Home / Bombay1944

Bombay1944


ஆவிகள் - ஆனந்த விகடன் - 2015-02-11

சிறுகதை :அசோகமித்திரன்

நான் இருக்கும் வீட்டில் இருந்து சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரத்தில்பள்ளிப்பேட்டை என்றொரு குடியிருப்பு இருக்கிறது. அங்கே ஒருவர் பல ஆண்டுகளாக அவருக்குத் தெரிந்த ஜோதிடம் சொல்லி அடக்கமாக வாழ்க்கை நடத்திவந்திருக்கிறார். அவர் நல்ல ஜோதிடரா... இல்லையா என யாரும் பெரிதாக விமரிசித்தது இல்லை. ஒரு சிறு குடிசையில் ஒரு மண்டையோடு, இரு எலும்புகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். ஜோதிடம் கேட்க வந்தவர்கள் கொண்டுவந்ததை உண்டு வாழ்ந்தார் என நினைக்கிறேன். எப்போதும் பீடி புகைத்துக்கொண்டிருப்பார் என்பார்கள். அவர் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தந்ததாகத் தெரியவில்லை; அவர் மீது யாரும் குறை கூறியதாகவும் தெரியவில்லை.

ஒருநாள் அவரிடம் ஜோதிடம் கேட்க ஒரு பெண் வந்திருக்கிறாள். அவளுக்கு அப்பா, அம்மா உண்டு. ப்ளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எப்படியும் டாக்டர் ஆக வேண்டும் என ஹோமியோபதி படித்து, அதில் பட்டமும் வாங்கிவிட்டாள். ஹோமியோபதி படித்தவர்களுக்கு உத்தியோகம் எனக் கிடைக்காது. சுயமாகத்தான் தொழில் புரியவேண்டும். அப்படித்தான் செய்துகொண்டிருந்தாள் என நினைக்கிறேன். யாரோ சொல்லி இந்தப் பள்ளிப்பேடை ஜோதிடரிடம் வந்தாள். ஜோதிடர், பரிதாபகரமான தோற்றம்தான் கொண்டிருப்பார். வயது 50-ல் இருந்து 60-க்குள் இருக்கும். தாடியும் மீசையுமாக ஒரு பிச்சைக்காரன்போலத்தான் இருப்பார். பீடி சாமியார் என்றும் பெயர். ஹோமியோபதிப் பெண்ணுக்கு 25 வயது இருக்கும். பார்க்க லட்சணமாக, குடும்பப்பாங்காக இருப்பாள். அவள் ஜோதிடருக்கு சிஷ்யையாகி அவருடனேயே தங்கிவிட்டாள்.

ஊரில் ஒரே பரபரப்பு. பீடி சாமியாருக்கு ஏகக் கிராக்கி. வரிசையில் நின்று ஜோதிடம் கேட்டுப் போனார்கள். உண்மையில் அவர்கள் வந்த காரணம், அந்தப் பெண்ணைப் பார்க்கத்தான். பத்திரிகையில் தினம் தினம் செய்தி. யார் என்ன சொன்னார்கள் எனத் தெரியவில்லை. போலீஸ் வந்தது. அவர் மேல் ஏதும் சொல்லக்கூடிய குற்றம் இல்லை. அப்புறம் தொலைக்காட்சி. 15 நாட்களுக்கு அந்த இடத்தில் ஏகப் பரபரப்பு. தொலைக்காட்சி மூலம்தான் எனக்கு இதெல்லாம் தெரிந்தது.

சாமியார் நல்ல ஜோதிடராக இல்லாமல் போகலாம். அந்தப் பெண் மனமுவந்து அவருடன் வாழ வந்திருக்கிறாள். வயது வந்தவள். ஆனால், பத்திரிகைக்காரர்கள் தொந்தரவு, தொலைக்காட்சிக்காரர்கள் துரத்தல் இதெல்லாம் பொறுக்க முடியாமல், அவர்கள் இருவரும் ஒருநாள் விஷம் அருந்தி இறந்துவிட்டார்கள். அந்த இருவரின் தன்மானத்துக்கு அவர்கள் கடுமையான சாட்சியத்தை நாடியிருக்கிறார்கள்.

எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது, 'இல்லை’ எனச் சொல்ல முடியாது. பலர் சொல்லிக் குடும்பப் பிரச்னைகளுக்காக நாடி ஜோதிடத்தை நாடிப் போயிருக்கிறேன். சில தகவல்களைக் கேட்டு வியந்திருக்கிறேன். எங்கள் வீட்டுப் பக்கம் வரும் குடுகுடுப்பைக்காரர், பூம் பூம் மாட்டுக்காரர், சாய்பாபா பாட்டு பாடிக்கொண்டு வருகிற தம்பதிகள், இவர்களுக்குத் தவறாமல் ஏதாவது பணம் தருவேன். என் கவலை, இவர்கள் எதை நம்பிக்கொண்டு வாழ்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? இன்று முறையான படிப்பு படித்தவர்களுக்கே உத்தியோக நிலைமை பெரிய நம்பிக்கை தருவதாக இல்லை. பூம்பூம் மாட்டுக்காரர்கள் அவர்களுக்கு உணவு தேடுவதோடு மாட்டுக்கும் சேர்த்து உணவு தேட வேண்டும்.

நான் பள்ளிப்பேட்டைக்குச் சென்றேன். ஜோதிடரைப் பற்றி விசாரித்தேன். அந்தக் குடிசை பிய்த்துப் போடப்பட்டிருந்தது. அந்தக் குடிசையின் தரை மட்டும் சிமென்ட் போடப்பட்டது அப்படியே இருந்தது. அந்த மனிதன் எவ்வளவு நாள் அந்தச் சின்னஞ்சிறு குடிசையில் காலம் தள்ளினானோ? அவருக்கு மந்திரவாதி என்றும் அடையாளம் இருந்திருக்கிறது. கடைசி நாட்களில் துணைவி வேறு. நான் அந்த மனிதரைப் பார்த்தது இல்லை. பத்திரிகையில் வந்த புகைப்படங்கள்தான். அந்தப் பெண் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்தாள். 'என் முழு மனதோடுதான் அவருக்குத் தொண்டு செய்ய வந்திருக்கிறேன்’ என்றாள். அவளுக்கு என்ன வாழ்க்கை கிடைத்திருக்கும்? ஒழுங்காக சமையல் செய்யக்கூடப் பாத்திரங்கள் இருக்காது. அப்படிச் சமைக்க வேண்டுமானால், மூன்று செங்கற்களும் சுள்ளிக்குச்சிகளும்தான். ஆனால், அந்தப் பெண் அந்தச் சூழ்நிலையில் ஒரு பிச்சைக்காரன் போன்ற தோற்றம் உடைய மனிதனோடு வாழ வந்திருக்கிறாள்.

நான், 'அந்தப் பெண் எங்கிருந்து வந்தாள்?’ என விசாரித்தேன். பீடி ஜோதிடரைத் தெரிந்தஅளவுக்கு அவளைப் பற்றி தெரியவில்லை. அவள் அங்கு வந்ததே உயிரைவிடுவதற்குத்தானோ என நினைக்கும்படி இருந்தது, எனக்கு மிகவும் துக்கமாக இருந்தது. ஏதோ ஒருவிதத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் அவள் ஹோமியோபதி படித்திருப்பாள். எனக்கு யாரை நோவது எனத் தெரியவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியில், 'நானாகத்தான் இவரிடம் வந்து

சேர்ந்தேன்’ என்றும் சொன்னாள். வந்து சேர்ந்தேன்! எனக்கு இதுவும் வேறு எதையோ குறிக்கிறதோ எனத் தோன்றியது. அவள் மேலும் கூறினாள். 'இங்குதான் என் ஆன்மா சாந்தமாக இருக்கிறது.’ தலைவர்கள் யாராவது இறந்துபோனால், தவறாமல் இறந்தவருடைடைய ஆன்மா சாந்தியடைவதாக என முடிப்பார்கள். இந்த ஆன்மா என்றால் என்ன?

ஆன்மாவைப் பார்த்தவர்கள் யார்? ஒருமுறை ஓர் ஆன்மிக சபை நூலில் ஒரு மனிதனை விட்டு ஆவி பிரிவதுபோல ஒரு படம் இருந்தது. அதில் அந்த ஆவியை எளிதில் வர்ணிக்க முடியாது. ஆனால், அதற்கு மனித முகம் இருந்தது. ஆவிதான் ஆன்மாவா? அந்தப் படம் தலையில் இருந்து இடுப்பு வரை மனிதனாக இருந்து, பின்னர் உருக்குலைந்து ஒரு திரவச் சொட்டுபோல இருந்தது. எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் கைப்பிடியில் இரண்டு மனிதர்கள் உயிரை விட்டார்கள். ஒருவர் என் கடைசி மகனின் மாமனார். ஒரே மாதத்தில் புற்றுநோயால் இறந்தார். நான் அவரைத் தூக்கிப் பிடித்தேன். கிடுகிடுவென உடல்சூடு குறைந்து, அவர் உயிரற்றவர் ஆனார். இரண்டு மாதங்கள் கழித்து, 'ஐயோ, யாராவது வாருங்களேன்’ என பக்கத்து ஃப்ளாட்டில் இருந்து கூக்குரல். அவருக்கு என் வயது இருக்கும். தூக்கிப் பிடித்தேன். சூடு விரைவாகக் குறைந்து, கடைசியில் உயிரற்றவரானார். என்னால் போகிற உயிரை நிறுத்த முடியவில்லை. இருவரும் என் கைப்பிடியில். இதே மாதிரி என் சகோதரி என் கையில் இறந்தாள். தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் போகலாம். ஆனால், உயிர் போய்விட்டது எனத் தெரிந்த பிறகு என்ன செய்வது? உயிர் போவது தெரிகிறது. ஆனால், எது எப்படி உடலைவிட்டு விலகுகிறது எனத் தெரியவில்லை.

சமீபத்தில் 100 வயதில் காலமான வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பற்றி ஒரு நண்பர் சொன்னார். கிருஷ்ண ஐயருடைய துணைவியார்

40 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இறந்தபோது, கிருஷ்ண ஐயர் நிலைகுலைந்து போய்விட்டார். திருவனந்தபுரத்தில் பலர் மத்தியில் ஒரு பேச்சு நிலவியது. அன்றில் இருந்து அந்த ஊரிலும் புது டெல்லியிலும் கிருஷ்ண ஐயர் தீர்ப்புகளை எழுதும்போது, அவருடைய மனைவியின் ஆவியும் சேர்ந்து எழுதும். கிருஷ்ண ஐயர் இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு ஆட்படக்கூடியவர் அல்ல. அவர் நம்பினாரோ இல்லையோ, அவருடைய சகாக்கள் அன்று இதை நம்பினார்கள். கிருஷ்ண ஐயர், பாலக்காட்டுப் பிராமணர். ஆனால், தீவிர இடதுசாரிப் போக்கு. நான் அவரை ஒருமுறை காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். அங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் இருவரும் பேசினோம். தலைப்பு, 'ஊரை முடங்கவைக்கும் 'பந்த்’ சமூகத் தேவையா?’ நான் 'பந்த் சமூகத் தேவை அல்ல, அதைத் தடை செய்தால்கூடத் தவறு இல்லை’ என்றேன். கிருஷ்ண ஐயர் ஏற்றுக்கொண்டார். ஆனால், வேலைநிறுத்தத்தைத் தடைசெய்யக் கூடாது. அது தொழிலாளிகளின் உரிமை. அவ்வளவு தெளிவுள்ள மனிதரின் வாழ்க்கையில் இப்படி ஒரு மர்மம்!

தென் இந்தியாவில் உள்ள பிராமணர்கள், பாலக்காட்டுப் பிராமணர்கள் உள்பட, வட இந்திய ஆசாரத்தைப் பின்பற்றுபவர்கள் அல்ல. இங்கு மடி, ஆசாரம், இறந்தோருக்குப் பிண்டம் வைப்பது போன்ற கிரியைகள் கடுமையானவை. பிராமணர்கள் ஆண் அல்லது பெண்ணாக இருந்தால்கூட, முதல் பத்து நாட்கள் ஆவியாக வீட்டையே சுற்றிவருவார்கள் (என்பார்கள்). 11-வது நாள் கிரியைகள் ஆவியைத் தயார்படுத்துவது. 12-ம் நாள் அந்த ஆவி பித்ரு உலகம் சென்றடைந்துவிடும். அங்கே மூன்று தலைமுறைகளுக்குத்தான் இடம் உண்டு. இப்போது கிருஷ்ண ஐயர், அவருடைய தந்தையார், அப்புறம் அவருடைய தந்தை- அதாவது கிருஷ்ண ஐயருடைய தாத்தா. பெண்கள் தரப்பில், கிருஷ்ண ஐயருடைய மனைவி, தாய், மூன்றாவதாகத் தந்தை வழிப் பாட்டி. ஆதலால் கிருஷ்ண ஐயரின் மனைவி பித்ரு உலகம் சென்றிருக்க வேண்டும். இதுதான் பல நூற்றாண்டுகளாக நம்பப்படுவது. ஆனால், பித்ரு உலகத்தில் இருந்து அவள் ஆவி தொடர்ந்து கிருஷ்ண ஐயர் தீர்ப்பு எழுதும்போது அவர் மீது ஆதிக்கம் செலுத்தியது. நிஜம் எது எனத் தெரிய ஒரே வழி, உயிரைவிடுவதுதான். அந்தப் பெண் இதுபோன்ற விஷயங்கள் பற்றிய உண்மையை அறியத்தான், தற்கொலை செய்துகொண்டாளோ?

அப்படிப் பார்த்தால், அந்தப் பீடி சாமியார் சுமார் 10, 15 ஆண்டுகள் அங்கு வாழ்ந்திருக் கிறார். அவர் வாழ்க்கை ஒரு வகையில் சீராக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு பெண் வந்து அவர் தன்னையே அழித்துக்கொள்ளும்படி செய்துவிட்டாள்.

உலகத்தில் அபவாதம் எதிர்கொள்ளாத மனிதனே இருக்க முடியாது. பள்ளியில் ஆசிரியரிடம் அடிபடுகிறார்கள். மாணவர்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறார்கள். பள்ளிச் சுவரில் ஏதேதோ எழுதுகிறார்கள். பெரியவர்கள் ஆகிவிட்டால், வேறுவிதமான அபவாதங்கள். மனிதர்கள் தப்ப முடியாதது இரண்டு - சாவு, வரி. இப்போது மூன்றாவதாக இன்னொன்றைச் சேர்த்துகொள்ள வேண்டும்... அபவாதம்.

நான் ஓயாமல் விசாரித்தவண்ணம் இருந்தேன். பெண் வட சென்னையில் இருந்து வந்தவள். வட சென்னையில் லட்சக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். அப்புறம் ஹோமியோபதி. இந்தத் தகவல்களைவைத்து நான் கண்டவர்களை எல்லாம் அந்தப் பெண் பற்றி விசாரித்தேன். ஒரு விவரம் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா.

நான் மீண்டும் மீண்டும் விசாரித்ததில் ஒரு சிறு தடயம். பீடி சாமியார், திவ்யா இருவரும் தெலுங்கு மொழி சார்ந்தவர்கள்.

நான் 40 ஆண்டுகள் முன்பு ஒரு திரைப்பட ஸ்டுடியோவில் பணிபுரிந்தேன். அப்போது இந்திப் படங்கள் எடுக்கும்போது வட இந்திய முகங்கள் வேண்டும் என, ஏழெட்டு நபர்களைத் தேர்ந்துவைத்திருந்தது. அவர்கள் கும்பல் வேஷத்துக்கு வந்தாலும் வேறு தொழில் புரிகிறவர்கள். சிலர் வசதி படைத்தவர்கள். கும்பல் காட்சிகளுக்கு ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வருவது, அவர்களுக்கு ஓர் அலாதியான பொழுதுபோக்கு. அவர்களில் பலரை எனக்கு நன்றாகவே தெரியும். தேவராஜ முதலித் தெருவுக்குப் போனேன். அன்றே அந்தத் தெருவில் கோடிக்கணக்கில் பணம் புரளும் என்பார்கள்.

'சார்... சார்...’ என யாரோ கூப்பிட்டார்கள். திரும்பினேன். ஈஷ்வர்லால்!

நானும் என் நண்பர்களும் ஈஷ்வர்லாலைக் கிண்டல் செய்வோம். அவனுக்கு எப்போதும் 'ஜாஸ¨ஸ்’ வேஷம்தான் கிடைக்கும்.

'ஈஷ்வர்லால், நீ நிஜமாகவே யாருக்கோ உளவு பார்க்கிறாய்’ எனக் கேலிசெய்வோம்.

எனக்குப் பெரும் உற்சாகம்.

'ஈஷ்வர்லால்!' என்றேன்.

'இங்கே எங்கே வந்தீங்க?'

'ஒரு வேலையா வந்தேன். நீகூட உதவலாம்.'

'வாங்க, முதல்ல டிபன் சாப்பிடுவோம்.'

'நீ என்ன பண்றே?'

'நம்ப கடை இருக்கு.'

'என்ன கடை?'

'இங்கே வேறென்ன கடை? எல்லாம் கண்ணாடிக் கடைதான்.'

'பெரிய கடையா?'

'இங்கே பெரிய கடை சின்னக் கடைனு கிடையாது. குடோன் வேற இடத்திலே இருக்கும். முதல்ல டிபன் சாப்டுங்க சார்.'

ஈஷ்வர்லால் ஒரு கடை முன் நின்றான். 'சார், கடையை வெளியில பார்த்து ஏதோ நினைச்சுக்காதீங்க. இங்கே கிடைக்கிற மாதிரி கா(ன்)டியா எங்கேயும் கிடைக்காது.'

'அது என்னது?'

'சாப்ட்டுப் பாருங்க.'

அது தெருவோரக் கட்டடம். கட்டடத்தையொட்டிப் படிக்கட்டு. ஐந்தாறு படிகள் ஏறினால், ஒரு சின்ன அறை. அந்த அறைக்குப் பக்கத்தில் சமையலறை இருந்ததை உணர முடிந்தது.நான்கு சின்ன மேஜைகள். அந்த மேஜைகளைச் சுற்றிக் குட்டிக் குட்டி நாற்காலிகள்.

'ஈஷ்வர்லால், இது நல்ல இடம்தானா? நான் இப்பத்தான் டைஃபாய்டு வந்து எழுந்தவன்.'

'ஒண்ணும் பண்ணாது சார். இது மாதிரி எங்கேயுமே கிடைக்காது.'

கடை முதலாளி கொண்டுவந்து வைத்தது ரிப்பன் பகோடா மாதிரி இருந்தது; ஆனால் வாயில் கரைந்தது.

'நிஜமா ரொம்ப நன்னாருக்கு ஈஷ்வர்லால்.'

டீயும் சாப்பிட்டு முடித்தோம்.

'கடைக்குப் போலாமா சார்?'

'எனக்கு ஒரு வேலை இருக்கு ஈஷ்வர்லால்.'

'என்ன வேலை?'

'எங்க வீட்டுப் பக்கம் ஒரு பொண்ணு விஷம் குடிச்சுச் செத்துப்போச்சு.'

'எக்ஸாம்ல ஃபெயிலா?'

'இல்லேப்பா. அது டாக்டர்.'

'திவ்யாவா?''

''ஒ... ஒனக்குத் தெரியுமா?'

'மின்ட் ஸ்ட்ரீட். டாக்டர் திவ்யா.'

'என்ன?'

'மின்ட் ஸ்ட்ரீட்.'

'பக்கத்துத் தெருவில்லே?'

'ஆமாம். ரொம்ப நல்ல டாக்டர். பணம் நாமளா கொடுத்தாத்தான்.'

'அது எப்படிப்பா?'

'அது தெரியாது சார். மருந்துகூட அதே கொடுத்துடும். இவ்வளவு சின்ன வயசுலே இவ்வளவு தர்மச் சிந்தனை.'

'என்னை அங்கே கூட்டிண்டு போறீயா?'

'அந்த வீட்டு முன்னாலே விட்டுடறேன். மூணாவது மாடி.'

'காமி.'

'சார், அவுங்களைப் பாக்கப்போறீங்களா?'

'எனக்கு ரொம்பத் துக்கமா இருக்கு

ஈஷ்வர்லால். என்னாலே நிம்மதியா இருக்க முடியலே.'

'அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க சார்? அவுங்களே ரொம்பத் துக்கத்திலே இருக்காங்க சார். வேணாம் சார்.'

'பணக்காரங்களா?'

'ரொம்ப சாதாரணம் சார். இல்லேன்னா மூணாவது மாடியிலே குடியிருப்பாங்களா?'

''கூடப் பொறந்தவங்க இருக்காங்களா?'

'எல்லாரும் இருக்காங்க சார். அவுங்களுக்கே தெரியலே, எப்படி இந்தப் பொண்ணு ஒரு பிக்காரியோட ஓடிப்போச்சுன்னு.'

'அவன் இங்கே வந்தானா?'

'அப்படித்தான் சொல்லிக்கிறாங்க. ஏதோ மேஜிக் பண்ணிருக்கான் போலயிருக்கு. அடுத்த நாளே பொண்ணைக் காணோம்.'

வீட்டைக் காண்பிக்கிறேன் எனச் சொன்னவன், 'சார், நீங்களே போங்க. நம்பர் 300'' என்றான்.

நான் அந்த வீட்டை அடைந்தேன். மாடிப்படிகள் மிகவும் குறுகலோடு உயரமானவை. ஒருவாறு மூன்றாவது மாடிக்குப் போய்விட்டேன். அந்த ஜோதிடன் அல்லது மந்திரவாதி எப்படி இந்தப் படிகளை ஏறி அந்தப் பெண்ணை மயக்கினான்?

மாடியில் வெராண்டா. இரு வீடுகள். முதல் கதவின் மீது 'டாக்டர் திவ்யலோசனி’ என இருந்தது. நான் வெராண்டாவில் இருந்து தெருவைக் குனிந்து பார்த்தேன். தலை சுற்றியது. இந்த வீட்டை கொத்தனார்கள் எப்படிக் கட்டினார்களோ?

ஒரு கதவு பூட்டியிருந்தது. திவ்யா வீட்டுக் கதவு மூடியிருந்தது.

நான் காத்திருந்தேன். ஒரு சிறுமி மாடிப்படி ஏறி திவ்யா வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவு திறந்தது. ஓர் அம்மாள் சிறுமியை உள்ளே போகவிட்டாள். என்னைப் பார்த்து, 'யார் வேணும்?'' எனக் கேட்டாள்.

நான் தயங்கினேன். அவள் புரிந்துகொண்டாள்.

'போறும் ஐயா, போறும். திவ்யா விஷம் குடிச்சு சாகலை.'

'அப்படியா!'

'அவளுக்கு இதயத்திலே ஒரு துவாரம் இருந்தது. எப்ப வேணா சாவானு தெரியும். ஆனா ஒரு பிச்சைக்காரன்கூட ஓடிப் போக வேண்டாம்.'

'அந்த ஆள் மந்திரவாதிங்கிறாங்களே?'

'இருக்கலாம். நான், அவ அப்பா, எல்லாருமா போய் கேட்டோம். என் புருஷன் அதான் அவ அப்பா, அந்தப் பிச்சைக்காரனை அடிக்கக்கூட அடிச்சுட்டார். நாங்கதான் தடுத்தோம். அவன் செத்துவெச்சான்னா? இப்ப பொண்ணே போய்ட்டா. இனிமே என்ன? அந்த இடத்திலே ஆவி, பிசாசு ஏதாவது இருந்ததோ என்னவோ? அவனே ஒரு பிசாசு மாதிரி இருந்தான்.'

இவ்வளவு சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்று தடால் எனக் கதவை மூடினாள். தாழிடும் சத்தம் கேட்டது.

நான் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தேன். பிறகு, படி இறங்க ஆரம்பித்தேன். நானே அறியாமல் அழுதேன். என் துக்கத்தின் காரணம், அந்தப் பெண்ணைவிட உயிரோடு இருந்தபோதே, ஓர் ஆவிபோல் இருந்த அந்த ஜோதிடன்தான் எனத் தோன்றிற்று!      

எனது படைப்பில் பெண்கள்! - அசோகமித்திரன்

Posted Date : 18:46 (04/07/2014)Last updated : 18:47 (04/07/2014)

(அவள் விகடன்: 21.01.2000)

 ஆணென்ன பெண்ணென்ன...

பெண்ணின் ஆழ்மன உணர்வுகளாகட்டும், அன்றாட நடைமுறையில் அவளுடைய சின்னச் சின்ன இயல்பான சிந்தனைகளாகட்டும் - போகிறபோக்கில் இயல்பாகச் சொல்கிற தொனி அசோகமித்திரனுடையது. பெண்ணியல் நோக்கில் எழுதுகின்ற பெண் எழுத்தாளர்களுக்குக்கூட, எப்போதாவது எழுத்தில் பெண்ணின் உணர்வுகளைச் சொல்வதில் ஒரு நாளும் இந்தத் தர்மசங்கடம் நிகழ்ந்ததில்லை!

இப்படி ஒரு பெண்முகம் உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?

எந்தக் கதையும் யோசிச்சு, இந்த முடிவுக்காக - இந்தக் கருத்துக்காகன்னு நான் எழுதறது கிடையாது. நம்மைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். நிறைய சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கு. பார்க்கப் போனா எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான சூழ்நிலைகள் கிடைக்குது. நாம அதை எடுத்து விரிவுபடுத்திக் கையாளறோம். எனக்கு பெண்களைப் பற்றி இந்தப் பார்வை, ஆணைப் பற்றி இந்தப் பார்வைன்னு தனியாக ஒண்ணும் கிடையாது. கற்பனை சக்திக்கு ஆண் - பெண் பேதம் உண்டா என்ன? நாம, நம்ம கற்பனையை எதுல செலுத்தறோம்கிறது இருக்கு. நம்ம வீட்டுக்கு அன்றாடம் வந்துட்டுப் போறவங்க - கறிகாய்காரி, வேலை செய்யவர்றவங்க... பார்க்கப் போனா இவங்ககிட்டதான் வாழ்க்கைக்கான நிறையப் பரிமாணங்கள் இருக்கு.

அவங்களோட வாழ்க்கை, உங்களுக்கு எப்படிப் பிடிபடுது?

நாம பார்க்கிற எல்லோர்கிட்டயும் வாழ்க்கை இருக்கு. நாம கண்ணைத் திறந்து வெச்சுட்டுப் பார்த்தா தானா வெளிச்சம் ஆகும். நான் எல்லாத்தையும் தெரிஞ்சுட்டு எழுதறது கிடையாது. எழுதற போக்கிலதான் தெளிவு வருது. நிறையப் பேருக்குச் சின்ன வயசிலேயே வாழ்க்கை மரத்துப் போயிடுது. புதுசாகச் சிந்திக்கிறது இல்லை. எல்லா விஷயத்தைப் பற்றியும், பழகின பாதையிலேயே பார்க்கப் பழகிடறோம். எனக்கு எந்த நேரமும், மனுஷங்க எல்லாம் புதுசாகவே படறாங்க. யாரையும், இவங்க இப்படித்தான்னு நான் ஃபிக்ஸ் பண்றதில்லை. சின்னவங்க - பெரியவங்க, வேலை தேடறவங்க - தேடாதவங்க, ஒல்லியானவங்க - குண்டானவங்க இப்படி எல்லோருக்கும் ஏதோ விஷயம் இருக்கு. தடிமனா இருக்கிறதை ஒரு பெண் எப்படி உணர்றாங்கிறதைப் பத்தி நான் ஒரு தடவை கதை எழுதி இருக்கேன். நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் இருந்துகொண்டு இருக்கு.

பொதுவாகப் பெண்ணினுடைய உணர்வுகளைச் சொல்ற எழுத்தில், சமயத்தில் ஆண் பாத்திரங்கள் மேல் கறுப்புச் சாயம் பூசறது நடக்கும். உங்க எழுத்தில் அது நிகழாதது எப்படி?

எல்லா விஷயத்திலும் ஒரு பாலன்ஸ் வேணும். ஒரு மனுஷன், பெண் வர்க்கத்துக்கிட்ட நியாயமில்லாம நடந்துகிட்டா அவன் - அவன் வர்க்கத்துக்கிட்டயும் நியாயமில்லாமதான் இருப்பான். இது எதிர்மறையாகவும் பொருத்தும். அடிப்படையில் எந்த மனிதப் பிறவியும் பாவி இல்லை.

இந்த நிதானம் எப்படி வருது?

வாழ்க்கையில் நாம் தொடர்ந்து வளர்றோம்னு சொல்றாங்க. தேடல்னு சொல்றாங்க. நான் அப்படி நினைக்கலை. எல்லோர்க்கும் வாழ்க்கை பத்தின புதிர் எதோ ஒரு காலகட்டத்துல புரிஞ்சுடுதுன்னு நினைக்கறேன். புரிஞ்சதுதான் நம்மளைச் செலுத்தறது. ஆண் வேறு, பெண் வேறு இல்லை. அடிப்படையில நாம எல்லோரும் மனுஷங்கதான்கிறது பதிஞ்சுபோச்சு. பேதம் பார்க்க முடியலை. பெண்ணையும் தப்பாக்க முடியறதில்லை. ரெண்டு பேருக்கும் கஷ்டங்கள் இருக்கு; தாபங்கள் இருக்கு.

கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேலாக எழுதறீங்க. திருமணமாகாமல், ஆகி, தந்தையாகி, தாத்தாவாகி என வெவ்வேறு காலகட்டத்துல எழுதி இருக்கீங்க. யோசித்துப் பார்த்தா, பழைய கதைகளை, குறிப்பாக, பெண் தொடர்பான கதைகளை இப்ப எழுதினா, வேறு சிந்தனையில் எழுதி இருப்பீங்கன்னு நினைக்கிறீங்களா?

பார்க்கப் போனா, 'தண்ணீர்’ நாவலை எழுதறபோது எனக்கு வயசு 38. அந்த மாதிரி கதை எழுதறதுக்கு அது சின்ன வயசுன்னுகூடச் சொல்லலாம். எப்பவும் கதையோட மையம் மாறாதுன்னு நினைக்கறேன். கொஞ்சம் எக்ஸ்ட்ராவா விளக்கங்கள் வேணும்னா கொடுக்கலாம். சின்னதா தட்டி நாகாசு வேலை பண்ணலாம்.

பெண்களைப் புரிஞ்சுண்டு எழுதுறது பத்தி, பெண் வாசகிகள் சொல்லி இருக்காங்களா?

இல்லை... அப்படி யாரும் சொல்லாததுதான் சரின்னு நினைக்கிறேன். என் எழுத்து வலிஞ்சு இல்லை. எதைப் பத்தியும் யாரும் என்கிட்ட வலிஞ்சு பேசாததுதான் சரியா படறது. நான் எப்பவுமே சுயமுக்கியத்துக்காக முயற்சி செய்தது கிடையாது. அதனால எனக்கு ஒரு கஷ்டமும் கிடையாது. என் எழுத்து யாரையும் கெடுதல் செய்யாம இருக்கணும். எனக்குக் கிடைக்கிற அனுபவத்தை நேர்மையாக நடைமுறை இயல்போடு சித்திரிக்கிறேன். இப்படி செய்யவே, எழுதவே இன்னும் ஏராளமாக இருக்கு!



அடுத்த முறை | அசோகமித்திரன் | ஓவியங்கள் : மருது
"ஏ
ன்டா, நாளைக்கு எத்தனை மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பணும்?'

'ராத்திரி 10 மணிக்குக் கிளம்பினா சரியா இருக்கும்மா.'

'டாக்ஸிக்குச் சொல்லிவெச்சாச்சா?'

''ரமா வீட்டுல சொல்லிவெச்சிருக்கேன். காரை 8 மணிக்கே அனுப்பிடுவா.'

'அவ வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?'

'உனக்கு அவ வீட்டுல யாரைத் தெரியும்?'

'ஏன் தெரியாது? ஏன்டா, சம்பந்திகள் இல்லையா?

ஸ்ரீகுமார் பேசவில்லை.

'ஏன்டா, நான் ரமாவைப் பாக்க வேணாமா? என் பேரக் குழந்தையைப் பாக்க வேணாமா?' - அம்மா கெஞ்சலாகக் கேட்டாள்.

'இப்போ நான் மட்டும்தாம்மா வந்திருக் கேன்.'

'நீ இதுக்கு முன்னால ஒவ்வொரு தடவையும் அவளையும் அழைச்சுட்டுதான் வந்தாயாமே? இங்கே அழைச்சிட்டு வரவே இல்லை.'

'நான் இதுக்கு முன்னால ஒரே ஒரு தடவைதான் வந்திருக்கேம்மா.'

'அப்போ அழைச்சிட்டு வந்திருக்கக் கூடாதா?'

'அடுத்த முறை அழைச்சுட்டு வரேன்.'

'அடுத்த முறையா?'

அம்மாவுக்கு நம்பிக்கை இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவன் அம்மாவைப் பார்க்க வந்தபோது, அம்மா மிகவும் பருத்து இருந்தாள். முகம் நன்றாகவே இல்லை. இந்த முறை இன்னும் மோசம். எழுந்து உட்கார முடியாதபடி ஊதிப்போயிருந்தாள். அடுத்த முறை என்று ஒன்று இருக்க வேண்டும்.

அம்மா இப்போது சம்பந்தி உறவு கொண்டாடுகிறாள். மருமகளையும் பேரனை யும் பார்க்க ஆசைப்படுகிறாள். ஆனால், அவனும் ரமாவும் மாலையும் கழுத்துமாக வடபழனி கோயிலில் இருந்து வந்தபோது என்னவெல்லாம் நடந்தன? அம்மா எப்படி எல்லாம் கத்தினாள்? அவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. யார் இந்தப் பெண்? தன்னுடைய மகன் ஏன் மாலையிட்டுக்கொண்டு இருக்கிறான்? அவளும் மாலையிட்டுக்கொண்டு இருக்கிறாளே? இருவரும் ஒரே மாதிரி மாலை... சட்டென்று அவளுக்குப் புலப்பட்டது. அவ்வளவுதான். அவள் போட்ட கூச்சலில் தெருவே கூடிவிட்டது. அவளுக்குத் தெரியாமல் அவளுடைய உதவாக்கரை மகன் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான். அந்தப் பெண் அவன் சம்பளத்துக்கு வேலை செய்யும் கடை முதலாளியின் பெண். வேறு சாதி. ஆனால், அந்தப் பெண்ணை சாதிவைத்துத் தரம் பிரிக்க முடியுமா? அவளுக்கு மட்டும் அப்பா, அம்மா இல்லையா என்ன? குடும்பம் இல்லையா? அவளுக்குப் பணம், படிப்பு,  பெரிய பதவிகளில் இருக்கும் உறவினர்கள் உண்டு. அவளே இன்னும் ஏழெட்டு மாதங்களில் அமெரிக்கா செல்லப்போகிறவள்... இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்று பி.ஏ.கூடத் தேறாதவனைக் கல்யாணம் செய்துகொண்டவளை, அப்படிப் பட்ட ரமாவைக் கண்ணீரும் கம்பலையுமாக்கினாள் அம்மா. அன்று போனவள்தான் ரமா. திரும்ப அந்த வீட்டுப் பக்கம் வரவே இல்லை.

ரமா வீட்டிலும் வருத்தம்தான். ரமாவின் அப்பா சொன்னார், ''என்கிட்ட சொல்லி இருந்தா, நான் எல்லாருடைய சம்மதத்தையும் கேட்டுப் பத்திரிகைவெச்சுக் கல்யாணம் செய்திருப்பேனே, தம்பி. ஏன் இந்தத் திருட்டுக் கல்யாணம்? உங்க அப்பா, அம்மாக்குச் சொன்னியா?''

ஸ்ரீகுமார் ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பி வந்துவிட்டான். ஆனால், கல்யாணம் நடந்தது நடந்ததுதான்.

''நீ வேலைக்குப் போக வேணாம். மறுபடியும் உன் கடைக்காரன் பொண்ணு மூஞ்சி யில முழிக்க வேணாம்'' என்று அம்மா சொன்னாள். அந்தக் கடை வெற்றிலை பாக்கு விற்கும் கடை அல்ல; பளபளவென்று இருக்கும் சூப்பர் மார்க்கெட். அவன் பதில் சொல்லவில்லை. அம்மாவே மேலும் சொன்னாள், ''நான் உனக்கு நல்ல பொண்ணாப் பாக்கறேன்.'' அன்று ஸ்ரீகுமார் அவனுடைய அம்மாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான்.

''அம்மா, நீ அப்பாவைச் சித்ரவதை பண்ற தோடு நிறுத்திக்கோ.''

அன்று அப்படி அவன் சொன்னபோது, அப்பாவும் வீட்டில்தான் இருந்தார். அது மட்டுமல்ல; அம்மாவின் அப்பா, அம்மாவும் இருந்தார்கள். ஸ்ரீகுமார் பதில் சொன்னவுடன் வீடு நிசப்தம்ஆயிற்று. அம்மாவை அப்பா கல்யாணம் செய்துகொண்ட நாளில் இருந்து  தன்னுடைய மாமனார் வீட்டிலேயே அப்பா தங்கிவிட்டார். அப்பாவின் அம்மா எங்கேயோ தனியாக ஒரு வீட்டில் இருந்தாள். ''ரெண்டு நாள், நாலு நாள்ல ஒரு தடவை வந்து பாத்துட்டாவது போயிட்டிரு. நீ சந்தோஷமா இருந்தாப் போதுண்டா'' என்று அப்பாவிடம் சொல்லியிருந்தாள் பாட்டி.

ஸ்ரீகுமார் பிறந்த பிறகும் அம்மாவுக்குப் பயந்துகொண்டு மாமியார் வீட்டோடே அப்பா இருந்தார். மாதத்தில் 20 நாட்கள் டூர் போகும் பிரிவுக்கு அவரே அலுவலகத்தில் எழுதிக்கொடுத்தார். அவருடைய அம்மா செத்தபோது, அவர் நாகர்கோவிலில் இருந்தார். அந்த நாளில் ஐஸ் பெட்டி வசதி எல்லாம் கிடையாது. புரோகிதர் முகத்தை மூடித்தான் பாடை கட்டச் சொன்னார். அப்பாவுக்குத் தன் மனைவியை ஒரு வார்த்தை, ஒரு கேள்வி கேட்கத் தெரியவில்லை. ஒன்றுக்கும் உதவாதவனாக வளர்ந்த மகன் அதைச் செய்துவிட்டான்.

அன்று முதல் வீடே மாறிப்போயிற்று. ரமா சொல்லிச் சொல்லி ஸ்ரீகுமார் மீண்டும் பி.ஏ. பரீட்சைக்குப் பணம் கட்டினான். இந்த முறை உறுதியாகப் படித்தான். அதற்குள் ரமா அமெரிக்கா சென்றுவிட்டாள். தினமும் போன் செய்தாள். அவன் மேலும் மேலும் படிக்க யோசனை சொல்லியவண்ணம் இருந்தாள். வேறு சில பரீட்சைகளும் எழுதச் சொன்னாள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கச் சொன்னாள். அமெரிக்காவில் கடைவைத்து நடத்திக்கொண்டு இருந்த அவளுடைய சித்தப்பாவை உத்தியோகம் தரச் செய்து, கல்யாணம் நடந்த இரண்டாண்டுக்குள் ஸ்ரீகுமாரை அமெரிக்கா அழைத்துக்கொண்டுவிட்டாள். புராணக் காலத்தில்தான் இத்தகைய பெண்கள்பற்றிக் கதைகள் இருக்கின்றன. ஆனால், இந்த 20-ம் நூற்றாண்டிலும் உண்டு என்று ரமா நிரூபித்துவிட்டாள்.

ஸ்ரீகுமார் அமெரிக்கா போகப்போகிறான் என்று அப்பாவுக்குத் தெரியும். ஆனால், ஊருக்குப் போகும் நாள் அன்றுதான் அவன் அம்மாவிடம் சொன்னான். அவளுக்கும் ஏதோ நடந்துகொண்டு இருக்கிறது என்று தெரியும். ஆனால், மகன் வீட்டைவிட்டு, நாட்டைவிட்டே போகப்போகிறான் என்று தெரிந்தவுடன் அதிர்ந்துவிட்டாள்.

இப்போது எவ்வளவோ வருஷங்கள் ஆகி விட்டன. அப்பா, அம்மா செய்ய முடியாததை ஒரு பெண் செய்துவிட்டாள். உருப்பட மாட்டான் என்று இருந்தவனை அமெரிக்கா வில் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச் சொந்தக்காரனாக்கிவிட்டாள்.

ஸ்ரீகுமார் அப்பாவிடம் தனியாகக் கேட்டான். ''அம்மா ஏதாவது மருந்து சாப்பிடறாளா?''

''எப்பவும்தான் ஏதாவது சாப்பிட்டுட்டே இருப்பா. அவள் தங்கையே டாக்டர்தானே.''

''அது இல்லே. டிரெக்ஸ் மாதிரி...''

''10 வருஷமாவே ஏதேதோ மருந்து சாப்பிடறாளே? அதில் ஒண்ணு வேலியம்னு தெரியும்.''

''அதெல்லாம் இப்போ தர்றதே இல்லையே?''

''எனக்குத் தெரியாதுப்பா. நீயே கேளேன்.''

''கேக்கத்தான் போறேன். ஏன் உடம்பு பூதமாப்போயிருக்குன்னாவது தெரிஞ்சுக்க வேண்டாமா? அம்மாவால நகரவே முடியலையே?''

''எனக்கு ஒண்ணுமே தெரியாது.'

'எப்படியப்பா உன்னால ஒண்ணுமே தெரிஞ்சுக்க முடியாம இருக்க முடியறது?'

அப்பாவிடம் ஒரு சிறு புன்னகை. ''இப்போ 60 வயசாகப்போறது. நான் கேக்காத கேள்வியா, போடாத சண்டையா? ஒண்ணும் பிரயோசனம் இல்லை. பொண்டாட்டி வேண்டும், வீட்டுச் சாப்பாடு வேணும்னா அதுக்கு விலை இருக்கு. என்கூட வேலை பண்ணினவங்க எல்லாரும் ஆபீஸராயிட்டாங்க. நான் இன்னும் பொட்டியைத் தூக்கிண்டு இன்ஸ்பெக்ஷன் டியூட்டி போட்டுண்டு இருக்கேன். ஏன், நீகூடத்தான் ஒன் பொண்டாட்டி பின்னால போயிட்டே. ஒரு நாளைக்கு எனக்குனு ஒரு கடிதாசு போட்டிருக்கியா? ஒரு போன் பண்ணிஇருக்கியா?'

''நான் போன் பண்ணினா அம்மாதான் எடுப்பா. எனக்குப் பேசப் பிடிக்கல.'

''என்னோட பேசலாமே.'

'நீ ஊர்ல இருக்கிறதில்ல. அதோட என்ன பேசறது? அப்பவே டுடோரியல் காலேஜ் போறேன்னு சொன்னேன். உனக்குப் படிப்பு வராது வராதுனு கிடைச்ச வேலையில சேரச் சொன்னே.'

'அந்த வேலையில சேரலேன்னா, நீ அமெரிக்கா போயிருப்பியா?'

'அந்த மாதிரி ஆகலேன்னா? அம்மா மாதிரி ஒரு பொண்ணை என் தலையில கட்டியிருப்பே. உனக்கு டூர் போற வேலை. எனக்கு அதுக்கு வழியே இல்லையேப்பா. இதெல்லாம் என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? இல்லேப்பா, நீ எனக்குச் செய்ய வேண்டியது ஒண்ணுமே சரியாச் செய்யலை.'

அப்பா அழுதுவிடுவார் போலிருந்தது.

'வேண்டாம்ப்பா. எதுக்கு இப்போ இதெல்லாம்? வேண்டாம். நான் அடுத்த முறை வர்றத்துக்கு அஞ்சு வருஷம்கூட ஆகும். இதெல்லாம் விட்டுடலாம்.'

'அஞ்சு வருஷமா?'

'உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. இந்த நாள்ல எண்பது வயசெல்லாம் ரொம்பச் சாதாரணம். உங்க இரண்டு பேருக்கும் அறுபதுகூட ஆகலியே. எனக்குப் பணம் கொஞ்சம் சேரட்டும். உங்களையும் அம்மாவையும் ஒரு தடவை அங்கே அழைச்சுக் கிட்டு போறேன். இருந்தாலும் அம்மா பத்திதான் கவலையாயிருக்கு.'

அப்பா மீண்டும் புன்னகைபுரிந்தார்.

ஸ்ரீகுமாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு புதிர்கள் அந்த வீட்டில் இருந்தன.

அம்மாவிடம் மருந்துபற்றிக் கேட்பது அவ்வளவு எளிதாக இல்லை. அவன் அம்மா விடம் 'நீ எப்படி இருக்கிறாய்’ என்று என்றைக்குமே கேட்டது இல்லை. ஒரு காலத்தில் அம்மாவும் அவனுக்கு உணவு ஊட்டியிருப்பாள். கொஞ்சி இருப்பாள். எல்லாமே மறந்துவிட்டது. அவனுக்கு வயது இன்னும் முப்பது ஆகவில்லை. அதற்குள் இவ்வளவு மறதியா? ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடாது என்றே மறந்த மாதிரி இருக்கிறது.

அம்மா பதில் சொல்லவில்லை. 'ஏன், நீயுந்தான் ஏதேதோ மருந்து சாப்பிடறே' என்றாள்.

''நான் சாப்பிடறது எல்லாம் வைட்டமின்ஸ். மருந்து கிடையாது. ஆனா, உன்னுடையது சரியான டிரக்ஸ். உனக்கு யார் இதெல்லாம் எழுதித் தர்றா? மைக்கேல் ஜாக்சன் இதெல்லாம் சாப்பிட்டுத்தான் செத்தான்.'

'நானும் செத்துப்போறதுக்குத்தான் சாப்பிடறேன்னு வெச்சுக்கோயேன்.'

''என்ன பேசறம்மா?'

'எனக்குத் தூக்கம் போயிடுச்சு. இந்த மருந்தெல்லாம் இல்லைன்னா, இப்பவேகூடச் செத்துப்போயிடுவேன்... துடிதுடிச்சு.'

'நீ ஒழுங்கா டாக்டர்கிட்ட இருந்து மருந்து எழுதி வாங்கிக்கணும்மா. இப்பகூட நானே உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன். எனக்கு இன்னைக்கு வேற வேலை இல்லை. நாளைக்கு ராத்திரி வரை இங்கேதான் இருக்கப்போறேன்.'

'எனக்கு இருக்கிற மருந்து போதும். டாக்டர்கிட்ட போறதை அப்புறம் வெச்சுக்கலாம். உனக்குக் குழம்புப் பொடி, ரசப் பொடி திரிச்சுவெச்சிருக்கேன். இங்கே எனக்கு ஒத்தாசைக்கு ஆள் இல்லை. ஏதோ முடிஞ்சதைப் பண்ணியிருக்கேன்.'

'இதெல்லாம் அங்கேயே கிடைக்குதும்மா. நீ கஷ்டப்படவே வேண்டாம்.'

'வேணும்றயா, வேண்டாமா? ஏன், அவளுக்குப் பிடிக்கலயா?'

'அப்படியெல்லாம் இல்லம்மா. போன தடவை எடுத்துண்டு போனேனே, ரமா நீ எப்படிப் பண்ணறேனு எழுதிட்டு வரச்சொன்னா.'

'இப்போ சொல்றே நீ.'

'மறந்துட்டது.'

அம்மா பதில் சொல்லாமல் அவள் அரைத்து வைத்த பொடிகளைக் கொண்டுவந்தாள். மிகுந்த அக்கறையோடு கட்டுக் கட்டிவைக்கப்பட்டு இருந்தது.

அம்மா குளிக்கப் போனபோது, அவன்

அம்மா மருந்துகளைப் புரட்டிப் பார்த்தான். அவன் அதற்கு முன் அந்த மருந்துகளைப் பார்த்தது இல்லை. இந்தியாவில்தான் எவ்வளவு சுதந்திரம்? அங்கே எதற்கும் டாக்டர் சீட்டு வேண்டும். இங்கே ஒரு பனியன் போட்டுக்கொண்டு காலம் தள்ளிவிடலாம். அங்கே சட்டை மேலே சட்டை. கோட்டு. கோட்டுக்கு மேலே கோட்டு. கழுத்துக்கு மஃப்ளர். ஸ்ரீகுமாருக்கு மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட வேண்டும்போல இருந்தது. ஆனால், இப்போது முடியாது. அப்பாவைப் போல அவனும் ஒரு கைதிதான்.

கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அம்மா அவனைக் கட்டிக்கொண்டாள். அழுத மாதிரி தெரியவில்லை.

''அடுத்த வருஷம் உங்க ரெண்டு பேருக்கும் டிக்கெட் அனுப்பறேன். பாஸ்போர்ட்டுக்கு இப்பவே ஏற்பாடு செய்யணும். நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். எமிரேட்ஸ் மணிகிட்ட சொல்லியிருக்கேன். அவன் எல்லாத்தையும் செஞ்சுடுவான்'- இதைச் சொல்லும்போது அவனே மிகவும் பலவீனமானவனாக உணர்ந்தான். படுத்த படுக்கையாக இருந்த பாட்டியிடம் சென்றான். அவள் தூங்கிக்கொண்டு இருந்தாள்.

ரமா வீட்டு டிரைவர் பெட்டியைப் பின்னால் வைத்தார். அது மிகப் பெரிய கார். மூன்று வரிசை சீட்டுகள். ஸ்ரீகுமார் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். அப்பா விரும்பினால் விமான நிலையம் வரை வந்திருக்கலாம். ஆனால், வீட்டு வெளி வாசல்படி வரைகூட வரவில்லை.

'நீ தனியாத்தான் வரயா, குமார்' -  கார் பின்னால் இருந்து குரல் கேட்டது. ரமாவின் அப்பா.

'உங்களுக்கு ஏன் இந்த நடுராத்திரியில தொந்தரவு? ஒரு மணி நேரமா கார்லியா உக்காந்திருந்தீங்க? வீட்டுக்கு வந்திருக்கலாமே. அம்மா - அப்பா ரெண்டு பேரும் இருந்தாங்க.'

'பரவால்ல குமார். நான் நாலு மாசம் முன்னாலகூட டெலிபோன் பண்ணிப் பாத்தேன். சரியான பதில் கிடைக்கல.'

'அம்மாவா?''

'இல்லை. ஆண் குரல்.'

அவர் வருஷம் ஒரு முறை அமெரிக்கா வருகிறவர். அமெரிக்காவெல்லாம் அவருக்கு உறவினர்கள். ஆனால், சென்னையில் மாப்பிள்ளை வீட்டில் அனுமதி இல்லை.

நட்டநடுநிசியில் விமானம் கிளம்பியது. உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஸ்ரீகுமார் தூங்கிவிட்டான். துபாயில் விமானம் மாற வேண்டும். நேரம் காலம் தெரியாமல் எப்போதோ அமெரிக்கா போய்ச் சேரும். மீண்டும் விமானம் மாறி அவன் ஊருக்குப் போக வேண்டும்.

அவன் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் ரமா வரவேற்றது எப்போதும்போல இல்லை. 'உங்கள் அம்மா போய்விட்டாள்' என்றாள்.

'என்ன சொல்ற? நேத்தித்தான் பாத்தேன்.'

'நேத்து இல்லை. முந்தானேத்து. உங்க அப்பா போன் பண்ணினார்.'

'எப்போ?'

'நீங்க சென்னையிலேந்து கிளம்பின அடுத்த நாள்.'

ஸ்ரீகுமார் மலைத்து நின்றான்.

'தூக்கத்திலேயே போயிட்டாங்களாம். அன்னிக்கே எடுத்துட்டாங்க.'

'அம்மா' என்று சொல்லியபடி ஸ்ரீகுமார் விமான நிலையத்திலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். அவனுக்குத் துக்கமாகவும் இருந் தது, எங்கோ ஒரு மூலையில் ஆறுதலாகவும் இருந்தது. அதெப்படி சொல்லிவைத்த மாதிரி அவன் கிளம்பின இரவே உயிரைவிட்டிருக்கிறாள். பாவம், அப்பா. ஒன்றும் புரியாமல் சாஸ்திரிகள் சொல்வதைத் திருப்பிச் சொல்லிக் கொள்ளி போட்டிருப்பார்.

அம்மா ஒரேயடியாகப் பருத்திருந்தாளே தவிர, சாகப்போகிறவளாகத் தெரியவில்லை. அவளாக அடுத்த முறை இல்லை என்று தீர்மானித்துவிட்டாள். அப்பாவுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அவனால் யூகிக்க முடிந்தது. 10 நாட்கள் சாப்பிட வேண்டிய மருந்தை ஒரே இரவில் சாப்பிட்டிருக்கிறாள்.


பம்பாய் 1944! - இரண்டாம் உலகப் போர் பிண்ணனியில் நிகழும் பம்பாய் காதல் கதை! - அசோகமித்திரன்

பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்துவிடுகிற குழந்தைக்கு ஆங்கிலத்தில் ஒரு பெயர் இருக்கிறது. அதில் சிறிது காருண்யம் இருப்பதாகக் கூடத் தோன்றும். ஆனால், தமிழில் மிகவும் கடுமையான சோற்கள். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே எப்படி ஒரு மனிதரை விழுங்க முடியும்?

எனக்கு ஒரு அண்ணா உண்டு. சுந்தரம். அவன் அப்பா இருக்கிற சிறுவனாக உறவினர்கள் வீட்டுக்குப் போய் விளையாடியிருக்கிறான். நான் எப்போதும் அம்மாவுடன் சமையல் அறையில் இல்லாது போனால் இருட்டாக உள்ள ஸ்டோர் அறையிலேயேதான் வளர்ந்தேன். குழந்தையிலிருந்து அடுப்புக் கணப்புடன் இருட்டும் எனக்குப் பழக்கமாகிவிட்டது.

அந்த நாளில் சிறு வயதிலேயே கணவன் போவிட்டால் உடனே பிறந்தகம் தான். கணவனில்லாது ஓர் இளம் விதவை, கணவன் வீட்டில் ஒருநாள் கூடச் சமாளிக்க முடியாது. ஆதரவில்லாமல் போவதுடன் எப்போதும் தூஷணைகளைக் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும். பிறந்த வீட்டிலும் தூஷணைகள் இருக்கும். அவை துக்கத்தில் கூறப்படுபவை. என் அப்பா அற்பாயுளில் போனவுடன் என் அம்மாவின் அப்பா முகத்தில் மலர்ச்சி, சிரிப்பு இரண்டும் போய்விட்டது. என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


எனக்கு ஐந்தாறு வயது ஆகும்போது தான் நான் அப்பா இல்லாதவன் என்பதை அனுபவப்பூர்வமாக உணரத் தொடங்கினேன். என் மாமாக்கள், அவர்களுடைய தாய், தந்தையர் எப்போது எது திட்டமிட்டாலும் என்னை மறந்துவிடுவர்கள். இருபது கஜத் துணிச் சுருளை வாங்கி என் மாமாக்கள், என் மாமாக்களின் குழந்தைகள் உடைகள் தவிர, சில தலையணை உறைகளும் தைத்த பின் துணி மீதமிருந்தால் எனக்கும் ஒரு சட்டை கிடைக்கும். அளவெடுப்பது கிடையாது. மீதம் இருக்கும் துணியை அப்படியே தைத்துவிடுவதால் பல சமயங்கள் அது தொளதொள வென்று இருக்கும். நான் அதை என் அரை டிராயரில் இருப்பில் உள்ளே விட்டுக் கொண்டு விடுவேன். அது என்னைத் தனித்துக் காட்டும்.

நான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது திடீரென்று என் அண்ணனுக்குக் கல்யாணம் என்றார்கள். பெண்? என் மூத்த மாமாவின் மூத்த பெண்தான். மிகவும் சாது. நன்றாகப் படிக்கவும் செய்து வீட்டு வேலையும் செய்வாள். என் அண்ணன் சென்னையில் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மாமாவையும் பிடிக்காது. அவர் குடும்பத்தில் எவரையும் பிடிக்காது. ஆனால் மாமா எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அவர் பி.ஏ. படித்திருந்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்கும் வெளியூர்களில் ஒருமுறை இருமுறை ரயில் மாறிப் போக வேண்டியிருந்தால் கூட அவர் அங்கு வேலையில் சேர்ந்து ஊருக்கும் சிறிது பணம் அனுப்புவார்.

எல்லா மாமாக்களும் குழந்தைகள் உண்டு என்று சொல்ல முடியாது. சிரித்த முக மாமாவுக்கு ஐந்து பெண்கள் ஒரே மகன். ஐந்து பெண்ணைப் பெற்றவன் ஆண்டி என்று அந்த நாளில் எல்லாருடைய வாயிலும் வரும். அதையும் அந்த மாமா சிரித்த முகமாகக் கேட்டுக் கொள்வார். மூத்த பெண்ணுக்கு என் அண்ணாவை மணமுடித்து விட்டார் என்றாலும், அவர் மனத்தில் எப்போதாவது கவலை தோன்றியிருக்கும். அவருடைய மற்ற மகள்களில் மூவர் எனக்கு மூத்தவர்கள். எல்லாருக்கும் அப்பாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தெரியும். ஆனால், அப்பாவிடம் அபார நம்பிக்கை. உண்மையில் அதுதான் அவருடைய அதிர்ஷ்டம். ஏனோ என் அண்ணா விஷயத்தில் அவருடைய அதிர்ஷ்டம் செயல்படவில்லை. தன்னை வளர்த்து ஒரு பிழைப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த மாமா அவனுடைய சம்மதத்தைக் கேட்காமலே அவருடை மூத்த பெண்ணை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு வேலை கிடைக்கும் வரை மனைவி மாமா வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போய் விட்டான்.

என் அம்மாவுக்கும் மாமாவின் அற்ப சம்பளத்தில்தான் ஒருவேளை சோறு கிடைத்தது. வீட்டில் யார் யாரோ வந்து சாப்பிட்டு விட்டுப் போவார்கள். மாமாவுடைய சட்டை, கோட்டு எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு போய் விடுவார்கள். அப்போதும் அவர் சிரித்த முகத்தோடுதான் இருப்பார்.எனக்குப் படிப்பு சரியாக வரவில்லை. ஆசிரியர்கள் சொன்னதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏழு, எட்டு, ஒன்பது வகுப்பு வரை கூட இந்த மூட்ட மனத்தோடு தான் முன்னேறினேன். அப்போதுதான் நான் சிறிது மக்கு என்று மற்றவர்களுக்கும் தெரிந்தது. அப்போது மாமா ஏதோ ஒரு வட இந்திய சமஸ்தானத்தில் கல்லூரி ஆசிரியராக இருந்தார். நான் ஒன்பதாவது வகுப்புப் பரிட்சையில் தேர்வு பெறவில்லை என்றதும் என்னை அவர் இருந்த ஊருக்கு அழைத்துப் போனார். அவரே சமைப்பார். என்னைப் பள்ளியில் விட்டு விட்டு அவர் கல்லூரி போவார். மாலையில் அவரே வந்து திருப்பி அழைத்துப் போவார். ஒரு மாதத்தில் எனக்கு அந்த ஊர்த் தெருக்கள் தெரிந்துவிட்டன. ஆதலால் மாலையில் நானே வீடு வந்து காத்திருப்பேன். பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடுவேன். நான் இந்தி மொழியை அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.

நான் அதிக மதிப்பெண்கள் பெறுவது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. மாமா செல்வாக்கைப் பயன்படுத்திப் பத்தாம் வகுப்பில் சேர்த்திருந்தார். நான் மிக எளிதாக எல்லாப் பாடங்களிலும் ஐம்பதுக்கு மேல் வாங்கி விட்டேன். மாமாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏன் என்னூரில் இந்தத் திறமை வரவில்லை? எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது.

மாமா அடுத்தடுத்த அவருடைய பெண்களின் திருமணத்தை நடத்திவிட்டார். ஒரு குடும்பத்தார் முழுத் திருமணச் செலவையும் அவர்களே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி எங்களுக்கும் டின் டின்னாக முறுக்கும் முள் முறுக்கும் தந்தார்கள். மாமாவும் நானும் திருமண தினத்துக்கு இரு நாட்கள் முன்புதான் வந்தோம்.

என் அண்ணாவை தன்னுடைய மூத்த மருமகனாகச் செய்த மாமாவுக்கு என்னையும் ஒரு மருமகனாக்கிக் கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. பொதுவாக அவருடைய பெண்கள் கறுப்பு என்பதைத் தவிர மிகவும் லட்சணமாகவும் வீட்டுப் பொறுப்புகளை ஏற்பதில் மிகவும் திறமைசாலிகளாகவும் இருந்தார்கள்.

சிரித்த முகமாகவே இருந்த என் மாமா இன்னும் ஒரு பெண் கல்யாணத்துக்கு இருக்கையில் சந்நியாசம் வாங்கிக் கொண்டு விட்டார். இது பற்றி யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. மாமா வடஇந்தியாவில் பணிபுரிந்த போது கூட வாரம் ஒருமுறை கடிதம் எழுதுவார். அவருக்கு எந்த இடத்திலும் ஒரு வருடத்துக்கு மேல் வேலை நீடிக்காததால் ஒரு மாதமாவது அவருடைய கிராமத்தில் இருக்க நேரும். அப்படிக் கிராமத்தில் இருந்த போதுதான் அவர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு எங்கோ போய் விட்டார். வீட்டில் என அம்மா, பாட்டி, மாமி, அண்ணனின் மனைவி தவிர மாமாவின் மகன் மற்றும் கடைசி மகள். மகன் அப்போதுதான் என்னுடன் பத்தாவதை முடித்திருந்தான். எனக்கு நல்ல மதிப்பெண்கள். அறுநூறுக்கு நானூற்றிப் பத்து. அவனுக்குப் பரிட்சையில் தேர்வு பெற கடைசி மதிப்பெண்ணான இருநூற்றி நாற்பது.

பத்தாவது தேறிய நாங்கள் இருவரும் வேலைக் குப் போக வேண்டும். ஒரு மாமா அவனைச் சென்னைக்கு அழைத்துப் போய் ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விட்டார். என்னைக் கிராமத்தார் எல்லாரும் மேற்கொண்டு படிக்கச் சொன்னார்கள். ஆனால் எப்படி? என் மாமா எங்கிருக்கிறார் என்று தெரியாது. சந்நியாசி பணம் அனுப்புவாரா? இங்கே கிராமத்தில் இவ்வளவு உயிர்கள் எப்படித் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்?

என்னுடைய இன்னொரு மாமா என் மாமியையும் மகளையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போகவென வந்தார். எங்கள் கிராமத்திலிருந்து பதினைந்து மைல் தூரத்தில் இருந்த ஊரில் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். பாட்டிக்கும் எங்களுக்கும் ஏதாவது ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அவர் இருந்த ஊரும் மிகவும் சின்னது. அங்கு பிறந்து வளரும் குழந்தைகளே பெரியவர்களானால் அந்த ஊரிலேயே வசிக்கப் பெரிய வாய்ப்புக் கிடையாது. ஆக மொத்தம் என் மாமா சந்நியாசம் வாங்கிக் கொண்டது அவருக்குச் சில பொறுப்புகளிலிருந்து விடுதலை கிடைத்திருக்கலாம். ஆனால், அப் பொறுப்புகள் அவற்றைத் தாங்கும் சக்தி இல்லாதவர்கள் மீது விழுந்தது.

எங்கள் ஊரிலும் சுற்றுப்புறத்திலும், என்ன இந்த மனுஷன் இப்படிப் பண்ணி விட்டானே?" என்று சொல்லாதவர்கள் இல்லை. மாமாவுக்கு எல்லாவிடத்திலும் நல்ல பெயர். வாய்ப்பே இல்லாதபோதிலும் சிரித்த முகத்துடன் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்த அவர் மீது எல்லாருக்கும் மிகுந்த மரியாதை. இவ்வளவு சிறப்பான ஆசிரியருக்கு உள்ளூரில், தமிழ் நாட்டில் வேலை கிடைக்காமல் ஔரங்க பாத், விசாகப்பட்டணம் என்று அவர் போக வேண்டியிருந்ததில் எல்லாருக்கும் வருத்தம். இப்படிப் பண்ணி விட்டாரே என்று கூறினாலும், மாமாவால் தவறாக ஏதும் செய்ய முடியாது என்றும் அவர்கள் நினைத்திருக்க வேண்டும். மாமாவின் ஒரு முடிவால் எங்கள் வாழ்க்கையின் திசை மாறி விட்டது.
 என் அண்ணாவுக்கும் சொல்லி அனுப்பித்தது. அவன் இருக்கும் இடம், முகவரி ஏதும் தெரியாது. வடக்கே போகிறவர்களிடமெல்லாம் மாமா சந்நியாசியாகி விட்டதைத் தெரிவிக்கச் சொன்னது. அன்று சில செய்திகள் எப்படியும் போய்ச் சேர்ந்துவிடும். மாமாவின் சந்நியாசம் சாவுச் செய்திக்குச் சமானம். ஒரு மாதம் கழித்து அண்ணா வந்து விட்டார்.

அண்ணா அழுது விட்டான். அம்மா, பாட்டி, நான் எல்லாரையும் அழைத்துப் போவதாகச் சொன்னான். அவனுக்குப் புனாவில் வேலை கிடைத்து வேறு நால்வருடன் ஓர் அறையில் இருந்தான். இப்போது அவர்களைப் போகச் சொல்லி விட்டு அவனுடைய மனிதர்களோடு வாழ்க்கை நடத்தலாம்.

அவனுக்குக் கல்யாணம் நடந்து விட்டது என்ற நினைவே இல்லாமல் நடந்து கொண்டது எல்லாருக்கும் வியப்பாக இருந்தது. ஆனால், அவன் மறக்க வில்லை. அந்த விதத்தில் அவன் மாமாவிடம் வேறுபட்டவன். அப்படியும் சொல்ல முடியாது. மாமாவும் சம்சாரத்தில் இருந்தவரை அவர் கவனம் வீட்டு மனிதர்கள் மீதுதான் இருந்தது. பாட்டி எங்களுடன் வரவில்லை. மன்னி - மாமாவின் மூத்த மகள் வந்தாள்.

பம்பாய் 1944! - இரண்டாம் உலகப் போர் பிண்ணனியில் நிகழும் பம்பாய் காதல் கதை! - அசோகமித்திரன்-2

நாங்கள் நால்வராகப் பூனா சென்றபோது எனக்கு வயது பதினைந்து. அதற்கு முன் நான் பார்த்திருந்ததெல்லாம் கிராமங்களும் ஒரே ஒரு மிகச் சிறிய ஊரும். அதற்கு ஒப்பிட்டால் பூனா ஒரு மிகப் பெரிய நகரமாகத் தோன்றியது. ஆனால் அண்ணாவோ அதை நகரமாக ஏற்றுக் கொள்ளவில்லை. தெருவோரங்களில் திறந்த சாக்கடை. அது ராணுவத்துக் கென்று அமைக்கப்பட்ட கண்டோன்மென்ட்.

தெருக்கள் அமைப்பில் ஒரு கவனம், ஒழுங்குமுறை இருந்திருக்க வேண்டும். ரஸ்தாப்பெட் என்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய கட்டடத்தில் டஜன் கணக்கில் தமிழ்க் குடும்பங்கள். ஆனால், கீழே ஒரு விசாலமான டீக்கடையும் சிறு சிறு கடைகளாக ஐந்தாறும் இருந்தன.

எங்கள் வாழ்க்கையில் முதல்முறையாக ஓர் ஒட்டுக் கட்டடத்தில் வாழ்க்கை. சமையல் செய்யும் இடத்தில் ஒரு பெரிய ஜன்னல், அறையை வெளிச்சமாகச் செய்துகொண்டிருந்தது ஒரு வேறுபாடு. இங்கு விறகு வைத்துச் சமைக்க அனுமதி இல்லை. அரை மூட்டையாக வேப்பங்கரி வாங்கி வைத்துக் கொண்டால் முப்பது நாற்பது நாட்கள் தள்ளி விடலாம். முதலிலிருந்தே சமையலைத் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும்.

பூனா போன, இரண்டாம் நாளே என்னை அண்ணா ஒரு தொழிற்பள்ளியில் சேர்த்தான். அதைக் கல்லூரி என்றும் கூறலாம். அதில் பெண்களும் இருந்தார்கள். படிக்க வரும் பல பெண்கள் சைக்கிள் விட்டுக்கொண்டு வந்தார்கள். கிராமத்தில் நிறையப் பெண்கள் மத்தியில் தான் நான் வளர்ந்தேன். ஆனால் இப்பெண்களுடைய துணிச்சல் அவர்களுக்கு இராது. ஆனால் மனோதிடம்?இந்தச் சூழ்நிலைக் கூச்சத்தோடு என் படிப்பைத் தொடர்ந்தேன். நான் கிராமத்தருகேயே இருந்து மேல் படிப்பு தொடர்ந்திருந்தால் எனக்கு வீட்டுச் சாப்பாடு கிடைக்காது போயிருக்கும். இந்தப் படிப்பை முடித்துவிட்டால் நான் படிப்பளவில் என் அண்ணன் சுந்தரத்துக்கு இணையாவேன். ஆனால், அவனுடைய சுய நம்பிக்கையும் துணிச்சலும் என்னால் அடைய முடியாது என்று தெரிந்தது. பள்ளிப் படிப்பு என்று அவனும் பத்தாவதுதான் படித்திருந்தாலும் அவனால் தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி என நான்கு மொழிகளில் வெகு சரளமாக முன்பே பேசுவான். இப்போது மராட்டியிலும் பேச ஆரம்பித்திருந்தான். அவனை விட அதிகம் படித்தவர்கள்கூட அவனிடம் தணிந்துதான் போனார்கள்.

சுந்தரம் அதற்கு முன் என்னிடம் அதிகம் பழகியதில்லை. நான் ஒரு இடத்தில் வளர்ந்தால் அவன் வேறிடத்தில் வளர்ந்தான். இருவருக்குமே மாமாக்கள்தான் ஆதாரம். அம்மா கூடச் சிறிது சிரித்துப் பேசினார். எனக்குச் சிரிப்பே வராமல் போய் விட்டது.

என் டிப்ளமா படிப்பு முடிக்க இன்னும் ஆறு மாதங்கள் இருந்தபோது சுந்தரத்துக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தும் பம்பாய்க்கும் மாற்றலாயிற்று. பம்பாயிலும் சுந்தரம் அதிகச் சிரமம் இல்லாமல் வீடு பார்த்து விட்டான். அந்தப் பேட்டையில் எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதிரியாக மூன்று மாடிகள். மாடிக்குப் போகப் போக வாடகை குறைவு. அம்மா நன்றாகப் படியேறுவாள் என்றாலும் சுந்தரம் கீழே வீடுகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்திருந்தான்.

வீட்டுக்கருகிலேயே டிராம் வண்டி நிலையமும் உள்ளூர் ரயில் நிலையமும் இருந்தன. நான் திரும்பப் பூனா சென்று எங்கள் குடும்பம் மீது அக்கறை கொண்டிருந்தவர் வீட்டில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தேன். அம்மா சொற்படி எழுதியது என்று அண்ணனின் மனைவி வாரம் ஒரு தபாலட்டை எழுதி விடுவார். எனக்கு மாதம் ஒருமுறை எழுதுவதற்கே விஷயம் இருக்காது. விரைவில் இறுதித் தேர்வு முடிந்து பம்பாய் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஏதோ ஒரு பயமும் இருந்தது.

வீட்டில் அம்மா இட்டதுதான் சட்டம். அப்படித்தான் நினைக்கும்படியாக இருந்தது. கிராமத்தில் நானறிந்த அம்மா தொடர்ந்து நான்கு சொற்கள் பேசினால் அதிகம். பம்பாயில் அம்மா பேசிக்கொண்டே இருந்தாள். பாத்திரங்கள் தேய்க்க ஒரு மராட்டிய மாது வந்துகொண்டிருந்தாள். அம்மா துணிகளைத் தவிர இதர துணிமணிகளைத் தோய்க்க ஓர் ஆள். பெயர் ராமா.

அங்கு துணி தோய்க்க வருபவர்கள் எல் லாருடைய பெயரும் ராமாதான். ஒரு மிருது வான மரத்தால் செய்யப்பட்ட உலக்கை போன்றதைக் கொண்டு துணிகளை அடிப் பான். அங்கு துணியை வீசித் தோய்ப்பது கிடையாது. சோப்புப் போட்டு அடித்துப் பின் அலசிப் பிழிய வேண்டும்.

அந்த ராமாவே மூன்று மாடி ஏறி மொட்டை மாடியில் ஒவ்வொரு வீட்டுக்கும் என்றிருந்த கொடியில் உலர்த்தி விட்டுப் போய் விடுவான். உலர்ந்த பின் எடுத்து வருவது வீட்டுக்காரர்கள் வேலை. அம்மாவும் மன்னியும் சேர்ந்து சமைப்பார்கள். அடுப்படி சிறியது ஆனதால் மன்னி மட்டும் தான் அங்கு உட்காருவாள். அம்மா வாயிற் படியில் உட்கார்ந்துகொண்டு இது செய், அது செய் என்று சொன்னவண்ணம் இருப்பாள். மன்னி பதிலே பேசாமல் அம்மா சொன்னதை அப்படியே கேட்பாள். அவள் எட்டாவதுவரை படித்தவள். ஆங்கிலம் நன்றாகவே வரும். மாதம் ஒருமுறை பழைய ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் ஒன்றை அண்ணா வாங்கி வருவான். அதை ஒரு வரி விடாமல் மன்னி படித்து விடுவாள். என்னையும் படிக்கச் சொல்லுவாள்.

அம்மாவுக்கு, நானும் அண்ணா வேலை புரியும் நிறுவனத்தில் வேலை புரிய வேண் டும் என்று ஆசை. அண்ணா அந்த ஒரு விஷயத்தில் அம்மாவிடம் நேரிடையாகப் பதில் சொன்னது கிடையாது. அவனுக்கு மட்டும் பெரிதாக வயதாகவில்லை. ஆனால் அதற்குள்ளேயே வாழ்க்கை பற்றி நிறையத் தெரிந்திருந்தது. அண்ணன் ஓரளவு உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தபோது அதே இடத்தில் இளையவன் சிறிய வேலையில் இருப்பது இருவருக்கும் நல்லதல்ல. முக்கியமாக இளையவனுக்குத் தேவையில்லாத தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். இது அம்மாவுக்குப் புரியாது. அன்று எனக்கும் புரிய வில்லை. நானும், சுந்தரம் என்னை உதா சீனப்படுத்துகிறான் என்றுதான் நினைத்தேன்.

வீட்டிலேயே எனக்கு நிறைய வேலை கள் இருந்தன. அப்போது இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது. பொருள்கள் சரி யாகக் கிடைக்கவில்லை. வாரா வாரம் ரேஷன் கடைக்குச் சென்று கோதுமையும் அரிசியும் வாங்கி வர வேண் டியிருந்தது. பம்பாயில் அந்தப் பகுதியில் ஆரம்பத் திலிருந்தே க்யூ வரிசையை மக்களே நடைமுறைப்படுத்திக் கொண்டார்கள்.

ஐம்பது பேர் வரிசையில் நிற்போம். அரை மணி யில் அனைவரும் வீடு திரும்பி விடுவோம். நான் முந்தி, நீ முந்தி என்ற பேச்சே கிடையாது. நான் ரேஷன் கடைக்குப் போய் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். க்யூவில் நிற்பவர்களில் பலர் பாடப் புத்தகங்களைக் கையோடு எடுத்து வந்து படிப்பார்கள்.

ரேஷன் கடையில் எங்கள் கட்டடத்தில் இருப்பவர் களைத் தெரிந்துகொண்டேன். சுமார் முன்னூறு குடும் பங்களுக்கு அந்தக் கடை. சில குடும்பங்களில் அரிசியை வாங்காமல் விட்டு விடுவார்கள். இதை அம்மாவிடம் சொன்னேன். அடுத்தமுறை ரேஷன் கடைக்குக் கிளம்பிய போது அம்மாவும் வருவதாகச் சொன்னாள். அம்மாவுக்குக் காய்கறி வாங்கி ஒரு மாதிரியான வடக்கத்தி மொழி பழக்கமாகி விட்டது.

ரேஷன் கடை முன்பு நின்ற க்யூவில் யார் அரிசி வாங்கப் போவதில்லை என்று வெளிப்படையாகக் கேட்டதில் மூன்று நான்கு பேர் அவர்கள் அரிசியை அம்மாவுக்குத் தருவதாகச் சொன்னார்கள். அப்படி வாங்கினாலும் நாங்கள் முழுவதாக அரிசிச் சாப்பாடு சாப்பிட முடியாது. குழந்தைக்கு அரிசிக் கஞ்சி. அம்மா ரொட்டி சுடவும் சாப்பிடவும் பழகிக்கொண்டாள்.

எனக்கு ஒரு வேலை கிடைத்தது. தினக்கூலி. நான் ரயிலில் சுமார் இருபது மைல் பயணம் செய்து அந்தத் தொழிற்சாலைக் கதவைக் காலை எட்டு மணிக்குள் அடைய வேண்டும். அம்மா காலையிலேயே எழுந்து எனக்கு நான்கு ரொட்டி செய்து ஏதா வது ஒரு காயும் சமைத்துக் கட்டித் தரு =வாள். ஆறரை மணி வண்டியைப் பிடித் தால் ஓரளவு நிதானமாகவே தொழிற்சாலையை அடைந்துவிடலாம்.

குளிர் காலத்தில் தலைக்குத் துணி யைக் கட்டிக்கொண்டு போனேன். அதைவிடக் குல்லாய் அணிவது சௌகரியமென்று தெரிந்தது. ஏனோ அந்தக் குல்லாய்க்குக் குரங்குக் குல்லாய் என்று பெயர் வைத்திருந்தார்கள். அதைப் போட்டுக்கொண்டால் முகத்தில் மூக்கும் உதடுகளும் பிரதானமாகத் தெரியும். காரணமில்லாமல் எல்லா மொழிகளிலும் அதற்குக் குரங்குக் குல்லாய் என்று பெயர் வைத்திருக்க மாட்டார்கள்.

பம்பாயில் மழை நாட்களில் மழை கொட்டித் தீர்த்து விடும். பம்பாய்க் காரர்கள் மழை, குளிர் எதற்கும் பணிந்து போகாமல் அவரவர்களுடைய பணிகளைச் செய்து முடித்து விடுவார்கள். யாரும் யார் மீதும் அனுதாபம், பரிவு இல்லை என்று தோன்றும். ஆனால் அப்படி இல்லை. அவரவர் களுடைய எல்லைக்குள் அவர்களால் இயன்ற உதவியைப் புரிந்துவிட்டு அவர்கள் போய்விடுவார்கள். நானும் சரியான பம்பாய்க்காரனாகி விட்டேன்.

ஆறு மாத தினக்கூலி வேலைக்குப் பிறகு என்னை மாதச் சம்பளப் பட்டியலில் சேர்த்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிக வேலை. அதன்பிறகு உறுதியான வேலை.

இதற்குள் நான் வளர்ந்துவிட்டேன். முகச் சவரம் செய்து கொண்டேன். தொழிற்சாலையில் சீருடை. அன்று எல்லாத் தொழிற்சாலைகளிலும் சீருடை காக்கி, இல்லாது போனால் ஒருவகை நீலம். இந்தச் சீருடை காரணமாக என்னுடைய இதர துணிவகைகள் பல மாத காலம் புதுக் கருக்கு கலையாது இருந்தன. எனக்குச் சீருடை சரியாக அமையவில்லை. ஒரு வருடம் கழித்துத்தான் நான் துணியாக வாங்கிக்கொண்டு நானே தைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று தெரிந்தது. இதற்குள் கம்பெனியாகக் கொடுத்த சீருடையே மேல் என்று தோன்றிவிட்டது.

என்னை உடல் தேய்த்துக் கொள்ளும் சோப்பு தயாரிக்கும் பிரிவில் போட்டிருந்தார்கள். அந்தப் பிரிவே பயமெழுப்புவதாக இருக்கும். இருபது அடி விட்டமுள்ள பெரிய தொட்டியில் சுண்ணாம் புப் பொருள், வாசனைப் பொருள், காடியுடன் சோப்புக்குப் பச்சை வண்ணம் தரும் கலவையும் ஒவ்வொரு கட்டமாக அந்தத் தொட்டியில் விழும் படி நான் விசைகளை இயக்க வேண்டும்.

ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் தொட்டியில் விழச் செய்ய வேண்டும். நான்கு தொட்டிகள் அந்த மிகப் பெரிய கொட்டகையில் இருந்தன. குறுக்கும் நெடுக் குமாகத் தொட்டிகளுக்கு மேல் சாரங்கள் போன்ற அமைப்பு. தொட்டிக்கு நேர் மையப் பகுதியில் கலவை சீராகக் கலக்க ஓர் உலோகப் பலகை சுற்றிச் சுற்றி வரும்.

எல்லாமே திரவம் போல இருந்தாலும் பலகை அவ்வப்போது எங்கோ சிக்கி நின்று விடும். அதை இயக்கத் தொட்டியில் மீது மையப் பகுதிச் சாரத்துக்குச் சென்று பலகையை மீண்டும் சுற்றச் செய்ய வேண் டும். அங்கு சூட்டின் அளவு மிக அதிகமாக இருக்குமாதலால் இரண்டு மணிக்கொரு முறை ஆள் மாற வேண்டும்.

எட்டு மணி நேர வேலையில் குறைந்தது இருமுறை சோப்புக் கூழ் மெதுவாகக் கொப் பளித்துக் கொதிக்கும்போது ஒரு விசைக் காரர் தொட்டி மீது நின்று கொண்டிருக்க வேண்டும். இடுப்பளவில் ஒரு தடிமனான கம்பி இருக்கும். அதைப் பிடித்துக்கொண்டு தான் பணி புரிய வேண்டும். எனக்கு அந்த இரண்டு மணி நேரம் முடியா நேரமாகத் தோன்றும். எனக்குத் தெரிந்த தோத்திரங் களையும் மந்திரங்களையும் ஜபித்தபடிதான் சாரம் மீது நின்றிருப்பேன்.

எங்களுக்கு ஒரு மேற்பார்வையாளன்.மிகவும் குரூரமானவன். திடீர் திடீரென்று கோபம் வந்து தொட்டி மீது நிற்பவன் நேரத்தை அரை மணி ஒரு மணி அதிகரித்து விடுவான். அவனுக்கு போதைப் பழக்கம். அதை அவனுக்கு வாங்கித் தருபவர்களிடம் சரியாக இருப்பான். மற்றவர்கள் மீது எரிந்து விழுவான். அது என்ன மருந்து என்று தெரிந் தால் நான் அவனுக்கு வாங்கித் தரத் தயாராக இருந்தேன். என் அண்ணா பெரிய வேலை யில் இருப்பது அவனுக்குத் தெரியும். எந்தக் காரணத்தினாலோ அவன் என்னைக் கடுமை யாக நடத்தினாலும் என்னை போதை மருந்து வாங்கித் தர விடவில்லை.

ஒருமுறை அவன் போதையில் மயங்கி இருந்ததை என் சக ஊழியன் மேனேஜரிடம் தெரிவித்துவிட்டான். அவர் ‘போதை’ மேற் பார்வையாளனைக் கடுமையாகக் கண்டித்தார். நான்தான் அவன் மீது புகார் கொடுத் தேன் என்று அவன் நினைத்துக் கொண்டிருந் தான். என் காது கேட்கும்படியாக மராட்டி யில் என் அம்மா அக்கா எல்லாரையும் இழுத்து முணுமுணுப்பான். நான் கேட்காதது போலிருந்தாலும் எனக்கு மிகவும் வேத னையாக இருக்கும். மூன்று, நான்கு நாட்களுக்குப் பிறகுதான் அவன்மீது புகார் செய் தவன் யார் என்று அவனுக்குத் தெரிய வந்தது.

ஒருநாள் அந்தப் புகார் கொடுத்தவன் கொதிக்கும் சோப்புக் குழம்புத் தொட்டி மீதுள்ள சாரத்தில் நின்று குழம்பைக் கிளறி விடும் பலகையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு நொடிப் போதில் அந்தப் போதைக் கார மேற்பார்வையாளன் அந்த ஆளை சோப்புக் குழம்பில் தள்ளி விட்டான். கீழே விழுந்தவன் அலறக் கூட முடியாமல் சோப்புக் .குழம்பில் மூழ்கிவிட்டான். ஏது மறியாததாக சோப்புக் குழம்பு கொதித்துக்கொண்டிருந்தது.

நான் பல மாதங்கள் இரவில் திடீரென்று அலறி எழுந்திருப்பேன். அந்தக் கொலையைப் பார்த்தவன் நான் ஒருவன்தான். ஆனால் போலீஸ்காரர்கள் ஒரு விபத்து என்றுதான் முடிவு செய்தார்கள். அதிலிருந்து நான் எப்போது சோப்புக் குழம்பில் தள்ளப்படுவேன் என்று சித்திரவதைப் பட்டுக்கொண்டிருந்தேன்.

அடுத்த மாதம் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். அந்த போதைக்காரன் தவிர மற்றவர்களுக்கெல்லாம் என் மீது நல்ல அபிப்ராயம். எனக்கு தினம் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் பயணம் செய்வது கடினமாக இருந்தது என்று மானேஜரிடம் சொன்னேன். “பம்பாயில் எல்லாருமே அப்படித்தானேயப்பா?” என்று கேட்டார்.

“நான் டிஸ்டிரிபியூஷன் ஆபீஸில் வேலை வாங்கித் தர முடியும். ஆனால் அங்கே சம்பளம் பாதிதான் கிடைக்கும். அது டெக்னிக்கல் வேலையல்ல. நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் டெக்னிக்கல் வேலையாகப் போவது நல்லது” என்றார்.

அப்போது நான் மானேஜர் இறந்தது விபத்தல்ல என்றேன். மானேஜர், “எல்லோருக்கும் தெரியும். பெரியவர்களே வாயை மூடிக் கொண்டுதான் இருந்தோம்” என்றார்.

“அதுதான் காரணம் என்றால் நான் உன்னை இங்கேயே ஸ்டோர்ஸில் போட்டு விடுகிறேன். உன் ராஜினாமாவைத் திரும்ப வாங்கிக்கொள்” என்றார்.

என் ராஜினாமாவைத் திரும்ப வாங்கிக் கொண்டாலும், என்னால் பழையபடி கவலையற்று இருக்க முடியவில்லை. திடீர் திடீரென்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தைத் தவறவிட்டு, வேலைக்கு அரைமணி தாமதமாகப் போவேன். அந்தப் பிரிவில் இருந்த பதினைந்துபேரில் நான் தான் வயதில் மிகவும் சிறியவன். என்னை ஒரு காரியாலயப் பையன் போலத்தான் நடத்தினார்கள்.

பகல் பதினொரு மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் நாங்கள் இருக்கும் இடத்திலேயே டீ வந்துவிடும். எங்கள் மெஸ் பன்னிரண்டரை மணிக்குத்தான் திறக்கும். ஒன்றரைக்கு மூடிவிடும். மூன்று பந்திகள். எனக்கு முதல் பந்திக்கே போக வேண்டுமென்றிருந்தாலும் எங்களை இரண்டாம் பந்தியில்தான் அனுமதித்தார்கள்.

நான் கையில் எடுத்து வந்த ரொட்டியோடு மெஸ்ஸில் கிடைக்கும் கூட்டு மற்றும் பருப்பு எடுத்துக் கொள்வேன். அது நிறுவனமே நடத்தும் உணவு விடுதி. உணவு விநியோகத்தில் தாராளமாகவே இருப்பார்கள். அதே நேரத்தில் உணவு வீணடிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பார்கள். எனக்குச் சம்பளம் இருநூறை எட்டினால், நானும் மெஸ்ஸிலேயே சாப்பிட்டு விடலாம் என்றிருந்தேன்.

என்னால் பச்சை வண்ணத்தைப் பார்க்க முடியவில்லை. சோப்புக் குழம்பு பச்சை வண்ணத்தில்தான் இருந்தது. குளிப்பதற்கு சோப்பைத் தொட முடியவில்லை. வேறு வண்ண சோப்பை வாங்கிக் கொண்டேன். அதன் நிறம், மணம் விசேஷமாக இல்லை. என் கனவுகளில் நான் பார்த்த கொலை நேரடியாக வராவிட்டாலும், அதை எப்படியோ நினைவுபடுத்தும்படியாக ஏதாவதொரு நிகழ்ச்சி இருக்கும்.

அன்று அந்த சோப்புக் குழம்பில் மனோகருடைய எலும்புகள் கூடக் கரைந்துவிட்டன. முடிதான் ஒரு மனிதன் அந்தக் குழம்பில் வீழ்ந்தான் என்பதற்குச் சாட்சியம். அந்த சோப்பை நாம் உடலில் தேய்த்துக் கொள்கிறோம். அது நம்மை சுத்-தம் செய்வதாக நினைத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு சோப்புத் தொழிற்சாலையிலும் தினம் ஒரு மனிதன் சோப்புக் குழம்பில் தள்ளப்படுவதில்லை என்று என்ன நிச்சயம்?

நான் சோப்பு பயன்படுத்தாமலேயே குளித்தேன். துணிக்கு சோப்புப் போடும் போதுகூட சோப்பை இடது கையில் வைத்துக் கொண்டு துணி மீது தேய்த்தேன். அதெல்லாம் ஒரு வழியாகப் பின் மனத்தில் அமிழ்ந்து போகப் பல ஆண்டுகள் ஆயின. இதற்கிடையில் அண்ணா சுந்தரம் வேலை செய்த மோட்டார் கம்பெனியிலேயே எனக்கு வேலை கிடைக்கும் போலிருந்தது.

ஆனால் முதலில் தினக்கூலி, ஆறு மாதங்கள் கழித்துத் தற்காலிக வேலை ஒப்பந்தம், ஓராண்டு கழித்து முறையான உத்தியோகம் என்று இருந்தது. ஆனால் வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அம்மாவுக்கு மிகவும் வருத்தம். மன்னி ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் ஒருநாள் நாங்கள் இருவர் மட்டும் வீட்டில் இருந்தபோது, “உங்கண்ணாவாலே உனக்குப் பெரிதாகச் செய்ய முடியாது. அண்ணாவுக்குச் சம்பளம் நிறையக் கொடுத்தாலும், இது மாதிரி விஷயங்களில் அவர்கள் அண்ணா பேச்சைக் கேட்பதில்லை. இரண்டு மூணு தடவைப் பாத்தாச்சு. உனக்கும் கல்யாணம்னு ஆனா நீ சுதந்திரமா இருக்கிறதுதான் நல்லது. வர்றவளுக்கும் அதுதான் பிடிக்கும்.”

மன்னி குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டே இதைச் சொன்னாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மன்னிக்கு அசாத்தியப் பக்குவம் என்று முதலிலிருந்தே நான் ஒரு மாதிரி அறிந்திருந்தேன். இப்போது அவள் பேசியபோது அது எவ்வளவு சரி என்று எனக்கு உறுதியாயிற்று.

சுந்தரத்துக்கு ஒரு பெண் பிறந்தது.

திடீரென்று எனக்கு வாழ்க்கை நானறியாத பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது. எனக்கும் அண்ணாவுக்கும் நிறைய வயது வித்தியாசமிருந்தும் எனக்கு அண்ணா மீது பெரிய பாசமோ மரியாதையோ இருந்ததில்லை. ஏதோ ஒரு விதத்தில் அவன் தன்னலவாதி என்று தோன்றிவிட்டது. அதற்கு எதிராக எவ்வளவோ நிகழ்ச்சிகள் இருந்தன. அவனுக்கு ஒழுங்காக உத்தியோகம், சம்பளம் என்று ஏற்பட்ட உடனேயே அவன் எங்கள் மூவரையும் அழைத்து வந்து குடித்தனம் வைத்தான். நல்ல வீடாகத் தேர்ந்தெடுத்திருந்தான். குடும்பம் சீராக நடக்க மளிகைப் பொருள்கள் கூடுமானவரையில் ஒழுங்காகக் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தான்.

நாங்கள் பம்பாய் வந்த இரண்டாம் ஆண்டே உலக யுத்தம் தொடங்கிவிட்டது. பம்பாய், இந்தியாவின் வாணிபத் தலைநகரம். மூலதனத் தலைநகரம். நகர அமைப்பில் வாழ்க்கை நேரம் வீணாகாமல் சிறப்பான உள்ளூர் போக்குவரவு சாதனங்கள் கொண்டது. இந்தியாவிலேயே வீடுகளில் எரிவாயு குழாய் மூலம் கிடைக்க ஏற்பாடு கொண்டது.

இன்னும் எவ்வளவோ காரணங்கள் பம்பாய் எதிரிகளின் முதல் குறியாக இருக்க, அதனாலேயே ராணுவப் பாதுகாப்பு என்ற பெயரில் குடிமக்களின் பல வசதிகளையும் உரிமைகளையும் அரசாங்கம் பிடுங்கிக் கொண்டது.

உணவு தானியங்கள் நபருக்கு இவ்வளவுதான் என்று அளந்து அளந்து தரப்பட்டது. இந்த ரேஷன் முறையில் வீட்டில் ஒரு குழந்தையிருந்தால் அது மாதமெல்லாம் சர்க்கரை சேர்த்த பாலைக் குடிக்கும் என்று உறுதி கூற முடியாது. அன்றுவரை இந்தியா அறிந்திராத கறுப்பு மார்க்கெட் நிதர்சனமாயிற்று. நிறையப் பண வசதி உடையவர்கள் இரட்டை விலை கொடுத்துப் பண்டங்களை வாங்கிக் கொண்டார்கள்.

கறுப்பு மார்க்கெட்டில் வர்த்தகர்கள் கொடுத்ததை அப்படியே வாங்கிக் கொள்ள வேண்டும். அளவு குறைவாக இருக்கலாம். பொருள் சுத்தமாக இல்லாமல் போகலாம். ‘என்ன இப்படி இருக்கிறதே?’ என்று கேள்வி கேட்டால் அப்பொருளை உடனே பிடுங்கிச் செல்ல இன்னொரு ஆள் காத்திருப்பான்.

வெளி நிலைமை இப்படியெல்லாம் இருந்தும் அண்ணா ஓரளவு குடும்பத்தை நன்கு பார்த்துக் கொண்டான். நான் என் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிட்டு, சீஸன் டிக்கெட்டுக்கும் பகல் டீக்குமாகப் பதினைந்து ரூபாய் வாங்கிக் கொள்வேன். இதில் பணம் மீந்து ஒரு சினிமா இரண்டு சினிமா கூடப் பார்ப்பேன். வீட்டருகேயே ஒரு மிக நல்ல சினிமா கொட்டகை. அதில் சற்றே பழையதான ஆங்கிலப் படங்களைக் காட்டுவார்கள். எனக்கு எல்லாமே புதிதுதான்.

அண்ணா தன்னலவாதி என்று எப்படி எனக்கு மட்டும் தோன்றியது? இதை நினைக்க எனக்கு வெட்கமாகவும் இருந்தது. எனக்குத்தான் அவன் எவ்வளவு செய்திருக்கிறான்? படிப்பு வரையில் அவனுக்குச் சமமாக என்னைப் படிக்க வைத்திருக்கிறான். நான் வேலை ஏதும் இல்லாமல் மாதக் கணக்கில் வீட்டிலேயே இருந்தேன். நான் ரேஷன் கடை சென்றேன். அதிகப்படி அரிசி வாங்கி வந்தேன் என்று சொல்லலாம். ஆனால் அதை வீட்டில் வசித்து வந்த எந்த இளைஞன் செய்யமாட்டான்?

நான் அம்மாவைப் பற்றியாவது எப்போதாவது யோசித்திருக்கிறேன். ஆனால் மன்னியைப் பற்றி நினைத்துப் பார்த்ததில்லை. அவள் உணவு பரிமாறும் போதும் என் சீருடைகளை உரிய நாட்களில் தோய்த்து வைக்க ஏற்பாடு செய்வதும் என் மனத்தில் உரைத்தது கிடையாது. பம்பாய் வந்த பிறகு அம்மா ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கட்டளைகள் இட்டுக் கொண்டிருப்பாள்.

மன்னி அவற்றை இம்மியும் பிசகாது செய்து முடிப்பாள். நான் வீட்டிலிருந்த நேரங்களில் இப்போது கவனமாக இருந்தேன். ஒரு விதத்தில் எல்லோரும் சுதந்திர மனிதர்கள். இன்னொரு பார்வையில் ஒருவருக்கொருவர் அடிமைகள். அம்மா திருமணமானதிலிருந்து புனா, பம்பாய் வரும் வரை அவளாக என்ன விஷயத்தில் முடிவு எடுக்க முடிந்தது? அவள் கட்டிக்கொண்ட நார்மடியிலிருந்து எனக்கு உணவூட்டுவது வரை அந்தந்த நேரத்தில் இருந்த சூழ்நிலை வசதி வைத்துதான் முடிந்தது.

அவளுடைய நார்மடியின் கிழிசல்களைத் தைத்துக் கொள்ளக்கூட ஊசி நூல் கிடையாது. ஆனால் அம்மாவுக்கென்று மனம், விருப்பம் இருந்திருக்கிறது. இப்போது வீட்டுக்கு அவளே எஜமானி என்று வைத்துக் கொண்டால் கூட அவள் பிறர் சௌகரியங்களை உதாசீனப்படுத்தவில்லை. மன்னி வாய் திறவாது, அம்மாவின் சொற்படி கேட்டு பணிகளைச் செய்தாலும் அம்மாவும் அவ்வப்போது அவளுடைய கருத்துகளையும் கேட்பாள்.

ராமாவும் பாத்திரம் துலக்கும் பெண்ணும் மராத்தி மொழி மட்டும்தான் பேசுவார்கள். மன்னி ஒரு வார காலத்தில் கற்றுக் கொண்டுவிட்டாள். ஆனால் அம்மாவால் ஒரு சொல்கூட மராட்டியில் உச்சரிக்க முடியவில்லை. “அவ என்ன சொல்லறா, அவ என்ன சொல்லறா?” என்று கேட்டபடியே இருப்பாள். ஆரம்பத்தில் அம்மாவே அவள் புடைவை துணிமணிகளைத் தோய்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருமுறை அம்மாவுக்குக் கையில் காயம் பட்டுவிட்டது. மன்னி துணி தோய்த்துப் போடுகிறேன் என்று சொல்லியும் அம்மாவுக்கு மன்னியின் பொறுப்புகளை அதிகரிக்க விருப்பமில்லை. ராமா தோய்த்தபின் அவள் துணிகளை ஒருமுறை மீண்டும் அலசிப் பிழிந்த பிறகு உலர்த்தித் தருவாள்.

அந்த வீட்டில் மூன்று மாடிப்படிகள் ஏறிய பிறகு மொட்டை மாடியில்தான் துணி உலர்த்தவேண்டும். அந்தக் கட்டடத்தில் இருந்த பன்னிரண்டு குடித்தனங்களுக்கும் பன்னிரண்டு கொடிக் கயிறு கட்டியிருந்தது. துணியை உலர்த்தி கிளிப் போட வேண்டும். சாதாரண நாட்களில் பகல் மூன்று நான்கு மணியளவில் உலர்ந்த துணிமணிகளை எடுத்துவந்து விடலாம். மழை நாட்களில் முடியாது. அப்போது வீட்டுக்குள்ளேயே தற்காலிகக் கொடிக் கயிறுகள் கட்டித் துணிகளை உலரப்போட வேண்டும்.

மன்னிக்கு ஒரு விஷயம் தெரிந்திருந்தது. துணி உலர்த்தியபின் சாம்பிராணிப் புகை போட்டால் துணிகள் மிக விரைவாகப் பூரணமாக உலர்ந்துவிடும்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எனக்குத் தெரிந்து மன்னி அவளுடைய பாலக்காட்டுக் கிராமாந்திரத்தை விட்டு எங்கும் போனதில்லை. அவளுடைய அப்பாதான் எவ்வளவு ஊர்களில் வேலை செய்திருக்கிறார்! ஆனால், அவர் எந்த ஊருக்கும் குடும்பத்தை அழைத்துச் சென்றதில்லை. அங்கெல்லாம் என்ன கிடைக்கும், என்ன கிடைக்காது என்று தெரியாது. அங்கே தமிழோ மலையாளமோ மட்டும் பேசிச் சமாளிக்க முடியாது.

ஆதலால் படுகிற கஷ்டத்தை தான் மட்டும் அனுபவித்துவிடுவது என்றிருந்தேன். என்னை மட்டும் எப்படி அழைத்துப் போனார்? அவரை நம்பி வந்திருக்கும் தங்கையின் மகனைத் தன் காலில் நிற்க வைக்க, பத்தாவது வகுப்பு சர்டிஃபிகேட்டாவது பெறச் செய்துவிட வேண்டும். அதில் அவர் வெற்றி கண்டுவிட்டார். எனக்கு அப்படிப் போகவேண்டியிருந்தது. மன்னி இருந்த இடத்திலேயே எல்லாமே தெரிந்தவளாகிவிட்டாள்.

உலக யுத்தம் தீவிரமடைந்தது. ஜப்பானும் யுத்தத்தில் குதித்ததில் யுத்தம் இந்தியாவின் வாயிற்படிக்கே வந்து விட்டது. பம்பாய் நகரம் அதனுடைய வழக்கமான ஜிலுஜிலுப்பை இழந்து விட்டது. பகலில் போக்குவரத்து அதிகம் மாற்றம் அடையாவிட்டாலும் இருட்டின உடனே தெருவே வெறிச்சோடிப் போய்விட்டது.

நிறைய வெள்ளைக் காரர்கள். மிலிட்டரி லாரிகள். அந்த மிலிட்டரிக்காரர் களைக் கண்காணிக்க ஒரு தனி போலீஸ். எம்.பி. என்று கையில் பட்டை அணிந்தவர்கள் மிலிட்டரி இல்லாதவர்களையும் சம யத்தில் வெளுத்து வாங்கி னார்கள். காக்கிச் சட்டையையும் கறுப்பு பூட்ஸ் சத்தத் தையும் நினைத்துக் குழந்தைகள் பீறிட்டு அழுதார்கள். இல்லாது போனால் திறந்த வாய் மூடாது பிரமித்து நின்றார்கள்.

எனக்குத் தினமும் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிடும். என் தொழிற் சாலையில் எனக்கு ஓர் அடையாளச் சீட்டு கொடுத்தார்கள். எம்.பி.க்கள் இல்லாத நேரத்தில் இந்தியச் சிப்பாய்களும் முரட் டுத்தனமாக நடந்து கொண்டார்கள். நான் கேட்டால், பதிலே பேசாத வாடகை சைக்கிள் கடைக்காரன் மிலிட்டரிக்காரர்களுக்குக் கேட்டவுடனே கொடுத்தான். ஆனால், பதிலுக்கு சிப்பாய்களின் அடையாளச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டான்.

இந்தியச் சிப்பாய்களுக்கு ஒரு வாரத் தில் நான்கு மணி நேரம் விடுப்பு. அவர்கள் எந்தக் கடையிலிருந்து சைக்கிளை வாடகைக்கு எடுத்தார்கள் என்று அடையாளம் தெரியாமல் திண்டாடுவார்கள். ஓரிரு முறை நான் கூட அவர்களுக்கு உதவி யிருக்கிறேன்.

ஊரே இரவில் இருட்டில் ஆழ்ந்தது. தெருவில் எம்.பி. மோட்டார் சைக்கிள்கள் விரையும். அவர்களும் விளக்கைப் பாதி மறைத்து இருப்பார்கள். எல்லாத் தெரு விளக்குகளும் எரியாது. மூன்று அல்லது நான்கு கம்பங்களுக்கு ஒன்றுதான் எரியும். அதுவும் தரையில் ஒரு சின்ன மஞ்சள் வட்டம் தெரியும்படி இருக்கும்.

ஊர் மக்களுக்கு இப்படி இருக்க வெள்ளைக்காரத் துருப்புகளுக்கென்று மாதம் ஒருமுறை ‘பால்’ நடனம் மூன்று நான்கு பெரிய ‘பார்’களில் நடக்கும். இந்த ‘பார்’களில் தப்பித் தவறி ஓர் இந்தியன் போய்விடக் கூடாது. இந்தியர்கள் குடிக்க வென வேறு இடங்கள் உண்டு. இந்த ‘பார்’களில் ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கும் அவர்களை அழைத்து வரும் ஆண்களுக்கும் அனுமதி உண்டு. தனியாக எவனும் - அவன் ஆங்கிலோ இந்தியனாக இருந்தால் கூட - அனுமதிக்கப்பட மாட்டான்.

இந்த நிகழ்ச்சிகளில் விடுதிக்குள் வெளிச்சம், அலங்காரம் இருக்கும். ஆனால், வெளியே இருட்டுதான். இருட்டுதானே என்று இருந்து விடக் கூடாது. அப்பக்கம் போய்விடக் கூடாது. அங்குதான் பல சோல்ஜர்கள் ஆங்கிலோ இந்தியப் பெண்களிடம் கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். சாராய வாடை மிகவும் அதிகமாக இருக்கும்.

அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க நான் ஒருமுறை எட்டிப் பார்த்தபோது, கடுமையான உதை கிடைத்தது. நான் ஓடி னேன். துரத்தி வந்தவர்கள் பத்தடி வந்து திரும்பி விட்டார்கள். அவர்களுக்கு எப் போதோ கிடைக்கும் விடுப்பை ஓர் இந்தியனைத் துரத்திப் போய் நேரத்தை வீணாக்கலாமா?

சினிமாக் கொட்டகைகளில் இந்த சோல்ஜர்களுக்குப் பாதிக் கட்டணம். அவர் களுடன் கூட வரும் பெண்களுக்கும் பாதிக் கட்டணம். அரசு, எந்த நேரத்திலும் ஜப்பான் தாக்கக்கூடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சோல்ஜர்களை உற்சாகமாக வைத்துக் கொண்டிருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள். அதே நேரத்தில் ராணுவம் சில அடிப்படைக் கட்டுப்பாடு களைத் தளர்த்தத் தயாராக இல்லை.

ராணுவத்துக்காகக் காண்ட்ராக்டர்கள் மளிகைப் பொருள்கள், காய்கறி, இறைச்சி முதலியன பெருமளவில் வாங்கிப் போனார்கள். அன்று பம்பாய் நகரில் கூட எல்லா மக்களுமே வயிறார உண்டார்கள் என்று கூற முடியாது. மில் தொழிலாளிகள் ஏழு அல்லது ஏழரை மணிக்கு ஊதும் சங்கொலியில் அடையாள அட்டை காட்டி மில் கேட்டினுள் கூட்டம் கூட்டமாக நுழைவார்கள். கால் மணி நேரத்தில் அந்த இடம் ஆளரவமற்றதாகி விடும். கேட்டைப் பூட்டி விடுவார்கள். மில் தொழிலாளிகள் நேரம் தவறாமல் உணவு உட்கொண்டிருக்க முடியும் என்பதைத் தவிர, வயிறார உண்டார்கள் என்று கூற முடியாது. அவர்களுக்கென சில பகுதியில் சேரிகள் இருந்தன. குழந்தைகளுக்கு ஒழுங்காகப் படிக்க வசதி கிடையாது. அந்தச் சேரிகளில் நகராட்சி விளக்குகள் அமைத்திருந்தது. குழாய்த் தண்ணீருக்கு வசதி செய்திருந்தது.

நான் ஓர் ஏழைக் குடியிருப்பைத் தாண்டித்தான் என் தொழிற்சாலைக்குப் போக வேண்டும். தாதர் என்னுமிடத்தில் இறங்கி ஒரு நீண்ட மேம்பாலத்தில் ஏறிச் சென்று இன்னொரு ரயிலில் ஏறிச் செல்ல வேண்டும். அன்று பம்பாயில் நிறையத் துணிமில்கள். சுற்றியுள்ள இடங்களில் சேரிகள். ரயில் போகும்போது ஜன நெரிசல் உள்ள இடத்தையும் காணலாம். வெட்டவெளியாக இருக்கும் இடங்களை யும் காணலாம்.

இந்தியச் சிப்பாய்களும் பம்பாய் நகரில் குவிந்திருந்தார்கள். எப்போது ஒரு கோஷ்டி வரும், அது எங்கே எப்போது அனுப்பப்படும் என்று கூற முடியாது. பம்பாயில் இருக்கும்வரை வாரம் இரு பிற்பகல்கள் விடுப்பு கிடைக்கும். அந்த ஐந்தாறு மணி நேரத்துக்குள் ஊரில் அவர் களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர் கள் இருந்தாலும் அவர்களைப் போய்ப் பார்க்கலாம்.

இன்னும் எங்காவது சென்று சீக்கு வாங்கிக் கொண்டு வரலாம். அதிகாரிகள் இது விஷயத்தில் ராணுவ மருத்துவப் பிரிவு மூலம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது. போர்க்களத்தில் எந்த நேரமும் குண்டு பட்டுச் சாக இருப்பவர்களுக்கு இந்த ஒரு விஷயத்தில் கருணையோடு நடந்து கொண்டது.

பல இந்தியர்கள் போரில் எங்கெங்கோ இறந்து போனார்கள். இந்தியச் சிப்பாய்கள் பெரும்பாலோர் கிராமாந்திரங்களைச் சேர்ந்த வர்கள். அங்கு தந்தி என்றால் உடனே அழ ஆரம்பித்து விடுவார்கள். தந்தி என்பதே சாவோலை என்றாகி விட்டது. அம்மா வழி உறவினர் ஒருவர் கடற் படையில் இருந்தார். அவர் ஒருமுறை பம்பாயில் எங்கள் வீட்டுக்கு வந்த போது அவருடைய வெள்ளை நிறச் சீருடை மீது நான் வைத்த கண்ணை நகர்த்த முடியவில்லை. அவர்கள் சீருடைச் சட்டைக்கு ப வடிவக் கழுத்து. மிகவும் குட்டையான அரை நிஜார். ஆனால் மிக அகலமான பெல்ட். எங்கள் வீட்டில் இருந்த நேரத்தில் அவர் கொண்டு வந்த சதுரங்கப் பலகை காய்கள் கொண்டு எனக்குச் சதுரங்கம் கற்றுக் கொடுத்தார். போகும்போது அண்ணாவின் குழந்தைக்கு ஒரு பவழ மாலை அணிவித்தார்.

எனக்குக் கடற்படையில் சேர வேண்டு மென்று தோன்றியது. ஆனால் இம்மாதிரிக் கனவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப் பது போல எங்கள் தொழிற்சாலையில் வழக்கமாக ஆண்டுக்கொருமுறை எடுக்கும் உடல் நலப் பரிசோதனை நேர்ந்தது. ஸ்டெதஸ்கோப் மட்டும் பயன்படுத்திப் போகச் சொல்லிவிடும் வைத்தியர், என் மார்பு எக்ஸ்ரே படம் எடுக்க வைத்தார். எனக்கு டி.பி.யின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தன என்று கூறினார்.

வீட்டில் எல்லோருமே அதிர்ந்துபோய்விட்டார்கள். எங்கள் குடும்பத்தில் இந்த டி.பி. அனுபவம் தொடர்ந்து பெரும் கவலையைக் கொடுப்பதாக இருந்தது. அம்மாவின் இரு சகோதரர்களின் மகள்கள் இருவருக்கும் கிராமத்திலேயே டி.பி. வந்துவிட்டது. ஒரு மாமா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு, தன் பெண்ணுக்காகவும் தன் சகோதரன் மகளுக்காகவும் தாம்பரத் தில் வீடெடுத்துக் குடிபெயர்ந்தனர். அந்த நாளில் டி.பி.க்கென்று மருந்து கிடையாது. காற்றோட்டமான, அதே நேரத்தில் ஈரப்பசையில்லாத இடத்தில் வசிக்க வேண்டும் என்பார்கள். பாலக்காடு அருகில் அப்படி எதுவும் இடம் கிடையாது. தமிழ்நாட்டில் தாம்பரத்துக்குச் சிறிது வடக்கே ஒரு டி.பி. ஆஸ்பத்திரி இருந்தது. அந்த இடம் நோயாளிகளுக்கு உகந்த இடம் என்று அறியப்பட்டது.

ஆனால் ஐந்தாறு ஆண்டுகளில் அந்த இரு பெண்களும் இருபது, இருபத்தொரு வயதில் இறந்துவிட்டார்கள். வீடு, குடும்பம், வேலை எல்லாமே சிதைந்துவிட்டது. என் அப்பா டி.பி.யில் சாகவில்லை. ஆனால் இருபத்தைந்து இருபத்தாறு வயதில் உப்பு இலாகாவில் சப் இன்ஸ்பெக்டராகத் தேர்வு பெற்றுப் பணியிலிருந்தவர், வீட்டில் உட்கார்ந்தபடியே உயிரை விட முடியுமா? இப்படி அற்பாயுஸில் போனவர்கள் குடும்பத்தில் இப்போது நானும் டி.பி. நோயாளி.

உண்மையில் எனக்கு டி.பி. இல்லை. வேறு ஏதோ சிக்கல். ஆனால் அந்த நாளில் எக்ஸ்ரேயில் கரும்புள்ளிகள் இருந்தால் உடனே டி.பி. என்று கூறி விடுவார்கள்.

சுந்தரம் எனக்காக பால், ஆப்பிள் பழம் வாங்கிக் கொடுத்தான். சோப்பு தொழிற்சாலையில் சேர்ந்திருக்கக் கூடாது என்று எல்லாருக்குமே தெரிந்து விட்டது. ஆனால் அன்று எனக்கு வேலையென்று கிடைத்தது அதுதானே?

நான் உத்தியோகம் என்று ஏதுமில் லாமல் பம்பாயைச் சுற்றிச் சுற்றி வந்தேன். பம்பாயில் ஒரு மாதம் மழை கொட்டித் தீர்த்துவிடும். சில மாதங்கள் வெயில் தலை வெடிக்கும்படியாகக் காயும். அந்த நாளில் நோயாளிகளுக்கும் வயோதிகர்களுக்கும் உகந்த இடங்களில் புனாவும் ஒன்றாகக் கருதப்பட்டது.

அதிக ஜன நெரிசல் கிடையாது. மேட்டுப் பிரதேசம். அதிக ஏற்றத் தாழ்வு இல்லாத சீதோஷ்ணம். ஆனால் புனாவில் நான் மட்டும் தனியாகப் போய் இருக்க முடியாது. சுந்தரம் அவன் நிறுவனத்தில் சற்று முக்கியமானவனாக மாறிவரும் நாட்களில் குடும்பத்தைச் சிதைத்து அவனுக்குச் சங்கடம் தரும்படியாக ஏதும் நடக்கக்கூடாது. ஆதலால் பம்பாயிலேயே குடும்பத்தாருடன் இருந்து வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் வீட்டருகிலேயே இருந்த ஒரு கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். அது ஆஞ்சநேயர் கோயில். மிக எளிய மக்கள் வரும் கோயில். அவ்வப்போது கட்டுமஸ்தான உடலுடன் சில குஸ்தி வீரர்களும் வருவார்கள். இவர்களுக்கு வேறு வேலை கிடையாது. வருடத்தில் எவ்வளவு நாட்கள் போட்டி நடக்கும்; எவ்வளவு போட்டிகளில் இவர்கள் வெல்வார்கள்? இந்தக் குஸ்தியே இவர்களால் எந்த வயதுவரை பழக முடியும்; போட்டியிட முடியும்? எனக்கு அவர் களைப் பார்த்துப் பரி தாபமாக இருந்தது. கருகருவென்று பெரிய மீசை கொண்ட முகமாயிருந்தாலும் அவர்கள் கண்களில் அவர் களுடைய எதிர்காலம் குறித்த நிச்சயமற்றத்தன்மை யும் இருந்தது.

ஒருநாள் ஒரு உஸ்தாதுடன் அவர் வீட்டுக்குப் போக வேண்டும் என்றும் நினைத் தேன். அன்று நான் தேர்ந்தெடுத்த உஸ்தாத், பஸ் ஸ்டாப்புக்குப் போய் நின்றார். அங்கு மூன்று நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் உஸ்தாதுக்குக் கடைசி என்பது போலக் கையைக் காட்டினார். உஸ்தாத் மறு பேச்சே பேசாமல் வரிசைக் கடைசியில் நின்றார். நான் அதைத்தான் செய்திருப்பேன். ஆதலால் குஸ்திச் சண்டைக் கோதா வுக்கு வெளியே அவர் என்னைப் போன்றவர்தான்.

என் உடல் நலம் முன்னேற்ற மடைவதை நான் உணர முடிந்தது. எப்படியும் நான் வேலைக்குப் போகும் இடமெல்லாம் என்னை ஒரு முறைக்கு இருமுறை உடற் பரிசோதனைக்குட்படுத்துவார்கள். நான் முன்பு வேலை பார்த்த இடத்திலேயே எவ்வளவு குடிகாரர்கள், பீடி குடிப்பதால் ஓயாமல் இருமிக் கொண்டிருப்பவர்கள் இருந்தார்கள். எப்படி அவர்கள் நுரையீரல் புள்ளிகள் இல்லாமல் எக்ஸ்ரேயில் வருகிறது? உண்மையில் அவர்களைத்தான் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். அவர்களை அந்தப் பரிசோதனைக்குட்படுத்தாது என்னை வேலையிலிருந்து துரத்திவிட்டார்கள்.

பட்டாளத்தில் சேரலாமா. அங்கும் இதே பிரச்னைதானே? இதற்கு முன் எங்கு வேலை பார்த்தாய்? ஏன் வேலையிலிருந்து நின்றாய்? இப்படி நோயாளி என்ற பெயரை வைத்துக் கொண்டு நான் எந்தப் பட்டாளத்தில் சேருவேன், எந்தக் கடற்படையில் சேருவேன்? இப்படிச் சோர்வு வரும் நேரங்களில் ஆஞ்சநேயர் கோயில் எனக்குச் சிறிது ஆறுதலளித்தது.

கோயிலில் ஒரு குஸ்தி பயில்வான் நான் அங்கு அடிக்கடி வருவதைக் கவனித்துவிட்டார். ஒருநாள் என்னருகில் வந்து, “நீ மதறாஸியா” என்று கேட்டார்.

“நான் பாலக்காடு.”

“எங்கே இருக்கிறது?”

“தெற்கே.”

“அதான் மதறாஸ்.”

நான் அவரை மறுத்துப் பேசவில்லை. “உனக்கு என்ன கஷ்டம்?” என்று கேட்டார். அவர் பெயர் விநாயக் என்றார்.

“வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.”

“நல்ல பையனாக இருக்கிறாயே! என்னாயிற்று?”

“எனக்கு டி.பி.யாம்.”

“ரொம்ப சுலபமாகக் குணப்படுத்திவிடலாம், பையா. நான் பதினைந்து வயதிருக்கும்போது எனக்கு டி.பி. என்று கூறி ஸ்கூலிலிருந்து அனுப்பிவிட்டார்கள். என் அப்பா அது போனாலென்ன, குஸ்தி போடு என்று ஒரு பயில்வானிடம் அனுப்பிவைத்தார்.”

எனக்கு நம்பிக்கை வரவில்லை. அவர் அதைப் புரிந்து கொண்டுவிட்டார்.

“ஜெய் ஹனுமான் சரிசெய்து விடுவார். ஆனால் நீயும் முயற்சி செய்யவேண்டும்.”

“நான் என்ன செய்ய வேண்டும்?”

“உன் வீடு எங்கேயிருக்கிறது?”

நான் சொன்னேன்.

“அப்போது ஒரு மைல் நடக்க வேண்டும். நீ என் வீட்டுக்கு வருகிறாயா?”

“இப்போதா?”

“ஆமாம். உனக்குத்தான் வேலை இல்லையே. வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்?”

நான் சொன்னேன்.

“உனக்கென்ன குறைச்சல், பையா. உன்னைப் பார்த்துக் கொள்ள அம்மா இருக்கிறாள், மன்னி இருக்கிறாள்.”

நான் அவரைப் பின் தொடர்ந்தேன். அது சந்துகள் நிறைந்த பகுதி. அங்கு ஒரு சிறிய வீட்டில் இருந்தார். அந்தச் சிறிய வீட்டுக்கு ஒரு மிகச் சிறிய திண்ணை. அதில் ஒரு பழைய சாய்வு நாற்காலியில் ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார்.

“இதுதான் என் அப்பா. அப்பா இந்தப் பையன் தினம் கோயிலுக்கு வருகிறான்.”

“ஏதாவது கஷ்டமாக இருக்கும்.”

“வேலை போய்விட்டதாம்.”

“சின்ன வயதுதானே. படித்தவனாகத் தெரிகிறான். பம்பாயிலே இல்லாத வேலையா?”

“இவனுக்கு டி.பி.யாம்.”

“எல்லாம் சரியாகி விடும். நம் ஹகீமிடம் அழைத்துப் போ. முதலில் கேட்டுக் கொள். அவன் வீட்டில் ஹகீம் வைத்தியமெல்லாம் சரிப்படுமா?”

பயில்வான் என்னைப் பார்த்தார். “நான் இப்போது மருந்தே சாப்பிடுவதில்லை” என்றேன்.

பயில்வான் அவருடைய அப்பாவிடம் ரகசியமாக ஏதோ சொன்னார். அப்பாவும் ரகசியமாகப் பதில் சொன்னார். பயில்வான் வீட்டினுள் சென்று உடனே திரும்பி வந்தார்.

பயில்வானுடைய அப்பா சொன்னார்: “பையா, இப்போது என் பெண் உனக்குப் பாதாம் பால் கொண்டு வந்து தருவாள். சாப்பிடு. அப்பா அம்மா இருக்கிறார்களா?”

“அம்மா இருக்கிறாள். அண்ணன், அவன் மனைவி இருக்கிறார்கள்.”

“அம்மாவிடம் சொல்லு. நாங்கள் ஏழைகள். இவனுக்கு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இரண்டு வேளை பாதாம் பால் தருகிறேன். உன் அம்மாவிடம் சொல்லு. நீ ஒரு வேளை சாப்பிட்டால் போதும், எல்லாம் சரியாகிவிடும்.”

அப்போது வீட்டினுள்ளிருந்து ஓர் இளம் பெண் உயரமான வெள்ளை நிற உலோகத் தம்ளரில் பால் கொண்டு வந்து பயில்வானுடைய அப்பாவிடம் கொடுத்தாள். உடனே உள்ளே போய்விட்டாள்.

பயில்வான் என்னிடம் சொன்னார்: “நாங்கள் ஓரளவு கவலையில்லாமல் இருக்கிறோமென்றால் அது என் தங்கையால்தான். அவள் கல்யாணமாகிக் கணவன் வீடு போய் விட்டால் நாங்கள் திண்டாடுவோம்.”

பயில்வானின் அப்பா தம்ளரை என்னிடம் கொடுத்தார். எனக்கு அந்த அளவு பால் குடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

காலித் தம்ளரை என்ன செய்வது என்று கேட்பது போலக் கையிலேயே வைத்திருந்தேன்.

பயில்வானின் அப்பா சொன்னார்: “அப்படியே வைத்துவிடு. நாங்கள் பார்த்துக் கொள்வோம். உன் அம்மாவிடம் சொல்லு.”

நான் விநாயக் பயில்வானின் அப்பா காலைத் தொட்டு வணங்கினேன். திடீரென்று என் அப்பா நினைவு வந்தது. அப்பா என்று நான் உருவகப்படுத்திக்கொள்ள ஒரே ஒரு கோஷ்டி ஃபோட்டோ ஒன்றுதான் என் அப்பாவைப் பெற்ற பாட்டியின் வீட்டில் இருந்தது. அதில் யார் என் அப்பா என்று தெரியாது. வருடக் கணக்கில் அவர் பற்றிய எண்ணம் எனக்கு வந்ததில்லை. என் அம்மா, மன்னி ஆகிய இருவர்கள்தான் என் சிந்தனையில் வருவார்கள்.

இப்போது விநாயக் அவருடைய அப்பாவிடம் கொண்டிருந்த மரியாதையும் விசுவாசமும் என்னை நெகிழ வைத்தது. நான் அப்பா உறவே அறியாதபடி வளர்ந்தது, என் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதைக் காட்டியது. இதெல்லாம் அந்தக் கணத்தில் தெரியவில்லை. நான் விக்கி விக்கி அழ ஆரம்பித்தபோது, பயில்வான் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
எனக்கு அன்று இதெல்லாம் தெரிந்தது என்று கூற முடியாது. நானே ஒரு சீருடை இளைஞன் என்றாலும் சிப்பாய்கள் சீருடையும் ஜோடும் என்னை மிகவும் கவர்ந்தன. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஆள் சேர்க்கும் அலுவலகத்துக்குப் போய் விடலாமா என்று அடிக்கடி தோன்றியது.

நான் அழுது ஓயும் வரை யாரும் ஒரு சொல் பேசவில்லை. விநாயக்கின் தங்கையும் வாயிற்படியில் நின்று கொண்டு வருத்தம் தெரியும் முகத்துடன் உறைந்து நின்றாள்.

விநாயக்கின் அப்பா சொன்னார்: “நீ அப்பா இல்லை என்று அழுகிறாய். இவர்கள் அம்மா இல்லை என்று எப்போதும் துயரத்தில் இருக்கிறார்கள். உன் அப்பாவும் வர மாட்டார். இவர்கள் அம்மாவும் வரமாட்டாள். பையா, நீ என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு எங்களோடு இருந்து விடு. இல்லை, உன் வீட்டுக்கு அழைத்துப் போ. நாங்கள் வந்து பார்த்துக் கொள்கிறோம்.”

நான் விநாயக்கின் தங்கை முகத்தைப் பார்த்தேன். அவள் மாநிறம்தான். நான் படித்த பள்ளியில் பார்த்த பெண்களின் சாயல் இருந்தது. அதே நேரத்தில் ஒரு கள்ளங்கபடமற்ற தன்மையும் இருந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றோம். முதலில் நான்தான் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டேன். மெல்லத் திரும்பி என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நான் பாதாம் பால் பற்றி என் வீட்டில் சொல்லவில்லை. சோப்புக் குழம்பில் ஒருவன் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைப் பார்த்ததுகூட என் மனத்திலிருந்து சிறிது சிறிதாக விலகிப் போய்விட்டது. ஆனால் விநாயக் வீட்டுக்குச் சென்று வந்தது, என்னை மிகவும் மாற்றிவிட்டது.

அம்மா, மன்னியிடம் எனக்கு எதுவும் ரகசியம் என்று இருந்ததில்லை. ஆனால் விநாயக் விஷயம் குறித்து எனக்கு எப்படி யாரிடம் முதலில் சொல்வது என்று தெரியவில்லை. விநாயக் பயில்வானின் அப்பாவை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும்? ஐம்பது? அறுபது? விநாயக்கின் மீசை, புஜம் பெரிதாக இருந்தாலும் அவர் என்னைவிட நான்கைந்து வயதுதான் பெரியவராயிருப்பார். அவருடைய அம்மா எப்படிச் செத்துப்போனாள்? எதிர்பாராத விதமாகத்தான் இறந்ததுபோலத் தோன்றியது. அப்பா இல்லாவிட்டால் கஷ்டம்தான். ஆனால், அம்மா போய்விட்டால் இழப்புகள் அதிகம். விநாயக்கின் தங்கையுடன் விநாயக் அல்லது அவருடைய அப்பா பேசக் கூடியதைவிட அம்மா இன்னும் அந்தரங்கமாகப் பேச முடியும். அந்தப் பெண்ணுக்கும் மேலும் படிக்க வேண்டும் என்று ஆசையிருக்கலாம். இப்போது வீட்டில் சமைத்துப் போட்டுக் கொண்டு அண்ணனுக்கு பாதாம் பால் தயாரித்துக் கொடுத்தபடி இருக்கிறார்.

முகத்தில்தான் எப்படி உலகளவு எண்ணங்களை அடக்கி வைத்திருக்கிறாள்? அவளுக்கு அதிகம் போனால் பதினாறு பதினேழு வயதுதான் இருக்கும். அவளுக்கு வீட்டில் உடுத்திக்கொள்ள நல்ல புடைவை கிடையாது. சமையலறைக்கு வெளிச்சம் இருக்குமா, காற்றோட்டம் இருக்குமா?

அவளுக்கு மராட்டி, ஹிந்தி மொழிகள் தெரிந்திருக்கும். விநாயக் சைவமா அசைவமா? எதிர்காலம் பற்றி அதிக நம்பிக்கை இல்லாத வாழ்க்கையில் அவர்களுக்கு விருந்தோம்பல் இருக்கிறது; என் டி.பி. சரியாகி விடவேண்டும் என்று அக்கறை இருக்கிறது.

நான் ஒரு வாரம் கோயிலுக்குப் போகவில்லை. “என்னாச்சுடா?” என்று அம்மா கேட்டார்.

“ஒண்ணுமில்லையே,” என்று பதில் சொன்னேன்.

“எப்போ பாத்தாலும் ஏதோ யோசிச்சுண்டேயிருக்கே. யாரோடயானும் சண்டை போட்டயா?”

“இல்லேம்மா. எனக்கே கொஞ்சம் நாள் வீட்டோட இருந்துடலாம்னு இருந்தது.”

பகல் சாப்பாட்டுக்குப் பிறகு அம்மா தூங்கப் போன பிறகு மன்னி கேட்டாள், “நானும் கேக்கணும்னு இருந்தேன். ஏன் ஒரு மாதிரி இருக்கே?”

“ஒரு மாதிரியும் இல்லையே, மன்னி.”

“நான் அண்ணாகிட்டே சொல்லியிருக்கேன். உனக்குச் சீக்கிரம் வேலை கிடைச்சுடும். ஆனா நீதான் உடம்பை நன்னாப் பாத்துக்கணும்.”

எனக்கு விநாயக்கின் அப்பா சொன்னது மனத்தில் தோன்றியது. ஆனால், நான் பாதாம் பால் என்று சொன்னால், ‘அதை யார் சொன்னார்கள்’ என்று கேள்வி எழும். அம்மாவோ மன்னியோ அந்தப் பயில்வான் வீடுவரை போய் விசாரித்தாலும் விசாரிப்பார்கள். அப்புறம் விநாயக்கின் தங்கை.

சாதாரணமாக வீட்டில் அதிகம் பேசாத சுந்தரம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னிடம் விசாரித்தான்.

“இன்னும் இரண்டு மாதத்திலே மறுபடியும், எக்ஸ்ரே எடுக்கணும். நிச்சயம் உனக்குக் குணமாயிருக்கும். அதனாலே இந்தச் சமயத்திலே எதையாவது நீயா நினைச்சுண்டு அவஸ்தைப்படாதே.”

“எனக்கே தெரியறது, உடம்பு சரியாகிண்டு இருக்குன்னு.”

“உனக்குச் சொல்ல வேண்டாம்னுதான் இருந்தேன். உனக்கு சீக்கிரமே வேலை கிடைச்சுடும். சம்பளம் பத்து இருபது குறையலாம். ஆனா அது கன்ஃபர்மேஷன் ஆறப்போ சரியாயிடும்.”

நான் பேசாமல் இருந்தேன்.

“நீ ஒரு வாரமாக் கோயில் பக்கம் போகலியாமே?”

“நாளை நாளைன்னிக்குப் போயிடுவேன்.”

“எங்கே இருக்கு?”

“இந்த மெயின் ரோடிலேயே போய் ஒரு சின்ன சந்திலே திரும்பணும்.”

“பிள்ளையார் கோயிலா?”

“ஆஞ்சநேயர் கோயில்.”

“தமிழ் பேசறவா வராளா?”

“ஒண்ணு இரண்டு பேர். நிறையப் பேர் மராட்டிக்காரர்கள்.”

“புனேலே எல்லா குஸ்திப் பயில்வான்களும் அனுமன் கோயிலுக்குத்தான் போவாங்க.”

“இங்கேயும் மூணு பேர் வராங்க.”

“இங்கே குஸ்திச் சண்டை இருக்கா, என்ன?”

“புனா மாதிரி இல்லே. ஆனா இங்கேயே பிறந்து வளந்தவங்க என்ன பண்ணுவாங்க?”

“இன்னும் கொஞ்ச நாளில் குஸ்திச் சண்டையே இல்லாமப் போயிடும்.”

எனக்கு விநாயக்கின் தங்கை முகம் மனத்தில் தோன்றியது.

“இந்த யுத்தம் வந்ததுலே நிறையப் பேர் ஆர்மிலே சேர்ந்துண்டாங்க. ஆர்மிலே வேறே ஆட்டங்களுக்கு பெர்மிஷன் உண்டு. குஸ்திச் சண்டைக்கு இல்லே. சரி, சரி, நான் வீட்டுக்குப் போகணும். நீயும் வரயா? இல்லே, வேறே எங்கேயாவது போகப் போறியா, எப்படியும் தெருவிலே இருட்டினப்புறம் நடக்கக்கூடாது.”

“நீ எப்படி வரே?”

‘’என்னை இப்போ டிராப் பண்ணிடறாங்க. நைட் ஷிஃப்ட் இருக்கிறவங்க ஆறு மணிக்குள்ளே வந்துடணும். பொழுது விடிந்தப்புறம்தான் போகணும்.”

நான் சுந்தரத்தோடு வீட்டுக்குத் திரும்பினேன். சுந்தரமாக என்னைக் கவனித்திருக்கப் போவதில்லை. அம்மாவோ மன்னியோ சொல்லியிருக்க வேண்டும்.

அடுத்த நாள் தமிழ் புது வருஷப் பிறப்பு. சுந்தரம் ஒரு மணி நேரம் தாமதமாகத்தான் வேலைக்குப் போனான். கடும் ரேஷனில் என்ன பண்டிகை கொண்டாட முடிந்தது? தேங்காய் ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்கி உடைத்தது. பஞ்சாங்கத்துக்கு மஞ்சள் குங்குமம் தடவிப் பூஜை செய்தது. துளி வெல்லம் போட்டு ஒரு பாயசம் வைத்தது. தினம், சப்பாத்தி, சப்பாத்திக்குக் குழம்பு நன்றாக இருக்கும். ஆனால் பருப்புக்கு எங்கே போவது? இரட்டை விலை கொடுத்து எவ்வளவுதான் பிளாக் மார்க்-கெட்டில் வாங்குவது?

நான் வெயில் சற்றுக் குறைந்ததும் கோயிலுக்குப் போகலாம் என்றிருந்தேன். ஆனால், நான்கு மணியளவில் எங்கோ தூரத்தில் பெரிய வெடிச் சத்தம் கேட்டது. முதலில் ஏதோ பட்டாசு என்று நினைத்திருந்தோம். ஆனால், பம்பாய் துறைமுகத்தில் ஒரு கப்பலிலிருந்து இறக்க வேண்டிய சரக்குகளில் வெடி-மருந்தும் நிறைய இருந்திருக்கிறது. என்ன காரணம் தெரியவில்லை. இரண்டு பெரிய வெடிகள். சுந்தரத்தின் அலுவலகம் துறைமுகத்துக்கருகில்தான் இருந்தது.

பம்பாய் விக்டோரியா துறையில் பகல் இரண்டு மணிக்கே எங்கிருந்தோ புகை வந்ததைப் பலர் கவ னித்திருந்தார்கள். எஸ்.எஸ். ஃபோர்ட் ஸ்டிகைன் என்ற கப்பலிலிருந்து சரக்குகள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன. கப்பலில் வெவ்வேறு வகை சரக்குகள். மாலை நான்கரை மணிக்கு முதல் வெடிப்பு. தொடர்ந்து பத்து நிமிடங்களுக்குள் இன்னொன்று. இந்த வெடிச் சத்தம் ஏழெட்டு மைல்கள் - அதாவது சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது. பூகம்பம் ஏற்பட்டது போல பம்பாய்த் துறைமுகமும் இரண்டு மூன்று மைல் தூரத்திலுள்ள கட்டடங்களும் அதிர்ந்தன. துறைமுகம் அருகில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. உடனே அந்தப் பிரதேசத்தில் பெரும் தீ வீசத் தொடங்கி, பயங்கரமாகப் பரவத் தொடங்கியது.

அந்த 1944ஆம் ஆண்டு யுத்தப் போக்கு மாறி ஜெர்மன் துருப்புகளும் ஜப்பான் படைகளும் தோல்வி காணத் தொடங்கின. இந்தியா மீது படையெடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அநேகமாகத் தினமும் பிரிட்டிஷ், அமெரிக்க விமானங்கள் பர்மா, மலேயா, சிங்கப்பூர், டோக்கியோ நகரத்தைக்கூடத் தாக்கின. பர்மா எல்லையில் ஜப்பானியப் படையெடுப்பு நிகழக்கூடும் என்று நினைக்கப்பட்டது. வங்கக் கடற்கரையில் கல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை நகரங்கள் ஜப்பானியக் குண்டு வீச்சுக்கு ஆளாகின. இந்திய தேசிய ராணுவமும் ஜப்பானியப் படைகளும் சேர்ந்து வட கிழக்கு இந்தியாவில் தாக்குதல் தொடங்கி ஆரம்ப வெற்றிகளோடு திருப்தியடைந்து இப்போது பின்வாங்கத் தொடங்கியிருந்தன. ஆனால், இந்தியா வரை ஜப்பான் பற்றிய பீதி நாடு முழுதும் பரவியிருந்தது. முக்கிய நகரங்கள் தாக்கப்படக்கூடும் என்று அங்கிருந்த அரசு அலுவலகங்கள் கடற்கரையிலிருந்து நூறு மைல் தூரமுள்ள சிற்றூர்களுக்கு மாற்றப்பட்டன. விமானந்தாக்கி பீரங்கிகள் பெரிய நகரங்கள், துறைமுகங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள் அருகில் பொருத்தப்பட்டன. திறந்தவெளிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மக்கள் பதுங்கக்கூடியதாக அமைக்கப்பட்டன. நாடே யுத்த கிலியில் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் பம்பாய் வெடி விபத்து முதலில் ஏதோ எதிரித் தாக்குதல் என்றுதான் எல்லாருக்கும் தோன்றியது. துறைமுகமும் சுற்றுப்புறமும் மூன்று நான்கு நாட்கள் எரிவதைத் தடுக்க முடியவில்லை. எங்கெங்கோ இருந்த தீயணைப்பு வண்டிகள் வந்தாலும் அசாத்தியச் சூட்டினால் உடனே செயல்படமுடியவில்லை. சிதறிக் கிடந்த மனித உறுப்புகள் கொண்டு எண்ணூறு பேர் இறந்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டது. அன்று துறைமுகத் தொழிலாளிகள் சங்கங்கள் பெரிய அளவில் சக்திவாய்ந்ததாக இல்லை. யுத்த காலமாதலால் நாடு ஒருவித சர்வாதிகார ஆட்சிக் குட்பட்ட மாதிரிதான் இயங்கியது. வெடி விபத்தின் அடை-யாளங் கள் மாதக்கணக்கில் காணக் கிடைத்தன.

சுந்தரத்தின் தொழிற்சாலை துறைமுகச் சாலையின் அடுத்த சாலையில் இருந்தது. அன்று மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் சில நகரங்களில் பழுது பார்க்கும் மையங்கள் இருந்தன. வெடிவிபத்தில் கார் தொழிற்சாலைக் கூரை சிதறிப் போய்விட்டது.

வேறு ஏதேதோ இடங்களில் சிதறிய பொருள்-கள் மழைபோல ஒரு மைல் வட்டத்தில் விழுந்தவண்ணமிருந்தன. தீ ரசாயனச் சிதறல் ஏற்பட்டதால், பல வண்ணங்களில் நூறடிக்கும் மேலாகக் கொழுந்து

-விட்டெரிந்தது. தீயணைப்பு வண்டிகள் துறைமுகச் சாலையை நெருங்க முடியாத சூடு, வீடுகளிலும் சாலைகளிலும் மின்சார பல்புகள் வெடித்துச் சிதறின.

துறைமுகம் மட்டுமல்லாது, அந்தச் சாலையிலும் அடுத்த சாலையிலும் பல இடங்களில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய பொருள்கள் எரியத் தொடங்கின. சுந்தரத்தின் காலில், மின் விசிறியின் ஒரு சிறு பாகம் விழுந்து கால் வீங்கிப் போய்விட்டது.

தீ அதுவாகவே சற்றுத் தணிந்தபோது தான் தீயணைப்பு வண்டிகள் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க முடிந்தது. விக்டோரியா துறைமுகம் அருகில் சில இடங்களில் கடல் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.

நான் அன்று வீட்டிலிருந்தாலும் ஊரில் ஏதோ பெரிய விபத்து நிகழ்ந்துவிட்டதை உணர முடிந்தது. அந்த நாளில் வீட்டில் ரேடியோ இல்லை. யுத்த காலமாதலால் ரேடியோ கேட்பதற்கும் சில நிபந்தனைகள் இருந்தன. வலுவான திறன் வாய்ந்த ரேடியோவை வைத்திருந்தவர்கள், போலீஸ் நிலையத்தில் வருடம் ஒரு முறை அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

மாலையான போதுதான் துறைமுக விபத் தின் சில தகவல்கள் தெரியவந்தன. ஒருமணி நேரம் மின்சார ரயில்கள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு ஆறு மணிக்கு மேல் மணிக்கு ஒவ்வொரு ரயிலாக ஓடத் தொடங்கின. பொதுவாகவே நேரம் தாழ்த்திவரும் சுந்தரம் இரவு பத்து மணிக்குக் காலில் ஒரு கட்டுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மாலை நேர்ந்த வெடி விபத்தின் அதிர்ச்சியிலிருந்து அவன் இன்னும் முழுதாக மீள முடியவில்லை. அவன் சிறிது சிறிதாகச் சொன்னதில் ஏதேதோ பொருள்களும் தளவாடங்களும் பறந்து வந்து விழுந்த அவனுடைய தொழிற்சாலைச் சாலையில், பல உடல்களும் கை கால்களும் விழுந்திருக்கின்றன. ஒரு உடலில் கூட உடை தங்கவில்லை. எல்லாம் எரிந்துவிட்டன. உடல்களே கருகி இருந்தன. இதெல்லாம் கண்கூடாகப் பார்க்கத்தான் வேண்டியிருந்தது.

அவன் தமிழ் புது வருடப் பிறப்பு என்று விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கலாம். செய்யவில்லை. அவன் உணவு அருந்தும்போது அவன் உடல் திடீர் திடீரென்று தூக்கி வாரிப் போடும். அவன் அன்றிரவு முழுக்கத் தூங்கவில்லை. மன அதிர்ச்சியில் கால்வலி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

சுந்தரத்தைக் கொசுவலை கட்டி ஓர் அறையில் தூங்கவிட்டு நாங்கள் நால்வரும் முன் அறையில் மூலைக்கொருவராகப் படுத்துக் கொண்டோம்.

அடுத்த நாள் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய்விட்டு, துறைமுகச் சாலை போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் அடுத்த நாள் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போக முடியவில்லை. பம்பாயில் விக்டோரியா என்று அழைக்கப்பட்ட குதிரை வண்டியில் சுந்தரத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். சுந்தரத்துக்கு ஜுரம் அடிக்கத் தொடங்கியிருந்தது. நன்றாகப் பேசிக் கொண்டிருப்பவன் திடீர் திடீரென்று தூக்கிவாரிப் போட்டுப் பேந்தப் பேந்த விழிப்பான். மருத்துவமனையில் அவன் மாதிரி வேறு நோயாளிகளும் வந்திருந்தார்கள். சரியானபடி உணவருந்தித் தூங்க வேண்டும் என்று சொல்லி ஜுரத்துக்கு மிக்சர் கொடுத்தார்கள். நாங்கள் புட்டி எடுத்துப் போகவில்லை. ஆனால், மருத்துவமனை அருகே நடைபாதையில் காலி புட்டிகள் விற்பவர்கள் இருந்தார்கள். நாங்கள் மருத்துவமனையிலேயே மருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். அவனை வீட்டில் கொண்டு சேர்த்த பிறகு நான் மருந்துக் கடைக்குப் போய் அவனுக்குத் தூக்க மருந்து வாங்கி வந்தேன்.

இரண்டு மூன்று நாட்களில் சுந்தரத்தின் முகத்தில் சிறிது தெளிவு வந்தது. முதல் நாள் அவன் காது கேட்க முடியாமல் போய் விட்டதென்றான். அவன் இடி விழுந்தது என்றுதான் முதலில் நினைத்திருக்கிறான். பிறகு கட்டடப் பகுதிகள் சிதறும்போது பூகம்பம் என்று நினைத்திருக்கிறான். அவனும் அவனுடன் வேலை செய்பவர்கள் தெருவுக்கு ஓடி வந்த போதுதான் துறைமுகம் பற்றி எரிவது தெரிந்தது. அப்போது கூட அவனுடைய நிதானம் தவறவில்லை. ஆனால், மனித உடல் உறுப்புகள் கண்ட இடங்களில் சிதறி விழுவதைக் கண்ட பிறகுதான் அவனுக்குப் பிரமை பிடித்த மாதிரி தோன்றியது. வீடு வந்து சேர்ந்த பிறகு அவனுக்கு நினைவேயில்லை.

துறைமுகப் பிரதேசத்தைச் சுத்தப்படுத்த வாரக் கணக்கில் ஆயிற்று. சுந்தரத்தின் அலுவலகக் கட்டடம் அநேகமாக முழுதுமே விழுந்துவிட்டது. தற்காலிக ஏற்பாடாக ரிட்ஸ் என்ற ஹோட்டலில் சில அறைகள் அமர்த்திக் கொண்டு நிறுவனம் நடந்தது. சுந்தரத்துக்குத் தினம் ஒருமுறை அங்கு சென்று கையெழுத்திட்டு வர வேண்டும்.

புதுப்புதுச் செய்திகள் வெடி விபத்து பற்றி வந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இவ்வளவு ஆட்சேதமும் பொருட்சேதமும் புத்தகத்தில் கூட நடக்கவில்லை என்று கூறினார்கள். இரு ஜெர்மன் நகரங்கள் மீது அமெரிக்க விமானங்கள் ‘கம்பளி குண்டு வீச்சு’ நடத்திய போதுதான் இப்படிச் சேதம் மற்றும் நாசம் நேர்ந்தது என்று சொன்னார்கள். இவ்வளவு சேதத்திலும் சாலைகள் பழுதடையவில்லை.

ஒரு மைல் தூரத்தில் ஒரு பார்ஸிக்காரர் கூரையைப் பொத்துக் கொண்டு ஒரு செங்கல் விழுந்தது. முதல் மாடியில் சீமை ஓட்டு வீடு. செங்கல்லைப் பரிசோதித்ததில் அது ஒரு தங்கப் பாளம். இது கப்பலிலிருந்து வந்திருக்கக்கூடிய தல்ல. துறைமுகச் சாலையில் ஏதோ ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்துதான் அது பார்ஸிக்காரர் வீட்டில் விழுந்திருக்கிறது. பார்ஸிக்காரர் மனைவியை இழந்தவர். இரு மகன்கள் வெளியூரில் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு மகன் மோட்டார் கார் ரிப்பேர் கம்பெனி. இன்னொருவன் மூக்குக் கண்ணாடி வியாபாரம். அவர்களுக்கு பம்பாய் பிடிக்கவில்லை.

அப்பா தனியாக அவருக்குத் தெரிந்த சமையல், அவருடைய பணியாளுக்குத் தெரிந்த சமையல், இருவருமாக மாடி, கீழ் இரண்டு தளங்களில் கூட்டிப் பெருக்கி ஒட்டடை அடித்து நல்ல நிலையில் வைத்திருந்தார்கள். இன்னும் ஆறு வாரங்களில் பம்பாயில் மழை கொட்டத் தொடங்கும். அதற்குள் கூரையைச் சரிசெய்ய வேண்டும். அதுகூடச் செய்து விடலாம், தங்கப் பாளத்தை என்ன செய்வது?

பணியாட்கள், உறவினர்கள் யாரிடமும் அவர் ஒரு வார்த்தை சொல்லவில்லை. யாராவது ஒருவர் அவரைக் கொன்றாலும் கொல்லக்கூடும். இரு நாட்கள் கழித்து தங்கப் பாளத்தைப் பெரிய துப்பட்டியில் சுற்றிக் கட்டி ஓர் ஆள் வைத்து துறைமுகக் காவல் நிலையம் சென்றார். அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று போலீஸ் இன்ஸ் பெக்டருக்கும் குழப்பம். அவர்களுடைய அந்தரங்கக் காரியதரிசியைக் கேட்டு தங்கப் பாளத்தை எடை எடுத்து வாங்கிக் கொண்டார். சுமார் 70 கிலோ. பம்பாயில் பலர் 70 கிலோ எடை இருக்க மாட்டார்கள். அந்தப் பார்ஸிக்காரர் 45 கிலோ எடை கூட இல்லை. தங்கத்தைக் கொடுத்துவிட்டு நிம்மதியாகத் திரும்பியவர் அதே வாரத்தில் ஒருநாள் தூக்கத்தில் இறந்து விட்டார்.

பெரும் சூட்டுடன் வெடி விபத்து நிகழ்ந்திருந்ததால் சிதறி விழுந்த உடல்களும் உடல் உறுப்புகளும் கருகி எங்கெங்கோ விழுந்திருந்தன. கண்ணுக்குத் தெரியாதது தவிர வேறு மூலைமுடுக்குகளில் விழுந்தவை அவை அழுகி நாற்றமடிக்கும் போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. யார் அகற்றுவது? ஓருடல், இரண்டு மூன்று உடல்கள் என்றால் கூட போலீஸ்காரர்கள் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வார்கள். தெருக் குப்பை அள்ளுபவர்களும் முதலில் முடியாது என்று சொல்லி அதன் பிறகு பணிக்கு வந்தார்கள். அவர்களும் போதாது ராணுவ மருத்துவப் பிரிவு அழைக்கப்பட் டது. உண்மையில் இறந்தவர்கள் பெரும் பாலும் சரக்கு தூக்கும் போர்ட்டர்களும் துறைமுகத்துக்கருகே இருந்த குப்பை அள்ளுவோர் குடியிருப்பில் இருந்தவர் களும்தான்.

செய்திகள் கேட்கக் கேட்க எனக்குத் துறைமுகத்தருகில் சென்று பார்க்கும் ஆர்வம் குறைந்தது. என் அண்ணா உயிர் தப்பியது, அம்மா மேற்கொள்ளும் கடும் விரதங்களால்தான் இருக்க வேண்டும்.

யுத்தம் இன்னும் தீவிரமாயிற்று. ஐரோப்பாவில் ‘இரண்டாம் முனை’ என்று நாஜி ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்ஸ் நாட்டில் பிரிட்டிஷ்-அமெரிக்கப் படைகள் கடும் எதிர்ப்பையும் சேதத்தையும் பொருட்படுத் தாது படை எடுத்தன. அதன் விளைவு இந்தியாவில், குறிப்பாக பம்பாயில் ராணுவத்தினர் கெடுபிடி அதிகமாயிற்று. காய்கறி வகைகள் கடைக்கே வராது மொத்தமாக ராணுவத்துக்குப் போய்விட்டன. திறமையான சேவைக்குப் புகழ்பெற்ற பம்பாய் மின்சாரக் கம்பெனி தடுமாறியது. விலைவாசி உயர்வுக்கென கொடுத்த ‘பஞ்சப்படி’ போதவில்லை. வேலைநிறுத்தம் யுத்த காலச் சட்டம் கொண்டு தடுக்கப்பட்டிருந்தது. மின்சாரம் தயாரிக்கத் தேவையான எரிபொருள் உரிய காலத்தில் கிடைக்கவில்லை. ஏழைகளும் நம்பிக்கையோடு பயணம் செய்யும் டிராம் வண்டிகளில் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டது. பம்பாயின் லட்சக்கணக்கான குடும்பங்கள் போல எங்கள் குடும்பமும் தடுமாறித் தவித்தது.

இவ்வளவிலும் சுந்தரத்தின் குழந்தை முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தது. குப்புறத் திரும்பிக் கொண்டது. தரையில் நீச்சல டிக்கத் தொடங்கியது. சுந்தரம் அவனுடைய தற்காலிக அலுவலகமான ரிட்ஸ் ஹோட்டல் போகத் தொடங்கிய பிறகுதான் ஒருநாள் ஆஞ்ச நேயர் கோயிலுக்குப் போனேன். கூட்டமே இல்லை. விநாயக் பயில்வான் பற்றி விசாரித்தேன். நெற்றிக்குத் தரித்துக் கொள்ள காவி நிறப் பசை தரும் பூசாரி விநாயக்கைப் பார்த்துப் பத்து நாட்களாயிற்று என்றார். வெடிவிபத்து பத்து நாட்கள் முன்புதான் நடந்தது. விநாயக் துறைமுகப் பகுதி போகாமல் இருந்திருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டேன். அன்று எனக்கு அதிக நேரமில்லை. ரேஷன் வாங்கப் போக வேண்டியிருந்தது.

அடுத்த நாள் காலை நான் நேராக விநாயக் வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டி இருந்தது.

அது சிறிய சந்து. வீடுகளும் சிறியவை. அங்கு வீடுகள் நாள் கணக்கில் பூட்டியிருப்பது அபூர்வமல்ல. விநாயக் பயில்வான் எங்கு, எப்போது போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு வயதானவர், விநாயக்குடைய அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டதாகவும், அது பொருட்டே எங்காவது போயிருக்கலாம் என்றார். அங்கே ஹகீம் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்தேன். இரு வெவ்வேறு சந்துகளில் இரு ஹகீம்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்.

முதல் ஹகீம் பக்கத்து சந்து. ஹகீம் வீடும் மோசமாக இருந்தது. யாரோ ஒருவர் அங்கு பொந்துகளாகப் பல வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்க வேண்டும். அங்கு இருப்பவர்களும் ஏதோ கூரை என்று இருக்கிறதே என்று இருக்க வேண்டும். ஆனால், இந்தச் சந்துக்களுக்கு அங்கங்கே தெரு விளக்கு இருந்தது. சில தண்ணீர்க் குழாய்களும் இருந்தன.

முதல் ஹகீமுக்கு விநாயக் பயில்வானைத் தெரியாது. நான் இன்னொரு ஹகீமைத் தேடிப் போனேன். அவர் வீடும் அந்தச் சுற்று வட்டாரத்தில்தான் இருந்தது. நான் போனபோது அவரைப் பார்க்க இரு நோயாளிகள். வாசல் கதவுக்கு ஏழ்மை தெரியும் திரை. இரு நோயாளிகளும் அவரைச் சந்தித்து வெளியே போனபிறகு, இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று பார்ப்பதுபோல ஒரு சிறு பெண் திரையை விலக்கிப் பார்த்தாள். “என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

“ஹகீமைப் பார்க்க வேண்டும்.”

அவள் திரையைச் சிறிது விலக்கி நிற்க, நான் உள்ளே போனேன். சிறிய அறை. பிரகாசமானதொரு விளக்கருகே ஒரு வயதானவர் பழங்கால மர நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். “என்ன உடம்புக்கு?” என்று கேட்டார்.

“நான் விநாயக் பயில்வனைத் தேடி வந்தேன்.”

“இங்கே அப்படி யாரும் இல்லையே?”

“அவர் அப்பா என்னை ஒரு ஹகீமிடம் அழைத்துப் போக வேண்டும் என்றார். இப்போது அந்த வீடு பூட்டி இருக்கிறது.”

“பரவாயில்லை. கையைக் கொடு.”

“நான் வைத்தியத்துக்கு வரவில்லை. விநாயக் பயில்வானைத் தேடி வந்தேன்.”

“இங்கே அப்படி யாரும் இல்லை.”

நான் திரும்பிப் போக இருந்தேன். அப்போது அவர் கேட்டார், “பயில்வான் என்றால் என்ன பயில்வான்? பளு தூக்குபவனா?”

“எனக்குத் தெரியாது. குஸ்தி போடுவான் என்று தெரியும்.”

“அவன் பயில்வான் இல்லையே?”

“அவன் பெயர் அதுதான்.”

“விநாயக் மாஸ்டர். அவன் அப்பாதான் மாஸ்டர். பத்து நாட்கள் முன்பு மகன் அப்பாவைத் தூக்கி வந்தான். அந்த மாதிரி ஜுரத்துக்கு என்னிடம் மருந்து கிடையாது. ஆஸ்பத்திரிக்குப் போ என்றேன்.”

“என்ன ஆஸ்பத்திரி?”

“இங்கே ஒரே ஒரு ஆஸ்பத்திரி கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிதான்.”

“அடன்வாலா ரோடு கோடியில் இருக்கிறதே, அதுவா?”

“இங்கே இருப்பது அது ஒன்றுதானே?”

அங்குதான் சுந்தரத்தை அழைத்துப் போயிருந்தேன். அதே நேரத்தில் விநாயக்கும் அதே ஆஸ்பத்திரியில் வேறு ஒரு மூலையில் இருந்திருப்பான்.

நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். அரசு ஆஸ்பத்திரியில் காலை பத்து மணிக்கு வெளி கேட்டை மூடிவிட்டால் யாரும் மாலை நான்கு மணி வரை உள்ளே போக முடியாது. மிகச் சில நோயாளிகளுக்கே வீட்டுப் பகலுணவு அனுமதிக்கப்பட்டது. உணவு கொண்டு வருபவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிவப்பு அட்டையைக் காண்பிக்க வேண்டும். நான் ஆஸ்பத்திரி போய்ப் பயனில்லை.

விநாயக்கின் அப்பாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும் என்று எனக்குத் தோன்றியதில்லை. எடுத்த எடுப்பிலேயே ‘என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு என் வீட்டிலேயே இருந்துவிடு’ என்று சொன்னது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை. பெண்ணைப் பெற்றவர்கள் எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் மருமகனுக்குத் தேடிய வண்ணம் இருப்பார்கள் என்று என்னைவிட நன்றாகத் தெரிந்தவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். அதேபோல டி.பி. நோய், குடும்பத்தில் விளைவிக்கும் இன்னல்களையும் துயரங்களையும் என்னைவிட அதிகம் தெரிந்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள்.

விநாயக்கின் குடும்பம் டி.பி.க்கென்றே ஏற்படுத்தப்பட்ட குடியிருப்பில் வசித்தது. ஆண்களில் அநேகமாக அவ்வளவு பேரும் துணி ஆலைகளில் பணிபுரிவார்கள். பெண்கள் பெரும்பான்மையோர் வீட்டு வேலை புரிபவர்கள். அதனாலேயே பகல் வேளையில் வீட்டுக் கதவு பூட்டியிருப்பது யாருக்கும் அசாதாரணமாகத் தோன்றவில்லை. விநாயக் ஒரு விதிவிலக்கு. அவனும் எளிதாக ஒரு துணி ஆலையில் தினக்கூலிக்குச் சேர்ந்துவிடலாம். குஸ்திச் சண்டையை நம்பி இந்த யுத்த காலத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா? ஒரு காலத்தில் வட இந்திய சமஸ்தானங்களில் ராஜாவின் பொழுதுபோக்குக்கு மல்லர்கள் இருந்தார்கள்.

அவர்களுக்கு அளிக்கப்படும் பணம் ஒரு சிறு குடும்பம் எளிய வாழ்க்கை நடத்தப் போதுமானதாயிருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லாது போனால் தொடர்ந்து மல்லர்கள் இருப்பார்களா?

“கோயிலுக்குப் போயிட்டு வர இவ்வளவு நேரமா?” என்று அம்மா கேட்டாள்.

நான் முதல்முறையாக வீட்டில் விநாயக் பயில்வான் பற்றிச் சொன்னேன். “என்னை ஒருநாள் கோயிலுக்கு அழைச்சுண்டு போயேன்,” என்று அம்மா சொன்னாள்.

“இன்னிக்கு முடியாதும்மா. நாளை காலையிலே சாப்பாட்டுக்கு முன்னாலே போயிட்டு வரலாம்.”

“சரி.”

நான் நான்கு மணிக்கே ஆஸ்பத்திரியை அடைந்துவிட்டேன். ஆனால் விநாயக் மாஸ்டர் என்ற ஒரு பெயரை வைத்துக் கொண்டு, அவனையோ அவனுடைய தகப்பனாரையோ கண்டுபிடிக்க முடியவில்லை. விநாயக்கின் அப்பாவின் பெயரை நான் விசாரித்துக் கொள்ளவில்லை. அது மிகப்பெரிய மருத்துவமனை. அங்கு பல நோயாளிகளுக்குக் கட்டில் இல்லாமல், தரையில் பாய் விரித்துப் படுக்க வைத்திருந்தார்கள். அவர்கள் உடல் நிலை ஓரளவு குணமாகியிருக்க வேண்டும். பல பாய்கள் வெறும் துப்பட்டி, தலையணையோடு காணப்பட்டன. ஒரே ஒரு பாய் நோயாளி அருகே ஒரு போலீஸ்காரர் தென்பட்டார். ஆனால் போலீஸ்காரர் அந்த நோயாளியிடமும் அவருடைய உறவினர்களிடமும் பேசிக் கொண்டிருந்த விதத்தில் அவரும் நோயாளிக்கு உறவோ என்று நினைக்க வைக்கும்.

இதெல்லாம் பெரிய பெரிய அறைகளில் டஜன் கணக்கில் இருந்த நோயாளிகள். விநாயக்குடைய பொருளாதார நிலையில் தனி அறை சாத்தியமில்லை. ஆதலால் மாடிக்குப் போக வேண்டியதில்லை. ஆனால் மாடிக்குச் சென்றேன்.

அது தரையோடு சேர்த்து மூன்று அடுக்குகள் கொண்டது. அதேபோல இன்னும் மூன்று கட்டடங்கள் இருந்தன. அந்தக் கட்டடங்கள் அருகே இருந்த சூழ்நிலை, அவை சற்றுப் பணம் செலவழிக்கக் கூடியவர்களுக்கு என்பதைத் தெரியப்படுத்தியது.

மூன்றாவது மாடிக்கும் போனேன். நான் வெராண்டாவைச் சுற்றும்போது ஒரு வெள்ளையுடைப் பணியாள், “யார் வேண்டும்?” என்று கேட்டார். நான் சொன்னேன்.

“நீ சொல்கிறபடியான நோயாளி இருந்தால் இந்த ஒரு கட்டடத்தில்தான் இருக்க வேண்டும். எல்லா அறைகளையும் பார்த்துவிட்டாயல்லவா?”

“ஒரு மாதிரிப் பார்த்துவிட்டேன்.”

“அப்போது அந்த மனிதர் நோய் குணமடைந்து வீட்டுக்குப் போய்விட்டிருக்கலாம்.”

“இல்லை. காலை வீடு பூட்டியிருந்தது.”

“உறவினர் வீட்டுக்குப் போயிருக்கலாம்.”

அந்த ஆள் போய்விட்டார். நான் படி இறங்க ஆரம்பித்தேன். அந்த ஆஸ்பத்திரியின் நான்கு கட்டடங்களைத் தவிர சற்றுத் தள்ளி ஒரு சிறு கட்டடம் இருந்தது. அங்கே நின்றிருந்த ஓர் உருவம் விநாயக்கின் தங்கைபோலத் தெரிந்தது. நான் வேகமாகப் படி இறங்கி அங்கு விரைந்தேன். நான் அந்தக் கட்டடத்தை நெருங்க நெருங்க விநாயக்கின் தங்கை அழுதுகொண்டு நிற்பது தெரிந்தது. நான் ஓடினேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். என்னைக் கண்டவுடன், “பாபா” என்று கத்தியவள் என்னைக் கட்டிக்கொண்டாள். “என்னாயிற்று? என்னாயிற்று?” என்று பரபரப்புடன் கேட்டேன். அவள் என்னை விட்டுவிட்டுத் தரையில் உட்கார்ந்து, “அப்பா செத்துப் போய்விட்டார்,” என்று சொல்லிப் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

“விநாயக் எங்கே?” என்று கேட்டேன்.

அவள் அக்கட்டடத்தைக் காட்டினாள். நான் அதனுள் போனேன். விநாயக் அங்கு காக்கிச் சீருடை அணிந்த இருவரிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான்.

அது அந்த ஆஸ்பத்திரியின் பிணவறை.

நான் ஒரு விக்டோரியா பிடித்து வந்தேன். முன்பே சொல்லிவிட்டேன். அதிகப்படி ஒரு ரூபாய் தரவேண்டும். நானும் விநாயக்கும் அவன் அப்பாவின் உடலை ஒரு பக்க இருக்கையில் ஒருவாறு பொருத்திவைத்துவிட்டு, நான், விநாயக், அவன் தங்கை மூவரும் எதிர்ப்பக்கத்தில் உட்கார்ந்தோம். விக்டோரியாவின் பக்கப் படுதாக்களைக் கொண்டு வண்டியை முழுதும் மூடிக் கொண்டோம்.

விநாயக் வீடு ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு மைல் தூரம்தான் இருக்கும். ஆதலால் கால் மணி நேரத்தில் வீட்டை அடைந்து விட்டோம். சாவியை அவன் தங்கை இடுப்பில் செருகிக் கொண்டிருந்தாள். சப்தமே எழுப்பாதபடி உடலை வீட்டில் உள்ளே கிடத்தினோம்.

வீட்டில் பணமே இல்லை. இவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று எவருக்கும் தோன்றும். நான் என் வீட்டுக்குப் போய், வெளியிலிருந்தபடியே அம்மாவைக் கூப்பிட்டேன். மன்னிதான் வந்தாள். “எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்றேன். ஏன் எதற்கு என்று கேட்காமல் மன்னி கொண்டு வந்து கொடுத்தாள். நான் விநாயக் வீட்டுக்கு ஓடினேன். அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள், இரு உறவினர்கள் வந்திருந்தார்கள். அன்று சவ அடக்கம் பெரிய விஷயம் இல்லை. பாடை கட்டிப் பிணத்தை எடுத்துப் போனால் அங்கிருக்கும் ஆட்கள் எரிக்கவா புதைக்கவா என்று கேட்பார்கள். புதைப்பது மலிவு. நாங்கள் முப்பது ரூபாயில் விநாயக்கின் அப்பாவைக் குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போட்டோம். அது வெயில் காலம். ஏழு மணி வரை நல்ல வெளிச்சம் இருந்தது. நான் இருமுறை பணம் கொடுக்க முயற்சி செய்தும் அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். உண்மையில் அந்தச் சிறு மராட்டிக் கும்பலில் நான் தனித்து நின்றேன்.

உறவினர்கள் மயானத்திலிருந்து நேரே அவரவர்கள் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். தலை முழுகுவது, தலையை மழித்துக் கொள்வதெல்லாம் அவர்கள் ஜாதியில் இல்லை. விநாயக் அவனுடைய மீசையை மட்டும் எடுத்துவிட்டான். நான் அவன் வீட்டருகே இருந்த குழாயில் குளித்துவிட்டு ஈரத் துணியுடன் என் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அம்மா, மன்னி இருவரும் ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

அன்று படுத்தவுடனே தூங்கிவிட்டேன். தடாலென்று விழிப்பு வந்தது. எங்கள் வீட்டில் மணியடிக்கும் கடிகாரம் இருந்தது. அது அரை மணி குறிக்க ஒருமுறை மணியடிக்கும். இன்னும் அரை மணி நேரம் காத்திருந்தால்தான் மணி என்ன என்று தெரியும். அது மறுபடியும் ஒரு மணி அடித்தது. அதாவது இரவு ஒரு மணி, எனக்கு கிராமத்திலும் புனாவிலும் நண்பர்கள் இருந்தார்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்களின் பெயர்கள் மறந்துவிட்டன. விநாயக் விஷயத்திலும் அப்படித்தான் ஆகிவிடுமோ? அன்று எவ்வளவு பெரிய, தீவிரமான நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன! கையில் பணமும் உத்தியோகமும் இல்லாமல் எப்படி விநாயக்கின் குடும்பம் பம்பாய் போன்ற நகரத்தில் வசிக்க வந்தது? அக்கம் பக்கத்திலும் பெரிதாக உதவக்கூடியவர்கள் யாருமிருந்ததாகத் தெரியவில்லை. இரவு ஏதாவது உணவு அருந்தியிருப்பார்களா? நான் அந்த ஐம்பது ரூபாயை விநாயக்கிடம் கொடுத்துவிட்டு வந்திருக்க வேண்டுமோ?

நான் மறுபடியும் தூங்கிவிட்டேன். கண் விழித்தபோது நன்றாகப் பொழுது விடிந்தது. சுந்தரம் வேலைக்குப் போகத் தயாராகிவிட்டான். “ஏன், உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” என்று கேட்டான்.

எனக்குச் சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை. “நேத்திக்கு மன்னிகிட்டேந்து அம்பது ரூபாய் வாங்கிண்டு போனயாம். உனக்கு எதுக்குடா அவ்வளவு பணம்?”

“எனக்குத் தெரிஞ்சவன் ஒருத்தனோட அப்பா, ஆஸ்பத்திரியிலே செத்துப் போயிட்டார்.”

“யாரது?”

“நான் கோயில்லே பாக்கிற பயில்வான்.”

சுந்தரம் அவன் கைக்கடியாரத்தைப் பார்த்தான். “சீக்கிரம் பல் தேச்சுட்டு காபி சாப்பிட்டுட்டு வா. அவன் வீட்டுக்குப் போகலாம்.”

நான் ஐந்தே நிமிஷத்தில் தயாராகி விட்டேன். மன்னி கொடுத்த ஐம்பது ரூபாயை சுந்தரத்திடம் கொடுத்தேன். “நீயே வைச்சுக்கோ,” என்றான்.

விநாயக் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. வாசல் கதவு திறந்தது. “விநாயக் பயில்வான்?” என்று கூப்பிட்டேன்.

அவன் தங்கை வெளியே வந்தாள். “அண்ணா சுடுகாட்டுக்குப் போயிருக்கிறார்,” என்றாள்.

சுந்தரம் என்னிடம் சொன்னான், “அந்த அம்பது ரூபாயை அவகிட்டே கொடு.”

நான் என் பையிலிருந்து பணம் எடுத்து அவளிடம் கொடுத்தேன். அவள் ஒரு விநாடி என் கண்களைப் பார்த்தாள்.

“வா, போகலாம்...”

நாங்கள் மெயின் ரோடு வந்தவுடன் சுந்தரம் கேட்டான், “செத்துப் போனவர் பேர் என்ன”

“எனக்குத் தெரியாது.”

“அந்தப் பொண்ணு பேர்?”

“அதுவும் தெரியாது.”

சுந்தரம் என் முகத்தைப் பார்த்தான். “நான் அந்த வீட்டுக்கு ஒரே ஒரு தரம்தான் போயிருக்கேன். அன்னிக்கு அங்கே இருந்ததே அஞ்சு பத்து நிமிஷம்தான் இருக்கும். அன்னிக்கு அந்தப் பயில்வானின் அப்பாதான் பேசிண்டிருந்தார்,” என்று நான் சொன்னேன்.

சுந்தரம் ரிட்ஸ் ஹோட்டலுக்குப் போய்விட்டான். அவனுடைய பிரதானமான மோட்டார் கார்களை சர்வீஸ் செய்து பழுதுபார்ப்பது அந்தக் கொட்டகைதான். துறைமுக வெடிவிபத்தில் சிதறிப் போய்விட்டது. இப்போது சற்று உள்தள்ளி நல்ல விசாலமான இடத்தைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

நான் வீட்டுக்குப் போனதும் அம்மா கேட்டாள், “என்னடா, என்ன நடக்கிறது.”

எனக்கு என்ன அல்லது எதைச் சொல்வது என்று தெரியவில்லை. “என்னம்மா?” என்றேன்.

“நேத்திக்கு அம்பது ரூபாய் வாங்கிண்டு போனே. வீட்டுக்கு வந்து குளிச்சே. என்னது?”

“எனக்கு ஆஞ்சநேயர் கோயில்லே ஒரு சிநேகிதன். நம்ம பக்கம் இல்லே. மராட்டி. அவனோட அப்பா திடீர்னு செத்துப் போயிட்டார். நேத்திக்கு என்கிட்டேந்து பணம் வாங்கிக்கலே. வாங்கக் கூடாதோ என்னமோ. அண்ணாகிட்டே சொன்னேன். அண்ணாவே என்னை அந்த வீட்டுக்கு அழைச்சிண்டு போய் அந்த அம்பது ரூபாயைக் கொடுத்தான்.”

“அந்த வீட்டு உள்ளே போனேளா?”

“வெளியிலேந்தே கொடுத்துட்டோம். என் சிநேகிதன் சுடுகாட்டுக்குப் போயிருந்தான். பணத்தை அவன் தங்கைகிட்டே கொடுத்துட்டு வந்தோம்.”

“ஏதாவது தப்பா நினைச்சுப்பானா?”

“எனக்கும் தெரியாது. ஒழுங்கா வேலை இருந்தாலே பம்பாயிலே காலம் தள்ளறது கஷ்டம். அவன் குஸ்தியை நம்பிண்டிருக்கான்.”

“என்ன?”

“அவன் ஒரு குஸ்திச் சண்டைக்காரன்.”

“ஏதாவது வேலைக்குப் போகலாமே?”

அன்று மாலையே விநாயக் அவனுடைய தங்கையையும் அழைத்துக்கொண்டு எப்படியோ எங்கள் வீட்டைத் தேடிக் கொண்டு வந்துவிட்டான். அவன் வந்த சமயத்தில் நான் ரேஷன் கடைக்குப் போயிருந்தேன். திரும்பி வந்தபோது அவர்கள் இருவரும் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
“ஒரு நிமிஷம்,” என்று சொல்லி விட்டு நான் வாங்கி வந்த கோதுமையையும், அரிசியையும் மன்னியிடம் கொடுத்தேன். அம்மாவிடம், “இதுதான் அந்தக் கோயில் சிநேகிதன்” என்றேன்.

“அவா இரண்டு பேர்தானாமே?”

“அப்படித்தான் நினைக்கிறேன். எனக்குத் தெரியாது.”

“நான் விசாரிச்சேன். அவன் வேலைக்குப் போகலாம். ஆனால் பொண்ணு ரொம்பச் சின்னவளா இருக்காளே?”

நான் பதில் சொல்லவில்லை.

வெளியே வந்தேன். விநாயக் என் கையைப் பிடித்து நன்றி சொல்ல வந்தான். நான் அதற்கு இடம் கொடுக்காமல், “விநாயக், நீ ஏதாவது வேலைக்குப் போகணும். நான் வேலை பண்ணின சோப்பு ஃபாக்டரியிலே கிடைக்கும். உனக்குச் சரின்னா நான் வந்து சொல்லறேன்.”

அவன் கண்களில் கண்ணீர் மல்க நின்றான்.

“நாளைக்கே போகலாம். முதலில் தினக்கூலிதான். நான் டிப்ளமா வாங்கினவன். எனக்கே முதல் ஆறு மாதம் தினக்கூலிதான்.”

“எத்தனை மணிக்குப் போக வேண்டும்?” என்று அவன் தங்கை கேட்டாள்.

“இங்கேயிருந்து ஆறு மணிக்குக் கிளம்பினால் போதும். அது சரி, உங்கள் அப்பா பெயர் என்ன?”

“ஈஷ்வர். ஈஷ்வர் மாஸ்டர் என்பார்கள்” என்று விநாயக் சொன்னான்.

“உன் தங்கை பெயர்?”

“நிர்மலா. நாங்கள் போடஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சதாரா ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அங்கே நாற்பத்திரண்டில் பிரிட்டிஷ்காரர்கள் அட்டூழியம் செய்தார்கள். அதனாலேதான் நாங்கள் பம்பாய் வந்தோம்.”

“நீங்கள் பம்பாய் வந்து இரண்டு வருஷங்கள்தானா ஆகிறது?”

“ஆமாம். அங்கே பட்டாளம் இப்படி அப்படியென்று அக்கிரமம் செய்யவில்லை. ஒரு வெள்ளைக்கார சிப்பாயைத் தனியாகப் பிடித்து அவனுடைய உள்ளங்கால்களில் லாடம் அடித்துத் துரத்தினார்கள். பதிலடியாக ராணுவம் சதாராவில் கிராமம் கிராமமாகத் தாக்கினார்கள். எங்கள் அம்மா ஒரு விறகுக் கட்டை கொண்டு ஒரு சிப்பாயைத் தாக்கினாள். அவன் துப்பாக்கிச் சனியனால் அம்மா வயிற்றைப் பிளந்தான். அதெல்லாம் இப்போ எதற்கு?”

“நீ சோப் தொழிற்சாலையில் வேலை பார்த்தால் நிர்மலாவும் வேலைக்குப் போகலாம். எவ்வளவு படித்திருக்கிறாள்?”

“தேர்டு ஃபார்ம்.”

“நான் காலை ஆறு மணிக்கு இங்கே வந்து விடட்டுமா?”

“இங்கே வந்தால் நேரே ஸ்டேஷனுக்குப் போய் ஆறு பத்து வண்டியைப் பிடித்து விடலாம்.”

என் வீட்டில் என் அந்தஸ்து திடீரென்று கூடிவிட்ட மாதிரி இருந்தது. எனக்கெனப் பார்வையாளர்கள்! ஒழுங்காக இருபத்திரண்டு வயதாகவில்லை, நான் பம்பாயில் இந்த யுத்தகாலத்தில் எனக்குத் தெரிந்தவன் ஒருவனுக்கு வேலை வாங்கித் தரப் போகிறேன்!

அடுத்த நாள் நாங்கள் இருவரும் ஆறு பத்து ரயிலைப் பிடித்து தொழிற்சாலை கேட் திறந்திருக்கும்போது அனுமதி வாங்கி ஃபோர்மனைப் பார்க்கப் போனோம். அந்த நேரத்தில் வொர்க்ஸ் மானேஜர் அங்கிருந்தார். அவருக்கு விநாயக்கின் அப்பாவைத் தெரிந்திருந்தது. ஒரு படிவத்தில் விநாயக்கின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அன்றே வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். “நீ எப்போது வரப் போகிறாய்?” என்று என்னைக் கேட்டார்.

“அடுத்த மாதம் எக்ஸ்ரே எடுத்த பிறகு.”

விநாயக் என்னைத் தனியாக அழைத்து, “என் தங்கையிடம் விவரம் சொல்லி விட முடியுமா? அவள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்” என்றான்.

நான் விநாயக் வீட்டுக்குப் போன போது கதவு மூடியிருந்தது. ‘விநாயக்!’ என்று இருமுறை கூப்பிட்டேன்.

ஜன்னல் வழியாக நிர்மலா என்னைப் பார்த்தாள். “அவர் உங்களோடு சோப் ஃபாக்டரிக்குப் போவதாகச் சொன்னாரே, வரவில்லையா?” என்று கவலையுடன் கேட்டாள்.

“வந்தார். அவருக்கு நான் சொன்ன வேலையை விட நல்ல வேலையே கிடைத்துவிட்டது. உங்கள் அப்பா பெயர் அங்கு தெரிந்திருந்தது.”

நிர்மலா தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

“அவன் வேலை முடிந்து சரியாக ஐந்தரை மணிக்கு வீட்டுக்கு வந்துவிட முடியும். தைரியமாக இரு” என்று சொல்லி விட்டு நான் கிளம்பினேன்.

என் அம்மாவும், நிர்மலா வயதில் திண்டாடி இருப்பாள். சப்-இன்ஸ்பெக்டருடன் கல்யாணம் என்று குடும்பத்தில் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கணவன் வீட்டில் பேசுவதே புரியாது. ஆனால் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அவளுடைய கணவன் தப்பிப் பிறந்தவன். அதுதான் காரணமோ அற்பாயுளுக்கு?

அம்மாவுக்கு உதவுவதற்கென்று வெளி மனிதர்கள் யாரும் வரவில்லை. அவளுடைய அம்மா, அண்ணா தம்பிகளைத்தான் இரு குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது. ஏன் நம் பெண்கள் ஒரு நொடிப் பொழுதில் நிராதரவாகப் போய் யார் யார் தயவிலேயோ நிற்க வேண்டி வந்து விடுகிறது? படிப்பு இல்லை என்று சொல்லலாம். படித்து விட்டால் மட்டும் பெண்கள் எல்லா வசதியும் பாதுகாப்பும் பெற்றுவிட முடிகிறது. அம்மா படிக்கவில்லை. நிர்மலா ஓரளவு படித்திருப்பாள். மராட்டிப் பெண்கள் முடிந்தவரை படித்து விடுகிறார்கள். நிர்மலாவுக்கும் சைக்கிள் விடத் தெரியுமோ?
“என்ன ஆச்சுடா?” என்று அம்மா கேட்டாள்.

“அந்த மனுஷனுக்கு வேலை கிடைச்சுடுத்தம்மா. இவ்வளவு சுலபமா முடியும்னு நான் நினைக்கலை.”

“அவா மராட்டிக்காரா, இல்லையா?”

“அதுனாலே மட்டுமில்லை. அவருடைய அப்பாவை அங்கே தெரிஞ்சுருக்கு.”

(தொடரும்)

திடீரென்று என் வாழ்க்கை வெற்றுச் சுவர் போலத் தோன்றியது. ஆறு மாதங்களாக அப்படித்தான் இருந்திருக்கிறது. விநாயக்கின் தந்தை இறந்த கையோடு விநாயக்கை என் பழைய தொழிற்சாலையில் சேர்த்து முடித்தவுடன் எனக்கு வாழ்வதற்கே ஒரு இலக்கும் இல்லாதது போலத் தோன்றியது. இவ்வளவுக்கும் நான் விநாயக்கை ஏழெட்டு முறைதான் சந்தித்திருப்பேன். அதற்குள் என் வாழ்க்கையில் ஒரு பெரிய அத்தியாயம் முடிந்து விட்டது போலிருந்தது.

இன்னும் ஒரு வார காலத்தில் மழை தொடங்கி விடும். வீட்டோடு கிடக்க வேண்டும். ஆதலால் துறைமுகப் பகுதியைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நான் ரயில் ஏறினேன். தாதர் என்னுமிடத்தில் இறங்கிப் படியேறி அதே தாதர் என்ற பெயர் கொண்ட நிலையத்துக்குச் சென்று அங்கு இன்னொரு ரயில் ஏறினேன். அது முடியும் இடத்தில் கடல் வந்து விடும்.

நான் துறைமுகப் பக்கமாக நடந்தேன். நான் அதற்கு முன் சிறு சிறு வீடுகள் குட்டிச்சுவராக நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கே பம்பாயில் கண்ட நாசம் கற்பனை செய்து கொள்ள முடியாததாக இருந்தது. பம்பாய்த் துறைமுகம் பல மைல் தூரம். அதில் விக்டோரியா துறை கிட்டத்தட்ட மத்தியில், வெடித்த சரக்குகளும் கப்பலும் அநேகமாக எல்லாமே யுத்த தளவாடங்கள்; வெடிப் பொருள்கள். சுற்று வட்டாரத்தில் தரை மட்டமாக ஆகக்கூடியவை தரைமட்டமாகி விட்டன. அங்கோர் இடம் இங்கோர் இடத்தில் ஒரு தூண், அல்லது ஒரு சுவர். ஒரு சுவரில் மரஜன்னல் கருகிப் போய் இரும்பினால் ஆனது போலிருந்தது. நான் போன போது மனித உடல்கள், கை கால்கள் எல்லாம் அநேகமாக விலக்கப்பட்டு விட்டன.

சாலைகளில் வண்டிகள் ஒரு வரிசையில் போகிறபடி இடிபாடுகளைச் சுவரோரமாகத் தள்ளியிருந்தார்கள். தனியார் லாரிகளும் பம்பாய் கார்ப்பரேஷன் லாரிகளும் இடிபாடுகளை வேறொரு இடத்தில் கடலில் கொட்டின. அந்த இடம் ஓரளவு பழைய படியாகப் பல மாதங்கள் ஆகும் போலிருந்தது. யுத்த காலமாதலால் துறைமுகப் பகுதி கடுமையான காவலில் இருந்தது. அது விபத்து தான், ஒற்றர்களின் நாசவேலை அல்ல என்று முடிவு செய்ததில் மனிதவேட்டை குறைந்திருந்தது. நான் பயந்து பயந்துதான் அங்கு ஓரமாக நடந்து சென்றேன். மழை தூறியது.

மழையில் நனையக்கூடாது என்று நான் ரயில் நிலையம் திசையில் ஓடினேன் ஆனால் நொடிப் பொழுதில் மழை பெரிய சூறாவளி போல வீசத் தொடங்கியது. தெருக்கள் காலியாகிவிட்டன. மழை பெரிய தண்ணீர்க் கற்கள் போல சாலையில் விழுந்து சிதறியது.

நான் துறைமுகப் பகுதியைக் கடந்து விட்டாலும் கடலை ஒட்டிய சாலையில் தான் ஓடிக் கொண்டிருந்தேன். பிரம்மாண்டமான அலைகள் கரையைக் கடந்து சாலையிலும் பாய்ந்தன. கிடுகிடுவென சாலையே ஒரு ஆறு போல ஆயிற்று. எங்கோ ஒரு சாலைச் சாக்கடை மூடி பிய்த்துக் கொண்டு பறந்து போய், அந்தத் துவாரத்திலிருந்து தண்ணீர் சாலையில் பீய்ச்சியடித்தது.

எனக்கு ஒதுங்குவதற்கு எங்கும் இடம் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் கேட் திறந்திருந்தது. பழங்காலக் கட்டடம். அது வீடா அலுவலகமா தெரியவில்லை. ஆனால் அந்த நாள் பாணியில் வண்டிகள் வந்து நிற்க போர்ட்டிகோ இருந்தது. அங்கே ஒண்டிக் கொண்ட ஐம்பது அறுபது பேர்களுடன் நானும் ஒண்டிக் கொண்டேன். எல்லாருமே தொப்பலாக நனைந்திருந்தார்கள்.

மழை மேலும் மேலும் அதிகரித்தது. இருட்டவும் தொடங்கியது. எனக்கு உதறத் தொடங்கியது. என் பக்கத்தில் நின்ற குஜராத்திக்காரர் என்னைக் கெட்டியாக அணைத்துப் பிடித்தார். இந்த உதறலைக் கட்டுப்படுத்தாவிட்டால் நீ இங்கேயே செத்துப் போய்விடுவாய்" என்று சொன்னார். உனக்கு டி.பி. வந்ததா?" என்று கேட்டார். ஆமாம் என்றேன். எதற்காக இந்த மழையில் கிளம்பினாய்? வீடு எங்கே இருக்கிறது?" என்று கேட்டார்.

நான் சொன்னேன். மழையையும் பொருட்படுத்தாது ஒருவர் இருவராக அந்த இடத்தை விட்டு அகன்றனர். என் உதறல் சற்று அடங்கியது. இப்போது குஜராத்திக்காரரே என்னைக் கேட்டார், சர்ச் கேட் வரை ஓடிப் போகலாமா?"

சரி என்றேன். இருவரும் அந்தப் பேய் மழையில் அரையிருட்டில் ஓடினோம். சர்ச் கேட் நிலையத்தில் சொல்லி முடியாத நெரிசல். பிளாட்ஃபாரத்திலிருந்து ரயிலில் ஏறச் சிறிது நேரம் திறந்தவெளியிலிருப்பதைத் தவிர்க்க முடியாது. கூட்டமே அவனை ரயில் பெட்டியில் ஏற்றிவிட்டது. உள்ளே எல்லாருமே சொட்டச் சொட்ட நனைந்தவர்கள்.

அந்த நாளில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் மின்விசிறி கிடையாது. மழை இரு ரயில் நிலையங்கள் தாண்டிய பிறகு நின்று விட்டது. சில பகுதிகளில் மழை பெய்யவே இல்லை. மிகவும் சிரமப்பட்டு தாதர் நிலையத்தில் இறங்கினேன். மழையில் நனைந்து கொண்டே மேம்பாலத்தில் ஏறி நடந்து இன்னொரு தாதர் நிலையத்தை அடைந்தேன். வீட்டில் அம்மா, அண்ணா, மன்னி மூவரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, துடைச்சுக்கோ," என்றார்கள். அன்று நன்றாகத் தூங்கினேன்.

மழையோ, வெயிலோ தினக்கூலிக்காரர்கள் நாள் தவறாமல் போக வேண்டும் என்பதை விநாயக்கிடம் நான் சொல்லவில்லை. அது என்னை உறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் பத்து நாட்கள் வெளியே போக முடியாதபடி மழை கொட்டித் தீர்த்து விட்டது. ஓவர்கோட் போட்டுக் கொண்டு சுந்தரம் ரிட்ஸ் ஹோட்டலுக்குப் போய் வந்தான். அவனுக்குப் பால் டப்பாக்கள் வாங்கத் தெரிந்தது. காய்கறி வாங்கத் தெரியவில்லை. நாங்கள் ஒரு வாரம் வத்தல் குழம்பு சாதம் சாப்பிட்டுச் சமாளித்தோம். டப்பாப் பால் குழந்தைக்கு.

மழை ஓயவில்லை. நாங்கள் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடந்தோம். அந்த மழையிலும் கதவை யாரோ தட்டுவது கேட்டது. அம்மாதான் கதவைத் திறந்தாள். வெளியே சொட்டச் சொட்ட நனைந்த ஒரு பெண் சிறு குடையோடு நின்றாள். அம்மா ஒரு பழைய துண்டைக் கீழே விரித்து, இங்கே நில் என்பது போல கையைக் காட்டினாள். அந்தப் பெண் தயக்கத்துடன் உள்ளே வந்து நின்றாள். அது விநாயக்கின் தங்கை நிர்மலா.

என்ன?" என்று நான் கேட்டேன்.

அண்ணா இன்னும் வரவில்லை."

எப்போதும் எப்போது வருவார்?"

மழையிலும் ஆறரை ஆறே முக்காலுக்கு வந்து விடுவார். இன்று இன்னும் காணோம்."

அண்ணா சொன்னான்: இந்த மழை நாளில் சில சமயங்களில் ரயில் வராது. அவர் ஃபாக்டரியிலேயே இருப்பார்."

அவள் அழ ஆரம்பித்தாள். அம்மா சுந்தரத்தைக் கேட்டாள். நாம என்னடா பண்ண முடியும்?"

உங்க அண்ணா பத்திரமாக இருக்கிறார். பொழுது விடிந்தபின் நான் விசாரிக்கிறேன். அவர்கள் பம்பாய் ஆபீஸ் சர்ச் கேட்டருகில்தான் இருக்கிறது. இப்போது யாரும் இருக்க மாட்டார்கள்."

அவள் அழுகையை நிறுத்தித் திரும்பிப் போக இருந்தாள். அம்மா சொன்னாள்: இந்த இருட்டிலும் மழையிலும் அவளை எப்படீடா அனுப்ப முடியும்?"

என்ன பண்ணணும்னு சொல்லறே?"

அவளை இங்கேயே படுத்துண்டு காலையிலே போகச் சொல்லு."

நான் மராட்டியில் நிர்மலாவுக்கு அம்மா சொன்னதைச் சொன்னேன். அவள் தயங்கினாள். அண்ணன் இரவு வந்து விட்டால்?"

அம்மா அவ்வளவு கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. அம்மாவுக்குப் பெண் பிறக்கவில்லை. மன்னியை அவளால் மகளாக நினைத்துப் பார்க்க முடியவில்லை.

எனக்கும் நிர்மலாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சினிமாக்களில் ஒரு அண்ணன், எந்நேரமும் தங்கையைப் பாதுகாத்து, அவளுக்கு அவள் மனம் போலத் த ிருமணம் செய்வித்து அவளுக்காக உயிரையே விடுவான். ஆனால் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு சிக்கலான இழைகள்!

ஏண்டா, அந்தப் பொண்ண இந்த இருட்டுலேயும் மழையிலேயும் தனியாகப் போக விடலாமா?" என்று அம்மா கேட்டாள்.

போனா நாம இரண்டு பேருமாத்தான் அவளைக் கொண்டு போய் விட முடியும்."

இரண்டு குடை இருக்கே, கொண்டு போய் அவ வீட்டுலே சேத்துடலாம்."

நான் நிர்மலாவை நிர்மலா, நிர்மலா!" என்று கூப்பிட்டேன்.

அவள் திரும்பி வந்தாள். ஒரு நிமிஷம் இரு. அம்மாவும் கூட வருகிறார். உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறோம்."

உங்களுக்கு ஏன் கஷ்டம்?"

அம்மா குடைகளுடன் வந்து விட்டாள். அம்மாவும், நிர்மலாவும் ஒரு குடையுடனும், நான் இன்னொரு குடையுடனும் நடந்தோம். பம்பாய் மழையில் தெருவில் தண்ணீர் ஆறாக ஓடும். மிகச் சில இடங்களில்தான் தேங்கும். பெரும்பாலான இடங்களில் மழை நின்றதும் தெரு நன்றாகக் கழுவி விட்ட மாதிரி இருக்கும்.
ஆஞ்சநேயர் கோயிலை மூடியாயிற்று. அதைத் தாண்டி அடுத்த தெருவையும் தாண்ட விநாயக் இருந்த குடியிருப்பில் நுழைந்தோம். அந்தச் சந்துகளில் ஓரளவு மக்கள் நடமாட்டம் இருந்தது. மேடான பகுதியானதால் அதிகம் தண்ணீர் இல்லை. அவள் வீட்டை அடைந்தோம். இடுப்பில் முடிந்திருந்த சாவி கொண்டு நிர்மலா வாயில் பூட்டைத் திறந்தாள். அவள் சொன்னது நிஜந்தான். எதிர்த் திண்ணையில் விநாயக் ஒண்டிக் கொண்டிருந்தான். எங்களைப் பார்த்துப் பரபரத்து ஓடி வந்தான்.

என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

ஒன்றும் ஆகவில்லை. நீ ஏன் இன்னும் வரவில்லை என்று உன் தங்கை விசாரிக்க வந்தாள்."

விநாயக் ஏதும் சொல்லத் தெரியாது நின்றான். அப்போதும் யாரும் எதிர்பாராதபடி அம்மாவின் காலில் நிர்மலா விழுந்து நமஸ்கரித்தாள்.

அவன் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று சொன்னாலும், நாங்கள் விநாயக்கிடம் ஒரு குடையைக் கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுக்குக் கிளம்பினோம். வழியெல்லாம் அம்மா தனக்குள்ளேயே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தாள்.

நாங்கள் வீடு திரும்பியவுடன், இந்த மழையிலே நீ எங்கேம்மா போயிருந்தே?" என்று சுந்தரம் கேட்டான். ஒரு சிறு கோபம் அவன் குரலில் இருந்தது.

கொட்டற மழையிலே நம் வீட்டைத் தேடி ஒரு சின்னப் பொண்ணு நடந்து வந்திருக்கு. அதைப் பத்திரமா அவ வீட்டிலே போய்ச் சேர்க்க வேண்டியது நம்ம பொறுப்பில்லையா?"

மணி மட்டும் போனாப் போறாதா?"

போறாது."

அம்மா எவ்வளவு தெளிவாகவும், தீர்மானமாகவும் இருக்கிறாள். அவளுக்கும்தான் அப்படி என்ன வயதாகிவிட்டது? நாற்பத்திரண்டு நாற்பத்தி மூன்று இருக்கும். அதில் பாதி நாட்களாக வெள்ளைப் புடைவையில் இருந்து வருகிறாள்!

அன்று இரவு படுத்தவுடனே தூங்கி விட்டாலும், அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது. நிர்மலா கொட்டும் மழையில் வந்தது, நானும் அம்மாவுமாக அவளை வீட்டில் கொண்டு போய் விட்டது, விநாயக் எதிர் வீட்டில் ஒண்டிக் கொண்டு தவித்திருந்தது, அம்மா சிறிது கண்டிப்பாகவே சுந்தரத்துடன் பேசியது, எல்லாமே எனக்கு ஏதோ வரப் போகும் பெரிய நிகழ்ச்சிக்கு சகுனமாகத் தோன்றியது. வீட்டில் பெரிய ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்காவிட்டாலும் ராகு காலம், செவ்வாய்-வெள்ளி-சனி நாட்களைச் சாதாரணமாகக் கருத முடிந்ததில்லை. யார் இந்த குஸ்திப் பயில்வான்? நான் ஏன் அவன் அப்பாவைத் தேடிக் கொண்டு பொது மருத்துவமனைக்குப் போனேன்? இதெல்லாம் கூடப் பெரிய விஷயமாக இல்லாது போய் விடலாம். நான் அவனுக்கு வேலை தேடித் தருகிறேன். அவன் தங்கை அவனைத் தேடி எங்கள் வீட்டுக்கு வருகிறாள்!

இந்தப் பரபரப்பெல்லாம் ஓரிரு நாட்களில் தணிந்து விட்டது. சுந்தரம் எப்போதும் போல சகஜமாக இருந்தான். மழை நாட்களிலும் அவன் தொழிற்சாலை வேலை ஏதோ ஒரு மாதிரி நடந்து வந்திருக்கிறது. மழை விட்டு விட்டால் பழையபடி வேலைக்கு, காலையில் போய் இரவுதான் வீடு திரும்ப வேண்டும்.

மழை குறையத் தொடங்கியது. அப்புறம் பம்பாய்ப் பகல்கள் பரபரப்பு மிகுந்ததாக மாறத் தொடங்கின. விநாயக் ஒருநாள் வீட்டுக்கு வந்து குடையைத் திருப்பிக் கொடுத்துப் போனான். நான் இரண்டு நாட்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை கோயிலுக்குப் போய் வந்தேன். மழையில் கோயில் கூரை ஒழுகியிருந்ததோ என்னமோ, செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் பளிச்சென்று தெரிந்தார். எனக்கு விநாயக் வீட்டுக்குப் போக வேண்டுமென்று ஓரிருமுறை தோன்றியது. ஆனால் அங்கே அவனுடைய தங்கை தனியாக இருப்பாள். அந்தக் குடியிருப்பில் அது தவறில்லை. ஆனால் நான் விநாயக் வீட்டுக்கு அவனிருக்கும் போது தான் போக வேண்டும். அவன் இன்னமும் தினக்கூலியாகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆதலால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அவன் வேலைக்குப் போய் விடுவான்.

ஒரு வெள்ளிக்கிழமை. அண்ணா சுந்தரம் சாப்பிட்டு விட்டு ரிட்ஸ் ஹோட்டலில் கையெழுத்துப் போட்டு விட்டு அப்படியே அவனுடைய தொழிற்சாலை இடத்துக்கும் போய் விட்டு வர வேண்டும். அவன் வெளியில் போனவுடன் அம்மா,நீ அந்தப் பொண்ணை இன்னிக்கு வந்து வெத்தலை பாக்கு வாங்கிண்டு போகச் சொல்லறியா?" என்று கேட்டாள்.

எனக்கு முதலில் சற்றுப் புரியவில்லை. யாரை?" என்று கேட்டேன்.

உன் சிநேகிதன் தங்கையைத்தான். அவள் பேர் கூடச் சொன்னாளே?"

நிர்மலா."

நிர்மலா, நிர்மலா அந்த மழையிலே நான் அவளைச் சரியாகப் பார்க்கலே. அவளை நாலு நாலரை மணிக்கு வரச் சொல்லேன்."

நாங்கள் அண்ணன்-தம்பி இருவருமே அம்மா சொல்லைத் தட்டியதில்லை. ஏன், எதற்கு என்று கேட்டாலும் கடைசியாக அவள் சொன்னதுதான்.

நான் கிளம்பினேன். அவன் வீடு ரொம்ப தூரமோ? அன்னிக்கு மழையிலே ஒண்ணுமே புரியலை."

என்ன, ஒரு பதினைஞ்சு இருபது நிமிஷம் நடக்கணும். நடக்கிறது கூட ரொம்ப நாழியாகாது. இரண்டு தடவை ரோட்டைக் கடந்து போகணும்."

அவ தனியா வெளியே வருவாளோ இல்லையோ?"

அவன் காலையிலேயே போயிட்டால் வீட்டுச் சாமானெல்லாம் அவதானே வாங்கணும்?"

இந்த ஊர்ப் பெண்கள் எல்லாம் தைரியமா இருக்கா."

துணிச்சலா இருக்கிறவா எல்லா ஊரிலேயும் இருக்கா."

நான் கிளம்பி விட்டேன். அம்மாவுடைய தைரியத்துக்கு என்ன குறைவு? அப்பா செத்துப் போனப்புறம் அவள் பிறந்த வீடு சென்றாலும் இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்துக் கொண்டு அவளையும் பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கிறாள்! வாயே திறக்காமல் இரு பையன்களையும் ஆளாக்கியிருக்கிறாள்.

என்னைப் பார்த்தவுடன் நிர்மலா பரபரப்புடன், வாருங்கள், வாருங்கள்" என்று உள்ளே அழைத்து அவள் வீட்டில் உறுதியாக இருந்த ஒரு மர முக்காலியை எனக்கு எடுத்துப் போட்டாள். மிகச் சிறிய வீடு. ஆனால் அதுவும் சாமானேயில்லாது காலியாகக் கிடந்த மாதிரி இருந்தது. இரண்டு வஜ்ரம் பாய்ந்த கர்லாக் கட்டைகள் ஒரு மூலையில் நிறுத்தி வைத்திருந்தது. நான் அவற்றைப் பார்த்தேன்.

அண்ணா இப்பவும் அரைமணி நேரம் பழகிவிட்டுத்தான் வேலைக்குப் போனான்" என்று நிர்மலா சொன்னாள்.

எங்கள் அம்மா உன்னை இன்று மாலை வீட்டுக்கு வரச் சொன்னாள்."

என்னையா?"

ஆமாம். உன்னைத்தான்."

எனக்குக் கொண்டு வர ஒன்றுமே இல்லை. எங்கள் சப்பாத்தி எல்லாம் கூடக் கட்டை மாதிரி இருக்கும்."

அப்படியா?"

ஆமாம். சோளமில்லையா? அதில் இரண்டைத்தான் அண்ணா பகல் சாப்பாட்டுக்கு எடுத்துப் போவார்."

அண்ணா சந்தோஷமாக இருக்கிறாரா?"

உங்கள் புண்ணியத்தில்."

நீ ஒன்றும் கொண்டு வர வேண்டாம். வீட்டுக்கு வா. அவ்வளவுதான். வழி ஞாபகம் இருக்கிறதில்லையா?"

ஆம் என்று சொல்வது போல அவள் தலையை அசைத்தாள்.

நான் வருகிறேன்," என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அந்தச் சிறு சந்திலேயும் என்னைக் கவனித்தவர்கள் இருந்தார்கள். ஒரு வீட்டுத் திண்ணையில் பீடி குடித்துக் கொண்டிருந்த ஒரு வற்றல் கிழவர், உன் வஸ்தாது தோழன் தினக்கூலிக்குப் போகிறானாமே?" என்று கேட்டார். நான் பதில் பேசாமல் அவரை வணங்கி விட்டு நகர்ந்து விட்டேன். பம்பாய் பெரிய நகரம்தான். அங்கே நல்லவர்கள் கெட்டவர்கள் நிறையவே இருக்கக்கூடும். ஆனால் தெரிந்த ஒரு ஏழைக் குடும்பத்துக்கு நான் ஏன் வம்பு வரக் காரணமாக இருக்க வேண்டும்?

அம்மா பேச்சைத் தட்டாமல் நிர்மலா நான்கு மணியளவில் எங்கள் வீட்டுக்கு வந்தாள். தயங்கிய படிதான் வீட்டுக் கதவைத் தட்டினாள். மன்னி கதவைத் திறந்தாள்.

வா, வா. உள்ளே வா."

நிர்மலா உள்ளே வந்தாள். அவள் செருப்பே போடாமல் வந்திருக்கிறாள். ஒருவேளை அவளுக்குச் செருப்பு இல்லையோ?

ஒரு பாயை விரித்துப் போட்டு மன்னி உட்கார்ந்து நிர்மலாவையும் உட்காரச் சொன்னாள். மன்னி அவளைக் கேட்டாள், உன் பெயர் என்ன?"

நிர்மலா போடஸ்."

போடஸ் என்று ஒரு ஜாதி இருக்கிறதா?"

ஜாதி என்று பார்த்தால் நாங்கள் யாதவர்கள். யாதவர்கள் மாடு வளர்ப்பார்கள், குஸ்தி போடுவார்கள்."

மாமிசம் சாப்பிடுவீர்களா?"

நாங்கள் மாட்டை வணங்குபவர்கள்."

அம்மாவும் வந்து உட்கார்ந்து கொண்டாள். மணி, நீ கொஞ்சம் வெளியே போய்விட்டு வாயேன்," என்றாள்.

அம்மா சொன்னது முதலில் புரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகுதான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு நான் இருக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று தெரிந்தது.

நான் டிராம் ஓடும் சாலையை அடைந்தேன். அது பரேல் வரை நேர்கோடாக இருக்கும். நான் எதிர் திசையில் சென்றேன். அங்குதான் அரோரா என்ற பெயர் கொண்ட சினிமாக் கொட்டகை இருந்தது. நகரின் பெரிய அரங்குகளில் பார்க்கத் தவறிய ஆங்கில மொழிப் படங்களை அரோராவில் பார்த்து விடலாம். சனி, ஞாயிறுதான் பகல் மூன்று மணிக் காட்சி. இதர நாட்களில் இரண்டே காட்சிகள். நான் போன போது, அங்கு எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்திருந்தார்கள். முன் வராந்தாவில் ஒரு கண்ணாடி அலமாரியில் அன்று ஓடிக் கொண்டிருந்த படத்தின் காட்சிகள். இன்னொரு கண்ணாடி அலமாரியில் அடுத்து வரப்போகும் படங்கள். எரால் ஃபிளின் நடித்த ‘ஸீ ஹாக்’ அடுத்த வாரம். நான் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அது சரித்திரக் கதை என்று தெரியும். ஆனால், யாருடைய சரித்திரம், கதை எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்றெல்லாம் தெரியாது. ஆனால், படத்தில் யார் கதாநாயகன், யார் கெட்டவன் என்று தெரியும். சினிமாப் படங்களே நல்லவன் கெட்டவன் சண்டை பற்றியதுதான்.

ஒரு மணி நேரம் பொறுத்து வீட்டுக்குத் திரும்பினேன். அதற்குள் நிர்மலா கிளம்பிப் போயிருந்தாள். மன்னி அவளுக்கு மஞ்சள் குங்குமத்துடன் புடைவையும் கொடுத்திருந்தாள்.

மாலை ஆறு மணிக்கு அண்ணா வந்த போது அவனுடைய காலணியைக் கூடக் கழற்றாமல், அம்மா! அம்மா!" என்று கூப்பிட்டான்.

என்னடா? நான் இங்கேயே இருக்கேனே, ஏன் கத்தறே?"

எங்க புது ஃபாக்டரி கட்டியாச்சு. திங்கட்கிழமைலேர்ந்து அங்கேதான் வேலை."

அதுக்கென்ன?"

ஆனால், நான் அங்கே போகலை. என்னை ஒரு வருஷம் அமெரிக்காவுக்கு அனுப்பறாங்க."

ஒரு வருஷமா?"

அதோட எனக்கு டெபுடி மானேஜராகப் புரமோஷன்."

மணி சமாச்சாரம்?"

சொல்லி வைச்சுட்டேன். நான் கிளம்ப எப்படியும் ஒரு மாதம் ஆகும். அவனை வர திங்கட்கிழமையிலேர்ந்தே எங்க வொர்க் ஷாப்பிலேயே சேர்த்துக்கப் போறாங்க. மெடிகல் டெஸ்ட் மட்டும் மறுபடியும் இருக்கும்."

அம்மா சிறிது நேரம் பேசவில்லை. மன்னி, அண்ணாவுக்கு டீ போட்டுக் கொண்டு வந்தாள்.

அண்ணா கேட்டான், என்னது, கீழே பூ குங்குமம் விழுந்திருக்கே?"

நம்ம வீட்டுக்கு ஒரு லட்சுமி வந்தா."

யாரு?"

அந்த மராட்டிப் பொண்ணு."

மழையிலே நனைஞ்சுண்டு வந்துதே?"

அதுதான். அது வெறுமனே வரலை. மணிக்கு வேலையும் உனக்குப் புரமோஷனும் கொண்டு வந்தா."

அண்ணாவின் பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு ஒரு ஐ.சி.எஸ். அதிகாரியின் கையெழுத்து வேண்டியிருந்தது. பம்பாய் ராஜதானியில் ஒரு பாலக்காட்டுக்காரர் பெரிய பதவியில் இருந்தார். ஒருநாள் காலை அண்ணா, அம்மாவையும் அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கப் போனான். அரை மணி நேரத்தில் அவரைப் பார்த்துக் கையெழுத்தும் வாங்கிவிட்டான். ரப்பர் ஸ்டாம்ப் மட்டும் அவருடைய அலுவலகத்தில் தலைமை எழுத்தரைப் பார்த்துப் போட்டுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். அம்மாவும் அண்ணாவும் கிளம்பும் நேரத்தில் பையனுக்குக் கால்கட்டு போட்டாச்சா? என்று கேட்டிருக்கிறார். இதை வீட்டில் சொல்லி, “அவருக்குப் பெண் இருக்கும்,” என்று அம்மா சொன்னாள். மன்னி பேசவேயில்லை.

எனக்குத் தெரிந்த அளவில் விசாரித்தேன். அவருக்குப் பெண்களே கிடையாது. இதை அம்மாவிடம் சொன்னபோது, “அவருக்கில்லாமல் போனால் அவருடைய அக்கா தங்கைக்கு இருக்கலாமில்லையா?” என்றாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் விநாயக் வீட்டுக்குப் போனபோது, நிர்மலாவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு விநாயக் சொன்னான், “நான் ஒரு வருஷம் எங்கோ போய் இருக்க வேண்டுமென்றால் அது பெரிய காரியமில்லை. ஏன், நீ கூட ஒரு வருஷம் தனியாக இருந்துவிடலாம். ஆனால், உன் அண்ணன் சிறுவயதிலேயே திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டவன். அதனால்தான் அந்த அதிகாரி கேட்டிருக்கிறார்,” இந்தக் கோணம் வேறு யாருக்கும் தோன்றவில்லை.

எப்போதும் சீருடையே போட்டிருக்கும் அண்ணாவுக்கு சூட் தைத்தது ஒன்று போதாது, இரண்டு தைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அண்ணா அப்போதுதான் அவனுடைய மேனேஜரைக் கேட்டிருக்கிறான். “உனக்குப் பயணச் செலவுக்காக ரூபாயாக ஆயிரத்தைந்நூறும் அமெரிக்க டாலராக நூறும் எப்போதோ எடுத்து வைத்திருக்கிறதே, உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். விமானப் பயணத்தின்போது எதை எடுத்துப் போகலாம், எது கூடாது என்றில்லை. ஆனால் கைப்பை யையும் சேர்த்து ஐம்பது ராத்தல்கள் எடுத்துச் செல்லலாம். நாங்கள் ஒரு மளிகைக் கடைக்குச் சென்று பெட்டியை எடை போடுவோம். அது பெரிய தராசு. அதன்முள் அப்படியும் இப்படியுமாக ஆடும்.

இதற்குள் என்னுடைய மெடிக்கல் செக்கப் நடந்து எனக்கு டி.பி. பூரணமாகக் குணமாகிவிட்டது என்றார்கள். ஆனால் அண்ணா ஊருக்குப் போவதற்கு முன் எனக்கு நியமனச் சீட்டு கிடைக்க வாய்ப்பில்லை.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து அண்ணா ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. நாங்கள் ஒரு டாக்சி ஏற்பாடு செய்து கொண்டு சாண்டா குரூஸ் விமான நிலையம் சென்றோம். அந்த நாளில் பம்பாயில் அது ஒன்றுதான் பம்பாய்க்கு விமான நிலையம். அன்று நிலையத்துள் செல்ல அனுமதிச் சீட்டு என்றெல்லாம் கிடையாது. வாரம் ஒருமுறை லண்டனுக்கு விமானம். அங்கிருந்து இன்னொரு விமானம் ஏறி நியூயார்க் செல்ல வேண்டும். அங்கிருந்து இன்னொரு விமானம் ஏறி சிகாகோ நகரம் செல்ல வேண்டும். அங்கிருந்து டெட்ராய்ட் நகருக்கு அழைத்துச் செல்ல அண்ணாவின் கம்பெனி கார் வந்துவிடும்.

சாண்டா குரூஸ் விமான நிலையத்துக்கு விநாயக்கும் அவன் தங்கையும் வந்திருந்தார்கள். அந்த ஒரு நாளைக்காக விநாயக்கின் சம்பளத்தில் பதினைந்து ரூபாய் பிடித்துவிடுவார்கள். அம்மாவும் மன்னியும் நிர்மலாவைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த மாதிரி இருந்தது. அண்ணாவின் சிநேகிதர்கள் அவனை மொய்த்துக் கொண்டு அவன் மன்னியுடன் பேசவோ குழந்தையுடன் கொஞ்சவோ முடியாதபடி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வருடம் ஒரு மாதம் பதிமூன்று மாதங்கள் அவன் மன்னியைப் பார்க்க முடியாது. குழந்தையைப் பார்க்க முடியாது. அவன் ஊர் திரும்பும்போது குழந்தை அவனை ஒரு புது மனிதன் போலப் பார்க்கும்.

விநாயக்தான் அந்தக் கூட்டத்தில் புகுந்து, “அவரை மனைவி மற்றும் அம்மாவுடன் பேச விடுங்கள்,” என்றான். அவன் ஜிப்பா போட்டுக்கொண்டிருந்தால் கூட அவன் ஒரு பயில்வான் என்று சந்தேகமாகத் தெரிந்தது.

அண்ணா கஸ்டம்ஸ் அறைக்குள் சென்றான். அதன்பிறகு அவன் விமானம் வரை நடந்து போகும்போது நாங்கள் பார்த்துக் கையை வீச முடிந்தது. அவன் விமானத்தில் ஏறியும் அரை மணி நேரம் விமானம் நின்று கொண்டிருந்தது. பின்பு அரை மனதாகக் கிளம்புவது போல நகர்ந்தது.

விமானம் கண்ணுக்குத் தெரியும்வரை நாங்கள் நிலையத்திலேயே இருந்தோம். யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. அப்புறம் டாக்சி அருகே போனோம். அப்போது அம்மா, “இந்தப் பொண்ணும் நம் கூடவே வந்துவிடட்டுமே,” என்றாள். ஆனால் டாக்சியில் விநாயக்குக்கும் கூட இடம் இருந்தது. நாங்கள் வீடு திரும்பும் வரை மீண்டும் மௌனம்.

நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மா அழ ஆரம்பித்தாள். “அவனுக்கு யார் சாப்பாடு போடுவா, அவன் வாய்க்குப் பிடிக்குமா, ஒரு வருஷம் ஜலதோஷம் சுரம் வராமல் இருக்க வேண்டுமே” என்றெல்லாம் சொல்லி அழுதாள். நிர்மலா தான் பெரிய மனுஷிபோல அம்மாவைக் கட்டிப்பிடித்து “எல்லாம் நல்லதாகவே இருக்கும். அவர் ராஜா போலத் திரும்பி வருவார்” என்றாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மாவை மன்னிகூடத் தொடப் பயப்படுவாள். ஆனால் ஒரு மராட்டிப் பெண் சர்வ சகஜமாகக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்கிறாள்!

நாங்கள் விமான நிலையத்திலிருந்து பகல் இரண்டு மணிக்கே வீடு திரும்பிவிட்டாலும், நிர்மலா நன்றாக இருட்டும் வரை வீட்டில் இருந்துவிட்டுப் போனாள். அவள் போன பிறகு வெகு நேரம் அம்மா ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று என்னைப் பார்த்து, “மணி, இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ,” என்றாள்.

எனக்கு வெலவெலத்து விட்டது.

“நீயும் சந்தோஷமா இருப்பே, நாங்களும் சந்தோஷமா இருப்போம்.”

“அவ மனுஷாளைக் கேக்க வேண்டாமா?”

“ஊர்லே அத்தனைபேரையும் வெள்ளைக்காரங்கச் சுட்டுக் கொன்னிருக்காங்க.”

“மன்னி மனுஷாளை எல்லாம்?”

“அவாளை என்ன கேக்கறது? என்னைக் கேட்டாளா?”

“மன்னி?”

“மன்னிதான் இந்த யோசனையைச் சொன்னா.”

(முற்றும்)



http://solvanam.com/?author_name=asokamithran
http://solvanam.com/?issue=100

சிறப்புப் பகுதி: அசோகமித்திரன் - நேர்காணல்: “என் எழுத்து மனிதர்களுக்கு செய்யும் மரியாதை” | காலச்சுவடு |

சீரிய இலக்கிய வாசகனைக் குதூகலப்படுத்தும் எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன். அவரது புனைகதைகள் தரும் வாசிப்பு இன்பத்துக்கு இணையாகவே கட்டுரைகளும் வாசிப்புக்கு உகந்தவை. அதைப்போலவே அவரது மேடைப் பேச்சுகளும் உரையாடலும் உத்வேகத்தையும் புதிய தகவல்களையும் நுட்பமான நகைச்சுவையையும் தருபவை, அவரது புனைகதைகளை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளத் துணைசெய்பவை. படைப்பெழுத்துக்கு நிகராகப் புதிய உலகைத் திறந்து வைப்பவை அவரது நேர்காணல்கள்.

‘காலச்சுவடு’ இதழுக்காக அசோகமித்திரனுடன் நேர்காணல் நடத்துவது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. கண்ணன் முன்வைத்த யோசனையை அப்போதைய பொறுப்பாசிரியர் தேவிபாரதி தெரிவித்து நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யலாம் என்று திட்டமிட்டார். நீண்ட தாமதத்துக்குப் பின்பே திட்டம் செயல்வடிவம் பெற்றிருக்கிறது.

நேர்காணலுக்கு இசைவு கேட்டு அசோகமித்திரனுக்கு எழுதிய மின்னஞ்சலுக்கு அவர் அளித்த பதில் இது.

‘சிறுகதை கிடைத்துவிடும் ஆனால் நேர்காணல் அவசியமா? அவசியம் என்று தோன்றினால் கேள்விகளை எழுதி அனுப்பினால் நான் பதில்களை அனுப்பிவிடுகிறேன். தாங்கள் வந்துதான் தீரவேண்டும் என்றால் ஆகஸ்ட் 9 அல்லது 10 சரியாக இருக்கும். ஆனால் அதைத் தவிர்க்கப் பாருங்கள்.’

மதிப்புக்குரிய படைப்பாளியுடன் உரையாடும் வாய்ப்பைத் தவிர்க்க விரும்பவில்லை. அதன் விளைவு இந்த நேர்காணல்.

திருவனந்தபுரத்திலிருந்து நானும் ஈரோட்டிலிருந்து தேவிபாரதியும் புறப்பட்டு சென்னை சென்று நேர்காணலை நடத்தினோம். ஆகஸ்ட் 9ஆம் தேதி பிற்பகல் சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் உள்ள அசோகமித்திரன் இல்லத்தில் நேர்காணல் நடைபெற்றது.

எண்பத்து மூன்று ஆண்டுகளைச் சுமந்த முதுகுக்கூனல், எச்சரிக்கையான நடை, பனியன் வேட்டி அணிந்த தோற்றம். உடலில் வயதின் சோர்வு தென்பட்டாலும் பேசத் தொடங்கியதும் உற்சாகமானார். சுமார் 2.30 மணிநேரம் நடந்த நேர்காணலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.

“ஒரு எழுத்தாளனோட 20 பக்கப் பேட்டியை வாசிப்பதைவிட அவனுடைய பக்க இரண்டு சிறுகதையை வாசித்தே வாசகனால் அந்த எழுத்தாளனைப் புரிந்துகொள்ள முடியும்” என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன். இது அவரை வாசித்தவர்கள் மேலும் நெருக்கமாக அறிந்துகொள்வதற்குச் செய்த முயற்சி.

- சுகுமாரன்

இதற்காகவே திருவனந்தபுரத்திலிருந்து வந்திருக்கிறீர்களா?

ஆமாம். இந்த நேர்காணலைக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே திட்டமிட்டோம். நடக்கவில்லை. சென்னையில் சமீபத்தில் நடந்த ‘அசோகமித்திரனை வாசித்தல்’ கருத்தரங்கம் இதற்கான தூண்டுதலைக் கொடுத்தது. சொல்லப்போனால் இது நீண்ட கால ஆசை. 1977இல் என்று நினைவு. நீங்கள் கோயம்புத்தூர் வந்திருந்தீர்கள். அப்போது முதல் ஏற்பட்ட எண்ணம்.

அது 74 இல்லையா?

இல்லை, 77, மே மாதம்.

ஆமாம். அப்போது குணா என்று ஒரு கம்யூனிஸ்ட்டும் வந்திருந்தார் இல்லையா? பெங்களூர்க்காரர். மார்க்சியத் தத்துவவாதி. எஸ்.என். நாகராஜனும் வந்திருந்தார். ஆமாம், அந்த ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டீர்களா?

ஆமாம். இந்த இதழுக்காகக் கருத்தரங்கக் கட்டுரைகளிலிருந்து பெருமாள்முருகன், பெருந்தேவி ஆகியோரது கட்டுரைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். ‘தண்ணீர்’ நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்த பி.கே. சீனிவாசன் ஒரு கட்டுரை கொடுத்திருக்கிறார். சக்கரியாவிடம் ஒரு கட்டுரை கேட்க எண்ணம். வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவர் ரொம்பவும் பிஸியான மனிதர். மலையாளத்தின் மிக முக்கியமான பத்தி எழுத்தாளர். பத்திரிகைகளுக்குப் பத்தி எழுதுவது தவிர அதிகமான பயணங்களும் மேற்கொள்பவர். குறிப்பாக அயல்நாட்டுப் பயணங்கள்.

இதையெல்லாம் உடல் நன்றாக இருக்கும்போதே செய்துவிட வேண்டும். இப்போது அதெல்லாம் எனக்கு முடிவதில்லை. இந்த ரெக்கார்டரை இங்கே வைத்தால் போதுமா? இல்லை கையிலேயே வைத்துக்கொள்கிறீர்களா?

(கட்டடத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து யாரோ எதையோ இடிக்கும் சத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறார்)

பாருங்கள், சத்தம் அதிகமாக வருகிறது. சென்னையில் எதையாவது இடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நிசப்தமாக இருக்கிற இடம் இங்கே ஒன்றுமில்லை. இருப்பதிலேயே சத்தம் குறைவான இடம் இதுதான். வேண்டுமானால் அந்தக் கதவைச் சாத்திக்கொள்ளுங்கள். அப்போது சத்தம் குறையும்.

நாம் தொடங்கலாமா சார்?

சரி.

உங்களுடைய புத்தகங்களில் தென்படும் வாழ்க்கைக் குறிப்புகளைப் பார்த்தால் நீங்கள் உங்களுடைய இருபத்தியொரு வயதில் சென்னைக்கு வந்ததாக இருக்கிறது. பிறகு ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தீர்கள். அதற்கு முன்னால் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? உங்கள் குடும்பம், நண்பர்கள், உங்களுடைய கல்வி, மற்ற அக்கறைகள் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பேசலாம் அல்லவா?

அவற்றைப் பற்றியெல்லாம் அவ்வளவு தெளிவாக என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாக் குடும்பங்களை யும் போலத்தான். எங்கள் குடும்பத்தைப் போன்ற நிறையக் குடும்பங்கள் அங்கே இருந்தன. அதுபற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. மெஹபூப் கல்லூரியில் தமிழ் உண்டு. கல்லூரி என்று பெயர் இருந்தாலும் அது உயர்நிலைப் பள்ளிதான். நல்ல தமிழாசிரியர். ராஜாபாதர் என்று பெயர். பள்ளி முதல்வரே ஆங்கிலம் போதிப்பார். கோட்டீஸ்வரன் என்று பெயர். அது முதலியார்களுக்கான பள்ளி. முதலியார்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் மிக நல்ல பள்ளி.

ஆனால் அந்தக் காலம் ஒரு சங்கடமான காலம். சௌகரியமாக ஒன்றும் இருக்கவில்லை. எங்கள் அப்பா மிகச் சாதாரண மனிதர். தன் மருமகன்களால் அதிகச் சங்கடத்துக்குள்ளானார். அவர்கள் மிகவும் பொல்லாதவர்கள். அதனாலே மிகவும் நொந்து போயி ருந்தார். குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். சில செத்துப் போய்விடும். அக்காவின் குழந்தை ஒன்று மிக அழகாக இருக்கும். கட்டி வந்து செத்துப் போய்விட்டது. அப்போது அப்பா கண்ணீர்விட்டு அழுததைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் மொத்தம் எட்டு சகோதர சகோதரிகள். அவர்களில் மூன்றுபேர் செத்துப் போய் விட்டனர். அதில் இரண்டு பேர் பையன்கள். ஒன்று தங்கை. எனக்கு இரண்டு அக்காக்கள். நான் மூன்றாவது. எனக்குப் பிறகு ஒரு தங்கையும் தம்பியும். அந்த நாள்களில் முக்கால்வாசிக் குடும்பங்களில் இப்படித்தான் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அன்றைக்கு அது ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். அது ஒருவகையில் குடும்பத்தை நடத்துவதற்குச் சௌகரியமான ஏற்பாடு. பல வகைகளில் உதவியாக இருக்கும். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாது போனால் அக்கா சமைப்பாள். இப்போது ஒரு குழந்தை, இரண்டு குழந்தை எனக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு எழுத்தில் எந்த வயதில் ஈடுபாடு ஏற்பட்டது?

என் பத்துப் பன்னிரெண்டு வயதிலேயே எழுதுவது சந்தோஷம் தரும் விஷயமாக ஆகியிருந்தது. அப்போதைய பாடத்திட்டத்தில் கட்டுரைப் பகுதி இருந்தது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே கட்டுரைப் பகுதி இருந்தது. எனக்கு ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதுதான் பிடித்திருந்தது. வார்த்தைகளைச் சேர்த்து எழுதுவதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது. ஷேக்ஸ்பியர் பற்றி நிறைய எழுதுவேன். எல்லாச் சின்னப் பையன்களுக்கும் இருந்ததைப் போலவே எனக்கும் கடினமான வாக்கிய அமைப்பின் மீது ஒரு கவர்ச்சி இருந்தது. அதுதான் உயர்வான எழுத்து என்று நினைத்திருந்தேன். பாடத்தில் ஷேக்ஸ்பியர் பாஸேஜஸ் வரும். கடினமாக இருக்கும். அதைப் போலவே எழுதுவதுதான் உயர்வு என்று நினைத்திருந்தேன். அதனால் சிக்கலான வாக்கியங்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதுவேன். ஆனால் இருபது, இருபத்தொரு வயதாகும்போது எளிமையாக எழுதுவது எல்லோருக்கும் புரியும்படி எழுதுவது எல்லாரும் ஒத்துக் கொள்ளும்படி எழுதுவதுதான் சிறந்தது என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன்.

அப்போது உங்களுக்கு ஆதர்சம் என யாராவது இருந்தார்களா?

ஆதர்சம் எனக் குறிப்பாக யாருமில்லை. ஆனால் வேறுவிதங்களில் சில விஷயங்கள் கிடைத்தன. ரவீந்திரநாத் தாகூர், கல்கி, ‘கலைமகள்’ பத்திரிகை. 1944-45 இல் ஒரு வருடத்திற்கு கலைமகள் இதழ் கிடைத்தது. அந்த ஒரு வருடத்திற்குள் அநேகமாக அத்தனை மணிக்கொடி எழுத்தாளர்களும், புதுமைப்பித்தனிலிருந்து கு.ப.ரா வரை, எல்லோருமே எழுதிவிட்டார்கள்.

ஆங்கில எழுத்தாளர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது கல்கி, தேவன் - அந்தக் குடும்பம்தான். அப்போது நாங்கள் செகந்திராபாத்தில் இருந்தோம். கலைமகள் பத்திரிகையே இரண்டு அல்லது மூன்று பிரதிகள்தான் வரும். முந்திக்கொண்டு போய் காத்திருந்து வாங்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்குப் பிரதி கிடைக்காது. (அவர்களையெல்லாம் படிப்பதற்கு அதன் மூலம் வாய்ப்புக் கிடைத்தது) தவிர ஆங்கில எழுத்தாளர்கள் நிறையப் பேர் என்னைப் பாதிப்பவர்களாக இருந்தார்கள். தமிழில் என்று பார்த்தால் கல்கியும் தேவனும்தான் அதிகம் பாதித்தவர்கள். கல்கியின் தொடர்கதைகள் ஒன்று முடிந்த அடுத்த வாரமே இன்னொன்று ஆரம்பமாகும். தொடர்ந்து படிக்க வேண்டும். ஆனால் புத்தகங்களை வாங்குவதை அப்பா நிறுத்திவிட்டார். ‘நீ வாங்கணும்ங்கிறதுக்காகத்தான் அவங்க நீட்டி நீட்டி எழுதறாங்க. நீ வாங்கிண்டே இருந்தா அது முடியவே முடியாது’ என்று சொல்லி பத்திரிகை வாங்குவதை நிறுத்தி விட்டார். அதனால் ‘சிவகாமியின் சபதத்’திற்கு அப்புறம் கல்கியின் எழுத்துகளைப் படிக்க முடியவில்லை.

உங்கள் குடும்பத்தில் யாராவது வாசிப்பார்களா? வாசிப்புச் சூழல் இருந்ததா?

அப்பா நிறைய வாசிப்பார். உரத்து வாசிப்பது அவருக்குப் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான நேரங்கள் மிகவும் குறைந்து போய்விட்டது. அம்மா நேரடியாகப் படிக்க மாட்டார். அப்பா அம்மாவுக்கு வாசித்துக் காண்பிப்பார். அப்போது குமுதினி என்று ஒரு எழுத்தாளர். ‘கோதாவரி குண்டு’ என்று குமுதினி கதை எழுதினார். கோதாவரி குண்டு என்றால் தெரியுமில்லையா? வெண்கலப் பானை.

அந்தத் தலைப்பில் தி. ஜானகிராமன் ஒரு கதை எழுதியிருக்கிறார்.

அப்படியா? இருக்கலாம். ஆனால் இந்தக் கோதாவரி குண்டுக்கு இணையாக அது இருக்குமா எனத் தெரியாது. அப்பா அதைப் படித்துக் காண்பிப்பார். எழுபது வருடங்களுக்குப் பிறகு இப்போது அதை ஆங்கிலத்தில் படித்தேன். அப்புறம்தான் குமுதினிக்குக் காது கேட்காது என்பது தெரிந்தது. அதனால் அவரைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அதுபோன்ற ஒரு குறையை வைத்துக்கொண்டே, கல்யாணமாகிக் குழந்தைகளெல்லாம் பெற்றுக்கொண்ட பிறகு எழுதினார். உலகப் பயணம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். பிரேமா நந்த குமாருடைய மாமியார். ‘என்னுடைய மாமியார் மாதிரி யாருமே ஆகமாட்டார்கள்’ என்று பிரேமா நந்த குமார் சொல்லுவார். ‘என்ன இது எல்லாரும் அம்மாவைத்தானே சொல்லுவாங்க. இவர் மாமியாரைச் சொல்கிறாரே’ என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ரவீந்தரநாத் தாகூரின் ஒரு நாவலை குமுதினி மொழிபெயர்த்தார். அந்த நாவலுக்குப் பெயர் வேறு. அதில் வரும் பாத்திரம் குமுதினி. அதையே நாவலுக்கு வைத்துவிட்டார். தனக்கும் வைத்துக்கொண்டார் குமுதினி. அப்பா அதை பைண்ட் செய்து வைத்திருந்தார். ஆதர்சம் என ஒன்றும் இல்லையென்றாலும் இதுபோன்ற சில பாதிப்புகள் இருந்தன.

ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது என்பதால்தான் ஜெமினி வேலையை விட்டீர்களா?

அதற்குப் பல காரணங்கள். அப்போது அந்த நிறுவனமே உற்சாகமாக இல்லை. ஆனால் இன்னும் ஒரு மூன்று மாத காலம் அங்கே வேலை செய்திருந்தால் எனக்கு அதன் முழுப் பணப்பயன்களும் கிடைத்திருக்கும். நான் வேலையை விடுவதாகச் சொன்னபோது என் முதலாளி ஒரு மூன்று மாதம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை. போனால் போகட்டும் என விட்டுவிட்டார். ஒரு பதினான்கு வருஷங்கள் வேலை பார்த்திருக்கிறேன். ஏதாவதொரு தொகை கிடைத்திருக்குமில்லையா?

ஆனால் ஒரு நிறுவனம் அப்படித்தானே நினைக்கும்? அவர்களுக்கு ஒரு தொகை மீதமாகுமில்லையா?

ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது. அவர் என் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். என் அப்பா இறந்தபோது ஒரு கடிதம் போட்டார். நான்கு மாதங்கள் கழித்து நான் என்ன செய்கிறேன் எனக் கேட்டார். டியூஷன் எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொன்னேன். தன் நிறுவனத்திற்கு வந்தால் மறுபடியும் வேலை தருவதாகச் சொன்னார். அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால் அப்போது அவருக்குக் கேன்சர் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். இதெல்லாம் மனப்போக்கை மாற்றியிருக்கும்.

ஒரு பதினைந்தாண்டுகள் ஜெமினியில் வேலை செய்தீர்கள் இல்லையா?

பதினைந்து இல்லை. பதினான்கு.

சரி. பதினான்கு. அது உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் அல்லவா? குறிப்பாக இளமைக்காலம் முழுவதும். அந்த அனுபவம் உங்கள் எழுத்துகளை வடிவமைத்ததா?

இருக்கலாம். அதுவும் இருக்கலாம். அதிலிருந்து நான் எவ்வளவு எடுத்தேன் எனத் தெரியாது.

ஜெமினி நிறுவனம் இருக்கிறதே, பொதுப்படையாக எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும், எல்லோரையும் கவர வேண்டும் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் அதுதான் அவர்கள் நோக்கம். அதனால் நான் அந்த அனுபவங்களிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொண்டேன் என்று தெரியவில்லை. ஆனால் அந்த நோக்கங்களுக்காக நான் குற்றம் சொல்வது கிடையாது. ஜெமினியையோ வாசனையோ குற்றம் சொல்ல என்னால் முடியாது.

வேலையை விட்டவுடன் எழுத்தாளராகத் தீர்மானித்ததற்குக் காரணம் வேறு வாய்ப்புகள் இல்லை என்பதுதானா? அல்லது ஒரு எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சுதந்திரம் இருப்பதாக நினைத்தீர்களா?

வேலையை விட்டவுடன் எனது ‘வெறி’ என்ற கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

அந்தக் கதை ‘விட்டேன் ஒரு குத்து’ என்ற பெயரில் குமுதத்தில் வந்தது. இல்லையா?

ஆமாம், மிகவும் புகழ் பெற்ற கதை. அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வந்தது. அது சந்தோஷமானதாக இருந்தது. எழுத்தாளனாக இருப்பதன் மூலம் சுதந்திரத்தை உணர்ந்தேன். ஏதோ சமாளித்தேன். பெரிய பணம் ஒன்றும் வரவில்லை. வந்தது ஏதோ குடும்பச் செலவுகளுக்குப் போதும் என்று நினைத்தேன்.

வேலையை விட்டதற்குக் குறிப்பான காரணம் ஏதாவது உண்டா?

‘நான் ஒரு எழுத்தாளன். என்னை எழுத்தாளனாகப் பயன்படுத்தாமல் மேஸ்திரி மாதிரி பயன்படுத்துகிறீர்களே?’ என ஜெமினி அதிபரிடம் போய்க் கேட்டேன். அவர் ‘எழுத்தாளன் மேஸ்திரி வேலைக்கு வரமாட்டான்’ என்றார். மேஸ்திரி என்ற வார்த்தையைச் சொல்லவில்லை. முக்கியமாக டிரைவர்களைச் சமாளிக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் ரொம்பவும் நல்லவர்கள்தான். அவர்களுக்கும் எரிச்சல் இருக்கும். அப்போதுதான் ஒரு பெரிய ட்ரிப் போய்விட்டு வந்திருப்பார்கள். உடனே அவர்களை வேறொரு ட்ரிப்புக்கு அனுப்ப வேண்டும்.

இந்த டிரைவர்கள்தான் ‘வண்ணங்கள்’ குறுநாவலில் வருகிறார்களா?

அதில் டிரைவர்கள் வருகிறார்களா? அதில் ஆபீஸ் பாய்கள்தானே வருகிறார்கள்?

இல்லை. டிரைவர்களும் வருகிறார்கள். அறுபத்தி நாலு பைசாவுக்காக் கஷ்டப்படுகிறார்கள் என்று கூடக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

ஆமாம். அவர்களுக்கு வெறும் பத்தணா சம்பளம். அதற்காக அவர்கள் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதற்காக இரவு 12 மணிவரை வேலை செய்யவேண்டும். வேலை செய்வது அவர்கள். நான் அவர்களது வேலையை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு எரிச்சல் வருமா வராதா? இந்த மாதிரி தர்மசங்கடமான காரியங்களையெல்லாம் என் மூலமாகச் செயல்படுத்த வைப்பார்கள். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். அதனால் வேலை செய்கிறவர்களுக்கு நேரடியாக என்மேல்தான் கோபம் வரும். தொழிலாளர்கள் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பீடி குடிப்பார்கள். அதை நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் நிர்வாகத்திலிருக்கிறவர்களுக்கு அதெல்லாம் பிடிக்காது. அதையெல்லாம் அனுமதித்தால் யார்யாரெல்லாமோ வந்து பீடி குடிப்பார்கள் என்பார்கள்.

ஜெமினி ஸ்டூடியோ இருந்தது மிகப் பெரிய இடத்தில். அதில் ஒரு பீடி குடித்துப் போட்டால் ஒன்றும் ஆகிவிடாது என்று எனக்குத் தோன்றும். அதை அந்த ஆட்களேதான் சுத்தமும் செய்வார்கள். துப்பரவுப் பணியாளர்களில் யார் சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள். தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வார்கள். அதனால் யாரெல்லாமோ வந்து இருப்பார்கள். அது அவர்களுக்குப் பிடிக்காது. இப்படி நிறைய. இதெல்லாம் எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.

எழுத்தாளனின் சுதந்திரம் பற்றிக் கேட்டீர்கள் இல்லையா? கவிஞர் ஞானக்கூத்தனுக்குப் பிரான்சுக்கு செல்வதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அவருடைய அலுவலகத்தில் அதற்கான அனுமதி தரவில்லை. ‘நீயென்ன பெரிய கவியோ’ என்று கேட்டார்கள். ஆனால் இங்கே என்னிடம் அப்படியெல்லாம் கேட்கவில்லை. ஏன் என்றால் இங்கே ஸ்டூடியோவில் எல்லோருமே கவிகள்தான். ஆபீஸ் பாய்கள்கூட கதை வைத்திருப்பார்கள். ‘என்னிடம் முதல்தரமான ஒரு கதை இருக்கிறது, அதைப் படமாக்கினால் ஐம்பது வாரம் ஓடும்’ என்பார்கள். என்ன செய்வது? எல்லோரிடமும் ஒரு கதை இருக்கிறதே.

முழு நேர எழுத்தாளராக வசதியான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்திருக்க வில்லை என்று தெரியும். அப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டதில் பிற்காலத்தில் எப்போதாவது வருத்தம் ஏற்பட்டதுண்டா?

இல்லை. வருத்தம் தோன்றிய தில்லை. அதெல்லாம் ஒரு தீர்மானத்தில் செய்ததுதானே? ஆனால் சமீபத்தில் எனக்கு ஒருவர் அறிமுகமானார். அறிமுகம் என்றால் என் கதைகள் எல்லாவற்றையும் படித்ததால் ஏற்பட்ட அறிமுகம். அவர் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு நீங்க ஏன் சார் அந்த ஊரைவிட்டு வந்தீங்க? அங்கேயே சந்தோஷமாக இருந்திருக்கலாமே?’ என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பெயர் வேலுமணி. அங்கே ஹைதராபாத்தில் இருக்கிறார். குடும்பமெல்லாம் இங்கே இருக்கிறது. அவர் அப்படிச் சொன்னது வியப்பாக இருந்தது. எழுத்து மூலமாக ஒருவரை அப்படிச் சொல்ல வைத்திருக்கிறேன் என்று ஆச்சரியமாக இருந்ததே தவிர வருத்தமெல்லாம் இல்லை.

உங்களுடைய சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வந்திருக்கின்றன. உங்களுடைய முதல் கதை(தமிழில்) ‘நாடகத்தின் முடிவு’. 1956இல் உங்களுடைய இருபத்தைந்தாவது வயதில் எழுதியிருக்கிறீர்கள். அந்தக் கதையின் கதாபாத்திரம் ஒரு நாடக ஆசிரியர், எழுத்தாளர். முதல் கதையிலேயே ஒரு எழுத்தாளர் தன் கதாபாத்திரத்தை ஏன் எழுத்தாளராக உருவாக்க வேண்டும்? இது தற்செயலானதா? நீங்களே ‘அன்பின் வெற்றி’ என்னும் நாடகத்தை எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?

உண்மையில் நான் ஒரு நாடக ஆசிரியராக இருக்கவே விரும்பினேன். ‘அன்பின் வெற்றி’ வானொலி நாடகம். 1953இல் ஒலிபரப்பானது.

அதை இப்போதும் ஏதாவது போட்டிக்கு அனுப்பினால் நிச்சயம் முதல் பரிசு கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

(சிரிப்புடன்) யாரையாவது தண்டிக்க வேண்டும் என்றால் அதைப் போடலாம். ஆனால் நாடக வடிவம்தான் உண்மையில் கடினமானது. கடினமான வடிவங்களைத் தான் நாம் சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த முதல் கதை அவ்வளவு விசேஷமானது அல்ல. காலவரிசைப்படி முதலாவது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வரலாற்றுக் குறிப்புக்குச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அதே சமயத்தில் ஆங்கிலத்தில் நல்ல கதைகள் எழுதியிருக்கிறேன்.

இல்லை, ஆச்சரியப்படுத்துவதாகத் தோன்றியது, முதல் கதையிலேயே மையப்பாத்திரம் எழுத்தாளனாக இருக்கவேண்டும் என்று ஏன் யோசித்தீர்கள் என்பதுதான்.

அந்தச் சமயத்தில் என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள். முதல் கதை எழுத் தாளரைப் பற்றியதாக இருந்ததற்குக் காரணம் அதுதான்.

ராமநரசு என்று ஒருவர் நாடகம் எழுதினார். ஆர்வத்தில் எழுதினார். நமது எஸ். வைதீஸ்வரனின் கஸின். அவர் கூடப் பழக்கம் இருந்தது. அப்போது எல்லாரும், எல்லாரும் என்றால், எல்லா எழுத்தாளர்களும், எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் வீட்டில் கூடுவார்கள். சகஸ்ரநாமம் நல்ல மனிதர். எல்லாரையும் வீட்டுக்கு அழைத்துச் சாப்பாடு போடுவார். இங்கே தாண்டவராயன் தெருவில் வீடு இருந்தது. ரொம்ப நீளமாக இருக்கும். எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு போட்டே முதலில் அந்த வீட்டை விற்றார். பிறகு இன்னொரு வீட்டை, அதற்குப் பிறகு இன்னொரு வீட்டை என்று விற்றுக் கடைசியில் இருக்கிற இடம் மட்டும் மிஞ்சியது. அப்புறம் அதையும் விற்றார்.

எதுக்குச் சொன்னேன் என்றால் அன்றைக்கு எழுத்தாளர்கள்கூட இருந்தேன். அதனால் ஒரு எழுத்தாளனின் கதையை எழுதலாமே என்று தோன்றியிருக்கக் கூடும். சரியாகச் சொல்ல முடியவில்லை.

உங்களுடைய பல கதைகளில் எழுத்தாளர்கள் பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கிறார்கள். ‘ஒற்றன்’ முழுக்கவே எழுத்தாளர்களைப் பற்றிய கதை. இன்று நாவலில்கூட எழுத்தாளர் ஒருவரின் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. ‘மானசரோவர்’ நாவலில் கோபால்ஜி, ‘கரைந்த நிழல்க’ளில் ராஜகோபால் இப்படிப் பல எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக் கிறார்கள்.

கோபால்ஜி ஒரு முன்மாதிரி. அவரிடம் அசாதாரணமான சக்தி இருந்தது. அவர் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் உடம்பெல்லாம் ஆடும். எழுத உட்கார்ந்தால் கடகடவென்று எழுதிக்கொண்டே போவார். அவர் நான் பார்த்த மனிதர்களில் ஒருவர்தான். பொதுவாக நான் பார்த்த மனிதர்களை என் கதைகளில் நினைவுகூர்கிறேன். அது அவர்களுக்கு நான் செலுத்தும் மரியாதை அல்லது அஞ்சலி என்று சொல்லலாம்.

உங்களுடைய செகந்திராபாத் நாள்கள், ஜெமினி நாள்கள் பற்றியெல்லாம் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறீர்கள். செகந்திராபாத் நாள்கள் பற்றிய கதைகளில் ‘சுந்தர்’ என்ற ஒரு கதையைத் தவிர மற்ற கதைகள் பெரும்பாலும் சந்தோஷமான கதைகளல்ல. அதேபோல் ஜெமினி நாள்கள் பற்றிய கதைகள் சந்தோஷமான கதைகளல்ல. உதாரணமாக உங்களுடைய புலிக்கலைஞன். தமிழில் எழுதப்பட்ட மிகவும் துக்ககரமான கதைகளில் ஒன்று அது. ஏன் அப்படி? மகிழ்ச்சியான கணங்களை நீங்கள் எழுதாமல் விட்டுவிட்டீர்களா?

இருக்கலாம். நான் தவறவிட்டிருக்கலாம். ஆனால் அங்கே இருந்த பலருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கும். எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும், யாருமே கேட்க மாட்டார்கள். கடினமாக வேலை செய்வார்கள். ஸ்டூடியோவிலேயே தூங்கி விடுவார்கள். அப்போது முக்கியமான நிர்வாகி ஒருவர்(எம்.ஏ. பார்த்தசாரதி என்று பெயர்) இருந்தார். வாசனுக்கு நெருக்கம். படப்பிடிப்புக்காக வாசனைத் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் அளவுக்கு நெருக்கம். அவருக்கு ஸ்டூடியோவில் அவருக்கு ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட தனி அறை, உதவிக்கு ஒரு பையன், டேபிள் எல்லாம் இருந்தது. ஒரு கட்டத்தில் என்ன காரணத்தாலோ அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வசதிகளை ஒவ்வொன்றாகக் குறைத்தார்கள். ஒருநாள் வந்து பார்க்கிறார். உதவிக்கு என்றிருந்த பையனைக் காணவில்லை. அவர் நேரடியாக வாசனைச் சந்தித்துக் கேட்டார். அதற்கு அவர் ஆட்களைக் குறைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னவர், அங்கிருக்கும் வேறு பையன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே எனச் சொன்னார். மறுநாள் அவருடைய அறையின் ஏர் கண்டிஷன் அகற்றப்பட்டது. கேட்டதற்கு ஜன்னலெல்லாம் திறந்திருக்கிறதே என்றார்கள். அடுத்த சில நாள்களில் மேசையும் பறிபோயிற்று. அப்போதுதான் அவருக்கு இனிமேல் நாம் தேவைப்பட மாட்டோம் என்பது புரிந்திருக்க வேண்டும். பிறகு அந்த அறை மீண்டும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு கதாநாயகி நடிகை ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. இப்படி அங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான துக்கம்.

சினிமாவில் பதினான்கு வருடங்கள் இருந்திருக்கிறீர்கள். அதன் கிளாமரான சைடு பற்றியெல்லாம் உங்கள் கவனத்துக்கு வரவே இல்லையே?

கிளாமர் சைடு என்று எதைச் சொல்கிறீர்கள்? அவர்களில் பலரும் என்னிடம் அழுதிருக்கிறார்கள். ஆண்களுக்கு வேண்டுமானால் பளபளப்பான உலகமாக இருக்கலாம். பெண்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஜெமினிகணேசன் ரொம்ப சந்தோஷமாக, உற்சாகமாக இருப்பார். அவருக்காக நான் கோஸ்ட் ரைட்டிங்க் கூடப் பண்ணியிருக்கிறேன். ‘சினி அட்வான்ஸ்’ என்று ஒரு பத்திரிகை. அதற்கு ஒரு பையன், அப்போது பையன் தான், கமால்கோஷ் என்று பெயர். போட்டோ கிராபர். அவனுக்கு ஆங்கிலம் அவ்வளவு வராது. தமிழும் தெரியாது. ஆனால் ரொம்ப நல்ல பையன். ‘சினி அட்வான்’ஸில் அவனுக்குக் கொஞ்சமான சம்பளம். அவன் வீட்டுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன். சின்ன வீடு. ஒரே அறை. அதற்குள்ளேயே ஒரு மூலையில் கொட்டகை மாதிரி ஒன்றைப் போட்டிருப்பான். அதுதான் அவனுடைய டார்க் ரூம். ‘இதிலேயே இருந்தா டி.பி. வந்து விடுமே’ என்று அவனிடம் சொல்லியிருக்கிறேன். அப்புறம் அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. அதற்குப் பிறகு அவன் சரியாகி விட் டான். போட்டோ எடுத்து விட்டு என்னிடம் வந்து ‘சார், சார், ஒரு ஸ்மால் ரைட்டிங்’ என்று கேட்பான். அப்படி அவனுக்காக ஜெமினி கணேசன் எழுதுவது மாதிரி எல்லாம் எழுதிக் கொடுப்பேன். சினிமாவில் இந்த மாதிரி மனிதர்களைத்தான் நான் அதிகம் பார்த்தேன். இவர்கள் வாழ்க்கையில் என்ன கிளாமர் இருக்கிறது? இவர்கள் வாழ்க்கைதான் எழுதக் கூடியது என்று நினைத்தேன். ஒருவேளை அதனால்தான் கிளாமரான பக்கத்தை என்னால் எழுத முடியவில்லை என்று நினைக்கிறேன்.

சினிமா உலகத்தில் விளிம்புநிலை யிலுள்ள உங்களுடைய கதாபாத்திரங்களைப் போலவேதான் மானசரோவரில் வரும் புகழ்பெற்ற கதாநாய கன் சத்யன் குமாரும் துக்ககரமான வனாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார். அது ஏன் அப்படி?

சத்யன் குமாரின் பின்னணியைப் பாருங்கள். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்தவன். இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவன். அப்பா அம்மா எல்லாரையும் பிரிந்து வந்தவன். அப்போது பெரிய கலவரங்களையெல்லாம் சந்திக்க நேர்கிறது. இந்தப் பின்னணி தந்த துன்பம் அது.

குறுக்குக் கேள்வியாக இதைக் கேட்டு விடலாமா? சத்யன் குமார் என்ற பாத்திரம் இந்தி நடிகர் திலீப் குமாரை வைத்து உருவாக்கப்பட்டதா?

ஆமாம். அப்போது திலீப்குமாரை வைத்து இரண்டு படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஜெமினியில். ஒன்று இன்சானியாத். அப்போது அவருடன் ரொம்பப் பழக்கமில்லை. ஆனால் பைகாம் படத்தில் நடிக்கும்போது நெருக்கம் வந்தது. என்னுடைய இடத்துக்கெல்லாம், நான் வேலை பண்ணும் இடத்துகெல்லாம் வருவார். அப்போதெல்லாம் ஹிக்கின்ஸ் பாதம்ஸில் வெளிநாட்டுப் புத்தகங்களுக்கு ஆர்டர் செய்தால் கிடைப்பதற்கு இரண்டு மாதம் மூன்று மாதம் ஆகும். அப்போதுதான் டாக்டர் ஷிவாகோவுக்குப் பரிசு கொடுத்திருந்தார்கள். அதை அவர் கையில் வைத்திருந்தார். பார்த்து விட்டுப் படித்துவிட்டுக் கொடுத்து விடுகிறேன் என்றேன். அவர் அடுத்த நாள் போக வேண்டும். இல்லை படித்து விட்டுக் கொடுத்து விடுகிறேன் என்று வாங்கினேன். ஆனால் பாதிதான் படிக்க முடிந்தது. அறுநூறு பக்கப் புத்தகம். முடிக்கமுடியவில்லை. திருப்பிக் கொடுத்து விட்டேன்.

மானசரோவர் நாவலில் வரும் சத்யன் குமாருக்கு இருந்தது போன்ற ஆன்மீகத் தேடல் திலீப்குமாருக்கு இருந்ததா என்ன?

அப்படித் தெளிவாகச் சொல்கிற அளவுக்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் இருந்திருக்கும். அப்போது கி.ரா என்று ஒருவர் ஜெமினியில் இருந்தார். இந்தக் கி.ரா இல்லை. கி. ராஜநாராயணன் இல்லை. அந்தக் கி.ரா. ரொம்பச் சாதாரணமான மனுஷர். திலீப்குமாருக்குக் கி.ரா.வை ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் முன்னாலே சொன்னேனே எழுதிக் கொண்டே இருப்பார் என்று. அது அந்தக் கி.ரா. தான். அவருக்குத்தான் உடம்பெல்லாம் உதறும். சைக்கிக் எக்ஸ்பீரியன்ஸ் அவருக்கு உண்டு. பிறகு சாமியாராகவே ஆகிவிட்டார். மறைந்தே போய் விட்டார். சாந்தவெளி என்கிற இடத்தில் இன்னொரு சாமியார் இருந்தார். கி.ராவுக்கு அவர்கூடப் பழக்கம் இருந்தது. அதனால் இவருக்கும், திலீப்குமாருக்கும் அதுமாதிரி எண்ணம் இருந்திருக்கலாம்.

உங்களுடைய கதைகள் எல்லாமே அசலான அனுபவங்களின் அடிப்படையில் நீங்கள் சந்தித்த, உங்களுடனே வாழ்ந்த அசலான மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் அனுபவத்துக்கு நெருக்கமான சித்திரிப்புக்கள். பொதுவாக அனுபவம் இலக்கியமாகும்போது ஒரு மாற்றம் நிகழ வேண்டுமெனச் சொல்லப்படுகிறது இல்லையா? அதுபோன்ற மாற்றங்கள் உங்கள் படைப்புகளில் நிகழ்ந்திருக்கின்றனவா?

அப்படியெதுவும் எதையும் யோசிக்கவில்லை. என்னுடைய கதைகள் எல்லாமே எனக்குத் தெரிந்த மனிதர்களுக்கு நான் செலுத்துகிற அஞ்சலிதான். என்ன பெரிய மகா இலக்கியம்? அப்படிச் செய்பவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நண்பரைப் பற்றி ஒரு கதை எழுதினேன். அவர் செத்துப் போய்விட்டார். நான் அவரைப்பற்றி எழுதினேன். நாங்கள் இரண்டுபேரும் சந்தோஷமாக இருந்திருக்கிறோம். அவருக்கு ஹிந்தி தெரியும். எனக்கு அவ்வளவாகத் தெரியாது. சினிமா பார்க்கும்போது முக்கியமான வசனங்களையெல்லாம் எடுத்துச் சொல்லுவார். ஹிந்திப் பாட்டுகள் அத்துபடி. எந்தப் பாட்டைப் பற்றிச் சொன்னாலும் அது யார் பாடியது எந்தப் படம் என்று டக்கென்று சொல்லி விடுவார். இன்னொரு நண்பர் இருந்தார். அவர் சீரியசானவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பெர்னார்ட் ஷாவையெல்லாம் படித்துப் பேசுவார். ஆர்.கே. ராமசந்திரன், அவர் ஆர்.கே. நாராயணனுடைய சகோதரர்.அவரும் ரொம்ப சுவாரசியமானவர். அவரும் செத்துப் போய் விட்டார். என்னுடைய நண்பர்கள் எல்லோருமே செத்துப் போய் விட்டார்கள்.

(சிறிய மௌனமும் பிறகு பெரிய சிரிப்புமாகத் தொடர்கிறார்)

மகா இலக்கியம் செய்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி எழுத ஆள் இல்லை. எனக்கு இது போதும்.

நீங்கள் எழுதத் தொடங்கிய காலம் மிகவும் நெருக்கடியான காலகட்டம் சார்ந்தது. அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த சமூகம். இதைத்தான் நீங்கள் உங்கள் படைப்புகளில் வெளிப்படுத்துகிறீர்கள் எனக் கருத முடிகிறது. உங்கள் ‘தண்ணீர்’ நாவலைக்கொண்டு ஒரு வாசகன் அப்படிக் கருத முடியும். அது ஒரு குறியீட்டு நாவல் என்று பேசப்படுவதற்கு அது அன்றைய காலகட்டத்தின் நெருக்கடிகளைப் பற்றிய குறியீடாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். இதைப்பற்றியெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?

அப்படி நீங்கள் சொல்லலாம். ஆனால் தென்னிந்தியா வில் அப்படிப் பெரிய சமூகக் கொந்தளிப்பெல்லாம் ஏற்படவில்லை. சாதி சார்ந்த சில பிரச்சனைகள் இருந்தன. சாதியைச் சொல்லி ஆட்கள் அடித்துச் சண்டை போட்டுக் கொண்டார்கள். பெரிய கலவரங்கள் (க்ஷீவீஷீts) ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. மொத்தச் சமூகத்தையும் புரட்டிப் போடுகிற கலவரங்கள் எதுவும் இங்கே நடக்கவில்லை. இந்தக் கலவரங்கள் பெரிய விஷயம். ஐரோப்பாவிலெல்லாம் இந்த அனுபவங்களை வைத்தே எழுதியிருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுகிறார்கள். இந்தியாவிலும் இப்போதுதான் எழுதுகிறார்கள். இந்த மாதிரி நிறைய வரவேண்டும். இந்த அனுபவங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு செய்தி படித்தேன். ஒரு பெண், இந்திஸார் ஹுசேய்ன் என்ற பாகிஸ்தானி எழுத்தாளரின் கதைகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். இந்த இந்திஸார் ஹுசேய்ன் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களில் செத்துப் போனவர்களைப் பற்றியெல்லாம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். இந்தப் பெண் கேட்கிறாள். ‘நீங்கள் எப்போது என் அப்பாவைப் பற்றி எழுதப் போகிறீர்கள்?’ என்று. ஏனென்றால் அவளுடைய அப்பா சும்மா காய்கறி வாங்குவதற்காகவோ எதற்காகவோ வெளியே போனவர் திரும்பி வரவே இல்லை. அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரிந்துகொள்ளத்தான் அப்படிக் கேட்கிறாள். இந்த மாதிரி நெருக்கடிகளைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும். நமக்கு அந்த மாதியான நெருக்கடிகள் ஒன்றும் வரவில்லை. வரவில்லை என்றால் அதற்காக வருத்தப்படவும் கூடாது.

உங்களுடைய ‘நானும் என் எழுத்தும்’ என்னும் கட்டுரையில் என்னை முதலில் எழுதத் தூண்டியவை

கல்கியினுடையவையும் சார்லஸ் டிக்கன்ஸுனுடையவையும். இரண்டு பேருக்குமே இலக்கிய உலகில் அவ்வளவு அந்தஸ்து இல்லை. டிக்கன்ஸ் மேற்பூச்சான எளிமை. கல்கி எளிமையாகவே எழுதினார் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இந்த இருவரின் தூண்டுதலையும் கடந்து உங்கள் எழுத்தில் ஒரு ஆழம் இருக்கிறது, அடர்த்தி இருக்கிறது. இது இயல்பாகவே அமைந்ததா? அல்லது நீஷீஸீsநீவீஷீus ஆக எழுதினீர்களா?

சிஷீஸீsநீவீஷீus ஆகவெல்லாம் எழுதவில்லை. கல்கியின் கதைகள் பற்றி இப்போதுகூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அவர் வரலாற்று நாவல்களுடன் கூடவே சமூகக் கதைகளும் எழுதியிருக்கிறார். அவரிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் திடீரென்று ‘வாசகர்களே’ என நேரடியாக வாசகர்களிடம் உரையாடத் தொடங்கிவிடுவார். அப்படி ஒரு அசட்டுத்தனம் அவருக்கு ஏற்பட்டு விடும். டிக்கன்ஸைப் பொறுத்தவரை அவரிடம் ஒரு பரந்த பார்வை இருக்கிறது. அவரிடம் அவ்வளவு பரிவு இருக்கும். டிக்கன்ஸ் ஒரு சாதாரண எழுத்தாளர் இல்லை. எழுத உட்கார்ந்தால் ஊற்று மாதிரிப் பெருகும். வாசிக்கும்போது இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் மனம் எங்கெங்கோ போய்விடும்.

அயல் எழுத்தாளர்கள் பலரையும் நீங்கள் வாசித்திருக்கிறீர்கள். அவர்களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே உங்களைப் பாதித்திருக்கலாம் என்று யூகிக்கலாமா? உணர்ச்சியைக் கொட்டிவிடாத, ஆவேசப்படாத ஒரு தொனியை உங்கள் எழுத்திலும் பார்க்க முடிவதனால் இந்தக் கேள்வி?

ஹெமிங்வே நிறைய பாதித்திருக்கிறார். அவரைத் தவிர வேறு சிலரும்கூட பாதித்திருக்கிறார்கள். பார்க்கப் போனால் ஸால் பெல்லோ நிறைய பாதித்திருக்கிறார். சிங்கர், ஐசக் பாஷேவிஸ் சிங்கர் பாதித்திருக்கிறார்.

சிங்கரின் பாதிப்புதான் உங்களுடைய ‘அழிவற்றது ‘தொகுப்பில் உள்ள கர்ண பரம்பரைக் கதைகள் என்று சொல்லலாமா?

இருக்கலாம். ஆனால் அப்படி மட்டுமே சொல்ல முடியாது. அழிவற்றது என்கிற கதை இல்லாமல் இருப்பதைப் பற்றிய கதை. ஆங்கிலத்தில் நான் - பீயிங் என்று சொல்லுவார்களே அதைப் பற்றியது. சயன்ஸில் ஒரு கோட்பாடு இருக்கிறது. எதையுமே அழிக்க முடியாது. ஒரு மரத்தை அழித்து விட்டால்கூட அது வேறு ஒன்றாக இருந்துகொண்டே இருக்கும். அதுதான் சயன்ஸ். ஒருவர் ஒரு காலத்தில் பெரிதாக எதையாவது எழுதியிருப்பார். யாருமே படித்திருக்க மாட்டார்கள். அவர் பிறகு இல்லாமல்கூடப் போயிருப்பார். ஆனால் அவருடைய படைப்பு இருந்து கொண்டே இருக்கும். அதுதான் அழிவற்றது.

உங்களுடைய கதைகள் வெளிவரத் தொடங்கியபோது ஒருவிதமான இலக்கியச் சூழல் இருந்தது. அந்தச் சூழலின் இலக்கிய நடையை நீங்கள் பின்பற்ற முயற்சிக்கவில்லை. ஒரு தனித்த நடை. அவன் கோபப்பட்டான் என்றெல்லாம் நீங்கள் எழுதவில்லை. அது குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பேச்சிலோ செயலிலோ வெளிப்படும். இது ஒரு டெக்னிக்கா? பார்வையா?

அது என் சுபாவம். அதுதான் எழுத்திலும் வருகிறது. எளிமையான நடையில் எழுதினால் போதும். அதுதான் என் பார்வை.

கோபத்தைப் பற்றிச் சொன்னீர்கள் இல்லையா? எனக்கும் கோபம் வரும். ஆனால் அந்தக் கோபத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? மனைவியைக் கோபித்துக்கொள்ளலாம், மகனைக் கோபித்துக்கொள்ளலாம். அவனு டைய மனைவியைக் கோபித்துக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை சந்தோஷமான நினைவுகளுடனேயே மறைந்துபோய்விட வேண்டும். அது என் சுபாவம்.

தண்ணீரில் டீச்சரின் மாமியார், மானசரோவரில் ஜம்பகா என வன்மம் நிறைந்த பாத்திரங்கள் வருகின்றனவே?

அந்தப் பாத்திரங்களுக்கு ஏற்படும் கோபம் ஒருவித இயலாமை என்றுதான் சொல்ல வேண்டும். ஜம்பகா மனப்பிறழ்வுக்குள்ளான நிலையில் வன்மமாக நடந்துகொள்கிறாள். அவள் தன் மகனைக் கொன்று விடுகிறாள். உடைகளை அவிழ்த்துப் போட்டுவிடுகிறாள்.

குறுநாவல் என்ற வடிவத்தை மிகவும் திறமையாகக் கையாள்பவர் நீங்கள். நாவல், குறுநாவல், சிறுகதை ஆகிய வடிவங்களை ஒன்றிலிருந்து மற்றொன்றை எப்படி வேறுபடுத்துகிறீர்கள்?

வேறுபாடே இல்லை, எல்லாமே ஒன்றுதான்.

உங்கள் நாவல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ‘தண்ணீர்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சக்கரியா எழுதிய முன்னுரையில் மலையாள இலக்கியத்தில் அவர்கள் சிரமப்பட்டு உருவாக்கிய நவீனத்துவப் போக்கை அசோகமித்திரன் மிக இயல்பாகச் சாதித்திருக்கிறார் எனச் சொல்கிறார். இப்போது யோசிக்கிறபோது தற்போதைய நவீனத்துவ, பின்நவீனத்துவ நாவல்களுக்கு ஒரு வகையில் நீங்கள்தான் முன்னோடி எனத் தோன்றுகிறது. ஒரு கதையை நேர்கோட்டில் சொல்வதில்லை. சிதறலாகக் கதைசொல்வது, இவையெல்லாம் இன்று நாவல்களில் புதுமை என்று சொல்லப்படுகிற காரியங்கள். இதையெல்லாம் முன்கூட்டியே உங்களுடைய எட்டு நாவல்களில் வேறுவேறு வகைகளில் சாதித்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் உங்களுக்குள் ஏதாவது திட்டம் இருந்ததா?

திட்டம் எல்லாம் கிடையாது. வாழ்க்கையில் நமக்குக் கோர்வையாக எல்லாச் சிந்தனைகளும் வருவது கிடையாது. இப்போது நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அந்த அளவில் அது கோர்வையாக இருக்கிறது. அதே சமயத்தில் எனக்கு உங்களுக்குப் பின்னால் உள்ள புகைப்படங்களையும் பற்றி யோசிக்கத் தோன்றுகிறது. வேறு நினைவுகள் வருகின்றன. அது மனதோட பிரதிபலிப்பே தவிர திட்டமிட்டுத் துண்டுதுண்டாக எழுதி பிறகு க்ஷ்வீரீ க்ஷ்ணீரீ ஆக இணைத்தது கிடையாது.

ஆனால் உங்களுடைய ‘இன்று’ நாவலை நிச்சயமாக அப்படிச் சொல்ல முடியாது. அதில் நிச்சயமாக ஒரு திட்டம் இருக்கிறதே?

‘இன்று’ நாவல் இருக்கிறதே, ரொம்பவும் சந்தி சிரிச்ச நாவல். அது ஒரு துன்பகரமான நினைவிலிருந்து உருவானது. அப்போது ஒருவர் சொன்னார் இது மாதிரி ஜங்கஷனில் இருந்த ஒரு ஜனசங்க் பையனை போலீஸ் கஸ்டடியில் வைத்து அடித்துவிட்டார்கள்; பிறகு அவன் பைத்தியக்காரன் ஆகிவிட்டான் என்று. அப்போது பெங்களூரில் ஒரு தீவிர மூவ்மெண்ட் இருந்தது. அன்ந்தமூர்த்தியெல்லாம் அதில் இருந்தார்கள். அனந்தமூர்த்தி நிறையப் பேசுவார். அறிக்கையிலெல்லாம் கையெழுத்துப் போடுவார். ஆனால் ஸ்நேகலதா ரெட்டி போன்றவர்கள் உண்மையான களச் செயல்பாட்டாளர்கள். நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய கணவர் பட்டாபி ராமரெட்டியுடன் பழக்கம் இருந்தது. அப்போது எமர்ஜென்ஸி அமல் படுத்தப்பட்டிருந்தது. கர்நாடகா காங்கிரஸ் அரசு ஸ்நேகலதா ரெட்டியைச் சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தது. சிறையில் அதற்கான மருந்து கொடுக்கப்படவில்லை. ஆஸ்துமாவுக்குத் தொடர்ந்து மருந்து தரப்பட்டால் கட்டுக்குள் இருக்கும். எனக்குக்கூட ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. மருந்து சாப்பிட்டால் சரியாகும். ஆனால் ஸ்நேகலதா ரெட்டியை 1975இல் விடுதலை செய்து விட்டார்கள். இல்லை அது 1977இல். 75இல்தான் அவசர நிலை அமலில் இருந்ததே. இந்த ஆஸ்துமா முற்றித்தான் விடுதலையான ரொம்பச் சீக்கிரமே அவர் இறந்து போய் விட்டார். ஸ்நேகலதா ரெட்டி விடுதலை செய்யப்பட்ட போது நான் பெங்களூரில் இருந்தேன். அப்போது என் சகோதரி பெங்களூரில் இருந்தாள். அதனால் அடிக்கடி அங்கு போக வாய்ப்பிருந்தது. அப்போது சி.டி. நரசிம்மய்யா என்று ஒருவர் இருந்தார். அவருக்கு என்மீது ஒரு மதிப்பு. என் எழுத்துகளைப் படித்து உருவானதல்ல. அவருக்கு மனிதன் மேல் ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான். நிறையக் கருத்தரங்குகள் நடத்துவார். நான் ஒரு இருபது இருபத்தைந்து கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன். முதல் கருத்தரங்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவற்றில் பத்துக் கதைகளைப் படித்து விட்டு மிகவும் சீரியசாகப் பங்கெடுப்பேன். ஆனால் இந்த கல்வியாளர்கள் இருக்கிறார்களே, அவர்கள் ஒரே ஒரு கதையைப் படித்துவிட்டுப் பேப்பர் வாசித்துவிடுவார்கள். அப்போது ஏ.கே. ராமனுஜனைச் சந்தித்தேன். அவரோடு தொடர்பு ஏற்பட்டது. அது இவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய தோரணையே மாறி

விட்டது. பிரிந்துவிட்டோம். இதெல்லாம் கஷ்டம்தான்.

எமர்ஜென்ஸி காலத்தில் பார்த்த, கேள்விப்பட்ட எல்லாம்தான் இன்று நாவலில் வருகிறது. அவ்வப்போது எழுதி முடித்த நாவல். அதனாலேயும் அதற்கு என்று எந்தத் திட்டமும் இல்லை.

தண்ணீர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சக்கரியா தண்ணீரை நவீனத்துவ நாவல்களின் முன்னோடி எழுத்து என்று சொல்கிறார். சரிதானா?

ஒரு பிரவாகம் போய்க்கொண்டிருக்கிறது. அதில் எழுத்து ஒரு பகுதி. நம்மைவிடவும் அற்புதமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். சக்கரியா சொல்லியிருக்கலாம். அவருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். எனக்கென்னவோ அவர் மிகைப்படுத்திச் சொல்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

தண்ணீர் நாவலுக்கு ந. முத்துச்சாமி எழுதியுள்ள பின்னுரையில் அதைத் தமிழின் முதல் குறியீட்டு நாவல் எனச் சொல்லியிருக்கிறாரே. ஒரு வாசகனாக அதைப் பார்க்கும்போது அது உண்மை என்றுதான் தோன்றுகிறது.

ஒரு குறியீட்டு நாவல் என்று சொல்வதற்கு 16 பக்கங்கள் தேவையா? நானாக இருந்தால் அதே விஷயத்தை அரைப்பக்கத்தில் சொல்லியிருப்பேன். அவர் அதை வலுக்கட்டாயமாகச் சொல்லியிருந்தார். இதெல்லாம் க்ரியா ராமகிருஷ்ணனின் பாதிப்பு. ஆனால் ராமகிருஷ்ணன் அதைப் பிரசுரிக்கவில்லை.

நிஜம். இமையம் தகுதியான எழுத்தாளர்தான். அதில் சந்தேகமில்லை. ராமகிருஷ்ணன் அவருடைய எழுத்துகளைப் பிரசுரிப்பார். நான் நல்ல எழுத்தாளர் இல்லை என்று நினைத்துவிட்டார். தண்ணீரைப் பிரசுரித்ததற்குக் காரணம் சுந்தர ராமசாமி. அப்போது அவரும் ராமகிருஷ்ணனும் ரொம்ப நெருக்கமாக இருந்தார்கள். அவர் ஊரிலிருந்து வந்தால் நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்குத்தான் போவார். இவர் அவரை ரொம்பப் பாராட்டுவார். அவரும் பாராட்டுவார். பாராட்டு கிற மாதிரி இருக்கும். நான் யாரையும் குறை சொல்லவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய நலனைத் தான் பார்ப்பார்கள். அவர் மட்டும் என்ன பெரிதாகச் சம்பாதித்து விட்டார்? இவர் கணக்குக் கேட்பார்.

யார்?

நம்ம ராமசாமி. சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி அவ்வப்பொழுது கணக்குக் கேட்பார். ராமகிருஷ்ணன் எனக்கும் கணக்குத் தருவார். ஐந்து சதவீதம் பத்து சதவீதம் தருவதாகச் சொல்வார்.

மருத்துவரைப் பார்க்கப் போவதாகச் சொன்னபோது நற்றிணையிலிருந்து பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார். இந்தச் சொக்கலிங்கம், கவிதா பப்ளிகேஷன்ஸ், என் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாகப் போட்டார். இரண்டு தடியான புத்தகங்கள். அப்போது அவை இரண்டும் சேர்ந்து 750 ரூபாய். இப்போது 1000 ரூபாய். 1000 பிரதிகள் விற்றுவிட்டதாகச் சொன்னார். உங்களால் நம்ப முடிகிறதா? 1000 ரூபாய், 1000 பிரதிகள். என்னாலும் நம்ப முடியவில்லை. ஆயிரம் பேர் படிப்பதாக அவர் சொல்கிறார். அந்தப் பணத்துக்கும் எனக்குக் கொடுத்த பணத்துக்கும் என்ன சம்மந்தம்? ஆனால் ஏதோ கொடுக்கிறார். ராமசாமியும் பணம் கேட்டுவிடுவார். அப்புறம் ராமகிருஷ்ணன் அகராதி போட்டார். அகராதியை நாம் பதிப்பிக்கிறோம். ஆனால் அது என்னவோ உலகத்திலேயே இல்லாத காரியம்போல் பேசக் கூடாது. தமிழ் - தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ், இப்படி எத்தனையோ விதங்களில் போடுகிறார்கள். லிப்கோ எவ்வளவு போடுகிறார்கள்? ஆனால் எதுவுமே பேசுவதில்லை. ‘சீட்டி’ன்னு ஒரு வார்த்தை. அச்சிட்ட துணி வகை. தற்கால தமிழ் அகராதியில் அந்த வார்த்தையே இல்லை. லிப்கோவில் அந்த வார்த்தை இருக்கிறது.

ஆனால் ‘தண்ணீர்’ நாவலை க்ரியாவில் அழகாகத்தான் போட்டார்கள். சி.மோகன் சொல்லித்தான் போட்டார்கள். அதில் குறியீடு இருக்கிறது என்பதெல்லாம் ஒவ்வொருவருடைய அபிப்பிராயம். நான் அப்படி நினைத்து எழுதவில்லை.

‘கரைந்த நிழல்கள்’, ‘மானசரோவர்’ இரண்டும் சினிமாப் பின்னணியில் எழுதப்பட்டவை. இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. ஆனால் இரண்டுக்குள்ளும் ஒரு தொடர்ச்சி இருப்பதுபோல் தோன்றுகிறது. கரைந்த நிழல்களில் வரும் ஜெயசந்திரிகா மானசரோவரிலும் இருக்கிறாள். அப்புறம் அந்தப் புரொடக்ஷன் மானேஜர். மானசரோவரிலும் அவர் இருக்கிறார். கதைக்களங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஸ்டூடியோ. கரைந்த நிழல்களின் முடிவு மானசரோவரா? இது தொடர்ச்சிதானா? அல்லது மானசரோவரின் தொடக்கம்தான் கரைந்த நிழல்களா?

நான் பல சமயங்களில் நிர்ப்பந்தங்களால்தான் எழுதினேன். மானசரோவர் நான் ஏதோ திட்டம் போட்டு எழுதியதாக நினைக்காதீர்கள். ஒரு சமயம் நான் சாவியைப் பார்த்தேன். நாரதகான சபாவிலோ வேறு எதோ ஒரு நிகழ்ச்சியிலோ அவர் என்னைப் பார்த்து ‘என்னப்பா ஒரு கதை கொடுக்கறியா’ எனக் கேட்டார். அவர் எல்லோரையும் ‘என்னப்பா’ என்றுதான் கேட்பார். உடனே தலைப்பும் தரச் சொன்னார். நான் உடனே மானசரோவர் என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு இவ்வளவு பொறுப்பற்ற தன்மையோடு ஒரு எழுத்தாளன் இருப்பானா என்று தோன்றும். அப்போது பிரதி தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம். அதனால் கார்பன் வைத்துக்கொண்டு பால் பாயிண்ட் பேனாவால்தான் எழுத வேண்டும். அப்படி எழுதியதை ரவி பிரசாத் என்று ஒருவர் வாங்கிக் கொண்டு போவார். அவர் இப்போது ஆனந்த விகடனில் வேலைபார்க்கிறார் என்று சொன்னார்கள். அந்தக் கதையை சாவி படித்ததே இல்லை.

மானசரோவர் என்ற தலைப்பு எதனால்?

எனக்கு மானசரோவர் போக வேண்டுமென்று ஆசை. அந்த நாள்களில் போயிருக்கலாம். போகவில்லை. அப்புறம் ஜெமினியில் இருந்த கி.ரா காணாமல் போய் விட்டார். சாமியாராகிவிட்டார் என்று சொன்னேனே, அது எனக்கு ரொம்ப வருத்தத்தைத் தந்தது. ஆனால் கடைசியில் ஒரு நோக்கமும் கிடைத்தது விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எழுதினேன் என்று சொல்லலாம். அந்தச் சமயத்தில் சாவி ஒரு தலைப்புச் சொல்லச் சொன்னார். சொன்னேன். உடனே தலைப்புச் சொல்லவில்லை என்றால் சாவி போட மாட்டார்.

(சிரித்து விட்டு) எவ்வளவு பொறுப்பற்ற தன்மை பாருங்கள்.

ஆனால் ஒரு படைப்பு என்பது எழுத்தாளரைப் பொறுத்தவரை அப்படித்தானே தொடங்க முடியும்? உதாரணமாக, ஒற்றன் நாவலில் வரும் பெரு எழுத்தாளனான பிராவோ நாவல் எழுதுவதற்காக சார்ட் எல்லாம் போடுவார். பாத்திரங்கள், சம்பவங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சார்ட். அதைப் பார்த்து வியந்துபோன கதைசொல்லி தான் எழுதுகிற கதைக்கு அடுத்த அத்தியாயம் என்றால் என்ன என்றே தெரியாது. சொல்லப்போனால் அடுத்த அத்தியாயம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை என்று சொல்யிருப்பான். அது எழுத்தாளனின் குரல்தானே?

பிராவோ ஊருக்குப் போன பிறகு எனக்கு அங்கிருந்து நூறு டாலருக்குக் காசோலை அனுப்பினார். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு கையெழுத்துப் போட்டுத் தரச் சொன்னார்கள். அப்போது 700 ரூபாய் 800 ரூபாய் கிடைத்தது. பிறகு அவர் அந்த நாவலை எழுதிப் பிரசுரித்துவிட்டார். ஆனால் எனக்கு ஒரு பிரதி அனுப்பவில்லை. அங்கு நடந்த புரட்சியில் செத்துப்போய்விட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அதற்கு ஒரு விருது கிடைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனக்கு ஒரு ஸ்பானிஷ் நண்பன் இருந்தான். அவன் நாகர்கள் பற்றி ஒரு டாகுமென்ட்ரி படம் எடுத்தான். நன்றாக இருக்கும். இந்த ஸ்பானிஷ் நண்பன் பிராவோ உயிரோடு இருப்பதாகவும் சமீபத்தில் அவருக்கு ஒரு விருது கிடைத்ததாகவும் சொன்னான். எனக்கு ரொம்பத் திட்டம் போட்டெல்லாம் எழுதத் தெரியாது.

தண்ணீர் நாவலில் ஜமுனாவின் தற்கொலை முயற்சிக்குப் பின்னர் டீச்சர் பாத்திரம் ஜமுனாவிடம் பேசுவது, அது ஒரு முக்கியமான பேச்சு இல்லையா? அந்த நாவலில் எந்தப் பாராவும் பெரிதாக இருக்காது. டீச்சரின் பேச்சு ஒரு உபதேசம் மாதிரி ஒரே பாராவாக நீண்டு செல்லும். அது ஒரு எழுத்தாளனின் குரல் இல்லையா?

இருக்கலாம். நான் அந்த டீச்சருக்கு ஒரு ஆளுமை மதிப்பைக் கொடுக்க நினைத்தேன். அவளுக்கு ஒரு உருவம், உள்ளம் கொடுக்க வேண்டும் இல்லையா? அதைத்தான் செய்திருக்கிறேன். ஆனால் அதுவும் திட்டமிட்டுச் செய்ததல்ல. நான் நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை. ஆனால் இங்கே பலபேர் திட்டமிட்டுத்தான் எழுதுகிறார்கள்.

‘தண்ணீர்’ கூட நீங்கள் சிறுகதையாகத்தான் எழுதத் தொடங்கினீர்கள். இல்லையா?

ஆமாம். அப்போது இலக்கியச் சங்கம் என்ற அமைப்பு இருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு சிறுகதை எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது என்ற திட்டம் இருந்தது. ஆனால் யாருமே எழுதவில்லை. நான் மட்டும்தான் ஒரு பைத்தியக்காரனைப் போல உட்கார்ந்து எழுதினேன். ராமகிருஷ்ணன் எழுதவில்லை. கிருஷ்ணமூர்த்தி எழுதவில்லை, கந்தசாமி எழுதவில்லை.

சொல்வனத்தில் வந்த கட்டுரை ஒன்றில் ஒரு குறிப்பு இருக்கிறது. ‘எனக்கு இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளிலெல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனால் அந்த மாதிரி வார்த்தைகளில் ஒரு பயம் பாருங்கொ. நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே ரொம்ப காலமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அதுவே இன்னும் கிடைத்தபாடில்லை. இதில் ஆன்மீகத்தை எப்படித் தேடுவது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கதைகளில் பலவற்றிலும் ஒரு ஆன்மீக விசாரம் இருக்கிறது. கதாபாத்திரங்களுக்கோ அல்லது எழுத்தாளருக்கோ. நீங்கள் ஆன்மீகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

ஆன்மீகம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அது தெரியவில்லை என்று ஒத்துக்கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. ஆன்மீகவாதிகள் நிறையப் பேரைப் பார்த்துவிட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் நமக்குப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக ஆகி விடுகிறார்கள். நான் சொன்ன இந்தச் சித்தர் செத்துவிட்டார். அவருடைய குழந்தைகள் செத்துப் போய்விட்டார்கள். அந்தப் பெண் பட்டினி கிடந்தே செத்துவிட்டாள். நான் அவளைப் பார்த்தேன். அவளை சித்தருடைய மகளாகத்தான் பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை. அன்றைக்கு கும்பகோணத்தில் மழையான மழை. அந்தப் பெண்ணுக்கு அப்போது ஒரு நூறு ரூபாயாவது கொடுத்திருக்கலாம். நான்கு நாள்கள் சாப்பிட்டிருப்பாள். ஆனால் நான் கொடுக்கவில்லை. பிறகு அதைப்பற்றி யோசித்தேன். கொடுக்க வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்றவில்லை? அதை வருத்தம் என்று சொல்கிறீர்களா? இது மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள். ஆக ஆன்மீகம் என்று எதை வரையறுப்பது?

பலதரப்பட்ட மனிதர்கள் பற்றி எழுதிய நீங்கள் புராண இதிகாச பாத்திரங்களைக் கையாளாமல் இருப்பதற்குக் காரணம் உண்டா?

என்னைப் புராணங்கள் பிரமிக்க வைக்கின்றன.இதிகாசம் என்னை மலைக்க வைப்பதோடு பல இடங்கள் புரியாமலும் உள்ளன. ஆரம்ப நாட்களிலிருந்தே நான் புரியாததைத் தவிர்த்திருக்கிறேன். என்வரை இதிகாசங்கள் புரிந்துவிடக் கூடாத புதிர்கள். சில சமிக்ஞைகளை உணரலாம். ஆனால் இதிகாசங்களின் கால அளவை, தூர அளவை, தர்க்கம் நம் அறிவுகொண்டு கற்பனைசெய்து கொள்ளக்கூடியது அல்ல என்று நான் நம்புகிறேன். இது கிரேக்க இதிகாசங்களுக்கும் பொருந்தும். ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும். விட்டுவிடுவது, இந்தியாவரை நாத்திகர்களுக்கும் சாத்தியமில்லை. இராமாயணத்து தசரதர் 60000 ஆண்டுகள் ஆண்டவர். 60000 மனைவிகள் கொண்டவர், இவ்வளவு நாட்கள் ஆண்டுவிட்டு அவருக்கு மகன் இல்லை என்று புத்திரகாமேஷ்டி யாகம் புரிந்து மூன்று மனைவிகள் மூலம் நான்கு மகன்கள் அடைகிறார். அந்த இதிகாசக் களம் இந்தியா முழுதும் பரவி இருக்கிறது. அதே போல பாரதமும் இந்தியா முழுதும் நிகழ்ந்த கதையாக இருக்கிறது. யுத்தங்களில் நால்வகைப் படைகள். இதில் தேர்ப் படை எப்படி இயங்கியது? வழியெல்லாம் மாண்டவர்கள், கைகால் இழந்து துடிதுடிப்பவர்கள் - இவர்கள் மீது எப்படி ஓட்டிச் சென்றிருக்க முடியும்? நமக்குத் தெரிந்த தர்க்கத்தைக் கொண்டு இதெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. அப்புறம் விஸ்வரூபம்.

பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவர்களாகப் படைக்கப்பட்டவர்கள். ஒரு மகாமனிதர் இவ்வளவு நுணுக்கமாகப் படைத்த பாத்திரத்தை நான் பயன்படுத்துவது நியாயமாகப்படவில்லை. ‘இரண்டாம் இடம்’ என்று பீமனை வைத்தோ பரதனை வைத்தோ எழுத முடியாது.வியாசரும் வால்மீகியும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதியிருக்கிறார்கள். படிக்கப் படிக்கத் திகட்டாதவை. என்னால் என்ன கூட்ட முடியும்?

இதெல்லாம் நான் எனக்கு வகுத்துக்கொண்டவை.இதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன். இறுதியாக ஒரு கருத்து. எல்லா நேர்காணலிலும் கேள்வி கேட்பவர் அவர் சிந்தித்து அடைந்த சில முடிவுகளின் அடிப்படையில்தான் கேள்வி கேட்பார். தவறில்லை. ஆனால் என்வரை ஆன்மிகம், முன்ஜன்மம், மறு ஜன்மம், கர்மம் எல்லாமே நிழலாக உள்ளவை. இவற்றுக்கு எனக்குப் பதில்கள் இல்லை. இன்று ஒருவர் வாழ அன்றாட வினை - விளைவு போதுமானது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயல்படுகிறதா? இல்லை. காரணம், நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத காரணிகள். எனக்கு ஆன்மிக வேட்கை உள்ளது என்பதே சுயமயக்கம். என்னால் எனக் குத் தெரிந்தது மேல்தான் வேட்கை கொள்ள முடியும்.

உங்கள் கதை மனிதர்கள் எல்லோருமே மிகச் சாதாரணமானவர்கள். அசாதாரணமானவர்கள்-சத்யன் குமார் போன்ற பெரிய நட்சத்திரங்கள்- எல்லோருமே சூழ்நிலையால் இயக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். யாருமே சூழ்நிலையை மாற்றுவதற்கான அல்லது அதில் குறுக்கிடுவதற்கான நோக்கமே இல்லாதவர்கள். ஒரு படைப்பாளியாக மனிதனின் அடிப்படைக் குணத்தைப் பற்றி நினைக்கிறீர்கள்?

சூழ்நிலையைத் திட்டமிட்டு மாற்றுவது அது வேறுசில விபரீதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதல்லாமல் மாற்ற வேண்டும், எல்லோரும் மேன்மையடைய வேண்டும் என்னும்போது அதற்கு நிறையக் காலம் ஆகும். ஒரு பத்து வருஷம் ஆகலாம். ஒரு நாளில் சட்டம்போட்டு மாற்றிவிட முடியாது. அப்படி நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே நடந்திருக்கின்றன. இயல்பாக நடந்திருக்கிறது.

இருபது வருடங்களுக்கு மேலாகக் ‘கணையாழி’யின் ஆசிரியராக இருந்தீர்கள். ஒழுங்காகப் பார்சல் கட்டுவதைத் தவிர நீங்கள் செய்த வேறு பங்களிப்பு என்ன?

கையெழுத்துப் படிகளைப் படித்துவிடுவேன். கவிதைகளை வேறு யாராவதுதான் பார்ப்பார்கள். கையெழுத்துப் பிரதிகளைப் படித்தால்தான் நிறையப் புது எழுத்தாளர்கள் வருவார்கள். பிறகு அவர்களுக்கு நான் தகவல் தருவேன். பெருமாள்முருகன்கூட அவர் எழுதிய ஒரு கதையைப் பிடித்திருக்கிறது, மிகவும் பிடித்திருக்கிறது என்று நான் எழுதியிருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

சுகுமாரன்: எனக்கும் எழுதியிருக்கிறீர்கள். ஒரு கதையைப் பிரசுரமும் செய்திருக்கிறீர்கள். அதற்காக முப்பது ரூபாய் சன்மானமும் அனுப்பியிருக்கிறீர்கள்.

உங்கள் கையெழுத்து நன்றாக இருக்கும்.

தேவிபாரதி: நான் ஒரு கதை அனுப்பினேன். பிரசுரிக்க இயலாது என்று சொல்லிவிட்டீர்கள்.

என்ன எழுதியிருந்தீர்கள்? பொதுவாக ரொம்பத் தீவிரமான மனித உறவுகளில் சிக்கல் உள்ள கதைகளைப் பிரசுரிப்பதில்லை என வைத்திருந்தோம். இது ஒரு ஐம்பது பேர் படிக்கிற பத்திரிகை. அதில் அப்படி ஒரு கதையைப் போட்டு சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் வருத்தப்படுவார்கள். அந்த வருத்தம் வாழ்நாள் முழுக்க இருந்துவிடும். அதனால் அந்த மாதிரியான கதைகளைப் போட வேண்டாம் என்று இருந்தேன்.

இந்தப் பார்சல் கட்டுவது பற்றிச் சும்மா ஒரு வேடிக்கைக்காகச் சொன்னது..

ரொம்ப வருஷத்திற்கு முன்னர் ஷிஜீணீஸீ இல் அமெரிக்க அனுபவம் பற்றி ஒரு கட்டுரை எழுதினீர்கள். ‘ளிஸீமீ tஷீuநீலீ ஷீயீ ரீணீக்ஷீறீவீநீ’ என்று. அது சிறுகதையாக வந்திருந்தது. ‘ஒற்றன்’ நாவலில் அது நாலாவது அத்தியாயமாக இடம் பெற்றிருக்கிறது. கட்டுரைக்கும் கதைக்கும் திட்பமான வேறுபாடு ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

எனக்கு வேறுபாடு தெரியவில்லை. அதை நான் கட்டுரையாகத்தான் எழுதினேன். அவர்கள் கட்டுரை கேட்டார்கள். கட்டுரை அனுப்பினேன். கதையாகப் போட்டு விட்டார்கள்.

இன்று நாவலின் முதல் இரு அத்தியாயங்களில் இரண்டு உரைகள் இடம்பெற்றிருக்கும். ஒரு உரை. அப்புறம் இன்னொரு உரை. இரண்டுமே கட்டுரைகளாகத்தான் இருக்கும். பிறகு ஒரு நேர்காணல். உங்கள் படைப்புகளில் இவை கலந்து கலந்துதான் இருக்கும். அவை சாதகமாகவும் இருக்கும். முத்துலிங்கத்தின் கதைகளில்...

முத்துலிங்கம் என்றால்... கனடாவில் இருப்பவர்தானே?

ஆமாம். அவருடைய கதைகளில் கட்டுரைத் தன்மை இருக்கும். நாஞ்சில் நாடனின் சமீபத்திய படைப்புகளை சிறுகதையா கட்டுரையா என வகைப்படுத்த முடிவதில்லை. அப்படிப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும் அவர் சொல்கிறார். கட்டுரைத் தன்மைதான் அதிகமாக இருக்கும். இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடு இப்போது குறைந்துகொண்டு வருகிறது. அப்படியான ஒரு பேதம் தேவையில்லை எனச் சொல்லும்படி இருக்கிறதா?

கட்டுரைக்கு ஆதாரம் தர வேண்டும். கதைக்கு ஆதாரம் தேவையில்லை. நான் கதைகளுக்கும் ஆதாரம் தருகிறேன். ஆனால் கட்டுரைக்குத்தான் ஆதாரம் அவசியம். புனைகதைக்கு அது தேவையில்லை.

உங்கள் கட்டுரைத் தொகுப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதில் மார்க்கேஸுக்குப் பிறகு பெரிய எழுத்தாளர்கள் என யாரும் வரவில்லை. சின்னதாக ஒரு சலுகையை வேண்டுமானால் சல்மான் ருஷ்டிக்குக் கொடுக்கலாம் என்று சொல்கிறீர்கள். 2002இல் எழுதியிருக்கிறீர்கள். 12 வருஷங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு இப்போது நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். யோசே சரமாகு, ஹாருகி முரகாமி, ஓரான் பாமுக் ரேமண்ட் கார்வர் - இப்படிப் பலர் கவனம் பெற்றிருக்கிறார்கள்.உங்கள் கருத்தில் இப்போதைய பெரிய எழுத்தாளர் யார்?

சமீப காலத்திலேயா? நிறையப் பேர். சீனாக்காரர்களும்கூட வந்திருக்கிறார்கள். யுவான் ரூல்ஃபோ வின் கதையைச் சமீபத்தில் படித்தேன்.

எது? பெத்ரோ பராமோவா?

ஆமாம். நீங்கள் படித்திருக்கிறீர் களா?

சுகுமாரன்: படித்திருக்கிறேன். தமிழில் வந்திருக்கிறது. ஆனால் ரூல்ஃபோ, மார்க்கேஸுக்கு முன்பே எழுதியவர். தமிழிலேயே அவருடைய நாவலும் ‘எரியும் சமவெளி’ என்னும் பெயரில் சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கின்றன. சரியாகச் சொல்லப்போனால் மாய எதார்த்தவாதம் என்னும் விஷயமே அவரிடமிருந்துதான் பரவலாகத் தொடங்கியது.

ஆமாம், மார்க்கேஸ் கூட ரொம்ப கெட்டிக்காரத்தனமாகச் செய்கிறார். பெத்ரோ பரோமா இயல்பாகவே செய்துவிடுகிறார். ஆனால் நம் கல்கி அதுபோல் ஒரு கதை எழுதியிருக்கிறார். ‘தூக்குத் தண்டனை’ என்ற ஒரு கதை. அதில் நீதிபதி ஒருவர் ஒரு இளைஞனுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்துவிடுவார். அவன் சுதந்திரப் போராட்ட வீரன். எதையோ கொளுத்திவிடுகிறான். அவன் மீதுள்ள குற்றச்சாட்டு பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆனால் அந்த நீதிபதி அவன் எப்படியாவது தப்பித்துவிட மாட்டானா என யோசிப்பார். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும். பிறகு அவன் உயிரோடு வந்துவிடுவான். அட, தப்பித்துவிட்டாயா என அவனைப் பார்த்த நீதிபதி சந்தோஷப்படுவார். அதற்கு அவன் தப்பித்து விட்டதெல்லாம் போகட்டும். ஒரு சாமியார் வந்து அந்தக் கலவரம் நடந்தபோது நான் அங்கே இல்லை என்று சாட்சி சொன்னார். ஆனால் நீங்கள் அதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அதில் எனக்கு வருத்தம்தான் என்பார். ஆனால் நிஜத்தில் இளைஞன் செத்துப்போயிருப்பான். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னாலேயே செத்துப்போயிருப்பான். அப்படியானால் வந்தது யார்? இது கல்கி எழுதியது. நாம் கல்கியை மிக மட்டமாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். கல்கியை எல்லோரும் மேம்போக்காக எழுதி இருக்கிறார். அதில் சரித்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அவர் இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ வேண்டுமென்றேதான் நீட்டிக்கொண்டு போகிறார். அது உண்மை. ஆனால் தென்னிந்திய வரலாறு கிடைப்பதற்கு எனக்கு முழுக்க இந்தப் புத்தகம் உதவி செய்தது. அந்தப் புத்தகத்தை சி.பி. ராமசாமி அய்யர் மகன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஐந்து தொகுதிகள். எதற்கு இந்த வேலையற்ற வேலை என்று கேட்டேன். அந்த மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி வெளியிட்டார். அப்போது பேசிய கருணாநிதி தான் பார்த்த காஞ்சி, மாமல்லபுரம் எல்லாம் கல்கியின் நாவலைப் படித்த பிறகு புதிதாகத் தெரிவதாக அண்ணா சொன்னார் என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்த முடியுமென்றால் அவரை நாம் எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியுமா? சுந்தர ராமசாமி மாதிரி கல்கியைக் கிண்டல் செய்தவர்கள் வேறு யாருமில்லை. ஜே.ஜே. சில குறிப்புகளை ஆரம்பிக்கிறபோதே சிவகாமியம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாரா என்று ஜே.ஜே. கேட்பதாகத்தான் ஆரம்பிப்பார்.

அதற்கு வேறொரு அர்த்தம் இருக்கிறது இல்லையா? அதில் வரும் சேர்த்தலை கிருஷ்ண அய்யர் என்ற வரலாற்று நாவலாசிரியர் ’குளச்சலில் ஒரு யுத்தம் நடந்ததாமே, அதைப்பற்றி ஒரு நாலு வரி தகவல் கிடைத்தால் போதுமே ஒரு பெரிய நாவலை எழுதிவிடலாமே’ எனக் கதை சொல்லியான பாலுவிடம் கேட்பார். அந்த மனநிலைதான் இங்கே இருந்த பல வரலாற்று நாவலாசிரியர்களிடம் இருந்திருக்கிறது. கல்கி மட்டுமில்லாமல் சாண்டில்யன், ஜெகசிற்பியன்

மாதிரி.

சாண்டில்யன் சரி. ஜெகசிற்பியன் கொஞ்சம் சீரியசானவர். சாண்டில்யனுக்கு அவ்வளவாகப் பொறுப்புக் கிடையாது.

ஒரு வரலாற்று ஆதாரமோ, அதற்கான ஆராய்ச்சியோ இவர்களிடம் இருந்ததா?

மாமண்டூரில் ஒரு யுத்தம் நடந்தது உங்களுக்குத் தெரியுமா? சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும். அப்போது ஒரு வெள்ளம் வந்தது. அதற்கு ஆதாரமும் இருக்கிறது. சிவகாமியின் சபதம் இல்லா விட்டால் என்னால் அதைத் தெரிந்து கொண்டிருக்க முடியுமா?

மாமண்டூர் யுத்தம் சிவகாமியின் சபதத்தில் இடம் பெறுவது எதற்காக? வாசகனுக்கு ஒரு பல்ப் பிக்ஷன் (ஜீuறீஜீ யீவீநீtவீஷீஸீ) தரக்கூடிய சுவாரசியத்தைக் கொடுப்பதைத் தவிர வேறென்ன?

எழுத்தாளன் வேறு எப்படி எழுதுவான்? ஆர்வமூட்டக்கூடியது தானே எழுத்து?

அப்படியானால் எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன?

அதை நான் சொல்ல மாட்டேன். எழுத்தாளன் எதைச் சொன்னாலும் சுவாரசியமாக இருக்க வேண்டும். நம்பும்படியாக இருக்க வேண்டும். தி.ஜ. ரங்கநாதன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தாரே, அவருக்கும் கல்கியைப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார். நான் இப்படித்தான் என்று கிடையாது. ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தை என் மனைவியிடம் கொடுத்தேன். அவளால் படிக்க முடியவில்லை. அதில் பத்துப் பதினைந்து பகுதிகள். அதற்கு இத்தனை விவரிப்புத் தேவையா? ராஜாஜி மகாபாரதத்தை 250 பக்கங்களில் எழுதியிருப்பார். அதற்கு இருக்கிற வாசகப் பரப்பு இதற்கு இருக்குமா? மகாபாரதத்தைப் பிரச்சாரம் செய்ய நான் விரும்பினால் இதைப் பரிந்துரைக்க முடியாது. இதில் வேறு என்னென்னவோ குழப்பங்கள் இருக்கின்றன. நாகர்கள் நாகர்கள் என்று சொல்கிறார். நாகர்களுக்கு அரண்மனையெல்லாம் கிடையாது. ஆனால் அவர் அதற்கெல்லாம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார். மலையாள மகாபாரத்தில் இருக்கிறது என்கிறார்.

அறுபது வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எப் போதாவது ‘எழுத்துத்திணறல்’ (writer’s block) ஏற்பட்டது உண்டா?

இல்லை. ஆனால் சோர்வு ஏற்பட்டதுண்டு. சோர்வாக இருக்கிற சமயம் யாராவது கதை வேண்டும் என்று கேட்பார்கள். எழுத ஆரம்பிப்பேன். ஒருவர் கதை கேட்டு எழுதிக்கொடுக்க முடியவில்லை என்றால் எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சி ஏற்பட்டுவிடும்.

இந்த நூற்றாண்டின் எழுத்து பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் தொடர்ந்து படிக்கிறீர்கள். இளம் தலைமுறை எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறீர்கள். அதை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

இன்றைய எழுத்தாளர்கள் விஸ்தாரமான மனநோக்கெல்லாம் வைத்துக்கொண்டு அதற்கெனத் தத்துவமெல்லாம் வைத்துக்கொண்டு எழுத வேண்டும் என நினைக்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கி ‘கரமாசோவ் சகோதரர்களை’ எழுதினார். சாதாரண எழுத்தாளர்களால் அப்படியெல்லாம் எழுத முடியாது. அவர் ஒரு துப்பறியும் நாவல் எழுத விரும்பினார். அதற்கான ஆதாரங்களையெல்லாம் சேகரித் தார். க்ரைம் ரெக்கார்டுகள் முதலானவற்றைச் சேகரித்தார். கடைசியில் ‘குற்றமும் தண்டனையும்’ வேறுமாதிரியாக உருவாயிற்று. முன்பே சொன்னது போல்தான். ஒன்றைப்பற்றிய எண்ணமும் அது உருவாகிற விதமும் வேறுவேறுதான். இப்போது தற்காலம் பற்றி எழுதுகிறார்கள். அரவிந்த் அடிகா அப்படித்தான் எழுதுகிறார். அவருடைய ‘Last Man in Tower’ நாவல். ஒரு மாஃபியா கும்பல் ஒரு பழைய குடியிருப்பை வாங்கும். அதை இடிப்பதற்காக எல்லாரையும் குடியிருப்போரை வெளியேறச் சொல்லும். முப்பது, நாற்பது வருடம் இருந்தவர்கள் எங்கே போவார்கள்? அதில் குடியிருந்த கிழவர் வெளியேற மறுத்துவிடுவார். அவருக்குப் போக இடமில்லை. கொல்லலாம். ஆனால் கொன்றது யார் என்று தெரிந்துவிடும். அதற்காகப் பல வகைகளில் அவருக்குத் தொந்தரவு கொடுப்பார்கள். வீட்டில் சாணியடிப்பார்கள். இரவு நேரங்களில் தொலைபேசியில் அழைப்பார்கள். அது இன்றைய வாழ்க்கை.

இன்று தலைமுறைகளைப் பற்றிய நாவல்கள் வருகின்றன. ஒரு நூற்றாண்டு, இரண்டு நூற்றாண்டு வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இரண்டு நூற்றாண்டு அல்ல, ஆறு நூற்றாண்டுகளைப் பற்றிக்கூட எழுதுகிறார்கள். சு. வெங்கடேசன் நாவல். பெயர் நினைவுக்கு வரவில்லை.

‘காவல் கோட்டம்.’

அந்த மாதிரி ரொம்பவும் பின்னோக்கியெல்லாம் போக முடியாது. அந்த நாள்களில் இப்படி யெல்லாம் இருந்தது என்று வெகு சுலபமாக எழுதி விடுகிறார்கள். எனக்கு ரொம்பப் பயமாக இருக்கிறது. நிறையத் தப்பபிப்ராயமெல்லாம் உருவாகிறது. எனக்கு நேற்று பற்றியே சந்தேகம். இன்றைக்கு நீங்களிருவரும் வந்திருக்கிறீர்கள். அதுவரை உண்மை.

உங்கள் கதைகளில் ஆண் பாத்திரங்களைவிடப் பெண் பாத்திரங்கள் துலக்கமாக இருக்கின்றன. அவர்களுடைய உணர்வுகளை மிகவும் உண்மையாகச் சொல்கிறீர்கள். இது பற்றிச் சொல்லுங்கள்.

அப்படியும் சொல்லலாம். ஆனால் ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. ஒருவகையில் அது எழுதுவதற்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது. ஆண் பாத்திரங்களில் அது குறைவு.

ஆனால் பெண் பாத்திரங்கள் அதில் துலக்கமாகிவிடுகின்றன. ‘தண்ணீரில்’ வரக்கூடிய சாயா, டீச்சர், மானசரோவரில் வரக்கூடிய ஜம்பகம் எல்லோருமே மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சக்தியின் குறியீடுபோல் தோன்றுகிறது.

எனக்கு நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நீங்களாக அதிகப்படியான அர்த் தத்தை ஏற்றிவிடுகிறீர்கள். அவை எல்லாம் வெறும் கதைகள், ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை.


உடனே உடனே எழுதினால் செய்திப் பத்திரிகை போல ஆகிவிடும்- அசோகமித்திரன் நேர்காணல்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் எழுதிவரும் அசோகமித்திரன் தமிழின் முன்னோடி எழுத்தாளர். எளிய உரையாடல்களால் ஆன அவரது படைப்புகள் வாழ்வை மிக நுட்பாகச் சித்தரிப்பவை. அவரது கதை மாந்தர்கள் மிகையுணர்ச்சி அற்றவர்கள். அப்பாவின் சிநேகிதர் தொகுப்புக்காக 1996இல் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். அசோகமித்திரனின் இலக்கியப் பங்களிப்பிற்காக அவருக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இந்த ஆண்டின் திரு.வி.க. விருதை வழங்கவுள்ளது.

இப்போது தமிழ் வளர்ச்சித் துறையின் திருவிக விருது கிடைத்துள்ளது. மிக நீண்ட பயணத்திற்குப் பிறகுதான் தொடர்ந்து விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுவருகிறீர்கள்...

விருது கொடுக்கிறார்கள். சந்தோஷம். விருதுகொடுப்பதில் நிறைய பேருக்கு மகிழ்ச்சி. அவ்வளவுதான். தொண்டு கிழம் ஆன பிறகு விருதுகொடுக்கிறார்கள். பலபேர் விருது இல்லாமலே இறந்துவிடுகிறார்கள். எனக்கு 82 வயதாகிவிட்டது. சாரல் விருது விக்கிரமாதித்யனுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் எனக்குக் கவிதை குறித்தே பொதுவாக நிறைய சந்தேகம் இருக்கிறது. எப்போதும் எனக்குக் கவிதை குறித்துச் சந்தேகம் உண்டு. கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.

இது பொதுவாகக் கவிதை குறித்த உங்கள் அபிப்ராயமா?

ஆம். ஆரம்பத்தில் கவிதை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றால் எழுதிய அந்தச் சாதனம் வெகுநாள் இருக்காது. ஓலைச் சுவடிகள் 150 வருஷத்திற்குள் உதிர்ந்துபோய்விடும். அதனால் மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை, மோனை, அலங்காரங்கள் வைத்து எழுதினார்கள். மகத்தான படைப்புகள் எல்லாம் இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை.

கவிதை குறித்த சந்தேகம் தமிழ்க் கவிதைக்கு மட்டுமானதா?

எனக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் கவிதைகள் எல்லாம் சந்தேகமானவைதாம். நான் கவிதை எழுதியதில்லை. ஆனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் கவிஞர்களாக இருக்கிறார்கள். நண்பர் வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்றோர்.

ரொமண்டிஸிஸம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நீங்கள் எழுத வந்தீர்கள். ஆனால் உங்கள் கதைகளின் மாந்தர்கள் அதைக் களைந்த இயல்பான மனிதர்களாக இருந்தார்கள். இது எப்படிச் சாத்தியமாகியது?

அது என்னுடைய இயல்பு. நான் என் கதைகளுக்குள் இது இதையெலாம் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. சிலர் ரொமண்டிக் தன்மையுடன் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய் இயல்பில் எங்காவது ரொமண்டிஸிஸம் இருக்கும். காண்டேகர் என்று ஒரு எழுத்தாளர். எல்லா இந்திப் படங்களும் அவர் கதைகள் மாதிரியே இருக்கும்; 2 ஆண்கள், 2 பெண்கள். காண்டேகரின் படைப்புகளை மு.வ. மிகவும் வியப்பார். ஆனால் மு.வ.வின் எழுத்தில் அவ்வளவு ரொமண்டிஸம் இல்லை. நன்னெறி கூறுவது போல இருக்கும். கல்கி எழுத்து நன்றாகத்தான் இருக்கும். ஆனால் கதை முடிவில் ஒரு ரொமண்டிஸிஸத்தைக் கொண்டுவந்துவிவார்.

18ஆவது அட்சக்கோடு, கதைச் சம்பவம் நடந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எழுதிய நாவல். இந்தக் கால இடைவெளி எதனால்?

பொறுமையாகத்தான் எழுத வேண்டும். அப்போதுதான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியானபடி எடுத்துக் கூற முடியும். அதாவது படைப்புக்கு நியாயம் செய்யும்படி. உடனே உடனே எழுதினால் செய்திப் பத்திரிகை மாதிரி ஆகிவிடும். நேற்று சசி தரூர் மீது எல்லோரும் அனுதாபம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று கொலைசெய்துவிட்டார் என்கிறார்கள். அதனால் ஒரு இடைவெளி விட்டுச் செய்வது நல்லது. ஆனால் இதை எல்லோருக்குமான வழியாகச் சொல்லவில்லை.

கால இடைவெளிக்குப் பிறகு எழுதும்போதுதான் உங்களால் துல்லியமாக எழுத முடிகிறதா?

ஒரு வரலாற்றுப் பின்னணியில் எழுதும்போது இம்மாதிரியான இடைவெளி தேவை. சில அந்தரங்கமான கதைகளுக்கு இடைவெளி தேவையில்லை. ஐந்து மாதம் முன்பு பக்கத்துவீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைக் கதையாக எழுதியுள்ளேன்.

தலித்தியம், பெண்ணியம் போன்ற கோட்பாடுகளை ஒரு எழுத்தாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கதை இந்தக் கோட்பாட்டுக்குள் வரும் எனப் பிரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு நிஜக் கதை அனைத்துக் கோட்பாடுகளையும் கொண்டதாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் மக்களுக்கு நலம் தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு தலித் தான் தலித்தைப் பற்றி எழுத வேண்டும் என்றில்லை. பிரேம் சந்த் தலித் இல்லை. அவர் எழுதிய சத்கதி ரொம்ப விஷேசமானது. ஒரு தலித்கூட அந்த மாதிரி எழுதியிருக்க முடியாது.

தமிழ் படைப்பு மொழியின் தொனி இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிறது. அது பற்றி...

இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. சில ஐரோப்பியப் படைப்புகள் விவரிப்புகள் மிகுந்ததாக இருந்தன. அந்தப் பாதிப்பில்தான் எழுதினார்கள். ஆனால் அதைத் திட்டமிட்டுச் செய்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களே அறியாதபடி அந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிறந்த எழுத்தாளன் உரையாடல்கள் மிகுந்தும் எழுதுவான். விவரிப்புகள் மிகுந்தும் சிறப்பாக எழுதுவான்.

நாவல் என்ற ஒரு வடிவத்திற்குப் போன பிறகும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறீர்கள்...

நான் எழுதுகிறேன். பல பேரைச் சென்றடைகிறது. அது அவர்களுக்குப் புதிய விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் தி இந்து பொங்கல் மலரில் வைரம் என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். பல பேருக்கு ஆச்சரியம், 500 ரூபாய்க்கு வைரத் தோடு கிடைக்குமா என்று. இதெல்லாம் இந்தக் கதை மூலம் அவர்களுக்குத் தெரியவருகிறது. மனித உறவுகள் எப்படியெப்படி எல்லாம் இருந்தது, எப்படியெல்லாம் மாறியிருக்கிறது எனச் சொல்கிறது அந்தக் கதை. நாங்கள் ஊரை விட்டு வந்துவிட்டோம். பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம்.

ஊரின் நினைவுகள்தாம் உங்களை எழுத வைக்கிறதா?

இருக்கலாம். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது. அந்த வேர் அறுந்து போய்விட்டது. இப்போது புதிதாக வேர்கள் கண்டுபிடிக்க வேண்டியது இருக்கிறது. சில சமயம் வேர் பிடித்துக்கொள்கிறது. சில சமயம் பிடிக்கிறதில்லை.

இன்றைக்குள்ள சிறுகதைகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

நல்ல தேர்ச்சி இருக்கிறது. ஆனால் சிறுகதைகளின் தேவை குறைவு. அதனால் ஒன்றோடு ஒன்றை ஒப்பிடுவது சிரமம்.

இன்றைக்கு உத்வேகம் எடுத்துள்ள இணைய எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்து?

அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச் சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து...

மூணு நாலு வருஷத்திற்கு முன்பு இறந்துவிடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. இந்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். அங்கே 20 படிகள் இருக்கும். கைப்பிடி இருக்காது. உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற ஆறு மாதம் ஆனது.

இன்றைக்கு மானுடவியல், சமூகவியல் சார்ந்த நாவல்களே அதிகம் கவனம் பெறுகின்றன. இவை இலக்கியத் தரமானவையா?

பெரிய நாவலாக இருந்தாலே அதன் இலக்கியத் தரம் குறைந்து போய்விடும். நாவல் வடிவத்திற்கே குறைபாடு உள்ளது. உடனே டால்ஸ்டாய் எழுதவில்லையா? என்பார்கள். War and Peace நாவலில் நிறைய பிழைகள் உண்டு. அந்தப் பிழைகளைச் சரிசெய்வதற்காக ஒரு பின்னுரை, பிறகு ஒரு பின்னுரை, அதற்குப் பிறகு இன்னொரு பின்னுரை என அந்நாவலில் நான்கு பின்னுரைகள் இருக்கும். நாவல் எழுதிவிட்டு ஒருத்தன் பின்னுரை எழுதுகிறான் என்றால் அந்த நாவலில் அவனுக்குத் திருப்தி இல்லை என்றுதானே அர்த்தம்? ஆனால் அதே மனுஷன் ரொம்ப சின்ன நாவல்களும் எழுதியிருக்கிறார். முன்பு இந்த மாதிரியான நாவல்களுக்கு வாசகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். பதிப்பாளர்களும் வெளியிட மாட்டார்கள்.

இந்த மாதிரியான நாவல்களுக்கு இன்று தேவை இருக்கிறதா?

தேவை, தேவையில்லை என்று இல்லை. எழுதியிருக்கிறார்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு ஒரு பரிசு கிடைத்துவிட்டால் படிக்கிறார்கள். படிக்க வேண்டும்.

நீங்கள் ஆங்கிலத்திலும் கவனம் பெற்ற எழுத்தாளர்...

ஆங்கிலத்தில்தான் முதலில் எழுதினேன். டெக்கான் ஹெரால்டில், இல்லஸ்ரேட் வீக்லியில் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து ஆங்கிலத்திலே எழுதியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து எழுதவில்லை. தமிழில் நிறைய செய்வதற்கு இருக்கிறது என நினைத்தேன். அதுவும் ஒரு மாதிரி ரொமண்டிஸிஸம்தான்.

Keywords: அசோகமித்திரன்நேர்காணல்இலக்கியம்படைப்புகதை மாந்தர்கள்
அசோகமித்திரன் நேர்காணல் (அம்ருதா ஜூன் 2009 இதழில் வெளியான நேர்காணல்)
‘அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள்’

-அசோகமித்திரன்
தமிழின் முக்கியமான நாவல்களாக கருதப்படும் ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘18வது அட்சக்கோடு’, ‘மானசரோவர்’ ஆகியவற்றை எழுதிய அசோகமித்திரன், 1931-ம் ஆண்டு, செப்டெம்பர் 22-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வருபவர். 

இவரது பல படைப்புகள் பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1996-ம் ஆண்டு, இவருடைய ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 

ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளைப் போலவே நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் கூர்மையாக இருக்கின்றன. இனி அவருடன் நேர்காணல்...

கேள்வி:உங்கள் கதைகளுக்கான மொழியை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்? அதுவரை தமிழில் பயன்பாட்டில் இல்லாத மொழி உங்களுடையது. மிகவும் அப்ஜெக்ட்டிவ்வாக, செய்தி சொல்லும் தொனி அதில் இருக்கிறது. இதை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?

அசோகமித்திரன்: நானாகத் திட்டமிட்டு என் நடையை உருவாக்கிக்கொள்ளவில்லை. உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ படைப்பை ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது என் எட்டாவது வயதில் படித்தேன். கல்கியின் ‘தியாக பூமி’யையும் அதே காலத்தில் படித்தேன். உண்மையில் என் நடையை அப்படைப்புகள்தான் உருவாக்கியிருக்க வேண்டும். 

கேள்வி: தமிழ்க் கதைகளுக்குள் ஆசிரியரின் குரல் உரத்து ஒலிப்பது என்பது ஒரு பாணி. நீங்கள் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்று அது ஓர் முக்கிய எழுத்துப் பாணியாகவே வளர்ந்திருக்கிறது. இதை எப்படி செய்தீர்கள்?

அசோகமித்திரன்: ஆசிரியரின் குரல் ஒரேயடியாக இல்லை என்று கூறமுடியாது. ஒரு குரல் இருக்கிறது. ஆனால், உங்களை வற்புறுத்தும் குரல் அல்ல. ஓர் நண்பனுக்கு யோசனை கூறுவது போல அக்குரல் உள்ளது. 

எழுத்துப்பணியும் ஓரளவு அதுவாக அமைந்ததுதான். அந்த நாளில் 35 வயதில் வேலை கிடைப்பது மிகவும் கடினம். ஓர் வேலைக்காக நான் கார் ஓட்டும் உரிமம்கூடப் பெற்றேன். எனக்கு வேலை தேடிக்கொள்ளத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். எழுதும் எதையும் திருத்தமாகச் செய்யவேண்டும் என்று என் பள்ளி நாட்களிலிருந்தே தீர்மானமாக இருந்தேன்.

கேள்வி: 70களில் மாற்று அரசியல், மாற்று கலை இலக்கிய முயற்சிகள் நிறைய நடந்தன. தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலர் இக்காலகட்டத்தில் உருவாயினர். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் அப்படியொரு உற்சாகம் இல்லை. உங்கள் பார்வையில், இந்தத் தேக்கத்துக்குக் காரணம் என்ன?

அசோகமித்திரன்: நான் தேக்கம் என்று கூற மாட்டேன். புது எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். சூர்யராஜன், வா.மு. கோமு, ஜாகிர் ராஜா போன்றோர் நன்றாகவே எழுதுகிறார்கள். மதிப்பீடுகள் விஷயத்தில் சற்றுத் தயக்கமே. ஆனால், அவர்கள் நல்ல எழுத்தாளர்களாக உருவாக வாய்ப்பு உண்டு. 

கேள்வி:
 குறுநாவல் வடிவத்தைச் செம்மைப்படுத்தியவர் நீங்கள். அதற்கான இலக்கணத்தை தமிழில் பிரபலப்படுத்தியவரும் நீங்களே. நாவல் எழுதுவதைவிட, குறுநாவலில் உள்ள சௌகரியங்கள் என்னென்ன? ஒரு கரு, நாவலுக்குள்ளதா, குறுநாவலுக்கானதா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?

அசோகமித்திரன்: குறுநாவல் ‘தீபம்’ என்ற பத்திரிகைக்காகத் திட்டமிடப்பட்டது. உண்மையில் இது ஒரு பத்திரிகைத் தேவைக்காக முயற்சி செய்தது. ‘தீபம்’ எனக்கு நல்ல பயிற்சிக் களமாக இருந்தது. பல கட்டுரைகளும் எழுதினேன். 

நாவல் எழுதும்போது ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடுகிறது. உண்மையில் அது ஒரு பெரிய தடங்கல்தான். ஆனால் அதையும் மீறித்தான் நாவல் எழுதவேண்டியிருக்கிறது. இப்போது நான் எழுதிவரும் நாவலின் ஆரம்பம் எனக்கு மறந்துவிட்டது. ஐந்தாம், ஆறாம் அத்தியாயங்கள் மூன்று உள்ளன. 

என் கதைகள், நாவல்கள் எல்லாமே ஒரு தொடர்பு உள்ளவையே. ஆதலால் தனியாகக் கரு என்று நான் முடிவு செய்து கொள்வதில்லை. ஆனால், அப்படி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். Plot வைத்து எழுதியதிலும் மகத்தான எழுத்தாளர்கள் உண்டு.

கேள்வி: எண்ணற்ற எழுத்தாளர்கள் One time wonders ஆக இருந்திருக்கிறார்கள். ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு கதை என்று சிறப்பாக எழுதிவிட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். நீங்கள் கன்சிஸ்டெண்ட்டாக, தொடர்ந்து, பெரிய வருவாய் தரவில்லை எனினும் தமிழில் கதைகள் எழுதுவதைச் செய்துவந்திருக்கிறீர்கள். இதற்கான மனத் தயாரிப்பு என்ன? தேவைப்படும் மனோபலம் என்ன?

அசோகமித்திரன்: இது நம் வாழ்க்கைப் பார்வையைச் சார்ந்தது. நமக்குத் திட்டவட்டமாக பார்வை இருந்து, நம் மனதிற்கிணங்க எழுதினால் அதில் நிச்சயம் ஒரு சீரான தன்மை இருக்கும். 

கேள்வி: நீங்கள் கணையாழி ஆசிரியப் பொறுப்பு வகித்திருக்கிறீர்கள். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.

அசோகமித்திரன்: இதுவும் நான் நாடிச் சென்றதல்ல. முதல் இதழ் தயாரானபோது அதன் பொறுப்பாளர் ‘சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு டில்லிக்குப் போய்விட்டார். எவ்வளவு பெரிய பொறுப்பு என்று அன்று எனக்குத் தெரியாது. அது அச்சான இடத்தில், ஒருவர் எப்படிப் பிழை திருத்துவது என்று ஓரிரண்டு குறிப்புகள் தந்தார். அப்புறம் பக்கம் அமைப்பது, படங்கள் எந்த இடத்தில் போடுவது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மிகவும் கடினமான பொறுப்பு பிரதிகளைக் கட்டு கட்டி இரயில்வே பார்சல் செய்வது, தபால் அலுவலகத்தில் சேர்ப்பது. ஏன் இதெல்லாம் செய்தேன், இதற்கு என்ன பிரதிபலன் என்றெல்லாம் யோசிக்கவில்லை. 

கையெழுத்துப் பிரதி அந்த எழுத்தாளனைப் பற்றி ஒரு தோற்றம் தரும். அவனுடைய கதையிலிருந்து அவனுடைய சூழ்நிலை முதலியன ஊகிக்கலாம். எனக்கு ஒவ்வொரு கையெழுத்துப் பிரதியும் ஒரு சவாலாக இருக்கும். கதை நன்றாக இருந்தால் பிரதியைத் திருத்தித் திருப்பி எழுதிவிடுவேன். சில எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை அச்சுக் கோப்பவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சுஜாதா, இந்திராபார்த்தசாரதி, தி. ஜானகிராமன் போன்றோர் கையெழுத்தைப் புரிந்துகொள்வது கடினம். 

கேள்வி: ஒரு கதையை, நாவலை எத்தனை முறை திருத்திச் செம்மைப்படுத்துவீர்கள்? செம்மைப்படுத்தும்போது, என்னென்ன விஷயங்களை மனத்தில் கொண்டு திருத்துவீர்கள்? 

அசோகமித்திரன்: செம்மைப்படுத்துவேன். கையெழுத்து சட்டென்று புரியாது என்றால் அந்தப் பக்கத்தை இரண்டாம் முறை எழுதிவிடுவேன். எனக்கு அச்சுக் கோப்பவர்களை சிரமப்படுத்துவது சிறிதும் பிடிக்காது. அந்த நாளில் ஈய அச்சுக்களை நால் முழுக்க நின்றுகொண்டே அச்சுக் கோப்பார்கள். பலர் மிகவும் ஏழ்மையான பெண்கள். 

எந்த எழுத்தாளனும் எழுதியதை மறுமுறை படிப்பதுதான் முறை என்று நான் நினைக்கிறேன். சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மீண்டும் படிக்கும்போதுதான் செய்யவேண்டும்; செய்ய முடியும்.

கேள்வி: நீங்கள் செய்நேர்த்தியில் (craftmanship) சிறப்பானவர். உங்கள் கதைகள், கச்சிதமானவை. வடிவம் செம்மையானவை. இதற்கான பயிற்சி என்ன? எப்படி இதை நீங்கள் அடைந்தீர்கள்?

அசோகமித்திரன்:
 அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள். உண்மையில் சிலர் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்றுகூடக் கூறுவேன். எனக்கு ராஜவேல் என்பவரின் கணிப்பு மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவர் சொல்லி ‘விழா’ என்ற குறுநாவலில் பாரா பாராவாக வெட்டியிருக்கிறேன். அவர் இறந்துவிட்டார் என்று அறிய மிகவும் வருத்தமாக இருந்தது. அதே போல சாமி என்ற அச்சுக் கோப்பவர். அவர் நாடகங்களிலும் நடிப்பார். என்னுடைய ‘காத்திருத்தல்’ சிறுகதை நாடகமாக்கப்பட்டபோது அவர்தான் அரசியல் தொண்டன் வேடம் தரித்தார். நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அதைத் தயாரித்த டாக்டர் ருத்ரன் ஒரு முறைக்கு மேல் அதை மேடையேற்றவில்லை. 

கேள்வி: நீங்கள் ஒரே மூச்சில் சிறுகதை எழுதுவீர்களா? இல்லை நடுவில் இடைவெளி விடுவீர்களா? நாவல்களை, குறுநாவல்களை எப்படித் திட்டமிடுவீர்கள்? அத்தியாயங்களையும் சம்பவங்களையும் முன்னரே யோசித்துவைத்திருப்பீர்களா?

அசோகமித்திரன்: விட்டுவிட்டுத்தான் எழுதுவேன். எழுதுவதும் ஒரு கட்டத்தில் களைப்பு, சோர்வு உண்டு செய்யும். இரவில் படுக்கும்போது ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அடுத்த நாள் சுமார் ஒரு மணி நேரம் எழுதுவேன். சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாமே இப்படித்தான் எழுதப்பட்டன. 

கேள்வி: உங்கள் கதைகளில் கொண்டாட்டமான மனோபாவம் கொண்ட மனிதர்கள் வருவது கிடையாது. என்ன காரணம்?

அசோகமித்திரன்: அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல கதைகளில் கதையைக் கூறுபவன் அப்படித்தான், அதாவது சட்டென்று சிரிப்பவனாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. 

கேள்வி: புலிக்கலைஞன் கதை நாயகன் கற்பனையா அல்லது நீங்கள் நேரில் பார்த்த ஒரு கதாபாத்திரமா?

அசோகமித்திரன்: நான் ஒரு புலிவேடக்காரர் ஒரு சினிமா வாய்ப்புக்காக வந்தபோது அவரைப் பார்த்தேன். அவருடைய தோற்றத்திலிருந்து அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிஜமாகவே அந்த மனிதனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. உண்மையில் சினிமாவில் கதாநாயகனே புலிவேடம் தரிப்பதுதான் பார்வையாளருக்கு மகிழ்ச்சி தரும். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். என் ‘புலிக்கலைஞன்’ நிஜ வாழ்க்கையில்தான் பரிமளிக்க முடியும். சினிமா சரியான களமல்ல. 

கேள்வி: உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

அசோகமித்திரன்: புத்தகங்கள் என்று கூற வேண்டுமானால் என் பாட புத்தகங்கள், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் தனித்தனிக் கதைகள், கட்டுரைகள்தான் எனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தின. அதில் புதுமைப்பித்தன் எழுதிய ‘சித்தி’ என்ற சிறுகதை. நான் எழுதிய ‘இன்னும் சில நாட்கள்’ அவருக்கு என் அஞ்சலியாக நினைத்து எழுதினேன். 

கேள்வி: பாண்டி விளையாட்டு சிறுகதைபோல இளம் பிராயத்து நினைவுகள் உங்களை அலைக்கழிக்குமா? அதுபோல நீங்கள் சந்திக்க விரும்பும் நண்பர் யாராவது உண்டா?

அசோகமித்திரன்: எனக்கு சகோதரிகள் இருந்தார்கள். எங்களுக்குள் நாங்கள் பாண்டி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம். 

அந்தக் காலத்து நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்பிருக்கும் என்று தோன்றவில்லை. நான் ஊர்விட்டு ஊர் வந்தவன். 

கேள்வி: ஒப்பீட்டளவில் நான் ஃபிக்ஷன் எழுத்துக்கு இன்று வரவேற்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அசோகமித்திரன்: இல்லை. கட்டுரைகளுக்குத்தான் இன்றைய பத்திரிகைகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. கட்டுரைகள்தான் விவாதங்களைத் துவக்குகின்றன. ஒரு சிறுகதை அப்படி செய்ய வாய்ப்பில்லை. 

கேள்வி: சிறுபத்திரிகைகள் மட்டும்தான் சிறுகதைகளை ஊக்குவிக்கின்றன. வெகுஜன இதழ்கள் ஸ்டாம்ப் அளவுக்குக் கதைகளைச் சுருக்கிவிட்டன. நல்ல கதைகளை அதிகம் காணமுடிவதில்லை. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அசோகமித்திரன்: இக் கேள்வியே முந்தைய கேள்வியின் என்னுடைய பதிலை உறுதிப்படுத்துகிறது. காலத்தின் தேவை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பூர்த்தி செய்யப்படுகிறது. 

கேள்வி: மொழிபெயர்ப்புகள் தற்போது அதிகமான அளவுக்கு தமிழில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காகவே தனி இதழ் ஒன்றுகூட வெளிவருகிறது. இந்தச் சூழலில் அவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

அசோகமித்திரன்: ஒட்டு மொத்தமாகக் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல. முன்பு பல வங்காள நாவல்கள் தமிழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இன்று அந்த நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது நம் மொழிபெயர்ப்பு குறையுடையது என்று தெரிகிறது. மொழிபெயர்ப்பும் காலம் காலத்திற்கு மாறுபடும். 

கேள்வி: சினிமாவின் பார்வையாளராக இருந்திருக்கிறீர்கள். சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறீர்கள். ஆனால், நேரடியாக சினிமாவில் ஈடுபட உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லையா?

அசோகமித்திரன்: இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டும் என்று நான் கூற மாட்டேன். என்னால் திரப்படங்களை ஓரளவு செம்மைப்படுத்த முடியும். ஆனால் நிறைய சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். அந்தச் சக்தி இல்லை. 

கேள்வி: சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா?

அசோகமித்திரன்: முன்பும் எழுத்தாளர் யாரோ ஒருவர்தான் ஒரு படத்துக்குக் காரணமாக இருந்தார். மனதளவிலாவது ஒரு திட்டம் இல்லாமல் எந்தத் திரைப்படமும் தயாரிக்கப்படுவதில்லை. எழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திரைப்படம் முழுத் திருப்தி தர முடியாது. மீண்டும் சமரசம்தான். இது ஆரோக்கியமானது, அல்ல என்பதெல்லாம் அபிப்ராயங்கள். 

கேள்வி: சமகால தமிழ்சினிமா பற்றி உங்கள் கருத்து? பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற சமீபத்திய படங்களைப் பார்த்தீர்களா?

அசோகமித்திரன்: திரைப்படக் கொட்டகையில் பார்த்ததில்லை. இந்தப் படங்களிலும் வன்முறைப் போக்கு, பெண்களைக் கன்னத்தில் அறைவது போன்றவை உள்ளன. நிஜ வாழ்க்கையில் இதைவிட மோசமான அனுபவங்கள் இருக்கலாம். திரைப்படத்தில் காண்பிப்பது எனக்குச் சம்மதமல்ல. பெரும் தீமை, கயமை கூட நாம் கோடிட்டுக் காட்டலாம். அவ்வளவுதான். 

கேள்வி: பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. எழுத்தாளர்கள் வளமாக இருக்கிறார்களா? உங்கள் அனுபவம்?

அசோகமித்திரன்: சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுத்தால் வரும் ஊதியத்தை மட்டும் நம்பியில்லை. மீண்டும் இதெல்லாம் பொதுப்படையான கேள்விகள். உலகம் கெட்டுவிட்டதே என்று சொல்வது போல. 

கேள்வி: புகழ், புத்தகங்களின் அதிக விற்பனை, ராயல்டி இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட்டதுண்டா?

அசோகமித்திரன்: நாம் கவலைப்பட்டாலும் கவலைப்படாமல் இருந்தாலும் புத்தகம் விற்றால் பணம் தானாகவே வரும். பதிப்பகங்கள் கடன் வாங்கித்தான் நூல்களை வெளியிடுகின்றன. பல சமரசங்கள் செய்து கொண்டுதான் நூலக உத்தரவு பெறுகின்றன. இதையெல்லாம் எழுத்தாளன் கணகில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கேள்வி: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வது இன்றும்கூட அசாத்தியமானதாகவே உள்ளது. ஏன்?

அசோகமித்திரன்: எப்படியோ காலம் தள்ளிவிட்டேன். ஆனால் இன்னொரு முறை முடியாது. நான் சிறிது ஆங்கிலத்திலும் எழுதியதால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய பல ஆங்கிலக் கதைகள், கட்டுரைகள் மிகவும் பாராட்டப்பட்டன. சன்மானமும் கிடைத்தது. தமிழில் பல படைப்புகள் இனாம்தான். ஒரு முழு நூல் என் முன்னுரைகள் கொண்டது. முன்னுரைக்கு எப்படி, எவ்வளவு சன்மானம் தருவது? இந்த முன்னுரை எழுதுவதே இழிவுபடுத்தும் அனுபவம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: சமகால எழுத்தை, எழுத்தாளர்களை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? இலக்கியச் சண்டைகள் குறித்து உங்கள் கருத்து என்ன? 

அசோகமித்திரன்:
 அபிப்ராயங்கள், சண்டை எதில் இல்லை? ஒரு குடும்பத்திலேயே சண்டை இல்லையா?

கேள்வி: இண்டர்நெட் பற்றி உங்கள் கருத்து? இணையத்தளத்தில் உங்களைப் பற்றி எழுதுவதைப் படித்திருக்கிறீர்களா? இணையம் வழியாக இன்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நிலை வந்திருப்பது குறித்து?

அசோகமித்திரன்: எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக் கண் வலிக்கிறது. அதனாலேயே அதிகம் கணினி முன் உட்காருவதில்லை.

கேள்வி: முக்கிய எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன? உங்கள் எழுத்துக்கு அதுபோலொரு நிலை வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

அசோகமித்திரன்: இறந்து, எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்பில் இல்லை என்றால் நாட்டுடைமை ஏற்றுக்கொள்ளக் கூடியது. வாரிசுகளுக்குப் பணம் தரவேண்டும். சகட்டு மேனிக்கு நாட்டுடைமை அறிவிப்பது சரியல்ல. 

கேள்வி: தமிழக அரசு கோட்டூபுரத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றைக் கட்டி வருகிறது. அதற்கு நீங்கள் தரும் ஆலோசனை, வேண்டுகோள்கள் என்ன?

அசோகமித்திரன்: அந்தத் துறைக்கென நிபுணர்கள் இருக்கிறார்கள். நூலகத் துறை மிகப் பெரிய துறை. அதில் எழுத்தாளன் ஓர் அங்கம். அவ்வளவே.

கேள்வி: புத்தகக் கண்காட்சிக்கு சென்றீர்களா? புத்தகக் கண்காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அசோகமித்திரன்: திட்டமிட்டுப் போனால் கண்காட்சி பயனுள்ளது. ஆனால் பத்து சதவீதச் சலுகை என்பது போக வரச் செலவு, அனுமதிச் சீட்டு ஆகியவற்றில் போய்விடுகிறது. 

கேள்வி: விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படக்கூடாது என்கிற அரசின் உத்தரவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வரவேற்கிறீர்களா?

அசோகமித்திரன்: புத்தகங்கள் வெளியிடப்பட்டால் அவற்றை என்ன செய்வது? முந்தைய நூற்றாண்டுகளில் கூட நூல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல நூல்கள் மீண்டு வந்துவிடுகின்றன. 

கேள்வி: நோபல் பரிசு பெறும் அளவுக்குத் தகுதியுள்ள எழுத்து என்று உங்களைப் புகழாதவர்கள் இல்லை. உங்கள் நாவல்கள் ஏதாவது மொழிபெயர்க்கப்பட்டு, நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதா?

அசோகமித்திரன்: நாம் சொல்லிவிடலாம். தேசிய அளவிலேயே கடினம். உண்மையில் நம் தமிழ் நாட்டிலேயே நிறுவன அங்கீகாரம் கிடையாது. ஆதலால், நான் இந்த மாதிரி விருது, பரிசு பற்றி மனதைச் செயல்படவிடுவதில்லை. 

கேள்வி: நீங்கள் இப்போது படித்து வரும் புத்தகம் எது?

அசோகமித்திரன்: பாரதி மணி என்பவர் எழுதிய, ‘பல நேரங்களில் பல மனிதர்கள்.’ நல்ல, சுவாரசியமான நூல். உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டது. 

கேள்வி: உங்கள் கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களில் மறக்கமுடியாத சிறந்த ஓவியம் எது?

அசோகமித்திரன்: ராமு என்பவர் வரைந்த படங்கள் எல்லாமே எனக்குச் சம்மதமானவை. மிகவும் அடக்கமானவர்.

கேள்வி: எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் கதைகள் யாவை? என்ன காரணங்களால் அவை எழுதப்படாமல் இருக்கின்றன?

அசோகமித்திரன்: இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பல ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. அதை மீறித்தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009-ம் ஆண்டில் அதை முடித்துவிட வேண்டும். ஆனால் என் வயது இப்போது 77. ஓராண்டு என்பதுகூட யதார்த்தமான ஆசை இல்லை. 

நேர்காணல்: பாலு சத்யா





     RSS of this page