அரசூர் வம்சம்!
நூலின் பெயர் : அரசூர் வம்சம்!
நூல் ஆசிரியர் : இரா.முருகன்
விலை : ரூ.175
பக்கங்கள் : 464
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.
* - * - * - * - * - * - * - * -
சாதாரணமாக
ஐநூறு பக்கப் புத்தகத்தை என்னால் இரண்டு நாட்களில் வாசித்து விட முடியும்.
வேலை வெட்டி எதுவுமில்லையென்றால் தூங்காமல் கொள்ளாமல் கசாப்புக்கடை
ஆடுகளின் தலையை எண்ணாமல் வெட்டுவது மாதிரி ஒரே நாளில் ஆயிரம் பக்கங்களை
கூட போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க முடியும். இரா.முருகனின்
அரசூர் வம்சத்தை முடிக்க இருபது நாட்கள் ஆகிவிட்டது. முருகனின் மொழி மிக
எளியது, இக்காலக்கட்டத்திற்கு புதியது அல்லது ரொம்பவும் பழையது என்றாலும்
புதினத்தில் ஏற்றியிருக்கும் கனத்தின் மீதான புரிதலுக்காக ஒவ்வொரு
பக்கத்தையும் இருமுறையாவது மீள்வாசிப்பு செய்ய தூண்டுகிறது. எத்தனை முறை
வாசித்தாலும் சுவாரஸ்யம் இம்மியளவும் குறைவதில்லை என்பதால் முருகனுக்கு
அரோகரா.
காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிச்செல்ல கால இயந்திரம்
விஞ்ஞானிகளால் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எழுத்தாளனுக்கு இது
மாந்திரிக யதார்த்தவாதம் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. ஆசிரியர்
எடுத்துக்கொண்ட காலக்கட்டம் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும்
பனியன் சகோதரர்கள் அவ்வப்போது முன்னும் பின்னுமாக வினோத நாலுசக்கர கருப்பு
வண்டியில் போய்வருகிறார்கள்.
என்றோ மரித்துப்போன அழகுப் பெண்களை
மந்திரத்தால் வரவழைத்து கதாபாத்திரங்களை கூட விடுவதும், சுகிக்க விடுவதும்
எழுத்தாளனுக்கு ஆகாத காரியமல்ல. தொங்கிப்போன ராணியோடு வம்சவிருத்திக்காக
மட்டுமே கூடும் ராஜா, செத்துப்போன புஷ்டிமீசைக் கிழவன் சேடிப்பெண்ணை வாய்
உபச்சாரத்துக்கு வற்புறுத்துதல், குருக்கள் பெண்ணோடு சாமிநாதனின்
சம்போகம், அம்பலப்பழை சகோதரர்கள் அர்த்த ராத்திரியில் தத்தம் மனைவிகளை
சரியாக கண்டறிந்து எழுப்பி தனியறைக்கு அழைத்துச்சென்று புணர்தல், கப்பலில்
துரைசானிகள் மதுமயக்கத்தில் சாமிநாதனை கூட்டாக வன்புணர்தல் என்று
இந்நவீனம் முழுக்க ஊடே தொடர்ந்து பரவியிருக்கிறது புணர்ச்சி வாசனை..
புகையிலை வாசனையையும், ஏலம் கிராம்பு வாசனையையும் தாண்டி.
நினைவுகளோடே
நிம்மதியாய் பயணிக்கும் வேளையில் நனவு யதார்த்தத்தையும், இருத்தலுக்கான
சமரசங்களையும் கடமையாக சுட்டிக்காட்டுகிறது நாவல். இறந்த காலத்தின்
எச்சமாய் நிகழ்காலம் இருப்பதுபோல நிகழ்காலத்தின் எச்சமாய் எதிர்காலம்
அமையும். ‘அந்த காலம் மாதிரி வருமா?’ என்று எந்த நூற்றாண்டிலும் எவனாவது
ஒரு கிழவன் முனகிக் கொண்டிருக்கத்தான் போகிறான்.
ஒன்றரை
நூற்றாண்டுக்கு முந்தைய பிராமணர்களையும், அவர்களது அச்சுப்பிச்சு அசட்டு
நடைமுறைகளையும் கேலியும், கிண்டலுமாக அணுகுகிறார் நூலாசிரியர். இருத்தலைக்
காத்துக்கொள்ள செய்துகொண்ட சமரசங்களான புகையிலை வியாபாரம், மதம் மாறுதல்
ஆகியவற்றை ஆசிரியர் ஆதரிக்கிறாரா, மறுதலிக்கிறாரா, கேலி செய்கிறாரா என்பதை
அவரது தொனியில் அறிய கடினமாவும் இருக்கிறது.
இத்தனைக்கும்
சங்கரனும், சாமிநாதனும் அவருடைய கொள்ளுத் தாத்தாக்களாக கூட இருக்கலாம்
என்பதை அவரது முன்னுரையில் அறியமுடிகிறது. காரைக்குடிக்கு ரொம்ப பக்கம்
என்பதாலும், நூலாசிரியர் கொடுக்கும் சுலப க்ளூக்கள் சிலவற்றாலும்
சிவகங்கைச்சீமை தான் அரசூர் என்று சுலபமாக கணிக்க தோன்றுகிறது. சாமிநாதனை
தீவைத்து யாராவது கொன்றார்களா (ராணியின் வேலையா) அல்லது யதேச்சையாக
பிடித்த தீயா என்பதை வாசகர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் முருகன்.
ஆதித்த கரிகாலனை போட்டுத் தள்ளியது யாரென்றே இன்னமும் யூகிக்க
சோம்பேறித்தனம் படும் என்னை மாதிரி வாசகர்களுக்கு இது பெருத்த சோதனை.
கருடகர்வ பங்கம்.
இந்நூலை வாசித்தபிறகு தான் தன்னுடைய இடத்தை
தமிழில் நிரப்பப் போகும் எழுத்தாளராக இரா.முருகனை சுஜாதா கணித்தாரா என்று
சரியாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் தமிழின் அதிமுக்கிய நாவல்கள்
குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், அப்பட்டியலில் இடம்பெறத்
தகுதியானதே ‘அரசூர் வம்சம்’. தீவிரவாசிப்புக்கு பழக்கப்படாதவர்கள்
மறுபேச்சின்றி இந்நூலை தவிர்த்து விடலாம். இந்நாவலின் கனமும், நடையும்,
லாஜிக்கும் புரிபடாதவர்களுக்கு இது மொக்கையாகவும் தோன்றக்கூடும்.
நாவல்
முடியும்போது எல்லாம் சுபம் தான். ஆனாலும் எங்கோ ஏதோ நிரப்பப்படாமல்
வெறுமை சூழ்கிறது. நாவலாசிரியர் தன் வாசகனுக்கு முன்வைக்க விரும்பியது
இந்த வெறுமை தானென்றால் அரசூர் வம்சத்தின் மன்னனாக அவருக்கே க்ரீடம்
சூட்டி விடலாம்.
அரசூர் வம்சம் - அமானுஷ்ய அனுபவம்!
நினைவிற்கு
எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ஜோதிபாசு; தமிழில்:
வீ.பா. கணேசன்
தொடர்ந்து
ஐந்து முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் முதலமைச்சராக
இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் சுயசரிதை. வெளியீடு: பாரதி
புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம் பேட்டை, சென்னை-21. விலை ரூ.200.
நான்
வித்யா லிவிங் ஸ்மைல் வித்யா
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒரு திருநங்கையின் பகிரங்க வாக்குமூலம்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை,
சென்னை-18. விலை ரூ.100.
கனவு மெய்ப்பட
வேண்டும் தமிழருவி மணியன்
பாரதி மீது வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களுக்கு தனக்கேயுரிய எளிமையான
நடையில் பதில் சொல்கிறார் தமிழருவி மணியன்.
வெளியீடு: தென்திசை பதிப்பகம், 52 தென்மேற்கு போக் ரோடு, தி. நகர்,
சென்னை-17. விலை ரூ.100.
மேயோ கிளினிக்
உடல்நலக் கையேடு - பதிப்பாசிரியர்: சிவசுப்ரமணிய ஜெயசேகர்
கிட்டத்தட்ட
எல்லா நோய்களைப் பற்றியும் சுருக்கமான குறிப்புகளைத் தருவதுடன் எப்பொழுது
டாக்டரை பார்க்க வேண்டும், என்னென்ன சுய தடுப்பு முறைகளை மேற்கொள்ள
வேண்டும் என்பதையும் விவரிக்கும் மருத்துவ நூல்.
வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம்_ 621310. விலை
ரூ.250.
ஒபாமா -
செ.ச. செந்தில்நாதன்
பராக்
ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு. ஒபாமாவின் அரசியல் நிலைப்பாடுகளை
விவரிப்பதுடன், உலக அரசியல் குறித்து அவர் எழுதிய நூலில் இருந்து சில
பகுதிகள் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளன.
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை-24. விலை ரூ.60.
கதை நேரக்
கதைகள் - பாலு மகேந்திரா
பாலுமகேந்திராவின்
கதை நேரக் கதைகள் தொடரில் வந்த ஆறு சிறுகதைகள், அதன் திரைக்கதை வடிவங்கள்,
ஆறு குறும்படங்களின் டி.வி.டி. மூன்றும் கலந்த ஒரு `பேக்' இந்தப்
புத்தகம்.
வெளியீடு: வம்சி புக்ஸ், 19 டி.எம்.சரோன், திருவண்ணாமலை-1. விலை ரூ.150.
நடந்தாய் வாழி
காவேரி தி.ஜானகிராமன், சிட்டி
தமிழில்
எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக்
குறிப்பிடப்படும்
புத்தகம். தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக்
கரையோரமாக
பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும்
எழுதியிருக்கிறார்கள்.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில்.விலை ரூ.225.
யாமம் எஸ்.
ராமகிருஷ்ணன்
சென்னையின்
நூற்றைம்பது வருடத்துக்கு முந்தைய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட
வரலாற்று நாவல். குறிப்பிடும்படியாக வேறு இலக்கிய நாவல்கள் எதுவும்
இந்த
வருடம் வராததால் தனிக்காட்டு ராஜாவானது யாமம்.
வெளியீடு: உயிர்மை, 11/29 சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை
ரூ.225.
குற்றமும்
தண்டனையும் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில்: எம்.ஏ. சுசிலா
உலகின்
முதல் ஐந்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் ரஷ்ய எழுத்தாளர்
தஸ்தயேவ்ஸ்கி நாவலின் மொழிபெயர்ப்பு. வெளியாகி நூறு வருடங்களைக்
கடந்துவிட்ட பிறகும், இன்றும் படிக்க புதிதாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.
வெளியீடு: பாரதி புக் ஹவுஸ், டி-28 மாநகராட்சி வணிக வளாகம், பெரியார்
பேருந்து நிலையம், மதுரை-1. விலை ரூ.500.
சிலப்பதிகாரம்:
எல்லோர்க்குமான எளிய உரையுடன் ப. சரவணன்பண்டிதர்கள், ஆய்வாளர்கள்,
அறிஞர்கள் போன்றோரால்தான் படித்து புரிந்துகொள்ள முடியும்
என்பதில்லாமல்
சாமான்யர்களும் படித்து ரசிக்கத்தக்க வகையில் எழுதப்பட்ட சிலப்பதிகார உரை.
வெளியீடு: சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53வது தெரு, அசோக் நகர்,
சென்னை-83. விலை ரூ.250.
-தளவாய் சுந்தரம்
பல நேரங்களில் பல மனிதர்கள்
R.P. ராஜநாயஹம்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன்.
கடந்த
வருடத்தில், நான் உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், தீராநதியில் எழுதிய
ஒரு கட்டுரை, அமுத சுரபியில் எழுதிய 4கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள்
கொண்ட ஒரு தொகுப்பு பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற தலைப்பில் உயிர்மை
பதிப்பகம் வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர
இருக்கிறது..புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன்
சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த
புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான
என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’.
சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ.
முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம்.
தவிர
இலக்கியத்துறையிலிருந்து அசோக மித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல.
பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம்,
வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G.,
சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன்
குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே
புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை
பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து
ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்!
நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என்
Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து
செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி
நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!போனவருடம் யாராவது என்னிடம் என்
புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக
பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு –
திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியன் என்று தான்
நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?இதைப்படித்து விட்டு, எல்லோரும்,
‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.
பாரதி மணி
விதுரநீதி
- AN INTERESTING BOOK!
பிறர் செய்வதைக் காரணமாகக்
காட்டி செயல்படுபவர் இருவர்.
1) மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே
தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.
2) பிறரால் வழிபட்டவர்களையே
வழிபடுகிற மூடர்கள்.
இவர்கள்
சுய அறிவுடன் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் நாடுகிறார்களே, அது
நல்லதாகத்தான் இருக்கும் என்று மூட நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள்
இவர்கள்.
***********
இந்த இருவரும் கல்லைக் கட்டி
நீர்த்தேக்கத்தில் போட வேண்டியவர்கள்.
1) செல்வமிருந்தும் வேண்டுவோர்க்கு
உதவி செய்யாத செல்வந்தன்
2) உடலை வருத்தி உழைக்க விரும்பாத
ஏழை.
**********
இந்த மூவரையும் எந்த நிலையிலும்,
எந்த நெருக்கடியிலும் கைவிடக்கூடாது.
1) உங்களிடம் மனத்தால் ஒன்றியவர்.
2) உங்களுக்கு அன்புடன் பணிபுரிபவர்
3) தன்னைக் காப்பான் என்று நம்பி
உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்.
***********
இதுபோல நிறைய ஒன்று, இரண்டு என்று பத்துவரை இந்தப் புத்தகத்தில் உண்டு.
விதுரநீதி.
பத்துவருடங்களுக்கு
முன் எனது உறவினர் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்து, புரட்டிப்
படித்துவிட்டு இரவல் கேட்டபோது “இன்னும் படிக்கல” என்று சொல்லப்பட்டதால்
விட்டுவிட்டு வந்தேன். ஆனால் அடிக்கடி இந்தப் புத்தகத்தை நினைத்துக்
கொள்வேன். காரணம் திருக்குறள் போல பல நல்ல கருத்துகளை உள்ளடக்கிய புத்தகம்
இது. மஹாபாரதம், உத்தியோகபர்வதத்தில் 33-40 அத்தியாயங்களில் உள்ள இதை,
புத்தக வடிவில் அச்சிட்டு ஒரு திருமணத்தில் பரிசாகக் கொடுத்ததைத்தான் அவர்
வீட்டில் வைத்திருந்தார். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது,
மறக்காமல் அவர் வீட்டுக்குச் சென்று போராடி, தேடி வாங்கிவந்து ஒரே
மூச்சில் படித்தேன்.
வெரி இண்ட்ரஸ்டிங்கான சில புராணக் கதைகளை உள்ளடக்கியது இது. சொல்கிறேன்
கேளுங்கள்.
விதுரநீதி யாருக்குச் சொல்லப்பட்டது?
பாண்டவர்கள்
அஞ்ஞாதவாசம் முடிந்து நாடு கேட்டு வந்தப்போ, திருதிராஷ்டிரன் தனது
மெய்க்காவலனான ஸஞ்சயனை பாண்டவர்கள்கிட்ட அனுப்பி, “அவங்களை அப்படியே ஓடிப்
போகச் சொல்லு. எனக்கு போர்ல விருப்பமில்ல”ன்னு சொல்லிவிடறாரு. ஸஞ்சயன்
போய் பாண்டவர்கள்கிட்ட சொல்றப்போ, மிஸ்டர்.தர்மருக்கும் ஸஞ்சயனுக்கும் சில
சம்பாஷணைகள் நடக்குது. கடைசியா தர்மர் “உங்காளுக அதர்மத்தை, தர்மம்ன்னு
நெனைச்சு அரசாளறாரு. அத எப்படி நாங்க அலவ் பண்றது ஸஞ்சயா? சரி, ஒனக்கும்
வேணாம், எனக்கும் வேணாம், நான் சொல்ற ஒரு அஞ்சு நகரத்தை மட்டும்
எங்களுக்கு குடுத்துடுங்க”ன்னு சொல்லிவிடறாரு.
ஸஞ்சயன், திரும்பி
திருதிராஷ்ட்ரன்கிட்ட வந்து “ஹலோ மிஸ்டர் கிங்கு, சீக்கிரம் ஒனக்கு சங்கு.
அவனுக ரொம்ப நல்லவங்கப்பா. நீங்க அதர்மத்துக்கு சொம்பு தூக்கிகிட்டு
இருக்கீங்க. எனக்கென்னமோ கௌரவகுலம் அழியும், அதுக்கு நீங்கதான்
காரணமாயிருப்பீங்கன்னு தோணுது”ன்னு சொல்லீட்டு அங்க பேசினதை முழுசா
சொல்லாம “ட்ராவல் பண்ணினதால டயர்டா இருக்கு. விரிவா காலைல சொல்றேன்”ன்னு
சொல்லீட்டு போயிடறாரு. (யோசிச்சுப் பாருங்க. இன்னிக்கு மன்னனோ, நம்ம
முதலாளியோ ஒரு வேலை சொல்லீட்டு நாம் இதுமாதிரி பாதி ரிப்போர்ட் பண்ணி,
மீதியைக் காலைல சொல்றேன்னு தூங்கப்போகமுடியுமா? ஹூம்ம்ம்ம்!)
சஞ்சயன்
தூங்கப் போயிட்டார். இங்க மன்னன் திருதிராஷ்ட்ரனுக்கு தூக்கமே வர்ல. மனசு
ரொம்ப சஞ்சலப்படுது. உடனே விதுரரைக் கூப்ட்டனுப்பி “யப்பா. ஸஞ்சயன் காலைல
என்ன சொல்லப்போறானோன்னு கெடந்து தவிக்குதுப்பா. என்ன பண்றதுன்னே தெரியல.
கொஞ்சம் ஆறுதலா எதுனாச்சும் சொல்லு”ங்கறாரு. அப்போ விதுரர் சொல்ற
அறிவுரைகள்தான் விதுரநீதி.
அந்த கௌரவர் கூட்டத்துல எப்படி விதுரர் மட்டும் நீதி, நேர்மைன்னு
இருக்காரு? அதுக்கும் இருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்.
மாண்டவ்யர்-ங்கற
முனிவர் தன்னோட ஆசிரமத்துல அடைக்கலம் கேட்டுவந்த சிலருக்கு அடைக்கலம்
தர்றார்.. அவங்க மொத நாள் நைட் அரண்மணைல ஆட்டையப் போட்டவங்க.
(திருடினவங்க). அதுதெரியாம இவரு, தங்க வெச்சுட்டாரு. இப்போமாதிரி,
ரெண்டுமூணு வருஷம் கழிச்சா திருடங்களைப் பிடிக்கறாங்க? அப்போவெல்லாம் உடனே
பிடிச்சிடுவாங்கள்ல? அப்படி அரண்மணைக் காவலர்கள் வர்றப்போ, இந்த
முனிவரையும் திருடன் ஒருத்தன்தான் வேஷம் போட்டிருக்கான்னு புடிச்சுட்டு
போயிடறாங்க. எல்லாரையும் கழுவில ஏத்துங்கன்னு மன்னன் சொல்றாரு. அப்படி
ஏத்தறப்போ முனிவர் மாண்டவ்யர் தன்னோட தவ வலிமையால் அப்படியே கழுமரத்தில்
இருந்தார். இறக்கவில்லை. தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கும் அப்படி
இருந்துகிட்டே போதனையெல்லாம் சொல்றாரு. காவலர்கள் இதை ராஜாகிட்ட சொல்றப்போ
‘ங்கொக்கமக்கா, தப்பு பண்ணீட்டேனே”ன்னு ஒடிப்போய் கழுமரத்திலிருந்து
அவரைப் பிரிக்கச் சொல்றான். முடியல. இரும்பில ஆன அந்தக் கழுமரத்திலிருந்து
அப்படியே அவரை உரிச்சு எடுக்கச் சொல்றான். உடம்பில அங்கங்கே ஆணியோட, அரச
மரியாதையோட மறுபடி ஆசிரமத்துக்கு போறார் மாண்டவ்யர்.
இவரோட காலம்
முடிஞ்சு மேல யமலோகத்துக்கு போறப்ப மாண்டவ்யர் யமன்கிட்ட “என்ன கொடுமை யமா
இது? எனக்கு ஏன் இப்படி நடந்துச்சு”ன்னு கேட்கறாரு.
யமன் அவரோட
ரெகார்டையெல்லாம் பார்த்து, “சின்ன வயசுல பட்டாம்பூச்சிகளப் பிடிச்சு,
அதோட வாலுல ஈர்க்குச்சியை சொருகி விளையாடியிருக்கீங்க. அதுக்குண்டான
தண்டனைதான் இது”ங்கறாரு.
மாண்டவ்யர்க்கு கோவம் வருது. “ஆஸ் பர்
யமலோக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ், பன்னிரெண்டு வயசு வரைக்கும் ஒருத்தன்
பண்ற பாவத்துக்கு அவனுக்கு தண்டனை இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ
எனக்கு தண்டனை குடுத்த?”ன்னு கேக்கறாரு. யமன் “ஐயையோ... மிஸ்டேக்
பண்ணீட்டோமே”ன்னு தலை குனிஞ்சு நிக்கறாரு. அப்போ மண்டவ்யர் சாபம் விடறாரு.
“நீதியைக் காப்பாத்த வேண்டிய நீயே நீதி தவறினதால நீ மனுஷனாப் பொறந்து
மத்தவங்களுக்கு நெறிமுறையைப் போதிச்சு, நீயும் அதன்படி வாழு”ன்னு.
அந்த யமன்தான், விதுரர்!
விதுரர் சொன்னதுதான் விதுரநீதி!
சில
கருத்துகள் முரண்பாடா இருந்தாலும் (ஒரு இடத்துல ஒண்ணுமில்லாத ஆண்டி,
நலப்பணிகள்ல ஈடுபட்டா விளங்கமாட்டான்னு சொல்றாரு. அடுத்த ஸ்லோகத்துல
இல்லாட்டியும் வாரி வழங்குற ஏழை வானத்துக்கு மேல உயர்ந்தவன்-ங்கறாரு) பல
கருத்துகள் ‘அட’ போட வைக்குது!
கடைசியா, இதையெல்லாம் கேட்ட
திருதிராஷ்டிரன் ஏன் சண்டை போட்டான்? ஏன்னா, அவருக்கு கணிகர்-ங்கற
அர்த்தசாஸ்திர வல்லுனர் சில போதனைகளைச் சொல்றாரு. ‘நீதி நேர்மையெல்லாம்
தூக்கி குப்பைல போடுல. நான் சொல்றத கேளுல’ன்னு சில (அ)நீதி போதனை
சொல்றாரு. மகாபாரதத்துல ஆதிபருவம்-139வது ச்சாப்டர்ல இருக்கு இது.
கூடநீதி. (கூடம் = வஞ்சனை) அப்படியே இன்னைக்கு இருக்கற அரசியல்வாதிகள்,
இதைப் படிச்சிருப்பாங்களோன்னு நினைக்க வைக்குது!
தன்குறைகளை
மறை, பிறர் குறைகளை விரிவுபடுத்து. அடைக்கலம் புகுந்தாலும் பரிவு
காட்டாதே. நல்லவனா இருந்தா, சிறுகச் சிறுக பணம் குடுத்து அவனைக் கெடு.
உனது செயல் முறையை முன்னதாக ஊகிக்க இடம் குடுக்காதே. திட்டத்தை திடீர்னு
தள்ளிப்போடு. பிறர் உன்கிட்டேர்ந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய்.
எதிர்பார்த்து இருக்கும்போது மறுபடி தள்ளிப் போடு. தள்ளிப்போட ஏதாவது
காரணத்தை சொல்லிகிட்டே இரு. அவன் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனோட
காரியத்துல கவனக் குறைவா இருக்கறப்போ போட்டுத் தாக்கி அவனை அழி.
இப்படி
கூடநீதி படிக்கப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். (கேடுகெட்ட மனசு! விதுர நீதி
புத்தகத்துல வெறும் மூணு பக்கம் இருந்தாலும் இந்த கூடநீதில நாட்டம்
கொள்ளுது பாருங்க!)
இந்தப் புத்தகம் சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்டுக்காக வெளியிட்டவர் சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரி, 22, வீரேஸ்வரம்
அப்ரோச் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620006 ன்னு போட்டிருக்கு.
கிடைச்சா நிச்சயமா வாங்கிப் படிங்க!