Home / BharathiMani

BharathiMani


அன்னை தெரசா

பாரதி மணி

(நாகர்கோவில் அருகில் பார்வதிபுரத்தில் 24.9.1937 அன்று பிறந்தவர், பாரதி மணி. தில்லியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த பிறகு இப்போது சென்னையில் வசிப்பவர். 64 ஆண்டுக் காலமாக ஆயிரக் கணக்கான மேடை நாடகங்களில் நடித்து வருபவர். பாரதியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, 1982 முதல் இவர் பாரதி மணி என அழைக்கப்படுகிறார். தற்செயலாக, 'பாரதி' திரைப்படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்தவர். அப்படத்தில் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டேவுக்குத் தமிழ் உச்சரிப்பு, வெளிப்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தவர். இலண்டன் நாடகப் பள்ளியில் Voice Culture எனப்படும் குரல் வளப் பயிற்சி பெற்றவர்.

பாரதி தவிர, ரஜினிகாந்த் நடித்த பாபா படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஊருக்கு நூறு பேர், நண்பா நண்பா, ஒருத்தி, றெக்கை எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்துள்ள 40 படங்களில் 14 படங்கள் ஏதோ ஒரு வகையில் விருது பெற்ற படங்களாகவே அமைந்துவிட்டன. அதனால் நண்பர்கள் வேடிக்கையாக, மணி ஒரு காட்சியில் வந்தாலும் போதும்; படத்திற்கு விருது நிச்சயம் என்று கூறுவதுண்டு.

பாரத் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், பிர்லா நிறுவனம், மான் (M.A.N.) எனப் பல நிறுவனங்களில் பல்வேறு உயர் பதவிகள் வகித்துள்ளார். தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்குப் பயணித்தவர்; க.நா.சு.வின் மாப்பிள்ளை. தமிழ் சிஃபியில்எழுத முன்வந்திருக்கும் பாரதி மணியை வரவேற்கிறோம். செப்டம்பர் 5ஆம் தேதி, அன்னை தெரசாவின் நினைவு நாள்; இந்தத் தருணத்தில் இந்தக் கட்டுரை வெளியாவது, கூடுதல் பொருத்தம் உடையது. - அண்ணாகண்ணன், ஆசிரியர்)

=========================================

சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொள்ள சேலம் போயிருந்தேன். லோக்கல் கேபிள் டி.வி.யில் ஒரு நேர்காணல் பதிவு செய்தனர். அதில் ஒரு கேள்வி: 'நீங்கள் படவுலகில் பல நட்சத்திரங்களுடன் பழகியிருக்கிறீர்களே, அதைப் பற்றிச் சொல்லுங்கள்'. அதற்கு என் பதில்: 'நட்சத்திரங்களை விடுங்கள். நான் சூரியனோடு பக்கத்தில் இரண்டரை மணி நேரம் இருந்திருக்கிறேன், அதுவும் ஆகாயத்தில்'. இது நான் யோசித்துச் சொன்ன புத்திசாலித்தனமான பதில் அல்ல. உண்மையிலேயே ஒரு சூரியனுடன் பயணம் செய்திருக்கிறேன்.

எழுபது எண்பதுகளில், நான் தில்லியில் இருந்தபோது என் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம். முக்கியமாக பங்களாதேஷ் போகவேண்டிய அவசியம் இருந்தது. சில மாதங்களில் மூன்று முறைகூட போய் வரவேண்டிய சூழ்நிலை. வாரமிருமுறை மட்டும் தாய் எயர்லைன்ஸ் தில்லி - டாக்கா டைரக்ட் ஃபி்ளைட். மற்ற நாட்களில் கொல்கத்தா போய் அங்கிருந்து பங்களாதேஷ் பிமான் பிடிக்க வேண்டும்.

1980-ம் ஆண்டு அதிகாலை தில்லி குளிரில் 6.30 மணி கொல்கத்தா விமானத்தைப் பிடிக்கப் பாதுகாப்புச் சோதனை முடிந்து காத்திருந்தேன். வளவளவென்ற பேச்சுகள் திடீரென்று நின்று ஓர் அமைதி. திரும்பிப் பார்த்தால் அன்னை தெரசா இரு பணிப்பெண்[ஸிஸ்டர்]களுடன் வருகிறார். எல்லோரும் எழுந்து நின்றோம். காலியாக இருந்த என் எதிர் நாற்காலியில் அமர்ந்தார். இதற்கிடையில், விமான நிலைய அதிகாரி ஓடிவந்து வி.ஐ.பி லௌஞ்சுக்குப் போகலாமென்றார். கண்ணை மூடி கையசைத்து அதெல்லாம் தேவையில்லை என்பதுபோல் சைகை காட்டினார்.

இருமுறை கெஞ்சியும் பிடிவாதமாக மறுத்துவிட்டார். தோளில் சாந்திநிகேதன் டைப் ஜோல்னாப்பை மட்டும். அந்தச் சூரியனை பக்கத்திலிருந்து அப்போது தான் பார்க்கிறேன். முந்தைய நாள் மாலையில் அவருக்கு 'பாரத ரத்னா' விருதை நம் குடியரசுத் தலைவர் வழங்கும் நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் பார்த்திருந்தேன். எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். தூய்மையான வெள்ளைச் சேலை நீல பார்டரில். முந்தானையில் �ங்காளிப் பெண்களைப் போல் முடிந்துகொண்ட சாவிக் கொத்து. திபெத்தியப் பெண்களைப் போல் அழுத்தமான முகச் சுருக்கங்கள். ஆங்கிலத்தில் காக்கையின்கால் என்பார்கள். வளைந்த முதுகு. சற்றே உள்வளைந்த கால் கட்டை விரல்கள் கோலாப்புரி செருப்புக்கு வெளியே தெரிந்தன. அன்பும் நேசமும் இழையோடும் பார்வை. உலகிலேயே மிகவும் அழகான பெண்மணி!

விமானம் தயாரென்ற அறிவிப்பு வந்ததும், வழக்கமான சந்தை இரைச்சல், அவசரம் இல்லாமல் ஒருவித மரியாதையுடன் அவரவர் கைப்பைகளுடன் விமானத்தை நோக்கிப் புறப்பட்டோம். விமானத்திலிருந்த எல்லா ஆங்கில தினசரிகளும் அன்னையின் விருதுச் செய்தியை எட்டுப் பத்தியில் அறிவித்தன. விமானப் பணிப்பெண் அவரை என் பக்கமாக அழைத்துவந்தார். என்ன ஆச்சரியம்! அவருக்கு என் பக்கத்திலிருந்த ஜன்னல் இருக்கை. மன�துக்குள் இனம் புரியாத சந்தோஷம். இரண்டரை மணி நேரம் உலகத்துக்கே அன்னையான அந்த மாதரசியின் பக்கத்தில் அமரும் பேறு! எழுந்து நின்று அவர் உள்ளே போக வழி விட்டேன். பயணத்தின்போது அநாவசியமாகப் பேசி அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

'குட் மார்னிங் மதர்' என்று மட்டும் சொன்னேன். விமானம் ஆகாயத்தில் பயணித்ததும் அரைமணி நேரம் கண்ணை மூடிக்கொண்டார். கண் விழித்ததும். அவருடன் வந்திருந்த 'சகோதரிகள்', மதர், மதர் எல்லா பத்திரிகைகளிலும் விருதுச் செய்தி போட்டோவுடன் வந்திருக்கிறது என்று காட்டினார்கள். அவர் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! என்னைப் போன்ற அற்பங்களுக்குத்தான் நம் படம் பத்திரிகையில் வந்தால் மகிழ்ச்சி, பெருமை!

பணிப்பெண் கொண்டு வந்த காலைச்சிற்றுண்டியை மறுத்துவிட்டார். சுமார் ஒருமணி நேரம் கழித்து என்னைப் பற்றி விசாரித்தார். பங்களாதேஷ் போவதாகச் சொன்னதும், டாக்காவிலும் குல்னாவிலும் அவர்கள் நிறுவனம் இருப்பதாகவும் அங்கே போயிருப்பதாகவும் சொன்னார். இதற்கிடையில் கையில் காமிராவுடன் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ஒரே க்ளிக் மயம். நான் சட்டாம்பிள்ளை போல இது மதருக்கு தொந்தரவு என்று சொல்லி எல்லோரையும் அவரவர் இருக்கைகளுக்குப் போகச் சொன்னேன்.

நான் சொல்வதை யார் கேட்டார்கள், இவர்கள் கேட்பதற்கு? அந்தக் காலத்தில் விமானத்துக்குள் தற்போதைய கெடுபிடி கிடையாது. சிலர் என்னிடம் காமிராவைக் கொடுத்து அவர்கள் என் சீட்டில் அமர்ந்து அன்னையுடன் போட்டோ எடுக்கச் சொன்னார்கள். நான் என் காமிராவை� கொண்டுபோகவில்லை. அதனால் நான் போட்டோ எடுத்தவரிடம் என்னையும் மதரையும் படம் பிடிக்கச் சொன்னேன். என் விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்து போட்டோ தயாரானதும் எனக்கு ஒரு பிரதி அனுப்பச் சொன்னேன். அவசியம் அனுப்புவதாகச் சொன்னார்.

கொஞ்ச நேரத்தில் விமானம் தரையிறங்குவதால் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. அவர் பெல்ட் அணிந்துகொண்டே, ஸன், உனக்கு ஏதாவது தரவேண்டுமே என்று அவரது ஜோல்னாப்பையைத் துழாவி, ஒரு சிறு பைபிள் புத்தகமும், ஜபமாலையும் [ரோஸரி] எடுத்துக் கொடுத்தார். நான் மதர், 'இதில் உங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுங்களேன்' என்றதற்கு 'ஷ்யூர்' என்று சொல்லி 'டு மை டியரெஸ்ட் ஸன் மணி' என்று எழுதி, என்னிடம் தேதி என்னவென்று கேட்டு, 'வித் லவ், தெரசா' என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். காலைத் தொட்டு வணங்கியதற்கு, 'காட் பிளெஸ் யூ' என ஆசீர்வதித்தார். அந்த பைபிளையும் ஜபமாலையையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.

எனக்கு அன்னை தெரசாவிடம் ஒரு தீராத மனக் குறையுண்டு. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தவருக்கு தன் மரண நேரத்தை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. ஆம், அன்னை இறந்த நாளில் தான் இளவரசி டயானாவும் பாரீசில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். எல்லா ஊடகங்களும் காமிராவைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னால் போய்விட்டன. எல்லா மலர் வளையங்களும் டயானாவுக்கே வைக்கப்பட்டன. அன்னையின் மரணம் 'Mother Theresa also died' என்ற அளவில் இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது. இந்த விளம்பர யுகத்தில், இறக்கும்போதும் சரியான நேரம் பார்க்க வேண்டியிருக்கிறது!

மூன்று வாரங்களுக்குப் பிறகு குருச்சரண் பாட்டியா என்பவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வெளிநாடு போய்விட்டதால் தாமதத்திற்கு மன்னிப்புக் கோரி, நானும் அன்னை தெரசாவும் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார். இந்த உலகத்தில் நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள்!

(அமுதசுரபி டிசம்பர் 2007 இதழில் வெளியானது)

================================
 
அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?
பாரதி மணி

அஞ்சலி 


ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பூர்ணம் விசுவநாதனுடனான நட்பு நீடித்தது. நட்பு என்றால் தினமும் ஒருதடவை நேரிலோ அல்லது போனிலோ ‘என்னையா, சௌக்கியமா?’ என்று குசலம் விசாரிக்கும் சினேகிதமல்ல. வருடத்திற்கொரு முறை சந்தித்துக்கொண்டாலும், முகமும் கண்களும் மலர, அவருக்கே சொந்தமான அந்தச் சிரிப்புடன், ‘என்ன மணி, எப்படியிருக்கேள்?’ என்று இருகைகளையும் பிடித்துக்கொண்டு கேட்கும்போது, அவரை நேற்றுத்தான் சந்தித்தது போலிருக்கும். இடைவெளியைக் கடந்த நட்பு அது. காம்பஸ் வைத்து வரைந்ததுபோல் வட்ட முகம். கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சிரிக்கும் கண்கள். அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் இதே அனுபவம் இருந்திருக்கும். போன மாதம் மறைந்த திரு.பூர்ணம் விசுவ நாதனைப்பற்றிச் சில நினைவுகளை உயிர்மை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன்.

தில்லி ஆல் இந்தியா ரேடியோ செய்திப் பிரிவில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளராகப் பலவருடம் பணி புரிந்தார். நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் இந்தியா சுதந்திரமடைந்ததைத் தமிழில் உலகுக்குச் சொன்னவர். இவருடன் பணியாற்றிய ராமநாதன் (நடிகர் சரத்குமாரின் தந்தை), தர்மாம்பாள், வெங்கட்ராமன், நாகரத்தினம் இவர்களது குரல்கள் - தினமும் காலை ஏழே கால் மணிக்கு ‘ஆல் இண்டியா ரேடியோ . . . செய்திகள் . . . வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன் . . .’ செய்தியைப் பாதியிலிருந்து கேட்கத் தொடங்கும் நம்ம ஊர் பெரிசுகள் குரலை வைத்தே, ‘ஓ இன்னிக்கு பூர்ணமா?’ என்று கேட்குமளவிற்கு, டி.வி. வராத அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிச்சயமான குரலாக இருந்தது. கையில் ரிமோட்டுடன் 150 சானல்கள் கொண்ட இடியட் பாக்ஸ் இல்லாத காலத்தில் தமிழ்ச் செய்திகளுக்கு, காலையில் 5,30 மணிக்கு (தென்கிழக்காசிய சேவை), காலை 7.15, மதியம் 1.30, மாலை 7.15 மணிக்கு இவர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை! ஜனாதிபதியோ முக்கியமான மத்திய அமைச்சரோ இறந்தாலும், அந்தச் செய்திக்காக நாம் காத்திருக்க வேண்டும். இப்போதைய சானல்களில் Breaking News என்ற சாக்கில் அரைத்த மாவையே அரைப்பது போல் 24 மணிநேரமும் ‘செய்திகளை உடைப்பது’ போன்ற வியாபார உத்திகள் அப்போதைய அப்பாவி ஆல் இந்தியா ரேடியோவுக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் தர்மாம்பாள் இலங்கைத் தமிழ் ரசிகர்கள் அழைப்பில், தில்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கே போய்வந்தவர்! போய்விட்டு வந்து ஆறுமாதத்துக்குப் பிறகும், நேரில் பார்ப்பவர்களிடம், தன் சிலோன் விஜயத்தைப் பற்றி அரைமணி நேரம் அறுக்காமல் விடமாட்டார். யாரும் அவர் எதிரே மாட்ட பயப்படுவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு பூர்ணம் என்பது அவர் தந்தையின் பெயரான பூர்ண கிரு பேசுவரன் என்பதன் சுருக்கம். பூர்ணம் விசுவநாதனின் மூத்த சகோதரர், பூர்ணம் சோமசுந்தரம் ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராக இருந்தார். அங்கேயே ஒரு ரஷ்யப்பெண்மணியை மணம் புரிந்துகொண்டு மாஸ்கோவிலேயே செட்டிலாகிவிட்டார். ஐம்பதுகளில் ஒரு தமிழர் சேலையுடுத்திய வெளி நாட்டு மனைவியிடம் ரஷ்யமொழியில் பேசுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இன்னொரு சகோதரர் ஐம்பதுகளில் எழுத்தாளராகப் புகழ்பெற்றிருந்த உமாசந்திரன் -இவர் சென்னை டி.ஜி.பி.யாக இருந்த நடராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் தந்தை. உமாசந்திரனின் கதையைத் தான் டைரக்டர் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ திரைப்படமாக எடுத்தார். விசுவநாதனின் தங்கை பூர்ணம் லட்சுமி தில்லி ஆல் இந்தியா ரேடியோ External Services Division  தினமும் காலை 5.30-6.30மணிக்கு ஒலிபரப்பும் தென்கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ்ப்பிரிவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக
இருந்தார். தில்லியில் அவர் மறையும் வரை எனக்குக் குடும்ப நண்பர். திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் பெண்ணியத்தின் இலக்கணமாக இருந்தவர். என் வயதுள்ள யாழ்ப்பாண, மலேஷிய, சிங்கப்பூர்த் தமிழ் ரசிகர்களுக்கு பூர்ணம் லட்சுமியின் குரலும் பரிச்சயமாக இருந்தது. ‘....அடுத்ததாக வெள்ளவத்தை கார்த்திகேசு, கோலாலம்பூர் சிவசாமி, யாழ்ப்பாணம் சங்கரலிங்கம் . . . பினாங்கு பீர் முகம்மது . . . ரங்கூன் ரமாதேவி ஆகியோர் விரும் பிக்கேட்ட பாடல் 'தூக்கு தூக்கி’ படத்திலிருந்து டி.எம். சௌந்தரராஜன் பாடியது . . .’ என்று அவரது கணீரென்ற குரல் ஐம்பதைத் தாண்டிய அ. முத்துலிங்கம் போன்றோருக்கும் நினைவிருக்கலாம்.

1955-ல் நான் தில்லி போன இரு வாரங்களில், சௌத் இந்தியா கிளப் ஆண்டுவிழா கலைநிகழ்ச்சியில் பூர்ணம் எழுதி நடித்த ஓரங்க நாடகம் இடம் பெற்றிருந்தது. நாடகத்திற்குப்பிறகு 'விலாசமில்லாத’ என்னை அறிமுகப்படுத்திக்கொண் டேன். பிறகு ஒரு நாள் ரேடியோ ஸ்டேஷனில் சந்தித்தபோது, ‘மணி, அடுத்த நாடகத்தில் உங்களுக்கும் ஒரு ரோல் இருக்கு. ரிகர்ஸலுக்கு வந்துடுங்க’ என்றார். நானும் அவர் நடிக்கும் ஓரங்க நாடகங்களில் பங்குபெற ஆரம்பித்தேன். தில்லியில் தமிழ் நாடகத்திற்கென்றே தனி அமைப்புகளாக எனது தட்சிண பாரத நாடக சபாவும், பூர்ணம் பங்குபெற்ற சௌத் இந்தியன் தியேட்டர்ஸும் பின்னால்தான் தொடங்கப்பட்டன.

நான் தில்லி போன மறுமாதமே AIR External Services Division தமிழ்ப் பிரிவு தினமும் காலை 5.30 முதல் 6.30 வரை ஒலிபரப்பும் நிகழ்ச்சியில் இடம்பெறும் ரேடியோ நாடகங்களில் பங்குபெற கான்ட்ராக்ட் வர ஆரம்பித்தது. மாதத்தில் ஐந்தாறு நாடகங்களில் கலந்துகொள்வேன். தில்லி போகுமுன்னரே திருவனந்தபுரம் திருச்சி ரேடியோ நிலையங்களில் ஆடிஷனில் தேர்ந்து நடித்து வந்தவன். அப்போதெல்லாம் ரிக்கார்டிங் வசதி கிடையாது. செய்தி வாசிப்பதுபோல நாடகங்களும் லைவ் தான். அந்த நாடகங்களை பூர்ணம் லட்சுமி, தர்மாம்பாள், என். ஆர். ராஜகோபாலன் போன்றவர்கள் இயக்குவார்கள். தில்லி குளிர்காலத்தில் அதிகாலை மூன்றுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, வெடவெட குளிரில் குளித்துத் தயாராகி, வாசலில் அழைத்துப் போக வரும் AIR Van அடிக்கும் ஹாரனுக்காகக் காத்திருக்கவேண்டும். உலகமே நிச்சிந்தையாகத் தூங்கும் நேரமது. போகும் வழியில், பூர்ணம் லட்சுமியையும், வினே நகரிலிருந்த பூர்ணத்தையும் மற்ற நடிகர்களையும் ஏற்றிக்கொள்ளும். வழியில் அண்ணன்-தங்கை பேசிக் கொள்வதைக் கேட்டால், அவர்கள் பாசம் இழையோடும். ரேடியோ ஸ்டேஷன் போகும்வரை லட்சுமியின் 'கொல்'லென்ற சிரிப்பு (ஆமாம், இதென்ன சிரிப்பு?!) தொடரும். இந்த ஒருமணிநேர நிகழ்ச்சி 10 நிமிட தமிழ்ச்செய்தியுடன் தொடங்கும். அதனால் தன் மேசையில் தயாராக வைத்திருக்கும் ஆங்கிலப் பிரதியைத் தமிழில் மொழிபெயர்த்துத் தயாராக்கத் தமிழ் யூனிட்டை நோக்கி ஓடுவார் பூர்ணம்.

முன்பே ஒருதடவை வந்து ஒத்திகை பார்த்திருப்பதால், நாங்கள் அவசரமில்லாமல் ஸ்டுடியோவுக்குப் போவோம். சரியாக ஐந்தரை மணிக்கு முகப்பு அறிவிப்பு முடிந்ததும் அடுத்த ஸ்டுடியோவிலிருந்து, விசு ‘ஆல் இண்டியா ரேடியோ . . . செய்திகள் . . . வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்..’ என்று தன் கணீரென்ற குரலில் ஆரம்பிப்பார். அதற்குமுன் நாங்கள் இடையிலுள்ள கண்ணாடிச்சுவர் வழி கட்டைவிரலை உயர்த்தி ‘Best of Luck!’ சொல்லுவோம். நாடகத்துக்குத் தேவையான பிரதிகளை காப்பி எடுத்து Copywriter பஞ்சாபகேசன் தயாராக வைத்திருப்பார். இவரைத் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பஞ்சாபகேசன் என்ற பெயரிலல்ல. இவர் தான் நடிகர் அர்விந்த் ஸ்வாமியின் தந்தையும், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் அப்பா வேஷத்தில் நடிப்பவருமான டில்லி குமார் அவர்கள். தில்லி மேடையில் பூர்ணத்துடன் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கடிகாரத்தின் மேல் இருக்கும் ON AIR என்ற சிவப்பு விளக்கு எரியும்போது, உலகத்தில் அனைவருமே தூக்கத்தை மறந்து, என் நாடகத்தைக் கேட்க ரேடியோ பெட்டிகள் முன் உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்வேன். ரேடியோ நாடகத்தில் பார்த்துப் படிப்பதால், வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குப் போகும்போது, குனியாமல் பேசிக்கொண்டே மைக்கில் பேப்பர் சலசலப்பு சத்தமில்லாமல் கீழே நழுவவிடுவது ஒரு கலை. வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள, என் நேரத்தை வேலை செய்யும் கம்பெனிகளுக்கும், அது சம்பந்தமான பிரயாணங்களுக்கும் தாரை வார்த்துக்கொடுக்கும் வரை, தில்லியில் ஆயிரம் ரேடியோ நாடகங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவை என் தில்லி வாழ்க்கையில் ரம்மியமான நாட்கள்.

நாடகம் முடிந்து, Duty Officer Room-க்கு வந்து தயாராக வைத்திருக்கும் நமது காசோலைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் ரூமில் வைத்திருக்கும் நாலைந்து ஸ்பீக்கர்களிலிருந்து அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, ஒரியா, பெங்காலி நிகழ்ச்சிகள் மொழி புரியாத ஓர் ஒலிக்கலவையாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதை நாம் ஒருமணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தால், உத்தரவாதமாக பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதையெல்லாம் அவர் நாள் பூராவும் கேட்டாகவேண்டும். அவர் ‘Duty!’ டூட்டி ஆபீசரல்லவா? மற்றவர்களுக்கெல்லாம் ரூ.15 எனக்கு மட்டும் ரூ. 20. ஏனென்றால் நான் 1948-லேயே திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷனில் ஆடிஷன் ஆன ‘ஏ’ கிரேடு ஆர்ட்டிஸ்ட். மற்றவர்கள் வெறும் கையெழுத்து போட்டு காசோலையை வாங்கிக் கொள்வார்கள். எனக்கு மட்டும் ரூ. 20 என்பதால் ரசீதில் ஒரு அணா ரெவென்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப்போடவேண்டும். ஒரு அணா (ஆறு பைசா) இல்லையென்றால், உன் சொத்தை விற்றாவது ஓரணா கொண்டுவா, பிறகுதான் செக் தருவேன் என்பார்கள். சில சமயம் பாக்கெட்டில் சில்லறையில்லாமல், நியூஸ் ரூமுக்கு ஓடிப்போய் பூர்ணம் விசுவநாதனிடம் ஒரு அணா கடன் வாங்குவேன். (இந்தக் கடனை கான்டீனில் காபி வாங்கிக் கொடுத்து கழித்துவிடுவேன்.) இந்த ரூ. 20-க்கான Government of India காசோலைக்கு ராஷ்டிரபதி பவனில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவரைத் துணைக்குக் கூப்பிட்டு For and on behalf of President of India Accounts Officer கையெழுத்து போட்டிருப்பார். இந்த இருபது ரூபாயைப் பணமாகக்கொடுக்க நம் அரசாங்கத்தின் ரூல்ஸ் இடம் தராது. இன்னும் நாம் மாறவில்லை. No body can beat our Indian Bureaucray. அமெரிக்கா போய்விட்டு வந்த இந்திரா பார்த்தசாரதி தன் பென்ஷன் அரியர் ஸுக்கு  விண்ணப்பித்தபோது, ‘ஆறு மாதத்துக்கு முன்னால் உயிரோடு இருந்தீர்கள்’ என்பதற்கான சான்றிதழுடன் நேரில் வரவும்’ என்றது தில்லி  பல்கலைக்கழகம்!

ஏழுமணி அளவில் AIR Canteenல் காத்திருப்பேன். செய்தி வாசிப்பு தடங்கலின்றி நிறைவேறியதாக ஒரு ரிப்போர்ட் எழுதி டூட்டி ஆபீசரிடம் கொடுத்துவிட்டு பூர்ணமும் வருவார். அந்தவேளையில் கான்டீன் காலியாகவே இருக்கும். அங்கே காலைவேளையில் சுடச்சுட மெதுவடை கிடைக்கும். ஆனால் தொட்டுக்கொள்ள சட்னிக்குப்பதிலாக, வெள்ளைப் பூசணிக்காயுடன் புளிகாரம் உப்பு கலந்து அரைத்த ஒருவகை ஸாஸ்தான் பாட்டிலில் வைத்திருப்பார்கள். ஒருநாள் காலை இருவரும் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இருபது வயதுள்ள ஒடிசலான ஓர் இளம் பெண்மணி கையில் காபி கப்புடன், ‘Can I join you?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் எங்கள் எதிரில் உட்கார்ந்தார். சரளமான ஆங்கிலத்தில், பூர்ணத்தைத் தெரியுமென்றும் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் சொன்னார். தன் பெயர் ஆங் ஸான் ஸூ சி என்றும் தில்லியில் தங்கிப் படிப்பதாகவும், காலை நேரங்களில் வெளிநாட்டுச்சேவை ஒலிபரப்பில் பர்மியமொழிச் செய்தி வாசிப்பாளராக இருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ரேடியோ ஸ்டேஷனில் பர்மீஸ் யூனிட்டைத் தாண்டித்தான் தமிழ் யூனிட்டுக்குப் போக வேண்டும். பிறகு அதே கான்டீனில் எப்போதாவது பார்க்க நேர்ந்தால் முகமன் சொல்லிக்கொள்வோம். ஒருமுறை, பர்மியரான அவர் இந்தியாவில் தங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார். வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் Foreigner's Registration Office-ல் என் நெருங்கிய நண்பன் உயர் பதவியில் இருந்ததால், என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, அவனைப் போய்ப் பார்க்கச்சொன்னேன். அடுத்தவாரம் பார்க்க நேர்ந்தபோது, ஓடி பக்கத்தில் வந்து, என் நண்பன் உதவியால் இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி ஒரு நொடியில் கிடைத்துவிட்டதாக நன்றி சொன்னார். அதன்பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அவர்தான் 1991-ம் ஆண்டு சமா தானத்துக்கான நோபல் பரிசு பெற்ற பர்மியப் போராளி Aung San Suu Kyi. 1990-ல் மிலிட்டரி சர்வாதி காரத்தை எதிர்த்து, சமாதானப் போர் நடத்தி, வீட்டுச்சிறையிலிருந்த படியே, பிரசாரத்துக்குக்கூடப் போகாமல், தன் கட்சியான Natioonal League of Democracy-க்கு 80% இடங் களைத் தேடிக்கொடுத்தவர். ஜன நாயகத்தில் நம்பிக்கையில்லாத பர்மிய மிலிட்டரி சர்வாதிகாரம் தேர்தலை, null and void என்றுகூறி ஆட்சியிலிருந்து விலக மறுத்தது. உலக வல்லரசுகளும் பத்திரிகை களும் வற்புறுத்தியும்கூட, அவரை ஸ்வீடனுக்கு நேரில் போய் நோபல் பரிசைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. 1989-லிருந்து இன்றுவரை - சில மாதங்கள் தவிர - பர்மிய சர்வாதிகாரம் இவரை வீட்டுக்காவலிலேயே வைத்திருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. உலகத்தின் இரண்டாவது பெரிய ஜனநாயக வல்லரசான நாம், மௌனமாகப் பார்த்தும் பார்க்காமலிருக்கிறோம். இல்லை.... ஆரம்பத்தில் 1969-ல் Ghungi Gudiya (பேசாத பொம்மை) என்று கேலியாகவும் பிறகு எண்பதுகளில் The only Man in her entire Cabinet என்றும் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்திரா காந்தி போல் இன்னொருவர் வரக் காத்திருக்கிறோமா?

நான் சென்னை வந்தபிறகு, 2002-ல் ஸூ சி அம்மையாரை காவலிலிருந்து விடுவிக்கவேண்டுமென்று போராட்டம் வலுத்து வந்தது. தினமும் அவர் பெயர் தினசரிகளில் தென்பட்டது. செய்திச்சானல்களில் அடிக்கடி வருவார். அப்போது ஒரு நாள்திரு. பூர்ணத்தைப் பார்க்கப் போயிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இந்த அம்மையாரை நாம் சந்தித்திருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவருக்கு நினைவில்லை. விளக்கிச் சொன்னவுடன் மகிழ்ச்சியோடு, ‘அப்போ நாம ஒரு நோபல் ப்ரைஸ் வின்னருடன் கைகுலுக்கியிருக்கிறோம்!’ என்றார். நான், ‘இல்லை. In anticipation of her getting Nobel prize, நாம 25 வருஷம் முன்னாடியே அட்வான்ஸா கைகுலுக்கி விட்டோம்’ என்று சொன்னதும் கண்ணை மூடிக்கொண்டு சிரித்தார்.

தில்லி சௌத் இந்தியன் தியேட்டர்ஸ் சார்பில், பிரஸிடென்ட் பஞ்சாட்சரம், நாலுவேலி நிலம், போலீஸ்காரன் மகள், தேவனின் கோமதியின் காதலன், ரமேஷ் மேத்தாவின் அண்டர் செக்ரட்டரி போன்ற நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். கோமதியின் காதலனில், கோவிலுக்குப் போய்விட்டு அர்ச்சனைத்தட்டுடன் வீட்டுக்குத் திரும்பும் பூர்ணம், தெருவில் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பார். அவ்வப்போது அர்ச்சனைத் தட்டிலிருக்கும் அட்சதைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். உடைத்த தேங்காய்மூடியை நகத்தால் கிள்ளுவார். This is the sopontaneous use of Set Properties by a Performer! யதார்த்த நடிப்பில் ஊறியவருக்குத்தான் இது கைவரும். தேர்ந்த நடிகருக்கான உத்தி. இதை ஒரு பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறேன்.

தில்லியில் அடிக்கடி நடக்கும் ‘யாத்ரிக்’ குழுவின் ஆங்கில நாடகங்கள், சம்புமித்ரா, ஷ்யாமானந்த் ஜலான், சத்யதேவ் தூபே, உத்பல் தத் போன்றவர் நாடகங்களுக்கோ, இப்ராஹிம் அல்காஸியின் என். எஸ்.டி நாடகங்களுக்கோ அவர் வந்ததேயில்லை. கூப்பிட்டால், ‘டூட்டி இருக்கு, மணி’யென்று தப்பித்துக்கொள்வார். அவைகளைப் பார்த்து புதிதாகத் தெரிந்துகொள்ள அவருக்கு அவசியம் இருந்ததில்லை.

எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய நாடகங்களில், சென்னையில் இவர் நடித்த பாத்திரங்களை தில்லியில் நான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு! அவர் 'பூர்ணம் தியேட்டர்ஸ்' தொடங்கியபின், தில்லிக்கு நாடகம் போட வந்திருந்தார். முதல் நாடகம் ‘தனிக்குடித்தனம்’. சென்னையிலிருந்து செட் சாமான்கள் ஏற்றிவந்த லாரி நாக்பூர் அருகே ரிப்பேராகிவிட்டதால், அவசர அவசரமாக எங்கள் D.B.N.s குழுவின் செட் உபகரணங்களைக் கொண்டு போய் மேடையமைப்பு செய்து கொடுத்தது ஞாபகம் வருகிறது.

எங்கள் நட்பு இறுக்கமானது அவரது சகோதரி லட்சுமி இறந்தபோது. திருமணத்தில் நாட்டமில்லாத அவர் தனியாக மோதி பாக்கில் ஓர் அரசாங்கவீட்டில் குடியிருந்தார். சென்னையிலிருந்த பூர்ணத்துக்குத் தங்கையின் மரணச் செய்தியை அறிவித்ததே நான் தான். அவர் தில்லி வரும்வரை காத்திருந்து, நிகம்போத் சுடுகாட்டுக்கு சடலத்துடன் போய், கடைசிவரைகூட இருந்தேன். கிட்டத்தட்ட நவம்பர் 2007 உயிர்மையில் நான் பதிவு செய்த ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ கட்டுரையில் எழுதியிருந்ததையெல்லாம் அவர் நேரில் பார்த்திருக்கிறார். காரில் திரும்ப வரும் போது, 'மணி, நீங்க இவ்வளவு உதவியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலே. லட்சுமியின் ஆத்மா உங்களை வாழ்த்தும். உங்களுக்கு சுடுகாட்டிலேயும் நெறைய நண்பர்கள் இருக்காங்களே’ என்றார். ‘நான் கடைசியா இங்கே தானே வந்தாகணும். அப்போ என்னை ஸ்பெஷலா கவனிச்சுப்பாங்களே' என்ற பதிலுக்கு, அவர் உரக்க ‘No silly Joikes’ என்று சொல்லி என் வாயைப் பொத்தினார். பிறகு அவர் குடியிருந்த வீட்டை காலிசெய்து சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி, சென்னையில் பூர்ணம் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். உயிர்மையில் நான் தில்லி நிகம்போத் சுடுகாட்டைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் பாராட்டி நீண்ட நேரம் பேசினார். ‘நான்தான் நேரிலேயே பார்த்திருக்கேனே. You are a great person’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டையும் கூடவே தந்தார்.

என்னைப்போன்ற இவரது தில்லி நண்பர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயம் இவருக்கும் இசை விமர்சகர் சுப்புடுவுக்குமிடையே   இருந்த தீராப்பகை. அதன் காரணகாரியங்களை இப்போது ஆராய வேண்டாம். தில்லியில் நடந்த சில சம்பவங்கள் இவரை அளவுக்கதிகமாகக் காயப்படுத்திவிட்டன. பூர்ணம் சென்னைக்கு மாற்றலாகி வந்ததற்கு அவையும் முக்கியமான காரணங்கள். எங்கள் சமரச முயற்சிகள் கடைசிவரை பலனளிக்கவேயில்லை.

தொண்ணூறுகளில் மத்திய சங்கீத நாடக அகாடெமி இவருக்குச் சிறந்த நாடக நடிகருக்கான விருதையளித்து தன்னையும் கௌரவப்படுத்திக்கொண்டது.

பலருக்குத்தெரியாத விஷயம் பூர்ணம் ஒரு தேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது. ஐம்பது அறுபதுகளில் தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுவந்த ‘சுடர்’ ஆண்டு மலரில் இவரது ஓரங்க நாடகங்கள் தவறாமல் இடம்பெறும். சென்னை பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தார். பிரபல பத்திரிகைகளின் தீபாவளி மலரில் எழுதுவார். இவரது ஓரங்க நாட கங்களில்தான் என் தில்லி நாடக வாழ்க்கை தொடங்கியது. சென்னைக்கு வந்தபின் ஏனோ எழுதுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டார். அதனால் தமிழுக்குத்தான் நட்டம்.

என் நண்பர் மரபின் மைந்தன் சொன்னது:

தமிழிலக்கிய மேடைகளிலும் பூர்ணம் விசுவநாதன் பலமுறை பேசுபொருளாகியிருக்கிறார்.

ஒரு விழாவில் பார்வையாளர் வரிசையில் அவர் வந்து அமர்ந்த போது, பேச்சாளர் ஒருவர் சொன்னார்: "கொழுக்கட்டை மாதிரி இருக்காரே இவர் யார்னு விசாரிச்சேன் . . . பூர்ணம்னு சொன்னாங்க! அதுசரி, பூர்ணம் இருந்தாத்தானே கொழுக்கட்டை." தமிழக அரசின் சுற்றுலா சம்பந்தப்பட்ட குழு ஒன்றில் பூர்ணம் விசுவநாதன் ஆலோசகராக இருந்தார். அதன் விழா ஒன்று நிகழ்ந்தபோது பார்வையாளர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். வீடியோ வெளிச்சத்தில் மேடையில் இருப்பவர்களுக்குக் கண்கூசிற்று. பேச்சாளர் கண. சிற்சபேசன் கூறினார்: "இங்கிருந்து பார்த்தா பூர்ணம் மாதிரித் தெரியுது, ஆனா பூரணமாத் தெரியலை."

'பாரதி’ படப்பிடிப்பின்போது, நடிகர்கள் தேர்வு எனக்களிக்கப் பட்ட பணிகளில் ஒன்று. டைரக்டர் ஞான. ராஜசேகரன் பூர்ணத்தைப் பார்த்துவரச் சொன்னார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பூர்ணம், கண் ஆபரேஷனுக்குப்பிறகு அதிக வெளிச்சம் பார்த்தால் கண் கூசுகிறது என்பதால் பாரதியில் நடிக்க இயலாதென்று வருத்தம் தெரிவித்தார். He has acted in some good, bad and indifferent Movies. ‘மகாநதி’ இவரது மாஸ்டர்பீஸ்! ‘மூன்றாம் பிறை’ படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கி நடிக்கும்போது கொஞ்சம் நெளிந்தார். இவரது நடிப்பை Stereotyped Acting என்று இப்போது இவர் மறைவுக்குப்பின் பல வலைப்பூவினர் விமர்சனம் செய்கின்றனர். இது இவரது குறையல்ல. கமல் போன்ற  வெகுசிலரைத்தவிர, மற்றவர்கள் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவருடைய திரைப்பட வாழ்க்கையைப் பற்றி, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். பல நடிகர் - குரலில் பேசும் இன்றைய மிமிக்ரி கலைஞர்களுக்கு வாரி வழங்கும் ஒரு அட்சயப் பாத்திரமாக  பூர்ணம் திகழ்கிறார்.

தில்லியில் சுஜாதாவுக்கு பூர்ணம் விசுவநாதனை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அடியேனையே சாரும். அப்போது அவர்கள் நட்பு சென்னை வந்தபிறகு ஒரு நாடகக் கூட்டணியாக மாறி இந்த அளவு விகசிக்குமென்று மூவருமே நினைத்ததில்லை.

கையில் லக்கேஜ் எதுவும் இல்லாமல் மேலுலகம் போன பூர்ணம், ஊர்தியை விட்டு இறங்கியதுமே, வழியில் தென்பட்ட தேவதையிடம், ‘அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆமாம், ஏழு மாதங்களுக்கு முன் மேலே போன சுஜாதா எழுதித் தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் போயிருக்கிறார்.


சிங் இஸ் கிங்
பாரதி மணி

நேற்றுக்காலை தில்லி தூர்தர்ஷனில், இந்திரா காந்தி கொலையுண்ட பிறகு 1984 அக்டோபர் -நவம்பர் மாதம் தில்லியில் சீக்கியர்களுக்கெதிராகக்  கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கொடுமைகளைப் பற்றியும், அதில் பாதிக்கப்பட்ட சில சீக்கியக் குடும்பங்களைப் பற்றியும் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். குடும்பத்தலைவர்களையும் குழந்தைகளையும் பறிகொடுத்த பெண்கள், இருபத்திநான்கு வருடங்களுக்குப்பிறகும், அந்தக் காயம் ஆறாமல் அரற்றியது மனதை என்னவோ செய்தது.

உயிர்மையில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் ‘எங்க சர்தார்ஜிகளுக்கு ஒரே ஒரு கல்ச்சர்தான் உண்டு. அதுதான் அக்ரிகல்ச்சர்’ என்று என் சர்தார் நண்பன் சொன்னதாக எழுதியிருந்தேன். அந்த நகைச்சுவையைப் பாராட்டி, பல வாசகர்கள் என்னிடம் சொன்னார்கள். ஒவ்வொரு சர்தார்ஜியும் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் குறைந்தபட்சம் ஒரு சோகத்தைச் சுமந்துகொண்டு வாழ்நாளைக் கழிக்கிறார்கள். என் வயதையொத்த சீக்கியர்கள் பலர், 1947-ல் நடந்த நம் நாட்டின் பிரிவினைக்குப்பிறகு, லாகூரிலிருந்தும் ராவல்பிண்டியிலிருந்தும் அங்கிருந்த தன் சொத்து சுகங்களை விட்டுவிட்டு, தன் பத்து வயதிலேயே வரும்வழியில் தன் கண்ணெதிரே தாயும் சகோதரிகளும் கற்பழிக்கப்படுவதைப் பார்க்கும் கொடுமைக்காளாகி, மிருதுளா சாரா பாய் தலைமையில் தில்லியில் இயங்கிவந்த அகதிகள் முகாமில் சரணடைந்தார்கள். லாகூரில் அரண்மனை போன்ற பங்களாவில் பத்து வேலைக்காரர்களுடன் வாழ்ந்தவர், இங்கு ஒரு வாளித் தண்ணீருக்காக அரைமணி நேரம் வரிசையில் காத்திருந்தார். சூன்யத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கிய பஞ்சாபிகள், சில வருடங்களில் தங்கள் கடின உழைப்பால் முன்னேறி, தில்லியையே ஒரு பஞ்சாபி சுபாவாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் வாழ்வில்      நிகழ்ந்த மற்றொரு பேரிடி 1984-ல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை. இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படாத சீக்கியக் குடும்பங்களே இல்லையெனலாம். இன்று நினைத்துப் பார்க்கும்போது, இதற்கெல்லாம் காரணம்  இந்திரா காந்தியே  என்று தோன்றுகிறது. 1984-ம் வருட ஆரம்பத்திலேயே அவரது சீக்கியப் பாதுகாப்புப்படையினரால் அவர் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று உளவுத்துறை அவரை எச்சரித்தது. அவர் மட்டும் இதற்குச் செவிசாய்த்திருந்தால், அவரும் இறந்திருக்கமாட்டார், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்களும் பலியாகியிருக்கமாட்டார்கள். அதன்பிறகு என் கண் முன்னால் நிகழ்ந்த திட்டமிட்ட கொடுமை. அதைப்பற்றி இன்னொரு கட்டுரையில்.

சென்ற நூற்றாண்டுகளில் சீக்கியம் இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. குடும்பத்தின் தலைமகனை வீரமகனாக நாட்டுக்குத் தந்தார்கள். ஒரே குடும்பத்தில் சீக்கியர்களும் இந்துக்களும் பேதமின்றி வாழ்ந்தார்கள். அவர்களுக்குள் திருமணம் நடந்தது. அவர்களது குரு கிரந்த் ஸாஹிப் கீதையையும், ராமனையும், கிருஷ்ணனையுமே முன்வைக்கிறது. பின்னால் இந்து மதத்தலைவர்களும், மைனாரிட்டி அரசியலும், மாஸ்டர் தாரா சிங் போன்றவர்களுமே அவர்களை இந்து மதத்திலிருந்து வேறுபடுத்தினார்கள். இப்போது  சீக்கியர்களும் இந்துக்கள்தான் என்று சொன்னால் அடிக்க வருவார்கள்.

ஒரு அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் சினிமாக்களில் வரும் பன்ச்டயலாக் போல, ‘எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள் அல்லர்’ என்பதுதான் நிஜம். இன்னொரு உண்மை: எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான். ஆனால் எல்லா சிங்குகளும் சர்தார்ஜிகள் அல்லர். உதாரணத்துக்கு அமர் சிங், வி.பி.சிங், கரண் சிங் போன்றோர். தாடி மீசை  இல்லாத பஞ்சாபிகளை ‘மோனா’ என்பார்கள். நமது  தமிழ்ப்படங்களில் சர்தார்ஜி ஒரு கேலிச்சித்திரமாகவே வந்துபோவார், மணி ரத்னத்தின் படங்கள் உட்பட. பத்துமுழ பக்டிக்குப்பதில் ஒரு தொப்பியும் ஒட்டுதாடியுமிருந்தால், சினிமா சர்தார் தயார். தப்பு தப்பாக ஹிந்தியோ பஞ்சாபியோ பேசுவது கூடுதல் தகுதி. தமிழ் நாட்டிலிருக்கும் சர்தார்ஜிகளுக்கு உண்மையிலேயே சகிப்புத்தன்மை அதிகம்தான். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்கிறார்களே. தில்லியில் ஒருதடவை மறைந்த ஹிந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்மூத்தைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர் ‘மதராஸி’யாக நடிக்கும் படங்களில் ஏன் அளவுக்கதிகமான ‘ஐயோ  ஐய்யய்யோ’ இடம் பெறுகிறது. நான் உங்களிடம் பேசும்போது எத்தனை தடவை  ஐய்யய்யோ சொன்னேன் என்று சண்டை போட்டிருக்கிறேன்.(பேச்சோடு பேச்சாக, தமிழில் நாகேஷ் நடித்து ஹிந்தியில் அதே பாத்திரத்தில் அவர் நடித்த சர்வர் சுந்தரம் (மைன் ஸுந்தர் ஹூன்), தில் ஏக் மந்திர் போன்ற படங்களில், நடிப்பில் நாகேஷ் பக்கத்திலேயே அவர் வரமுடியாது என்பதையும் சொல்லிவிட்டேன். அவரது பெரிய மனது என்னை அடிக்கவராமல், பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அப்போது அவர் என் வீட்டிலிருந்தார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்). தசாவதாரத்தில் வரும் அவ்தார் சிங் வலதுகையில் கடா இல்லையென்று நெட்டில் ஒருவர் எழுதியிருந்தார். அது தவறு, கையில் வளையம் இருந்தது. உங்களில் பலருக்கும் தெரிந்த உண்மை சர்தார்ஜிகளுக்கு ஐந்து Ks மிகமுக்கியம் என்பது. Kesh (தலைமுடி), Kanga (சீப்பு), Kada (கையில் வளையம்), Kachcha (உள்ளாடை) மற்றும் Kirpan (சிறுகத்தி அல்லது வாள்). இவ்வைந்தும் இல்லாதவன் சீக்கியனாகக் கருதப்படமாட்டான். தலைமுடியை மறைக்க Turban (பக்டி). இந்த நாகரிக உலகத்தில் கத்தியையும் சீப்பையும் மிகச்சிறியதாக மாற்றி தங்கள் பக்டிக்குள் மறைத்துவிடுவார்கள். மதச்சின்னமான ஒரு பெரிய வாளை நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்ல முயன்ற சிம்ரஞ்சித் சிங்மான், எம்.பி.  தடுக்கப்பட்டு, அவர் தன் பதவியையே ராஜிநாமா செய்தது தெரிந்திருக்கும். நிஹாங் சீக்கியர்கள் உடல் வலிமையில் வல்லவர்கள். தனது தாடியில் ஒரு பாறாங்கல்லைக்கட்டி தூக்கும் வலுவுள்ளவர்கள். சேணம் கட்டாத இருகுதிரைகளின் மேல் இருகால்களை வைத்து நின்றுகொண்டே சவாரி செய்வார்கள். தனது நீண்டகூந்தலில் ஒரு டிராக்டரைக் கட்டி இழுக்கத் துணிவார்கள். ஆனால் அதிகம் சிந்திக்கத் தெரியாதவர்கள். இதையொட்டித்தான் சர்தாரை  ‘பன்னிரண்டு மணி - Baarah Baje'யென்றும் புத்தி மழுங்கியவர்களென்றும்  வழங்கலாயிற்று. ஆயிரக்கணக்கில்  சர்தார்ஜி ஜோக்ஸ் புழக்கத்துக்கு வந்தன. க.நா.சு.வைப் பார்க்க வரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எனக்கு ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு நிறைய ‘புத்திசாலித்தனமான’ சர்தார்ஜி ஜோக்குகள் சொல்லியிருக்கிறார். சிறுவயதில் நான் கேட்டிருந்த நம்ம ஊர் ‘நம்பூதிரி ஜோக்கு’களை தாடி - தலைப்பாகை வைத்து சர்தார்ஜி ஜோக்குகளாக மாற்றி நான் சொல்லுவேன். நாம்தாரி சீக்கியர்கள் வெள்ளையுடையும் வெள்ளை பக்டியுமே அணிவார்கள். அக்ரிகல்ச்சர் மட்டுமே தெரியும் என்று சொல்லும் சர்தார்களுக்கிடையே இவர்கள்தான் கலாச்சாரக் காவலர்கள். ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் குரு வாணி பாடுவதிலும் வல்லவர்கள்.

தில்லியில் பஞ்சாபிகளின் ஆதிக்கம் சுதந்திரத்துக்குப் பிறகுதான் வந்தது என்று பூர்வகுடிகளான மாத்தூர்களும் குப்தாக்களும் பராதி சொல்வார்கள். தில்லிக்கான தனி அடையாளத்தையும் நற்பண்புகளையும், பஞ்சாபிகள் வந்தபிறகு இழந்துவிட்டோம் என்பது அவர்கள் வாதம். பிரிவினைக்குப்பிறகு அகதிகளாக ஓடிவந்து அரசு வழங்கிய ரூ. 5,000 கொண்டு, லாஜ்பத் நகர், மாளவியா நகர், படேல் நகர், ஷாதரா போன்ற இடங்களில் கிடைத்த கையகல நிலத்தில் இரு அறைகள் கொண்ட வீட்டைக் கட்டிக்கொண்டு - பழம்பெருமை பேசி முடங்கி உட்காராமல் - பாகிஸ்தானில் செய்து வந்த தொழிலையே உற்சாகத்துடன் தொடர்ந்தார்கள். They started from the scratch. பிச்சையெடுக்கும் சர்தார்ஜியை நான் இதுவரை பார்த்ததில்லை. கை கால் இல்லாதவர்கூட தில்லிக்கோடையின்போது, ஒரு மரத்தடியில் பெரிய மண்பானையில் குளிர்ந்த தண்ணீரும், குடிக்க பெரிய குவளையும் வைத்திருப்பார். முன்னால் விரித்த கைக்குட்டையில் சில அரையணா, ஓரணா நாணயங்கள். வேண்டிய மட்டும் தண்ணீர் குடித்துவிட்டு, பிரியமிருந்தால் உங்களால் முடிந்ததைக் கைக்குட்டையில் போடலாம். ஆனால் கை நீட்டிப் பிச்சையெடுக்க மாட்டார்கள். பார்ஸிகளுக்கு அடுத்தபடியாக சீக்கியர்களுக்குத்தான்    அவர்களது சமூகம் பாதுகாப்பளிக்கிறது. தில்லியில் இருந்த ரான்பாக்ஸி, அப்போல்லோ போன்ற கம்பெனிகளில் சர்தார்ஜிகளுக்கு முன்னுரிமை அளித்தார்கள். பாகுபாடின்றி எவருக்கும் குருத்வாராவில் தினமும் லங்கர் இலவசம். படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தவர்களுக்கு உதவியாக, திருமதி மிருதுளா சாராபாய் வேலைசெய்துகொண்டே படிக்கத்தோதாக, Camp College எனும் மாலைநேரக் கல்லூரிகளைத் திறந்தார். (நேருவின் உதவியாளர் எம்.ஓ. மத்தாய், மிருதுளாவுக்கு நேருஜி மேல் crush இருந்ததாக நேரு இறந்த பிறகு பல கிசுகிசுக்கள் எழுதி புத்தகமாகப்போட்டு நிறைய பணம் பார்த்தார். இவர் நாட்டியக் கலைஞர் மிருணாளினி சாராபாயின் சகோதரி. She was an arrogant and no-non-sense woman. அதனாலேயே நேருவுக்கு இவரிடம் ஈர்ப்பு இருந்திருக்கலாம். அகதிகள் முகாமிலேயே தங்கி அவர்கள் நலன்களை நன்கு கவனித்துக்கொண்ட மிருதுளாவின் வாய்மொழி உத்தரவுகளை தில்லி போலீசும் அரசு அதிகாரிகளும் பிரதமர் நேருவின் ஆணையாகவே நினைத்துச் செயல்பட்டனர்). இவரைப்பற்றி மிக உயர்வாக என் நண்பர்களின் வயதான பெற்றோர்கள்  சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பஞ்சாபிகளின் புத்திசாலித்தனத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பலன்தான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம்  பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சேலத்து மாம்பழம்  போல் பாஸ்மதி அரிசிக்கு  தேராதூன்தான் - நமக்கு டேராடூன் - பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால் நம் இந்திய அரிசிக்கு பாகிஸ்தானி பாஸ்மதியைப்போல நீளமும் வாசனையும் கிடையாது. அறுபது எழுபதுகளில் எண்ணெய் பலத்தால் தங்கள் பணபலத்தைப் பெருக்கிக்கொண்ட அரபுநாடுகள் பாகிஸ்தானி பாஸ்மதியையே விரும்பி இறக்குமதி செய்தார்கள். நமது சரக்கை சீந்துவரில்லை. இது பஞ்சாபிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களையும், ஆயிரக்கணக்கில் ஏக்கர் பயிரிட்டு வந்த பெரிய விவசாயிகளையும் சிந்திக்கவைத்தது. ‘நம் இரு நாடுகளுக்கிடையே 1947-ல் மனிதன் போட்ட எல்லைக்கோடுகளையும் மீறி இயற்கையும் வானமும் ஒரே மாதிரியான பூமிவளத்தையும் தட்பவெப்ப நிலையையும் நீர்நிலைகளையும்தானே தந்திருக்கிறது.  லாகூரில் மழையென்றால் வாகா பார்டர் தாண்டி இங்கேயும் கொட்டுகிறது. மனிதனுக்கிடையே இருக்கும் துவேஷம் இன்னும் பயிரினங்களுக்குத் தொற்றிக்கொள்ளவில்லையே. அங்கு விளைவது இங்கு விளையாதா?’ என்று யோசிக்கலானார்கள். இவர்களிடம் இல்லாதது பாகிஸ்தான் பாஸ்மதியின் நெல் விதைகள். போட்டி காரணமாக அவைகளை நேர்வழியில் பெறமுடியாது. அரசாங்கத்தை நம்பிப்பயனில்லை. இந்திய எல்லையையொட்டியிருக்கும் எல்லா பஞ்சாபி விவசாயிகளும் ஒன்றுசேர்ந்து இரகசியமாக நீண்டகாலத் திட்டமொன்று தீட்டி எதிர்க்குரலே இல்லாமல் அதற்கு வேண்டிய பணத்தையும் திரட்டி முழுமுனைப்போடு ஐந்துவருடங்கள் பாடுபட்டார்கள். நாட்டில் அமைச்சர் சி. சுப்பிரமணியம் கொண்டுவந்த ‘பச்சைப்புரட்சி’ நடந்துகொண்டிருந்த காலம். ஓரிரு ஆரம்பத் தோல்விகளுக்குப்பிறகு, குறிப்பிட்ட ஒரு இரவில் இவர்கள் ஆவலோடு காத்திருந்த பாகிஸ்தானி பாஸ்மதி நெல்விதைகள் நாற்பது லாரிகளில் இந்திய எல்லைக்குள் வந்திறங்கின. Pakistani Rangers-க்கும் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் அவர்கள் ‘கண்களை மூடிக்கொள்ள’ கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். மூன்றுவருடங்களுக்கு இந்த விதைகளை விற்காமல், இந்திய எல்லையோரத்தில் மறுபயிரிட்டு வீரியமுள்ள விதைகளாகப் பல்கிப்பெருக்கினார்கள். As they say, the rest is history! இப்போது இந்தியா உலகத்திலேயே முதன்மையான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நாடு. இதன் பின்னே இருக்கும் பஞ்சாபிகளின்         சாமர்த்தியமும் உழைப்பும் சிலருக்கே தெரியும். அரசின் உதவியை நாடாமல், தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டார்கள்.

எண்பதுகளில் பாஸ்மதி ஏற்று மதியில் முதலிடத்தைப் பிடித்திருந்த என் நண்பனுடன் குருதாஸ்பூரில் அவனது கிராமத்து Farm House-ஐப் பார்க்கப் போயிருந்தேன். நான் சிறுதாவூர் போனதில்லையென்றாலும், நான் பார்த்த அந்த பங்களா இதைவிடப் பெரிதாகவே இருந்திருக்கும். ஒன்றரை லிட்டர் பிடிக்கும் பெரிய லோட்டாவில் குடிக்கமுடியாமல் குடித்த - வெட்டியெடுத்த பாலாடை மிதக்கும்  (மலாய் பாக்கே) - லஸ்ஸியின் ருசி இன்னும் நாவில் இருக்கிறது. அவர்கள் வயலுக்குள் நின்று கொண்டிருந்த நான், சட்டென்று வரப்பின் மீதேறி ‘இன்னும் கொஞ்சநேரம் நின்றால் என் காலில் வேர் பிடித்துவிடும்’ என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. இரவு  டின்னருக்குப்பிறகு அவன் தந்தையோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் மேலே சொன்ன கதையை அவர் சொல்லக்கேட்டேன். நீங்கள் செய்தது தவறில்லையா என்ற என் கேள்விக்கு அவரது பதில்: ‘மணி பேட்டா! நாங்கள் திருடவில்லை, பிச்சையெடுக்கவில்லை. இதில் எங்கள் உயர்வோடு, நாட்டின் முன்னேற்றத்தையும் நாங்கள் பார்த்தோம். நேரான விரலில் வராத நெய்யை, விரலை வளைத்தெடுப்பதில் எந்தத் தவறுமில்லை.’ அவரது விளக்கம் எனக்குச் சரியாகப்பட்டது. பஞ்சாபிகளை அடையாளப்படுத்தியது.

இந்திய மொழிகளிலேயே பஞ்சாபியைப்போல் ஒரு வாக்கியத்துக்கு இரு அர்த்தங்கள் உள்ள மொழியே வேறு இல்லையென்று சொல்வார்கள். ஒன்று நேராக இருக்கும். மற்றது விஷமத்தனமானது. தில்லி பல்கலைக்கழக பஞ்சாபித்துறை வகுப்பில் முனைவர் ஒருவர், ‘பஞ்சாபியில் எதைச் சொன்னாலும் அதில் டபிள் மீனிங் இருக்கும்’ என்றாராம். கேட்டுக்கொண்டிருந்த ஒரு மாணவி எழுந்து, Khadkevikhaavo - அதாவது விளக்கிச்சொல்லுங்கள் என்று பொருள்படும்படி கேட்டார். முனைவர் உடனே, ‘உட்காரு, உட்காரு. இதற்கும் இன்னொரு மீனிங் உண்டு’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம். ஆம், அதற்கு ‘திறந்து காட்டு’ என்றும் பொருள் கொள்ளலாம்! பஞ்சாபி மொழியின் இந்த வீச்சை சிலர் தவறாகப் பயன்படுத்த முற்பட்டார்கள். எழுபது - எண்பதுகளில் பஞ்சாபி நாடகங்கள் - டபிள் மீனிங் கொண்ட cheap நாடகங்கள் - தில்லி ஸப்ரு ஹௌஸில் அரங்கேறத் துவங்கின. சனி ஞாயிறுகளில் மூன்று காட்சிகள். நாடகங்களின் பெயரே அவைகளின் தரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும். Chchadi Jawaani Budhdhe Nu (கிழவனுக்குத் திரும்பிய வாலிபம்), Saali Aadi Gharwali (மச்சினியும் பாதிப் பொண்டாட்டிதான்) Budhdha Ghar pe hai? (கிழவன் வீட்டிலே இருக்கானா?) பாரக்கம்பாரோடில் தியேட்டர் முன்னால் பஞ்சாபிகள் பழியாகக் கிடப்பார்கள். இப்போது ஜஸ்பால் பட்டியின் நகைச்சுவை நாடகங்களுக்குத் தவமிருக்கிறார்கள். அவர்களை யாரும் மாற்றமுடியாது.

தில்லியில் நம்முடன் பஞ்சாபி நண்பர்கள் இருக்கும்போது, மனைவியிடம்கூட ஹிந்தி/ஆங்கிலத்தில் தான் பேசவேண்டுமென்பது எழுதப்படாத விதி. மறந்து தமிழில் பேச ஆரம்பித்தால், உடனே ‘க்யா யார், இங்கடா பிங்கடா சுரு கர் தியா?’ என்று நம்மைத் திருத்துவார்கள். இருந்தாலும் நாங்கள் அவ்வப்போது சங்கேத மொழியில் பேசிக்கொள்வோம். முக்கியமாக வார்த்தைகளுக்குரிய அழுத்தம், ஏற்ற இறக்கம் இல்லாமல் பேசக்கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பஞ்சாபிலிருந்து வருகிறார்கள், கேசம் வைத்திருக்கிறார்கள். அதனால் சர்தார்களுக்கு ‘பஞ்சாபகேசன்’ என்பது பெயர். குண்டாக இருப்பவர் ‘பக்கோடா காதர்.’ இப்படி தில்லித் தமிழர்களிடம் ஒரு தனி அகராதியே உண்டு. சிலசமயம் இப்படிப்பேசி அசடுவழிந்து மாட்டிக் கொண்ட சம்பவங்களும் உண்டு. 1957-ம் வருடம். நான் பதவியுயர்வில் B.E.L நிறுவனத்திலிருந்து மற்றொரு அரசு கம்பெனியான Trading Corporation of India Ltd.-ல் சேர்ந்த புதுசு. இருபது வயதுகூட ஆகாத பச்சிளம் பாலகன் நான். அப்போது STC சொந்தக் கட்டடம் இல்லாமல் Golf Links பகுதியில் வாடகைக்கு எடுத்த பல பங்களாக்களில் இருந்து இயங்கிவந்தது. நான் நிதி-கணக்குப்பிரிவில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம்தான்        ஆகியிருக்கும். ஒருநாள் காலை என் ஆபீசில் ஆஜானுபாகுவான சர்தார் ஒருவர் சில சிப்பந்திகளை உரத்த குரலில் திட்டிக்கொண்டிருந்தார். அவரை அதுவரை நான் பார்த்ததில்லை. நான் என் நண்பனிடம், ‘யாருடா இந்தப் பன்னெண்டு மணி? ரொம்ப நேரமா கத்தறானே . . . பஞ்சாபகேசனுக்கு வேற வேலையில்லையா?’ என்று கேட்டேன். என்னைத் திரும்பிப் பார்த்த அவர் மீண்டும் அவர்களுடன் சண்டையைத் தொடர்ந்தார். போகும்போது என்னைப் பார்த்து, Gentlemen, Come with me என்று சொல்லி முன்னே நடந்தார். ‘நாம் தமிழில்தானே கேட்டோம்’ என்று சந்தேகத்துடன் அவர் பின்னால் போனேன். என் பாஸ் ஆன F.A.&C.A.O. ரூமுக்குள் போய் காலியாகவிருந்த அவரது ஆசனத்தில் அமர்ந்தார் இந்த சர்தார்ஜி. என்னை நேராகப் பார்த்து சுத்தத் தமிழில், ‘தம்பி, இது பன்னெண்டு மணியில்லே, ஆறு மணி. புதுசா சேர்ந்திருக்கியா . . . என்ன பேரு . . .? என்ன சொன்னே . . . பஞ்சாப கேசனா?’ என்று சரளமாகக் கேட்டதும், எனக்கு  உண்மையிலேயே வாய் அடைத்திருந்தது. ஒரு  சர்தார் வாயிலிருந்து  நல்ல தமிழ் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது அவர் மதராஸில் பிறந்து, படித்து வளர்ந்த சர்தார் ஹர்பன்ஸ் சிங் -  A Madras Cadre I.A.S.Officer deputed to STC as Secretary - போன்ற விவரங்கள். அதன்பிறகு அவர் ஆபீசுக்கு எப்போது போனாலும் என்னிடம் தமிழில்தான் பேசுவார். அதேபோல சென்னையிலிருந்து ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் விளையாட தில்லி பிரோஸ்ஷா கோட்லா மைதானம் வரும் A.G. கிருபால் சிங், மில்காசிங் வாயிலிருந்து தமிழ்வசவுகள் கேட்பது சுகமான அனுபவம்! அவர்கள் பேசும் தப்பான பஞ்சாபியைத் திருத்தியிருக்கிறேன்.

‘சிங் இஸ் கிங்’ என்று முழக்கமிட்ட அபினவ் பிந்த்ராவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா ஒரு நேர்காணலின்போது, எல்லோரையும்போல, முதல்வருக்கும், மந்திரிகளுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கவில்லை. தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்த தன் மகன் வெற்றிக்கு தானே காரணம் என்று ஆணவம் தொனிக்கக் கூறினார். ‘அவன் மெடல் வாங்கினப்புறம் இந்தக்கூட்டம்  போடறீங்களே, நேத்தெல்லாம் எங்கடா  போயிருந்தீங்க’ என்பதைச் சொல்லாமல் சொன்னார். எனக்கு எட்டாவதில் படித்த சாமுவேல் ஜான்ஸனின் 'All this accolade.... had it been earlier, had been kind' என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது. இந்த ஆணவம் தான்  ‘அஸ்லி பஞ்சாபியத்’ என்று பொருள்படும். அதிகார வர்க்கத்தின் காலில்  விழும் கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது. அதே சமயத்தில் குசேலனாக இருக்கும் நண்பனைப் பார்க்கப்போகும்போது, அவனது ஏழைத்தந்தை காலில், ‘பெஹ்ரி பென்னா ஜீ’ என்று விழுந்து வணங்கவும் தவறமாட்டார்கள். ஆரம்பகாலத்தில், ஏன் இப்போதும்கூட அவர்களுக்கு மதராஸி என்றால் சற்று இளப்பம்தான். தில்லி போனபோது நான் முதலில் கற்றுக்கொண்டது பஞ்சாபி வசவுகளை எப்படிக் குரல் ஏற்ற இறக்கத்துடன் உச்சரிப்பது என்பதே. ஒரு     சர்தார் பேச ஆரம்பித்தால், ஒரு வார்த்தைக்குள் இரு வசவுகளாவது நிச்சயம் இருக்கும். Most of them are unprintable!. குல்தீப் சிங் எனக்கு அடிக்கடி கொடுத்த சர்ட்டிபிகேட் இது: ‘ஸாலே! பத்துப் பஞ்சாபியைக் கொன்னுட்டு நீ ஒரு மதராசி பிறந்திருக்கே. பஞ்சாபி தா பாப் ஹோ, ஸ்ஸாலா!’

‘பஞ்சாப் தா புத்தர்’ (பஞ்சாபின் மைந்தர்கள்) பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு மூவரும் வாராவாரம் தமிழ்ச்சானல்களில் நடத்தப்படும் அரட்டை அரங்கம் மேடைகளில், ஏதாவது ஒரு சிறுமி வாயில் புகுந்து புறப்படுகிறார்கள். நேருவின் அமைச்சரவையில் சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். இவரைப்பற்றி நிறைய சர்தார் ஜோக்குகள் உண்டு. ராஜ்குமாரி அம்ரித் கௌர் சுகாதார அமைச்சராகப் பத்து வருடங்கள் நீடித்தார். இவர் கபூர்த்தலா மகாராஜா ஹர்னாம் சிங்கின் மகள்.  ஹுக்கும் சிங்/ஜி.எஸ். தில்லன் (டில்லோன்) இந்தியாவின் பாராளுமன்றத்தில் சபாநாயகராக இருந்தார்கள். பிறகு ஸ்வரண் சிங், பூட்டா சிங், குடியரசுத்தலைவராக ‘இந்திரா காந்தி சொன்னால் உடனே துடைப்பத்தைக் கையிலெடுத்துப் பெருக்குவேன்’ என்று சொன்ன ஜெயில் சிங், தற்போதைய  ‘இரண்டுங்கெட்டான்’  பிரதமர் மன்மோகன் சிங், Marshal of the Air Force அர்ஜன் சிங், வங்கதேச வெற்றியைத் தேடித்தந்த Lt.Gen.J.S.Aurora, பிளானிங் கமிஷன் மோன்டேக் சிங் ஆலுவாலியா, விளையாட்டுத்துறையில் பிஷன்சிங் பேதி, சித்து, மில்கா சிங் - Are you relaxing? No, no. I am Milka Singh- சமீபத்தில் மறைந்த காம்ரேட் சுர்ஜீத் சிங் என்று தேசீய    அரங்கில் பல தலைவர்களைக் கொடுத்த பஞ்சாப், பஞ்சாபி சுபா கேட்ட மாஸ்டர் தாரா சிங், ஜெர்னெயில் சிங் பிந்த்ரான்வாலே போன்றவர்களையும் தந்தது.

புகையிலையையும் புகைபிடிப்பதையும் அறவே வெறுத்து நீக்கிய சீக்கிய மதம் ‘குடிமகன்’களை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. நான் பார்த்து வியந்த பல Sober Social Drinkers பஞ்சாபிகளாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ‘வயிற்றில் போனது வயிற்றிலேயே இருக்க வேண்டும்.’ They know how to hold a Glass. தமிழ்நாட்டில் தான் ஒரு குவார்ட்டரில் பாதி உள்ளே போனால் இரவு முழுவதும் (கெட்ட) வார்த்தைகளாகவும் வாந்தியாகவும் வெளியே வருகிறது. நீங்கள் Patiala Peg கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால், இதைத் தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன். சாதாரணமாக ஒரு லார்ஜ் பெக் என்பது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு. Two fingers. உலகம் பூராவும் இதே அளவு தான். ஆனால் பஞ்சாபிகளுக்கு பாட்டியாலா பெக் என்பார்கள். பாபாவில் ரஜினி ஒரு முத்திரை காண்பிப்பாரே - ஆள்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நீட்டி மற்றவிரல்களை மடித்து - அந்த முத்திரையைக் குறுக்கே வைத்தால் உள்ள அளவுதான் பாட்டியாலா பெக். இதுவும் இரண்டுவிரல் தானே. எனக்கு இதில் முன்னோடியாக இருந்தவர் 'We have so many donkeys as PMs' என்று சொன்ன எழுத்தாளர் குஷ்வந்த் சிங். என் வீட்டுக்கு வந்தால் அவருக்குப்பிடித்த ஷிவாஸ்ரீகலை பேகம் அக்தர் இசையுடன் பருகுவார். மூன்றுக்குமேல் என்றுமே கிடையாது. என் முன்னாலேயே ஒருநாள் என் மனைவியைப் பார்த்து, 'Jamuna, You are very beautiful. One day, I am going to elope with you!' என்று சொன்ன 94 வயதாகும் Lovable கிழட்டு ராட்சசன்! Sex, Scotch and Scholarship என்ற அவர் எழுதிய புத்தகத்தில் வரும் ஒரு வரி: I started drinking at the age of 25. I have never been drunk even once in the sixty years if drinking.

சீக்கியர்கள் வாழ்க்கையின் தாரக மந்திரமே Khaao. வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள். ஒரு வரியில் சொல்வதானால் ‘வயிற்றில் பல் இல்லாதவர்கள்.’ நன்கு பழகிவிட்டால் நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். இது உயர்வுநவிர்ச்சியல்ல. என்னை நீங்கள் நம்பலாம். என் தில்லி வாழ்க்கையில் பலமுறை கண்டு அனுபவித்திருக்கிறேன். அறுபதுகளில் பணத்தேவை இருந்து நமது தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து வந்த நண்பனிடம் ரூ. 5000 உடனடியாகத் தேவைப்படுகிறதென்று கேட்டால் - அப்போது ரூ. 5000க்கு மதிப்பு அதிகம் - ஏன் இத்தனை பணம் தேவை, ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாயா,  கெட்ட சகவாசமா, என்ன காரணத்துக்காகத் தேவைப்படுகிறது, யாருக்காவது உடம்பு சரியில்லையா, தப்பான வழியில் போகிறாயா என்று பத்துக் கேள்விகள் கேட்டுவிட்டு இப்போது பணமில்லையேயென்று போனை வைத்துவிடுவான். உடனே குல்தீப் சிங்கிற்கு போன் பண்ணிக் கேட்டால், ‘காசாக வேண்டுமா இல்லை செக் போதுமா? செக் என்றால் ஐந்து நிமிடத்தில் கொடுத்தனுப்பி விடுவேன். காசு என்றால் பத்துமணிக்கு பாங்க் போய் எடுத்துத்தருகிறேன்’  இதுதான்  பதிலாக  இருக்கும். முதலில் பணமில்லையென்று  சொல்லி போனை  வைத்த ‘நம்ம’        ராமச்சந்திரன் சும்மாயிராமல் கர்ம சிரத்தையோடு இன்னும் ஐந்து நண்பர்களுக்கு, ‘மணி இன்னிக்கு ஐயாயிரம் ரூபாய்  கடனாக் கேட்டான். எதுக்குன்னு தெரியல்லே. Ishe alright?’ என்று போட்டுக்கொடுத்து அன்று ராத்திரிக்குள் அந்த ஐந்து பேரும் நம்மிடம் ‘துக்கம்’ மட்டும் விசாரிப்பார்கள். இவ்வளவுக்கும் இந்த ஐந்து ‘நண்பர்களும்’ குல்தீப் சிங்கைவிட ‘வசதி’யாகவே இருப்பவர்கள். இதற்கு ‘பொத்திப்பொத்தி’ வளர்க்கப்பட்ட நம் அடிப்படை மனநிலைதான் காரணம். நம்மைப் பொறுத்தவரையில் ‘தனக்குப் போகத்தான் தானம்.’

1984-ல் சீக்கியர்களுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின்போது, தில்லியே ஒரு பிணக்காடாக இருந்த வேளையில், உயிருக்கு பயந்து லாஜ்பத்நகரிலிருந்த தன் வீட்டைப் பூட்டிவிட்டு, மனைவி, இருகுழந்தைகளோடு, கண்களில் பயத்துடன் நடுஇரவில் என்னை நம்பி என் வீட்டில் சரணடைந்தானே என் நண்பன் பக்வான்சிங், அவன் இந்த ‘மதராஸி’யிடம் வைத்திருந்த நம்பிக்கையை என்னவென்று சொல்ல? இவையெல்லாம் கடவுள் எனக்குத்தந்த கொடுப்பினைகள்! பாரதி படப்பிடிப்பின்போது என் குழந்தைகளிடம் சொன்னேன்: ‘பாரதிக்குப் பதினான்கு பேர்தான் வந்திருந்தார்களாம். நான் தில்லியில் இறந்தால் ஆயிரம் பேராவது வருவார்கள். ஐம்பது வருடங்களில் நல்ல நண்பர்கள்தான் என் சேமிப்பு.’ இப்போது சென்னையிலும் சேகரித்து வருகிறேன்!

*

உயிர்மை வாசகர்களுக்கு: உங்கள் இதழில் எழுத ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகிறது. கத்துக்குட்டியான என்னை எழுத ஊக்குவித்து, நான் எழுதியதில் ஒரு காற்புள்ளி, ஆச்சரியக்குறிகூட மாற்றாமல் தொடர்ந்து பிரசுரித்த நண்பர் மனுஷ்ய புத்திரனுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? நான் ஒரு மோசமான நடிகன் என்று மட்டுமே நினைத்திருந்தேன். எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, நான் ஒரு மோசமான எழுத்தாளனும்கூட என்பது. கடந்த ஒரு வருடமாக நான் எழுதியதைப் படித்துப் பாராட்டிய வாசகர்களுக்கும், பார்க்குமிடத்தில் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எழுதியதை மாதாமாதம் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமும் பாராட்டி உற்சாகமளித்த அத்தனை முன்னணி எழுத்தாளர்களுக்கும் மறைந்த சுஜாதா அவர்களுக்கும் என் நன்றி. மாதாமாதம் தொடர்ந்து எழுதுவது அயற்சியாக இருக்கிறது. நாடகத்தில் உள்ள ஆர்வம் இதில் இல்லை. விகடனில் தொடர்ந்து எழுத ஒப்புக்கொண்ட நண்பர் நாஞ்சில் நாடனிடம் கேட்டேன்: ‘வாராவாரம் பத்திரிகைக்கெடுவுக்கு உட்பட்டுத் தொடர்ந்து எழுதுவது உங்களுக்கு எப்படி முடிகிறது?’ பதிலையும் நானே சொன்னேன் ‘நீங்கள் எழுத்தாளர். உங்களால் முடியும்.’ நீங்கள் நிம்மதிப்   பெருமூச்சுவிட்டாலும், நான் அவ்வப்போது உயிர்மையில் என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். எனக்கு ஒரு எழுத்தாளனுக்குரிய மரியாதையைத் தந்த உயிர்மை ஆசிரியக் குழுவுக்கும், நண்பர் மனுஷ்ய புத்திரனுக்கும் என் உளமார்ந்த நன்றி. மீண்டும் சந்திப்போம்.


பங்களாதேஷ் நினைவுகள்: டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா?
பாரதி மணி


 

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. சமீபத்தில் ஜெய்ப்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு அங்கு பஞ்சம்பிழைக்க வந்த பங்களாதேஷ் அகதிகள்தான் காரணமென்று அவர்களைச் சிறையிலடைத்து விசாரித்தது ராஜஸ்தான் அரசு. முன்னர் தில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கும் காரணமாக, அங்கிருந்த பங்களாதேஷ் அகதிகள்தான் முதல் இலக்காக இருந்தார்கள். அவர்களுக்குத்தான் முதல் தர்ம அடி. இந்த அகதிகளை பங்களாதேஷுக்குத் திருப்பி அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து NDTV, CNN-IBN சானல்களில் தினமும் தொடரும் சர்ச்சை. வி.பி.சிங் அரசு இவர்களிடம் பெரிய ஓட்டு வங்கியைக் கண்டதால், தில்லி யமுனையின் அக்கரையில் தங்க இடம் கொடுத்து மின்சாரமும்  ரேஷன் கார்டுகளும் வினியோகித்தது. தற்போது இந்தியாவில் நான்கு மெட்ரோக்களிலும் முக்கிய நகரங்களிலும் பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 50 லட்சமா இல்லை இரண்டு கோடிகளுக்கும் மேலேயா என்று இந்திய அரசு கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய கணக்கு நாளை மாறிவிடும். பங்களாதேஷில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சைக்கிள் ரிக்ஷா ஓட்டிக்கொண்டேதான் வெளியே வருகிறதென்று சொல்வார்கள். டாக்காவில் மோத்தி ஜீல் ஏரியாவில் ஓடும் சைக்கிள் ரிக்ஷாக்களைப் பார்க்கும்போது அது உண்மையாகத்தானிருக்கும். இந்தியாவுக்கு வந்தபிறகும், கொல்கத்தாவிலும் தில்லியிலும் மற்ற மாநகரங்களிலும் பெரும்பான்மை பங்களாதேஷ் அகதிகள் சைக்கிள் ரிக்ஷாதான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எழுபதுகளில் ஒருதடவை இந்தியா-பங்களாதேஷ் Benapole எல்லையில் கல்கத்தா STC அதிகாரிகளிடம் முக்கியமான சில ஆவணங்களைக் கொடுப்பதற்காக இரவு முழுவதும் காத்திருந்தேன். பகல் நேரங்களில் பல தடவைகள் வந்திருக்கிறேன். இருதடவைகள் பங்களாதேஷிலிருந்து பேனாப்போல் பார்டர் தாண்டி கல்கத்தாவுக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால் இரவு தங்கியதில்லை. இந்த எல்லையை இந்தியத்தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையும்  அவர்கள் சார்பில் Bangladesh Rangers-ம் 'காத்து வந்தார்கள்'. இரவு இரண்டரை மணிக்குக் காரில் தூங்கிக்கொண்டிருந்தவன் சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன். திடீரென்று இருபக்கமும் விளக்கெரிந்து கூச்சல் அதிகமாகிறது. பங்களாதேஷ் எல்லைக்குள் 12 நபர்கள் பிடிபடுகிறார்கள். ப.தே. அதிகாரிகள், "ஸூவர் கே பச்சே (பன்றியின் மக்களே), என்ன தைரியமிருந்தால், 'எங்கள்' எல்லைக்குள் வருவாய்? மரியாதையாக உன் சொந்த இடத்துக்குப் போய்விடு" என்று சரமாரியாக எல்லோருக்கும் அடி விழுகிறது. நம் பக்கமிருக்கும் BSF ஜவான்களிடம், 'இந்தா, உன் ஆட்களை நீயே மேய்த்துக்கொள். உள்ளே வந்தால் கொன்றுவிடுவோம்' என்று 12 பேர்களையும் இந்திய எல்லைக்குள் விரட்டிவிடுகிறார்கள். நம் ஜவான்கள் சிரித்துக்   கொண்டே மௌனமாகிறார்கள். Search Light அணைகிறது. எல்லை அமைதியாகிறது. சுபம். கதை முடிந்தது கத்தரிக்காய் காய்த்தது. ஏதாவது புரிகிறதா? பத்து  நிமிடத்திற்குள் 12 பங்களாதேசி ‘அகதிகள்’ பாஸ்போர்ட் இல்லாமல், விஸா இல்லாமல், விமானச்செலவு இல்லாமல், ஒருசில அடிகள் மட்டுமே வாங்கிக்கொண்டு, இந்திய எல்லைக்குள் ‘இந்தியப்பிரஜைகளாக’ சிரித்துக் கொண்டே நடந்து செல்கிறார்கள். என் கார் டிரைவர், “யே ரோஜ் கா தந்தா ஹைஸாப்” (இது தினமும் நடக்கும் தொழில் தான் சார்) என்று அலட்சியமாகச் சொல்கிறார். டாக்காவிலும், குல்னாவிலும் ஜெஸ்ஸூரிலும் இதற்கென்றே தனி ஏஜெண்ட்களுண்டு. இந்தப் பன்னிரண்டு இந்தியப்பிரஜைகளும் ஏஜெண்டுக்கு தலா 6000 டாக்கா (Dhaka அல்ல 6000 Taka - அவர்கள் நாணயம் - இந்தியமதிப்பில் சுமார் ரூ. 3000 - இது அப்போதைய ரேட்டு) கொடுத்திருப்பார்கள். அந்தத் தரகர் எல்லையிலிருக்கும் Bangaladesh Rangers இடம் கலந்துபேசி இந்த 'சுப முகூர்த்தத்துக்கான' நாள், தேதி, நல்ல நேரம் எல்லாம் குறித்துக்கொடுப்பார். அவர் வாங்கும் வரதட்சிணையில் பாதி BSF ஜவான்களுக்கும் மொய் எழுதப்படும். Saare Jahaan Se Achchaa, Hindustaan Hamaara!

டாக்காவில் எனக்கு ஒரு 'சின்ன வீடு' இருக்கிறதென்று என் நண்பர்கள் கேலி செய்யுமளவுக்கு எழுபதுகளில் நான் மாதம் இருமுறையாவது பங்களாதேஷ் போய்வருவேன். எனது நிறுவனம் இந்தியாவில் பங்களாதேஷ் அரசின் ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பிடியிலிருந்து விடுபட்டதும் ப. தேஷின் பொருளாதாரம் தரை மட்டத்திலிருந்தது. அவர்கள் Balance of Trade-ஐ சரிசெய்யும் நோக்கில் இந்திய அரசு அங்கிருந்து பெரிய அளவில் செய்தித்தாள் காகிதம் இறக்குமதி செய்யத்தீர்மானித்தது. அதை நான்தான் நிர்வகித்து வந்தேன். அதுசம்பந்தமாக, வங்கத்தந்தை (பொங்க பொந்து) ஷேக் முஜீபுர் ரஹ்மானை அவரது தன்மண்டி ஏரியா வீட்டில் மூன்றுமுறை சந்தித்திருக்கிறேன். இந்த நியூஸ்பிரின்ட் ஏற்றுமதியை அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானதாகக் கருதினார். (பங்களாதேஷ் காகிதம் மெல்லியதாக இல்லாமல் அட்டைபோல் இருக்கிறதென்று  இந்தியப்பத்திரிகைகள் ஒதுக்கிவந்தன. நவீனப்படுத்தமுடியாமல் காலாவதியான பழைய இயந்திரங்களை வைத்துக்கொண்டே, தனிமனிதராக, Khulna Newsprint Mills General Manager திரு. ஷாஜஹானின் - இவர் பெயருக்குப் பின்னால் Paper Technology-யில் உலகப் பல்கலைக் கழகங்களின் எல்லாப்  பட்டங்களும் ஒட்டிக்கொண்டிருக்கும் - ஒருவருட விடாமுயற்சியால், தரம் உயர்த்தப்பட்டு, 1977-ல் சென்னை 'ஹிந்து' பத்திகையில் சோதனை வெள்ளோட்டம் நடந்தது. மணிக்குப் பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சடிக்கும் திறமையுள்ள ராட்சத இயந்திரங்களுக்கு நடுவில் ஒரு தடவை கூடக் கிழியாமல் ஈடுகொடுத்து ஓடி சாதனை படைத்தது ப.தே. நியூஸ்பிரின்ட். அதைக் கண்களில் நீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்தார், விஷயம் தெரிந்தவர்களால் Paper Tiger என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு. S.I. ஷாஜஹான். மேலேயிருந்து ஷேக் முஜீபுரும் பார்த்துக் கொண்டிருந்தார் என்று நான் நம்பினேன்). இத்தனை நல்லவரான ஷேக் ஸாஹிப் அரசியல் சதுரங்கத்தில் ஈடுகொடுக்க முடியுமா என்று ஆச்சரியப்படுமளவிற்கு நன்றாகப் பழகுவார்.

1975 ஆகஸ்ட் 15-ம் தேதி. நமது சுதந்திர தினம். எமர்ஜென்ஸி நாட்கள். பயந்து கொண்டு தினமும் காலை ஒன்பதே முக்காலுக்கே தன் சீட்டில் ஆஜராகிவிடும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் அதிகாரிகளும் பாபுக்களும் - எமர்ஜென்ஸியில் நான் கண்ட தில்லி அதிசயங்களில் இதுவும் ஒன்று - தங்கள் வீட்டில் விச்ராந்தியாக இந்திரா காந்தியின் செங் கோட்டைச் சொற்பொழிவை ஆல் இந்தியா ரேடியோவில் கேட்டுக்கொண்டிருந்த நேரம். அன்று தில்லியில் எனக்கு மட்டும்தான் விடுமுறையில்லை. ஆபீசுக்குப்போன சிறிதுநேரத்தில் லண்டனிலிருந்து ஒரு போன் செய்தி: 'பங்களா தேஷ்  பிரதமர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்'. இது வதந்தியாக இருக்கவேண்டுமென்று நம்பினோம். ஆனால் சிலமணி நேரத்தில் BBC இதை உறுதிசெய்தது. நமது ஆல் இந்தியா ரேடியோ மாலை வரை வாயே திறக்கவில்லை. எமர்ஜென் ஸியல்லவா! செய்தி கேட்ட நான் இதை என் சொந்த இழப்பாகக் கருதி வருந்தினேன். இருவாரங்களுக்கு முன்புதான் அவரை டாக்காவில் சந்தித்துவிட்டு வந்திருந்தேன். நமது State Trading Corporation of India சுட்டிக்காட்டிய குறைகளைக் களைந்து பங்களாதேஷ் நியூஸ்பிரின்டை உலகத்தரத்துக்கு உயர்த்தவேண்டுமென்பதில் அவருக்கிருந்த   முனைப்பு என்னை வியப்பிலாழ்த்தியது. விடைபெறும்போது சாமான்யனான என்னை வீட்டு வாசல்வரை வந்து வழியனுப்பிய அவரது மனித நேயத்தை என்னால் மறக்கமுடியாது. அரசியல் வல்லுநர்கள் அவரை ஒரு Weak Prime Minister என்று குறிப்பிடுவார்கள். பங்களாதேஷில் 'Beedi to 555 Culture' என்னும் புதிய தலைமுறையை உருவாக்கியவர். மேற்குப்பாகிஸ்தான் அரசு விடுதலைப்போராட்டத்தின்போது இவரைச்  சிறையிலடைத்தது. சிறையில் அரசியல் கைதியாகவிருந்த தன்னை தலைவராக மதித்து பணிவிடைகள் செய்த சக கைதிகளிடமும், தன்னை நன்றாகக்  கவனித்துக்கொண்ட ஜெயில் அதிகாரிகளிடமும் நன்றியுடையவராக இருந்தார். மற்ற அரசியல் தலைவர்களைப்போலல்லாமல் பதவிக்கு வந்த பிறகும் அவர் அதை மறக்கவில்லை. தன்னைச் சந்திக்க வரும் மாஜி கைதிகளை உட்காரவைத்து பேசிக்கொண்டிருப்பார். அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு ஆதாரமாக, கையில் கிடைத்த காகிதத்தில், To C.C.I & E, Dacca. Please allow the bearer to import without Customs Duty one truckload of Blades/Cigaretter/Lactogen/Fabrics/Auto Spare parts/Fans இதில் ஏதாவது ஒன்றை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, 'இதை வைத்துப் பிழைத்துக்கொள்' என்று சொல்வாராம். இந்தப்பழக்கம்   அரசாங்க விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறானதால், அங்கிருந்த Chief Controller of Imports & Exports-க்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. நேற்றுவரை குடிசையில் உட்கார்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்த 'புதுப்பணக்காரர்' இன்றிலிருந்து 555 சிகரெட் மட்டுமே புகைப்பார். இதைத்தான் 'Beedi to 555 Culture' என்று பத்திரிகையாளர்கள் கேலியாகச் சொன்னார்கள். அப்படிப் பணம் சேர்த்த ஒருவரை ஒருமுறை டாக்காவில் சந்தித்தேன்.  தன் பேரக் குழந்தைகளுக்காக வீட்டு வரவேற்பறையில் பல வர்ணங்களில் ஒரு சிறிய நீச்சல் குளம் கட்டி சுற்றிலும் எட்டு ஏர்கண்டிஷனர் பொருத்தியிருந்தார். Vulgar Display of Wealth! அர்த்தராத்திரியில் குடை பிடிக்கும் ரகம். என்னைப் பொறுத்தவரையில் Banga Bandhu was the right person at a wrong place. டாக்காவில் நான் தங்கியிருந்த Dacca Intercontinental Hotel-ன் வயதான ரிஸப்ஷன் அதிகாரி ஒருமுறை என்னைச் சற்றுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு, You are looking like our Banga Bandhu in his younger days! என்று சொன்னார். என் அப்போதைய தோற்றம் - வகிடில்லாமல் பின்னுக்கு வாரிய முடி, கறுப்புப் பிரேம் போட்ட கண்ணாடி, மீசை - அப்படியிருந்ததாம். தில்லியில் பிறகு சந்தித்த திருமதி ஷேக் ஹஸீனாவும் என்னை முதன்முதல் பார்த்தபோது தன் தந்தையின் சாயல் எனக்கிருப்பதாகச் சொன்னார். எங்களுக்குள் இன்னொரு ஒற்றுமை: நாங்கள் இருவரும் Pipe புகைப்பவர்கள். அவர் இறந்தபிறகு - 1988-ல் தான் நான் ஆரம்பித்தேன்.

ஷேக் ஸாபின் படுகொலைக்குப் பிறகு நான் டாக்கா போனபோது அரசு அனுமதியுடன் அவர் கொலையுண்ட தன்மண்டி ஏரியா வீட்டைப் போய்ப்  பார்த்தேன். சரமாரியாகத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள் எனக்கு ஏனோ ஜாலியன்வாலா பாக்கை ஞாபகமூட்டியது.

இவரைக்கொலை செய்துவிட்டு Chief Martial Law Administrator-ஆக முடிசூடிக் கொண்ட ஜெனரல் ஜியாவுர் ரஹ்மானும் அதிகநாள் நீடிக்கவில்லை. தன்வினை தன்னைச்சுடும் என்பதுபோல் அவருக்கும் அதே கதி நேர்ந்தது. அவரைப் படு கொலை செய்துவிட்டுப் பதவியேற்றார் அடுத்த ஜெனரல் பி.வி. எர்ஷாத் - இவரது மன்மதலீலைகளைப்பற்றி நிறைய தெரியும், எழுதலாம், சுவாரசியமாக இருக்கும். அதன்பின் மக்களாட்சியில் பங்கபந்துவின் மகள் ஷேக் ஹஸீனாவும் பிறகு ஜியாவுர் ரஹ்மான் மனைவி காலிதா ஜியாவும் பிரதமர்களாகப் பதவியேற்றனர். ஷேக் ஹஸீனாவுடன் எனக்கிருந்த நட்பையும், அவரது குணாதிசயங்களைக் குறித்தும் வேறொரு கட்டுரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

பாகிஸ்தான் பிறந்ததிலிருந்து பெரும்பாலும் ராணுவ ஆட்சியே நடப்பது அதன் சாபக்கேடு. அறுபது வருடங்களுக்குப் பிறகு இனியாவது அங்கே ஜனநாயகம் வேரூன்றுமென நம்புவோம். பெரும்பாலான ஆட்சியில் - ராணுவமானாலும் சரி மக்களாட்சியானாலும் சரி - பங்களாதேஷ் (முந்தைய  கிழக்குப் பாகிஸ்தான்) மாற்றாந்தாய்க் கொடுமையையே அனுபவித்துவந்திருக்கிறது. பாகிஸ்தானில் பெரும்பான்மையான பஞ்சாபி முஸ்லீம்கள் கையில்தான் எப்போதும் அதிகாரம் இருந்தது. அவர்கள் வங்காளி முஸ்லீம்களைக் கிள்ளுக் கீரையாகவே நினைத்திருந்தார்கள். மதம் அவர்களை ஒரு நாடாக இணைக்குமென்ற மாயை, காலப்போக்கில் முற்றிலும் வேறுபட்ட இனக்கலாச்சாரத்தின் வலிமையால் தவிடுபொடியானது. பங்களாதேஷ் முஸ்லீம்கள் தங்களை பாகிஸ்தான் பஞ்சாபி முஸ்லீம்களைவிட கலாச்சார ரீதியாக இந்திய வங்காளிகளோடு சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். மதரீதியில் இணைக்கப்பட்டவர்கள் கலாச்சார ரீதியாகக் கடைசி வரையில் ஒட்டவேயில்லை. நாட்டின் ராணுவம் மக்களாட்சியில் குறுக்கிடுவது பங்களாதேஷுக்கு பாகிஸ்தானிடமிருந்து தொற்றிக்கொண்ட சாபம். அது இன்னும் தொடர்கிறது.

ஒருதடவை நான் புகழ்பெற்ற டாக்கா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்-Deans எனக்காக ஏற்பாடு செய்திருந்த (சைவ) விருந்துக்குப் போயிருந்தேன். பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு வயதான டீன் உணர்ச்சிவயப்பட்டு, ‘இப்போது என் முன்னால் ஜனாப் முகம்மது அலி ஜின்னா தோன்றினால், யாரிடமாவது ஒரு துப்பாக்கி கடன் வாங்கி அவரை மூன்றுமுறை சுட்டிருப்பேன். உங்கள் காந்தியைப்போல் மூன்றுமுறை 'அல்லாஹோ அக்பர்' சொல்லுகிறாரா என்பது தெரிந்திருக்கும். எங்கள் நாட்டின், குழந்தைகளின் சீரழிவுக்கு அவர் தான் காரணம்’ என்று ஆவேசமாகப் பேசினார்.

காரணம் கேட்டதற்கு, 'பிரிவினைக்குப்பிறகு எங்கள் கிழக்குப் பகுதியில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? பஞ்சாபிகளுக்கு குலாம் ஆக இருந்தோம். இந்த முப்பது வருடங்களில் உங்கள் இந்தியாவில் எவ்வளவு முன்னேற்றம்? உணவு, உரம், இரும்பு, சிமென்ட், மின்சாரம், ரோடுகள், கல்வி, சுகாதாரம் எதிலும் முன்னணியிலிருக்கிறீர்கள்.  நீங்கள் போகும் கார், ஏறும் லிப்ட், உழும் டிராக்டர்கள், பயணம் செய்யும் ரயில் எல்லாமே  நீங்கள் இந்தியாவில் தயாரித்தது. இங்கே தோலையும் சோப்பையும் தவிர வேறு என்ன தயாரிக்கிறோம்? இந்தப் பாழாய்ப்போன பார்ட்டிஷன் வராமலிருந்தால், உங்கள் முன்னேற்றத்தில் பாதியாவது எங்களுக்கும் வந்திருக்காதா? உங்களைவிட முப்பது வருடம் பின்னோக்கி இருக்கிறோம். இதற்கெல்லாம் ஜின்னாதான் காரணம்’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவருக்காக நான் அனுதாபப்பட்டாலும், எனது அடி ‘இந்திய’ மனம் அவர் புகழ்ச்சி வார்த்தைகளில் சந்தோஷப்பட்டதை மறுக்கமுடியாது. மற்ற நாட்டுப்பயணங்களை விட பங்களாதேஷ் போனால்தான் நம் ‘இந்தியப்பெருமிதம்’ தலைநிமிர்ந்து நிற்கும்.

பங்களாதேஷ் ராணுவ ஆட்சியில் மேல்தட்டு கர்னல் பிரிகேடியர்களுக்குத் தலையில் ஒரு கொம்பு இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். எல்லா இடத்திலும் அவர்களுக்குத்தான் முதலிடம் நம் நாட்டு ஆளும்கட்சி அரசியல்வாதிகளைப்போல. எங்கு போனாலும் அவர் களுக்கே முதல் பரிவட்டம். ஏர்போர்ட்டில் உட்காருமிடம் காலியில்லையென்றால் யாராவது எழுந்து அவர்களுக்கு நாற்காலி கொடுத்தாகவேண்டும். டாக்காவிலிருந்து ஜெஸ்  ஸூர் போக விமானத்தில் இடமில்லையென்றால் முன்னரே இடப்பதிவு உறுதிசெய்யப்பட்ட பயணிகளை இறக்கிவிட்டு, இவர்கள் ஏறிக்கொள்வார்கள். ஒருதடவை ஜெஸ்ஸூரிலிருந்து டாக்கா வரும்போது ராணுவ அதிகாரிகள் ஏறியதால் எனது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கு இடமில்லையென்று கை விரித்துவிட்டார்கள். விமானம் Propeller உள்ள சிறிய Super Constellation வகை. பிறகு Bangladesh Biman ஆபீசில் சிறிய 'பேயாட்டம்' போட்டு, அன்றையதினமே டாக்காவிலிருந்து தில்லி போக ‘தாய்’ விமானத்தில்டிக்கெட் பதிவாகியிருக்கிறதென்று கூச்சலிட்டேன். தொந்தரவு தாளாமல், மற்றொரு ‘ஏமாந்தவர்’ இறக்கிவிடப்பட்டு, எனக்கு இருக்கை தந்தார்கள். ராணுவ அதிகாரிகளுக்கு அவ்வளவு மவுசு அங்கே.

ஒரு படத்தில் பழம் நாடகநடிகர் வீராச்சாமி அடிக்கடி ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்று சொல்வார். அதேபோல 1971-ல் பங்களாதேஷ் பிறந்ததிலிருந்து எண்பதுவரை பல பல முறை அங்கே போய்வந்துகொண்டிருந்தேன். எனக்கு ஒரு உண்மை இதுவரை தெரியவில்லை. பாகிஸ்தானிடமிருந்து அவர்களுக்கு, இந்தியா ஒரு போர் நடத்தி, நமது பல ஜவான்களின் உயிர்ப்பலியில் அவர்களுக்கான தனிநாட்டை மீட்டுக்கொடுத்தோம். பிறகு அவர்கள் நாட்டுப்பொருளாதாரத்தை மேன்படுத்துவதில் இந்திரா காந்தி தனிப்பட்ட சிரத்தை காட்டிவந்தார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகளும் பங்களாதேஷுக்கு அளவுக்குமீறியே பொருளாதார உதவிகளைச்செய்து வருகின்றன. கடக் வாஸ்லா IMA உட்பட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் பங்களாதேஷ் மாணவர்களுக்கு முன்னுரிமை உண்டு. அவர்கள் ராணுவத்தளபதி இந்தியா வந்தால், ராஜமரியாதை செய்து போகும் போது ஆறு சிறந்த பொலி குதிரைகளையும் கொடுத்தனுப்புகிறோம். மாறாக பாகிஸ்தான் அவர்களை ஒரு கொத்தடிமை போலவே நடத்திவந்திருக்கிறது. இருந்தாலும் வங்கதேசத்தில் ஆட்சிக்கு வந்த அரசுகள் - ராணுவமானாலும் மக்களாட்சியானாலும் - இந்தியாவைச் சீண்டுவதிலேயே சுகம் கண்டிருக்கின்றன.ஷேக் முஜீபுர் ரஹ்மானும், அவர் மகள்ஷேக் ஹஸீனாவும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி வேண்டாமா? அதற்காக நாயைப்போல் வாலையாட்ட வேண்டாம். மனதில் சிறிது ஈரத்தை எதிர் பார்ப்பது தவறா? அவ்வப்போது 'தம்மாத்துண்டு' Bangladesh Rangers நம் எல்லைகளில் சீண்டிப்பார்க்கிறார்கள். நம்மை ஒரு Big Bad Brother என்றவகையிலேயே பார்க்கிறார்கள். காரணம் என்ன? பாகிஸ்தானும் பங்களாதேஷும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் என்னும் காரணத்தை நான் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. டாக்காவில் ஒருமுறை அரிதாகத் தென்படும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து மீட்டரைப் போடச் சொன்னேன். 'வோ சலேகா நஹீன் ஸாப்' என்றார் ஆட்டோக்காரர். அதை என்னால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் கொசுறாக, 'வோ இந்தியா ஸே ஆயா ஹை' இந்தியாவிலிருந்து வந்தது அதனால் ஓடாது' என்பதுபோல் சொல்லுவார். பதிலுக்கு நான், 'நானும் ஒரு இந்தியன்தான். என் கைபட்டதும் எப்படி ஓடுகிறது பார்' என்று, அவர்களுக்கு இந்தியப்பொருளாதார உதவியின்கீழ் இலவசமாகக் கொடுக்கப்பட்ட புத்தம்புதியபஜாஜ் ஆட்டோவின் புத்தம்புதிய மீட்டரைப் போடுவேன். கீழ்மட்ட மக்களிடமும் இந்தக் காழ்ப்புணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. இந்த ஜூன் மாதம் 14-ம் தேதி பங்களூரில் என் மகள்          வீட்டிலிருந்து இந்தக் கட்டுரையை என் கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருந்தேன். அன்று டாக்காவில் இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் சல்மான் பட்டின் கேச்சை நமது இர்பான் பட்டான்(பதான் அல்ல) தவறவிட்டபோதும், கடைசியில் பாகிஸ்தான் நம்மைத் தோற் கடித்தபோதும், மைதானமே கரகோஷத்தால் அதிர்ந்தது. பார்த்துக்கொண்டிருந்த என் மருமகன் 'பாகிஸ்தான் இந்தியாவைத் தோற்கடிப்பதில், பங்களாதேஷுக்கு ஏன் இத்தனை கொண்டாட்டம்?' என்று என்னைக் கேட்டார். ஏன்? எனக்குத் தெரியவில்லை. அரசியல் வல்லுநர்கள்தான் காரணம் சொல்லவேண்டும்.

நாற்பத்திமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தவருடம் கொல்கத்தா - டாக்கா பயணிகள் ரயில் Maitree Express கோலாகலமாக விடப்பட்டது. 1965 பாகிஸ்தான் போருக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்டது. இது பயணிகள் ரயில். அதனால் பங்களாதேஷ் போனால் முழுசாக அப்படியே திரும்பிவிடும். ஆனால் நமது சரக்கு ரயில் முன்பு பங்களாதேஷ் போனால், கல்கத்தாவிலிருக்கும் Eastern Railway General Manager-க்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இந்தியக் கச்சாப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 20 வாகன்கள் பேனாப்போல் பார்டர் தாண்டி பங்களாதேஷ் போனால் அதில் பத்துக்கூடத் திரும்பிவாரா. எழுபதுகளில் இதுதான் திரும்பத்திரும்ப நிகழ்ந்தது. ஒருதடவை எங்கள் குல்னா கெஸ்ட் ஹௌஸிலிருந்து ஜன்னல் வழியாக பின்பக்கம் போகும் பங்களாதேஷ் சரக்கு ரயிலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் இஞ்சின் மட்டும் அவர்களது. பின்னால் ஓடிய 20 வாகன்களில் பதினொன்று நமது 'பாரதீய ரேல்' காசு கொடுத்து வாங்கியவை. E.R., N.E., N.R., W.R., C.R.  என்று பேதமின்றி நமது இந்திய ரயில்வேயின் வாகன்கள். அதில் ஒன்று நம் S.R. (Southern Railway) வாகன். இது எப்படி குல்னா போய்ச்சேர்ந்ததென்று ஆச்சரியமாக இருந்தது. ஒருதடவை அவர்கள் எல்லைக்குள் போய்விட்டால் அவைகளைத் தன் சொந்தச் சொத்து போல் நினைத்து உபயோகித்துக்கொள்வார்கள். அவர்கள் மொத்த சரக்குவாகன்களில் கால்வாசி இங்கிருந்து போனவை. நமது ரயில்வே போர்டு இந்தப் பிரச்சினையைப் பலதடவை எழுப்பியும் பலனொன்றும்  காணவில்லை.

எனக்குத் தேவையேயில்லாமல் பார்வதிபுரம் சின்னவயது சம்பவம் ஞாபகத்துக்கு வரும். எங்கள் பக்கத்துவீட்டு மாமி வாரத்துக்கொருமுறை ஒரு   பெரிய கரண்டியைக் கொண்டுவருவாள். ‘சோமு மாமி, இதிலே கொஞ்சம் காப்பிப் பொடி தரேளா? இப்போதான் பாத்தேன். டப்பா காலியா இருக்கு.’ இரண்டுநாள் கழித்து அதே கரண்டி சீனிக்காக வரும் - அப்போது சீனிக்கு ரேஷன். சிரித்துக்கொண்டே கொடுத்தனுப்பிய பிறகு, ‘இதுவரை இந்தமாசத்திலே நாலு தடவை காப்பிப்பொடி, மூணுதரம் சீனி. கரண்டியா அது? பாதாளக் கரண்டி. எங்கிருந்துதான் கெடச்சிதோ. ஒழக்குப் பொடி கொள்ளும். நம்பாத்து படி எறங்கறோதே அவ இதை மறந்துருவா. எனக்குத்தான் ஓர்மையிருக்கும்’ என்று அலுத்துக்கொள்வாள்  என் அம்மா.   நீ ஏன் கேட்கவில்லையென்றால், ‘இது ஸ்டேன்ஸ் காப்பி, அவ அய்யனார் காப்பியைத் தருவா. இதையெல்லாம் கேக்கப் படாதுரா, பக்கத்தாத்திலே இருக்கா . . .பாவம் . . . இல்லாமை தானே காரணம்.’ என்று விளக்கமும் சொல்வாள். இரு வீடுகளுக்குப் பொருந்துவது இரு நாடுகளுக்குப் பொருந்தாதா என்ன? இந்திய ரயில்வே போர்டுக்கும் என் அம்மாவின் விளக்கம் சரியாகப்பட்டிருக்க வேண்டும்.

டாக்காவிலிருந்து குல்னா வரைகாரில் பிரயாணம் செய்வது ஒரு நிறைவான அனுபவம். இற்றுப்போன பழையபனியனின் கையகலத்துண்டு போலிருக்கும் பங்களாதேஷில் 29 நதிகள் ஓடுகின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கும். இந்நதிகளில் லாரி லாரியாக மணல் அள்ள முடியாது. எப்போதும் தண்ணீர் ஓடும். அவைகளில் பத்மா (அன்பாக பொத்தோ என்று அழைப்பார்கள்) மேக்னா, தீஸ்தா, புரிகங்கா, கர்ணாபுலி, பைரவ் போன்றவை முக்கியமானவை. பத்மா மற்றும் இன்னும் பெயர் தெரியாத நதிகளைக் கடக்கும்போது, வழியில் தண்ணீருக்கு பயந்து,  நம் கார் மூன்று நான்குமுறை படகில் (Barge) ஏறிவிடும். அக்கரை தெரியாத பெரிய நதிகள். அதி காலையில் வழிந்தோடும் பாதைக்கு இருபுறமும், பல இடங்களில் மக்கள் கையில் ஒரு பாத்திரத்தோடு வட்டமாகக் கூடியிருப்பார்கள். கூர்ந்து கவனித்தால், நடுவில் ஒரு பசு கழுத்தறுபட்ட நிலையில் துடித்துக்கொண்டிருக்கும். ஹலால் முறையில் அதன் ரத்தம் முற்றிலும் வெளியேறியபின்தான் அதை வெட்டிக் கூறு போடுவார்கள். அதற்காகத்தான் எல்லோர் கையிலும் பாத்திரம். இந்தியாவில் வளர்ந்த நமக்கு இது ஒரு கோரமான காட்சியாக இருக்கும். வழியெல்லாம் இந்தக் காட்சிகளை நிறைய பார்க்கலாம். அதேபோல வெள்ளிக்கிழமை காலை வேளைகளில்  நண்பர்கள்  வீட்டுக்குப் பார்க்கப் போனால், தோட்டத்தில் இரண்டுமூன்று கோழிகள் கழுத்தறுபட்ட நிலையில் துடிதுடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, 'சைவ' மனதை என்னவோ செய்யும்.

பத்மா. மேக்னா போன்ற நதிகளில் ஹீல்ஸா என்னும் ஒருவகை மீன் கிடைக்கிறது. இது Fresh Water Fish வகை. வங்காளிகளுக்கு இது அமிர்தமாம். இரு வங்காளிகள்  இதைப்பற்றிப் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். இதற்காகத் தன் சொத்தில் பாதியைத்தரத் தயங்கமாட்டார்களாம். அதன் பெருமைகளைச் சொல்லி, ‘ஐயோ நாம் Vegetarian-ஆக இருந்துவிட்டோமே’ என்று என்னை ஏங்கவைத்திருக்கிறார்கள். It is a rare delicacy for them. இது நமது மேற்கு வங்காளத்தில் கிடைக்காது. பங்களாதேஷ் நதிகளில் மட்டும்தான் கிடைக்குமாம். சமீபத்தில் CNN-IBN-ல் ஒரு செய்தித் தொகுப்பு பார்த்தேன். இப்போது ஹீல்ஸா மீன் பங்களாதேஷிலிருந்து திருட்டுத்தனமாகக் கடத்திவரப்பட்டு கொல்கத்தா மீன் சந்தையில் கிலோ ரூ. 900-க்கு விற்கப்படுகிறதாம். ப.தே. காகிதத்தை இந்தியாவில் பிரபலப்படுத்தும் நோக்கில் கல்கத்தா ‘அம்ருத் பஜார் பத்ரிகா’ குழுவின் தலைவர் திரு. தருண் காந்தி கோஷ் அவர்களை, சந்திக்கப்போயிருந்தோம். இவர் நம் ராம்நாத் கோயங்காவைப்போல இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர். அவரைவிட வயதானவர். அவருடன் பேசிக்கொண்டிருந்த ஒன்றரைமணி நேரத்தில், திரு. ஷாஜஹானுடன் ஒரு மணி 25 நிமிட  நேரம் சுத்த      பெங்காலியில் ஹீல்ஸா மகிமை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். சின்ன வயதில் டாக்காவில் இருந்தபோது அதை விரும்பிச் சாப்பிட்டதையும், அதன் ருசிக்கு உலகத்தில் எதையும் இழக்கத் தயாரென்றும், கல்கத்தா வந்தபின்னரும் அதன் ருசி தன் நாக்கிலிருந்து மறையவில்லையென்றும் துதி பாடிவிட்டு, கடைசி ஐந்து நிமிடங்களில், மொத்த 10,000 டன் நியூஸ்பிரின்டையும் அம்ருத பஜார் குரூப்பே வாங்கிக் கொள்ளுமென்றும் சொல்லிக் கை குலுக்கி விடைகொடுத்தார். அதன்பிறகு எப்போது பங்களாதேஷிலிருந்து நேராக கல்கத்தா வந்தாலும், அவருக்குக் கொடுக்க என்னிடம் ஹீல்ஸாமீன் பாக்கெட் இருக்கும். தில்லியில் ரகசியமாக இந்திரா காந்தியால் வரவழைக்கப்பட்டு, 'Z' பிரிவுப் பாதுகாப்புடன் பண்டாராரோடு பகுதியில் ‘அக்ஞாத வாசம்’ இருந்த ஷேக் ஹஸீனாவுக்கும் பல தடவை கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறேன்.

இந்தியாவுக்கு நியூஸ்பிரின்ட் அனுப்பும் Khulna Newsprint Mills பங்களாதேஷ் அரசுக்குச் சொந்தமானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  கொண்ட ஒரு சிறிய நகரம். (மில்லுக்குச் சொந்தமான இரு கப்பல்களும் பல Barges-ம் உண்டு). அதற்குள்ளேயே ஒரு சின்ன ஸ்டேடியம், நீச்சல் குளம், கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் விளையாடத் தனித்தனி மைதானங்கள், கிளப்பில் பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர், டேபிள் டென்னிஸ் விளையாடத் தனி இடங்கள். அந்தப் பரந்த சாம்ராஜ்யத்துக்கு ஜெனரல் மானேஜர் ஷாஜஹான்தான் முடி சூடாத மன்னர். ஊருக்குள்ளே எங்கே சென்றாலும் அவருக்கு இதே ராஜமரியாதை இருந்தது. அது தானாகவே வந்தது. எனக்கு மிக நெருங்கிய நண்பர். விடு முறைகளில் குல்னா நகரைச் சுற்றிப் பார்க்க அவர் காரில் அழைத்துப் போவார். வழியில் காணும் இளநீர்க்காரரிடம் இளநீர் குடித்துவிட்டு காசைக் கொடுத்தால் வாங்க மறுப்பார். ‘மரியாதை உன் மனதிலிருந்தால் போதும். இது உன் தொழில்’ என்று சொல்லி கையில் பணத்தைத் திணித்துவிட்டு வருவார். குல்னா நகருக்கே   ராஜாவாக இருந்தார். மாலைவேளைகளில் கிளப்பில் எனக்கு பில்லியார்ட்ஸ் கற்றுக் கொடுப்பார். என்னைவிடக் குள்ளமான அவர் எம்பி எம்பி         லாவகமாகப் பந்துகளை அடிப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் கீர்த்தியில் பெரியவர். கனடாவிலிருந்தும், ஸ்வீடனிலிருந்தும் நியூஸ்பிரின்ட் வல்லுநர்கள் இவரிடம் சந்தேகம் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். அவருக்கு சுத்தமாக குடிப்பழக்கம் இல்லை என்றபோதும் என் பழக்கத்தை சகித்துக்கொண்டு இரண்டும் மணி நேரம் என்னோடு இருப்பார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது எங்கள் ‘எல்லை’ மீறிய நட்பு.

நான் தங்கும் K.N.M. கெஸ்ட் ஹௌஸ் சரித்திரப்பிரசித்தி பெற்றது. நான் வழக்கமாகத் தங்கும் Deluxe ரூமில்தான் 1971 போரின் போது ஜெஸ் ஸூர் வழி வந்த இந்தியப்படையின் தளபதி Lt. Gen. Jagjit Singh Aurora ஒருவார காலம் தங்கியிருந்தாராம். அதைப் போற்றும் வகையில் அறையின் வெளியே ஒரு பெயர்க்கல் நாட்டியிருக்கிறார்கள். (இங்கே ஒரு சின்ன கொசுறுச்செய்தி: 1971-ம் வருடம் டாக்கா மைதானத்தில் நமது வெற்றித் தளபதி Lt. Gen. J.S. Aurora-வும் தோல்வியடைந்த பாகிஸ்தான் தரப்பில் Lt. Gen. AAK Niazi-யும் Surrender Declaration-ல் கையெழுத்திடும் பிரபல புகைப்படத்தை நாமெல்லாம் ஒருதடவையாவது பத்திரிகைகளிலும் டிவியிலும் பார்த்திருப்போம். அதில் பின்னால் வெள்ளைச் சீருடையில் ஒரு தமிழரும் இருக்கிறாரென்பது சிலருக்கே தெரியும். போரின்போது வங்காளவிரிகுடாவில் பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த கமாண்டர் என். கிருஷ்ணன்  தான் அவர். பிறகு Admiral ஆகப் பதவியேற்றம் பெற்றவர். எங்கள் பார்வதிபுரத்தையடுத்த கிருஷ்ணன்கோவில்காரர்). எனக்கு தில்லியில் நண்பரானவர்.

அங்கிருக்கும் வயதான சமையல்காரர் ஹபீப்தான் எனது 'சின்ன வீடு'! நான் படிப்படியாகச் சொல்லிக்கொடுத்த தமிழ்நாட்டு சமையல் ரெசிப்பியை விரைவில் கற்றுக்கொண்டு என் வாய்க்கு ருசியாகச் சாம்பாரும் ரசமும் அவியலும் பொரியலும் சமைத்து அன்போடு பரிமாறுவார். அவை ஷாஜஹான் பங்களாவுக்கும் போகும். ஷாஜஹான் அசைவராக இருந்து சைவராக மாறியவர். ஹபீப் நாற்பதுகளில் டார்ஜிலிங்கில் ஓர் ஆங்கில பிரிகேடியரிடம் சமையல்காரராக வேலை பார்த்தவர். திரு ஷாஜஹானும் ஹபீபும் நான் ஒரு சைவனாகத் தொடர்ந்திருக்க அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வார்கள். திருமதி ஷாஜஹான் வீட்டிலிருந்து தினமும் காலையில் கறந்த பசுவின் பால் கொடுத்துவிடுவார். தில்லி ரீகலில் அப்போது ஓடிக்கொண்டிருந்த ராஜ் கபூரின் 'சத்யம் சிவம் சுந்தரம்' படத்தை ஷாஜஹான் தம்பதியர் ஐந்தாறு தரமாவது பார்த்திருப்பார்கள். அதன் பாடல்கள் கொண்ட L.P. ரிக்கார்டுகளை கொண்டுபோய்க் கொடுத்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர்கள் வீட்டில் காலையிலிருந்து மாலை வரை அந்த ஒரே ரிக்கார்டுதான் ஓடிக்கொண்டிருக்கும். எப்போதோ ஒருதடவை அஜ்மீர் பயணத்தின் போது எனக்குப் பலாப்பழம் பிடிக்கும் என்று சொன்னதை ஞாபகத்தில் வைத்திருந்து, பல மாதங்களுக்குப்பிறகு பலாப்பழ சீஸனில், நான் தில்லி திரும்பும் போது, அந்த அம்மையார் எனக்குத் தெரியாமல், அவர்கள் தோட்டத்தில் விளைந்த ஒரு பலாப்பழத்தை விமானத்தில் கொண்டுபோக வசதியாக பிடி வைத்து அழகாக பேக் பண்ணி கார் டிரைவரிடம் கொடுத்தனுப்பியதை என்னால் மறக்கமுடியாது. அந்த நல்ல மனிதர்கள் இப்போது எப்படி இருக்கிறார்களோ? முப்பது வருடங்களாக எனக்குத் தொடர்பேயில்லை. ஆனாலும் என்னை மறந்திருக்க மாட்டார்கள்.

நான் என் மனைவியுடன் போயிருந்த சமயம், எங்களுக்காகவே தனது மில்லுக்குத் சொந்தமான கப்பலில் Royal Bengal Tigers-ன் உறைவிடமான Sundar Bans எனப்படும் சுந்தரவனத்தைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். ஐந்து நாட்கள் கப்பலிலேயே கழித்தது சுகமான அனுபவம். உலகப்புகழ் பெற்ற Sundar Bans காட்டை முழுவதுமாக -இந்தியத்தரப்பிலிருந்தும் பங்களாதேஷ் பக்கத்திலிருந்தும் - பார்த்த வெகுசில இந்தியர்களுள் நானும் ஒருவன். இதைப்பற்றியும் விரிவாக எழுத ஆசை. ஆனால் கட்டுரை ஏற்கனவே பெரிதாக வளர்கிறது. உயிர்மை ஆசிரியர் என் மீது வைத்திருக்கும் மரியாதையை நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

திரு ஷாஜஹான் கல்கத்தாவுக்கு வந்தால், தன் பிள்ளைப்பிராயத்தை நினைவு கூர்வார். தனது பத்தாவது வயதுவரை வாழ்ந்துவந்த கல்கத்தாவை விட்டு பாகிஸ்தான் பிரிவினையின்போது டாக்கா போனவர். தன் இளவயது நினைவுகளை இங்கேயே விட்டுப் போனவர். என்னிடமிருந்த பல கெட்ட பழக்கங்கள் இல்லாதவர். மாலை வேளைகளில் கல்கத்தா கிராண்ட் ஹோட்டலிலிருந்து Tram பிடித்து அவர் சிறுவயதில் வாழ்ந்த வீட்டையும் பழகிய தெருக்களையும், இளமைக்கால நண்பர்களையும் மனதில் இருத்தி சுற்றியுள்ள சந்தடி இரைச்சலில் இருந்து விடுபட்டு, பழைய ஞாபகங்களில் மூழ்கி மணிக்கணக்கில் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார். ஈரமான கண்களைத் துடைத்துக்கொண்டு 'மணி ஸாப், போகலாம்' என்பார். ஹோட்டல் திரும்பும் வரை காரில் இருவரும் அமைதி காப்போம். எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டதில்லையென்றாலும், அவர் அடி மனத்தின் வலியை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.

பலருக்கு பங்களாதேஷில் தமிழ் பேசும் பல தமிழ்க்குடும்பங்கள் வாழ்கின்றன என்கிற செய்தி தெரிந்திருக்காது. அவர்களைப் பார்க்கும் வரை எனக்கும் தெரியாது. இதைப்பற்றி விரிவாக ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். ஆனால் இதை உங்களுக்கும் சொல்லவேண்டும். இவர்கள் நாற்பதுகளில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன்பே நாகப்பட்டினம், கீழக்கரை, கிருஷ்ணாபுரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தங்கள் குலத்தொழிலான வாசனைத்திரவியம்/அத்தர் வாங்கி விற்க அப்போதைய கிழக்கு வங்காளத்துக்குப் போனவர்கள். அனைவருமே இஸ்லாமிய மதத்தைச்சார்ந்தவர்கள். அவர்களைக் கேட்காமலேயே இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து நாடு துண்டாடப்பட்டது. அவர்களுக்குத் தெரியாமலே அவர்கள் வேற்று நாட்டவர் ஆக்கப்பட்டனர். தங்கள் சொந்தமண்ணுக்குத் திரும்ப, உற்றார் உறவினர்களைப் பார்க்க அவர்களுக்கு பாஸ்போர்ட்/விஸா தேவைப்பட்டது. அதிகப் படிப்பறிவில்லாதவர்கள். தங்கள் விதியை நொந்து கொண்டு அறுபது வருடங்களுக்கும் மேலாகத் தாய்நாட்டின் தொடர்பேயில்லாமல் வாழ்ந்துவருபவர்கள். (இப்போதிருக்கும் டி.வி. ஊடக விஸ்தரிப்பு எழுபதுகளில் வந்திருந்தால், தமிழ்ச்சானல் ஒன்றில் அரசியோ உரசியோ பார்த்துக்கொண்டு கண்ணீர் மல்க  மூக்கைச் சிந்திக்கொண்டிருப்பார்கள்.) நான் அங்கிருக்கும்போது தில்லி ஆபீசுக்கு ஏதாவது தகவல் அனுப்பவேண்டுமென்றால், லண்டனுக்குச் சொல்லி, அவர்கள் தில்லியைத் தொடர்பு கொள்ளுவார்கள். நான் பங்களாதேஷ் போய் வந்துகொண்டிருந்த ஏழெட்டு வருடங்களில் அங்கே போனவுடன் ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கும் என் ஆபீசுக்கும் ட்ரங்க் கால் புக் பண்ணுவேன். ஒரு தடவைகூட கனெக்ஷன் கிடைத்து பேசியதில்லை. மூன்றுநாள் காத்திருந்து அவர்களே கான்ஸல் செய்துவிடுவார்கள். தில்லியிலிருக்கும் பங்களாதேஷ் ஹை கமிஷனருடன் நல்ல பரிச்சயமிருந்ததால், நான் போகும்போதெல்லாம் அவர்கள் Foreign Office-க்கு அனுப்ப வேண்டிய அவசரக்கடிதங்களை என்னிடம் கொடுத்தனுப்புவார்கள். இல்லையென்றால் Diplomatic Bag போய்ச்சேர பத்துநாட்கள் ஆகும். நான் அங்கிருக்கும் போது இந்தியாவில் கிரிக்கெட் டெஸ்ட் மேச் நடந்தால், ஷாஜஹானிடம் கடன் வாங்கிய டிரான்ஸிஸ்டர் ரேடியோ, எல்லைக்கு அப்பாலிருந்து வரும் கல்கத்தா ஆகாசவாணியின் மீடியம் வேவ் அலைகளை எட்டிப்பிடிக்க முடியாமல் கரகர வென்று அரற்றிக்கொண்டிருக்கும்.

எந்த வெளிநாட்டுக்குப் போனாலும் அங்குள்ள காய்கறிச்சந்தைக்குப் போகாமலிருக்க மாட்டேன். சந்தையில் அந்த ஊர் பச்சைக்காய்கறிகள் குவியலாக அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்க மனதுக்கு நிறைவாகவிருக்கும். எனக்கு சமையலில் உள்ள ஆர்வமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருநாள் குல்னா மார்க்கெட்டில் போய்க்கொண்டிருந்த போது, ‘எலே செய்யிது. உன்னை வாப்பா கூப்பிடறார்டா’ என்று தமிழ் தேனாகக் காதில் பாய்ந்தது. பக்கத்தில் போய் விசாரித்தேன். நான் தமிழில் பேசினது அவர்களுக்கெல்லாம் ஆச்சரியம். பக்கத்துக் கடைகளிலிருந்து வந்து என்னை மொய்த்துக்கொண்டார்கள். அவர்கள் கடைகளில் சின்னதும் பெரியதுமான பாட்டில்களில் பச்சை மஞ்சள் சிவப்பு நீலம் என்று வர்ணவர்ணமாக வாசனைத் திரவியங்கள் அத்தர் வகைகள். தெருவே மணத்தது. ஐந்து நிமிடத்திற்குள் ஐந்துபேர் கையில் டீ கிளாசுடன் வந்து குடிக்கும்படி வற்புறுத்தினார்கள். குல்னாவில் மட்டுமல்ல, டாக்கா, மைமென்சிங், சிட்டகாங், ஸில்ஹட், ராஜ்ஷாஹி  போன்ற இடங்களிலும் தலா பத்து பதினைந்து தமிழ்க் குடும்பங்கள் வாழ்வதாகவும் சொன்னார்கள். இவர்களில் மூத்த தலைமுறையினருக்கு மட்டும் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும். இளையவர்கள் நல்ல பேச்சுத்தமிழைத் தவறவிடாமல் காப்பாற்றிவருகிறார்கள். இவர்களைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டின்/இந்தியாவின் காலக்கடிகாரம் 1944-ம் ஆண்டிலேயே நின்றுவிட்டிருந்தது. அவர்களுக்கு அசோகா பாக்கு தெரியும் ஆனால் ரஷிக் லால்/ஏஆர்ஆர் சீவல் தெரியாது. த.பி. சொக்கலால் ராம்சேட் பீடி தெரியும், கணேஷ் பீடி தெரியாது. தங்கபஸ்பம் புகையிலை தெரியும். பான்பராக் தெரியாது. NO.  ஸ்டேன்ஸ் காப்பி தெரியும், நரஸூஸ்/லியோ ஊஹூம். காந்தி நேருவைத் தெரியும் - பங்களாதேஷ் போரினால் இந்திரா காந்தியையும் தெரியும்  லால்பகதூர் மொரார்ஜியை சுத்தமாகத் தெரியாது. காமராஜர் அண்ணா பெயர்களைக் கேள்விப்பட்டதேயில்லை. யாரிடமும் பாஸ்போர்ட் கிடையாது. பங்களா தேஷைத் தவிர வேறெதுவும் தெரியாது. தங்களுக்குள்ளேயே கல்யாணப் பரிவர்த்தனையை வைத்துக்கொண்டார்கள். டாக்கா வாழ் ஜலாலுதீன் மகன் பீர் முகம்மதுவுக்கும் சிட்டகாங் முகம்மதுஅலி மகள் ஜமீலாவுக்கும் நிக்காஹ் நடைபெறும். இளைய தலைமுறையினருக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. நான் அங்கே தங்கியிருக்குமிடத்தைச் சொன்னதும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு வி.ஐ.பி. ஏரியா.

அடுத்த வெள்ளிக்கிழமை விடுமுறை நாளானதால், ஆறேழு நண்பர்கள் என்னைப் பார்க்க தயங்கித்தயங்கி வந்தார்கள். Mill Complex-ல் செக்யூரிட்டி அதிகம். அவர்கள் வீட்டுக்கு அழைத்து எனக்காக சைவ உணவு தயாரித்துப் பரி மாறுவார்கள். கெஸ்ட் ஹௌஸில் ஹபீப் சமைத்த சாம்பார் ரசம் பொரியலையும் ரசித்துச் சாப்பிடுவார்கள். அவர்கள் கூச்சம் மட்டும் மாறவேயில்லை.  ஒவ்வொருமுறை தில்லி போகும்போதும்  ஒரு அத்தர்க்கடை வைக்குமளவிற்கு என்னிடம் சென்ட் பாட்டில்கள் சேர்ந்துவிடும். இது ஈஸ்தான்புல்லிலிருந்து வந்தது, இது கெய்ரோவிலிருந்து வந்தது என்று ஆசையோடு கொண்டு வருவார்கள். சிட்டகாங்,  டாக்கா போகும்போது என் தங்குமிடத்தைத் தெரிந்துகொண்டு அங்குள்ள தமிழர்களுக்குச் செய்தி சொல்லிவிடுவார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததில், தமிழ்நாட்டைப் பற்றியோ இந்தியாவைப்பற்றியோ எந்த விவரங்களும் தெரியாதென்பது புரிந்தது. இது என் மனதுக்குச் சங்கடமாக இருந்தது.

டாக்காவில் ஒருமுறை சில வயதானவர்கள் பார்க்க வந்தார்கள். பேச்சுக்கிடையில் திடீரென்று, ‘இப்பொ எம்.கே. டி. பாகவதர்,  டி.ஆர். ராஜகுமாரி, என். எஸ். கிருஷ்ணன், மதுரம் எல்லாம் நடிச்சிட்டு இருக்காகளா?’ என்று கேட்டார் ஒரு முதியவர்.  கேள்வி கேட்ட வருடம் 1974. எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.பாகவதர்-பி.யூ. சின்னப்பாவுக்குப்பிறகு சிவாஜி-எம்.ஜி.ஆர். என இரு மாபெரும் சகாப்தங்கள். பிறகு கமல்-ரஜினி ஆளுமை. இதை எப்படிச்சொல்லி இவர்களுக்குப் புரியவைப்பது? இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு 1944க்குப்பிறகு ஸ்தம்பித்துவிட்டது. நான் அந்தப் பெரியவரிடம் கேட்டேன்: 'ஐயா, நீங்க இந்த ஊருக்கு வரும்போது உங்களுக்கு என்ன வயசு?' - 'என்ன, ஒரு முப்பது முப்பத்தைந்து இருக்கும்.' 'இப்போ உங்களுக்கு என்ன வயசாகுது?' - 'இப்பொ எழுபதைத் தாண்டியாச்சு.' நான் சொன்னேன்: 'இந்த வயசு வித்தியாசம் அவங்களுக்கும் உண்டுமில்லியா? தமிழ் நாட்டிலே உங்களுக்குத் தெரியாம என்னெல்லாமோ நடந்துபோச்சு.' இது என்னை வெகுவாக பாதித்தது. 1974-ல் சிவாஜி, எம்.ஜி.ஆர் பெயர்களைக்கூடக் கேள்விப்படாத தமிழர்கள்.  தில்லி போனதும் என் மனைவியிடம் விவரங்களைச்சொல்லி,        'இனிமேல் வீட்டுக்கு வரும் விகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளைப் பழையபேப்பர்காரனுக்குப் போடாதே. தனியாகக் கட்டிவை. அடுத்த தடவை போகும்போது அவர்களுக்கு எடுத்துச்செல்கிறேன். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறதென்பதை ஓரளவு படித்துப் புரிந்துகொள்வார்கள்' என்று சொன்னேன். இப்படி நான் கொண்டுபோய்க் கொடுத்த தமிழ்ப் பத்திரிகைகள், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பிறகு, வந்திருக்கும் தமிழ்க் குடும்பங்களுக்குப் படித்துக்காட்டப்படும். டச்சில்லாததால், எழுத்துக்கூட்டிப் படிப்பார்கள். அங்கிருக்கும் நாட்களில் மைக்கில் நானே படித்துச் சொல்வேன். ஒரு ஊரில் படித்தபிறகு, புத்தகங்கள் மறுபடியும் கவனமாகக் கட்டப்பட்டு டாக்கா, மைமென்சிங் என்று ஊரூராகப்பிரயாணம் மேற்கொண்டது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிலிருந்து அவர்கள் விரும்பிக்கேட்டவை அசோகா பாக்கு, நேந்திரங்காய் வறுவல், தங்கபஸ்பம் புகையிலை போன்றவையே.

தமிழ் எழுத, படிக்கத் தெரியாத அங்கேயே பிறந்துவளர்ந்த இளம் தலைமுறையினருக்கு என்ன செய்யலாமென்று யோசித்தபோது எனக்கும் ஒரு ஐடியா பளிச்சிட்டது. தில்லி தமிழ்ப்பள்ளியிலிருந்து பத்துப் பிரதி தமிழ்ப் பாலபாடம் (அணில் ஆடு இலை ஈ உரல் ஊஞ்சல்) வாங்கிக்கொண்டுபோய் ஒவ்வொரு ஊரிலும் கொடுக்கச் செய்தேன். நல்லபலன் இருந்தது. சில வெள்ளிக்கிழமைகளில் நானும் போய்ச் சொல்லிக் கொடுத்தேன்.

பங்களாதேஷிலிருந்த ஒரே ஒரு மலையாளியையும் என்னால் பார்க்க முடிந்தது. கோட்டையத்துக்காரரான அப்துல் கரீம் 1945-ல் பிரிட்டீஷ் இந்தியாவில் இம்பீரியல் பாங்கில் வேலை பார்த்துவந்தவர்.  பதவியுயர்வில் டாக்கா கிளைக்கு மாற்றப்பட்டார். சுதந்திரத்துக் குப்பிறகு இம்பீரியல் பாங்க் இந்தியாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவாயிற்று. அங்கே Bank of Pakistan ஆகி, 1971க்குப் பிறகு Bangladesh Bank ஆனது. நமது ரிஸர்வ் பாங்க் ஆப் இந்தியா மாதிரி இது அவர்களது Central Bank. திருமணமாகாத இவர் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, குல்னா கிளைக்கு Deputy Governor ஆகியிருந்தார். பரம சாது. 'நான் மட்டுமே இங்கு இருக்கும் ஒரே ஒரு மலையாள பங்களாதேசி' என்று பெருமையாகச் சொல்வார். இவர் கையெழுத்தில்லாமல் ஏற்றுமதி ஆவணங்களை இந்தியா அனுப்பமுடியாது. ஓரிருமுறை அவசரமாக வெள்ளிக்கிழமை இந்தியா திரும்ப நேர்ந்ததால், ரப்பர் ஸ்டாம்ப், முத்திரை சகிதம் கெஸ்ட் ஹௌஸ் வந்து எனது கமிஷனுக்கான Foreign Exchange Banker's Draft தயார் செய்து கொடுத்தார். அவருக்கு நான் கொடுத்ததெல்லாம் அவர் விரும்பிக் கேட்கும் ‘ஏத்தங்ஙாய் உப்பேரி’ மட்டுமே.

அடிக்கடி பங்களாதேஷ் போய் வந்ததால், அங்கேயிருந்த இந்தியன் ஹைக் கமிஷனர்களிடம் நல்ல பரிச்சயம் உண்டு. திரு KPS மேனன் Jr., முச்குந்த்தூபே போன்றவர்கள் நல்ல நண்பர்கள். இருவரும் பிறகு பதவியேற்றம் பெற்று இந்தியாவின் வெளியுறவுச்செயலர்களாக உயர்ந்தவர்கள். (ஒரு ருசிகரமான கொசுறு: ஒரே குடும்பத்தில் தாத்தா, பிள்ளை, பேரன் மூவரும் இந்தியாவின் வெளியுறவுச்செயலர்கள் - Mr. KPS Menon, ICS, KPS Menon Jr., IFS and Mr. Shiv Shankar Menon IFS, , தற்போதைய வெ.உ. செயலர்) திருமதி மேனனுக்கு தில்லியிலிருந்து புளி, சாம்பார்ப்பொடி எடுத்துப்போவது நான்தான். டாக்காவிலிருந்தால் ஞாயிற்றுக்கிழமைகள் மாலையில் எனக்குத் தூதரகத்தில்தான் டின்னர். ப.தேஷில் இரண்டே இரண்டு அம்பாஸிடர் கார்கள்தான் உண்டு. அவை நம் தூதரகத்துக்குச் சொந்தம். அவைதான் என்னைக் கூட்டிப்போக வரும்.

ஒருதடவை திரு KPS மேனனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தத் தமிழர்களுக்கு நம் அரசுத்தரப்பில் ஏதாவது உதவி செய்யமுடியுமா என்று கேட்டேன். அதற்கு சிரித்துக்கொண்டே, 'உன் திருவாயை மூடிக்கொண்டு பேசாமலிரு. ஏற்கனவே பீஹாரி முஸ்லீம்கள், அகதிகள் பிரச்சினையில் மூழ்கியிருக்கிறோம். இது தெரிந்தால், ‘அவர்கள் தமிழ் வம்சாவளியினர். உங்கள்நாட்டு அகதிகள். அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என்று தங்கள் ஜனத்தொகையைக் குறைக்க இன்னொரு வழி பார்ப்பார்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்காதே!’ என்று என் வாயை அடைத்துவிட்டார்.

நான் கடைசியாக பங்களாதேஷ் போனது முப்பது வருடங்களுக்கு முன்னால். அதன்பின் தொடர்பேயில்லை. இப்போது அங்குள்ள நம் தமிழர்கள் எப்படியிருக்கிறார்களோவென்று பலசமயம் நினைத்துப் பார்த்ததுண்டு. இப்போதுள்ள ஊடகங்களின் வளர்ச்சியில், தமிழ் நாட்டுச்சானல்களில் பிழியப்  பிழிய அழ வைக்கும் தமிழ் சீரியல்கள் பார்த்து மூக்கைச் சிந்துகிறார்களா, மானாட மயிலாடுகிறார்களா, தொகுப்பாளினிகளின் தீந் தமிழைக் கற்றுக்கொண்டுவிட்டார்களா, இளைஞர்கள் திருட்டு DVD-யில் குருவியும் பில்லாவும் பார்த்து மகிழ்கிறார்களா, தசாவதாரம் DVD மோத்தி ஜீல் மார்க்கெட்டுக்கு வந்தாச்சா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் . . . ப்ளீஸ்! 

*

மில்ஸ் சம்பந்தமாக ஏதாவது புகைப்படங்கள் கிடைத்தால், உயிர்மைக்குக் கட்டுரையுடன் அனுப்பலாமே என்று ஆராய்ந்தேன். கிடைத்த செய்தி என்னை மிகவும் பாதிக்கிறது. அரசின் கவன மின்மை, நிதிப்  பற்றாக்குறை, கடன்கள், பழைய இயந்திரங்கள் இவை காரணமாக 1958-ல் தொடங்கிய குல்னா நியூஸ்பிரின்ட் மில்லை நவம்பர் 30, 2002-ல்  மூடிவிட்டார்களாம். 2,000 தொழிலாளிகளை ஒரேநாளில் வேலையிழக்கச் செய்தார்கள். அதனால் என்ன, சில வருடங்களில் அரசு இந்தப் பொன்னான பூமியைத் தனியாருக்கு விற்று அவர்கள் அங்கே Malls-ம் Multiplexes-ம் Holiday Resorts-ம் கட்டி லாபம் சம்பாதிப்பார்கள். பங்களாதேஷில் எங்கோ வாழ்ந்து வரும் என் நண்பர் திரு. ஷாஜஹானுக்கு வாழ்க்கையிலேயே சோகமான சம்பவம் இதுவாகத்தானிருக்கும். இருபத்தைந்து வருடங்களாக இதை வளர்ப்பதற்காகவே தன் வாழ்நாளைச் செலவிட்டவர். அவருக்கு இது மாதச் சம்பளம் வாங்கும் வேலையல்ல. ஒரு தவமாகச்செய்து வந்தார். தன்னலமில்லாது உழைத்தவர். என் ஆத்மார்த்த சினேகிதர். அவருடன் இந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள மனம் ஏங்குகிறது. தன் சாம்ராஜ்யத்தை இழந்த பழைய ஷாஜஹான் போல இவரும் ஒரு சோக மான மனிதராக குல்னாவிலோ டாக்காவிலோ வாழ்ந்து கொண்டிருப்பார். என்னை  மறந்திருக்கமாட்டார். அவருடன் உடனே பேசவேண்டும் போலிருக்கிறது. எப்படி என்றுதான் தெரியவில்லை. வயதானவர்களுக்கே உரிய ஆற்றாமை.

bharatimani90@gmail.com

செம்மீனும் தேசீய விருதுகளும்!
பாரதி மணி

என் சிறுவயதில் என் தந்தை திரு வனந்தபுரத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் சாலைப்பள்ளி யில் படித்தது தமிழ். மலையாளத்தி லிருக்கும் சினிமாபோஸ்டரைப் படித்தும், சினிமா நோட்டீசில் கதைச்சுருக்கம் (கதா ஸாரம்) படித்தும் மலையாளம் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக்கொண் டேன். தகழியின் சுருக்கப்படாத ‘ரெண்டிடங்கழி’யை ஒரேமூச்சில் முடித்திருக்கிறேன். மேலோட்ட மாகவல்ல; அந்த மொழியின் இலக் கிய நுட்பங்களை ரசித்துப் படிப் பேன். இப்போதும் சிறந்த மலை யாளப்படங்களைத் தேடித்தேடிப் போய் விரும்பிப் பார்ப்பதுண்டு. வீட்டிலிருக்கும்போது, டி.வி.யில் தமிழ் ‘சூரியனை’ விட, ஏஷியா நெட், கைரளி, சூர்யா சானல்கள் தான் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு, ஊருக்கு நூறு பேர் என்ற ஒரு தமிழ்ப்படத்தை இயக்கிய தமிழர் திரு ஙி. லெனின் என்பவ ருக்கு இந்தியாவின் சிறந்த இயக்கு நருக்கான தேசியவிருது கிடைத் ததை, எனக்கு முதலில் அறிவித்தது மலையாள ஏஷியாநெட்தான்! தமிழ்ச்சானல்களுக்கு இது ஒரு செய்தியாகவே படவில்லை. அன்று பாங்காக்கில் ஒரு நாய்க்கும் பூனைக்கும் நடந்த திருமணத்தை படத்துடன் செய்தியாகக்   காட்டி னார்கள்!
ஐம்பதுகளில் தில்லி போனதும், சிறந்த உலகசினிமாக்களைப் பார்க் கும் வாய்ப்பு அதிகரித்தது. உற் சாகத்துடன் செயல்பட்ட தில்லி பிலிம் சொஸைட்டி உலக சினி மாவை எனக்கு அறிமுகப்படுத் தியது. சர்வதேசத் திரைப்படவிழா நடக்கும்போது, அதிகாலையிலேயே க்யூவில் நின்று சீஸன் டிக்கெட் வாங்கி, தினசரி நான்கு படங் களாக, பதினைந்து நாட்களில் 60 படங்கள் பார்த்திருப்பேன். அப் போதிருந்த சொற்ப சம்பளம் முழு வதும் இதற்குத்தான். (தணிக்கை செய்யப்படாத அயல்நாட்டுப் படங்களைத் திரையிடுவதால், படுக்கை/குளியல் காட்சிகள் அதிக மிருப்பதாக ‘முன்தகவல்’ வந்த படங்களுக்குக் கூட்டம் அலை மோதும். படம் முடிந்து வெளியே வரும்போது, அடுத்த காட்சிக்குக் காத்திருக்கும் மகாஜனங்கள் நாக் கைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ‘குச் திக்காயா?’ ஏதாவது காட்டி னானா? என்று ஆவலுடன் கேட் பார்கள்! சில படங்களில், இன்டர் வலுக்கு முன்பாகவே, அவர்கள் எதிர்பார்த்த காட்சிகள் வராததால், சமீபத்தில் கிரிக்கெட் வீரர் (ஆமா, அதென்ன வீரர்? எந்தப் போருக் குப் போனார்?) ஹர்பஜன்சிங் ஆன்ட்ரூ ஸைமன்ஸிடம் தனியாகச் சொல்லி மாட்டிக்கொண்ட பஞ் சாபி கெட்டவார்த்தையில் ஆரம் பித்து திட்டிக்கொண்டே கூட்ட மாக வெளியேறி விடுவார்கள். பிரெஞ்ச் படங்களுக்கு ‘மவுசு’ அதி கம். ஏதோ ஒருவருடம் ஷிஷ்வீனீனீவீஸீரீ றிஷீஷீறீ என்ற பிரெஞ்ச் படம் கன் னாட் ப்ளேஸ் ஓடியனில் திரை யிடப்பட்டது. அதற்கு ஓடியனி லிருந்து  ரிவோலி வரை கூட்டம். படத்தின் பெயர்தான் அதற்குக் காரணம். முன்பே வாங்கிய சீஸன் டிக்கெட்டுடன் நானும் என் நாடக  நண்பர் வி.ரி. ராவும் போயிருந் தோம். ஒரு பெரிய கூட்டம் எங் களைச் சூழ்ந்துகொண்டு, லண்டன் ஷிஷீtலீமீதீஹ்'s-ல் ஏலம் போடுவதைப் போல், பத்துரூபாய் டிக்கெட்டுக் குப் படிப்படியாக ஏறி ரூ. 350 வரை வந்தார்கள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு, ‘அந்த’ படம் பார்க்கா மல் எங்கள் டிக்கெட்டுகளை விற்று விட்டோம். இவ்வளவுக்கும் என்  நண்பர் ஒரு ‘சபலானந்தா!’ மற்றப் படங்கள் இலவசமாகப் பார்த்த திருப்தி எனக்கு. நண்பர்  ராவோ, பன்னிரண்டு ரூபாய் வீதம், ரூ.350க்கு எத்தனை கிக்ஷீனீஹ் ஙீஙீஙீ ஸிuனீ பாட்டில்கள் வாங்கலாமென்று கணக்கு போட்டுக்கொண்டிருந் தார். அவர் ஒரு ‘ரம்’ பிரியர்!)
பிறகு இதற்கும் நண்பர் திரு. சி.லி. காந்தன் மூலமாக ஒரு வழி கண்டு பிடித்தேன். திரைப்படவிழாக்களை நடத்துவது தகவல் ஒலிபரப்பு இலாகாவின் கீழ் வரும் டைரக்ட ரேட் ஆப் பிலிம் ஃபெஸ்டிவல். அதில் இயக்குநராக இருப்பவர் பெரும்பாலும் அந்த மந்திரிக்கு வேண்டியவராக இருப்பார். பெரும் பாலும் அரசியல் நியமனமாகவே இருக்கும். உண்மையில் வேலை பார்ப்பவர் அவர் கீழிருக்கும் டெபுடி டைரக்டர் தான். அவரை சினேகிதராக்கிக்கொள்வேன். தமி ழராக இருந்தால் என் நாடகங் களைப் பார்க்க அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் க்ஷிமிறி பாஸ், அவர் ஜெயகாந்தன் விசிறியென் றால், மதுரை மீனாட்சி புத்தகால யத்திலிருந்து அவரது சிறுகதைத் தொகுப்புகள், இல்லையென்றால் வீட்டில் ஓரிரு ‘பார்ட்டிகள்’ . . . நல்ல நண்பராகிவிடுவார்! அப்படி ஐம்பதுகளிலிருந்த டெபுடி டைரக் டர் மாத்தூரிலிருந்து இப்போதிருக் கும் திரு. சந்தானம் வரை எல்லோ ரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள்! விழா நடக்கும்போது மட்டும் நண்பனாக இல்லாமல் தீபாவளி, புதுவருடம், அவர் பிறந்தநாள் போன்ற நாட்களில் சிறு பரிசுடன் பார்க்கப் போவேன். அந்த வருடம் எனக்கு ஒரு டெலிகேட் பாஸ் நிச்ச யம்! எப்படியோ நல்ல படங்கள் பார்க்கவேண்டும்! இதில் எனக்கு முன்னோடியாக இருந்தவர் அப் போது தில்லியிலிருந்த என் நண்பர் திரு. சி.லி. காந்தன். அவருக்கு அப் போதிருந்த அத்தனை தமிழ்/ஹிந்தி நடிக நடிகைகளும் அத்யந்த நண் பர்கள்.
இந்த டெபுடி டைரக்டர்கள் மூலம் வருடாவருடம் திரைப்படத் தேர்வுக்கு வரும் ஜூரிகளுடன் பழ கும் வாய்ப்பு ஏற்பட்டது. குருதத், பாஸ§ சாட்டர்ஜி, விஜயா மேத்தா போன்ற பல மேதைகளின் நட்பு கிடைத்தது. ஒரு ஞாயிறன்று அதி காலையில் குருதத்துடன் ஓக்லா அருகே யமுனைநதியில் மீன் பிடிக் கப்போனது நினைவுக்கு வருகிறது.   
தேர்வுக் கமிட்டி ஜூரிகளைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல் லியே ஆகவேண்டும். ஒருசிலர் சினி மாவையே சுவாசிப்பவர்கள். அவர் களிடம் பேசும்போது, சினிமாவைப் பற்றி நமக்குத்தெரிந்தது கைம்மண் ணளவே என்பதை நமக்கு உணர்த் திவிடுவார்கள். ஜிலீமீஹ் ஷ்வீறீறீ க்ஷீமீமீறீ ஷீut ஸீணீனீமீs ணீயீtமீக்ஷீ ஸீணீனீமீs ணீயீtமீக்ஷீ ஸீணீனீமீs! கேட்பதற்கு மலைப்பாக இருக்கும். இன்னும் சிலர் எந்த இந்திய சினிமாவைப் பார்த்தாலும், அதற்கு நதிமூலம் ரிஷி மூலமாய், எந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதற்கு லிஸ்டே வைத்திருப்பார்கள். ஹாலி வுட் படங்களை திக்ஷீணீனீமீ தீஹ் யீக்ஷீணீனீமீ ஆக அலசுவார்கள். நல்ல படங்கள் நிறைய பார்த்திருந்தாலும், எந்த இயக்குநர் பெயரும் சட்டென்று ஞாபகத்துக்கு வராத நான் - இப்போதும் அப்படித்தான் - அவர்கள் பேசுவதை வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப் பேன்.    பிரபாகர் மாச்வே போன்றவர்களுக்கு எல்லாப் படமும் ஒன்றுதான். அவர் களுக்கு ‘இன்றைய மதிய உணவில் சிக்கன் உண்டா? தினப்படி பேட்டா தரும் ஞிதிதி சிப்பந்தி பல்பீர்சிங் இன்னும் ஏன் வரவில்லை? இன்று மதி யம் மூன்று மணிக்கு வீட்டுக் குப் போகவேண்டும், பம்பாயி லிருந்து மகளும் குழந்தை களும் வந்திருக்கிறார்கள்’ என்பது போன்ற கவலைகள் மட்டுமே. படங்கள் ‘பார்க்கும்’ போது, குறட்டையலி சத்த மாகக் கேட்கும். எங்கே கையெழுத்து  போடச்சொன் னாலும், போட்டுவிடுவார்கள். அவர்கள் ‘தேர்வு’ மற்ற ஜூரி நண்பர்களின் கருத்தையட் டியே இருக்கும். இவர்களைப் போன்றவர்கள் உள்ளே நுழை வதால்தான் நல்லபடங்கள் அடிபடுகின்றன. சிபாரிசுக் குப்பை கள் கோபுரமேறுகின்றன. சினிமா மொழியின் ஆனா ஆவன்னாகூடத் தெரியாத இவர்கள், மத்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்பில் தலைவர்களாக இருந்து தொலைப் பார்கள். அதுவே இவர்களது ஒரே தகுதி!
ஹிந்திப்பட குணச்சித்திர நடிக ரொருவர் ஒருமுறை தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார். அவர் பார்த்த படங்கள் நாலோ ஐந்தோ தான். தில்லியில் இருந்தவரை, அவர் தன் அசோகா ஹோட்டல் அறையைவிட்டு வெளியே வருவது அரிதாக இருந்தது. ஹோட்டல் லிப்டில் ‘அறிமுகமான’ புதுப் பெண்துணையோடு, காலையி லேயே ஸ்காச் பாட்டிலைத்திறந்து, இரவுவரை தொடர்ந்து, பாட்டிலை மூடமறந்து தூங்கிவிடுவார்! தேர்வு செய்யப்பட்ட விருதுப்பட்டியலில் அவர் கையெழுத்து வாங்க அவர் அறைக்குப்போக வேண்டியிருந்தது! நல்ல வேளை, விருதுகள் அறிவிக் கும் பத்திரிகையாளர் கூட்டத்துக்கு ஆஜராகி பெருமை சேர்த்தார்! வெளி ஊர்களிலிருந்து தேர்வுக்காக தில்லி வரும் ஜூரிகளுக்கு, தலை நகரில் மற்ற அலுவல்கள் நிறையவே இருந்தன. அரசாங்கச் செலவில் அவற்றைச் செவ்வனே செய்ய முயன்றார்கள். ஒருமுறை ஜூரியாக இருந்த இயக்குநர் திரு. நி.க்ஷி. அய்யர் தனது அடுத்த படத்திற்குத் தேவை யான ஒலி ஒளிக் கருவிகளின் லிஸ் டோடு, தினமும் சாந்தினிசௌக் போய்வருவார். இவர் ஓவியர் வி.தி.ஹ§ஸேன் போல கால்களுக் குச் செருப்பு அணிவதேயில்லை. தில்லிக் குளிரில், செருப்பில்லாமல் வளையவருவார். ஜூரிகள் அனை வருமே இப்படியல்ல. நேமிசந்த் ஜெயின், கோமல் சுவாமிநாதன், தியடோர்   பாஸ்கரன் போன்றவர் கள் இதற்கு விதிவிலக்கு.
வருடாந்திர விருதுக்குப்போகும் தமிழ் சினிமாக்களைப்பற்றி, தில்லிச் சூழலில் ஊறியவன் என்ற முறை யில் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். விவாதத்தில் விழ வேண்டாமென்றுதான் நினைத் தேன். ஆனால் சொல்லிவிடுவது இங்குள்ள இளம் இயக்குநர்களுக்கு உதவியாக இருக்குமென்று இப் போது நினைக்கிறேன். காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என் பதைப்போல எல்லா இயக்குநர் களுக்கும் தன் படம் உசத்தி தான். அதில் தவறு காண முடியாது. தில்லி போனால் தேர்வுக்கு வந்திருக்கிற 184 படங்களில் உங்கள் படமும் ஒன்று. அவ்வளவுதான். சென்னையில் ‘ராம்’ படத் திரையிடலின் போது இயக்கு நர் அமீர், தனக்குரிய மரி யாதை தில்லியில் கிடைக்க வில்லையென்று தேர்வுக் கமிட்டியைச் சாடினார். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது யூனிட்டில், ஏன் தமிழ் நாட்டிலும் நாம் ராஜாவாக இருக்கலாம். ஆனால் ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீணீtமீ ஷீயீ திவீறீனீ திமீstவீஸ்ணீறீ கீழ்மட்ட சிப்பந்தி திரு. அனில் பாட்டியாவுக்கு, அமீர், பாரதிராஜா, அகத்தி யன், பாக்கியராஜ், லெனின் எல்லோருமே ‘மதராசி’தான். உங்களைப்போல் இன்னும் 183 பேருக்கு அவர் பதில் சொல்லவேண்டும். இங்கு கிடைக்கும் ஒரு பரந்த அடையாளம்/கண்டுணர்வு தில்லியில் சாத்தியமில்லை. ஒரு தடவை சிவாஜி கணேசனுடன் தில்லி அசோகா ஹோட்டல் லிப் டில் உள்ளே நுழைந்ததும், ‘கண்டுக் கவே மாட்டேங்கிறானே!’ என்று குறைபட்டார். ‘சார், சத்தியமா நீங்க யாருன்னு அவனுக்குத் தெரியாது!’ என்று பதிலளித்தேன். கூட இருந்த அவர் தம்பி க்ஷி.சி. ஷண் முகம் சிரித்தார். அடுத்தமாடியில், ஹிந்திநடிகர் பெயின்ட்டல் உள்ளே நுழைந்தால், ‘ஆயியே ஸாப்’ என்று பல்லிளித்து வரவேற்பான். அவரை அவனுக்குத் தெரியும். சிவாஜி கணேசனுக்குத் தேசியவிருது கிடைக்கவில்லையென்ற குறை நமக்கெல்லாம் உண்டு. நாம் அவர் நடிப்பைப் பல படங்களில் பார்த் துப்பார்த்துப் பழகி, அவர் நடிகர் திலகம் என்று ஒத்துக்கொண்டவர் கள். ஒருமுறை சிவாஜி நடித்து விருதுக்குப்போன ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெங் காலி ஜூரி, படம் நடுவில் ‘கிtக்ஷீஷீநீவீஷீus! ரிஹ்ணீணீ ளிஸ்மீக்ஷீணீநீtவீஸீரீ பிணீவீ!’ என்று சொல்லிவிட்டு, மீதிப் படம் பார்க் காமல் வெளியேறியதையும் பார்த்தி ருக்கிறேன். அவருக்கு சிவாஜியின் மீது  தனிப்பட்ட வெறுப்பு இருக்க நியாயமில்லை. என் மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது, என்ன செய்ய? அவர்களுக்கு இவர் நடிப்பு மிகையாகப்படுகிறது! கீமீ ணீக்ஷீமீ தீணீsவீநீணீறீறீஹ் ஸ்மீக்ஷீஹ் றீஷீuபீ ஜீமீஷீஜீறீமீ! எல்லா சென்னைத் தியேட்டர்களிலும், பீts/ஞிளிலிஙிசீ உச்சத்தில் இருப்பதே ஒரு சான்று! நம் பார்வை வேறு அவர்கள் பார்வை வேறு. சிவாஜியை மேடை யில் வானளாவப் புகழ்ந்து பேசிய பிரபல வடஇந்திய நடிகர்கள்  தனிப்பட்ட முறையில் மாறான கருத்துக்கொண்டவர்கள். அது எனக்குத் தெரியும்.
எந்த பகுத்தறிவுவாதியாக இருந் தாலும், தன் படத்தைத் தேர்வுக்கு அனுப்பினால், அதிர்ஷ்டத்தை நம்பியேயாக வேண்டும். முக்கிய மாக மற்ற மாநிலங்களிலிருந்து வேறு நல்ல படங்கள் போகக்கூடா தென்று வேண்டிக்கொள்ளவேண் டும். பல வருடங்களில் மிகக்கடுமை யான போட்டி இருக்கும். இன்னும் சில சமயங்களில் யாருக்குக் கொடுப்பது என்று தேடுவார்கள். மஹேஷ் பட்டின் ஷிணீணீக்ஷீணீணீஸீs-ல் சிறந்த நடிகருக்காக அனுபம் கேர் பரி சீலனை செய்யப்பட்டபோது, வங் காளத்திலிருந்து கடும்போட்டியிருந் தது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அனுபம் கேர் தன் வயதுக்கு மீறிய பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டார் என்பதால் ஜூரி கள் அவருக்குப் பரிந்துரைத்தனர். எனது நண்பர் வி.ரி. ராவ், ‘வேறு போட்டியில்லாததால்தான் தப ரென்ன கதெ கன்னடப் படத்தில் நடித்ததற்காக சாருஹாஸனுக்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத் தது. அவர் படம் முழுக்க வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம்” என்று சொல்வார். சிவாஜிக்கு இத்தனை வருடங்கள் கொடுக்கத் தயங்கி யதைத் தன்னிடம் கொடுத்துவிட் டார்களேயென்ற சங்கோஜம் அவ ருக்கு நிச்சயம் இருந்திருக்கும். நான் கைந்து ஆண்டுகளுக்குமுன், ஜெய பாரதி இயக்கிய நண்பா . . . நண்பா படத்தில் வாகை சந்திரசேகருக்கு ஙிமீst ஷிuஜீஜீஷீக்ஷீtவீஸீரீ கிநீtஷீக்ஷீ விருது கிடைத் தது. அந்தப்படத்தில் நானும் ஒரு பாதிரி வேடத்தில் நடித்திருந்தேன். ஒரு றிஷீsவீtவீஸ்மீ க்ஷீஷீறீமீ. அந்தப்படத்தை விருதுக்கு அனுப்பும்போது, ஜெய பாரதி என்னிடமும் கிநீtஷீக்ஷீ's ஙிவீஷீபீணீtணீ கேட்டு பலதடவை வற்புறுத்தினார். விருது பரிசீலனைக்குத் தேவை யான யீஷீஷீtணீரீமீ-ம் நடிப்பும் எனக்கு அந்தப்படத்தில் இல்லையென்ப தால் கடைசிவரை நான் கொடுக்க வில்லை. என்னைப்பற்றி எனக்குத் தானே தெரியும். நண்பா . . . நண்பா வில் தனக்கு விருது கிடைக்க வில்லையென்ற குறை சார்லிக்கு இப்போதும் உண்டு. இந்த வருடம் பெரியார், ஒம்பது ரூபா நோட்டு படங்களில் அற்புதமாக நடித்த என் நண்பர் திரு. சத்யராஜ் இந்தத் தடவை சிறந்த நடிகர் விருது பெற வேண்டும். அதனால், மற்ற மாநிலங்களிலிருந்து கடுமையான போட்டி வரக்கூடாது என்று - அவர் நம்பாவிட்டாலும், நான் நம்பும் - கடவுளை இப்போதே வேண்டிக்கொள்ள ஆரம்பித்துவிட் டேன்.
என் மாமனார் க.நா.சு.வும் ஒரு தடவை திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் ஜூரியாக இருந்தார். அந்த வருடம்தான் வெங்கட் சாமி நாதன் எழுதி,  ஜான் ஆப்ரகாம் இயக்கிய அக்ரகாரத்தில் கழுதை சிறந்த தமிழ்ப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. மற்றப் படங் களைப்பற்றி அவர் கவலைப்படவே யில்லை. ஹிந்தியில் எந்தப்படம் தேர்வாயிற்று என்று என் குழந்தை கள் ஆர்வத்துடன் கேட்டதற்கு, படத்தின் பெயர் தெரியாமல் ‘ஏதோ ஒரு படம்’ என்றுதான் பதில் சொன்னார்.
சரி, இந்தக் கட்டுரைக்கான விஷயத்துக்கு வருவோம். 1965ம் வருஷத்துக்கான திரைப்படத் தேர்வுக்கமிட்டியில் பி.புல்லா ரெட்டி, அமீதா மாலிக், புத்ததேவ் தாஸ்குப்தா போன்றவர்கள் இருந் தார்கள். மொழி தெரியாத ஜூரி மெம்பர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அரசே ஆட்களை நியமிக் கும். தமிழுக்கும், மலையாளத்துக் கும் வருடாவருடம் நான் ஆஜராகி விடுவேன். எல்லாப் படங்களையும் பார்க்க வாய்ப்புக்கிட்டுமே. நடு நடுவே என் ஆபீசிலும் தலையைக் காட்டுவேன். அறுபதுகளில் ஷிவீக்ஷீவீ திஷீக்ஷீt கிuபீவீtஷீக்ஷீவீuனீ இருக்குமிடம் காடாக இருந்தது. மஹாதேவ் ரோடிலிருக்கும் சிறிய திவீறீனீs ஞிவீஸ்வீsவீஷீஸீ தியேட்டருக்குப் போனவுடன், ‘இன்று ஒரு மலையாளப்படம், பேரு செம்மீன். முதல் கலர் பட மாம். புல்லா ரெட்டி பக்கத்தில் நீ உட்காரு’ என்று இயக்குநர் ராவ் சொன்னார். டைட்டில் ஓடும் போதே கலரில் அலைகளும், பின் னணியும் பிரமிக்கவைத்தன. டைரக்டர் ராமு காரியாட் பெயர் புதிதாக இருந்தாலும், சங்கீதம் ஸலீல் சௌத்ரி, பின்னணி மன்னா டே, காமெரா மார்க்கஸ் பார்ட்லே, எடிட்டிங் ரிஷிகேஷ் முகர்ஜி யென்று பெரிய பெரிய பெயர் களாக இருந்தன. கலரில் நடிகர் களுக்கு ஈடாகக் கடலலைகளையும்  நடிக்க வைத்திருந்தார். அலைகளின் சீற்றம், கோபம், சிரிப்பு, முறுவல், முணுமுணுப்பு, நாணம், கெஞ்சல், கொஞ்சல், பிடிவாதம் எல்லாம் நாம் ஹாலிவுட் படம் பார்ப்பது போலிருந்தது. நல்ல நாவல்கள் எல்லாமே நல்ல படங்களாக உரு மாறுவதில்லை. ஆனால் தகழி எழு திய செம்மீன் ஒரு விதிவிலக்கு. அன்று முழுவதும் அந்தப்படம் என் மனதிலிருந்து வெளியேற மறுத்தது. எங்களுடன் ஐந்து ஜூரி கள் அந்தப் படத்தைப் பார்த்தனர். இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு படங்களைப் பார்த்து, பார்த்ததில் நல்ல படங் களை வடிகட்டி ஷார்ட் லிஸ்ட் செய்து சுமார் 20 படங்களாகச் சுருக்கி அவற்றை எல்லா ஜூரி களும் பார்த்து சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர் போன்ற பிரிவு களுக்குத் தங்கள் சிபாரிசை முன் வைக்கவேண்டும். ஒரு ஜூரி எல் லாப் படங்களையும் பார்க்க இய லாது. அதுவரை சிறந்த படத்துக் கான விருது பெரும்பாலும் வங்கப் படத்திற்கே போகும். அந்த வருட மும் ஒரு வங்கப்படத்திற்கே கொடுக்க பலமான ‘லாபி’ இருந் தது. இறுதி 20 படங்களில் செம்மீன் பெயர் இல்லை. எனக்கு ஒரே அதிர்ச்சி. புல்லா ரெட்டியிடம் முறையிட்டேன். அவரும் சொல் லிப் பார்த்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எனக்கு வருத்தமும் ஆத்திரமும். வேறு ‘ஏதோ’ வேலை செய்கிறதென்பது புரிந்தது. செம் மீன் என்ற நல்ல படத்தைப் பார்த் திருந்தேனேயழிய அப்போது ராமு காரியாட் கறுப்பா வெளுப்பா என்பதுகூடத் தெரி யாது. தென்னிந்தியாவிலிருந்து போன ஒரு சிறந்த படத்துக்குப் பரிந்து பேச யாருமில்லை. நான் அந்த வங்கப்படத்தையும் பார்த் திருந்தேன். அதைவிடச் செம்மீன் ஷிtக்ஷீமீமீts ணீலீமீணீபீ, பல படிகள் உயர்ந்தது. விழா டைரக்டரிடம் இதுபற்றிப் பேசினேன். அவரும் இதில் தலை யிட முடியாதென்று மறுத்துவிட் டார். எனக்கு ஒருவித தார்மீகக் கோபம். எந்தப்படம் ஜெயித்தால் நமக்கென்ன என்று இருக்க முடிய வில்லை. என் கோபம் செம்மீன் தென்னிந்தியாவிலிருந்து போன படம் என்பதனால் மட்டுமல்ல. ஒரு சிறந்த படத்திற்கு வாய்ப்பு நழுவுகிறதேயென்ற வருத்தம். எங்கள் குழுவிலிருந்த ஒரு பெங் காலி ஜூரி, ‘அரே! நீ ஒரு சோக்ரா (பொடிப்பயல்) சினிமாவைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? எந்தப் படத்திற்கு விருது கொடுக்கவேண் டுமென்று எங்களுக்குத்  தெரியும். வாயை மூடிக்கொண்டு சும்மா இரு’ என்று திட்டினார். அப்போது எனக்கு வயது 27. அன்றிரவு தூக் கம் வராமல் யோசித்தேன். மறு நாள் பகலுணவு நேரத்தில் அமீதா மாலிக்கிடம் போய் முறையிட் டேன். அவர் தில்லியில் பிரபல சினிமா விமர்சகர். ஆங்கிலப் பத்தி ரிகைகளில் உலக சினிமா பற்றி அடிக்கடி எழுதுபவர். சினிமாவை கரைத்துக் குடித்தவர். தில்லி பிலிம் சொஸைட்டியில் நானும் அந்த அம்மையாரும் நிர்வாகக்குழு அங்கத்தினர்கள். கமிட்டிக்கூட்டத் துக்கு வரும்போது அந்த மாதம் திரையிடப்படும் அயல்நாட்டுப் படங்களில், எந்தெந்தப் படங்களை நான் மிஸ் பண்ணக்கூடாதென்று   லிஸ்ட் தருவார். அவருக்கு ஓரளவு என்னைப்பற்றித் தெரியும். அவர் செம்மீனைப் பார்த்திருக்கவில்லை. ஆனால் எனது கணிப்பில் அவ ருக்கு நம்பிக்கையிருந்தது. என் நச் சரிப்பு தாங்காமல், ஸ்பெஷல் ஸ்கி ரீனிங் போடச்செய்து பார்த்தார். பிறகு அவரும் என் கட்சிக்கு மாறி விட்டார். அவரே தீவிரமாக வாதாடி, லிஸ்டில் செம்மீனையும் சேர்க்கச்செய்தார். அவருக்கும் ராமு காரியாட்டைத் தெரியாது. அதன்பிறகு என் வேலை சுலபமாகி விட்டது. மற்றத் தேர்வுக்  கமிட்டி உறுப்பினர்கள் ‘நல்ல படங்கள்’ லிஸ்டை என்னிடம் கேட்க ஆரம் பித்தார்கள். பம்பாயிலிருந்து வந்த ஜூரிகள், ‘நமக்கு வராத விருது எப்போதும் ஏன் கல்கத்தாவுக்கே போகவேண்டும், இந்தத் தடவை தென்னிந்தியாவுக்குத் தான் போகட்டுமே!’ என்று விட்டேத்தி யாக நினைக்கலானார்கள்.
ஆக, 1965ம் வருட சிறந்த திரைப் படத்திற்கான தேசியவிருது செம் மீன் என்ற மலையாளப் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்தியத் திரைப் பட வரலாற்றில் முதல் தடவை யாக, தங்கத்தாமரை விருது விந்திய மலைக்குத் தெற்கே பயணித்தது. ஏதோ நான் நடித்த படம் விருது பெற்றதைப்போல மகிழ்ச்சியடைந் தேன். இராமருக்கு அணில் உதவி யதைப்போல இதில் எனக்கும் ஒரு சிறுபங்கு உண்டுதானே?
விஞ்ஞான் பவனில் விருதுவிழா தொடங்குவதற்குமுன்னால் ஓர மாய் நின்றிருந்த என்னை இழுத் துப்போய் ‘இவர் தான் ராமு காரி யாட்’ என்று எனக்கு அவரை அறி முகம் செய்துவைத்தார் அமீதா மாலிக். கூடவே படத்தேர்வு நேரத் தில் நடந்தவற்றை சாங்கோபாங்க மாக ராமு காரியாட்டுக்கு விவரித் தார். கண்கள் நனைய ராமு, ‘வளரே நந்நி, வளரே நந்நி’யென்று என் கைகளை அவர் கண்களில் ஒற்றிக்கொண்டார். அடுத்தநாள் தில்லி கேரளா கிளப் சார்பில் செம் மீன் குழுவினருக்குப் பாராட்டு விழா நடந்தது. என்னையும் அழைத்திருந்தார்கள். ராமு காரி யாட்டுக்கு மாலை போட்டபோது, மாலையுடன் மைக் அருகில் சென்று என் பெயர் சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அவர் மாலையைக் கழட்டி எனக் குப் போட்டுவிட்டு கூட்டத்தின ருக்கு நடந்ததை விவரித்தார். நானே கூசுமளவிற்கு ஏகக் கர கோஷம், கைகுலுக்கல்கள். கேரளா கிளப் தலைவர் கிருஷ்ணன் நாயர் எனக்கு ஒரு குத்துவிளக்கு பரி சளித்தார்.
இப்பொதும் டி.வி.யில் செம்மீன் படம் பார்க்கும்போது, முதல் தடவையாக மஹாதேவ் ரோடு பிலிம் டிவிஷன் தியேட்டரில் புல்லா ரெட்டியுடன் பார்த்த ஞாப கம் வரும். எல்லாத் தென்னிந்தியர் களும், குறிப்பாக மலையாளிகள் எனக்கு ‘நந்நி’ சொல்ல வேண் டாமா?  





     RSS of this page