பிறர் செய்வதைக் காரணமாகக்
காட்டி செயல்படுபவர் இருவர்.
1) மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே
தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.
2) பிறரால் வழிபட்டவர்களையே
வழிபடுகிற மூடர்கள்.
இவர்கள்
சுய அறிவுடன் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் நாடுகிறார்களே, அது
நல்லதாகத்தான் இருக்கும் என்று மூட நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள்
இவர்கள்.
***********
இந்த இருவரும் கல்லைக் கட்டி
நீர்த்தேக்கத்தில் போட வேண்டியவர்கள்.
1) செல்வமிருந்தும் வேண்டுவோர்க்கு
உதவி செய்யாத செல்வந்தன்
2) உடலை வருத்தி உழைக்க விரும்பாத
ஏழை.
**********
இந்த மூவரையும் எந்த நிலையிலும்,
எந்த நெருக்கடியிலும் கைவிடக்கூடாது.
1) உங்களிடம் மனத்தால் ஒன்றியவர்.
2) உங்களுக்கு அன்புடன் பணிபுரிபவர்
3) தன்னைக் காப்பான் என்று நம்பி
உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்.
***********
இதுபோல நிறைய ஒன்று, இரண்டு என்று பத்துவரை இந்தப் புத்தகத்தில் உண்டு.
விதுரநீதி.
பத்துவருடங்களுக்கு
முன் எனது உறவினர் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்து, புரட்டிப்
படித்துவிட்டு இரவல் கேட்டபோது “இன்னும் படிக்கல” என்று சொல்லப்பட்டதால்
விட்டுவிட்டு வந்தேன். ஆனால் அடிக்கடி இந்தப் புத்தகத்தை நினைத்துக்
கொள்வேன். காரணம் திருக்குறள் போல பல நல்ல கருத்துகளை உள்ளடக்கிய புத்தகம்
இது. மஹாபாரதம், உத்தியோகபர்வதத்தில் 33-40 அத்தியாயங்களில் உள்ள இதை,
புத்தக வடிவில் அச்சிட்டு ஒரு திருமணத்தில் பரிசாகக் கொடுத்ததைத்தான் அவர்
வீட்டில் வைத்திருந்தார். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது,
மறக்காமல் அவர் வீட்டுக்குச் சென்று போராடி, தேடி வாங்கிவந்து ஒரே
மூச்சில் படித்தேன்.
வெரி இண்ட்ரஸ்டிங்கான சில புராணக் கதைகளை உள்ளடக்கியது இது. சொல்கிறேன்
கேளுங்கள்.
விதுரநீதி யாருக்குச் சொல்லப்பட்டது?
பாண்டவர்கள்
அஞ்ஞாதவாசம் முடிந்து நாடு கேட்டு வந்தப்போ, திருதிராஷ்டிரன் தனது
மெய்க்காவலனான ஸஞ்சயனை பாண்டவர்கள்கிட்ட அனுப்பி, “அவங்களை அப்படியே ஓடிப்
போகச் சொல்லு. எனக்கு போர்ல விருப்பமில்ல”ன்னு சொல்லிவிடறாரு. ஸஞ்சயன்
போய் பாண்டவர்கள்கிட்ட சொல்றப்போ, மிஸ்டர்.தர்மருக்கும் ஸஞ்சயனுக்கும் சில
சம்பாஷணைகள் நடக்குது. கடைசியா தர்மர் “உங்காளுக அதர்மத்தை, தர்மம்ன்னு
நெனைச்சு அரசாளறாரு. அத எப்படி நாங்க அலவ் பண்றது ஸஞ்சயா? சரி, ஒனக்கும்
வேணாம், எனக்கும் வேணாம், நான் சொல்ற ஒரு அஞ்சு நகரத்தை மட்டும்
எங்களுக்கு குடுத்துடுங்க”ன்னு சொல்லிவிடறாரு.
ஸஞ்சயன், திரும்பி
திருதிராஷ்ட்ரன்கிட்ட வந்து “ஹலோ மிஸ்டர் கிங்கு, சீக்கிரம் ஒனக்கு சங்கு.
அவனுக ரொம்ப நல்லவங்கப்பா. நீங்க அதர்மத்துக்கு சொம்பு தூக்கிகிட்டு
இருக்கீங்க. எனக்கென்னமோ கௌரவகுலம் அழியும், அதுக்கு நீங்கதான்
காரணமாயிருப்பீங்கன்னு தோணுது”ன்னு சொல்லீட்டு அங்க பேசினதை முழுசா
சொல்லாம “ட்ராவல் பண்ணினதால டயர்டா இருக்கு. விரிவா காலைல சொல்றேன்”ன்னு
சொல்லீட்டு போயிடறாரு. (யோசிச்சுப் பாருங்க. இன்னிக்கு மன்னனோ, நம்ம
முதலாளியோ ஒரு வேலை சொல்லீட்டு நாம் இதுமாதிரி பாதி ரிப்போர்ட் பண்ணி,
மீதியைக் காலைல சொல்றேன்னு தூங்கப்போகமுடியுமா? ஹூம்ம்ம்ம்!)
சஞ்சயன்
தூங்கப் போயிட்டார். இங்க மன்னன் திருதிராஷ்ட்ரனுக்கு தூக்கமே வர்ல. மனசு
ரொம்ப சஞ்சலப்படுது. உடனே விதுரரைக் கூப்ட்டனுப்பி “யப்பா. ஸஞ்சயன் காலைல
என்ன சொல்லப்போறானோன்னு கெடந்து தவிக்குதுப்பா. என்ன பண்றதுன்னே தெரியல.
கொஞ்சம் ஆறுதலா எதுனாச்சும் சொல்லு”ங்கறாரு. அப்போ விதுரர் சொல்ற
அறிவுரைகள்தான் விதுரநீதி.
அந்த கௌரவர் கூட்டத்துல எப்படி விதுரர் மட்டும் நீதி, நேர்மைன்னு
இருக்காரு? அதுக்கும் இருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்.
மாண்டவ்யர்-ங்கற
முனிவர் தன்னோட ஆசிரமத்துல அடைக்கலம் கேட்டுவந்த சிலருக்கு அடைக்கலம்
தர்றார்.. அவங்க மொத நாள் நைட் அரண்மணைல ஆட்டையப் போட்டவங்க.
(திருடினவங்க). அதுதெரியாம இவரு, தங்க வெச்சுட்டாரு. இப்போமாதிரி,
ரெண்டுமூணு வருஷம் கழிச்சா திருடங்களைப் பிடிக்கறாங்க? அப்போவெல்லாம் உடனே
பிடிச்சிடுவாங்கள்ல? அப்படி அரண்மணைக் காவலர்கள் வர்றப்போ, இந்த
முனிவரையும் திருடன் ஒருத்தன்தான் வேஷம் போட்டிருக்கான்னு புடிச்சுட்டு
போயிடறாங்க. எல்லாரையும் கழுவில ஏத்துங்கன்னு மன்னன் சொல்றாரு. அப்படி
ஏத்தறப்போ முனிவர் மாண்டவ்யர் தன்னோட தவ வலிமையால் அப்படியே கழுமரத்தில்
இருந்தார். இறக்கவில்லை. தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கும் அப்படி
இருந்துகிட்டே போதனையெல்லாம் சொல்றாரு. காவலர்கள் இதை ராஜாகிட்ட சொல்றப்போ
‘ங்கொக்கமக்கா, தப்பு பண்ணீட்டேனே”ன்னு ஒடிப்போய் கழுமரத்திலிருந்து
அவரைப் பிரிக்கச் சொல்றான். முடியல. இரும்பில ஆன அந்தக் கழுமரத்திலிருந்து
அப்படியே அவரை உரிச்சு எடுக்கச் சொல்றான். உடம்பில அங்கங்கே ஆணியோட, அரச
மரியாதையோட மறுபடி ஆசிரமத்துக்கு போறார் மாண்டவ்யர்.
இவரோட காலம்
முடிஞ்சு மேல யமலோகத்துக்கு போறப்ப மாண்டவ்யர் யமன்கிட்ட “என்ன கொடுமை யமா
இது? எனக்கு ஏன் இப்படி நடந்துச்சு”ன்னு கேட்கறாரு.
யமன் அவரோட
ரெகார்டையெல்லாம் பார்த்து, “சின்ன வயசுல பட்டாம்பூச்சிகளப் பிடிச்சு,
அதோட வாலுல ஈர்க்குச்சியை சொருகி விளையாடியிருக்கீங்க. அதுக்குண்டான
தண்டனைதான் இது”ங்கறாரு.
மாண்டவ்யர்க்கு கோவம் வருது. “ஆஸ் பர்
யமலோக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ், பன்னிரெண்டு வயசு வரைக்கும் ஒருத்தன்
பண்ற பாவத்துக்கு அவனுக்கு தண்டனை இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ
எனக்கு தண்டனை குடுத்த?”ன்னு கேக்கறாரு. யமன் “ஐயையோ... மிஸ்டேக்
பண்ணீட்டோமே”ன்னு தலை குனிஞ்சு நிக்கறாரு. அப்போ மண்டவ்யர் சாபம் விடறாரு.
“நீதியைக் காப்பாத்த வேண்டிய நீயே நீதி தவறினதால நீ மனுஷனாப் பொறந்து
மத்தவங்களுக்கு நெறிமுறையைப் போதிச்சு, நீயும் அதன்படி வாழு”ன்னு.
அந்த யமன்தான், விதுரர்!
விதுரர் சொன்னதுதான் விதுரநீதி!
சில
கருத்துகள் முரண்பாடா இருந்தாலும் (ஒரு இடத்துல ஒண்ணுமில்லாத ஆண்டி,
நலப்பணிகள்ல ஈடுபட்டா விளங்கமாட்டான்னு சொல்றாரு. அடுத்த ஸ்லோகத்துல
இல்லாட்டியும் வாரி வழங்குற ஏழை வானத்துக்கு மேல உயர்ந்தவன்-ங்கறாரு) பல
கருத்துகள் ‘அட’ போட வைக்குது!
கடைசியா, இதையெல்லாம் கேட்ட
திருதிராஷ்டிரன் ஏன் சண்டை போட்டான்? ஏன்னா, அவருக்கு கணிகர்-ங்கற
அர்த்தசாஸ்திர வல்லுனர் சில போதனைகளைச் சொல்றாரு. ‘நீதி நேர்மையெல்லாம்
தூக்கி குப்பைல போடுல. நான் சொல்றத கேளுல’ன்னு சில (அ)நீதி போதனை
சொல்றாரு. மகாபாரதத்துல ஆதிபருவம்-139வது ச்சாப்டர்ல இருக்கு இது.
கூடநீதி. (கூடம் = வஞ்சனை) அப்படியே இன்னைக்கு இருக்கற அரசியல்வாதிகள்,
இதைப் படிச்சிருப்பாங்களோன்னு நினைக்க வைக்குது!
தன்குறைகளை
மறை, பிறர் குறைகளை விரிவுபடுத்து. அடைக்கலம் புகுந்தாலும் பரிவு
காட்டாதே. நல்லவனா இருந்தா, சிறுகச் சிறுக பணம் குடுத்து அவனைக் கெடு.
உனது செயல் முறையை முன்னதாக ஊகிக்க இடம் குடுக்காதே. திட்டத்தை திடீர்னு
தள்ளிப்போடு. பிறர் உன்கிட்டேர்ந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய்.
எதிர்பார்த்து இருக்கும்போது மறுபடி தள்ளிப் போடு. தள்ளிப்போட ஏதாவது
காரணத்தை சொல்லிகிட்டே இரு. அவன் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனோட
காரியத்துல கவனக் குறைவா இருக்கறப்போ போட்டுத் தாக்கி அவனை அழி.
இப்படி
கூடநீதி படிக்கப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். (கேடுகெட்ட மனசு! விதுர நீதி
புத்தகத்துல வெறும் மூணு பக்கம் இருந்தாலும் இந்த கூடநீதில நாட்டம்
கொள்ளுது பாருங்க!)
இந்தப் புத்தகம் சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்டுக்காக வெளியிட்டவர் சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரி, 22, வீரேஸ்வரம்
அப்ரோச் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620006 ன்னு போட்டிருக்கு.
கிடைச்சா நிச்சயமா வாங்கிப் படிங்க!