வெங்கட் சாமிநாதன் - சொல்வனம்- இரண்டாவது ஆண்டு மலர் -14-6-2010
சென்ற வருடம் தென்றல் இதழுக்காக மதுரபாரதி, அர்விந்த் சுவாமிநாதன் இருவரும் வெங்கட் சாமிநாதனை விரிவான பேட்டி கண்டார்கள். அச்சுப்பத்திரிகையின் இடநெருக்கடி காரணமாக ஆறு மணி நேரம் நீண்ட விரிவான நேர்காணல், சுருக்கப்பட்டு வெளியானது. வெங்கட் சாமிநாதன் என்ற மாபெரும் இலக்கிய ஆளுமை எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தில்லி வாசம், இலக்கிய நண்பர்கள், தமிழக அரசியல், இலக்கியம் எனப் பல விஷயங்களைக் குறித்தும் பேசும் அப்பேட்டியின் விரிவான வடிவத்தை, சொல்வனத்தின் இரண்டாமாண்டு சிறப்பிதழில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். (புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்)
உங்கள் இளமைப்பருவம் கழிந்த நிலக்கோட்டையிலிருந்து தொடங்கலாம். அந்த கிராமத்து அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்?

நிலக்கோட்டை என்ற கிராமத்தில், அது கிராமமும் இல்லை, டவுனும் இல்லை, எனது மாமாவின் வீட்டில் நான் வளர்ந்தேன். அவர் மிகவும் கண்டிப்பானவர். அதே சமயம் ரொம்ப சாதுவும் கூட. அவரது சுபாவத்துக்கும், நிலக்கோட்டையின் வாழ்க்கை அனுபவத்துக்கும் உதாரணமாகச் சொல்லப் போனால், மாமா என்னை அதிகமாக எங்கும் வெளியில் செல்ல விடமாட்டார். கோடைகாலத்தில் குளத்தில், கிணறுகளில் எல்லாம் தண்ணீர் வற்றிப் போய் விடும். வீட்டிலிருந்து 2, 3 ஃபர்லாங் தொலைவில் கோட்டைக் கிணறு என்ற ஒன்று இருக்கும். அங்கு சென்று குளித்து விட்டு வருவோம். அது ஒரு ஏற்றக் கிணறு. உள்ளே இறங்கப் படியெல்லாம் இருக்கும். மாமா மெதுவாகப் படியிறங்கி என்னை அழைத்துச் சென்று, மூன்றாவது படியில் உட்கார வைத்து விட்டு, சொம்பால் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து என் மேல் ஊற்றிக் குளிப்பாட்டுவார். கிணற்றுக்குள் இறங்க விட மாட்டார். அவரும் இறங்க மாட்டார். ஏனென்றால் அவர் ரொம்ப சாது, மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். எங்களையும் அப்படியேதான் வளர்த்தார்.

என்னுடைய பாட்டி நான் அறிந்த காலத்திலிருந்து விதவை. ஆசாரமான, பக்தி நிறைந்த பிராமண விதவைக்கு வாழ்க்கை வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பதுதான். கோயில், கதாகாலட்சேபம் என்றெல்லாம் அந்த ஊரில் போக முடியாது. ஊருக்கு வெகு தொலைவே ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ஆனால் என் நினைவில் பாட்டி அந்தக் கோவிலுக்குப் போனது கிடையாது. ஒரு வேளை விதவைகளுக்கு கோவிலில் அனுமதி இல்லையோ என்னவோ? ஆக, ஆசாரமான பாட்டிக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவுக்குப் போவதுதான். பொழுதுபோக்கு மட்டுமில்லை. அதுதான் பாட்டியின் பக்திக்கு வடிகால் மாதிரியும் கூட. நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிர்த்தாற் போலத்தான் டூரிங் டாக்கிஸ் இருந்தது. அந்தக்காலத்தில் பெரும்பாலான படங்கள் புராணப் படங்கள்தான். மோட்சத்திற்கு வழிகாட்டக் கூடியவை அந்தப் புராணப்படங்கள் என்று ஒரு நம்பிக்கை.

மூன்று நாளைக்கு ஒருமுறை அங்குள்ள தியேட்டரில் படம் மாற்றுவார்கள். பாட்டி எல்லா படத்தையும் பார்த்து விடுவாள். என்னையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அந்த சினிமாவிற்குக் கூட்டிக் கொண்டு போவாள். அந்த சினிமா தியேட்டர் முதலாளி அடிக்கடி எங்கள் தெருவிற்கு வருவார். கருப்பாக, அழகாக இருப்பார். ஆஜானுபாவன். முன் தலை வழுக்கை விழுந்திருக்கும். இருந்தாலும் வசீகரமான முகம். எப்போதும் கையில் ஒரு டார்ச் லைட் ஒன்று வைத்திருப்பார், பகல் பொழுதாக இருந்தாலும் கூட. எங்களையெல்லாம் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என்னைத் தூக்கிக் கொண்டு பாட்டி சினிமா கொட்டைகைக்குள் நுழையும் போதெல்லாம், ‘பாட்டியம்மா, பையனை கீழே இறக்கி விடுங்க. ஏன் கஷ்டப்படறீங்க? நான் டிக்கெட் கேட்க மாட்டேன்’ என்று சொல்வார். அதற்கு பாட்டி, ‘இவன் கேட்க மாட்டேங்கறாண்டா! என்னாலயும் தூக்கத்தான் முடியலை, என்ன பண்ணச் சொல்றே சொல்லு’ என்று சொல்லிக் கொண்டே என்னைக் கீழே இறக்கி விடுவாள் பாட்டி. மற்ற நாட்களில் நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அந்தப் படத்தின் பாடல்களை, வசனங்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அந்தக் காலத்தில் சினிமாவில் வந்த பாட்டுக்கள் எல்லாம் கேட்க மிக இனிமையாக இருக்கும். 60,70 வருடம் கழித்து இன்றும் அவற்றையெல்லாம் கேட்க முடிகிறது. அப்போதெல்லாம் நிறைய நாடகங்களும் நடக்கும். வி.எஸ். செல்லப்பா, தனலட்சுமி போன்றவர்கள் எல்லாம் ஸ்பெஷல் நாடகம் போட வருவார்கள் ஆக இரண்டு மூன்று வயசிலிருந்தே சினிமா, நாடகங்களோடு எனக்குப் பரிச்சயம் தொடங்கி விட்டது என்று சொல்லலாம்.

உங்கள் பள்ளி வாழ்க்கை பற்றி

நிலக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் நான் படித்தேன். பள்ளிப்பாடங்களில் எனக்கு விருப்பம் கிடையாது. சரித்திரப் பாடம் என்றால் கேட்டுக் கொண்டிருப்பேன். கும்பகோணம் வாணாதுரை ஹைஸ்கூலில் படித்தபோது, சுந்தரம் பிள்ளை என்று ஒரு ஆசிரியர். காங்கிரஸ்காரரா என்பது தெரியாது. ஆனால் சுதந்திரப் போராட்டம் பற்றியும், காங்கிரஸ்காரர்கள் பற்றியும் அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அவர் வகுப்பில் தவறாது கலந்து கொள்வேன். மற்றபடி இங்கிலீஷ், கணக்கு என்று எதுவுமே வராது. ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்தால் எதிர்காலத்துக்கு உதவும் என்றார்கள். சரி என்று அதை எடுத்துக் கொண்டேன். முதல் நாள் வகுப்பிற்குச் சென்றால் ஒன்றுமே புரியவில்லை. அதனால், சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று வெளியே வந்து விட்டேன். அப்புறம் ஹிந்தி படிக்கலாம் என்று சொன்னார்கள். அதனால் ஹிந்தி வகுப்பில் போய் உட்கார்ந்தேன். இரண்டு வருடம் ஹிந்தி படித்தேன்.

நரசிம்ம நாயுடுதான் அவர் பெயர் என்று நினைக்கிறேன். அவர்தான் எனக்கு தமிழ் வாத்தியாராக இருந்தார். அவர் கும்பகோணம் சேர்ந்த ஆரம்ப வகுப்பிலேயே, தேமாங்காய், புளிமாங்காய் என்று ஆரம்பித்தார். அப்போதுதான் ஆர்.சண்முகம் என்பவன் எனக்கு நெருங்கிய நண்பனான். சண்முகம், ’இதெல்லாம் படிக்கவே வேண்டாம்’ என்று என்னிடம் சொல்வான். அவனுக்கு அதெல்லாம் படிக்காமலேயே கரதளபாடம். He was a born poet. சண்முகம் என்றாலே எனக்கு பிரமிப்பு தான். பின்னாட்களில் அவன் எனக்கு எழுதிய கடிதங்களைக் கவிதையாகவே எழுதுவான். கும்பகோணத்தில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த காவேரி என்ற இதழில் அப்போது அவன் எழுதிக் கொண்டிருந்தான். ஒருநாள் அது வெளியாகி இருந்த பழைய இதழை எனக்குக் காட்டினான். அந்தக் கவிதை எனக்குப் புரியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் எனக்கும் அவனுக்கும் பலவிதங்களில் ஒத்த சிந்தனை இருந்தது. தமிழறிஞர்கள் என்று சிலரைச் சொல்வதை எங்களால் ஏற்க முடியவில்லை. பல புலவர்களை, கவிஞர்களை, அவர்களது கவிதைகளை ஏற்க என்னால் முடியவில்லை. இதையெல்லாம் நான் சண்முகத்திடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். சண்முகமும் அதை ஒப்புக் கொள்வான். பல கேள்விகள் கேட்டு, எங்களுக்குள் விவாதித்துக் கொள்வோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்கும் பதில்களைத்தான் அங்கீகரிக்க முடிந்ததில்லை.

எழுத்து மற்றும் புத்தகங்களின் மீதான ஆர்வம் வந்தது எப்போது?

நிலக்கோட்டையில் இருந்த போது முதலில் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு பின்னர் மாறிப் போனோம். முத்துசாமி ஐயர் என்பவரின் வீடு அது. பின்னர் அதை எங்கள் ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட் குடும்பத்தினர் வாங்கினார்கள். அந்த வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாதியில் கூரை போட்டிருக்கும். அதில் பழைய சாமான்களையெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். அதில் இருந்த சில புத்தகங்கள் எனக்குக் கிடைத்ததன. அதில் ஒன்று பிரதாப முதலியார் சரித்திரம். அப்போது எனக்கு 11 வயது. அடுத்து சுவாமியும் சிநேகிதர்களும் படிக்கக் கிடைத்தது. ஆனந்த விகடனில் வந்த தொகுப்பு. ஆக சின்ன வயசிலேயே எனக்கு இலக்கியம் அறிமுகமாகி விட்டது என்று நான் சொல்லிக் கொள்ளலாம் இல்லையா? சொல்லிக்கொள்ளலாம்தான். ஆனால் உண்மை அதுவல்ல. படிக்கும் ஆர்வம் இருந்தது. கிடைத்ததை, சுவாரஸ்யமாக இருந்ததைப் படித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று. அவ்வளவுதான்.

அதற்கு சில வருடங்களுக்குப்பின் கும்பகோணம் வாணாதுரை ஹைஸ்கூலில் சேர்ந்த போது ஒரு நாள் பள்ளி நூலகத்திலிருந்து நூலகர் வந்து ஒரு அறிவிப்புச் செய்தார். “மாணவர்களுக்கு நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொடுக்குமாறு ஹெட்மாஸ்டர் சொல்லியிருக்கிறார், நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று. ஆனால் இலக்கியப் புத்தகங்கள்தான் தருவேன். கதைகள், நாவல்கள் எதுவும் கொடுக்க மாட்டேன் என்றும் சொன்னார். ஆக, எங்கள் பல்ளிக்கூட லைப்ரரியிலிருந்து எனக்குப் படிக்கக் கிடைத்தவை சுபாஷ் சந்திர போஸின் இளைஞனின் கனவு, வ.ரா. எழுதிய தமிழ்நாட்டுப் பெரியார்கள், நேருவின் பேச்சுக்கள் அடங்கிய நூல், முஸ்தபா கமால் பாஷா போன்ற வெ.சாமிநாத சர்மா நூல்களெல்லாம் அப்படித்தான் அறிமுகமானது.

சண்முகமும் அவ்வப்போது ஏதாவது புத்தகம் கொண்டு வந்து கொடுப்பான். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை போகும் ரோடில் அருகே உள்ள கொட்டையூர் தான் சண்முகத்தின் ஊர். ஒருமுறை அவன் ஊருக்குப் போயிருந்தபோது மலேயாவின் கோலாலம்பூரில் அச்சிடப்பட்ட ஒரு புத்தகம் கிடைத்தது. எனது போராட்டம் - என்ற ஹிட்லரின் சுயசரிதை. அப்போது, அந்த நூல் இங்கே தடைசெய்யப்பட்ட ஒன்று. இப்படி பல புத்தகங்கள் அறிமுகமாகின. சில மாதங்களில் நூலகத் திட்டம் சரியாகச் செயல்படாததால் புத்தகம் தருவதை நிறுத்தி விட்டார்கள். எனக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. அது போன்ற சமயங்களில் சண்முகம்தான் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பான். சுத்தானந்த பாரதியின் நூல்கள், அப்புறம் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய ‘முதல் இரவு’ என்ற நூல் அவன் மூலம் கிடைத்தது. அந்த நூல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒன்று. அந்தப் புத்தகம் எழுதியதற்காக கோர்ட்டில் கேஸ் எல்லாம் நடந்து ரகுநாதன் ஜெயிலுக்குக் கூடப் போக வேண்டி இருந்தது. தொ.மு.சி. பாஸ்கரத் தொண்டைமான், ரகுநாதனை, ‘அவன் எனக்குத் தம்பியே இல்லை,’ என்று ஒரு அறிக்கை கூடக் கொடுத்தார். அந்தப் புத்தகங்களையெல்லாம் என் இளம் வயதிலேயே படித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் அண்ணாதுரையின் பேச்சுகள் அடங்கிய நூல்கள் எல்லாம் சிறு சிறு நூல்களாக அச்சிடப்பட்டு கழக வெளியீடுகளாகக் கிடைக்கும். பின் வாசக சாலைகள், கழகப் படிப்பகங்கள் மூலமும் பல நூல்கள் அறிமுகமாகின. இது போன்ற நூல் அறிமுகங்களெல்லாம் என் 15 வயதிற்குள்ளேயே நடந்த விஷயங்கள். ஆனால் இந்த மாதிரி ஆரம்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. எல்லா மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. கருணாநிதிக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொருத்தரையும் எங்கு எங்கேயோ கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. சிவாஜி கணேசனுக்கும் கிடைத்திருக்கிறது. அது அவரை எங்கேயோ கொண்டுபோய் சேர்த்திருக்கிறது, இல்லையா? அதனால் இந்த டைனமிக்ஸ் இருக்கிறதே, ஒருத்தர் பாதிக்கப்படுவது எதனால், எப்படி என்பதும், அதே போல, தான் தன் சூழலை பாதிப்பதும் அது எப்படி என்பதும் எதுவுமே எல்லோருக்கும் இருக்கக் கூடியதே, ஆனால் அதனால் பாதிக்கப்படுகிறோமா, அல்லது அதை மீறி எழ்த்தோன்றுகிறதா, என்கிற அந்த டைனமிக்ஸ்தான் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறது.

இலக்கியம் மட்டுமில்லாது நாடகம், ஓவியம், இசை, சிற்பம் சினிமா, விமர்சனம் என்று கலையின் சகல துறைகளிலும் உங்களது பங்களிப்பு இருக்கிறது. இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் இங்கிருக்கும் ஒவ்வொருவருமே ஏதோ ஒருவிதத்தில் எனக்கு இசை பிடிக்கும், இலக்கியம் பிடிக்கும், சினிமா பிடிக்கும் என்று சொல்லும் வகையான நிலைதான் இருக்கிறது. அதுபோன்று, மற்ற எல்லோரையும் போல, எனக்கும் இவையெல்லாம் பிடித்தது. ஆர்வமாக இருந்தது. ஒவ்வொன்றும் என்னை ஈர்த்தது. அந்த ஈர்ப்பிலிருந்து ஈடுபாடு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவையெல்லாம் நம்மை ரசிக்க வைக்கும். சில சமயங்களில் தொந்தரவு செய்யும். நமது முன் தீர்மானங்களை மாற்றி அமைக்கும். சிந்திக்க வைக்கும். அப்படித்தான் சிறுவயது முதலே எனக்கும் இவற்றில் எல்லாம் ஈடுபாடு ஏற்பட்டது. சிறுவயதில் நான் என்னைச் சுற்றி கேட்டதெல்லாம் சங்கீதம்தான். கல்யாண கச்சேரி, சினிமா, டிராமாவிலிருந்து, ராப்பிச்சைக்காரன் வரை. சுற்றிப் பார்த்ததெல்லாம் கோவில்கள், அந்தக் கோவில்களில் நடக்கும் பஜனைகள், மார்கழி மாத உற்சவங்கள் போன்றவைதான்.

தமிழக வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஏற்றம் இறைத்தால் பாட்டு; நாட்டு நட்டால் பாட்டு; கல்யாணம் என்றால் பாட்டு; பாட்டு இல்லாத தமிழ் வாழ்க்கையே இல்லை. அதனால்தான் சினிமாவிலும் பாடல்கள் இருக்கறதா சினிமாக்காரங்கள்லாம் சொல்கிறது ஒரு விதத்திலே வாஸ்தவம்தான். ஆனால் வாழ்க்கையில் காணும் வாஸ்தவம்தான் சினிமாவில் இடம்பெறுகிறதா என்று பார்த்தால், இது அவர்கள் செய்வது கீழ்த்தரமான வியாபாரம். ஆனால் சொல்லிக்கொள்வது என்னமோ வாழ்க்கை அது இது என்று. வாழ்க்கையில் பாட்டு எங்கே எப்படி இடம் பெறுகிறது, அது சினிமாவில் எங்கே, எப்படி இடம் பெறுகிறது என்று பார்த்தால், அது இவர்கள் சும்மா அப்படி சொல்லிக்கிறதுதான். ஆனால் இவர்கள் பாட்டையும், டான்ஸையும் சினிமாவில் நுழைக்கிற காரணமும், நுழைக்கிற விதமும், வேறாக இருக்கும். நுழைக்கிற பாட்டும், டான்ஸும் கூட வேறேதான். ஆக வாழ்க்கையில் ஒரு profound diffusion of art இருந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையாக இருந்திருக்கிறது. அதை மேலே வளர்த்தெடுத்துச் செல்வதும் சாத்தியம். கொச்சைப்படுத்துவதும் சாத்தியம். எல்லா சினிமா ஸ்டார்களும் சொல்கிறார்கள் ‘எனக்கு சிறுவயது முதலே கலைகளில் ஈடுபாடு இருந்தது’ என்று. ஆனால் அவர்கள் சொல்லும் கலை, ஈடுபாடு என்பது வேறு விஷயம். ஆக இவற்றை வார்த்தைகளை மீறிப் புரிந்து கொள்ள வேண்டும். என்னளவில் எல்லோரையும் போலவே எனக்கும் இது போன்ற கலைகளில் சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது என்று சொல்லிக்கொள்ளலாம் தான். ஆனால், அது எப்படிப்பட்ட ஆர்வ மாக இருந்தது, பின் அதை எப்படி நான் வளர்த்துக்கொண்டேன் என்பதெல்லாம் வேறு விஷயங்கள்தான்.

மதுரையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பெயிண்டர்ஸ் ஷாப் இருக்கும். அந்த பெயிண்டர் ஹோர்டிங்க்குக்காக ஏதாவது வரைந்து கொண்டிருப்பான். நான் அதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். யாராவது ஏதாவது சொன்னால் கூட, ‘தம்பி அது பாட்டிலே பார்த்து விட்டுப் போகட்டும்,’ என்று சொல்லுவான். நான் ஸ்கூலுக்குப் போகும் போதும் வரும் போதும் வழியில் அங்கே நின்று அதைப் பார்த்து விட்டு வருவேன். நிலக்கோட்டையில் பள்ளிக்கூடம் போகும் வழியில் தகரக் கடையில் விளையாட்டாக துருத்தி ஊதுவதைப் பார்த்துக் கொண்டிருந்தது போல. இது போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு நேரம் போக்குவதில் எனக்கு ஒரு ஆர்வம். யாராவது ஏன் இங்கே நின்று கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் எனக்கு பதில் சொல்லவும் தெரியாது. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

அதற்கும் முன்னால் நிலக்கோட்டையில் இருக்கும்போது வீட்டின் சுவர்களில் லஷ்மி படம், முருகன் படம் எல்லாம் பென்சிலால் வரைந்து வைப்பேன். மாமா திட்டுவார். சுவற்றையெல்லாம் கரியாக்கிக் கொண்டிருக்கிறானே என்று. படித்து முடித்ததற்குப் பிறகு ஜம்ஷெட்பூரில் இருந்த மாமா வீட்டிற்குப் போயிருந்தேன், வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்பதற்காக. ஒரு ஆறுமாதம் வரை அங்கே இருந்தேன். அங்கிருக்கும் போதுதான் ஹிராகுட்டில் வேலை காலி இருப்பது தெரிந்தது. பின் ஹிராகுட் போனேன். நான் ஜம்ஷெட்பூர் போன இரண்டு, மூணுநாளிலேயே மாமா காந்தி, கஸ்தூரிபா எல்லோரையும் பென்சிலில் வரைந்து பிரேம் போட்டு வைத்திருந்ததைப் பார்த்தேன். மிக நன்றாகவே வரைந்திருப்பார். ஃப்ரேம் போட்டு சுவரில் மாட்டும் நேர்த்தி கொண்டவைதான். ’பார்க்கறியா, எல்லாம் நான் தான் வரைஞ்சேன்’ என்று சொல்வார் மாமா. எல்லாவற்றிலும் ஆர்.என்.சாமி என்று கீழே அவர் பேர் போட்டிருக்கும். அவர் அதை எப்படி வரைவது என்றெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனந்த விகடனிலோ எதிலோ சுபாஷ் போஸின் படம் ஒன்று வந்திருந்தது. அதைப் பார்த்து நானும் வரைந்திருந்தேன்.

அதைப் பார்த்த மாமி, ‘உங்க மருமான் படம் வரைஞ்சிருக்கான் பாருங்கோ, உங்களப் பார்த்து’ என்று மாமாவிடம் சொன்னாள். அவர் ‘எப்படிடா போட்டே?’ என்று கேட்டார். அவர் மெஷர்மெண்ட் எல்லாம் எடுத்து போடுபவர். ‘நானா பத்திரிகையிலே வந்த போட்டோவைப் பாத்து வரஞ்சேன்’னு சொன்னேன். மறுநாளைக்கே அவர் என்னை ஒரு ஆர்டிஸ்ட் ஸ்டூடியோவிற்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். ஆனால் நான் அங்கே அதிகம் நாள் இல்லை. ஏனென்றால் டைப்-ரைட்டிங் படிக்க வேண்டும், ஷார்ட் ஹேண்ட் படிக்க வேண்டும். புக்-கீப்பிங் படிக்க வேண்டும். பின் அவரது ஆபிஸிற்குச் சென்று மூன்று மணிநேரம் வரை இருந்து ஆபிஸ் பற்றி, அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி எல்லோரையும் கேட்க வேண்டும். மாமா அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸர் என்பதால் எல்லோரும் பதில் சொல்வார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள், நான் என்ன புரிந்து கொண்டேன் என்பது வேறு விஷயம். ஆனால் நான் கேட்டால் பதில் சொல்வார்கள். இப்படி பல அனுபவங்கள். ஆக, என்னுடைய மூலத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் ஒருவேலை நிலக்கோட்டைக்கு அதில் இடமிருக்கலாமோ என்னமோ?

ஹிராகுட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?

ஹிராகுட் என்னும் அணைக்கட்டு கட்டும் கேம்பில் நான் ஒரு ஆறு வருஷம் இருந்தேன். அங்கிருந்த போதுதான் க.நா.சு., தி.ஜானகிராமன் போன்ற பலரது இலக்கியங்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது டி.வி. கிடையாது. ஆரம்பத்தில் சினிமா தியேட்டர் கூட கிடையாது. சினிமா பார்ப்பதென்றால் சம்பல்பூர் என்னும் 9 மைல் தூரத்தில் உள்ள ஊருக்குத் தான் போக வேண்டும். குறுகிய சாலை. லாரி, பஸ் எல்லாம் விரைவாகச் சென்று கொண்டிருக்கும். அது 1950-51ம் வருடம். சாலைகளில் விளக்குகள் எல்லாம் இருக்காது. தனியாக நான் செல்வதென்றால் பஸ் பிடித்துதான் போக வேண்டும். ஐந்தாறு பேர்களாக இருந்தால் சைக்கிளில் போவோம். நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல், சாலையை மறித்துக் கொண்டு ஒரே வரிசையாகத் தான் செல்வோம். இரவு 9 மணிக் காட்சிக்குச் சென்று விட்டு இரவே திரும்பி விடுவோம்.

அந்த ஆரம்ப காலங்களில் அதைத் தவிர வேறு பொழுதுபோக்குகள் கிடையாது. கோடைகாலங்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை தான் ஆபிஸ் இருக்கும். அதன் பிறகு ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போய் விடுவோம். ஃபேனைப் போட்டுவிட்டு, கயிற்றுக்கட்டிலில் ஈரத்துணியைப் போட்டு விட்டு அதன் கீழே படுத்து ஒரு தூக்கம் போடுவோம். பிறகு மாலை 4, 5 மணிக்குத் தான் எழுந்திருப்போம். அப்போது என்னுடைய குவார்ட்டர்ஸில் என்னோடு ஒரு ஏழெட்டு பேர்கள் இருந்தார்கள். அவர்களுள் சிவ கோபால கிருஷ்ணன் என்பவர் கவிஞர். மற்றொருவர் வி.வி.சீனிவாசன். இவர் ஒரு great intellectual. ஆழ்ந்த படிப்பாளி. மிகுந்த புத்திசாலி. என்னுடைய நெருக்கமான நண்பர். He was very close to me. இருவருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான நட்பு. அவரது பேச்சு, செயல், சிந்தனை எல்லாமுமே மிக வித்தியாசமானதாக இருக்கும். எல்லோரும் மாலையில் ஒரு 3 மைல் தூரம் நடந்து சென்று, மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு கல்வெட்டில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்போம். ஒருவர் புத்தகம் படிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்போம். இப்படித்தான் ரஸ்ஸல், பெர்னார்ட் ஷா, ஆல்பெர்ட் ஷ்வைட்ஸர் உட்பட பலருடைய புத்தகங்கள் அறிமுகமாகின. இவற்றில் மற்றவர்கள் நட்புக்காகக் கலந்து கொள்வார்கள். ஆனால் அதிகமும் அதில் ஈடுபாட்டோடு இருந்தது நானும் சீனிவாசனும் தான். So, I was exposed to those things in life. அப்போதுதான், Will Durant-ý Story of Philosophy, 1,2,3 infinity, Short History of the World by H.G. Wells போன்று அந்த ஆறு வருஷத்தில் இது மாதிரி பல புத்தகங்களைப் படித்தோம்.

அங்கே இருக்கும் போது சம்பல்பூரில் இருந்து ஒருவர் சைக்கிளில் வருவார். அவருக்கு புத்தகம் விற்பது தான் வேலை. அவரது மனைவி ஆசிரியராகவோ என்னவோ வேலை பார்த்தார். இவர் இரண்டு பைகளில் புத்தகங்களை நிரப்பி சைக்கிளில் எடுத்துக்கொண்டு எங்களிடம் வந்து, என்ன புத்தகம் வேண்டும்? என்று கேட்பார். என்னென்ன புத்தகம் வந்திருக்கிறது என்று சொல்வார். கேட்பதை அடுத்த வாரம் கொண்டு வந்து கொடுப்பார். அவருடைய வேலையே இந்தப் புத்தகம் விற்பதுதான். இதில் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியாது. ஏனென்றால் பெங்குவின் நூல்களே 12 அணா விற்றுக் கொண்டிருந்த காலம் அது. பெர்னார்ட் ஷாவின் மேஜர் பார்பராவையே நான் எட்டணாவுக்கு வாங்கிப் படித்திருக்கிறேன். அவர் வந்தாலே எங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும். பாதி வந்தாச்சா? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்போம். அவர் பெயர் பாதி.. “ஊர்வலம் வந்திண்டிருக்கா, சுவாமி வந்தாச்சா? என்று எல்லோரும் ஆர்வத்துடன் கேட்பது போல, பாதி வந்தாச்சா? என்று எல்லோரும் ஆர்வத்துடன் விசாரிப்பார்கள்.

அதில் சீனிவாசன் மட்டும் ’மிஸ்டர் ஹாஃப்’ வந்தாச்சா? என்று தான் விசாரிப்பார். சீனிவாசன் ஒரு சிறந்த படிப்பாளி, விசித்திரமான மனிதர் என்று சொன்னேன். விசிததிரம் என்றால், அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நாம் சாதாரணமாக, செய்யும் காரியமாக இராது. என்னோடு அப்போது அவரும் இன்னும் நாலைந்து நண்பர்களும், வீடு கிடைக்காத காரணத்தால், என்னுடன் தங்கியிருந்தனர். அதில் ஒருவருக்கு காலில் என்னவோ வலிக்காகவோ என்னவோ ஞாபகமில்லை, ஆலிவ் ஆயில் தடவினால் சரியாகும் என்று டாக்டர் சொல்ல, ஆலிவ் ஆயிலுக்கு புர்லாவில் எங்கே போவது என்று தலையைச் சொரிந்து கொண்டிருந்தோம். இரண்டு நாளில் ஒரு நாளில் திடீரென்று சீனிவாசன் அந்தக் காலத்தில் பெட்ரோல் வாங்கும் கான் அளவு பெரிதான கானை எங்கள் முன்னால் வைத்து, “இந்தாய்யா நீர் தேடின ஆலிவ் ஆயில்” என்றார். “ஏதுய்யா இது, எங்கே கிடைச்சது? என்ன விலை? இவ்வளவு என்னத்துக்கு?” என்று திகைத்துப் போய் நாங்கள் சரமாரியாக் கேட்ட கேளவிகளுக்கு, “இந்தக் கேள்விகள் எல்லாம் அனாவசியம். ஆலிவ் ஆயில் உங்களுக்குத் தேவை. நான் வாங்கிண்டு வந்திருக்கேன். காலில் தடவிக்க. மிச்சம் இருந்தா இன்னும் யாருக்காவது கால்லே வலி வந்தால் உடனே தடவிக்க கை வசம் இருக்கும். அப்போ ஆலிவ் ஆயில் எங்கே கிடைக்கும்னு தேடீண்டு போகவேண்டாமில்லியா?” என்றார். காசைப் பத்தி கவலை இல்லை.

அவர் எங்களுடன் இருந்தவரை, சம்பல்பூருக்கு சினிமா பார்க்க எல்லாருக்கும் சைக்கிள் எங்கே கிடைக்கும்னு தேடவேண்டாம். பஸ்ஸிலே போய் அவதிப்படவும் வேண்டாம். அவர் வேலை செய்த காண்டிராக்டரின் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். நாங்கள் ஐந்தாறு பேர் கூட்டமாகத் தான் போவோம். சினிமாவுக்கோ எதற்குமோ.

அவர் ஒரு சிவில் கண்டிராக்டரிடம் அக்கௌண்டண்டாக வேல் பார்த்து வந்தார். ஒரு நாள் ‘நான் வேலையை விட்டுட்டேன் இனிமே அவன்கிட்ட வேலை பாக்கப் போறதில்லே’ என்றார். ஏன்யா? வேறே வேலை கிடைச்சிட்டதா? என்று கேட்டால்,  ‘அதெல்லாம் இல்லை, இனிமேதான் வேறே வேலை தேடணும். அவன் கிட்டே வேலை பண்ணப் பிடிக்கலை. அதான். ஒரு சிவில் கண்டிராக்டர், மெயின் டாமில் ஸ்பில்வே செக்ஷனில் வேலை பாக்கறான். அவனுக்கு ஹைட்ரோ டைனமிக்ஸ ஹைட்ரோ ஸ்டாடிக்ஸ் ஒண்ணுமே தெரியலை. தப்புத் தப்பா சொல்றான். அவன் கிட்டே எப்படி வேலை பண்றது?’ என்றார். அந்த மாதிரி விசித்திர மனிதர் அவர். That was a great time. ரஸ்ஸலின் எளிய தத்துவப் புத்தகங்கள் Marriage and Morals, Sceptical Essays, Portrait from Memory and other essays, ஷாவின் சின்ன நாடகங்கள், Androcles and the Lion, Major Barbara இப்படி, எல்லாம் அங்கே அப்படித் தான் படித்தோம்.

இவர்களோடு இன்னுமொரு முக்கியமான நண்பன் மிருணாள் காந்தி சக்கரவர்த்திதான். அவன் ஒரு வங்காளி. அவனுடைய தந்தை சுரேஷ் சந்தர சக்கரவர்த்தி. அவர் - a man of profound learning and scholarship. அவர் ஒரு ஹைஸ்கூலில் இங்கிலீஷ் டீச்சர்தான். மிருணாள் காந்தி என்னை விட மூன்று வயது பெரியவன். மிருணாள் சொல்வான் சின்ன வயசிலிருந்தே தன் அப்பாவிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் - தவளைக்கு ஏன் பின்னங்கால் பெரிதாக இருக்கிறது; முன்னங்கால் சிறிதாக இருக்கிறது? இப்படி - அவனுக்கு அப்பாவிடமிருந்து பதில் கிடைக்காது. ஜுலியன் ஹக்ஸிலியின் முகவரியைக் கொடுத்து, அவருக்கு எழுதிக் கேட்டுக்கோ, என்பாராம். வங்கமொழி பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால், சுநிதிகுமார் சட்டர்ஜிக்கு எழுதிக்கேள் என்று அட்ரஸ் கொடுப்பாராம். அவர் தன் பையனை இப்படித்தான் வளர்த்தாராம். அவன் தன்னிடம் இப்படி எழுதி ஜூலியன் ஹக்ஸ்லியிடமிருந்தும், சுநிதி குமார் சட்டர்ஜியிடமிருந்தும் வந்த கடிதங்கள் இருப்பதாகச் சொன்னான். He was very very dear to me and I was also very dear to him. அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் மாதிரி நல்ல நெருக்கமான நட்பு எங்களுடையது. நாங்கள் அடிக்கடி சின்னச் சின்ன விஷயங்களில் சண்டை போட்டுக்கொள்வோம். ஒரு சமயம் சண்டை போட்டு அப்போதான் சமாதானமாயிருக்கிற சமயம். ஒரு நண்பனை அலுவலக மாற்றலில் பிரிய நேர்ந்த போது நாங்கள் இருவரும் அவனுக்கு கொடுத்த ‘பார்ட்டி’யின் போது, மிருணாள் மிகவும் மனம் நெகிழ்ந்து, தளதளத்த குரலில், ‘my father would feel very proud of having you as his son, more than me’ என்றான். அந்த இரவு எனக்கு மிக முக்கியமான இரவு. நான் கலந்து கொண்ட அந்த முதல் ‘பார்ட்டி’க்காகவும், மிருணாள் பாதி போதையில் சொன்ன அந்த வார்த்தைகளுக்காகவும்.

இப்படி இருக்கும் போது சில வருடங்களில் மகாநதியின் மறுகரையில் இருந்த புர்லா முகாமுக்கு தியேட்டர் வந்தது. சத்யஜித் ரேயைப் பார்த்தது அங்கேதான். மெட்ராஸில் இருப்பவர்கள் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அதற்கு ஒரு ஆறேழு வருடம் கழித்து நான் மெட்ராஸ் வந்தபோது, பிராட்வே தியேட்டரில் பாதேர் பஞ்சலி ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரில் ஒரு 12 பேர்தான் இருந்தார்கள். அது 1961. ஆனால் நான் 1954-55-லேயே அந்தப் படத்தைப் பார்த்து விட்டேன் ஒரிஸ்ஸாவில் ஒரு அணைக்கட்டு முகாமில் இருந்த டெண்ட் தியேட்டரில் பார்க்கக் கிடைத்த பாதேர் பஞ்சலி, உலகப் பிரசித்தி பெற்ற பின்னும், சென்னை போன்ற இடத்தில் பார்க்க ஆளில் இல்லாமல் போய்விட்டது. ரித்திக் கட்டக், ரே போன்றோரின் படங்களையும், மற்றும் சில பெங்காலிப் படங்களையும் ஹிராகுட்டிலும், சம்பல்பூரிலும் போய்ப் பார்ப்போம்.

ஒரிய மொழிக்கும் வங்காளி மொழிக்கும் ஒரு நெருக்கமான உறவு இருந்தது. அதாவது தமிழுக்கும் மலையாளத்திற்கும் இருப்பது போன்று. 1951லிருந்தே வங்காளி படங்கள் எனக்கு மிகவும் பழக்கமான ஒன்றாக இருந்தது. இந்தப் பாட்டு, கூத்து இதெல்லாம் இல்லாமல், காமெடி சீன்ஸ் என்பதெல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரு கதையை கதையை மாததிரம் சொல்லும் மரபு அங்கே இருந்தது. மேலும் அங்கு திரைப்படங்களின் எல்லாக் கதைகளுமே சரத் சந்திரர், பங்கிம் சந்திரர் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடையதாக இருந்தது. அது எனக்கு இன்னும் ஒருவிதமான Exposure என்று சொல்லலாம். இங்கே தமிழ் வாழ்க்கை பாட்டும், நடனமும் கலந்தது; அதனால்தான் “கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப்போலாமா?” என்று பாட்டும் டான்ஸும் கட்டாயம் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள் இல்லையா? அதற்குக் காரணம் நம் தமிழ் வாழ்க்கைதான் என்கிறார்கள் இல்லையா? இதே பாட்டும், நடனமும் கலந்த வாழ்க்கைதான் வங்காளிகளினுடைய வாழ்க்கையும். ஆனால் அவர்கள் சினிமாவில் அப்படி மசாலாக்கள் அவர்கள் சேர்ப்பதில்லையே, ஏன்?

சினிமாவை வங்காளிகள் ‘பொய்’ (’boi’) என்று சொல்வார்கள். நாம் படம் என்று சொல்வதைத் தான் அவர்கள் ‘பொய்’ என்று சொல்வார்கள். அதற்கு புத்தகம் என்பது பொருள். சினிமா பார்க்க போகலாமா? என்று கேட்க,  ‘சொலுன், பொய் தேக் தே சொலி’ என்றுதான் சொல்வார்கள். படம் பார்க்க அல்ல - புத்தகம் பார்க்கப் போகிறேன் என்று. Mostly well known authors were brought on to the screen. அப்புறம் இல்லஸ்ட்ரேட் வீக்லியில் சி.ஆர்.மண்டி என்பவர் எடிட்டராக இருந்தார். அப்போது நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸோட ரீ-ப்ரொடக்‌ஷன்ஸ் எல்லாம் வரும் வீக்லியில். ஜெமினி ராய், டாகூர், கல்யாண் சென், பரிதோஷ், ஹுஸேன், அப்போ பாரிஸிலிருந்த டி ஸோஸா, அப்புறம கோவாவில் இருந்து ஒருவர், லக்ஷ்மண் பாய் இப்படி I was drawn to all these artists..

இதற்கெல்லாம் முன்பு ஒருமுறை ஹிராகுட்டில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவர் சம்பல்பூருக்கு வருகிறார் என்று சொன்னார்கள். நானும், மிருணாள் காந்தி சக்கரவர்த்தியும் போனோம். அது தேர்தல் நேரம். ஆனால் அவர் அதற்காக வரவில்லை. நாங்கள் அதற்கு முன்பே Hindu view of life , Indian Philiosophy, Bhagwat Gita எல்லாம் படித்திருந்தோம். அவர் ஆங்கிலத்தில்தான் பேசினார். He was great orator. ரொம்ப அற்புதமாகப் பேசினார்.

வெங்கட் சாமிநாதன் - சொல்வனம்-25-6-2010
ஒரிஸ்ஸாவில் இருந்தபோது கல்கத்தா போயிருக்கிறீர்களா?

மகாநதியின் எதிர்க்கரையில் இருந்த புர்லாவில் நாங்கள் இருந்த போது ஒருமுறை கல்கத்தா போயிருந்தோம். ஒரு வாரம் கல்கத்தாவைச் சுற்றினோம். அங்கே விக்டோரியா மெமோரியல் ஹாலில் ராஜா ரவி வர்மா, பின் டேனியல் ப்ரதர்ஸின் கம்பெனி பெயிண்டிங்க்ஸ், ஒரிஜினல் பெயிண்டிங்கஸ் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் நான் அங்குதான் ஒரிஜினலில் முதல் தடவையாகப் பார்த்தேன். அப்போது கல்கத்தாவில் அங்கே அகில இந்திய கலைக் கண்காட்சியும் ஒன்று நடந்து கொண்டிருந்தது. புதிதாக  அப்போது தொடங்கப்பட்டிருந்தது லலித கலா அகாடமி வருடா வருடம் நடத்தும் ஒரு அகில இந்திய கலைக் கண்காட்சியும் நடந்து கொண்டிருந்தது. அதில் ஹூசேனுடைய ஒரிஜினல் பெயிண்டிங்குகளையும் பார்த்தேன். நீலமும், மஞ்சளும் குழைத்து அப்படியே மனதை மயக்கி விடுவதாக அது இருந்தது. ஹுசேனுக்கு ஒரு tremendous sense of colours. வாட்டர் கலரிலேயே பெரிய பெரிய மாயங்களை, ஜாலங்களையெல்லாம் செய்து விடலாம். கோபால் கோஷ் அதில் மிகுந்த திறமைசாலி. ஷைலோஸ் முகர்ஜீயும்தான். இந்த ஓவியர்களும் சரி, ஓவியங்களும் சரி, இல்லஸ்டிரேடட் வீக்லியில் பிரசுரமாகியிருந்ததிலிருந்து பரிச்சயமானவை. சி.ஆர்.மண்டி என்பவர் அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது நிறைய அக்கால பிரசித்தி பெற்ற ஒவியர்களின் ஓவியங்கள் அதில் பிரசுரமாகும். அவற்றில் சிலவற்றை ஒரிஜினலாக கல்கத்தாவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இப்படி ஒரு சின்ன ஆரம்பத்திலிருந்து அது வர வர தொடர்ந்து exposure வந்து கொண்டே இருந்திருக்கிறது. இப்போதும் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்னால் எங்கும் போக முடியவில்லை. பத்து வருடங்களாக என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இங்கே அந்த மாதிரி இருக்கு, இல்லை என்று ஒன்றும் சொல்ல முடியவில்லை. It may vary in its intensity. It may vary in the degree of intensity in relationship now, but it is there, and it has been continuing.

உங்களுடைய அனுபவம் அல்லது அனுபவம் சார்ந்த அறிவு தமிழ்நாட்டைத் தாண்டியும் செறிவூட்டப் பட்டிருக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்டி ருக்குமா, அல்லது வெளியே சென்றதனால் அது மன விரிவு பெற்றதா?

பெரிய பெரிய அனுபவங்கள், ’பெரிய’ன்னு சொன்னால், என்னை உருவாக்கிய அனுபவங்கள் என்று சொல்லணும். அதெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கின்றன. என்னைத் தேடிப் போக வைத்த அனுபவங்களை விட தற்செயலாக என் முன்னால் வந்து நின்றவை அதிகம். முதலில் அவற்றை நான் தேடிப் போனேன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவை என் முன் எதிர்ப்பட்டு, அதில் எனக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டவுடன், நான் அதைத் தொடர்ந்து தேடிப்போக, அதன் மூலம் பின்னால் பல அனுபவங்கள் கிடைத்தன என்று சொல்லலாம். ஆனால் இங்கேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. நிச்சயமாக இப்படி என்றும் சொல்ல முடியாது. அப்படி என்றும் சொல்ல முடியாது. ஆனால் அங்கே இருந்த அனுபவங்கள் இங்கே கிடைக்காது என்று சொல்லலாம். எனக்கு இங்கே அவை கிடைக்கவில்லை. இங்கே கிடைத்த அனுபவங்களுடன் என் உறவு எப்படி இருந்ததோ அதை, இன்னும் intense ஆக, மிக உக்கிரமாக அங்கே தொடர முடிந்தது.

ஆனால் அங்கே கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்கள் எதுவுமில்லாமல் நான் இங்கேயே இருந்திருந்தால் எனக்கு எவ்வித அனுபவமும் கிடைக்காமலேயே போயிருக்கும். ஓவியங்கள், சிற்பங்கள் என்று இப்போ இங்கேயும் ஏதோ இருக்கத்தான் இருக்கின்றன. “இப்போ” என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லணும். ஆனால் அப்போ அங்கே அவற்றோடு எனக்குக் கிடைத்த உறவுகள் குறிப்பிடத்தகுந்தவை. அதுபோல ஹிந்துஸ்தானி சங்கீதம் ஈர்த்த அளவு என்னை கர்நாடக சங்கீதம் ஈர்க்கவில்லை. இங்கு கர்நாடக சங்கீதம் சாகித்யத்தைச் சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் ஹிந்துஸ்தானி சாகித்யத்தைத் தாண்டி சஞ்சரிக்கிறது. ஒரு ஒன்றரை மணிநேரம் ஸ்லாமத் அலிகான் பாடுகிறார் என்றால் அவருக்கு வேண்டிய சாகித்யம் இரண்டே இரண்டு வரிகள் தான். மீதி எல்லாம் ’ஆ’ஹா காரத்திலேயே இழையும் இசைதான். வெற்று சப்த லோகத்தில் அவர் இழைக்கும் மாயம்தான். ஆனால் அது இங்கே சாத்தியமில்லை இங்கே சாகித்யத்தில் தான் ஒரு ராகத்தின் சப்த ரூபம் சொல்லப்படுவதால் சாகித்யத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. வாத்திய சங்கீதமாக இருந்தால் கூட ’நான் இந்தக் கீர்த்தனை பாடுகிறேன்’ என்று சொல்லித்தான் பாடுகிறார்கள். வாசிக்கிறவர் சொல்லாவிட்டலும் கூட, “காபி பாடினீங்களே ரொம்ப நல்லா இருந்தது, ‘என்ன தவம் செய்தனை’ தானே பாடினீங்க?” என்று கேட்டு மகிழ்கிறார்கள். வாத்தியத்தில் மொழியும் அர்த்தமும் தாண்டிய சப்த லோகத்தை உருவாக்கலாம் இல்லையா? எனக்குத் தெரியவில்லை. இதைச் சொல்வதற்கு எனக்குத் தகுதி உண்டா என்பதும் புரியவில்லை. ஆனால் என்னுடைய அனுபவத்தில், என்னுடைய பார்வையில் இதைச் சொல்கிறேன்.

நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது, எப்படி?

இப்போது யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது. பள்ளிப்பருவத்திலேயே வித்யாசமான மனது கொண்டவனாக இருந்திருக்கிறேன் என்று. சிறு வயதில் எனக்கு என் அக்கறைகளும், அனுபவங்களும் சாதாரணமாகத்தான் தெரிந்தன. ஆனால் நான் எழுதத் தொடங்கியது முதன் முதலில் ’எழுத்து’ பத்திரிகையில்தான். அதுவும் தற்செயலாகத்தான் நேர்ந்தது.

நான் ஹிராகுட்டில் இருந்து டெல்லிக்குச் சென்று, அங்கு மூன்று வருஷம் இருந்து விட்டு, பின்னர் ஜம்முவிற்கு மாற்றலாகிப் போனேன். அங்கே ஒரு மூன்று வருடம் இருந்தேன். அதற்கு முன்னால் டெல்லியில் இருந்தபோது அங்கே வீட்டிலிருந்து ஆபிஸிற்குச் செல்லும் வழியில் ஒரு வீட்டின் ஒரு காரேஜ். அங்கே ஒரு ரீடிங் ரூம் இருக்கும். அதில் கல்கி, ஆனந்தவிகடன் எல்லாம் வந்திருக்கும். அத்தோடு எழுத்து என்ற ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அது சி.சு.செல்லப்பாவினுடையது. அவர் எழுதிய ’மணல் வீடு’ கதையை ஏற்கனவே நான் படித்திருந்தேன். அதுபோல க.நா.சுவின் ’ஒருநாள்’ என்ற நாவலை நான் ஹிராகுட்டில் இருந்தபோதே படித்திருந்தேன். லா.ச.ரா., ஜானகிராமன் தொகுப்புகள் எல்லாம் கலைமகள் பிரசுரத்தின் மூலம் வரும். அதையும் நான் முன்பே படித்திருக்கிறேன். பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமணியன் எழுத்துக்கள் எல்லாம் எனக்கு முன்பே பரிச்சயமானவைதான். எழுத்து பத்திரிகையைப் பார்த்தால் இவர்கள் எல்லாம் அதில் எழுதியிருந்தார்கள். என் மனத்தில் இருந்ததை எல்லாம் இவர்கள் சொல்கிறார்களே என்று எனக்கு மிகவும் ஆச்சரியம்.

அதற்கு முன்னால் ஹிராகுட்டில் இருந்த போது ‘சாந்தி’ என்ற பத்திரிகை வரும். சிதம்பர ரகுநாதன் கதைகள், கு.அழகிரிசாமி கதைகள் என்று தொகுத்து புத்தகங்கள் வந்தன. சிதம்பர ரகுநாதன் தான் சாந்தியை நடத்திக் கொண்டிருந்தார். நான் ஒவ்வொரு மாதமும் நாலணா ஸ்டாம்ப் அனுப்பி அதை வரவழைத்துப் படிப்பேன். அதில் எல்லோரும் போற்றிக் கொண்டிருந்த கல்கியின் எழுத்துக்களைப் பற்றி ஒருமுறை அவர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதைப் படித்ததும் தான், நாம் நினைப்பதையே இவரும் எழுதியிருக்கிறாரே. ஆக, நாம் நினைத்தது நியாயமான ஒன்றுதான். வெளியில் சொல்லக் கூடிய ஒன்றுதான், அதில் பைத்தியக்காரத்தனம் ஏதும் இல்லை என்ற எண்ணம் வந்தது. அதே சமயம் அதெல்லாம் எழுத்திலும் வெளிவந்ததும் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. என்னை மாதிரி நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷமும் வந்தது.

பின் எனக்கு ஜம்முவுக்கு டிரான்ஸ்பர் ஆனது. ஜம்முவில் தமிழர்கள் என்று யாருமில்லை. ஆக, நான் என் தமிழ் அக்கறைகளைப் பேசி, பகிர்ந்துகொள்ள ஜம்முவில் எனக்கு யாருமில்லை. எனக்கு ’எழுத்து’ தவறாமல் வரும். சுதேசமித்திரன் வரும். அதில் ஜானகிராமன் மலர்மஞ்சம் என்ற ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தொடர்கதைகள் நிறைய வரும். எழுத்து இதழில் ’பெரியவன்’ என்று ஆர்.சூடாமணி எழுதிய கதை ஒன்று வந்தது. செல்லப்பா வேறு அந்தக் கதையைப் பாராட்டி ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அந்தக் கதை எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் எழுத்தில் ஏன் வெளியானது? என்று எனக்கு எரிச்சல். உடனே நான் எழுத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேன். “இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று இதை வெளியிட்டிருக்கிறீர்கள், இது மிகவும் அபத்தமான கதையாக இருக்கிறதே! எழுத்தில் வருமளவிற்கு இதில் என்ன இருக்கிறது?, வேறு எங்காவது வெளியாகி இருந்தால் அதுபற்றி நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் உங்கள் எழுத்து பத்திரிகைக்கு இது ஏன்?” என்று கேட்டு நான் எழுதியிருந்தேன். உடனே சி.சு. செல்லப்பா அந்தக் கடிதத்தைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, எழுத்து தலையங்கத்திலும் என் கடிதத்தைப் பாராட்டி சில வரிகள் எழுதிவிட்டு, தொடர்ந்து என்னை எழுத்துக்கு எழுதுமாறு கடிதமும் எழுதினார். அப்படித் தொடங்கியதுதான் எழுத்துப் பயணம். ஜம்முவில் எனக்குப் பேசுவதற்கு யாரும் ஆள் கிடைக்கவில்லை. யாரும் இல்லவும் இல்லை. மனதில் இருப்பதை எழுத ஒரு இடம் கிடைத்தது. எழுதினேன். அவ்வளவுதான். ஆக, தற்செயலோ அல்லது விபத்தோ, எப்படி எடுத்துக்கொண்டாலும், இப்படித்தான் நான் இங்கு, எழுத்துலகுக்கு வந்து சேர்ந்தது.

அப்படி நீங்கள் எழுதிய முதல் படைப்பு எது?

படைப்பு என்று சொல்வதா என்று எனக்குத் தெரியாது. எழுத்து, அல்லது என் எழுத்து என்று பேசலாமே. எனக்கு ஆத்மார்த்தமாக மனசுக்குள் இருக்கும் எதையும் இந்த மாதிரியெல்லாம் எழுதலாம் என்று எழுதுவதற்கு முதலில் தைரியம் கொடுத்தவர் ரகுநாதன். அவரது கதைகளைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டவன் நான். அவர் ஒருமுறை ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழ்நாட்டுக் கதைகள், நாவல்கள் எல்லாமே காதல், அது இது என்று மிக மோசமாக இருக்கிறது, வர்க்கப் போராட்டம், பாட்டாளிகள் போராட்டம், தொழிலாளர்கள் பிரச்சனை என்று மக்களை முன்னெடுத்துச் செல்லும் படைப்புகளையெல்லாம் யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று. இப்படித்தான் ஏதோ எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்தது எதுவும் பிடிக்கவில்லை எனக்கு. வேடிக்கையாகவும் இருந்தது. உடனே, எழுத்து பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதினேன். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் அமிர்தசரஸ் மகாநாடு நடந்து முடிந்திருந்தது. அதன் தீர்மானங்கள் மக்கள் பிரச்சனைகளைப் பற்றித்தானே இருந்தது? உடனே நான் அவருக்கு “நீங்கள், பஞ்சும் பசியும் எழுதியிருந்தீர்கள், அடுத்தபடியாக உங்கள் கட்சியின் அமிர்தசரஸ் மகாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி நாவல் எழுதுங்கள். அதில் நிறைய பாட்டாளிகள் பிரசினைகள் இருக்கு” என்று எழுத்து பத்திரிகைக்குக் கடிதம் எழுதினேன்

‘பஞ்சும், பசியும்’ நாவலை முதல் சமூக புரட்சி என்றும் பாட்டாளிகள் என்றும் பேசும் முதல் நாவல் என்று ஏதேதோ சொல்லுகிறார்கள். அதில் ஒரு தொழிலாளி, முதலாளியின் மகளைத் தான் காதிலிக்கிறான். ஏன் அவன் காதலிக்க வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? இப்படி என்னெனவோ பேத்தல் எல்லாம் அதில் இருந்தது. அதில் முக்கியமானது அவர் பாட்டாளி மக்களுக்குத் தலைமை தாங்குகிற ஒரு புரட்சியாளர். அவருக்கு முதலாளியின் மகள் மீது காதல். முதலாளியோ ஒரு வில்லன். டிபிகல் எம்.ஜி.ஆர் சினிமா கதை. இதைக் கடுமையாக விமர்சித்து நான் எழுத்து பத்திரிகைக்கு எழுதினேன். செல்லப்பாவும் அதைப் பிரசுரம் செய்து விட்டார். அதனால் ரகுநாதனுக்கு என் மேல் கோபம். “என்ன இருக்குன்னு இதைப் போட்டீங்க?” என்று செல்லப்பாவிடம் சண்டை போட்டதாக, அடுத்த முறை விடுமுறையில் நான் சென்னை வந்த போது செல்லப்பா சொன்னார். ஆக, இந்த ரகுநாதன் நான் முன்னர் அறிந்திருந்த ரகுநாதன் இல்லை. விசுவாசமான கட்சித் தொண்டராகக் கீழே இறங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்ததாக நான் எழுதியதுதான் பாலையும் வாழையும்.

அதைப் பற்றிச் சொல்லுங்களேன்!

தமிழ்நாட்டில் எல்லாத் தளங்களிலும், எல்லா கலைகளிலும் ஒரு வறட்சி. creative vision இல்லாத, creative energy, creative spirit என்பதே இல்லாத ஒரு வறட்சி. ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு காவியத்திற்கு, ஒரு படைப்பிற்கு உரை எழுதினார்களே தவிர, அவர்கள் அதை கிரியேடிவாகப் பார்க்கவில்லை. அதாவது, ஏன் என்று பார்க்கவில்லை. அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதற்கு உரை எழுதினார்கள். அவ்வளவுதான். நம் பெரிய அறிஞர் பெருமக்கள் எல்லாம் வெறும் உரையாசிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். அரும்பத உரையாசிரியரிலிருந்து ஆரம்பித்து இன்றைய, அல்லது நேற்றையவா?, மு.வரதராசனார் வரைக்கும். ஆக இது பாலை நிலம் இங்கே வாழைப்பயிருக்கு இடமில்லை என்பதாக எழுதியிருந்தேன். So that was the first long article covering all areas of creative endevour. அது எழுத்தில் வெளியானது. 1961ல் என்று நினைக்கிறேன்.

அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

வரவேற்பு என்றால் எழுத்து பத்திரிகை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அவ்வளவு தூரம் அதுவும் பரவியது. அகிலன், நா.பா என்னும் அந்த அளவிற்குப் பரவவில்லை. பரவாது. ஆனால் எழுத்து எடுத்துப் போகும் இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தது. சிலோனிலிருந்து அதற்கு நல்ல கவனிப்பு இருந்தது. ஆனால் இங்கே அந்த அளவிற்கு இல்லை. ஆனால் மிக முக்கியமான விஷயம் இதையெல்லாம் பற்றி எழுத முடிந்தது, அதைப் படித்து வரவேற்கிறவர்களும், கவனம் கொள்கிறவர்களும், தொடர்பவர்களும் இருந்தார்கள் என்பதுதான். அந்த எழுத்துக்கள் அந்தக் காலத்தில் அதைப் படித்தவர்களிடையே ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது ஒரு புது குரலாக அவர்களுக்கு இருந்திருக்கிறது. இருந்தாலும் அது சிறிய வட்டம் தான். மிகச் சிறிய வட்டம்.

படைப்பின் மீதான விமர்சனத்தை விடுத்து விமர்சனம் செய்தவரையே கடுமையாகச் சாடும் இலக்கியப் போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?

அதற்கு என்ன செய்வது? அந்த மாதிரியான சூழல்கள்தான் இங்கே இருக்கின்றன. நான் சில இயக்கங்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியிருக்கிறேன். அதே போன்று இலக்கியத்தை வியாபாரப்படுத்தியவர்களை - தொடர்கதை போன்று - அகிலன், நா.பா வகையறாக்களை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இவர்களெல்லாம் இலக்கியம் என்று சொல்லி வேறு ஏதோ காரியத்தைச் செய்து கொண்டிருந்தவர்கள். அதற்கு எதிர்வினையாகக் கருத்துக் கூறாமல் என்னை சாதிப் பெயர் சொல்லித் திட்டியும், அமெரிக்கக் கைக் கூலி என்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள் எழுதினார்கள், பேசினார்கள். மற்றவர்களோ, ”நீ யார் என்னைச் சொல்ல, லட்சோப லட்சம் வாசகர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நீ எதற்கு?” என்று சொன்னார்கள். அதாவது பரவாயில்லை. அவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அது இலக்கியம் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் இருக்கலாம். சாதாரண மக்களின் ரசனைக்கேற்ப எழுதுகிறவர்கள், அவர்கள் எழுத்தில் ஒரு நிலைப்பாடு உண்டு. ஆகவே அவர்கள் கேள்வியில் ஒரு அர்த்தமுண்டு. அவர்கள் பார்வையை எழுதினார்கள். அதில் பொய்யில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் எனக்கு அமெரிக்காவில் இருந்து மணியார்டர் வருகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இது திட்டமிட்ட தெரிந்தே செய்த பொய் பிரசாரம். தி.க.சிவசங்கரனும் அவர்களுள் ஒருவர். சிகரம் செந்தில்நாதன் தன்னுடைய பத்திரிகையில் அப்படி எழுதினார். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? என்று யாரும் கேட்கவில்லை. கோவை ஞானி மட்டுமே, ”ஏன் இப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாராம். ஞானியை தொன்னூறுகளில் முதல் முறையாக கோயம்புத்தூர் போயிருந்தபோது சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச் சொன்னார். அதற்கு இவர்கள், ‘அவர் அமெரிக்கக் கைக்கூலியாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி எழுதியதால் இனிமேல் அமெரிக்காவிலிருந்து பணம் வருவதாக இருந்தால் அது வராமல் தடுத்து விடும் இல்லையா?’ என்றார்களாம். என்னை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆள், அமெரிக்காவுக்கு அடிக்கடிப் போய் வருகிறேன் என்றெல்லாம் 1994-95களிலிருந்தே கூறி வருகின்றனர். இன்னும் நான் அமெரிக்கா என்ன, கும்மிடிபூண்டி கூட நான் போனதில்லை. இந்தத் தகவல்களெல்லாம் வனமாலிகை நாகர்கோவிலிலிருந்து நடத்திய ஒரு பத்திரிகையில் வந்திருக்கிறது. அதை எழுதியவர் இப்போதும் இருக்கிறார். ஆனால் என்னை அமெரிக்க ஏஜெண்ட் என்று சொன்னவர்களின் கூட்டம் தலைவலி வயிற்று வலி என்று சொல்லிக்கொண்டு ரஷ்யா போய் வருவதை வழ்க்கமாகக் கொண்ட கூட்டம்தான். அடிக்கடி மாஸ்கோவிலிருந்தும் இவர்களுக்கு அழைப்பு வரும். இவர்களும் ஏதாவது அரசியல் முடிவு எடுக்க வேண்டுமெனில், இவர்களுக்கு உடனே வயிற்று வலி வரும். அதற்கு நம்மூர் ஆஸ்பத்திரி உதவாது. மாஸ்கோ போவார்கள். இப்போது அந்த வயிற்று வலி, தலை வலி எல்லாம் வருவது நின்று விட்டது போலும். அவர்கள் மாஸ்கோ போவதும் நின்றுவிட்டது.

ஒருமுறை நக்கீரனில் தேர்தல் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். நக்கீரன் என்னை எழுதச் சொல்லிக் கேட்டு எழுதியதுதான். அப்போது நக்கீரன் பத்திரிகையையே நான் பார்த்ததில்லை. ”நான் என்ன எழுதுவது?” என்று என்னை எழுதச் சொல்லிக் கேட்க நக்கீரனிலிருந்து வந்தவரைக் கேட்டேன். ”இப்போ எலெக்‌ஷன் நடக்கப்போகுதுங்களே, அதைப் பத்தி எழுதுங்களேன்,” என்று சொன்னார்கள். எழுதினேன். அதில், அந்தக்காலத்தில் நீதிக்கட்சியின் பி.டி.ராஜனை, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக எதிர்த்து நின்ற பி.ராமமூர்த்தி, சிறையில் இருந்தவாறே ஜெயித்ததை, ’பிரியாணிப் பொட்டலங்கள், புடவை, வேட்டி, கொடுக்காமலேயே ஜெயித்தார்’ என்று எழுதியிருந்தேன். அது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் உறுத்தியிருக்கிறது. அதற்கு எனக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின தலைவரிடமிருந்து எதிர்ப்பும் கண்டனமும் வந்தது. அந்தக் கட்சியின் தலைவர் நக்கீரனுக்கு போன் போட்டுத் திட்டினார் என்று சொன்னார்கள். அந்தத் தலைவர் திட்ட ஆரம்பித்தால் என்ன பாஷையில் என்ன மாதிரியான திட்டுக்கள் விழும் என்று அனேகமாக எல்லோருக்கும் தெரியும். நீங்களும் யூகித்துக் கொள்ளலாம் என்றார்கள். பெரியார் திராவிட கழக தலைவர் ஒருவர் தன் மாப்பிள்ளையிடம், “இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க ஃப்ரண்டை ’வெளியே தலை காட்ட வேண்டாம்னு சொல்லி வை.” என்று சொன்னதாக மாப்பிள்ளை எனக்கு டெலிபோனில் சொன்னார். அந்த மாப்பிள்ளை எனக்கு நண்பர். நான் தில்லியில் இருந்த காலத்திலிருந்து என் நண்பர். அவர் திராவிட கழக அனுதாபி என்பது எனக்குத் தெரியும். திராவிட கழகங்கள் பற்றி என் நிலை என்ன என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தாலும் நாங்கள் நண்பர்கள். அவர் எனக்கு டெலிபோனில் எச்சரிக்கை செய்தார். இப்படியெல்லாம் இங்கே சூழல் நிலவியது. நிலவிக் கொண்டிருக்கிறது.

பல எழுத்தாளர்களது நூல்களைப் படித்து நீங்கள் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். நிறைய படைப்பாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?

அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆரம்ப காலத்தில் நல்ல எழுத்து என்று எடுத்துச் சொல்ல கொஞ்சப் பேர்தான் இருந்தார்கள். முடிந்தது. ஆனால் இப்போது நிறைய பேர் வந்திருக்கிறார்கள். எல்லோரையும் படிப்பது என்பது சாத்தியமில்லாதது. மேலும் நான் ஒன்றும் registrar of companies கிடையாது. அவங்க மாதிரி எல்லாத்தையும் படித்து நல்லது கெட்டது முத்திரை குத்த. என் விருப்பத்திற்கு, என் தேடலுக்கு படிக்கிறேன். ஆகையால் படிப்பது என்பது எனது சுதந்திரம். எனக்குப் பிடித்திருந்தால் படிக்கிறேன். படிப்பது மட்டுமில்லை, எனக்கு இன்னும் எத்தனையோ வேறு ஈடுபாடுகள். ஆகவே, தற்போது படிக்கிற நேரம் குறைவுதான். அப்போது ஹிராகுட்டில், ஜம்முவில் இருந்தபோது நிறைய நேரம் இருந்தது. நிறைய விஷயங்களைப் படிக்க முடிந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. மேலும் நிறைய படைப்பாளிகளைப் பற்றி நான் அபிப்ராயம் சொன்னதும் நடந்திருக்கிறது, அதற்கு மாறாக என் அபிப்ராயஙக்ள் தவறாகியிருப்பதும் உண்டு. துளிர்ப்பதைக் கண்டு சந்தோஷப்படுகிறோம். துளிர்ப்பது எலலாமே செடியாகி மரமாகி, காய்த்து, பழம் தர அப்படியெல்லாம் நடப்பதில்லையே.

தற்காலப் படைப்பாளிகளில் தங்கள் மனம் கவர்ந்தவர்கள் என்று யார், யாரைச் சொல்வீர்கள்?

ஜெயமோகன், நாஞ்சில்நாடன், யூமா வாசுகி என்று பலரைச் சொல்லலாம். யூமா வாசுகியின் இரத்த உறவு ஒரு முக்கியமான படைப்பு. படிப்பது என்பது இன்பத்துக்காக, பொழுது போக்குவதற்காக, சிந்தனையை வளர்ப்பதற்காக என்று என்னென்னவோ சொல்வார்கள். ஆனால் இரத்த உறவின் ஒரு வரி கூட உங்களை சந்தோஷப்படுத்தாது. ரொம்பவும் gloomy and depressing. இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? இப்படியெல்லாம் பாட்டிகள், அப்பாக்கள் இருப்பார்களா? என்று திகைக்க வைக்கும். ஒரு இடத்தில் கூட, ஒரு சிறு புன்னகையைக் கூட தராத படைப்பு. எங்கு பார்த்தாலும் கொடுமைப் படுத்தும் உறவுக்காரர்கள். கொடுமைப்படுத்தும் உலகம். குழந்தைகளிடம் கூட ராட்சஸத்தனமாக நடந்து கொள்ளக் கூடிய மனிதர்கள் என்று. நினைத்துப் பார்க்கவே இயலாத படைப்பு. எப்படி இது சாத்தியமானது? எது உங்களை ஆர்வத்தோடு படிக்க வைப்பது? அது ஒரு முக்கியமான நாவல்.

அது போல இமையம். அவருடைய செடல் போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. தேவதாசிகளின் வரலாற்றை மாறுபட்ட கோணத்தில் சொல்வது. ஒரு சின்னப் பெண்ணை பொட்டுக்கட்டி விடுவது, அவள் மாட்டேன் என்று சொல்வது என தலித் இலக்கியத்தில் அது ஒரு மாறுபட்ட படைப்பு. rebels can come from anywhere, from any strata of society. இதற்கு கல்வி வேண்டும், அப்போதுதான் சுதந்திரம் பற்றித் தெரியும் என்பதெல்லாம் கிடையாது. இது மனித சுபாவம். உள்ளுக்குள் இருப்பது. அதை யாரோ ஒருவன் தத்துவமாக எழுதி விட்டுப் போகிறான், அவ்வளவுதான். செடல் ஒரு தலித் பெண். அவள் எந்தப் பள்ளியில் படித்தாள்? பெற்றோரை, சமூகத்தை எதிர்க்கும் உணர்வும் தைரியமும் அந்த தலித் பெண்ணுக்கு யாரைப் பார்த்து வந்தது? அவளுடைய ரோல் மாடல் யார்? அவளுக்கு யார் இன்ஸ்பிரேஷன்? அது அவளுக்கு இயல்பாக வந்தது. எப்படி வந்ததென்று எப்படிச் சொல்ல முடியும்? அது மனிதர்களின் இயல்பான சுபாவம் இல்லையா? எல்லாவற்றுக்கும் மேலாக, தலித் சமூகங்களில் கூட பொட்டுக்கட்டும் வழக்கம் உண்டு என்பது இமையம் சொல்லித்தான் எனக்குத் தெரியும். இது போன்ற படைப்புகள் முக்கியமானவை. [இந்த நாவலைக் குறித்து வெ.சா சொல்வனத்தில் எழுதிய கட்டுரை: “பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்”] இப்படி அவர் எழுதி யிருப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் பிடிக்காது. தலித் சித்தாந்திகளுக்கும் பிடிக்காது. செடல் என்னும் இந்த தலித் சிறுமியிடம் காணும் எதிர்ப்புணர்வு, சமூகத்துடன் போராடும் தைரியம், எதுவும் தலித்துகளுக்காக்ப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சித் தலைவர்களிடம் கிடையாது. ஆக, செடலுக்கு ரோல் மாடல் செடலே தான்.

பெண் கவிஞர்களின் பெண்ணியம் மற்றும் பெண் உடல் மொழியை அடையாளப்படுத்துதல் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது இயல்பானதுதானா, அல்லது வலிந்து சொல்லப்படுவதா?

அது வலிந்து சொல்லப்படுகின்ற விஷயம்தான். இயல்பாக வரக்கூடிய, உள்ளே இருக்கும் ஆதங்கமோ, ஆத்திரமோ, வெளிக்கிளம்பி எரிமலை வெடிக்கிற மாதிரி வெடிக்கக் கூடிய நிலையில்தான் நாம் பெண்களை வைத்திருக்கிறோம். அது வேறு விஷயம். ஆனால் இதை எழுதுகிறவர்களிடமெல்லாம் உண்மையில், உள்ளத்தில் அது போன்று எரிமலையாக ஏதும் கொந்தளிக்கிறதா என்பது ஒரு விஷயம். மேலும் அந்த எழுத்துக்கள் எல்லாம் உண்மையில் எரிமலையாகக் கொந்தளிக்கக் கூடியவைதானா என்பதும் ஒரு விஷயம். இயல்பாக வரக் கூடியதென்றால், எந்த மொழியில் வர வேண்டுமோ அந்த மொழியில் வரவில்லை அது. தேடிச் சென்று பெற்ற மொழியாக அது இருக்கிறது. பெண்ணிய எழுத்துக்கு அடையாள மொழி இதுதான் என்ற முன் தீர்மானத்தில், நிர்ப்பந்தித்து வரும் ஒன்றாக அது இருக்கிறது. அது சமஸ்கிருத மொழியாகவே இருந்தாலும். அது ஏன்? அது செயற்கைதானே! இதெல்லாம் கொத்துக்கடலையில் மசாலா தூவுவது போன்ற காரியம்தான். கொரிக்க சுவையாக இருக்க வேண்டாமா? அப்பத்தானே சன்ங்க வாங்குவாங்க.

இதெல்லாம் உண்மையாகவே இருந்தால் இவர்களில் ஒரு சிலர் ஏன் பெண்களை மதிக்காத, பெண்களைக் கேவலப் படுத்துகிற, பெண்களை போகப் பொருளாகவும், அலங்காரப் பொருளாகவுமே நினைக்கிற கட்சியில், அக்கூட்டத்தினருடன் இணைய வேண்டும் என்பதும் ஒரு மிகப்பெரிய கேள்வி. இது மிகப்பெரிய முரண் இல்லையா? இதில் எங்கே இயற்கை இருக்கிறது?

புதுக்கவிதை வந்த பிறகுதான் தமிழில் சமஸ்கிருத வார்த்தைகள் மீண்டும் அதிகம் புழக்கத்தில் வந்தன என்பது குறித்து

பெரும்பாலும் வானம்பாடிகளிடமிருந்து வந்தவைதான் அவை. முதலாவது அவர்கள் பேசக் கூடிய விஷயங்கள் கோஷங்களாகவே வந்து விழுகின்றன. அவர்கள் எழுதுவது அனுபவங்களாக இல்லை. உரத்த கோஷங்கள். அவை எல்லாமே மிகச் செயற்கையானவை. இரண்டாவது அவர்களது மொழியும் செயற்கையானது. ஒரு பரவலான கவனம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்ததுதான் அது. சாதாரணமாக கவிஞர்கள் எல்லாம் தனித்த ஆளுமைகளாக இருப்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர்கள் போல, வானம்பாடிகள் எல்லாம் ஒரு யூனியன். திராவிட கழக கவிஞர்கள் போல, வானம்பாடி என்பது ஒரு ட்ரேட் யூனியன். அவர்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து செயல்பட்டவர்கள். பின்னால் பிரிந்து போகும் வரைக்கும் அவர்கள், ஒருவருக்கொருவர் அனுசரணையாகத்தான் பேசினார்கள். தங்களுக்குள் சப்போர்ட்டாக இருந்தார்கள். கோவை ஞானி கூட இவர்களைப் பற்றி மிக உயர்வாக, மிகுந்த நம்பிக்கையோடு எழுதினார். வெளிச்சங்கள் என்று வெளிவந்த வானம்பாடிகள் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில். ஆனால் இப்பொழுதும் அதே வார்த்தையைச் சொல்வாரா என்பது எனக்குத் தெரியாது. நியாயமான பார்வை மாற்றம் என்பது, கருத்து மாற்றம் என்பது அப்படித்தான் வர வேண்டும். திடீர் திடீரென்று கட்சி மாறுவது பார்வை மாற்றம் ஆகாது.

முக்கியமான பெண் படைப்பாளிகள் குறித்து

தமிழச்சி ஒரு நல்ல பேச்சாளர். சுமுகமாக ஏதும் பந்தா இல்லாமல் அனைவருடனும் பழகக் கூடியவர். அதுபோலத்தான் சல்மாவும். அவரது ஒரு சில கவிதைகளில் கையாண்ட மொழி செயற்கையாக இருந்தாலும் அவர் எழுதிய இரண்டாவது ஜாமங்களின் கதை ஒரு குறிப்பிடத்தக்க மிகவும் கவனிக்க வேண்டிய படைப்பு. அது அந்தச் சமூகத்து மக்கள் அன்றாடம் பேசும் வாய்மொழியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அவர்களது வாழ்க்கையை, அவர்கள் உறவுகளுக்குள்ளேயே உள்ள ஆசாபாசங்களை, தனக்குத் தெரிந்த உலகைச் சொல்லும் ஒரு இயற்கையான படைப்பு. அதை எழுதுவதற்கு உண்மையிலேயே ஒரு அசாதாரண தைரியம் வேண்டும். அதுவும் ஒரு பெண்ணுக்கு. முஸ்லீம் மத ஆண்களுக்கே இல்லாத தைரியம் சல்மாவிடம் இருக்கிறது. அது போல பாமாவின் படைப்புகளையும் சொல்லலாம். வெளியிலிருந்து தரப்பட்ட எந்த விதமான தியரிகளையும் பின்பற்றாமல், இயல்பாக, வாய்மொழி இலக்கியமாக அவரது எழுத்து இருக்கின்றது. ஆனால் அவரது அண்ணன் (ராஜ் கௌதமன்) ஒரு தியரிட்டீசியன். ஒரு கொள்கையை உருவாக்கிச் சொல்லும் அவசியம் அவருக்கு. அது அரசியல் இலக்கியம். ஆனால் பாமாவுக்கு வாழ்க்கையை எழுதினால் போதும். அந்த வாழ்க்கையின் யதார்த்தம் எந்த அரசியலுக்கு இட்டுச் சென்றாலும் சரி. பரவாயில்லை. அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

(இன்று வழங்கப்படும் விருதுகள், தன்னுடைய சமகாலத்திய எழுத்தாளர்களுடனான நட்பு, ஈழ இலக்கியம் குறித்த வெ.சா-வின் பார்வை - அடுத்த இதழில்)

ஹிராகுட்டில் இருந்த போது நண்பர்களோடு சேர்ந்து படித்தோம் என்று சொன்னீர்கள், இலக்கியப் பரிச்சயங்களுக்கு அது ஒரு சிறந்த வழிதானா?

யாருமே தனித்திருந்து தனக்குள்தான் படிக்க வேண்டும். It’s something that you do in your - in the privacy of your - room, something between you and the book, Between you and the person and the world that you know, that emerges out of the book. அந்த மாதிரிதான். ஆனால் நாலைந்து பேர் சேர்ந்து ஒரு காரியம் செய்யும் போது ஒருவித ஒட்டுதல் ஏற்படுகிறது. இரண்டாவது அங்கே எனக்கும் சீனிவாசனுக்கும் இருந்த நெருக்கம். மூன்றாவது எல்லோருமே சேர்ந்து செய்யக் கூடிய காரியத்தைத்தான் செய்திருக்கிறோம். மற்றவர்களுக்கு அதனால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் எல்லோரும் விருப்பப்பட்டுத்தான் அதற்கெல்லாம் வந்தார்கள். ரஸ்ஸலின் மேரேஜ் அண்ட் மாரல்ஸ் எல்லாம் தனியாக உட்கார்ந்து படித்தால் அல்லது ஒருவர் படித்துக் கேட்டால் அதன் ஆழம் தெரியாமல் போய் விடும் என்றெல்லாம் சொல்லக் கூடிய புத்தகமும் அல்ல. நாங்கள் படித்தபோது பெரிய டிஸ்கஷன்ஸ் எல்லாம் இருக்காது. எல்லாம் முடிந்த பிறகு சீனிவாசன் ஏதாவது கமெண்ட் செய்வார். சமயங்களில் அது அடாவடித்தனமாக இருக்கும். எல்லாம் strange and very interesting characters. இப்படித்தான் அந்தக் கூட்டு வாசிப்பு அனுபவங்கள் எல்லாம்.

விருதுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதாவது தகுதியானவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்தென்ன?

இதைப் பற்றிப் பேசுவதற்கே லாயக்கில்லை. இந்தச் சமூகத்திலிருந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் வரும். நாம் எதிர்பார்க்க முடியும். அதைப் பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்தச் சமூகம் மாறினால் ஓரளவு இவையெல்லாம் மாறலாம் என்று எதிர்பார்க்கலாம். உஸ்தாத் விலாயத் அலி கான், ”நீ யார் எனக்கு விருது கொடுக்க?” என்று விருது கொடுக்க வந்தவர்களைக் கேட்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை கோட்டூர்புரத்தில் அவர் வசித்த தெருவுக்கு வைக்கலாம் என்று முடிவு செய்தபோது, ”வேண்டாம், என்னை விட சீனியர் டி.கே.பட்டம்மாள். அவர் பெயரை வையுங்கள்,” என்று சொன்னார். அது போல ஆந்திராவில் ஒரு எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது, டி.சாம்பசிவ ராவ் அதை விளாசித் தள்ளிவிட்டார். சாகித்ய அகாதமியின் ஜர்னலில் அது வெளியானது. சாம்பசிவ ராவ் சாகித்ய அகாதமியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். அவர் அங்கே வேலை பார்த்துக் கொண்டே, அவர்கள் அகாடமி தேர்ந்தெடுத்துப் பரிசளித்த நூலை எப்படி விமர்சிக்கலாம் என்று பெரிய பிரச்சினை வந்தது. அப்போது சாகித்ய அகாதமியின் பிரெசிடெண்ட் ஆக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்தான் அவர் வேலைக்கு ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றினார். விஷயம் என்னவென்றால், சாகித்ய அகாடமியில் வேலை செய்யும் தெலுங்கு இலக்கிய ரசிகருக்கே விருது தரப்பட்ட புத்தகத்தின் தகுதி அகாடமி பத்திரிகையில் எழுதி கண்டிக்குமளவுக்கு மோசமாக இருந்திருக்கிறது. தன் வேலையைப் பணயம் வைத்து எழுதிய அவர் என் மதிப்புக்குரியவரானதில் ஆச்சரியமில்லை. இது எங்கள் இருவருக்கும் இயல்பானது.
தி.ஜானகிராமனுடன் வெ.சா
லா.ச.ராமாமிர்தத்திற்கு விருது கிடைத்தபோது, என்னை அதுகுறித்து எழுதித் தருமாறு சாம்பசிவ ராவ் என்னைக் கேட்டுக் கொண்டார். நான் எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்துவிட்டு என்னை அலுவலகத்திற்கு வருமாறு கூப்பிட்டார். நானும் போனேன். அப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து அகாடமி வெளியிடும் இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிகைக்கு என்னை எழுதச் சொன்னார். என்னுடைய ஆங்கிலத்தை பாராட்டிய ஒரே மனிதர் அவர்தான். மனதாரப் பாராட்டுவார். பின் அகாதமி விருது வாங்கிய சு.சமுத்திரம் பற்றி எழுதச் சொன்னார். நான் மறுத்ததும், நான்தான் எழுதவேண்டும் என்று வற்புறுத்தினார். நான் எழுதினேன். யாமினி கிருஷ்ணமூர்த்தி சந்தேகமேயில்லாமல் ஒரு கிரேட் டான்ஸர். But i had made some critical references about her performance. கதக்கிற்கு ரொம்ப பாஸ்ட் ஃபுட் வொர்க் வேண்டும். கால் தாளம் போடும் தபலாவாக மாறும். தபலா மீது விரல்கள் நர்த்தனமாடும். எல்லாமே ஒரே நேரத்தில் தாளம் போடும். ஆனால் அது ஆர்ட் அல்ல. சர்க்கஸ் வித்தை மாதிரித்தான். பரதநாட்டியம், குச்சுப்புடிக்கெல்லாம் பாவம் முக்கியமாக இருக்கும். இசையும் சேர்ந்திருக்கும். ஆனால் இதற்கு தாளமும் தப்லாவும்தான் முக்கியம். தபலா செய்கிற காரியத்தை உன் கால் ஏன் செய்யணும்? யானை ஸ்டூல் மேல் ஏறி நிற்கிற மாதிரிதான் என்று சொல்லிவிட்டு, ”Yamini need not do this. But she does it. She is capable of doing it. But that is not an art. கதக் ட்ரெடிஷனில் வரும் உமா ஷர்மாவுக்கு வேண்டுமானால் இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் யாமினிக்கு இந்த சர்க்கஸ் வேலையெல்லாம் தேவையில்லை. அது பரத நாட்டியமுமில்லை” என்று எழுதினேன். அந்த கட்டுரை யாமினியின் ஃபைலில் இருந்ததைப் பார்த்தேன். Still, she suggested my name to write a monograph on her work. நானும் எழுதினேன். ஆனால் அது வெளிவரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அத்தகைய மனப்பக்குவமும், தன் கலையில் நம்பிக்கையும் யாமினியிடம் இருந்தது. அது பெரிய விஷயம் இல்லையா? அத்தகைய மனப்பக்குவம், தன் காரியத்தில் இருக்கும் சுய நம்பிக்கை, இப்போது நம் தமிழ் எழுத்தாளர் வர்க்கத்தில் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை

‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்திற்குப் பிறகு வேறு திரைப்படங்களில் பங்கு பெறாதது ஏன்?

ஒருத்தரும் கேட்கவில்லை. யாமினி கிருஷ்ணமூர்த்தியின் தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்காக, ஸ்க்ரிப்ட் ஆறு எபிசோடுகளுக்கு எழுதக் கேட்டார்கள். எழுதினேன். அது நடனத்தையும், கோவிலையும் மையமாகக் கொண்டது. தஞ்சாவூர், சிதம்பரம், மும்பை எலிஃபெண்டா குகைகள் இப்படி ஆறு இடங்கள், முதல் ஆறு episodeக்கு யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. மற்றதற்கு நான் எழுதினேன். யாமினியைப் பற்றி முன்னதாகவே நான் ஒரு மோனோகிராப் எழுதியிருந்தேன். அப்புறம் Indian dance scene பற்றி பொதுவாக, what is creative - what is just grammatically correct but not creative - what is repetitive, what is just a circus like feat but passed off as a dance form இப்படியெல்லாம் விவரித்து எழுதியிருக்கிறேன். சங்கீத நாடக அகாடமி ஜர்னலுக்காகக் கேட்டார்கள். நான் எழுதிக் கொடுத்தேன். அதில் கொஞ்சம் பல பெரிய தலைகளை எல்லாம் கிண்டல் செய்திருப்பேன்.

செல்லப்பாவுடன் வெ.சா
யாமினி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய மோனோகிராப் நான் எழுதிக் கொடுத்த பிறகு அது பப்ளிஷ் ஆகவில்லை. காரணம், இன்னொரு ஜர்னலிஸ்ட். அவர் மிகவும் அழகானவர். She was quite close to many influential people. அவளுடைய கணவனை இவர் எழுதச் சொல்லியிருக்கிறார், தானே! அதுதான் இது வெளிவராததற்குக் காரணம்.. நான் எந்த அழகியோடு போட்டி போட முடியும்? சரி எந்த ஆண்தான் போட்டி போடமுடியும்? யாமினி கிருஷ்ணமூர்த்தி என்னை எழுதச் சொன்னார், நான் எழுதினேன். அது ஒன்றுதான். என்னை எழுதச் சொன்னால் எழுதுவேன். நானாகப் போய் யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. மேலும் இதற்கெல்லாம் ஒரு பாபுலர் இமேஜ் இருக்க வேண்டும். அதெல்லாம் எனக்குக் கிடையாது.

டெல்லி வாழ்க்கை அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!

என் வாழ்க்கையில் டெல்லி காலகட்டம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம் என்று சொல்லலாம். மிகவும் exciting ஆக இருந்த நாட்கள் அவை. காலையில் நான் அலுவலகத்திற்குச் சென்றால் அலுவலகம் முடிந்த பின்னர் மாலையில் எங்கெல்லாமோ அலைந்து விட்டு இரவு 11 மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்ப வருவேன். சினிமா, நாடகம், நாட்டியம், ஆர்ட் எக்ஸிபிஷன் என்று ஒவ்வொரு நாளும் நண்பர்களோடு எங்காவது வெளியில் சென்று விடுவேன். பல மனிதர்களுடனான சந்திப்புகள். பலதரப்பட்ட அனுபவங்கள். அவர்களுள் தமிழரில் மறக்க முடியாதவர் க.நா.சுப்ரமண்யம். டெல்லியைப் பொருத்தவரை அங்கு பலபேர், மொழி போன்றவற்றைத் தாண்டி, தாங்கள் எந்தத் துறையில் இருக்கிறோமோ அதையும் தாண்டி மாற்றுக் கருத்துக்களை வரவேற்பவர்களாக இருந்தார்கள். அதனால்தான் நான் டெல்லியிலேயே பிழைக்க முடிந்தது. சங்கீத் நாடக அகாதமி, சாகித்ய அகாதமி என்று நான் எதிர் கருத்துக்களைச் சொன்னாலும் என்னை எதிரியாகப் பாவிக்காத நிலை அங்கே இருந்தது. என் கருத்துக்களை விரும்பாதவர்களும், எனக்கு எதிராக அவர்கள் காதில் ஓதிச் செல்லும் சென்னை நபர்களும் இருந்தார்கள்தான். சாகித்ய அகாதமி என்ற நிறுவனம் பல பேரின் கைப்பாவையாக இருந்தது. ஆனால் அதில் இருந்த பலபேரிடம், அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி நட்போடு பழக முடிந்தது. உதாரணமாக சாகித்ய அகாதமியின் குழு உறுப்பினராக இங்கே இருந்து அங்கே சென்றவர்கள், என்னைப் பற்றி, என் தகுதி பற்றியெல்லாம் கேள்வி எழுப்பியும், அங்கே செயலாளராக இருந்த என் நண்பர் சச்சிதானந்தத்தை மீறி, சதாசிவராவை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. ஆனாலும் என் எழுத்தின் மீது, என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அவர் சில பொறுப்புகளை அளித்திருந்தார். He valued my friendship. இப்படித்தான் பல்வேறு அனுபவங்களோடும், பொறுப்புக்களோடும் இருந்தது டெல்லி வாழ்க்கை.

சமகால எழுத்தாளர்களுடனான உங்கள் அனுபவம் குறித்து

நான் டெல்லி வருவதற்கு முன்பாகவே க.நா.சு அவரது ‘ஒருநாள்’ நாவல் மூலம் எனக்கு அறிமுகமாகியிருந்தார். அது ஒரு அற்புதமான நாவல். அப்போது டெல்லியில் ‘தாட்’ என்ற ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் க.நா.சு எழுதி வந்தார். அதை நான் ஒருமுறை பார்த்தேன் - பின்னால் நானும் அதில் அதிகமாகவே எழுதியிருக்கிறேன். அவர் எழுதி வருவதை எல்லோரும் குறையாகச் சொல்வார்கள். ‘நன்றாக எழுதிக் கொண்டிருந்த மனுஷன் இப்போ விமர்சனம் அது, இதுன்னு ஏதேதோ பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படி வீணாப் போய்விட்டார்’ என்று. அதாவது ‘நாங்கள் நாவல், கதைகள் எழுதுகிறோம். நீயும் எழுது. அதை விடுத்து எங்களை விமர்சனம் பண்ணிக் கொண்டிராதே’ என்பது அவர்கள் சொல்ல வருவது.

அப்போது நான் டெல்லி கரொல்பாக்கில் இருந்தேன். நான் எப்போதும் வெளியில் சென்று விட்டு லேட்டாகத்தான் வருவேன். ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக ராஜாமணி என்ற நண்பருடன், க.நா.சு வந்து காத்திருந்ததாக அறை நண்பன் சொன்னான். நான் வரக்கூடும் என்று வெகுநேரம் வெளியில் செமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு கடலையைக் கொறித்துக்கொண்டிருந்ததாகவும், நான் வர லேட்டானதால் அவர்கள் சென்று விட்டனர் என்றும் மறுநாள் காலை வந்த ராஜாமணியிடம் செய்தி கேட்டு,  அதன்பிறகு அவர் முகவரியை விசாரித்து நான் போய்ப் பார்த்தேன். எங்களுக்குள் ஒரு நல்ல ஒத்திசைவு இருந்தது. அதன்பிறகு நாங்கள் எங்கு சென்றாலும் இருவருமாகத்தான் செல்வோம். பேசினால் எல்லாம் ஒரே இலக்கிய சர்ச்சையாகத்தான் இருக்கும். என்னைவிட எத்தனையோ வயது மூத்தவர். அறிவில் என்னை விட மிக உயர்வானவர். படிப்பே தொழிலாக வைத்துக் கொண்டு பல நூல்களைப் படிப்பவர். என்றாலும் என் கருத்துகளுக்கு - மடையன், அதிகப்பிரசங்கி, ஏதோ உளறுகிறான் என்றெல்லாம் நினைக்காமல் மிகவும் பொறுமையாக - அப்படியும் பார்க்கலாம் என்றுதான் பதில் சொல்வார். அவருக்கு ஈடுபாடு இல்லாத இடத்திற்கெல்லாம் கூட நான் அவரை வற்புறுத்தி அழைத்துச் செல்வேன். அவரும் வருவார். ஃபிலிம் ஷோஸ், பான் சாய் எக்ஸ்பிஷன்ஸ், ஆர்ட் எக்ஸிபிஷன்ஸ் என்று பல நிகழ்ச்சிகளுக்குப் போவோம்.

வெளியில் சொல்லாத பல கருத்துக்களைக் கூட அவர் என்னிடம் சொல்வார். அதே சமயம் - எனக்கு அப்போது அசோகமித்திரனோடு கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் அசோகமித்திரனுக்கு எனக்கு எதிராக கருத்து வேறுபாடு இல்லை, பகைமை இருந்தது. க.நாசு “நீ சண்டையெல்லாம் போடாதே,” என்று எனக்கு அறிவுறுத்துவார். “of course he was nasty with you. ஆனாலும் சண்டை எல்லாம் வேண்டாம்” என்பார். அந்த attitude எனக்குப் புரியவும் இல்லை. அப்படி என்னால் அப்படி இருக்கவும் முடியவில்லை. ஆனால் தன்னை கடுமையாக விமர்சித்து எழுதியிருந்த பி.எஸ். ராமையா மீதும் மிக அன்போடும், மரியாதையோடும் நடந்தவர் அவர். என் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். இவன் நம்மை தாக்குகிறான். இருந்து விட்டுப் போகட்டுமே. இவன் தாக்குவதால் நான் அழிந்து போய் விடப் போவதில்லை. அப்படியாவது அவன் வளரட்டுமே என்ற பெருந்தன்மை உணர்வோடு அவர் இருந்தார். அவர் மீது ஒரு மாறுபாடான அபிப்ராயம் இருந்து, அதைப் பற்றி அவரிடம் சொன்னால் அதைக் கேட்பார். ஆனால் அப்படி ஒரு மனப்பான்மை, சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை. எல்லோரும் சுயம் பிரகாச சுவாமிகளாக மிக உச்சத்தில் இருக்கிறார்கள். நமது இலக்கியச் சூழல் மிக மோசமான சூழல்.

அவரும், இவ்வாறு நாவல் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக - ”வம்பை விலைக்கு வாங்குவதாகச்” சொல்லப்பட்டதையும் - இது போன்றவற்றை எல்லாம் செய்தாக வேண்டும்; இந்தச் சூழலுக்கு இது அவசியம் தேவை என்று - விமர்சனங்களை - கண்டனங்களையெல்லாம் புறந்தள்ளி விடாப்பிடியாக எழுதி வந்தார். பல பேருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டாலும், நாம் செய்ய வேண்டும் என்று அவருக்கிருந்த அந்த கமிட்மெண்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செல்லப்பா கூடச் சொல்வார், ‘நீங்கள் ஏன் இதையெல்லாம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஜீவன் இருந்தால் அதுவாகவே நிலைத்து நிற்கும். நீங்கள் விமர்சனம் செய்துதான் நிற்குமா?’ என்று.  ஆனாலும், க.நா.சு அதற்கு ’இல்லை, அது செய்தாக வேண்டிய காரியம்’ என்று செல்லப்பாவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பாராம். அடிக்கடி அதன்பிறகுதான் செல்லப்பா விமர்சனத்திற்கு வந்தார். க.நா.சு உருவாக்கிய ஆள்தான் செல்லப்பா என்ற விமர்சக அவதாரம். அவர் ‘இலக்கிய வட்டம்’ என்றொரு பத்திரிகை ஆரம்பித்தார். அதில் என்னை எழுதச் சொன்னார். அதற்கு முன்னால் 1947 முதல் 1964 வரை உள்ள தமிழ் எழுத்துக்களைப் பற்றி எழுதியிருந்தேன். அதை அவர் இலக்கிய வட்ட மலராக வெளிவந்த இதழின் நடுப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது பாலையும் வாழையும் தொகுப்பிலும் பின் வந்த பான்ஸாய் மனிதன் தொகுப்பிலும் இருக்கும்.

செல்லப்பாவும் அப்படித்தான். “நீ தப்புப் பண்றே. உனக்கு ஒண்ணும் தெரியலை” என்று என்னோடு சண்டை போடுவார். ஆனால் நல்ல மனிதர். நாங்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தாலே கூட அது கூச்சல் நிறைந்ததாகத்தான் இருக்குமாதலால், ”இவர்களுக்குள் ஏதோ ஜென்மப் பகை போலிருக்கிறது, அதான் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்”, என்று நினைப்பார்கள். ஆனால் அவ்வளவு passionate ஆக ஒரு விஷயத்தைப் பற்றி அவர் பேசுகிறார் என்பதுதான் அதற்குப் பொருளே தவிர, கோபத்துடன் சத்தம் போடுகிறார் என்பதல்ல. டெல்லியிருந்து நான் லீவிற்குச் சென்னை வரும்போதெல்லாம் அவர் வீட்டிற்குப் போவேன். அவர் வீட்டுக்கு யார், யாரோ எல்லாமோ வருவார்கள். அவரைத் திட்டியவர்கள், வசை பாடியவர்கள், விமர்சனம், கேலி செய்தவர்கள், எதிர்முகாமில் இருந்தவர்கள் என்று. எல்லோருக்கும் காபி, டிபன் கொடுத்து நன்கு கவனிப்பார் செல்லப்பா. ஆனால் அவருக்கு வருமானம் என்று ஏதும் கிடையாது. எப்படி செலவுகளை எல்லாம் சமாளித்தார் என்பதும் தெரியாது.

அவரும், ‘பாரத மணி’ என்ற பத்திரிகையை நடத்துகிற காந்தி பக்தர் பி.என்.சீனிவாசன் என்பவரும் ஒருமுறை டெல்லி வந்திருந்தார்கள். செல்லப்பா காந்தி இறந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். பிர்லா ஹவுஸிற்குச் சென்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார். பின் காந்தி சுடப்பட்டு வீழ்ந்த அந்த இடத்திற்கு முன் அப்படியே வெகு நேரம் கை கூப்பியபடியே நின்று விட்டார். அந்த மாதிரி உள்ளம் அவர் உள்ளம். அவர் மிகவும் கஷ்டப்பட்டவர். மனைவியின் நகைகளை விற்று எழுத்து ப்த்திரிகையை நடத்தியவர். எழுத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். கி.வா.ஜகந்நாதன் கலைமகளுக்கு எழுதும்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது, செல்லப்பா நிர்தாட்சண்யமாக அதை நிராகரித்தார். ஒருமுறை “என்னமோ எனக்கு அதில் எழுதத் தோணலை. மூட் இல்லை” என்றார். மற்றொரு முறை “மதியாதார் வீட்டுக்கு எல்லாம் நாம் ஏன் போக வேண்டும்” என்றார். சமரசமே இல்லாத ஆள். நா.பா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். “ஏதாவது புத்தகம் போடுங்கள். சாகித்ய அகாதமி பரிசுக்காவது முயற்சிக்கலாம்” என்று. ஆனால் இவர் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. ஒருமுறை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து அவருக்கு விருது கொடுத்தார்கள். “எனக்கு விருது கொடுக்க நீங்கள் யார்?” என்று அதை உதறித் தள்ளிவிட்டார். இத்தனைக்கும் அவர் மிகக் கஷ்ட நிலையில் இருந்தார். அவருக்குப் பணத்தேவை அப்போதிருந்தது. ஆனாலும் அனுசரித்துப் போகவில்லை. நிர்ப்பந்தத்தில் இருந்தாலும் வளைந்து கொடுக்காதவர், சமரசங்களுக்கு ஆட்படாதவர் செல்லப்பா. அவரை அக்காலத்தில் கேலி செய்தவர்கள் செய்த கோமாளித்தனங்களைச் சொல்ல வேண்டாம்.

நீங்கள் ஒருமுறை காந்தியைப் பார்க்கப் போனது பற்றி எழுதியிருந்தீர்களே, அதைத் திரும்ப எங்களுக்கும் சொல்லுங்களேன்

dsc_2944ஒருமுறை காந்தி எங்கள் ஊருக்கு அருகே உள்ள அம்மைநாயக்கனூருக்கு வருவதாக இருந்தது. உடனே மாமா என்னை அழைத்து, “நீ வேண்டுமானால் மத்த பசங்களோட சேர்ந்து போய் விட்டுவா,” என்றார். எனக்கு ஒரே சந்தோஷம், உடன் கிளம்பி விட்டேன். நண்பர்கள் யாரும் கூட வரவில்லை. ஆனால் வழியெல்லாம் ஒரே கூட்டம். நிலக்கோட்டையிலிருந்து மட்டுமல்லாது, சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் மக்கள் திருவிழாக் கூட்டம் போல் கும்பலாகச் சென்று கொண்டிருந்தனர் காந்தியைப் பார்க்க. இத்தனைக்கும் காந்தி அம்மைநாயக்கனூரில் பேசப்போவதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ரயிலில் வரும் வழியில், ஸ்டேஷனுக்கு முன்பாகவே ரயிலை மறித்து நிறுத்தி அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தது கூட்டம். நானும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று விட்டேன். மாமாவும் ஸ்கூல் மானேஜ்மெண்ட் ஏற்பாடு செய்த வில் வண்டியில் போய் விட்டார்.

காந்தியைப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் இல்லை. வண்டி பிளாட்பார்மில் வந்து நின்றது. கதவுக்கு அருகே காந்திஜி நின்று கொண்டிருந்தார். பின்னால் ராஜாஜி. காந்தியைப் பார்த்த மக்கள், என்னவோ திருப்பதி வெங்கடாஜலபதியையே தரிசனம் செய்கிற மாதிரி அப்படியே கையை உயர்த்திக் கும்பிட்டனர். ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஒரு எலக்ட்ரிபையிங் பவர் அவரிடம் இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் ஏதோ பேசினார். கூட்டத்தில் எல்லோரிடமும் ஒரே பரவசம். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் ரொம்ப எளிமையான மனிதர் என்று. ஆனால் காந்தியைவிட எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் W.B.சௌந்திரபாண்டி நாடார், ஏ.டி.பன்னீர் செல்வம் போன்றோர்தான். இல்லாவிட்டால் கவர்னர் ஆர்தர் ஹோப் போன்றோர்தான். ஒரு முறை ஆர்தர் ஹோப் கொடைக்கானலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, நிலக்கோட்டை பெரியவர்கள் ரோடில் அவர் காரை நிறுத்தி, அவருக்கு மாலை போட்டார்கள். இவர்களைத்தான் தலைவர்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் காந்தியோ கோடையிடி ராமசாமி இல்லை. முத்துசாமி வல்லத்தரசில்லை. அண்ணாதுரையும் இல்லை. அவர்களைப் போல் இடிமுழக்கம் செய்யும் பேச்சாளரும் இல்லை. மிக ஒல்லியான ஒரு மனிதர், மென்மையான குரலில் பேசிக் கொண்டு, இடுப்பில் அணிந்த அரையாடைத் துணியுடன் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தார். வந்த மக்கள் எல்லோரும் அவர் பெருமையை விதம் விதமாகப் பேசிக் கொண்டிருந்தனர். “என்னமா உடம்பு தங்க ரேக்கு மாதிரி பளபளக்குதுங்கிறீங்க?” என்ற வியப்பு அவர்கள் பேச்சில் கேட்டது. இவ்வளவு பேரை, இந்தியா முழுதும், கோடிக்கணக்கில், அவரால் எப்படி ஈர்க்க முடிந்தது என்பது மிகவும் பெரிய விஷயமாக இருந்தது.

சுஜாதா பற்றிச் சொல்லுங்கள், உங்கள் அபிப்ராயம்?

நான் அதிகம் சுஜாதாவினுடைய புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனால் அவர் ரொம்ப புத்திசாலியான மனிதர். எல்லா துறைகளிலும் நிறைய விஷயங்கள் தெரிந்தவர். நிறைய எழுதியிருக்கிறார். பரவலான வாசிப்பு அனுபவம் உடையவர். ஆனால் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். தன்னுடைய திறன்களை எல்லாம் சந்தைக்குக் கொண்டு வந்த மனிதர். ஆனால் சிலதெல்லாம் குப்பை என்பது அவருக்கு நன்கு தெரியும் - அப்படித்தான் நான் நினைக்கிறேன் - ஆனால் ஏன் செய்தார்? அவர் எதிர்நீச்சல் போட விரும்பவில்லை. அவருக்கு அந்த பலம் உண்டு. திறன் உண்டு. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. நிறைய விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு விட்டார். காரணம் பணம், புகழ் என்று சொல்வதை விட பிராபல்யம் என்று சொல்லலாம். சாகித்ய அகாதாமியின் ஸ்ம்காலீன் பாரதிய சாஹித்ய என்னும் இதழின் ஒரு விசேஷ இதழ், தமிழின் இன்றைய சிறுகதைகள் என்று தேர்ந்தெடுத்த சில கதைகளைத் தொகுத்து ஒரு சிறப்பிதழ் வெளியிட சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும்படி என்னைக் கேட்டார்கள். நான் அதற்கு 75, 80 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். அவை மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்ததன. அதில் பெங்காளிகளையும், ஹிந்திக்காரர்களையும் மிகவும் பாதித்த, அவர்கள் மிகவும் விரும்பிய முதல் மூன்று சிறுகதையாசிரியர்கள். முதலில் சுஜாதா. அவரது அறிவியல் சார்ந்த சிறுகதை அவர்களை மிகவும் பாதித்தது. அடுத்தது ஜெயமோகன். அவரது எழுத்து மிக வித்தியாசமாக இருந்தது. அடுத்து வரவேற்பைப் பெற்ற எழுத்து ஆ.மாதவனுடையது. இப்படியெல்லாம் எழுதக் கூடியவர்கள் தமிழில் இருக்கிறார்களா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படித் திறமையான ஆள்தான் சுஜாதா. அவரது வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும். அவரிடம் நான் ஒரு முறை ஒரு ஆலோசனை சொன்னேன். அவருடைய மொத்த கதைகளையும் எனக்குத் தந்தால், அதில் நான் தேர்ந்தெடுக்கும் கதைகளை ஒரு தனி வால்யூமாகப் போடலாம் என்று. அதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை.

ஆரம்ப காலத்தில், அதாவது அறுபது எழுபதுகளில், நான், ஸ்ரீரங்கம் டி.எஸ்.ராஜகோபாலன், சுஜாதா, இன்னும் சில நண்பர்கள் எல்லோரும் டெல்லியில் கரோல் பாக் பகுதியில் வசித்தவர்கள். அங்கே ஒரு மெஸ் இருக்கும். அதன் அருகே ஒரு பெட்டிக்கடை இருக்கும். நாங்கள் எல்லாம் அங்கே வருவோம். கடை வாசலில் குமுதம், விகடன் எல்லாம் தொங்கவிடப்பட்டிருக்கும். அவற்றை அங்கேயே புரட்டிப் பார்ப்பதும், அதில் இருப்பதைக் கேலி செய்வதும் அப்போது நடக்கும். அதைப் பார்த்து சுஜாதா, ’இது மாதிரி ஆயிரம் கதை எழுதுவேன் நான்’ என்பார். உடனே டி.எஸ்.ராஜகோலான், ‘முடியாது. ஒரு ஸ்ரீரங்கத்துக்காரனால இவ்வளவு பேத்தலா எழுத முடியாது’ என்பார். இப்படி கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பின்னர் அதே குமுதத்தில் சுஜாதா கதை வெளியானது. நான் எது எழுதினாலும் குமுதம் போடும் என்று சந்தோஷத்தோடு சொல்லிக்கொண்டார். பின்னர் அவர்கள் மீண்டும் கேட்டுக் கொண்டதும் தான் விரும்பிய ஸ்டைலில் ஒரு கதையை எழுதி அனுப்பினார். ஆனால் அவர்கள் அதை பிரசுரம் செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்து விட்டார்கள். “நீங்கள் உங்கள் பழைய ஸ்டைலிலேயே அனுப்புங்கள் இது வேண்டாம்” என்று. ஸோ, மார்க்கெட்டிற்கு எது தேவையோ அதை அவர்கள் டிமாண்ட் செய்தார்கள். இவரும் அதற்கேற்றவாறு எழுத ஆரம்பித்தார். ஆனால் அது சாமர்த்தியமா, அல்லது வெகு ஜன ரசனைக்காக தன்னுடைய திறனை தாழ்த்திக் கொண்டதா என்பதை அவரவர் தீர்மானத்திற்கு விட்டுவிடலாம். .

“இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்” என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். ‘சுஜாதா - தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டுவிட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது. பலபேரைக் கவரக் கூடியது வேறு விஷயம். பல பேரைக் கவரக் கூடியது எது என்று தெரிந்து கொண்டு அதை மட்டுமே செய்வது வேறு விஷயம். சுஜாதா மிகவும் திறமை வாய்ந்தவர். அந்தத் திறமை மூலம் படைப்பின் மிக உயரிய உச்சத்திற்குச் சென்றிருக்கக் கூடியவர். ஆனால் சமரசங்களின் மூலம் அவர் அதைச் செய்யாதது நமக்கு ஒரு பேரிழப்பு. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான மனிதர். மற்ற எழுத்தாளர்கள் எல்லாம், சாகித்ய அகாதமி போன்ற விருதுகளைப் பெற என்னென்னவோ தகிடுதத்த வேலைகளையெல்லாம் செய்த பொழுது, இவர் அது போன்ற எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் அமைதி யாக இருந்தார். நைலான் கயிறு எழுதிய சுஜாதாவைத்தான் தமிழகம் அறியுமே தவிர, இன்னொரு சுஜாதாவை, நாமறிந்த சுஜாதாவை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுகிற சுஜாதாவை, அவர்களுக்குத் தெரியுமா என்பது தெரியாது.

கண்ணதாசன் பற்றியும் சொல்லுங்கள்

கண்ணதாசனை சினிமாவால் கெட்டவர் என்று சொல்லி விடலாம். ஆனால் அவர் மாதிரி தமிழை ஆண்டவர்கள் கிடையாது. தமிழ் அவருடைய நாவிலே விளையாடியது. அவருடைய மூன்றாவது தொகுப்பில் உள்ள மீனாட்சியம்மை பற்றிய பாடல்கள் எல்லாம் அவ்வளவு அற்புதமானவை. தனது மோசமான வாழ்க்கை நிகழ்வுகளை தெளிவாக, அதுபற்றிய எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லும் நெஞ்சுரம் - அது ஒரு பெரிய விஷயம். அவருக்கு இருந்தது. தான் கடந்துவந்த மோசமான அந்தப் பாதையை மீறி எழுந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. உண்மையில் அவர் அதை மீறியும் எழுந்துவிட்டவர் என்பது நமக்குத் தெரியும். அதே சமயம் இவர் கூட்டாளிகள் தம் மோசங்களையும் ஆபாசங்களையும் மறைத்து பொய்களை வரலாறாக எழுதுவதும் நமக்குத் தெரியும். கண்ணதாசனுக்கு இருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்பத்ற்கு இதுவே நிரூபணம். இதையெல்லாம் மீறி, அவர் ஒரு சிறந்த கவிஞர் - பாடலாசிரியர். இன்னும் ஆரோக்கியமான, சுய விமர்சனம் கொண்ட சூழலில் அவர் இன்னும் பெரிய கவிதா வியக்தியாகியிருப்பார். தம் திறனையெல்லாம் சினிமா பாடல்களுக்கும் தரமற்ற அரசியல் பாட்டுக்களுக்கும் வியர்த்தமாக்கியவர். சுஜாதா பத்திரிகைப் புகழ், சினிமா புகழுக்கு ஆசைப்பட்டு தன் திறனை வியர்த்தமாக்கியது போல.

நிலக்கோட்டையில் நடந்த திருமணம் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தீர்களே. அதையும் சொல்லுங்கள்:

ஒரு முறை எங்களுடைய ஸ்கூல் மேனேஜரின் மகளுக்குத் திருமணம். அவள் என்னுடன் படித்தவள். எங்கள் வகுப்பில் மூன்று பேர் பெண்கள் இருந்தார்கள். ராம திலகம் என்று ஒரு தாசி வீட்டுப்பெண். அப்புறம் தாலுகா ஆபீஸ்காரர் ஒருவரின் பெண் என்று மொத்தம் மூன்று பேர். மூன்று பேரும்தான் எப்போதும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பணக்காரர், ஏழை என்ற ஏற்றத்தாழ்வுகளெல்லாம் இல்லாமல், சாதி வித்தியாசம் ஏதும் இல்லாமல், எப்போதும் சிரித்துப் பேசிக்கொண்டு, எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள். அதுபோல எங்கள் பக்கமும் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. அங்கண்ணன் என்று ஒரு பையன் எங்களோடுதான் அமர்ந்து கொண்டிருப்பான் எப்போதும். அவன் செட்யூல்ட் கேஸ்ட் பையன். But nobody will say anything. எங்களுக்குள் அந்த வித்தியாசமெல்லாம் தெரியாது. அவனைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த முக்கியமானதொரு விஷயம், ஒவ்வொரு கிளாஸிலும் இரண்டு வருடம் இருப்பான் என்பதுதான். எங்கள் வகுப்பிலேயே மிக உயரமாக இருந்தவன் அவன்தான்.

அந்த மேனேஜரின் பெண்ணுக்கு, பையனுக்கு கல்யாணம் நடந்தது. பெரிய கல்யாணம். நிலக்கோட்டையிலேயே அந்த மாதிரிக் கல்யாணம் நடந்ததில்லை என்னும்படியாக மிக விமரிசையாக நடந்தது. ஒவ்வொருநாள் மாலையும் கச்சேரி நடந்தது. ஒரு கச்சேரியில் ஆலத்தூர் சகோதரர்கள் பாடினார்கள். மற்ற நாட்கள் கச்சேரி செய்தது யார் என்று எனக்கு ஞாபகமில்லை. என் வாழ்க்கையில் நான் கேட்ட முதல் கச்சேரி அதுதான். மறுநாள் நடந்த நாதஸ்வரக் கச்சேரி யார் பாடியது என்பது தெரியவில்லை. இப்படியெல்லாம் கூடக் கல்யாணம் நடத்துவார்களா என்று மிக விசேஷமாக அது நடந்தது. அதன்பிறகும் ஒரு 2,3 வருஷம் நிலக்கோட்டையில் இருந்திருக்கிறேன். ஆனாலும் யாரும் அவ்வளவு பெரிய திருமணம் நடத்தியதாக ஞாபகம் இல்லை. அந்தக் காலத்திலேயே பனிரெண்டாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். அது மிகப் பெரிய பணம்.

(தொடரும்)

\வெங்கட் சாமிநாதன் எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சாவின் விரிவான பேட்டியை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
இந்த நேர்காணலின் பிற பகுதிகளைப் படிக்க: வெங்கட் சாமிநாதன் நேர்காணல்.
புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்.


புலம்பெயர்ந்த படைப்பாளிகள் குறித்து நீங்கள் நிறைய எழுதியுள்ளீர்கள். குறிப்பாக ஈழ இலக்கியம் குறித்து நீங்கள் நிறைய அறிமுகம் செய்துள்ளீர்கள். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்தும், உங்களைக் கவர்ந்த ஈழப் படைப்பாளிகள் குறித்தும் சொல்லுங்களேன்!

ஆரம்ப காலம் முதலே என்னுடைய எழுத்திற்கு இங்கிருப்பவர்களை விட ஈழத்து வாசகர்களே மிக அதிகமாக இருந்தார்கள். எழுத்து பத்திரிகை அதிக பிரதிகள் விற்றது அங்கேதான். அவர்கள் பரவலான இலக்கிய வாசிப்பை உடையவர்கள். தமிழ்நாட்டில் தன்னுடையதை மட்டுமே படிப்பார்கள் அல்லது தன்னைப் பற்றி புகழ்ச்சியாக ஏதாவது விமர்சனம் வந்தால் படிப்பார்கள். ஆனால் ஈழத்தில் அப்படி இல்லை. அவர்கள் எல்லாவற்றையுமே படிக்கக் கூடியவர்கள். அப்படி ஒரு நல்ல சூழ்நிலை அங்கே இருந்தது. ஆனால் அது பாதகமாகப் போனது இரண்டே இரண்டு பேர்களால். ஒருவர் க.கைலாசபதி. பெருமளவுக்கு இவரைத்தான் குற்றம் சாட்டவேண்டும். இவரை ஒட்டிப் பின்சென்றவர், மற்றவர் கா.சிவத்தம்பி. அவர்கள் ஆரோக்கியமான அந்தச் சூழ்நிலையையே மாற்றிக் கெடுத்து விட்டார்கள். அவர்கள் யார் யார்க்கு Good conduct certificate கொடுக்கிறார்களோ அது நல்ல இலக்கியமாகும் என்று சொல்லுமளவுக்கு ஈழத்துச் சூழலைக் கெடுத்து வைத்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், “நீங்களா என்னை அங்கீகாரம் செய்தீர்கள், கைலாசபதிதானே எனது நூலுக்கு முன்னுரை கொடுத்தார் என்று”. அதாவது அவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காரணத்தை அவ்வளவு வெளிப்படையாகச் சொல்லி ஒப்புக் கொண்டார் பெருமையுடன். அவர் வேறு யாருமல்ல. மல்லிகை டொமினிக் ஜீவாதான். இதையெல்லாம் கொஞ்சமாவது எதிர்த்து நின்றது எஸ்.பொ.தான். அவர் ஆரம்ப காலத்தில் கைலாசபதியின் great admirer ஆக இருந்தவர். பின்னால் விளைந்த சூழல்களைக் கண்டு பொறுக்க முடியாமல் மாறிவிட்டார்.

எழுத்து பத்திரிகைக்கு தமிழ்நாட்டை விட ஸ்ரீலங்காவில்தான் நிறைய சந்தாதாரர்கள் இருந்தார்கள். பின்னால் ஏற்பட்ட சில சூழல்களால் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக அங்கு வரும் பெரிய வணிக பத்திரிகைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால் சரஸ்வதி, எழுத்து போன்ற பத்திரிகைகள்தான் நிறுத்தப்பட்டன. சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களுக்கு பத்திரிகைகள் நேரடியாக அஞ்சல் மூலம் வரும். ஆனால் மற்றவர்களுக்கு அப்படிக் கிடைக்க வழியில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது எழுத்து மற்றும் சரஸ்வதிதான். எழுத்து இதழ் நிறுத்தப்பட்டதற்கே இலங்கை சந்தாதாரர்களை அது இழந்ததுதான் முக்கிய காரணமாயிற்று. ஏனென்றால் எழுத்தின் பாதிக்கு மேலான சந்தாதாரர்கள் அங்கேதான் இருந்தார்கள். இதே நிலைதான் சரஸ்வதிக்கும் ஏற்பட்டது.

எழுத்து இலங்கையில் எந்த அளவுக்கு பிராபல்யமாக இருந்ததோ அந்த அளவிற்கு எழுத்தில் எழுதிய நானும் அவர்களிடம் அதிகம் தெரிய வந்தேன். உண்மையில் எழுத்தையும், அதில் வெளியான புதுக்கவிதைகளுக்காக செல்லப்பாவையும் அக்காலத்தில் எல்லோருமே கேலி செய்தார்கள். சி.சு.செல்லப்பாவுக்கு நெருக்கமான ராமையா, சிட்டி உட்பட பலருடைய கேலிக்கு எழுத்து ஆளானது. அநேகமாகக் கேலியில்தான் எழுத்து வாழ்ந்தது. வானம்பாடிகள் கேலி செய்தார்கள். இப்படி ஒர் சூழ்நிலை இங்கே அப்போது நிலவியது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், இங்கே சூழ்நிலைகள் அப்படியிருக்க, அங்கே நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நிலவியது அவர்களிடத்தே அக்காலத்தில். இன்றுவரைக்கும் அது தொடர்கிறது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருந்தது. அப்போது நா.பா-வும், பகீரதனும் அங்கே போயிருந்தார்கள். அங்குள்ளவர்களிடம் போய் இவர்கள், “ஈழத்து இலக்கியம், தமிழ் நாட்டு இலக்கியத்தை விட இருபது வருடம் பின்தங்கி இருக்கிறது ஆகவே நீங்கள் ரொம்பதூரம் முன் வரவேண்டியிருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே அங்குள்ள இலக்கியவாதிகள், வாசகர்கள் எல்லாம் இவர்களை வறுத்து எடுத்து விட்டனர். இதென்ன எஞ்சினியரிங் காலேஜ் விவகாரமா, அல்லது ரோடு போடும் வேலையா, பின் தங்கி இருக்கிறோம் என்று சொல்வதற்கு? என்று திட்டித் தீர்த்து விட்டனர். அப்படி ஒரு சூழல் அங்கே இருந்தது.

இந்த சூழ்நிலையின் பின்னணியில்தான் அங்குள்ள நூல்கள், பத்திரிகைகள் எனக்கு வர ஆரம்பித்தது. பலர் தங்களுடைய புத்தகங்களை எனக்கு அனுப்பி வைத்தார்கள். டேனியல் போன்றவர்களைப் பற்றி அப்படித்தான் எனக்குத் தெரிய வந்தது. படிக்கவும் எனக்குப் பிடித்திருந்தது. சிலரைப் பற்றி எழுதினேன். இப்படித்தான் அது ஆரம்பித்தது. ஆனால் பிற்காலத்தில் அது தடைபட்டது. என்றாலும் அவர்களைப் பற்றி கொஞ்ச காலம் வரைக்கும் மிக அதிகமாக இங்கே எழுதியது என்றால் அது என்னைத் தவிர வேறு யாருமில்லை.

கைலாசபதியினுடையது எல்லாம் யந்திரத்தனமாக, மார்க்ஸியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாது வாய்ப்பாடாக வாந்தி எடுப்பதாக இருக்கும். படிக்கவே கஷ்டமாக மடத்தனமாக இருக்கும். அவரிடம் அதிகாரம், ஆட்சி இருந்ததால் அந்த மடத்தனம் அப்போது செல்லுபடியானது. புதுக்கவிதையை அவர் நிர்தாட்சண்யமாகவே கிண்டல் செய்தார். ஆனால் அவரே ஈரோடு தமிழன்பனின் கவிதைகளைப் பாராட்டி எழுதினார். ஏன்? தமிழன்பன் வானம்பாடி, முற்போக்கு முகாமில் தன்னைக் கண்டவர். ஆகவே பாராட்ட வேண்டும். அப்படித்தான் அங்கும் அவர் விருப்பும் வெறுப்பும் இருந்தது. ஆனால் திருமாவளவன், அகிலன் போன்ற கவிஞர்களை அவருக்குப் பின்னும் ஏன் கவனிக்கவில்லை? அல்லது அவரது கோஷ்டியினரால் அவர்கள் ஏன் பேசப்படவில்லை என்பது தெரியவில்லை. அதுபோல வ.அ.ராசரத்தினம். நன்கு எழுதக்கூடியவர். ஆனால் நாளடைவில் அவரும் - இங்குள்ள முற்போக்கு முகாம்களைப் போல - மாறி விட்டார். காரணம் அந்த ப்ராண்ட்தான் அங்கு செல்லுபடியாகும். அதுபோல ஒரு பெண் கவிஞர் - அவர் பின்னால் கொல்லப்பட்டு விட்டார் - சிவரமணி என்பது அவர் பெயர். ஆனால் அவர் இறந்தபிறகுதான் அவரது கவிதைகள் எல்லாம் சேர்த்து, தொகுக்கப்பட்டு வெளியானது. மிக நல்ல கவிஞர். அதுபோல இன்னொருவர் வில்வரத்தினம் - இவர் சுனாமி பாதிப்பின்போது இறந்து விட்டார் என்று நினைக்கிறேன். அவர் மிக நன்றாகக் கவிதைகள் எழுதக் கூடியவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். ”காலத்துயர்”. என்று ஒரு கவிதைத்தொகுப்புதான் எனக்குப் படிக்கக் கிடைத்தது. ஈழப் போரட்டத்தில் மக்கள் படும் அவதி, மரணத்தை என்னேரமும் எதிர்நோக்கியிருக்கும் அந்த அவல நிலை எத்தனை தலைமுறைகளாகத் தொடர்கிறது. இருப்பினும் அந்தத் துயரைச் சொல்ல வந்தவர் அலங்கார வாத்தைகளை, உவமைகளைத் தேடி மிகவும் பிரயாசைப்படுகிறார். பழங்கால புலவர் மரபில் செய்யுள் இயற்றும் முனைப்புத்தான் தெரிகிறதே தவிர, அடக்கமுடியாத துக்கமும் வேதனையும் பீறிடும் மொழியாக, அது இல்லை.

பொதுவாக, இலங்கையில் சமகால அனுபவத்தைப் பதிவு செய்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. எப்படிப் பதிவு செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் பதிவு செய்கிறார்கள். ராஜமார்த்தாண்டன் தமிழினிக்காக ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வந்திருந்தார். அது முழுக்க முழுக்க எனக்கு ஒப்புதலான ஒன்று. ஏனென்றால் யார், யார் எல்லாம் அதிக தம்பட்டம் அடித்து, அதிகார தோரணையில் தங்களை கவிஞர்களாக முன்னிறுத்திக் கொண்டார்களோ, அவர்களையெல்லாம் முற்றிலுமாக அவர் ஒதுக்கி விட்டிருந்தார். வானம்பாடிக் கவிஞர்கள், பிரம்மராஜன் எனப் பலரை அவர் ஒதுக்கிவிட்டிருந்தார். அதுபோல சேரனுடைய கவிதைகளும் தனியாகத் தெரியக் கூடியவை. அவரைப் பற்றியெல்லாம் ராஜமார்த்தாண்டனைத் தவிர வேறு யார் கவனித்து எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போல அகிலன், திருமாவளவனைப் பற்றி ஈழத்தவர்களே அதிகம் பேசியதில்லை. இப்படி நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். நான் இவர்களையெல்லாம் கவனித்து வந்திருக்கிறேன். எழுதி வந்திருக்கிறேன்.

எழுத்து வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத அனுபவங்கள், நினைவுகள் பற்றிச் சொல்லுங்களேன்!
பல சம்பவங்கள் இருக்கின்றன என்றாலும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். நான் வெகுவாக ஒதுக்கப்பட்ட ஒரு மனுஷன். என்னுடைய விமர்சனங்களைக் கண்டு ஒருசமயம் எல்லோருமே என்னை வெறுத்தார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எத்தனையோ பேரை நான் பாராட்டியிருக்கிறேன் என்பது அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற புறக்கணிப்புகளால் நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். எனக்கு அந்த வாய்ப்பு வந்தது, எழுத ஆரம்பித்தேன். ஆனால் எனக்கிருந்த குறை என்னவென்றால் நான் யாருக்காக எழுத வேண்டும் - தமிழருக்காக எழுத வேண்டும் - அதுவும் தமிழில் எழுத வேண்டும். ஆனால் மற்றவர்களுக்காக ஆங்கிலத்தில் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

1966-67ல் ’என்லைட்’ ஒன்று பத்திரிகை பரோடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. க.நா.சு என்னை அதில் எழுதச் சொன்னார். “இங்கிலீஷ்லேன்னா எழுதணும். இங்கிலீஷ்லே எழுதி எனக்குப் பழ்க்கமில்லையே. என் இங்க்லீஷ் செல்லுபடியாகுமா, தெரியலையே,” என்று தயக்கம் காட்டினேன். அதற்கு அவர், “சரிதான்யா, எழுதும், உம்ம இங்க்லீஷும் இங்கிலீஷ்தான். என் இங்கிலீஷும் இங்கிலீஷ்ங்கற மாதிரி. இங்கிலீஷிலே எத்தனையோ இங்கிலீஷ் இருக்கு. தைரியமா எழுதும்,“ என்றார். ஆக, நானும் அதில் எழுத ஆரம்பித்தேன். நான் இங்கிலீஷில் எழுத க.நா.சு தான் காரணம். முதலில் சுந்தரராமசாமி, அப்புறம் செல்லப்பா, ஆர்.சண்முகசுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், ஜெயகாந்தன் என்று வரிசையாக எழுதினேன். எனக்கு விருப்பமானவர்களைப் பற்றி எல்லாம் நான் எழுதினேன் என்று சொல்லலாம். அப்படி எழுதும் போது ஒருமுறை எம்.வி.வெங்கட்ராமிற்கு அவருடைய போட்டோ வேண்டும் வெளியிடுவதற்காக என்று கடிதம் எழுதினேன். அவர் அப்போது கும்பகோணத்தில் இருந்தார். நான் அவரைப் பார்த்ததில்லை. அவர் கும்பகோணத்தில் எங்கே இருக்கிறார் என்பதும் கூட சரியாகத் தெரியாது. அவரிடமிருந்து போட்டோ வந்தது. அவர் அங்கே இருக்கும் தன் நண்பர்களிடம் போட்டோவையும், என் கட்டுரையையும் காட்டியிருக்கிறார். கும்பகோணம் காலேஜில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த - சேஷாத்ரி என்று நினைக்கிறேன் - அவர் நண்பர், ’அவரை விட்டுடாதீங்கய்யா, ரொம்ப நல்லா எழுதற ஆள்’ என்று சொல்லியிருக்கிறார். பின் கும்பகோணம் செல்லும் போது எம்.வி.வெங்கட்ராமைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் எனக்கு நல்ல நண்பராகி விட்டார்.

ஒருமுறை அவர் வீட்டிற்கு என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஊரிலிருந்து என் மாமா வந்திருந்தார். அதனால் நான் அவர் வீட்டிற்குப் போகவில்லை. அதற்குள் அவர் பையனை என் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டார். பின்னர் நான் அவர் வீட்டிற்குப் போனால் அங்கே சாப்பாடு தயாராக இருந்தது. என்னை சாப்பிடு, சாப்பிடு என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். பின்னர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வாறு கும்பகோணம் செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திப்பது வாடிக்கையானது. நெருக்கமான நண்பராக அவர் இருந்தார்.

ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது, தன்னோடு கூட மூன்றுபேரை அழைத்து வந்திருந்தார். அவர்கள் தஞ்சை பிரகாஷ், இருளாண்டி, பிரபஞ்சன் ஆகியோர். அன்று வெங்கட்ராம் ஒன்றுமே பேசவில்லை. ஆனால் வந்திருந்தவர்கள் சரமாரியாக என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் அவர்கள் விசாரணைக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது நான் சர்ச்சைக்கு உள்ளான ஆள். அதனால் அந்த மூவரின் அனுதாபம் எனக்கு எதிர்ப்பக்கம்தான் இருந்தது. ஆனால் அந்தச் சந்திப்பிற்குப் பின் நடந்ததோ வேறு. எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். அதைப் பற்றி பின்னால் இருளாண்டி ஒருமுறை சொன்னார், ”உங்களைக் கேள்வி மேல கேள்வி கேட்டு நல்லா மடக்கிப் போட்டுடறதுன்னு நினைச்சுட்டுதான் வந்தோம். ஆனா வெங்கட்ராம் சொல்லிட்டாரு, ’நான் ஏதும் பேச மாட்டேன். எங்களோட நட்பு வேற மாதிரி. அதுனால நீங்களே பேசிக்குங்கன்னு’. நாங்களும் சரின்னுட்டு வந்துட்டோம். ஆனா எந்தத் தயக்கமும் இல்லாமல் நீங்க பேசினது எங்களுக்கு ரொம்ப அபூர்வமா இருந்தது.” என்றார். இருளாண்டி இடையில் காலமாகிவிட்டார். பின்னால் பிரபஞ்சனும் பிரபல பத்திரிகையாசிரியராகி விட்டார். தஞ்சை பிரகாஷ் மட்டும் நான் டெல்லியிலிருந்து கும்பகோணம் வரும்போதெல்லாம் வந்து என்னைச் சந்திப்பார். மணிக்கணக்காக ராத்திரி, பகல் என்றெல்லாமல் என் கூடவே இருப்பார். பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருப்போம்.

ஒருசமயம் இரவு நேரத்தில் நான் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே எதேச்சையாக தனது நண்பர்களுடன் வந்திருந்த பிரகாஷ் என்னைப் பார்த்து விட்டார். ”என்ன இங்கே?” என்று கேட்டார். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னேன். அவ்வளவுதான். ‘நாம் சந்திக்காமல் எப்படிப் போவது?’ என்று சொன்னவர், தன் நண்பர்களை விட்டு அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போடச் சொல்லி, மூன்று நாள் வரைக்கும் அங்கேயே தங்க வைத்தார். அந்த மூன்று நாளும் அவரும் வீட்டுக்குப் போகவில்லை. அங்கே இன்னொரு எழுத்தாள நண்பரையும் சந்தித்தேன். அவர் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார் - பெயர் நினைவில்லை - பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் சொல்கிறேன் என்றால் பிரகாஷிற்கு என் மேல் அவ்வளவு ஈடுபாடு.

பிரகாஷ் நாவல்கள், சிறுகதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு எழுத்தாளன் என்று தன்னை காட்டிக் கொண்டது கிடையாது. அவ்வப்போது நாடோடிக் கதைகள் என்று தாமரையில் எழுதியிருப்பது தெரியும். மற்றபடி அவர் தன்னை எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. மேலும் அவருக்கு தெலுங்கு தெரியும், மலையாளம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். லாரி ஓட்டுவதற்கான ஹெவி டிரைவிங் லைசென்ஸூம் அவர் வைத்திருந்தார். அவருடைய தாய் ஒரு ஐயங்கார். தந்தை தேவர். பிரகாஷின் பாட்டி ஒரு பெரிய டாக்டர். இதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது. அவரது பேச்சு மட்டுமே தெரியும். ஆனால் அவர் நிறைந்த படிப்பாளி. பெங்காளி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சிறந்த, ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உடையவர். பல புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். நல்ல ஞாபக சக்தி உடையவர். எனக்காக ஒரு பத்திரிகையே அவர் ஆரம்பித்து நடத்தினார். “வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்” என்பதைச் சுருக்கி ‘வெசாஎ’ என்ற தலைப்பில் ஒரு புதிய பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அதில் முழுக்க முழுக்க நான்தான் எழுதினேன். வேறு யாரும் கிடையாது. அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஆனாலும் பிடிவாதமாக நடத்தினார். இரண்டு இதழ் வந்தது. மூன்றாவது இதழ் வரும்போது அவர் இல்லை.

நான் டெல்லியில் இருந்த போது எனக்கு ஒரு பஞ்சாபி நண்பர் மிக நெருக்கமாக இருந்தார். நான் டெல்லியை விட்டு வரும்போது ‘இவர் இல்லாமல் இனி எப்படி இருக்கப் போகிறோம்’ என்று அவர் இல்லை என்ற வேதனையால் மனம் அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அதேசமயம் தஞ்சை பிரகாஷ் இருக்கிறார், அவர் இருப்பது ஒரு இழப்புக்கு நிறைவு தருவதான ஒரு சமாதானம் இருந்தது. சந்தித்து நிறைய பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் எல்லாம் தவறாகப் போனது. நான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னாலேயே பஞ்சாபி நண்பர் இறந்து போய் விட்டார். இங்கு வந்த சில மாதங்களில் ப்ரகாஷூம் காலமாகி விட்டார். பஞ்சாபி என்றால் ரொம்ப முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பது பரவலாக தெரிந்தது. ஆனால் டண்டன் அப்படியெல்லாம் இல்லாமல் மிக அன்பானவராக அவர் இருந்தார். பஞ்சாபி, பிரகாஷினுடனான நட்பெல்லாம் ரொம்ப ஆழ்ந்தது. அன்னியோன்யமானது.

கருத்து ரீதியான விமர்சனம் என்பது குறித்த உங்கள் கருத்து என்ன?
நாம் ஒரு கருத்தைச் சொன்னால் அதைக் கருத்தாகவே எதிர் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இங்கே கும்பல் சேர்ந்து கருத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு ஆளை எதிர்க்கிறார்கள். அது மிக மிகத் தவறானது. அதற்கு அவரவர்கள் சார்ந்த கட்சிகள் உதவுகின்றன. உண்மையே இல்லாத விஷயங்களுக்காக, இவர்களும் உண்மையே இல்லாமல் கும்பல் சேர்ந்து, வெற்றுக் கோஷங்கள் எழுப்பி மிரட்டுவதால் மற்றவர்கள் அதற்கு பயப்படுகின்றனர். சில அமைப்பினரைப் பற்றி நான் இந்தியாடுடே தமிழ்ப் புத்தாண்டு மலரில் கருத்து தெரிவித்ததற்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்ததென்று தெரியுமா? தஞ்சாவூரிலும், பாண்டிச்சேரியிலும் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டி, சாமிநாதன், வல்லிக்கண்ணன் எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ள இந்தத் பக்கங்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தை எடுத்து அவ்வாறே செய்து, இந்தியா டுடே அலுவலகத்திற்கு பார்சலில் அனுப்பி வைத்தார்கள். இதில் பிரபல சில பேராசிரியர்களும் அடக்கம். அதில் முக்கியமானவர் அந்தோணி மார்க்ஸ் என்னும் அ.மார்க்ஸ்.

இதுதான் என்னுடைய கருத்திற்கு ஒரு பேராசிரியரின் பதில். இதிலிருந்தே அவர்களது தராதரத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். நான் அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தது - இவர்கள் எல்லோரும் பாசிஸ்ட்ஸ், இவர்களுடைய attitude எல்லாம் பாசிஸமாகவே இருக்கும். இவர்கள் பாஸிஸத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதுதான் - அது அப்படி இல்லை என்று அவர்கள் கருத்தோடு என் கருத்தை எதிர்கொண்டிருந்தால் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால் நான் என்ன எழுதினேனோ அதை உண்மை என்று அவர்களே தம் செயல்கள் மூலம் நிரூபித்தும் காட்டிவிட்டார்கள். They proved that my charges were correct. இவர்களிடம் குடிகொண்டிருப்பது கருத்தோ சிந்தனையோ அல்ல. கும்பல் கலாசாரம்.

இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியின் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளரும் அடக்கம். இது நடந்த சில மாதங்களுக்குப் பிறகு - அகரம் அல்லது அன்னம் பதிப்பாக என்று நினைக்கிறேன் அந்த எழுத்தாளரின் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன. அதன் பிரதிகளை எனக்கு அனுப்பியிருந்தார் மீரா. ஏற்கனவே அந்தப் எழுத்தாளருடைய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது சாம்பசிவராவ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நான் அந்த நூலைப் பாராட்டி இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை எடுத்து இப்போது இந்தப் புத்தகத்தில் இணைத்திருந்தார்கள். நான் உடனே மீராவுக்கு எழுதினேன், “நான் எழுதிய எழுத்துக்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் உதவும் என்ற தீர்மானத்தில் கையெழுத்திட்டவர் இந்த எழுத்தாளர்.  அதை அப்படியே எடுத்து இந்த எழுத்தாளர், என்னிடமும் அனுமதி கேட்காமல், தனது புத்தகத்துக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டது ஏன்?” என்று கேட்டு எழுதினேன். ஆனால் அதற்கு மீராவிடமிருந்தும் சரி, அந்த எழுத்தாளரிடமிருந்தும் சரி, எந்தப் பதிலும் வரவில்லை. என்னுடைய அனுமதி எதுவும் கேட்காமல், என்னுடைய எழுத்தையும் கேவலமாக தூஷித்து விட்டு, ஆனால் அதை தனது புத்தகத்தில் தனக்கான பாராட்டாக, அவர் பயன்படுத்தியிருந்தார். இது என்ன நியாயம்? இவர்களுக்கு விவஸ்தை என்று ஏதும் உண்டா?

பிறகு அதே எழுத்தாளர் சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழு உறுப்பினராக டெல்லிக்கு வந்தபோது, தனியாக அவரைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டேன். அவரால் அதற்குச் சரியானபடி பதில் சொல்ல முடியவில்லை. “நீங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தீர்கள்தானே! உங்களுக்கும் அந்தக் கருத்தில் ஒப்புதல்தானே! அதனால்தானே கையெழுத்திட்டீர்கள்” என்று கேட்க, “இல்லை, இல்லை. நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அவர்கள் அப்படிச் செய்தார்கள். ஆனால் என்னால் அதைத் தடுக்க முடியவில்லை” என்றார். இவரும் ஒரு எழுத்தாளர். சாகித்ய அகாடமி ஆலோசகர். ஆனால் செய்வது என்னவோ முதுகெலும்பில்லாத, வன்முறையைக் கண்டு எதிர்க்காமல், அதனோடு சேர்ந்து அதற்கு உறுதுணையாக இருக்கும் செயல். இதுதான் பாஸிஸம் என்பது. பயிற்றுவிக்கப்பட்ட கும்பல்கள் ஒன்று சேர்ந்து செய்யக் கூடியது. அதை எதிர்க்காமல் கண்டிக்காமல் மௌனமாக இருந்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கள்ள மௌனம் சாதிக்கும் இவர்கள் செயலில் கண்ணியமோ, நேர்மையோ, விவஸ்தையோ எங்கிருக்கிறது? இது தான் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் லட்சணம். இது தான் இங்கிருக்கும் சூழல்.

தற்போதைய பத்திரிகைச்சூழல் குறித்து உங்கள் கருத்தென்ன?, முன்னெல்லாம் நிறைய சிறுகதைகளுக்கு இடமிருக்கும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முன்பெல்லாம் கதை, கட்டுரை என்று நிறைய வரும். ஆனால் தற்போது வெறும் துணுக்குகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் மோசமான சினிமாவுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது பெரிய ஆக்கிரமிப்பாக இருக்கிறது. சினிமா  அரசியலைத் தீர்மானிக்கிறது. அரசியல் சினிமாவைத் தீர்மானிக்கிறது. ஒரே விஷச் சுழல் இரண்டு பக்கமும் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு சினிமாவும், சினிமாக்காரர்களுக்கு அரசியலும் அதிகமாக வேண்டியிருக்கிறது. அது ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஒன்றின் துணை மற்றொன்றுக்கு வேண்டியிருக்கிறது. அவர்கள் பத்திரிகை என்றில்லாமல் எல்லா ஊடகங்களிலும் விரவியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை ஆரோக்கியமானதல்ல. தமிழ்நாட்டில் எந்தத் தரத்தில் சினிமா இருக்கிறதோ அந்தத் தரத்தில்தான் அரசியலும். கடைத்தரமானதும், மூர்க்கமும் ஆபாசமும் கலந்ததும்தான்.

இப்போது நிலவும் இலக்கியச் சூழல் குறித்து உங்கள் கருத்து என்ன? சண்டைகளும், சர்ச்சைகளும் பெருகி வரும் சூழல் ஆரோக்கியமானதுதானா?

ஆரோக்கியம், ஆரோக்கியமில்லை என்பதை விட, அவ்வப்பொழுது வருவது வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நமது தேர்வுதான் முக்கியம். இந்தச் சூழல் அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது என்பதில்லை. சில சூழல்கள் வரவேற்பிற்குரியதாயிருக்கலாம். சில பரபரப்பு கொண்டதாக இருக்கலாம். சிலவற்றிற்கு எதிர்ப்புகள் இருக்கலாம். அந்தந்த சூழலைப் பொறுத்து நமது எதிர்வினைகள் இருந்தால் போதும். ஆனால் நமக்கு வரும் எதிர்வினைகளுக்கு நாம் பணிந்து விடாமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஆக சூழலைக் குறை சொல்லிப் பயனில்லை. அது அப்படி இருக்கிறது. சரி. அதை மீறி நீ என்ன செய்கிறாய்? என்பதுதான் முக்கியம். க.நா.சு அந்தச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லையா? செல்லப்பா முயற்சிக்கவில்லையா, அவர் அதில் வெற்றிபெறவில்லை என்றாலும் முயற்சி செய்தார் அல்லவா? ஆக அந்த முனைப்புதான் முக்கியம். ஆனால் இப்போது எல்லோருமே அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து விடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை சலுகைகள். அதிகாரத்தின் கனிந்த பார்வை. முன்பு எதிர்த்து நின்றவர்கள், தற்போது சமரசம் செய்து கொள்ள வேண்டாதவர்கள் கூட, ஏனோ பணிந்து சமரசமாகி விடுகிறார்கள். அவ்வாறு கீழ்ப்படிந்தவர்களில் ரொம்ப பேர் அப்படிக் கீழ்ப்படிய அவசியமில்லாதவர்கள். ஆனால் ஆசை இருக்கே. அது மயக்குகிறதே. . அதனால் சில சௌகரியங்களுக்காக, ஆசைகளுக்காக பணிந்து போகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை எப்போதும் ஒரு ஆர்டிஸ்ட்  தனியன்தான். பெரும்பான்மையான சூழல் அவனுக்கு எதிரானதாகவே இருக்கும். இயல்பாக, அவன் இருக்கும்படிக்கு இருந்தால் அதில் போராட்டங்கள் இருக்காது. சௌகரியங்களுக்காகக் கீழ்ப்படிந்தால், எனக்கு அது கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்திற்காகப் பணிந்தால் அப்போதுதான் அது போராட்டமாகிறது. ஆகவே எனக்கு இது போது என்ற மனதோடு சமரசம் செய்து கொள்ளாத மனநிலையோடு இருந்தாலே போதும்.

(நேர்காணல் நிறைவடைந்தது. இந்த விரிவான நேர்காணலை சொல்வனத்தில் பிரசுரிக்க அனுமதி தந்த தென்றல் பத்திரிகைக்கும், மதுரபாரதி, அர்விந்த் சுவாமிநாதன் ஆகியோருக்கும் சொல்வனத்தின் நன்றிகள்.)

























வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்
1. எழுச்சிகளைப் பின் தொடர்ந்தவர்
இலக்கியம் கற்பனாவாதம் நோக்கி நகரும்போது இலக்கிய விமரிசனம் அதன் பேசுபொருளைத்தன் அளவுகோலாகக் கொள்கிறது; செவ்வியல் தன்மை கொள்ளும்போது இலக்கிய விமரிசனம் வடிவ இலக்கணமாக மாற்றம் கொள்கிறது. பொதுமைப்படுத்தும் வரியாக இது இருக்கக் கூடும். ஆனால் இதன் மூலம் இலக்கிய விமரிசனத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவை வரையறை செய்துகொள்ள நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.

தமிழின் நெடுங்காலச் செவ்வியல் பாரம்பரியத்தில் நமக்கு இன்றைய அளவுகோலின்படி இலக்கிய விமரிசனம் என்பதே இருக்கவில்லை. இலக்கணமே இருந்தது. அந்த இலக்கணம் பேசுபொருளை வடிவத்தின் ஒரு பகுதியாக வரையறை செய்து வைத்திருந்தது. உரிப்பொருள், முதற்பொருள் இரண்டும் வடிவத்தின் கூறுகள் மட்டுமே. இலக்கணமே இலக்கியத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக நமக்குப் பயன்பட்டிருக்கிறது.

பேசுபொருள் நமக்கு முதன்மைப்பட்டது நமது கற்பனாவாதக் காலகட்டமாகிய பக்தியுகத்தில்தான். பக்தியுகத்தின் பாடல்களை நாம் இலக்கணம் சார்ந்த ஆய்வுக்கு உள்ளாக்கவே இல்லை. அவற்றின் ஆன்மீக தத்துவ உள்ளடக்கம் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். பக்தி இயக்கமே விசிஷ்டாத்வைத வைணவ தத்துவத்தையும், சைவ சித்தந்தத்தையும் உருவாக்கியது. அப்பாடல்கள் அந்த தத்துவங்களின் வெளிச்சத்திலேயே ஆராயப்பட்டன.

பண்டைய இலக்கியம் குறித்த விவாதங்களில் உள்ளடக்கம் ஒரு பொருட்டாகவே எண்ணப்படவில்லை. சிறப்பான கட்டமைப்பு கொண்ட பாடல் சிறந்தது என்ற எண்ணம் நிலவியது. இதனால்தான் என்ன காரணத்தால் கவிதை என கருதப்பட்டது என்றே தெரியாத பல பாடல்களும் நம் செவ்வியல் கவிதைகளின் பட்டியலில் அமர்ந்துள்ளன. அதே போல பக்திக் கவிதைகளில் எவ்விதமான இலக்கிய நயமும் இல்லாத வெறும் தத்துவ வரிகள் கவிதையுடன் சமமான இருக்கை பெற்றுள்ளன.

இலக்கிய விமர்சனம் என்று நாம் இன்று கூறும் எழுத்துமுறை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், ‘பிரான்ஸிலும், இங்கிலாந்திலும் உருவாகியது. தத்துவ, அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதும்அதே நடையில் இலக்கியம் சார்ந்த கருத்துக்களையும் எழுதும் முறையே இலக்கிய விமர்சனத்திற்கான அடிப்படையை அமைத்தது. ஆகவே தருக்கம் இலக்கிய விமரிசனத்தின் மையக்குணமாக அமைந்தது. ஆரம்பகாலத்தில் இலக்கிய விமரிசகர்களில் பலர் கவிஞர்கள். இருந்தும் கவிதைக்குரிய கருவிகள் இலக்கிய விமரிசனத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை. அது முறையற்றதாகக் கருதப்பட்டது. இலக்கிய விமரிசனத்தை அது தெளிவற்றதாக ஆக்கும் என்று கூறப்பட்டது. நெடுங்காலம் இந்த விதி புழக்கத்தில் இருந்தது. கவிஞரான டி.எஸ்.எலியட்டின் திறனாய்வுகளில் கருத்துருவகம் (அலிகரி) உண்டே ஒழிய கவித்துவமான மொழி எழுச்சிகள் இருப்பதில்லை. அதையே தமிழில் இலக்கிய விமரிசனங்களை எழுதிய சுந்தரராமசாமியைக் குறித்தும் கூறலாம். கறாராக எழுத வேண்டும் என்றே அவர்கள் விரும்பினார்கள். வரையறுத்துக் கூறவேண்டும் என்று முயன்றார்கள், கவித்துவம் அதற்கு எதிரானது என்றார்கள்.

பின்நவினத்துவ எழுத்து முறைகள் மேலை நாட்டில் உருவாகி வந்த பின்னர்தான் கவித்துவத்தின் சாத்தியங்களை ஆய்வுக்கட்டுரைகளுக்குள்ளும் கையாள ஆரம்பித்தார்கள். பார்த், தெரிதா இருவருமே கவித்துவத்தைக் கையாண்டவர்கள் என்றாலும் ழாக் லக்கான்தான் இலக்கியத்திற்குரிய மொழி மயக்கத்தை ஆய்வுக்குரிய சிறப்பான கருவியாகப் பயன்படுத்திய முன்னோடி. அதன் பின்னரே இலக்கிய விமரிசனத்தில் கவித்துவம் ஓர் உபகரணம் என்ற நிலை உருவாகியது. மலையாளத்தில் சிறப்பான உதாரணமாகக் கூறத்தக்கவர் கல்பற்றா நாராயணன். படிமங்கள் வழியாகவே விரிந்து செல்லும் ஒர் இலக்கிய விமரிசன முறையை அவர் பலத்த எதிர்ப்புகள் நடுவே உருவாக்கிக் கொண்டார். தமிழில் அப்படி ஒரு முயற்சி செய்யுமளவுக்கு கவித்துவம் உடைய பின் நவீனத்துவ திறனாய்வாளர் எவருக்கும் இருக்கவில்லை.

இந்தக் கறாரான ஆய்வுத்தன்மை காரணமாகவே இலக்கியத்திறனாய்வு என்ற அமைப்பு ஒட்டுமொத்தமாகக் கற்பனாவாதத்திற்கு எதிராக இருந்தது. கற்பனாவாதக் கவிஞர் ஜான் கீட்ஸ் கூறியதுபோல் அது ‘வானவில்லைப் பிரித்துப் பார்த்தல்’ (unweaving the Rainbow) ஆகவே இருந்தது. ஆய்வுநோக்குக் கற்பனாவாதக் கவிதையைத் தொட்டதுமே கற்பனாவாதக் கவிதையில் எது அழகோ அது மறைந்து விடுகிறது. பிறகு எஞ்சுவது சிலவகையான உணர்ச்சிப்பெருக்குகள், உச்சப்படுத்தப்பட்ட உலகப்பார்வைகள், சமநிலையற்ற சில கருத்துக்கள் அவ்வளவுதான்.

ஆகவே இலக்கிய விமர்சனம் என்ற அறிவுத்துறை உருவானதுமே அது கற்பனவாதத்தை மெல்ல மெல்லக் கரைத்தழித்து நவீனத்துவத்தை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. காரணம் இலக்கியத்திற்குள் தர்க்கத்தை அது நிறுவியபடியே இருந்தது. அதன் விளைவாக இலக்கியத்தை அது தத்துவம் நோக்கிக் கொண்டு சென்றது. அதனூடாக நவீனத்துவத்தின் அடிப்படைகளை உருவாக்கியது. கூல்ரிட்ஜ் தொடங்கியதை எலியட் முடித்து வைத்தார் என்று காணலாம்.

இலக்கிய விமரிசனம் என்று நமக்கு எது சொல்லப்படுகிறதோ அது தன் அடிப்படைகளாக அறிவியலையே கொண்டிருக்கிறது. அது தத்துவமும் அறிவியலும் ஈன்று இலக்கியத்தின் கூட்டில் கொண்டு வந்து போட்ட குஞ்சு. இலக்கியம் அதன் வாழ்விடமும் உணவும் மட்டும்தான். அடிப்படையில் இலக்கிய விமரிசனம் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. இலக்கியத்திற்கு மாறானது. இலக்கியத்தின் அடிப்படை அலகு என்பது கற்பனையைத்தூண்டும் ஒரு படிமம். இலக்கிய விமரிசனத்தின் அடிப்படை அலகு என்பது சிந்தனையை திட்டவட்டமாக ஆக்கும் ஒரு வரையறை. ஒரே வரி இலக்கியத்தில் வருவதற்கும் இலக்கிய விமரிசனத்தில் வருவதற்கும் பெரும் வேறுபாடு உண்டு. இலக்கியத்தில் அது நம் சொந்த அனுபவத்தைத் தீண்டி எழுப்பி அதைப் பரிசீலனை செய்ய வைக்கிறது. இலக்கிய விமரிசனத்தில் அது தன்னைப் பகுத்தறியுமாறு நம்மை அறைகூவுகிறது.

மிக விரைவிலேயே பிரிட்டனில் இலக்கியம் நவீனத்துவத்தைக் கட்டமைத்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலத்தை இலக்கிய விமரிசனத்தின் யுகம் என்று கூடக் கூறலாம். எ·ப். ஆர்.லூயிஸ், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் முதலிய புது செவ்வியல்வாதிகள் எலியட், எஸ்ட்ரா பவுண்ட் முதலிய நவீனத்துவ முன்னோடிகள், நவீனத்துவத்தின் உச்சத்தைச் சாத்தியமாக்கிய புதுத்திறனாய்வாளர்களான (New Critics) வில்லியம் விம்சாட் போன்றவர்கள் என்று இந்த இலக்கிய விமரிசனப் பேரலையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

தமிழில் நவீன இலக்கியமும் நவீன இலக்கிய விமரிசனமும் ஏறத்தாழ சேர்ந்தே பிறந்தன என்று கூறலாம். பாரதியிடம் நவீன இலக்கியத்தின் தொடக்கம் நிகழ்ந்தது. பாரதியின் கண்ணன் பாடல்களுக்கு வ.வெ.சு. அய்யர் எழுதிய ஆய்வு முன்னரையில் நவீன இலக்கிய விமரிசனத்தின் பிறவி நிகழ்ந்தது. இலக்கிய விமரிசனம் என்ற பிரக்ஞையுடன் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு அது. இலக்கிய விமரிசனத்தின் அடிப்படைகள் கடைப்பிடிக்கப்பட்டது. வ.வெ.சு. அய்யர் கம்பனைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய இலக்கிய விமரிசனக் கட்டுரை அவரது நோக்கை இன்னும் தெளிவுபடுத்தியது.

வ.வெ.சு. அய்யருக்குப் பிறகு அவரது இலக்கிய அணுகுமுறையின் நீட்சியாக அமைந்தவர் என்று ஏ.வி.சுப்ரமணிய அய்யரைக் கூறலாம். இவ்விருவருடைய இலக்கிய விமரிசன முன்னோடிகள் கூல்ரிட்ஜ், ஜான்சன் போன்ற பிரிட்டிஷ் விமரிசகர்களே. அவர்கள் அவர்களின் சமகால கற்பனாவாத இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமரிசனம் செய்தார்கள். இலக்கியத்தைக் கூர்ந்து அவதானித்து நுண்மையான ரசனைக்குரிய விஷயங்களைத் தொட்டுக்காட்டியும், பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டும் தங்கள் விமரிசனத்தை இவர்கள் நிகழ்த்தினார்கள். அதையே வ.வெ.சு. அய்யரும், ஏ.வி.சுப்ரமணிய அய்யரும் செய்வதைப் பார்க்கிறோம். வ.வெ.சு.அய்யர் கண்ணன் பாடல்களை ஆழ்வார் பாடல்களுடனும் அஷ்டபதியுடனும் ஒப்பிடுகிறார்.

ஆனால் இவ்விருவரும் உதிரியான முன்னோடி முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டார்கள். தமிழின் நவீன இலக்கிய விமரிசனம் என்பது க.நா.சுப்ரமணியத்தில் இருந்தே வேகம் பிடிக்கிறது. அவரது நண்பரும் (பகைவரும்) சமகாலத்து இலக்கிய ஆளுமையுமான சி.சு.செல்லப்பா வையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும். இவரும் தமிழின் இலக்கிய விமரிசன மரபின் அடித்தளங்களை நவீனத்துடன் சார்ந்து உருவாக்கினார்கள். இலக்கியப் படைப்பாளிகளாகவும் இவ்விருவரும் நவீனத்துவத்தைச் சார்ந்தவர்களே. குறிப்பாக க.நா.சு.வை தமிழ் நவீனத்துவத்தின் சிற்பி என்றே கூறிவிட முடியும்.

க.நா.சு.வின் இலக்கிய விமரிசன முறை என்பது இலக்கியப்படைப்புகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவதில் ஆரம்பிக்கிறது. இந்தப் ‘பட்டியல் விமர்சனம்’ குறித்து சமகாலத்தைய மார்க்சியர்களும் பிறகு வந்த முதிரா அமைப்பியலாளர்களும் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருக்கிறார்கள். இத்தகைய ஒரு அணுகுமுறை ஒரு தனிநபரின் மனநிலை சார்ந்தது என்று பார்ப்பதைவிட அது தேவையாக இருந்த சூழல் என்னவாக இருக்கும். இவர்கள் தங்களுடையது என்று கூறிக்கொண்ட இலக்கிய சமூகவியல் அரசியல் கோட்பாட்டு அணுகுமுறைக்கு உகந்ததாக இருக்கும் என்று இவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை. வணிகக் சூழலால் கட்டமைக்கப்பட்ட கேளிக்கை எழுத்து சராசரி வாசகனின் ரசனையும் கல்வித் துறையையும் கட்டுப்படுத்தியிருந்த ஒரு காலகட்டத்தில் அதற்கு எதிரான ஒர் இலக்கிய இயக்கமாகவே க.நா.சு.தன்னுடைய இலக்கிய விமரிசனத்தை நிகழ்த்தினார். அவர் முன்வைத்தது ஒரு சில இலக்கிய ஆக்கங்களையோ, அழகில் கோட்பாடுகளையோ, அரசியல் நிலைபாடுகளையோ அல்ல. மாறாக ஒரு மாற்று இலக்கிய மரபைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். அதைத் தமிழில் அம்மரபுசார்ந்த எழுத்துக்களின் ஒரு பட்டியலாகவே அவர் சுட்டிக்காட்ட முடியும். வேறு எவ்வகையிலும் அதைச் செய்திருக்க இயலாது. அப்படி பட்டியலிடுவதென்பது  உலகமெங்கும் அன்றும் இன்றும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபும் கூட.

க.நா.சு. சுட்டிக்காட்டிய இலக்கியப் படைப்புகள் அனைத்தும் கேளிக்கையம்சம் இல்லாமல் உண்மையான தீவிரம் காரணமாக எழுதப்பட்டவை. வடிவபோதம் உடையவை; உரத்தகுரல் எழுப்பாதவை; சமூகவிமரிசனப் பாசாங்குகளைச் செய்யாமல் நேர்மையாக சமூகத்தை ஆராய முயல்பவை; மிதமான மொழிநடையும் யதார்த்தமான அணுகுமுறையும் உடையவை; இந்த எல்லைக்குள் அப்படைப்புகள் பேசும் விஷயம் முற்போக்கா பிற்போக்கா என்பது பற்றி க.நா.சு. கவலைப்படவில்லை. ஆகவேதான் அவருக்கு சமூகம் சார்ந்த பழமை நோக்குள்ள ஆர்.சண்முக சுந்தரமும், புதுமை நோக்குள்ள பூமணியும் பிடித்தமானவர்களாக ஆனார்கள். ஒழுக்க நெறிகளுக்கு அப்பாற்பட்ட ”பசித்த மானுடம்” (கரிச்சான்குஞ்சு)மும் சம்பிரதாயமான ”கேட்டவரம்” (அநுத்தமா)வும், பிடித்திருந்தன. இந்தப் பொது குணாம்சத்தையே தன் பட்டியல்கள் மூலம் க.நா.சு. வலியுறுத்தி வந்தார் என்று கூறலாம்.

இப்பட்டியல்களிலும் படைப்புகளைப் பற்றி எழுதிய அரிய சிறு கட்டுரைகளிலும் க.நா.சு. எப்போதுமே இலக்கியத்தை வடிவம் சார்ந்தே அணுகி வந்தார். அழகியல் என்பது வடிவத்தின் நேர்த்தியும் மொழியின் எழிலும்தான் அவருக்கு. பெரும்பாலும் படைப்பின் வடிவம் கச்சிதமாக வந்திருக்கிறது, மொழியும் அடக்கமாக இருக்கிறது, என்பது போன்ற கருத்துக்களையே அவர் பாராட்டாகத் தெரிவித்து வந்தார். க.நா.சு.வின் இலக்கிய அளவு கோல்கள் முழுக்க முழுக்க நவீனத்துவம் சார்ந்தவை என்பதே இதற்குக் காரணம். நவீனத்துவம் இலக்கியம் என்பது மொழியில் நிகழும் ஒரு கட்டுமானம் என்ற மதிப்பீட்டையே கொண்டிருந்தது அதன் நேர்த்தியை நோக்கியே அதன் இலட்சியங்கள் அமைந்திருந்தன.

சி.சு.செல்லப்பாவை க.நா.சு.வின் மறுபாதி என்று கூறுலாம். செல்லப்பா க.நா.சு.வின் இடைவெளிகளை நிரப்புபவர் மட்டுமே. அதைக் கடைசி காலத்தில் உணர்ந்தமையால்தான் செல்லப்பா க.நா.சு.மீது அந்த அளவுக்குக் கடுப்பைக் கொட்டினார் என்று படுகிறது. க.நா.சு.தன்னுடைய இலக்கிய விமரிசன அளவுகோல்களை கோட்பாடுகளாக முன் வைக்கவில்லை. அக்கோட்பாடுகளை படைப்பின் மீது விரித்து ஆராய்ச்சிகளைச் செய்யவும் இல்லை. க.நா.சு.விற்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. அவற்றை க.நா.சுவின் அதே கோணத்தில் செய்தவர் சு.செல்லப்பா மேலைநாட்டு இலக்கிய இயக்கங்களின் அழகியல் கோட்பாடுகளைக் கற்று அவற்றில் இருந்து தன் அளவுகோல்களை உருவாக்கித்  தமிழ் படைப்புகளை விரிவான புறவய அலசல்களுக்கு உள்ளாக்கியதே சொல்லப்பாவின் பங்களிப்பு எனலாம்.

செல்லப்பாவின் அணுகுமுறை க.நா.சு. முன்வைத்த அதே நவீனத்துவம் சார்ந்தது என்பதைக் காணலாம். இலக்கியக் கோட்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக அலசும் செல்லப்பா கற்பனாவாதத்தை முழுமையாக நிராகரித்து செவ்வியலை தழுவிக்கொள்கிறார். நவீனத்துவத்தின் அழகியல் என்பது செவ்வியல்தான் என்பதனால் அவர் இயல்பாக நவீனத்துவத்திற்கு வந்து சேர்கிறார். தமிழில் நவீனத்துவ அழகியலை நிறுவிய சிற்றிதழ் என்றால் அது சி.சு.செல்லப்பா நடத்திவந்த ‘எழுத்து’ இதழ்தான். ‘எழுத்து’ செல்லப்பாவின் நவீனத்துவத்திற்கு வலுவான வாரிசுகளை உருவாக்கியது. சுந்தர ராமசாமி, நகுலன், சி.மணி ஆகிய மூவரையும் சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.

‘எழுத்து’ இதழில் விமரிசனக் கடிதங்களை எழுதியபடி தமிழிலக்கியத்திற்குள் நுழைந்தவர் வெங்கட் சாமிநாதன். சாமிநாதனின் விமரிசனப் பங்களிப்பை இந்தக் கோணத்தில்தான் நாம் விரிவாக ஆராயமுமடியும். அவர் நவீனத்துவத்தின் மடியில் பிறந்தவர். அதன் இடைவெளிகளை நிரப்ப முயன்று அதன் போதாமைகளை முன்வைத்து அதைத்தாண்டி வந்தவர். நவீனத்துவ விமரிசகர்களான க.நா.சு. செல்லப்பா இருவரிடமிருந்து வெங்கட் சாமிநாதனுக்கு உள்ள உறவும் தொலைவும் இப்படி உருவானவையே. அவர் ‘எழுத்து‘வுடன் ஆழமான உறவு கொண்டிருந்தார். அதே சமயம் அதனுடன் ஊடி விலகவும் செய்தார். கடைசிவரை செல்லப்பாவுடன் வெங்கட்சாமிநாதனுக்கு நெருக்கமான உறவிருந்தது. ஆனால் செல்லப்பாவை அவர் முழுமையாக ஒத்துக் கொள்ளவுமில்லை.

‘எழுத்து’ இதழுடன் சாமிநாதனுக்கு இருந்த உணர்வுபூர்வ ஈடுபாடு என்பது ‘எழுத்து’ இதழ் கொண்ட தனித்த பண்பாட்டு நிலைப்பாட்டை ஒத்துக் கொண்டதன் மூலம் உருவாகியது. ‘எழுத்து’ இதழை செல்லப்பா தொடங்கி நடத்திய ஐம்பதுகளில் தமிழ்பண்பாட்டுச்சூழல் எப்படி இருந்தது? தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தின் முடிவுக்குப் பிறகு அதிகாரத்தைக் கையாளும் அமைப்பாக மாறியது. அதன் சமூக விமரிசனத்தன்மை, போரிடும் தன்மை முழுமையாகவே இல்லாமலாகியது. ‘மணிக்கொடி’ இதழ் தேசவிடுதலைப்போரின் உருவாக்கம். அந்த உணர்வெழுச்சிகள் இலட்சியக் கனவுகள் ஆகியவற்றை பிரதிபலித்தது அது. அந்த எழுச்சி அடங்கி அந்தக்காலகட்டமே பொய்யாய் பழங்கதையாய் மெல்லப்போய்விட்டிருந்தது.

பதிலாக இரு புதிய எழுச்சிகள் உருவாகியிருநதன. ஒன்று இடதுசாரி இயக்கம். அதன் வீச்சு கருத்தியல் – பண்பாட்டுச் செயல்பாட்டின் அனைத்துத் தளங்களிலும் வியாபித்திருந்தது அன்று எல்லா கருத்தியல் கலாச்சாரச் செயல்பாடுகளையும் பொருளியல் அடிக்கட்டுமானத்தின் விளைவுகளாகவும் அக்கட்டுமானத்தை மாற்றுவதற்கான கருவிகளாகவும் மட்டுமே காணும் குழுக்கள் வாத நோக்கு இடதுசாரித் தரப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடக இருந்தது. இதற்கு எதிராக அன்று இந்திய மொழிகள் அனைத்திலுமே குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களும், கலைஞர்களும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது தரப்பு திராவிட இயக்கம், சுயமான சமூக அரசியல் கருத்துநிலைகள் ஏதுமில்லாத பரப்பிய (Populistic movement) இயக்கம் அது. இடதுசாரிகளின் சமூக – அரசியல் கருத்துநிலைகளை எடுத்துக்கொண்டு அவற்றை எளிமையான கோஷங்களாக மாற்றி ஒலித்தது அது. அத்துடன் வெறுப்பு மற்றும் பிரிவினை நோக்கையும் இணைத்துக் கொண்டது. வெறுப்பு, பிரிவினை அம்சம் இல்லாத பரப்பிய இயக்கம் எங்குமே சாத்தியமானதில்லை. மக்களை எளிதில் சென்று சேர்வது வெறுப்பும் பிளவுவாதமும்தான் என பரப்பிய இயக்கத்தவர் உடனடியாகக் கண்டு கொள்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். ஒரு பரப்பிய இயக்கம் எந்தநிலையிலும் நுண்ணிய முரணியக்கங்களை பொருட்படுத்தாது. வெகுமக்களிடையே எளிதில் பரவக்கூடிய எளிமைப்பாடுகளையே அது எடுத்துக்கொள்ளும்.

இவ்விரு இயக்கங்களினாலும் தீவிரமான கலை இலக்கிய சிந்தனைச் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. அவற்றுக்கு கொள்வார் இல்லாத நிலை உருவாகியது. பிரபல ஊடகங்கள் எல்லாவகையான கருத்தியல் விவாதங்களையும் கலையிலக்கியங்களையும் முழுமையாக நிராகரித்தன. அரசியல்தளங்களும் அந்தப் பாதையைப் பின்தொடர்ந்தன. கல்வித்துறையும் அந்த வகையினரால் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பூரணமான ஒரு நிராகரிப்பு ஓர் அறுபடல்.

அந்த நிலைக்கு எதிராக ஒரு சிறிய சிந்தனையாளர் படைப்பாளர் குழுவின் எதிர்வினையே ‘எழுத்து’ இதழ். சி.சு.செல்லப்பா அதன் அபாரமான பிடிவாதத்தாலும் அர்ப்பணிப்பாலும் அந்த இதழை முன்னெடுத்தார். ‘எழுத்து’ ஓர் இயக்கமாக மாறியது. அதைப்போன்ற சிற்றிதழ்கள் ஏராளமாக உருவாகி என்பதுகளின் இறுதிவரைத் தமிழில் தீவிரமான கலையிலக்கியச் செயல்பாடுகள் அறுபட்டு நின்றுவிடாமல் காத்தன. மிகக் குறைந்த பொருட்செலவில், சில தனிமனிதர்களின் தியாகத்தால், உழைப்பால் நடந்தவை அவை. முழுமையான புறக்கணிப்பில் கூட மனம் தளராமல் ஒருவகை ‘பண்பாட்டுத்தள தற்கொலைப்படை’யாக அவை செயல்பட்டன. ஓரளவு சாதகமான ஒரு சூழல் இன்று உருவானபோது தமிழில் கலையும் இலக்கியமும் சிந்தனைகளும் அடைந்த மறுமலர்ச்சிக்கு அந்த சிற்றிதழ் இயக்கத்தால் விதைநெல் பாதுகாக்கப்பட்டு கையளிக்கப்பட்டதே காரணமாகும். அதற்காகவே க.நா.சு., சி.சு.செல்லப்பா இருவருக்கும் தமிழிலக்கிய உலகமும் சிந்தனையுலகமும் பெரிதும் கடன்பட்டிருக்கிறது.

வெங்கட் சாமிநாதன் எழுத்துடன் கொண்டிருந்த மானசீக உறவு இந்த சின்னஞ்சிறிய பண்பாட்டு மாற்றியக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டமையால் உருவானதாகும். செல்லப்பாவின் சிற்றிதழ் இயக்கத்தின் தீவிரமான பங்கேற்பாளியாகவே சாமிநாதன் இலக்கிய உலகில் நுழைந்தார். இன்றும் அந்த மனநிலையிலேயே எழுதி வருகிறார். சாமிநாதனின் எழுத்தினைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்று அது. எந்தக் கணத்திலும் சாமிநாதன் திராவிட இயக்கத்தின் பரப்பிய அணுகுமுறைக்கும இடதுசாரிகளின் பொருளியல் குறுக்கல்வாதத்திற்கும் எதிராகவே இருந்திருக்கிறார். அவற்றுக்கு எதிராக ஒரு தனிமனிதப் பேராளியாகவே செயல்பட்டிருக்கிறார். அந்த இயக்கங்களின் நேரடியான ஒட்டுமொத்தத் தாக்குதல்களில் இருந்து இலக்கியத்தை காத்து அதன் அழகியல் இலக்குகளையும் கருத்தியல் சுதந்திரத்தையும் முப்பதுவருடம் தொடர்ந்து முன்வைத்து வந்தார் என்பது சாமிநாதனின் முதல் சாதனையாகும்.

வெங்கட் சாமிநாதன் ‘எழுத்து’டன் கொண்டிருந்த மாறுபாடு அழகியல் சார்ந்தது. ‘எழுத்து’ இலக்கியத்தை ஒரு தூயகலையாக, அறிவார்ந்த கலையாக அணுகியது. பிறகலைகள் எதையும் அது சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதுடன் பிற கலைகளின் உறவே அதற்குத் தேவையில்லை என்றும் அது வாதிட்டது. இக்காரணத்தால் ‘எழுத்து’ முழுக்க முழுக்க இந்திய மரபையும் தமிழ் மரபையும் நிராகரித்தது. தன் ஆதர்சங்களை ஐரோப்பாவில் இருந்து எடுத்துக் கொள்ள முயன்றது. அந்த மனநிலைக்கு எதிராக இருந்த இரு ‘எழுத்து’ உறுப்பினர்கள் பிரமிளும், வெங்கட் சாமிநாதனும்தான். இலக்கியத்தை கலை என்ற அடையாளத்தில் இருந்தே நகர்த்திச் சென்று தத்துவத்தின் குட்டியாக அதன் தொழுவில் கட்ட முயன்றது நவீனத்துவம். சாமிநாதன் அந்த மனநிலைக்கு எதிரானவராக இருந்தார். இலக்கியத்தை ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக முன்வைத்தார். பண்பாடு என்ற அறுபடாத செயல்பாட்டின் ஒரு துளியே இலக்கியம். ஒரு காலகட்டத்தில் இலக்கியம் அக்காலகட்டத்தின் பிற அனைத்துக் கலைகளுடனும் தொடர்புடையது என்று வாதிட்டார்.

‘எழுத்து’ மரபு இலக்கியத்தை நவீனத்துவ நோக்கில் அதன் வடிவ ஒழுங்கு, வெளிப்பாட்டு ஒருமை, மொழியின் கச்சிதம், உணர்ச்சிகளின் சமநிலை, தத்துவார்த்தமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட்டது. மிகச்சிறந்த ஆக்கம் மிகச்சிறந்த மனச்சமநிலையில் நின்று உருவாக்கப்பட்டிருக்கும் என்று கூறியது. அந்தச் சமநிலை அப்படைப்பின் வடிவத்தில் தெரியும் என்றது. சாமிநாதன் அதை மறுத்து இலக்கியத்தின் சாராம்சம் அதில் உள்ள உத்வேகமே என்று வாதிட்டார். அந்த உத்வேகம் கலைஞன் கொள்ளும் தன்னை மறந்த நிலை பித்துநிலை (Trance)யில் பிறக்கிறது. ஒரு கலைஞன் தன் தனியாளுமையை தன் படைப்பூக்கத் தருணத்தில் மீறிச் செல்கிறான். அப்போது அவன் அந்தப் பண்பாட்டின் குரலாகவே ஆகிவிடுகிறான். அதுவே பித்துநிலை என்பது. அதுவே இலக்கியத்தை உருவாக்குகிறது என்றார் சாமிநாதன்.

சாமிநாதனின் இன்று வரையிலான கருத்தியக்கங்கள் ‘எழுத்து’ உருவாக்கிய இலக்கிய இயக்கத்தின் வேகத்தை முன்னெடுத்துச் செல்வது, இலக்கியதளத்தில் ‘எழுத்து’ உருவாக்கிய நவீனத்துவக் கோட்பாடுகளை மீறிச் செல்வது என்ற இரு தளங்களில் செயல்படுகின்றன. அவரது பங்களிப்பை இவ்விரு கோணங்களில் ஆராயலாம். முதல் தளத்தில் சாமிநாதன் ‘ஆத்மார்த்தம்’, ‘சுதந்திரம்’ என்ற விழுமியங்களை முன்வைத்துப் பேசுபவராகவும், இரண்டாம் தளத்தில் ‘பித்துநிலை’, ‘உயர் அறம்’ ஆகியவற்றுக்காக வாதிடுபவராகவும் இருக்கிறார். இவையே சுவாமிநாதனின் விமரிசன அளவுகோல்களை நிர்ணயிக்கின்றன.

சாமிநாதன் -விக்கி
சாமிநாதன் வேதசகாயகுமார்

2. இலக்கியத்தில் இருந்து பண்பாட்டுக்கு

வெங்கட் சாமிநாதனின் விமரிசன உலகை இன்று வாசிக்கும் ஒரு பொது வாசகனுக்கு அவர் மிக அதிகமாக தனிநபர்த் தாக்குதல்களில் இறங்கியிருப்பதாகவும் பல சமயம் படைப்பைவிட படைப்பாளியை முக்கியப்படுத்தி பேசியிருப்பதாகவும் தோன்றும். ஒருவகையில் அது உண்மை. ஆனால் அதற்கான காரணங்கள் அன்றைய இலக்கியச் சூழலிலும் அன்றைய கருத்தியல் சூழலிலும் உள்ளன. சாமிநாதனின் தாக்கும்தன்மை கொண்ட மனநிலை அச்சூழல்களால் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை.

சாமிநாதன் ‘எழுத்து’ இதழில் எதிர்வினையாற்றியபடி இலக்கிய உலகுக்கு வந்தார். எதிர்வினையாற்றலே அவரது இலக்காக இருந்தது. சொல்வதைவிடப் பதிலளிப்பதே அவரது தூண்டுதலாக இருந்திருக்கிறது. அவரது அந்தத்  தூண்டுதல்களின் காரணமாக அமைந்த அச்சூழல்கள் என்ன? வேதசகாயகுமார் அவரது கட்டுரையொன்றில் இவ்வாறு கூறுகிறார் ”ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் உருவாகிய ஒரு வரட்டு இலக்கியப் போக்கைச் சாமிநாதன் எதிர்கொள்ளும்படி நேர்ந்தது. ஐம்பதுகளில் ‘சாந்தி’, ‘சரஸ்வதி’ இதழ்கள் தோற்றம் கண்டன. மார்க்ஸிய பார்வை கொண்ட இவ்விதழ்கள் ‘மணிக்கொடி’ மரபில் இருந்து வேறான மரபுக்குக் களம் அமைத்தன. அன்று ‘சரஸ்வதி’ ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு இடம் தந்தது. ஒருவகையில் புதிய அழகியல் பார்வைக்கான நம்பிக்கைகள் எழுந்தன. ஆனால் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக ‘தாமரை’ தோற்றம் கண்டதும் ‘சரஸ்வதி’ தன் ஆயுளை முடித்துக்கொள்ள வேண்டும்படி நேர்ந்தது. இலக்கியம் கட்சியின் பிரச்சார வாயாகச் செயல்படக் கட்டாயப்படுத்தப்பட்டபோது படைப்பாளிகளின் விலகல் தவிர்க்க இயலாததாகியது. படைப்பாளிகள் மீதான கட்சியின் மேலாதிக்கம் உலகளவில் பொதுவானதாக இருப்பினும் தமிழ்ச்சூழலில் இது தன் கோர வடிவை முன்வைத்தது. எந்தவித விமரிசனமும் இன்றி சோஷலிச யதார்த்தம் சுமத்தப்பட்டது. ஈழமண்ணில் அறுபதுகளில் நிலவிய வரட்டிலக்கியப்போக்கு ஒரு பாலையாக இங்கும் பரவிவிடும் அன்றைய ஆபத்தை வெங்கட் சாமிநாதன் என்ற விமரிசகனால்தான் தடுத்து நிறுத்த முடிந்தது”

தமிழ்ச் சமூகத்தின் உண்மைகளுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத ஒரு இலக்கிய கருத்தியல் சட்டகம் இலக்கியவாதிகள் மீது சுமத்தப்பட்டது. அதை ஏற்கத்தயங்கிய தீவிரப்படைப்பாளிகள் வெளியேறினர். கி.ராஜநாராயணன், சுந்தராமசாமி, ஜி.நாகராஜன் போன்றவர்கள் உதாரணம். அதை ஏற்றுக் கோஷமிடுபவர்கள் வலுவான ஓர் அணியாகத்திரண்டனர். ரகுநாதன், கு.சின்னப்பபாரதி, கே.முத்தையா, டி.செல்வராஜ் போன்றவர்கள் உதாரணம். பிந்தையவர்கள் படைப்பிலக்கிய தளத்தில் சொல்லும்படி எதையுமே சாதிக்காவிட்டாலும் கல்வித்துறையிலும் பொது வாசகர் மத்தியிலும் ஊடுருவி சில அடிப்படையான கருத்துக்களைப் பரப்பி நிறுவினர். இலக்கியமென்பது அதன் கருத்தியல் நிலைபாட்டை வைத்தே மதிப்பிடப்பட வேண்டும், ஒரு படைப்பாளி சமூக மாற்றத்திற்கு என்ன செய்தான் என்ற கோணத்திலேயே பரிசிலிக்கப்படவேண்டும், அழகியல் நுட்பங்கள் என்பவையும் சரி நுண்ணிய கருத்து நிலைகள் என்பவையும் சரி மக்களுக்கு எதிரானவை – இவையே இடது சாரிக்குழுவினர் அன்று முன்வைத்த அடிப்படையான கருத்துக்கள்.

கால்நூற்றாண்டு கழித்து இப்போது கூட தமிழிலக்கியத்தை வாசிப்பவர்கள் இந்தக் கருத்துநிலைப்பாடு ஒரு குறிப்பிடத்தக்க தரப்பாக இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதைக் காண்பார்கள். அறுபது – எழுபதுகளில் இது இலக்கியத்தையே நிர்ணயிக்கும் அமைப்பு பலம் கொண்டதாக இருந்தது. தீவிர இலக்கியம் என்பது முந்நூறு பிரதிகள் அச்சிடப்படும் நூல்களாக வருடத்திற்கு அதிகம் இருபது தலைப்புகள் மட்டும் வெளிவந்து கொண்டிருந்தது. மிகத்தந்திரமாக ஒரு போலிப்பிரிவினை நிகழ்த்தப்பட்டது. இடதுசாரி கோஷங்களைப் படைப்பில் புகுத்தி எழுதினால் அந்த எழுத்தாளர் முற்போக்கானவர், சமூகப் போராளி. தன் ஆத்மார்த்தமான தேடல்களையும் தத்தளிப்புகளையும் பரவசங்களையும் தன் வாழ்க்கையை மட்டுமே சார்ந்து எழுதும் இலக்கியவாதி சமூகத்திற்கு எதிரானவன், முதலாளித்துவ கையாள், பிற்போக்குவாதி குறுங்குழுவாதி.

இந்த இருமைப்பாட்டையே சாமிநாதன் நேரடியாகத் தாக்கினார் இப்படி மேடையில் முற்போக்கு முழங்குபவர்களுக்கும் அவர்கள் எழுதும் வாழ்க்கைக்கும் நடுவே தொடர்பே இல்லை என்பதை தொடர்ந்து ஒருவகையான தார்மீக வெறியுடன் சுட்டிக்காட்டினார். ஏழைப்பாட்டாளிகளுக்காக எழுதும் எழுத்தாளனின் சொந்த வாழ்வில் அவன் எப்படி இருக்கிறான் என்று ஆராய்ந்தார். இன்று தனிநபர் தாக்குதல் என்று நமக்குத் தோன்றும் இலக்கிய விமரிசன அணுகுமுறையின் தோற்றப்புள்ளி இதுவே. பிறரை ஏகாதிபத்தியக் கையாள் என்றும் பிற்போக்குவாதி என்றும் குற்றம் சாட்டும் இவர்கள் உண்மையில் யார் என்று கேட்டான் சாமிநாதன். இந்தக் கேள்வி இன்று சாதாரணமாகப்படுகிறது. இன்று எந்த ஒரு எளிய வாசகனுக்கும் இவர்கள் எவருமே புரட்சியாளர் அல்ல, மிக எளிய நடுத்தவர்க்க மனிதர்கள் மட்டுமே என்று தெரியும். ஆனால் அன்று அது சாமிநாதன் தனிமனிதராக நின்று போராடி நிறுவிய ஒரு தரப்பாக இருந்தது.

இரண்டாவதாக சாமிநாதன் அன்றைய சூழலில் பெரும்பறையாக முழங்கிய ‘தமிழ்ப்பெருமிதம்’ என்ற போலியுணர்வின் மீது தாக்குதல் கொடுத்தார். தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பண்டைய இலக்கியங்கள் சுவடிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன; அச்சேற்றப்பட்டன. இது பரவலான ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கியது. தமிழ் தனித்துவம் கொண்ட வரலாற்றுப் பண்பாட்டுப் பின்புலம் உடைய ஒன்று என்று நிறுவப்பட்டது. தமிழிலக்கியத்தின் மாண்பும் மகத்துவமும் உலகின் முன் பெருமிதத்துடன் எடுத்து வைக்கப்பட்டன. ஆனால் மிக மெல்ல இந்தப்போக்கு வெறும் டம்பமாக சீரழிந்தது. பண்டைப்பெருமையை ஆராய்ச்சியில்லாமல் வழிபடும் போக்கு உருவாகி வந்தது. உலகின் மூத்தகுடி தமிழே என்றும் உலகமொழிகளுக்கெல்லாம் தமிழே தாய் என்றும் நம்புபவர்கள் உருவாகிவந்தார்கள். கிட்டத்தட்ட மத அடிப்படைவாதம் போலவே இதுவும் மூர்க்கமான மூடநம்பிக்கையாக இருந்தது. தமிழ் மீதான எல்லாவகையான அறிவியல் நோக்குகள் ஆய்வுகளையும் இந்தப்போக்கு வன்மையாக நிராகரித்தது. இன்றும் தமிழின் மாபெரும் பொக்கிஷமாக விளங்கும் தமிழ்ப்பேரகராதியைத் தயாரித்த எஸ்.வையாபுரிப்பிள்ளையை அந்த மொழிவெறி அவமானப்படுத்தி துரத்தியது. தமிழின் மிகப்பெரிய தனிமனித சாதனையான ‘தமிழ்கலைக்களஞ்சியத்தை’ உருவாக்கிய பெரியசாமித்தூரனை அது அவமதித்துப் புறக்கணித்தது. அது எந்த வகையான அறிவியல் நோக்கும் இல்லாத வெறும் பக்தி கோஷங்களை உருவாக்கும் அமைப்பாக மட்டுமே நீடித்தது.

அந்தப் பொது உணர்ச்சியை அரசியல் சக்தியாக மாற்ற முடியும் என்று திராவிட இயக்கங்கள் கண்டுகொண்ட பிறகு ”தமிழ்ப் பெருமிதம்” என்பது எவ்விதமான அறிவு சார்ந்த அடித்தளமும் இல்லாமல் மேடைகளில் மிகையான உணர்ச்சிகளை போலியான மொழியில் வழியவிடும் பாசிசப் போக்காக மாறியது. தமிழின் தொன்மை, தன்னேரில்லாத தன்மை போன்றவை மத நம்பிக்கைகள் போல ஆயின. அவற்றை சாதாரணமாக கேள்விக்குள்ளாக்குவதே ஒருவனை ‘தமிழ் துரோகியாக’ ஆக்கிவிடும் என்ற நிலை உருவாகியது. தமிழ் நூல்களுக்கு பிற இந்திய நூல்களுடன் உள்ள உறவைப் பற்றி ஆராய்வதேகூட ‘தமிழ்த்துரோகம்’ என்ற நிலைப்பாடு உருவாக்கப்பட்டது; இன்றும் அது தொடர்கிறது.

இந்தப் போலித்தனத்திற்கு எதிராக சாமிநாதன் தீவிரமான தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார். சாமிநாதன் தன் ஆரம்பகால எழுத்துக்களில் தீவிரம் காரணமாகவே அந்த நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்பதே எண் எண்ணமாகும். தமிழில் இலக்கிய வெளியை மிக எதிர்மறையாகவே சாமிநாதன் அணுகியிருக்கிறார். அதாவது திராவிட இயக்கம் உருவாக்கிய போலிக் கூச்சல் வழியாகவே அவர் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டாயிரம் வருடத்துத் தமிழ் இலக்கிய மரபு அவ்வப்போது மட்டுமே சிற்சில இலக்கிய, வெற்றிகளை அடைந்தது, மற்றபடி மதத்திலும் மரபு வழிபாட்டிலும் மூழ்கி தன்னைத்தானே நகல் செய்து கொண்டு தேங்கிக்கிடந்தது, தமிழில் ஒரு உத்வேகமான இலக்கிய ஆக்கம் நிகழ்வதற்கான சூழல் என்றுமே இருந்ததில்லை. அந்தச் சூழலில் எதிர்மறைத்தன்மையை மீறியே தமிழில் இலக்கியங்கள் நிகழ்ந்தன என்று தன் ஆரம்பகால எழுத்துக்களில் வாதிடுகிறார் வெங்கட் சாமிநாதன்.

சாமிநாதனின் ‘பாலையும் வாழையும்’ எழுபதுகளில் தமிழில் மிக விரிவாக விவாதிக்கப்பட்ட நூல். அதில் உள்ள கட்டுரைகளை பெரும்பாலும் ‘எழுத்து’ இதழில்தான் சாமிநாதன் எழுதியிருக்கிறார். இன்று அக்கட்டுரைகளைப் பார்க்கும்போது அக்காலத்தின் சூழலில் முன்வைக்கப்பட்ட பழம் பெருமிதத்தின் மிகை வெளிப்பாட்டுக்கு எதிரான ஓர் அறைகூவல் என்பதற்கு அப்பால் பெரிய பொருள் ஏதும் இருப்பதாக நான் எண்ணவில்லை. அந்தக் கட்டுரைகள் உருவாக்கிய விவாதம் மூலம் இலக்கியத்தின் சூழல் குறித்தும் இலக்கியத்தில் தனிமனித வெளிப்பாட்டுக்கான இடம் குறித்தும் ஒரு புரிதல் உருவாக வழியமைந்தது என்று கூறலாம்.

‘பாலையும் வாழையும்‘ நூலில் உள்ள கட்டுரைகள் வழியாக வெங்கட் சாமிநாதன் கூற வரும் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக இவ்வாறு தொகுத்துக் கூறலாம்.

1) தமிழின் இலக்கியமரபு என்பது செய்யுள் மரபே ஒழிய கவிதை மரபு அல்ல. செய்நேர்த்தியே இங்கு கலையாக முன் வைக்கப்பட்டது. ஆகவே திரும்பத் திரும்ப ஒன்றையே செய்தல் என்பதுதான் கலையாகக் கருதப்பட்டது.

2) கவிதை அல்லது கலை என்பது தனிமனிதனின் அறஉணர்வு மற்றும் உணர்வெழுச்சி வெளிப்படுவதற்கான ஊடகம். அதற்கான சூழல் தமிழில் எப்போதுமே இருந்ததில்லை.

3) தமிழில் இலக்கியப் படைப்புகளைக் கறாராக மதிப்பிடும் விமரிசனமரபு இல்லை. ஆகவே இலக்கண ஆராய்ச்சியும் பொருளாராய்ச்சியுமே இலக்கிய மதிப்பீடுகளாகக் கருதப்பட்டன.

4) அவ்வப்போது இலக்கிய உச்சங்கள் வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் சீரான, தரமான இலக்கியமரபு இங்கே இருந்ததில்லை.

ஆகவே தமிழ்ச்சூழலை இலக்கியச் சுரனை இல்லாத ‘அரிசோனா பாலைவனம்’ என்று கூறும் வெங்கட் சாமிநாதன் இங்கே ‘கற்றாழை மரங்கள்’ மட்டுமே முளைக்கும் என்கிறார். இதன் விளைவாக சமகாலத் தமிழ்ப்பண்பாட்டில் கலையும் இலக்கியமும் வளர்ச்சி பெறுவதற்கான சூழல் அமையவில்லை என்று வெங்கட் சாமிநாதன் கூறினார் (‘கலைஞனும் சூழலும்’, ‘பாலையும் வாழையும்’ தொகுப்பு) ‘அன்றைய தமிழ்மண் விதைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளாத மண்ணாகவே இருந்திருக்கிறது. எந்தப் பயிரின் விளைச்சலுக்கும் விதை மாத்திரம் போதாது. ஏற்றுக்கொள்ளும் செழிப்பான உரம் மிகுந்த மண்ணும் தேவை. தண்ணீரும் தட்பவெப்பமும் தேவை. இவை எல்லாவற்றுக்கும் ஏற்பத்தான் விதை இம்மண்ணில் ஊன்றி முளைவிடுதலும் நடக்கும்,” என்கிறார் வெங்கட் சாமிநாதன் (‘இச்சூழலில்’ – முன்னுரை)


இந்த அணுகுமுறையை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். சாமிநாதன் சமகாலத் தமிழ்ச்சூழலை பார்க்கிறார். அதில் கலைக்கும் சிந்தனைக்கும் இடமில்லாத வரட்டுத்தனமே ஓங்கியிருந்ததைக் காண்கிறார். அது திடீரென்று உருவாகி வந்த ஒன்றல்ல என்றம் நமது பண்பாட்டின் அடிப்படை இயல்பாக தொடக்கம் முதலே இருந்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கிறார். இலக்கியத்தை ஒர் அமைப்பாக மட்டுமே பார்த்து இலக்கணத்தையே அளவாகக் கொள்ளுதல் முதலிய வரட்டுவாதங்கள் சென்ற காலங்களில் இருந்துவந்ததைக் கண்டு சூழலின் இயல்பு குறித்து உடனடி முடிவுகளுக்கு வருகிறார்.

சாமிநாதனின் இக்கருத்துக்கள் உருவான ஆற்றாமையை என்னால் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவரது முடிவுகள் எனக்கு உடன்பாடானவையல்ல. அவரது அணுகுமுறை வரலாற்று நோக்கு இல்லாததும் தனி நபர் சார்ந்ததும். அதனாலேயே மிகவும் குறுகியதுமாகும் என்றே நான் எண்ணுகிறேன்.

குறிப்பாக இந்தக் கட்டுரைகளை எழுதிய காலகட்டத்தில் சாமிநாதனுக்கு இருந்த சமஸ்கிருத மரபிலக்கிய வாசிப்பு போதாமைகள் கொண்டது என்றே எனக்குப்படுகிறது. இக்கட்டுரைகளில் அவர் தமிழ் – சமஸ்கிருதம் மரபிலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தமைக்கான ஆதாரங்கள் இல்லை. வலுவான முன் முடிவுகளுடன் ஒரளவுக்கு மட்டுமே வாசித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த முன் முடிவுகள் அவர் சமகால இலக்கிய ‘ஓசை’களை ஒட்டி உருவாக்கிக் கொண்டவை மட்டுமே.

சாமிநாதன் கூறும் எதிர்மறைச்சூழல் தமிழில் இருந்தது என்றே கொள்வோம். அதே இலக்கியச் சூழல் கிட்டத்தட்ட அப்படியே சமஸ்கிருதத்திலும் இருப்பதை எந்த வாசகனும் காணலாம். அதையே அவன் இலத்தீன் இலக்கியத்திலும் சீன இலக்கியத்திலும் காணலாம். சாமிநாதன் கூறும் எதிர்மறை இயல்புகள் எல்லாமே செவ்வியல் மொழிகளுக்கு உரியவை. அவர் கூறும் சாதகமான இலக்கியச் சூழல் என்பது பெரும்பாலும் தொழிற்புரட்சியாலும் சர்வதேச வணிகத்தாலும் உயிர்த்துடிப்பு கொண்ட ஐரோப்பிய மொழிகளுக்கு உரியவை. அப்படியானால் அத்தனை செவ்வியல் மொழிச் சுழல்களையும் அரிசோனா பாலைவனம் என்று கூறுகிறாரா என்ன?

தமிழின் இலக்கிய மரபு என்பது உலகப் பண்பாட்டில் இதுவரை நிகழ்ந்த இலக்கிய சாதனைகளில் ஒன்று என்று உலக இலக்கியமரபுகளில் அறிமுகம் உடையவன், உலகப் பேரிலக்கியங்களில் தோய்ந்த மகத்தான ஆசிரியர்களை அடைந்தவன் என்ற முறையில் என்னால் திட்டவட்டமாகவே கூறமுடியும். தமிழுக்கு இணையான பேரிலக்கியப் படைப்புகள் நிகழ்ந்த மொழிகள் மிகச்சிலவே! படிப்படியாக இன்று உலக அறிவுத்தளம் அதை ஏற்றுக்கொண்டும் வருகிறது. ‘யாமறிந்த கவிகளிலே கம்பனைப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப்போல்’ என்று பாரதியின் வரிகளை நானும் கூறுவேன். அந்த உணர்ச்சியை மட்டுமல்ல அந்தத் தரவரிசையைக்கூட. கம்பன் உலகில் இன்றுவரை உருவான ஓரிரு மகாக்கவிஞர்களில் ஒருவன். கம்பராமாயணத்திற்கு நிகராக மகாபாரதத்தையும், ஒடிஸியையும் ஷேக்ஸ்பியர் நாடகங்களையும் மட்டுமே வைக்க முடியும். ஆகவே தமிழில் செய்யுள் மரபே இருந்தது கலைமரபு இல்லை என்று பொதுவாக ஒருவர் கூறுவார் என்றால் அது விமரிசனக் கூற்று அல்ல; அறியாமையின் வெளிப்பாடு மட்டுமே.

செவ்வியல் மொழிகளுக்கு செவ்வியலே பெரும் சுமையாக ஆகும். பெரும்சுமை அஸ்திவாரத்தை இறுக்குவதுபோல பேரிலக்கியங்கள் தங்கள் சூழலை இறுக்கமாக்கி விடுகின்றன. ஒரு பேரிலக்கிய ஆக்கம் அதற்குப் பின் வரும் அத்தனை படைப்பிலக்கியவாதிகளுக்கும் மீறமுடியாத இலக்கணம் ஒன்றை உருவாக்குகிறது. அந்த இலக்கணத்தை அதன் பின்னர் அதேயளவுக்கு படைப்பூக்கம் கொண்ட இன்னொரு இலக்கியமேதையாலேயே மாற்றியமைக்க முடியும். அது நிகழாதபோது அச்சூழல் அப்படியே தேங்கிவிடுகிறது. சிறந்த உதாரணம் காளிதாசன்.

காளிதாசனுக்குப் பிறகு சமஸ்கிருத இலக்கியத்தில் எந்தப் பாய்ச்சலுமே நிகழவில்லை. வெளிப்பட்ட எல்லா திறமைகளும் காளிதாசன் உருவாக்கிய சட்டகத்திற்குள்ளேயே நிகழ்ந்தன. காளிதாசனின் காவியக்கட்டுமானத்தையும் மொழிக்காட்சியையும் இலக்கணமாக ஆக்கிய பண்டிதர்கள் பிறகு பத்து நூற்றாண்டுக்காலம் சமஸ்கிருத இலக்கியத்தை தூய இலக்கண விளையாட்டாக மாற்றினர். காளிதாசனை முன்மாதிரியாகக் கொண்டு மகாகாவியங்களுக்கு இலக்கணங்களை உருவாக்கினார். அந்த இலக்கணப்படி எழுதப்பட்ட காவியங்கள் பத்து நூற்றாண்டுகாலம் சமஸ்கிருதப் பரப்பை நிரப்பியிருந்தன. இந்த இயக்கம் ‘மகாகாவியப்பிரஸ்தானம்’ என்று கூறப்படுகிறது. இதன் இலக்கணப்படி ‘உமாகேரளம்’ என்ற மகாகாவியத்தை உள்ளூர் பரமேஸ்வர அய்யர் இயற்றியபோது மகாகவிஞர் குமாரன் ஆசான் அதை ஒட்டு மொத்தமாக நிராகரித்து எழுதினார். காளிதாச கற்பனை என்பது இலக்கணமாக மாறி ஆயிரம் வருடம் வெறும் அலங்காரக்கலையை மட்டுமே உருவாக்கியது என்று கூறும் குமாரன் ஆசான் இனிமேல் அந்த இரும்புச்சட்டகத்தை மீறவே முடியாது, அதை அப்படியே தவிர்த்துவிட வேண்டும் என்கிறார்.

அப்படி ஒரு பரிபூரணமான தேக்கம் பல செவ்வியல் மொழிகளில் நிகழ்ந்திருக்கிறது. சீன இலக்கியத்தில் டாங் கவிதைக் காலகட்டம் சீனக்கவிதையை எப்போதைக்குமாக தீர்மானித்துவிட்டது என்று கூறப்படுகிறது. கிரேக்க நாடக மரபு அங்கே மகாகாவியங்கள் உருவாகாமல் செய்துவிட்டது என்று விமரிசகர்கள் கூறியிருக்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது என்றால் ஒரு பேரிலக்கியம் என்பது கலை வெளிப்பாடு என்பதன் அறிவார்ந்த மாபெரும் அறைகூவலும் கூட. அச்சூழலில் ஒரு பெரிய அறிவியக்கத்தை அது தொடங்கி வைக்கிறது. ஆகவே பற்பல தலைமுறைக்காலம் பேரறிஞர்கள் அந்தப் பேரிலக்கியத்தின் மீது. ஆழ்ந்த கவனம் செலுத்தி ஆராய்கிறார்கள். ஏராளமான நூல்களும் உரைகளும் எழுதப்படுகின்றன. அவை ஓர்அறிவுத்தளமாக மாறிவிரிந்து பரந்து அப்பண்பாட்டை ஆட்கொள்கின்றன. ஒரு புதிய படைப்பாளி முதலில் எதிர்கொள்வது இந்த மகத்தான அறிவியக்கத்தை. ஒன்று அவன் அதன் பகுதியாக ஆகவேண்டும், அல்லது கடந்து செல்லவேண்டும். கடந்து சென்றால் மட்டுமே அவனால் இன்னொரு இலக்கிய இடத்தைத் தொடர முடியும். அது அந்த முதல் பேரிலக்கியவாதியளவுக்கே மகத்தான இலக்கியவாதியால் மட்டுமே செய்யக்கூடிய விஷயம். அத்தகைய இலக்கிய மேதைகள் எளிதில் உருவாகக் கூடியவர்கள் அல்ல. அவர்களை உருவாக்குவது சமூகச்சூழலோ கல்வியோ அல்ல அது ஒரு மானுட நிகழ்வு. மானுட வரலாற்றின் விளக்கிட முடியாத இயக்கவியலைச் சார்ந்தது.

இன்னொரு காரணம்; பேரிலக்கியம் ஒரு பண்பாட்டை வரையறை செய்யும் தன்மை கொண்டிருக்கிறது என்பதுதான். எந்தப் பண்பாட்டில் இருந்து ஒரு பேரிலக்கியம் உருவாகிறதோ அந்தப் பண்பாட்டின் எல்லா விழுமியங்களையும் திட்டவட்டமாக வகுத்து உரைத்து அந்தப் பண்பாட்டின் தலைமுறைகளின் ஆழ்மனதில் படிமங்களாக நிலைநாட்டிவிடும் அது. உதாரணம் கம்பராமாயணம்தான். நட்பு, பாசம், காதல், தியாகம் எனத் தமிழ்ப்பண்பாட்டின் பெரும்பாலான விழுமியங்கள் கம்பனின் வரையறைகள் வழியாகவே இன்றும் தமிழில் வாழ்கின்றன. இவ்வாறு வரையறை செய்து மொத்தப் பண்பாட்டையே ஒரிருமைய விழுமியங்களில் தொகுத்து விடுவது பேரிலக்கியங்களின் இலக்கு. கற்பு என்ற விழுமியத்தை சிலப்பதிகாரம் நிறுவியது உதாரணம். இவ்வாறு ஒரு பேரிலக்கியம் அப்பண்பாட்டை மையமுள்ளதாக வரையறுக்கப்பட்டதாக ஆக்குகிறது. அதை ஆராயும் அறிஞர்கள் அந்த வரையறைகளை இலக்கணமாக ஆக்குகிறார்கள். பிறகு வரும் அத்தனை படைப்புகளும் அந்த இலக்கணம் மூலமே ஆராயப்படும். இலக்கணமே இலக்கிய அணுகுமுறையைத் தீர்மானிக்கும் அடிப்படை மதிப்பீடாக இருக்கும். இதுவே தமிழிலும் நிகழ்ந்தது.

பேரிலக்கியங்கள் உருவாக்கும் இந்த இறுக்கத்தை எவ்வாறு பண்பாடுகள் தளர்த்திக் கொள்கின்றன என்பது விரிவான விவாதத்திற்குரியது. இரு மாதிரிகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. ஒன்று அந்த மொழியின் நாட்டார்க் கூறுகள் எழுச்சி பெற்று பேரிலக்கியம் உருவாக்கி நிலைநிறுத்திய மரபில் ஊடுருவி அதை மறு ஆக்கம் செய்கின்றன. இரண்டு, இணையான ஆற்றல் கொண்ட பிற இலக்கிய மரபு ஒன்று வந்து மோதி இந்த பேரிலக்கியமரபை உடைக்கிறது. சிலப்பதிகாரம் இரண்டாம் வகைக்கு சிறந்த உதாரணம். நம்மாழ்வார் முதல் வகைக்குச் சிறந்த உதாரணம்.

தமிழின் பெருமிதத்திற்குரிய வரலாற்றுக் கூறு என்னவென்றால் குறைந்தது மூன்று பேரிலக்கியக் காலகட்டங்கள் இதற்கு உண்டு என்பதே. உலகில் மிகக் குறைவான மொழிகளுக்கே இத்தகைய வரலாற்றுப் பின் புலம் உள்ளது. தமிழின் சங்க இலக்கியக் காலகட்டம் ஒரு பேரிலக்கிய மரபு. இன்று தொடர்ந்து உலகின் இலக்கியச் செல்வங்களை வாசிக்கும் தோறும் சங்க இலக்கியங்களின் இலக்கிய அமைதியும் அழகும் கொண்ட ஆக்கங்கள் மானுட வரலாற்றில் மிகக் குறைவு என்ற எண்ணமே எனக்கு ஏற்படுகிறது. சங்க இலக்கிய மரபு உருவாக்கிய இலக்கணமே தொல்காப்பியம். பேரிலக்கிய மரபின் அனைத்து இறுக்கமும் உடைய இலக்கண நூல் அது. இலக்கியத்தை இலக்கணம் மூலம் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு வழக்கத்தை நிறுவி பலநூற்றாண்டுக்காலம் அதை நீட்டிக் கலைத்தது தொல்காப்பியம் என்று உணரலாம். தொல்காப்பியம் வழியாக அன்றி சங்கப் பாடல்களை அணுகுவது இன்றும் கூட கடினமானதாக உள்ளது.

அந்த இறுக்கத்தை உடைத்தது சிலம்பு. இளங்கோவின் மேதைமை தமிழிலக்கியத்தின் புதிய இலக்கியயுகம் ஒன்றை உருவாக்கியது. இன்று அதை நாம் காப்பிய காலகட்டம் என்று கூறுகிறோம். தொல்காப்பிய இலக்கியங்களை மீறி எழுந்தது அது. பெளத்த சமண மதங்களின் தத்துவ பின்புலம் தமிழில் உருவாக்கிய விளைவு அது. அதன் பின் நம்மாழ்வார் வழியாக அடுத்த இலக்கிய காலகட்டம் தொடங்கியது. இசையும் கலைகளும் இலக்கியத்துடன் ஊடாடிய ஒரு காலகட்டம். முந்தைய இரு காலகட்டங்களை விடவும் மக்கள் பங்கேற்புள்ள காலகட்டம். அதன் உச்சமே கம்பன், பாரதியின் காலகட்டம் வரை அந்த யுகம் நீடித்தது. பாரதிக்குப் பிறகு இன்றைய நவீன இலக்கியம்.

தமிழில் இலக்கிய விமரிசன மரபு இல்லை என்ற கூற்றும் இலக்கிய வரலாற்றுப் பின்புலம் அற்ற ஊகம் மட்டுமே. நாம் இன்று காணும் இலக்கிய விமரிசன அணுகுமுறையானது பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் ·பிரான்ஸிலும் உருவான ஒன்று. கிறித்தவ இறையியல் விவாதங்கள் மற்றும் தத்துவ விவாதங்களுக்கான ஆய்வுமுறை இலக்கியத்தில் போட்டுப்பார்க்கப்பட்டது. பிற்பாடு, அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் எழுத்துமுறை கையாளப்பட்டது. விளைவாக இலக்கிய விமரிசனம் என்ற அறிவுத்துறை உருவாகியது. அதற்கு முன்னர் உலகம் முழுக்க இலக்கிய விமரிசனம் பல்வேறு வடிவங்களில் இருந்து வந்துள்ளது. தொகுப்புகளை உருவாக்குவதும், உரைகள் எழுதுவதும் எல்லாம் அந்தந்த வகையான திறனாய்வுகளே. தமிழில் உள்ள மாபெரும் உரையாசிரியர் மரபு திறனாய்வு மரபே என்று அந்த உரைகளை கூர்ந்து வாசிக்கும் எவரும் உணரலாம். பரிமேலழகரும் நச்சினார்கினியரும் சென்ற தூரத்திற்கு ஓர் இலக்கிய ஆக்கத்திற்குள் பயணித்த மேலைநாட்டு இலக்கியத்திறனாய்வாளர் குறைவு.

வைணவ உரைகளை நவீன இலக்கியத்திறனாய்வின் நோக்கில் பார்க்கும் எவரும் அவை மாபெரும் இலக்கிய விமரிசனத்தொகைகள் என்ற முடிவுக்கே வருவார்கள். இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உருவான புதுத்திறனாய்வு உருவாக்கிய பிரதிமைய விமர்சனம் ( textual criticism) எந்தெந்த வழி முறைகளைக் கையாண்டதோ அவற்றையெல்லாம் இன்னும் பிரம்மாண்டமாக இன்னும் கவித்துவத்துடன் நம்மால் வைணவ உரைகளில் காணமுடியும். ஆம், வேறுவகையில்.

இந்தியக்கலை என்பது செய்நேர்த்தி மட்டுமே என்றும் அதில் தனிமனித அந்தரங்க வெளிப்பாட்டுக்கு இடமில்லை என்றும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ஆங்கில, ஜெர்மானிய இந்தியவியலாளர் குறைகூற ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கலையை இந்தியச் செவ்வியல் கலைகளுடன் குத்துமதிப்பாக ஒப்பிட்டமையின் விளைவு இது. அதை விரிவாக சுட்டிக்காட்டி ஆனந்தக் குமாரசாமி, தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்கள் மறுத்து விளக்கம் அளித்திருக்கிறார்கள். இந்தியச் செவ்வியலில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே செவ்வியலில் திருப்பத்திரும்பச் செய்வது ஒரு மரபாகவே இருந்து வருவதைப் பார்க்கலாம். அதற்குக் காரணம் கலைஞனின் சுய வெளிப்பாட்டுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதோ அல்லது கலைஞன் வெறும் தொழில்நுட்பத்தில் மட்டும் ஈடுபட்டிருந்தான் என்பதோ அல்ல. செவ்வியல்கலை என்பது நுட்பத்தை மேலும் மேலும் தேடிச் செல்லக் கூடிய ஒன்றாகும். ஆகவே எந்தத் தளத்தில் அதிநுட்பத்தை நோக்கி அது செல்கிறதோ அந்ததளம் தவிர பிற அனைத்தையும் அது உறையவைத்துவிடுகிறது. ஒரே வெளிப்பாட்டை மீண்டும் மீண்டும் நுட்பமான மனோ தர்மத்தின்படி விரிவாக்கியபடியே செல்கிறது அது. நடனத்தில், சிற்பத்தில், இலக்கியத்தில், இசையில் நாம் இதையே காண்கிறோம். நளன் அன்னப் பறவையைத் தூதனுப்பும் ஒரே காட்சி கதகளியில் மூன்று நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் நடிக்கப்படுகிறது. தென்னக ஆலயங்களில் எல்லாம் மோகினி, குறத்தி, குறவன், வீரபத்திரன் சிலைகள் திரும்பத்திரும்பக் காணப்படுகின்றன; சங்கப் பாடல்களில் மீண்டும் மீண்டும் கைவளை கழல்கிறது, பசலை படர்கிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் மாபெரும் அருங்காட்சியகங்களில் உலகத்து கலைச்செல்வங்களைப் பார்க்கையில் உலகமெங்கும் செவ்வியல் இதே இயல்பு காணப்படுவதை கவனித்தேன். திபெத்திய தாங்கா ஓவியங்களில் பிசாசுகளும் சித்தர்களும் மீளமீள சித்தரிக்கப்படுகிறார்கள். ஜப்பானிய ஓவியங்கள் சலிக்காமல் மூங்கிலையே வரைகின்றன. சீனத்துப் பீங்கான் சிலைகளில் அசுரர்கள் மீண்டும் மீண்டும் வருகிறார்கள். அவர்களின் அங்கிகளிலும் முகபாவனைகளிலும் மட்டுமே கலைஞன் தன் தேடலை நிகழ்த்துகிறான்.

‘கலையில் கலைஞனின் ‘தனித்துவம்’ வெளிப்படுவதென்பது மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பாவில் உருவான ஒரு கருத்து. அதற்கு முன்பு கலைஞன் ஒரு கலைமரபின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்தான். ஸ்ரீவில்லிப்புத்தூர் மோகினியை பதினான்காம் நூற்றாண்டில் செதுக்கிய சிற்பியும் சரி, திருவட்டார் மோகினியை பதினாறாம் நூற்றாண்டில் செதுக்கிய சிற்பியும் சரி, ஒரு மரத்தின் இரு இலைகளைப் போன்றவர்கள். பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஐரோப்பாவின் தனிமனிதன் என்ற கருதுகோள் மிக முக்கியமாகப் பேசப்படுகிறது. தனிமனிதனின் ஆன்மிக விருப்புறுதியை முற்றாக நிராகரித்த கிறித்தவ மதக் கோட்பாடுகளுக்கு எதிரான கலகம் அது. அந்தத் தத்துவப் போராட்டமே இன்று நாம் தனிமனம், தனிமனித உரிமை, ஆளுமை என்றெல்லாம் கூறும் பல்வேறு கருத்துக்களை இன்றைய வடிவில் வகுத்தது. அவ்வியக்கமே கலையிலக்கியத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கியது. சுருக்கமாகச் சொன்னால் கூட்டுமானுட அடையாளத்திற்கு எதிராக தனிமனித அடையாளத்தை உருவாக்கியக் கொள்ள ஐரோப்பா தத்துவம், மதம், இலக்கியம், கலை, அரசியல் என எல்லா தளத்திலும் நடத்திய ஒட்டுமொத்தமான முயற்சியையே நாம் ஐரோப்பிய மறுமலர்ச்சி என்கிறோம். கலையில் கலைஞனின் தனி ஆளுமையைத் தேடுவதும் வரையறுப்பதற்கு முயல்வதும் இக்காலகட்டத்தில் உருவான போக்கு மட்டுமே. சொல்லப்போனால் ரஸ்கின் எழுதிய நவீன ஓவியர்கள் என்ற பெருநூலே இப்போக்கை தொடங்கிவைத்தது என்கிறார்கள்.

இலக்கியத்தில் டி.எஸ். எலியட்டின் காலகட்டத்திற்குப் பிறகே தனித்திறன் என்ற கருதுகோள் வலுவடைந்தது. மரபுக்கு எதிரான ஒன்றாக தனித்திறன் முன்வைக்கப்பட்டது. மரபைப் பிரதியெடுப்பவர்கள், மீறிச்சென்று சுயத்துவத்தை அடைபவர்கள் என்ற இருமை இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதேயாகும். நவீனத்துவ காலகட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான இலக்கிய விமரிசகர்கள் இந்த கருத்துநிலையை முன்னெடுத்திருக்கிறார்கள். அப்போது விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், கதே போன்றவர்களின் ‘தனித்துவம்’ என்ன என்ற வினா எழுந்து வந்தது. அவர்கள் பெரும்பாலும் மரபில் ஏற்கனவே இருந்ததைத் திரும்பச் செய்தவர்களே. அவ்வினாவுக்கு விடையாக, அப்படித் திரும்பச் செய்வதில் அவர்களின் தனித்துவம் வெளிப்பட்டது என்று விளக்கமளிக்கப்பட்டது. தனித்துவம் என்ற கருத்தே அங்கு அடிப்பட்டு போகிறது. ஏனெனில் செவ்வயில் மரபில் ‘திரும்பத்திரும்பச்’ செய்யும் கலைஞனும் இயந்திரத்தனமாக அதைச் செய்வதில்லை. நுட்பமான மனோதர்மத்துடன் தான் அவன் மறுபடியும் நிகழ்த்துகிறான். அவனுடைய படைப்பாக பங்களிப்பு மேலும் மேலும் நுட்பத்தை அடைவதிலேயே உள்ளது. ஷேக்ஸ்பியர் செய்ததும் அதுதானே?

நவீனத்துவம் உருவாக்கிய இந்தக் கருத்து நவீனத்துவம் தாண்டப்பட்டதுமே மறுக்கப்பட்டது. ஒரு படைப்பில் படைப்பாளியின் பரிபூரணமான தனித்துவம் என்று ஏதும் வெளிப்படுவதில்லை என்று பின் நவீனத்துவ, மொழியியல் சார்ந்த இலக்கியத் திறனாய்வாளர் கூறினர். தமிழில் மிகக் கொச்சையாக, இது கூறப்பட்டு நகைப்புக்கிடமாயிற்று – எழுத்தாளனே இல்லை, இலக்கியம் தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது, என்றெல்லாம் வரிகளை அப்படியே நம்பி மேற்கோள் காட்டினர் நம் கோட்பாட்டாளர்கள். எளிய முறையில் பின்னர் தரப்பட்டுள்ளதை இவ்வாறு விளக்கலாம் நடந்து கொண்டிருப்பதும் ஒரு தொடர்ச்சியான கூட்டு உரையாடல். இந்த உரையாடல்களில் (Discourse) தான் எல்லா ஆக்கங்களும் நிகழ்கின்றன. ஓர் உரையாடலில் சொல்லப்பட்ட ஒரு துண்டு உரை போன்றது ஒரு படைப்பு. அதற்கு முன்னர் நடந்து கொண்டிருந்த உரையாடலில் இயல்பான நீட்சியாக, அதன் விளைவாக உருவாவது அது. இருவகையில் அது உரையாடல்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று, அதற்கு முன்பு வரை இருந்த உரையாடலின் அர்த்தத்தின் மூலமே இதன் அர்த்தம் தீர்மானிக்கப்படுகிறது. இரண்டு, அதற்குப்பிறகு நிகழும் உரையாடல் மூலமே அதன் அர்த்தம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆகவே இன்று ஓர் இலக்கிய ஆக்கத்தில் படைப்பாளியின் சுத்தசுயம்புவான சுயம் ஒன்று வெளிப்பட்டிருக்கும் என்று விமரிசகர் தேடுவதில்லை. அது உருவாக்கும் உரையாடற்களம் என்ன, அந்த உரையாடற்களம் எந்த உரையாடற்களத்தின் பகுதியாக நிகழ்கிறது என்றே பார்க்கிறார்கள்.

ஆகவே சாமிநாதன் அவரது ஆரம்பகாலங்களில் தமிழ் இலக்கிய மரபு குறித்து கூறிய எந்தக் கருத்தும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அவை தமிழின் பேரிலக்கியமரபின் மீது தேவையான வாசிப்புப் பின்புலத்துடன் நிகழ்த்தப்பட்ட விமரிசனங்களும் அல்ல. இவற்றின் அதிர்ச்சி மதிப்பிற்கு அப்பால் அவற்றுக்கு இன்று எந்த பொருளும் இல்லை. ஆனால் சாமிநாதன் அந்த விமரிசனத்தின் ஒரு பகுதியாக தமிழ்ச்சூழல் குறித்து வைத்த விமரிசனங்கள் முக்கியமானவை, அங்கிருந்து அவர் நகர்ந்த பாதையும் குறிப்பிடத்தக்கது.

அன்றைய தமிழ்ச்சூழலில் தமிழின் பேரிலக்கிய மரபைப்பற்றிய பெருமிதங்களை கூறித்திரிவதே இலக்கியச் செயல்பாடாகக் கருதப்பட்டது. அது ஒரு பரவலான போலித்தனமாக விளைந்து உருவானது. இவ்வாறு பழம் பெருமை புலம்பியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழின் பழமரபுகள் மீது உண்மையான ரசனை இருக்கவில்லை. ஏன்? கணிசமானவர்கள் மேலோட்டமான வாசிப்புகளுக்க அப்பால் நகரவில்லை. ஒரு மொழியில் அது மறந்துவிட்டுவிட்ட பேரிலக்கிய மரபு ஒன்று நவீனச் சூழலில் மறு கண்டுபிடிப்பு செய்யப்படுகிறது என்றால் எத்தகைய சிந்தனைக் கொந்தளிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும்? எத்தனை புதிய பதில் அணுகுமுறைகள் உருவாகி வந்திருக்க வேண்டும். ஒரு முப்பது வருடம தமிழ்ச் சூழலில் அதன் இலக்கிய மரபு சார்ந்து ஒலித்த பெருமிதம் உண்மையான வாசிப்பு சார்ந்து ஒலித்த இருந்திருந்தால் உலகுக்கே நாம் புதுப்புது இலக்கிய விமரிசனக் கோட்பாடுகளை கொடுத்திருக்க முடியும். நம் மொழியில் மரபின் நீட்சியான பேரிலக்கியங்கள் பல உருவாகியிருக்கக்கூடும். ஏதும் நிகழவில்லை. முதல் இரு தலைமுறை தமிழாய்வாளர்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க தமிழறிஞர்கள் என எவருமே உருவாகவில்லை. பண்டைய இலக்கியங்களைப் பிழை நோக்கி மறுபதிப்பு செய்யக்கூட இன்று ஆளில்லை. பண்டைய இலக்கியம் சார்ந்து நவீனச்சூழலில் தமிழில் நிகழ்ந்ததெல்லாம் முதல் இருதலைமுறையில் செய்யப்பட்ட பதிப்பு சார்ந்த உழைப்பு மட்டுமே.

இருபதாம் நூற்றாண்டில் மேற்கே உருவான இலக்கிய விமரிசனக் கோட்பாடுகள், மொழியியல், குறியியல், சமூகவியல், நாட்டாரியல், மானுடவியல் கோட்பாடுகள் போன்றவற்றைச் சார்ந்து பொருட்படுத்தும் தகுதி கொண்ட எந்த ஆராய்ச்சியும் தமிழில் நிகழ்த்தப்படவில்லை. இன்றும் பண்டைய இலக்கியங்கள் பற்றி தமிழில் நடக்கும் விவாதங்கள் பதிப்பு குறித்த பிழைதிருத்துநர் தளத்தைச் சேர்ந்த விவாதங்கள் மட்டுமே. இதற்குக் காரணம் பண்டைத்தமிழ் சார்ந்து நமக்கிருந்த பெருமிதம் பொய்யானது என்பதே. அது ரசனை சார்ந்தோ ஆராய்ச்சி சார்ந்தோ உருவானதல்ல; வெறும் இன உணர்வால் உருவான ஒன்று அது.

அந்தப் போலிப்பெருமிதம் நம்மை புதிதாகச் சிந்திக்கவிடாமல் செய்கிறது. புதிய சிந்தனைகளை வெளியே இருந்து வரும்போது அதைத் தடுக்கச்செய்கிறது. மரபின் மீது எளிய விமர்சனம் கூட உருவாகாமல்¦ செய்துவிடுகிறது. சொல்லப்போனால் மொழி சார்ந்த ஓர் அடிப்படைவாதம் உருவாகிவிடுகிறது. இனவாத அரசியலுடன் இணையும்போது அது பாசிசத்தன்மை கொள்கிறது. அது தமிழை ஆழமான ஒரு புதை சேற்றில் சிக்கவைத்தது. பிற இந்திய மொழிகளில் நவீன இலக்கியம் உருவாவதற்கு முன்னரே தமிழிலும் வங்கத்திலும் நவீன இலக்கியம் பெரும் பாய்ச்சலுடன் நிகழ்ந்து விட்டிருந்தது. பாரதியும், அ.மாதவையாவும், ராஜம்அய்யரும், புதுமைப்பித்தனும் எல்லோரும் தமிழின் தொடக்கத்திலேயே வீரியத்துடன்¦ வெளிப்பட்டு விட்டார்கள். முப்பதுகளில் வேகம் பெற்று, அறுபதுகளில் உச்சம் கொண்ட தமிழ்ப் பெருமித அணுகுமுறை அந்த இலக்கிய மறுமலர்ச்சியை ஒட்டு மொத்தமாகவே மிதித்து மண்ணுக்குள் தள்ளிவிட்டது. எண்பதுகள் வரை கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகாலம் நவீனத் தமிழிலக்கியம் பாதாளத்திலேயே சுருண்டு கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உதட்டளவு தமிழ் கோஷம் அனைத்து வகையான இலக்கியச் செயல்பாடுகளையும் முடக்கி போலிகளை மேடையேற்றிவிட்டிருந்தது. இந்தச் சூழலில் இலக்கிய விமரிசன அணுகுமுறையையும் படைப்பியக்கியத்தையும் அழியாமல் பாதுகாத்துவிட வேண்டும் என்று, இருளில் அகல்விளக்க ஏற்றுவது போல ஆரம்பிக்கப்பட்ட சிறு தனிநபர் முயற்சியே ‘எழுத்து’. சாமிநாதன் அதன் ஒரு பகுதியாக எழுத வந்தவர். அவர் மரபையும், இலக்கியப் பெருமிதங்களையும் கடுமையாகத் தாக்கியது இப்பின்னணியிலேயே!

மரபை நிராகரிக்க முனைந்த சாமிநாதன் மேலைநாட்டுச் சிந்தனையில் மரபுக்கு நேர்மாறாகக் கூறப்பட்ட தனிமனித ஆளுமை வெளிப்பாட்டை வலியுறுத்துமிடத்திற்கு இயல்பாகவே வந்து சேர்கிறார். பழங்கதைகள் பேசாமல் நீங்களே எதையாவது உருவாக்குங்கள் என்ற அறைகூவல்தான் அது. இதற்கு மாற்றாக வெறுமென இயங்கிக்கொண்டிருந்த மரபு வழிபாட்டுக் கும்பலை போலிகள் என்றும், சூழலில் படிந்த களை என்றும் கடுமையாகத்தாக்கினார். இந்தத் தாக்குதலை மேலும் மேலும் அவர் விரிவாக்கியபடியே வருவதைக் காணலாம். ஒரு கட்டத்தில் அது தமிழ்நாட்டின் பரப்பிய அரசியல் மீதான கடுமையான தாக்குதலாக ஆகிறது. இவ்வாறு இலக்கிய விமரிசகராக ஆரம்பித்த அவரது பயணம் பண்பாட்டு விமரிசகராக அவர் மாறுவதில் முடிவடைகிறத. சாமிநாதனின் பிற்காலத்து இலக்கிய விமரிசனம் என்றால் அது முழுக்க முழுக்க பண்பாட்டு விமரிசனம் என்றால் மிகையல்ல. ஒரு மரபான பொருளில் சாமிநாதனை இலக்கிய விமர்சகர் என்று கூறமுடியாது. தமிழில் நிகழ்ந்த இலக்கிய மாற்றங்களையும் புதிதாக வந்து கொண்டிருந்த படைப்புகளையும் உடனுக்குடன் கவனித்து விமர்சனம் செய்தவரல்ல அவர். எந்த ஒரு இலக்கியப் படைப்பையும், படைப்பாளியையும் சாமிநாதன் ஒட்டுமொத்தமாக விரிவான ஆராய்ச்சிக்க உட்படுத்தியதில்லை. இலக்கியப் படைப்புகளை ஆராய்வதற்கு தனக்கேயுரிய கோட்பாடுகள் எதையும் சாமிநாதன் கொண்டிருக்கவில்லை. அவரது இலக்கிய ஆராய்ச்சி என்பது இலக்கியத்தை பண்பாட்டின் ஒரு பகுதியாகப் பார்ப்பதே. இலக்கியப்படைப்புகளை பிற பண்பாட்டு நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே அவரது ஆய்வுமுறை. இந்த அம்சமே சாமிநாதனை அவருக்கு முந்தைய இலக்கிய விமரிசகர்களில் இருந்து வேறுபடுத்தியது. சாமிநாதனுக்குப் பிறகுவந்த விமரிசகர்களில் கூட அவரைப் போல பண்பாட்டு விமரிசகர் எவருமில்லை என்றே கூற வேண்டும்.

சாமிநாதனைப்பற்றிய குறிப்புகள் உள்ள பழைய கட்டுரைகள்
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்
கேள்விபதில்

வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3
3. இலக்கியப் பரிசோதனை
இலக்கிய உருவாக்கத்திற்கு எதிரான மரபு வழிபாட்டின் மீதான தாக்குதலுடன் ஆரம்பிக்கும் சாமிநாதனின் இலக்கிய விமரிசனம் தமிழ்ச்சூழலைப் பற்றியதாக ஆக்கியது. அதன் பிறகு அதற்கான காரணங்களை தமிழில் உருவாகி பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பரப்பியம் சார்ந்த இயக்கத்தில் தேட ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் பரவிய பரப்பிய இயக்கங்களாக சாமிநாதன் அடையாளம் காண்பது திராவிட இயக்கத்தையும், கட்சி அரசியலுக்குள் வந்து உச்சகட்ட பிரச்சார இயக்கமாக மாறிய இடதுசாரிகளையும்தான். இவ்விரு இயக்கங்களின் அரசியல் திட்டங்களைப் பற்றியும், சமூகப்பங்களிப்புப் பற்றியும் அவர் கவனிப்பதில்லை. காரணம் ஒரு பண்பாட்டு விமரிசகராக அவரது கவனம் முழுக்க முழுக்க இவ்வியக்கங்கள் பண்பாட்டுத் தளத்தில் ஆற்றிய செயல்பாடுகளைக் குறித்தே இருக்கிறது.  அங்கும் கூட சாமிநாதன், அவர்களின் திட்டங்கள், கோட்பாடுகள் குறித்த விவாதங்களுக்குள் செல்வதில்லை. அவர்கள் உருவாக்கிய விளைவுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அவருக்கு அரசியல் நோக்கும் ஆர்வமும் இல்லை

எப்போதுமே இருமைகளை (dichotomy) உருவாக்கிக் கொண்டு சிந்திப்பது சாமிநாதனின் பாணி. இக்காரணத்திலேயே அவரது எழுத்துக்கள் கருத்துப்பூசல் (Polemical) தன்மை உடையவையாக ஆகின்றன. ஒரு பண்பாட்டுத் தளத்தில் அவர் விவாதத்திற்கு வரும்போது சாதகமான, படைப்புத்தன்மை உடைய ஓர் ஆற்றலை அடையாளம் காண்கிறார். படைப்புத்தன்மை இல்லாத எதிர்மறையான ஆற்றல் ஒன்றை வகுத்துக் கொள்கிறார். பின்னதைக் கடுமையாக எதிர்த்து முன்னதை விதந்தோதி முன்வைக்கிறார். மொத்தச் சூழலையுமே இவ்விரு ஆற்றல்களின் மோதல் களமாக உருவகித்துக் கொள்கிறார். இவ்விரு தரப்புகளையும் ‘அடையாளம் காட்டுவது’ மட்டுமே தன் கடமை என்று எண்ணுவதனால், சாமிநாதன் அவற்றின் வரலாற்றுப் பின்புலம் குறித்தும் அவற்றுக்கு இடையேயான முரணியக்கம் குறித்தும் பெரிதாக ஆராய்வதில்லை. ஆகவே சாமிநாதனை பண்பாட்டு ஆராய்ச்சியாளர் என்று கூறுவதற்குப் பதிலாக பண்பாட்டு விமரிசகர் என்கிறோம்.

தன் தொடக்க நாட்களில் மரபிலக்கியம் x படைப்பூக்கம் என்ற ஒரு இருமையை உருவாகிக் கொண்டிருந்தார் சாமிநாதன். மரபிலக்கியம் குறித்த பெருமிதம் மீது தாக்குதல் நடத்தி தனிமனித அகம் மற்றும் சுயதரிசனம் வெளிப்பாடு கொள்ளும் படைப்புச்சூழலுக்காக வாதாடினார். ஆனால் இரண்டாம் கட்டத்தில் மரபிலக்கியத்தையும் சமகாலத்தில் மரபிலக்கியம் மீது வைக்கப்பட்ட போலிப்பெருமிதத்தையும் ஒன்றாகக் காணும் நோக்கில் இருந்துவிடுபட்டார். தமிழின் மரபிலக்கியத்தை ஒட்டுமொத்தத் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு வலுவான பகுதியாகக் காண ஆரம்பித்தார். தமிழிசை, தமிழ் நாடகம் (அல்லது தமிழ் நிகழ்த்துகலைகள்) தமிழ்ச் சிற்பக்கலை ஆகியவற்றைப் பற்றிய விரிவான ஒரு சித்திரத்துடன் தமிழ் மரபிலக்கியத்தை அவர் இணைத்துக் கொள்வதைக் காணலாம். இந்தக் கட்டத்தில் தமிழின் மரபிலக்கியம் மீது அவர் ஏற்கனவே கூறிவந்த பெரும்பாலான குற்றச்சாட்டுகளை அவரே விளங்கிக்கொண்டு திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டார். தமிழ் மரபின் வெற்றியும் வீறும் அவருக்கும் ஏற்புடையதாக மாறிவிட்டிருக்கின்றன. அந்த சூழல் பின்னர் வந்த பண்பாட்டு அரசியல்களால் சிதைக்கப்பட்டது என்று வாதிடுகிறார் சாமிநாதன். இப்போது மரபு x மரபிலிருந்து உருவான பரப்பியநோக்கு என்ற இருமையை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதன் பின்னர் சாமிநாதனின் விமரிசனச்சட்டகம் தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்து விட்ட வீழ்ச்சியைக் குறித்ததாக அமைந்தது. தமிழ் பண்பாட்டுச் சூழல் சுயவிமர்சனம் அற்றதாகவும், போலியான மிகையான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சாமிநாதன் உணர்ந்தார். அவருக்கே உரித்தான ஆக்ரோஷத்துடன் அதை எதிர்த்து எழுதினார். ஒரு கட்டுரையில் இந்த மாறுதலைச் சாமிநாதன் வகுத்துரைக்க முற்படுகிறார். இந்தியச் சுதந்திர போராட்டத்தின் காலகட்டம் இந்தியச் சமூகத்தில் நவீனத்துவம் நுழைந்த தருணம் என்று எண்ணும் சாமிநாதன் அந்தப்போக்கு வளர்ச்சிக்குப் பதிலாகச் சீரழிவையே உருவாக்கியது என்கிறார்.

1) தீண்டாமை ஒழிப்பு ப் பிரச்சாரம்
2.) பரவிவரும் கல்வி வசதி
3) சினிமா ரேடியோ போன்ற சாதனங்களின் பெருக்கமும் நகர்புற நாகரிகத்தின் பரவலும் கிராமங்களைத் தொட்டது
- என்று நவீன நாகரிகத்தின் அம்சங்களைப் பட்டியலிடும் சாமிநாதன் இவற்றின் விளைவாகத் தமிழ்ச் சமூகத்தில் ஆக்கபூர்வ சக்திகளுக்குப் பதிலாக முற்றிலும் புதிய சக்திகள் தோன்றின என்கிறார்.

1) தமிழ் நாட்டில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தைவிட ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பிராமண எதிர்ப்பு பிரச்சாரமே வலுப்பெற்றது. தீண்டாமை பற்றி, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி, ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்யக் கிளம்பியவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. அவர்களிடையே இருந்த ஜாதி வேற்றுமைகள் பற்றி அக்கறை இருக்கவில்லை. பிராமணிய எதிர்ப்பே ஜாதி ஒழிப்பு என்று பெயர் பெற்றது.

2) மற்ற எண்ணற்ற பல விஷயங்கள் கருதப்பட்டது போல கோயில் கலாச்சாரமும் பிராமணக் கலாச்சாரமாக பெயர் பெற்றது.

3) தமிழ்க்கல்வி என்பது பிராமணர்களால் ஒதுக்கப்பட்டு பிறரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்கியது.

இவ்வாறாக உண்மையான வளர்ச்சிப் போக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டது என்கிறார் சாமிநாதன். (சுந்தரராமசாமிக்கு. ‘ >கொல்லிப்பாவை – 1978) ஒரு நிலப்பிரப்புத்துவ சமூகத்தில் கலை, இலக்கியம், தத்துவம் மூன்றும் அதன் உயர்மட்டத்தில் தான் புழங்கும், அவர்களாலேயே அது வளர்க்கப்படும். அதுவே இயல்பானது. உலகமெங்கும் அப்படித்தான் அது காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள உயர்கலை, இலக்கியம், தத்துவம் மூன்றும் கோயில் என்ற அமைப்பைச் சார்ந்தவை. கோயில் என்றதும் அதைப் பக்தியுடன் இணைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மதத்துடன் உள்ள இணைப்புக்கூட ஒரளவு மட்டுமே. கோயில் ஒரு மையம், அவ்வளவுதான். இது ஒரு தனிப்பட்ட சாதிக்குரிய ஒரு தளமாக இருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அமைப்பில் உயர்நிலைகளில் இருந்த சாதிகளும் அவர்களால் பேணப்பட்ட சாதிகளும் ஈடுபடக்கூடிய ஒன்றாக இருந்தது.

ஜனநாயக காலகட்டத்தில் இந்த சிறிய வட்டத்தில் இருந்து கலைகளும் இலக்கியமும் தத்துவமும் வெளியே வந்திருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் உரிய சொத்தாக அவை மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அனைவருமே அவற்றில் ஈடுபட்டு அவற்றில் புதிய திறப்புகளை உருவாகியிருக்க வேண்டும். உலகமெங்கும் உருவான கலையிலக்கியத் தத்துவ மறுமலர்ச்சி என்பது அவ்வாறுதான் உருவாகியது. அதையே நவீனயுகம் என்கிறோம். தமிழில் அவ்வாறு நிகழாது போனமைக்குக் காரணம் இனவெறுப்பையே அடித்தளமாகக் கொண்ட பரப்பிய – இயக்கமாகிய திராவிட இயக்கங்களே காரணம். அவை கோவில் பண்பாட்டை ஒரு குறிப்பிட்ட சாதிக்குரியதாகச் சித்தரித்து அச்சாதியை சமூகத்தின் அனைத்துத் தீங்குகளுக்கும் பொறுப்பாக்கி வெறுப்பை விதைத்தன. விளைவாக, தமிழ்ப்பண்பாட்டின் சாரமான பகுதிகள் தமிழ் வெகுஜனப் பண்பாட்டில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டன. வெகுஜன எழுச்சி மரபின் சிறந்த உச்சங்களை வந்து தொட்டு வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பே இல்லாமலாக்கப்பட்டது என்கிறார் சாமிநாதன்.

இந்த இடைவெளியில் உருவாகி வந்த வெகுஜன ரசனைக்கு மலிவான கேளிக்கைக் கலையும் கேளிக்கை இலக்கியமும் ஆர்பாட்ட அரசியலும் முன் வைக்கப்பட்டன என்கிறார் சாமிநாதன். அதிலும் பிற எவரையும் விட திராவிட இயக்கத்தின் பங்களிப்பே அதிகம் என்கிறார். ஆகவே பிற தேசங்களில் இயல்பாக நடந்த ஒரு வளர்ச்சி, உயர்மட்டத்தினரின் பண்பாடு வெகுஜனப் பண்பாட்டால் எடுத்து வளர்க்கப்படுவது, முற்றிலும் இல்லாமலாகி வெகுஜனப் பண்பாடு அதுவரையும் இருந்த பண்பாட்டின் சாயலே இல்லாமல் அபத்தமான மலிவான ஒன்றாக உருவம் பெற்றது. தமிழில் வணிக சினிமாவின் வளர்ச்சியையும் அது இன்று சமூகத்தில் பெற்றிருக்கும் இடத்தையும் சாமிநாதன் இப்படித்தான் பார்க்கிறார். வணிக சினிமாவின் அதே களத்தைச் சேர்ந்ததாகவே சாமிநாதன் வணிக எழுத்தையும் பார்க்கிறார்.

உன்னதமான கலை வெளிப்பாடுகள் நிகழ்ந்த ஒரு மொழி தமிழ். பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் உருவான மரபுள்ளது. ஆனால் நாம் காணும் வணிக இலக்கியம் அந்த மரபின் சாயலே இல்லாமல் மலிந்த ரசனைக்கு மட்டுமே ரசிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. மாபெரும் சிற்ப பாரம்பரியமும், நடன பாரம்பரியமும், நாடகப் பாரம்பரியமும்உ ள்ள தமிழில் சினிமா என்பது மேலைநாட்டுக் கேளிக்கை கலையை அப்படியே நகல் செய்வதாக உள்ளது. இதற்குக் காரணம் திராவிட இயக்கம் மரபின் சாரமான பகுதியை மதத்துடனும், உயர் சாதியுடனும் சம்பந்தப்படுத்தி துண்டுபடுத்தியதுதான் என்று வெ.சாமிநாதன் கருதுகிறார். மேலைநாட்டுக் கலையும் இலக்கியமும் தத்துவமும் எல்லாமே கிறித்தவ மரபால் உருவாக்கப்பட்டவைதான். மேலைநாட்டு மறுமலர்ச்சி என்பது கிறித்துவமரபை நிராகரிப்பதாகவே இருந்தது. ஆனால் மத அதிகாரத்தை மட்டுமே நிராகரித்தார்கள். கலையையும் இலக்கியத்தையும் தத்துவத்தையும் எடுத்துக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அது தமிழில் நிகழவில்லை.

இந்த அடிப்படையில் சாமிநாதன் முற்போக்கு இலக்கிய முகாம் உருவாக்கிய கோஷங்களை நிராகரிக்கிறார். இலக்கியமும் கலையும் அடைந்துள்ள நுன்மையையும் ஆழத்தையும் புறக்கணித்து விட்டு பெருவாரியான மக்களுக்கு என ஓர் இலக்கியத்தையோ கலையையோ உருவாக்கிவிடவே முடியாது என்று அவர் வாதிடுகிறார். ராஜ்கபூரின் சினிமா ருஷ்யாவில் பரவலாக ரசிக்கப்படுவதைப் பற்றிப் பேசும் சாமிநாதன்;

”நம்மூர் முற்போக்குகள் (இது ஒரு விசித்திர ஜாதி) போதிக்கிற சித்தாந்தங்களைக் கொண்டு பார்த்தால் கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைத் தன்பால் ஈர்த்துள்ள ராஜ்கபூர்தான் ‘மக்கள் கலைஞர்’ ஆகவும் அக்கோடிகள் தாம் ‘பாட்டாளி மக்கள்’ எனவும் ட்ஸைக்கோவஸ்க்கியையும், ஐஸன்ஸ்டைனையும் புடோவ்கினையும், ஸாஸ்டகோவிச்சையும் ரசிக்கும், ஒரு சில ஆயிரம் ரஷ்யர்கள் ‘மக்களிடமிருந்து’ அன்னியப்பட்டு போன பூர்சுவா மேல்தட்டு வர்க்க உயர்குழுக்கள் எனவும் எனவே மக்கள் விரோதிகள்’ ஆகவும ஆகிவிடுவார்கள்” (இரண்டு தலைமுறைகளுக்கிடையில் ”கொல்லிப்பாவை” ) என்று கூறுகிறார்.

கலையின் இயல்பு மேலும் மேலும் நுட்பத்தையும் ஆழத்தையும் தேடுவதே. அது தன்னிச்சையானது. கலைஞனின் அக இயக்கத்தால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படுவது. அதைக் கட்சிப்பிரச்சாரத்திற்கான கருவியாகப் பார்க்கும்போது அந்தத் தன்னிச்சையான இயக்கம் முற்றாகவே அழிக்கப்படுகிறது. அதன் பிறகு அமைப்பு உருவாக்கி அளிக்கும் கோஷங்களை எதிரொலிப்பதாக அது மாறிவிடுகிறது. இந்நிலையில் அந்தக் கலையும் இலக்கியமும் மனித இதயங்களைத் தீண்டி எழுப்பும் சக்தியை இழந்துவிடுகின்றன. எவரையுமே அவற்றால் ஈர்க்க முடிவதில்லை. ஆகவே அவை பரப்பியக் கலையின் கேளிக்கை உத்திகளைத் தாங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தாங்களும் ஒருவகை பரப்புகலையாக பரப்பிலக்கியமாக மாறிவிடுகின்றன. முதல்வகைப் பரப்பிலக்கியம் வெறும் கேளிக்கை; இது பிரச்சாரம் கலந்த கேளிக்கை.

இந்த விவாதத்தின் விளைவாகவே சாமிநாதன் உள்வட்ட வெளிவட்டக் கோட்பாட்டுக்குச் செல்கிறார். மேலான, நுட்பமான கலையிலக்கிய வெளிப்பாடு என்பது ‘அனைவருக்கும்’ உரியதல்ல என்பதே அவரது நிலைப்பாடு. அதில் ஜனநாயகம் என்பதற்கு இடமில்லை. ஒரு கலையைப் பயிலவும் நிகழத்தவும் ரசிக்கவும் மனநிலையும் பயிற்சியும் நேரமும் உள்ளவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. உலகம் முழுக்க அது இவ்வாறுதான் உள்ளது. ஆகவே எந்த ஒரு சூழலிலும் கலையிலக்கியச் சாதனைகள் சிறிய உள்வட்டத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டு ரசிக்கப்படும். இந்த உள்வட்டத்தைச் சாமிநாதன் சாதி, இனம், வர்க்கம், சார்ந்து உருவகிக்கவில்லை. தமிழ்நாட்டின் பல உயர் கலைகளில் உள்வட்டத்தில் செயல்பட்டவர்கள் உயர்சாதியோ உயர்வர்க்கமோ அல்ல என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். ஆனால் சாமிநாதனின் இந்த உள்வட்டக் கோட்பாடு ‘பிராமண சாதிக்கே கலையிலக்கியங்களை ரசிக்கத் தகுதியுள்ளது’ என்று அவர் கூறுவதாக இடது சாரிகளால் ‘விளக்கம்’ அளிக்கப்பட்டு சாமிநாதன் வசைபாடப்பட்டார். ஏழை எளிய மக்களுக்கு கலையிலக்கியம் தேவை இல்லை என்று சாமிநாதன் கூறுவதாக சொல்லப்பட்டது. மிஞ்சிய வாழ்நாள் முழுக்க ‘நான் சொல்ல வந்தது அதுவல்ல’ என்று கூவிக்கொண்டிருக்க நேர்ந்தது சாமிநாதனுக்கு. உண்மையில் சாமிநாதன் உள்வட்டத்தில் நிகழும் எந்த ஒரு கலையிலக்கிய உச்சமும் காலப்போக்கில் வெளிவட்டத்திற்கும் சென்று சேரும் என்றே சொல்கிறார். உள்வட்டத்து இலக்கியம்தான் வெளிவட்டத்தில் வெகுஜன வாசிப்புக்காக உருமாற்றம் கொள்கிறது. ஆகவே ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழும் இலக்கிய, கலைவளர்ச்சி என்பது அர்த்தமில்லாத ஒன்றல்ல. ஒரு சிறிய மக்கள் கூட்டத்திற்கு மட்டும் உரியதுமல்ல. அது அனைவருக்கும் உரியதுதான். அது மக்கள் விரோதமானதல்ல, அது மக்களுக்காகவே நிகழ்கிறது. இவ்வளவுதான் வேறுபாடு. இந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருள் எத்தகைய உயர்வுடையதாக இருந்தாலும் அதன் செயல்முறை இலக்கியத்திற்கு எதிரானதே. இதுதான் சாமிநாதன் பலநூறு பக்கங்கள் வழியாகக் கூறும் தரப்பு.

சாமிநாதன் கடந்த நாற்பது வருடங்களாக இவ்விரு தரப்புகளுக்கும் எதிராக அயராது சமராடி வருகிறார். ஒரு வகையில் அவரது இலக்கிய இயக்கமே இந்தப் பூசலாக உருமாற்றம் பெற்றுவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இலக்கிய அலைக்கு எதிராக அவர் போராடியிருக்கிறார். ஐம்பது அறுபதுகளில் திராவிட இயக்கம் உருவாக்கிய போலிப்பெருமித கேளிக்கைப் பண்பாட்டு இயக்கத்திற்கு எதிராக அவர் போராடினார். எழுபதுகளில் வானம்பாடி இயக்கம் போன்ற போலி இலக்கிய இயக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்கங்களின் போலித்தனமும் முற்போக்கு இயக்கத்தினரின் போலித்தனமும் சரிசமமாகக் கலந்த ஒன்றுதான் ‘வானம்பாடி’ இயக்கம் என்று சாமிநாதன் கருதினார். எண்பதுகளுக்குப் பிறகு தமிழில் முன் வைக்கப்பட்ட அமைப்புவாதம் பின் நவீனத்துவம், பின் அமைப்புவாதம் போன்ற கோட்பாடுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடினார். நெடுங்காலமாகவே தமிழில் படைப்பியக்கத்தை புறக்கணிக்கக் கூடிய, அவமதிக்கக்கூடிய ஒரு போக்கு உண்டு. அந்தப் போக்கு தான் இந்தக் கோட்பாட்டுச்சூழலிலும் உள்ளது என்பது சாமிநாதனின் எண்ணம்.

இந்த எதிர்மறைக் கூறுகளை எதிர்கொள்ள சாமிநாதன் எப்போதுமே ‘ஆத்மார்த்தம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘இதயப்பூர்வமான’ என்று தமிழாக்கம் செய்யலாம். கலை இலக்கியத்தளத்தில் முழுமையாக இதயத்தூய்மையே உண்மையான படைப்பு வெற்றிகளை உருவாக்க முடியும் என்பது சாமிநாதன் திரும்பத் திரும்பக் கூறிவரும் கருத்து. எதை எழுதினாலும் அதில் ஆசிரியரின் இதயபூர்வமான ஈடுபாடு இருந்தாக வேண்டும் என்று சாமிநாதன் தொடர்ந்து வலியுறுத்துவதைக் காணலாம். ஒரு படைப்பின் கலைத்தன்மையை தீர்மானிக்கும் அம்சமாகவே இந்த இதயசுத்தத்தை சாமிநாதன் அணுகுகிறார்.

படைப்பின் இதயபூர்வமான தன்மையை சாமிநாதன் எப்படி மதிப்பிடுகிறார். நிச்சயமாக அப்படைப்பாளியின் தனிவாழ்க்கையையும் கணக்கில் கொண்டுதான் அந்தப் படைப்பாளி செய்து கொள்ளும் சமரசங்களை, அவரது கூற்றுகளில் உள்ள முரண்பாடுகளை, அவருடைய சொந்த வாழ்வுக்கும் இலக்கியத்திற்கும் இடையேயான தூரத்தை சாமிநாதன் எப்போதுமே கவனிக்கிறார். அவருக்கே உரித்தான அதிரடியான நடையில் அவற்றை தாக்கி எழுதுகிறார். நேர்மையே இல்லாதபோது ஒரு படைப்பின் பிற தகுதிகளைப் பற்றி என்ன பேசவேண்டியிருக்கிறது என்பதுதான் சாமிநாதனின் கூற்றாக உள்ளது.

இந்த அதிரடிப்போக்குதான் சாமிநாதன் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுவதற்குக் காரணமாகியது. ஒரு பல்கலை கழகத்துப் பேராசிரியர் தன்னை தலைமறைவுப் புரட்சியாளன் போல கவிதையில் காட்டிக் கொள்வாரென்றால் அதை சாமிநாதன் வெளிப்படுத்தும்போது அது தனிநபர்த் தாக்குதல் ஆவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு கவிஞர் தன் மதத்தின் அனைத்து மூடநம்பிக்கைகளையும் முற்றிலும் ஆதரித்துக்கொண்டு தன்னைப் புரட்சியாளராகக் காட்டுவதற்காக இந்து மதத்தின் நம்பிக்கைகளை தாக்கியும் கிண்டலடித்தும் எழுதுவாரென்றால் அது மதவெறியோ ஒழிய புரட்சியோ பகுத்தறிவோ அல்ல என்று சாமிநாதன் கூறும்போது அது முற்றிலும் நேர்மையான ஒரு இலக்கிய அணுகுமுறையாகவே படுகிறது.

தன் சக காலத்தவரின் அந்தரங்க சுத்தி குறித்து பகிரங்க விமரிசனத்திற்கு முன்வருவதற்கு அபாரமான நேர்மை தேவை. ‘என்னுடைய அந்தரங்க சுத்தியை நீயும் விமரிசித்துப்பார்’ என்ற அறைகூவல் அதில் உள்ளது. தன் நேர்மை மீது அபாரமான நம்பிக்கை இல்லாத ஒருவரால் அதைச் செய்ய முடியாது. கடந்த வருடங்களில் சாமிநாதன் திராவிட இயக்க எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், வணிக எழுத்தாளர்கள் போன்ற பலரையும் குறித்து தீவிரமான எதிர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர்கள் அவரைத் திருப்பித்தாக்கியிருக்கிறார்கள். குறிப்பாகக் கைலாசபதியும் அவரது அணியும் கூறிய தாக்குதல்களை கூறலாம். சாமிநாதன் பிறந்த சாதியை ஒட்டிய தாக்குதல்களே அவர்மீது நிகழ்த்த முடிந்ததே ஒழிய அவரது நேர்மை, இலக்கியம் மீதான அர்ப்பணிப்பு இரண்டுமே எவராலும் கேள்விக்குரியதாக்கப் படவில்லை. கடந்த அரைநூற்றாண்டாக சாமிநாதனின் பிறப்பு குறித்து மட்டுமே வரும் தாக்குதல்கள் அவரது நேர்மைக்கு அவரது எதிரிகள் தங்களையறியாமலேயே அளித்த சான்று என்றுதான் கூறவேண்டும்.

சாமிநாதன் இலக்கியத்தை தீர்மானிக்கும் விழுமியங்களாக நேர்மை, சுதந்திரம் இரண்டையும் குறிப்பிடுகிறார். ”வாக்கு சுத்தம் மனச்சுத்தம் வேண்டும் என்றால் ‘குளித்துவிட்டு வந்தால் என்னிடமிருந்து சிறந்த இலக்கியங்கள் பிறந்துவிடுமா?’ என்று ஒரு கேள்வியை தூக்கி எறிகிறார்கள் வெற்றிக்களிப்புடன். மனச்சுத்தம் குளித்துவிட்டு வந்தால் வந்துவிடும் என்று இவர் நம்புகிறார்” என்று தாக்குகிறார் வெங்கட் சாமிநாதன் (‘இச்சூழலில்’ – முன்னுரை) இத்தனை முற்போக்குக் கருத்துக்கள் அனுதினமும் முழங்கும் இந்தப் பண்பாட்டுச் சூழல் ஏன் இப்படி வெறிச்சிட்டுக் கிடக்கிறது, இத்தனை சீர்த்திருத்தங்கள் பேசப்பட்டும் இச்சமூகம் ஏன் இப்படித் தேங்கிக் கிடக்கிறது, அப்படியானால் இங்கு பேசப்படுபவை அப்பட்டமான பெயர்கள், பொய்யின் விஷம்பட்டு பாலைவனமாக ஆகிப்போன சூழல் இது என்று வாதிடுகிறார் சாமிநாதன் ஒருவகையில் தமிழின் பண்பாட்டுச் சூழலை அவதானித்து வரும் யாரும் உணரக்கூடிய ஒன்றுதான் இது. அந்த எண்ணத்திற்குத்தான் சாமிநாதன் குரல் கொடுக்கிறார். அவர் மீள மீள அவதூறுகள் மூலம் எதிர் கொள்ளப்பட்டது. அக்குரலில் இந்த தனிமனிதனின் சமரசமில்லாத நேர்மை மிகவும் தொந்தரவு செய்யக் கூடியது என்பதனாலேயே.

ஒரு விமரிசகராக சாமிநாதன் நேர்மையும் சுதந்திரமும் உடையவராக இருந்திருக்கிறாரா? அவர் உக்கிரமாக எதிர்த்து வந்த தரப்புகளில் இருந்து உக்கிரமாக எதிர்க்கும் ஒருவரால் தரமான ஒரு ஆக்கம் எழுதப்பட்டிருந்தால் அதைச் சாமிநாதன் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்? சாமிநாதன் முற்போக்கு முகாமில் இருந்து வெளிவந்த அனேகமான அத்தனை படைப்புகளையும் அங்கீகரித்திருக்கிறார் என்ற யதார்த்தம் நம்முள் உள்ளது. கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, டி.செல்வராஜின் ‘தேனீர்’ போன்று பல உதாரணங்களைக் கூறலாம்.அவரது பார்வை அவருடைய காலகட்டத்தில் நிகழ்ந்த அத்தனை நுண்ணிய நிகழ்வுகளையும் அங்கீகரிப்பதாகவே உள்ளது. கோட்பாட்டளவில் அவருக்கு மார்க்ஸியத்துடன் எத்தனை இடைவெளி உண்டோ அதே இடைவெளி மு.தளையசிங்கத்தின் கோட்பாடுகள் மீதும் உண்டு. ஆனால் தலையசிங்கத்தின் படைப்பூக்கத்தை அவர் அங்கீகரித்தார்.

தமிழில் உருவாகி வந்த தலித் இயக்கத்தைச் சாமிநாதன் அனேகமாக முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். காலம் முழுக்க சாமிநாதன் இலக்கிய ஆக்கங்களில் தேடி வந்த நேர்மை அவற்றில் உள்ளது என்று அவர் உணர்ந்தார். அவற்றில் வெற்றுக் கோஷங்கள் இல்லை. முழக்கங்கள் இல்லை. செயற்கையான உணர்ச்சி வெளிப்பாடுகள் இல்லை. அவற்றில் உள்ள அப்பட்டமான நேர்மையே அவற்றின் கலை என்று எண்ணுகிறார் சாமிநாதன். இமையம், சோ. தருமன் போன்றவர்களைத்  தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் இடத்திற்கு அவர் கொண்டு சென்று வைக்கிறார். அவர் கூறி வரும் எந்தக் கோட்பாட்டுக்கும் வாழ்க்கை நோக்கை அளித்துவிடாத சுதந்திரம் கொண்ட ஆக்கங்கள் அவை என்று அவர் எண்ணுகிறார்.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் சாமிநாதனின் இலக்கியப் பண்பாட்டு விமரிசனச் செயல்பாடு என்பது ஓர் எதிர்வினை மட்டுமே. இதுவே அவரது முக்கியமான பலவீனம். அவரே சொல்லிக் கொள்வது போல அவர் ஓர் இலக்கிய விமரிசகர் அல்ல. அவர் எதிர்க்கிறார், விமரிசிக்கிறார் அவ்வளவுதான். கடந்த முப்பதாண்டுகளில் சாமிநாதன் எந்த ஒரு படைப்பைப்பற்றியும் ஆழமான அலசல்களைச் செய்யததில்லை ஒரு படைப்பின் பல்வேறு அடுக்குகளை மெல்ல மெல்ல விரித்து தன் சொற்கள் மூலம் அதை புதிய ஒன்றாக காட்டுபவனே விமரிசகன். அவன் தான் வாழும் சமூகத்திற்கு இலக்கியப்படைப்புகளை வாசிப்பதற்கான பயிற்சியை அளிக்கிறான். இலக்கியப்படைப்புகளை அந்த மரபின் பேரிலக்கியச் செல்வங்களுடன் ஒப்பிட்டு தரப்படுத்துகிறான். அந்தப் பண்பாட்டின் பொதுப் போக்குடன் இணைக்கிறான். இந்த எந்தப் பணியையும் சாமிநாதனின் விமரிசனங்கள் ஆற்றவில்லை. ஏனென்றால் அவர் எப்போதுமே படைப்புகளை நோக்கித்  தன்னை முற்றாகத் திறந்து கொண்டு அதில் தன் மொழியுடன் இறங்கிச் சென்றதில்லை.

க.நா.சு.வை இலக்கிய விமரிசகர் என்று கூறமுடியாது, இலக்கிய சிபாரிசுக்காரர் என்று கூறவேண்டும் என்றார் சுந்தர ராமசாமி. அப்படிப் பார்த்தால் சாமிநாதனை இலக்கியப் பரிசோதகர் என்றே கூறவேண்டும். இந்த ரயிலில் யார் பயணச்சீட்டுடன் ஏறியமர்ந்திருக்கிறார் என்று பார்த்து சிலரை அனுமதிக்கிறார். சிலரை இறக்கி விடுகிறார்.

4. பித்தும் படைப்பும்
சாமிநாதனின் விமரிசனப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் அவர் தமிழ் பண்பாட்டின் கலைப்பெறுமானம் குறித்து ஒரு விரிவான உருவகம் ஒன்றை உருவாக்க முயல்வதைக் காணலாம். தமிழ்ப்பண்பாட்டில் பேரிலக்கியங்களை மீட்டு அதை இரு பேரறிஞர்களை சாமிநதான் அபாரமான வழிபாட்டுணர்வுடன் விவரிக்கிறார். ஒருவர் உ.வே.சாமிநாதய்யர். இன்னொருவர் வையாபுரிப்பிள்ளை. சாமிநாதய்யர் இலக்கியங்களை நவீன காலகட்டத்திற்கு மீட்டுக்கொண்டு வந்தவர். வையாபுரிப்பிள்ளை தன் ஈடிணையற்ற பாண்டித்தியத்தால் சமகாலத்து வாசிப்புக்காக அவற்றை விளக்கியவர். இருவருமே அறிவியல் அணுகுமுறை கொண்டவர்கள். மொழிப்பற்றை மொழிவெறியாக மாற்றிக் கொள்ளாதவர்கள். அதனாலேயே புறக்கணிக்கப்பட்டவர்கள்.

அதற்குக் காரணம் சமகாலத்தில் உள்ள வரட்சி என்று கூறுகிறார் சாமிநாதன். தமிழில் இசை மற்றும் நாட்டியத்திற்கு மட்டுமே ஓர் அறுபடாத தொடர்ச்சி உள்ளது. இவ்விரு தளங்களில் மட்டுமே சராசரி ரசிகர் கூட கலையைப் பிரித்தறியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பிற துறைகளில் இந்த நுட்பம் அற்றுப்போய்விட்டது என்று சாமிநாதன் கூறுகிறார். இதற்கான காரணங்களை அவர் ஆராயும்போது ஒன்றை விட்டுவிடுகிறார். இந்தக் கலைகளைப் போலவே சிற்பக்கலைக்கும் இன்றும் தமிழ் நாட்டில் அறுபடாத ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை அவர் அவதானித்திருக்கலாம். இப்போது கூட தமிழ் நாட்டில் சிற்பத்தில் மரபார்ந்த தளத்தில் அற்புதமான புதிய ஆக்கங்கள் உருவாகின்றன. என்ன காரணம் என்றால் இக்கலைகள் சாதிகளுடன் இணைக்கப்பட்டிருந்தன. இக்கலைகளை அதற்கான சாதிகள் நிலப்பிரத்துவ காலகட்டத்தில் பேணி, நிலப்பிரபுத்துவம் வீழ்ச்சி அடைந்த போது பிடிவாதமாக முன்னெடுத்து முதலாளித்துவ யுகம் வரை கொண்டு வந்து சேர்ந்தன. இலக்கியத்திற்கு அல்லது தத்துவத்திற்கு ஒரு சாதி இல்லை. இருக்கவும் முடியாது. பிற கலைகளைப் போல பாரம்பரியமாக் சொல்லிக்கொடுத்து முன்னெடுக்கத் தக்க ஒன்றில்ல இலக்கியமும் தத்துவமும். அதாவது இங்கே நுண்கலைகள் நீடித்தமைக்குக் காரணம் இங்கிருந்த சமூக அமைப்பு. இலக்கியம் அழிந்ததற்கு காரணமும் அந்த அமைப்பே. இலக்கியம் தேவை இல்லாத ஒரு லெளகீக வாழ்க்கையை அது முதலாளித்துவத்தின் தொடக்கத்தில் வந்தடைந்தது. ஆகவே இலக்கியம் அழிந்தது. நிலப்பிரப்புத்துவ கலையும் இருந்து முதலாளித்துவ கலை ஒரு தொடர்ச்சியைக் கண்டடைந்து வளர முடிந்தது. இங்கு இலக்கியத்தில் அந்தத் தொடர்ச்சி அறுபட்டது. அது வரலாற்று நிகழ்வு மட்டுமே.

மரபின் கொடை என்ன என்று தேடிச் செல்லும் சாமிநாதன் மரபில் உள்ள படைப்பூக்கத்தையே தன் அளவுகோலாகக் கொள்கிறார். சாமிநாதனுக்கு முன்னர் தமிழ் மரபு என்று பேசியவர்கள் தமிழ் மரபின் இலக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டார்கள். அவர்களில் இரு தரப்பு தமிழிலக்கிய மரபில் இருந்து தமிழ் வாழ்வின் சித்திரத்தை உருவாக்கிக் கொள்வது தவிர பிற ஆர்வமேதும் இல்லாத பண்டித மரபு. ‘இலக்கியம் காட்டும் சமூகம்’ என்ற வழக்கமான சொற்றொடரில் ஒதுங்கிவிடுகின்றன இவர்களுடைய ஆய்வுகள். இலக்கியத்தை தரவுகளின் தொகுப்பாக, சமூக ஆவணமாக மட்டுமே இவர்கள் அணுகினார்கள். அதில் இவர்களுக்கு ருசியோ தரமோ இல்லை. சுந்தர ராமசாமி கிண்டல் அடித்ததுபோல ‘சங்க இலக்கியத்தில் மிகமிகச்சிறந்த பாடல்கள் அல்லாதவை ஏதேனும் உண்டா?’ என்று கேட்டால் இல்லை என்றே கூறுவார்கள். இன்னொரு தரப்பு தமிழிலக்கிய மரபை நுண்ணிய ரசனையுடன் மறுவாசிப்பு செய்தது. அதற்கு வையாபுரிப்பிள்ளையை ஒரு சிறந்த உதாரணம் எனலாம். ஆனால் இவர் இயற்றிய இசை, நடனம், சிற்பம், சடங்குகள் போன்றவற்றில் ஒரு செவ்வியல்தன்மை உள்ளது. ஆகவே தமிழின் செவ்வியல் மரபுடன் அவற்றை இணைத்துப் பார்ப்பதற்குரிய வெளி இருந்தது. சாமிநாதனின் கோட்பாடு என்பது இந்த மரபுக்கலைகள் கோயில் என்ற உள்வட்ட மையம் சார்ந்து செயல்பட்டு முழுஐம நோக்கிச் சென்றன என்பதாகும். கோயில் என்பது மதம் அல்லது வழிபாட்டுக்கு மட்டும் உரியதாக இருக்கவில்லை. கோயிலைச்சுற்றிக் கட்டப்பட்டதாகவே தமிழ்ப் பண்பாட்டின் உச்சதளம் இருந்தது. அது எல்லா சாதியினருக்கும் உரியதாக இருக்கவில்லை என்று கூறும் சாமிநாதன் கண்டிப்பாக அது பிராமணர்களுக்கு மட்டும் உரியதாகவும் இருக்கவில்லை என்கிறார்.

தமிழின் தொன்மையான இசையே கர்நாடக இசையாக வடிவம் கொண்டது என்று சாமிநாதன் ஏற்கிறார். அந்த அழியாத மரபை கோயில்களும் கோயில்களைச் சார்ந்து இயங்கிய பிராமணர்களும் பேணி, இருபதாம் நூற்றாண்டுக்கு கொண்டு வந்தனர் என்கிறார். அது சென்ற தலைமுறை வரை அத்தனை சாதியினராலும் ரசிக்கப்படக்கூடிய ஒரு வெகுஜனக் கலைவடிவமாக இருந்தது என்று கூறும் சாமிநாதன் ஆரம்பக் காலத்து திரைப்பாடல்கள் பெரும்பாலானவை கர்நாடக ராகங்களிலேயே அமைந்திருந்தன என்கிறார். நாட்டுப்புற மெட்டுகளுக்குக் கூட கர்ந்¡டக சங்கீத அடிப்படை இருந்தது. அதாவது அவை ஒரே பண்பாட்டு வேர்பிடிப்பு உடையவை; சினிமா சங்கீதம் தான் செயற்க¨யான ஓர் இசையை உருவாக்கி அதை அழித்தது என்பது அவரது கருத்து. பாகவதமேளா போன்ற பாரம்பரிய நாட்டியநாடக வடிவங்கள் கோயில் சார்ந்து அவற்றின் நுண்மையின் உச்சங்களை அடைந்தன என்று சாமிநாதன் கூறுகிறார். இந்த உள்வட்டம் என்பது அக்கலைகளை நிகழ்த்தும், பேணும் வட்டமே ஒழிய அதன் ரசனை வெளிவட்டத்திற்கும் விரியக் கூடியதாகவே இருந்தது என்பதுஅவரது கோட்பாடு. அவருக்கு முன்பு பேசிய அனைவருக்கும் இலக்கிய மரபு மட்டுமே கண்ணில்பட்டது. தமிழ்மரபு என்றால் ஞானமரபு மட்டுமே,. ஒட்டுமொத்தமான ஒரு பண்பாட்டு வெளியாக அதைக் கருத்தில் கொள்ள இவர்களால் இயலவில்லை என்றே கூற வேண்டும்.

சாமிநாதன் இரண்டாவது மரபின் ருசியுணர்ச்சியைப் போற்றுகிறார். ஆனால் அவரது பார்வை ஓட்டுமொத்தமாகவே தமிழ்ப்பண்பாட்டை வகுத்துக்கொள்ள முயல்கிறது. தமிழின் இசை மரபு, நாடகமரபு, சிற்பமரபு, நாட்டார் கலைகளின் மரபு, கோயில் விழாக்கள் ஆகியவற்றுடன் அவற்றின் ஒரு பகுதியாக சாமிநாதன் தமிழ் இலக்கியத்தையும் பார்க்கிறார். இலக்கியத்தில் சாராம்சமாக வெளிப்படுவது பிற அனைத்திலும் அவ்வாறே வெளிப்பாடு கொள்ள வேண்டும் என்கிறார்.

சாமிநாதன் எழுதவந்த அறுபதுகளில் இது ஒரு பெரிய புரட்சி. ஓர் அறைகூவல். சாமிநாதன் முன்னோடியாகக் கொண்ட இலக்கிய தொடர்ச்சி க.நா.சு.வாலும் செல்லப்பாவாலும் ஆனது. அவர்கள் எஸ்.வையாபுரிப்பிள்ளை வழியைச் சேர்ந்தவர்கள். இலக்கியத்தை தூய ஞானமாக தூய கலையாகப் பார்ப்பவர்கள் நிகழ்த்துக்கலைகள், இசை போன்றவற்றில் அவர்களுக்கு ஆர்வமே இருந்ததில்லை. நாட்டார்கலைகள் குறித்து ஆழமான அவநம்பிக்கை அல்லது இளக்காரம் இருந்தது. ஆகவே சாமிநாதன் அந்த மரபுடன் கடுமையாக முரண்பட்டு வாதிட வேண்டியிருந்தது. நாட்டார்கலைகள் மற்றும் நாடகம் குறித்து சாமிநாதன் எழுதிய பல கட்டுரைகளையும் குறிப்புகளையும் வெளியிட செல்லப்பா மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. பிறகு தனக்கே என்று ‘யாத்ரா’ என்ற சிற்றிதழை அரும்பித்த சாமிநாதன் அதில் தான் தன்னுடைய ஒட்டுமொத்தப் பண்பாட்டு உருவகத்தை தொடர்ச்சியாக முன்வைத்து மெல்ல மெல்ல நிறுவினார்.

இந்தப் பின்னணியுடன் சாதாரணமாகப் பொருந்தாத நாட்டார்மரபையும் இதற்குள் கொண்டுவர முயன்றதே சாமிநாதனின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு. நாட்டாரியல் எண்பதுகளுக்குப் பின்னர்தான் தமிழில் ஓர் அறிவுதுறையாக வலுப்பெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறைகள் உருவான பின்னர் நாட்டாரியலுக்கு சர்வதேச நிதி வர ஆரம்பித்த பின்னர், உருவான அலை இது. ஆனால் வெங்கட்சாமிநாதனின் ‘யாத்ரா’ எழுபதுகள் முதலே நாட்டாரியலில் உள்ள தமிழ்ப்பண்பாட்டுத் தொடர்ச்சி மீது அறிவு உலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்திருப்பதைக் காணலாம். நாட்டாரியலில் பி.எல்.சாமி போன்றவர்கள் ஆற்றிய பங்களிப்பு ஆராயபடவில்லை என்று குறிப்பிடும் சாமிநாதன் ”நம் சிறு தெய்வ வழிபாட்டின் மற்றொரு பரிணாமமாக மலர்ந்துள்ள கலைவெளிப்பாடுகளின் இன்னொரு பரிமானம் தமிழில் இதுவரை கவனிக்கப்படவில்லை. இக்கலை வெளிப்பாடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய தமிழ்க்கலைச் சூழல் இவற்றை கலையாகக் காணாத சூழல். இவற்றின் அழிவைப் பற்றி காணாத சூழல். இவற்றின் அழிவைப்பற்றி சிந்திக்காததும்மனம் நோகாததுமான சூழல்: ‘இதற்குக் காரணங்கள், ஒன்று: நம் கலையுணர்வின் வரட்சி. இரண்டு: போலியான பகுத்தறிவும் முற்போக்கும் இக்கலைகள் சார்ந்த தெய்வ வழிபாட்டைக் கண்டு அடையும் பீதி” என்று குறிப்பிடுகிறார். (நமது கலை இலக்கியங்களின் அடித்தளம்)

நாட்டார் கலைகளை செவ்வியல் கலைகளுக்கான விளைநிலமாக கருதும் நோக்கு விரைவிலேயே வந்து சேர்கிறார் வெங்கட் சாமிநாதன். அதன்பின் அவரது பார்வையில் தமிழ்பண்பாட்டின் ஊற்றுமுகம் சங்க இலக்கியமாகவோ தொல்காப்பியமாகவோ இருக்கவில்லை. கணியான் கூத்தும் தெருக்கூத்தும், தோல்பாவைக் கூத்தும் அந்த ஊற்றுக்கண்களை அவருக்குக் காட்டுகின்றன. ‘ஆதி மக்களிடம் நாகரீகம் காணப்படாதிருக்கலாம் ஆனால் அவர்கள் இயற்கையுடன் கொண்ட எதிர் கொள்ளல் மிகவும் ஆழமானது. உண்மையின் தரிசனச் சாயல்களை உள்ளுணர்வு மூலம் பெற்றுக் கொண்டது அது” என்று சாமிநாதன் அதைப் பதிவு செய்கிறார். [அதே] அந்த தரிசனமே செவ்வியலாக வளர்ந்தது என்று கூறும் சாமிநாதன் நவீன அறிவியலுக்கும் கூட அதுவே ஊற்று என்கிறார்.

தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் எல்லாம் தமிழின் தொன்மையான நாட்டார் மரபின் சாராம்சமே வெளிப்படுகிறது என்று வெங்கட் சாமிநாதன் கூறுகிறார். அந்த சாராம்சம் செவ்வியலாக வளர்ந்து ஒரு தனிப்பிரவாகமாக ஓடி வருகிறது. அதே சமயம் நாட்டாரியல் அதற்கே உரித்தான மாற்றமின்மையுடன் இன்று நம் கரங்களுக்குக் கிடைக்கிறது என்கிறார் சாமிநாதன். இன்று நாம் காணும் பாகவதமேளாவும் தெருக்கூத்தும் நாட்டாரியல் கலைகளின் எல்லைக்குள்ளேயே மாபெரும் செவ்வியல்இயல்புகள் கொண்டவை என்கிறார். ஒவ்வொரு தெருக்கூத்தும் ஒரு மேடை நிகழ்வாக இல்லாமல் மொத்த கிராமமே அரங்காக மாறி மொத்த கிராமத்து மக்களும் கதாபாத்திரங்களாக ஆகும் ஒரு எல்லையற்ற அரங்க நிகழ்வாக உள்ளது. இது தமிழின் மாபெரும் கலைச்சாதனை என்கிறார் சாமிநாதன். கலை என்பது எங்கிருந்தும் பெறப்படுவதல்ல. கற்று உருவாக்கக் கொள்ளக் கூடியதல்ல. ”வரலாற்றுக்கு அதீதமான காலம் தொட்டு தொடர்ந்து வரும் பொது ஞானவியலின் ஒரு பகுதியாகவே எந்த கலையும் இலக்கியமும் உருவாக முடியும். நவீனக்கலைகளும் இலக்கியமும் எல்லாமே அப்படித்தான். தெருக்கூத்து, கணியானாட்டம், உள்ளிட்ட நமது நாட்டார்கலைகள் அனைத்துமே நமது இயற்கை வாழ்க்கை முறை தெய்வங்கள் சடங்குகள் ஆகியவற்றுடன் இணைந்தவை” என்கிறார் சாமிநாதன்.

இந்த அடித்தளத்தில் இருந்த சாமிநாதன் ஒரு வினாவை எழுப்பிக்கொள்கிறார். நமது கலை இலக்கிய வெளிப்பாடுகளின் பொதுவான அச்சம் என்ன? ஒரு தெருக்கூத்து நடிகனுக்கும் தி.ஜானகிராமனுக்கும் எது பொதுவாக இருக்க முடியும்? முடிசூடிய கணியானுக்கும் நம்மாழ்வாருக்கும் பொதுவான கலையம்சம் என்ன? சாமிநாதன் அதை பித்துநிலை (Trance) என்று வகுக்கிறார். ஒரு கலைஞன் தன்னுடைய சொந்த ஆளுமையை முற்றாக இழந்து கூட்டு நனவிலிக்கு தன்னை ஒப்புக் கொடுத்தல் என அதைச் சொல்லலாம். தன்னை மறந்து தன்னைவிட பெரிய பலவற்றுக்கான கருவியாக ஆவது அது. பிரக்ஞையில்லாத நிலை. மொழிக்கு அல்லது படிமங்களின் பேருலகுக்கு தன்னை விட்டுக் கொடுக்கும் நிலை. ஒரு சாமியாடி சாமியாடும் போது அவனுடைய தெய்வமாக அவனே ஆகிவிடுகிறான். உண்மையான படைப்பூக்கம் கொள்ளும் போத எழுத்தாளன் அவனுடைய கலையாக அவனே ஆகிவிடுகிறான். இது ஒரு தூய பரவசநிலை: உன்மத்த நிலை.

தமிழின் இலக்கிய மரபில் பக்தி இலக்கிய காலகட்டத்தில்தான் அந்த பரவசநிலை அதன் உச்சத்தில் வெளிப்பட்டது என்று சாமிநாதன் கருதுகிறார். தமிழ் விமரிசகர்களில் தமிழின் செவ்விலக்கிய மரபுக்கு மேலாக அதன் கற்பனாவாதக் காலகட்டத்தை தூக்கிப்பிடித்த விமரிசகர் வெங்கட் சாமிநாதனே. அவருடைய பார்வையில் உண்ணும் உணவு, உடுக்கும் உடை தின்னும் வெற்றிலை யாவும் கண்ணனே என்று உணர்ந்த ஆண்டாளின் நிலை தான் படைப்பூக்கத்தின் பூரண நிலை. அதை அடைவதே கலைஞனின் இலக்கு.அந்நிலையில் இலக்கியம் தூய கலையாக ஆகிவிடுகிறது. இசை, கலை, இலக்கியம் என்ற பேதங்களெல்லாம் முழுமையாக அழிந்துவிடுகின்றன. இந்த நிலையை சாமிநாதன் சில இடங்களில் ‘தரிசன நிலை’ என்கிறார். இந்த நிலை நிகழாதவரை இலக்கிய ஆக்கங்கள் வெறும் தந்திரங்களாகவும் ஜோடனைகளாகவும் எஞ்சும் என்று கூறுகிறார்.

இந்தப் பார்வை சாமிநாதனுக்கு இலக்கியத்தையும், நிகழத்துக் கலைகளையும் நாட்டாரியலையும், செவ்வியலையும் ஒரே சரடில் பணைக்கப் பெரிதும் பயன்படுகிறது. அதே சமயம் இலக்கியத்தின் பல்வேறு சாத்தியக் கூறுகளை மறுப்பதாகவும் இது அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். உயரிய இலக்கியத்தின் ¦ வளிப்பாடு என்பது பித்துநிலையில் சாத்தியமானது மட்டுமல்ல. அது ஆழமான விவேக நிலையில் இருந்தும் உருவாகலாம். கசந்த அங்கதமான வெளிப்படலாம். முதிர்ந்த வரலாற்றுப் பிரக்ஞையுடன் தன்னை நிகழத்திக் கொள்ளலாம். உலக அளவில் இன்று வரை பேரிலக்கியங்களாக முன்வைக்கப்பட்டுள்ள பல ஆக்கங்கள் இம்மூன்று நிலைகளின் வெளிப்பாடுகளேயாகும். பித்து என்பது அந்த மனநிலைகளின் உச்சங்களில் அவ்வப்போது நிகழ்ந்து மறைவதாக இருக்குமே ஒழிய பேரிலக்கியங்கள் கோரும் விரிவான கட்டமைப்பை அதன்மூலம் உருவாக்க முடியாது.

அதாவது சுருக்கமாகச் சொன்னால் சாமிநாதன் கூறும் பித்துநிலை வெளிப்பாடு என்பது கற்பனாவாதப் படைப்புகளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியது. கற்பனாவாத ஆக்கங்கள் படைப்பின் வரலாற்றுத்தன்மை, கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்வதில்லை. காரணம் அவை கூடுமானவரை பிரக்ஞைநிலையை தவிர்க்க முயல்கின்றன. கட்டமைப்பு என்பது கூரிய தொழில் நுட்ப உணர்வின் விளைவே. எந்தப் பேரிலக்கியத்திலும் அந்தத் தொழில்நுட்பத்திறன் கலந்திருக்கும். ஆகவே சாமிநாதன் செவ்வியலை முழுக்க நிராகரிக்குமிடத்திற்குச் சென்று சேர்கிறார். இலக்கியத்தை இசைபோல நடனம்போல ஒரு தூய அனுபவமாக குறுக்கிவிட முயல்கிறார். இலக்கியம் கலை மட்டுமல்ல, அறிவுத்துறையும் கூட. பேரிலக்கியங்கள் ஒரு பண்பாட்டின் பாடநூல்களும் வரலாற்று நூல்களும் கூட.

இவ்வாறு செவ்வியலை நிராகரிக்கும் சாமிநாதன் இக்காரணத்தாலேயே செவ்வியலின் நவீன கால வடிவமாகிய நவீனத்துவத்தையும் நிராகரித்தாக வேண்டிய இடத்திற்கு வந்து சேர்கிறார். நவீனத்துவத்தின் பிரக்ஞை பூர்வமான சமநிலை, அடக்கம், நுண்ணிய வெளிப்பாடு முதலியவை அவருக்கு உவப்பானதாக இல்லை. தமிழ் நவீனத்துவத்தின் உச்சகட்ட வெளிப்பாடான அசோகமித்திரனை சாமிநாதன் மீண்டும் மீண்டும் முழுமுற்றாக நிராகரிப்பதை காணலாம். நவீனத்துவரான சுந்தர ராமசாமியையும் சாமிநாதன் ஏற்றுக் கொள்ளவில்லை. நவீனத்துவத்திற்கே உரிய அங்கதத்தை வெளிப்படுத்திய ஞானக்கூத்தனின் ஆக்கங்களை ‘தரிசனமற்ற பயணம்’ என்று கூறி முற்றாக நிராகரித்தார் சாமிநாதன். எண்பதுகளில் சாமிநாதனின் இந்த முழு நிராகரிப்புக் கட்டுரைகள் அக்காலத்தில் மிகுந்த பரபரப்பை உருவாக்கின.

சாமிநாதனைக் கவர்ந்த படைப்பாளிகள் கு.ப.ராஜகோபாலன், மெளனி, லா.ச.ராமாமிருதம், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள். இவர்களில் லா.ச.ராவும் ஜானகிராமனும்தான் அவருக்கு உச்ச கட்ட சாதனையாளர்களாகத் தெரிகிறார்கள். அவர்களின் எழுத்து பித்துனிலையின் வெளிப்பாடு என்றும் ஆகவே ஆழ்ந்த தரிசனநிலைகள் கொண்டது என்றும் வெங்கட்சாமிநாதன் கருதுகிறார். அவர்கள் தங்கள் படைப்பு நிலைகளில் எந்தவகையான பிரக்ஞை நிலைக்கும் ஆட்படாமல் தன்னிச்சையான மொழிநிகழ்வாக அவர்களுடைய ஆக்கங்களை உருவாக்குகிறார்கள் என்று அவர் கூறுகிறார். மெளனியின் பல கதைகளையும் தூய தரிசனநிலைகளாக சாமிநாதன் காண்கிறார் என்றாலும் மெளனியின் உலகுக்குள் முழுமையாகச் செல்ல சாமிநாதனால் இயலவில்லை.

சாமிநாதன் கூறம் தரிசனநிலை என்ன என்பதைக் காட்ட இரு உதாரணங்களைக் கூறலாம். ‘சாமியாரும் சீடையும்’ என்ற கதையில் புதுமைப்பித்தன் ஒரு குட்டிப் பெண்குழந்தை வெள்ளிக் கொலுசு போட்ட கால்களால் நீரில் துளைகிறது. குழந்தையின் கால் வெளிவரும்போது அதை அள்ளிப்பற்றி கொலுசுகளை ஒலிவிடச் செய்ய சூரியன் முயல்கிறது. அந்த விளையாட்டில் குழந்தையின் கால் வெளிவருதற்காக சூரியன் காத்திருக்கிறது. ‘சூரியனே ஆனாலும் குழந்தைக்குகக் காத்திருக்கத்தானே வேண்டும்’ என்று புதுமைப்பித்தன் கூறுமிடம் ஒரு உச்சகட்டம் வெளிப்படும் இடம் என்கிறார் சாமிநாதன். தன் தெய்வ உருவத்தை எப்போதுமே சிறுமியாக உருவகித்தவர் புதுமைப்பித்தன். கடவுளையே வட்டாடக் கூப்பிட்டவள் அவருடைய குழந்தை. அவளை அவர் ஓர் ஆதிதெய்வ நிலைக்கு அந்த வரியின் மூலம் கொண்டு செல்கிறார். அங்கே அவரது மனம் எல்லா தர்க்க நிலைகளையும் உதறிவிடுகிறது. லெளகீகமான தர்க்கம் கொஞ்சம் எஞ்சியிருந்தால் கூட இந்த வரியை எழுதிவிட முடியாது. உலகப்பார்வையின் படி பார்த்தால் பரம அபத்தம் இந்த வரி. ஆனால் இதில் புதுமைப்பித்தனின் அகம் உள்ளது. அவரது ஆளுமை உள்ளது. அவரது மொத்தப் புனைகதைகளிலும் வெளிப்படும் சாராம்சமான தரிசனம் உள்ளது.

தி.ஜானகிராமனின் மலர் மஞ்சம் நாவலில் ஓர் இடத்தையும் சாமிநாதன் குறிப்பிடுகிறார். பாலியிடம் ஒரு திருமணத்துக்கு அவள் சம்மதத்தைக் கேட்கிறான். அவளால் முடிவெடுக்க முயடிவில்லை. அன்னாந்து கோயில் கோபுரத்தைப் பார்க்கிறாள். சிலைமீது காகம் உட்கார்ந்திருக்கிறது. இப்படி காக்கா உட்காரவா இதைக் கட்டினான் சோழன் என்று நினைக்கிறாள். சம்மதித்து விடுகிறாள். அந்தக் கணம் தன்னை மறந்து ஜானகிராமன் எழுதிய ஓர் உச்சநிலை. தஞ்சையில் தலைக்கு மேல் கோபுரங்கள் நிற்கின்றன. இறந்தகாலத்தை சுமந்து வாழும் மக்கள். வாழ்க்கை எப்படியும் அர்த்தம் இல்லாத இறந்தகாலமாக ஆகத்தானே போகிறது என்ற ஒரு கணநேர தரிசனமே அங்கே நிகழ்கிறது.

இந்தத் தரிசன கணத்தை கிட்டத்தட்ட தெய்வீகமாக ஆக்குகிறார் சாமிநாதன். கலைகளும் இசையும் பிறக்கும் இம்மனநிலை முற்றிலும் நேர்வழியான ஒன்று. இதில் எதிர்மறைக் கூறுகளே இருக்க இயலாது என்று நினைக்கிறார். ஆகவேதான் இசையும் கலையும் மேன்மையான மனநிலையில் கேட்கப்படுகின்றன. ஆக்கப்படுகின்றன என்று கூறி ஹிட்லர் வாக்னரின் இசையின் ரசிகன் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று நிராகரித்தார். இதையொட்டி எழுபதுகளின் இறுதியில் தமிழில் நடந்த விவாதம் தமிழ்ச்சுழலில் நடந்த முக்கியமான இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். வெங்கட்சாமிநாதனுக்குப் தில் கூறும் நிர்மலா நித்யானந்தன் கலையிலக்கியம் போன்றவை சாமிநாதன் கூறுவதுபோல ‘களங்கமில்லா’ தன்மை கொண்டவை அல்ல என்றும் வன்முறையையும் வெறுப்பையும் உள்ளடக்கமாகக் கொண்ட பெரும்கலை இருக்க முடியும் என்றும் வாதிடுகிறார். அது கலையாக இருக்க முடியாது என்றும் வெறும் தொழில் நுட்பமே என்றும் சாமிநாதன் கூறினார். மேலான கலையில் வாழ்வின் முழுமை சார்ந்த தரிசனம் இருக்கும். ஆகவே அதில் வெறுப்பும் அழிவுப் போக்கும் இருக்காது என்றார்.

சாமிநாதனுக்கும் நிர்மலா நித்யானந்தனுக்குமான அந்த விவாதத்தை இன்று பார்க்கும்போது சாமிநாதன் கற்பனவாதத்தின் தரப்பில் நின்று பேசுவதாகப் படுகிறது. நிர்மலா நித்தியானந்தன் நவீனத்துவத்தின் குரலாகப் பேசுகிறார். சாமிநாதன் கூறுவதை வேர்ட்ஸ்வர்த் கூறுயிருப்பார். நிர்மலா கூறுவதை எலியட் கூறியிருப்பார்; அந்த விவாதம் அன்றை யபிரபலமான இலக்கிய நம்பிக்கைகள் இரண்டு மோதிக் கொள்வதாக இருந்தது. லக்கிய ஆக்கத்தின் பல தளங்களை விவாதத்துக்கு கொண்டு வந்தது. வழக்கம் போல தனக்கே உரிய அர்ப்பத்தனத்துடன் பிரமிள் உள்ளே புகுந்து வசைக் கச்சேரியாக அதை மாற்றி மொத்த விவாதத்தையும் சாமிநாதனின் சாதி குறித்ததாக திசைதிருப்பி விட்டார். தமிழன அரைவேக்காடுகளுக்கு எளிதில் புரியக்கூடியது எது என்று பிரமிள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்.

இன்று பார்க்கும் போது சாமிநாதனின் தரப்பு பின் நவீனத்துவத்திற்கு நெருக்கமாக ஆகியிருப்பதாகப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. நிர்மலா நவீனத்துவத்தின் குரலாக ஒலிக்கிறார். பித்துநிலை என்றும் தரிசன நிலைஎன்றும் சாமிநாதன் கூறுவதை பின் நவீனத்துவர் உன்னதமாக்கல் http://encyclopediatamilcriticism.com/sublime.php (Sublimation) என்றும் உச்சப்படுதல் என்றும் கூறுக்கூடும். தருக்க நிலை என்பது இலக்கியத்தின் சுமை என்று கருதும் பின் நவீனத்துவர் உலகம் முழுக்க இன்று உள்ளனர் தூய பித்துநிலையில் மொழியும் ஆழ்மனமும் சந்தித்துக் கொள்ளும் அபாரமான முடிவிலியில் இருந்து படைப்புகள் உருவாக வேண்டும் என்றும் அவற்றுக்கு வடிவம் என்றும் கட்டுப்பாடு கூட இருக்கலாகாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

5. தனிக்குரல்

வெங்கட் சாமிநாதனின் விமரிசன உலகு முழுக்க அவர் ‘நான் தனியன் நான் தனியன்’ என்று குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைக் காணலாம். என்ன முக்கியம் என்றால் உலகில் எல்லா விமர்சகர்களும் தனியர்களே என்பதே. அபூர்வமாகவே அவர்கள் ஒரு கோட்பாட்டை உருவாக்குகிறார்கள். அந்தக் கோட்பாடு சார்ந்து பிறர் திரள ஆரம்பிப்பது அனேகமாக அவர்களின் செயல்பாடுகள் முழுமையடைந்த பிறகுதான். அதன் பின்பே இலக்கிய வரலாறு அவர்களை ஒரு விமரிசன இயக்கம் என்று பதிவு செய்கிறது!

சாமிநாதன் தன் சமகாலத்தை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்பவராக இருந்திருக்கிறார். இடைவெளியில்லாத போராளியாக தாக்குதல்களைத் தொகுத்திருக்கிறார். ஆகவே அவருக்கு தற்காலிக நண்பர்கள் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறார்கள். நிரந்தர எதிரிகள் பலர். மேலும் சாமிநாதன் அவரது காலகட்டத்தில் மேலோங்கியிருந்த நவீனத்துவ அழகியலுடனும் முரண்பட்டிருக்கிறார். அதன் அடிப்படைகளை மீண்டும் மீண்டும் ஐயப்பட்டிருக்கிறார். ஆகவே அவர் சூழலில் தனிமைப்பட்டத்தில் ஆச்சரியமே இல்லை.

தனியனாக நின்று ஒரு கருத்துத் தரப்பாக செயல்பட்டிருக்கிறார் சாமிநாதன். இடைவெளியே இல்லாமல் தமிழ்ச்சூழலின் உறைநிலையை உடைக்கும் விசையாகச் செயல்பட்டிருக்கிறார். முரணியக்கம் மூலமே முன்னகர்வு சாத்தியம். தமிழ் நவீனத்துவத்தின் மறு தரப்பான சாமிநாதன் அதை இயங்கச் செய்தார். அதை அடுத்த தலைமுறை கடந்துவரவும் வழியமைத்தார். அதுவே அவரது சாதனை.

[முழுமை ]

வெ.சா.பேட்டி, கூடு வெசா பேட்டி சொல்வனம்

வெங்கட் சாமிநாதன் (Venkat Swaminathan) என்ற பெயரில் எழுதும் சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர்.

இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். துல்லியமான அந்தரங்க ரசனை கொண்ட சாமிநாதன் , நீல.பத்மநாபனின் தலைமுறைகள் பூமணியின்பிறகு போன்ற பல ஆக்கங்கள் சத்தமின்றி வந்தபோதே, கவனித்து முன்னிறுத்தியவர். அவரது கோணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டாலும் அவர் முன்னிறுத்திய ஆக்கங்கள் பொதுவான அங்கீகாரம் பெற்றன என்பது வரலாறு. நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950லேயே வலியுறுத்தியவர்.

சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் - சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பாவின் இந்த வரிகளுடன் யாருமே முரன்படமுடியாது. வெங்கட் சுவாமிநாதன் பற்றி அனைவருக்கும் மிக எளிதாக புரிய வைக்க வேண்டுமானால் சமீபத்திய உதாரணம் ஒன்றின் மூலம் விளக்கலாம்.

இயக்குனர் மிஸ்கினின் முதல் திரைப்படமான "சித்திரம் பேசுதடி" வெளிவந்த மறுதினமே படப்பெட்டிக்குள் சென்று சுருங்கிவிட்டது. காரணம் அந்தப் படம் சார்ந்த எந்தவிதமான விளம்பர யுக்தியும் கையாளப்படவில்லை. ஆனால் அடுத்த சில தினங்களில் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு, அவரே விநியோகம் செய்ய முன்வந்தார். அந்தப் படம் பின்னர் நூறு நாட்களுக்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. காரணம் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் விளம்பர யுக்தி. இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, வெறும் விளம்பர யுக்தி மட்டுமே அந்தப் படம் ஓடுவதற்கு காரணம் அல்ல. அந்தப் படத்தின் பாடல்களும், கதை சொல்லல் முறையும் கொஞ்சம் புதிதாக இருந்தது.

இதேப போன்று யாருமே அறிந்திராத பல புத்தகங்களை தனது விமர்சனத்தின் மூலம், உலகின் பார்வைக்கு கொண்டு வந்தவர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள். அதற்காக ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் வெ. சா. அவர்களை ஒப்பிட முடியாது. ஒரு உதாரணத்திற்கு இப்படி சொன்னால் வெகுஜன வாசகர்களுக்கு புரியும் என்பதால் மட்டுமே இந்த சொல்லாடல் கையாளப்பட்டது. வெ.சா அவர்கள் விமர்சன உலகின் முடி சூடா மன்னனாகவே இதுவரை இருந்து வருகிறார். அவருடன் திரு. முத்துக் கந்தன் அவர்கள் நடத்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்.

முத்துக் கந்தன்: கலைஞனுக்கும் படைப்புக்கும் இடையேயுள்ள ஒத்திசைவும் முரணும் சாத்தியமா?

வெ.சா: என்னுடைய அபிப்ராயத்தில், கலைஞனுடைய அனுபவமும் அவனுடைய படைப்பும் வேறுபட்டிருக்கமுடியாது. அப்படி, தன்னுடைய அனுபவம் ஒன்றாகவும், உள்ளார்ந்த நம்பிக்கை ஒன்றாகவும், அதிலிருந்து பெறப்படும் படைப்பு வேறொன்றாகவும் இருக்குமானால் அது ஒரு தொழில். அவ்வளவுதான். அதாவது முன்னமே சொன்னாற்போல், தன்னுடைய கட்புலன் அனுபவமும் கைத்திறனும் சேர்ந்ததுதான் படைப்பாகிறது. அப்பொழுதான் அவனை ஒவியனாகவோ அல்லது வேறுவகை கலைஞனாகவோ நாம் ஏற்கிறோம். ஆக, அந்த கலைஞன் தானே படைப்பிலும் பிரதிபலிக்கிறான். அவனுடைய அனுபவங்கள் தானே படைப்பில் பிரதிபலிக்கப்படுகின்றன. அதில் அவனுடைய ஆளுமையைத் தானே பார்க்கிறோம். ஆக இதில் ஒத்திசைவு தானே காணும். முரண் எங்கிருந்து வரும்? அங்கனம் முரண் இருந்தால் அது அவனுடைய படைப்பல்ல. அது ஒரு தொழில் திறனால் ஆக்கப்பட்ட ஒரு விற்பனைப் பொருள்.

முத்துக் கந்தன்: தமிழில் கலை குறித்தான விமர்சனம் பற்றி என்ன சொல்வீர்கள்?

வெ.சா: கலை குறித்தான பரிச்சயம் என்பது முப்பது நாற்பது வருடங்களாக தமிழ் சிற்றிதழ்கள் மூலம் கிடைத்த போதிலும் கூட அதனுடைய வாசகப் பரப்பு என்பது மிக மிகக் குறைச்சல் தான். அதனால் அது பற்றிய பிரக்ஞை எவ்வளவு பரவலாகியுள்ளது என்பது சந்தேகம். இதைத் தொடர்ந்து . விமர்சனம் பற்றி பேசுவதானால், தமிழ் நாட்டில் எழுதப்படுகிற விமர்சனங்களைப் பார்த்தால் கலை பிரக்ஞையுடன் அவற்றைப் புரிந்துதான் எழுதுகிறார்களா, தான் பார்க்கும் படைப்பிற்கும் தனக்கும் ஏதாவது சம்வாதம் நடந்துள்ளதா, அப்படியிருந்தால் அதனைப் புரிந்து கொண்டுதான் சொல்கிறார்களா என்பது தெரியவில்லை. அவர்களுக்குச் சில வார்த்தைகள், பரிபாஷைச் சொற்கள் (technical terms) கை வசம் இருக்கின்றன. அந்த வார்த்தைகளைப் போட்டு ஏதேதோ சொல்கிறார்கள். எழுதுகிறார்கள்.

அந்த வார்த்தைகள்/பரிபாஷைச் சொற்கள் இருக்கின்றன அல்லவா? அவற்றைப் போட்டு நிரப்புகிறார்கள். நிஜமாகவே அவர்களுக்கும் அவர்கள் பேசும் ஒவியங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இருப்பதில்லை.. அவர்களுக்கு நாமும் விமர்சகனாக வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம.. இல்லையெனில் உத்தியோக பூர்வமான லாபங்கள், உயர்வுகள், கிடைக்கும், அல்லது சமூக மதிப்பு உயரும்.. அல்லது தான் ஒரு கலை விமர்சகன் என்ற நிலையில் தமிழ் நாட்டில் உலவி, சில சவுகரியங்களைப் பெறலாம் என்றெல்லாம் நினைப்புகள் இருக்கலாம். அவ்வளவு தான். இப்படியாக சிலர் முயற்சியும் செய்கிறார்கள். பலர் உலவியும் வருகிறார்கள். இப்படி தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் நடக்கிறது. கலைப் பிரக்ஞை வழிநடத்துமானால், ஒவ்வொரு குறள் அத்தியாயத்தையும் விளக்குவதற்காக ஒரு ஒவியம் என்ற சிந்தனையே பிறந்திருக்கமுடியாது. இது சரியல்ல என்று ஒரு குரல் கூட எழவில்லை என்பது சோகம் தான்.

இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் பழக்கப்பட்ட பாதை மீறிய புதுப் புது படைப்புகள் வந்த போது, அவை ஒவ்வொன்றையும் அக்காலத்து விமர்சகர்கள் அவற்றைக் கேலி செய்தார்கள். ஆனால், அப்படைப்புகள் ஏற்கப்பட்டு, பிறகு அவர்களே, கேலி செய்தவர்களே கேலிக்குள்ளானார்கள். இம்ப்ரெஷனிஸம், எக்ஸ்ப்ரெஷனிஸம், ஃபாவிஸம் என ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வந்தபோது, ஒவ்வொருமுறையும் விமர்சகர்கள் அவற்றைக் கேலி செய்தார்கள். இப்பெயர்களே அவர்கள் இட்ட கேலிப்பெயர்கள் தான். கேலிப் பெயர்களே அவ்வப் பாணியின் பெயர்களும் ஆயிற்று. கடைசியில் அவர்களே கேலிக்கானார்கள். இப்படி அடுத்தடுத்து விமர்சகர்களின் அறியாமைக்கு தொடர்ந்து அடி விழவே, தாங்கள் மேதைகளாகும் எண்ணத்தில் எல்லாவற்றையும் போற்றத் தொடங்கினார்கள். அடுத்தடுத்து வருடாவருடம், புதுப் புதுப் படைப்புகளை எதிர்பார்க்கும் நிர்ப்பந்த சூழல் கலைஞர்களுக்கும் விமர்சகர்களுக்கும் ஏற்பட்டது. இதன் விளைவுகளில் ஒன்று உதாரணத்திற்கு: ஒரு நாற்சதுர டப்பாவை காட்சிக்கு வைத்து அதற்கு மினிமலிஸம் (minimalims) என்று பெயர் வைத்தார்கள். கடைசியில், 'எதற்காக இந்த டப்பாவை வைத்திருக்கிறார்கள்? என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. கேலியும் செய்யவில்லை. பயம், தாம் கேலிக்கிரையாவாமோ என்று. அப்படியான பயம் இப்போது தமிழ் விமர்சகர்களுக்கு இருக்கிறது. தனக்கு (arts) கலைகள் பற்றி தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காகவே சில வார்த்தைகளைப் போட்டு உலப்புகிறார்கள். நேரடியாக, "எனக்குப் புரியவில்லை, பிடிக்கவில்லை" என்று சொல்லவே பயப்படுகிறார்கள். அதாவது புரியவில்லை என்றால், புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும், வீணாக பம்மாத்து பண்ணக்கூடாது, அதாவது தெரிந்தது போல் பாவனை செய்யக்கூடாது. அக்காலத்தில், கிராமத்தில் இங்கிலீஷ் படம் பார்க்கப் போவார்கள், டூரிங் டாக்கீஸ்களில் வரும். எல்லோரும் சிரிக்கிறபோது அவர்களும் சேர்ந்து சிரிப்பார்கள், ஏதோ தமக்கும் புரிந்து விட்ட மாதிரி.. ஆக, இம்மாதிரி ஊர் சிரிக்க தானும் சேர்ந்து சிரிப்பது மாதிரிதான், தமிழில் விமர்சகர்கள் இருக்கிறார்கள்.

முத்துக் கந்தன்: தமிழ் மரபு (அடையாளம்) சார்ந்து இயங்குகிற படைப்பாளிகள், அதாவது பெரும்பாலனவர்களுக்கு ஐரோப்பிய தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே...?

வெ.சா: யாருக்கும் நேரடியாக ஐரோப்பிய தாக்கம் என்பதே இல்லை. எல்லோரும் தமிழ் அடையாளத்தோடுதான் படைக்கிறார்கள். அதாவது கலைஞர்களுக்கு பரிச்சயமான சிற்பம், கட்டிடக் கலை, ஒவியம் என்பதெல்லாம் தமிழ் நாட்டில் இல்லாததா? தமிழ் நாட்டில் தடுக்கி விழும் இடமெல்லாம், 600, 700 அல்லது 1500 வருட கால பழமையான வரலாறுகள் கிடைக்கும். எங்குபோனாலும், பழமையான சின்னமும், கோவிலும் இருக்கும். அக்கோவிலின் கட்டிடக் கலை, 1000, 1500 வருட பழமையானதாக இருக்கும். எதற்கும் 200 வருட கால பழமை உண்டு. அதாவது நாயக்கர் காலத் திலிருந்து, நவாபுகள் காலத்திலிருந்து என்று வரலாறுகள் இக்கலைகளுக்கு உண்டு. இங்கு ஒவ்வொரு கல்லும் ..இடமும்.. மண்ணும்.. சரித்திரம் பேசும். அந்தச் சரித்திரமும் எப்போதும் கலைமொழியில் பேசும். ஆகவே இவர்கள் இப்படியான தாக்கங்களுக்கு ஐரோப்பாவுக்கோ வேறு எங்குமோ வெளியே போகவேண்டியதில்லை. கோவில் சிற்பங்கள் உண்டு, தஞ்சை ஓவியங்கள் நாயக்கர் சுவர் ஒவியங்கள் உண்டு. டெர்ரகோட்டா சிற்பங்கள் உண்டு.

முதன் முதலாக, ஓவியப் பள்ளிகள் பம்பாயிலும், சிம்லாவிலும், கல்கத்தாவிலும் தான் ஆரம்பித்தன. அப்பொழுது தான் பார்சிகள் அப்பள்ளிகளில் ஒவியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள் அவர்கள் தான் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸின்' பாதிப்பை ஏற்றார்கள். இப்படியான விஷயங்கள் தமிழ் நாட்டில் ஏற்படவில்லை. இங்கு ராய் சௌதுரி வந்து சேர்ந்த பிறகு தான் மதராஸ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸி' ல் கலைப் படிப்பு துரிதப்படுத்தப்பட்டது. ராய் சௌதுரி மிகவும் பழமையில் இந்தியப் பழமையில் தோய்ந்தவர். தேசிய தாக்கம் மிகுந்த வங்காளத்திலிருந்து வந்தவர். ஆக காலனி ஆதிக்கம் என்பது பம்பாயில் இருந்ததே ஒழிய, இங்கு இருந்ததில்லை. கல்கத்தாவில் கூட ஆரம்பக் கால கட்டத்தில் தான் இருந்தது. என நினைவு எனக்கு. பின்னர் அதனை எதிர்த்து தேசிய உணர்வின் தாக்கத்தில், 'பெங்கால் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்பது உருவானது. அதே போல் பம்பாயிலும்.

ஆக, ஆங்கிலேய ராயல் அகாடமி பாணிகளை உள்வாங்கினவர் என்று ரவி வர்மா ஒருவரை மட்டுமே குறிப்பிடலாம். ரவி வர்மா நல்ல கைத்திறன் கொண்டவர். சுயமாகக் கற்றவர். இவர் எடுத்துக் கொண்ட பொருள் (கருத்து) இங்கே கேரளத்தையும், மகா ராஷ்டிரத்தையுமே சேர்ந்ததாக இருக்கும். அதாவது மகாராஷ்டிர உடைகளோடு கேரளப் பெண் முகங்களைத் தந்தார். அடுத்து நம் கடவுள்களுக்கு உருக்கொடுத்தார். என்றாலும் அவர் தன்னுடைய மண்ணுக்குத்தான் திரும்பி வந்தார். அதாவது தன்னுடைய அடையாளங்கள் சார்ந்து தான் படைத்தார். அவர் தொழில் திறனையும், அதாவது எண்ணை வண்ணம் என்ற சாதனத்தையும் மட்டுமே வெளிநாட்டிலிருந்து எடுத்துக் கொண்டாரே ஒழிய படைப்பு என்பது அவருடைய மண் சார்ந்து தான் வந்தது எனவேண்டும். .

முத்துக் கந்தன்: தமிழில் சிறு பத்திரிகைகளுக்கும் ஒவியர்/சிற்பிகளுக்குமிடையில் இருந்த உறவைப்பற்றிச் சொல்லுங்கள்

வெ.சா: ஆரம்பத்தில், அதாவது அறுபதுகளில், இது பற்றியெல்லாம் எழுதப்படவேண்டும், ஒரு பரிச்சயத்தை, அறிமுகத்தை நாம் தொடங்கவேண்டும் என்று (இப்போது பிரமிள் என்று அறியப்படும் ) தருமு சிவராமு, நான் பின் கி.அ.சச்சிதானந்தம் மூவரும் முயன்றோம், சச்சிதானந்தத்திற்கு சென்னை கலைக் கல்லூரி மாணவர்களுடன், கோவிந்தனுடன் பரிச்சயம் இருந்தது. இதெல்லாம் எழுத்து பத்திரிகையில் ஆரம்பித்து, பின் நடை பத்திரிகையில் தீவிரம் பெற்றது. பின் கசடதபற. அவரவர்க்குத் தெரிந்த பழக்கமான் ஒவியர் சிற்பிகளின் புகைப்படங்கள், க்ராஃபிக்ஸ் பத்திரிகைகளில் இடம் பெறத் தொடங்கின. அது பற்றி அவ்வப்போது பேசவும் பட்டது பொதுவாக. இவை ஒரு பரிச்சயத்தை மெதுவாக உருவாக்கின. யாரும் இவையெல்லாம் என்ன, எதற்கு என்று கேட்கவில்லை. கண்கள் பழக, மனம் ஏற்றுக் கொள்ள முதலில் பரிச்சயம் தேவை. எழுபதுகளில், க்ரியா புத்தக வெளியீடுகளை அது வரை அறியாத உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. அதைப் பார்த்து, மற்றவர்களும் அவற்றிற்கு ஒரு மதிப்பு ஏற்படவே தாமும் கையாளத் தொடங்கினர். தொடக்கத்தில் ஏளனம் செய்த புதுக் கவிதை வெகு ஜனப் பத்திரிகைகளிலும் மௌசு கொண்டாடத் தொடங்கியது போல, மாடர்ன் ஆர்ட்-ம் வெகுஜன பத்திரிகைகளில் இடம் பெறத் தொடங்கியது. இதற்கு ஒரு snob value உருவானது. 'மாடர்ன் ஆர்ட்' அட்டை போட்ட புத்தகங்களை எழுபதுகளின் தொடக்கத்தில் show case-ல் வைக்க மறுத்த வெளியீட்டு நிறுவனங்கள் ("இதையெல்லாம் வெளீலே show case-ல் வைக்காதே. உள்ளே மறைவா வை. யாரும் கேட்டால் கொடுக்கலாம்" என்ற முதலாளிகள் சில வருடங்களுக்குப் பின், '"இதை show case-லே வையப்பா, இப்பொல்லாம் இப்படிதான் படம் போடறாங்க. இதான் fashion." என்ற கட்டத்துக்கு முன்னேறி, இப்போது, " ஏம்பா, ஆதிமுலம் கவர் போட்டுத்தரேன்னு சொல்லியிருந்தாரே, வந்திடுச்சாப்பா? என்று தாம் வெளியிடும் புத்தகங்களுக்கே ஒவியர்களை அணுகும் நிலைக்கு வந்துள்ளது. இது வரை வந்தது கூட பரிச்சயமும், சகஜ பாவமும், snob value வும் தானே ஒழிய ரசனையோ புரிதலோ இல்லை. இதன் அடுத்த கட்டம் ரசனையாக வளரலாம். வளர வேண்டும். ஒன்று சொல்ல வேண்டும். இம்மாற்றத்திற்கு, ஆரம்ப அறுபது களிலிருந்தே ஓவியர்களும், சிற்பிகளும் தந்த ஒத்துழைப்பு மிகப் பெரியது. எவ்வித பொருளாதார பலனும் அவர்களுக்கு இருக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பெற்றது, எழுத்தாளர்களிடையே ஒரு தோழமை. வாசகர்களிடையே ஒரு பரிச்சய உணர்வு. பொதுவில் ஒரு மதிப்பு. தான் அனுபவிக்காவிட்டாலும், "மணி அய்யருங்களா, அவர் பெரிய பாட்டுக்காரருங்களே" என்று உடன் கௌரவிப்பது போல.

முத்துக் கந்தன்: ஒவியத்திற்கென்றே நடத்தப்படும் 'மெய்ப் பொருள்" இதழ் குறித்துச் சொல்லுங்கள்:

வெ.சா: ஒவியர் சீனிவாசன் என்னிடம் பேசும்போது, "இந்த இதழ் ஒவியக் கலை பற்றி, மாணவர்களுக்கும், ஒவிய ஆசிரியர்களுக்கும், ஒவியங்களோடு தொடர்பு கொண்டவர்களுக்குமான ஒர் இலவச இதழாகும்." என்று சொன்னார். அவர் சொன்னதை கவனமாக மனதில் இருத்திக்கொண்டிருக்கிறேன். அதாவது ஒவியங்களைப் அவற்றோடான நம் உறவுகளைப் பற்றி புரிதல்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும். வீணாக, இம்ப்ரெஷனிஸம், எக்ஸ்ப்ரெஷனிஸம், க்யூபிஸம் என்றெல்லாம் பாடங்கள் நடத்துவது போல எழுதுவதில் அர்த்தமில்லை. ஆகவே அதையெல்லாம் நான் செய்வதில்லை. ஆனால் சிலர் செய்கிறார்கள். நமக்கும் ஒவியத்திற்குமான தொடர்பு என்னா, அது உண்மையான உணர்வு பூர்வமான ஒன்றா, நாம் அதைப் புரிந்து கொண்டு அதனுடன் சம்பாஷிக்கிறோமா என்பன தான் என் அக்கறைகள்.

மதமோ, வர்க்கங்களோ, சாதியோ, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளோ, அல்லது, நான் தெலுங்கன், நீ தமிழன், கன்னடக் காரன் என்கிற விவகாரங்கள் சார்ந்ததல்ல கலை. இதில் நாஸ்திக ஆஸ்திக கொள்கைகளும் இடை புகுவதில்லை. எந்த மதம், சாதி, கொள்கை, மொழி, சார்ந்த அடை மொழிகளில் அடையாளப் படுத்தினாலும் சரி, கலை உணர்வு என்பது, இவை சார்ந்ததில்லை. ஒரு நாஸ்திகனும், அவன் கலை உணர்வு கொண்டவனானால், கோவில் கோபுரங்களையும், நடராஜ சிற்பத்தியும் கண்டு மெய் சிலிர்த்துப் போகவேண்டும். தமிழ் நாட்டில் சாதியும், அரசியலும், மூர்க்கத்தனமான் அதிகாரம் செய்கின்றன. கலை என்பது இவற்றையெல்லாம் மீறியது. இப்படியான விஷயங்களைத்தான், சீனிவாசனின் "மெய்ப்பொருள்" இதழில் நான் பேசி வருகிறேன். நான் பாடம் நடத்த வரவில்லை. விமர்சனம் - செய்யவும் வரவில்லை. தமிழ்ச் சூழலில் காணாத ஆனால், தமிழ்க் கலை மாணவர்களுக்கு இருக்க வேண்டிய உணர்வுகளைப் பற்றியே பேசிவருகிறேன்.

வெங்கட் சாமிநாதன் - ச.திருமலைராஜன்
தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில்  மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள்.

இத்தருணத்தில் வெ.சா அவர்களைக் குறித்து ச.திருமலைராஜன் எழுதியிருக்கும் சிறப்புக்கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கட்டுரையிலிருக்கும் ஓவியங்கள்: வெ.சந்திரமோகன்.

எழுத ஆரம்பித்து சென்ற வருடத்தோடு ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கும் வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான நேரடி அறிமுகம் எனக்கு இணையம் மூலம்தான் கிடைத்தது. திண்ணை இணைய இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையினைப் படித்துவிட்டு வெ.சா அவர்களிடமிருந்து வந்திருந்த ஒரு மின்மடல் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. ஊர் பெயர் தெரியாத அறிமுகநிலை பத்திக்கட்டுரை எழுதும் ஒரு கட்டுரையாளரைப் பாராட்டி தமிழ் இலக்கிய உலகின் பெரும் விமர்சகரிடம் இருந்து வந்த பாராட்டு மடல் ஆச்சரியம் அளித்ததை விட, புதிதாக எழுதும் எவரையும் உற்சாகத்துடன் ஊக்குவிக்கும் அவரது பெருந்தன்மையே அவர் மீது பெரும் மரியாதையை உருவாக்கியது. அன்று தொடர்ந்த நட்பு கடந்த ஆறு ஆண்டுகளாக உரையாடல்கள் மூலமும் அவரது கட்டுரைகளை, சிந்தனைகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலமாகவும் வளர்ந்து வருவது.

இணையம் மூலம் கிடைத்த நட்பு விரிவடைந்து நான் சென்னை செல்லும் பொழுது அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வெ.சா போன்ற ஒரு பெரும் ஆளுமையை நேரில் சந்திக்கப் போகிறோம் என்பதில் இருந்த ஆர்வத்தை விட சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று தமிழ் இலக்கிய உலகத்தினரால் அபவாதத்திற்குள்ளாகிய ஒருவரை சந்திக்க வேண்டும் என்ற குறுகுறுப்பும் இருந்தது என்பதும் உண்மை. அதுவரை நான் அறிந்திருந்ததெல்லாம் எல்.ஐ.சி ஏஜெண்டுகள் மட்டுமே. சென்னையில் நான் நேரில் காண நேர்ந்த வெ.சா, சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் மேடும் பள்ளமுமான சாலைகளைத் தாண்டி அமைதியாக ஒதுங்கிய வீட்டில் அரைக்கை பனியனில், தன் கண்ணாடியின் பின்னால் வழியும் கனிவான பாசம் ததும்பும் பார்வையிலும், உற்சாகமூட்டும் பேச்சுக்களுமாக இருந்தார். கடுமையான விமர்சகர், கலகக்காரர் என்ற பிம்பத்திற்கு மாறாக வாஞ்சையும், அன்பும் வழியும் ஒரு இளைஞனின் உற்சாகமும், ஆர்வமும் கூடிய, ஒரு நட்பான இளகிய மனிதராக எங்கள் முதல் சந்திப்பில் அறிமுகமானார். இருந்தாலும் ஹாலிவுட் சினிமாக்கள் ஏற்படுத்தியிருக்கும் சி.ஐ.ஏ ஏஜெண்ட் பிம்பத்திற்குப் பொருந்தி வரும் கம்பீரமும் கொண்டிருந்தார் என்பதும் உண்மைதான்.

அவரது அறச்சீற்றம், கருத்துக்கள் விமர்சனங்கள் காரணமாக அவரைக் கடுமையாக விரோதிக்கும் தமிழ் இலக்கியவாதிகள் எவரும் அவரை ஒரு முறை நேரில் சந்திக்க நேரிட்டிருந்தால் அவரது நெருங்கிய நண்பராக மாறி விட்டிருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். வலைப் பதிவு ஆரம்பிப்பது குறித்து சிறுவர்களுக்குரிய ஆர்வத்துடன் எங்களுடன் அவரை சந்திக்க வந்திருந்த டோண்டு ராகவன் அவர்களிடம் கேட்டு அறிந்து ஒரு வலைப்பதிவையும் உடனே துவங்கிவிட்டிருந்தார். கனத்த பவுண்டன் பேனாக்களில் மசி நிரப்பி தன் கனத்தக் கருத்துக்களை கட்டுக் கட்டான வெள்ளைக் காகிதங்களில் எழுதிக் கொண்டிருக்கும், சி.சு.செல்லப்பா காலத்து மூத்த எழுத்தாளர் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டு, எழுதுவதற்கு ஏற்ற வழுவழுப்பான உயர்தர வெள்ளைப் பேப்பர்களும், பேனாக்களையும் அவருக்கு அளிப்பதற்காக வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன். தொழில்நுட்ப மாறுதல்களுடன் தன்னை இயல்பாக இணைத்துக் கொண்டு பயன்படுத்தும் அவரது ஆர்வமும், உற்சாகமும், இனிய அதிர்ச்சியையும், வெட்கத்தையும் ஏற்படுத்தியது. சத்தம் போடாமல் நான் கொண்டு சென்றிருந்த வழவழ பாண்டு பேப்பர்களையும் பேனாக்களையும் பையில் இருந்து வெளியே எடுக்காமல் மறைத்துவிட்டேன். அந்த குறைவான நேரத்தில் அவருடன் பேச நினைத்த எதையும் பேச முடியாமல் திரும்பி விட்டாலும் கூட, இணையம் மூலமாகவும் அவரது எழுத்துக்கள் மூலமாகவும் நான் அன்றாடம் நெருங்கி உரையாடும் ஒரு ஆத்மார்த்தமான நண்பராக, மானசீகமான குருவாக, வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறார். அந்தச் சிறிய சந்திப்பில் அவருடன் பேசியதை விட நான் அவருடைய மனைவியிடம் பேசிய நேரமே அதிகமாயிருந்திருக்கும்.

அமெரிக்க நூலகங்களின் உயர்ந்த அலமாரிகளில் பல முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்பட்ட நூல்களையும், அவர்களது படைப்புக்களைத் திறனாய்வு செய்து எழுதப்பட்ட நூல்களையும் நான் அதிகம் காண்கின்றேன். ஒவ்வொரு முறை நான் இணையத்தில் எந்தவொரு ஆங்கில எழுத்தாளரையும் தேடும் பொழுது அவரைப் பற்றிய அவர் படைப்புகளை அலசும் நூல்களும் அருகிலேயே தென்படுகின்றன. ஜான் ஸ்டைன்பெக், ஹெமிங் வே, மார்க் ட்வெய்ன் என்று இலக்கிய எழுத்தாளர்களில் துவங்கி ஜான் லெக்கார், கென் ஃபோலட் என்று பொழுது போக்கான உளவுப் புதினங்கள் எழுதும் எழுத்தாளர்கள் வரை ஒவ்வொரு எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் திறனாயும், அலசும் நூல்கள், அவர்களின் எண்ணப் போக்குகளையும், படைப்புகளையும் வாசகர்கள் அணுக வேண்டிய முறைகள் குறித்தான நூல்களையும் அவர்களது படைப்புகளுக்கு அருகிலேயே அணி வகுப்பதைத் தவறாமல் கண்டிருக்கிறேன். ஆனால் தமிழில் இந்த நிலைமை அனேகமாக இல்லை. வெகு அபூர்வமாகவே எழுத்தாளர்களையும், படைப்புகளையும் திறனாய்வு செய்யும் நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன. தமிழில் திறனாய்வு என்பது ஒரு எழுத்து இயக்கமாக அல்லது அதிகம் வாசகர்களைச் சென்றடைந்த படைப்புக்களாக உருவாகவில்லை என்றே தோன்றுகிறது. இலக்கியப் படைப்புக்கள் மட்டும் அல்ல, வேறு எந்தவகை இந்தியக் கலைகளுக்குமே கிட்டத்தட்ட இதே நிலைதான் என்றே தோன்றுகிறது.

எழுபதுகளில் இருந்து வாசிப்பைத் தொடர்ந்திருந்தாலும் திக்கு திசையின்றி கையில் கிடைக்கும் எந்த நூல்களையும் எந்தவிதமான ஆழமான பார்வைகளும் இன்றி படிக்கத் துடிக்கும் பசியுள்ள வாசகனான எனக்கு, படைப்பாளிகளைப் பற்றிய அவர்கள் ஆளுமை குறித்த பார்வைகளும், படைப்புகள் குறித்த ஆழமான விமர்சனங்களும் சற்று காலம் கடந்து 80களின் இறுதியிலேதான் எப்பொழுதாவது படிக்கக் கிடைக்கும் சிற்றிதழ்கள் மூலமாகவே கிட்டின. அவற்றில் பெரும்பாலான ஆளுமைகள், படைப்புகளின் அறிமுகமும், வழிகாட்டுதலும் வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகள் மூலமாகவே எனக்குக் கிடைத்தன.

வெ சா அறிமுகப் படுத்திய ஆளுமைகள்:

எனக்குப் பெரும்பாலும் வெ.சா வழியாகவே பல கலைஞர்களின் சிந்தனையாளர்களின் படைப்புக்கள் குறித்த உரிய அறிமுகம் கிட்டியது. அவர் வழியாகவே அவர்களது படைப்புக்களுக்குள் செல்லும் பார்வை கிட்டியது. ந.பிச்சமூர்த்தி, சோ.தருமன், பாமா, மொளனி, விட்டல் ராவ், சம்பத், நகுலன் போன்ற முக்கியமான எழுத்தாளர்களை நான் அறிந்து கொண்டதும் படிக்க விரும்பியதும் வெ.சா அவர்களின் விமர்சனங்கள் மூலமாகவே. அது போலவே திலீப் குமார், சுந்தரராமசாமி, ஜெயமோகன், ஜானகிராமன் ஆகியோர் படைப்புக்களில் இருக்கும் புதிய பரிமாணங்களின் வாசல்களத் திறந்ததும் வெ.சா-வின் பார்வைகளே. ஏற்கனவே அறிந்திருக்கும் ஆளுமைகளைப் பற்றி கூட வெ.சா-வின் சாளரம் மூலம் நாம் புதிய தரிசனங்களைத் தொடர்ந்து அடையவே முடிகிறது. திரு.வி.க, உ.வெ.சா, ந.பிச்சமூர்த்தி, செல்லப்பா போன்ற பெருமக்களைப் பற்றி நாம் யோசித்திராத மாறுபட்ட கோணங்களில் நமக்கு அறிமுகப்படுத்துபவர் வெ.சா. நாம் இதுவரை முற்றிலும் அறிந்திராத பல கலைஞர்களின் சிறப்புக்களையும் கூட வெ.சா வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.

உ.வெ.சா பற்றியும், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி பற்றியும் வெ.சா நமக்கு காண்பிக்கும் பார்வைகள் முக்கியமானவை. சந்திரசேகர சரஸ்வதி அவர்களைப் பற்றி நமக்குச் சொல்லப்பட்ட விஷயங்களையும் தாண்டி அவருக்கு இருக்கும் விசாலமான, ஆழமான அறிவுத்திறன் குறித்த பிரமிக்கத்தக்க கேள்விகளை எழுப்புகிறார் வெ.சா. பரமாச்சாரியாரின் உபதேசங்கள் வாயிலாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் வரலாறு, பொருளாதாரம், இசை, மொழியியல், தமிழ் இலக்கியம், தொல்லியல், பொளதீகம், சமிஸ்கிருதம் என்று விரிந்து கொண்டே போகும் அறிவுத் தீஷண்யம் குறித்து பெருவியப்பு கொள்கிறார். அவர் வியப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா போன்று சகல துறைகளிலும் விசாலமான அறிவை பரமாச்சாரியார் அவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள முடியாத ஒரு ஆச்சாரமான மடம் சம்பந்தக் கடமைகள் உள்ள சூழலில் எப்படி அறிந்து கொண்டார் என்று வியக்கிறார் வெ சா. இதற்கான நேரமும், சூழலும் அவருக்கு எப்படி வாய்த்திருக்கக் கூடும் என்ற வெ.சா-வின் ஆச்சரியம் நமக்கு பரமாச்சாரியார் பற்றிய ஒரு புதிய பார்வையை அளிக்கின்றன.

பரமாச்சாரியார் போலவே மற்றொரு சுவாமிநாதனாகிய உ.வெ.சுவாமிநாத ஐயரவர்கள் குறித்தும் அவரது படைப்புக்களில் காணப்படும் நவீன அம்சம் குறித்தும் அதே பெருவியப்பை எழுப்புகிறார் வெ.சா. உ.வெ.சா இன்று தமிழர்களிடம் சங்க இலக்கியங்களை மீட்டுத் தந்தவராக மட்டுமே அறியப்படுகிறார். ஆனால் வெ.சா தமிழின் இலக்கியத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை நமக்கு அறியத் தருகிறார். நமக்கு இதுவரை கிட்டியிராத ஒரு பார்வையில் உ.வெ.சா அவர்களை ஒரு சிருஷ்டி எழுத்தாளர் என்ற கோணத்தில் வெ.சா நமக்கு ஆணித்தரமாக அறிமுகப்படுத்துகிறார். மணிக்கொடி காலத்திற்குப் பின்னால் தமிழின் நவீன இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டு மரபாகிப்போன க்ளிஷேக்கள் இல்லாமல் அடக்கி எழுதுதல், அசட்டு உணர்ச்சியைத் தவிர்த்தல், ஒதுங்கி நின்று நோக்கல், நாடக பாணியைத் தவிர்த்தல் போன்ற உத்திகளை இவற்றில் எல்லாம் எந்தவிதப் பரிச்சியம் இல்லாமல் இவற்றைக் கற்றுக் கொள்ளும் காலத்தில் வாழ்ந்திராத உ.வெ.சா மிகக் கச்சிதமாகக் காலத்தின் முன்னோடியாக தன்னியல்பிலேயே வரப் பெற்று தன் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்று வெ.சா சொல்லும் பொழுது உ.வெ.சா அவர்களது படைப்பாற்றல் குறித்து நமக்கு பெரு வியப்பு ஏற்படுகிறது. ஞானபீட விருது பெற்ற அகிலன் போன்றவர்களின் படைப்புக்களில் காணப்படும் அபத்தங்களைக் கூட உ வே சா எழுதிய ஆயிரக் கணக்கான பக்கங்களில் ஒரு இடத்தில் கூடக் காணக் கிடைக்காது என்று உ.வெ.சா அவர்களின் இன்னொரு பரிமாணத்தை நமக்கு அறியத் தருகிறார்.

பொதுவாக அரசியல்வாதிகள் பற்றியும் அரசியல் பற்றியும் பொதுவில் கருத்துத் தெரிவிக்காத வெ.சா, அபூர்வமாக அலசியுள்ள ஒரு அரசியல் விமர்சகர் சோ.ராமசாமி. அரசியலில் நேரடியாக ஈடுபடாதவர் என்றாலும் கூட ஒரு சிந்திக்கும் தமிழ் வாக்காளர்களிடம் தனது தர்க்கபூர்வமான அரசியல் கருத்துக்கள் மூலமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் சோ. மாசடைந்த தமிழக அரசியல் சூழலில் சோ.ராமசாமியின் வரவு உயர்ந்த லட்சியங்களினாலான தார்மீக அறவுணர்வின் அடிப்படையில் அமைந்த ஒரு உன்னத தன்னிகரில்லாத அரசியல் நிகழ்ச்சியாகவே, ஒரு எழுச்சியாகவே தோன்றியதாக வெ.சா சோவை அடையாளப் படுத்துகிறார். மேடை நாடகத்தில் சோவின் பங்களிப்பை தமிழ் தெருக்கூத்தின் கட்டியக்கார, விதூஷக மரபின் நீட்சியாகவே வெ.சா கருதுகிறார். சோவிற்கு கலையுணர்வு இல்லாததை ஒரு பெரும் குறையாக, இழப்பாகவே சோவின் பலவீனமாக வெ.சா கருதுகிறார். ஆனால் அப்படி நுண்கலையுணர்வின்றியே அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் சோவை கண்டிக்கும் அதே வேளையில் அவை போன்ற சிறு குறைபாடுகளை விட அவர் ஏற்படுத்திய அறிவார்ந்த தார்மீகமான அரசியல் களம் பாரதிக்குப் பின்னால், திரு.வி.கவுக்குப் பின்னால், தான் காண நேர்ந்த ஒரு நேர்மையான அரசியல் நிகழ்வாகவே காண்கிறார்.

தமிழ்நாட்டின் பொது சிந்தனை மரபிலும் வாசிக்கும் வழக்கத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் ஒரு பன்முக வித்தகராகிய கல்கி குறித்து வெ.சா, கறாரான விமர்சனங்களை வைக்கின்றார். சுமார் 25 வருட காலமாக தமிழ் மக்களைப் போதை நிலையில் ஆழ்த்தி விட்டவர் கல்கி என்று சற்றும் தயங்காமல் குற்றம் சாட்டுகிறார் வெ.சா. கல்கி குறித்தான மயக்கமான மதிப்பீடுகள் கொண்டிருந்த சராசரி வாசகனாகிய என்னைப் போன்றவர்களிடம் கல்கி ஏற்படுத்திய பாதிப்புக்களை, மறுபக்கத்தையும் எடுத்து வைக்கிறார் வெ சா. கலைத்திறன் அறிவுத்தளம் ஆகியவற்றை மனதில் கொண்டால், கல்கி தமிழர்களின் இல்லத்தை வெறும் அலங்காரமான வைக்கோல்களைக் கொண்டு மட்டுமே நிரப்பியிருக்கிறார் என்பது புரியும் என்கிறார் வெ சா. கல்கியின் கதை கேட்கும் போதையில் தமிழன் பெருமைக் கோஷம் போடும் இரைச்சலில் பாரதியின் குரல் எழுப்பிய திசை மறந்து விட்டது என்றும், புதுமைப்பித்தனும், மணிக்கொடியும் இந்த போதையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு விட்டார்கள் என்று தன் வேதனையை வெ.சா மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார். தமிழ் நாட்டின் பொதுப் புத்தியில் கலந்து போன எந்தவொரு வாசகனுக்கும் கல்கியின் படைப்புக்கள் குறித்தான ஒரு வேறுபட்ட விமர்சனக் கோணத்தை வெ.சா அளிக்கிறார் வெகுஜன இலக்கியத்திற்கும் தரமான இலக்கியத்திற்கும் உண்டான இடைவெளி குறித்தும் அவற்றின் வேறுபாடுகள் குறித்துமான கோணங்களை நமக்குக் காட்டுகிறார்.

தமிழர்களின் பொதுப்புத்தியில் தமிழ் நாட்டின் மாபெரும் கவிஞராக உருப்பெற்று விட்ட பாரதிதாசனை எடை போடும் பொழுது அவரது ஆரம்ப கால கவிதைகளுக்கு உரிய இடத்தை வழங்கினாலும் பின்னாளில் அவை மொழி வெறியாக மாறியதைச் சுட்டிக்காட்டுகிறார். பாரதிதாசன் வெறும் வெற்று துவேஷப் பிராச்சாரங்களை எழுப்பும் துண்டுப் பிரச்சாரகராக பாரதிதாசன் சிறுத்துப் போன உண்மையைத் தயங்காமல் சொல்கிறார் வெ.சா. தமிழ் இலக்கியங்களில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பரிச்சயங்களும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளோடு பிறந்த சொல்லாட்சியும் மட்டுமே அவரைக் கவிஞராக்கின என்று தயவு தாட்சண்யமின்றி பாரதிதாசன் பற்றிய உண்மையான தன் அபிப்ராயத்தைச் சொல்கிறார். தமிழ் உணர்வின் சின்னமாக உயர்ந்த பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாரதிதாசன் குறித்து இன்று தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு இலக்கியவாதியும் சொல்லத் தயங்கும் உண்மையாகும் இது. இது போன்ற விமர்சனங்களினாலேயே வெ.சா இதர தமிழ் இலக்கியவாதிகளிடம் இருந்து வெகு உயரத்திற்கு விலகிச் செல்கிறார்.

வெ சா தரும் இலக்கிய அனுபவங்கள்:

இந்தியக் கலைகள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை பல்வேறு இனங்களின் நிறங்களின் கலப்பில் பரிமாற்றத்தினால் நிகழ்வது என்ற ஒருமைப்பாட்டுத் தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் வெ.சா. அதற்கு இலக்கியத்தின் மூலமாக பல்வேறு ஆதாரங்களைத் தொடர்ந்து நிறுவி வருகிறார். தமிழ் சங்கப் பாடல்களின் அகத்துறைப் பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ள காதா சப்தசதிக்கும் உள்ள பொதுவான கூறுகளை அடையாளம் காண்பிப்பதன் மூலம் இந்தியக் கலைகளும், பண்பாடும் பூகோளங்களைக் கடந்து கலந்தவை என்பதை உறுதிப்படுத்துகிறார். இன்று தமிழ்மொழி, வடமொழி என்று பிரிவினைவாதம் பேசி மக்களைப் பிரிக்கும் அரசியலின் நடுவே இரண்டு மொழி இலக்கியங்களுக்குள்ளும் நடந்த கொடுக்கல் வாங்கல்களை, பொதுக் கூறுகளை ஆணித்தரமாக நிறுவுகிறார் வெ.சா. மழையைத் தேடி அலையும் வண்டுகள், தலைவன் தலைவிகளைப் பெயர் சுட்டாமல் பொதுகாக்க் குறிக்கும் தன்மை, பயணிக்கும் மக்கள், மழைப் பருவம் என்று பல விதங்களிலும் இரு மொழி இலக்கியங்களுக்கும் இடையேயான பொதுவானக் கூறுகளை இனம் கண்டு சொல்கிறார். மேலும் இன்று பிரிவினைவாதம் பேசி அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் பற்றாளர்கள் கொண்டாடும் பெரும்பாலான சங்கப் புலவர்கள் கூட புலம் பெயர்ந்தவர்களாகவும், சமண மதத்தினராகவும் தமிழை தாய்மொழியாகக் கொள்ளாமல் கற்றுத் தேர்ந்து தமிழுக்குப் பங்களித்தவர்களாகவுமே இருக்கக் கூடும் என்கிறார். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரங்களில் காணப்படும் சிருங்காரங்கள் கூட காதா சப்தசதி மூலம் பிராகிருதத்திற்குச் சென்ற தமிழ்மொழியின் கூறுகளாக இருக்கக்கூடும் என்கிறார். சங்கப் பாடல்களில் வட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்கள் கொடைகளை அளித்திருக்கலாம், அது போலவே இருமொழிப் புலவர்கள் மூலமாக சங்கத் தமிழின் சுவை பிராகிருதத்திற்கும் பின்னர் சமிஸ்கிருத இலக்கியத்திற்கும் சென்றிருக்கலாம். இந்தியக் கலைகள் அனைத்துமே என்பது தொடர்ந்து நடந்த பண்பாட்டுப் பரிமாற்றங்களால் செழுமை அடைந்திருப்பவை என்ற கருத்தை வெ.சா வலியுறுத்துகிறார். பாரத தேசம் ஒன்றுடன் ஒன்றுப் பின்னிப் பிணைந்த மாபெரும் கலாச்சாரச் சரடுகளால் இணைக்கப் பட்ட ஒரு மாபெரும் கலாச்சாரப் பரிமாணம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்.

பக்தி இலக்கியங்கள் ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களில் இருந்து கிளம்பி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிய கண்ணன் பக்தி பாடல்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கும் என்பதும் கலாச்சார பரிவர்த்தனையை அழுத்தமாகச் சொல்லும் கருத்தாக்கமாகும். இந்தியா முழுவதும் பரவிய பக்திப் பாடல்களுக்கு ஆழ்வார் பாசுரங்களும், அவற்றில் காணப் படும் நாயகன் நாயகி பாவத்திற்கான அடிப்படை சங்கப் பாடல்களிலும் காதா சப்த சதியிலும் துவங்குகின்றது என்பது வெ.சா நமக்கு அறிமுகப் படுத்தும் இலக்கியத்தின் மூலமாகப் பரவும் பாரதத்தின் ஒருமைப்பாடு.

இலக்கியத்தின் உள்ளடக்கம் என்பது கலைஞனின் அனுபவம்தான் என்பதில் உறுதியான கருத்து கொண்டிருப்பவர் வெ.சா. அனுபவம் என்றால் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், வர்க்கப் போராட்டம் என்ற பிரச்சாரக் கருத்தியல் சார்ந்த அனுபவம் அல்ல என்பது அவர் கருத்து. அவர் கூறும் அனுபவம் பார்வை, தீட்ச்சண்யம், நாடு, பிறப்பு, மரபு, கல்வியறிவு, சூழ்நிலை, என் தனித்தன்மை இயல்பான அக்கறை, இவற்றால் ஆக்கப் பட்டு ஆகிக் கொண்டு வரும் ஒரு தொகைப் பொருள் என்பதே. இது மேம்பட்ட ஒரு அனுபவம் என்பார் வெ சா. தன் அனுபவத்தில் பிரதானமான ஒன்றல்லாதவற்றை உருப்பெருக்கி தன் இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்று செய்யப்படும் இலக்கியம் யதார்த்தமான ஒன்றாக இருக்க முடியாது என்பது அவரது உறுதியான கருத்து. இவற்றை மீறி யதார்த்தமாக ஆத்மார்த்தமான அனுபவங்களில் இருந்து கிளைக்கும் படைப்புகளை அவர் எந்தவித எதிர்பார்ப்புக்களும் இன்றி கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து அடையாளம் கண்டு அவற்றிற்கான அங்கீகாரங்களை வழங்கியே வருகிறார்.

திருப்தியற்ற வெகுஜன வாசிப்பிற்கு மட்டும் தீனி போடக் கூடிய படைப்புக்களின் மீதான தனது கடும் விமர்சனங்களை அந்தப் படைப்பாளர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் வசை மொழிகளையும் பொருட்படுத்தாமல் வைத்துக் கொண்டே வருகிறார். ”எத்தகைய படைப்பும் திருப்தி தரக் கூடிய சில மன நிலைகள் உண்டு. அத்தகைய மனநிலை கொண்ட மக்கள் திருப்தி அடைகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அக்குணங்கள் இலக்கியம் என்ற அடைமொழிக்கு உரியவை ஆகி விட முடியாது என்ற அறிவு இன்னும் சித்திக்கவில்லை” என்று பொதுப்படையாக இலக்கிய விமர்சனம் செய்பவர்களை நோக்கித் தன் கண்டனங்களை வெளியிடுகிறார். அவரது தரம் சமரசத்திற்கு உரியதல்ல என்பதை நிலை நிறுத்துகிறார். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகும் அபாயம் போலவே பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளன் ஆகிவிடும் அராஜகத்தை எதிர்த்து பேனா பிடிப்பவர்களையெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டி வருகிறது என்று அயர்வடைகிறார். அந்த வகையில் தமிழின் பிற்கால இலக்கியத்தின் ஆரம்ப கால எழுத்தாளர்களான ராஜம் ஐயரில் இருந்து ஆரம்பித்து தமிழின் தற்கால இலக்கியவாதிகளின் படைப்புக்கள் வரை தாட்ச்சண்யம் இல்லாமல் ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணரின் கத்தியின் கூர்மையுடன் தர வரிசைப் படுத்தி வருகிறார்.

எந்தக் கலைத்துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் காணப்படும் வேற்றுமை இல்லாத வறட்சியின் அடிப்படை தமிழ் இனத்தில் காணப்படும் பொதுவான சிந்தனை வறட்சி, கலையுணர்வின் வறட்சியே என்று குற்றம் சாட்டும் வெ.சா, அந்த வறட்சியை நீக்கும் பொருட்டுத் தன்னால் ஆன ஒரு விழிப்புணர்ச்சியை, சிந்தனை இயக்கத்தை தனி நபராக தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழ் கலைத்துறைகளில் மணிக்கொடி காலத்தில் கொஞ்சம் காலம் ஏற்பட்ட மறுமலர்ச்சி மீண்டும் மங்கிப் போய் விட்டதாகக் கருதுகிறார். அந்தக் காலக் கட்டத்தில் அனைத்து கலைத் துறைகளிலும் விழிப்புணர்வும், மலர்ச்சியும், வளர்ச்சியும் தற்காலிகமாகவேயானும் ஏற்பட்டது தமிழ் சமூகத்தில் அடியோட்டமாக எழுந்த ஒரு விழிப்பின் விளைவான புத்தியக்கம் என்கிறார்.

சங்க இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை தன் விமர்சனங்களையும் அறிமுகங்களையும் தொடரும் வெ.சா மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் குறித்தும் தெளிவான கருத்துக்களைக் கொண்டவராக இருக்கிறார். ஆர்.கே.நாராயணனது ஆங்கில ஆக்கங்களின் நாடகங்களைப் பார்க்கும்பொழுது ஏற்படும் அந்நிய உணர்வுக்கான காரணத்தை நான் வெ.சா மூலமாகவே அறிந்து கொண்டேன். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த லா.ச.ரா, பின் தமிழில் எழுதத் துவங்கியதால் மட்டுமே அவரது உச்சத்தை அடைய முடிந்தது என்கிறார் வெ.சா. ஆங்கிலமோ, தமிழோ கன்னடமோ தன் அனுபவம் கிளைக்கும் மொழியில் எழுதுவதே அந்தப் படைப்புக்களுக்குச் சிறப்புத் தரும் என்கிறார். எழுத்தாளனுக்கு எந்த மொழியில் அவன் படைக்க இருக்கும் உலகமும் அனுபவங்களும் அவனை வந்தடைந்தனவோ எந்த மொழியில் அனுபவ உலகிற்கும் அவனுக்கும் இடையேயான உறவும், உரையாடல்களும் வந்து சேர்ந்தனவோ அந்த மொழியில் படைக்கும் பொழுதே அந்தப் படைப்பு இயல்பானதாக இருக்கும் என்பது அவரது தெளிவான கருத்து. அதை பல உதாரணங்கள் கொண்டு நிரூபிக்கிறார்.

நாவல்களில் நாடகபாணி உருக்க விளைவுகள், அதீத உணர்ச்சிகள் விரும்பத்தக்கவையல்ல என்பதை தெளிவாக உணர்த்தும் வெ.சா, எந்தக் கலைப்படைப்பிலும் ஊதிப் பெருக்கும் உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்கிறார். அதைப் போலவே சரித்திர நாவல்களுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டா என்பதையும் சந்தேகிக்கிறார். சரித்திர நாவல்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிட்ட வேண்டுமானால் அவற்றில் அக்கால மனிதனின் தத்துவம், தர்ம நோக்கு, நெறிமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்ணணியில் அமைய வேண்டும் என்பதைத் தெளிவாக்குகிறார். நம் சரித்திர நாவலாசிரியர்கள் இவ்வாறான பிரச்சினைகளை அணுகுவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. பொதுவாகவே நம் சரித்திரத் திரைப்படங்களையும், நாவல்களையும் கவனிக்கும் பொழுது அதன் மொழி செயற்கையானதாகவும் காலத்தைப் பிரதிபலிக்காதவையாகவுமே தோன்றுவதை எளிதில் அறியலாம். வெ.சா சரித்திரப் பாத்திரங்கள் பேசும் மொழியும் கால உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்துகிறார். இருபதாம் நூற்றாண்டின் நாடக பாணி மொழியில் ராஜராஜ சோழன் பேசியிருக்க முடியாது என்கிறார்.

(தொடரும்)

வெங்கட் சாமிநாதன் - பகுதி 2
வெ.சா-வின் பார்வையில் பிற கலைகளும் அவரது சமூக அக்கறைகளும்

இலக்கியம் மட்டுமின்றி சமயம், ஓவியம், சிற்பக் கலை, தெருக்கூத்து போன்ற தொன்மையான நாட்டாரியல் கலைகள், நாட்டியம், இசை, பிற நுண்கலைகள் போன்ற அனைத்துக் கலைத்துறைகள் குறித்தும் வெ.சா தொடர்ந்து அளித்து வரும் சித்திரங்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடைகள் என்றே சொல்லவேண்டும். நம் பாரம்பரியக் கலைகள் அழிந்து வருவது குறித்து அளவற்ற கவலைகள் கொண்டவர் வெ.சா. அவற்றை மீட்டெடுக்க முயலும் கலைஞர்களையும், அவர்களது அர்ப்பணிப்பையும் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்வதில் அவர் காட்டும் உற்சாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை. நியாயமாகப் பார்த்தால் நிறுவன பலமும், நிதியுதவியும், அதிகாரமும் படைத்துள்ள தமிழக அரசின் பல்வேறு கலாசார அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் செய்திருக்க வேண்டிய பணிகள் இவை.

தமிழ்நாட்டின் நுண்கலைகளைப் பொருத்தவரை நாம் இழந்து வரும் கலைகள் குறித்து பெருத்த கவலை கொண்டுள்ளவர் வெ.சா. குளிப்பாட்டிய நீரோடு குழந்தையையும் வெளியில் கொட்டி விடுகிறோமே என்ற வேதனை கொள்கிறார். தேவதாசிகள் பாதுகாத்த வடிவில் பரதநாட்டியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அக்கறையுள்ள இந்து வர்மாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டபோது, அவர்கள் பாரம்பரியமாகப் பாதுகாத்தக் கலையையும் தொலைத்து விட்டோம் என்பது குறித்து வெ.சா-வின் கவலை இன்றைய உலகில் திரிக்கப்பட்டு அனர்த்தப்படுத்தப்படும் அபாயம் உடையது. இருந்தாலும் அவரது விசனத்தை அவர் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. மாறுதல் தேவைதான் ஆனால் மாறுதல்கள் நம் தொன்மையின் சிறப்பையையும் கூடவே அழித்து விடுவது குறித்தான கவலைதான் வெ.சா-வின் கவலை.

நாடகக்கலைகளிலும், சிற்பக்கலைகளிலும், ஓவியக்கலைகளிலும் அவருக்கு ஏற்பட்ட ஆர்வமும் அக்கறையும் அவரது டெல்லி வாழ்வில் மண்டி ஹவுசைச் சுற்றியுள்ள கலைக் கூடங்களில் இருந்து பெறப்பட்டவை என்பதை அறிகிறோம். அதன் தாக்கமே மறைந்து கொண்டிருக்கும் கலைகளைப் புனரமைக்கும் கலைஞர்களிடம் அவர் கொண்டிருந்த அக்கறையும் ஆர்வமும் என்பதை உணர முடிகிறது. தேவதாசி முறையுடன் கைகழுவி விடப்பட்டுவிட்ட ‘கைசிகி புராணம்’ என்ற கலையை மீட்டெடுத்த ராமானுஜம் அவர்களை நம்மிடம் அறிமுகப்படுத்தும்போது வெ.சா மறைந்து வரும் கலைகளுக்கும், அவற்றை மீட்டெடுப்பவர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அக்கறை புலப்படுகிறது. நமது தொன்மையான கலைகள் யாவும் கோவில்களைச் சார்ந்தும், குறிப்பிட்ட சில ஜாதிகளின் பங்களிப்பினாலும் காலத்தைக் கடந்து இன்றும் பேணப்படுபவை என்பதைக் குறிப்பிடுகிறார். சங்கீதமாக இருந்தாலும் நாட்டியமாக இருந்தாலும் அவை எல்லாம் இளங்காற்றில் மெல்லிய மஸ்லின் ஆடை ஆகாயத்தில் மிதந்து செல்வது போல இருப்பதே அழகு என்றும் இனிமையாக இருந்தாலும் கூட சூறைக் காற்றின் வேகத்துடன் செல்வது அழகல்ல என்பதை எம்.டி.ராமனாதனையும், சுதா ரகுநாதனையும் ஒப்பிட்டு உணர்த்துகிறார்.

நவீன ஓவியங்கள் குறித்த பாமரத்தனமான கிண்டல்களை அவர் ரசிப்பதில்லை. ஓவியத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்று தன் மனைவி அருண்மொழிக்கு சொல்லித் தந்த விதத்தை வெகு அழகாக ஜெயமோகன் விவரித்திருக்கிறார். தமிழ்நாட்டு ஓவியக்கலை குறித்து விரிவாக அலசியிருக்கிறார் வெ.சா. “தமிழ் நாட்டில் தொடர்ந்து நம் கண் முன்னே கலை உணர்வூட்டும் வகையில் சிற்பங்கள்தான் கோவில்களில் உள்ளன. ஓவியத்திற்கு அத்தகைய தொடர்ச்சி இல்லை. சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள். அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம். முதலில் கோவில் சிற்பங்களை, சுவரோவியங்களை பிரதி செய்யும் ஒரு கட்டம் தாண்டி, ஒவ்வொருவரும் தன் மொழியை, தன் பாணியை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு நீண்ட காலம் தேவையாக இருந்தது.” என்ற தமிழக ஓவியக்கலையின் வரலாற்றினை நமக்கு அளிக்கும் வெ.சா, அந்தக் கலைகளை முன்னகர்த்திச் செல்லும் கலைஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ”ராமானுஜம், மனம் பேதலித்த சமூகத்தோடு ஒட்ட முடியாத தோற்றம் அளித்த தன் தனிப்பட்ட உலகை உருவாக்கிக்கொண்ட கனவுலக மனிதர். தன் மண்ணில் கால் அழுத்தமாகப் பதித்து தன் கிராமீய ஏக்கமும், வறுமையும், வான் நோக்கி வாழும் மனிதனை உணர்வுகளை சிற்பங்களாக்கும் தக்ஷிணாமூர்த்தி, வெகுகாலம் தான் ஒரு மாஸ்டர் ஆகிவிட்ட கோட்டுச் சித்திரங்களைக் கைவிட மறுத்து இப்போது ரூபங்களிலிருந்து பிறந்த அரூபங்கள் படைக்கும் ஆதிமூலம், பூனைகளையே தன் வற்றாத கற்பனை ஊற்றாகக் கொண்ட பாஸ்கரன், எல்லா தளங்களிலும் கால் பரப்பியுள்ள பி.கிருஷ்ணமூர்த்தி, ட்ராட்ஸ்கி மருது, பழமையின் பிடிப்பிலேயே புதிய பிம்பங்களை உருவாக்கி நம்மைத் திகைக்க வைக்கும் வித்யா சங்கர் ஸ்தபதி” என்று வெ.சா வாயிலாக நம் ஓவியக் கலைஞர்களை அவர்களது சாதனைகளுடன் அறிந்து கொள்கிறோம்.

திராவிட இயக்கங்களின் ஆபாசக் கூச்சல்களில் தமிழுக்கு வளம் சேர்த்த பக்தி இலக்கியங்களும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்த கோவில்களும் புறம் தள்ளப்பட்டுவிட்டது தமிழ் சமூகத்திற்கு நேர்ந்த ஒரு கொடுமையான அவலமாகும். அந்த வெற்றுக் கூச்சல்களையும் மீறி கோவில்களும் கோவில்களின் சிற்பங்களும் தமிழ் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்களை வெ.சா உரக்கச் சொல்லத் தயங்கியதேயில்லை. தமிழ் வாழ்க்கையே கோவில்களை மையமாகக் கொண்டதுதான். கோவில் தமிழனுக்கு வாழ்வளித்தது என்பதை எந்தவித முத்திரைக் குத்தலுக்கும் பயப்படாமல் தயங்காமல் சொல்பவர் வெ.சா. தமிழ் கலைகளுக்கு ஊக்கம் கொடுத்ததே கோவில்தான். சிற்பக் கலையும், நாட்டியக் கலையும், சங்கீதமும், ஓவியக் கலையும் வளர்ந்தது கோவில்களிலேயே என்பதை அழுத்தமாகச் சொல்பவர் வெ.சா. தமிழ் நாட்டுக் கோவில்களில் இருந்து பிறந்த பக்தி இயக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலுமான கலை, இலக்கியம், மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்தது என்ற உண்மையைச் சொல்கிறார். கோவில்கள் என்பவை பக்திக்கு மாத்திரம் உறைவிடமான இடங்கள் அல்ல. அவை ஓவியம், சிற்பம், ஆடல், பாடல்கள், கவிதைகள், நாட்டுப்புறக் கலைகள், கட்டிடக்கலை போன்ற அனைத்து கலைகளுக்குமே அடித்தளமாக அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டவையே கோவில்கள்தான்.

வெ.சா-வின் கலை இலக்கிய விமர்சனங்கள் போலவே, அவரது சமூக அக்கறைகளும், சமூக விமர்சனங்களும் குறிப்பிடத்தக்கவையே. பொதுவாகவே சர்ச்சைகளுக்குரிய விஷயங்களைப் பற்றி எவரும் பேச விரும்புவதில்லை. நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களையும் சீரழிவுகளையும் பற்றி கேள்விகள் எழுப்புவதும் அதற்குக் காரணமானவர்களை கண்டிப்பதும் சபை நாகரீகம் இல்லாத காரியமாகவே இன்று கருதப்படுகிறது. அது போன்ற ஒரு சூழலில் வெ.சா திராவிட இயக்கங்களினால் சீரழிந்து போயிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுச்சூழல் குறித்தோ, மார்க்ஸியப் பிரச்சாரங்களினால் கலை இலக்கியங்களின் தரம் பிரச்சாரமயமாவது குறித்தோ, தீவீரவாத அடிப்படைவாத இஸ்லாம் குறித்தான தன் கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவிப்பது கூட இன்றைய இந்திய அறிவுச் சூழலில் ஒரு விரும்பத்தகாத கலகக் குரலாகவும், சமூகநீதிக்கு எதிரானதாகவும், மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும் முற்போக்கு இலக்கியவாதிகளாலும், போலி செக்குலரிஸ்டுகளாலும் முத்திரை குத்தப்படுகிறது. இன்றைய அரசியல் சூழலில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடுமையாக எதிர்க்கும் அச்சமில்லாத குரல்களில் வெ.சா-வின் குரலும் ஒன்று. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் விளையும் பயங்கரவாதத்தைத் தங்கள் செக்குலர் மதிப்பிற்கு பங்கம் வந்து விடும் என்று பயந்து அனைவரும் ஒடுங்கி அமைதி காக்கும் நேரத்தில் ஒரு இலக்கியவாதிக்குரிய சமூக அக்கறையுடனும் கடமையுடனும் அவற்றுக்கு எதிராக தன் தனிக்குரலை துணிந்து பதிவு செய்து வருபவர் வெ.சா.

அவரது குரலில் தெனிக்கும் அறமும், சத்தியமும் போலிகளைச் சுடுகிறது. அதனால் ஏற்படும் ஆத்திரத்தினாலேயெ அவரை இந்துத்துவவாதி என்றும், சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்றும் அவர் மீதான அவதூறாக வெளிப்படுகின்றது. இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அவர் பணிந்ததே இல்லை. இன்றைய தமிழ்ச் சூழலில் பெரியார் என்று ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு சிலை வைத்துப் போற்றப்படும் ஒருவரைப் பற்றிய உண்மையான தன் துணிவான விமர்சனங்களை வெ.சா வைக்கத் தயங்கியதேயில்லை. ஈ.வெ.ராவும் அவருடைய சீடர்களும் என்றுமே தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அக்கறை கொண்டது கிடையாது என்பதையும் அவர்களது கொள்கைகள் எல்லாமே பிராமணத் துவேஷம் என்ற ஒரு அடிப்படையை மட்டுமே கொண்டது என்பதை இன்றைய சூழலில் துணிந்து சொல்லக் கூடியவர் வெ.சா.

தன் விமர்சனங்களிலும் கருத்துக்களிலும் சமுதாயக் கேடுகளுக்கு எதிரான கண்டிப்புகளிலும் கறாரான மதிப்பீடுகளும் போலிகளுக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழும் வெ.சா தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு வெகு அற்புதமான ஒரு மனிதர். சிறந்த மனிதாபிமானியும் நுட்பமான நகைச்சுவை உணர்வுக் கூடிய உற்சாகமான ஒரு மனிதர். பழகுவதற்கு இனிய தோழமை உணர்வு மிக்க நண்பர். தன் விமர்சனங்களையும் தனிப்பட்ட வாழ்வில் நட்புக்களையும் குழப்பிக் கொள்ளாமல் தன்னால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களுக்கும் கூட தனிப்பட்ட விதத்தில் உதவி செய்திருப்பதாக அவரை அறிந்த எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அவரது தனி மடல்களிலும் விசாரிப்புகளும் எப்பொழுதும் கனிவும், பரிவும், வாஞ்சையும் நிரம்பியிருப்பதை அவருடன் பழகும் எவரும் அறிவார்கள். தொலைபேசி உரையாடல்களிலும் கூட அவரது உற்சாகமும் அன்பும் நம்மையும் தொற்றிக் கொள்பவை.

தன் எழுத்துக்களிலும் உரையாடல்களிலும் கருத்துப் பரிமாறல்களிலும் அவர் பயன்படுத்தும் நுட்பமான நகைச்சுவை உணர்வு அபாரமானது. அவரது ஆளுமை குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் “கடுமையானவர்” என்ற பிம்பத்திற்கு முற்றிலும் எதிரானது அவரது உண்மையான ஆளுமை. அவரது மடல்களில் சில சமயம் தொக்கி நிற்கும் அங்கதங்களைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தனது கடுமையான விமர்சனப் பார்வைகளுக்கு நடுவிலும் கூட வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய பல குத்தல்களைப் பொதிந்து வைத்திருப்பவர் வெ.சா. ”எந்தவொரு 35 வயதான இந்தியனுக்கும் என்றாவது ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பது போலவே என்றாவது ஒரு நாள் மு.மேத்தாவும் கூட கவிதை ஒன்றை எழுதக் கூடும்” என்ற கிண்டல் வெகு பிரபலமான ஒன்று. இதழாளர் மாலனை “தென்னாட்டு குல்தீப் நய்யார் என்றும் பெஞ்சமின் ப்ராட்லி” என்றும் புகழும் உதயமூர்த்தியைப் பற்றி தனக்கேயுரிய அங்கதத்துடன் வெ.சா எழுதுகிறார், “ இதன் மூலம் மாலனைப் பற்றி மட்டும் அல்ல தன்னைப் பற்றியும் எம்.எஸ்.உதயமூர்த்தி சொல்லிவிடுகிறார்.” “ஹிட்லர் ஒரு கொடிய பாசிஸ்டாக இருந்த பொழுதும் கூட அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளனாக இல்லையென்பது புதுமைப்பித்தனுக்குத் திருப்தி” என்று கிண்டலடித்த அ.மார்க்ஸ் குறித்து கிண்டலாக வெ.சா வினவியது, “அப்படியானால் அவன் கொடிய பாசிஸ்டாக இருந்தாலும் கூட ஓரினச் சேர்க்கையாளனாக இருந்திருந்தால் மார்க்ஸுக்குத் திருப்தியாக இருந்திருக்குமோ?” கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் உ.வெ.சாமிநாதைய்யருடைய சீடர் என்பது குறித்து வெ.சா, “மகாத்மா காந்தி கூடத்தான் சில்லறைத் தவறுகளாகப் பாபங்களாக சிலவற்றைச் செய்து விட்டுப் போயிருக்கிறார். அதைப் போல உ.வெ.சா-வும் பெரிய பாபமாக ஒன்றைச் செய்திருக்கிறார். போகட்டும், அதற்காக உ.வெ.சா-வைப் போய் குற்றம் சொல்ல முடியுமா என்ன?” என்று எழுதியதைப் படிக்க நேரும்போது பொங்கும் சிரிப்பை யாராலும் எளிதில் அடக்க முடியாது.

தமிழ் எழுத்துலகின் ஜாம்பாவானாகிய தி.ஜானகிராமன் அவர்களை கவுரவிக்க ஒரு கன்னட இலக்கிய அமைப்புக்குத்தான் அக்கறை இருந்தது. நாடகக் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் சே.ராமானுஜம் போன்றவர்களை மலையாள அமைப்புகள்தான் கவுரவிக்கின்றன. அது போலவே வெ.சா அவர்களையும் கடல் தாண்டி கனடாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். ஒரு மாபெரும் கலைஞனை அவன் சினிமா, அரசியல், மலினமான தமிழ் இலக்கிய அரசியலில் சம்பந்தப்படாதவராக இருந்தால் அவன் வாழும் காலத்திலும் அதற்குப் பின்னரும் கூட அங்கீகரிக்காத கவுரவிக்காத ஒரு கேவலமான மரபுதான் தமிழ்நாட்டில் இருந்துவருகிறது. வெங்கட் சாமிநாதன் விஷயத்திலும் அது தன் தமிழ்மரபை விட்டுத் தரவில்லை என்பதை வேதனையுடன் நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.

தமிழ் கலைகளுக்காக அவற்றின் வளர்ச்சிக்காக கைம்மாறு எதிர்பாராமல் தான் எதிர் கொண்ட கல்லடிகளையும் காயங்களையும் பொருட்படுத்தாமல் இத்தனை வருடங்கள் தன் உழைப்பையும் அறிவையும் அளித்திருக்கும் வாழ்வு வெ சா அவர்களுடையது. அவர் இன்னும் பல ஆண்டுகள் இதே துடிப்புடனும் உற்சாகத்துடனும் செயல்பட அவருக்கு ஆண்டவன் ஆரோக்யத்தையும் மன வலிமையையும் அளிக்க வேண்டும். அவர் நோக்கங்கள் நிறைவேறும் காலம் வர வேண்டும்.

(ஓவியம்: வெ.சந்திரமோகன்.)

சொல்வனம் » வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும், புத்தக வெளியீட்டு விழா

ஒரு பேராசிரியருக்கு அவரிடம் கல்வி பயின்றவர்கள் அவரைப் பாராட்டியோ அல்லது அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ கட்டுரைகள் எழுதி அதை ஒரு தொகுப்பாக சமர்ப்பணம் செய்வது பொதுவாக பல்கலைக்கழக வட்டங்களில் Festschrift என்ற வழக்கம். அது ஒரு கொண்டாட்ட நிகழ்வு.

அந்த வகையில், “வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்றதொரு புத்தகத் தொகுப்பை பா.அகிலன், திலீப் குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்து சந்தியா பதிப்பகப் பிரசுரமாக வெளியிட்டுள்ளனர். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாண்டு கால எழுத்துப் பணியைக் கொண்டாடும் இந்தப் புத்தகம் அவரைப் போற்றுவதையோ அல்லது அவரை ஒரு பேராளுமையாகவோ நிலை நிறுத்துவதையோ தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. வெங்கட் சாமிநாதனைக் கடுமையாக விமரிசிக்கும் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

பதிப்பாசிரியர்கள் தங்கள் நோக்கத்தை முன்னுரையில் இப்படி விவரிக்கிறார்கள்-

“வெ.சா. ஒரு தனிப்பயணம். பெரும்பாலான நேரங்களில் துணையின்றிய, எதனோடும் சமரஞ் செய்யாத, தனது கருத்துக்களையும், எதிர்கருத்துக்களையும் சலியாது தாவிச் செல்லும் ஒரு நெடும் பயணம். வாதங்களாலும் விவாதங்களாலும் வெ.சா கட்டமைத்த மேற்படி விமர்சன வெளியுள், அதன் கருத்தாடற் பரப்பினுள் வெ.சா.வை நிறுத்தி அவரது வரலாற்று வகிபாத்திரத்தை மதிப்பிடுதலும், பதிவு செய்தலுமான ஒரு முயற்சியே இத் தொகுப்பிற்கான அடிப்படையாகும். அது, அவர் உருவாக்க விரும்பிய கருத்தாடற் களத்தையும், அவரையும் கௌரவிப்பதற்கான ஒரு முயற்சியுமாகும்”

Festschrift வரலாற்றில் இப்படியொரு தொகுப்பு மிக அரிதாகவே வந்திருக்கும். ஒரு விமரிசகனை அவனைக் குறித்த விமரிசனங்களூடே அறிவது என்பது ஆபத்தான எத்தனம். ஆனால் துணிந்து இந்தக் காரியத்தில் இறங்கியுள்ளனர் தொகுப்பாசிரியர்கள்; ஆயினும் வெங்கட் சாமிநாதன் தன்னைக் குறித்த விமரிசனங்களைத் தாண்டி உயர்ந்தே நிற்கிறார்.

இந்தத் தொகுப்பில், “வெங்கட் சாமிநாதன்: தமிழ் இலக்கியவெளியில் ஒரு காட்டுக் குதிரை” என்ற கட்டுரையில் திருமாவளவன், “வெங்கட் சாமிநாதனுக்கு முன் “விமர்சனமரபு” என்று சொல்லும்படியான ஒன்று இருந்ததா என்பது இன்றைய வாசகன் எதிர்கொள்ள வேண்டிய முதற் கேள்வி,” என்று எம். வேதசகாயகுமாரை மேற்கோள் காட்டுகிறார் (பக்கம் 283). அவரே எழுதுவது போல், “இலக்கியம், இசை, நாடகம், கூத்து, ஓவியம், சிற்பம், சினிமா தொடங்கி கம்பியூட்டரில் டிஜிட்டல் படைப்புகள் வரை பரந்து விரிந்த” கட்டற்ற வெளியில் ஒரு புதிய பாதையைத் தேடும் வெங்கட் சாமிநாதனின் விமரிசனப் பார்வை விவாதங்களூடே வெளிப்படுவது பொருத்தமாகவே இருக்கிறது.

ஒரு நல்ல விமரிசகன் கேள்விகளை எழுப்புகிறான்; அவனது கேள்விகளுக்கான நியாயங்கள் மறைந்து, அவனது அவசியம் இல்லாமல் போவதே அந்த விமரிசகனின் வெற்றி என்று புத்தக வெளியீட்டு விழாவில் குறிப்பிட்ட சமகால விமரிசகர்களில் முக்கியமானவரான ஜெயமோகன், தன் ஒவ்வொரு கட்டுரையிலும் தான் வெங்கட் சாமிநாதன் எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்வதாகக் கூறினார். தமிழின் விமரிசனக் களத்தின் எல்லைகள் இன்றுள்ள நிலையில் அவரால் அமைக்கப்பட்ட ஒன்று என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. விழாவில் ஆற்றப்பட்ட உரைகளைக் கேட்கும்போதும் இந்தத் தொகுப்பைப் படிக்கும்போதும், அவர் நம் அறிவுத் தளத்தில் நிலையான இடத்துக்குரியவர் என்ற எண்ணம் எழுகிறது. எங்கெல்லாம் மரபின் அவசியமும் படைப்பூக்கத்தின் புதுப்பொலிவும் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் வெங்கட் சாமிநாதனின் கேள்விகள் எதிர்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகவே இருக்கும்.

“வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்ற இந்தத் தொகுதி அவரது பங்களிப்பை அனைத்து கோணங்களிலும் அணுகி, அதன் நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறது. தமிழ் பண்பாட்டின் ஐம்பது ஆண்டு கால விமரிசனக் குரலை அதன் எதிர்வினைகளின் வழியாக அடையாளப்படுத்தும் இந்த நூல் இவ்வாண்டு மட்டுமல்ல, தமிழில் இதுவரை வெளிவந்த எந்த நூலுக்கும் இணையான முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இதைத் தொகுத்த திரு பா.அகிலன், திலீப் குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியவர்கள் நம் நன்றிக்குரியவர்கள்.

-oOo-

இனி தேவநேயப் பாவாணர் அரங்கில் 30.4.2011 அன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் சில குறிப்புகள்:

சிறப்புரை ஆற்றியவர்களில் நாஞ்சில் நாடனின் பேச்சு உணர்ச்சி மேலோங்கி இருந்தது - எழுத்தாளர்களே விமரிசகர்களாக இயங்க வேண்டிய அவல நிலை தற்காலத்தில் இருக்கிறது என்பது அவரது பேச்சின் அடிநாதமாக இருந்தது. விருப்பு வெறுப்பற்று, எந்த அச்சமுமில்லாமல் ஒரு படைப்பை, அதை எதிர்கொள்ளும் சமூகத்தை விமரிசிப்பவர்கள் இப்போது அருகிப் போய்விட்டார்கள் என்றார் அவர். ஒரு விமரிசகனின் அவசியத்தை வலியுறுத்திய, அவனது இழப்பை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கவலையை வெளிப்படுத்திய அவரது உரை நேரமின்மை காரணமாக தடை செய்யப்பட்டது ஒரு குறையே ஆகும். அவரது பேச்சு மிக முக்கியமான ஒன்று.

வெளி ரங்கராஜன் நாடகத்துறையில் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு குறித்து ஒரு ஆய்வுரை அளித்தார். தமிழின் நவீன நாடகக் கலைஞர்கள் வெங்கட் சாமிநாதனுடனான விவாதங்கள் வாயிலாகத் தங்கள் கலையை முன்னெடுத்துச் செல்ல நேர்ந்தது குறித்த அவரது உரை ஒரு ஆவணத்துக்குரிய சான்றுகளைக் கொண்டதாக இருந்தது. ஆனால், எழுதி வைத்துப் படிக்கப்பட்ட காரணத்தால் நாஞ்சில் நாடனின் உணர்ச்சிப் பெருக்கை அடுத்து வந்த அவரது கருத்து செறிந்த உரை வசீகரமான்தாக இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கி.ஆ.சச்சிதானந்தம், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் உட்பட பலர் எழுதிய ஏராளமான கடிதங்களைக் கோப்புகளாக வைத்திருந்ததாகவும், சி.சு.செல்லப்பாவிடம் இருந்த கடிதங்கள் அனைத்தையும் பதிப்பித்தால் அது தமிழ் இலக்கியத்தின் போக்கை விவரிக்கும் அரிய தொகுப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஜெயமோகன் வெங்கட் சாமிநாதனை ஒரு விமரிசகராகவே அணுகினார். அவரது பேச்சு அரங்கிலிருந்தவர்களை எழுந்து அமரச் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். தங்கு தடையில்லாமல் ஆணித்தரமாக அமைந்த அவரது உரை, வெங்கட் சாமிநாதனின் விமரிசன எல்லைகளை விவரிப்பதாக இருந்தது. ஒரு வகையில், அவர் வெங்கட் சாமிநாதனின் ஐம்பது ஆண்டு கால ஆக்கத்தை அதன் நான்கு சாரங்களில் தொகுத்தமைத்தார் என்று சொல்ல வேண்டும். ஜெயமொகனுக்கே உரிய உத்வேகமான உணர்ச்சிப் பிழம்பான தொனியில் இது நிகழ்த்தப்பட்டது. விழா நாயகனைப் புகழ்வதுதான் பொது வழக்கம் - புகழாதவர்களும் அவரது நிறைகளைப் பேசுவதுடன் மட்டுமே நிறுத்தி கொள்வார்கள். ஆனால் வெங்கட் சாமிநாதனை ஒரு முழுமையான விமரிசகராக அணுகிய ஜெயமோகன், அவரது விமரிசனத்துக்கான தேவை இல்லாமல் போவதே விமரிசகனாக வெங்கட் சாமிநாதனின் வெற்றியாக இருக்கும் என்று கூறினார்.

கலை, படைப்பு என்ற களத்தில் இது சாத்தியப்படலாம்- அதுவே சந்தேகம்தான். என்றைக்கு மரபின் நிழல் விலகப் போகிறது? புத்துருவம் பெறும்போதும் தன் இயல்பை இழக்காமலிருப்பது என்பது எந்தக் கலைக்கும், பண்பாட்டுக்கும் ஒரு சவாலாகவே இருக்கும். அரவிந்தன் நீலகண்டன் பேசும்போது குறிப்பிட்டார், மரபைக் காக்கும்போது அது அடிப்படைவாதமாக மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது, அதை எப்படிச் செய்வது என்பதை யோசிக்கும்போது அங்கே வெங்கட் சாமிநாதன் முக்கியமானவராக இருக்கிறார் என்று. வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு என்று பார்க்கும்போது இது ஒரு முக்கியமான கருத்தாகும்.

ஜெயமோகனின் உரை அரங்கிலும் சரி, தொகுப்பிலும் சரி, உத்வேகமான ஒன்றாக இருக்கிறது. வெங்கட் சாமிநாதனை விமரிசனப் பார்வையுடன் அணுகுபவர்கள் அவரை எந்தப் புள்ளிகளில் எதிர்கொள்ள வேண்டும் என்று வரையறுப்பதாக இருகிறது. அன்று ஜெயமோகன் பேசியதும், தொகுப்பில் அறுபத்தைந்து பக்க அளவில் உள்ள அவரது கட்டுரையும். வெங்கட் சாமிநாதனுக்கு ஒரு சித்தாந்த தளம் அமைத்து, அப்படி ஒன்று இருக்க முடியும் என்றால், அதைத் தெளிவுபடுத்துவதில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.

செங்கதிரின் உரை சுருக்கமானதாக இருந்தது. நாட்டார் கதை ஒன்றைச் சொல்லி, கலைஞனுக்கு இயல்பாகவே அதீத மரியாதையால் கட்டுண்டு விடாமல் கேள்வி கேட்பதும், நகைச்சுவையின் வழியாக தன் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்வதும் இயல்பாக இருந்தது என்று சொன்னார். வெங்கட் சாமிநாதனை இந்தக் கதையில் எப்படி பொருத்துகிறார் என்பது புரியவில்லை- அதை முனைந்தாரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஆனால், வெங்கட் சாமிநாதன் ஒரு படைப்பின், பண்பாட்டின் தனித்தன்மையை அறிய முனைந்தார் என்பது அவரது கருத்தாக இருந்திருக்கலாம்.

கவிஞர் திலகபாமா கவிஞர்களுக்கே உரிய அறச்சீற்றத்துடன் மேடையேறினாலும் அவரது பேச்சு வெங்கட் சாமிநாதனை நேசத்துடன் அணுகுவதாக இருந்தது. அவர் பேசியதில், ஒரு எழுத்தாளன் விமரிசகனாக இருப்பதில் உள்ள பிரச்சினைகளை விவரித்தது கவனிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

திரு.பா.அகிலன், தமிழின் கலை மற்றும் பண்பாட்டைப் பேசுகையில் வெங்கட் சாமிநாதன் தன் படைப்புகளின் மூலம் எப்படி ஒரு தவிர்க்க முடியாத பேராளுமையாக இருக்கிறார் என்பதை யாழ் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு பட்டப்படிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசியது நெஞ்சைத் தைப்பதாக இருந்தது. வெங்கட் சாமிநாதன் தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளை ஆவணப்படுத்தித் தன் விமரிசனங்களின் வழியாக அவற்றின் இயல்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முனைந்தார், இதில் அவரே முன்னோடி என்று பா.அகிலன் பேசியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

விழா நிறைவில் வெங்கட் சாமிநாதன் தன் வழக்கப்படி சுய எள்ளலுடன் பேசினார். அவரது பேச்சில், பேச்சு என்று சொல்ல முடியாது, வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பேசுவது போன்ற தொனியில் அவர் தனக்கா இவ்வளவு அங்கீகாரம் என்ற பிரமிப்பை வெளிப்படுத்தினார். யாரும் சொல்லக்கூடிய விஷயத்தையே தானும் சொல்வதாகவும், அதற்கு இப்படியொரு முக்கியத்துவம் கிடைக்கிறதென்றால் தமிழ்ச் சூழலின் நலிவுற்ற நிலையே அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நகைச்சுவையாகச் சுட்டுவது போலிருந்தது அவரது பேச்சு.

“நான் நல்ல எழுத்தாளன் இல்லை, இப்போது நல்ல பேச்சாளன் இல்லை என்பதையும் நிருபிக்கப் போகிறேன்,” “மைக் கையில் கிடைத்தால் பேச விரும்பாத தமிழனும் இருக்க முடியுமா? ஆனால் நான் இருக்கிறேன். ஒரு சமயம் அதுவே நான் தமிழன் இல்லை என்பதைக் காட்டுகிறதோ என்னவோ!” என்று அவரது எள்ளல்களுக்குக் குறைவில்லை. இயல்பான நகைச்சுவையோடு பேசினார்.

இரண்டு இடங்களில் உணர்ச்சி வசப்பட்டார். தன் முதல் புத்தகம் பிரசுரமாகக் காரணமாயிருந்த மூவர் பெயரையும் சொன்னார் (பாலையும் வாழையும்’ வெளியிட்ட மூவர்- மணி, ஜெயபாலன், டேவிட் சந்திரசேகர்.) அவர்களைத் தேடிப் பிடித்து இந்த விழாவுக்கு அழைத்து வர முயற்சி செய்தோம், ஆனால் அவர்களால் வர முடியவில்லை என்று சொல்லும்போது குரல் கம்மியது. அதே போல், அவர் தன் மனைவி இப்போது இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார் என்று சொல்லும்போது அவர் குரலில் வருத்தம் வெளிப்படையாகத் தெரிந்தது - நான் எழுதியதில் பணமும் கிடையாது, என்னைச் சுற்றி கையெழுத்து கேட்டு நிற்கும் கூட்டமும் கிடையாது. இப்போது இருந்திருந்தால் இத்தனை பேரை பார்க்கும்போது நம் ஆளும் ஏதோ செய்திருக்கிறான் என்று பெருமைப்பட்டிருப்பாள், என்கிற மாதிரி பேசினார்.

தஞ்சை பிரகாஷ் குறித்துப் பேசும்போது, “எனக்கு அவரது இழப்பு மிகப் பெரிய ஒன்று- அவர் இல்லாமல் என்னால் எப்படி மிச்ச நாட்களை வாழ முடியும் என்று அப்போது தோன்றியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது, நாமும் ஏதேதோ சமரசம் செய்துகொண்டு நம் வாழ்க்கையைத் தொடர்கிறோம்” என்று உளப்பூர்வமாகப் பேசினார். தஞ்சை பிரகாஷ் மீது அவர் வைத்திருந்த அன்பு அவரது பேச்சில் வெளிப்பட்டது.

எல்லாரும் வெசாவுக்கு அப்புறம் சமரசமில்லாமல் அவர் முன்வைக்கும் விமரிசன மரபு நின்று விடுமே என்று கவலைப்பட்டார்கள். நாஞ்சில் நாடன்கூட அதைக் குறிப்பிட்டார். அவருக்குப் பிடித்த திருச்செந்தாழை “இப்போதெல்லாம் விமரிசன மதிப்புரை வாங்குவதற்கு சிறு தெய்வங்களை திருப்திப்படுத்துவது போல் பாடுபட வேண்டியிருக்கிறது” என்று சொன்னாராம். நேர்மையான விமரிசனம் இருக்கககூடிய சூழல் இப்போது இல்லை, அதை செய்யக்கூடியவர்களும் இல்லை என்று ஏறத்தாழ அனைவரும் வருந்தினர்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது, அ.முத்துலிங்கம் எழுதியதைப் படிக்க நேர்ந்தது; “அவர் குணங்களில் உயர்ந்து நிற்பது நேர்மையும், மனிதநேயமும். ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் வெ.சா.வை இன்றைக்கும் பலர் பூரணமாக அறிந்திருக்கவில்லை… வெ.சா. போன்ற பெரிய ஆளுமையை அறிய அவரிடமுள்ள நேர்மை, மனிதநேயம் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அது இல்லாமல் அவரை முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது,” என்று எழுதுகிறார் அவர்.

அனுபவத்தில் மட்டுமே விரியும் ரத்தினச் சுருக்கமான எழுத்துக்குச் சொந்தக்காரர் அ.முத்துலிங்கம். விழாவில் பேசிய அனைவரும் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டது வெங்கட் சாமிநாதனின் சமரசமில்லாத நேர்மையை. ஆனால் அதே நேர்மை - யாருக்கும் பயப்படாமல் எந்த சார்பும் இல்லாமல் ஒருவன் தனக்குத் தெரிந்த உண்மையைப் பேசினாலே போதுமானது - அப்படி தன்னால் ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்து காட்ட முடிந்ததையே வெங்கட் சாமிநாதன் நமக்கு விட்டுச் செல்லக் கூடிய விழுமியமாக நினைக்கிறார் என்று அவரது நட்பான உரையாடலில் அறிந்தபோது அவரது கறாரான நேர்மை கனிந்த மனித நேயத்தின் மறுபக்கம் என்று புரிந்தது.

இதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கிறபோது, உண்மை என்பது பன்முக அறிதல்கள் ஊடாடும் வனம், அதில் தற்சார்பற்ற நேர்ப்பார்வையில் மட்டும் புலப்படும் பாதை என்ற தரிசனத்தைத் தருகிறது “வெங்கட் சாமிநாதன்-வாதங்களும் விவாதங்களும்” என்ற இந்த நூல்.

கட்டுரையிலுள்ள ஒளிப்படங்கள் நன்றி - ஆர்.பாலாஜிராஜ், தமிழ் ஸ்டுடியோ

மேலும் ஒளிப்படங்களுக்கு:
தமிழ் ஸ்டுடியோ[1]
ஆர்.பாலாஜிராஜ்[2]