்.எஸ். மாரிசாமி, ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோரின் கருத்தாழமிக்க கட்டுரைகளும் அணி செய்தன. இன எழுச்சிக் குரலாக, மொழிப்போர் முரசாக வெளிவந்த அண்ணாவின் அழகுத் தமிழ்க் கட்டுரைகள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. பெரியாரின் பேச்சும், அண்ணாவின் எழுத்தும் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பும் போர் முழக்கமாக விளங்கின. வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியேற்படலாயிற்று. விசையிழந்து கிடந்த பாட்டாளி மக்களும், பாமர மக்களும் வலிமை பெறலாயினர். அண்ணாவின் ஈரோட்டு வாழ்க்கை எழுச்சியோடும் புதுமையோடும் தொடங்கியது. பெரியாரின் பேரன்பிற்குப் பாத்திரமானார். "குடியரசு' அலுவலகத்தை ஒட்டி அண்ணா தங்குவதற்கு ஓர் அறை, மூன்று வேளை பெரியாரோடு சாப்பாடு, காலை 9 மணிக்கு அலுவலகப் பணி ஆரம்பம். குடியரசு அலுவலகத்தின் முகப்பைத் தாண்டியதும் ஒரு பெரிய கூடம். அங்கேதான் பெரியாரின் பணி, அவரைச்சுற்றிலும் பிரமுகர்கள். அதை ஒட்டிய சிறு அறையில் ஆசிரியர் அண்ணாவின் பணி. தலையங்கம், கட்டுரைகள் ஆகியன எழுதுவதோடு பெரியாரும் மற்றவர்களும் தரும் கட்டுரைகளை இடம் பெறச் செய்வது, முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கொடுப்பது ஆகிய பணிகளில் ஆழ்ந்துவிடுவார் அண்ணா. அவரது அறையை அடுத்து அச்சகப்பணி, அச்சுக் கோக்கும் பகுதி, இதழ்களை மடித்து அனுப்புகிற இடம், நிர்வாகப் பகுதி ஆகியன. "குடியரசு' அலுவலகம் ஒரு கொள்கைக் கோட்டமாக பகுத்தறிவுப் பாசறையாக விளங்கியது. அங்கே கட்சியின் முதியவர்கள், சாமியார்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று இப்படியொரு கொள்கைக் குழாம் பெரியாரோடு வசித்து வந்தது. ஒரு குடும்ப உணர்வோடு அனைவரையும் ஒருங்கிணைத்து, அன்பு காட்டி, அரவணைத்துச் சென்ற பெரியாரின் பெருந்தன்மை கருணைக் காவியமாகும். எத்தனையோ சாதிகளைச் சார்ந்தவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஒரு தாய் மக்களாக அவர் வீட்டுத் தாழ்வாரத்தில் கூடிப் பேசி மகிழ்வர். அவர் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக சம்பத் தோன்றி திறமைமிகு மாணவராகத் திகழ்ந்து கொண்டிருந்த அந்தக்கால கட்டத்தில் அண்ணா அந்த இல்லத்து மூத்த பிள்ளைக்கும் மூத்தவராகத் தம்பி சம்பத் மீது பாசத்தைக் கொட்டிப் பழகும் அண்ணனாக விளங்கினார். பாசமிருக்கிற இடத்தில் கண்டிப்பும் இருக்கும். பெரியார் அளவுக்கதிகமாக அன்பு காட்டுவார்; மரியாதை செலுத்துவார். தம்மைப் போலவே தம்மோடு இருப்பவர்களும் எளிமையாக, சிக்கனமாக, ஒழுங்காக, நேரம் தவறாதவர்களாக, கடுமையாக உழைப்பவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார் ஈரோட்டுப் பாசறையில் பல சாமியார்கள் இருந்தனர். மற்றவர்களும், இல்லறத் துறவிகளாக, லட்சியம் ஒன்றையே பற்றி நின்றனர். அண்ணா எம்.ஏ. படித்துவிட்டு, மூன்றாம் வகுப்பு படித்த பெரியாரையே இறுதிவரை, "கண்டதும் கொண்டதும் உம்மைத்தான்' என்று பற்றி நின்றார் என்றால், அந்த அளவு பெரியார் ஒரு சமுதாயத்தையே மாற்றிக் காட்டுகிற வல்லமை பொருந்தியவராக இருந்தார். அண்ணாவுக்கு இயல்பாகவே எளிமையும், அடக்கமும், சகிப்புத் தன்மையும் உண்டு. அதிலும் பெரியாருக்கு அவர் கீழ்ப்படிதலுள்ள மாணவராகவே காணப்பட்டார். பெரியாரும் அண்ணாவின்மீது தனி அன்பும் பாசமும் கொண்டிருந்தார். "குடியரசு' அலுவலகத்துக் கூடத்தில் பெரியார் அமர்ந்து தமது பணிகளை மேற்கொள்வார். அவருக்கு வரும் ஒவ்வொரு கடிதத்துக்கும் அவரே பதில் எழுதுவார். பல நேரங்களில் அவர் சொல்லச் சொல்ல சம்பத் எழுதுவார். அவருக்கு வரும் அஞ்சல் உறைகளைப் பக்குவமாகப் பிரித்து அதை மறுபக்கம் ஒட்டி அந்த உறையிலேயே பதில் கடிதம் அனுப்பி விடுவார். காசு கொடுத்து உறை வாங்குவதில்லை. பெரியாருக்கு மதிய உணவு 12.00 மணிக்கெல்லாம் முடிந்துவிட வேண்டும். தமது கைத்தடியால் அருகில் உள்ள அறையில் தொங்கும் திரைச் சீலையை விலக்கிக் கொண்டு, அங்கே அமர்ந்திருக்கும் அண்ணாவிடம், ""என்னங்க அண்ணாத்துரை சாப்பிடப் போகலாமா?'' என்று கேட்பார். அதுவரை மூடு வராமல் பொம்மைகளை வரைந்து கொண்டிருந்த அண்ணா, பணிவாக எழுந்து, ""இல்லை அய்யா, இனிமேல்தான் தலையங்கம் எழுதவேண்டும்'' என்பார். அதற்குப் பெரியார் அவர்கள் சற்றுக் கோபமாகவே, ""இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பார். அதற்கு அவர், ""இந்து பத்திரிகையில் நம்மைப் பற்றி வந்திருக்கிறது அதற்குப் பதில் எழுத வேண்டும். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்'' என்பார். உடனே பெரியார், ""இதிலென்ன யோசனை வாழுது? அந்தப் பத்திரிகையில் இருக்கிறதை அப்படியே எடுத்துப்போட்டு, இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று ஒருவரியில் எழுதிட்டுப் போக வேண்டியதுதானே?'' என்று சொல்வார். அதற்கு அண்ணா புன்முறுவல் காட்டுவார். அண்ணா எழுதினால் தலையங்கத்திலேயே காதலர்கள் வருவார்கள் கதை சொல்வார்கள் உவமானங்களும் தெளிக்கப்பட்டிருக்கும். அடுக்கு மொழியில் அழகான தலையங்கமாக மிளிரும். ஆனால் பெரியாரோ, ஒரு வரியில் எழுதிப் போட்டுவிட வேண்டியதுதானே என்பார். அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில், ராஜாஜிக்குப் பதில் எழுத வேண்டியிருந்தது. அது பற்றித் தாம் அறிந்திருந்தாலும் பெரியாரிடம் கலந்து கொள்வது நல்லது என்று நினைத்த அண்ணா, ""இதில் நம்முடைய கருத்து என்னய்யா?'' என்று கேட்டார். அதற்குப் பெரியார், ""என்ன பெரிய கருத்து வாழுது? அந்த துரை (ராஜாஜி) எஸ்ஸன்னா நம்ம நோ (சர்) அவரு நோன்னா நம்ம எஸ் (வங்ள்) அவ்வளவுதானுங்க அவரையே பார்த்துக்கிட்டு இருக்கவேண்டியதுதான்'' என்று அய்யாவுக்கு உரிய பாணியில் கூறினார். இப்படி எவ்வளவோ உண்டு. இதையெல்லாம் அருகிலிருந்து கவனிக்க கூடிய வாய்ப்பு மாணவர் சம்பத்திற்கு இருந்தது. அண்ணாவின் சகிப்புத்தன்மையும், பெரியாரிடம் அவர் படும்பாடும் இளைஞர் சம்பத்திற்கு அண்ணாவிடம் மேலும் பாசத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்தலாயிற்று. பள்ளி நேரம் தவிர மற்ற பெரும் பகுதி நேரம் சம்பத், அண்ணாவிடம் அவரது மாணவராக தம்பியாக பாசத்தில் திளைத்தார். பள்ளியில் கற்காத பல விஷயங்களைக் கருத்துகளை அண்ணா மூலம் அறிந்து கொண்டார். உணவருந்துகிற போதுகூட பக்கம் பக்கம் இலையில் அமர்ந்து சம்பத்துக்குப் பிடித்ததையெல்லாம் உண்ணச் செய்து, பிடிக்காததைத் தான் உண்பார் அண்ணா. பெரும்பாலும் அண்ணா மாலைச் சிற்றுண்டி அருந்தியதில்லை. ஈரோட்டு மாளிகையில் அது கிடைக்காது. சம்பத் அண்ணாவை அழைத்துச் சென்று தெருவோரத்தில் சிறிய வீட்டில் மூதாட்டி ஒருவர் சுடும் வடை, முறுக்குகளை அண்ணாவுக்கு வாங்கித் தருவார். வெங்காய பக்கோடா அண்ணாவுக்கு மிகவும் பிடிக்கும். சம்பத் தமது அத்தை கண்ணம்மாவின் இல்லத்தில் அண்ணாவை அழைத்துச் சென்று அங்குத் தடபுடல் விருந்து நடத்தச் செய்வார். பெரியார் ஊரில் இல்லாத நாட்களில் அண்ணாவும், சம்பத்தும் சினிமாவுக்கு அடிக்கடி செல்வதுண்டு. சம்பத்தின் அத்தை மகன் எஸ்.ஆர். சந்தானத்தின் ஸ்டார் டாக்கீசில் இலவச சினிமா எப்போதும் உண்டு. மற்ற கொட்டகையையும் விட்டு வைப்பதில்லை. சிறு புத்தகக் கடை வைத்திருந்த லூர்துசாமி கடையிலிருந்து ஏராளமான பழைய புத்தகங்களை அண்ணா படிப்பதற்கு வாங்கிக் கொடுப்பார் சம்பத். ஈரோடு எஸ். அப்பாவு ரயிலடியில் நடத்திக் கொண்டிருந்த சிகை அலங்காரக் கடையில் வாரம் ஒருமுறை அண்ணாவுக்கு இலவச முகச்சவரம் உண்டு. அண்ணா அடிக்கடி வெற்றிலை பாக்கு போடுவார். மூக்குப் பொடியும் தாராளமாகவே வேண்டும். இதற்கெல்லாம் காசு ஏது? அண்ணாவுக்கு பெரியார் கொடுக்கும் மாத ஊதியம் 35 ரூபாய். அதையும் கணக்குப்பிள்ளையிடம் சொல்லி காஞ்சிபுரத்திற்கு காசோலை மூலம் அனுப்பிவிட உத்தரவு. பின்னர் ராணி அம்மையாரை அழைத்து வந்து அய்யாவுக்குச் சொந்தமான பக்கத்து வீட்டில் அண்ணா குடும்பத்தோடு இருந்தார். அண்ணியார் ராணிக்கு சம்பத் செல்லப்பிள்ளை. கைச்செலவுக்குப் பணம் இருந்தால் தப்பு வழியில் போகச் செய்யும் என்பது பெரியாரின் கருத்து. ஆனால் அண்ணாவுக்கு வெற்றிலை பாக்கு, பொடி, சலவைத்துணி இதற்கெல்லாம் வழி அண்ணாவிடம் அபிமானமுள்ள நண்பர்கள் பலர். சிட்டிகைப்பொடி சிவஞானம் ஒருவர். அவர் என்.வி. சண்முகம் பட்டணம் பொடி டப்பா ஒன்றை அண்ணாவிடம் கொடுத்துவிடுவார். அந்த லேபிளில் உலகப்படம் ஒன்று இருக்கும். பொடி டப்பா கிடைத்ததும் உலகமே கிடைத்தது போல் இருக்கும். அவருடைய ஒவ்வொரு தேவையையும் நண்பர்கள் கவனித்துக் கொள்வார்கள். பெரும்பகுதி சம்பத் செலவிலேயே நடக்கும். 1942இல் பொருளிழப்பு காரணமாக "குடியரசு' இதழ் நிறுத்தப்பட்டது. அண்ணா காஞ்சி திரும்பி "திராவிட நாடு' வார இதழைத் தொடங்க எண்ணியிருந்தார். அது பற்றி பெரியாரிடம் சொன்னதும் அதனை வரவேற்ற பெரியார் "குடியரசு' இதழுக்குப் பயன்படுத்தப்பட்ட சில அச்சு எழுத்துகள், பெட்டிகள், அலமாரிகள் முதலிய பொருட்களை அண்ணாவுக்கு கொடுத்துதவியதோடு, "குடியரசு' இல்லாத குறையைப் போக்க "திராவிட நாடு' இதழ் வளர்ச்சிக்கு ஆங்காங்கே தோழர்கள் நிதியுதவி அளிக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டதோடு தாம் நூறு ரூபாய் நன்கொடையும் அளித்தார். ஈரோட்டுப் பாசறையிலிருந்து விடுபட்டு, அண்ணா காஞ்சி புறப்படுகிறார் என்னும் முடிவினைச் சம்பத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தம்மால் ஒருபோதும் அண்ணாவைப் பிரிந்து இருக்க முடியாது என்று வருந்தினார். அவரை அண்ணாவும் தோழர்களும் தேற்றினர். ""வருத்தப்படாதே சம்பத். நான் அடிக்கடி ஈரோடு வருவேன், நீயும் விடுமுறை நாட்களில் காஞ்சிபுரம் வந்துவிடு. எப்போதும் உன் நினைவாகத்தான் இருப்பேன்'' என்று பாசம் பீறிட்டெழ உருக்கத்துடன் கூறினார் அண்ணா. பெரியார் மற்றும் தோழர்களிடம் பிரியா விடை பெற்றுத் தமது குடும்பத்துடன் அண்ணா காஞ்சிபுரம் திரும்பினார். தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்
First Published : 25 Sep 2011 12:00:00 AM IST "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடகத்தில் காகப்பட்டராக அண்ணா, வீர சிவாஜியாக சம்பத் உடன் கே.ஆர்.ராமசாமி காஞ்சிபுரத்தில் அண்ணா வசித்த வரகு வாசல் தெருவை அடுத்த நிமந்தக்காரத் தெருவில் டி.பி.எஸ். பொன்னப்பாவுக்குச் சொந்தமான ஒரு சிறு கட்டடத்தில் 1942 மார்ச் 8ஆம் நாள் "திராவிட நாடு' வார இதழ் தொடங்கப்பட்டது.முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஈழத்துச் சிவானந்த அடிகள் இப்பத்திரிகையின் நிர்வாகி. ஓரணா விலையில் 8 பக்கங்களோடு இதழ் வெளி வந்தது. எல்லாப் பக்கங்களிலும் அண்ணாவின் எழுத்துகளே இடம் பெற்றிருந்தன. செüமியன், பரதன், ஒற்றன் போன்ற பல புனைப்பெயர்களிலும் அண்ணா எழுதுவார். மிக முக்கியமான கட்டுரைகளுக்குத் தவிர்க்க முடியாத நிலையில் ஓவியங்கள் இடம் பெறும். தலைவர்களது புகைப்படங்கள் இடம் பெற்றதில்லை. இருபதாண்டு கால "திராவிடநாடு' இதழ் வரலாற்றில் அதன் ஆசிரியரான அண்ணாவின் புகைப்படம் ஓர் இதழில்கூட வெளிவந்ததாக நினைவில்லை. மேலும் அண்ணாவின் பெயர் சி.என். அண்ணாதுரை என்றே குறிப்பிடப்படும். கழகத்தின் கொலையுண்ட தியாகிகளின் படங்கள் வெளிவந்துள்ளன. கட்டுரை தலைப்புகளுக்குத் தனியே பிளாக் செய்ய மாட்டார். பார்டர்களைச் சுற்றிலும் அடுக்கி இடையில் தலைப்புக்கான அச்சுக் கோர்த்துப் போடச் சொல்வார். இவை யாவும் பெரியாரிடம் கற்ற சிக்கன வழிமுறைகள்.அண்ணாவின் நண்பரான ஏ.கே. தங்கவேல் முதலியாரின் சகோதரர் பொன்னுச்சாமி முதலியார் என்பவரிடம் ரூ.500 கடன் வாங்கி "திராவிட நாடு' இதழை அண்ணா தொடங்கினார். பின்னர் "வேலைக்காரி' திரைப்படத்தின் மூலம் அண்ணாவுக்குக் கிடைத்த வருவாயில் திருக்கச்சி நம்பி தெருவில் இருந்த "திராவிட நாடு' கட்டடம் வாங்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் திண்ணையில்தான் அண்ணா அமர்ந்து தமது தம்பிமார்களுடன் இரவு நெடுநேரம்வரை கலந்துரையாடுவார்.காஞ்சி கல்யாண சுந்தரம் "திராவிட நாடு' ஏட்டின் பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் பெருமளவு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார். அண்ணாவின் பள்ளித் தோழரான அவர் அண்ணாவை "வா, போ' என்றுதான் பேசுவார். அவர் பேசுவதே வேடிக்கையாக இருக்கும். அவரை ஓர் இடத்தில் உட்கார வைப்பதே கடினம்.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்று இளந்தாடி வீரராகப் பொதுக் கூட்டங்களில் முழங்கிய இரா. நெடுஞ்செழியன் கோவை அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு மாணவர் விடுதியில் காப்பாளராகப் பணியாற்றி அதிலிருந்து விடுபட்டு, பெரியாருடன் சுற்றுப் பயணம் நடத்தி, பின்னர் "திராவிட நாடு' இதழின் பொறுப்பாசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார்.அண்ணாவின் தாயார் பங்காரு அம்மாள். அண்ணாவை அவரது சிறிய தாயார் (தொத்தா) வளர்த்தார். அண்ணாவின் ஒரே ஒரு அக்கா (சிற்றன்னையின் மகள்) நாகம்மா. அவருக்கு செüந்தரவள்ளி என்று ஒரு பெண். பொன்னப்பா செüந்தர வள்ளியை மணந்து கொண்டார். அத்தம்பதிகளுக்கு நான்கு மகன்கள். அண்ணாவுக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் நான்கு பிள்ளைகளையும், தம் பிள்ளைகளாகவே வளர்த்தார். அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் தாய்மை உள்ளத்துடன் அனைவரையும் உபசரிக்கக் கூடியவர்.பள்ளி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த சம்பத், (அப்போது அவருக்கு வயது 16) தந்தை பெரியாருக்கு உதவியாக இருந்து பொது அறிவு பெற்றார்.அண்ணாவைப் பார்க்காமல் சம்பத்தால் ஒரு மாதம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு அண்ணாவைக் காண காஞ்சிபுரம் வந்தார். அண்ணாவும் ராணி அம்மையாரும் சம்பத்தை மிகவும் உபசரிக்கக் கூடியவர்கள். அவருக்கு விருப்பமானவற்றை ராணி அம்மையார் சமைத்து விருந்தளிப்பார். சம்பத் உரிமையோடு சமையல் அறைவரை சென்று, ""அக்கா அந்த மீனுக்கு மிளகுத்தூள் போட்டு வறுத்துவிடுங்கள்'' என்று கூறுவார்.அண்ணாவோடு மட்டுமன்றி, அவரது குடும்பத்தாரும் சம்பத்திடம் கலகலப்பாக பழகுவார்கள். சம்பத் வருகையில் அண்ணாவுக்குத் தனி மகிழ்ச்சிதான் என்றாலும், "படிப்பைக் கெடுத்துக் கொண்டு வந்துவிட்டான்' என்று பெரியார், தன்னைக் கடிந்து கொள்வார் என்னும் அச்சமும் உண்டு. ஆகவே இரண்டொரு தினங்களிலேயே சம்பத்தை ஈரோட்டுக்கு அனுப்பி வைப்பார்.அண்ணாவின் காஞ்சிபுரம் இல்லம் அடக்கமான ஒரு சிறிய வீடு. நுழைந்ததும் ஒரு பெரிய திண்ணை. அடுத்து ஒரு தாழ்வாரம். பக்கத்தில் ஒரு சிறிய படுக்கை அறை, அதிலே ஒரு பெஞ்ச். அதன்மேல் துணி விரிக்கப்பட்டு ஒரு தலையணை, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு சிறிய மின் விசிறி, இதுதான் அண்ணாவின் படுக்கை அறை. பக்கத்தில் சமையல்கூடம். அண்ணாவின் இல்லம் அவ்வளவுதான்.அண்ணாவின் நண்பர் புட்டாசாமி சம்பத்திற்கும் தோழர். ஆடிசன் பேட்டையில் அவருக்குச் சொந்தமான சுவாமிஸ் கபே. அங்கே கழக நண்பர்களுக்கு இலவசச் சிற்றுண்டி கிடைக்கும். சம்பத், நெடுஞ்செழியன், கருணாநிதி, சிவாஜிகணேசன் போன்றவர்களுக்கு அங்கேதான் காலைச் சிற்றுண்டி.அண்ணாவின் மற்றொரு நண்பர் டபிள்யூ. கே. தேவராஜன். அவருக்குச் சொந்தமான ராஜா பஸ் சர்வீஸ் பேருந்துகளில் அண்ணாவின் நெருங்கிய நண்பர்களுக்கும், "திராவிடநாடு' ஊழியர்களுக்கும் பயணச் சீட்டு தேவையில்லை; இலவசப்பயணம்.காஞ்சியில் சி.வி.எம். அண்ணாமலை, கல்யாணசுந்தரம், கே.எஸ். மணி, சி.வி. ராஜகோபால் போன்றவர்களெல்லாம் சம்பத்திற்கும் நெருக்கமானவர்கள். பள்ளி விடுமுறை நாட்களில் சம்பத் காஞ்சி வந்து அண்ணாவோடு தங்கிச் செல்வதில் தனி மகிழ்ச்சி காண்பார்.கே.ஆர். ராமசாமி தஞ்சையில் கிருஷ்ணன் நாடக சபா என்னும் நாடகக் குழுவை நடத்தி வந்தார். அவருக்குத் துணையாக நாடக விவசாயி யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, கம்பெனி நடிகர்கள் வி.சி. கணேசன் (சிவாஜி கணேசன்), எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, எம்.என். கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, பி.கே. சரஸ்வதி போன்றவர்கள். அண்ணாவின் "ஓர் இரவு' நாடகத்தை அவர்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். அண்ணா அடிக்கடி தம்பி சம்பத்துடன் தஞ்சை சென்று கே.ஆர்.ஆர். நாடகக் குழுவினர்க்கு உற்சாகம் ஊட்டிவந்தார்."திராவிட நாடு' தொடங்கிய பிறகு (1942) அதன் ஊழியர்களையும், தமது நண்பர்களையும் நடிக்க வைத்து "வழக்கு வாபஸ்', "சந்திரோதயம்', "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' ஆகிய நாடகங்களை காஞ்சி மறுமலர்ச்சி நாடக மன்றம் என்னும் பெயரில் அண்ணா நாடெங்கிலும் நடத்தி வந்தார்.இந்த நாடகங்களில் ஜமீன்தார், சாமியார், இப்படிப் பல வேடங்களில் அண்ணாவே நடிப்பார். "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடகம் "சந்திரமோகன்' என்னும் பெயரிலும் நடைபெறும். இதில் காகப்பட்டராக அண்ணா நடிப்பார். சிவாஜியாக சம்பத் தத்ரூபமாக நடிப்பார்.அப்போது சம்பத் கல்லூரியில் இன்ட்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்தார். "படிப்பைக் கெடுத்துக் கொண்டு அண்ணாவுடன் கூத்தாடிக் கொண்டிருக்கிறான் சம்பத்' என்று பெரியார் ஒரு பக்கம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.அப்போது திருச்சியில் பெரியார் தலைமையில் "சந்திரமோகன்' நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் நாடகத்தில் சம்பத்தை நடிக்க வேண்டாமென்று அண்ணா கேட்டுக் கொண்டார். அவருக்குப் பதிலாக யார் நடிப்பது? ஒரே நாளில் முழுப் பாடத்தையும் மனப்பாடம் செய்ய முடியுமா என்றெல்லாம் பிரச்னை ஏற்பட்டபோது அந்த நாடகத்தில் வேறு பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.சி. கணேசன் தமக்கு வசனம் மனப்பாடமாக இருக்கிறதென்றும், சிவாஜியாக நடிக்க முடியும் என்றும் கூறினார். அதன்படி அன்று இரவு சிவாஜி வேடத்தில் கணேசன் நடித்தார். நாடகத்திற்கு தலைமை ஏற்ற பெரியார் முன்வரிசையில் அமர்ந்து சிவாஜி வேடத்தை உற்று உற்றுப் பார்த்து, ""சம்பத் குரல் மாதிரி இல்லையே'' என்று கேட்க, பக்கத்திலிருந்த குருசாமி, ""இது வேற யாரோங்க?'' என்று சொன்னார்.நாடக இடைவேளையில் அண்ணாவையும் மற்ற நடிகர்களையும் பாராட்டிப் பேசிய பெரியார், ""இந்த சிவாஜி வேஷத்திலே சம்பத் நடிக்கிறான்னு சொன்னாங்க, அவனுக்கு எங்க நடிக்கத் தெரியும், இப்படி நடிச்ச பையன்... (நடித்தவர் பெயரைக் கேட்கிறார்,"கணேசன்' என்று அண்ணா சொன்னார்) அதுதான் கேட்டேங்க, இந்த சிவாஜி வேஷத்துக்கு இவர்தான் பொருத்தம். ரொம்ப நல்லா நடிச்சாரு. இனிமேலும் ஆள மாத்த வேண்டாம், இவரே அதுல நல்லா நடிக்கிறதனால, "சிவாஜி' என்று பட்டம் கொடுக்கிறேன்'' இவ்வாறு பலத்த சிரிப்பொலி, கரவொலிக்கு இடையே பெரியார் குறிப்பிட்டார்.அண்ணா விஷம் சாப்பிடாதே"சந்திரோதயம்' நாடகத்தில் ஒரு வேடிக்கை நடைபெற்றது. "திராவிடநாடு' இதழ் வளர்ச்சிக்காகச் சிதம்பரத்தில் "சந்திரோதயம்' நாடகம் நீதிக்கட்சி பிரமுகர் திருவொற்றியூர் டி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜமீன்தாராக நடித்த அண்ணா பல நல்ல கருத்துகளையும் கொள்கைகளையும் வழங்குவதற்காக ஜமீன்தார் வேடத்தில் தாம் செய்த கொலை முதலான குற்றங்களுக்காகத் தண்டனை பெறுவதிலே இருந்து தப்ப விஷமருந்தி உயிர்விடுவது போல் ஒரு காட்சி. அதில் அண்ணா உருக்கமாக நடிப்பார். விஷத்தைக் குடிக்க நச்சுக் கோப்பையை வாயருகே கொண்டு போகும்போது நாடகத்திற்குத் தலைமை தாங்கிய சண்முகம்பிள்ளை எழுந்து, ""அண்ணா சாகக் கூடாது அவர் எதற்காக விஷம் அருந்த வேண்டும்?'' என்று பதறிப் போய் மேடையில் ஏறித் தடுத்துவிட்டார். இது கண்டு பார்வையாளர்கள் பலமாகச் சிரித்துவிட்டனர். அந்த அளவு நடிப்புக் கலையிலும் அண்ணாவின் திறமை மேலோங்கி இருந்தது.மாயவரத்தில் தி.ப. நாதன் என்பவர் "பசி' என்றொரு நாடகத்தை எழுதி மாணவத் தோழர்களைக் கொண்டே நடிக்க வைத்தார். இந்த நாடகத்தின் அரங்கேற்றம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் (அப்போது அவர் மாணவர்) நடைபெற்றது. இரண்டாம் நாள் நாடகம் மு. கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றது.அக்காலத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களைக் கவர்ந்திழுக்க அண்ணா அரசியல் கலவாத தமது சொற்பொழிவுகளைக் கல்லூரிகளில் நிகழ்த்தினார்.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அப்போது நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் கல்வி பயின்றனர். மெத்தச் சிரமப்பட்டு துணைவேந்தரிடம் அனுமதி வாங்கினர். அண்ணா பேசுவதற்கு முன் துணை வேந்தர் ஒரு நிபந்தனை விதித்தார். அரசியல் துளியும் கலவாது பேச வேண்டுமென்பதற்காக "ஆற்றோரம்' என்னும் தலைப்பில் பேசுமாறு பணித்தார்."ஆற்றோரம்' என்ற தலைப்பிலேயே தமது கருத்துகளை அழகுபட எடுத்துரைத்தார். இந்தக் கூட்ட நிகழ்ச்சிக்கு சம்பத்தும் உடன் வந்திருந்தார் (அப்போதும் அவர் ஒரு மாணவரே).அது போலவே மாநிலக் கல்லூரியில் மோகன் (பின்னாளில் நீதிபதி) கல்லூரி மாணவராய் இருந்து நடத்திய கூட்டத்தில், "அச்சம்' என்னும் தலைப்பில் அண்ணா பேசினார். சம்பத், மதியழகன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.இப்படிப் பல கல்லூரிகளிலும், பலத்த எதிர்ப்புக்கிடையே தலைப்பு வட்டங்களுக்குள் உரையாற்றிய அண்ணா தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டபோது, ஒலிபெருக்கியின் முன்வந்து நின்று, "தலைப்பு என்ன?' என்று கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது அவர், ""தலைப்பு இல்லை!'' என்று சொன்னார்.அண்ணா,"தலைப்பு இல்லை' என்னும் தலைப்பிலேயே கருத்துரை ஆற்றினார். "தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று தலைப்பில்லை, தமிழ்ச் சமுதாயத்திற்கும் உரிய தலைப்பில்லை' என்றெல்லாம் அவர் அடுக்கியபோது பலத்த கரவொலி ஏற்பட்டது.(தொடரும்) First Published : 03 Oct 2011 10:58:31 PM IST
 சம்பத் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் (இன்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்தார். அது 1944ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 18. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த சம்பத் இன்டர்மீடியட் கல்வி கற்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதோடு, சென்னையில் விடுதியிலேயே தங்கிப் படிக்க வேண்டும், அண்ணா உட்பட கட்சிக்காரர்கள் யாரையும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் சந்திக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக அறிவித்திருந்தார்.சம்பத், தமது தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமியிடமும், சிறிய தந்தையார் பெரியாரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னை பயணமானார். ரயிலேறும் முன் தமது உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.மீனாட்சி சுந்தரனார் மற்றும் அவருக்கு நெருக்கமான ஆசிரியர்கள், மாணவத் தோழர்களிடம் பிரியாவிடை பெற்றார்.அவரை உச்சிமோந்து பாராட்டி விடை கொடுத்த தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தரம், ""பெரியாரின் வாரிசு நீ, எதிர்கால அரசியலில் ஒரு ஜாம்பவானாக புகழோடு விளங்குவாய்'' என்று ஆசி வழங்கினார்.பச்சையப்பன் கல்லூரி, அண்ணா படித்த காலத்திலிருந்தே திராவிட இயக்க உணர்வுள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் அதிகம் கொண்டதாக விளங்கியது. பெரியாரின் பிள்ளை பச்சையப்பன் கல்லூரியில் பயில வருவது அவரைப் பார்த்திராத மாணவத் தோழர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அக்கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன். இவரைக் கருப்புச் சட்டை வரதராஜன் என்று மாணவர்கள் சொல்வார்கள். சில மண்டபக் கூட்டங்களில் பேசுகிறபோது திராவிடச் சுடர் பேராசிரியர் வரதராஜன் என்று விளம்பரம் செய்வார்கள். அவருக்குச் சிறந்த ஆங்கிலப் புலமை உண்டு. பெரியாருக்கு வேண்டியவர். ஆகவே அவர் கட்டுப்பாட்டில்தான் சம்பத் கல்லூரியில் பயில வேண்டுமென்பது பெரியாரின் உறுதியான ஏற்பாடாகும்.கல்லூரிக் கல்வியில் சம்பத்துக்கு நாட்டம் மிகுந்திருந்தது. வகுப்புகளில் பாடங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வார். இரவில் பாடப் புத்தகங்களைவிட பத்திரிகைகள் வார, மாத இதழ்கள் மற்றும் பொதுவான நூல்களை நிறையப் படிப்பார். "குடியரசு', "விடுதலை' அவரைத் தேடி வந்துவிடும். அவற்றையும் விடாமல் படித்துவிடுவார். மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகின்ற பழக்கம் சம்பத்திற்கு இருந்ததில்லை. வகுப்பில் அறிந்து கொண்டதை நுணுக்கமாக மனத்தில் பதியவைத்து, தேர்வுகளின்போது நல்ல மதிப்பெண் வாங்கிவிடுவார். (ஆனால் கணக்கில் மட்டும் திறமை குறைவு) கல்லூரிக் கல்வி முடித்து மேல்நாட்டுக் கல்வியும் பெறவேண்டும் என்று அவரது குடும்பத்தார் விரும்பினர்.கற்க வேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்திருந்தாலும் பெரியார் போதித்த லட்சியங்களிலேயே சம்பத் லயித்து நின்றார். ஒவ்வொரு முறையும் இயக்கத்தில் பரபரப்பான நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் நடக்கின்ற போது அவரால் கல்லூரி வளாகத்திற்குள்ளே கட்டுண்டு கிடக்க முடியவில்லை. அதிலும் பெரியார், அண்ணா ஆகியோர் பங்கேற்கின்ற பொதுக்கூட்டம் அல்லது போராட்ட நிகழ்ச்சிகளைக் காண வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்பு சம்பத்திற்கு எப்போதும் அதிகம்.காஞ்சிபுரத்திலே இருந்து அண்ணா சென்னை வருகிறார். அவர் கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ தேவராஜ முதலியார் கார் ஷெட்டிலோ தங்கி இருப்பதாகத் தெரிந்தால் இரண்டு நாளோ மூன்று நாளோ கல்லூரிக்கு விடுப்புக் கொடுத்துவிடுவார்.சென்னையில் கிருபானந்த வாரியார் போன்றவர்களின் கதாகாலட்சேபம் நடந்தால் சம்பத் தமது மாணவ நண்பர்களை அழைத்துக் கொண்டு பக்திமான் போல் உட்கார்ந்து உபன்யாசம் நடந்துகொண்டிருக்கின்ற போதே இடையில் கேள்வி கேட்டுத் திணறடிப்பார்."அன்பே சிவம்' என்பார் வாரியார். ""ஆறாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றி சித்ரவதை செய்தது சிவமதம் தானே?'' என்னும் கேள்வியை மாணவர் சம்பத் கேட்பார். தம்முடைய சந்தேகங்களை எல்லாம் கேள்வித் தாள் போன்று எழுதி அதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் என்று கேட்பார். ""நீங்கள்தான் முற்றும் துறந்தவர் ஆயிற்றே கழுத்திலே ஏன் தங்கக் கொட்டை?'' என்பார். அப்படிப்பட்ட நேரத்தில் பக்தகோடிகளிடம் பதற்றம் ஏற்படும். காவல்துறையினர் வந்து மாணவர்களை வெளியேற்றிவிடுவர். பின்னர் உபன்யாசம் அவர்கள் விருப்பம்போல் நடைபெறும்.நீதிக் கட்சியைச் சீமான்களும் பூமான்களும் ஆட்டிப் படைத்ததைப் பெரியாரோ அண்ணாவோ விரும்பவில்லை. அதிலும் பெரியார் தலைமைக்கு வேட்டு வைத்துவிட வேண்டும் என்று நீதிக்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டனர். பெரியாரைப் பொறுத்தவரை சில அரசியல் காரணங்களுக்காக நீதிக் கட்சிக்குத் தலைவராக இருந்தாரே தவிர, அவருடைய போர் ஆவேசமெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் மீதுதான் அழுத்தமாகப் படிந்திருந்தது.நீதிக் கட்சியின் 16 ஆம் மாநில மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. சீமான்களின் சூழ்ச்சியை முறியடித்துச் சாமான்யர்களின் அமைப்பைத் தொடருவோம், பெரியாரின் தலைமையைக் காப்போம் என்னும் வீர முழக்கத்தோடு மாணவர்களும் இளைஞர்களும், ஏன் தமிழ்ச் சமுதாயமே ஆவேசத்தோடு திரண்டது.சேலத்தில் அண்ணா தலைமையில் கூடிய அந்த மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாவின் தீர்மானம்தான். பெரியாரின் சம்மதத்தோடு இத்தீர்மானத்தை அண்ணா முன் மொழிந்தார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற கவுரவப் பட்டங்களைக் கைவிடவேண்டும். கவுரவ நீதிபதி, ஜில்லா போர்டு தாலுக்கா போர்டு நியமனங்கள் ஆகிய அரசு நியமனப் பதவிகளை உதற வேண்டும் என்று தீர்மானம் வற்புறுத்தியது.இத்தீர்மானத்தின்படி நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மலர்ச்சி பெற்றது.திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார். பொதுச் செயலாளர் அண்ணா. பெரியாரின் பேச்சும் அண்ணாவின் எழுத்தும் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பின. முதல் மாநில மாநாடு 1945}இல் திருச்சியில் நடைபெற்றது.திருவொற்றியூர் சண்முகம் தலைமையில் குடந்தை கே.கே. நீலமேகம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் அரசியல் மாநாட்டிற்குப் பெரியார் தலைமை. திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கை பற்றி அண்ணா நீண்டதோர் உரையாற்றினார். எம்.ஆர்.ராதாவின் "போர்வாள்' நாடகம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சம்பத் பார்வையாளராகப் பங்கேற்றார்.வேலூரிலிருந்து கே. அரசியல் மணி (மணியம்மை), ஏ.பி. ஜனார்த்தனம், எஸ். கஜேந்திரன், எஸ். தவமணி ராஜன், ஆ. திராவிட மணி ஆகியோர் பெரியார் குருகுலத்திற்கு அழைக்கப்பட்டு ஈரோடு வந்தனர்.1938}இல் நாகம்மையார் மறைவுக்குப் பிறகு பெரியாருக்குப் பணிவிடைகள் செய்து பராமரிக்க ஒருவரும் இல்லாதிருந்த நிலையில் ஒரு செவிலிப் பெண் தொண்டராக வேலூர் கனகசபை முதலியாரின் மகள் கே. அரசியல் மணி, 1943}இல் தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தார். பக்குவமாக, பத்திரமாக உணவு சமைத்துப் பெரியாரை உண்ண வைத்தல், வற்புறுத்திக் குளிப்பாட்டல், உடை மாற்றுதல், வீட்டுக் கணக்குப் பார்த்தல், "குடியரசு'ப் பதிப்பக வெளியீட்டு நூல்களைச் சுமந்து பெரியார் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் விற்கச் செய்து கணக்கு வாங்குதல்... இப்படிப் பல பணிகளை நன்றியுணர்வுடன் நிறைவேற்றி வந்தார்.வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சாமி நாயுடு, நீதிக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். அவருடைய மூத்த மகன் எஸ். கஜேந்திரன். மகள் சுலோச்சனா. கஜேந்திரன் பி.ஏ. பட்டம் பெற்ற பின் 1934}இல் ஈரோடு குருகுலத்திற்கு வந்தார். பின்னர் அவர் தந்தை பெரியாரிடம் செயலாளர் ஆனார். "குடியரசு' இதழில் எழுதினார். ஜஸ்டிஸ் இதழைப் பார்த்துக் கொண்டார். அறிவுக் கூர்மையும் விவாதிக்கும் திறனும், எழுத்தாற்றலும் மிக்க அவர் மாணவர் இயக்கத்திலும் தீவிரப் பங்கு கொண்டிருந்தார்.1945 மே 24 ஆம் நாள் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் மூத்த மகள் செல்வி மிராண்டாவுக்கும் (ஈ.வெ.கி. சம்பத்தின் தமக்கையார்) எஸ். கஜேந்திரனுக்கும் பெரியார் தலைமையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தலைவர்கள் வாழ்த்தினர். கஜேந்திரன் அரசுத் தலைமைச் செயலகத்தில் அலுவலர். இருவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள், காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். மிராண்டா சென்னை மாநகராட்சிக் கல்வித் துறை அதிகாரியாகப் பலகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவ்விணையருக்கு இரு பெண் மக்கள்.1944-ஆம் ஆண்டின் தொடக்கத்தை மாணவர் எழுச்சிகளின் தொடக்கமென்று பெரியார் வர்ணித்துள்ளார். பெரியாரின் முயற்சியாலும், அண்ணாவின் கல்லூரிப் பேச்சுகளாலும் மாணவமணிகள் அன்று எழுச்சி பெற்றுத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் அறிவிக்கப்படாத தலைவராக சம்பத் புறப்பட்டார். ஆங்காங்கே தமது தலைமையில் மாநாடுகளை எழுச்சியோடு நடத்துகிற பணிகளிலும் இறங்கினார்.1942 ஆகஸ்ட் கலவரங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்புடைய மாணவர்கள் தீவிரப் பங்கு கொண்டனர். சுதந்திர உணர்வில் அணி சேர்ந்த அம்மாணவர்களைக் காங்கிரஸ் இயக்கம் பழமைக் குழியில் தள்ளி வகுப்பு வெறியில் பிரித்துப் போடும் இழிவு கண்டு, முற்போக்கு மாணவர்கள் பெரியார் கொளுத்தும் அறிவுச் சுடரின் பேரொளியில் பகுத்தறிவுப் பாசறை நோக்கி விரைந்து வரலாயினர். "குடியரசு'ம், "திராவிட நாடு'ம் மாணவர்களின் கருத்துக் கலன்களாகத் திகழ்ந்தன.1944 பிப்ரவரி 19, 20 தேதிகளில் குடந்தையில் திராவிட மாணவர் முதல் மாநாடு ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் எழுச்சிமயமாக நடைபெற்றது. அண்ணா சிறப்புரையாற்றினார். புலவர் குழந்தை, மா.நன்னன், அ.மு. மாணிக்கம், கோ.சி. பெரியசாமி, ஏ.பி. சனார்த்தனம், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், இளம்வழுதி, எஸ்.கஜேந்திரன், க. கணேசன், இரா. செழியன், எஸ். கருணானந்தம், தவமணி ராஜன், இரா. சொக்கப்பா என ஏராளமான மாணவ மணிகள் பங்கேற்றனர்.அதே ஆண்டில் தஞ்சையில் பாரதிதாசன் தலைமையில் திராவிட மாணவர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டைப் பெரியார் திறந்து வைத்தார்.கரூரில் சம்பத் தலைமையில் மாணவர்களின் மாநாடு. அக்டோபரில் கோவையில் முதல் நாள் மாணவர் மாநாடு, மறுநாள் மாவட்டக் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்றன. இந்த மாநாட்டில் சென்னையிலிருந்து என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் ஈரோடு நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. கோவை மாவட்ட முதலாம் திராவிட இளைஞர் மாநாடு சரஸ்வதி மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்குமாறு அண்ணாவை வழிமொழிந்து ஈ.வெ.கி. சம்பத் பேசினார் .(தொடரும்)தொகுத்து எழுதியவர்கள் :என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்
9 ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
First Published : 09 Oct 2011 03:45:00 PM IST  "தென் நாட்டு இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி முரசு நமது அண்ணா. பகுத்தறிவுப் பகலவன் பெரியார். புதுமையினைப் பாடிவரும் முழு நிலவு நம் அண்ணா. வீரர் கோட்டமாம் பகுத்தறிவுப் பாசறையில் கொள்கைச் சிங்கங்கள் சிலிர்த்து நிற்கின்றன. வேங்கையென வீர இளைஞர்களும், மாணவர்களும் திரண்டுவிட்டனர்.பழைமை படபடக்கிறது. திராவிடத்தில் பகுத்தறிவு ஒளி பரவுகிறது. போர்ப் படைத் தலைவராம் தந்தை பெரியாரின் வீரத் தளபதியாக வெற்றிப் பதாகை ஏந்தி நிற்கும் என் அன்பு அண்ணனே இம்மாநாட்டிற்குத் தலைமையேற்று வழி நடத்துமாறு உன்னை வேண்டுகிறேன்' என்று ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேச,இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், கே.ஏ. மதியழகன், ஏ.பி. சனார்த்தனம், கருணாநந்தம் ஆகியோர் வழிமொழிந்து பேசினர். ஈரோட்டில் இருந்தும் உடல் நலக்குறைவு காரணமாக பெரியார் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் குடந்தை நேஷனல் ரேடியோ நிலையத்தாரால் ஒலிபரப்பப்பட்டன.12.5.1944 அன்று பொள்ளாச்சிப் பகுத்தறிவு வாசக சாலையின் சார்பாக தேரடி மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜி. வேங்கடாசலம் தலைமை வகித்தார். பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஈ.வெ.கி. சம்பத் "தமிழ்நாடும் நமது கடமையும்' என்ற தலைப்பில் பேசினார்.தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற உணர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தி நமது தொன்மையான மொழிகாத்து, கலை கலாச்சாரங்களை வளர்த்திடத் தாயமைப்பான திராவிடர் இயக்கத்திற்குத் துணையாக மாணவர்கள் இளைஞர்கள் வீறு கொண்டு எழ வேண்டுமென்று சம்பத் கருத்துரையாற்றினார். மாவட்டங்கள் முழுவதுமிருந்து மாணவர்கள் இம்மாநாட்டுக்குத் திரண்டனர்.கோபி வேங்கடாசலம் பேட்டையில் மே. 27 ஆம் நாள் திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. பிற்பகல் நிகழ்ச்சியில் ஈ.வெ.கி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.24.10.44 அன்று சேலம் செவ்வாய்ப்பேட்டை விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் எழுச்சியோடு நடைபெற்ற மாவட்ட மாணவர் மாநாட்டில் ஈ.வெ.கி. சம்பத் "வருங்கால திராவிடர் கடமை என்ன?' என்னும் தலைப்பில் பேசினார்.திராவிட மாணவர் மாநாடுஇந்தக் கால கட்டத்தில் கருணாநிதி தம்முடைய நண்பர்களையெல்லாம் அழைத்துத் திராவிட மாணவர் மாநாட்டை நடத்த முயற்சி செய்தார். அப்போது 1945 ஆம் ஆண்டின் இறுதிப்-பகுதி. அவரது நண்பர்கள் தென்னன், இராம. அரங்கண்ணல், டி. வேங்கடாசலம், வி.எஸ்.பி. முதலியோர் உடனிருந்தனர்.""எம்.கே. மாநாட்டுக்கு என்ன பெயர்?'' என்று கேட்டார் அரங்கண்ணல் (ரங்கசாமியாக காங்கிரசில் இருந்தவர் திராவிடர் இயக்கம் வந்தபின் அரங்கண்ணல் ஆனவர்) மு. கருணாநிதி பதில் சொன்னார். ""இப்போது இயக்கத்தில் மாணவர் அமைப்பு இல்லை. ஆனாலும் ஆங்காங்கே மாணவர்களைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் அமைப்பை உருவாக்க வேண்டுமென்பது அய்யாவின் விருப்பம். தஞ்சையில் நாம் சற்று விரிவாக இதைச் செய்யலாம். ஆகவே, தென்மண்டல திராவிட மாணவர் மாநாடு என்று நடத்துவோம்''.""பெரியார், அண்ணா எல்லோரும் வருவாங்களா?'' இது அரங்கண்ணலின் கேள்வி.""எல்லோருக்கும் யாகூப் கடிதம் எழுதியிருக்கார். நிச்சயம் வருவாங்க''. இது கருணாநிதியின் பதில். ஒட்டு மொத்தமான தோழர்களின் ஒரு கேள்வி. மாநாட்டுக்கு யார் தலைவர்?""பெரியாரோட அண்ணன் மகன் ஈ.வெ.கி. சம்பத்தை முதல்ல நம்ப மாநாட்டிற்குத் தலைவராய்ப் போடுவோம்''. கருணாநிதி சொல்கிறார். நண்பர்கள் கேட்கின்றனர்.""அவர் நல்லாப் பேசுவாரா?''""மாணவர் கூட்டங்கள் மாநாடுகளில் சுமாராகப் பேசறார்னு சொன்னாங்க... அய்யா குடும்பத்துப் பிள்ளைக்கு நாம ஒரு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும்...'' கருணாநிதி சொல்கிறார்.மாணவத் தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆமோதிக்கின்றனர். யாரிடமும் சல்லிக் காசு இல்லை. ஆனால், ஆர்வம் மிகுதி. ஓடியாடி உழைக்கின்றனர்.முதல் நாளே மாநாட்டுத் திறப்பாளர் இரா. இளம்வழுதி வந்துவிட்டார். அன்று மாலையே மதியழகன் வந்துவிட்டார்.எஸ்.கே. சாமி, கே.கே. நீலமேகம் வி. சின்னத்தம்பி ஆகியோர் முயற்சியில் பணம் வசூலித்து மாநாட்டுப் பணிகள் மாணவர்களைக் கொண்டு தீவிரமாக நடைபெறுகின்றன. இம்மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் மு. கருணாநிதி, செயலாளர் அரங்கண்ணல், பொருளாளர் டி. வேங்கடாசலம்.இந்த மாநாட்டில் கல்லூரி மாணவர் ஈ.வெ.கி. சம்பத் தலைமை தாங்கி அரியதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார். திரளான மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.சம்பத் பேசியதன் சுருக்கம்:""இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். அதற்கேற்ப பொறுப்போடு நாம் வளரவேண்டும். இந்தச் சமுதாயம் எதிர்காலச் சந்ததிகளையே நம்பியிருக்கிறது. நமக்கு வழிகாட்டத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தளபதி பட்டுக் கோட்டை அழகிரிசாமி, ஜீவானந்தம், பொன்னம்பலனார் போன்ற நெஞ்சுரமிக்க தலைவர்கள் இருக்கிறார்கள்.மாணவர்களாகிய நாம் ஜாதி மத மூட நம்பிக்கைகளை வெறுக்கவேண்டும், நமக்குப் பள்ளியிலே மறைக்கப்படுகிற திராவிடக் கலை, கலாசாரம், பண்பாடு ஆகிய சிறப்புகளை நாம் நமது தலைவர்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டு அவற்றைப் பள்ளிகள் தோறும் பரப்ப வேண்டும். சேர சோழ பாண்டியர்கள் யார்? அவர்களது ஆட்சியின் மகிமை, வீரம், இவற்றைப் பறைசாற்ற வேண்டும். ரேடியோ கண்டுபிடித்தவர் யார்? ரயிலைக்கண்டுபிடித்தவர் யார்? ஆகாய விமானத்தை கண்டு பிடித்தவர் யார்? இதையெல்லாம் புகட்ட வேண்டும். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல. இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சிற்பி. நம்போன்ற மாணவர்களுக்கு அண்ணாவின் எழுத்தும் பேச்சுமே ஆயுதம்.''இப்படி எல்லாம் மாணவர் சம்பத் தமக்குக் கிடைத்த தலைமைப் பதவிக்கு ஏற்ப கருத்துகளை அள்ளி வீசினார். "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா' என்று தஞ்சை திராவிடர் கழகத்துச் செயல் வீரர்கள் பாராட்டிச் சென்றனர். ஈரோட்டுப் பழக்கத்தோடு, இந்த மாநாட்டின் மூலம் சம்பத்திடம் கருணாநிதி ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டார்.கருணாநிதி மீண்டும் ஈரோட்டுக்கு வந்து இதழ்ப் பணியைத் தொடரவேண்டும் என்று சம்பத் கூறினார். அதில் தாம் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் குடும்பச் சூழ்நிலைகள் சரியில்லை என்றும், தமது நாடக வசனங்களைப் பார்த்து விட்டுத் திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி பயன்படுத்த அழைப்பதாகவும் மு.க. கூறினார்.அதற்கு சம்பத் வரும் சந்தர்ப்பங்களைத் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறும், தடைகள் ஏற்படுகிறபோது சும்மா இருக்காமல் ஈரோடு வந்து பணிகளை மேற்கொள்ளுமாறும் யோசனை தெரிவித்தார்.அப்போது அருகிலிருந்த அரங்கண்ணலிடம் "விடுதலை' விரைவில் சென்னைக்கு வரக்கூடும் என்றும், ஈரோடு வந்து அய்யாவிடம் தொடர்பு கொள்ளுமாறும் அதற்குத் திராவிட மணியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சம்பத் நட்பு முறையில் தெரிவித்தார்.மாணவப் பருவத்திலேயே சம்பத்தின் அணுகுமுறையில் லட்சியத் துடிப்போடு மனித நேயமும் பின்னிப்பிணைந்திருந்தது.அண்ணாமலையில் கலவரம்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், கஜேந்திரன் ஆகியோர் படித்து முடித்து வெளியேறிய பின்னர் அவர்கள் தயாரித்து வைத்திருந்த மாணவர் படை பல்கலைக் கழகத்தில் மிகச் சிறப்பாக இயங்கியது.கே.ஏ. மதியழகன், இரெ. இளம்வழுதி, அ. பொன்னம்பலனார், தம்பி இளங்கோவன் (புலவர்) மற்றும் தில்லை வில்லாளன், வி.ஜி. சாமிநாதன், தில்லை மறை முதல்வன், இராம. அரங்கண்ணல், எஸ்.டி. சோமசுந்தரம், பழ. நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், குப்புசாமி என்றொரு மாணவர் பட்டாளம் துணிச்சலாகக் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு கழகக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்தது.காலமெல்லாம் மாணவர் தலைவர் என்னும் பட்டத்தோடு லட்சியத்தின் உருவாய் நடமாடிய கே.ஏ. மதியழகன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்டவராக விளங்கினார். கழக மாணவர்கள் அறைகளில் கழக ஏடுகளும் நூல்களும் குவிந்து கிடக்கும். வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் கொள்கை விளக்கமும், இலக்கியச் சர்ச்சைகளும் நடைபெறும்.பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் அவிநாசிலிங்க செட்டியார் வருவதாக இருந்தது. இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி மாணவர்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆலோசித்தனர்.கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மதியழகன் விரும்பவில்லை. அவர் ஒரு கருத்து சொன்னார். ""பல்கலைக்கழக கட்டடத்தின் ஒவ்வொரு திசையின் உச்சியிலும் கும்பங்கள் இருக்கின்றன அல்லவா? பத்துக்குக் குறையாத கும்பங்கள், இந்தப் பத்திலும் பெரிய அளவில் கழகத்தின் கொடியைப் பறக்க விட்டு விடுவோம்'' என்றார்.மாணவ, மணிகள் அதை உற்சாகத்துடன் வரவேற்றனர். ""மையத்தில் உள்ள கடிகாரக் கூண்டு முழுதும் ஏறி ஒரு கொடியைக் கட்டி விடுவோம்'' என்றார் இளம்வழுதி.""சுவர் விழுந்தா என்னாவது?'' என்று கேட்டார் மதி.""உயிர்தானே போகும். நான் கட்டிக் காட்டுகிறேன்'' என்றார் இளம்வழுதி.""பெரியார் கோபித்துக் கொள்ளப் போகிறார். எதற்கும் சம்பத்திடம் கேட்டு விடலாம்'' என்று ஈரோட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். சம்பத் அதை உற்சாகத்துடன் வரவேற்றார். ""சிதம்பரம் வளாகத்தில் மற்றவர்களிடம் கலந்து கொள்ளுங்கள்'' என்றும் சொன்னார்.பெரியவர் கிருஷ்ணசாமி, அன்பழகன் தந்தையார் கல்யாண சுந்தரம், பாலகுருசாமி, புலவர் நா.மு. மாணிக்கம் போன்றவர்கள் தில்லையம்பதியின் தி.க. போர் மறவர்கள்.அண்ணாமலைக் கழக மாணவர்களுக்கு அவர்கள் தாம் பாதுகாப்புக் கேடயங்கள்.திட்டமிட்டபடி கும்பங்களில் எல்லாம் கொடிகள் பறந்தன. பல்கலைக் கழகமா? திராவிடர் கழகப் பாசறையா? என்று எண்ணும் அளவுக்குக் கழகக் கொடிகள் பட்டொளி வீசின. அந்த அருங்காட்சியைப் பார்த்துவிட்டு, கழக மாணவர்கள் மிரண்டு போய்த் தலைமறைவாக இருந்தனர்.தங்கும் விடுதிகளுக்கு நடுவில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தின் அடியில் யாராவது ஒரு மாணவர் விடாமல் கை தட்டினால் அது அபாயச்சங்கு என்று பொருள். எல்லா மாணவர்களும் கட்சி பேதமின்றிக் கூடிவிடுவர். அன்று மாலை 6 மணி, திடீரென்று ஒரு கைதட்டல் ""காம்ரேட்ஸ்'' என்றோர் ஓங்காரக் குரல் கேட்டது.கழக மாணவர்களுக்குத் தெரியும் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்று. பத்து பதினைந்து கழக மாணவர்கள் மீது காங்கிரஸ் மாணவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான கழக மாணவர்கள் விறகுக் கட்டையுடன் பாய்ந்து விரோதிகளை நகரத்தை நோக்கி விரட்டினர். சிதம்பரத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ். அதனுள் எதிரிகள் ஓடி ஒளிய முயன்றனர். கழக மாணவர்கள் துரத்திக் கொண்டே கொட்டகைக்குள் நுழைய, அங்குக் கடும் மோதல் ஏற்பட்டுப் படம் நிறுத்தப்பட்டது.மாற்றான் ஒருவன் எறிந்த கல் மதியழகன் தலையில் பட்டு ரத்தம் கொட்டியது. அவ்வளவுதான் "காம்ரேட்ஸ்' என்று கழகத் தோழர்கள் ஆவேசத்தோடு முழங்கிக் கொண்டு எதிர்ப்படையினரை அடித்து நொறுக்கினர். அதற்குள் கொட்டகையினர் அடியாட்களை அழைத்து வர சிக்கிக் கொண்டால் ஆபத்து என்று அடிபட்ட மதியழகனைத் தூக்கிக் குதிரை வண்டியிலேற்றி மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டுக் கழக மாணவர்கள் அனைவரும் விட்டால் போதுமென்று பறந்து விட்டனர். மறுநாளும் பல்கலை வட்டாரத்தில் பதற்றம். காவல்துறையினர் நடமாட்டமும் காணப்பட்டது.மதியழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் எனும் தகவலுடன் விவரங்களையெல்லாம் சம்பத் பெரியாரிடம் எடுத்துச் சொன்னார். ""படிக்கிற இடத்தில் கோமாளித்தனமாக காலித்தனம் செய்வதா?'' என்று கோபித்துக் கொண்டார் பெரியார்.கோபம் தணிந்ததும் சம்பத்தை அழைத்து சிதம்பரம் போய் எல்லாவற்றையும் நேரில் தெரிந்து கொண்டு வருமாறும், கலவரத்திற்கு இடம் தரவேண்டாமென்றும் பணித்தார். அவர்தாம் பெரியார். வேண்டுமென்றே கலகங்களை உண்டு பண்ணுவதில், அதிலும் படிக்க வேண்டிய பருவத்தில் மாணவர்கள் அவற்றில் ஈடுபடுவதில் அவருக்கு உடன்பாடில்லை. அதேசமயம் அவர்களது சிறுபிள்ளைத்தனத்தை மன்னித்து உரிய வழியில் நெறிப்படுத்தவும் அவர் தவறமாட்டார்.(தொடரும்)
10 ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்: 10
First Published : 16 Oct 2011 12:00:00 AM IST  சம்பத் - கருணாநிதி நட்புநாடு முழுவதும் உள்ள பகுத்தறிவு இயக்கத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை மாவட்ட வாரியாகத் திரட்டி மாணவர் கழக அமைப்பைக் கழகத்தின் ஒரு துணைஅமைப்பாக உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் பெரியார் மனத்தில் கருக் கொண்டிருந்தது. இது அவசியம் என்றும், கல்லூரி மாணவராக இருக்கும் தம்பி சம்பத்துக்கு இதில் பயிற்சி அளித்து, மாணவப் பருவத்திலேயே தலைமைப் பக்குவத்தைச் சம்பத்திடம் ஏற்படுத்த வேண்டுமென்றும் பெரியாரிடம் தமது விருப்பத்தை அண்ணா தெரிவித்திருந்தார். இதனால் சம்பத்தின் படிப்பு கெட்டு விடக் கூடாதே என்னும் அச்சமும் பெரியாருக்கு இருந்தது.கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை நேரடி அரசியல் கூடாது. அதுவரை அரசியல் கலவாது சமூக நோக்கில் மாணவர் அமைப்புப் பணிகளிலும் பொதுவான நிகழ்ச்சிகளிலும் பழக்கப்படுத்தலாம் என்னும் அண்ணாவின் யோசனையை அரை மனத்தோடு ஒப்புக் கொண்டார் பெரியார்.சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி தமது புதல்வன் சம்பத்தை ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சிற்றப்பா பெரியார், சம்பத் ஒரு பட்டதாரியாகிப் பொது வாழ்விற்கு வந்து தமது சுமைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார்.பச்சையப்பன் கல்லூரியில் அவரது ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன், ""நீ இயல்பாகவே நன்றாகப் படிக்கிறாய். நீ ஒரு தலைவரின் பிள்ளை. உனக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது, படிப்பு முடிகிறவரை அரசியலையும் அறிந்து வைத்துக் கொள்'' என்று நிதானத்தை ஊட்டுவார்.அண்ணாவும் உடன் பிறந்த தம்பி போல் சம்பத்திடம் உருக்கம் காட்டுவார். ""படிப்பில் கவனம் சம்பத். படிப்பை முடித்த பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடலாம். அதுவரை மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்பக் கூடாது'' என்பார்.அப்போது அண்ணா குடந்தை அரசினர் கல்லூரியில் லிட்டரரி அசோஷியேசன்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதாக இருந்தது. அதில் பங்கேற்று விட்டு மறுநாள் வந்து விடலாம் என்று சொல்லிச் சம்பத்தையும் குடந்தைக்கு அழைத்துச் சென்றார். குடந்தை சென்றடைந்ததும் கருணாநிதி ஏராளமான மாணவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து அண்ணாவையும் சம்பத்தையும் வரவேற்றார். பின்னர் அவர்கள் பழம் பெரும் சுயமரியாதை இயக்க வீரர் வி. சின்னதம்பியின் இல்லத்தில் தங்கினர். அண்ணாவும், சம்பத்தும் மாணவர்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு மதியம் இரண்டு மணிக்கு வருமாறு சொல்லி அனுப்பிவிட்டு ஓய்வு எடுத்தனர்.மதியம் மூன்று மணிக்கு அரசினர் கல்லூரி இலக்கியச் சங்கத்தின் சார்பில் கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் "புது வாழ்வு' என்னும் தலைப்பில் அண்ணா ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். கூட்டத்திலிருந்து விடைபெற்றபோது ஆசிரியர்களும் மாணவர்களும் சூழ்ந்து நின்று பாராட்டினர்.அந்த நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் இன்டர்மீடியட் மாணவரான கருணாநந்தம் கல்லூரி மாணவர் தலைவர்களைச் சம்பத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார்.அன்றிரவு குடந்தையில் எம்.ஆர். ராதாவைப் பாராட்டி அண்ணா வெள்ளிக் கேடயம் வழங்கும் விழாவினை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா, சம்பத்தையும் அழைத்துச் சென்றிருந்தார்.சம்பத்தைக் கண்டதும் எம்.ஆர். ராதா, ""பார்ட்னர்'' (கூட்டாளி) என்று அன்போடு அழைத்து கட்டித் தழுவிக் கொண்டார். சம்பத்தை எம்.ஆர். ராதா எப்போதும் "பார்ட்னர்' என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டு விற்பனையில் தவமணி ராஜன் முனைப்போடு ஈடுபட்டிருந்தார். வசூல் நிலவரம் பற்றி அண்ணா அவரிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மீதமாகும் தொகையைப் பெரியாரிடம் அவர் கொண்டு போய்க் கொடுத்து திராவிடர் மாணவர் கழக அமைப்பைத் தொடங்கச் செய்ய வேண்டும் என்றும் அண்ணா சொன்னார். சம்பத்தை நோக்கி எம்.ஆர். ராதா, ""கவலைப்படாதே தம்பி. உன்னைத் தலைவராக்க எத்தனை நாடகம் வேண்டுமானாலும் நானே நடத்தித் தர்றேன்'' என்று அவருக்கே உரிய பாணியில் உவகையோடு கூறினார்.நிகழ்ச்சி முடிந்தது, ""அண்ணா பேச்சு எப்படி இருந்தது?'' என்று சம்பத், ராதாவிடம் கேட்டார். அதற்கு அவர், ""எம்.எஸ். சுப்புலட்சுமி கச்சேரி கேட்டது போலிருந்தது'' என்று சொன்னார். மேலும், ""தலைவன் மகன் தலைவனாக வேண்டும். இதுதான் ஒவ்வொரு திராவிடக் கழகத்துக்காரனின் விருப்பமாகும்'' என்று நடிகவேள் ராதா உருக்கமாகச் சொல்லி விடை கொடுத்தார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல மாவட்டங்களிலும் திராவிட மாணவர்கள் பேரெழுச்சி ஏற்பட்டது. சென்னைக் கல்லூரிப் படிப்போடு ஈரோட்டிலும் ஆங்காங்கே மாணவர் கழக நிகழ்ச்சிகளுமாக சம்பத் ஓய்வின்றிச் செயல்பட்டார். மாணவர் கழகத்தை உருவாக்குவதில் பெரியார் யோசனை செய்தவண்ணம் இருந்தாலும் அமைப்பு முறையில்லாமலேயே ஆங்காங்கு கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் அண்ணாவையும் சம்பத்தையும் அழைத்து மாணவர் மன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் பேரார்வம் காட்டினர்.எப்போதுமே, தஞ்சையில் பகுத்தறிவு இயக்க ஆர்வம் சற்று அதிகமாகவே கொப்பளிக்கும். அதிலும் தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் இயக்கம் வேரூன்றிய நாளிலிருந்து மாணவர் இயக்கமும் அங்கே வேர்விட்டுச் செழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்தன.தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் இயக்கத்திற்கு எத்தனையோ செயல்வீரர்கள் கிடைத்திருந்தனர். குடந்தை கே.கே. நீலமேகம், பி. சின்னதம்பி, நீடாமங்கலம் ஆறுமுகம், நாகை மணி, மாயவரம் நடராசன், தென்னன், மு. கருணாநிதி ஆகியோர் சோழ மண்டலத்தில் பெரியாருக்குக் கிடைத்த மாமணிகள் ஆவர்.1944-இல் "சாந்தா அல்லது பழனியப்பன்' என்னும் நாடகத்தினை எழுதி நடித்துக் காட்டியவர், எம்.ஆர். ராதா நாடக மன்றத்திற்குத் "தூக்குமேடை' என்னும் நாடகம் தந்து அதில் எம்.ஆர். ராதாவுடன் பாண்டியனாக (ஒரு மாணவராக) நடித்தவர், புதுவையில் "நச்சுக் கோப்பை' நாடகம் நடித்து அதனால் ஏற்பட்ட கலவரம் காரணமாக மாற்றாரால் தாக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு பெரியார் முன் கொண்டு வந்து நிறுத்தியபோது, அவர் அனுதாபப்பட்டு 1945-ம் ஆண்டு இறுதியில் ஈரோட்டில் "குடியரசு'ப் பத்திரிகையின் பிழை திருத்துபவராக அமர்த்திப் பின்னர் துணை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர், நாடக நடிகராக இருந்து "குடியரசு' பத்திரிகையில் பணிகளை ஏற்கிறபோதும் பெரியாரிடம் பணியாற்றும் போதும் சில சங்கடங்களைச் சந்தித்தவர். அவர்தாம் மு.கருணாநிதி. தஞ்சை மாவட்டம் தந்த திராவிட மாமணிகளுள் மிக முக்கியமானவர்.பெரியார் எளிமை, சிக்கனம், அடக்கம், முதலியவற்றில் தம்மைப் போலவே தம்மோடுள்ளவர்களும் இருக்க வேண்டுமென்று விரும்புவார். "குடியரசு' அலுவலகத்தில் ஊழியர்களின் வருகைப் பட்டியல் நேரம் முதலியன குறிப்பிட்டு பெரியாரின் மேஜையின் மேல் இருக்கும். பெரியார் வருகிறார் என்றால் அந்த மாளிகையே "கிடு கிடு' என்று ஆடிக் கொண்டிருக்கும்.பெரியார் வந்து தம் மேஜையில் அமர்ந்ததும் கையிலுள்ள கடிகாரத்தைக் கழற்றி மேசை மீது வைத்து விடுவார். அப்போதே அவர், தன் இதயத்தையே கழற்றி வைத்து விட்டார் என்பது ஊழியர்களுக்குத் தெரியும்.ஒரு துண்டு கடிதாசி வீணாகியிருந்தால் கூட பெரியார் சும்மா விடமாட்டார். எதிலும் கறார், கண்டிப்பு:ஒரு நாள் "குடியரசு' இதழில் நிறைய எழுத்துப் பிழை ஏற்பட்டுவிட்டது. சுற்றுப்பயணம் முடித்து வந்த பெரியார் "குடியரசு' ஏட்டில் எழுத்துப் பிழைகளைப் பார்த்துவிட்டு, ""இன்றோடு உங்களுக்கு வேலையில்லை. வெளியே போங்கோ'' என்று ஆசிரியர் பகுதியினருக்கு உத்தரவிட்டார்.சம்பத் சினிமாவுக்குப் போயிருந்ததால் அவர் வரும் வரை இரவில் தியேட்டருக்கு அருகே வெகு நேரம் காத்திருந்தார் கருணாநிதி. சினிமா விட்டதும் சம்பத் வந்தார். வழியில் கருணாநிதி நிற்பதைப் பார்த்து, ""என்னய்யா கருணாநிதி சினிமாவிற்குப் போகிறாயா?''என்று கேட்டார். காரணம், அந்த தியேட்டர் அவரது அத்தை மகன் எஸ்.ஆர். சந்தானத்திற்குச் சொந்தமான ஸ்டார் டாக்கீஸ். அங்கு இவர்களுக்கெல்லாம் இலவச அனுமதி என்று முன்பே சொல்லப்பட்டுள்ளது.கருணாநிதி சொன்னார், ""இல்லையா. அய்யா வேலையிலிருந்து நீக்கிட்டாரு'' என்றார். சம்பத் அலட்சியமாக ""சரி, அது கிடக்கிட்டும் நீ சாப்பிட்டாயா?'' என்றார். அதற்கு அவர், ""இல்லைய்யா நான் வீட்டிற்கு சாப்பிட வந்தா அய்யாவுக்குத் தெரிந்திடும். கோபிச்சாலும் கோபிச்சுக்குவார். நா வரலே'' என்றார்.அவருடைய தர்ம சங்கட நிலையைப் புரிந்து கொண்டு, அந்த அகால நேரத்தில் ஓட்டல்கள் எதுவுமில்லாத நிலையில், தமக்குப் பற்று வரவுள்ள ஒரு பெட்டிக் கடைக்கு அழைத்துச் சென்று அவருடைய கணக்கில், முறுக்கு, கடலை மிட்டாய், வாழைப்பழம் எல்லாம் வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் செய்து, தம் வீட்டின் பின் பக்கமுள்ள ஓர் அறையில் படுக்க வைத்து, ""இரவு இங்கே படுத்திருங்கள். காலையில், நான் அய்யாவிடம் பேசி எல்லாம் சரிபடுத்தி விடுகிறேன்'' என்று சொன்னார்.அது போலவே, மறுநாள் காலையில் "குடியரசு' அலுவலகத்திற்குச் சென்று, பெரியாரிடம் சற்றுக் கோபமாகவே, ""அவனவன் குடும்பத்தை விட்டு விட்டு உங்களுக்கு உழைக்க வந்திருக்கிறான். நீங்கள் மனித நேயமில்லாமல் நடந்து கொள்ளுகிறீர்கள்?'' என்று சம்பத் பேச ஆரம்பித்ததுமே, இது, அவன் கூட்டாளி கருணாநிதிக்காக பரிந்து பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்டு அய்யா, ""என்னமோங்க எப்படியோ போங்க உருப்படுவதற்காகச் சொல்கிறேன். அந்தப் பையனை வரச் சொல்லுங்க'' என்று சொல்லிவிட்டு பெரியார் அடுத்த நாள் சுற்றுப் பயணத்திற்குப் புறப்பட்டு விட்டார். கருணாநிதியை அழைத்து வந்து சம்பத், அவரைக் "குடியரசி'ல் பணியைத் தொடருமாறு செய்தார்.(தொடரும்)
First Published : 23 Oct 2011 12:09:43 PM IST  தேர்வில் தோல்வி - பெரியார் சீற்றம் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் கூட வேதனையாகத்தானிருந்தது. பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் படித்துக் கொண்டிருந்த ஈ.வெ.கி. சம்பத் தேறவில்லை. தவறி விட்டதைக் கேட்டு அய்யா சுடுநீரைக் காலில் கொட்டிக் கொண்டது போல் துடித்தார். ""எனக்குத் தெரியும். அண்ணாத்துரையோடு சேர்ந்து கொண்டு நாடகம், சினிமா, மாநாடு என்று இவன் சுற்றிக் கொண்டிருந்த போதே, படிப்பு பாழாய்கிட்டிருக்குன்னு நினைத்தேன். அப்படியே ஆகிவிட்டது'' என்றும் தம் பிள்ளை தேறவில்லை என்றும் பெரியார் தவித்தார். ஈரோடு வந்த சம்பத், பெரியாரின் கோபம் அடங்கட்டுமென்று அவர் கண்ணில் படவில்லை. அத்தை வீட்டில் படுத்திருந்த சம்பத்தை, பெரியார் அழைத்துவரச் சொன்னார். சம்பத்திற்கு ஒன்றும் பயமில்லை. எதுவந்தாலும் ஆகட்டும் என்று நெஞ்சுயர்த்தி நின்றார். ""அப்போதே சொன்னேன். படிப்பை முடித்து விட்டு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். நீ அண்ணாத்துரையை நம்பினாய். படிக்கிற உனக்கு நாடகக் கம்பெனி முக்கியமா? உருப்படுவதற்கு வழியைப் பார். இன்னைக்கே திருச்சிக்குப் போய் சங்கரன் பங்களாவிலே தங்கிகிட்டு, டியூட்டோரியல்லே சேர். எப்படியும் பாசாகணும்'' என்று கோபத்தோடு வார்த்தைகள் வந்து விழுந்தன. அருகிலிருந்த தந்தையார் ஈ.வெ.கிருஷ்ணசாமியும், ""படிப்பை முடிச்சுட்டு என்னைத்தையாவது பண்ணு. ஒரு பட்டதாரி கூட ஆகவில்லைன்னா.. யார் மதிப்பா? உனக்கென்ன குறை, திருச்சி புறப்படு'' என்று சீறினார். அப்போதுதான் தம்மை அணைத்து, உச்சி மோந்து கொஞ்சிடும் அன்னையார் நாகம்மையில்லையே என்று மனம் வெதும்பினார் சம்பத். அப்பாவோ, சிற்றப்பாவோ, எவரும் கடிந்த வார்த்தை சொல்லிவிடாமல் அன்புக் கேடயமாக ஆசை மகனைப் பாசத்தோடு கட்டியணைத்துக் கொள்ளும் தாய் இல்லையே என்று வேதனைப்பட்டார். சிறிய தந்தையாரை நோக்கி, ""இப்போதே நான் திருச்சி புறப்படுகிறேன்'' என்றார். ""எப்படியும் பாசாகணும்'' என்றார் பெரியார். திருச்சி புறப்பட்டார் சம்பத். அவருடைய மனக்குகையில் பெரும் போராட்டம். குடும்பத்தாரைத் திருப்திப்படுத்த படிப்பைத் தொடர்வதா? தன்னை எதிர் நோக்கி உள்ள மாணவர் படையை வழி நடத்துவதா? என்னால் என் அண்ணனுக்குப் பழி ஏற்படுவதா? என்றெல்லாம் மனம் குமுறியபடி குழப்பமான நிலையில் திருச்சி சங்கரன் பங்களா போய்ச் சேர்ந்தார். இவர் போய்ச் சேருவதற்கு முன்பே பெரியார் தொலைபேசியில் சங்கரனிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டார். ஆகவே சம்பத் வரும்போதே வருத்தமாகத்தான் வருவார் என்பதைப் புரிந்து கொண்டு அவருடைய வருத்தத்தைப் போக்கும் வகையில் பெரும் நண்பர் குழாம் காத்திருந்து அவரை உற்சாகப்படுத்தி வரவேற்றனர். எல்லாவற்றையும் காஞ்சிபுரத்திலேயே அறிந்துகொண்டு, தம்பியின் வருத்தம் போக்க, அத்தனை வேலைகளையும் உதறிவிட்டு, சம்பத்தைச் சந்திக்க சங்கரன் பங்களா வந்துவிட்டார் அண்ணா. அண்ணாவைக் கண்டதும், தாம் பாஸôகிவிட்டது போன்றே சம்பத் குதூகலம் அடைந்தார். அங்கே அனைத்தையும் விட அண்ணன் தம்பி பாசம் மேலோங்கி நின்றது. இருவரும் இரவு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தார்கள். அது அவர்கள் வாடிக்கை. அண்ணாவிற்குக் கூட மனத்துக்குள் வருத்தம்தான். சம்பத் பாசாகியிருந்தால், அவர் தலை உருண்டிருக்காது. அன்றிரவு அவர்கள் தூங்கவே இல்லை. பேசினார்கள். பராங்குசம், அன்பில், மன்னை போன்றவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். எல்லோரும் சம்பத்தை மகிழ்ச்சியாக வைக்க வேண்டுமென்பதில் போட்டி போட்டார்கள். அண்ணாவோடிருக்கிறபோது சம்பத்திற்கு மகிழ்ச்சிக்கா பஞ்சம்? விடிய விடியப் பேசினார்கள். யார் எப்போது தூங்கினார்கள் என்பது அவர்களில் எவருக்கும் தெரியாது. கல்வியா? கலையா? அரசியலா? திருச்சி வந்த சம்பத்துக்கு தனிப்பயிற்சிக் கல்லூரி வாழ்க்கை ஆர்வத்தைத் தரவில்லை. படிக்க வேண்டும், பட்டம் பெறவேண்டும் என்னும் மனத்துடிப்பு மிகுதி என்றாலும் அவரது சுற்றுச்சூழ்நிலை, இயக்கச் சம்பவங்களாலும் நிகழ்ச்சிகளாலும் சூழப்பட்டிருந்தது. எப்போதும் அவரைத் தேடி கழக மாணவர்கள் வந்தபடியிருந்தனர். அவரோ மாதமிருமுறையாவது ஈரோடு செல்லாவிடினும், காஞ்சிபுரத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. நாடக ஆர்வம் வேறு அவரை ஆட்டிப் படைத்தது. சரியாகப் படிக்கவில்லையென்று பெரியார் திருச்சி வந்து மிகவும் கண்டித்துவிட்டுப் போனார். மனத்துயரை மாற்றிக் கொள்ளச் சம்பத் யாரிடமும் சொல்லாமல் நேராக குடந்தை போய்விட்டார். அங்கேதான் கே.ஆர்.ஆர். நாடக சபா வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. கே.ஆர். ராமசாமிக்கு, அண்ணாவிற்கடுத்து சம்பத் மீது அதிகப் பிரியம். வரவேற்று, ஆறுதல் கூறி, ""கஷ்டப்பட்டு படிப்பை முடித்துவிடு, பிறகு பெரியார் உனக்கே முடிசூட்டிவிடுவார். நீ பொறுமையுடன் படிக்கத்தான் வேண்டும்'' என்றெல்லாம் அவர் நயமாகவே கூறினார். ஆனாலும், "சம்பத் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து விட்டு பிறகுதான் திருச்சி போய் படிப்பைத் தொடர முடியும்' என்றார். அப்போதே, கே.ஆர்.ஆர். தம்முடைய நாடக சபாவின் பெட்டிச் சாவியை சம்பத்திடம் கொடுத்துவிட்டார். ஊர்ஊராகச் சென்று நாடகங்களில் நடிப்பதும், நாடகக் கம்பெனியை நிர்வகிப்பதுமான பணிகளில் சம்பத் தம்மைத் தாற்காலிகமாக ஈடுபடுத்திக் கொண்டார். அண்ணா அடிக்கடி இந்த நாடக சபாவிற்கு வந்து அனைவரையும் உற்சாகப்படுத்துவார். புது நாடகம் எழுதித் தருமாறு நடிகர்களும் அண்ணாவைக் கெஞ்சுவார்கள். நாடக சபாவில் சம்பத்தைக் கண்டதும் அண்ணா திடுக்கிட்டார். ""ஓராண்டுக் கல்வியை முடித்துவிட்டு இப்படியெல்லாம் சுற்றலாமா? இப்போது நீ செய்திருப்பது எனக்குத்தான் பெரும் பழியைத் தேடித்தரும். இந்த முறை அய்யாவிடம் நான் என்ன பேச்சு வாங்க வேண்டியிருக்குமோ? என்று அஞ்சுகிறேன் சம்பத். நீ திருச்சி திரும்புவதுதான் சரியாக இருக்கும்'' என்று அண்ணா கூறினார். ""நீங்களும் வந்துவிட்டீர்கள். இனி எப்படி அண்ணா உடனே போக முடியும். இரண்டு நாட்கள் இருந்துவிட்டு நாமிருவருமே திருச்சி செல்வோம் ''என்று அண்ணாவிடம் கூறினார் சம்பத். சம்பத்தின் நாடக ஆர்வத்தை அண்ணா விரும்பவில்லை. காரணம் பெரியாருக்கு இது கட்டோடு பிடிக்காது. ஆகவே, சம்பத் படித்துக்கொண்டே இயக்க வேலைகளைக் கவனிக்க மாணவர் கழக அமைப்பை உருவாக்கிவிட்டால், சம்பத் கல்வியோடு மாணவர் கழகப் பணியையும் கவனித்துக் கொள்வார். பிறகு நாடக சபாக்களில் கவனம் திரும்பாது என்று அண்ணா திட்டமிட்டார். அடுத்த நாளே, சம்பத்தைத் திருச்சிக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்து தம் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தார். அப்போது பெரியார் உடல் நலக் குறைவாக இருந்ததால் மருத்துவத்திற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். தம்முடன் அண்ணா, சம்பத் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்து அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்தார். எக்காரணம் கொண்டும் பெரியார் தனியார் மருத்துவமனைக்குச் செல்லமாட்டார். காரணம், அங்கே கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதிருந்தாலும், ""பொது மக்கள் நாடுகிற அரசு மருத்துவமனைகளை நாமே மதிக்காவிடில்.. நாமே நம்பாவிடில், மக்கள் எப்படி மதிப்பார்கள் நம்புவார்கள்'' என்பார். பெரியாருக்கு அவரது செயற்கைப்பல், நாவில் உரசி உரசிப் புண்ணாக்கிவிட்டது. 16.3.45 முதல் பத்து நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அவரது நாக்கில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சை நடைபெற்றது. பெரியாருக்கு எல்லாமே குணமாகிவிட்டது. அதுமுதல் பல் செட்டைப் பொறுத்தாமலே ஈறுகளால் நன்கு மென்று தின்னப் பழகிக் கொண்டார். முறுக்கு, சீடை மட்டும்தானா இறைச்சி, எலும்புகளும் அவரது ஈற்றுக்கு நொறுங்கின. ஓரிரு நாட்கள் பெரியார் ஓய்விலிருந்தார். அதனை அண்ணாவும் சம்பத்தும் பயன்படுத்திக் கொண்டார்கள். சம்பத் படிப்பைத் தொடர்வதோடு கழக மாணவர் சம்பந்தப்பட்ட பயிற்சி முகாம்களை விடுமுறை நாட்களில், மாவட்ட வாரியாக நடத்துவது என்ற திட்டத்தை அய்யா தெரிவித்தார்கள். இந்தப் பயிற்சி முகாம்களில் பேசுவதற்கு மட்டுமன்றி பொதுமக்களோடு இணைந்து சென்று ஒரு சாரணர் குழுவைப் போன்று முதல் உதவி சிகிச்சை செய்தல், பகுத்தறிவைப் பரப்புதல் போன்ற சமூகப் பணிகளுக்கும் மாணவர்களைத் தயார்ப்படுத்த விரும்பினார் பெரியார். 1945 ஏப்ரல் 16, 17 தேதிகளில் ஈரோட்டில் திராவிட மாணவர் (முதல்) பயிற்சி முகாம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளிமாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான மாணவர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டுமென்பது பெரியாரின் விருப்பம். அப்போது அய்யாவிடம் தனிச்செயலாளராயிருந்த எஸ். கஜேந்திரன் கும்பகோணம், திருச்சி, அண்ணாமலை நகர் எனப் பல இடங்களுக்குச் சென்று கழக மாணவர்களைத் திரட்டினார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் சிறு சிறு குழுவினராக மாவட்டம்தோறும் பிரச்சாரம் செய்யும்படி விளக்கிக் கூறப்பட்டது. ஈரோட்டில் மாணவர் பயிற்சி முகாம்: ஈரோட்டில் பெரியார் மாளிகையில் 4.5.45 காலை திராவிட மாணவர் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் தோழர் தி.பொ. வேதாசலம் தொடங்கி வைத்தார். மாலையில் பல அறிஞர்கள் விரிவுரையாற்றினர். இப்பயிற்சியில் கலந்துகொண்ட முக்கியத் தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், ஏ.பி. சனார்த்தனம், புலவர்கள் வி.ஏ.ஏ.சாமி, நா.மு. மாணிக்கம், ஏ. வீரபாகு, பி. குழந்தையா, ஆர். எழில் நிலவன், ம. நன்னன், எஸ். தவமணிஇராசன், க.அ. மதியழகன், இரெ. இளம்வழுதி, ப. திருஞானசம்பந்தம், எம். விட்டல், ஆர். சுப்பையன், எஸ். இராவணன், எஸ். சுந்தரமூர்த்தி, க. சண்முகம், வி.பி. அண்ணல் தங்கோ, கே.என். இளஞ்செழியன், ச. ராமசாமி, ஆர். வில்லாளன், எம்.ஜி. இராசன், ஆர். இராமையன், வி. செங்குட்டுவன், எஸ். கருணானந்தம் ஆகியோர். திராவிட இளைஞர் மாநாடு சம்பத் பயின்ற ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியின் அரங்கில் திராவிட இளைஞர் மாநாடு உணர்ச்சியும், எழுச்சியும் ததும்ப நடைபெற்றது. மண்டபம் சிறியதுதான். ஆனாலும் அதற்கு வெளியிலும் ஏராளமான மாணவர்கள் குவிந்தனர். பழைய கோட்டை என். அர்ச்சுனன் வரவேற்புக் குழுவின் தலைவர். வசதிமிக்க பட்டக்காரர் குடும்பம். எப்போதும் பெரிய பிளிமத் காரில் பவனி வரக்கூடியவர். அந்த கார் நிறைய அரிசி காய்கறியெல்லாம் அவரே ஏற்றிக் கொண்டு மாநாட்டு மண்டபத்திற்கு வந்துவிட்டார். பக்கத்தில் பந்தல்போட்டு சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. மாநாட்டில் உற்சாக வெள்ளம். காரணம் மாநாட்டுக்குத் தலைவர் அண்ணா. இந்நிலையில் ஈ.வெ.கி. சம்பத் ஒவ்வொரு மாணவர் தலைவரையும், கட்சிப் பிரமுகரையும் பேச அழைக்கும்போதும் அண்ணா சுவையாக அறிமுகப்படுத்துவார். முன்னதாக க. அன்பழகன் கொடியேற்றிப் பேசினார். இரா. நெடுஞ்செழியன் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். தலைமையேற்க அண்ணாவை முன்மொழிந்து சம்பத், வழிமொழிந்து நெடுஞ் செழியன் பேச அண்ணாவின் தலைமையுரை மாநாட்டில் களை கட்டியது. ஒவ்வொரு தீர்மானத்தின் மீதும் மாணவமணிகள் பேசினர். மாலை தொடங்கி இரவு உணவுக்குப்பிறகும் சொற்பொழிவுகள் தொடர்ந்துகொண்டிருந்தன. இரண்டு நாள் பயிற்சி முகாம், மூன்றாம் நாள் இம்மாநாடு அதிலும் இரவு நெடுநேரமாகியும் நீடித்துக் கொண்டிருந்ததால் பலருக்கும் கிட்டத்தட்ட உறக்கம்வந்து உலுக்கிய நிலைமை. மேடையில் வீராவேசமாக பேசிக்கொண்டிருந்த டி.வி.என். பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. உடனே அவர் கோபத்தின் எல்லைக்கே போய் மிக உரத்த குரலில், "ஏன் சிரிக்கிறீர்கள்?, அண்ணா கூட சிரிக்கிறார் என் பேச்சில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது உயிரைக் கொடுத்து உயர்வான கருத்துகளை எடுத்து வைக்கிறேன் (மீண்டும் அவையில் சிரிப்பு) இப்படிச் சிரிப்பதுதான் நாகரிகமா?' என்றெல்லாம் அண்ணாவையும் சம்பத்தையும் பார்த்துக் கேட்டார். இருவரிடமும் டி.வி.என். மிகுந்த மரியாதையும் பாசமும் உள்ளவர். பின்னர் அண்ணா மேடைக்கு வந்து நாராயணசாமியை மேலும் பேசுமாறு உற்சாகப்படுத்தி அனைவரையும் கேட்க வைத்தார். அதற்குப் பின்னர் ஒருமணி நேரம் அண்ணா கருத்துமழை பொழிந்தார். எழுந்த கரவொலியில் தூங்கியவர்களும் விழித்தமர்ந்து விறுவிறுப்போடு அண்ணாவின் உரையையும், அடுத்து நன்றி தெரிவித்துப் பேசிய சம்பத்தின் உரையையும் கேட்டு மகிழ்ந்தனர். (தொடரும்) பச்சையப்பன் அல்ல; கிறிஸ்தவக் கல்லூரி அண்ணாவிடம் "தலைப்பு இல்லை' என்று பேசச் சொன்னது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அல்ல. 1961-இல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ் மன்றக் கூட்டத்தில்தான் தலைப்பு இல்லை என்று சொல்லிப் பேசச் சொன்னார் அப்போது தமிழ்த்துறை தலைவராக இருந்த ஆலாலசுந்தரம். அண்ணா உடனே, ""ஆம். தலைப்பு இல்லை. தமிழுக்குத் தலைப்பு இல்லை, தமிழனுக்குத் தலைப்பு இல்லை'' என்று பேச ஆரம்பித்தார். அப்போது நான் கல்லூரி மாணவனாக, அரங்கில் இருந்தேன். போடி.மு.சுருளிவேல், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், சென்னை-14. புகை கக்கப் பேசிய சிவாஜி! "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி. ச.இளவரசன், சென்னை -116. தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்
First Published : 30 Oct 2011 12:00:00 AM IST  கருப்புச் சட்டைப் படை1944-45 ஆம் ஆண்டுகளில் பரவலாக மாவட்டங்கள் தோறும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் திராவிட மாணவர் கழகப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. சம்பத் முன்னின்று அவற்றை நடத்தினார். நிகழ்ச்சிகளில் கழகத் தலைவர்களும், முன்னணியினரும் பங்கேற்றனர். நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கு முன், மாணவப் பருவத்தில் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்துத் தலைவர்கள் விளக்க உரைகள் நிகழ்த்தினர்.அப்போது சீனியர் மாணவர்களாய் இருந்தவர்களில் ஒவ்வொருவராக கல்லூரியில் இருந்து விடைபெற்றுத் திருமணம் செய்து கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபடலாயினர்.21.2.45 அன்று சென்னையில் க. அன்பழகன் - வெற்றிச்செல்வி திருமணம் பெரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சென்னை மேயர் ராதாகிருஷ்ணன், எஸ். ராமநாதன், அண்ணா, எஸ். குருசாமி, ஈ.வெ.கி. சம்பத், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், திராவிடமணி ஆகியோர் வாழ்த்துரை.18.2.45 அன்று திருச்சி நகராண்மைப் பொதுக்கூட்டத்தில் வடமண்டல திராவிட மாணவர் மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் சம்பத் சற்று ஆவேசமாகப் பேசினார்.""மாணவர்கள் அரசியலில் கலக்கலாமா? கூடாதா? என்னும் பிரச்சினை பற்றிக் கவலையில்லை. மாணவர் சமுதாயம் போர்க்குரல் கொடுத்துத் தியாக முத்திரைகளை ஏற்கவேண்டியது காலத்தின் கட்டாயமென்றால், அதற்கும் இந்த மாணவர் படை தயங்கப் போவதில்லை. (பலத்தகரவொலி) சமுதாயத்திலே நமக்குள்ள இழுக்கைப் போக்க தந்தை பெரியார் பல வகைமுறைகளைக் கையாண்டு விட்டார்கள். திராவிட சமுதாயத்திற்குப் பெரியார் காலத்திற்குள் நீதி கிடைக்கவில்லை என்றால் பிறகு யார் காலத்தில் அந்த மாற்றத்தைக் காண்பது? இதில் முட்டுக் கட்டைகள் தகர்க்கப்படவேண்டும். இல்லையேல் மாணவர் சமுதாயம் பொறுமையை இழக்க நேரும் என்று எச்சரிக்கிறேன்.கால வேகத்தை உணர்ந்து எதிரிகள் தங்களது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாற்றம் இனியும் ஒத்திப் போட்டுக் கொண்டு போகக் கூடியதல்ல என்பதை மாணவர் சமுதாயம் அவர்களுக்குக் கடுமையாக உணர்த்த வேண்டியுள்ளது.''4.5.45 அன்று ஈரோடு பெரியார் மாளிகையில் ஒரு வார காலம் மாணவர் பயிற்சி முகாம் நடைபெற்றது. சம்பத் ஏற்பாட்டில் நடந்த இந்தப் பயிற்சி முகாமில் பல மாவட்டங்களிலிருந்தும் மாணவப் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தார்கள். ஒருவார காலம் அவர்களுக்குத் தங்குமிடங்களும், உணவு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாணவராக அழைத்து பெரியார் அந்தந்த வட்டார நிலைகளைக் கேட்டறிந்ததோடு, மாணவர்கள் செயலாற்ற வேண்டிய தன்மைகள் குறித்தும் விளக்கிச் சொன்னார்.1945, ஜூலை 15 முதல் ஒரு மாத காலம் தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் ஈ.வெ.கி. சம்பத் தினமும் ஓர் ஊராகச் சூறாவளிச் சுற்றுப் பயணம் நடத்தினார். எஸ். கருணானந்தம் அவருடன் சென்றிருந்தார். திராவிட மாணவர் பிரச்சாரப் பயணம் என்று அறிவிக்கப்பட்டு அந்த இருமாவட்டங்களிலும் ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் நடத்தினர். அந்த ஒரு மாதத்தில் அவர்கள் ஒரே ஒரு நாள்தான் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். சம்பத்தின் பொது வாழ்க்கையில் இதுவே முதல் சுற்றுப்பயணமாகும். 1945, செப்டம்பர் 28ஆம் நாள் "குடியரசு' பத்திரிகையில் கருப்புச் சட்டைப்படை என்பதாக ஓர் அறிவிப்பைப் பெரியார் வெளியிட்டார். ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் தற்காலிக அமைப்பாளர்களாயிருந்து இந்தப் படையை நடத்துவார்களென்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. "குடியரசு'ப் பத்திரிகையில் வாரந்தோறும் கருப்புச் சட்டைப் படைத் தொண்டர்களின் பெயர்கள் இடம் பெற்று வந்தன. செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் நாடு முழுவதும் கருப்புச் சட்டைப் படையினர் திரட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தம்பித் தலைவர் அவர்களேதென்னார்க்காடு மாவட்டம் திராவிடர் இயக்கக் கோட்டையாக மாறியதற்கு செட்டிநாட்டு அரசரின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு காரணமாகும். அங்கே பயின்ற நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், இளம்வழுதி, அரங்கண்ணல் போன்ற மாணவர் பட்டாளம் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் கொழுந்து விட்டெரியத் தமிழகமெங்கும் எழுச்சி ஏற்பட்டது.அம்மாவட்டத்தில் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் திராவிட மாணவ மாநாடு நடைபெற்றது. புதுப்பேட்டை வட்டாரம் நெசவாளர் நிறைந்த பகுதி. சேலம் மாநாட்டுக்குப் பின்னர் புதுப்பேட்டை மாநாடுதான் புத்தெழுச்சியை ஏற்படுத்தியது. வீரமணியை உருவாக்கிய கடலூர் அ. திராவிட மணி இந்த மாநாட்டை முன்னின்று நடத்தினார். மாநாட்டின் வெற்றிக்கு முன்னோடியாக விளங்கியவர் புதுப்பேட்டை ராமலிங்கம். இவர் பின்னர் சென்னையில் குடியேறி அனகாபுத்தூர் ராமலிங்கம் எனப் புகழ் பெற்று இயக்கத்திலும், நெசவாளர் மத்தியிலும் சிறந்து விளங்கினார்.புதுப்பேட்டை மாநாடு வெற்றி பெற வேண்டுமென்பதில் அண்ணா தனி அக்கறை கொண்டிருந்தார். காரணம் முதன் முதலாக தம்பி சம்பத் மாநாட்டுத் தலைவர் ஆகிறார். ஆம், அது முதல் சம்பத் முழு நேர அரசியல்வாதியாக உருப்பெறுகிறார். ஆகவே இம்மாநாட்டை வெற்றியாக நடத்த அண்ணா ஒரு மாத காலம் தென்னார்க்காடு மாவட்டச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி மக்கள் பணியில் முனைப்போடு ஈடுபட்டார்.தென்னார்க்காடு மாவட்ட மாநாடு குறித்து மற்ற மாவட்டங்களிலும் நல்ல விளம்பரமாயிற்று. மாநாட்டில் திரளானோர் குழுமினர். மாநாட்டில் ஏ.பி. ஜனார்த்தனம் கொடியேற்றினார். புதுப்பேட்டை எஸ். கோவிந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநாட்டிற்கு ஈ.வெ.கி. சம்பத்தை தலைமை தாங்குமாறு கே.ஏ. மதியழகன் முன் மொழிந்தார். தோழர்கள் க. அன்பழகன், சேலம் சித்தையன், போளூர் சுப்ரமணியம், கி. வீரமணி, தில்லைப் புலவர் ந.மு. மாணிக்கம், நன்னன் ஆகியோர் வழி மொழிந்து பேசினர்.பின்னர், பலத்த கரவொலிக்கிடையே ஈ.வெ.கி. சம்பத் தலைமை உரையை நிகழ்த்தினார். அவருடைய ஒரு மணி நேரப் பேச்சை பெரியார், அண்ணா உள்பட அனைவரும் உன்னிப்பாகக் கேட்டு ரசித்தனர். அடுத்து பெரியார், அண்ணா ஆகியோரின் உரையும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.அதிலும் சம்பத் முதன்முதல் தலைமை தாங்கும் மாநாட்டில் இவர்களுடைய பேச்சு எப்படி இருக்குமென்று எல்லோரும் ஆவலோடிருந்தனர்.அண்ணா "விடுதலை' ஆசிரியராக ஈரோடு வந்த பின்னர் சம்பத் தமது பத்து வயதிலேயே அண்ணாவைத் தம் சொந்த அண்ணனாகவே ஏற்றுப் பெருமைப்பட்டவர். அண்ணாவின் இதயத்தின் பெரும் பகுதியை சம்பத்தே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார் என்று கூடப் பலரும் சொல்வதுண்டு. அண்ணாவும் சம்பத்தை தம் உடன்பிறவாத் தம்பியாகவே உள்ளன்போடு கொண்டாடினார். சம்பத் மீது பெரியாருக்கிருந்த அக்கறை போன்றே அண்ணாவுக்கும் அளவிடற்கரிய அக்கறை, உரிமை உண்டு. "அவன், இவன்' என்று சம்பத் ஒருவரை மட்டுமே அண்ணா உரிமையோடு அழைத்தார். ஏட்டில் எழுதுவதானாலும் மேடைகளில் பேசுகிறபோதும் சம்பத்தை மட்டும்தான் "என் தம்பி சம்பத் சொன்னான், பேசினான், கேட்டான்' என்றெல்லாம் உரிமையோடு குறிப்பிடுவார். நெடுஞ்செழியன், கருணாநிதி உட்பட மற்றவர்களை, "நண்பர் என்றும், அவர், இவர்' என்றும்தான் சொல்வார்.அண்ணா பேசுவதற்கு ஒலி பெருக்கி சரிசெய்யப்பட்டதும், ""தம்பித் தலைவர் அவர்களே'' என்று தொடங்கினார் அண்ணா. வாழ்த்து முழக்கம். அண்ணா தமது பேச்சில் சம்பத் பற்றிக் குறிப்பிடுகையில், ""எதிர்காலத்தில் என் தம்பி எனக்கு மட்டுமல்ல, இந்த இயக்கத்திற்கே தலைவனாகப் பரிணமிப்பான்.மற்றவர்களெல்லோரையும் விட எனக்கு அந்த நம்பிக்கையுண்டு. தலைவர் மகன் தலைவராவதில்லை. காந்தியின் மகன் யார் என்பது நாட்டுக்குத் தெரியாது. ஆனால் பெரியாரின் வாரிசு தம்பி சம்பத் இன்று நாட்டுக்குத் தெரிகிறான் என்றால் அதற்கு அவனது தனித்தன்மையும் திறமையும்தான் காரணம். தம்பித் தலைவர்... நாளைய நாட்டின் தலைவர்'' என்று அண்ணா குறிப்பிட்டபோது ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.பின்னர் பெரியார் பேசுகையில், ""தலைவராக இருப்பதில் பெருமையைவிட தொல்லைதான் அதிகம் (சிரிப்பு).ஊர் ஊராகப் போய் உழைத்துக் கட்சியை வளர்த்து, எதிர்ப்புகளைச் சந்தித்தும் போராட்டங்களை நடத்தியும் சிறை சென்று தியாகம் செய்துதான் தலைமைக்குப் புகழ் தேடவேண்டும். ஒரு பக்கம் பாராட்டு எல்லாம் நடக்கும். இன்னொரு பக்கம் கைப்பணம் காலியாகிவிடும். அதனால் ஏதோ கிடைத்துவிட்டது என்றில்லாமல் இந்தச் சமுதாயத்திற்கு நமது பங்கு என்ன என்பதை அறிந்து சம்பத் மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் பொறுப்போடு செயல்படவேண்டும்'' இவ்வாறு பெரியார் குறிப்பிட்டார். மாநாடு முடிந்ததும் சில நண்பர்கள் அண்ணாவிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, ""என்ன அண்ணா, எப்படியோ சம்பத்தை தலைவராக்கி படிக்க விடாமல் பண்ணிட்டீங்க?''என்று கேட்டனர். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் நம்பிக்கையோடு அண்ணா சொன்னார். ""படிப்பு அவனுக்கு ஒரு குறை இல்லை எல்லோரும் பார்க்கத்தான் போறீங்க. சம்பத் நல்லா ஷைன் பண்ணுவான்.''இந்த மாநாட்டின் இன்னொரு சிறப்பு பாரதிதாசன் அனுப்பிய வாழ்த்துக் கவிதை. அவர் உடல் நலக் குறைவால் மாநாட்டிற்கு வரவில்லை. அனுப்பி இருந்த வாழ்த்துப்பா, பிற்காலத்தில் புகழ் பெற்ற கவிதை. அதனை மாநாட்டு மேடையில்க. அன்பழகன் படித்த போது வரிக்கு வரி பாராட்டு எழுந்தது. பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியில் நம்பினை பகலினை நள்ளிருள் என்றேசிம்புட் பறவையே சிறகை விரி எழு சிங்க இளைஞனே திருப்பு முகம்! திற விழி!என்றெல்லாம் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டி வரலாறு படைத்த அந்தக் கவிதை புரட்சிக் கவிஞரால் சம்பத்துக்காகவே எழுதி அனுப்பப்பட்ட கவிதையாகும்.(தொடரும்)
First Published : 06 Nov 2011 12:00:00 AM IST  சேலம் மாநாட்டில் கட்சி பெயர் மாற்றம் பெற்ற பிறகு கூடிய முதல் திராவிடக் கழக மாநில மாநாடு 1945- இல் செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருச்சி புத்தூரில் மாபெரும் பந்தல் போட்டு ஏற்பாடாயிற்று. தலைவர்கள் முதல் நாளே வந்து சேர்ந்தனர். டி.பி. வேதாசலம் மாளிகையில் பெரியார், அண்ணா, சம்பத் ஆகியோர் தங்கி இருந்தனர். அன்று திருச்சியில் கடும் மழை பெய்தது. மாநாட்டுப் பந்தல் ஒழுக ஆரம்பித்தது. தங்கி இருந்த கழகக் குடும்பத்தவர்கள் குழந்தை குட்டிகளுடன் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்து, மழையால் திடலே சேறும் சகதியுமானது. தண்ணீர் தெப்பமாக நின்றது.எப்படியும் மாநாட்டை நடத்தியாக வேண்டுமென்று பெரியார் கட்டளையிட்டுவிட்டார். டி.பி. வேதாசலம், அன்பில் தர்மலிங்கம், துறையூர் அழகுமுத்து, பிரான்சிஸ் தவமணி ராஜன், கருணாநந்தம், அரங்கண்ணல், பராங்குசம், திருச்சி ராஜி போன்ற தோழர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மண்வெட்டி, கடப்பாறை முதலிய கருவிகளுடன் திடலில் இருந்த தண்ணீரை வடிக்கத் தீவிரமாக இறங்கினர். எம்.ஆர்.ராதா இடுப்பு வேட்டியைக் கழற்றி தலைப்பாகை கட்டிக் கொண்டு அரைக்கால் சட்டையில் மண்வெட்டியுடன் இறங்கினார்.இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு பெரியார், மணியம்மை, அண்ணா, சம்பத் ஆகியோரும் அங்கு வந்து விட்டனர். மேடு பள்ளம் நிறைந்த சமுதாயத்தைச் செப்பனிடும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்த பெரியார், அதே ஆர்வத்தோடு மாநாட்டு மைதானத்தையும் சமப்படுத்துவதில் மண்வெட்டியுடன் இறங்கினார். அண்ணா, சம்பத், மணியம்மை எல்லோருமே மழையில் நனைந்தபடி மைதானத்தைத் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற்றது. தலைவர்கள் பேச்சுகளைவிட கருப்புச் சட்டைத் தலைவர் சம்பத்தின் பேச்சு சற்றுக் காரசாரமாக அமைந்தது. இக்கூட்டத்தில் கருப்புச் சட்டை அணிவது பற்றிப் பெரியார் வலியுறுத்திப் பேசினார்.""நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம். பெண்டிரும் கருப்புத் துணியில் புடவை ரவிக்கை அணியலாம். கூட்டங்களில் இனி மாலைக்குப் பதில் கருப்புத் துணிகளே போடலாம். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச்சட்டை, இந்துஸ்தான் சேவாதள் இருப்பது போல் இங்கும் கருப்புச் சட்டைப்படை தமிழ்நாடு முழுதும் இருக்கும்''.அக்காலத்தில் தஞ்சை, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் மாதத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் கழகக் கூட்டங்கள் நடந்தபடியாக இருக்கும்.1946 ஜனவரி முதல் வாரத்தில் திருத்துறைப்பூண்டியில் திராவிட மாணவர் மாநாடு காலையிலும், கருப்புச் சட்டைப் படை மாநாடு பிற்பகலிலும் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் எஸ் கருணாநந்தம். (அப்போதுதான் அவருக்கு தஞ்சை ஆர்.எம்.எஸ். சார்ட்டர் பணிக்கான நியமனக் கடிதம் வந்திருந்தது.) மாநாட்டுப் பணிகளில் எஸ்.கே. சாமி, அரங்கண்ணல், யாகூப், காஜாபீர் மற்றும் தோழர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். திருத்துறைப் பூண்டி காங்கிரஸ் கோட்டை என்பார்கள். அந்தக் கோட்டையே அதிரும் வண்ணம் கழக மாநாடு.உடல் நலக் குறைவு காரணமாக பெரியார் வருவதற்கில்லை என்றும் அண்ணா அவசியம் கலந்து கொள்வாரென்றும் மாநாட்டு நிர்வாகிகளுக்குத் தகவல் வந்தது. தலைவர்களை வரவேற்க ரயிலடியில் கூட்டம் திரண்டிருந்தது. ரயிலில் இருந்து ஈ.வெ.கி சம்பத், நெடுஞ்செழியன், வீரமணி, தவமணிராஜன், அ. திராவிடமணி ஆகியோர் இறங்கினர். வாழ்த்துகள் முழங்கின. கறுப்புப் போர்வையில் குளிரில் நடுங்கியபடி ஓர் உருவம் இறுதியில் வண்டியை விட்டு இறங்கியது. அவர் மு. கருணாநிதி, "குடியரசு' துணை ஆசிரியர். கடுமையான அம்மை நோய் கண்டு உடல் கொதித்தது. ""மாநாட்டுக்கு வந்தே தீருவேன்'' என்று மு.க. வந்து சேர்ந்தார்.அண்ணாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தனர். "எங்கே வரப்போகிறார்? இப்போதும் காலை வாரி விடத்தான் போகிறார்' என்று தோழர்கள் சலிப்போடு பேசிக் கொண்டிருந்தனர். அடுத்து வந்த ரயிலில் அண்ணா வந்து இறங்குகிறார். ஒரு குதிரை வண்டியில் மாநாட்டுப் பந்தலை அடைகிறார். அண்ணாவைக் கண்டதும் யாருக்கும் தலைகால் புரியவில்லை. ஒரே உற்சாகம். வாழ்த்து முழக்கம்.மாநாட்டு நிர்வாகிகளிடம், ""ஏன் இப்போது தான் சுவரொட்டிகளை ஒட்டுகிறீர்கள்?'' என்று அண்ணா கேட்டார். பலரும் மெüனமாக இருந்தனர். அரங்கண்ணல் மட்டும் சற்று துணிவாகவே சொன்னார். ""இதற்கு முன் இரண்டு மூன்று கூட்டங்கள் விளம்பரம் செய்தும் நீங்கள் வராததால் காங்கிரஸ்காரர்கள் கேலி செய்தார்கள். அதனால்...'' என்று மழுப்பினார்.சம்பத் தலைமையில் ஊர்வலம். மாநாட்டுப் பந்தலை நோக்கி ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்தனர். அண்ணாவும் நடந்தே வந்தது, தோழர்களுக்கு உற்சாகத்தைத் தந்தது. காங்கிரசாரின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநாடு வெற்றியுடன் நடைபெற்றது. கடும் காய்ச்சலிலும் கருணாநிதி தனது பாணியில் அழகாகவும் ஆவேசத்தோடும் பேசினார்.இசையில் சிறந்தது எது?இசைக் கலையைப் பொறுத்தவரை அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் தங்களது இளமைப் பருவத்தில் மிருதங்கத்தில் மனதைப் பறிகொடுத்தவர்கள்.கலை, இலக்கியம், அரசியல், விஞ்ஞானம் போன்ற பல துறைகளையும் அண்ணாவின் எண்ணத் தராசில் போட்டு எடை காண்பார் சம்பத். ஒரு நாள், இசையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்ற சம்பத் கேட்டபோது, ""நாயன இசையே உலகில் சிறந்தது தம்பி'' என்று அண்ணா குறிப்பிட்டார்.திருவாரூர் கீழ்வடம்போக்கித் தெருவில் குப்புசாமி நாயனக்காரரின் மூத்த மகன் தட்சணாமூர்த்திக்கு அண்ணா தலைமையில் திருமணம். அது ஒரு புகழ் பெற்ற இசைக் குடும்பம். திருவாரூர் சங்கீத மும்மணிகள் தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் தோன்றிய இடம். அதனால்தானோ என்னவோ, அன்றைய திருமண விழாவில் அண்ணா மணமக்களுக்குச் சொன்ன அறிவுரையைவிட இசை பற்றிய விரிவுரை ஓங்கி இருந்தது.தம்பி சம்பத்தைத் தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசலானார். தொடக்கத்திலேயே சொன்னார்:""இந்த மணவிழாவிற்கு நான் வந்து கொண்டிருந்தபோது உடனிருந்த என் தம்பி சம்பத் கேட்டான், "உங்களுக்கு இசையிலே மிகவும் பிடித்தது எது?' என்று. நான், "நாயன இசை'யென்றேன். இது புகழ் பெற்ற திருவாரூர் குப்புசாமி நாயனக்காரரின் இல்லத் திருமணம். அதற்காகக்கூட நான் சொல்லவில்லை. எனக்குப் பிடித்தது நாயன இசை தான்'' இவ்வாறு முகவுரை சொல்லிவிட்டு இசை பற்றிய விளக்கத்திற்கு வந்தார் அண்ணா.""இசை என்றால் இசையவைப்பது. அதனால் தான் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள் காலத்திலிருந்து, ராமலிங்க அடிகள் காலம் வரை தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப் பாடல்களாகவே இயற்றி தமது சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசைய வைத்தனர்'' என்பதாக ராக ஆலாபனை செய்யத் தொடங்கிய அண்ணா, பிர்காக்கள் சங்கதிகள் உதிர, மேலே மேலே உச்ச ஸ்தாயியில் சஞ்சாரம் செய்தார். இசையிலே உயர்ந்தது தமிழிசையே என்னும் பல்லவி, இசைக் கருவிகளில் உயர்ந்தது நாயனமே என்னும் அனுபல்லவி, தவில் வாத்தியத்துக்கு இணை உலகிலேயே இல்லையெனச் சரணம் சொல்லி, நிரவல் சுரப் பிரஸ்தாரத்துடன் ஆரோகண அவரோகணம் செய்து, கடைசியில் முத்தாய்ப்பு வைத்தார் அண்ணா. அன்றைக்கு அண்ணாவின் பேச்சுக் கச்சேரி, பாட்டுக் கச்சேரியாய் அமைந்தது.நாயனக் கருவிக்கு நிகர் இல்லை. அதைக் கையாள்வதற்குத் தனித்திறமை வேண்டும். நமது திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களின் சுயமரியாதை உணர்வினால்தான் நாயனக்காரர்களின் நிலை இன்று மேம்பாடடைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.குற்றாலத்தில் அண்ணா, சம்பத்சீசனில் குற்றாலம் செல்ல வேண்டுமென்று அண்ணாவுக்குக் கொள்ளை ஆசை. கோவில்பட்டி வள்ளிமுத்து கூட அடிக்கடி அழைப்பார். நெல்லை செல்லும்பொழுது கே.வி.கே. சாமி நினைவுபடுத்துவார். தொல்லை மிகுந்த லட்சிய வாழ்க்கையில் இந்த உல்லாசங்களுக்கு இடமேது?கே.ஆர். ராமசாமிக்கு ஒரு யோசனை தோன்றியது. அண்ணாவையும் சம்பத்தையும் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்ற தம் எண்ணத்தை அண்ணாவிடம் வெளியிட்டபோது, ""தம்பி சம்பத் மாணவர் இயக்கத்தில் தீவிரம் காட்டுகிறான். அவன் குடந்தை வருகிறபோது சொல். நாம் போய் வரலாம்'' என்றார் அண்ணா.அண்ணா, கே.ஆர்.ஆர்., சம்பத் மூவரும் இணைந்துவிட்டால் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார்கள். சுற்றுலா என்றால் கேட்கவா வேண்டும்?சிந்தையைக் குளிப்பாட்டும் "சில்'லென்ற மென் தென்றல் தவழ்ந்துவரும் குளிர் குற்றாலம் சென்றனர் மூவரும். அவர்களோடு நகைச்சுவை நண்பர் சி.வி. ராஜகோபாலும் சேர்ந்து கொண்டார். பணிவிடைக்குப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தலைவர் பொன்னம்பலனார் உடனிருக்கக் குறைவேது? தென்பாண்டி மண்ணின் சிறப்புகளுக்கு ஆலோலம் பாடும் குற்றாலத் தேனருவி. ஆல விழுதிறங்கும் பான்மையில், ஆடிச் சலசலக்கும் ஐந்தருவிக் காட்சியை அவர்கள் கண்டுகளித்தனர். வெள்ளியினால் செய்த வெகு நீளச் சங்கிலி போல் வெள்ளருவி துள்ளிவரும் காட்சியைக் கண்டு ரசித்தனர். உடல்வலி போக்க எண்ணெய் தேய்த்து அருவியில் குளித்தெழுந்தால் உடலுக்குக் குளிர்ச்சி; உள்ளத்திற்கும் மகிழ்ச்சி.தம்பி சம்பத்தை உட்கார வைத்து அண்ணா எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடன்பிறந்த அண்ணனுக்குக் கூட அந்த அளவு அக்கறை இருக்காது. தம்பி சம்பத் தளிர்க் கரங்களால் அண்ணனுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார். மகிழ்ச்சியும் குதூகுலமும் போட்டியிடுகின்றன. அண்ணாவின் நகைக்சுவை தென்றலினும் இனிமை காட்டுகிறது. அனைவரும் ஐந்தருவியில் நீராடுகின்றனர். அண்ணாவுக்குத் தண்ணீரில் இறங்கவே பயம். அவரை ராமசாமியும், ராஜகோபாலும் தூக்கி வந்து அருவியில் நிறுத்துகின்றனர். அண்ணாவோ பதறுகிறார். பாய்ந்து விளையாடும் தம்பி சம்பத்துக்குத் தீங்கேதும் ஏற்பட்டுவிடக்கூடாதென்று கவனம் முழுவதையும் தம்பியின் பக்கம் திருப்புகிறார். ""எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று தைரியம் கூறுகிறார் கே.ஆர்.ஆர்.""அண்ணா இந்த இன்பமான சூழ்நிலையில் கே.ஆர்.ஆரின் இசை கேட்டால் எப்படி இருக்கும்?'' என்கிறார் சம்பத். உடனே எட்டுக்கட்டை சுருதியில் கே.ஆர்.ஆர். ராக ஆலாபனை செய்கிறார். சுற்றுலா வந்தவர்கள் சுகமாக இசையில் நீந்துகின்றனர். அண்ணாவுக்கு இத்தகைய அனுபவங்கள் தனிச் சுகம் தரும்.அப்போது அங்கே மனிதனை மனிதன் இழுத்து செல்லும் கை ரிக்ஷாக்கள் உண்டு. ஆனந்தத்திலும், ஆர்வம் மிகுதியிலும் அண்ணா சம்பத்தைத் தூக்கி ரிக்ஷாவில் வைத்துத் தாமே இழுக்கிறார். சம்பத் குதித்திறங்கி அண்ணாவை ரிக்ஷாவில் ஏற வைத்து அவர் இழுக்கிறார். இப்படி ரிக்ஷா ஓட்டிக்குச் சந்தர்ப்பம் தராமலே இருவரும் மாற்றி மாற்றி ரிக்ஷா இழுப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு நாளல்ல, இரண்டு நாட்கள் குற்றால இன்பச் சுற்றுலா குதூகலம் தந்தது. காஞ்சி திரும்பிய அண்ணா, "குற்றாலம் கண்டோம்' என அந்தக் குதூகலத்தைக் கட்டுரையாகவும் தீட்டி மகிழ்ந்தார்.(தொடரும்)
First Published : 13 Nov 2011 12:00:00 AM IST Last Updated : ஏ.பி. ஜனார்த்தனம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பம்மல் சம்பந்த முதலியார், என்.எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஆர். ராதா நேரடி அரசியல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. நாடே சோகத்தில் ஆழ்ந்தது. பெரியார் மனம் வெதும்பினார். அண்ணா அதிர்ச்சியுற்றார். குடியரசு, திராவிட நாடு ஏடுகளில் இரு கலைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அறிக்கைகள், கட்டுரைகள் வெளிவந்தன. கழகக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கே.ஆர்.ஆர். நாடக சபையின் நாடகங்களில் கிருஷ்ணன், பாகவதர் விடுவிக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை காட்சியாக்கி நடித்தனர்.கழகத்தின் பிரச்சார வலிமை கருதி பெரியார் மீண்டும் விடுதலை நாளேட்டினைத் தொடங்கினார். இதன் மேலாளர் பொறுப்பை சம்பத்திடம் ஒப்படைத்தார்.திராவிடர் மாணவர் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நீடாமங்கலத்தில் 1946 பிப்ரவரி 23, 24 நாட்களில் நடைபெற்றது.இந்தி எதிர்ப்புப் போரில் உயிர்த் தியாகம் செய்த தாளமுத்து நடராசன் பெயர்களில் மாநாட்டுப் பந்தல் அமைந்திருந்தது. இந்த மாநாட்டிற்கு சிவகங்கை மாணவர் தோழர் சத்தியேந்திரனைத் தலைமை தாங்கி நடத்துமாறு ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேசினார். (சிவகங்கை சத்தியேந்திரன் குடும்பம் சுயமரியாதைக் குடும்பம், பிற்காலத்தில் அவர் மாவட்ட நீதிபதியானார். அவருடைய அண்ணன் ராஜசேகரன் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சட்டத்துறைச் செயலாளராக இருந்தார்.)மாநாட்டில் தோழர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், ஜனார்த்தனன், இளம்வழுதி, தவமணிராஜன், சொக்கப்பா, கி.வீரமணி, என்.எஸ். இளங்கோ ஆகியோரும் கழகத்தின் மூத்த தலைவர்களான கே.கே. நீலமேகம், பி. சின்னத்தம்பி, பாலசுந்தரம் (பாவலர்) ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.இந்த மாநாட்டின் சிறப்பே, திராவிட மாணவர் கழகப் பிரிவு காலையில் கூடி, மாணவர் கழகத்தின் தலைவராக ஈ.வெ.கி. சம்பத்தை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்ததுதான். செயலாளர் இளம்வழுதி (அண்ணாமலை நகர்) இணைச் செயலாளர் மா. குமாரசாமி (சென்னை) பொருளாளர் சொக்கப்பா (குடந்தை) ஆகியோரும் உடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநாட்டில் கே.கே. நீலமேகம் பேசுகையில், ""பெரியாரின் வாரிசு தம்பி சம்பத் இன்று நேரடி அரசியலுக்கு வந்துவிட்டார். வாழ்க இளம்தலைவர்'' என்று குறிப்பிடுகையில் மாநாட்டுப் பந்தல் அதிரும் வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரமும் கரவொலியும் ஏற்பட்டன. மாநாட்டின் இறுதியில் ஏ. ராமசாமி கவுண்டர், அண்ணா, பெரியார் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.முதலமைச்சராக இருந்த பிரகாசம் கொடுங்கோலாட்சி புரிந்து ஆந்திராவைத் தனியே பிரிக்க முயன்றார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்த காமராசருக்கும் பிரகாசத்திற்கும் சிறு மோதல் ஏற்பட்டது. பிரகாசத்தை அகற்ற காமராசரின் ஆற்றல் பயன்பட வேண்டுமென்று பெரியார் கருத்துக் கூறினார். தெலுங்கு பேசும் தமிழரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை முதல்வராக்கினார் காமராசர். பிரகாசம் எதிர்வரிசையில் அமர்ந்து ஆட்சிக்குத் தொல்லை கொடுத்தார்.பெரியார், அண்ணாவின் பெருமுயற்சியால் 25.4.47 இல் என்.எஸ். கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் விடுதலையாகினர். கழகத்தவர் களிப்புற்று விழாக் கொண்டாடினர். ஈரோட்டில் சம்பத் தலைமையில் மகிழ்ச்சி விழா நடைபெற்றது. இவ்வாண்டு மே முதல் நாள் தஞ்சையில் கே.ஆர். ராமசாமி நாடகக்குழுவினரின் "வேலைக்காரி' 150 ஆம் நாடக விழா நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் திடீரென பாகவதரும், என்.எஸ்.கேயும் மேடையில் தோன்றியதும் மக்கள் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். யாருக்கும் அறிவிக்காமலே அண்ணாவும், சம்பத்தும் இரு கலைமணிகளையும் நாடகத்திற்கு அழைத்து வந்தனர். இருவரும் நாடகத்தைப் பாராட்டிப் பேசினர். இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாவால் "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என்று பாராட்டப்பட்ட வ.ரா. தலைமை தாங்கினார்.கலைவாணர் பட்டம்சென்னைச் சட்டசபைத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற ராஜா கல்விக் கழகக் கூட்டத்தில் என்.எஸ். கிருஷ்ணனுக்குக் "கலைவாணர்' என்னும் பட்டத்தை நாடக மேதை பம்பல் சம்பந்த முதலியார் வழங்கினார். நிகழ்ச்சியில் அண்ணா, சம்பத், என்.வி.நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்."போர் வாள்' வார ஏட்டை காஞ்சி மணிமொழியார் தொடங்கினார். சம்பத்திற்கு மிகவும் பிடித்தமானது பொதுக் கூட்டம். மாநாடுகளைவிடக் கிராமங்களுக்குச் சென்று ஆதி திராவிடக் குடியிருப்புகளில் பெட்ரோமாஸ் லைட்டுடன் கூட்டம் பேசுவது, அங்கே, திருமணங்களை நடத்தி வைப்பது ஆகியவற்றில் தனி உற்சாகம் உண்டு. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் குடிசைகளில் தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்து பழைய தட்டுகளில் தமக்குப் பிடித்தமான மீன் குழம்பு, நண்டு முதலியவற்றை விரும்பிச் சாப்பிடுவார். 30, 40 பேர் கூடும் கூட்டத்தில் கூட பெட்ரோமாஸ் லைட்டை வைத்து பிரச்சாரம் ஆரம்பமாகிவிடும். ஏ.பி. சனார்த்தனம், கருணானந்தம், சங்கரையா போன்றவர்கள் சம்பத்துக்குப் பாதுகாப்பாக வருவார்கள்.கறுப்புச் சட்டைப் படை மாநாடுமதுரையில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிற கறுப்புச் சட்டை மாநாட்டிற்குத் தமிழகம் முழுவதுமிருந்தும் தொண்டர்களை ஏராளமாகத் திரட்ட வேண்டுமென்று பெரியார் விடுத்த அறிக்கையினை ஏற்று, மாவட்ட வாரியாக கருஞ்சட்டைப் படையின் ஆலோசனைக் கூட்டங்கள் வரிசையாக நடைபெற்றன. அமைப்பாளர்களான சம்பத்தும், கருணானந்தமும் நாள்தோறும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றனர்.மாவட்டங்களில் கறுப்புச் சட்டைப் படைக்கு எழுந்த பேராதரவு கண்டு சம்பத் புது உற்சாகம் பெற்றார். எப்படியும் லட்சக் கணக்கான கறுப்புச் சட்டை வீரர்கள் மதுரையில் திரளுவார்கள் என்னும் நம்பிக்கையை பெரியாரிடம் தெரிவித்தார். மாநாட்டுப் பணிகள் தீவிரமடைந்தன. மதுரை மாவட்டச் செயல் வீரர் மதுரை முத்து மாநாட்டிற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தார். அய்யாசாமி போன்ற தோழர்கள் அவருக்குத் துணையாக நின்றனர்.மதுரை ஷெனாய்நகர் அப்போதுதான் சிறு சிறு மாளிகைகளோடு உருவாகிக் கொண்டிருந்தது. மதுரை தியாகராயநகரில் வைகையாற்றின் பாலத்திற்குக் கீழ்ப்புறம், இதுவரை எந்த மாநாட்டிலும் காணாத அளவிற்குக் கண்ணுக்கெட்டிய தூரம் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.1946 ஆம் ஆண்டு மே 11, 12 (சனி,ஞாயிறு) நாட்களில் முதலாம் மாநிலக் கறுப்புச் சட்டைப்படை மாநாடு பிரமாண்டமாகக் கூடியது. கூடல் மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினும் கழகக் கொடிகள். கறுப்புச் சட்டைகள். மாநாட்டிற்கு முன்னதாக மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. கறுப்புச் சட்டை அணிந்து 80 ஆயிரம் தோழர்கள், தோழியர்கள் வீர அணிவகுப்பு நடத்தி வந்தனர்.இந்த மாபெரும் ஊர்வலத்தை தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், க. அன்பழகன், இரெ. இளம்வழுதி ஆகியோர் திறந்த ஜீப்பில் வழிநடத்தி வந்தனர். அந்தந்த மாவட்டப் படைத்தளபதியின் தலைமையில் மாவட்ட வாரியாக கறுப்புச் சட்டைப்படை, ராணுவ அணி வகுப்புப் போல வீர நடைபோட்டு வந்தது. ஊர்வலம் மாநாட்டுப் பந்தலை அடைந்ததும் கறுப்புச் சட்டைப் படையின் தலைமை அமைப்பாளர் ஈ.வெ.கி. சம்பத் இப்படை அமைக்கப்பட்ட நோக்கத்தை விரிவாகத் தமது உரையில் எடுத்துரைத்தார். ஊர்வலத்திற்குப்பின் என். அர்ச்சுனன் கழகக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.இம்மாநாட்டின் தலைவர் பெரியார். திறப்பாளர் அண்ணா. திராவிட நாடு படத்திறப்பாளர் ஈரோடு எஸ்.ஆர். காந்தி அம்மையார் (பெரியார் தங்கை மகள், மாப்பிள்ளை நாயக்கர் மகள்).மாநிலம் முழுவதுமிருந்தும் வருகை தந்திருந்த கழகப் பேச்சாளர்களும், சுயமரியாதை இயக்க வீரர்களும் சொற்பொழிவாற்றவிருந்தனர். அன்றிரவு அண்ணாவின், "அவன் பித்தனா?' நாடகமும் எம்.ஆர். ராதாவின் "போர்வாள்' நாடகமும் நடைபெறுவதாய் இருந்தன.பகலில் மாநாடு பரபரப்போடு தொடங்கியபோது, எதிரிகள் மாநாட்டுப் பெரும்பந்தலை நெருப்பிட்டுக் கொளுத்தினர். பெரும் பீதியோடு தாய்மார்களும் குழந்தைகளும் திசை தடுமாறி ஓடும்போது குண்டர்கள் தாக்கினர். கருஞ்சட்டைப்படை வீரர்கள் குண்டர்களை எதிர்த்துத் தாக்கி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். வைகைக் காற்றின் வேகத்திற்கேற்ப சிறிது நேரத்திற்குள்ளாகவே மாநாட்டுப் பந்தலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது.பெரியாரும் பிற தலைவர்களும் அவரவர் தங்கியிருந்த இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். நகரம் முழுவதும் கடும் பரபரப்பு, பதற்ற நிலை. மதுரை நகரமே அமளிக் காடாயிற்று.மாநாட்டுத் தலைவர்களும், முக்கிய தொண்டர்களும், ஷெனாய்நகர் பகுதியில் தங்கியிருந்தனர். அந்தப் பகுதியில் சற்று அதிகமாகவே அமளிகள் நடந்தன.பெரியாரை மாடியில் தங்க வைத்துவிட்டு கீழே எல்லா முக்கிய பிரமுகர்களும் ஆளுக்கொரு கம்பும், தடியுமாகச் சுற்றியிருந்து காவல் காத்தனர். தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு முண்டா பனியனுடன் கையில் ஒரு பெரிய தடியை தூக்கிக் கொண்டு காலிக் கும்பலை நோக்கி ஆவேசமாக ஒடினார் ஈ.வெ.கி. சம்பத். வழியில் எவனோ ஒருவன் எதிர்ப்புக் கூச்சலிட்டபடி சைக்கிளில் பறந்து வந்தான். அவனைத் தோழர்கள் மரத்திலே கட்டி வைத்தனர். ஆத்திரம் கொண்ட சம்பத் அவன் சைக்கிளைத் தூக்கி அருகில் இருந்த பாழும் கிணற்றுக்குள் போட்டார்.மற்றொரு வெறிக் கும்பல் நெருங்கிக் கொண்டிருந்தது. நெடுஞ்செழியனும் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு சம்பத்தோடு ஓடினார். ஏராளமானவர்கள் எதிரில் வருவதைப் பார்த்து காலிக் கும்பல் திசைக்கொருவராய் சிதறி ஓடியது. ""நிறையப் பேரை கூட்டி வருகிறோம், ஒரு கை பார்த்து விடுகிறோம்'' என்று சொல்லிக் கொண்டே அந்தக் குண்டர்கள் ஓடினர். வழக்கம்போல் அவர்கள் காலிகளை வேடிக்கை பார்த்தனர்.மாநாட்டுப் பந்தலைக் கொளுத்திய கொடுங் கும்பல் ஆயுதங்கள், தீப்பந்தங்களுடன் பெரியார் தங்கியிருந்த மாளிகை நோக்கி வரலாயினர். கருஞ்சட்டைப் படை ஆவேசத்தோடு அணிவகுத்து நிற்க சம்பத், நெடுஞ்செழியன், இளம்வழுதி, மதியழகன், கருணாநந்தம், அரங்கண்ணல், அன்பில், மன்னை, கே.கே.என். ஆகியோரும் ஆவேசத்தோடு அங்கே குழுமினர். (தொடரும்)பெரும் முயற்சி வீணாயிற்றே என்ற கவலையோடு, பெரியார் அடுத்து நடக்கவேண்டிய பணிகளை ஆலோசித்துக் கொண்டிருந்தார். வெளியில் கலவர வெறிக் கூச்சல் கேட்டபடியிருந்தது. நிலைமையறிந்து காவல்துறையினர் மாளிகைமுன் குவிந்தனர். அவர்களையும் மீறிக்கொண்டு வெறித்தாண்டவத்துடன் காவல்துறையினரை அந்தக் கும்பல் நெருங்கி வரவே துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உத்தரவிடப்பட்டது. வேட்டுச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் சுருண்டு விழுந்தனர். காவல்துறையினர் துரத்தவே குண்டர்கள் ஓடி ஒளிந்தனர்.அப்போது அங்கு ராதாவும், காஞ்சி கல்யாணசுந்தரமும் சிறு படையுடன் வந்தனர். ராதா கையிலிருந்த துப்பாக்கியைக் காட்டியபடி, ""எவரும் நெருங்க முடியாது. சுட்டுப் பொசுக்கிடுவேன்'' என்று பலத்த குரல் கொடுத்தபடி வந்து சேர்ந்தார்.நள்ளிரவில் ஒரு வழியாக அமைதி திரும்பியது. காலையில் இருந்து உணவில்லாததால் பெரியார் உட்பட அனைவருக்கும் களைப்பு. எல்லோரும் அமைதியாக ஊர் திரும்புமாறு பெரியார் கேட்டுக் கொண்டார்.தமிழக முதலமைச்சராக இருந்தார் ஆந்திர கேசரி பிரகாசம். அவர் மதுரைச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், பெரியாருக்கு அனைத்துப் பாதுகாப்பும் கொடுக்கும்படி உத்தரவிட்டதாக மறுநாள் பத்திரிகையில் கல்வியமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியாரின் பேட்டி இடம் பெற்றிருந்தது.பெரியார் தமது குடும்பத்தார், தோழர்களுடன் ஈரோடு பயணமானார். எப்போதும் பெரியார் ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். ரயில்கள் முழுவதும் கறுப்புச் சட்டை வீரர்களே காணப்பட்டனர்.வீரகாவியம் படைத்த இந்த மதுரை மாநாட்டிற்கு எதிர்பாராத வகையில் அண்ணா வரவில்லை. திருச்சிவரை வந்து திரும்பி தஞ்சைக்குச் சென்று கே.ஆர்.ஆர். நாடக மன்றத்தில் தங்கிவிட்டார். இதனால் பெரியார் கோபமடைந்திருந்தார். அண்ணா வராதது சம்பத் உள்பட தோழர்களுக்கும் கடும் ஏமாற்றத்தைத் தந்தது. மதுரையிலிருந்தபடி, சம்பத் அண்ணாவைச் சந்திக்க கருணாநந்தத்துடன் தஞ்சை புறப்பட்டார்.தொகுத்து எழுதியவர்கள்: என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்
15
First Published : 27 Nov 2011 12:00:00 AM IST  சம்பத் நாம போட்டுக்கறதாலே ஒண்ணும் பிரச்சினை இல்லை. நாம ஐயாவோட ஒபிடியண்ட் ஸ்டூடன்ட்ஸ் ஆனா, கிராமத்திலே நம்ம ஆதரவாளர், மிட்டா மிராசுகள், சனாதனிகள் எதிர்ப்புக்கிடையே மறைமுகமாக ஆதரவாளராகச் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கறுப்புச்சட்டை போட்டால்தான் கழகத்தவர் என்றால், அவர்களை எதிரிகளுக்கு நாமே அடையாளம் காட்டுவதாக ஆகாதா? அவர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டுமல்லவா?''இப்படி அண்ணா அவர்கள் கறுப்புச்சட்டையைக் கட்டாயம் ஆக்கக்கூடாது என்பதற்கான விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.""இதனால்தான் மதுரை மாநாட்டிற்கு வரவில்லையா?''என்று சம்பத் கேட்டார். அதற்கு அண்ணா, ""மதுரையில் இவ்வளவு பயங்கரம் ஏற்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், அங்கே ஒரு காண்ட்ராவெர்சியை ஏற்படுத்த விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக என் உடல்நிலை இடந்தரவில்லை. இல்லையென்றால் இங்கே வாங்கிய திட்டை அங்கேயே வாங்கிக் கொண்டிருப்பேன்'' என்று அண்ணா மனம் திறந்து சொன்னார்.இந்தப் பிரச்னையை மனத் தராசில் சீர்தூக்கிப் பார்த்தார் சம்பத். அண்ணா சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.சம்பத் சுலோச்சனா திருமணம்:வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல வழக்கறிஞர் நீதிக்கட்சிப் பிரமுகர் சாமி நாயுடு. பெரியார், அண்ணா, சம்பத் முதலானோர் வடஆற்காடு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், திருப்பத்தூர் சாமி நாயுடு இல்லத்தில் தங்கி, உணவருந்தி, ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம்.சாமிநாயுடுவின் புதல்வி சுலோச்சனா சிறு வயதிலிருந்தே அவரது இல்லத்திற்கு வந்துபோகும் பெரியாரை நன்கறிவார். பெரியார் சிறுவர், சிறுமியரிடமும் வெகுவாக மரியாதைக் காட்டுவார். "வாங்க... ஆமாங்கோ' என்றெல்லாம் அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துவார். தவறு கண்டால் கோபமும் அதிகமாகவே வரும்.அவரது உரையாடல்களையெல்லாம் சிறுமியாக இருந்தபோதே அருகிலிருந்து கேட்டு, ரசிக்கின்ற வாய்ப்பு மாணவி சுலோச்சனாவுக்குக் கிடைத்தது. பெரியாரது உணவுப் பழக்கங்கள், எதை விரும்புவார், விரும்பமாட்டார் என்பதெல்லாம் அவருக்கு அப்போதே அத்துப்படி.பெரியார் பெண் பார்த்து சுலோச்சனா அவருக்கு மருமகளாகவில்லை. அவரோடு வந்த அவருடைய மகன் சம்பத், சுலோச்சனாவுக்கு அறிமுகமானார். அவர்களிருவரும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினர்.இந்த விருப்பத்தை பெரியாரிடம் எப்படித் தெரிவிப்பது என்று இருவருக்குமே அச்சமாக இருந்தது. இதனால் இருவரும் தங்கள் திருமண விருப்பத்தை முதலில் அண்ணாவிடம் தெரிவித்தனர். மகிழ்ச்சியோடு வரவேற்ற அண்ணா, ""நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சமயம் பார்த்துப் பெரியாரிடம் பேசி ஒப்புதல் பெற்றுவிடுகிறேன்'' என்று ஆறுதல் சொன்னார்.பெரியார் செல்லம் கொடுக்கக்கூடிய அளவிற்குக் கண்டிப்பும் உடையவர். எந்தச் சந்தர்ப்பத்திலும், யாரிடத்தும் தயவு தாட்சண்யமின்றித் தாம் நினைக்கிற விஷயத்தை முனை மழுங்காது அப்பட்டமாகப் பேசிவிடக்கூடியவர். ""மன்னிக்கணுங்க நீங்க செய்தது ரொம்ப பெரிய தப்பு, அயோக்கியத்தனமுங்க..'' என்று மரியாதை கலந்து கண்டிப்பில் கடுமை காட்டுவார்.பெரியார் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார் அதில் அவர் உறுதியாகவும் இருந்தார். பெரியாரின் தங்கையின் மகள் (மாப்பிள்ளை நாயக்கரின் திருமகளார்) எஸ்.ஆர். காந்தி. அவரைத்தான் சம்பத்துக்கு மணம் முடிப்பது என்று பெரியார் திட்டமிட்டிருந்தார். இத்துடன் தமக்கும், கட்சிக்கும் சம்பத்தை வாரிசாக்கிவிடுவது என்றும் பெரியார் எண்ணி இருந்தார். இதற்காக அவர் சட்டப்படி பதிவு செய்துவிட, ஈ.வெ.கி. சம்பத் பெயரில் பத்திரங்கள்கூட வாங்கி வைத்துவிட்டார்.சம்பத்தை தம் வாரிசாகத் தத்து எடுத்துக் கொள்வது. தமக்குப் பின் கட்சித் தலைமையை நிரந்தரமாக அவரிடம் அளித்துவிடுவது, தம் தங்கை மகள் எஸ்.ஆர். காந்தியை சம்பத்துக்கு மணம் முடித்து வைப்பது இந்த மூன்று திட்டங்களிலும் பெரியார் அழுத்தமாக இருந்தார்.முதலில் ஏற்பட்டது சம்பத்தின் திருமணப் பிரச்னை. தாம் காதலிக்கும் சுலோச்சனாவையே கரம் பிடிக்க சம்பத் உறுதியாக இருந்தார். இது கேட்டு பெரியார் சீறினார். கோபம் கொப்பளித்தது. ""நான் சொல்லுகிறபடி காந்தியைத் (அத்தை மகளை) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உனக்கு என் சொத்தில் கால் காசுகூட இல்லை. என்னை மறந்துவிடு'' என்று ஆவேசமாகப் பேசினார்.சம்பத்தைப் பொறுத்தவரை பெரியாரின் சொத்துகளுக்கு ஆசைப்பட்டவராகவோ, கட்சிக்கு வாரிசுரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணமோ இல்லாதவர். ஆகவே பெரியாரின் மிரட்டல் பற்றி அவர் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. ""சுலோச்சனாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.பெரியார் ஆத்திரவயப்பட்டவராக உறுமிக்கொண்டும் தடியால் தட்டிக்கொண்டும் இங்குமங்கும் நடந்தார். பெரியார் மாளிகையே பதற்றத்தில் இருந்தது. சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி இயல்பாகவே பொறுமைசாலி. அவரும் சம்பத்திடம் கோபமாகப் பேசினார். குடும்பத்தார் சமாதானப்படுத்தினர். இந்தப் பிரச்னை முடிவற்று நீடித்துக் கொண்டிருந்தது.ஈ.வெ. கிருஷ்ணசாமியின் கடிதத்தைப் பார்த்துவிட்டு காஞ்சியில் இருந்து அண்ணா ஈரோடு வந்தார். என்ன நடந்திருக்குமென்பது அண்ணாவுக்குத் தெரியும். அவரால் மட்டுமே பெரியாரைச் சமாதானப்படுத்தவும் முடியும். இதில் அவருக்கு தர்மசங்கடம். சம்பத்தைக் கெடுத்ததே அண்ணாத்துரைதான் என்பது பெரியாரின் பொருமல்.இதில் ஒரு நல்ல முடிவு காண்பது கடினம்தான். ஆனாலும் அண்ணாவுக்கு நம்பிக்கையிருக்கிறது. அவர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு பெரியாரிடம் இதைப்பற்றி பேசுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கறுப்புச்சட்டை போடாததால் அண்ணாவின் மீது பெரியாருக்கு கோபம். "குடந்தையில் குள்ளநரி' என்று பெரியார் கடுமையாகப் பேசியும் இருந்தார். இத்தனைக்கும் பிறகு அண்ணா தமது தம்பிக்காகப் பெரியாரைச் சமாதானப்படுத்த வேண்டிய சங்கடமான நிலை.அண்ணா மெத்த சிரமப்பட்டு பேசி சம்பத் } சுலோச்சனா திருமணத்திற்குப் பெரியாரின் சம்மதத்தையும், சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். சம்பத்தும் அவரது தோழர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.திருமண நிச்சய நிகழ்ச்சி:சம்பத் சுலோச்சனா திருமண நிச்சய நிகழ்ச்சி மணமகள் சுலோச்சனாவின் இல்லத்தில் நடந்தது; விருந்து பரிமாறப்பட்டது. அண்ணா, சம்பத், பொன்னம்பலனார், எஸ்.வி. லிங்கம், ஆனைமலை நரசிம்மன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி மற்றும் பலர் வரிசையாகப் பந்தியில் அமர்ந்தனர். அண்ணா மணமகளையே பரிமாறச் சொன்னார். மணமகள் பரிமாற முற்பட்டபோது அவரது தலையில் இருந்த ரோஜா மலர் சம்பத் இலையில் விழுந்தது. உடனே, அண்ணா மகிழ்ச்சி பொங்க, ""இது நல்ல அறிகுறி இதைப்போலவே என்றும் மணத்தோடு வாழ்க்கை அமைய வேண்டும்'' என்று சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.திருமண விழா:ஈ.வெ.கி. சம்பத் சுலோச்சனா வாழ்க்கை ஒப்பந்த விழா வடஆற்காடு திருப்பத்தூரில் ஏற்பாடாகியது. அண்ணா தம் மகன் திருமணம் போல், எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தார். திருமணப் பத்திரிகை அச்சிடப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்பட்டது. குடியரசு, விடுதலை, என்.வி. நடராசனின் திராவிடன், ஜலகண்டபுரம் கண்ணனின் பகுத்தறிவு ஆகிய ஏடுகளில் எல்லாம் சம்பத் சுலோச்சனா திருமண விளம்பரம் இடம் பெற்றிருந்தது.பதிவுத் திருமணம்அன்புடையீர்,15.9.46 (ஆவணி 30ஆம் நாள்) ஞாயிறு காலை 8.00 மணிக்குஎனது மகன் ஈ.வெ.கி. சம்பத், அவர்களுக்கும்திருப்பத்தூர் வழக்கறிஞர் திரு. ஜி.சாமி நாயுடு, பி.ஏ.பி.எல். அவர்கள் மகள் தோழியர் எஸ். சுலோச்சனா அவர்களுக்கும்,முன்னாள் அமைச்சர், வழக்கறிஞர் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் (வடஆற்காடு) மணமகள் இல்லத்தில் பதிவுத் திருமணம் நடைபெறும். அதிகாலை தாங்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.தங்களன்புள்ள,ஈ.வெ. கிருஷ்ணசாமிதங்கள் வரவை எதிர்பார்க்கும்:எஸ். ராமசாமி, ஈ.வெ. ராமசாமி,சி.என். அண்ணாதுரை, எஸ்.ஆர். சந்தானம்மணவிழா:பெரியார் இல்லத் திருமணத்தில் பங்கேற்க அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கழகப் பிரமுகர்களும், நண்பர்களும் திருப்பத்தூரில் திரண்டிருந்தனர். திருமண விழா நடைபெறுகிற மீனாட்சி தியேட்டர் களைகட்டியது. மேடையில் பெரியாரும், முக்கிய பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் மணமக்கள் அமர்ந்தனர். அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கரவொலி யெழுப்பினர். அனைவருக்கும் மணமக்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.மணவிழாவுக்கு, முன்னாள் அமைச்சர் வழக்கறிஞர் முத்தையா முதலியார் தலைமை வகித்தார். சேலம் கல்லூரிப் பேராசிரியர் ஏ. ராமசாமி முன்மொழிய, திருப்பத்தூர் வழக்கறிஞர் புலவர் பெரியசாமி வழிமொழிந்தார். தலைவர் முன்னுரையில், சம்பத்தின் குணநலன்களையும், அறிவாற்றலையும் புகழ்ந்து பேசியதோடு மணமகளின் தந்தையார் நீதிக்கட்சிப் பிரமுகர் சாமிநாயுடுவைப் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். பின்னர், மாவட்டப்பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்தார். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். வாழ்த்தொலி முழங்கியது.அஞ்சல் வழி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருந்தோரின் பெயர்களை மாணவத் தோழர் இரெ. இளம்வழுதி படித்தார். அடுத்து, ஜில்லா போர்டு தலைவர் டி. சண்முகம், க. அன்பழகன், ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசியபின் பெரியார் நீண்டதொரு வாழ்த்துரை வழங்கினார். அவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி:""அரசியல் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. இது சமுதாய சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய கூட்டம். இம்மாதிரிக் கூட்டங்களில் பெரும்பாலான மக்கள் பாட்டுக் கச்சேரி, புராணக் கதை, காலட்சேபம், நாட்டியம், நகைச்சுவை முதலியவற்றை வைத்து நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவார்கள் அல்லது கேளிக்கை ஆக்குவார்கள். அவற்றின் பயனாய் நேரம், பணம் வீணாவதல்லாமல் மக்களுக்கு யாதொரு பயனும் விளையாது. ஆனாலும், அப்படிப்பட்ட வீண் ஆடம்பரங்கள் மண வீட்டார் பெருமையில் சேர்ந்துவிட்டதால் அப்பயனற்ற காரியங்கள் பெரும்பாலான இடங்களில் செல்வாக்குப் பெற்றுவிட்டன. இங்கு நான் ஏதாவது பயனுள்ள பேச்சுப் பேச வேண்டும். பயனில்லா விடினும் சிந்தனைக்குரிய பேச்சாவது பேச வேண்டும் என்று இருக்கிறேன்.இத்திருமண முறை புதியதாயிருப்பதால் அதைப்பற்றி பேசுவது பொருத்தமானதாக இருக்கலாம் என்றாலும் நம்மவர் இடையில் அது இப்போது பழைய பேச்சாகிவிட்டது. இத்தகு திருமணமுறை தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறதென்றாலும் இதுபற்றி பேச வேறு அநேகர் இருக்கிறபடியாலும், இனியும் அதுவும் அப்பேர்ப்பட்ட அறிஞர் குழுவுக்கு நான் இதையே பேச வேண்டியது அவ்வளவு தேவை என்று கருதவில்லை''.(தொடரும்)
First Published : 04 Dec 2011 12:00:00 AM IST  சமுதாய மாற்றம்: ""நம் சமுதாயத் துறையில் மாற்றம் காணவேண்டிய எவ்வளவோ காரியங்கள் இருப்பதால் அவற்றில் ஏதாவது ஒன்றுபற்றிப் பேசலாம் என்று கருதுகிறேன். மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதுதான். மாற்றங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியதும் அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும். இத்திருமணத்தைப் பிரின்சிபால் இராமசாமிக் கவுண்டர் அவர்கள் திராவிடத் திருமணம் என்றார். ஆம், நாம் திராவிடர்தான். நமது திருமணம் திராவிடர் திருமணம்தான். ஆனால் இந்த முறையில்தான் திராவிடரின் பழங்காலத் திருமணம் நடந்ததென்றோ அல்லது இப்படியேதான் திராவிடரின் எதிர்காலத்திலும் திருமணங்கள் நடக்க வேண்டுமென்றோ நான் முடிவு கட்டவில்லை. இது திராவிடர் திருமணம் என்றாலும், நான் இதை 1946-ஆம் வருடத்திய (தற்கால நிலைக்கேற்ற) திருமணம் என்றும், இதுவே இன்று உலக மக்கள் திருமண முறையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லுகிறேன். ஆனால், இது மாறாமல் இப்படியே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கால மாற்றத்திற்கேற்ப நல்ல மாறுதல்கள் நிகழலாம். கால மாற்றம்: 1946-ஆம் வருடத்தியது என்று நான் சொன்னதால் 1956-க்கும் இப்படியே இருக்க வேண்டுமென்பது கருத்தல்ல. இந்த மாற்றம் நம் செüகரியத்தையும் அறிவையும் மனிதத் தன்மையையும், பொதுநலத்தையும் குறிக்கொண்ட மாற்றமாகும். இதனினும் மேலான நலனுக்கும் தெளிவுபட்ட அறிவுக்கும் ஏற்றபடி நாளைக்கோ 1956}ம் வருஷத்திலோ மாற்றம் ஏற்படலாம். அதைக் கூடாது என்று இந்த 46ஆம் ஆண்டு திருமண முறை சொல்லாது. 1921ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர்ட் மோட்டார் கார் முறை 1946-ல் இல்லை. இதுவும் 1947}ல் இருக்காது. மாற்றமடைந்தே தீரும். இம்மாற்றம் எல்லாம் அறிவின் சவுகரியம் பற்றியது. ஆனால், நமது திருமண முறையினுடைய மாற்றம் அறிவு சவுகரிய மாத்திரமில்லாமல் சமுதாய அமைப்பு, அரசியல் சட்டம், பொருளாதார உரிமை, சுத்த சுதந்திரம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதாதலால் அவற்றிற்கு ஏற்றவண்ணம் அது மாறுதலடைந்துதான் தீரும். திருமணம் தேவையா? ஒப்பந்தம் தேவையா? என்பதுகூடச் சிந்தனைக்கு உள்ளாகலாம். இனி வரப்போகிற காலம், ஆராய்ச்சி, என்று ஈடுபடுகிற பகுத்தறிவு, சகல துறையிலும் சம சுதந்திர வேட்கைக்காலமாக இருக்குமாதலால், அதை இந்த மூடநம்பிக்கை பெரிதுமாயும், பகுத்தறிவு சிறிதுமாயும் இருக்கிற காலத்தில் கட்டுப்படுத்துவது பயன்படாதென்றே கருதி அதை இத்துடன் விட்டுவிட்டு வேறு விஷயம் பற்றிப் பேசலாம் என்று கருதுகிறேன். பெண்ணுரிமை: அதாவது நம் பெண்கள் பற்றி பெண்மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர்களுக்குமாகச் சிறிது பேச அவாக் கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோருக்குள்ளும் மாற்று உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்றே, நம் சமுதாயத்தைப் போன்றே தாழ்த்தப்பட்ட அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் விமோசனம் இல்லை. ஆகையால் பெண்கள் பற்றிப் பேசுகிறேன். பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்து விடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுத்துவதற்கும் ஆணின் திருப்திக்கும் ஆணின் பெருமைக்கும் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப் பாருங்கள். ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி, ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வேலைக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை, ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப்புழக்கத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவற்றில் வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள். இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா? என்று கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே, எதனால்? கம்பியில்லாத் தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இக்காலத்திலும் துணியாலும் நகையாலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாவே இருப்பதா? என்று கேட்கிறேன். நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன், பெண்களுக்கும்கூட வெறுப்பாய், குறைவாய், சகிக்க முடியாதபடியுமாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இவ்வியாதி கடினமானது. நகை மாட்டும் ஸ்டாண்டு: இங்கு படித்த பெண், படிக்காத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவர்மார்களும் அவர்களது அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள். பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக இருக்கிறார்கள்(என்று சொல்லிக்கொண்டே தந்தை பெரியார் அவர்கள் மணமகளாரைப் பார்த்தார். அப்போது மணமகள் சுலோச்சனா, பெரியார் தமது விரலில் அணிந்துள்ள மோதிரத்தைச் சைகையின் மூலம் காட்டவே, குழுமியிருந்தோர் மத்தியில் "குபீர்'ச் சிரிப்பு ஏற்பட்டது. பெரியாரும் தமது மோதிரத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டார். பின்னர் பேச்சைத் தொடர்ந்தார்.) பெண்கள் பெருமை, வருணணை ஆகியவற்றில் பெண்கள் அங்கம், அவயம், சாயல் ஆகியவற்றைப்பற்றி ஐம்பது வரிகள் இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், திறமை பற்றி ஓர் ஐந்து வரிகள்கூட இருக்காது. பெண்கள் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்துக்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார்களா? என்று கேட்கிறேன். பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாது. ஏன்? என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா? என்பதுதான். அதற்கேற்ப நகை, அணி ஆகியவையே போதும். அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? வேறு எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது, கட்டினவனாவது சிந்திக்கிறார்களா? சிந்திப்பதில்லை. பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தன் மீது திருப்புவது இழிவு என்றும் அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் பெண்கள் எனப்படுவோர் போகப் பொருள்கள் என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது. நாம் நம் பெண்களை மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களானாலும் பல தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி, அவர்கள் கவனத்தை நம்மீது திருப்பும்படி அலங்கரிக்கிறோம். அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நம் பணம், உழைப்பு, நம் வாழ்க்கைப்பயன் முதலியவற்றைச் செலவழிக்கிறோம். இது ஏன்? எதற்காக? என்று சிந்திக்காததால் அதைத் தவிர வேறு காரியத்திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய் விட்டார்கள். ஒரு பீகம் அமிருதீன் அம்மையார் முஸ்லீம் கோஷா இனம். அவர்கள் எவ்வளவு தொண்டாற்றுகிறார்கள்? நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? என்று கேட்கிறேன். சம உரிமை: ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும். உறுதியாய் முடியுமென்பேன். ஆனால் நகைப் பைத்தியம், துணி அலங்காரப் பைத்தியம் அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை, இழிவு, சுயமரியாதை அற்ற தன்மை, பைத்தியம் ஒழிய வேண்டும். சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன், நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன? லட்சியம் என்ன?என்பதெல்லாவற்றையும் நம் குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல் தாங்களும் ஆக வேண்டுமே என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக்கொண்டு திரிவது, பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப் போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்'' பெரியார் சுமார் ஒன்றரை மணிநேரம் வாழ்த்துரை வழங்கி நீண்ட உரையாற்றினார். பெரியார் பேசியபின், காஞ்சிபுரம் ஏ.கே. தங்கவேல் (முதலியார்) வாழ்த்தினார். பின்னர் அண்ணா தமது தம்பிக்கு வாழ்த்துரைத்து முப்பது நிமிடங்கள் பேசினார். ஈ.வெ.கி. சம்பத் நன்றி கூறினார். மணவிழா இனிதே நிறைவேறியது. திருமணத்தில் அன்பளிப்புகள் தவிர்க்கப்பட்டன. குடியரசு (21.9.46) இதழில், ஈ.வெ. கிருஷ்ணசாமியின் நன்றியறிவிப்புச் செய்தி வெளிவந்தது. சம்பத் திருமணம் பற்றி அண்ணா ஈ.வெ.கி.சம்பத்-சுலோச்சனா திருமணம் பற்றி அண்ணா திராவிட நாடு 6.10.46 இதழில், தமது பெயரிடாமல் கீழ்க்கண்டவாறு எழுத்தோவியம் தீட்டி இருந்தார். ""மணமகள் சுலோச்சனா, திருமணப் பதிவு பத்திரத்திலே கையொப்பமிடக் குனிந்து நின்று கொண்டிருக்க, பக்கத்திலே நின்றுகொண்டு, குனியாமல் கண்களை மட்டும் பத்திரத்தில் கையொப்பமிடும் துணைவியின் கைவண்ணத்தைக் கவனிக்கும் விதத்தில், தம்பி சம்பத் நின்ற போஸ் இருக்கிறதே, "அண்ணா அது அழகாக அமைந்திருந்தது. படம்தான் யாரும் பிடிக்கவில்லை' என்றார் நண்பர் செழியன். அவர் முகஸ்துதியிலோ மிகைப்படுத்திப் பேசுவதிலோ, பழக்கப்பட்டவரல்ல. அவர் கூறினதை வேறு மொழியில் வேறு பலரும் கூறினர். பெண்ணும் பிள்ளையும் வெகு பொருத்தம் என்றனர். ஏன் இராது? பொருத்தம் பார்த்தது புரோகிதரல்ல. பெற்றோரும் அல்ல. "கண்ணொடு கண்ணிணை நோக்கின்' கதை அது. காதல் கலியாணம்''. பெரியார் மாளிகையில் தம்பதிகள் ஈரோடு பெரியார் மாளிகையில் ஈ.வெ.கி. சம்பத் சுலோச்சனா இணையரின் இல்லற வாழ்வு இனிதே தொடங்கியது. அதுப்பற்றி சுலோச்சனா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: ""நான் மருமகளாகப் பெரியார் அவர்கள் இல்லத்திற்குச் சென்றதும் முதலில் ஒன்றை முக்கியமாகப் புரிந்து கொண்டேன். அது பெரியார் அவர்களது இல்லம் தனிப்பட்ட குடும்பமாக மட்டும் இல்லை. தமிழகத்தில் எண்ணற்ற தோழர்களது வாழ்வையும், தாழ்வையும் அடக்கிய ஒரு பெரும் குடும்பமாகத் திகழ்ந்தது. கட்சிக்காரர்கள் நாள்தோறும் வந்த வண்ணமிருப்பார்கள். அவர்களை வரவேற்று உபசரிப்பது இல்லத்தாரின் மிக முக்கியப் பணியாக இருந்தது. இலைகள் போடுவதும், விருந்தோம்பலும் பெரியார் அவர்கள் இல்லத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும். இதில், எனது மாமியார், மறைந்த அன்னை நாகம்மையார் அவர்கள் அனைவராலும் மகிழ்ந்து போற்றப்பட்டவர். முகம் கோணாது அனைவரையும் வரவேற்று உபசரித்து மகிழ்வதில் அவருக்கு ஈடு இணை யாருமில்லை என்று இயக்கத்தவர் மேடைகளிலிலேயே புகழ்வர். அந்த உபசரிப்புப் பண்பை நான் வளர்த்துக் கொண்டு, அதில் எடுத்த எடுப்பிலேயே வெற்றி பெற்றேன். (இதிலேயே மாமனார் மெச்சும் மருமகள் என்ற பெயரும் எனக்குக் கிடைத்துவிட்டது.) குடும்ப விவகாரங்களில் மற்றபடி முழுச்சுதந்திரம் உண்டு. பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியார், தமது இல்லத்தில் பெண்களுக்கு அளவுக்கு அதிகமாகவே உரிமைகளும் சலுகைகளும் வழங்கினார். அந்த அளவுக்குக் கண்டிப்பும், ஒழுங்குமுறையும் இருக்கும். கொள்கைப் பிடிவாதமிக்கவர் தந்தை பெரியார். அவரை தாஜா செய்தோ, காக்கா பிடித்தோ கருத்துகளை மாற்றிவிட முடியாது. அவர் உள்ளத்திற்குச் சரி என்று பட்டதில் உறுதியாக நிற்பார். அதே நேரத்தில் சுதந்திரமாக விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்களுக்கு இடம் தருவார். தம் நிலையில் தவறு என்றால் உடனே திருத்திக்கொள்ளத் தவற மாட்டார். தந்தைக்கு உதவியாக இருந்தார் தனயன். பெரியார் இல்லத்து மருமகளாகிய பின் திராவிட இயக்கத்தைப் பற்றி மேலும் விளக்கமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதன் எண்ணற்ற தலைவர்களை அறிந்து கொள்கிற வாய்ப்பும் ஏற்பட்டது. நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்றார் புரட்சிக் கவிஞர். அப்படி அவர் புகழ்ந்த குடும்பத்தின் மருமகளாக எனது நற்பணிகள் தொடங்கின''. (தொடரும்) தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன். First Published : 11 Dec 2011 12:00:00 AM IST  பாசமுள்ள அண்ணன்ஈரோட்டுப் பெரியார் மாளிகையில் மூத்த மகனாக விளங்கியவர் அண்ணா. இறுதிக் காலத்திலும் அண்ணா, ""அந்தப் பெருமை ஒன்றுதான் எனக்கு நிலையானது, நிறைவானது'' என்று சொன்னார். குடியரசுப் பணியிலிருந்து விடுபட்டாலும் அண்ணா ஈரோடு வரத் தவறுவதில்லை, அதிலும் தம் தம்பி சம்பத்தை அவரால் ஒரு முழு வாரம் பிரிந்திருக்க முடியாது. சம்பத் குடும்பத்தாரிடமும் தனிப்பாசம் காட்டுவார் அண்ணா. ஈரோட்டு மாளிகையில் அண்ணாவும் சம்பத்தும் ஒன்றாகவே உண்பார்கள். இருவரும் ஒரே இலையில் உண்ட காட்சிகளும் உண்டு.சம்பத் - சுலோச்சனா திருமணம் முடிந்ததும் முதல் விருந்து, காஞ்சியில் அண்ணா இல்லத்தில். எது எது சம்பத்துக்குப் பிடிக்கும் என்பதை ராணி அம்மையார் ஆலோசித்து மணம் செய்து கொடுத்த தன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் விருந்து வைப்பது போல் பட்டாடை அளித்து விருந்திட்டு உபசரித்தார்.சம்பத் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தையோடு 10 நாட்கள் வந்து காஞ்சியில் தம்முடைய இல்லத்தில் தங்கியிருந்துவிட்டுச் செல்லலாம் என்று சம்பத் தம்பதிகளை அழைத்தார் அண்ணா. 10 நாட்களும் அண்ணாவும் சம்பத்தும் காஞ்சியிலேயே அகமகிழ்ந்திருந்தனர். சுலோச்சனாவை அழைத்து, தம் மகளிடம் கேட்பதுபோல், ""உனக்கு என்னென்ன வேண்டும், கேள் வாங்கித் தருகிறேன், எங்காவது சுற்றுலா செல்வதானாலும் சொல். எல்லோரும் போய்வருவோம்'' என்று கேட்டார். அதற்கு சுலோச்சனா, ""நான் சினிமா ஷுட்டிங் பார்க்க வேண்டும். இவரிடம் பலமுறை கேட்டும் மறுத்துவிட்டார்'' என்றார்.இதனைக் கேட்டதும் அண்ணா, ""அது என்ன பெரிய விஷயம், இன்றே மெட்ராஸ் போகலாம்'' என்று சம்பத் தம்பதிகளை அழைத்துக்கொண்டு நெப்டியூன் ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டார். அன்று எம்.வி. ராஜம்மா, பந்துலு முதலான கலைஞர்களின் படப்பிடிப்பு. அரை மணி நேரத்திற்கெல்லாம் திருமதி சம்பத், போரடிக்கிறது போகலாம் என்றார். அதற்கு அண்ணா, ""இவ்வளவு கஷ்டப்படுகிறாயே, நடிக நடிகயைர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்'' என்றார். நட்சத்திரங்களை அறிமுகம் செய்துவைத்தார்.... இப்படி எத்தனையோ சொல்லலாம். அண்ணாவின் பாசமிகு நிகழ்ச்சிகள் ஏராளம், ஏராளம்.கறுப்புச் சட்டை பற்றிய சர்ச்சை""கழகத்தின் ஒரு பிரிவாகத் தீவிரப் பணிக்கென்று அமைக்கப்பட்டுள்ள தொண்டர் படையினர் மட்டுமே கறுப்புச் சட்டையை அணிய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்'' என்று வாதிட்டார் அண்ணா. பிடிவாதத்திற்குப் பெயர் பெற்ற பெரியார், தாம் சொன்னது சொன்னதுதான் என்று அழுத்தமாகவே கூறிவிட்டார்.கறுப்புச் சட்டையைத் தொண்டர் படையோடு வைத்துக் கொள்ளலாம் மற்றவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை என்று, கறுப்புச்சட்டைப் படையின் அமைப்பாளர் சம்பத் பெரியாரிடம் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.பெரியாரோடு மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அண்ணாவோ, சம்பத்தோ தலைமையை மீறி நடக்கவில்லை. தம்முடைய கருத்துகளைத் தெரிவித்தோம் என்னும் அளவில் நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் சிலர் பகைமையை ஊதிப் பெரிதாக்க முயன்றனர்.ஆனாலும் சம்பத்தைப் பெரியார் தம் வாரிசாக ஏற்கத் தயக்கம் காட்டுகிறார் என்பது கட்சிக்குள் சில பேர்வழிகளுக்கு ஆனந்தத்தை அளித்தது. அவர்களது நோக்கமெல்லாம் பெரியாருக்கு அடுத்த தலைவராக வளருகின்ற அண்ணாவை அவரிடமிருந்து பிரித்துவிட வேண்டும். சம்பத்தை ஆத்திரப்படுத்தி பெரியார் குடும்பத்திலிருந்து வெளியேறச் செய்துவிட வேண்டும் என்னும் சதித் திட்டத்தோடு பெரியார் மாளிகையிலேயே ஒரு சுயநலக் கும்பல் மறைமுக வேலைகளில் ஈடுபட்டிருந்தது.அந்தச் சூழ்ச்சிக்காரர்கள் அடுத்து அண்ணாவைச் சந்திக்கிறபோது, ""அண்ணா, உங்கள் படிப்பென்ன, அறிவாற்றலென்ன, ஓடாய் உழைத்தும் உங்களை அய்யா எவ்வளவு அலட்சியப்படுத்துகிறார் பாருங்கள்....'' என்று அவரிடமும் தூபம் போடுவார்கள். சம்பத்திடம் சென்று, ""நீதானே எல்லாம் உனக்கு உரிய மதிப்பிருக்கிறதா? அவரே சர்வாதிகாரம் செய்கிறார், இளைஞர்களை அமுக்குகிறார்....'' என்று அவரையும் திறமையாக உசுப்பி விடுவார்கள்.மாணவர் இயக்கம் பற்றியும் பெரியாரிடம் வெறுப்பு ஏற்படுத்திவிட்டார்கள். வால்டேர் ரூசோ பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். பெரியாரை மறைக்கிறார்கள். சினிமா, டிராமா என்று இயக்கத்தை எங்கேயோ கடத்திப் போகிறார்கள் என்றெல்லாம் அந்தச் சுயநலமிகள் வாதம் செய்தனர்.இப்படிச் சில சுயநலமிகளின் குழப்ப வேலை ஆரம்பமாயிற்று. அவர்கள் போட்ட தூபம் புகைப்படலங்களை எழுப்பியது. அது கொழுந்துவிட்டு எரியவிட வேண்டுமென்று பகைவர்களும் தீயவர்களும் துடித்தனர்.விளைவு.... பெரியார் அண்ணாவிடம் வைத்திருந்த பாசப் பிணைப்பு கொஞ்சங் கொஞ்சமாக தளரலாயிற்று. அண்ணாவும் அவருடைய இயல்புக்கேற்ப முட்டிமோதி நியாயம் பெற முயலவில்லை."கறுப்புச்சட்டை போடாமல் மேடைக்கு வந்தால் தடுப்போம்' என்று கூடச் சில தீவிரவாதிகள் பேசிக் கொண்டனர். அண்ணா ஒரு முடிவுக்கு வந்தார். பெரியார் உணர்கிறவரை நாம் சற்று ஒதுங்கி இயக்கத்திலேயே வேறு சில பணிகளை.... இலக்கியப் பணி.... கல்லூரிகளில் சொற்பொழிவு, கலைப்பணி என்று இயக்கத்திற்கு ஆற்றவேண்டிய பணிகளை ஏதாவதொரு வடிவத்தில் முனைப்போடு நடத்திக் கொண்டிருப்பது என்று முடிவு செய்து கொண்டார்.திராவிட நாடு இதழில் வழக்கம் போல் அண்ணாவின் கட்டுரைகள் பெரியாரைச் சிறப்பித்து, மேலும் மிடுக்கோடு வெளிவந்து கொண்டிருந்தன. விடுதலை நிர்வாகப் பணியோடு, மாணவர் இயக்கப் பணிகளையும் கறுப்புச்சட்டை படை இயக்கத்தையும் சம்பத் எப்போதும் போல் விறுவிறுப்போடு நடத்திக் கொண்டிருந்தார்.கறுப்புச்சட்டை விவகாரத்தால் அண்ணா பொதுக்கூட்டங்களைத் தவிர்த்தார். இதனால் திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடைகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. இந்தக் குறை சிறிது சிறிதாக உணரப்பட்டுவந்தது.தமது அடுத்த பணியாக பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் பணியில் அண்ணா தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். இதற்காக அமைத்த தமிழறிஞர்கள் குழுவில் சம்பத்தும் இடம் பெற்றார். தம்மைக் கலந்து இந்த ஏற்பாட்டினைச் செய்யவில்லை என்னும் ஆதங்கம் பெரியாருக்கு இருந்தது. வருவோர், போவோரிடம் அது எதிரொலித்தது.சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழ் நடத்திய கழக ஆதரவாளர் செல்வாக்கு மிக்க சாரங்கபாணி. அவர் தமிழகம் வந்து, பெரியாரைச் சந்தித்தபோது பாரதிதாசனுக்கு நிதியளிக்க மலேயா, சிங்கப்பூர் தமிழர்களும் ஆர்வம் காட்டுவதாகச் சொன்னார். அவ்வளவுதான், பெரியாருக்குக் கோபம் கொப்பளித்தது. ""கட்சி என்பதையே நினைக்காமல் அவனவன் இஷ்டத்திற்கு விளையாடுறானுங்க'' என்று நொந்த உள்ளத்தோடு கூறினார். ""பாரதிதாசனுக்கு என்ன வந்தது இரண்டுப் பாட்டுப் பாடிவிட்டால் புலவர்.அவருக்கெல்லாம் பணமுடிப்பு. யாரை கேட்டுக்கிட்டு அண்ணாதுரை இப்படியெல்லாம் செய்யுறாரு?'' என்றும் தம் வேதனையை வெளிப்படுத்தினார் பெரியார்.குடந்தையிலே தொடங்கிய குள்ளநரிப் பசங்க ஏச்சுக்குப் பிறகு இருந்த பாரதிதாசன் நிதி விவகாரத்திலேயும் பெரியாரின் மனத்தில் எரிச்சல் வெளிப்பட்டது.பாரதிதாசனுக்குப் பொற்கிழிசென்னை பச்சையப்பன் கல்லூரித் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. இந்த விழாவிற்கு வந்தவர்களுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. அண்ணா அன்று பட்டுச் சட்டை அணிந்து மேடையில் தோன்றினார். எப்போதும் சாதாரண கசங்கிய சட்டை அணிந்து மேடையில் தோன்றுவார். அந்த அண்ணா பட்டுச் சட்டை அணிந்து உற்சாகமாகக் காணப்பட்டார். அவருடைய உரையின் தொடக்கத்தில் அவரே இது பற்றிக் குறிப்பிட்டார்.....""இந்தத் தோற்றத்திலே என்னைக் காண்பவர்களுக்கு அண்ணாத்துரை என்ன மாறிவிட்டான் போலிருக்கிறதே என்று எண்ணத்தோன்றும். நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் பளபளக்கும் பட்டுச்சட்டை போட்டுக் கொண்டிருந்தேன். அது என் திருமணத்தின்போது... அதற்குப் பிறகு இன்றுதான். என் வாழ்க்கையில் இரண்டாவது முறையாகப் பட்டுச் சொக்காய் அணிந்திருக்கிறேன். ஏனெனில், எப்படி என் திருமண நாள் என் வாழ்க்கையில் முக்கியமானதோ எந்த அளவுக்கு மகிழ்ச்சியையும் பூரிப்பையும் அளித்ததோ அதே போன்ற உணர்வையும் பெருமையையும் இன்று நான் பெறுகிறேன்.''ச.சோமசுந்தரபாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த இனிய விழாவில் அண்ணா, பாரதிதாசனுக்குப் பொன்னாடை போர்த்தி ரூ.25,000 கொண்ட பொற்கிழியை வழங்கினார். பலத்த கரவொலியும் வாழ்த்து முழக்கமும் விண்ணைப் பிளந்தன. கட்சி வேறுபாடின்றித் தமிழகத் தலைவர்களும் இலக்கிய மேதைகளும் பாரதிதாசன் மீது வாழ்த்து மலர் சொரிந்தனர்.இவ்விழாவில் நிதிக் குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துப் பேசிய ஈ.வெ.கி. சம்பத் தமது உரையில் குறிப்பிட்டதாவது: ""சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே. தம்முடைய கவிதைகள் காகிதத்தால் மூட்டும் நெருப்பு என்றும் சுப்பு ரத்தினம் வரிகள் சுள்ளியில் மூட்டும் நெருப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறார். புதியதோர் உலகு செய்வோம் என்று பாடிய புதுமைக் கவிஞர் "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே' என்று கனல் தெறிக்கப் பாடியவர். அத்தகைய புரட்சிக் கவிஞரின் தமிழுக்குத் தமிழர்கள் அங்கீகாரம் வழங்கிடும் விழா இது. இந்த விழா பல பேருக்கு எரிச்சலைத் தரலாம். இதனைப் பலர் இருட்டடிப்புச் செய்யலாம். ஆனால் முகிலைக் கிழித்து வரும் முழுமதி போல் புரட்சிக் கவிஞரின் புகழ் விளங்கிக் கொண்டிருக்கிறது. எங்களாலும் நிதி திரட்டி அளிக்க முடியும் என்னும் ஆற்றலை அண்ணா மெய்ப்படுத்தி இருக்கிறார். இயக்கப் பெரியவர்களை, இயக்கத்திற்காகத் தங்களைத் தத்தம் செய்து கொண்டிருப்போரைத் தமிழ்ச் சமுதாயம் உதாசீனம் செய்து விடாது என உணர்த்துகிற முதல் விழா இது...'' என்று சம்பத் உணர்ச்சி பொங்க குறிப்பிட்ட போது பலத்த கரவொலி எழுந்தது.பாரதிதாசன் கவிதை வரிகளை மேடைகளில் தமது உரை நெடுகிலும் உணர்ச்சி பொங்கக் குறிப்பிடும் இளந்தாடி வீரர் நெடுஞ்செழியனும் இவ்விழாவில் உரையாற்றினார். அண்ணாவின் நன் முயற்சியை அனைவரும் பாராட்டினர். பாரதிதாசன் மன நெகிழ்ச்சியோடு நன்றியுரையாற்றினார்.ஆகஸ்ட் 15 கருத்து வேறுபாடு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியாகப் பிரித்துத் தரப்பட்டது. நாடு முழுவதும் விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்கள் எழுச்சியோடு நடத்தப்பட்டன. ஆனால் பெரியார் ஆகஸ்ட் 15}ஆம் நாள் திராவிடருக்குத் துக்க நாள் என்று அறிவித்தார். ""வெள்ளையன் வெளியேறினாலும் வட நாட்டுக் கொள்ளையன் நம்மீது ஏறிச் சவாரி செய்கிறானே'' என்றார்.பெரியாரின் கூற்றை மறுத்த அண்ணா, ஆகஸ்டு 15}ஆம் நாள் இன்ப நாள் என்று அறிக்கை விட்டார். ""இரண்டு பேர் நம்மீது சவாரி செய்தார்கள். ஒருவன் ஒழிந்ததில் பாதிச் சுமை குறைந்தது அல்லவா? அதனால் ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாள்'' என்று அண்ணா குறிப்பிட்டார். கழகம் இரு அணிகளாகிக் கருத்து மோதல்கள் நடந்தன.கறுப்புச் சட்டைக் கருத்து வேறுபாடு, பாரதிதாசன் நிதி விவகாரம் ஆகியவற்றோடு ஆகஸ்டு 15 கருத்து மோதலும் சேர்ந்து இயக்கத்தில் புதிய விரிசலை ஏற்படுத்திவிட்டது. பெரியாரும் அண்ணாவும் அறிக்கைப் போர் புரிந்தனர்.""தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான் சமூகச் சீர்திருத்தம், பொருளாதாரச் சமத்துவம், திராவிடத் தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன்....'' என்று அண்ணா அறிக்கையில் குறிப்பிட்டார். சம்பத் அண்ணாவின் கருத்தை ஆதரித்தார்.இவ்வறிக்கைப் போரினைத் தொடர்ந்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல்களைப் பெரிதுபடுத்திக் கட்சியில் இருந்த சூதுமதியினர் சமயமறிந்து சாமர்த்தியமாகச் செயல்பட்டனர். அண்ணாவின் மீது பல அவதூறுகளைக் கிளப்பிவிட்டு அவர் மனம் புண்படச் செய்தனர். அதன் காரணமாக அண்ணா அடுத்து நடந்த தூத்துக்குடி மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.தூத்துக்குடி மாநாடு கே.வி.கே. சாமியின் தீவிர முயற்சியால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் ஊர்வலத்தில் குதிரைகள் மீது கருஞ்சட்டைத் தொண்டர்கள் கொடியேந்தி அணிவகுத்து வர அடுத்து கறுப்புப் புடவையணிந்த மகளிர் அணிவகுப்பும் அதனைத் தொடர்ந்து திரளான கருஞ்சட்டை படை வீரர்களும் பவனி வந்ததைப் பார்த்து பெரியார் பூரித்துப் போனார். மாநாட்டில் பாராட்டுரை வழங்கிய பெரியார், ""நாம் வாங்கப் போகிற திராவிட நாட்டில் கே.வி.கே. சாமிதான் கவர்னர் ஜெனரல்'' என்று சொன்னதுமே பலத்த கரவொலி எழுந்தது.மாநாட்டு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தும் அண்ணாவும் அவர் தோழர்களும் வராதது மக்களுக்குப் பெரும் குறையாகக் காணப்பட்டது.இரண்டு முக்கிய மாநாடுகளிலும் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணாவை ஆதரித்துச் சம்பத்தும் பங்கேற்கவில்லை. அண்ணாவும் அவரது அணியினரும் பங்கேற்காததை மாநாடு கண்டோர் பெருங்குறையாகவே கருதினர்.ஆகஸ்டு அறிக்கைக்குப் பிறகு அண்ணா கழகப் பணியில் ஈடுபடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். எழுத்தாளர் மாநாடு, இலக்கிய கூட்டங்கள், கொள்கைப் பரப்பு நாடகங்கள், திரைப்படத்துறை என்று அண்ணா பணிகளை அமைத்துக் கொண்டார். தம்பி சம்பத்தை விடுதலை நிர்வாகம், மற்றும் தொண்டர்படை தொடர்பான பணிகளை விடாது நிறைவேற்றி வருமாறு அண்ணா கேட்டுக் கொண்டார்.(தொடரும்)
19 20
First Published : 01 Jan 2012 12:00:00 AM IST  சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, காகஸ்சேரிப் பகுதியில் ஒரு பழைய கட்டடத்தில் சிறு அச்சக வசதியுடன் விடுதலை நாளிதழ் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் மேலாளர் ஈ.வெ.கி. சம்பத். காசாளர் கே. கோவிந்தசாமி. நிர்வாகப் பகுதியில் அ. திராவிட மணி, ஏ.கே. சாமி, மு. சண்முகம், பெரம்பூர் தங்கரூபன், எம்.எஸ். முத்து (சத்திய வாணி முத்துவின் கணவர்) போன்ற நண்பர்கள் பணியாற்றினர்.ஆசிரியர் குத்தூசி குருசாமி. துணை ஆசிரியர்கள் இராம. அரங்கண்ணல், பு.கணேசன். பிழை திருத்துபவர் எம்.எஸ்.மணி. போர்மன் தில்லை கோவிந்தன் பொறுப்பில் அச்சகப் பகுதி. நகர விற்பனையாளர் கோபால். இப்படி சிக்கனமாக ஒரு நாளிதழ் வந்து கொண்டிருந்தது.அதே பகுதியில் மீரான் சாகிப் தெருவில் பெரியாருக்குச் சொந்தமான ஒரு கட்டடம். சென்னை வந்தால் அங்கே தங்குவார். சம்பத்தும் அங்கேதான் தங்குவார்.பெரியார் ஒரு நாள் ரிக்ஷாவில் விடுதலை அலுவலகத்துக்கு வந்து பரபரப்போடு இறங்கினார்.""நல்ல காபி வாங்கி வையுங்கள். ஒரு நல்ல நாற்காலி கொண்டு வந்து போடுங்கள். எப்போது வருவாரோ தெரியவில்லை. வந்ததும் சொல்லுங்கள்'' என்று ஒரே பரபரப்பு.யாரையும் வரவேற்பது என்றால் அய்யாவுக்குத் தனி மகிழ்ச்சி. மரியாதை காட்டுவதிலும் அவருக்கு இணை அவரே.""யார் அய்யா வர்றாங்க?'' என்று அரங்கண்ணல் கேட்க, ""ஒரு எம்.எல்.ஏ. என்னைப் பார்க்கிறதுக்கு வர்ராருங்க'' என்றார்.அப்போதெல்லாம் எம்.எல்.ஏ., மேயர் என்றாலே பெரிய பதவிகள். அப்படிப்பட்ட பதவிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம்.ஒரு டாக்சி வந்து நின்றது. எம்.எல்.ஏ. வந்து இறங்கினார். பழுத்த பழமான பெரியார் தம் உடம்பைத் தூக்கிக் கெண்டு எழுந்ததோடு எதிர்கொண்டு வரவேற்றார். அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே வியப்பு.எம்.எல்.ஏ.வை கனிவோடு அழைத்து வந்து, அவர் உட்கார்ந்த பிறகுதான் அய்யா உட்காருகிறார். தடபுடல் உபசரிப்பு... இத்தனைக்கும் அவர் வேறு யாருமல்ல. கழகத்தோடு தொடர்புள்ள அரவக்குறிச்சி ரத்தினம்தான்.என்ன இருந்தாலும் எம்.எல்.ஏ. அல்லவா? விடுதலை அலுவலகத்தில் பெரியார் கவனம் செலுத்துமிடம் முதலில் நிர்வாகப் பகுதி. சம்பத்தோடு பல விஷயங்களை விவாதிப்பார். கோவிந்தசாமியிடம் கணக்கு வழக்குகளை கேட்டுக் கொள்வார். கே.கோவிந்தசாமி ஓரளவு வசதியுள்ளவர். தமக்காக எதையும் எதிர்பார்க்க மாட்டார். கணக்கு வழக்குகளில் கறாராக இருப்பார், நல்ல உள்ளமும் கொள்கைப்பிடிப்பும் உள்ள பெரிய மனிதர்.ஒரு முறை அழகிரிசாமி விடுதலை அலுவலகத்திற்கு வந்து அய்யாவிடம், சென்னைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஊருக்கு போகப் பணம் வேண்டுமென்றும் கேட்டார். ""விஷயம் தெரிந்தது தானே? பணம் இல்லாம ஏன் வந்தீங்க? கூட்டம் நடத்தறவங்க கொடுத்த காசை என்ன பண்ணினீங்க?'' என்றெல்லாம் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.விபரம் அறிந்த காசாளர் கோவிந்தசாமி அழகிரியைத் தனியே அழைத்து, ரூ. 40 தம் கணக்கில் கொடுத்து அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதர் கே. கோவிந்தசாமி. சிறிது நேரத்தில் அங்கு வந்த சி.பி. சிற்றரசு அய்யாவிடம் மாட்டிக் கொண்டார்.ஓர் ஊருக்கு கூட்டத்திற்கு வருவதாக மணியார்டர் வாங்கிக் கொண்டு போகவில்லை. அது பற்றிய புகார்க் கடிதம் பெரியாரின் மேசைமேல் இருந்தது. வாக்கு நாணயத்தில் அய்யா கெடுபிடியாக இருப்பார். மறுபடியும் அந்த ஊரில் கூட்டம் பேசிவிட்டுதான் என்னைப் பார்க்க வேண்டுமென்று சிற்றரசுவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.பெரியார் விடுதலைக்குத் தலையங்கம் தீட்டுவார். அவருடைய கையெழுத்தை எல்லோராலும் படித்துவிட முடியாது. நெட்டெழுத்தில் அமைந்திருக்கும். அச்சுக் கோப்பவர்கள் எளிதில் அறிவார்கள். முதலில் எழுதிய விஷயத்தைவிட அதிகமான விஷயங்களை மெய்ப்பு படிக்கிறபோது அய்யா சேர்த்துவிடுவார்.டெலிபிரிண்டர் குளோப் போன்ற செய்தி நிறுவன எந்திரங்கள் வாங்கி வைத்து கட்சிச் செய்திகளோடு மற்ற முக்கியச் செய்திகளையும் வெளியிட வேண்டும் என்பது சம்பத் விருப்பம். அது தண்டச் செலவு என்பது பெரியாரின் கருத்து. கழகச் செய்திகள், பேச்சுகள் வெளிவந்தால் போதுமென்பார். இதற்குக் கூட யாருடைய படத்தையும் ப்ளாக் செய்து போட அனுமதியில்லை.சிக்கனத்திற்காக மட்டுமல்ல. ஆடம்பரம் கூடாதென்பார் பெரியார். கொலையுண்ட கழகத் தோழரின் செய்தியோடு படம் வந்தால் நன்றாக இருக்குமென்று அரங்கண்ணல் சொல்வார். ""ஒரு பழைய ப்ளாக்கைத் தேய்த்து விட்டு வெளியிட்டால் அதில் யார் என்பதே தெரியப் போவதில்லை. ப்ளாக் போட்டதில் திருப்திதானே?'' என்பார் பெரியார்.அதற்கு முதல் நாள் அண்ணாவின் பேச்சு, என்.வி.என்னால் எழுதப்பட்டு முழுப்பேச்சு விடுதலையில் வந்தது. இதில் அரங்கண்ணல் ஆர்வம் மிகுதியாகி காஞ்சி மணி மொழியாரின் போர்வாள் அலுவலகத்தில் அண்ணாவின் ப்ளாக்கை இரவல் வாங்கி விடுதலையில் வந்த பேச்சுப் பகுதியில் படத்தைப் போட்டுவிட்டார்.அன்று அய்யாவிடம் அரங்கண்ணல் ஏதோ கேட்க, பெரியாருக்கு நேற்று விடுதலையில் வெளிவந்த படம் நினைவுக்கு வந்து ஒரே சீற்றம். அய்யாவுக்கு ரொம்ப கோபம் வந்து விட்டால் தாமே "உம், உம்' என்று முனகுவார். ""காசு கொடுத்து வாங்கலே ஐயா. ஓசியில் வாங்கிப் போட்டேன்'' என்று அரங்கண்ணல் சொன்ன பிறகு சமாதானம் அடைந்தார்.சிங்களக் குயில் என அழைக்கப்பட்ட தவமணி தேவி என்னும் ஒரு பிரபல கவர்ச்சிக் கலைஞர் அக்காலத்தில் பிரபலமாயிருந்தார். ஒரு நாள் அந்தப் பெண்மணி பெரியாரைப் பார்க்க விடுதலை அலுவலகத்திற்கு வந்துவிட்டார். நடிகை என்பதால் அவரைப் பார்க்க வெளியில் ஒரே கூட்டம். எல்லோரையும் வரவேற்பது போல் ஐயா அவரையும் மிகுந்த மரியாதையோடு வரவேற்றார்.அந்தக் கலைஞர் எதற்காகத் தம்மைத் தேடி வந்தார் என்பது ஐயாவுக்குப் புரியவில்லை. அனைவரும் வியப்போடு பார்த்தனர். தாம் சிலோனில் இருந்து வந்த சினிமா படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அய்யாவின் பேச்சு, கட்சிக் கொள்கைகள் ரொம்பவும் பிடித்தமாக இருப்பதாகவும் அந்த நடிகை பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.அய்யாவும் மிகுந்த ஆர்வத்தோடு, ""சொல்லுங்கம்மா'' என்று கேட்டுக் கொண்டிருந்தார். ""அடுத்த வாரம் பிராட்வேயில் திருவள்ளுவர் மாநாடு நடக்குதுங்க. நீங்க வந்து கலந்துக்குங்க'' என்று கூறியதோடு வாயில் வரையும் வந்து வழி அனுப்பி வைத்தார். சம்பத் உள்பட அனைவருக்கும் ஒரு சினிமாக் கலைஞர், அதுவும் பெண் கலைஞர் நமது அலுவலகத்தைத் தேடி வந்ததில் ஒரே வியப்பு.அய்யா இருக்கையில் வந்து அமர்ந்ததும், ""அப்பாடி எவ்வளவு பெரிய காரு... படகு மாதிரி வச்சிருக்காங்க அந்தம்மா'' என்று தம்முடைய வியப்பைத் தெரிவித்தார்.அலுவகத்திலேயே அரங்கண்ணல் சினிமா விஷயத்தில் ஆர்வம் மிகுந்தவர். ஆகவே வந்த பெண்மணியைப் பற்றித்தான் அறிந்து வைத்ததையெல்லாம் விளக்கமாகவே எடுத்து விட்டார்.""நீங்க என்ன வேணா சொல்லுங்க. நடிகைங்கண்ணா அப்படித்தான் இருப்பாங்க. எப்படி இருந்தாலும் அவங்களுக்கு என் கொள்கையிலே ஒரு ஆசை வந்த மாதிரி வேற எந்த நடிகைக்கு வந்திருக்கு?'' என்றார் அய்யா.மறுவாரம் நடந்த திருக்குறள் மாநாட்டு மேடையில் தவமணி தேவியும் தவறாது இடம் பெற்றிருந்தார். அன்றிரவு நடந்த அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் சம்பத் நடிக்கவில்லை. பெரியார் இருந்ததால் சட்டக் கல்லூரி மாணவர் இரெ. இளம்வழுதி சிவாஜியாக நடித்தார்.இந்தி எதிர்ப்பு அறப்போர் மறியல் தொண்டர்களுக்காக வாங்கிப் போட்டிருந்த காய்கறிகளில் மீதியானவற்றை சமையலுக்காக அய்யா மீரான் சாகிப் தெரு இல்லத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.அதை மணியம்மை சமையல் செய்ய அண்ணா உட்பட பிரமுகர்கள் உணவருந்தினர். அன்று மாலை சினிமாவுக்குப் போகலாம் என்று அண்ணாவும் சம்பத்தும் வெளியே புறப்பட்டனர். எதிர் வந்த அரங்கண்ணலையும் சேர்த்துக் கொண்டனர். மூவரும் வெளியே கிளம்புவதை தமது அறையிலிருந்தபடி அய்யா பார்த்துவிட்டார்.""எங்கே போறீங்க...?'' என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வந்தார்.""வெளியே போய் காபி சாப்பிட்டு வரலாம்னுய்யா'' சம்பத் சொன்னார்.""எங்கே காப்பி நல்லா இருக்கும்...?'' பெரியார் கேட்டார்.""பக்கத்துல இந்தியா காப்பி ஹவுஸýன்னு இருக்கு. அங்கேதான்'' சம்பத் கூறினார்.""அப்ப உங்களோட நானும் வர்ரேன்'' என்று சொல்லிக் கொண்டே அய்யாவும் புறப்பட்டு விட்டார். மூவருக்கும் திகைப்பு, வியப்பு. சினிமாவுக்குப் போகிற விஷயம் கெட்டுவிடுமே என்னும் சஞ்சலம், அய்யாவும் விடுவதாய் இல்லை.""வாங்க... நடங்க... போவோம்....'' என்று அவர்களோடு மீரான் சாகிப் தெருவில் இருந்து தடியை ஊன்றிக் கொண்டு அய்யாவும் நடந்து போவதைத் தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இந்தியா காப்பி ஹவுசிலிருந்தவர்களுக்கும் பெரியாரைப் பார்த்ததும் அதிர்ச்சி, வியப்பு.வழக்கமாக முந்திரிப் பருப்பு, சமூசா, ஆம்லேட் என்று அண்ணாவோடு விரும்பிச் சாப்பிடும் சம்பத்துக்கு அய்யாவின் சிக்கனம் இடையூறு. ""காப்பி போதுமய்யா'' என்றார் அண்ணா.""வெறும் காப்பிக்கா இவ்வளவு நடந்தோம். என்னா வேணும்னாலும் சாப்பிடுங்க'' என்றார் அய்யா.பதினெட்டு ரூபாய்க்கு பில் வந்தது. என்னவோ தெரிய வில்லை. அன்று அய்யா முகம் சுளிக்கவில்லை. ""கொள்ளை அடிக்கறானுங்க... மோசங்க... முந்திரிப் பருப்பு மூணு ரூபாயா?'' என்று முணுமுணுத்துக் கொண்டே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.அந்தப் பாசம் மிகுந்த நிகழ்ச்சியை, அய்யா ஒரு குழந்தையைப் போல் குதித்துக் கொண்டு நடந்தே வந்து உபசரித்ததை அண்ணா அடிக்கடி உருக்கமாக நினைவு கூர்வதுண்டு.முதல் சிறைவாசம்கருப்புச்சட்டைப் படைக்குத் தடை விதித்ததைக் கண்டித்து 7.3.48 இல் சென்னை பெரியமேட்டுத் திராவிடர் கழக முதல் மாநாடு வி.கே. சுப்பராயலு தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பெரியார், அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், ஆரிய சங்கரன், டி.பி. வேதாசலம் ஆகியோர் உரையாற்றினர்.இம்மாநாட்டில் பேசிய சம்பத், கழகம் மிக நெருக்கடி யானதோர் கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தோழர்கள் அனைவரும் பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை நெருங்கிக் கொண்டிருப்பதாக பெரியார் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தார். இதனையொட்டி 22.8.48 இல் சென்னை மீரான் சாகிப் தெரு பெரியார் இல்லத்தில் திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என 93 தோழர்கள் பங்கேற்றனர்.கமிட்டிக் கூட்டம் முடிவுற்றதும் காவல் துறையினர் பெரியார், அண்ணா, சம்பத், என்.வி.என். மணியம்மையார், மதியழகன் அனைவரையும் கைது செய்தனர். ஈ.வெ.கி. சம்பத் கைதாவது இதுவே முதல் தடவை. அனைவரும் 6 நாள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.(தொடரும்)
First Published : 08 Jan 2012 06:51:46 AM IST  இந்தி எதிர்ப்பு நாள்: 10.11.48 புதனன்று திராவிடர் கழகத்தின் சார்பாக இந்தி எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை முத்தியாலுபேட்டை கழகக் கிளை சார்பாக பிராட்வே தியேட்டர் அருகில் உள்ள திடலில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்குக் காஞ்சி மணிமொழியார் தலைமை. ஈ.வெ.கி.சம்பத், இரா.நெடுஞ்செழியன், என்.வி.என். ஆகியோர் பேசினர். சம்பத் பேச்சு ""நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சப்படும் ஆட்சியாளர்கள் நம்மைத் தகுதியற்ற முறையில் தாக்கிப் பேசி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் சட்டசபையில் பேசிய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனார் நம்மை வகுப்புத் துவேஷிகள் என்று குற்றம் சாட்டி, தமிழில் உண்மைப் பற்றுதல் கொண்டவர்களாயின் இவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செய்ததென்ன? என்று கேட்டிருக்கிறார். சேர,சோழ, பாண்டியர் காலத்திற்குப் பிறகு இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு திராவிடர் கழகம் தமிழ்த் தொண்டு புரிந்திருக்கிறது என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக் கொள்வான். இலக்கியத்தில் புரட்சி செய்தோம். தமிழைப் புதுப்பாதையில் திருப்பிவிட்டோம். புத்தகத் துறையில், பேச்சுத் துறையில், நாடகத் துறையில் யாவற்றிலும் மறுமலர்ச்சியை உண்டாக்கினோம். அவினாசியார் புகழ்ந்து போற்றும் அளவுக்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்த அறிஞர் அண்ணாவை நம் கழகத்தின் தளபதியாகப் பெற்றிருக்கிறோம். "இந்தியா வாழ்க' என்று கூறுவதற்கு வக்கில்லாமல் "ஜெய்ஹிந்த்' என்று சொல்லித் திரியும் இவர்கள், நல்ல தமிழில் "வணக்கம்' என்று சொல்லத் தெரியாமல், "நமஸ்காரம்' என்று சொல்லித் திரியும் இவர்களா தமிழை வளர்ப்பவர்கள்? சட்டமன்றத்தில் தகுந்த பாதுகாப்புடன் இருக்கிறோம் என்கிற ஆணவத்தால் அங்கே மன்றத்தில் மக்கள் இல்லை என்ற தைரியத்தில் அமைச்சர் இம்மாதிரி கூறிவிட்டாரே ஒழிய, மக்கள் மன்றத்தில் வந்து இம்மாதிரி பேசத் துணிவாரா இவர்? மற்றொரு காங்கிரஸ்காரர் கூறுகிறார், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஓர் அரசியல் போராட்டம் என்று. நாங்கள் மறுக்கவில்லையே அதை . அரசியல் போராட்டம் நடத்துவதென்பது பஞ்சமா பாதகங்களுள் ஒன்றல்லவே. நீங்கள் விடுதலை பெற்றது அரசியல் போராட்டம் நடத்தித்தானே? பஜனை பாடியா சுதந்திரம் பெற்றீர்கள்? இந்தித் திணிப்பு என்று ஒன்று உள்ளவரை எங்கள் போராட்டம் நீடித்தபடிதான் இருக்கும். நம்மை அசட்டை செய்து வருகிறார்கள். எப்போதுமே மக்கள் உணர்ச்சியை, மக்கள் அபிப்ராயத்தை மதித்து நடப்பவர்கள் அல்ல இவ்வாட்சியாளர்கள். டெல்லியிலிருந்து வரும் உத்தரவைத்தான் மதிப்பார்கள். அதனால் தான் மக்கள் எதிரில் மதிப்பற்றுப் போகிறார்கள். பதவியில் பற்றுதல் உள்ளவர்களுக்குத்தான் இன்றைய காங்கிரஸ் ஏற்றதேயொழிய உண்மைத் தொண்டு செய்ய ஆசைப்படும் இளைஞர்களுக்கு எவ்விதத்திலும் ஏற்றதாகாது. தோழர்களே, நாட்டுக்கு நற்பணியாற்ற நல்லதோர் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியடையுங்கள். கிடைத்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொண்டு உண்மைத் தொண்டு செய்ய முன் வாருங்கள்.'' கோவை மாநாட்டில் கேள்வி 1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர், "மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி' என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன. அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்குவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும் என்றெல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே ஓதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போது பெரியார் தமிழ் இலக்கியங்களையும் புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார். இப்போது அவரே மனமுவந்து இவ்வாண்டு பொங்கல் திருநாளைத் திருக்குறள் மாநாடாக நடத்த ஏற்பாடு செய்தார். ராஜாஜி - பெரியார் சந்திப்பு 1949 ஆம் ஆண்டு மே திங்கள் 14ஆம் நாள் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியார் திருவண்ணாமலை வந்திருந்தார். திடீரென்று அவரைச் சந்திப்பதற்காகப் பெரியார் மணியம்மையுடன் திருவண்ணாமலை சென்றார். அங்கு ஆச்சாரியாருடன் ஒருமணி நேரம் ரகசியப் பேச்சு நடந்தது. பத்திரிகையிலும் செய்தி வெளிவந்தது. இது கழக முன்னணி வீரர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. பலர் பலவிதமாகப் பேசலாயினர். ராஜாஜியுடன் பேசியதைப்பற்றி பெரியார் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் மே 28-ஆம் நாள் கோவையில் மாவட்டக் கழக மாநாடு நடைபெற்றது. தி.பொ. வேதாசலம் தலைமை, அண்ணா சிறப்புரை. மூவலூர் ராமாமிருதத்தம்மையார் கொடியேற்றினார். இந்த மாநாட்டில் யாரும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசவில்லை. ஆனால் ஜி.டி. நாயுடு பேசுகையில், ""ஈரோடு சிறப்பு மாநாட்டில் அண்ணாவிடம் பெட்டிச் சாவியை கொடுப்பதாகச் சொன்னீர்களே. இப்போது ஏன் திருவண்ணாமலை போய் ஆச்சாரியாரைச் சந்தித்தீர்கள்? தர்மம் என்ன? அங்கு பேசிய ரகசியம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பெரியார் எவ்விதச் சலனமுமின்றி பதில் சொல்ல மறுத்துவிட்டார். ""அது என் சொந்த விஷயம்'' என்று மட்டும் கூறினார். இதுவரை பெரியாருக்குச் சொந்த விஷயம், பொது விஷயம் என்று இரு வேறுபட்ட நிலை இருந்ததில்லை. நீண்ட நெடிய அவரது பொது வாழ்க்கை திறந்த புத்தகமாகவே காட்சியளித்துள்ளது. இப்போது அதில் சொந்த விஷயம் ஊடுருவியிருப்பது கண்டு கழகப் பிரமுகர்கள் வருந்தினர்; குழப்பமுற்றனர். ஆயினும், மாநாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. பெரியார் மணியம்மையுடன் சென்னை திரும்பினார். அண்ணா, சம்பத்துடன் காஞ்சி புறப்பட்டார். ""விபரீதமாக அய்யா எதையும் செய்துவிட மாட்டார். இப்படித்தான் எதையாவது செய்து மாட்டிக் குழப்பிக் கொண்டிருப்பார். எல்லாம் சரியாகி விடும்'' என்று அண்ணா சம்பத்திற்கு ஆறுதல் சொன்னார். காஞ்சியில் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் சென்னை விடுதலை அலுவலகத்திற்கு வந்தார் சம்பத். பெரியார் தந்த விளக்கம் விடுதலை அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சம்பத் உள்பட அனைவரும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈரோட்டில் இருந்து கணக்குப் புத்தக மூட்டைகளை சுமந்து கொண்டு வந்த அ. சங்கரையா பெரும் சத்தத்தோடு,""இந்தக் கிழவனுக்குப் புத்தி போன போக்கைப் பாத்தீங்களா? யார்கிட்டையும் ஏதும் சொல்லாம என்ன செஞ்சிட்டாரு பாருங்க. இந்த வயசிலே கல்யாணம் செஞ்சிக்கப் போறாராமே, கல்யாணம்'' என்று கூச்சல் போட்டுக் கொண்டே சம்பத்தை நோக்கி பாய்ந்து ஓடிவந்து "ஓ'வென்று அழ ஆரம்பித்துவிட்டார். கோவை மாநாட்டில் பெரியார், சொந்த விஷயம் என்று சொன்னது இது தானோ? என்று எல்லோரும் வியந்தனர். சங்கரையாவை சுற்றி நின்று விவரம் கேட்டனர் ஆவலோடு. சாதாரணமாகவே சங்கரையாவுக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கத் தெரியாது. முழுக்கதையையும் பேச ஆரம்பித்துவிடுவார். குருசாமி குறுக்கிட்டு,""பொண்ணு யாருப்பா ?'' என்று கேட்க அழுதுகொண்டே பேசிய சங்கரையா, ""அட உங்களுக்குத் தெரியாதா? மணியம்மாவை கல்யாணம் பண்ணிக்கிறதா மெட்ராஸ் ரிஜிஸ்டிரார் ஆபீஸ்லே எழுதி வச்சாச்சுங்க'' என்றதும் சம்பத் உட்பட அனைவரும் திகைத்துப் போய் அதிர்ச்சியோடு நின்றனர். சம்பத்தைப் பார்த்து அரங்கண்ணல் கேட்டார், ""என்ன இது உண்மையாய் இருக்குமா?‘' ""எல்லாம் எதிர்பார்த்ததுதான், வருகிறேன்'' என்று சொல்லிக்கொண்டே அறைக் கதவை "படார்' என்று சாத்திவிட்டு சம்பத் வெளியேறினார். உதவியாளர்கள் பின்னே ஓடினர். ""காஞ்சிபுரம் போய் வரேன்'' என்றபடி வேகமாகப் போனார். விடுதலை அலுவலகமே தேம்பித் திகைத்து நின்றது. ""அரங்கண்ணல் நீ பார்த்துக்க, சாய்ந்திரம் வரேன்'' என்று குருசாமி வீட்டுக்குப் புறப்பட்டார். என்ன நடக்கிறது என்று வேவு பார்த்துவிட்டு வந்த தோழர் விடுதலை ஆபீசில் வந்து தலையில் கைவைத்தபடி வருத்தத்தோடு சொன்னார்: ""ஜார்ஜ்டவுன் 1வது லைன் பீச்சு ரோட்ல இருக்கிற ரிஜிஸ்ட்ரார் ஆபீசில் ஐயாவுக்கு கல்யாணம்னு போர்டே எழுதி வைச்சுருக்கானுங்க'' என்று சோகத்தோடு சொன்னார். அந்த நேரத்தில் பெரியாரிடம் இருந்து வந்த தவமணி ராஜன், ""இந்த அறிக்கையை ஐயா இன்றே போடச் சொன்னாங்க‘' என்று கொடுத்தார். அதை ஆவலோடு வாங்கிப் பிரித்துப் பார்த்தார் அரங்கண்ணல். விளக்க அறிக்கை என்று தலைப்பிட்ட ஐயாவின் அறிக்கை அன்றைய விடுதலை இதழிலேயே இடம் பெற்றது. 19.6.49 அன்று விடுதலை ஏட்டுக்கு, விளக்கம் என்ற தலைப்பில் பெரியார் தன்னிலை விளக்கமாக நீண்டதொரு அறிக்கையை அனுப்பியிருந்தார். அதை ஆசிரியர் குருசாமி அன்றைய இதழிலேயே இடம்பெற வைத்தார். அவ்வறிக்கையின் முக்கிய கருத்துகள்: சி.ஆர். அவர்களிடம் நான் பேசியது (ரகசியம்) பற்றி கோவை மாநாட்டிலேயே பிரஸ்தாபிக்கப்பட்டது யாவருக்கும் தெரியும். அது மிகுதியும் என் சொந்த விஷயம் என்று நான் முதலிலேயே தெரிவித்து விட்டேன். கோவையிலும் அதை நான் தெரிவித்ததோடு ஒரு விஷயம் அதிகமாகவும் சொல்லிவிட்டேன். அதாவது இயக்க விஷயத்தில் இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை என்றும், என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை என்றும், ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டுமென்று அதிகக் கவலை கொண்டு இருக்கிறேன் என்றும், இது பற்றி சி.ஆர். அவர்களிடம் பேசினேன் என்பதாகவும் சொல்லி இருக்கிறேன். இது தவிர உண்மையில் சி.ஆருடன் பேசியதில் வேறு ரகசியம் இல்லை. இந்தப்படி நான் சொன்னதாவது குறை கூறித் திரிகிறவர்களுக்கு மேலும் குறைசாற்ற அதிக வசதி ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. ஏனென்றால் இயக்கத் தோழர்களில் ஒருவரிடம் கூட ஈ.வெ.ராவுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, இயக்கத் தோழர்களை அவமானப்படுத்தியதாக ஆகிறதென்றும் அப்படிச் சொன்ன பிறகு ஈ.வெ.ராவிடம் மற்றவர்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? என்றும் இப்படியாக பலவிதமாகச் சொல்லப்படுவதாகத் தெரிகிறது. இதைப்பற்றி நான் அதிகம் விவரிக்க ஆசைப்படவில்லை. இன்றைய அரசியல் நிலையில் அரசியலாருக்கு நாம் அழிக்கப்பட வேண்டுமென்ற அவசியம் இருக்கிறது. இதற்கு நம்மில் ஓர் ஆளாவது தன்னுடைய அழிவை லட்சியம் செய்யாமல் பலி ஆக வேண்டியது அவசியமான காரியமாகும். ஏனெனில் அந்தப் பலிதான் இயக்கத்தை என்றும் அழிக்காமல் காப்பதாகும். அந்தப் பலிக்கு முதலாவது தகுதி நான் என்றுதான் உண்மையாகக் கருதி இருக்கிறேன். இது அகம்பாவமான கருத்தாக சிலருக்குத் தோன்றலாம். தோன்றினால் குற்றமில்லை, உண்மை அதுதான். உண்மையை வெளிப்படுத்த அதற்கு விலை கொடுப்பது போல் இந்த அகம்பாவக் குற்றத்துக்கு நான் ஆளாக்கப்படும் விலையைக் கொடுத்து அதைச் சகித்துக் கொள்ளுகிறேன். நான் பலி ஆவது என்பதை இன்று நேற்றல்ல, சில ஆண்டுகளாகவே முடிவு செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் இந்தி எதிர்ப்பு துவக்கப்படும் பொழுதே உறுதியாக முடிவு செய்து கொண்டுதான் துவக்கினேன். இதை இந்த ஆண்டில் 3, 4 தடவை குறிப்பிட்டுமிருந்தேன். அதாவது, என்னைப் பற்றி ஓர் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன். அது முடிந்தவுடன் தீவிரமாக இறங்கி நடத்தப் போகிறேன் என்று பேசியும் எழுதியும் இருக்கிறேன். சிறையில் இருந்து வந்தவுடன் பிராட்வே மைதானக் கூட்டத்தில் சொன்னேன். அந்த ஏற்பாட்டை இனி நான் நடத்தப்போவதில்லை. உடன் செய்துவிட்டுப் பலி பீடத்திற்கு வரப்போகிறேன். நம்பிக்கையான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு யாரும் கோபித்து கொள்ளக்கூடாது. கோபிக்கிறவர்களோ குறை கூறுகிறவர்களோ அப்படிப்பட்ட ஒருவரைச் சொன்னால் நான் ஏற்கத் தயாராய் இருக்கிறேன். நம் இயக்கத்துக்குத் தொண்டாற்ற, பொறுப்பேற்க முழு நேரத் தோழர்கள், தங்களை முழுதும் ஒப்படைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆதரவாளர்கள் அநேகர் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திராவிட மக்கள் பெரிதும் மதித்து, நம்பிப் பின்பற்றக்கூடிய அளவுக்கு நிலைமை கொண்டவர்களும் இயக்கத் தொண்டே தன் முழு நேர மூச்சாகக் கொண்டவர்களுமாய் இருந்தால் அல்லவா அது பயன்படும்? அதனால் அப்படிப்பட்டவர்கள்தான் என் கருத்துக்கு எட்டவில்லை என்றேன். அதனால் நான் பலியாக வேண்டியிருக்கிறது. இதைப் பொதுமக்கள் சீக்கிரம் காணத்தான் போகிறார்கள். என்னைப் பற்றி, என் பெயரைப்பற்றி, என் நடத்தையைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். நீங்கள் எனக்கோ இயக்கத்துக்கோ உண்மையாய் நடந்து கொண்டீர்களா? என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றதை எனக்கே விட்டுவிடுங்கள். என் வாழ்நாளில், அதாவது என் பொதுவாழ்வில் எனக்குக் கிடைத்த வெற்றிகள் எல்லாம் என் எதிரிகளாலும் எனக்குக் கேடு நினைத்தவர்களாலும் என்னை ஏமாற்றியதாக ஏமாற்றுவதாகக் கருதிக்கொண்டு நடந்தவர்களாலுமேதான் பெரிதும் கிடைத்திருக்கிறது என்பது எனது தெளிவு. ஆதலால் எதிர்ப்புக்கு, சதிக்கு நான் கவலைப்படுவதில்லை. பெரியாரின் இந்த விளக்கம் மக்களுக்கு, குறிப்பாக இயக்க ஆதரவாளர்களுக்கு அதிலும் முக்கியமாக இயக்க முன்னனி வீரர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. யாரிடத்திலும் நம்பிக்கையில்லை என்ற வார்த்தை வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் இருந்தது, கழகத்தவர் பலரும் கலங்கினர். (தொடரும்) தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்.
First Published : 15 Jan 2012 12:00:00 AM IST  விடுதலையில் இருந்து விலகல்பெரியார் மணியம்மையுடன் சென்னைக்கு விரைந்து வந்தார். விடுதலையில் மேலும் சில விளக்கங்களை எழுதினார். மீண்டும் 28.6.1949 விடுதலை இதழில், ""எனக்கு வயது எழுபத்து ஒன்றுக்கு மேலாகிறது. நான் பொது வாழ்வில் நாற்பது, ஐம்பது ஆண்டுக்கால அனுபவம் உடையவன். பொது மக்களின் மனப்பான்மை தெரிந்தவன். நான் நான்கு ஐந்து ஆண்டுக் காலமாகப் பழகி நம்பிக்கைகொண்டதும் என் நலத்தில் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து கொண்டிருப்பதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசு உரிமையாக ஆக்கிக் கொண்டும் அந்த வாரிசு உரிமைகளையும் தனிப்பட்ட தன்மையையும் மற்றும் நான்கு ஐந்து பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும் பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்''பெரியாரின் அறிக்கை நாட்டில் பெரியதொரு குழப்பத்தை ஏற்படுத்தியது.ஈரோட்டில் சிறப்பு மாநாட்டில் அண்ணாவைப் பெருமைப்படுத்தி பேசிய பெரியார் எனக்குப் பின் அண்ணாத்துரை ஒருவர் போதும், நமது கழகத்தை வழி நடத்திச் செல்ல என்று முழக்கமிட்ட செய்தி ஏடுகளில் வெளிவந்து, அந்த மை காயும் முன்னே, யாரை நம்புவது, ஒருவரும் இல்லை எனக்கு வாரிசு தேவை என்று புலம்புவரானால், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது?பரம்பரையாகப் பார்த்தாலும் பெரியாருக்கு சம்பத்தானே வாரிசு? தம் அண்ணன் மகன் சம்பத்தை வாரிசாக்க கண்ணுங் கருத்துமாக வளர்த்தார். மாணவர் கழகத்தின் தலைவராக்கினார். கருஞ்சட்டைப் படையில் அமைப்பாளராக்கினார். படிப்படியாக உயர்த்தினார் சம்பத்தை. ஆனால் சம்பத் என்ன சோடையா போனார்? நாடு காணாத மாணவர் இயக்க வளர்ச்சியை உருவாக்கினார். கருஞ்சட்டைப் படையின் மூலம் ஆயிரமாயிரம் தொண்டர்களைத் திரட்டிக் காட்டினார். மேடைகளில் அவரது பேச்சு வன்மை எல்லோரையும் புரட்டிப் போட்டது. நடிப்புத் திறனும் வாதிடும் திறனும் அவரிடம் இருந்தன. அவர் எதில் சோடை போனார்? இந்த இளம் வயதில், இத்தனை துடிப்பா? ஆற்றலா? அறிவின் சிதறலா? என்றெல்லாம் அழகிரியும், பாரதிதாசனும் பாராட்டியும் கூட, அந்தச் சம்பத் பெரியாருக்கு வாரிசாக முடியாதா? எங்கேயிருந்து எப்படியோ இடம் பிடித்த மணியம்மைதாம் வாரிசா? என்றெல்லாம் கொந்தளித்துக் குமுறினர் தோழர்கள்.பெரியாருக்குக் கண்ணீர்க் கடிதங்கள்.71 வயதான பெரியார் 26 வயதே ஆன மணியம்மையை மணம் புரிவது பகுத்தறிவுக்கு ஒவ்வுமா, சொல்வேறு செயல் வேறு அறியாப் பெரியாரே ஏன் இப்படி முரண்பட்டு விட்டார்? என்று கேட்டனர் தோழர்கள். விடைதான் இல்லை.ஐயாவின் அந்தரங்கச் செயலாளர் என்.வி. நடராசனுக்குக் கூடத் தெரியாது. அவ்வளவு ரகசியம் குத்தூசி ஆசிரியர் குருசாமி நீண்டதொரு காலம் பெரியாரின் அறிந்த தொண்டர், தலைவர் ஆவார். அவரிடம் கேட்டாரா பெரியார்? இல்லை. நீதிக் கட்சியில் அவர் விரும்புகின்ற மரியாதைக்குரிய தலைவர்கள் முத்தையா முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோரைக் கேட்டாரா? இல்லை.பெரியார் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யவும் தயங்காத எத்தனையோ தொண்டர்கள், அவர்களில் அவருக்கு மிகவும் பிடித்தமானவர்களாக விளங்கிய, கே. கோவிந்தசாமி, சி.டி.டி. அரசு, ஏ.பி. ஜனார்த்தனம், திராவிட மணி, தவமணிராஜன் இப்படி எவரையும் கேட்டாரா? இல்லையே.மாற்றார்களுக்கு மார்தட்டிச் சொல்லுவாரே, நான் செத்தாலும் இந்த இயக்கத்தை காக்க அண்ணாத்துரை இருக்கிறார் என்று அந்த அண்ணாவைத்தான் அழைத்துக் கேட்டாரா...?தோளிலும் மடியிலுமாகப் போட்டு வளர்த்து, தாம் வாரிச்சென்று கொஞ்சி மகிழ்ந்தாரே அண்ணன் மகன் சம்பத் அவரிடம் இது பற்றிச் சொன்னதுண்டா? தமக்கும், தன் குடும்பத்திற்கும் மரியாதைக்குரிய தலைவர் தம் அண்ணன் மூத்தவர், ஈ.வெ. கிருஷ்ணசாமியிடம், மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்டாரா?எல்லோரும் திகைத்தனர். தேம்பினர். திக்குத் தெரியாத காட்டில் சிக்கித் தவித்தனர்.திருமணத்தைத் தடுத்து நிறுத்தக் கட்சிப் பெரியவர்கள் எஸ். குருசாமி, கே.கே. நீலமேகம், என்.வி. நடராசன், வேலூர் திருநாவுக்கரசு போன்றோர் முயன்று பார்த்தனர். பெரியார் மசியவில்லை. இதனைக் கேள்வியுற்ற அண்ணா காஞ்சியில் போய்ப் படுத்துவிட்டார்.தீவிரவாதிகள் சிலர் சம்பத்தைச் சூழ்ந்துகொண்டு இயக்கச் சொத்துகளை கைப்பற்றுவோம் என்று ஆவேசமடைந்தனர். அதற்குச் சம்பத் கேவலம் வீடு, மனை, வாசல் ஆகிய சொத்துகள் முக்கியமல்ல. இயக்கத்தின் கொள்கையே சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்று வருந்தினார்.அரங்கண்ணலும் பூ. கணேசனும் பழைய குடியரசு கோப்புகளை எடுத்து வந்து ஏதோ தேடிக் கொண்டிருந்தார்கள். பொருந்தாத் திருமணம் பற்றிய பெரியாரின் பேச்சு கண்ணில் பட்டது. ஓர் இளம் பெண்ணை வயோதிகன் கட்டிக்கொள்வது அயோக்கியத்தனம் என்பது பற்றிய பெரியாரின் பழைய பேச்சு. அதை அப்படியே வெட்டியெடுத்து, தக்க வயதும், பொருத்தமுமே திருமணத்தின் லட்சியங்கள்.... பெரியாரின் பேருரையென்று கொட்டையெழுத்துக்களில் தலைப்பு போட்டுக் கொடுத்து விட்டனர்.பதறிப் போனார் போர்மேன் தில்லை. எழுந்து வந்து சம்பத்திடம் காட்டி அனுமதி கோரினார். படித்துப் பார்த்த சம்பத், ""போடுங்க முதல் பக்கத்திலேயே போடுங்க'' என்று அனுமதி கொடுத்துவிட்டார். கம்போஸ் செய்து அச்சேறிய பத்திரிகை வெளிவந்தது. எல்லோரும் சம்பத்திடம் போய் நின்றனர்.""இன்னிக்கு பத்திரிகையை ஐயா பாத்திட்டு கோபமா வருவாரு, நமக்குத் தாங்காதுங்க. எங்க ராஜினாமா கடிதத்தை வாங்கிக்குங்க'' என்று ஊழியர்கள் ஒரே குரலில் மேனேஜர் சம்பத்திடம் கூறினர்.""என்ன, பைத்தியக்காரத்தனம்? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். போய் வேலையைப் பாருங்க'' என்று சம்பத் அவர்களுக்குச் சமாதானம் தந்தார்.பத்திரிகை கொண்டு வந்த அரங்கண்ணல் அண்ணாவிடம் காட்டியபோது, அவர் வருத்தப்பட்டார். ""நீ ஏன் அய்யா மனசைப் புண்படுத்துகிற வேலையைச் செய்தாய். இது உன்னுடைய பத்திரிகையல்ல, அவருடைய பத்திரிகை. அவருக்கு விரோதமாக வெளியிட நமக்கு உரிமையேது?'' என்று குறிப்பிட்டார்.ஏதோ நாம் பாராட்டு வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டு வந்த அரங்கண்ணலுக்கு, அண்ணாவின் அறிவுரை வியப்பைத் தந்தது. மறுநாள் விடுதலை ஆபீசில் அரங்கண்ணல் வந்த போது ஆசிரியர் குருசாமி வருத்தத்தோடு கேட்டார், ""என்னங்க இப்படி செஞ்சுட்டீங்க?'' என்று.அப்போது பெரியார் வந்துவிட்டார். எல்லோரும் ஆளுக்கொரு திசையில் நின்றனர். அனைவரையும் அவர் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அரங்கண்ணலைப் பார்த்து, ""பெருமாள் சோத்தைத் தின்னுபுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றாங்க'' என்று கோபத்தோடு கூறினார்.அனைவரும் திகைப்போடும் அச்சத்தோடும் மவுனமாய் இருந்தனர். ""சம்பத் எங்கே?'' என்று பெரியார் கேட்டார். ""அவர் வரலீங்க'' என்று குருசாமி சொன்னார். அப்போது அரங்கண்ணல் சற்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பெரியாரை நோக்கி, ""எந்தப் பெருமாள் சோத்தை யார்ய்யா திங்கறாங்க?'' என்று கேட்டார். அதற்குப் பெரியார், ""உங்களைத்தான் சொல்றேன்'' என்றார்.""சோத்துக்காக யாரும் உங்ககிட்ட வரலேய்யா'' என்று வெளியேறுவதற்கும் தயாராகிவிட்ட மனப்பான்மையோடு சொன்னார் அரங்கண்ணல்.""அந்தப் பேச்ச இப்ப ஏன் போட்டீங்க? யாரைக் கேட்டுகிட்டு போட்டீங்க?''அதற்கு அரங்கண்ணல், ""ஐயா, அது நீங்க பேசுனது தானுங்களே'' என்றார்.ஆத்திரமடைந்த பெரியார், ""என்னங்க, போக்கிரித்தனம்'' என்று கைத்தடியை தரையில் பலமாக இடித்தார். ஒரே தாவலில் அரங்கண்ணல், அந்த இடத்தில் இருந்து தூரத்திற்கு ஓடிவிட்டார்.பெரியார் எடுத்த நிலை சரியேயென்று கைவல்ய சாமியார், தி.பொ. வேதாசலம், சண்முக வேலாயுதம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். பெரியாரின் செயல் தவறென்று எண்ணற்ற பிரமுகர்கள் அவருக்கே கடிதங்களை எழுதிக் குவித்த வண்ணமிருந்தனர்.அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன், அன்பழகன், என்.வி. நடராசன், மதியழகன் ஆகியோரது நடவடிக்கைகளில் பெரியார் மிகவும் அதிருப்தி கொண்டார். விடுதலை ஏட்டிலும், சம்பத், அரங்கண்ணல், பூ. கணேசன், கே. கோவிந்தசாமி ஆகியோர் விஷமத்தனம் புரிவதாக பெரியாருக்குச் சந்தேகம் படர்ந்தது. விடுதலை நிர்வாகப் பொறுப்பிலிருந்து சம்பத் விலகினார். அவரைத் தொடர்ந்து அரங்கண்ணல், கே. கோவிந்தசாமி, ஆகியோரும் விலகினர். குத்தூசி குருசாமி மதில் மேல் பூனையாக இருந்தார்.திராவிட நாடு இதழில் அண்ணா தலையங்கம்.நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய் என்று தான் ஒருவனால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறி வந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும் தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. கட்சியின் வளர்ச்சி தன்னால்தான் என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே, யாரால், என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.தலைவர் பெருமையாகத் துதி பாடுவதில், கண்ணோக்கு இருந்த காரணத்தால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தொண்டின் தரத்தைச் சிந்தித்துப் பார்த்தது கூட இல்லை. ஆனால் இன்று அந்த உண்மை வெள்ளிடை மலையாகிவிட்டது. கழகத்தை சேர்ந்த உழைப்புச் சக்தி எங்கே இருக்கிறது என்பது விளங்கி விட்டது.இரண்டு மாதங்களாக கழகப் பணிகள் நடைபெறவில்லை. இந்த அசையா நிலை தொண்டர்களின் சேவையின் பெருமையை விளக்கி உள்ளது. தொண்டர்கள்தான் கட்சியின் முன்னோடி. அவர்கள் அசைந்தால்தான் இயக்கம் இயங்கும் என்பது தெரிந்துவிட்டது.இந்த அசையா நிலை நமது தலைவரைத் திடுக்கிடச் செய்திருக்க வேண்டும். அவர் சுயநலம் இல்லாதவராய் இருந்திருந்தால் புயல் என வீசிக் கொண்டிருந்த கழகப்பணிகள், இப்படியாக அசைவற்றுக் கிடப்பது ஏன் என்று பதறியிருக்க வேண்டும்.மாபெரும் சக்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்து தலைமைப் பதவியை உதறியிருக்கவேண்டும். கட்சியே தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே ஒழிய, கட்சி வளரவேண்டும், அதன் செயல்கள் நடைபெறவேண்டும் என்று எண்ணவில்லை.ஆகவே மேற்கொண்டு கழக ஆக்கத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். இதில் இன்னும் நாள் ஓட்டக்கூடாது. நல்லதொரு முடிவைக்கண்டு, மீண்டும் நம் நாட்டுப் பணி முன்போல் முகிழ்க்கவேண்டும்.இதற்கான முடிவுகள் இன்னும் ஓரிரு வாரத்தில் செய்யப்பட வேண்டும் அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிடும் என்று நம்புகிறோம். கழக நிலை இதுபோல் நீடிக்க இடம் ஏற்படாது. விரைவில் வெள்ளி முளைக்கும். வேதனையும் விம்மலும் நீங்கி வெற்றிப் பாதையில் நடப்போம்.இவ்வாறு திராவிட நாடு இதழில் அண்ணா தலையங்கம் தீட்டினார்.உளம் கொதித்த தோழர் என்.வி. நடராசன் பெரியாருக்குக் கடிதம் தீட்டினார், கண்ணீர் மல்கிய நிலையில்.கடிதம் அலட்சியப்படுத்தப்பட்டது. சென்னையை விட்டு ஈரோடு போவதாகக் கூறிவிட்டு ஏற்காடு சென்று தங்கினார், பெரியார், மணியம்மை சகிதம்.இங்கு சேதி தெரிந்தவர்கள் துடித்தனர், அழுதனர், தூது செல்வதென்று முடிவு செய்தனர் முதல்தூது கோஷ்டி கிளம்பிற்று.விடுதலை ஆசிரியர் குருசாமி, கடலூர் தோழர் குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு, தோழர் என்.வி. நடராசன், குடந்தை தோழர் கே.கே. நீலமேகம் ஆகியோர் சென்றனர். திராவிடர் கழகத்தாரின் திகைப்பை, பொதுமக்களின் கேலியுரையைக் கூறினர். கெஞ்சினர், பெரியார் அவர்களிடம் விளக்கம் சமாதானம் கூறினார். தடுமாற்றத்துடன் அல்ல, உறுதியுடன்.பெரியார் மணியம்மை திருமணம்பெரியாரின் பொருந்தாத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கழகத்திலிருந்து விலகி நிற்பதாகவும் எண்ணற்றோர் அண்ணாவுக்கும் சம்பத்திற்கும் மடல்கள் மூலம் மனக்குமுறலை வெளியிடலாயினர்.இந்தப் பதற்றமான சூழ்நிலையில், திராவிடர் கழக நிர்வாகக் குழுவை உடனே கூட்டுமாறு நிர்வாக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருச்சியில் தி.பொ. வேதாசலம் இல்லத்தில் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் 10.7.49 ஞாயிறு காலை நடைபெற்றது. 46 நிர்வாக உறுப்பினர்களில் 32 பேர் வந்திருந்தனர். பெரியார் பங்கேற்கவில்லை. கூட்ட நடவடிக்கையைக் கவனிப்பதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் வெளியே திரண்டிருந்தனர்.பெரியார் மீது கண்டனத் தீர்மானம் வரப்போவதாகப் பரவிய வதந்தியை முன்னிட்டுப் பலர் பரபரப்புடன் பலவகையான துண்டுப் பிரசுரங்களையும் வெளியீடுகளையும் விநியோகித்துக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக கமிட்டிக் கூட்டம் மிக மிக அமைதியாகவே நடந்தது.திருமண ஏற்பாட்டைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர, கண்டிப்பது என்ற சொல்லை ஒருவர்கூட பயன்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. திருமண ஏற்பாட்டிற்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் பிற ஏற்பாடுகளையும் கவனிப்பது அவசியம் என்னும் கருத்து கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களிடையிலும் இருந்ததாகத் தெரிந்தது.இந்நிலையில் பெரியார் மணியம்மை திருமணம் பதிவாளர் முன்னிலையில் பதிவாகிவிட்ட செய்தி தந்தி மூலம் கிடைத்தது.திருமணம் நடந்தாகிவிட்டது என்பது தெரியாத நிலையில் நிர்வாகக் கமிட்டியினர் கூட்டத்திலே, இந்த திருமணம் கூடாதென்று அவரைக் கேட்டுக்கொள்வதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வீணாகியது. இந்நிலையில் குழப்பமும் ஆத்திரமும் அடைந்துள்ள தோழர்களுக்கு ஆறுதல் கூறவேண்டிய நிலைக்கு அண்ணாவும், சம்பத்தும் ஆளானார்கள்.பெரியார் ஈ.வெ. ரா. கே.ஏ. மணியம்மையார் பதிவுத் திருமணம் முறைப்படி 9.7.49 பிற்பகல் 3.30 மணிக்கு திருமணப் பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது என்று பத்திரிகைகள் பரபரப்போடு செய்தி வெளியிட்டன. அன்றைய 63-ஆம் எண் மகாலட்சுமி தெரு, தியாகராயநகர் சி.டி. நாயகம் வீட்டில்தான் பெரியார் மணியம்மை திருமணம் பதிவு செய்யப்பட்டது என்பது தகவல்.(தொடரும்)தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்.
First Published : 22 Jan 2012 12:00:00 AM IST  விலகல் பட்டியல்பெரியார் மணியம்மை திருமணத்தையொட்டி பெரியாரின் போக்கு பிடிக்காமல் வெகுண்டெழுந்தவர்கள் கழகப் பணியிலிருந்து விலகியிருந்தமுக்கியமானவர்கள்:தி.க. மாகாண நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள்:செ. இரா. சுப்ரமணியன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, ஈ.வெ.அ. வள்ளிமுத்து, வேலூர் மூவலூர் ஆ. ராமாமிர்தம்மாள், எஸ். நீதிமாணிக்கம், காஞ்சி கல்யாண சுந்தரம், (ஆசிரியர் தொழிலாளர் மித்திரன்) கு. பராங்குசம், முருகு சுப்ரமணியன் (ஆசிரியர் பொன்னி), பி. நடராசு பொள்ளாச்சி, காரைக்குடி இராம சுப்பையா, மதுரைமுத்து, கே.வி.கே. சாமி தூத்துக்குடி, ஜலகண்டபுரம் ப. கண்ணன், கே.ஏ. மதியழகன் (திராவிடர் மாணவர் கழகத் தலைவர்) இப்படி நீண்ட பட்டியல் மற்றும் எண்ணற்ற கழகச் சார்புடைய மன்றங்கள் கழக நிர்வாகக் கமிட்டிகள், மத்திய நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி அண்ணாவுக்கு அனுப்பி வைத்தனர்.இவ்வாறு விலகி நிற்போர் பெயர்களைத் திராவிட நாடு இதழில், அதன் பொறுப்பாசிரியர் இரா. நெடுஞ்செழியன் தொகுத்து, கண்டனக் கணைகள் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். பிரதி அச்சிடப்பட்டு அதனை சென்னைக்கு எடுத்து வந்து அண்ணாவிடம் காட்டியபோது, கண்டனக் கணைகள் என்ற தலைப்பைக் கண்டு பதறினார். நெடுஞ்செழியனை நோக்கி அவர், ""என்ன நெடுஞ்செழியன், அய்யாவைக் கண்டிக்கிற அளவிற்கு நாம் பெரிய மனிதர்களா? இனி இந்தத் தலைப்பு வேண்டாம். அடுத்த இதழ் முதல் "கண்ணீர்த் துளிகள்' என்று தலைப்பிடுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.பெரியார் விளக்க அறிக்கை:திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும் அவசர முடிவும் என்ற தலைப்பில், 13.7.49 அன்று பெரியார் வெளியிட்ட நீண்ட அறிக்கையில் சில பகுதிகள்: 6, 7 மாத காலமாய் என்னைச் சந்திக்க நேர்ந்த பல நண்பர்கள் வெளியே தனிமையாய்ப் போக வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தார்கள். நான் அலட்சியமாக அதைக் கருதி அப்படிப் போகிற உயிர் போகட்டுமே, நான் என்ன அற்ப வயதுக்காரனா 70 ஆண்டைக் கடந்துவிட்டேனே என்று சொல்லுவேன்.என் கூடவே இருந்து இப்போது எனக்குப் பக்காத் துரோகிகளான எனது சிஷ்யர்கள் என்பவர்களேகூட சதா என்னைப் பயப்படுத்துவார்கள். இந்தப் பழக்கத்தால் நானும் சதா துணை தேடுவதில் கவலை கொள்ளும்படியாக ஆகிவிட்டேன். சென்னையில் என்னைத் தேடி வருபவர்களைக் கூட சீட்டு இல்லாமல் விடவேண்டாம் என்று கண்டிப்பாய் உத்தரவு போட்டு ஓர் ஆளைப் போட்டு விட்டேன்.நிற்க. நான் பணம் காசு விஷயத்தில் அதிக சிக்கனப் புத்தி உள்ளவன். பணம் காசு விஷயத்தில் யாரிடமும் நம்பிக்கை வைக்க முடியாதபடி என்னைச் சுற்றித் திரிந்த தோழர்கள் நடந்து வந்தார்கள். இயக்கம் எப்படி இருந்தாலும், இயக்கத்துக்கு யார் யார் தலைவராய் இருந்தாலும் என்னுடைய கொள்கைகளும், கொள்கைகளுக்கு ஏற்ற பிரசாரமும் எனக்குப் பின்னும் நடந்தேற வேண்டும் என்கின்ற பேராசை எனக்கு உண்டு.இயக்கம் நடந்துவர ஏதாவது ஏற்பாடு இருந்தால்தான் முடியுமே ஒழிய, இப்போதுபோல் ஒரு மனிதனிடம் இருக்கும் தனி மரியாதையால் இனி நடந்துவர முடியாது என்கின்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு 2 வருஷம் ஆகிவிட்டதுடன், அப்படிப்பட்ட தனி மனிதனை மக்கள் இனி உண்டாக்கிக் கொள்ளவும் மாட்டார்கள், ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள் என்பதும் என் முடிவாகிவிட்டது. மேற்கண்ட எல்லாக் காரணங்களாலும் நான் ஓர் ஏற்பாடு செய்ய எண்ணினேன்.இந்த (வாரிசு) ஏற்பாட்டுக்குச் சம்பத்தைப் பலதடவை நினைத்தேன். அவன் இயக்கத்தினுடையவும், என்னுடையவும் எதிரிகளுடைய கையாளாகி விட்டான். மகாசூரனாகவும் காணப்பட்டுவிட்டான்.என்னிடம் வெறுப்பும் துவேஷமும் கொண்டிருந்த மக்களில் உல்லாசத்துக்கும், சுயநலத்துக்கும், பெருமைக்குமாகக் கட்சியில் இருந்து பயனடைந்து வருகிறவர்களுக்கு, என் மீது சமயம் பார்த்து பழிவாங்க வேண்டிய அளவு ஆத்திரம் ஏற்பட்டிருந்தது. அதிலும் சிறு பிள்ளைகளுக்கு அதாவது, நேற்று வந்து இன்று பேச்சாளி, எழுத்தாளி ஆக ஆகிவிட்டதாகக் கருதி கொண்டிருப்பவர்களுக்கும் நான் எதிரியாகவே காணப்பட்டுவிட்டதால் இந்தக் கூட்டமும் சேர்ந்து எதிரிகளுக்குக் கையாட்களாக ஆகி ஓர் ஐக்கிய முன்னணி ஆகி விட்டார்கள்.இதன் பயனாய் விசுவாசமற்ற தன்மையும், பொய்ப் பக்திகாட்டும் தன்மையும் அவர்களிடம், நான் தெளிவாய்க் கண்டு வந்ததோடு, அவர்கள் வெளியில் என்னைப் பற்றிக் பேசுவதையும் கட்சி சேர்ப்பதையும் நான் அடிக்கடி கேள்விப்பட்டு வந்தேன். இதனால் நான் சென்னை வந்து, உடன் ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்குப் போய் நோட்டீஸ் கொடுக்கும் ஃபாரமும் பெற்று, விதமும் தெரிந்து வந்தேன். கவலையோடு யோசித்தேன். மணியம்மைக்குக் கூடத் தெரியாமல் அந்தப் பாரத்தில் கையெழுத்து வாங்கி ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு அனுப்பிவிட்டேன்.உடனே எதிரிகளால் இதன் சாக்கில் அவர்கள் திட்டமிட்டபடி எதிர்ப்புத் துவங்கப்பட்டது. பலரை வரவழைத்துப் பேசி, ஆத்திரம் ஏற்படும்படியான பல பொய், கற்பனைகளைக் காட்டத் துண்டு விளம்பரம் அச்சடித்துக்கொண்டு ஜில்லா, ஜில்லாவுக்கு ஆள்கள் புறப்பட்டார்கள். இதற்கு சம்பத் முன்னோடும் பிள்ளை ஆனான். அது வெற்றிகரமாய் நடந்து வந்தது. இந்த எதிர்ப்பு வேலை என் மனதில் தோன்றிய எண்ணங்களை மேலும் உறுதிப்படுத்தி வந்தது.எதிரிகளுக்குத் தங்கள் தோல்வி தெரிந்துவிட்டதால் கொலைத் தூண்டுதல் வேலையில் பிரவேசித்துவிட்டார்கள். பொறுப்புள்ள சி.ஐ.டி.க்கள் என் வீட்டிற்கு வந்து ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். கவர்மெண்ட் சீஃப் செகரட்டரி விடுதலை ஆபீசுக்கு டெலிபோன் செய்து விஷயத்தை உணரும் முறையில் எச்சரிக்கை செய்தாராம்.இப்படிப்பட்ட சம்பவங்களால் எனக்கு இயக்கக் கவலையும் உண்டாயிற்று. உடனே அவசரப்பட்டேன். ஒரு நபரை அழைத்தேன். ஒரு வீட்டைக் குறிப்பிட்டு அவ்விடத்துக்கு ரிஜிஸ்ட்ராரை அழைத்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு, முன் எச்சரிக்கை இல்லாமல் தியாகராய நகரில் ஒரு வீட்டுக்குச் சென்றோம். 15 நிமிஷத்தில் அங்கு ரிஜிஸ்ட்ரார் வந்தார். பதிவு நடந்தது. வீட்டிற்கு வந்து ஈரோட்டிற்குப் புறப்பட்டுவிட்டேன்.இதுவரை ஓர் உயிரைக் கொன்றால் போதும் என்று கருதிய என் எதிரிகள், இனி இரண்டு உயிர்களைக் கொன்றாக வேண்டிய அவசியத்துக்கு வந்துவிட்டார்கள் என்பதுதான் இந்தப் பதிவுத் திருமணத்தால் இப்போதைக்கு எனக்கு ஓர் ஆறுதல். எனது திருமணத் தோற்றத்துக்கும் அவசரத்துக்கும் இது முக்கிய காரணம். இவ்வாறு பெரியார் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.பெரியார் மீது சம்பத் வழக்குதமது திருமண ஏற்பாடு பற்றி விடுத்த அறிக்கையில், தம்முடைய உயிருக்கு ஆபத்து நேரிட்டுள்ளதாகவும் தம்மோடிருந்து இப்போது எதிரியாகிவிட்ட சிலரால் தம் உயிர் பறிக்கப்படலாம் என்றும் இத்தகைய எதிர்ப்பாளர்களின் முன்னோடும் பிள்ளையாக சம்பத்து ஆகிவிட்டான் என்றும் பெரியார் குறிப்பிட்டிருந்தது. தம்மையும் நேரடிப் பாதிப்புக்குள்ளாக்குவதாக அமைந்திருந்ததாக அண்ணாவும் சம்பத்தும் உணர்ந்தார்கள். ஆகவே இது குறித்து பெரியார் மீது இருவரும் தனித் தனியே மானநஷ்ட வழக்குகள் தொடுத்தனர்.13.7.49 விடுதலை தலையங்கத்தில், "கொலை முயற்சிக்கு எதிரிகளின் சதி' என்று குறிப்பிட்டுள்ளதானது, தம்மையும் ஒருவராகக் கருதக் கூடிய பாணியில் இருப்பதால், அந்தக் கொலைச் சதியில் தாமும் சம்பந்தப்பட்டவராக பொதுமக்கள் கருதக்கூடிய நிலையில் இருப்பதால், அது பொதுவாழ்வில் தமக்குள்ள மதிப்பையும் நாணயத்தையும் பாதிப்பதால்தான் பெரியார் மீது இந்த மான நஷ்ட வழக்கை தொடரவேண்டியதாகிறது என்று அண்ணாவும் சம்பத்தும் அவரவர் வழக்கில் முறையிட்டிருந்தனர். நீதிமன்றத்தில் என்னைக் குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பெரியார் தமது வழக்குரைஞர் மூலம் தெரிவித்து விட்டாலே, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, வழக்குச் செலவையும் கொடுத்துப் பெரியாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் மாகாண மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அண்ணா தெரிவித்திருந்தார்.அதன்படியே பெரியாரின் வழக்குரைஞர் கைலாசக் கவுண்டர் நீதிமன்றத்தில் தோன்றி, பெரியார் அண்ணாதுரையைக் குறிப்பிட்டு எழுதவில்லை என்பதாகச் சொன்னார். அதனை அண்ணாவின் வழக்குரைஞர் ஜெகந்நாதன் ஒப்புக் கொண்டதன் பேரில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. இதே போன்ற வழக்கை சம்பத்தும் பெரியார், மணியம்மை ஆகிய இருவர் மீதும் தொடர்ந்திருந்தார். தம்முடைய மாமனாரும் பிரபல வழக்கறிஞருமான எஸ். சாமிநாயுடுவை வைத்து சம்பத் தற்காப்பு வழக்குத் தொடுத்தார்.பெரியாரும் மணியம்மையும் நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சம்பத் அந்த வழக்கில் கோரியிருந்தார். இதற்கான சம்மனை பெரியாரும் மணியம்மையும் பெற்றுக்கொண்டு இருவரும் நீதிமன்றம் வராமல் தங்களது வழக்குரைஞரையே அனுப்பியிருந்தனர்.முதல் நாளே சம்மன் தரப்பட்டதால் வழக்குத் தள்ளிப் போடப்படலாம் என்று நினைத்து பெரியாரும் மணியம்மையும் வரவில்லை என்றும், அவர்கள் வராமல் இருந்ததற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மணியம்மையை இழுத்தடித்து தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் பெரியாரின் வழக்குரைஞர் குறிப்பிட்டார். அதனைத் சம்பத்தின் வழக்குரைஞர் மறுத்தார்.பெரியார் தரப்பில் சொல்லப்படுவது போல் இவ்வழக்கிற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்று சம்பத்திடம் மாஜிஸ்டிரேட் கேட்டார். இதற்கு சம்பத் அளித்த விளக்கம் வருமாறு: பெரியாரின் திருமணம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு இயக்கத்தை நான் முன்னின்று நடத்துவதால், பெரியார் குறிப்பிடுகிற எதிரிகளில் நானும் ஒருவன் என்று மக்கள் கருத இடமுண்டு. மேலும், அவர் இந்தத் திருமணத்தைச் செய்து கொள்ளாதிருந்தால் அவரது சொத்துகளுக்கெல்லாம் நான்தான் வாரிசாக இருக்க முடியும் என்று பொதுமக்கள் கருதுவதால், பெரியார் கூற்று உண்மையாக இருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்க இடம் உண்டு. ஆகவே பெரியாரும் அவரது துணைவியார் மணியம்மையும் நீதிமன்றத்தில் ஆஜராகி என்னிடம் மன்னிப்புப் கேட்பது அவசியமாகிறது என்று சம்பத், கோர்ட்டில் தெரிவித்தார்.ஈ.வெ. ராமசாமியும், மணியம்மையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்ட மாஜிஸ்டிரேட், வழக்கை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைத்தார்.அடுத்த வாரமும் பெரியார் நீதிமன்றத்திற்கு வரமாட்டார், வழக்குரைஞர் மூலம் வாய்தா கேட்பார் என்று பெரியார் வட்டாரத்தில் பேசப்பட்டது. வழக்கு தினத்தில் சம்பத், அண்ணாவுடன் நீதிமன்ற அறையில் அமர்ந்திருந்தார். வழக்கு எடுத்துக்கொள்ளப்படுகிற நேரத்தில் பெரியாரும், மணியம்மையும் நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். இதனை சம்பத்தும் அண்ணாவும் எதிர்பார்க்க வில்லை. ஆனாலும், சம்பத் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அண்ணா எழுந்தோடி பெரியாரையும் மணியம்மையாரையும் வரவேற்று அமரச் செய்தார்.வழக்கு விசாரணை தொடங்கியது. பெரியார் தாம் சம்பத்தை நினைத்து அப்படிக் குறிப்பிடவில்லை என்றும், மன்னிப்புக் கேட்பதாயினும் தாம் தயார் என்றும் சொன்னார். அதனை சம்பத்தின் வழக்குரைஞர் எற்றுக்கொண்டதின் பேரில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.சொத்துக்கு ஆசைப்பட்டவரா சம்பத்?பெரியாரைவிட்டுப் பிரிவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. பெரியாருக்குத் தூபம் போட்டுக் குழப்ப வேலை செய்தவர்களும், சிந்திக்க முடியாதவர்களும் பெரியாரிடம் எஞ்சியிருந்தனர். நல்லறிவாளர்கள் பலரும் விலகி நின்றனர்.நிலவரத்தைப் புரிந்துகொண்ட பெரியார், வாரிசு பற்றிப் புது விளக்கம் தந்தார். திராவிடர் கழகத்திற்கு வாரிசு நியமிப்பதாகக் குறிப்பிடவே இல்லை என்று விடுதலையில் தலையங்கம் தீட்டினார். இது குறித்து சம்பத் கீழ்க்கண்டவாறு தமது அறிக்கையில் குறிப்பிட்டார்: பாரம் தாங்காது படுத்துவிட்ட ஒட்டகத்தின் மீது ஏற்றிய சுமையில் ஒன்றிரண்டை ஒப்புக்கு இறக்கிவிட்டால் ஒட்டகம் எழுந்துவிடும் என்று அதன் சூட்சமம் தெரிந்தவன் செய்வது போல், பெரியார் தந்திரத்தைக் கையாளுகிறார். யாரும் கழகத்திற்காக உழைக்கவில்லை; யாரையும் நம்ப முடியவில்லை, ஆகவேதான், மணியம்மையை வாரிசாக்குகிறேன், என்று கைப் பட அறிக்கை எழுதி வெளியிட்ட பெரியார், இன்றைய பின்விளைவுகள் கண்டு ஏமாற்ற நினைக்கிறார். ஏமாறும் நிலையில் தொண்டன் இல்லை. இதனாலெல்லாம் பெரியார் இயக்கத்திற்கு ஏற்படுத்திய இழிவும், பழியும் நீங்கிவிடாது...பெரியாரின் திருமண ஏற்பாட்டினால் சொத்துகளும், வாரிசுரிமையும் தமக்கு இல்லாது போகிறதே என்னும் எரிச்சலில் சம்பத் எதிர்ப்புக் காட்டுவதாகக் குழப்பவாதிகள் கயிறு திரித்தனர்.அதற்கு விடையளித்த சம்பத், ""சொத்துகள் எனக்கு கால் தூசு. வாரிசுரிமை பற்றியும் நான் கவலைப்பட்டதில்லை. நான் அதற்கு ஆசைப்பட்டிருந்தால், என் அத்தை மகளை மணந்தால் எல்லாச் சொத்தும், வாரிசுரிமையும் எனக்கே தருவதாக பெரியார் பத்திரம் எழுத முனைந்தாரே, அப்போதே சரி என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், எல்லாம் என் காலடிக்கு வந்திருக்கும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கருதியதேயில்லை. இப்போது நடந்துள்ளதை யாருடைய தனிப்பட்ட விஷயமாகவும் நான் நினைக்கவில்லை. பெரியார் தம் தீச்செயலால் பேரியக்கத்தை அழிவுப் பாதைக்குத் தள்ளிவிட்டாரே என்று தான் வேதனைப்படுகிறேன். இன்றில்லாவிடினும் ஒரு நாள் பெரியாரும் வேதனைக்குள்ளாவார்'' என்று குறிப்பிட்டார்.கழகத்தில் பெரும் தேக்க நிலை. கழகத்தவர் நெஞ்சம் துடித்து, ஊண் உறக்கமின்றி வேதனையில் வாடினர். விலகுவோர் பட்டியல் தொடர்ந்தது. அது "கண்ணீர்த் துளிகள்' என்றும் தலைப்பில் பக்கம் பக்கமாக வெளிவரலாயிற்று. உடுமலை வழக்கில் அரசின் அடக்குமுறைக்குப் பெரியார் ஆளாகலாம் என்னும் செய்தியும் வருகிறது. அவ்விதம் நேரிட்டால் அவருடைய விடுதலைக்குப் பிறகே நாம் கூடிக் கலந்து பேசுவதும் கண்ணியமான முறை என்று அண்ணா கருத்துக் கூறியிருந்தார். பெரியாரிடமிருந்து இயக்கத்தையும், அதன் சொத்துகளையும் கைப்பற்ற வேண்டுமென்று தோழர்கள் துடித்தனர். அவர்களை அண்ணாவும் சம்பத்தும் அமைதிப்படுத்தினர்.(தொடரும்)
First Published : 28 Jan 2012 03:59:39 PM IST (நிற்பவர்கள் இடமிருந்து) மதிவாணன், இனியன், அன்பெழில், கெüதமன் (அமர்ந்திருப்போர்) இளங்கோ, வரலட்சுமி இளங்கோ, சுலோசனா, சம்பத், நாகம்மாள், வெங்கடேஷ் பெரியாரை விட்டு விலகி நிற்போர் பற்றிய கண்ணீர்த் துளிகள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.சென்னை மண்ணடி அருகே செம்புதாஸ் தெருவில் கார்னர் எஸ்டேட் என்ற பெயரில் ஐந்தடுக்கு மாடிக் கட்டடம், சுற்றிலும் இரும்புக் கடைகள், இரைச்சல் நிறைந்த இடம்.நான்காம் மாடியில் ஓர் அறை. அந்த அறையில் இருவர் தங்கி இருந்தனர். ஒருவர் எல்.ஐ.சி.யில் எழுத்தர் பணிபுரிந்த சீனிவாசன், (ஆம், அவர்தான் இரா.செழியன்) இன்னொருவர் சென்ட்ரல் எக்சைஸ் இலாக்காவில் பணிபுரிந்த வேலாயுதம். அவர்தான் ப.வாணன். இருவரும் சிறந்த எழுத்தாளர்கள். அண்ணாவின் நெருங்கிய நண்பர்கள். அறைக்கு வாடகை ரூ. 25.காஞ்சியிலிருந்து அண்ணா சென்னை வந்தால் இங்கே தங்குவார். இரா. நெடுஞ்செழியன் இங்கே "மன்றம்' இதழையும் நடத்திக் கொண்டிருந்தார். கே.ஏ.மதியழகன் தொடக்கத்தில் தங்கியிருந்த இடமும் இந்த அறை தான். பெரியவர் எஸ்.வி. லிங்கம், டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், வளையாபதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் இங்கே தங்குவதுண்டு. சில நேரங்களில் சிவாஜிகணேசனும் இங்கே தங்கியதுண்டு."ஓர் இரவு' நாடகத்தை உருவாக்கியதும், "ஆகஸ்டு 15 துக்க நாள் அல்ல' எனும் கட்டுரையை அண்ணா எழுதியதும் இந்த அறையில்தான். அண்ணாவைச் சந்திக்க அடிக்கடி ம.பொ.சி., செங்கல்வராயன், ஜீவானந்தம் ஆகியோரும் இந்த அறைக்கு வருவதுண்டு. இங்கே அண்ணா வந்திருந்தால் சம்பத் உடன் இருப்பார்.அன்றைய தினம் பெரியாரின் திருமணம் பற்றி தமது நண்பர்களிடம் விரக்தியோடு பேசிக் கொண்டிருந்த அண்ணா, ""எனக்கென்னயா திருச்சி சங்கரன்பிள்ளையின் தம்பி சாம்புவிடம் அவர் ஊரில் கடை வாடகைக்கு பார்க்கச் சொல்லி இருக்கிறேன். அண்ணாதுரை எம்.ஏ. வெற்றிலை பாக்குக் கடையென்று போர்டு போட்டுக் கொண்டு உட்காரப் போகிறேன். வெற்றிலை பாக்கு வாங்க வருபவர்களிடம் கொள்கையைப் பிரசாரம் செய்தபடி காலத்தைக் கழிக்க போகிறேன்'' என்று வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தபோது சம்பத் உள்ளே நுழைந்தார்.""என்ன தளபதியா பேசுவது?'' என்று கேட்க, ""தளபதியில்லை தளர்பதி ஆகிவிட்டேன் சம்பத்'' என்று அண்ணா சொன்னார்.""என்ன அண்ணா... இப்படியெல்லாம் நீங்களே சொல்ல ஆரம்பித்தால் எங்களுடைய வாழ்நாள் வீணாகிவிட்டதாக அர்த்தமா?'' என்று நெடுஞ்செழியன் கண்கலங்கினார்.""இல்லை இனிதான் நிறைய வேலை இருக்கிறது. அண்ணாவை நாம்தான் தயார் செய்ய வேண்டும்'' என்றார் சம்பத்.அதற்கு அண்ணா, ""இல்லை சம்பத் அய்யாவை எதிர்த்து ஓர் அரசியல் நடத்துவதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அது ஒருபோதும் நம்மால் முடியாது. நான் கோடம்பாக்கத்தில் போய் சினிமாவுக்குக் கதை எழுதி என் வாழ்வை அமைத்துக் கொள்கிறேன். நீ கல்லூரியில் சேர்ந்து படி. நெடுஞ்செழியன் எங்காவது வாத்தியார் வேலைக்குப் போகட்டும். இதைத் தவிர வேறு ஒன்றும் என்னால் சொல்ல முடியவில்லை...'' என்று வேதனையோடு கூறினார்.அதைக் கேட்டு சம்பத் சிரித்தார். ""எதிர்காலச் சமுதாயத்தின் சாபத்திற்கு நாமெல்லாம் ஆளாக வேண்டுமா? நாம் அரசியலை நடத்தவில்லை என்றால் வேறு யார் நடத்தப்போவது? அய்யாவா அரசியல் நடத்தப் போகிறார்?'' என்றார் சம்பத்.""நீ துடிப்போடு பேசுகிறாய், என்னால் இயலாது சம்பத், என்னைச் சிந்திக்க விடு'' என்று தலையணையை இழுத்து அதில் சாய்ந்தபடி தூங்கத் தொடங்கினார் அண்ணா. அன்று எந்த முடிவும் காணாமல், அண்ணா காஞ்சி சென்றுவிட்டார். சம்பத்தின் வாதத்தை மற்ற தோழர்கள் ஏற்பதாயினும், அண்ணா தயாரில்லையே என்று குழப்பம் நிலவியது.இருநாட்கள் சென்றபின்னர் மீண்டும் பேசலாம் என்று சம்பத் ஈரோட்டுக்குப் புறப்பட்டார். காஞ்சி சென்று அண்ணா "மாஜி கடவுள்கள்' என்னும் புதிய கட்டுரைத் தொடரை எழுதலானார். வெளிநாடுகளில் கொண்டாடப்பட்ட கடவுள்கள் மாஜிகளாகி கண்காட்சிச் சாலைகளிலே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று அக்கட்டுரைத் தொடரில் தீட்டினார். திராவிட நாடு இதழில் "கண்ணீர்த் துளிகள்' பகுதியில் அண்ணா கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.""நாமெல்லாம் கழகத்திலிருந்து வெளியேறுகிறோம். ஆனால் அதோ என் தம்பி சம்பத் தமது மனைவியுடனும், கைக் குழந்தையுடனும் பெரியாரின் குடும்பத்தைத் துறந்து வெளியேறுகிறார். அந்தச் சோகக் காட்சியை காணுகிறபோது கண்கள் குளமாகின்றன, அதனிலும் நம்முடைய தியாகம் பெரிதல்ல...'' என்று அண்ணா உணர்வுபொங்கக் குறிப்பிட்டிருந்தார். சம்பத் தமது மனைவி மக்களுடன், தாம் பிறந்து வளர்ந்த ஈரோட்டு மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்னை வந்து, வாடகை வீட்டில் குடியேறினார். சென்னை கோடம்பாக்கம் கிருஷ்ணாபுரம் வன்னியர் தெரு 34 ஆம் எண் கட்டடத்திலிருந்து சம்பத்தை ஆசிரியராகக் கொண்டு "புது வாழ்வு' வார ஏடு வெளிவரத் தொடங்கியது. தமது குடும்பத்துடன் வீட்டை விட்டு சம்பத் வெளியேறியது பெரியாருக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது, அவர் ஓர் அறிக்கையில் அண்ணாவைத் துரோகி என்று வெளிப்படையாகக் கண்டித்தார்.சென்னை, கோடம்பாக்கத்தில் சம்பத், தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதனால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து, கூட்டங்களில் பங்கேற்றார். அண்ணா சென்னை வந்ததும், சம்பத் இல்லத்திற்குத்தான் முதலில் வருவார். உணவருந்தி மகிழ்ந்து பேசி, ஓய்வெடுப்பார். சில வேளைகளில் இரவுக் கூட்டம் முடிந்து அகால நேரத்திலும் வருவதுண்டு. சம்பத்தைப் பார்க்காமல் அண்ணாவுக்குப் பொழுது போகாது.பாசமிகு குடும்பங்கள்:அண்ணாவும் சம்பத்தும் பெரும்பாலும் சென்னையில் சைனீஸ் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது வழக்கம்.அண்ணா சில நேரங்களில் கூட்டங்களுக்குச் சென்று திரும்பும்போது கோடம்பாக்கத்தில் சம்பத் இல்லத்திற்கு வந்து, ""சுலோச்சனா சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?'' என்பார். ""சாதத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டேன். எல்லாமே தீர்ந்துவிட்டதே. சமைத்துப் போடுகிறேன்'' என்பார் சுலோச்சனா.""சாதத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டால் என்ன? மோர் இருக்கிறதல்லவா? ஊறுகாய் இருக்கிறதல்லவா? போதும் வை'' என்று சாப்பிட்டு விட்டுப் பல கதைகளையும் பேசிவிட்டுப் போவார். சுலோச்சனா மற்றும் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்வோடு பேசுவார். அண்ணா அகிலத்திற்கே வகுத்தளித்த குடும்பப் பாச உணர்வின் இனிய தன்மைகள் ஈரோட்டில் கிளைத்தெழுந்து கவிதையாய் காவியமாய் திராவிட இயக்கக் குடும்பங்கள் அனைத்தும் ஒரு குடும்பம், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்னும் நல்லுறவும் நல்லுணர்வும் பெற்றுத் திகழ்ந்ததை அக்காலம் உணர்த்தியது. அண்ணா மண்ணடி செல்வார். அங்கு நெடுஞ்செழியன் இல்லத்தில் உணவருந்தி ஓய்வெடுப்பார். புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில், அன்பழகன் இல்லம். அங்கேயும் அண்ணா விருப்பத்தோடு தங்கி உணவருந்தி ஓய்வெடுப்பார். கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், அண்ணாவின் சின்ன மாமனார் வீடு ( ராணி அண்ணியாரின் சிற்றப்பா சிவப்பிரகாசனார் இல்லம்) அங்கேயும் அண்ணா குடும்பத்தோடு தங்குவார். எஸ்.எஸ்.பி. லிங்கம் (வேதாசலம்) இல்லத்திலும் தங்குவார். எப்போதும் போல், டபிள்யூ. கே. தேவராஜ் முதலியார் இல்லம். அறிவகம் வாங்கியபின், பெரும்பகுதி நாட்கள் சென்னையில் தங்குவது தி.மு.க. தலைமை நிலையமான அறிவகத்தில்தான். அண்ணா, திராவிட நாடு இதழில் கீழ்கண்டவாறு விளக்கம் எழுதியிருந்தார். ""கழகத் தலைவர் (பெரியார்) என்னைச் சந்தேகிக்கிறார், துரோகி என்று எண்ணுகிறார் என்று துளிஜாடை தெரிந்திருந்தால் கூட நான் அதுவரை காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி செலுத்திவிட்டு வெளியே வந்துவிட்டிருப்பேன். ...நான் பல தடவைகளில் எடுத்துக் கூறியிருக்கிறபடி இந்தப் பரந்த உலகிலே, என்போன்ற சாமான்யர்களுக்கு இடம் இருக்கிறது. ஆதினங்களின் ஆதரவே இல்லாத பண்டாரங்கள் இல்லையா அதுபோல் இருந்துவிட்டிருப்பேன். ஒரு துளியும் ஜாடை காட்டியதில்லை. என்னை சோம்பல் குணமுள்ளவன் என்று கண்டித்திருக்கிறார். வாலிபர்களுடன் கூடித் திரிகிறேன் என்று பேசியிருக்கிறார். துரோகி என்று அவர் சொன்னதுமில்லை, அப்படி ஒரு எண்ணம் அவர் உள்ளத்திலே இருந்திருக்கக்கூடும் என்று கூட நான் எண்ணிட நேரிட்டதில்லை...என்னிடம் அவர் காட்டி வந்த அன்பும், மரியாதையும் என்னைப் பல சமயங்களிலே வெட்கப்படும்படி செய்திருக்கிறது. நன்றாகக் கவனமிருக்கிறது. ஈரோட்டுக்கு என்னை முதன் முதலாக அழைத்தது, பொது வாழ்வில் ஈடுபடுவதில் விசேஷத்தைக் கூறினது, பிறகு நான் ஊர் திரும்பப் புறப்பட்டபோது, அவருடைய வீட்டுப் பெரிய வண்டியைப் பூட்டி, அதிலே நான் உட்கார்ந்து கொண்டு வண்டி கிளம்ப, அதன் பின்னோடு பத்து வீடு வரையில் அவர் வந்தது, நான் வண்டிக்குள்ளே பதறி, நில்லுங்கள் வரவேண்டாம், நில்லுங்கள் என்று கூறியது வெட்கப்பட்டது ஆகிய காட்சிகள். அன்று முதல் திருமணப் பிரச்னை பயங்கரமாக உருவம் எடுத்த நாள் வரையில், என்னிடம் அவர் நடந்துகொண்ட முறை, என்னைப் பற்றி அவர் கேவலமான எண்ணமோ, கெடுதலான எண்ணமோ கொண்டிருக்கிறாரா என்று யோசிக்க வேண்டிய அவசியத்தையே உண்டாக்கியதில்லை. பல தடவைகள் என்னிடம் கோபித்துக்கொண்டிருக்கிறார் நானும் கோபம் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து விடுதலை வெளிவந்து கொண்டிருந்தபோது, கோபித்துக்கொண்டு, ஊருக்கே வந்துவிட்டிருக்கிறேன். என்னைச் சமாதானப்படுத்தவும், என்னிடம் தமக்கு உள்ள அன்பைக் காட்டவும் பெரியாரும், அவர் அண்ணாரும் தனித்தனியாக எனக்கு எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன. இன்று என்னைப் பெரியார் துரோகிப் பட்டியலில் சேர்த்துப் பேசும்போது, நான் அந்தக் கடிதத்தைக் கவனப்படுத்திக்கொண்டு சாந்தி பெறுகிறேன்''தனிக்கட்சி தொடங்குங்கள் அண்ணா பெரியார் தம்மைத் துரோகி என்று குறிப்பிட்டதை அண்ணாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அண்ணாவுக்கு சம்பத் கண்டிப்பான தொனியில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். காஞ்சிபுரத்தில் சும்மா உட்கார்ந்திருப்பது பயன் தராது. சுறுசுறுப்போடு ஒரு நல்ல முடிவு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பெரியாரின் அறிக்கையும், சம்பத்தின் கண்டிப்பும் அண்ணாவைக் குழப்பின. எண்ணற்ற கடிதங்கள் நாள்தோறும் குவிந்தன. முக்கியமானவர்கள் நேரில் வந்து தங்கள் கருத்துகளைச் சொல்லி நெருக்கினர். அண்ணா தூங்கவில்லை. சோகமே உருவானார். எத்தகைய பொறுப்பு தம் மீது விழுகிறது என்பதை உணர்ந்தார். பெரியாரை எதிர்க்கவும் துணிவின்றித் துவண்டார். இந்தச் சூழ்நிலையால் அண்ணாவுக்குக் கடுங்காய்ச்சலும், உடம்பெல்லாம் சிறுசிறு கொப்பளங்களும் ஏற்பட்டன. அவரது நண்பரான சித்த மருத்துவர் சிற்சபை ஓடோடி வந்து வைத்தியம் செய்யலானார். அண்ணாவுக்கு ஓய்வு தேவையென்றார்.தாமதம் கூடாது. திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டியை கூட்டி அண்ணாவைத் தலைவரென்று முடிவெடுக்க வேண்டும். பெரியாரிடம் உள்ள விடுதலை அலுவலகம் போன்ற கழகச் சொத்துகளைக் கைப்பற்ற வேண்டும் என்று பாரதிதாசன் ஓர் ஆவேசக் கடிதத்தை அனுப்பி இருந்தார்.அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து ஒதுங்கி, தேசிய இயக்கத்தில் சேருவாரானால் எதிர்காலத்தில் அண்ணா அகில இந்தியத் தலைவராக உயர்வார் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.பல்வேறு திசைகளிலிருந்தும், பல்வேறு உணர்வுகள் ஆட்டிப் படைத்தன. அண்ணா சோர்வுற்றார். அண்ணாவின் ஓய்வு கண்டு தோழர்கள் மனம் பதறினர். முக்கியப் பிரமுகர்கள் சம்பத்தோடு தொடர்பு கொள்ளலாயினர். என்.வி. நடராசன் தந்தி கொடுத்து சம்பத்தை அவசரமாக அழைத்தார்.சம்பத் சென்னை வந்தார். எண்ணற்ற தோழர்கள் சூழ்ந்தனர். ""நீங்கள் போய் அண்ணாவிடம் நேரில் பேசி அழைத்து வாருங்கள். சென்னையில் முடிவு செய்வோம்'' என்று கே.கே. நீலமேகம், நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் ஆகிய பலரும் வற்புறுத்தினர். சம்பத் என்.வி. நடராசனை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்றார். சோர்வுற்றுப் படுத்துவிட்ட அண்ணாவை எழுப்பி உட்கார வைத்து, அடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாகப் பேசினார். அண்ணா வழுக்கி வழுக்கிச் சென்றார். ""கடமையில் இருந்து தவறாதீர்கள் அண்ணா, இது காலத்தின் கட்டாயம், சரித்திரக் கடமை. இதிலிருந்து விடுபட்டால் எதிர்காலச் சமுதாயம் சபிக்கும்'' என்றெல்லாம் ஆணித்தரமாக பேசினார் சம்பத். ""அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வெடுத்தால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்'' என்று என்.வி. நடராசன் அழ ஆரம்பித்துவிட்டார்.""சற்று ஓய்வெடுத்துப் பிறகு பேசுவோம் சம்பத்'' என்றார் அண்ணா.""எத்தனை தடவை பேசினாலும் இதுதான் தீர்மானமான முடிவு. இதிலிருந்து நீங்கள் நழுவ முடியாதண்ணா''- இது சம்பத்.மறுநாளும் பேச்சு தொடர்ந்தது. இறுதியாக அண்ணா ஒரு யோசனை கூறினார். ""சம்பத் முதலில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நீ சென்று, அய்யாவின் தவறான முடிவைக் கூட்டம் போட்டுச் சொல். மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது? என்பதைத் தெரிந்துகொண்டு ஒரு முடிவு செய்வோம்''. இதற்குச் சம்பத் சம்மதித்தார்.திராவிடர் கழகத்தில் அய்யாவிடம் மிச்சமிருந்தவர்களில் பலர் முரடர்கள். பெரியாரை எதிர்த்துக் கூட்டம் போட்டால் என்ன நடக்குமோ என தயக்கம் இருந்தது. அதனால், சம்பத்தை அனுப்பினால் பெரியார் ஆட்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்று அண்ணா கருதியிருக்கக் கூடும். எப்படியாயினும் இந்தப் பிரச்சனையை மக்கள் மன்றத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான், ஏற்கெனவே சம்பத்தின் வாதம். அதற்கு எவரும் முன்வராத நிலையில், தாமே மக்கள் மன்றத்திற்கும் செல்லத் தயார் என்னும் உறுதியோடிருந்தார் சம்பத்.அன்று அண்ணா, சம்பத், என்.வி.என். ஆகியோர் சென்னை புறப்பட்டு வந்தனர். அண்ணாவின் இளமைக்கால நண்பர் சி.வி. ராசகோபாலும் உடன் வந்தார்.(தொடரும்)
26
First Published : 05 Feb 2012 12:00:00 AM IST  அண்ணா சென்னை வந்தால் கார்னர் எஸ்டேட் அறையில் தங்குவார் அல்லது அவரது பழைய நண்பர் டபுள்யூ.கே. தேவராச (முதலியாரின்) இல்லத்திலுள்ள கூடம், ஒரு கிழிந்த சோபா, இரண்டு உடைந்த நாற்காலிகள், பழம்பாய் இரண்டு, அழுக்கேறிய நான்கு ஐந்து தலையணைகள், அங்குதான் அண்ணாவின் ராஜசபை நடைபெறும். காராபூந்தி, வெங்காய பக்கோடா, சிங்கிள் டீ அடிக்கடி வந்து கொண்டிருக்கும். கிழிந்த சோபாவில் அண்ணா அமர்ந்திருப்பார். சம்பத்தையும் அதில் உட்கார வைத்துக் கொள்வார். எதிரே கிழிந்த பாய், தலையணையோடு மற்றவர்கள் அமர்ந்திருப்பார்கள். கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.பி. லிங்கம் போன்றவர்கள் வருவார்கள். பிரியாணி பொட்டலங்கள் கே.ஆர்.ஆர். உபயம். நெடுஞ்செழியனுக்கும் அன்பழகனுக்கும் தயிர்சாதப் பொட்டலங்கள். அண்ணாவுக்கு கார் உபயம் எஸ்.எஸ்.பி. லிங்கம், பெட்ரோலுடன்.இந்தச் சூழ்நிலையில் அங்கே விடிய விடிய விஷயாலோசனைக் கூட்டம் நடைபெறும் விலகி வந்தோரின் நிலைகளை எடுத்துரைக்கவும், தலைவர்களின் கருத்தை விரிவாக வெளிடவும் அண்ணா டி.எம். பார்த்தசாரதியைக் கொண்டு "மாலை மணி' என்ற நாளேட்டினைத் தொடங்கினார். அண்ணா ஆசிரியராகவும், நெடுஞ்செழியன், காஞ்சி கல்யாணசுந்தரம் துணை ஆசிரியர்களாகவும் பணிபுரிந்தனர்.அண்ணா கேட்டுக்கொண்டதற்கிணங்க, சம்பத் வேலூர், திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தி பெரியாரின் கொள்கைத் தவறினையும், எடுக்கவிருக்கும் எதிர்காலச் செயல்பாடு குறித்தும் விளக்கிப் பேசினார். சிறுசிறு சலசலப்புகள் தவிர மற்றபடி கூட்டங்கள் அமைதியாகவும், பரபரப்போடும் நடைபெற்றன.சுற்றுப்பயணம் முடித்து சென்னை வந்த சம்பத்தை அவரது இல்லத்தில் அண்ணா சந்தித்தார். ஏராளமான தோழர்கள் அமர்ந்திருக்க வெளி மாவட்டங்களில் நிலவிய நல்ல சூழ்நிலைகளை விளக்கிக் கூறினார் சம்பத்.திராவிடர் கழகத்தில் இருந்து விலகியோருக்கு கூடிப் பேச சென்னையில் ஓர் இடம் தேவைப்பட்டது. நீதிக்கட்சிப் பிரமுகர் திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை மண்ணடி பவழக்காரத் தெருவில் உள்ள 7-ஆம் இலக்கமிட்ட தமது கட்டடத்தின் மாடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அங்கேதான் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி கூட்டத்தை அதன் துணைத் தலைவர் கே.கே. நீலமேகம் கூட்டினார். இக்கூட்டம் 17.9.49 காலை ஏழு மணிக்கு நடைபெற்றது.சம்பத்தின் முயற்சியால் தி.மு.க.சம்பத்தின் பெரும் முயற்சியால் கூட்டப்பட்ட திராவிடக் கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் தனிக் கட்சி தொடங்குவதற்கான தீர்மானத்தை முன் வைத்து அண்ணா ஆற்றிய நீண்ட உரையில் அடிக்கடி சம்பத் பற்றியும் உருக்கமாக குறிப்பிட்டார்....""இலட்சியத்தை இழக்கவும் முடியாது. எதேச்சதிகாரத்திற்குப் பலியாகவும் கூடாது... கழகத்தைக் கைப்பற்றுவதும் புதிய தலைமையின் கீழ் நாம் பணியை நடத்துவதும் சாத்தியமான காரியமேயாகும். இதை நான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளுகிறேன் (பலத்தகரவொலி)......நாட்டின் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். வடநாடு தென்னாடு என்னும் பேத உணர்ச்சி, டில்லியில் பேசப்பட வேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. மொழி ஏகாதிபத்தியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாகாண ஆட்சி மன்றங்கள் டில்லியின் சூத்திரக் கயிற்றிலாடும் பதுமைகளாக்கப்பட்டுவிட்டன. தொழிலாளரின் பிரச்சினை யாரும் ஒதுக்கிவிடாத நிலையிலும் வளர்ந்துவிட்டது. பொருளாதார நிலையோ பஞ்சமும் ,பட்டினியும், வேலையில்லாக் கொடுமையும் நாட்டிலே கிளம்பிக் கேடு விளைவிக்கும் விதத்தில் கெட்டு வருகிறது. பழமையோ, புதிய பட்டாபிஷேகத்துக்கான நாள் குறித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான், நாம் கழகத்தைக் கைப்பற்றும் காரியத்தில் ஈடுபடவேண்டி நேரிடும், இது யாருக்கு லாபமாக முடியும் என்பதைத்தான் தோழர்கள் மிக மிக ஜாக்கிரதையாகக் கவனித்துப் பார்க்கவேண்டும்.கழகத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு, யாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய எவரும் கட்டுப்பட வேண்டிய முறைகள் உண்டு. தனி மாநாடு கூட்டித் தலைவர் மீதும் நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவித்துப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதுதான் முறை.ஆனால் நாமறிந்துள்ள பெரியார், இந்த முறைக்குக் கட்டுப்படவோ, இதனை ஏற்கவோ தயாராகவோ இல்லை. அவருடைய தலைமை அவருடைய பேனா முனையில் இருப்பதாகக் கருதி, கடைசிவரை கழகம் தம்மிடமே இருப்பதாகவும் மாறுபட்டவர்கள் கலகக்காரர்கள் என்றும் சாதிக்கவே எண்ணுகிறார் என்பது அவருடைய பேச்சாலும் எழுத்தாலும் தெரிகிறது. அவருடைய சுபாவம் நமக்குத் தெரியும்.எனவே கழகத்தைக் கைப்பற்றுவது என்பதற்கு ஒரு கால அளவோ, உருவமோ ஏற்படாது.நாம் ஒருபுறம், திராவிடர் கழகம் என்ற லேபிளுடன் அவர் மற்றொருபுறம் அதே லேபிளுடன் உலவுவதும், இருசாராருக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தி வாழ விரும்பும் சந்தர்ப்பவாதிகள் ஆட்டமாடுவதும் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, நான் முன்னால் குறிப்பிட்டபடி பாசிசமும், பழமையும், நாட்டை நாசமாக்குவதுமான காரியம்தான் நடைபெறும்.கழகம் ஏற்கனவே அமைப்பும், ஒழுங்கும், சட்டதிட்டமும் உள்ளதாக இருந்திருப்பின், இந்நிலை எற்பட வழி இருந்திருக்காது. கழகம் இப்போதுள்ள நிலையில் பெரியாரின் போக்குக்கு ஏற்றவண்ணம் அசைந்து கொடுக்கும் தன்மையில்தான் இருக்கிறது. இது மிக மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்று நான் கருதுகிறேன். காலம் நிர்ணயிக்க முடியாது. தீர்ப்பு பெறும் நிலையும் எற்பட முடியாது.கைப்பற்றுவதற்கான நடவடிக்கையுடன் பகை உணர்ச்சி பட்டுப்போகாது வளர்ந்தவண்ணம் இருக்கும். ஏனெனில் முறைப்படி நாம் கழகத்தைக் கைப்பற்றினாலும், பெரியார் அந்த முறைக்குக் கட்டுப்படப் போவதில்லை. அவரைக் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவிதமான சட்ட திட்டமும் கழகத்துக்கு இல்லை. எனவேதான், கழகத்தைக் கைப்பற்றுவதென்பது தீராத போராகவே இருந்துவரும்.கழகத்தைக் கைப்பற்றுவது என்ற முறை தோன்றினால், இதிலே மும்முரமாக ஈடுபட நேரிட்டதாகக் கூறி, டிரஸ்டு ஏற்பாட்டை ஒத்திப்போட முனைவார். கழகத்தைக் கைப்பற்றி விட்டோம் என்ற நிலையை நாம் தெரிவித்தால், கழகமே கைவிட்டுப்போய் விட்டது. இனி எதற்கு டிரஸ்டு என்றுகூட கூறி விடக்கூடும். அந்தப் பல லட்சம் அவர் கருத்துப்படி பொது டிரஸ்டு ஆக்கப்படுவதற்கு வழி செய்து வைக்கும் வகையிலே பார்த்தால் கழகத்தைக் கைப்பற்றுவது என்ற முறையை நாம் மேற்கொள்ளக் கூடாது. லேபிள் இருக்குமிடமே இருக்கட்டும்; டிரஸ்டு எழுத வாரும் என்று நாம் கூறவும், ஆமாம் அவர்களும் கழகத்தை அவரிடம் இருக்கவிட்டார்கள். இனியும் என்ன தாமதம் டிரஸ்டு எழுத, என்று நாடு கேட்கவும், ஒரு வழி செய்து தருவது நல்லது என்று நான் கருதுகிறேன்.கழகத்தின் லேபிள் அல்ல முக்கியம். கொள்கைகள், வேலைத்திட்டம், இவைகளே முக்கியம். ஒரு தனி நபர் கூட லேபிள் தம்மிடம் இருப்பதாக எப்போதும் கூறிக் கொண்டிருக்க முடியும். ஆனால் கூட்டு முயற்சிக்கான வசதியும் வாய்ப்பும் வலிவும் நம்மிடம் இருக்கிறது ஏராளமான அளவில் வளரக்கூடிய விகிதத்தில் கொள்கைகளைப் பரப்பி லட்சியத்தை வெற்றிகரமாக்க, நாம் தனித்திருந்து அவருடைய தலைமையை மட்டுமல்ல. லேபிளையும் நீக்கிவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் பணியாற்றி வருவதுதான் நல்ல வழி என்பது என் கருத்து''...நல்லதொரு முடிவு:அண்ணாவின் அறிவுரைக்குப் பிறகு நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்ட தீர்மானங்கள் வருமாறு:1. பெரியாரின் திருமணம் கழகத்தின் பகுத்தறிவுப் பிரசாரக் கொள்கைக்கும், லட்சியத்திற்கும் கேடு பயப்பது.2. கழக உறுப்பினர்கள் பெரும்பாலோர் இத்திருமணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட சமயத்திலும், திருமணத்திற்குப் பிறகு கண்டனம் தெரிவித்தபோதும், பெரியார் பேசியும் எழுதியும் வந்த போக்கு ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகவும் எதேச்சதிகார முறையாகவும் இருக்கும் காரணத்தால், பெரியாரின் தலைமையில் நம்பிக்கையில்லை.3. இந்நிலையில் எதிர்கால வேலைத்திட்ட முறையை வகுக்கும் பொறுப்பைக் கீழ்க் கண்டவர்கள் அடங்கிய அமைப்புக் குழுவினரிடம் இக்கமிட்டி ஒப்படைக்கிறது.தோழர்கள் கே.கே. நீலமேகம், ஏ. சித்தையன், கே.வி.கே. சாமி, எஸ். முத்து, ஜி. பராங்குசம், கே. கோவிந்தசாமி, என்.வி. நடராசன் (செயலாளர்).அமைப்புக் குழுவின் முடிவு வருமாறு:1. திராவிடக் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ. ராவின் திருமணத்திற்குப் பிறகு கழகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகவே கழக நடிவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டபடியாலும், இந்நிலையை மாற்ற ஜனநாயக முறைப்படி பெரியார் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யாமல் கழகத்தைச் செயலற்றதாக்கி இருப்பதாலும், இப்பொழுது இருக்கிற நாட்டு நிலையில், இந்த மாதிரியான மந்த நிலைமை இந்நாட்டு மக்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு பயக்கும் என்று இக்கமிட்டி கருதுவதாலும், கழகக் கொள்கைகளும் லட்சியமும் நசுக்கப்பட்டுப் போகும் என்று அஞ்சுவதாலும், நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும் உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும், நாம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு செயலாற்றுவதெனக் கமிட்டி தீர்மானிக்கிறது.கழகக் கொடி:நீண்ட சதுர வடிவத்தில், மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி, சிவப்பு நிறமாகவும் அமைந்திருக்க வேண்டும்.கொடியின் அளவு (2ஷ்3) அகலம் இரண்டு பங்கு நீளம் மூன்று பங்கும் இருக்க வேண்டும். அகலம் 2 அடியானால் நீளம் 3 அடி இருக்கவேண்டும் என்பதாகும்.கருப்பு: அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.சிவப்பு: அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும், இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக்கொண்டு வரவேண்டும். அழித்துக்கொண்டு வருகிறது. இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளிபோல் என்ற கருத்துடன், கருப்பு மேலும் சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிகக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்த அமைப்புக்குப் பொதுச் செயலாளராக இருந்து பணி புரியும்படி சி.என். அண்ணாதுரை அவர்களை அமைப்புக்குழு கேட்டுக்கொண்டது.பின்னர் நூற்றுப்பதின்மர் கொண்ட ஓர் பொதுக்குழுவும் பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து ஓர் பிரசாரக் குழுவும் அமைப்புக் குழுவும், நிதிக்குழுவும், அமைத்துக்கொண்டது.பொதுக்குழு:சி.என். அண்ணாதுரை, ஈ.வெ.கி. சம்பத், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், டி.எம். பார்த்தசாரதி, மணிமொழியார், என். ஜீவரத்தினம், கே. கோவிந்தசாமி, வி. முனுசாமி, சி.வி. ராஜ், எம்.ஆர். பாண்டியன், வி.டி. பெரியசாமி, மா. இளஞ்செழியன், சி.டி.டி. அரசு, ஏ.என். இராமன், சத்தியவாணி முத்து, எஸ். தருமாம்பாள், பி. இராமசுவாமி. (பட்டியல் நீளுகிறது)தி.மு.கழகத் தொடக்கவிழா:காலையில் கமிட்டி கூடி முடிவுசெய்த வேலைத் திட்டத்தைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க திராவிட முன்னேற்றக் கழகத் தொடக்க விழாவின் மாபெருங்கூட்டம் 17.9.49 அன்று மாலை, சென்னை, ராயபுரம், ராபின்சன் பார்க் மைதானத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவிற்குப் பெத்தாம்பாளையம் பி. பழனிச்சாமியை தலைமை வகிக்கும்படி தோழர் டி.எம். பார்த்தசாரதி முன்மொழிய, தோழர் கே. கோவிந்தசாமி வழிமொழிய, தோழர் பி.வி. முத்துசாமியின் துணைமொழிக்குப் பிறகு தோழர் பி. பழனிச்சாமி தலைமை வகித்துக் கூட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுப்படுத்தினார்.பின்னர் தோழர்கள் ஏ. சித்தையன், என்.வி. நடராசன், ஈ.வெ.கி. சம்பத், எஸ்.ஆர். சுப்ரமணியம், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, இரா. நெடுஞ்செழியன், மதுரைமுத்து, கே.கே. நீலமேகம் தோழியர் சத்தியவாணிமுத்து ஆகியவர்கள் பேசிய பிறகு அண்ணா ஆற்றிய நீண்ட உரையிலிருந்து...""...திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல, அதே கொள்கைப் பாதையில்தான் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகள், கருத்துகளில் மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.சுவீகாரப் பிள்ளைநான்தான் அவரோடு பலத்த கருத்த வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவில்லை என்றும் பேசுவது தவறு. உண்மைக்குப் புறம்பானது. எனக்கு, அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1933-ஆம் ஆண்டில்தான். அப்போது நான் பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சை முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கடுத்து திருப்பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது. அங்குதான் பெரியாரும் நானும் முதல் முதலில் சந்தித்தது எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அவருடைய சீர்திருத்தக் கருத்துகள் எனக்குத் பெரிதும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து, ""என்ன செய்கிறாய்?''என்று கேட்டார். ""படிக்கிறேன், பரீட்சை எழுதியிருக்கிறேன்''என்றேன். ""உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?'' என்றார். ""இல்லை, உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம்'' என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகிவிட்டேன். பொது வாழ்வில், அன்றையிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான். அவரது குடும்பத்தாருக்கு இன்றும் கூட அந்தத் தொடர்பு விடவில்லை, எனக்கும் அவருக்கும். ஏன் அவருடைய அண்ணார் மகன் சம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 ஆண்டுகள் அவரோடு பழகினேன். 14 ஆண்டுகளாகப் பொது வாழ்வில் இருக்கின்றேன்''.(தொடரும்)
27
27 ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்- 27
First Published : 12 Feb 2012 12:00:00 AM IST  இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர் தெரிந்த தலைவர் பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. வராது, அதே காரணத்தினால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில்கூடத் தலைவரை ஏற்படுத்தவில்லை. அவசியம் என்றும் கருதவில்லை. இதயபூர்வமான தலைவர் இதயத்திலே குடியேறிய தலைவர். நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை நாற்காலியைக் காலியாகவே வைத்திருக்கிறோம். அந்தப் பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, நாங்களோ அல்லது நானோ விரும்பவில்லை.நான் மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன், திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல. எதிர்நோக்கம் கொண்டதுமல்ல. கொள்கை ஒன்றே. கோட்பாடும் ஒன்றே. அங்கிருந்தவரில் பெரும்பாலோர்தான் இங்கு இருக்கின்றனர். குடும்பத் தலைவரின் போக்கு பிடிக்காத காரணத்தால், மக்கள் வேறு பண்ணையில் வசிக்கும் பண்பினைப் போல, தன்மையைப் போல, பகை உணர்ச்சி சற்றும் கிடையாது நமக்கு... அண்ணாவின் நீண்ட சொற்பொழிவு இப்படித் தொடர்ந்தது.விடுதலை ஏடு தலையங்கம்:தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டவுடன் 19.9.49 அன்று "விடுதலை'- இல் வெளியிட்ட தலையங்கம் வருமாறு:நம்மால் வெறுக்கப்பட்ட பல தோழர்கள் உட்பட சிலரது ஆதரவு தோழர் அண்ணாதுரைக்கு கிடைத்தது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் நமக்கிருந்த கவலை எல்லாம் சீக்கிரத்தில் ஒரு முடிவு ஏற்படவேண்டுமே என்பதுதானே ஒழிய வேறு எவ்விதமும் கவலைப்படவில்லை. ஆகவே நல்ல வாய்ப்பாக 17.9.49 அன்று தொல்லைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது. என்ன முடிவு என்றால் கருத்து வேற்றுமையாளர்களும், தொல்லை கொடுத்து இருக்க வேண்டிய அவசியமுள்ளவர்களும் பிரிந்து போய், விலகிப்போய் தங்களுக்கு என்று ஒரு தனிக் கழகத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்தச் சம்பவத்தை நாம் மனமார வரவேற்கிறோம்.இனி சில முக்கிய நிகழ்வுகள்:சென்னை பவழக்காரத் தெருவில் தற்காலிகமாக இருந்த தி.மு.க. அலுவலகத்தை, தங்கசாலைத் தெரு, 208ஆம் எண்ணுள்ள கட்டடத்திற்கு மாற்றினார் அண்ணா. என்னதான் திருவொற்றியூர் சண்முகம் நமக்கு வேண்டியவரானாலும் "என் வீட்டில்தான் கழகம் இருக்கிறது' என்று வாய்தவறி ஒரு நாள் அவர் சொல்லிவிட்டால், இத்தனை பேர் பட்டபாடும் வீணாகிவிடும். நமக்கென்று ஒரு குச்சோ, குடிசையோ நம்முடையதாக இருக்க வேண்டும் என்றார் அண்ணா.சம்பத்தின் "புது வாழ்வு' இதழ்:"புது வாழ்வு' மலர்ந்திருக்கிறது மகிழ்ச்சி நமக்கு. இளைஞர் உலகின் மலர்ச்சி எழுத்துகள் புதுவாழ்வைப் பொலியச் செய்துள்ளனதோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், க. அன்பழகன், இரா. செழியன், பூ. கணேசன் ஆகியவர்களின் கருத்தொளிகொண்டு புதுவாழ்வு மலர் பூக்கும் என்றும், தோழர்கள் கே.ஏ. மதியழகன், ப. வாணன், ஆகியோரின் எழுத்துகள் இதழுக்கு அழகூட்டும் என்றும் மலரை மக்களுக்குப் படைக்கும் பொறுப்பு தோழர் ஈ.வெ.கே. சம்பத்துடையது என்றும் அறிந்து மிக மிக அக மகிழ்கிறோம்.ஆசிரியக்குழுவிலிருக்கும் தோழர் பூ. கணேசன் பட்டம் பெற்ற நாள்முதல் பத்திரிகைத் துறையிலீடுபட்டு, திறமையும் செயல்வன்மையும் கொண்டவர். விடுதலையின் உதவி ஆசிரியராகவும், நிலவு ஆசிரியராகவும் இருந்து தன் எழுத்தால் எண்ணத்தால் இளைஞருலகுக்கு மகிழ்வூட்டியவர். தோழர் க. அன்பழகன் புது வாழ்வு மாத இதழ் ஆசிரியராக இருந்து, தனது எழுத்தோவியங்களால் மக்களுக்கு நல்விருந்தளித்தவர். தனது கருத்துக் குவியல்களால் களிப்பூட்டியவர் தோழர் செழியன், மன்றம் மூலமாக மறுமலர்ச்சிப் பாதையில் சிந்தனை பதித்து இலட்சியத் தோட்டம் காட்டுபவர் தோழர் ப. வாணன் தோழர் மதியழகன் மாணவர்கழகத் தலைவர் சிறந்த எண்ணங்களைத் தருவார்.பெரியார் கூற்றும், சம்பத் மறுப்பும்:கழகத்தை உடைத்தால் அண்ணாதுரைக்கு ஆதாயம், சம்பத்துக்குப் பட்டை நாமம் என்று பெரியார் விடுத்த அறிக்கைக்கு ஈ.வெ.கி. சம்பத் சூடாகப் பதிலளித்தார்.""கழகத்தை உடைத்தது நாங்களல்ல பொருந்தாத் திருமணத்தின் மூலம் பெரியார் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டார்.அவரே கதியென்று இருந்த எண்ணற்ற இளைஞர்கள் அண்ணாவை வற்புறுத்தித் தலைமை ஏற்குமாறு கேட்டும், அந்தப் பேரறிவாளர் தலைமை நாற்காலி காலியாகவே இருக்கும் நான் எப்போதும்போல் பொதுச் செயலாளர் என்று அறிவித்துவிட்டார்."மூன்று எம்.ஏ. படித்துவிட்டு, பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை எல்லாம் இருந்தும் அண்ணாத்துரை என்னோடு ஏன் காடு மேடு சுற்ற வேண்டும்? அவர் காங்கிரசில் இருந்தால் மந்திரியாகி இருப்பார்' என்று பெரியார் கூறியதுண்டு.இன்று அதே வாய்தான் என் அண்ணனை சுயநலமி என்றும் அவரால் நான் எதையோ இழந்துவிட்டது போலவும், எனக்குப் பட்டை நாமம் தீட்டிவிட்டார்கள் என்பது போலவும் சொல்கிறது மற்றவர்கள் சொல்லியிருந்தால் இது விஷமத்தனம், போக்கிரித்தனம். பெரியாரும் அந்த நிலைக்குக் கீழிறங்கிவிட்டார் என்பதுதான் உண்மையாகிறது.இன்னமும் அவர் பந்த பாசங்களுக்கு இடம் தர வேண்டியதில்லை. வாரிசுப்பட்டம் சுமக்க வேண்டிய நான், சொத்துகளுக்கு அதிபதியாகவேண்டிய நான் வெளியேறி ஓட்டாண்டியாகி விடுவேன் என்று அவர் கருதுவதானால் நான் இப்போதும் அவருக்கும் நாட்டுக்கும் சொல்லிக்கொள்கிறேன், சொத்துகள் எனக்கு தூசு, அண்ணாவும் கழகமும்தான் நான் பெற்றுள்ள விலைமதிக்க முடியாத சொத்துகள். அந்த இரண்டும் எனக்குப் போதும். லட்சங்கள் எனக்கு வேண்டாம் லட்சியங்கள் எனக்குப் போதும். கோடிகள் எனக்கு வேண்டாம் கொள்கைகள் போதும்.இனி எங்களுக்குப் பெரியார் பற்றிக் கவனமோ கவலையோ இல்லை. இளைஞர்களாகிய நாங்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றித் தீரவேண்டிய பணிகள் எண்ணிலடங்கா இதில் நாங்கள் வெற்றி காண்போம், அல்லது வீர மரணமெய்துவோம். எதுவாயினும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்''.இவ்வாறு சம்பத் விட்ட அறிக்கை கழகத்தில் அனைவரையும் உருக வைத்தது. இளமையிலும் அவருடைய லட்சிய தாகத்தை, கொள்கைப் பற்றைக் குறைவின்றி வெளிப்படுத்தியது.ஈ.வெ. கிருஷ்ணசாமி கருத்து:பெரியாரின் அண்ணாரும், சம்பத்தின் தந்தையாருமான பெரியவர் ஈ.வெ. கிருஷ்ணசாமியிடம் கருத்துக் கேட்டபோது அவர் குறிப்பிட்டது:""எங்களுடைய குடும்பத்தில் கொள்கைப் பிரச்சினையே தவிர சொத்துப் பிரச்சினை இல்லை. கொள்கை மாறுபாடு காரணமாக சம்பத் தன் குடும்பத்துடன் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறான். கருத்து மோதல் இருந்தாலும் இப்படியாகுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. சமுதாய மாற்றத்திற்குத் தம்பி (ராமசாமி) கடுமையாகப் பாடுபட்டு, கணிசமான வெற்றியும் கண்டிருக்கிறார். அது போலவே அரசியல் மாற்றத்திற்கும் அண்ணாதுரை, சம்பத் ஆகிய இளைஞர்களின் பணி வேண்டியதுதான். மற்றபடி குடும்ப நிலவரங்கள் பற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை....''இவ்வாறு பெரியவர் ஈ.வெ.கிருஷ்ணசாமி வெகு கண்ணியமாகவும் வெளிப்படையாகவும் கருத்துக் கூறியிருந்தார்.குற்றச்சாட்டும், பதில்களும்:பெருவாரியானவர்கள் தம்மைவிட்டு போய்விட்டார்கள் என்னும் எரிச்சலில் பெரியார் விலகியோர் பற்றி மீண்டும் மீண்டும் துரோகிகள் பொதுவாழ்வில் வயிறு வளர்ப்பவர்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டினார்.இதற்குப் பதில் அளித்த அண்ணா ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அவர் சொன்னார்:""நன்றாக நினைவிருக்கிறது ஒரு மோட்டாரில், பெரியாருடன் நானும் பொன்னம்பலனாரும், ஜோலார்பேட்டை பக்கமாகப் போய்க் கொண்டிருக்கிறோம், பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும், நான் சொன்னேன், பொது வாழ்க்கைக்கு நாற்பது வயதுக்கு மேல்தான் வரவேண்டும், ஏனெனில் நாற்பது வயதுவரை குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, குதூகலமாக இருந்துவிட்டு அனுபவிக்கவேண்டியதை அனுபவித்துவிட்டுப் பிறகு பொது வாழ்வில் புகுந்தால், உங்களைப் போல் மும்முரமாக தீவிரமாக வேலை செய்யமுடியும் என்றேன். முதுகைத் தட்டியபடி பெரியார் சொன்னார் முகமலர்ச்சியுடன், "நீ பைத்தியக்காரன். பொதுவாழ்வில் இருந்தபடி, வாழ்விலின்பத்தை அனுபவிக்க முடியாதா? என்ன உனக்கு அது தெரியவில்லை?' என்றார். அன்று இருந்து இன்று வரை, பொது வாழ்வைச் சொத்துக்காகப் பயன்படுத்தும் போக்கு என்னிடம் என்ன கண்டார்? கண்டிக்கும் உரிமை உண்டே அவருக்கு, எப்போதாவது என்னைக் கண்டிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்ததா?''சம்பத் கருத்துபெரியாரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சம்பத் தமது புதுவாழ்வு இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.நாடெங்கும் திராவிட முன்னேற்றக் கழகக் கிளைகள் தழைக்கின்றன. திராவிடர் கழக கொடிகள் பறந்த இடங்களில் இன்று தி.மு.க. கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. பல இடங்களில் திராவிடர் கழகப் பெயர்ப்பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கெல்லாம் தி.மு.க. பணிகள் வேகமாகச் செயல்பட துவங்கிவிட்டன. பெரியாருக்கு இந்தக் காட்சிகள் கண்ணை உறுத்த தம்முடைய கூடாரத்திலே மிக நெருங்கிய, நம்பிக்கைக்குரிய, செயல்திறன் மிக்க தோழர்கள் பலபேரை காணவில்லையென்பது இயல்பாகவே எரிச்சலைத்தான் தரும்.ஏதோ நாங்கள் நெடுநாள் திட்டமிட்டுச் சதி செய்து இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டது என்று அவர் அங்கலாய்ப்பதில் பயனில்லை. கொள்கை முனையில் அவர் ஒரு மன்னிக்க முடியாத தவறைச் செய்தார். அவரைப் பொறுத்தவரை அவரால் உணர முடியவில்லை. யார் செய்தாலும் விளைவு இப்படித்தான் இருக்கும். அதற்கு அவர்தான் காரணம்.நிலைமை எங்களை உண்டாக்கிற்று நிந்தனை எங்களை வளர்க்கிறது. நிலைமையை நாங்கள் உண்டாக்கவில்லை நிந்தனை கண்டு அஞ்சிப் பின்வாங்கி விட மாட்டோம்இவ்வாறு சம்பத் அவ்விதழில் குறிப்பிட்டிருந்தார்.சம்பத்தின் முழக்கம்திராவிட முன்னேற்றக் கழக கூட்டங்களில், "திராவிட நாடு திராவிடருக்கே' முழக்கம் எதிரொலிக்கலாயிற்று.அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், பொன்னம்பலனார், சி.பி. சிற்றரசு, டி.கே. சீனிவாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, காஞ்சி கல்யாணசுந்தரம், என்.எஸ். இளங்கோ, மதுரை முத்து, கே.வி.கே. சாமி, அலமேலு, அப்பாதுரை, சத்தியவாணிமுத்து, மு. கருணாநிதி, நாஞ்சில் மனோகரன், இளமுருகு, பொற்செல்வி, கோவை செழியன், சேலம் சித்தையன், ப.உ. சண்முகம், பூங்கோதை, ஆகிய எண்ணற்ற திராவிட இயக்க முன்னணிப் பேச்சாளர்கள் கண்டு காங்கிரஸ் பேரியக்கம் மருண்டது. பெரியாரை மட்டும் ஜீரணிக்க வேண்டிய எதிரியாகக் கருதிய காங்கிரஸ் இயக்கம், அவன் தம்பி அங்கதன் என்பதுபோல் தி.மு.க. வின் பிரச்சாரம் திக்கெட்டும் நடந்ததைக் கண்டு மெத்தவே அதிர்ச்சியுற்றது. அவர்களும் போட்டிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.ஆர்த்தெழுந்தது...கட்டாய இந்தி ஒழிப்பு, சமூக நீதி, திராவிட நாடு மீது வழக்கு, ஆரியமாயை மீது தடை, பேச்சுரிமை எழுத்துரிமை போராட்டம், இலட்சிய வரலாறு வழக்கு, செல்வராஜ் மீது வழக்கு போன்ற பல்வேறு போராட்டங்களை தி.மு.க. எடுத்துக்கொண்டு நடத்தியதால் அவ்வியக்கம் பரபரப்புக்குள்ளானது.கழக மேடைகளில் எழுச்சிதமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னை மெமோரியல் மண்டபத்தில் அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. அண்ணாவின் எழுத்துகளை மதிக்கக் கூடிய கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற ஓரிருவரது விருப்பத்தால் அண்ணாவையும் அழைத்திருந்தனர்.இவர் என்ன பேசப் போகிறார் என்று அசட்டையாக இருந்த எழுத்தாளர்கள் மத்தியில் அண்ணாவின் குரல் கம்பீரமாக ஒலிக்கத் தொடங்கியதும் எழுத்து மேதாவிகள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அண்ணாவின் பேச்சு அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டது.பாட்டாளியின் வியர்வை, உழைப்போரின் துன்பம், ஏழையின் ஏக்கம், அபலையின் கண்ணீர் இதெல்லாம் இந்த எழுத்தாளர்களுக்குத் தெரியாதவை. சமூகச் சூழ்நிலையை படம்பிடித்துக் காட்டி, சமுதாய மறுமலர்ச்சிக்கு உதவிடும் இலட்சிய எழுத்தாளர்கள் எண்ணற்றவர் தோன்ற வேண்டும்....இப்படியெல்லாம் ஒரு மணி நேரம் அண்ணா பேசி முடித்ததும் காங்கிரஸ் அமைச்சர் அவினாசிலிங்கனார் அண்ணாவைக் கட்டித் தழுவிக் கொண்டார். கூட்டமும் கலைந்தது. யார் பேச்சும் எடுபடவில்லை.இந்த மாநாட்டின் முன் வரிசையில் சம்பத்தும் அவரது தோழர்களும் காணப்பட்டனர். சம்பத் கருப்புச் சட்டை அணிந்து இந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்.இந்த மாநாட்டில்தான் கண்ணதாசன் முதன் முதலில் சம்பத்திடம் தம்மை அறிமுகம் செய்துகொண்டார். புதுக்கோட்டையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "திருமகள்' பத்திரிகையின் பிரதிநிதியாக அவர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டதோடு, அண்ணாவின் பேச்சை அப்படியே வரி விடாமல் எழுதி வெளியிட்டார்.அண்ணாவும் சம்பத்தும் பல முறை விவாதித்து இந்தப் போக்கை மாற்ற விழைந்தனர். தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்தும் எண்ணற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் திரண்டிருந்தனர். அவர்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டபின் சம்பத் பேசி பின்னர் இறுதியாக பேச்சாளர்களுக்கு அண்ணா சில விளக்கங்களை அளித்தார்.சம்பத் காட்டிய திசைவழிஇதுகாறும், இனவழிச் சிந்தனைக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை, நிலவழிச் சிந்தனைக்கும், அரசியல் பொருளாதார வழிசிந்தனைக்கும் தரும் வகையில் நமது பேச்சும் எழுத்தும் அமைய வேண்டும் என்னும் சம்பத்தின் கருத்தை அண்ணா உட்பட அனைவரும் ஆதரித்தனர்.பொதுக்கூட்டம் சிறப்புக்கூட்டம் மாவட்ட மாநில மாநாடுகள் என்று வகைப்படுத்தி அதற்கேற்ப பேச்சுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் சம்பத். அவர் மேலும் குறிப்பிடுகையில்""வால்டேர், ரூசோ, லெனின், மார்ட்டின் லூதர், கமால் பாட்சா, காரல் மார்க்ஸ், இங்கர்சால், பெர்னாட்ஷா போன்ற மேதைகளின் வரலாற்றையும் கருத்துகளையும் இடை இடையே கூற வேண்டும். மொழிப் பாதுகாப்பு நமது மூலாதாரக் கொள்கை. முத்தமிழ் இனிமையையும் நாம் பறைசாற்ற வேண்டும். வடவர் ஏகாதிபத்தியத்தைத் துணிவோடு எதிர்க்க வேண்டும் . ஏகாதிபத்திய காங்கிரஸ் அரசின் குறைபாடுகளை விளக்கி நமது கொள்கைகளையும் திட்டங்களையும் தெளிவாக உரைக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தொடவேண்டும். நடைமுறையில் அவற்றிற்குப் பரிகாரம் காணவேண்டும். போர்க்குணம் படைத்தவர்களாக, எந்தத் தியாகத்திற்கும் நாம் சித்தமாக வேண்டும். எக்காரணம் கொண்டும் தனி மனித வழிபாடு கூடாது...'' என்றெல்லாம் சம்பத் மிக அழுத்தமாகவே எடுத்துரைத்தார்.இறுதியாகப் பேசிய அண்ணா, ""இரு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிச் என்றும் எக்காரணங்கொண்டும் பெரியாரை விமர்சிக்கவோ, தாக்கவோ கூடாது என்றும் அவர் என்னதான் நம்மை இழிவுபடுத்தினாலும் தாங்கிக்கொண்டு அவரைப் பெருமைப்படுத்தும் வகையில்தான் நமது பேச்சும் எழுத்தும் அமைய வேண்டும்'' என்றும் அண்ணா கேட்டுக்கொண்டார்.கே.ஏ. மதியழகன் திராவிட மாணவர் கழகம் செயல்படுவதற்கான அறிக்கையை அமைப்பாளர் என்ற பொறுப்பில் வெளியிட்டார். இதன் விளைவாக மாணவர் அணி திரண்டது.பெரியாரைத் தாக்கிப் பேசக்கூடாது என்று விதித்த கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்ட வேலூர் இரத்தினவேல் எனும் கழகப் பேச்சாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கழகத்திலிருந்து ஓராண்டுக்காலம் நீக்கி வைக்கப்பட்டார்.(தொடரும்)தொகுத்து எழுதியவர்கள் :என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்.
28 ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் -28
First Published : 19 Feb 2012 03:02:19 PM IST மகள் திருமணத்தில் சம்பத் தம்பதி பெரியாருடன்... சம்பத்தின் தந்தையார் மறைவுபெரியாரின் அண்ணார் சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி 4.2.50 அன்று தமது 74ஆம் வயதில் காலமானார். பெரியார் மாளிகையில் சோகம் சூழ்ந்தது. பல திசைகளிலிருந்தும் கழகத்தவர் திரண்டு பெரியவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டத்தில் பெரியார் தமையனாரை உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார். அண்ணா விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார். சம்பத்தும் அவரது சகோதரர் செல்வம், தமக்கையார் மிராண்டா, தங்கை செல்லா, சுலோச்சனா சம்பத் அனைவரும் சோகமே உருவாகக் காணப்பட்டனர்.விடுதலை 5.2.50 இதழில் "வைத்திய வள்ளல் மறைவு' என்னும் தலைப்பிட்டுத் தலையங்கம் இடம் பெற்றது.அண்ணா சம்பத் அன்புச்சங்கிலிஅண்ணாவின் இதயத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர் சம்பத். அண்ணாவுக்கு லட்சக்கணக்கில் தம்பி இருந்தாலும் சம்பத்துக்கு அண்ணன் அண்ணாதான். அண்ணாவும் மற்ற தம்பிமார்களைவிட சம்பத் தமது உடன் பிறவாத தம்பி என்றே பாசம் காட்டினார். சம்பத்தை மட்டும்தான் "அவன்' "இவன்' என்று "அன்' விகுதியில் குறிப்பிடுவார். அந்த அளவு இருவரிடமும் நெருக்கம் ஓங்கி இருந்தது.இப்படியாக அண்ணாவோடு மட்டுமல்லாமல் அண்ணாவின் குடும்பத்தாரிடமும் நெருங்கிப் பழகியவர் சம்பத். சமையல் கட்டுவரை சென்று ராணி அம்மையாரிடம் சமையல் குறிப்புகளை எல்லாம் சொல்லிச் சமைக்கச் செய்து அண்ணாவும் சம்பத்தும் ஒரே வட்டிலில் உண்டு, ஒரே கட்டிலில் தூங்கிய பாசமிகு நாட்கள் பசுமையானவைபாரதிதாசனின் மணிவிழாவினையொட்டி சம்பத் நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் சம்பத்தின் "புது வாழ்வு' இதழுக்குக் கீழ்கண்ட கவிதையினை அளித்தார். அது மனிதகுலத்திற்கு விடுக்கும் அறைகூவலாகும்.நடத்து லோகத்தைமனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்றுஇமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய்தோளை உயர்த்து, சுடர்முகம் தூக்குமீசையை முறுக்கி மேலே ஏற்றுவிழித்த விழியில் மேதினிக் கொளிசெய்நகைப்பை முழக்கு நடத்து லோகத்தைபடேல் சம்பத் சந்திப்புஇந்தியாவின் உள்துறை அமைச்சர் இரும்பு மனிதர் வல்லபாய்படேல் காலமானார். திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு அவர்மீது அளவற்ற மதிப்பு. மேலும் வகுப்புரிமை குறித்து அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யவேண்டும் என்று பட்டேல் பெங்களுர் வந்தபோது சம்பத் சந்தித்துக் கேட்டதற்கு பட்டேலும் சம்மதித்து, ஆவன செய்வதாகக் கூறினார். அதன்படி பட்டேல் மேற்கொண்ட முழு முயற்சியின் காரணமாக, அரசியல் சட்டம் 15ஆம் விதியில் 4ஆம் உட்பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டம் ஏற்பட்ட ஓராண்டில் இது முதல் திருத்தமாகும். எந்த ஒரு பதவியிலும் இல்லாமல் சம்பத் பட்டேலைச் சந்தித்ததுடன் இடைவிடாத கடிதத் தொடர்பால் இச்சட்டப்பிரிவு நிறைவேறக் காரணமாக இருந்தார். இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம், சமூக நிலையாலும், கல்வியாலும் பிற்படுத்தப்பட்ட குடி மக்கள் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் ஆகியோரின் முன்னேற்றம் கருதி அரசு செய்யும் எந்தத் தனி ஏற்பாட்டையும் இந்த விதியின் ஒரு பிரிவோ 29வது விதியின் 2ஆம் உட்பிரிவோ தடை செய்யாது என்னும் திருத்தம் 1950 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.நெடுஞ்செழியன் மீது குற்றச்சாட்டுகாஞ்சிபுரம் திராவிட அலுவலகத்தில் கழகத்தின் பொதுக்குழு கூடியது. மாவட்டச் செயலாளர் சி.வி.எம். அண்ணாமலை, கே.டி.எஸ். மணி, வெ. சம்பந்தம் ஆகிய தோழர்கள் விருந்து படைத்திடும் பணியில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு மாநிலம் முழுவதுமிருந்தும் 78 உறுப்பினர்கள் வந்திருந்தனர்.பெரியாரை நம்பாமல் பல்லாயிரவர், சாமானியர்களான நம்மை நம்பி வந்துள்ளனர். எல்லோரும் ஏழை பாழையர்கள், ஏதுமற்றவர்கள், லட்சிய உறுதி என்ற ஒன்றை மட்டுமே நம்பி, கழகத்தின் கட்டளைகளுக்குச் சித்தமாக, எந்தத் தியாகத்திற்கும் தயாராயிருக்கிறார்கள். குன்றத்தூரில் மார்பில் குண்டடிபட்டு மாங்காடு குட்டி மாண்டிருக்கிறார் இவரைப் போன்ற லட்சிய வீரர்கள் நமக்குச் செல்வமாக கிடைத்துள்ளனர். சென்னைத் தடியடியில் மேலும் இரண்டு அடிபட்டிருந்தால் அப்பாதுரையாரை நாம் உயிரோடு பார்த்திருக்க முடியாது. என்.வி.என். மற்றும் எண்ணற்ற தோழர்கள் சிறைத்தியாகத்தை ஏற்றுள்ளனர். நம்முடைய ஆசைத்தம்பியை சிறை அதிகாரிகள் மொட்டையடித்து வெளியே அனுப்பியிருக்கின்றனர். இப்படியெல்லாம் மழலை நிலையிலேயே கழகம் மகத்தான தியாகங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.நான் இங்கே குற்றச்சாட்டாக அல்ல, ஆங்கிலத்தில், சுய விமர்சனம் என்பார்களே, அப்படியோர் விளக்கத்தை கேட்டறிவதற்காகச் சொல்கிறேன். ஆரம்பத்திலேயே தவறுகளைத் தவிர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகச் சொல்கிறேன். அதிலும் திராவிடர் கழகத்திற்கும் நமக்குமுள்ள வித்தியாசமே, நமது அமைப்பு ஜனநாயக அடிப்படை கொண்டது என்பதுதான். ஆகவே ஜனநாயக ரீதியாக விவாதிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நாட்டின் பல பாகங்களிலும் நம்முடைய தோழர்கள் 144 தடையை மீறிக் கூட்டங்களில் பேசிச் சிறை சென்றிருக்கின்றனர். ஆனால் நமது கழகத்தின் பிரசாரக் குழுச் செயலாளர் நெடுஞ்செழியன் திருச்சி மாவட்டம் நாரணமங்கலத்தில் தாம் ஒப்புக் கொண்ட கூட்டத்தில் தடையை மீறிப் பேசாமல் திரும்பி வந்தார். ஆனால் உள்ளுர்த் தோழர்கள் தடை மீறிப் பேசி சிறை சென்றிருக்கிறார்கள். இவர் ஏன் திரும்பி வந்தார்? அதற்கு என்ன விளக்கம் தருகிறார்?.... என்று சம்பத் கேட்டபோது பலரும் திகைத்தனர்.முதல் பொதுக்குழுவிலேயே பிரச்சினையா? குருவி இப்போதுதான் கூடுகட்டுகிறது. இதிலே குற்றம் காண்பதா? இப்படிச் சிலர் குறுக்கிட்டனர். அண்ணாவின் நிழல் போன்றவர் சம்பத், அவர் தனியாக அண்ணாவிடமே இதைப் பேசியிருக்கலாம். இப்படியும் ஒருவர். வேறு சில உறுப்பினர்கள், சம்பத் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கழகத்தின் கட்டளையை ஏற்றுச் சாதாரணத் தொண்டன் தியாகம் செய்கிறான், பிரச்சார குழுச் செயலாளர் பின் வாங்கினால், என்ன அர்த்தம் என்று கேட்டனர்.அண்ணா திகைத்தார். தேம்பினார். சம்பத்தை நோக்கி, அதைப் பிறகு பேசிக்கொள்ளலாம். இப்போது சட்டதிட்ட நகல் பற்றி முக்கிய விவாதம் நடைபெற வேண்டியிருக்கிறது. தம்பி அதை விட்டுவிடு.. என்று கெஞ்சினார். அதனையொட்டி சம்பத் முதல் மாநில மாநாடு சென்னையிலே நடத்துவது பற்றி தமது கருத்துகளைத் தெரிவித்து உரையை முடித்தார்.தேர்தல் உத்தி சம்பத் வெளியீடு3.3.51இல் தஞ்சை மாவட்ட தி.மு.க. மாநாடு என். ஜீவரத்தினம் தலைமையில் நடைபெற்றது. காஞ்சி கல்யாண சுந்தரம் சிறப்புரையாற்றினார். அண்ணா, சம்பத் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.6.4.51இல் சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத்துக்கு, இந்தி ஆதிக்கம் ஒழிக முழக்கத்தோடு மக்கள் அணி திரண்டு கருப்புக் கொடி காட்டினர்.மே 5, 6 தேதிகளில் சேலம் மாவட்ட தி.மு.க. மாநாடு நாகர்கோவில் வி.என். ஜான் தலைமையில் நடைபெற்றது. சத்தியவாணிமுத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அண்ணா, சம்பத், முன்னணியினர் பங்கேற்றனர். இரவு நடைபெற்ற "சந்திர மோகன்' நாடகத்தில் சிவாஜியாக சம்பத் நடித்தார்.16.7.51இல் கோலார் தங்க வயல் வந்திருந்த பிரதமர் நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது.மதுரைப் பொதுக்குழு:17.7.51இல் மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூடியது. சம்பத் உள்ளிட்ட 84 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கழகத்தின் சட்டதிட்டங்களை கே.ஏ. மதியழகன் முன்வைத்தார்.வருகிற (1952) பொதுத் தேர்தலில் கழகம் கடைப்பிடிக்க வேண்டிய முறையையும் ஐக்கிய முன்னணி பிரச்சினையையும் பொதுக்குழு ஆராய்ந்தது.இதுபற்றி, சம்பத் தமது கருத்தை வெளியிட்டார்:திராவிடரின் கருத்தை அறியாமலும் தென்னகத்தின் உரிமைக்கு ஊறு விளைவித்திடும் வகையிலும், காங்கிரசாரின் ஏகாதிபத்திய எண்ணப்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தை நாம் ஏற்க முடியாது. இதைக் குறிக்கும் வகையில் இதற்கு அடையாளமாகக் கழகம் இந்த முதல் பொதுத் தேர்தலில் கலந்துகொள்ளாது புறக்கணிக்க வேண்டும். அண்ணா நினைப்பது போல் நாம் நம்முடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியது அவசியம் என்று கருதினாலும் கூட, அதற்கான மாற்று வழி உண்டு.இந்தத் தேர்தலில் கழகம் குறிப்பிடும் கொள்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகிற கம்யூனிஸ்ட், மற்றும் காங்கிரஸ் அல்லாத திறமையாளர்களை பொதுச் செயலாளர் அண்ணா பரிசீலித்து, அந்த வேட்பாளர்களுக்கு கழகம் ஆதரவு தரலாம். இதனை இந்தப் பொதுக்குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன்.இதனைப் பொதுக்குழு ஏற்றது.(1) திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன். (2) சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ உறுப்பினரால் மேற்கண்ட பிரச்சினை சம்பந்தமாகவும், தி.மு.க. கழகக் கொள்கைக்கு ஆதரவு தேடும் வகையிலும் பணியாற்றி வருவேன். (3) சுரண்டலையும், எதேச்சாதிகாரத்தையும் ஒழிக்க, தி.மு.க. வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும்விதமாகச் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பணியாற்ற உறுதி கூறுகிறேன் என்னும் மூன்று உறுதிமொழிகள். அக்கொள்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகள்.நடைபெறும் மாநில மாநாட்டில் பொதுச் செயலாளர் அதிகாரபூர்வமாக தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர்களை அறிவிப்பார் என்றும் அதற்குப் பின்னரே கழகத் தோழர்கள் தேர்தல் களத்தில் இறங்கவேண்டும் என்றும் இப்பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.இத்தீர்மானத்திற்குப் பிறகு தேர்தலில் வேட்பாளராக நிற்க விரும்பிய கம்யூனிஸ்ட் தோழர்களும், காங்கிரஸ் அல்லாதார் கட்சியினரும், சுயேட்சையாளர்களும், அவ்வப்போது அண்ணாவைச் சந்தித்து ஆதரவு கேட்டவண்ணமிருந்தனர்.முதல் மாநில மாநாடு:திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, 1951 டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னை, எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் (பின்னாளில் கண்ணப்பர் திடல்) நடைபெற ஏற்பாடாகியிருந்தது. மதுரைப் பொதுக்குழுவில் இதுபற்றி மிக உற்சாகமாகப் பேசப்பட்டது. மாநாடு குறித்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.மாநாட்டுத் தலைவர்: அண்ணா, திறப்பாளர்: குடந்தை கே.கே. நீலமேகம், கண்காட்சித் திறப்பாளர்: சி.பி. சிற்றரசு, வரவேற்புக் குழுத்தலைவர்: தொண்டர் படைத்தலைவர்: கே.எம். கண்ணபிரான் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்புக்குழு உறுப்பினர்கள்.இவ்வாறு பொதுக்குழு தீர்மானித்தது.தி.மு.க. மாளிகை திறப்பு விழா:தி.மு. கழகத்துக்குச் சொந்தமாகத் தலைமை நிலையம் இயங்கச் சென்னை ராயபுரம் சூரியநாராயணச் செட்டித் தெருவில் 24ஆம் எண் உள்ள கட்டடம் ரூ.30,000க்கு 5.11.51-இல் வாங்கப்பட்டது. தாழ்வாரங்கள், கூடங்கள், அறைகள் வசதியாக அமைந்துள்ள எழிலான இரண்டு மாடிக் கட்டடம். இந்தக் கட்டடத்தைக் கண்டுபிடித்தவர் அண்ணாவின் நண்பர் தேவராஜ் முதலியார். அண்ணாவும், கே.ஆர். ராமசாமியும் நாடகங்கள் நடத்தி, அந்த வசூல் பணத்தில் கழகத்திற்காகக் கட்டடம் வாங்கப்பட்டது. இந்த வசூல் நாடகங்களில் சம்பத்தும் பாத்திரமேற்று நடித்தார்.2.12.51 அன்று தலைமைக் கழகம் "அறிவகத்தை' தோழர் வி.எம். ஜான் திறந்து வைத்தார். அண்ணா, சம்பத் மற்றும் முன்னணியினர் பங்கேற்றனர். இவ்விழா மாலை நடைபெற்றது. முன்னணியினர் பேசியபின் இசைச்செல்வி ஜி. கஸ்தூரியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. தலைமை நிலையம் இங்கே செயல்படத் தொடங்கியது.எம்.ஜி.ஆர். கட்சியில் சேர்ந்தார்:திராவிடர் கழகத்திலிருந்தபோது அண்ணா, "சந்திர மோகன்' நாடகத்தை எழுதி அதில் சிவாஜியாக யாரை நடிக்க வைப்பது என்ற யோசனை எழுந்தபோது அருகிலிருந்த டி.வி. நாராயணசாமி கோவையில் எம்.ஜி. ராமச்சந்தர் இருக்கிறார். சில சில படங்களில் சிறு பாத்திரங்களில் நடிக்கிறார். அவரை இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிச் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டார்.அதற்குப்பின் எம்.ஜி. ராமச்சந்தர் "மருத நாட்டு இளவரசி' "மர்மயோகி', "மந்திரகுமாரி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து, எம்.ஜி.ஆர். என்னும் பெயருடன் புகழ் பெறலானார். "மர்மயோகி' படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு புரட்சிக்காரராக கருப்புச்சட்டை போட்டு வந்து குதிப்பார்; கொட்டகையே அதிரும். இப்படித்தான் தேசியத்திலிருந்து விடுபட்டு திராவிட இயக்கத்திற்கு வரலானார். அந்தக் கட்டத்தில் (1951) அவர் டி.வி. நாராயணசாமி, கருணாநிதி ஆகியோரின் முயற்சியால், கதர்ச்சட்டை, குங்குமப்பொட்டு, ருத்திராட்ச மாலை ஆகியவற்றைக் களைந்துவிட்டுத் தி.மு.க.வில் சேர்ந்தார்.சென்னையில் முதல் மாநில மாநாடுகழகம் பிறந்த குறுகிய காலத்தில் 12 மாவட்ட மாநாடுகளை மகத்தான முறையில் நடத்தி, ஆட்சியாளரின் கடும் அடக்கு முறைகளுக்கிடையே பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி தியாக முத்திரை குத்திக் கொண்ட முன்னேற்றக் கழகம் மிடுக்கோடு தன் முதல் மாநில மாநாட்டை 1951ஆம் ஆண்டு டிசம்பர் 13,14,15,16 தேதிகளில் நடத்தியது. இந்த மாநாட்டுப் பணிகள் இரவு பகல் நடந்து கொண்டிருக்கும்போது அண்ணா, சம்பத் முன்னணியினர் இரவு 2.00 மணிவரையிலும்கூட பணிகளை, உடனிருந்து உற்சாகப்படுத்துவர்.அண்ணா தமது பேருரையைத் தொடங்குகின்ற போது, "தலைவர் அவர்களே', "தோழர்களே' என்றெல்லாம் விளிக்கவில்லை. தமது "கணீர்' என்ற குரலில், "கண்ணீர்த்துளிகளே' என் "கண்ணின் மணிகளே', "கழகக் காவலர்களே' என்று தொடங்கியபோது, எதிரே குழுமியிருந்த மக்கள் வெள்ளம் உணர்ச்சி வசப்பட்டு பலத்த கரவொலி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பேச்சு களை கட்டிய நேரத்தில் கூட்டத்தில் ஆரவாரம் குழப்பம், எம்.ஜி.ஆர். வருகிறார் என்னும் முழக்கத்தோடு அமளி ஏற்பட்டது. அண்ணா பேச முடியாமல் அமர்ந்துவிட்டார். கூட்டத்தின் மையப்பகுதியில் இருந்து ஸ்டண்ட் நடிகர்களின் பாதுகாப்புடன் எம்.ஜி.ஆர் மேடை நோக்கி வருகிறார். அவர் மேடைக்கு வந்து சேர 10 நிமிடங்களாயின. அதுவரை அமளி, கூச்சல். மேடையில் ஏறிய எம்.ஜி.ஆர். அண்ணாவுக்கும் கூட்டத்தினருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பின்னால்போய் உட்கார்ந்துவிட்டார். கூட்டத்தில் அமைதி திரும்பவில்லை. ஆனாலும் அண்ணா தம் பேச்சை தொடரலானார். குரலை உயர்த்தி 10 நிமிடம் விடாது பேசிப் பார்த்தார். கூச்சலடங்கவில்லை. எம்.ஜி.ஆரை பேசச் சொல்லுங்கள் என்று ஒரு பக்கத்திலிருந்து கூச்சல் கிளம்பியது. ஆத்திரப்பட்ட அண்ணா வேட்பாளர் பட்டியல் பத்திரிகையில் வரும் என்று அத்துடன் மாநாடு முடிந்தது என்றும் அறிவித்துவிட்டார்.அண்ணா, சம்பத் முதலான தோழர்கள் காரில் ஏறிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றனர். அனைவருமே ஆத்திரவயப்பட்டிருந்ததால் காரில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கடற்கரையில் அமர்ந்ததும் சம்பத் அமைதியைக் கலைத்து ஆவேசமாக இரண்டொரு வார்த்தைகளைக் கூறினார்.""கட்சியின் முதல் மாநில மாநாடு. ஏழைத் தொண்டர்கள் அண்டா குண்டாக்களை அடமானம் வைத்துவிட்டு அண்ணா என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க வந்திருக்கிறார்கள். 4 நாட்கள் மாநாட்டில் ஏதாவதொரு நாளில் எம்.ஜி.ஆர் பேசிவிட்டுப் போயிருக்கலாம். கடைசியாக அண்ணா பேசுகிற போதுதான் வரவேண்டுமென்று பலப்பரீட்சை செய்திருக்கிறார். இதை அண்ணா சாதாரணமாகக் கருதக் கூடாது. திராவிடர் கழகத்திலிருந்த கட்டுப்பாடு தி.மு.கவில் இல்லை, கூத்தடிக்கிறார்கள் என்று கட்சி நகைப்பிற்கிடமாகி விடக்கூடாது''இவ்வாறு சம்பத் சொன்னார். ஆளுக்கொரு கருத்தைச் சொன்னார்கள். என்.வி.என். அழுதார். ""ஏன் என்ன ஆச்சி?'' என்று கேட்டார் அண்ணா. ""லட்சக்கணக்கில் மக்கள் வந்தும் உங்கள் பேச்சைக் கேட்க முடியாமல் போய்விட்டதே'' என்றார் என்.வி.என். "அடுத்த மாநாட்டில் பேசிவிடலாம்' என்று சொல்லி அண்ணா பேச்சை மாற்றினார்.(தொடரும்)தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்.
First Published : 29 Feb 2012 09:26:42 AM IST  கோவில்பட்டி மாநாட்டில் கருணாநிதி ஒரு கருத்தைச் சொல்ல, அதற்கு சம்பத் கடுமையாக மறுமொழி கூற தொடர்ந்து பேசிய அண்ணா, ""தவழுகின்ற பருவத்திலுள்ள இந்தக் கட்சியை எத்தனை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி வருகிறோம்'' என்றும் ""இதை ஆரோக்கியமாக வளர்த்திட புதியவர்கள் கழகத் தலைமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொதுக் குழுவில் சொல்லவேண்டியதை பொதுக்கூட்டத்தில் சொல்லக் கூடாது'' என்றும் கருணாநிதிக்கு அறிவுரை கூறும் வகையில் பேசினார். மாநாடு முடிந்த பின்னர் அரங்கண்ணலை அழைத்து கருணாநிதி பேசியதையும், சம்பத் பதில் சொல்லியதையும் இரண்டையுமே திராவிட நாடு இதழில் வெளியிட வேண்டும் என்றும் சொன்னார். "நம் நாடு' கழக ஏடு: தி.மு. கழகத்திற்காக அதிகாரபூர்வமாக ஒரு நாளிதழ் வேண்டுமென்பதை ஒவ்வொரு பொதுக் குழுவிலும் தோழர்கள் வற்புறுத்தினர். 1952 கோவைப் பொதுக்குழு இதற்கு அனுமதியளித்தது. எனினும் ஓராண்டு காலம்வரை அதன் ஏற்பாடுகள் நத்தை வேகத்தில் இருந்தன. 1953இல் அரக்கோணம் பொதுக்குழுவில் சம்பத் வற்புறுத்தியதின் பேரில், ஈரோட்டில் "குடியரசு' மேலாளராக இருந்த அ. பொன்னம்பலனார் பொறுப்பில் "நம் நாடு' வெளிவர ஆவன செய்யப்பட்டது. அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு "நம் நாடு' நாளிதழ் 1953ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் நாள்முதல் அறிவகத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது. புதிய பொதுச் செயலாளர் தி.மு. கழகத்துக்கு புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க பொதுக்குழு 24.4.55இல் தியாகராயர் கல்லூரியில் கூடியது. நெடுஞ்செழியனைப் பொதுச் செயலாளராக்க வேண்டுமென்று அண்ணா விரும்பினார். ஒரு பக்கம் மதியழகனுக்கும் இன்னொரு பக்கம் கருணாநிதிக்கும் அந்த ஆசைகள் இருந்தன. ஆனால் சம்பத் போட்டியிடுவாரா அல்லது யாரையும் ஆதரிப்பாரா என்று எதிர்பார்ப்புக்கள் பலமாக இருந்தன. தற்போதைக்கு இதில் ஒரு சர்ச்சை வேண்டியதில்லையென்று சம்பத் நினைத்தார். அண்ணா விருப்பப்படி, அவர் சொல்வதற்காக நெடுஞ்செழியனுக்கு ஒரு வாய்ப்பு போகட்டும். பிறகு நிலைமைகளைப் பார்த்துப் பரிசீலித்துக் கொள்ளலாமென்ற எண்ணத்தில் இருந்தார். அண்ணாவும் நெடுஞ்செழியனை பொதுச் செயலாளராக்கும் வரை சம்பத்தை எந்த பக்கமும் அசையாது தம் பிடியிலேயே வைத்துக் கொண்டார். ""சம்பத், நீதான் நெடுஞ்செழியனை முன்மொழிய வேண்டும். இதில் சரியென்ற பதிலைத்தவிர வேறு கூடாது'' இவ்வாறு அண்ணா கேட்டார். ""போராட்டச் சூழ்நிலையில் பெரும் சோதனைக் கட்டத்தில் கழகம் உள்ளது. அதற்கேற்ற சுறுசுறுப்பு இருக்குமா? என்பதுதான் அண்ணா என் கேள்வி'' என்று சம்பத் பதில் சொன்னார். ""எல்லாம் நாம் தானே இருந்து கவனிக்கப்போகிறோம். நாம் சொல்வதை நெடுஞ்செழியன் நிறைவேற்றப் போகிறார். அவ்வளவுதானே. அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் சம்பத்'' என்றார் அண்ணா. ""மதியழகனுக்கு ஒரு நல்ல பொறுப்பு தரப்படுவது அவசியம், பொதுக்குழுவிலும் கூட சில திறமையாளர்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்....'' இவ்வாறு சம்பத் சொன்னார். ""மதிக்கு வேண்டியதைச் செய்வோம். இந்தப் பொதுக்குழு முடிந்த பிறகு சில பேர்களை சேர்ப்பதைப் பற்றி ஆலோசிப்போம்...'' இது அண்ணா. பொதுக்குழு கூட்டம் அண்ணா தலைமையில் ஆரம்பமாகியது. ஈ.வெ.கி. சம்பத், இரா. நெடுஞ்செழியனை கழகத்தின் பொதுச் செயலாளராக முன்மொழிந்தார். நான் அல்ல, நாம் :அண்ணாவுக்கு சம்பத் தந்த இலக்கணம் ஜனநாயகக் கடமையில் ஈடுபடுவது, பொதுத் தேர்தலில் நின்று சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளுக்குச் செல்வது, கழகத்தின் லட்சியங்களுக்குச் சட்டச் சம்மதம் பெறுவது இத்தகைய மிக முக்கிய திருப்பத்தை திருச்சி மாநாட்டில் காணவேண்டும். விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்பது தான் சம்பத்தின் நோக்கம். கழகத்தின் மூத்த தலைவர்கள் கே.கே. நீலமேகம் போன்றவர்கள், இதற்குள் தேர்தலில் நின்றால் கட்சி அழிந்துவிடும். தவறு செய்யாத சீமான்களையுடைய நீதிக்கட்சியே தேர்தலில் ஈடுபட்டு ஒழிந்துவிட்டது. தி.மு.க.வுக்கும் அற்பாயுசு முடிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றனர். கழகத்தில் அண்ணா உட்படப் பலர் இப்படித்தான் சிந்தித்தனர். ஆனால், சம்பத் ஒருவர் மட்டுமே இதில் திட்டவட்டமாக மாறுபட்டார். ""தி.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு? அவர்கள் சமுதாயப் பிரச்சினைகளைப் பார்க்கிறார்கள். நாம் அரசியல் களத்தில் இருக்கிறோம். தேர்தலில் பங்கேற்றால்தான் இது முழு அரசியல் இயக்கமாகக் கருதப்படும். இல்லையேல் அங்கே பெரியார் ஒரு மடாதிபதி; மடம் நடத்துகிறார். இங்கே காஞ்சியில் ஒரு மடம் நடக்கிறது என்றாகிவிடும்'' இப்படியெல்லாம் தேர்தலில் ஈடுபடுவது குறித்துக் கடுமையாகவே விவாதித்தார் சம்பத். ""பொறுப்பேற்றுக் கொள்வது கடினமல்ல. ஆனால் பக்குவப்படாத நிலையில் ஆட்சிப் பொறுப்பு நம்மிடம் வந்துவிடுமானால் நம்மில் பலர் தவறு செய்யக்கூடும். அதனால் குறுகிய காலத்திலேயே கட்சியின் பெயர் கெட்டுவிடும். எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலை எனக்கில்லை என்பது உனக்குத் தெரியாதா?'' என்றார் அண்ணா. ""சுயநலமிகளையும் பலவீனர்களையும் ஒதுக்கிவிட்டு, செயல்திறன், லட்சியப் பிடிப்பு, தியாக உள்ளம் படைத்தவர்களைப் பொறுப்பில் அமர்த்தினால் ஒன்றும் தவறு ஏற்படாது''. இது சம்பத்தின் பதில். எப்போதும் ஒரு தீவிரமான வாக்குவாதம் ஏற்படுகிறபோது முடிந்தவரை காரியத்தைத் தவிர்த்து விடப் பார்ப்பார் அண்ணா அல்லது திசைதிருப்பி விடுவார்: ""சம்பத் முக்கியமானதை மறந்துவிட்டேன். எல்பின்ஸ்டன் தியேட்டரில் "டிஸ்ரேலி' என்ற நல்லதொரு ஆங்கிலப் படம் நடக்கிறது. பார்த்துவிட்டு வருவோம் வா'' என்று தன் தம்பி சம்பத்தை நயந்து அழைத்துக் கொண்டு போனார் அண்ணா. இருவரும் அந்தப் படத்தை ரசித்துப் பார்த்தனர். திருச்சி மாநில மாநாடு மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் நாள் மாநாட்டிலும் பலர் பேசினர். மூன்றாம் நாள் மே.19 சிறப்புச் சொற்பொழிவுகள் ஆரம்பமாயின. மதியழகன், அன்பழகன், கருணாநிதி, கண்ணதாசன், சத்தியவாணிமுத்து, அரங்கண்ணல், ஆசைத்தம்பி ஆகியோர் பேசியபின் பெரும் கரவொலிக்கிடையே சம்பத் பேச அழைக்கப்பட்டார். "இந்திய அரசியலில் கொள்கைக் குழப்பங்கள்' என்ற தலைப்பில் அவர் ஒரு வரலாற்றுச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். அதுவே மாநாட்டிற்கு மணிமகுடமாய்த் திகழ்ந்தது. இடைவேளை வந்தும் கூட, உணவையும் மறந்து லட்சோபலட்சம் மக்கள் அவருடைய வீர உரையில் மெய்மறந்தனர். திருச்சி மாநில மாநாட்டில் சேலம் க. ராசாராம், சம்பத் முயற்சியால் தி.மு.க.வில் இணைந்தார். சம்பத் உரை அண்ணா பாராட்டு திருச்சி மாநில மாநாட்டில் சம்பத் முழக்கம் கேட்டு அனைவரும் பாராட்டினர். இறுதியாக அண்ணா பேசியபோது அவரது உரை நெடுகிலும் ஆங்காங்கே சம்பத்தையும் அவரது கருத்துரை பற்றியும் பாராட்டினார். மேற்கோள் காட்டினார். ""கழகம் தேர்தலில் ஈடுபடுவதற்கு மக்கள் இங்கே ஆணை பிறப்பித்துள்ளனர். இது பற்றி சம்பத் ஒரு நல்ல கருத்தைத் தெரிவித்தார். பெருவாரியானவர்கள் நாம் தேர்தலில் ஈடுபடவேண்டி விரும்பி வாக்களித்திருக்கிறார்கள். நமக்கு அதற்குரிய வளர்ச்சி இருக்கிறதா அந்தப் பக்குவத்தை நாம் பெற்றுவிட்டோமா என்றால் போதுமானதல்ல என்பதுதான் உண்மை. சம்பத் சொன்னதுபோல் அந்தக் கருத்தை எடுத்துக் காட்டும் வகையிலேதான் 4000 பேர் நாம் தேர்தலில் நிற்கவேண்டாமென்று வாக்களித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் நம்மவர்கள் அல்ல என்று தள்ளிவிடமுடியாது. நமக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலே அவர்கள் அக்கறை உள்ளவர்கள் என்று தம்பி சொன்ன கருத்தை நானும் குறிப்பிடுவது அவசியம். பருவம் அடைந்து விட்ட பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பது போல் தி.மு.கழகத்தை மக்கள் தேர்தலிலே நிறுத்திப் பார்க்க விரும்புகிறார்கள். (இதை வைத்துத்தான் தினத்தந்தி ஏடு தி.மு.க.வை பருவப் பெண் என்று கேலிச்சித்திரம் தீட்டிக் காட்டியது.) தேர்தலில் பங்கேற்க நான் தயங்கியதுண்டு. அதைத் தம்பி சம்பத்திடம் சொன்னபோது, ""நான் என்று ஏன் அண்ணா சொல்கிறீர்கள், நாம் என்று சொல்லுங்கள்'' என்று சொன்னான். இந்த நம்மில் பல்லாயிரவர் அடக்கம். அனைவரது ஆற்றலும் சேர்ந்தால் வெற்றி தவிர வேறென்ன என்று "நாம்' தத்துவத்தைத் தம்பி சம்பத் நமக்களித்திருக்கிறான். தத்துவத்தைக் கூறுவதிலே மட்டும்தானா சம்பத் வாதம் புரிகிறான் என்றால், சம்மட்டி அடி என்கின்றனர் எதிரிகள். கண்ணதாசன் பேச்சில் காரம் கவிதை வடிவில் கிடைக்கிறது. மதியழகன் பேச்சில் மாணவர் உள்ளமெலாம் நிறைகிறது. ஆசைத்தம்பி பேச்சில் அழுத்தத்திருத்தம் அழகு பெறுகிறது''. சம்பத்தும் அண்ணாவும் பேசிய உரைகள் நூல் வடிவில் "கொள்கைக் குழப்பமும் லட்சிய விளக்கமும்' என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. சம்பத் வெற்றி 1957 ஆம் ஆண்டு மார்ச் பொதுத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளி வரத் தொடங்கின. காஞ்சியில் அண்ணா வென்றார். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் சம்பத் மகத்தான வெற்றி பெற்றார். அந்த நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறவில்லை, ஆனால் விந்தை' நாடாளுமன்றத் தொகுதியில் சம்பத் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றியை நாடு கொண்டாடியது. நாடாளுமன்றத்தில் முதல் முழக்கம் சம்பத் இயல்பாகவே சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர். அதற்கு முன் பேச வாய்ப்புக் கேட்டு அவைத்தலைவர் அனந்தசயனத்தோடு மோதியிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய சாதனைக்கு அவர் வழிகாண முற்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளி போன்ற மொழிகளுக்கு ஒரே நேரத்தில் மொழியாக்கம் செய்யும் வசதி இருந்தது. ஆனால் தமிழுக்கு அத்தகுதி தரப்படவில்லை. இந்தி மட்டுமே தெரிந்த உறுப்பினர் ஆங்கில உரையைக் கேட்கிறபோது தமது இருக்கை முன் அமைக்கப்பட்டுள்ள "இந்தி பொத்தானை' அழுத்தினால் போதும். அவர் காதுக்கு அந்த ஆங்கில உரையின் இந்தி மொழியாக்கம் ஒலிக்கும். இத்தகைய வசதி தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பதை நிலைநாட்ட எடுத்த எடுப்பில் சம்பத் அவருக்கேயுரிய ஆவேசத்தோடு திடீரென்று முன்னறிவிப்பில்லாமல் தொடங்கினார். இந்தி வெறியர்கள் அதிர்ந்தெழுந்து எதிர்ப்புக் கூச்சலிட்டனர். பெரும் கூச்சலுக்கிடையே சம்பத் தொடர்ந்தார். லோகியா, கோவிந்ததாஸ் சேட், மணிராம் பக்கிரி போன்ற அழுத்தமான இந்தி ஆதரவாளர்கள் சம்பத் ஆற்றிய தமிழுரைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். சம்பத் சமர்புரிபவராயிற்றே. விவாத மண்டபங்களில் பகை மிரள முழக்கிடும் பீரங்கிப் பேச்சாளராயிற்றே கூச்சல் குழப்பத்திற்கிடையே அந்த ஆவேசக்குரல் அழுத்தம் திருத்தமாகக் கணீரென' ஒலித்தது. ""அச்சுறுத்தியோ, இச்சகம் பேசியோ எங்கள் மீது இந்தியைத் திணிக்க முடியாது. இன்பத் தமிழுக்கு ஆபத்து என்றால் பெரும் பூகம்பத்தையே நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மொழி காக்க உயிர் காத்த எங்கள் வீரத்தியாகிகள் தாளமுத்து நடராசன் கல்லறைகளை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்....'' என்றெல்லாம் வெடித்தார் சம்பத், அவையே இரு கூறாகியது. கட்சிக் கோடுகளைக் கடந்து இந்தி பேசும் உறுப்பினர்கள் இந்தி பேசாத உறுப்பினர்கள் என்று அவை இரு பிரிவாகக் காட்சியளித்தது. இந்தி வெறியர்கள் "பேசாதே' என்று கூச்சலிட்டனர். அமளி விளைவித்தனர். பிரதமர் நேரு தமிழறியாதவர். சம்பத் என்ன சொல்லுகிறார் என்பதை உன்னிப்பாகக் கேட்கிறார். சம்பத்தை நோக்கி, ""உங்களுக்குத்தான் ஆங்கிலம் தெரியுமே, ஆங்கிலத்தில் பேசுங்கள்'' என்கிறார். அப்போது சம்பத் ஆங்கிலத்தில் மறுமொழி உரைக்கிறார். அவையில் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆங்கிலத்தில் முழக்கத்தைத் தொடர்கிறார். சம்பத் முயற்சியால்தான் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பேச்சை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கவும், அதே நேரத்தில் மற்ற மொழிப் பேச்சுகளை தமிழில் தரவும் வசதி செய்து தரப்பட்டது. இதனால்தான் பிற வடமொழிகளே அறியாத லட்சுமணன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் துணை அவைத்தலைவராகப் பணியாற்ற முடிந்தது. இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் மட்டுமே தெரிந்த உறுப்பினர்கள் துணிச்சலாக எழுந்து தமிழில் பேச முடிகிறதென்றால் அந்த வாய்ப்பை, வசதியை ஏற்படுத்தித் தந்த பெருமை சம்பத்துக்கே உண்டு. இமயமலையில் சேரன் செங்குட்டுவன் தமிழ்க் கொடி நாட்டினான் என்பார்கள். அது உண்மையோ பொய்யோ டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தியவர் சம்பத் என்பது உண்மை. முதல் முழக்கத்தை முடித்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தி சென்னை திரும்பிய சம்பத், அண்ணாவின் பெரும் பாராட்டினைப் பெற்றார். தமிழகத்து மேடைகளில் இந்தி எதிர்ப்புக் குரல் இன்னும் உரத்து ஒலிப்பதாயிற்று. (தொடரும்) 30 ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் - 30
First Published : 04 Mar 2012 12:00:00 AM IST  தில்லி கண்ட திராவிடர் இயக்கம்:நாடாளுமன்றத்தில் சம்பத்தின் முதல் முழக்கம் கேட்ட பிறகே திராவிடர் இயக்கம் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொண்டனர். போர்க்குணமிக்க லட்சிய அமைப்பாகக் கழகம் தென்னகத்தே வலிவு பெறத்தொடங்கிய உண்மைகளை வட இந்தியத் தலைவர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை சம்பத்தின் முதல் முழக்கம் அவர்களுக்கு உணர்த்தியது. டெல்லி நம்மை உற்று நோக்கத் தொடங்கியது. சம்பத்தின் விவாதத் திறமையில் மிளிர்ந்த ஆழ்ந்த கருத்துகளை ஆதிக்கபுரியினர் திகிலோடு நோக்கினாலும், நடுநிலையாளர்கள் மனதிற்குள்ளாகவேனும் பாராட்டவே செய்தனர். அவையில் முழக்கமிட்டு வெளியே வந்த சம்பத்தைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். கழகத்தின் மூலாதார லட்சியங்கள் குறித்தும், அண்ணாவின் பங்களிப்பு குறித்தும் செய்தியாளர்களிடம் சம்பத் விளக்கமாக எடுத்துரைத்தார். அதுவரை வடக்கே உள்ளவர்களுக்கு தி.மு.க. என்பதே தெரியாது. கடவுள் இல்லை என்று சொன்னதும் நாத்திகக் கட்சி என்று மட்டுமே அவர்கள் நினைத்திருந்தனர். மக்களவையில் தங்கள் பேச்சு பற்றி மற்ற மாநிலத்து உறுப்பினர்கள் தங்களிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் பேசினாரா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். வங்கத்தைச் சேர்ந்த பிரபல கம்யூனிஸ்டு எம்.பி. ஹிரேன் முகர்ஜி இந்தி பற்றி நான் பேசியதை ஆமோதித்தார். எந்த மொழியையும் திணிப்பதை நாங்கள் (கம்யூனிஸ்டுகள்) ஏற்க மாட்டோம். ஆனால் உங்கள் மாநிலத்தில்கூட விரும்பியவர்களை இந்தி கற்க அனுமதிக்கலாம் என்றார். இதுபற்றி டில்லியில் நாம் ஒரு கருத்தரங்கை நடத்தலாம் என்று கூட யோசனை கூறினார். பொதுவாக திராவிட இயக்கம் பற்றி வடக்கே அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.... இவ்வாறு டெல்லிச் செய்தியாளர்களிடம் சம்பத் குறிப்பிட்டார். இந்த வேகத்திலேயே திட்டமிட்டுத் தொடர்ந்து சில சாதனைகளை ஏற்படுத்திவிட வேண்டும் என்று விரும்பிய அண்ணா நாடாளுமன்றத்தில் அந்தக் கூட்டத் தொடரிலேயே சில முக்கியப் பிரச்சனைகளை கிளப்புவதற்கான யோசனைகளை சம்பத்திற்கு வழங்கினார். இதன் தொடர்பாக 21.8.57 அன்று நாடாளுமன்ற மக்கள் அவையில் அந்தமான், இலங்கைத் தமிழர்கள் இன்னல்களைத் களைய சம்பத் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொணர்ந்து, அவையின் பரபரப்பை மிகுதியாக்கி அரியதோர் உரையாற்றினார். அதுவே, இன்றும் இலங்கைத் தமிழர்களுக்காக எழுதப்பட்ட உரிமைச் சாசனமாக விளங்குகிறது. 1957இல் இலங்கைத் தமிழர் பிரச்சினை கடுமை பெறலாயிற்று. ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவழியினர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டு நிராதரவாக தமிழகக் கரையோரங்களில் அகதிகளாக வந்து குவிந்தனர். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில், உள்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற சம்பத் பிரதமர் பண்டித நேரு முன்னிலையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை மிக உருக்கமாக எடுத்துரைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வற்புறுத்தினார். சம்பத்தின் ஆவேசப் பேச்சை நேரு குறிப்பிட்டுப் பேசினார். அவர் கூறியதாவது: ""உங்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும். இந்த விவகாரம் பற்றி இலங்கையில் உள்ள நம் தூதுவர் அந்நாட்டு அதிபருடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்திட இன்றே உத்தரவிடுகிறேன். இலங்கை இந்தியர்களுக்குக் குடியுரிமை கிடைத்திட இந்த அரசு ஆக்கப் பூர்வமாகச் செயல்படும்'' என்று வாக்குறுதி தந்தார் நேரு. நமது தூதுவர் பேசுவது மட்டும் போதாது நீங்களும் இலங்கை அதிபரோடு தொடர்பு கொண்டு விவாதிக்க வேண்டுமென்கிறார் சம்பத். அதற்கும் நேரு சம்மதிக்கிறார். அண்ணா சட்டமன்றத்தில் - சம்பத் நாடாளுமன்றத்தில்நாடாளுமன்ற மக்களவையில் நேரு மற்றும் மத்தியப் பெருந்தலைவர்கள் மத்தியில் சம்பத், இந்தியா ஒரு நாடல்ல. இது பல நாடுகளைக் கொண்ட துணைக்கண்டம் என்று முழங்கியபோது, ஏதோ புயலைச் சந்தித்ததுபோல் பொறுமினர். பொங்கினர். அதிர்ச்சியும், ஆத்திரமும் மேலிடச் சம்பத்தை பார்த்து ஒரு புரட்சிக்காரரைப் பார்ப்பது போல் மிரட்சியடைந்தனர். இதோ சம்பத் பேசுகிறார்:""....நீங்கள் என் மீது கோபப்படலாம், ஆத்திரப்படலாம், பரிகாசம் செய்கிறீர்கள் ஆனால் இந்தக் கோரிக்கை பிறப்பதற்கு காரணமாயுள்ள சூழ்நிலைகளையும், தர்க்கவாத நிலைமைகளையும் அருள்கூர்ந்து நீவிர் சற்று சிரமப்பட்டு பரிசீலிப்பீர்களேயானால் இந்தக் கோரிக்கை உங்களளவில் மோசமாயினும், எங்களைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது என்பதை நீங்கள் உணரமுடியும்.... இந்தி ஆதிக்க எதிர்ப்பு என்பது எப்போது, எக்காரணத்திற்காக எங்கள் மண்ணில் வெடித்தது என்பதை, நீங்கள் சற்றுப் பொறுமை காட்டுவதாயின் சுருக்கமாகவே கூறி, உங்களுக்கு உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன். தொன்மைச் சிறப்புடைய மொழி தமிழ். அது அழிவதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்களே கூட உறங்கிக் கிடந்தோம். நீங்கள் இந்தியை திணித்து தூங்குகின்ற புலியை இடறி விட்டிருக்கிறீர்கள். இன்று மாநிலத்தின்முன் இன உணர்வும் மொழி உணர்வும் பொங்கிப் பிரவகிக்கிறது. கலப்பில்லாத நல்ல தமிழில் பேசுவோர் வரவேற்கப்படுகின்றனர்....'' (குறுக்கீடுகள்) நேரு: இந்தி மட்டுமல்ல அரசியல் சட்டத்தின் எட்டாவது ஷெட்யூலின் கண்டுள்ள மொழிகள் அனைத்தும் நமது தேசிய மொழிகளே. சம்பத்: பிரதமரின் இந்த வாக்குறுதியை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். ஆனால் சமீப காலமாக உயர்ந்த பதவியில் இருக்கும்மிக உயர்ந்த பதவியில் இருக்கும் சிலர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி' எனத் திரும்பத் திரும்பச் சொல்லித் திரிகிறார்கள். உயர்மட்டத்தில் எழும் இந்த முரண்பாடு நமது உண்மையான பரிசீலனைக்குரியது. அரசு இதற்கு தகுந்த விளக்கமும், காரணமும் தந்தாக வேண்டும். இந்தி மட்டுமா அல்லது எல்லா மொழிக்குமா நமது தேசிய மொழிக் கொள்கை பற்றி அரசு தனது நிலையை கொள்கைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இந்தி எதிர்ப்புத் தலைவர்கள் கூட்டம்:சம்பத் வெளியிட்ட யோசனை வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கின்ற அனைத்துத் தலைவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். பெரியார், ராஜகோபாலாச்சாரியார், அண்ணா, பி.ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், ஏ. ராமசாமி முதலியார், ம.பொ.சி. வி.கே. ராமசாமி முதலியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 1956ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரமுகர் ஏ. சுப்பையாபிள்ளை இல்லத்தில் இந்தச் சந்திப்புக்கு எற்பாடாகியிருந்தது. இந்தியாவின் ஆட்சி மொழிப் பிரச்சினை பற்றி ஆலோசனை நடந்தது. இந்திய அரசியல் சட்டத்தின் 347ஆம் பிரிவு 1965 ஜனவரி 26 முதல் இந்தி மத்திய அரசின் பிரதான ஆட்சி மொழியாவதற்கு அனுமதியளிக்கிறது. இந்த விதி நடைமுறைக்கு வருமானால், இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் நலன்கள் பாதிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, 1965க்குப் பிறகும் ஆங்கிலம் மத்தியில் ஒரே ஆட்சி மொழியாக நீடிக்க வழி செய்ய இக்கூட்டம் கேட்டுக் கொண்டது. தமிழ்நாட்டில் பிறகு தமிழைப் போதனா மொழியாக்கிக் கொள்ளலாம். முடிந்த அளவு காலம் வரை தமிழ்நாட்டில் ஆங்கிலமே போதனா மொழியாக இருக்கவேண்டும் என்றும் பெரியார் குறிப்பிட்டார். இதில் ம.பொ.சி. மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். இந்தியாவில் தமிழுக்கு ஆபத்து இல்லை, ஆங்கிலத்திற்குத்தான் ஆபத்து என்று ராஜகோபாலாச்சாரியார் கருத்துக் கூறினார். எப்படியோ இந்தித் திணிப்பைத் தடுத்தால் போதும் என்பது அண்ணாவின் கருத்து. இந்தித் திணிப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சம்பத் தலைமையில் மாநாடு:நாஞ்சில் மாவட்ட தி.மு.க. மாநாடு நாகர்கோவிலில் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று சம்பத் தலைமையில் நடைபெற்றது. நாஞ்சில் கி. மனோகரன் வரவேற்புரை. மதுரை டாக்டர் அருணாசலம் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசினார். அண்ணா மற்றும் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டுப் பெரியோர்களைக் கிழடுகள் என்றும், நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்றும், நான்சென்ஸ் என்றும் நேரு பேசிய அநாகரிகப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் 6.1.58 இல் அவர் சென்னை வரும் போது கறுப்புக் கொடி காட்டுவது என்று இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு, மறுநாள் நடைபெற்ற கழகப் பொதுக் குழு அதற்கு ஒப்புதல் வழங்கியது. இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டத்தை கழகச் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. வெளியூர்களில் அதே நாளில் கறுப்புக் கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. நேரு கண்ட கறுப்புக் கொடி:சென்னை நகரமெங்கும் கறுப்புக் கொடிகள் காணப்பட்டன. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு எதிரில் பெரிய ஏரியில் கறுப்புக் கொடிகளுடன் தோழர்கள் திரண்டிருந்தார்கள். சரியாக 12.45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நேரு தலைவாயிலில் ஐம்பது காங்கிரஸ்காரர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தார். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் கறுப்புக் கொடிகளைக் கண்டார். கண்டன முழக்கங்கள் எழுந்தன. சாலையில் இருமருங்கிலும் வெகு தூரம் வரை கறுப்புக் கொடிகள் தென்பட்டன. நேரு பிரமித்துப் போய்விட்டார். திறந்த காரில் நின்றபடி வணங்கினார். மருட்சியுற்ற மந்திரிகள் நேருவை அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். அவர் அமர்ந்ததும் கார் வேகமாக ஆளுநர் மாளிகைக்குப் பறந்தது. கறுப்புக் கொடியுடன் கண்டன முழக்கங்களும் தொடர்ந்தன. கூட்டத்தைக் கலைக்க காவல்துறை மிருகவெறியுடன் தடியடி, கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியது. ரத்த வெள்ளத்தில் நினைவற்ற நிலையில் வீழ்ந்து கிடந்தனர் கழகத் தோழர்கள். பெரும் பதற்றம் நிலவியது. நேருவின் மற்ற நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஏப்ரலில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது. நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியில் அரசு நடத்திய காட்டுத் தர்பார் குறித்தும் தமிழர்களை இழிவு படுத்திய பண்டிதர் தமது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மக்களவையில் சம்பத் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொணர்ந்தார். அனுமதி மறுக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு நாள்பொதுச் செயலாளர் இரா. நெடுஞ்செழியனின் அறிக்கைக்கேற்ப 13.10.57 அன்று, கிளைக்கழகங்கள், துணை அமைப்புகள் மன்றங்கள், படிப்பகங்கள் அனத்தும் இந்தி எதிர்ப்பு நாளைக் கொண்டாடினர். சென்னை மாவட்ட தி.மு. கழகத்தின் சார்பில் அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சம்பத் சொற்பொழிவாற்றினார். அன்று பிற்பகல் 3மணிக்கு மூலக்கொத்தளத்திலுள்ள தாய்மொழிக்காக தம் இன்னுயிர் நீத்த லட்சியக் காளைகள் தாளமுத்து நடராசன் கல்லறைகளுக்கு வீர வணக்கம் செலுத்தினார். அங்கிருந்து மாபெரும் ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையை சென்றடைந்தது. கடற்கரைக் கூட்டத்தில், சம்பத், இந்திய அரசியலிலே இந்தித் திணிப்பு எந்த வகையிலே உருவெடுத்து ஆதிக்கம் செலுத்த வருகிறது என்பதையும், இந்திப் பிரச்சினைக்குப் பின்னாலே ஒளிந்து கொண்டிருக்கிற ஆதிக்க வெறியைசூழ்ச்சி எண்ணத்தை அம்பலப்படுத்திச் சொற்பொழிவாற்றினார்: அகில இந்திய ஆட்சி மொழி பற்றிய கல்கத்தா மாநாடு 1958ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சம்பத் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொண்டு தென்னக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தார். அம்மாநாட்டில் சம்பத் இந்திய யூனியன் ஆட்சி மொழியாகவும் மத்திய அரசாங்க நிர்வாகத்திற்கும் மாநிலங்களுடன் தொடர்பு கொள்ளவும் எந்த மண்டல மொழியையும் பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று இம்மாநாடு கருதுகிறது அத்தகைய முயற்சி மக்களுக்கு அநீதியையும் ஆழ்ந்த வெறுப்பையும் விளைவித்து, கேடு வாய்ப்பதாகும் என்னும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். தாராசிங் சம்பத் சந்திப்பு1958 பிப்ரவரி 3ஆம் தேதி சீக்கியர்களின் மாபெரும் தலைவரான மாஸ்டர் தாராசிங்கை சம்பத் சந்தித்தார். இருவரும் இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்பது பற்றியும் மற்றும் இதர பல பிரச்சனைகள் குறித்தும் மனம்விட்டுப் பேசினர். தாராசிங் தமிழகத்திற்கு வருகை தர வேண்டுமென அண்ணா சார்பாகவும் தி.மு. கழகம் சார்பாகவும் சம்பத் அன்பழைப்புத் தந்தார். அழைப்பிற்கு நன்றி தெரிவித்த தாராசிங் பஞ்சாபில் இந்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவேண்டியிருப்பதால் பிறிதோர் சமயம் வருவதாக வாக்களித்தார். நேரு அண்ணா சந்திப்பிற்கு சம்பத் முயற்சி1958 ஆம் ஆண்டு திராவிட நாடு பிரிவினைக் கொள்கை குறித்து அது சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பது தொடர்பாக அண்ணா பிரதமர் நேரு சந்திப்பு அவசியம் என பெரிதும் விரும்பினார் சம்பத். இதற்காக அண்ணாவின் சம்மதத்தைப் பெற அரும்பாடுபட்டார் சம்பத். முதலில் அண்ணா தயங்கினார், தள்ளிப் போட்டார். விடாது வற்புறுத்தி அண்ணாவின் சம்மதத்தைப் பெற்ற சம்பத் டெல்லி சென்று நேருவிடம் நேரம் குறித்து ஒப்புதல் பெற்றார். இரு தடவைகளில் ஒவ்வொரு மணி நேரம் கலந்து பேசுவதென்று முடிவாயிற்று. உற்சாகத்துடன் சென்னை திரும்பிய சம்பத் "தையற்கலை' சுந்தரத்தை வரவழைத்து அண்ணாவிற்கு கோட்டு சூட் எல்லாம் தயாராகிவிட்டது. அண்ணாவும் சம்பத்தும் கோட்டு சூட்டணிந்த படங்கள் பத்திரிகைகளிலும் காலண்டர்களிலும் வெளிவந்தன. குறிப்பிட்ட நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகவே அண்ணாவை டெல்லிக்கு அழைத்துப் போனார் சம்பத். அண்ணாவின் இணைபிரியா நண்பர் காஞ்சி சி.வி. ராஜகோபால், செழியன், ராசாராம் ஆகியோரும் உடன் சென்றனர். டெல்லி சென்றதும் ஒரு நாள் ஓய்வு, மறுநாள் டெல்லி, ஆக்ரா, போன்ற சுற்றுலாத் தலங்களைச் சுற்றி பார்த்தாகிவிட்டது. அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு நேருவுடன் அண்ணாவின் சரித்திரச் சந்திப்பு. ஆனால் முதல் நாள் இரவு காஞ்சியிலிருந்து ஒரு துயரச் செய்தியை ஏந்திக்கொண்டு ஒரு தந்தி அண்ணாவுக்கு வந்தது. அண்ணாவின் அக்காளுடைய (மச்சி என்று எல்லோரும் அழைப்பர்) மகள் செüந்தரியம்மாள். (அண்ணாவின் வளர்ப்பு மகன்களான பரிமளம், இளங்கோவன், கெüதமன், ராஜேந்திரன் இவர்களின் தாயார்). இந்த அம்மையார் வயிற்றுவலி காரணமாக நோய்வாய்ப்பட்டு காலமானார். இந்தத் துயரச் செய்தி கிடைத்ததும் அண்ணா கண்கலங்கினார். உடனே சென்னை திரும்ப வேண்டுமென்று சம்பத்திடம் சொன்னார். ""நாளை, நீங்கள் நேருவுடன் பேசுகிற மிக முக்கிய நிகழ்ச்சி இருக்கிறது. அந்த வாய்ப்பை இழக்க வேண்டாம். ஊருக்குத் தகவல் சொல்லி அடக்கம் செய்யச் சொல்லிவிடலாம். நாளை நீங்கள் நேருவைச் சந்தித்ததும் சென்னை புறப்பட்டுவிடலாம்'' என்று சம்பத் கூறினார். ஆனால் அண்ணாவோ அழ ஆரம்பித்துவிட்டார். ""இல்லை சம்பத், நேரு எப்போதும் இருப்பார். ஆனால் அந்தப் பெண்ணின் சடலத்தை மூடிவிட்டால் பிறகு பார்க்க முடியாது. அதனால் காஞ்சிபுரம் போய் மறுநாளே திரும்பி விடுகிறேன். என்னால் இதைத் தவிர்க்க முடியாது'' என்று சென்னை புறப்படத் தயாரானார் அண்ணா. அன்றே அனைவரும் சென்னை திரும்பினர். மறுநாள் நேருவுடன் நடக்கவிருந்த அண்ணாவின் சந்திப்பு பிறகு நடக்காமலேயே போய்விட்டது. சம்பத் சோவியத் சுற்றுப் பயணம் சம்பத் 1958 செப்டம்பர் மாதம் 26இல் சோவியத் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். காலை 8 மணிக்கு புதுடில்லி வெலிங்டன் விமான நிலையத்தில் ஏராளமான எம்.பி.க்களும் நண்பர்களும், பிரமுகர்களும் அவரை வழியனுப்பி வைத்தனர். அரியானா என்னும் ஆப்கானிய விமானம் சம்பத்தை மாஸ்கோவிற்குச் சுமந்து சென்றது. அவருடன் தமிழகக் காங்கிரஸ் பிரமுகரும் எம்.பி.யுமான கே.எஸ். ராமசாமி மாஸ்கோ சென்றார். சம்பத்தின் சண்டே டைம்ஸ் சம்பத் 1959 ஜனவரியில் "சண்டே டைம்ஸ்' எனும் ஆங்கில வார ஏட்டைத் தொடங்கினார். அவர் ஆசிரியராக இருந்த அவ்விதழ் வெற்றிநடை போட்டது. அண்ணாவின் "ஹோம் லண்டு' பொருளாதாரத் தட்டுபாடுகளால் தடைபட்டு நின்றதால் சம்பத் இந்த முயற்சியை மேற்கொண்டார். அப்போது அவருக்கு இதில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் பழம்பெரும் நீதிக் கட்சித் தலைவர் "சண்டே அப்சர்வர்' பி. பாலசுப்ரமணியம். பி. பாலசுப்ரமணியம் நீண்ட காலமாக "சண்டே அப்சர்வர்' ஆங்கில வார ஏட்டை நடத்தி வந்தார். துணிவோடு கருத்துகளை எழுதக் கூடியவர். அண்ணாவின் பேரன்பிற்குரியவர். தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் (1957) மத்திய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியை எதிர்த்து இரு கழகங்களின் ஆதரவோடு போட்டியிட்டு பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டவர். சம்பத்தின் நாடாளுமன்றப் பேச்சு குறித்து பெரியார் நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிரே அமர்ந்து கொண்டு சம்பத் திராவிடத்தின் குரலை மிகத் துணிவாக ஒலிக்கிறார் என்பதில் பெரியாருக்கு உள்ளூர மகிழ்ச்சி உண்டு. தம்மை சந்திக்கிற பிரமுகர்களிடம், ""சம்பத்து நல்லா பேசுறானாமே பேப்பர்ல கூட பார்த்தேன்'' என்று கேட்பார். ""ஆமாம்யா, நல்லாத்தான் பேசுறார்யா'' என்று குருசாமியும் கூறுவார். (தொடரும்) 31 32 34
First Published : 08 Apr 2012 12:00:00 AM IST
* 33 வாரங்களாக வெளிவந்த "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' என்ற ஒப்பற்ற தொடர் ஒரு பழைய சகாப்தத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டது, கதிர் வாயிலாக.வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.* தி.மு.க.வின் ஆணிவேர் அண்ணா என்றாலும் ஆணிவேருக்கு அழகூட்டியவர் சம்பத்தான் என்பதை இத்தொடர் மூலம் நன்கு அறிந்து கொண்டேன்.நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி.* மொழி வழி மாநிலம் அமையும் முன்பு அண்ணாதுரை திராவிடம் என்று வைத்துக் கொண்டது சரியாக இருக்கலாம். ஆனால் பின்பு மற்ற மாநிலங்கள் பிரிந்து தனித்தனியாக நின்றபோது, சம்பத் திராவிடம் சாத்தியமில்லை என்று சொன்னது முழு உண்மையானது. திராவிட நாடு பிரிவினை கைவிடப்பட்டது. சம்பத்தின் அரசியல் தீர்க்க தரிசனம் நிதர்சனமானது.பெ.தருமலிங்கம், கோவை-7.* ஈ.வெ.கி.சம்பத், நாடாளுமன்ற மக்களவையில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசியதும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் களைய கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்ததும் நினைவில் நிற்கின்றன. நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டியவர்களை ஒடுக்க அரசு கையாண்ட அடக்குமுறையை கண்டித்தது, நான்சென்ஸ் என்று தமிழர்களை நேரு திட்டியதை எதிர்த்தது எல்லாம் அவர் வீரம் நிறைந்த தலைவர் என்பதைக் காட்டியது.அ.சிவராமசேது, விருத்தாசலம்.* தொடர் இந்த இதழோடு முடிந்தது வருத்தமாக இருந்தது. தொடர்ந்து ஈ.வெ.கி.சம்பத்தும் தமிழ்த் தேசியக் கட்சியும், ஈ.வெ.கி.சம்பத்தும் காங்கிரஸ் கட்சியும் என்னும் தலைப்பில் தொடர்களை வெளியிடலாம். சம்பத் தி.மு.க.வில் இருந்ததுவரைதான் நூலில் உள்ளது. பிந்தைய வரலாறு சேர்க்கப்படவில்லை. இத்தொடரை சிறப்பாக எழுதிய இனியன் சம்பத், கல்பனாதாசன், விவேகானந்தன் மூவருக்கும் அற்புதமாக வெளியிட்ட தினமணி கதிருக்கும் என் பாராட்டுகள்.தங்க.சங்கரபாண்டியன், மணலிபுதுநகர்.* சம்பத்துடன் தி.மு.க.வில் இருந்து விலகிய எண்ணற்றவர்கள் பிற்காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து உச்சகட்ட பதவிகளையும் பெற்று புகழ் பெற்றிருந்தார்கள் என்பதைத் தொடரைப் படித்தபோது உணர்ந்தேன். சம்பத் தொடரை நிறைவு செய்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.அ.அப்துல்காதர், விளாத்திகுளம்.* கலைத்துறையினரின் ஆதிக்கம் கட்சியில் கடுகளவும் இருக்கக் கூடாது என்ற ஈ.வெ.கி.சம்பத்தின் வாதம் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனையாகும்.வே.சரவணன், சென்னை-21.* தி.மு.க.வின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்ள இத்தொடர் உதவியது. ஈ.வெ.கி.சம்பத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனை நல்ல அரசியல் நாகரிகம் உடையது. 1960-க்குப் பின் இன்றுவரை தி.மு.க.வின் நடைமுறை நாடறிந்ததே.ச.வே.சுப்பிரமணியன்,திருச்சிராப்பள்ளி.* சிதம்பரம் பொதுக்குழுவில் சம்பத் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்போர் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது என்று ஒளிவுமறைவில்லாமல் பேசியதும், அதை மனமுவந்து அண்ணா ஏற்றுக் கொண்டதும், இன்றைய தொண்டர்களும், இன்றைய தலைவர்களும் புரிந்து கொள்வது நல்லது.கோதை ஜெயராமன், மீஞ்சூர்.* தனது எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலின் வாயிலாக தனக்கென ஒரு குழுவை அண்ணாவால் தி.க.வில் உண்டாக்கிக் கொள்ள முடிகிறது. இதில் ஈ.வெ.கி.சம்பத்தும் அழகாக ஐக்கியமாகி உள்ளார். அண்ணாவின் சினிமாத் தொடர்பு இதைச் சாதிக்க பேருதவியாக இருந்தது. அண்ணாவின் ஒவ்வொரு நகர்வினையும் சரியாகக் கணித்து, அவரையும் அவருடைய குழுவினரையும் ஏற்க மறுத்து ஒதுக்குகிறார் தந்தை பெரியார். தன் சொத்தைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்க மணியம்மையை மணக்கிறார். இந்தச் சூழ்நிலையிலும் கூட சம்பத்தை தன்பக்கத்தில் வைத்துக் கொள்ள அண்ணாவால் முடிகிறது. திராவிட இயக்க உருவாக்கத்திலும், அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும் ஈ.வெ.கி.சம்பத்தின் அறிவுசால் பேராண்மையை நம்மால் உணர முடிகிறது.எஸ்.எம்.பி.வீரமணி, திருச்சி-8.
|
|
|
| | | |
|